நிம்மதியாய் வாழும்நாள் என்று பூக்கும்?

0

-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

உழைத் துழைத்து நாமுந்தான் ஓடாய்த்தேய
உழையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம்!
இழைத் தேநாம் இடுப்பொடிய ஈரமில்லா
இதயத்தார் இருந்துறிஞ்சி “மேலே சென்றார்”!

முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்
முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்
புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை!
புல்லர்கள் வாழ்வுக்கே உரமாய்ப் போனோம்! 

ஓட்டை “லயம்” தானெமது உலகும் வாழ்வும்!
உழைப்புத்தான் உயிர் எமக்கு  ஓய்வோ தூக்கம்!
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம்!

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க
மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம்!
நிலைமாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.