இசைக்கவி ரமணன்

images

 

 
எங்கும் நீயே நிறைந்தாலும்
எங்கோ இருப்பது போலிருப்பாய்
எதிரில் ஒருமுறை வருவாயா?
என்னுள் சிரிக்கும் இறைவா?
என்னுயிர் ஆளும் தலைவா?

நீயும் நானும் ஒன்றென்றால்
யாரே யாரைத் தேடுவது
நானும் நீயும் வேறென்றால்
எங்கே உன்னைச் சேருவது?
நாயேன் ஒன்றும் அறியவில்லை, இந்த
நரகத்தின் காரணம் புரியவில்லை
நீயாய்த் திரையை நீக்காமல்
நெஞ்சினில் நிம்மதி வருவதில்லை

கண்ணோ உன்னைக் காணாது
மனமோ உன்னை மறவாது
எண்ணம் உன்னைத் தீண்டாது, உன்னை
எண்ணாதிருக்க முடியாது
இறைவா! இறைவா! இறைவா!

தவறுகளே என் தவமேடை
தவிப்பே எந்தன் ஆராதனை
வருவாய் வருவாய் என்றேதான்
நம்பி நம்பி தினம் ஏங்குகிறேன்
கண்ணீர்த் துளிகள் மலராகி
கணந்தோறும் உன்னைப் பூசிக்கிறேன்\
கருணைக் கடலே உன் முன்னே, ஒரு
கவளம் ஏழை யாசிக்கிறேன்
இறைவா! இறைவா! இறைவா!

ஏதோ வந்ததைப் பாடுகிறேன்
இமைகளை மெதுவாய் மூடுகிறேன்
மடியில் ஓரிடம் தேடுகிறேன், நான்
மரணமில்லாமல் வாடுகிறேன்
இறைவா! இறைவா! இறைவா!

 
25.03.2015 / புதன் / 09.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.