Blog

  • துப்புரவு தொழிலாளர் சட்டத்தின் நிழலும், நிஜமும்

    ஞா. ஜார்ஜ்,
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சாதி மற்றும் மதம் சார்ந்த வேற்றுமைகளே காரணம். “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளின் அர்த்தம் இன்று நமக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை புரிந்திருந்தால் அந்த பகுத்தறிவு பகலவனின் கனவு நிஜமாகி இருக்கும். சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட்டிருக்கும், சமுதாயத்தில் தீண்டாமை வளர்ந்திருக்காது, தலித்துகளும் தீண்டாமையினால் அடிமைப்பட்டிருக்கமாட்டார்கள். சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை ஒரு நாட்டின் சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதற்கு இந்தியாதான் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். தீண்டாமையினால் நாடும், தீண்டப்படாதாரும், தீண்டத்தக்கவரும் அடைந்துள்ள ஒட்டுமொத்த இழிவையும், பின்னடைவையும், ஏற்றத்தாழ்வையும், சமூக இயலாமைகளையும் படம் பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ள பாரதிதாசனின் பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவது.

    “தீண்டாமையென்னுமொரு நோய் இந்தத்
    தேசத்தினில் மாத்திரம் திரியக்கண்டோம்-
    எனில் ஈண்டு பிற நாட்டில் இருப்போர்
    செவிக் கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார்
    பல ஆண்டாண்டு தோறுமிதனால்- நாம்
    கூண்டோடு மாய்வதறிந்தும்- இந்தக்
    கோணலுற்ற செயலுக்கு நா-ணுவதில்லை”.

    இப்பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளதை உண்மையாக்கும் வகையிலேயே இன்றளவும் சாதியையும் அதனைச் சார்ந்த தீண்டாமையையும் கடைபிடித்துவருவதை என்பதை எண்ணி நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த 2007 ல் அமெரிக்க செனட் சபையில் மார்டின் லூதர் கிங்கின் 50-வது ஆண்டு நினைவாக கொண்டுவரப்பட்டதுதான் 110-பில். அதில் இந்தியாவின் வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும் பாதித்துக் கொண்டிருப்பதும், இன்றளவும் தீர்வு காண முடியாததாகவும் இருப்பதுதான் தீண்டாமை என்ற சாதியப்பாகுபாடு. (United States should address the ongoing problem of Untouchability in India) என்ற ஆய்வு அறிக்கையை தீர்மானமாக கொண்டுவந்தது. இதில் சிந்திக்க வேண்டியது அமெரிக்க காந்திய சிந்தனையான அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தானே பல நூறு ஆண்டுகள் அடிமை மற்றும் தீண்டாமைத்தனத்தில் இருந்த கருப்பின மக்களின் விடுதலை பெற வழிகோலியது. ஆனால் இந்தியாவில் முற்போக்கான சிந்தனைவாதிகள் இல்லையா, முற்போக்கு சிந்தனைக்குத்தான் பஞ்சமா, அனைத்தும் இருந்தும் மதம் சார்ந்த சாதியத் தீண்டாமைக்கு விடையில்லையே. 21 ஆம் நூற்றாண்டில் பயணிக்கும் நாம் உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்கும்போது சாதி என்ற சாக்கடையை உள்மனதில் ஓடவிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்க நினைப்பது முட்டாள்தனமான செயலல்லவோ. இவ்வாறு சாதியப் பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் மிக்க ஒரு நாடு எந்தவிதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    மலம் என்ற சொல்லை கூட நாலுபேருக்கு மத்தியில் உச்சரிக்கத் தயங்கும் போது தான் கழித்த மலத்தை கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லுவதுதான் தீண்டாமையின் உச்சம். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. மலத்தை தீண்டுவதில்லை, அதனை தீண்டி சுத்தம் செய்வோரையும் தீண்டுவதில்லை, அப்படி தீண்டினால் தீட்டு என்று கூறும் சாதி இந்துக்களும் மற்ற உயர்வகுப்பினரும் ஒன்றை மறந்துவிடக்கூடாது, ஒவ்வொரு மனிதனும் குறைந்தது இரண்டு முறையாவது தன் மலத்தைத்தானே தொட்டுக் கழுவும் தோட்டியாக உள்ளான். ஆனால் மற்றவர்களின் மலத்தை சமூக நலன் கருதி அப்புறப்படுத்தியவனைச் சமூகத்திலிருந்தே தூர ஒதுக்கி விடுகிறான் தலித் மக்களை தீண்டப்படாதவனென்று. தீட்டு என்று மலத்தைத் தொடா மனிதன் உண்டா? என்று முனைவர் சீனிவாசன் தீண்டாமைக்கு தீயிடு புத்தகத்தில் கூறும் விளக்கம் சரியே.

    கையால் மலம் அள்ளுவது ஒரு தேசத்தின் அவமானம் என்று கூறும் பொது நலவாதிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகட்டும் தங்களுக்குள்ளாகவே கேட்க வேண்டிய கேள்வி, தேசத்தின் அவமானத்தை அகற்றும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு, நம்மில் எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தங்களின் பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு எற்பட்டு துர்நாற்றம் வீசும்போது அதை சமூக அக்கறையுடன் சுத்தப்படுத்த முன்வருகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாக்கடை நீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள் தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் மலமும், சிறுநீரும் மற்றும் செத்துப்போன மிருகங்களின் உடல்களும் மிதந்து வரும் சாக்கடையை புனித ஆறாகக் கருதி எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கி தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தானே. அசுத்த நீரில் தலை நனைந்து, வாய், காது, மூக்கு வாழியாக நீர் நுழைய சாக்கடைப் புழுவைப் போலத் துடித்து சமூகத்தின் சுத்தத்தைக் காக்க தன்னையே அர்ப்பணிக்கும்போது அவர்களுக்கு நேரும் துன்பத்தை நம்மில் எவரேனும் உணர்ந்ததுண்டா? போற்ற வேண்டிய அவர்களை நம் சமூகம் மனிதனாகக்கூட பார்ப்பதில்லையே!

    இன்றைய விளம்பரம் தேடும் உலகில் சுய விளம்பரங்களுக்கு எவரும் விதிவிலக்கல்ல, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினருமே விளம்பரம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பது மிகையான ஒன்று. எடுத்துக்காட்டாக தனிநபர் சுகாதாரம் பேணப்பட வேண்டும் மற்றும் சமூக சுகாதாரம் காக்கப்படவேண்டும் என்று துடைப்பத்துடன் ஊடக விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கும் தலைவர்கள் சுயநலவாதிகளா அல்லது பொதுநலவாதிகளா என்ற கேள்வி எழுகிறது. கறைகளையே பார்த்திராத வெண்ணிற ஆடை, கையிலோ துடைப்பத்தை எடுத்தாலே போதும் அவர்களை சமூக சுகாதாரத்தை காக்கிற சமூகவாதிகள் என்கிறது ஊடகங்கள் அதுவே நாளை வரப்போகிற காலரா மலேரியா போன்ற எண்ணற்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற நினைத்து சாக்கடையானாலும் சரி, அது கழிவுகளின் தொட்டியானாலும் சரி சமூக அக்கறையுடன் சுத்தம் செய்யும் சமூகவாதிக்கு உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, சமூகத்தில் மரியாதை இல்லை ஏன் சமூக சுகாதாரத்தை பேணுபவனுக்கே சமூகத்தில் மக்களோடு மக்களாக வசிக்கக்கூட இடமில்லையே. பணம் மற்றும் அதிகாரம் இரண்டிற்காக மக்கள் முன் நடிக்கும் கறைபடியா சட்டைகாரர்களுக்கு பத்திரிக்கைச் செய்தியில் முதல் பக்கமும் எதையும் எதிர்பாராது சமூக நலனுக்காக தீண்டாமைக் கொடுமையை கறைபடிந்த ஆடையாக அணிந்து உழைப்பவனுக்கு பத்திரிக்கைச் செய்தியில் கடைசி பக்கத்தில் கூட இடமில்லையே ஏன்? சமூகவாதிக்கும் பொதுநலவாதிகளுக்கு விளம்பரம் தேவையில்லையோ?

    மனித மலத்தை மனிதனே அகற்றும் முறை ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாம் அடிமைப்பட்டு இருந்தபோதே தலித்துகளும் அடிமைப்பட்டிருந்தனர் என்பது ஒன்றும் வியப்பதற்கில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தலித்துகள் மனித மலத்தை அள்ளப் பணிக்கப்படுவதுதான் நாம் பெற்ற உண்மையான சுதந்திரமா என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தலித்துகளை, இதுதான் நம் பரம்பரைத் தொழில் என்று அவர்களுக்குள்ளாகவே எண்ணம் வரும் அளவுக்கு அடிமைப்படுத்தியுள்ளோமே இதுவா சுதந்திரம்? தலித் மக்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையுமே பரித்துவிடு, இன்று ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்யலாம் என்று கூறும் அரசியல் சட்டம்கூட, தலித்துகள் என்றாலே துப்புரவு மற்றும் மனித மலத்தை அகற்றுவது என்ற சமூக நடைமுறை ஆதரித்து வருவதாகத்தான் தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்து பணி அமர்த்தும் மத்திய மாநில அரசுகள் ஏனோ துப்புரவு மற்றும் கடைநிலை தொழிலாளர்களை பணியமர்த்தும்போது மட்டும் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை, அரசே பாரபட்சமாக நடந்து கொள்கிறதுதானே, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டாத துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, ஏனென்றால் துப்புரவுப் பணி முழுவதும் தீண்டப்பாடாதவராக கருதப்படும் தலித்துகளின் வசமே என்று சொல்லும் அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வை அரசே ஆதரித்து வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

    தலித் மக்கள் தீண்டாமையின் உச்சமான மனிதக்கழிவை அகற்ற பணிக்கப்படுவது இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை சரத்துக்களான 14, 17, 21 மற்றும் 23 க்கு எதிரானது. தலித் மக்கள் தங்களுக்கான ஒட்டுமொத்த மனித உரிமையையே இழந்து சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் தலித் சமுதாய மக்கள் அடிமைப்பட்டு இருப்பது மேம்பட்ட சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடமுடியும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  நாட்டில் 2.6 மில்லியன் உலர் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 13,14,652 கழிப்பறைகள் சாக்கடையில் நேரடியாகவே கலந்துவிடுவதாகவும், 7,94,390 உலர் கழிப்பறைக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதாகவும் ஆய்வு கூறுகிறது. உலர் கழிப்பறைகளில் உள்ள மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையில் 73% உலர் கழிப்பறைகள் கிராமப்புறங்களிலும் மீதமுள்ள 27% உலர் கழிப்பறைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அதிகப்படியானவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நம் நாட்டில் கிராமங்களே அதிக அளவில் உள்ளதால்தான் காந்தி கூட கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம் நாட்டின் வளர்ச்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனாலேயே, கிராமம் உயர நாடு உயரும் என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ள மத்திய மாநில அரசுகள் அதை முறையாகச் செயல்படுத்த தவறிவிட்டது. துப்புரவு தொழிலாளர் நலனுக்காகவும், கிராமப்புற சுகாதாரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் மலம் நீக்குவதற்கு மனிதனை பயன்படுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் (தடுப்புச்) சட்டம் 1993.  இச்சட்டத்தின் மூலம் உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான் திட்டம் கொண்டுவரப்பட்டது. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலையை சமூகத்தில் இருந்து முற்றிலும் அகற்றிவிடுவோம், அத்துடன் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்று கூறி அதிகப்படியான கிராமங்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ முறையான ஏற்பாடுளைச் செய்யாமல் பொதுக் கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் என்று கட்டிடங்கள் கட்டப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது, கிராமப்புறங்களில் 90% மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளதை அறிந்தாவது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை கூட பல பொதுக் கழிப்பிடங்கள் கட்டியது முதலே பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதை நாம் காணமுடியும். இப்படி பல செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தால், சில மாற்றங்களுடன் 2013-ல் புதிய சட்டதிருத்தத்தை உருவாகியது மத்திய அரசு.

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013-ன் முக்கிய அம்சங்கள்:

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை இனியும் எவரும் தொடரக்கூடாது என்பதுதான் சட்டத்தின் முதற்நோக்கம்.

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்யப் பணிப்பதும், செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டணை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால் ஐந்து வருடம் சிறை, ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    · இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்பது மாதங்களுக்குள் நாடு முழுவதும் மனிதர்கள் மலம் அள்ளும் வடிவிலான உலர் கழிப்பறைகளை கண்டறிந்து முற்றிலும் அகற்றிவிட வேண்டும், அல்லது நிதியுதவி பெற்று தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகளாக மாற்ற வேண்டும்.

    · சட்டத்தின் கீழ்தண்டனை பெற்றவர் அதை எதிர்த்து எந்த நீதிமன்றங்களுக்கும் செல்லமுடியாது (non-bailable)

    · மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் கணக்கெடுப்புப் பணியை துறை வாரியாக தயாரித்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறைக்கு சமர்பிக்கவேண்டும்.

    · மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளாக
    o அடையாள அட்டை வழங்க வேண்டும்
    o முதற்கட்ட நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்ட உதவித் தொகை வழங்க வேண்டும் அல்லது உதவித்தொகையுடன் வீடு வழங்க வேண்டும்.
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது மாற்றுத் தொழில் செய்வதற்கான மானியம் மற்றும் வங்கியின் மூலம் கடன் வழங்க வேண்டும்.

    · கண்காணிப்பு அமைப்புகள்:

    நிலைகள்
    நிர்வாக தலைமை
    வட்டம்
    வட்டாட்சியர்
    மாவட்டம்
    மாவட்ட ஆட்சியர்
    மாநிலம்
    மாநில முதல்வர்
    மத்தியில்
    மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறை

    கடந்த மார்ச் 27, 2014-ல் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது, அதில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக மனிதக் கழிவு மனிதர்களால் அகற்றப்படுவதை தடை செய்ய வேண்டும், அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே போல மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறையின் உத்தரவுப்படி மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்களை கணக்கெடுத்து அதன் முடிவை சமர்பிக்க வேண்டும். அந்த பட்டியலின் மூலம் பயனாளிகளுக்கு முதற்கட்ட நிவாரணத்தொகை மற்றும் மறுவாழ்விற்கான பணிகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

    2013 சட்டப்படி துறைவாரியாக கணக்கெடுக்கப்படும் போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களே மனிதக் கழிவை அகற்றும் வேலையையும் சேர்த்து செய்கின்றனர் அப்படிப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நகராட்சியே கணக்கெடுப்பின் போது இந்த பணியாளர்களை பயனாளிகளின் பட்டியலில் சேர்க்காமல் விட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் துப்புரவு மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியவற்றை சேர்த்து செய்வதனால் அவர்களை துப்புரவாளர் பட்டியலிலேயே வைத்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி கழிவு அகற்றும் தொழிலாளர்கள் அதிகமாக படித்தவர்கள் அல்ல அதனால் அரசு விளம்பரங்களை படித்து புரிந்து கொள்வது கடினம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் கணக்கெடுப்பின் போது எப்படி செயல்பட்டன என்பது தெரியவில்லை, அதற்கான விழிப்புணர்வையும், அவர்களுக்கு உதவ அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைளை எடுத்தது என்பது தெரியவில்லை.

    சட்டப் பிரிவு 2 (1) (e)-ன் படி உலர் கழிப்பறையை அதிகமாக பயன்படுத்துவது இரயில்வே துறைதான் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கழிவறை என்று கணக்கிட்டால் 2013 திருத்தச் சட்டத்தை முதலில் மீறுவது இரயில்வே துறைதான். அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இன்றுவரையும் இரயில் பாதைகளில் மனிதமலத்தை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கூட இரயில்வே துறை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்டவும். இரயில் பாதையில் உள்ள மனிதக்கழிவுகளை கையால் சுத்தம் செய்யக்கூடாது மாறாக அதிகப்படியான வேகத்தில் தண்ணீரை உந்தித்தள்ளும் high speed water jet ஐ பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. மற்ற மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைக் கழிவுகள் இரயில் வண்டிகளிலேயே சேமிக்கப்பட்டு மனிதனின் கைபடாமலேயே சுத்தம் செய்யப்படுகிறது. இந்த செயல் திட்டத்தை ஏன் இரயில்வேத் துறை செயல் படுத்தக்கூடாது.

    சட்டப் பிரிவு 4(1) –ன் படி உலர் கழிப்பறைகளை கணக்கெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி பட்டியல் இட இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, உலர் கழிப்பறை என்பதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் பொது இடங்களிலும் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும்தான் மலம் கழிக்கும் நிலையில், வெரும் உலர் கழிப்பறைகளை மட்டுமே சட்டத்தில் குறிப்பிட்டுவிட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது. உலர் கழிப்பறை என்று கூறும் சட்டம் ஏன் திறந்தவெளி கழிப்பிடங்களை கணக்கில் கொள்ளவில்லை.

    நகப்ர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு, இன்றும் பல நகரங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறைகள் தெருச்சாக்கடையுடனும், பாதாளச் சாக்கடையுடனும் இணைக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும். இப்படி மனிதக்கழிவுகளை தனியாக சேமிக்க தொட்டி அமைக்காமல் சாக்கடை கால்வாயில் கலக்கும்படி அமைக்கப்படுவதால் சாக்கடை முழுவதும் மனித மலம் அதை சுத்தம் செய்ய இறங்க வேண்டியதென்னவோ சாதியால் அடக்கப்பட்ட மனிதன். வீட்டு கழிப்பறை என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் இந்த உலர் கழிப்பறையைத் தடுக்க நகராட்சிகளும் மாநகராட்சிகளும் என்ன திட்டம் வைத்துள்ளன, இதை செயல்படுத்த அரசு என்ன மாதிரியான திட்டத்தை கையில் எடுக்கப் போகிறது.

    2013 சட்டத்தில் மனிதக்கழிவு அகற்றுபவர் என்பதற்கு ஓர் விளக்கவுரை தந்துள்ளது, அதில் எந்த விதமான உபகரணங்களும் இன்றி மனிதக் கழிவை சுத்தம் செய்கிறவன் தான் உண்மையான மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளி என்று, இதுதான் இந்த சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, காரணம் ஆரம்பக்காலத்தில் இருந்தே சில உபகரணங்களை கையாண்டு வந்துள்ளனர் ஆனால் தற்போது அதனுடன் கையுறை, முகவுறை, மற்றும் சிலவற்றை தந்துவிட்டு அவர்களை மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளர்கள் இல்லை என்று கூறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கையுறை மற்றும் முகவுறை அணிவதால் மட்டும் அவர்களின் இழிநிலை மாற்றம் பெற்றுவிடுமா? அல்லது முழுமனதுடன் கழிவை அகற்ற முன்வருவான் என்று எவ்வாறு எண்ண முடியும்?

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013 சரியாக செயல்படுத்தப்படுமா பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன் கிட்டுமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறமும் சமூக ஆர்வலர்கள் மறுபுறமும் எண்ணும் வேளையில், முழுக்க முழுக்க அரசு இதற்கான செயல் வடிவத்தைத் தான் நல்குமே தவிர சட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் கையிலும், மக்கள் பிரதிநிதிகளின் கையிலும் கடைசியாக மக்களின் கையிலும் தான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு மக்களை நல்வழிபடுத்தியும் சமூக சுகாதாரத்தையு எப்படி அதற்கான மாற்றத்தை மக்களிடமிருந்தே உருவாக்க வேண்டும். இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். அவ்வாறு செய்ய வேண்டாம் என கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தின் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வார்களாம். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, குட் மார்னிங் சொல்வார்களாம். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் மக்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவார்காளாம். இதனால் கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டதாம். இப்போது, கிராம கவுன்சில் உறுப்பினர்கள் குட் மார்னிங்கிற்கு குட்பை சொல்லிவிட்டார்கள் அத்தோடு மக்கள் பனியை செய்த திருப்தியும் ஏற்பட்டுவிட்டதாம் (தினமலர், குட் மார்னிங் மூலம் மலம் கழிப்புக்கு குட்பை, நவம்பர் 21, 2014). ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதே போன்று செய்ய வேண்டியதில்லை, மாறாக தங்கள் பகுதியில் செயல்படாமல் உள்ள பொது கழிப்பறைகளை சரி செய்து அதை முறைப்படுத்த வேண்டும், பொது இடத்தை அசுத்தம் செய்யாமல் முழுச் சுகாதாரம் உள்ள பகுதியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தனிநபர் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை தர முன்வரவேண்டும் அத்தோடு அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

    மக்களும் தங்களுக்கான சுகாதாரத்தை எப்படிப் பேணுவது அவசியமோ அதுபோல சமூக சுகாதாரத்திலும் அக்கறை உள்ளவராக மாற்ற வேண்டும். முடிந்தவரையில் கழிவறையை வீடுகளில் கட்டியும் பொது கழிப்பறைகளை பயன் படுத்தியும் வாழ்வது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசையும் அரசு அதிகாரிகளையும் குறை கூறுவதை விடுத்து தங்களுக்கான மாற்று சிந்தனையை தாங்களே உருவாக்க முன்வரவேண்டும். அரசுதான் கழிவறையை கட்டித்தர வேண்டும் என்று எண்ணாமல் தாங்களே முன்வந்து அரசுதிட்டத்தின் உதவியுடன் தங்கள் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் காக்கும் பொருட்டு கழிவறைகளை வீடுதோரும் கட்டி பயன்படுத்த வேண்டும். மனித நேயம் மற்றும் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவிட்டால் மட்டும் போதாது மாறாக அதை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டுச் செல்பவன் ஒருவன் அதேமலத்தை கைகளால் அள்ளி சுத்தம் செய்வது என்பதுதான் நம் சமூகத்தில் மனித நேயமா? மனித மாண்பா? அல்லது மனித உரிமையா? தனி மனித உரிமை கூட மற்றவரின் உரிமையை பறிப்பதற்கு உரிமையில்லாத போது ஒருவன் செய்த தவறுக்காக மற்றொருவனை சாதியின் பெயரால் தண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் உருவாகியுள்ளாது. அப்படி என்றால் நமது சட்டப் புத்தகத்தில் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவம் என்பது எல்லாம் வெறும் எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டும் தானா என்றெண்ணத் தோன்றுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பது மற்றும் மனித கழிவு அகற்ற தொழிலாளர்களை பணிப்பது என்பது இரண்டுமே சட்டத்திற்கு புறம்பானது. இதைத்தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சமூக கட்டமைப்பை மாற்ற சட்டத்தினால் முடிவதில்லை, சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமானால் மக்களின் மனங்கள் மாறவேண்டும். இது மட்டுமே சாத்தியம், சமூகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்க……………

    Share
  • என்ன வைத்தோம்?

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    முன்னோர்கள்   தூய்மையாக   வைத்தி   ருந்த
       மூச்சிழுக்கும்   காற்றினிலே   நஞ்சைச்   சேர்த்தோம்
    முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்   நீக்கும்
       முதலுதவி   மரங்களினை   வெட்டிச்   சாய்த்தோம்   Tamizhazhan
    பொன்கதிரை   வடிகட்டி ஒளிய   னுப்பும்
       பொற்கவச   ஓசோனை   ஓட்டை   செய்தோம்
    என்னவைத்தோம்   சந்ததிக்கே   தன்ன லத்தால்
       எல்லாமும்   கலப்படத்தால் கெடுத்து   வைத்தோம்!

    ஆயிரமாம்   ஆண்டுகளாய்   சேர்த்து   வைத்த
       அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தோம்
    பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்
       பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தோம்
    தாய்மண்ணில்   உரங்களினைப்   போட்டுப்   போட்டுத்
       தரும்விளைச்சல்   எனஉறிஞ்சிச்   சக்கை   செய்தோம்
    சேய்களுக்கே   என்னவைத்தோம்   தன்ன   லத்தால்
       செழித்திருந்த   இயற்கையினைக்  கெடுத்த   வைத்தோம்!

    அரணாக   நமைக்காத்த   காட்டை   வெற்பை
       அறுத்துடைத்தே   மழைவளத்தை   மலடு   செய்தோம்
    வரமாகப்   பெற்றவயல்   தோப்பை   வீடாய்
       வடிவமைத்து   விளைச்சலுக்கு   முடிவு   செய்தோம்
    கரமாக   உதவிவந்த   ஆற்று   நீரில்
       கழிவுசேர்த்து   நோய்பெருக்கி   முடமாய்ச்   செய்தோம்
    சிரமிழந்த   உடலாகச்   சந்த திக்கே
       சீர்இயற்கை   தனைமாய்த்தே   அழிவை   வைத்தோம்!

     

    Share
  • இறைவா! இறைவா! இறைவா!

    இசைக்கவி ரமணன்

    images

     

     
    எங்கும் நீயே நிறைந்தாலும்
    எங்கோ இருப்பது போலிருப்பாய்
    எதிரில் ஒருமுறை வருவாயா?
    என்னுள் சிரிக்கும் இறைவா?
    என்னுயிர் ஆளும் தலைவா?

    நீயும் நானும் ஒன்றென்றால்
    யாரே யாரைத் தேடுவது
    நானும் நீயும் வேறென்றால்
    எங்கே உன்னைச் சேருவது?
    நாயேன் ஒன்றும் அறியவில்லை, இந்த
    நரகத்தின் காரணம் புரியவில்லை
    நீயாய்த் திரையை நீக்காமல்
    நெஞ்சினில் நிம்மதி வருவதில்லை

    கண்ணோ உன்னைக் காணாது
    மனமோ உன்னை மறவாது
    எண்ணம் உன்னைத் தீண்டாது, உன்னை
    எண்ணாதிருக்க முடியாது
    இறைவா! இறைவா! இறைவா!

    தவறுகளே என் தவமேடை
    தவிப்பே எந்தன் ஆராதனை
    வருவாய் வருவாய் என்றேதான்
    நம்பி நம்பி தினம் ஏங்குகிறேன்
    கண்ணீர்த் துளிகள் மலராகி
    கணந்தோறும் உன்னைப் பூசிக்கிறேன்\
    கருணைக் கடலே உன் முன்னே, ஒரு
    கவளம் ஏழை யாசிக்கிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

    ஏதோ வந்ததைப் பாடுகிறேன்
    இமைகளை மெதுவாய் மூடுகிறேன்
    மடியில் ஓரிடம் தேடுகிறேன், நான்
    மரணமில்லாமல் வாடுகிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

     
    25.03.2015 / புதன் / 09.

    Share
  • சுடர்மிகு அறிவு!

    -சரவணன்

    தனி ஒருவனுக்கு…
    வேண்டாம் பாரதி..
    ஜகமே உணவில்லாமல்தான்
    அழியப் போகிறது…

    அக்கினிக் குஞ்சொன்று…
    நானும் கண்டேன்…
    ஐ பேட் ஆங்கிலத்தில் நான்
    ஆங்ரி பேர்ட் என்றது…

    தேடிச் சோறு நிதந் தின்று….
    வாக்கு பலித்தது..
    சுற்றிலும் பீட்சா பாஸ்தாக்
    கடைகள்…

    சாதிகள் இல்லையடி…
    நீக்கிவிட்டுப் புத்தகத்தில்
    காயத்திரி மந்திரம்
    வைக்காலாமெனப் பரிந்துரைக்கப்படுமோ…?
    உப்பு சர்க்கரை
    அளவு குறையுமாமே…

    வல்லமை இழந்திட்டேன்…
    சொல்லடி சிவசக்தி
    சுடர்மிகு அறிவு… இன்னும்
    என்னுள் இருக்கிறதா…?

     

    Share
  • ஏக்கத்தோடு எதிர்பார்ப்பு

    -ஆர். எஸ். கலா

    உண்மையை  உரைத்து
    நன்மையைப் புரிந்து
    நெஞ்சை நிமிர்த்தி நின்றுவிடு!
    ஊக்கத்தைக்  கையில் எடுத்து
    உன் வெற்றியை அடைந்துவிடு!

    உன்னையும் உண்மையையும்
    உணராத நட்பைத் தட்டிவிடு!
    முயற்சியை முடிவாக்காமல்
    உலகத்தில் உலாவவிடு!

    சிறுக சிறுகச் சிந்தித்துச்
    செயல் பட்டுவிடு!
    மறக்க முடியாத சோகத்தையும்
    மாற்ற எண்ணி வென்றுவிடு!

    நல் அறிவுரைகளை
    ஏற்று விடு!
    தீய வழி தானாகவரும்
    தீன்டாமல் விலகிவிடு!

    கடமை கண்ணியம்
    மறவாத ஆட்சி புரிந்துவிடு!
    பலநாடு வியக்கும் வண்ணம்
    நாட்டின்  நலத்தையும் வீட்டின்
    வளத்தையும் வளர்த்துவிடு!

    நல்லவையை நாசம்
    பண்ணிவிடும் செயலுக்குத்
    தடை பிறப்பித்துவிடு!
    நல்ல பல திட்டங்களை
    அறிவித்து விடு!

    செல்வமும் புகழும் போதும்
    என்று நினைக்கும் அரசியலை
    மறந்து விடு!
    சென்ற இடமெல்லாம் சிறப்பான
    மனிதன் என்னும் புகழைப்
    பெற்று வென்றுவிடு!

    ஏழை எளியோரை மதித்து
    மனித நேயத்தை வளர்த்திடு!
    ஏற்றுமதி இறக்குமதி எனப்
    பல அபிவிருத்தி மூலம்
    ஏழை மக்களையும் சிரிப்போடு
    வாழவழி வகுத்திடு!

    உன் மக்கள் மனதில்
    மட்டும் இல்லை உலக
    மக்கள் மனதிலும்
    உன் நினைவை நிரந்தரமாகப்
    பதிய வைத்துவிடு!

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 49

    –சு. கோதண்டராமன்.

     

    வேதம் அபௌருஷேயமா?

    619px-Rigveda_MS2097

     

    வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்தான் இயற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ப்ரஹ்ம அகாரி”- “நான் இந்த பிரார்த்தனையை இயற்றியிருக்கிறேன்” என்ற தொடர் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. (உதாரணம் 4.6.11, 4.16.20, 21) எனவே வேதம் ரிஷிகளால் இயற்றப்பட்டதுதான்.

    ஆனால் வேதம் அபௌருஷேயம் என்பதை மூட நம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. வேதப் பாடல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று முன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சில பாடல்கள் சாதாரணப் புலமை நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மேலும் சில பேரருள் நிலையில் பாடப்பட்டவை. சில, தன்னையே பரம்பொருளாக உணரும் அத்வைத நிலையில் பாடப்படவை.

    உதாரணமாக, ஆபோஹிஷ்டா மயோபுவ: என்ற மந்திரத்தைப் பார்ப்போம். 10.9.1 முதல் பாடலில், தண்ணீரே மகிழ்ச்சி தருகிறீர்கள் என்று கூறும்போது ரிஷி சாதாரணப் புலமை நிலையில் இருக்கிறார். தாய் போல என்னை நேசிக்கிறீர்கள். பாவத்தைப் போக்கி எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கும் உங்களிடம் நாங்கள் விரைந்து வருகிறோம். தெய்விகமான தண்ணீர் எங்களது வழிபாட்டுக்கும் குடிப்பதற்கும் இனியதாக இருக்கட்டும் எங்களைச் சுற்றி ஓடட்டும், நலம் தரட்டும். விலை மதிப்புள்ள பொருட்களின் ராணியே, மனிதரைக் கட்டுப்படுத்துபவர்களே, எங்களுக்கு மருந்துகள் தருக….. என்று இவ்வாறு பேசும்போது அவர் நீரைத் தெய்வமாகக் கருதுகிறார். இது அருள் நிலை.

    தண்ணீர் எப்படி மனிதர்களை நேசிக்கும், அது எப்படி மனிதரைக் கட்டுப்படுத்தும் என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளால் இந்த அருள் நிலை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

    அருட்செல்வம் மிகுந்த தண்ணீரே, எல்லாச் செல்வங்களும் உங்கள் கையில். நற்செயல்களும் அமரத்துவமும் கொண்டு தருபவர்கள் நீங்களே (10.30.12) என்று சொல்லும்போது அவர்கள் நீரை அமரத்துவம் அளிக்க வல்ல பரம்பொருளாகவே கருதுகிறார்கள்.

    இதற்கு மேற்பட்டதான நான்காவது நிலையில், காற்றும் புனலும் கடலுமே நான் என்று கூறிய பாரதி போலத் தன்னை எல்லாவற்றுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் ரிஷி. நானே அக்னி, நானே ஹவிஸ் என்று கூறும் 3.26.7 போன்ற பாடல்களும் சில வேதத்தில் உண்டு.

    இத்தகைய அருள் நிலைகளில் தோன்றிய பாடல்களைத் தெய்வ அருளால் தோன்றிய பாடல்கள் என்று கூறுவது உபசார வழக்கு. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகனின் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அல்ல என்று வள்ளலார் கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்க.

    மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி என்று பாரதி கூறியதையும் நோக்குக.

    இத்தகைய அருட்கவிகள் கோடியில் ஒருவர் எப்பொழுதாவது தானே பிறப்பர். எனவே அவர்களது கவிதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பிய மக்களால் இவை மனப்பாடம் செய்யப்பட்டன. சிலர் எழுதியும் வைத்திருக்கலாம்.

    காலப்போக்கில் இவற்றில் பாடபேதங்கள் தோன்றின. காரணம் மனிதர்களின் இயல்பான மறதி தான். ஏதோ ஒரு எழுத்தோ, சொல்லோ மறந்துவிட்டால் அதை வேறு ஒன்றைக் கொண்டு நிரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்று தெரிகிறது. உதாரணமாக, கீழ்க் கண்டவற்றை ஒப்பிடுக.
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜ: ரிக் 1.18.1
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜம் தைத்திரீய ஸம்ஹிதை 1.5.6
    கடைசியில் விசர்க்கத்திற்குப் பதிலாக ‘ம்’ வருகிறது.

    கீழ்க் கண்டதையும் ஒப்பிடுக.
    உத்வயம் தமஸஸ்பரி ஜ்யோதி: பச்யந்த: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – ரிக் 1.50.10
    உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதி: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – தை.ஸம் 4.1.7
    இதில் இரு வார்த்தைகள் முன் பின்னாக இடம் மாறியுள்ளன.

    இந்த மாற்றங்கள் வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்டதாகத் தான் தெரிகிறது. இது போன்று நிறைய உள்ளன.

    தான் குருவிடமிருந்து கற்றுக் கொண்டதோடு கூட தன் சொந்தக் கவிதைகளையும் சேர்த்துத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வழக்கமும் சிலருக்கு இருந்திருக்கும். நாளடைவில் இத்தகைய பாடபேதங்கள் அளவில் பெருகிய நிலையில் அவரவரும் தத்தம் பாடமே உண்மையான பாடம் என்று வாதிட்டிருப்பர். எதையும் தள்ள முடியாது. அந்த நிலையில் தான் பாடபேதங்களைப் பிரித்துத் தனிப் பெயரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவம் தான் என்ற போதிலும் பல பாட பேதங்கள் இருந்ததால் சாம வேதம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டது. வேள்விக்கான மந்திரங்களும் உரைநடைப் பகுதிகளும் கலந்த பாடபேதம் யஜுர்வேதமாகப் பெயரிடப்பட்டது. இதை ஒரு தனி மனிதர் செய்திருந்தால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குமா என்பதும் நாடு முழுவதும் பரவி இருக்குமா என்பதும் சந்தேகமே. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக வியாசர் இருந்திருப்பார்.

    இனி மேலும் இத்தகைய பாடபேதங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணம் அந்த அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத் தான் ஸ்வர முறையையும் க்ரமம், பதம், ஜடா, கனம் போன்ற பாட முறைகளையும் ஏற்படுத்தி வார்த்தைகள் இடம் மாறாதபடியும் உரு மாறாதபடியும் ஏற்பாடு செய்தனர். வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் அப்பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். வேதம் ஈச்வரனின் மூச்சுக் காற்று என்ற நம்பிக்கையையும் அப்பொழுது அவர்கள் பரப்பி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் வேதங்களை உரு மாறாமல் இன்று வரை காப்பாற்றி வந்திருக்கிறது. வேதக் கல்வி சிரத்தையுடன் கற்பிக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாக அமைந்து. வேதக் கல்வி தந்த சிரத்தை காரணமாக, பாரத சமுதாயம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டது.

    இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்னே வேதத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் வேதத்தின் சில பகுதிகள் மையக் கருத்துக்கு மாறான வகையில் செல்கின்றன. பிற்காலத்தில் வேத இலக்கியம், தர்ம சாஸ்திரம், புராணம் என்ற பெயரில் எழுந்த இலக்கியங்களில் சில இந்த மையக் கருத்துக்கு மாறானதாகச் செல்கின்றன. பாரதி அவற்றைத் தான் பொய் வேதங்கள் என்கிறார்.

    வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
    கோத்தபொய் வேதங்களும் –
    அவள்புனைந் தாள்; …… பாரதி

     

     

     

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(145)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    சில வருடங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையே மறந்து ஓடிவிடும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    வாழ்க்கையின் சிக்கல்கள் பல கோணத்தில் நம்மைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தவேளை உணவுக்காக அல்லல் படும் சமூகங்களை இப்போதும் அகிலத்தில் காண்கிறோம்.

    ஆனால் ஒருநாடு தன் சுயத்தை இழந்து விடாதிருப்பது எப்படி? அது தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

    இக்கேள்விகளுக்கான விடை இங்கிலாந்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் கண்கூடு. தமது கலாச்சார அடையாளங்களைப் பேணுவதை இந்நாட்டு மக்கள் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதுகிறார்கள்.

    மக்களின் பெரும்பான்மையான அபிலாஷைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசாங்கங்களும் இத்தகைய கலாச்சார அடையாளங்களை, காலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தொகையை ஒதுக்குகிறார்கள்.

    சரித்திரத்தை ஒதுக்கி விட்டு மனிதர்களால் வாழ்ந்து முடிந்து விட முடியாது அச்சரித்திரம் ஏதாவது ஒரு சந்தியில் அவர்களின் முன்னே வந்து அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

    சரி எனது இந்த மடலின் பின்னனியைப் பார்ப்போமா?

    richardIII-v4வட இங்கிலாந்தில் உள்ள “லெஸ்டர் (Leicester)” எனும் இடத்தில் ஒரு கார் பார்க் அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டினர்கள்.

    அப்போது அங்கே ஒரு மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது. என்னே ஆச்சரியம் அது இங்கிலாந்தை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னன் ரிச்சார்ட் 3 இனுடைய எலும்புக்கூடு என்று அறியப்பட்டது.

    தொடர்ந்து அவ்வெலும்புக்கூட்டை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் கோஷம் எழுந்தது.

    எங்கே அடக்கம் பண்ணுவது என்பதை தீர்மானிக்கும் இழுபறி ஐகோர்ட் வரை சென்று லெஸ்டர் சர்ச்சில் அடக்கம் பண்ணுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சரி யார் இந்த ரிச்சார்ட் 3 ?

    Richard the thirdரிச்சார்ட் இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள ” போதரிங்கே கோட்டையில் ” 1452ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் திகதி பிறந்தார். இந்த இடம் லெஸ்டரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது.

    ரிச்சார்ட்டும் அவரது அண்ணன் எட்வேர்டும் , எட்வேர்ட் 3 எனும் மாபெரும் மன்னனின் கொள்ளுப் பேரன்களாவார்கள்.

    இராஜ வரிசையின் பிரகாரம் ரிச்சார்ட்டின் அண்ணன் எட்வேர்ட் மன்னனாக 1461ம் ஆண்டிலிருந்து 1483 ம் ஆண்டு மரணமடையும் வரையில் அரசாண்டார்.

    அவரின் மரணத்தின் பின்னர் எட்வேர்ட்டின் 12 வயது மகன் தனது சித்தப்பா ரிச்சார்ட்டின் பாதுகாப்போடு முசடிசூட்டி அரசாண்டான்.

    அவனும், அவனது சகோதரனும் லண்டன் டவர் என்றழைக்கப்படும் கோட்டைக்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது அது அந்நாளைய அரசர்கள் தமது அரசியல் கைதிகளை சிறைவைக்கும் இடமாகத்தான் அறியப்பட்டாலும் அப்போது அது ஒரு ராஜமாளிகையாகவே இருந்தது.

    அப்பன்னிரண்டு வயது மன்னனின் பெற்றோரின் திருமணம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், இராஜ வரிசையின் படி மறைந்த எட்வேர்ட் மன்னனின் தம்பியாகிய ரிச்சார்ட் முடிசூடிக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து அப்பன்னிரண்டு வயதுப் பையனினதும் அவனது சகோதரினதும் நடமாட்டமே அற்றுப் போனது. அப்போதைய கூற்றுக்களின்படி எங்கே தனது இராஜபதவிக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று மன்னன் ரிச்சார்ட் அவர்களைக் கொலை செய்து விட்டான் எனும் வதந்தியே நிலவுகிறது.

    1483ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சியை அடக்கிய ரிச்சார்ட் இரண்டு வருடங்களின் பின்னர் “போஸ்வேர்த்” எனும் இடத்திற்கு வந்தான்.

    அங்கே அவனது கொள்ளுத் தாத்தாவழியில் இராஜ உரிமை கோரும் மற்றொரு “டியுடோர்” மன்னனுடன் போரிட்டு 1485ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி மரணமடைந்தான்.

    அப்போது அவ்விடத்திலிருந்து அவனது உடல் லெஸ்டருக்கு கொண்டுவரப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

    அந்த உடலின் எலும்புக்கூடு தான் சுமார் 500 வருடங்களின் பின்னர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களில் ரிச்சார்ட் என்பவனுக்கு ஒரு கொடூரமான மன்னன் எனும் பெயர் உண்டு ஏனெனில் தனது அரசாட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரபட்சம் இன்றிப் பல கொலைகளைப் புரிந்துள்ளான்.

    இப்போது அம்மன்னனினது எலும்புக்கூட்டை எடுத்து ஒரு மன்னனுக்குரிய சகல மரியாதைகளுடனும் லெஸ்டர் சார்ச்சில் மார்ச் 26ம் திகதி அடக்கம் செய்துள்ளார்கள்.

    நான்கு நாட்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட இம்மன்னனினது எலும்புக்கூடு அடங்கிய பெட்டியைப் பார்த்து தமது மரியாதையைச் செலுத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்றார்கள்.

    இவரை அடக்கம் பண்ணுவதற்கான பெட்டியை கனடாவைச் சேர்ந்த இம்மன்னனின் பரம்பரையில் வந்த ஒரு தச்சுத் தொழிலை மேற்கொள்பவர் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.

    இம்மன்னனின் உடலுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தற்போதைய இங்கிலாந்து ராணியின் கடைசி மைந்தன் அங்கு சென்றிருந்தார்.

    கொடூரமான மன்னன் என்று பெயரெடுத்திருந்தவருக்கு ஏன் இத்தனை கெளரவம் எனும் வாதம் ஒருபக்கத்தில் இருந்து ஒலிக்க, அவனது கொடூரமான செயல்கள் அக்காலகட்டத்தில் மற்றைய மன்னர்களினாலும் கடைப்பிடிக்கப்பட்டதே ஆகவே அவருக்குரிய கெள்ரவத்தைக் கொடுப்பது தவறாகது எனும் வாதம் மறுபக்கத்தில் ஒலிக்கிறது.

    என்ன இருந்தாலும் தற்போதைய எலிசபெத் மகராணியாரின் குடும்பம் பங்கு பற்றியிருக்க வேண்டுமா? எனும் கேள்வியும் ஆங்காங்கே ஒலிக்கிறது.

    ஒன்று மட்டும் உண்மை, காலங்கள் எத்தனை கசந்தாலும் தமது நாட்டின் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்நாட்டு மக்களினது பண்பு பாராட்டப் படவேண்டிய ஒன்றே!

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மத நம்பிக்கை தந்த சோகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நியூயார்க் நகரிலுள்ள ப்ருக்ளின் என்னும் பகுதியில் வசித்துவந்த ஒரு யூதக் குடும்பத்தின் ஏழு குழந்தைகள் ஒரே நேரத்தில் தீக்கிரையாகி இறந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாள். வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை யூதர்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்பது யூத மதத்தின் விதி. அன்று எந்த விதமான வேலையும் செய்யக் கூடாது. மின்சாரத்தில் இயங்கும் எந்தக் கருவியையும் உபயோகப்படுத்தக் கூடாது. அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை (24 மணி நேரம்) லிப்ட் கீழ் தளத்திற்கும் மேல் தளத்திற்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்குமாம். அங்கு வசிக்கும் யூதர்கள் லிப்டில் உள்ள பட்டனைத் தொட்டு அமுக்கி அதை இயக்கக் கூடாதாகையால் இந்த ஏற்பாடு. அவர்களுடைய தளத்திற்கு வரும்போது அதில் ஏறிக்கொள்வார்கள்; போக வேண்டிய தளத்தில் இறங்கிக்கொள்வார்கள். அதை யூதர்கள் அன்று இயக்குவதில்லை. அந்த லிப்ட் அந்த இருபத்து நாலு மணி நேரமும் மேலும் கீழும் போய்க்கொண்டிருப்பதோடு ஒவ்வொரு தளத்திலும் சிறிது நேரம் நின்று கதவைத் திறந்துவிட்டு, மறுபடி மூடிக்கொண்டு மறுபடி இயங்க ஆரம்பிக்கும்.

    புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிற ஒவ்வொரு யூதரும் அன்று தொலைபேசியில் யாரோடும் பேசுவதில்லை. எந்தவித தீயையும் மூட்டுவதில்லை. இந்த மாதிரியான கட்டுப்பாடுகளோடு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்துவந்த ஒரு சநாதன யூதக் குடும்பம்தான் மேலே சொன்ன ஏழு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பம். சனிக்கிழமை முழுவதும் மின் அடுப்பை மூட்டிச் (அதாவது அதிலுள்ள பட்டன்களை இயக்கி) சமைக்க முடியாததால் நிறைய உணவு சமைத்து அதை எப்போதும் சூடாக வைத்திருக்கும் ஹாட் பிளேட் (hot plate) என்னும் அடுப்பில் வைத்துவிட்டு அன்று இரவு தாய் உறங்கச் சென்றிருக்கிறார். இந்த சாதனத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அதில் தீப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாயும் அவருடைய எட்டுக் குழந்தைகளும் மேல் மாடி அறையில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை மட்டும் மத சம்பந்த வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கிறார்.

    பற்றி எரிந்த தீ தூங்கிக்கொண்டிருந்தவர்களில் யாரும் எழுந்திருக்கும் முன் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குத் தாவியிருக்கிறது. தாயும் இரண்டாவது மகளும் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே குதித்திருக்கிறார்கள். மற்ற ஏழு குழந்தைகளும் விழித்தெழுந்து உதவி கேட்டுக் கதறிய சில நிமிடங்களிலேயே தீ அவர்கள் அனைவரையும் காவுகொண்டுவிட்டது. ஜன்னல் வழியே வெளியே குதித்த தாயும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். செல்போனை அன்று இயக்க மாட்டார் என்பதால் தனது ஏழு குழந்தைகளை இழந்த தந்தைக்கு பல மணி நேரம் கழிந்த பின்னரே செய்தி கிடைத்திருக்கிறது. அப்போது அவர் ஒரு யூதக்கோவிலில் இருந்திருக்கிறார். காவல் துறையினர் அவருடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் செய்தி சொல்ல அத்தனை நேரம் பிடித்திருக்கிறது. இறந்துபோன ஏழு குழந்தைகளில் நான்கு பையன்கள், மூன்று பெண்கள். இந்த எட்டுக் குழந்தைகளும் 16-லிருந்து 5-வரை வயதுடையவர்கள்.

    இந்தத் தாய் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின் இஸ்ரேலில் குடியேறியிருக்கிறார். அங்கு அந்தத் தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒட்டு மொத்தக் குடும்பமும் பதினெட்டு மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்குக் குடியேறியிருக்கிறது. (இஸ்ரேலிய யூதர்கள் அனைவருக்கும் எளிதாக அமெரிக்காவுக்குக் குடிபெயர அமெரிக்கா விசா கொடுக்கிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் எந்தக் கோடியில் பிறந்த யூதருக்கும் இஸ்ரேலில் குடியேற எளிதாக அனுமதி கிடைக்கும்.) தந்தை இஸ்ரேலில் என்ன செய்தார், அமெரிக்காவில் என்ன செய்யத் திட்டம் வைத்திருந்தார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் புதிய நம்பிக்கைகளோடு தன் குழந்தைகள் இருந்ததாகத் தந்தை குழந்தைகளுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

    இறந்த ஏழு குழந்தைகளின் உடல்களையும் புனித பூமியான ஜெருசலேமுக்குக் கொண்டுபோய் அங்கு நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். மதத்தின் பாரம்பரியக் கொள்கைகளில் நம்பிக்கையுடைய யூதர்கள் தாங்கள் இறந்த பிறகு தங்களுடைய உடல்கள் ஜெருசலேமில் புதைக்கப்பட்டால்தான் தங்களுடைய கடவுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமிக்கு வரும்போது தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறார்கள். இப்படித்தான் இந்தத் தந்தையும் நம்புவதால் அவருடைய குழந்தைகளின் உடல்கள் ஜெருசலேமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஈமச் சடங்குகளின் போது பேசிய தந்தை ‘இறைவன் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டுவிட்டார்’ என்று பேசியிருக்கிறார். இன்னொரு மதத் தலைவர் ‘இது கடவுளின் தீ’ என்று கூறியிருக்கிறார்.

    யூத மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு மூட நம்பிக்கையே இந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய சோகத்திற்கு ஆதாரமாக அமைந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது இம்மாதிரியான பாரம்பரிய மத நம்பிக்கைகள் உடையவர்கள் எப்போதுமே மாறப் போவதில்லையா என்ற ஆதங்கம்தான் உண்டாகிறது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாங்களும் தங்கள் மதமும் தோன்றியதாகக் கூறிக்கொள்ளும் யூதர்கள் தங்கள் மூதாதையர் என்ன செய்தார்களோ அதை அப்படியே பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொரு வார சனியன்றும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. பூமியை ஆறு நாட்களில் படைத்த இறைவன் சனிக்கிழமை ஓய்வெடுத்தாராம். அதைப்போல் யூதர்களும் அன்று முழு ஓய்வு எடுக்க வேண்டுமாம். அதை லிப்டை இயக்காமலும் மின் அடுப்பை உபயோகிக்காமலும் இருப்பதன் மூலம்தான் கடைப்பிடிக்க வேண்டுமா? அவர்கள் மூதாதையர் காலத்திற்கும் இவர்கள் காலத்திற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டு வேறு வகையில் சனிக்கிழமை விரதத்தை அனுசரிக்கலாமே.

    Share
  • பெண்ணே கேளாயோ!

    -திருக்குவளை மீ.லதா

    உடைக்கப்பட்டன
    பெண்கையில்  விலங்கென்று
    பெருமை கொள்பவனே உடைத்தும் எதற்கு
    உன்னிடம் சாவி?
    உனக்குப் பின்னால்
    பெண் என்பதாலோ?
    உன்னைவிட எதில் குறைந்தவள்?
    அன்பும் பண்பும் அங்கத்தில் அவள் பூட்டியுள்ள
    நகையல்லவோ!
    விட்டுகொடுத்து வாழ்பவள்-
    ஆனால் விட்டுதரமாட்டாள்
    அவள் உரிமைகளை!
    பூவானவள்
    வாடும்வரை வாழ வைக்கிறாள் தன்னை நம்பினோர் கைவிடப்படாரென!
    புதையும் வரைப் புரட்சிப்பெண்ணாக இரு பூவையே!
    மடிந்து விடாதே மண்ணுக்குள் உரமாக!

     

    Share
  • ராமன் எத்தனை ராமனடி!

    -ரா.பார்த்தசாரதி

    ராமன் பிறந்ததும்  நவமியிலே
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே       Rama
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே!

    ராமாயணயத்தின் காவியத் தலைவன் ராமனே
    பிறன்மனை நோக்குபவனைத் தண்டித்தவனும் ராமனே
    நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே
    ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே!

    ராம நாமமே  நலம் தரும் நாமமே
    அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே!
    யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே
    ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே!

    பங்குனி உத்திரத்து  வரும்  ராம நவமியே
    பானகமும், பருப்பும், மோரும் நிவேதனமே
    ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும்
    அவரது  கல்யாணகுணங்கள் சிறப்புடையதே!

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –ஆகிரா.

    அறிமுகம்:
    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காத்தோர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

    என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

    பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

    மக்களின் மனங்களில் மாறா இடம்:
    தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது
    உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது.”

    எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
    “திருடாதே பாப்பா திருடாதே,
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
    திறமை இருக்கு மறந்து விடாதே”
    எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

    திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

    “கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ?
    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ?
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்;
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
    எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

    “தரை மேல் பிறக்க வைத்தாய்
    எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
    கரைமேல் இருக்க வைத்தாய்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
    எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
    ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
    உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
    எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
    அவனுக்கு நானொரு தொழிலாளி,
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”
    என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

    சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

    எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
    அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

    வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

    எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

    மாறுவேட மாமன்னன்:
    எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “குமரிக்கோட்டம்” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

    புரட்சித் தலைவர்:
    “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
    “தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
    கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
    ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
    கொடுமையைப் போக்குவோம்”
    எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

    பொன்மனச் செம்மல்:
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

    எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

    அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

    “ஆயிரம் நிலவே வா,
    ஓராயிரம் நிலவே வா,
    இதழோரம் சுவை தேட,
    புதுப் பாடல் விழி பாடப் பாட”
    எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

    “ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

    “ஆண்டவனே, உன் பாதங்களை நான்
    கண்ணீரில் நீராட்டினேன்,
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
    உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
    எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

    தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

    எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

    இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

    Share
  • பொன்னாரம் பூவாரம் … கண்ணோரம் சிருங்காரம் …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    Ponnaram Poovaram

    பொன்னாரம்.. பூவாரம்……

    கவிஞர்கள் ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதினாலும், திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆயிரமாயிரம் பாடல்கள் புனைந்தாலும், இந்தப் பாடல் இவரால் எழுதப்பட்டது என்று அந்தப் பாடலே அவர்களை அடையாளப்படுத்தும், முன்னிறுத்தும் அதிசயமும் இங்கு உண்டு. ஒரு முறை அத்திக்காய் காய் காய் பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதித் தந்த போது, இசையமைப்பாளர் என்னய்யா… கொத்தவால்சாவடி போல எல்லாம் ஒரே காயா இருக்குது… வேற பாடல் கொடுங்க… என்றதும்… கவிஞர் எத்தனையோ பாடல்களை நீங்க கேட்குற மாதிரி எழுதித் தரேன்.. . இது போன்ற பாடலை எனக்காக மெட்டமையுங்கள் என… ஒருவாறு அப்பாடல் வெளி வந்தது. கவிஞருக்கு ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுத்தந்தது.

    அதே போல் கவியரசின் கை வண்ணத்தில் மற்றுமொரு பாடல். பகலில் ஒரு இரவு திரைப்படதிற்காக இசை ஞானி இளையராஜா இசையில் வடிவம் பெற்று எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில் உருவானது. விஜயகுமார் ஸ்ரீதேவி இணைந்து திரையில் தோன்றும் இப்பாடல் இசையில் மிதக்கும் இன்ப வெள்ளம்….

     

    https://youtu.be/yF58pBzAsLI

    காணொளி: https://youtu.be/yF58pBzAsLI

     

    படம்: பகலில் ஒரு இரவு
    பாடல்: கண்ணதாசன்
    இசை: இளையராஜா
    குரல்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

    பொன்னாரம் பூவாரம்
    கண்ணோரம் சிருங்காரம்
    பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
    வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
    செந்தேன் நிலா ஒரு சீர் கொண்டுவா
    (பொன்னாரம்)

    மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே … சொல் தென்றலே …
    மேலாடை சதிராட வா தென்றலே … வா தென்றலே …
    அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
    வா….பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே
    காலமெல்லாம் தேனிலவு தான்..
    (பொன்னாரம்)

    சிந்தாத மணிமாலை உன் புன்னகை … உன் புன்னகை …
    செவ்வான விண்மீன்கள் உன் கண்களே… உன் கண்களே …
    சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க
    வா…… செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
    காலமெல்லாம் தேனிலவு தான்..
    (பொன்னாரம்)

     

    பொன்னாரம் பூவாரம்
    கண்ணோரம் சிருங்காரம்

    பாடல் முழுவதும் இந்த ஓசை நயம் ரீங்காரம் செய்திருக்க அற்புத இசையும் பின்னணிக் குரல்களும் அதற்கேற்ப ஒத்துழைக்க… இனிய பாடல் வந்து நம் இதயத்தில் எதிரொலிக்கிறது!

    தமிழ் மொழியில் உள்ள இனிமையான வார்த்தைகள் எத்தனை என்பதற்கு இதோ இந்தப் பாடலில் உள்ள வரிகள் எடுத்துக்காட்டு தருகின்றன. மொத்தத்தில் வார்த்தைகளில் உள்ள ‘ரம்’ தரும் மயக்கத்தில் சற்று நேரம் ஆழ்ந்துதான் போகலாமே!

    Share
  • ஐந்து கை ராந்தல் (7)

    வையவன்

    அவர்கள் ஹோசூர் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி இரண்டு அங்கிருந்து டெங்கனிக்கோட்டா ஒரு மணி நேரம். அதிலிருந்து அண்செட்டி ஒரு மணி.
    ஹோசூரில் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தச் சொன்னான் வெற்றிவேல்.
    “எதுக்கு?”
    “இனிமே நீ ஓட்ட வேண்டாம். ஒனக்கு வழி தெரியாது. நான் ஓட்டறேன்.”
    “நேத்தெல்லாம் நீ ஓட்டி வந்திருக்கே. களைப்பா இருக்கும். ரெண்டு மணி நேரம் காரிலேயே ரெஸ்ட் எடுப்போம்”
    வெற்றிவெல்ஒப்புக் கொண்டான். முன் ஸீட்டில் சிவா படுத்தான். வெற்றிவேல் பின் ஸீட்டு.
    வெற்றிவேல் சிவாவை எழுப்பியபோது மணி நாலே கால்.
    அண்செட்டியை அடைந்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டது.
    “இங்கிருந்து ஒன்றரை மைல். தேவனஹள்ளி என்று ஒரு கிராமம்” என்று வண்டியை அங்கே நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சொன்னான் வெற்றிவேல்.
    வெற்றிவேல் வண்டியை நிறுத்திய இடம் ஆடுகளும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குக்கிராமம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வந்துவிட்டது போன்ற உணர்வை அனுபவித்தான் சிவா.
    தாழ்ந்து குறுகிய குடிசைகள். புராதனமான ஓட்டு வீடுகள். ஆண்கள் கம்பளி போர்த்தியிருந்தார்கள். அல்லது பெட்ஷீட் போர்த்தியிருந்தார்கள். பெண்கள்தான் நடமாடினார்கள். முகங்களில் களங்கமற்ற கிராமீயக் களை.
    வெற்றிவேலின் பின்னால் நடந்தான் சிவா.
    ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இடுப்பளவு தண்ணீர் என்பது ஆற்றைக் கடந்து வருபவர்களைப் பார்த்தால் புரிந்தது.
    “இது என்ன ஆறு?”
    “சின்னாறு”
    தண்ணீர் பளிங்கு போல் தெளிந்திருந்தது.
    ‘குளிக்கலாம் போல இருக்கா”
    சிவாவை வெற்றிவேல் கேட்டான்.
    “அப்பாவைப் பார்த்துட்டு குளிப்போம்.”
    ஆற்றின் இக்கரையில் ஓர் ஆலமரம். அக்கரையில் ஒரு சின்ன சிவன் கோயில்.
    ஆலமரம் பிரம்மாண்டமாயிருந்தது, மழைக்கும் நிழலுக்கும் அந்த கிராமமே ஒதுங்கலாம் போல்.
    தூரத்திலேயே மூன்று பேர் அதன் கீழே உனட்கார்ந்திருப்பது தெரிந்தது. செம்பட்டை முடியும் வெளுத்த தோலுமாக ஒரு அமெரிக்கன் – முப்பத்தைந்து வயது மதிக்கலாம். இடப்புறம் கீழ்ப்பாய்ச்சிய வேஷ்டியும் கை வைத்த மல் பனியனும் அதன் மீது ஒரு சால்வையுமாக அறுபது வயது தோன்றும் ஒரு கிராம பெருந்தனக்காரர்.
    நடுவில் கைலாச கவுண்டர் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். நøடிரத்த தாடி மார்பில் பாதியை மறைத்தது. தோளில் இருபுறமும் நரைத்த சிகை வந்து புரண்டது. மேலே ஆடையில்லை.
    இடுப்பில் சாயம் போன ஒரு காவி வேட்டி. அது தான் ஆடை…
    “வொட்ரீ வெல்… யூவ் கம் அகின்” என்ற யாங்கி உச்சரிப்பு இருவரையும் வரவேற்றது.
    சிவா முதலில் அவனைப் பார்த்தான்.
    பழுப்புக் கண்களில் அமெரிக்கப் பரபரப்பு. ஆறடி நீளத்துக்கு தோளிலும் கையிலும் கட்டுக் கட்டாக கட்டாக தசை தெரிய, வேட்டி உடுத்து நின்றான் அவன்.
    சிவா தன் தந்தையைப் பார்த்தான்.
    பெரிய நெற்றியில் நரைத்த அடர்ந்த புருவங்களில் அபூர்வமான அமைதி நிலவியதை அவன் கவனித்தான்.
    பாபா ஓம்கார்நாத் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
    “மீட் மை பிரண்ட் சிவா…”
    வெற்றிவேல் ஏதோ மேற்கொண்டு சொல்லப் போனான். சிவா அவனைத் தடுத்தான்.
    அவரது கண்கள் சிவாவைச் சந்தித்தன. அவை தெளிந்திருந்தன. குளிர்ந்த பார்வை. எதையும் கோராத, எதையும் விசாரியாத, எங்கும் பந்தப்படாத ஏதோ ஒரு விடுதலையை அந்தப் பார்வையில் சந்தித்தான்.
    தொடர்ந்து அவர் புன்முறுவல் செய்தார். ஒரு குழந்தையின் புன்முறுவல் மனசில் காரணமற்ற களிப்பையும் நிறைவையும் ஏற்படுத்திய புன்முறுவல்.
    உங்கள் மனைவி திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறார் கைலாச கவுண்டரே! உங்கள் மகனாகிய நான் பி.எஸ்ஸி., படித்து விட்டு வேலை தேடிக் கொண்டு ஒரு மெக்கானிக்குக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
    எப்படிப் படித்தேன் தெரியுமா?
    பேப்பர் போட்டேன். டிம்பர் பாக்டரியில் கணக்கு எழுதினேன். ஒவ்வொரு டெர்ம் பீஸ் கட்டவும் ஏதோ கண்டம் வந்தது போல் திண்டாடினேன்.
    வெற்றிவேல் அவர் பக்கத்தில் கை கட்டி நின்றான்.
    சிவாவின் மனசிற்குள் கோபங்களும் குறைகளும் அவரோடு மானசீகமாக ஒரு சம்வாதம் தொடங்கின.
    அவர் புன்முறுவல் செய்து கொண்டே இருந்தார்.
    அது அவன் தந்தை மாதிரியே இல்லை.
    நெற்றி மூக்கு வாய் மார்பு எல்லா உறுப்புகளும் கைலாச கவுண்டர்தான்.
    அந்தப் புன்னகை… அந்தப் பார்வை.. அவை கைலாச கவுண்டர் இல்லை.
    “என்னை அடையாளம் தெரியுதா?” என்று சிவா கேட்டான்.
    “வோட்ஸ் ஹி ஆஸ்கின்?” அந்த அமெரிக்கன் கேட்டான். வெற்றிவேல் மொழி பெயர்த்தான்.
    பாபா ஓம்கார்நாத் இமைகளை ஒருமுறை மூடித் திறந்தார். வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்தார். பின்பு அந்த அமெரிக்கனை.. அடுத்து அந்த பெருந்தனக் காரரை.. மீண்டும் சிவாவை. அவருக்குள் எந்த பேதமும் இருப்பதாகத் தெரியவில்லை.
    அலைகடலும் ஓய்ந்த ஒரு நிமிஷத்தில் சாந்தி நிறைந்திருக்கும் ஒரு வேளையில்சந்திரோதயம் ஆனது மாதிரி சிவா ஓர் அகமகிழ்வை அனுபவித்தான்.
    எந்தக் கேள்விக்கும் இங்கே அர்த்தமில்லை என்று அவனுக்கே உறைத்தது.
    ஆதங்கங்களும் பந்தமும் இவர் முன்னால் அசட்டுத்தனம் என்று தோன்றியது.
    “நீங்கள் கைலாச கவுண்டர் தானே?”
    அவர் புன்னகை செய்தார். இப்போது அதில் ஒரு சிறிது வேடிக்கை கலந்திருந்தது.
    “இவர்கள் ஓம்கார்நாத் என்று கூப்பிடுகிறார்கள்.”
    குரலில் அதைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற குறுகுறுப்பை ஏற்படுத்தும் வசீகரமான இனிமை இருந்தது.
    அந்த அமெரிக்கன் புரியாமல் விழித்தான்.
    “தெ கால் இட் ஓம்கார்நாத்” என்று அவனுக்காக ஸ்பஷ்டமான ஆங்கிலத்தில் சொன்னார் அவர், சொல்லிவிட்டு அவர் மெதுவாய் இதழ் மலர்ந்து சிரித்தார்.
    பற்கள் ஆரோக்கியமாயிருந்தன.
    என்னை என்பதற்குப் பதில் ஆங்கிலத்தில் அவர் இதனை என்று சொல்வதை சிவா கவனித்தான். இவர் எப்போது இவ்வளவு தெளிவான ஆங்கிலம் கற்றார்?
    இது கைலாச கவுண்டர் அல்ல. அடையாளம் மறைந்து, பேதங்கள் மரித்து, போராட்டங்கள் மாண்டு போன ஆத்மா.
    அவர் இரண்டு கைகளையும் விரித்துவிட்டு சாந்தமாக அவனைப் பார்த்தார்.
    எனக்கு ஆட்சேபமில்லை.
    எனக்குத் தெரியாது.
    நான் அதுவல்ல.
    அவரவர் விருப்பம்.
    அந்த கைவிரித்த சைகையில் இப்படி சிவாவுக்கு நாலு அர்த்தங்கள் தெரிந்தன.
    சிவாவுக்கு அந்த மரத்தடியில் உட்கார வேண்டும் போலிருந்தது.
    அவன் சட்டென்று எவர் நிற்பதையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து விட்டான்.
    மற்ற மூவரும் அனிச்சை செயல் மாதிரி உட்கார்ந்தனர்.
    அப்போது ஆலமரத்திலிருந்து நாலைந்து பழுத்த இலைகள் அவருக்கு முன்பாக உதிர்ந்தன. அவர் அதை உற்றுப் பார்த்தார். பின்பு மரத்தை நிமிர்ந்து நோக்கினார்.
    உதிர்ந்த இலைகளில் ஒன்றை எடுத்து மெதுவாக நீவினார். பின்பு சிவாவைப் பார்த்தார். அதன் காம்பை வருடிவிட்டு பொருள் பொதிந்த பார்வையோடு அவனை நோக்கினார்.
    “நான் மெட்ராஸிலே இருக்கேன்..வேலை கெடைக்கலே” சிவாவுக்குத் தன்னை மீறிக் கொண்டு அதைச் சொல்ல தோன்றிற்று.
    “இவன் எழுத்தாளனாகியிருக்கிறான்” என்று குறுக்கிட்டான் வெற்றிவேல்.
    அவர் பார்வை நிர்ச்சிந்தையாக இருவரையும் கவனித்தது. அதை அவர் கேட்டமாதிரியும் தெரிந்தது. கேட்காத மாதிரியும் தோன்றிற்று. உதடும் கண்களும் ஒரே விதமாய் மலர்ந்து தோன்றின.
    சிவாவுக்கு திடீரென்று மார்பு விம்பியது. ஒரு தந்தையை இழந்துவிட்ட சோகம் தோன்றியது.
    “நீங்க ஏன் இப்படி ஆனீங்க?” அவன் வாய்விட்டுக் கேட்டான்.
    பாபா அவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் அனைவர் முகத்தையும் நோக்கினார். திரும்பி ஆற்றைக் காட்டினார்.
    “நதி ஓடுகிறது” என்று ஒரு வாக்கியம் சொன்னார் பாபா. எல்லோரும் முகம் மலர்ந்தனர்.
    அது ஓடும்; பிறகு கடலை அடையும்.
    எங்கோ பிறந்தது இங்கே ஓடுகிறது.
    எல்லோரும் ஓடுவோம். ஒன்றைவிட்டு மற்றொன்றிற்கு ஓடுவோம்.
    நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நீயும் ஓடிவிடுவாய். சிவாக்கு அந்த ஒரு சின்ன வாக்கியத்தில், என்னென்னவோ புரிந்தது.
    மீண்டும் அவனுள் இவர் என் தந்தை என்ற உத்வேகம் உதைத்து எழுந்தது. மனசில் வந்து கூடிய சாந்தியை நிறைவை ஒரு கல்விட்டுக் கலைத்துக் கொண்டு அவன் கேட்டான்.
    “நதிதான் ஓடும். நதி ஓட வேண்டும். மனிதன் அல்ல” என்றான்.
    அமெரிக்கனுக்கு சிவா ஏதோ வாக்குவாதம் செய்கிறான் என்று புரிந்தது. அவன் ஆவலுடன் பாபாவைப் பார்த்தான்.
    அவர் பாதிக்கப்படவில்லை. விழிகளில் கருணை நிலவியது.
    “நீங்கள் சொல்லாமல் ஓடி வந்து விட்டீர்கள்.”
    சட்டென்று அவன் சினமுற்றிருக்கிறான் என்று தவறாக நினைத்த பெருந்தனக்காரர் அவன் கையைப் பிடித்தார். அவ்விதம் அவனைப் பிடிக்க வேண்டாம் என்று பாபா சைகை செய்தார்.
    அங்கே ஓர் அசந்தர்ப்பமான மௌனம் நிலவியது பாபாவின் முகத்தில் பரம சாந்தம் சிவா தொடர்ந்தான்.
    “தப்பியோடுவது ஞானம் அல்ல.”
    அவனைப் புன்னகையோடு பார்த்துவிட்டு பாபா, உதிர்த்த இலைகளில் ஒன்றை மீண்டும் எடுத்தார்.
    “இலை பழுத்தால் உதிர்ந்து விடும்” என்றார்.
    “உங்கள் மனைவியை… உங்கள் பிள்ளையை விட்டு விட்டு ஓடி வந்து விட்டீர்கள்.”
    “கேட்டு வந்த விடுதலை” பாபா சொன்னார்.
    “யாரிடம்?” சிவா விடவில்லை.
    “பெற வேண்டியவரிடம்.”
    அப்படி ஒன்று நடந்ததா? தன் தாய் இவர் துறவி யாவதற்கு விடுதலை வழங்கினாளா? சிவா நிசப்தமானான்.
    அதுவரை அவன் அதைக் குறித்து அம்மாவிடம் விசாரிக்க முனைந்த போதெல்லாம் அவள் அதைத் தவிர்த்துத் தவிர்த்து வந்ததை நினைத்தான்.
    இப்படி ஒன்று நடக்க முடியுமா?
    தன் கணவன் துறவியாவதற்கு மனமார ஒரு மனைவி அனுமதி வழங்க முடியுமா?
    அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
    அப்படி ஒரு விடுதலை வாங்கி வருமளவு இந்த மனிதர் என்ன கல்நெஞ்சர் என்று அவர் மீது அவனுக்கு ஒரு வெறுப்பு தோன்றியது.
    ஆனால் வெறுப்பது விரும்புவது இந்த எல்லைக் கோட்டை அவர் கடந்து விட்டவர். கனிந்து நின்ற அந்த தோற்றமே அவனுக்கு உணர்த்தியது.
    இவரிடம் தனக்குள்ள எல்லா வழக்குகளும் ரத்தாகி விட்டன. ஓடும் நீர் போல, உதிர்ந்த இலை போல இவர் தனக்குப் புறம்பானவர்.
    ஒரு மகன் பார்ப்பதைப் போல அவன் பாபாவைப் பார்த்தான்.
    இந்த உருவம் தன் தந்தை!
    எனினும் இதற்கும் தனக்கும் இங்குள்ள மூவருக்கும் என்ன சொந்தமோ அந்த சொந்தம் தான் மிஞ்சியிருப்பது.
    அவனால் முதலில் அதை ஏற்க முடியவில்லை. ‘இதைத் தேடி, இதைக் கண்டுபிடிக்கவா நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து நான் இங்கு வந்தேன்?’
    பாபா அவனையே குறுகுறுவென்று சற்று நேரம் பார்த்தார்.
    அந்த அமெரிக்கனுக்கு சட்டென்று எல்லாம் விளங்கி விட்டது.
    “மிஸ்டர் கங்கப்பா… வொட்ரீ வேல்… லெட்ஸ் ஹாவ் எ மூவ்…”
    அவரைத் தான் தனியாகச் சந்திக்க அவன் வசதி செய்து தருகிறான் என்பதை சிவா உணர்ந்தான்.
    “தேர் ஈஸ் நதிங் பெர்ஸனல் பிட்வீன் மீ அண்ட் ஹிம்.”
    தனக்கும் தன் தந்தைக்கும் மத்தியில் நெருக்கமாக ஒன்றுமில்லை என்று அவன் கூறியதை கங்கப்பாவும் அந்த அமெரிக்கனும் கூர்ந்து கவனித்தனர்.
    “வோட்ஸ் ஹி?” என்று சிவாவின் தொழிலைப் பற்றி அந்த அமெரிக்கன் கேட்டான்.
    வெற்றிவேல் பதிலளித்தான்.
    “எ ரைட்டர்.”
    பாபா மீண்டும் சிவாவைப் பார்த்தார்.
    “கேன் யூ கம் டு த ஸ்டேட்ஸ்.. வித் மீ?”
    சிவா தன்னை அமெரிக்காவிற்கு அழைத்த அவனை ஏறிட்டு நோக்கினான்.
    “நோ.. ஐ காண்ட்.. தாங்யூ” என்று பளிச்சென்று தன் மறுப்பைத் தெரிவித்தான்.
    தன் தந்தையின் மீது அந்த அமெரிக்கன் வைத்துள்ள மதிப்பு தனக்கு ஒரு வாழ்வு அளிக்க முயற்சிப்பதை அவன் சுயமரியாதை எதிர்த்தது.
    தன்னை மீறி அது வெளிப்பட்டு விட்டது. அவன் அதற்கு ஒரு சாட்சியாகத் தன் தந்தையே இருக்க நேர்ந்து விட்டதைக் குறித்து அவன் மகிழ்ந்தான்.
    அவனைப் பரிவுடன் பார்த்தார் பாபா.
    “விடுதலை பெறுக” என்றார்.
    அவனுக்குச் சொல்ல வேண்டியது யாவும் அதில் அடங்கிவிட்டது என்பதுபோல் அவர்.
    முகத்தில் ஒரு நிறைவு.
    இனி அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று சிவா உணர்ந்தான். சென்னையும் தாமுவும் உடனே புறப்படு என்று கூப்பிட்டனர்.
    திரும்பி வரும்போது வெற்றிவேல் கூட வந்தான்.
    அவர்கள் ஆற்றில் இறங்கிக் குளித்தனர். வெற்றிவேல் வைத்திருந்த துண்டில் தலை துவட்டிக் கொண்டே கரையேறினான் சிவா.
    “என்னடா நீ பேசலே?” என்றான் வெற்றிவேல்.
    “நோ கமெண்ட்ஸ். எங்க அப்பா ஒரு நாள் ஓடிப் போனார். இன்னைக்கு நான் அவரை இழந்து விட்டேன் தட்ஸ் ஆல்”
    “அதைத் தவிர?”
    “வாழ்க்கை நிற்கிறது. தன்னந் தனியாக எதிர்தாதுப் போராடு என்று கேட்டுக் கொண்டு”
    “நல்லது.”
    அண்செட்டியில் ஒரு டீக்கடை ஹோட்டலில் இட்லி வடை சாப்பிட்டு விட்டு வெற்றிவேலிடம் விடை பெற்றான் சிவா.
    அவன் சட்டைப் பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்து மடித்த கவரைச் செருகினான் வெற்றிவேல்.
    “இந்த ‘ட்ரிப்’ ஒனக்கு நல்லா இருந்திருக்காது.. ஐ’ம் ஸாரி சிவா.”
    “நோ… இல்லே வெற்றிவேல். இது எனக்குப் பலம் தந்திருக்கு.
    “எப்படி?”
    “நான் தனி…தன்னந் தனி. ஐ ஹாவ் டூ மீட் லைஃப்.”
    பஸ் ஹாரன் கேட்டது. சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கினான் வெற்றிவேல்.
    “ஆல் த பெஸ்ட்”

     

    தொடரும்

    Share
  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    “நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.”

    பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

    பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

    நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

    “அது” எங்களுக்கு. நான் வேலை செய்யும் இட்த்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’ நான் செய்தது. உங்களுக்கு!

    வேலை செய்யும் இட்த்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?

    Share
  • நிதி சேகரிப்பு

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    சறிற்றிக்காக முப்பது டொலருக்கு சொக்கிளேற்றுகளை விற்க வேண்டும்.

    தாயாருடன் பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான்.

    நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

    மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி நாணயக்குற்றிகளை அவர்களிடம் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

    மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.

    Share