Blog

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சி. எஸ். குமார்.

     

     

    உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.

    எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.

    1967 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 38 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.

    Share
  • கவிழ்ந்திருக்கும்….

     

    -உமாமோகன்

     

    பார்த்த கணத்திலிருந்து
    என் அடிவயிற்றைப் பிசைகிறது
    அந்தப்படம்

    அழுது வடியும்
    விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
    தலைகவிழ்ந்து
    அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி

    பசியில் குறுகியோ
    சீண்டலில் சாம்பியோ
    தனிமையில் வெம்பியோ
    அங்கே அமர்ந்திருப்பதாக
    விளக்கம் தராதீர்கள்

    தயவு செய்து
    உங்கள் படத்தை
    சற்றே திருத்துங்கள்
    அந்த விளக்குக் கம்பத்திற்கு
    சற்றுத் தள்ளி
    அரையிருளில்
    பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
    இல்லை
    நீர் சுமக்கும் அக்கா
    வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
    பண்டம் கவர்ந்த தம்பி
    அட
    எதுவும் வேண்டாம்
    ஒரு சோகைப் பூனையோ,நாயோ
    கூடப்போதும்

    கோபத்திலோ பிடிவாதத்திலோ
    கவிழ்ந்த அவள் தலை
    எல்லாம் மறந்து
    புன்னகையுடன் நிமிரும் காட்சியை
    நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன்

    Share
  • நித்திலமே நித்திலம்

    அண்ணாகண்ணன்

    Nithila Annakannan

    நித்திலமே நித்திலம்
    நின்றொளிரும் ரத்தினம்
    புத்தம்புது புத்தகம்
    புத்துணர்வுப் பெட்டகம்
    கொத்துமலர் கோகிலம்
    குதித்துவரும் சாகசம்
    தத்திவரும் பூரதம்
    சிரித்துவரும் சித்திரம்

    ஆடிவரும் அற்புதம்
    ஓடிவரும் உற்சவம்
    தேடிவரும் காவியம்
    தீட்டாத ஓவியம்
    பாடிவரும் பாசுரம்
    நாடிவரும் நாட்டியம்
    கூடிவரும் மங்கலம்
    கோடியின்பம் நித்திலம்.

    ஆருயிரின் ஆரமுதம்
    ஆசைதரும் பேரமுதம்
    ஓருலக வேரின்பம் – ஈர்
    ஏழுலகப் பேரின்பம்
    ஊருலகம் பாராட்டும்
    உச்சி தனில் சீராட்டும்
    ஆரமடி முத்தாரம் – நீ
    அகிலத்தின் ஆபரணம்.

    Share
  • ஆடல் காணீரோ – பகுதி 3

    -மேகலா இராமமூர்த்தி

    முன்னொருகாலத்தில் புகழ்பெற்றிருந்த அசுரர்களில் ஒருவன் வாணாசுரன். இவன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவனுடைய மகளாகிய உஷை, காமனின் மகனான அநிருத்தன்மீது காதல் கொண்டாள். (அநிருத்தன் கண்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன் என்கின்றன வைணவ நூல்கள்; ஆனால் சிலம்பின் உரையாசிரியர்கள் அவனைக் காமனின் மகன் என்றே குறித்துள்ளனர்.) தந்தைக்குத் தெரியாமல் அவனைத் தன் அரண்மனைக்குத் தோழி சித்ரலேகை உதவியால் கொண்டுவரச்செய்த உஷை, அவனைக் கந்தர்வமணம் புரிந்து வாழ்ந்து வந்தாள்.

    இதையறிந்த வாணாசுரன் கடுங்கோபம்கொண்டு அநிருத்தனைச் சிறைப்படுத்த, அதையறிந்து, மாயோனாகிய கண்ணன் வாணனின் ’சோ’ நகரத்திற்குச் சென்று அங்கே அவனால் சிறைவைக்கப்பட்டிருந்த அநிருத்தனை மீட்க, மண்ணாலும் உலோகங்களாலுமான பலகுடங்களைக் கையிலேந்தி ஆடியதாய்க் கருதப்படுவது ‘குடக்கூத்து’. இது விநோதக் கூத்துவகைகளில் ஒன்று.

      madavi1குடக்கூத்தாடுவோர் ‘தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிலிருக்க, இருகைகளிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து ஆடுவர்’ என்கின்றனர் உரையாசிரியர்கள். ஆடுவதற்கு அதிகப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் இக்கூத்தை மலர்விழியாள் மாதவி அநாயாசமாக ஆடிக்காட்டினாள் என்றே கூறலாம்.

    வாணன் பேரூர் மறுகிடை நடந்து
    நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும். இவைக் குடக்கூத்தை விளக்கும் காப்பிய வரிகள்.

    இக்குடக்கூத்தைப் பற்றிச் சிலப்பதிகாரமேயன்றித் திவ்யப்பிரபந்தமும் பேசுகின்றது. மூன்றாம் திருமொழிப் பாசுரமொன்றில் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் எடுத்தாண்டுள்ள,குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே’ எனுந்தொடர் கண்ணன் ஆடிய குடக்கூத்தையே குறித்து நிற்கின்றது.

    இவ்வாறு, அநிருத்தனை மீட்க முதலில் கண்ணன் ’சோ’ நகர வீதிகளில் குடக்கூத்தாடினான். அதுபோல், தன் மகனைச் சிறைமீட்க விரும்பிக் கண்ணனோடு சென்றிருந்த காமனும் (தன் பங்குக்குப்) பேடிக் கோலத்தில் (இதன் இன்றைய வழக்குமொழி ’திருநங்கை’) ஓர் ஆடலை நிகழ்த்தினான். ’பேடிக்கூத்து’ எனும் பெயர்கொண்ட அந்தக்கூத்து, நிகழ்ச்சியில் அடுத்ததாக இடம்பெற்றது.

    ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
    காமன் ஆடிய பேடி யாடலும்….. என்பது சிலப்பதிகாரம் பேடிக்கூத்திற்குத் தரும் விளக்கம்.

    காமன் ஆடிய இப்பேடிக்கூத்தை மணிமேகலைக் காப்பியமும்,

    வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
    நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
    பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்…(மணி-3:123-125) என்று குறிப்பிடுவதை இங்கே ஒப்புநோக்கலாம். (இதில் காமன், திருமாலின் மகனாய்க் குறிக்கப்படுகிறான் என்பதை அறிக.)

    இதுவரை ஆண் கடவுளர், தேவர் போன்றோரின் ஆடல்களையே நிரலாக ஆடிவந்த மாதவி, இப்போது பெண்தெய்வங்கள் ஆடியதாய்ப் புராணங்கள் தெரிவிக்கும் கூத்துக்களை ஆடத் தொடங்கினாள்.

    அவற்றில் முதலாவதாய் அவள் ஆடியது ’மரக்கால் கூத்தாகும்’; இக்கூத்தைக் குறிக்கும் சிலம்பின் வரிகளாவன…

    காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
    மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்

    வெற்றித் தெய்வமான கொற்றவை, அசுரர்கள் நல்லோர்க்குச் செய்கின்ற கொடுந்தொழில் கண்டு ஆற்றாளாகி அவர்களோடு போர்புரியும் வேளையில், அவ்வசுரர்கள் இறைவியொடு நேருக்குநேர் நின்று போர்புரியும் திறனற்றோராய் அவளை வஞ்சத்தால் வெல்லக்கருதி பாம்பு, தேள் முதலிய கொடிய உயிரினங்களின் உருவில் அவளை அழிக்க முயன்றனர். அதை அறிந்த அம்மை, அவ்வஞ்சத்தைத் தன் சாதுரியத்தால் வெல்லக்கருதி மரத்தாலான கால்களின்மேல் ஏறிநின்று அக்கொடிய உயிரினங்கள் வடிவில் இருந்த அசுரர்களை உழக்கிக் கொன்றாள். பின்பு வெற்றிப் பெருமிதத்தோடு அவள் ஆடிய ஆடலே ‘மரக்கால் கூத்தாகும்’. இம்மரக்கால் கூத்தை சிலம்பின் மற்றொரு பகுதியான ’வேட்டுவ வரி’யில் ஆசிரியர் இளங்கோவே மீண்டும் குறிப்பிடுவது இங்கே எண்ணத்தக்கது.

    ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப
    மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடும் போலும்
    மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடுமாயின்
    காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும். (வேட்டுவ வரி)

    ஆடுவதற்கு மிகவும் சவாலான இம்மரக்கால் கூத்தையும் சீரிய நாட்டியப் பயிற்சியைச் சிறுவயது முதலே பெற்றிருந்த மாதவி (மரத்தினாலான கால்களைக் கட்டிக்கொண்டு) சிறிதும் தடுமாறாமல் ஆடிக்காட்ட, கண்டோர் அனைவரும் மூக்கின்உச்சி சுட்டுவிரல் சேர்த்து அதிசயித்தனர்.

    வீரச்சுவை மிக்கிருந்த மரக்கால் கூத்தைத் தொடர்ந்து, காதற்சுவை (சிருங்கார ரசம்) சொட்டும் ஓர் ஆடலை அரங்கு கண்டது; அதன் பெயர் ’பாவைக் கூத்து’.

    போர்க்கோலம் கொண்ட அவுணர்களின் சி(ம)னத்தை மாற்றி, அவர்கள்pencilmadavi மேற்கொள்ளவிருந்த போர்த்தொழிலை நிறுத்தவிழைந்த செய்யோளாகிய திருமகள், ’கொல்லிப்பாவை’போல் (அழகினால் மனத்தைப் பேதலிக்கச் செய்யும் ஒரு பாவை வடிவம்) தோற்றங்காட்டி அழகிய ஆடலொன்றையும் நிகழ்த்தி அவர்களின் சித்தத்தைத் தடுமாறச்செய்து யுத்தத்தை நிறுத்தினாள் என்கிற புராணச் செய்தியை அடியொற்றி அமைக்கப்பட்ட இப்பாவைக் கூத்தைப் பாவை மாதவி ஆட, பார்த்தோர் மனங்களும் பித்தேறி ஆடின.

    செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
    திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று பாவைக்கூத்தின் இயல்பைப் பாங்காய்ச் செப்புகின்றார் ஆசிரியர்.

    அடுத்ததாய் மேடையில் இடம்பிடித்தது, உழவர்குலப் பெண்போல் உருமாறிய அயிராணி (இந்திரனின் மனைவி இந்திராணி) எனும் தெய்வமடந்தை வாணாசுரனின் ’சோ’ நகரத்தின் வடக்கு வாயிலருகே உள்ள வயலிடத்தே ஆடியதாய்க் கூறப்படும் ‘கடையம்’ எனும் கூத்தாகும்.

    வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
    அயிராணி மடந்தை ஆடிய கடையமும்

    ’கடைசியர்’ (உழத்தியர்) எனும் பெயரான் அன்று அழைக்கப்பட்ட உழவர்குல மகளிரின் நாட்டியமே ‘கடையம்’ என்பது. மாதவி தன் ஆடல்களின் வரிசையில் கடைசியாக ஆடியது இக்கூத்தையே.

    இவ்வாறு தான் ஆடிய பதினோராடலுள் இறைவனாகிய சிவபெருமான் ஆடிய இரண்டினை முன்வைத்தும், மாயோனாகிய திருமால் ஆடிய இரண்டினையும், சேயோன் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வெற்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துக்களின் தொடர்ச்சியாய்க் காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், அவற்றின் பின்னர், பெண் தெய்வங்களுள்ளே முறையே கொற்றவையும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்து கூத்துக்களை வகையாய் வரிசைப்படுத்தியிருந்த மாதவி, இக்கூத்துக்களையெல்லாம் அவற்றிற்குரிய இலக்கணம் சிறிதும் வழுவாது ஆடியமுறையின் சிறப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

    அவளுடைய ஆடற்கலையின் நயத்தில் கட்டுண்டு, வேறோர் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், அவள் ஆட்டத்தை நிறுத்திய பின்பே நனவுலகிற்கு மீண்டனர். ”புகார் நகரம் பெற்றெடுத்த புதையல் இவள்!” என்று ஒருவருக்கொருவர் வாயூறிப் பேசிக்கொண்டனர். கூட்டத்திலிருந்து ஆட்டத்தை இரசித்துக்கொண்டிருந்த விஞ்சையனும் அப்போதுதான் தன்னுணர்வு பெற்றவனாகத் தன் காதலியைப் பார்த்து, ”இப்போதாவது மாதவி ஆடலின் மகத்துவத்தை உணர்ந்தாயா?” என்று கேட்க, அவளோ “ஆகா பிரமாதம்! இப்படியோர் நாட்டியத்தைத் தேவலோகத்தில்கூட நான் கண்டதில்லையே!” என்று வியக்க, மகிழ்ச்சியோடு அவ்விருவரும் அரங்கிலிருந்து அகன்று சென்றனர்.

    இப்படி, மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் நமக்கு அறிமுகப்படுத்தும் பதினோருவகை ஆடல்கள், நம் தமிழகத்தில் அன்றே நாட்டியக்கலை  வியத்தகு வளர்ச்சியடைந்திருந்ததைக் காட்டுகின்றன. அத்தோடு, அன்றைய ஆடல்மகளிர் அரங்கில் ஆடுதற்குப் பின்பற்றிய ஆடல்களின் நிரலொழுங்கையும் நாம் அறிந்துகொள்ளப் பெருந்துணை செய்கின்றன.

    காப்பியத்தின் கதைப்போக்கின்படி அன்று மாதவி ஆடிய ஆடலே அவள் வாழ்வின் கடைசி ஆடலாகவும் அமைந்துவிட்டது. அதை எண்ணும்போது நம் மனம் வேதனையில் கனக்கவே செய்கின்றது. என் செய்வது? ’All good things must (come to an) end’ என்பதே வாழ்க்கை நமக்குணர்த்தும் பாடமல்லவா?  

    (முற்றும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “வாக்கிங் வெண்பா”
    ————————

    crazy

    குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி மறுகாலை தூக்குவதற்குள்
    பிரம்மா ஞானம் லபிக்கும் என்பது சாத்திரப் பிரமாணம்….இதை ஜனகருக்கு நிரூபித்து
    அஷ்டவக்ர மகாமுனி “அஷ்டவக்ர கீதை” உரைத்தார்…..

     

    “ஒர்காலை அங்கவடி, ஒர்காலை அஸ்வமடி,
    போர்கோலம் பூணுகின்ற பையனே, -கார்கால
    மேகவண்ணன் கைப்பிடித்து , MANHATTAN சந்தடியில்,
    வேகமாகத் தாண்டுன் வினை”….கிரேசி மோகன்….

    அங்கவடி-Saddler….

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்

    — பி. தமிழ்முகில் நீலமேகம். 

     

    இணையம் – இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது. நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன. இக்கட்டுரையில், இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

    முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps).
    கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com
    கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம்.

    நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:

    map1

    இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது.

    இது வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்

    map2

    இது பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்

    map3
    இந்தப் படம் இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.மேலும், நாம் தேடும் வழித்தடத்தில் மின் இரயில்      (Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.

    கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

    குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

    கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.
    தற்சமயம் இந்த வசதி அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

    கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள் வீதி வரைபடங்கள் ( Google Street View maps )

    கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை, அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

    map4
    எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.

    map5
    இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில் எப்படி இருக்கிறதோ அப்படியே நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.

    இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்

    map6

    (நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது)

     

    கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

    முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports) ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.
    https://support.google.com/gmm/answer/1685827?hl=en

    ரெயில் ராடார் ( Rail Radar)

    இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது. வரைபடம் இல்லாது, இரயில் குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது. இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
    http://enquiry.indianrail.gov.in/ntes/

    கூகுள் மேப் மேக்கர்
    இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.

    ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள், நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள், வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம். அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து, பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
    ww w.google.com/mapmaker மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும் கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

     

    இனி, இலவச வரைபட சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.
    1. மேப் க்வெஸ்ட் ( Map Quest ) www.mapquest.com
    2. யாகூ மேப்ஸ் ( Yahoo Maps ) https://maps.yahoo.com/
    3. பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/
    4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/  – இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –சக்தி சக்திதாசன்.

    “மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

    ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

    அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

    மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

    பதில் மிகவும் விசித்திரமானது.

    “மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

    உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

    யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

    இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

    சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

    மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

    அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

    அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

    திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

    எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

    கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
    தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

    நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
    பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

    பாடுவது கவியா -இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா …
    என்று வரும் .

    இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

    பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

    அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா

    எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

    எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

    “எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

    திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

    மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

    அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

    பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

    முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

    மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

    இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

    நீ ஆண்டது
    அரியணைக் கதிரையல்ல
    மக்களின்
    அன்பு மனங்களென்பேன்

    காலன் உனைக்
    கவர்ந்து சென்று
    காலங்கள் பல
    கடந்தாலும்
    காலத்தால் அழியாத
    கலங்கரை விளக்காய்
    அரசியல் உலகிற்கு
    ஆணிவேராகினாய்

    மன்னாதி மன்னனாய்
    உலகம் சுறும் வாலிபனாய்
    உழைக்கும் கரங்களோடு
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலனாக
    மக்கள் மனங்களை உழுதாயே !

    மதுரை வீரனாய் நீயோ
    நீதிக்குத் தலைவணங்கும்
    எங்கள் வீட்டுப் பிள்ளையென
    தர்மம் தலைகாக்கும் என
    கலங்கரை விளக்கானாய்

    பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
    தனிப்பிறவி நீ என்வாழ்வில்
    ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
    புதுமைப் பித்தன் நீ
    தாய்சொல்லைத் தட்டாமல்
    தாய்க்குப்பின் தாரம் என
    நல்லவன் வாழ்வான் என்றே
    ஆயிரத்தில் ஒருவனானாய்

    தமிழர்களின் காவல்காரன்
    காத்திருந்தாய் விவசாயிகளை
    ஒருதாய் மக்கள் நாமென்று
    சங்கே முழங்கென்றாய்
    ஊருக்கு உழைப்பவனே
    நம்நாடு என் இதயவீணை
    பாடிய உன் உள்ளமே
    உன் மக்கள் எப்போதும்
    குடியிருந்த கோயில்

     

    Share
  • அவன், அது, ஆத்மா! (5)

    மீ. விசுவநாதன்

    அத்தியாயம் : ஐந்து

    கற்க, கசடறக் கற்க …

    அவனை அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளியின் முதல் வகுப்பு அறைக்குள் அவனுக்கு அப்பா நுழைந்த பொழுது, அங்கு தயாராக அமர்ந்திருந்த பெரியவர் சுந்தரவாத்யார் ஒரு குழந்தைக்கு அதன் முன்னால் பரப்பி இருந்த “நெல்லில்” அதன் வலதுகையைப் பிடித்து, சனாதன தர்மப் படி “ஓம் ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்” என்று எழுதக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    சுந்தர வாத்யார் அவனைப் பார்த்துச் சிரித்தபடி,”வா..வா..விஸ்வம்..இப்படி உக்காரு” என்று தனது வலது பக்கத்து இடத்தைக் காண்பித்தார். அவனும் மெல்ல அவர் அருகில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு சுந்தர வாத்தியாரின் அன்பான முகம் பிடித்திருந்தது. அவரும் அவனுடைய மாமாத் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரே தெருவில் வசிப்பவர்கள். அதனால் அவன்மீது சுந்தர வாத்தியாருக்குக் கொஞ்சம் கூடுதல் கரிசனம் இருந்தது. பதினைத்து இருபது குழந்தைகள் தரையில் ஒரு பெரிய பலகையில் வரிசையாகப் பறவைகளைப் போல அமர்ந்து கொண்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிரித்தும், சில நேரம் சத்தமாகவும் பேசிக்கொண்டிர்ந்தனர்.

    அவனது வலது கை ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு, முன்னால் பரப்பி இருந்த நெல்லில் அவனுக்கும் அட்ஷராப்யாசம் செய்து வைத்தார். உடனேயே அவனுக்கு அப்பா தன்னுடன் ஒரு பையில் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் அவற்றுடன் ஒரு இரண்டு ரூபாயும் எடுத்து அங்கு வைத்திருந்த ஒரு தாம்பாளத்தில் வைத்து,” இந்தா இத அப்படியே சார்ட்டக் கொடுத்து நமஸ்காரம் பண்ணிக்கோ” என்று அவனிடனம் தந்தார். அவனும் சுந்தர வாத்தியாரை நமஸ்காரம் செய்தான். அவர் ஒரு பழத்தை எடுத்து அவனிடம் தந்து,” நன்னா படிக்கணும்..நன்னாரு” என்று ஆசீர்வாதம் செய்தார்.

    படம் உதவி: H.கிருஷ்ணன்
    படம் உதவி: H.கிருஷ்ணன்

    “இன்னிக்கி ஆத்துக்கு போய்கோ..நாளைலேந்து சரியா காலைல எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் வந்துடணும்” என்று சிரித்துக் கொண்டே அனுப்பி வைத்தார். அந்த லெக்ஷ்மீபதி நடுநிலைப் பள்ளியில் இருந்த கண்ணம்மா டீச்சர், சுப்புலக்ஷ்மி டீச்சர், செட்டியார் சார், செல்லப்பா சார், இராமநாதன் சார், G. R. சார் , குளத்து சார், A. R. சார், சீதாராமன் சார் என்று மிக அருமையான ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தது கடலளவு. அவன் கற்றுக் கொண்டதோ ஒரு கை அளவு கூட இல்லைதான். ஒவ்வொரு ஆசிரியருக்கும் அந்த மாதச் சம்பளம் கூடச் சரியான தேதிக்கு வராது. அப்படி இருந்தும் அவர்கள் மாணவர்களுக்கு அன்போடு கற்றுக் கொடுக்க எடுத்துக் கொண்ட கடமை உணர்வுக்கும், அர்ப்பணிப்புக்கும் விலையே கிடையாது.

    அவன் பள்ளிக்குச் சேர்ந்த அன்றுதான் அவனது பக்கத்து வீட்டு “ஐயா வாத்தியாரின்” மகன் ராஜாமணியும் முதல் வகுப்புக்குச் சேர்ந்தான். இருவரும் காலையில் சேர்ந்து பள்ளிக்குச் சென்று மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவார்கள். மீண்டும் பள்ளிக்குச் சென்று மாலையில் கன்றுக் குட்டிகளைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டு, உடம்பெல்லாம் புழுதியாக வீட்டுக்குத் திரும்புவார்கள். வீட்டினுள் நுழைந்த உடனேயே அவனது கை,கால்களை அவனுக்கு அம்மா நன்றாகக் கழுவி விடுவாள். பிறகு ஒரு சின்னத் தட்டில் தட்டையும், முறுக்கும் வைத்து சாப்பிடத் தருவாள். அவனுக்குக் குடிப்பதற்காக அவன் அம்மா “காப்பி” எடுத்து வருவதற்குள் தட்டை, முறுக்குகளைப் பாதி தின்றும் மீதியை “ட்ராயர் பையில்” அடைத்துக் கொண்டும் வெளியில் விளையாடத் தயாராகி விடுவான். காப்பியை அவசர அவசரகாகக் குடித்துவிட்டு ஒரே ஓட்டமாக வாசலுக்குப் போய்விடுவான். “கண்ணா..சாயங்காலம் ஆறு மணிக்குள்ள ஆத்துக்கு வந்துரு..” என்று அம்மா சத்தம் போட்டுச் சொல்வது அவன் காதிலேயே விழாது. அப்படி ஒரு விளையாட்டுப் பைத்தியம் அவன்.

    அவன் படிக்கும் காலத்தில் ஐந்து வயது முடிந்துதான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்பொழுது போல இரண்டரை வயதிலேயே ப்ரீக்கேஜி, எல்கேஜி, யுகேஜி என்றெல்லாம் கிடையாது. ஐந்து வயது வரை நங்கு விளையாடியும், தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டும், அம்மாவின் கையால் ஆசை ஆசையாய் சாப்பிட்டும்தான் அவனும் வளர்ந்தான்.

    டுண்டி விநாயகர் கோவில்

    Painting17கல்லிடைக்குறிச்சியில் உள்ள பதினெட்டு அக்ரஹாரங்களில் ஒன்றுதான் “டுண்டி வளாகம்” தெரு. இந்தத் தெருவில் கோவில் கொண்டுள்ள தெய்வம் “ஸ்ரீ டுண்டி விநாயகர்” . கால வழக்கில் தொந்தி விநாயகர் தெரு, தொந்திவிளாகம் தெரு என்றெல்லாம் அழைக்கப் பட்டாலும், டுண்டி விநாயகரின் வளாகத்திலேயே அதாவது அவர் அருகிலேயே இருப்பதால் “டுண்டி வளாகம்” தெரு என்று சிறப்பாக வழங்கப் படுகிறது. அழகான சொப்பு போன்ற சிறிய கோவில்தான். நல்ல வரப்ப்ரசாதி இந்த கணபதி. வடக்கே கங்கைக் கரையில் காசி நகரத்தில் உள்ள “டுண்டி விநாயகரைப்” போலத் தெற்கே தாமிரபரணி நதிக் கரையில் இந்த “டுண்டி விநாயகர்” கோவில் இருக்கிறது. இரண்டு புறமும் அழகான வீடுகள் சுமார் எழுபது இருக்கும். நல்ல கட்டுக்கோப்பான ஒற்றுமையான மக்கள் வாழ்கிற தெரு. வைதீகமும், லௌகீகமும் கைகோர்த்து இசைந்து இருக்கின்ற தெரு. விளையாடும் பொழுது கூட தங்கள் தெருக் குழந்தைகளைத் தவிர மற்ற தெருக் குழந்தைகள் வந்தால் “ஏய்…அவன் அசல் தெரு..நம்ம தெரு இல்லை..” என்று சொல்லும் தீவிரத் தெருப் பற்று உள்ளவர்கள். நன்கு படித்தவர்கள். மருத்துவர்களும், சிறந்த வியாபாரிகளும் இருக்கும் தெரு. தங்கள் தெருப் பிள்ளையார் மீது அபார நம்பிக்கை அவர்களுக்குண்டு. அந்தத் தெருவில் நடக்கும் திருவிழாக்களுக்கு வெளி ஆட்களிடம் அவர்கள் காணிக்கை கேட்பது இல்லை. அவர்களாகத் தரும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்வார்கள் அவ்வளவுதான்.

     ரவி விஸ்வம்
    ரவி விஸ்வம்

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் கட்டளைக் காரர்கள் அனைவரும் அந்தத் தெருக் காரர்களாகத்தான் இருப்பார்கள். ஒன்பது தினங்களும் மாலை ஆறுமணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடைபெறும். அது சமயம் அந்தத் தெருவில் உள்ள குழந்தைகள் சுவாமி ஊர்வலத்தில் முன்பாக இருபுறமும் வரிசையாகத் தங்களின் கைகளில் ஒரு கொடியை ஏந்திக் கொண்டு மெல்ல நகர்ந்து செல்வார்கள். அந்தக் கொடிக்கு “ஆலவட்டம்” என்று பெயர். அந்தக் கொடி பல வண்ணங்களில் இருக்கும். குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த ஆலவட்டத்தைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றுத்தருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    எப்பொழுதும் ஒரு ஆலவட்டம் அவனுக்கும் மாமாத்தாத்தா வாங்கித்தருவார். அவனுடனேயே நடந்து கொண்டும் வருவார். அந்தத் தெரு முழுதும் ஒவ்வொரு வீட்டிலும் சுவாமிக்கு நிவேதனம் செய்வார்கள். சுவாமி திரும்பவும் கோவிலுக்குள் வந்த பொழுது தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு அனைவருக்கும் சுண்டலும், சர்கரைப் பொங்கலும் விநியோகிப்பார்கள். அவனுக்கு மாமாத் தாத்தாவின் வீட்டுக் கொட்டிலில் உள்ள பெரிய அடுப்பில் பெரிய வார்ப்பை வைத்து சுவாமிக்கான நிவேதனச் சுண்டலை மாமாத் தாத்தா செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்திருக்கிறான். சிறுவனாக அவன் இருக்கும் பொழுது “அப்பாச்சி கிருஷ்ணையர்” என்னும் கிராமத்துப் பெரியவர்தான் சுண்டலையும், சர்க்கரைப் பொங்கலையும் விநியோகிப்பார். கோவிலின் பெரிய வாயில் படியில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும், அளந்து வைத்தது போல அவர் விநியோகிக்கும் அழகே தனிதான். அதை அவன் இப்போதும் அந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் போகும் பொழுதெல்லாம் நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வதுண்டு. ஒன்பதாவது நாளன்று, அதாவது விநாயக சதுர்த்தி அன்று சிறப்பு ஹோமங்களும், கிராம போஜனமும் (அன்னதானம்) நடைபெறும். அன்று இரவில் ஸ்ரீ டுண்டி வினாயகருக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, அழகான சப்பரத்தில் சுவாமியை ஊர்வலமாக பதினெட்டு அக்ரஹாரத்திற்கும் அழைத்து வருவார்கள். ஊர்வலம் முடிந்து சுவாமி கோவிலுக்குத் திரும்பும் பொழுது மறுநாள் அதிகாலை ஐந்து மணியாகிவிடும்.

    இந்தத் தெருவில் GLAD கிருஷ்ணையர் , இராமலிங்கம் ஐயர், L. M. சுந்தரம் ஐயர் , சாமு வாத்தியார், மணி டாக்டர் , மில் ராமநாத ஐயர், ரங்கநாத வாத்தியார், மகாதேவா தீக்ஷிதர், ராமகிருஷ்ண தீக்ஷிதர், பட்டாம்பிச் சங்கர ஐயர் போன்ற பெரியோர்கள் மிகச் சிறப்பாக வாழ்திருந்தார்கள். இப்பொழுது அவர்களது வாரிசுகள் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகவும் சிரத்தையுடன் செய்து வருகிறார்கள்.

    இப்பொழுது இந்தப் பிள்ளையார் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருப்பவர் செங்கோட்டை சந்திர விலாஸ் வான்ஜீஸ்வர ஐயரின் மகன் சிவராமகிருஷ்ணன். ஆன்மீக உணர்வும், வைதீக சிரத்தையும் கொண்ட சிவராமகிருஷ்ணனின் அத்தாந்தான் கவிமாமணி கு. தேவநாராயணன். அவருக்கும் இதே டுண்டிவளாகம் தெருதான்.

    ரெங்கநாத வாத்தியார் சாம வேதி. அவரும், சுந்தர வாத்தியாரும்தான் கல்லிடைகுறிச்சி, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களுக்கான “சாமவேத வாத்தியார்”. இப்பொழுது ரங்கநாத வாத்தியாரின் இளைய மகன் “ஸ்ரீராமன்”தான் ஊருக்கே சாமவேத வாத்தியார். நல்ல ஒழுக்கமும், பெரியோர்களிடம் மதிப்பும் உள்ள இளைஞர். பெரிய வேள்வியும் செய்யத் தெரியும், தேர் ஊர்வலப் பொழுதில் அதன் சக்கரத்திற்கு “சரக்கும்” வைக்கத்தெரியும்.

    ஒரு வருடம் விநாயகச் சதுர்த்தி சுவாமி புறப்பாடு முடிந்து தீபாராதனை சமயத்தில் அந்தத் தெருவில் குடி இருந்த “கல்யாணப் பாட்டர்” பாடிய,

    “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
    உன்னடி என்மனத்தே என்றும்
    வழுவாதிருக்க வரம்தர வேண்டும்” என்ற

    திருநாவுக்கரசரின் பதிகம் அவனது இளவயது நெஞ்சிலே நன்கு பதிந்து விட்டது.

    இரவு வெகு நேரமாக அந்தப் பிள்ளையார் கோவிலில் அவனும், அவனது நண்பர்கள் சுப்பாமணி, கண்ணன், எல்லோருமாக விளையாடிக் கொண்டிருந்தால்,”எல்லாரும் ஆத்துக்குப் போங்கோ…நேரமாச்சு….நாளைக்குப் பள்ளிக் கூடம் உண்டு” என்று ஒரு குரல் மென்மையாக அவர்களை விரட்டும். அந்தக் குரல் அனேகமாக சுந்தர வாத்தியாருடையதாகத்தான் இருக்கும்.

    அந்தப் பெரியவரை, நல்லாசிரியரைச் சிறுவயது முதலே கவனித்து வந்ததால் பிற்காலத்தில் அவன் “சுந்தர வாத்தியார்” என்ற சிறுகதையை எழுதி தினமணி கதிருக்கு அனுப்பி வைத்தான். அதை அதன் ஆசிரியார் “கஸ்தூரிரங்கன்” அவர்கள் மார்ச்,12 1995 இதழில் வெளியிட்டார்கள். அப்போதைய இணையாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், அவனை சந்தித்த சமயம் அந்தக் கதையைப் பாராட்டிச் சொன்னது அவனுக்கு மிகுந்த ஊக்கமளித்தது.

    இனியவன் அடுத்த வாரம் வருவான்   ……….

    Share
  • பச்சை மழைக் கிராமம்!

    -எம்.எல்.எம்.அன்ஸார், இலங்கை

    இதயம் தேடிக் கண்டுபிடித்த இன்பம்
    இதுதான் சோக்கான சுகம்!                                              Ansar

    பயணப் பாதி வேளையில் தரிக்கிறேன்
    கண்களின் மீது வரையப்பட்ட குளிர் ஓவியங்களென
    தாவரங்கள் தழைத்துக் குதூகலிக்கின்றன.
    வட்ட வீட்டில் குளமொன்று
    தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது
    சொண்டு முளைத்த தேவதைகளான கொக்குகள்
    காவலுக்கு நிற்பதைக் காணுகிறேன்!

    பச்சை நிறத்தில் மழை பெய்து
    ஓய்ந்திருக்குமோ இக் கன்னடக் கிராமத்தில்?
    விழி அகலும் வழி முழுதும்
    நெல் வயலும் புல் நிலமும்
    வெறுங்காலால் நடந்தே விருப்பங்களைக்
    கண்களால் சூப்பித் தின்கின்றேன்

    நான் தேடும் அமைதியை அள்ளிக் கொட்டவென்றே
    இவ்வொற்றை மாமரம்
    நிழலை விரித்து நிலத்தில் வைத்திருக்கிறது
    கல்லெறி விழுந்து காயம் வந்துவிடுமென்று பயந்தா
    கனிகளும் காய்களுமாகத்
    தூக்குப் போட்டுத் தொங்குகின்றன என்று
    கற்பனை எண்ணிப் பார்க்கின்றேன்!

    இம்மாதிரிக்
    குளத்தில் தூசு கழுவிக் குளித்து
    மரக்கிளைகளில் தலைதுவட்டி வரும்
    வெள்ளைக் காற்றைச்
    சுவாசித்து விழுங்கிய நாட்கள் நினைவில்லை!

    நிற்பதற்குத் தயாராகிவிட்ட புகை(யி)ரதம் போல
    வலது பக்க ’கிறவள்’ வீதியைக் கடந்து
    நடந்து போகிறது சிற்றோடை
    பிரயாணிகளாகப் பயணிக்கின்ற மீன்குஞ்சுகள்
    கையசைத்துக் காட்டுகின்றன!

    நான் புறப்பட்டுப் போக வேண்டும்
    இறக்கிவைத்த மனசை மீளப் பொருத்தும்
    ஆற்றல் அறவே இல்லை
    இழப்பொன்று நிகழ்ந்துவிட்டது மட்டும்
    காய்ச்சல் காயத் தொடங்குகிறது!

    வாசலுக்கு வந்து வழியனுப்பும் புதுப் பொண்டாட்டி போல
    பாதையோரக் காட்டுப் பூக்கள்
    ஆசீர்வதித்து அனுப்பி வைக்கின்றன!

     

    Share
  • மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்

    –சித்தார் கோட்டை நூர் மணாளன்.

     

    பிறப்பும் சிறப்பும்:
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
    மக்களின் மனதில் நிற்பவர் யார்…?
    என்ற இந்த வினாவை தமிழறிந்த மக்களிடம் வினவினால் எம்.ஜி.ஆர். தான் என பட்டென பதில் வரும்!

    இந்த இருபதாம் நூற்றாண்டில் திரையுலகிலும் அரசியலிலும் விடி வெள்ளியாக ஒளிர்ந்து, தொட்டதெல்லாம் துலங்க கொடிகட்டிப் பறந்து நட்புக்கரம் நீட்டி தன்னை நேசித்த நெஞ்சங்களை அரவணைத்த அற்புதமான கரத்திற்கு சொந்தக்காரரே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக் காரர்தான்.

    மாநிலத்தில் மானிடராய் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால்… மறைந்த பின்னும் மக்களின் மனதை விட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர்!!

    வரலாற்று வரிகளில் மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்தும் வாழுகின்ற அறிஞர் கூட்டம் ஏராளம்! அவர்களது படைப்புகளும் அசாதாரணமான பங்களிப்புகளும்தான் மக்களின் மனங்களில் விழுந்த விதையாகிப் பின் முளைத்து தழைத்து விருட்சமாக எழுந்து பரந்து நிற்கிறது!

    இளமைப் பருவம்:
    வாழ்க்கைத் தளத்தில் முறையாக நடந்து நெறியோடு வாழத் தகுந்த பாதை எதுவென தேடி ஓடிய எம்.ஜி.ஆருக்கு நாடகக் கூடாரம் ஒளி விளக்குடன் மிளிரி அழைப்புக் கொடுத்து அரவணைத்தது!

    நான் ஏன் பிறந்தேன்? என தனக்குத் தானே வெந்து வேதனை வினாவினை தன்னுள் எழுப்பியவாறு வாழும் மக்களிடையே … மக்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து வாழும் அளவுக்கு, மன்னாதி மன்னனாகவும், நாடோடி மன்னனாகவும், காவல்காரனாகவும், அன்னமிட்டகையாகவும், குடியிருந்த கோவிலாகவும், எண்ணை விளக்குகளின் ஒளியில் வாழ்க்கை துவங்கிய எம்.ஜி.ஆர். கண்ணைக்கவரும் வண்ணமயமான மின்னொளியில் மிளிரும் காலம்வரை மண்ணில் வைரமாகவும் விண்ணில் கண் சிமிட்டும் நட்ச்சத்திரமாகவும் ஜொளிக்கலானார்.

    ஆரம்பக் காலங்களில் சில அணாக்களை சம்பளமாகப் பெற்று நடிப்புத்துறையில் நுழைந்தார். தனது சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளாரத முயற்சி, இடைவிடாப் பயிற்சி, கண்ணியம் இவைகளுடன் கடமையைச் செய்ததால் பல கோடி பணம் ஈட்டி உயரும் உன்னத நிலையை அடைந்தார்.

    நட்ட மரமே பலனளிக்கும்… என்ற உண்மையை உணர்ந்தவர். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் ஏழை எளிய மக்கள் மீது அக்கறை காட்டினார். தன்னால் ஆன உதவிகளைச் செய்து ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சொந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது.

    பருவ வயது:
    புகழடைய வேண்டுமென்ற அவாவில் மக்களெல்லாம் எதையெதையோ தேடி ஓடும் காலத்தில் எம்.ஜி.ஆரைத் தேடி புகழ் வந்தது. நாடக வாழ்வு முடிவுற திரையுலக வாழ்வுத் தொடரலானது.

    மக்களின் யதார்த்தங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட வசனங்களுக்கு ஏற்ப திரையுலகில் காட்சியளித்த எம்.ஜி.ஆரின் நடிப்பு அவர்பால் மக்கள் மட்டுமல்ல… பற்பல கதாசிரிய விற்பன்னர்களும் அவரது தொடர்புக்காக காத்திருந்தனர். கழகங்கள் பலவும் அவரின் ஆதரவுக்காக அணிவகுத்தது. ஆரம்ப காலங்களில் காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். காங்கிரஸ்காரராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். கதர் ஆடையுடனும் கழுத்தில் துளசி மாலையுடனும் வலம் வந்த அவரை அறிஞர் அண்ணாவின் அழைப்பும், அரவணைப்பும் திரையுலகில் முன்னணி நட்ச்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அது மட்டுமல்ல… அவருடைய இளமைக் கால கனவுகளை நனவாக்க அரசியல் பாட்டையும் அவருக்கு கை கொடுத்தது. கால சுழட்சிக்குப் பின்னால் மள மளவென புகழ் அடைந்துவிட்ட பல படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

    திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணியும் பங்கும் மகத்தானது.

    அண்ணாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தம்பியாக ஆரம்பத்தில் இருந்தவர் அண்ணாவின் மறைவுக்குப் பின் அவரது கனவுகளை நனவாக்கிக் காட்டி தமிழ் திரையுலகிலும் அரசியல் உலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அவரின்றி வேறொருவர் அவரிடத்தை அடைய முடியாது என்ற நிலைக்கு ஆளாகிப் போய்விட்டார். அண்ணாவைத் தொட்டவர்களில்… தொடர்ந்தவர்களில் அரியணை ஏறிய பலரில் முதலாமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் என்றால் அது மிகையில்லை.

    பிறந்தது முதல் வேதனைகளும் சோதனைகளும் எம்.ஜி.ஆரின் கரம்பிடித்து நடந்தும் அவரது சுய சாதனையால் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

    திரைத்துறை:
    ‘ரத்னகுமார்’ என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கத் துவங்கியவரை ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம்தான் எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்திக் காட்டியது. அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கதை வசனங்களுக்கு ஏற்ற நடிப்பு எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையில்லை என்கிற நிலையை உருவாக்கியது.

    தொடர்ந்து அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!

    அரசியல்:
    புரட்சி நடிகர் என மக்களால் புகழப்பட்டவர் புரட்சித் தலைவரானார். நாத்திகர்களால் மட்டுமல்ல.. ஆத்திகர்களாலும் போற்றப்பட்டவர். நாட்டின் பற்பல விருதுகளையும், பட்டங்களையும் சுமக்கலானர். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தையும் பெற்றார்.

    காங்கிரஸ்காரராக கட்சியில் இணைந்தவர் கலையுலகப் பிரவேசத்தின் முதிர்வில், கழகக்காரராக கட்சியில் இணைந்து தமிழக அரசியல் வானில் உதயசூரியனாக உயர்ந்து வலம் வந்தார்.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரின் ஆட்சி தொடங்கியது. கொள்கைகள் அளவில் உண்டான கருத்து வேறுபாடுகளால் திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டும் நீங்கியோ, நீக்கப்பட்டோ போன எம். ஜி.ஆர். நன்றி மறவாத தனது தன்மையின் வெளிப்பாடாக அறிஞர் அண்ணாவின் பெயரை முன்வைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கி இரட்டை இலையை சின்னமாக்கி தமிழக அரியணையில் ஏறி அமர்ந்தார்.

    தனது பிரகாசம் பொருந்திய சட்டதிட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும் உதவிகளையும் உபகரணங்களையும் அரசு மூலம் நல்கினார். மறைந்த பின்னும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகமாக – திகழக் காரணம் அவரது சரியான திட்டங்கள்தான்.

    ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது, பள்ளிமாணவ மாணவியர்க்கு சீருடை வழங்கியது, சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது, இன்ன பிற திட்டங்களுடன்… அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றைக்கொண்டு கருணை உள்ளம் கொண்டு மக்களை அரவணைத்துச் சென்றதால் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்து ‘மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்’ என்று போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்துள்ளார்.

    வாழ்க அவரது புகழ்!

    Share
  • ஈழம்

    -ஆர். எஸ். கலா

    ஈழம் என்னும் பெயர் கேட்டதுமே,
    உலக மக்கள் தலை வணங்குகின்றனர்
    சில மக்கள் உடல் நடுங்குகின்றனர்
    இள இரத்தங்கள் வெகுண்டு எழுகின்றனர்
    இத்தனை மாற்றங்கள்  ஏன்? ஏன்?

    இனம் மதம்   மொழி வேற்றுமை என்னும்,
    விஷக்கிருமி ஈழத்தை இறுக்கப் பிடித்தமையால்    Srilanka
    வடித்துப் பிடிக்க இயலவில்லை ஏற்பட்டது
    இந்த மாற்றம்!

    கட்டியவன் உதை அடி கொடுக்கும் போதும்,
    கண்ணைக் கசக்கியபடியே அழுது இருக்கும்
    பெண்ணையே ஈன்றவளையும் மறந்து,
    ஈழத்துக்காகத்  துணிந்து துப்பாக்கி ஏந்த வைத்தது,
    இன வெறி என்ற நோய்  உருவாகிய பின்னரே!

    இரத்தத்தில் வேற்றுமை இல்லை அனைவருக்கும்
    செந்நிறமே!
    நம் கரந்தான்  நமக்குத் துணை  இந்நிலையில்
    ஏனோ  வேற்றுமையை  வளர்த்து ஒற்றுமையைக்
    கெடுக்கின்றாய் மானிடனே!

    பட்டதும்  போதும்  விட்டதும் போதும்
    இன்னும்பல புதை குழிகள் தோண்ட வேண்டாமே!
    திட்டம் தீட்டும் குள்ள நரிகளின் கட்டத்தில்,
    சிக்கவேண்டாமே  வட்டமிடும் பருந்தை  விட்டு விலகு!

    சஞ்சலங்கள் சங்கடங்கள் எல்லாம் சத்தம்
    இன்றித் தகர்த்தெறிந்து  முக்கடலின்,
    சங்கமம் போல் மும்மொழியும் மதமும்,
    ஒன்றாக இணைந்து வங்கக் கடலின் ஆழம்
    போல் அன்புக் கடலை வளர்த்து  நம்
    தங்கத்தமிழ் மங்காமல் இருக்க வழிவகுத்து,
    ஈழம் அது  தமிழ்  வீடாக
    என் நாடு என்ற
    சொல்லை விடுத்து நம்நாடு என்று போற்ற வேண்டும்!

    ஈழத்தின்  மண் சுமக்கும் மக்கள் அனைவரும் நிமிந்து
    நின்று இரத்தம் சிந்தாமல் உயிர்ப்பலி கொடுக்காமல்,
    ஈழம்  வளம் அடைய வேண்டும் அழகு பெற வேண்டும்
    என்று  எல்லோர் கரமும் இணைய வேண்டும்!

    உலக நாடும்  புகழ வேண்டும்,  பல வலைத்தளங்கள்
    வழியாகவே   ஓங்க வேண்டும் தமிழ் நிலைக்கவேண்டும்
    ஈழத்தின் புகழ்!

    இந்து சமுத்திரத்தின் நித்திலம்
    என்று நெத்தியில் பொட்டுப் போல்
    நினைவில் நிறுத்திடும் நாடாம்
    சிறு மாங்காய் போல் வடிவம்
    கொடுக்கும்  ஈழமது  எங்கள்
    உயிராம்!

    நான்கு பக்கங்களும் கடலாலும்
    கங்கை நதியாலும் நீர் உரு எடுத்துக்
    காவல் காக்கும் நாடாம் ஈழம் அது!

    அதன் அழகைக் கண்டு
    அங்கீகரித்துத் தமிழால் சூட்டப்பட்ட
    அழகிய பெயராம் இலங்கைத் தீவு!

    நடை பாதையிலே இடை இடையே
    சீறி வரும் நீருக்குத் தடையாகப் பாலம்
    அந்த அழகுக் கோலம் காண
    வேண்டுமாயின்  நீயும் வர வேண்டும்
    ஊர்கோலம் ஈழம் வரவேற்கக்
    காத்திருக்கு எந்நாளும்!

    உடலை வருத்தி உழைக்கும் ஏழை
    உழைப்பாளிகளின் வெள்ளைச்
    சிரிப்பும் சூப்புக் கடை முதலாளிகளின்
    ஆனந்தச் சிரிப்பும் காண வேண்டுமா
    மாலை நேரம் சாலை ஓரம் தவறாமல்
    நீர் வாரும்!

    உயர்ந்த மலையிலே பணிந்த கோவிலும்
    பரந்த மணல் பரப்பிலே சிறந்த பள்ளி வாசலும்
    அமைதியை நாடும் கிருஸ்தவ ஆலயங்களும்
    அருக அருகே  புத்த மதத்தவரின் கட்டிடங்களும்
    காண வாருங்கள், ஈழத்தின் பத்தியின்
    பரவசமான மனிதநேயத்தை!

    ஈழத்தின் அழகை வர்ணிக்கஇன்னும்
    பிறக்க வேண்டும் பல தமிழ்ப் புலவர்கள்
    தமிழில் உரைக்க ஆரம்பித்தால் நீ
    நீர் அருந்த மறந்து ரசித்திருப்பாய்
    அதில் வல்லமை பெற்ற திறமையான
    கவிஞர்களைச் சுமந்திருக்கும் நாடு அது ஈழம்!

    வீழ்ந்தாலும் எழுந்து விடும் உறுதி
    பூண்டு வாழும் மனம் கொண்ட
    தமிழன் வாழும் அழகிய நாடாம்
    ஈழம்!

    எளியோரையும் வலியோரையும்
    செழுமையாகவே சேர்த்து
    இணைத்து வாழ வழி தேடும்
    தமிழன் வாழும்  நாடாம் எங்கள் ஈழம்!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (6)

    வையவன்

    ஹோட்டலை விட்டு வெளியேறி காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனர்.

    வெற்றிவேல் கார்ச் சாவியை சிவாவிடம் நீட்டிய வாறே கேட்டான்.
    “காரை ஓட்டிப் பாக்கறியா?”
    “ஏன்?”

    “ஒரு டோயோடா எப்படி இருக்குண்ணு ஓட்டி அனுபவி. நீயும் நானும் ஒரு ஓட்டை பியட்லே டிரைவிங் கத்துகிட்டோம். இப்ப இது எப்படிண்ணு அனுபவி”
    சிவா சிரித்தான்.

    “எல்லாக் காரும் ஒரு கார் தானே, இது அது மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ். லெட் இட் பி. எனக்கு வேண்டாம் ஒரு மூன்றாம் நபரின் வாகனம்”

    சாவியை வெற்றிவேல் அவன் கையில் திணித்தான்.
    “மஹாபுருஷரே… அட் எ ஸ்ட்ரெச் ஓட்டிட்டு வந்ததிலே என் காலும் கையும் வலிக்கிறது. தாங்கள் ஓட்டி வருவீர்களாக”
    “அதை மொதல்லே சொலவ்லி இருக்கலாமேடா”
    வண்டி சீறிக் கொண்டு சிக்னல் வழங்கிய சுதந்திரத்தில் பறந்தது.

    “மெட்ராஸிலே என்ன செய்யறே சிவா?”
    “சமையல் செய்யறேன். வேலை தேடறேன். கதை எழுதறேன்.”
    “சமையல்?”

    “ஆமா… நீ வந்தியே அந்த ராயப்பேட்டா வீட்டிலே சமையல் வேலை செய்யறேன்!”
    “யார்” என்று கூவினான் வெற்றிவேல். அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. “யாருக்கு?”
    “ஒரு மாஜி ஜமீந்தார் பிள்ளையான மோட்டார் மெக்கானிக்குக்கு”

    “ஓ… நம்ம மாதிரி அவனும் ஒரு ஃப்ரீக்கோ?”
    “ஃப்ரீக் இல்லே, ஒரு கனவான், ஃப்யூடல் மிச்ச சொச்சம்.”
    “அப்ப உனக்கு ஒரு ஹீரோ கெடைச்சாச்சு?”

    ஒரு ‘பல்லவன்’ பஸ்ஸுக்கு முந்திச் செல்ல வழிவிட்டான் சிவா.
    “நமது ஹீரோ 1948 ஜனவரி 30-ல் சுட்டுக் கொல்லப்பட்டார் வெற்றிவேல். நாம பொறக்கறதுக்கு முன்னாடியே இட்வாஸ் ஓவர். நாம ஹீரோவைத் தேடிக்கிட்டிருக்கோம் இன்னும்.. இன்னும்”
    வெற்றிவேல் அதற்கு இசைவு தெரிவிப்பது போல் வாய்க்குள் சிரித்தான்.

    “எப்படி இந்த வேலை கெடைச்சுது?”
    “ஜஸ்ட் ஒரு வேலை கேட்க அங்கே அந்த ஆட்டோ ஒர்க்ஷாப்புக்குப் போனேன். இங்கே எந்த வேலையும் காலியில்லே. எங்க வீட்டிலே என் சமையல்காரன் ஓடிட்டான். அந்த வேலை காலியாயிருக்குண்ணு அவர் கிண்டலா சொன்னார்.”

    “வயசானவரோ”
    “இல்லே…நம்மை விட மூணு நாலு வயது அதிகம். ஆனா அந்த மரியாதைக்கு உரியவர்.”
    “மேலே சொல்லு”

    “என் சமையலைப் பார்த்துட்டு அப்பாயிண்ட்மெண்ட் குடுங்கண்ணேன். ஐம் ஸாரி; நீ ஒரு கிராஜுவேட்னார். சமையல்லே வித்தியாசம் இருக்காதுண்ணு சொன்னேன். ஹி லைக்ட் தட் ரிப்ளை டெங்கனிக் கோட்டா எங்கே இருக்கு?”
    “ஹோசூர் போய் கட் பண்ணணும்?”

    “பெங்களூர் ரூட்…”
    “ஆமாம்… நீ உங்க முதலாளி கிட்டே லீவ் சொல்லிட்டு வர்லியே…”
    “வெற்றி… அவர் முதலாளி இல்லே. நண்பராயிட்டார். தாமு ஊரிலே இல்லே. வந்தாலும்.. அடடே அவங்க அப்பா ஸீரியஸ்ணு போயிருக்கார். நான் ஏதாவது நடந்துட்டா மதனபள்ளி போகணும்… அண்செட்டியிலே எஸ்.டி.டி. பண்ண முடியுமா?”
    “ஓ… எஸ்”
    நகர எல்லையைக் கடக்கும் வரை வெற்றிவேல் பேசவில்லை.

    சிவாவுக்கும் காரைத் தொட்டு நெடு நாட்களானதால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அவனது கவனத்தை அதிகம் கோரியது.

    இடையிடையே அவனுடைய தந்தை கைலாசம் கவனத்தில் வந்து வந்து போனார்.
    என்ன விசித்திரமான பயணம் இது!
    பத்து வருஷத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை, எங்கோ முகம் தெரியாத சிற்றூரில் ஒரு மகன் சந்திக்க அவன் நண்பன் ஏற்பாடு செய்திருக்கும் பயணம்.

    இரண்டு நாட்களுக்கு முன் அவரைச் சந்திக்கும் வேட்கை வந்ததை நினைத்தான்.
    இவ்வளவு சீக்கிரம் அது இப்படி நிறைவேறி விடுமா? இன்னும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
    தன் தந்தையைத் தான் சந்திக்க வேண்டும் என்று வெற்றிவேலுக்கு ஏன் தோன்றியது?
    எதிரில் வந்த லாரி ஒன்றிற்கு டிம்…டிப் என்று ஹெட் லைட்டில் சிக்னல் காட்டிக் கொண்டே யோசித்தான் சிவா.
    அப்பாவுக்கு விசாலமான முதுகு. திண்ணையில் உட்கார்ந்து அடிக்கடி முதுகு தேய்க்கச் சொல்வார்.

    அவர் வலது தோள் பட்டையில் புளியங்கொட்டை அளவு உருண்டு திரண்ட ஒரு கறுப்பு மச்சம் உண்டு. முதுகு தேய்க்கும் போதெல்லாம் செவேலென்று விரிந்த அந்த முதுகில் ண் முளைத்த மாதிரி நிற்கும் அந்த மச்சத்தை சிவா தடவிப் பார்ப்பான்.

    “டேய், டேய்…கூச்சமாய் இருக்குடா” என்று அவர் நெளிவார். சிவா கிளுகிளுவென்று சிரிப்பான்.
    அவனுக்கு எட்டு வயதான போதிருந்து அவனைச் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வெங்களாபுரம் சுடுகாடு தாண்டி ஒரு பம்ப் ஷெட்டுக்குக் குளிக்கக் கூப்பிட்டுச் செல்வார்.

    “பச்சத் தண்ணி ஊத்தி ஊத்தி புள்ளைக்கு ஜன்னி வர வக்கப் போறீங்க” என்று அடிக்கடி ஆட்சேபிப்பாள் அம்மா.
    ‘தாட்சாயணி… சுடுதண்ணி ஊத்தி வளத்தா பையன் சீக்காளியாய் போயிடுவான்!”
    சனிக்கிழமையில் ஒரு புட்டியில் நல்லெண்ணெய் ஒரு டப்பாவில் சீயக்காப்பொடி.

    தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு கண்ணுக்கு விட்டுக் கொண்டால் ஒரு கதை. அழாமல் சீயக்காய் தேய்த்துக் கொண்டால் ஒரு கதை. சைக்கிளில் வரும்போது ஒரு கதை… எத்தனை கதைகள்!

    சிவாவுக்கு பளிச்சென்று கூரைச் சந்திலிருந்து ஒரு வெளிச்சக் கற்றை வீட்டில் விழுந்த போது அதை ஒரு கண்ணாடிச் சில்லில் பிரதிபலிக்கச் செய்து வீடு முழுதும் அவற்றில் அதை அவன் ஓடிப் பிடிக்க வைத்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
    அப்பா எதற்காக வீட்டை விட்டுப் போனீர்கள்?

    எல்லாரும் சொல்வது போல் ஒரு ஜடாமுடிச் சாமியாரா உங்களை அழைத்துச் சென்று விட்டார்?
    சிவா தனக்குள் கேட்டுக் கொண்டான் அவரைக் கேட்கப் போகிற கேள்வி அதுதான்.
    அதைக் கேட்க முடியுமா?

    திடீரென்று மௌனம் கலைந்து சிவா வெற்றிவேலைப் பார்த்து “என்ன சைலன்ஸ் ஆயிட்டே?” என்றான்.
    “யாரு?”
    “ஓ….நாந்தாண்ணு சொல்றியா”

    “ரெண்டுபேரும் தான். ரொம்ப நாள் கழிச்சு பிரிஞ்சு சேர்ந்தா மௌனம் ரொம்ப நெருக்கமா இருக்கு”
    “அப்பா கிட்டே நீ பேசினயா?”
    “உம்ம்…”

    “என்ன சொன்னார்… அம்மாவைப் பத்தி, என்னைப் பத்தி ஏதாவது விசாரிச்சாரா?”
    “அமிஞ்சிகரை தாண்டியிருப்பமா?”

    “ஓ…”
    “வண்டியை ஓரமா நிறுத்து. எனக்கு ஒண்ணுக்குப் போகணும்.”
    வண்டியை ஓரமாய் நிறுத்தினான் சிவா.

    டாஷ் போர்டிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு சாலையோரம் ஒரு மூலைக்குப் போனான் வெற்றிவேல்.

    தீக்குச்சி வெளிச்சம் சிகரெட்டை வாயில் பொருத்திய அவன் முகத்தில் செஞ்சுடராக விழுந்தது. அவன் சிறுநீர் கழித்து விட்டுத் திரும்பி வந்தான்.
    சிகரெட் புகை மணந்தது.

    “இப்ப நான் ஏன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா?” என்று கூறி விட்டு சிகரெட் சாம்பலைச் சொடுக்கினான்.

    “வேலை வெட்டியா… அப்படி ஒண்ணு உனக்கு இருக்கா?”
    சிகரெட்டை ஆழ்ந்து உறிஞ்சி நிமிர்ந்த வெற்றிவேல் முகத்தில் எதிரில் வந்த காரின் ஹெட்லைட் வெளிச்சம் விழுந்தது. சிவாவின் குத்தலை அவன் ரசித்துச் சிரிப்பது தெரிந்தது.

    “சிவா… நாம தேடுவதை… ஐ மீன் நான் தேடுவதை உனது தகப்பனார் அடைஞ்சுட்டார்னு நெனைக்கிறேன்…”
    வெற்றிவேலின் குரலில் ஓர் உண்மை ஒலித்தது. சிவா தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்பினான்.
    “ஒவ்வொரு வயசிலேயும் நாம ஒவ்வொண்ணைத் தேடினோம்… நீ எதைச் சொல்றே?”
    சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தான் வெற்றிவேல்.

    “நம் மீது… நம் மனசின் மீது ஒரு வெற்றி”
    “மனசு உள்ள வரை… அதன்மீது வெற்றி இல்லையடா வெற்றி”
    “அவர் அதைச் சாதிச்சிருக்கார்னு நெனக்கிறேன்.”

    “வெற்றிவேல்… நீ ஞானிகளைப் பற்றி பேசறே… எனக்கு ஞானம் வேண்டாம். ஒரு வேலை வேண்டும்… எங்கம்மாவின் ஓயாத உழைப்பிலிருந்து ஒரு விடுதலை வேண்டும்… அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய மனிதனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.”

    “எந்தக் கேள்வியை வேணும்னாலும் கேளு. ஆனா அவரை வேலை கேட்காதே…”
    சிவா மௌனமாயிருந்தான்.

    “வேலை… வேலை…நீ எதுக்குடா படிச்சே? ஏண்டா கிராஜுவேட் ஆனே…உன் தன்னம்பிக்கையை இழந்துட்டு எவனோ கொடுக்கப் போற ஒரு ஃபில்தி வேலைக்கு சலாம் போடவா?”
    “உன் கோபத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு”

    “இதுவும் கோபமில்லே…”
    பொறப்படலாமா… நாம ரொம்ப தூரம் போகணும்”
    “சரி”

    காரில் அமர்ந்தனர். வண்டி சிறிது தூரம் ஓடியபின் சிவா கேட்டான்.
    “அப்பா என்ன சொன்னார்?”

    “நீ மொதல்லே கேட்டதை மறந்துட்டேண்ணு நெனச்சுட்டியால… இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் அதற்குப் பதில்தான்”
    சிவா மௌனமானான்.

    “நான் ரிஷிகேஷிலிருந்து வர்றேன். அவர் ஒங்க அப்பா கைலாச கவுண்டர் இல்லே. பாபா ஓம்கார்நாத் அவரோடே தான் ஆறு நாளா தங்கியிருந்தேன்… அந்த அமெரிக்கன், அவர், நான், மூணு பேரும் அண்செட்டி வந்தோம்.”

    சிவாவுக்கு முதன் முறையாக வெற்றிவேலுக்கு எங்கோ மறை கழன்று விட்டது என்ற சந்தேகம் வந்தது. அட்வென்சர்.. அட்வென்சர் என்று தேடித் திரிகிறவனிடத்தில் எங்கேயாவது ஒரு வழுக்கலில் அது நேர்ந்து விடுவது சாத்தியம் என்று நினைத்தான்.

    “ஸோ…எங்க அப்பா நாட்டிலுள்ள பாபாக்களில் இன்னொரு பாபாவாய்ட்டார்னு சொல்லு”
    வெற்றிவேல் பெருமூச்சு விட்டான்.

    “அண்ட்.. நீ அவருடைய சிஷ்யன் ஆய்ட்டே”
    “தப்பு.. அவர் குருவென்று தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. சிஷ்யன் என்று எவனையும் ஏற்கவில்லை.”
    “ஆனா அவர்தான் ஒனக்கு ஒன் மீது வெற்றியைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் கொடுத்தார்..இல்லியா?
    “அவர் சுட்டிக்காட்டினார். நான் கண்டுபிடிச்சேன்”

    ‘உன் மீது நீ எப்போதும் வெற்றி பெற்றுத்தான் வருகிறாய். திடீரென்று எதுவும் நேர்ந்துவிட வில்லை. நேராது’ என்று வெற்றிவேலுக்குச் சொல்ல நினைத்தான்.
    சொல்லவில்லை.

    வெற்றிவேல் நேரடி அனுபவத்தை நம்புகிறவன். ஒருவேளை அவன் அனுபவித்திருக்கலாம்.
    “வேற பெர்ஸனலா எதுவும் கேக்கலியா நீ?”
    தனக்குள் லயித்துச் சிரிப்பவன் போன்று வெற்றிவேல் வாய்க்குள் நகைத்தான்.

    “அவர்கிட்டே பெர்ஸனல்..இம்பெர்ஸனல் எதுவும் தோணாது. அவர் மொழியே நெடிய மௌனம். ஒரு நாளைக்கு அவர் ரொம்ப அதிகமாப் பேசினா பத்து வார்த்தைகள் தான் பேசுவார்.”

    “பேசாதவரிடம் நீ ஏண்டா என்னைக் கூட்டிட்டுப் போறே?”
    “மகனே, உன் தந்தையை சந்தி”
    “நீ சொல்கிறவர் என் தந்தை மாதிரி இல்லை. ஏதோ மகான் மாதிரி இருக்கு..மகனுக்கு தந்தை தான் வேண்டும். மகான் வேண்டாம்”

    “அதை நீ சந்தித்தபிறகு சொல்.”
    சிவா ஆக்ஸிலரேட்டரை மிதித்தான், வெகுதூரம் போக வேண்டும்.

    தொடரும்

    Share
  • என்னைக் கேட்டால்…

    -சக்தி சக்திதாசன்

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னுள் விளையும்
    எண்ணங்கள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    விண்ணில் தோன்றும்
    விந்தைகள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    கற்றுக் கொண்ட
    பாடங்கள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னுள் என்னைத்
    தொலைத்தேன் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னை எரித்த
    எண்ணெய் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    காலில் தைத்த முட்கள்
    பயணத்தின் துணை என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    கவியரசரின் முன்னே
    கால் தூசு என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    அன்பு மனங்களின் பாசம்
    என் எழுத்தின் வாசம் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னை அறிந்திடும்
    தேடலின் பாதை என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    எல்லாம் தமிழினுள்
    ஐக்கியம் என்பேன்!

     

    Share
  • மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை

    ஆர் எஸ் கலா

     

    aaa
    <><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

    மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை
    <><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

                                    {1}
    குமாரின் வாழ்கை  வரலாற்றை
    நினைக்கையிலே குளமாக
    வருகின்றது கண்ணீர் என்
    கண்களிலும்.  ஆமாம் ஒரு
    கன்னியமிக்க கருணை
    நிறைந்த மனிதன் குமார்.
    அவனுக்கு என்று உருவான
    குடும்பமோ ஒரு குருவிக் கூட்டம்
    போல் அழகான குடும்பம்.
    குமார் திருமணம் செய்யும் போது
    சுமார் முப்பது வயது இருக்கும்.
    அவன் மனைவி பெயர் வாணி
    சிறுவயதிலே  தந்தையை
    இழந்த ஒரு ஏழை வீட்டுப் பெண்.
    ஆனால் அழகிலும் அறிவிலும்
    அவளுக்கு நிகர் அவள்தான்.
    குமார் படிப்பறிவு இல்லாத
    இளைஞன்  விவசாயத்தில்
    பல சாதணை புரிந்த  ஆண்
    மகன். தாய்க்குத் தலை மகன்
    ஓரளவு வசதியான குடும்பம்.
    வாணியும் குமாரும் முல்லைத்தீவைப்  பிறப்பிடமாகக்
    கொண்டவர்கள். பெற்றோர்
    ஆசைப் படியே குமார் கை பிடித்தான்
    வாணியை. ஊரார் மத்தியில்
    முறையுடன். அழகான வாழ்வை
    அனுபவிக்க அவனும் தயாரானான்.
    வாரங்கள் மாதங்களாக மறைந்தது
    ஓராண்டை நெருங்கியது.
    வாணியும் தன் இல்லற இன்பத்தின்
    பரிசாக ஈன்று எடுத்தாள் அழகான
    ஆண் பிள்ளையை. குமாரின் மனம்
    மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன் மகனுக்கு
    அழகான பெயராக தெரிவு செய்து
    சூட்ட ஆசைப்பட்டவன் மனைவி வாணியிடம்
    விருப்பம் கேட்டான் அவள் தன் கணவன்
    பெயருடன் சேர்த்தாப் போல்  வையுங்கள்
    என்றாள்  இதன் இடையே குமாரின்
    பெற்றோர் பேரனுக்கு ஜாதக முறைப்படி
    சில எழுத்துக்கள் கூறவே அதில் ஓர்
    எழுத்தை தெரிவு செய்து முகுந்தன்
    என்று பேர் சூட்டினான் அன்று முதல்
    தன் மகனுக்கு  தமிழின் பெருமையையும்
    தமிழ் மண்ணின் கடமையையும் பலரின்
    தியாகங்களையும் கூறியே வளர்த்து
    வந்தான் முகுந்தனும் சுட்டிப்பையனாக
    வளர்ந்தான் ஒரு வாட்டி கூறினாலே
    கற்பூரம் போல் பிடித்துவிடுவான்
    படிப்பிலும் சரி பொது அறிவிலும்
    சரி நல்ல முன்னேற்றம்  முகுந்தனுக்கு
    ஆறு வயது கடந்த பின்னர்தான் வாணி
    மறு குழந்தைக்கு தாயானாள் இந்தத்
    தடவை  அழகிய குட்டித் தேவதையை
    பெற்றுக் கொடுத்தாள் குமார் கரங்களிலே
    குமார் தன் அன்பு மகளுக்கு குமுதினி என்று
    பெயர் சூட்டினான்  வாணியும் குமாரும்
    சேர்ந்து பேசி முடிவு செய்தனர் இரு
    குழந்தை போதும் என்று முடிவு எடுத்தனர்
    இருவரையும் அன்பும் அக்கறையும்
    அதனுடன் கொஞ்சம் கண்டிப்பும் காட்டியே
    வளர்த்து வந்தனர் நான்கு பேர்
    கொண்ட குட்டிக் குடும்பமாக வலம்
    வந்தது குமாரின் குடும்பம்.
      

                             {2}

    அந்த அழகு குடும்பத்திலே
    கல்லடி பட்டது போல் பட்டது
    கொடும் பாவிகள் விட்ட செல் அடி.
    விழுந்து நொறுங்கிய செல் பாகங்களுக்குப்
    பலியானது குமாரின்  ஒரு காலும் அவன்
    வியர்வை சிந்திய உழைப்பில் கட்டிய
    மனையும். அப்போதும்  தன் குடும்பம்
    நலமாக உயிர் தப்பியதைப் பார்த்து
    சந்தோசம் அடைந்தான் குமார் கால்
    இழந்தானே தவிர தைரியத்தையும்
    மன உறுதியையும் இழக்க வில்லை.
    தமிழனுக்கான கர்வமும் அவனிடம்
    நிறைந்தே இருந்தது தாய்க்கு நிகராக
    அவன் வாழும் தாய் மண்ணை அதிகம்
    நேசிப்பவன். தன் மகனுக்கு விடுதலைப்
    போராளிகளின் கொள்கையைச் சொல்லியே
    தூங்க வைப்பான் சிறு  வயதில்   நீயும்
    நாடுகாப்பாயா என்று விளையாட்டாகக்
    கேட்பான் மகனும் தலையை ஆட்டி வைப்பான்
    அது போன்றே அவன் பாடசாலை விட்டு வீடு
    திரும்பியதும் அருகில் இருக்கும் பயிற்சி
    முகாமுக்குப் போய் நின்று வேடிக்கை
    பார்ப்பான்  அப்போதே தன்னை ஒரு
    போராளியாக நினைக்கத் தொடங்கினான்
    முகுந்தன் பருவ வயதை அடைந்ததுமே
    இணைந்து கொண்டான் போராளி குடும்பத்தில்
    தந்தை குமார் கலங்க வில்லை தாய் வாணிதான்
    கொஞ்சம் கலங்கிப் போனாள். ஒரே ஒரு ஆண்
    மகன்.உடல் நலம் இல்லாத தந்தை பருவ  வயதை
    அடைந்த தங்கை  வீட்டுப் பொறுப்பை விட்டு
    நாட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானே
    என்று அவள் கலங்கவில்லை  தன் மகன்
    வீரனாக வலம் வரவேண்டும் நாட்டுக்கு
    பல நன்மை புரியவேண்டும் அதற்கு அவன்
    நெடும் நாள் வாழவேண்டும் தன் மூச்சை நிறுத்தும்
    வரை மகன் நலமக இருந்தால் போதும்
    என்று தான் கண் கலங்கினாள். ஆண்டுகள்
    உருண்டு ஓடியது குமார் வாணி இருவரையும்
    மெது மெதுவாக  முதுமை நெருங்கியது
    குமுதினியோ வீட்டுக்கு செல்லப்பாப்பாவாக
    வளர்ந்து வந்தாள் தாய் தந்தையரின் அன்பில்
    துவண்டு  போனாள் ஒரு மழலைபோல்.
    வீட்டுக்குச் செல்லம் ஊரிலோ அவள் ஒரு
    தமிழ் ஆசிரியை அழகு ஓவியம் போல்
    கொடி இடையாள் கொடிக்கும் அவளுக்கும்
    உள்ள வேறுபாடு கொடி வளைந்து கொடுக்கும்
    இவளோ இடை மேல் கரம் பட்டாலே வசமாய்
    கொடுப்பாள். கன்னத்தில். பட்டாம் பூச்சி  போல் இறக்கை
    இன்றிப் பறக்கும் பெட்டைப்பூச்சி அவள்.

    {3}
    அவளின் நல்ல குணம் பன்பும் அழகு
    பொது நலம் பெற்ரோரிடம் வைத்துள்ள
    பாசம்  மரியாதை  இவைகளைப்  பார்த்து
    பலர் தன் வீட்டுக்கே மருமகளாக்கி விட
    ஆசைப்பட்டனர்  அதில் சிலர் வீட்டுக்குத்
    தகவலும் சொல்லி அனுப்பி இருந்தனர்
    குமாரும் வாணியும் தன் மகளின்
    வாழ்க்கை பற்றி பேசும் போது மகன்
    குமுதனை நினைத்து ஏங்குவது வழமை
    அன்றும் அப்படியே பேசிக் கொண்டு
    இருக்கும் போது குமுதினி கூறினாள்
    அம்மா நாளை மறு நாள் அண்ணா
    வரு நாள் என்று  ஆமாம் அதை நான்
    மறப்பேனா என்றாள் தாய் வாணி
    முகுந்தன் மாதம் ஒரு தடவை தவறாது
    பெற்றோரைக் காண வருவான்  இரு
    தினங்களில்  தன் மகன் வரவை
    எதிர்பார்த்து விதம் விதமாகச் சமைத்தாள்
    வாணி  காடு மேடு என்று போவதால் நல்ல
    உணவு உண்டு எத்தனை வாரங்களோ என்று
    மனதில் நினைத்தபடி கலங்கும் கண்ணைத்
    துடைத்துக் கொண்டே பார்த்துப் பார்தது
    சமைத்து முடித்தாள்   குடும்பமே வழி
    பார்த்த  வண்ணம் இருக்க முகுந்தன்
    தன் சக தோழனுடன் ஓர் வாகனத்தில்
    வந்தான் நடையோ ஒரு கம்பீரமாக இருக்க
    தோள் மீதும் பக்க வாட்டிலும் ஆயுதங்கள்
    கண்டதும் ஒரே  சந்தோசம் தாய்க்கு  தந்தை
    அவன் பதவி அவன் வீரம் கூடவே துணைக்கு
    ஆள் இவைகளைக் கண்டு ஒரு வியப்பும்
    பெருமிதமும் கொண்ட மகிழ்ச்சியோடு  மகனை
    வரவேற்றனர் மகனாக இருந்தாலும் அவன்
    ஒரு நாட்டைக்  காக்கும் வீரன் அதனால்
    தன்னை அறியாமலே மரியாதையும்
    கொடுப்பார் தந்தை
    குமார்  முகுந்தன் வந்ததும்
    அனைவரிடமும் நலம் விசாரித்து
    விட்டு தாயின் கரங்களால் சாப்பிட
    அமர்ந்தான் நண்பனுடன்  தாய் வாணி
    உணவு பரிமாறிய வண்ணமே பல விஷயங்களை
    பேசினாள் அதனுடன் குமுதினியின் திருமண
    விஷயத்தையும் கூறி  உன் பதில் என்னப்பா
    என்று மகனை நோக்கினாள் பேசாமல்
    சாப்பிட்டு முடிந்ததும்  தன்  தந்தையைப்
    பார்த்துக் கேட்டான் ஏன் அப்பா நீங்கள்
    மௌனமாக இருப்பது உங்கள் விருப்பம்
    என்ன என்று குமார் மகனிடம் கூறினான்
    எனக்கும் திருமணம் செய்து வைப்பது சரி
    என்றுதான் படுகின்றது  உங்க அம்மா பேசி
    முடிக்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்
    என்றான் மகனிடம் குமார்  ம்  சரிதங்கைக்கு
    பிடித்தால் நல்ல இடமாக அமைந்தால்  பேசி
    முடிங்க நான் இன்னும் ஆறு மாதங்கள்
    சென்றுதான் வருவேன் என்றான் தாயைப்
    பார்த்த வாறு அவனுக்குத் தெரியும் இதை
    தாய் ஏற்றுக் கொள்ளமாட்டாள் என்று
    கடமையின் கட்டுப்பாடு அவன் தலை வணங்கியே
    ஆக வேண்டும் பதறிப் போன தாய் வாய்  விட்டே
    அழுதாள் ஏண்டா இப்படி செய்கிறாய் மாதம்
    ஒரு  தடவை  வருவதையே என்னால் தாங்க
    முடியல இதில் ஆறு மாதம் சென்ற பின்னா
    என்று மகனின் கரம் பற்றிக் கேட்டாள் ஆம் அம்மா
    தலைவர் கட்டளை நான் வேறு ஊர் செல்லவேண்டும்
    அங்கு இருந்து வருவது கடினம் ஆறு மாதம் சென்றதும்
    இங்கே வந்து விடுவேன் அதனால் திருமணத்தைப்
    பேசி முடிங்க திருமண நாள் நான் வந்ததும் நடப்பது
    போல் குறித்து எடுங்கள் என்று கூறி தங்கையிடம்
    கொஞ்சம் கேலியும் பேசி விட்டுப் புறப்பட்டான்
    கலங்கிய கண்ணுடன் வழி அனுப்பி வைத்தனர்
    குடும்பமே ஒன்றாக சேர்ந்து

    {4}
    மகனை அனுப்பி விட்டு தனியே
    அடுப்பங்கரையில்  நின்று அழுதாள்
    வாணி குமார் அமைதியாக அமர்ந்தான்
    நாற்காலியில் குமுதினி தன் அறையின்
    உள்ளே சென்று விட்டாள்  வீடே அமைதியாக
    இருந்தது நேரம் ஓடி மறைய இரவும்
    எட்டிப் பார்த்தது அன்று தூங்கும் போது
    குமார் கூறினான்  பக்கத்து ஊர் பையன்
    நல்ல உத்தியோகமாம்
    அவர்கள் தான் முதல் முறை
    நம் குமுதினியை பெண் கேட்டது நாளை
    அவர்களிடம் பேசுவோம் அந்த தொலை பேசி எண்ணை
    ஞாபகமாக  எடுத்து வை என்று கூறி விட்டு தூங்கத்
    தயாரானான்  வாணியின் மனம் தூங்க மறுத்தது
    புரண்டு புரண்டு படுத்தவாறே இரவைக் கழித்தாள்
    மறு நாள் காலை குமுதினி வேலைக்குச் சென்றாள்
    குமார் வழக்கம் போல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு
    பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டு இருந்தான்
    வாணி வீட்டு வேலையில் மூழ்கிப் போனாள்
    சிறுது நேரம் சென்றதும் குமார் வாணியை
    அழைத்து தொலைபேசி எண்ணைக் கேட்டு
    வாங்கி  தன் மகளை பெண் கேட்ட வீட்டுக்கு
    தொடர்பு கொண்டான் அவர்களும் சந்தோசம்
    ஒரு நல்ல நாள் பார்த்து விட்டு  வீட்டுக்கு வருவதாக
    கூறினர்கள்   நாட்டில் தினம் தினம் வெடி
    தினம் தினம் இழப்பு ஆனால் வீட்டை விட்டு
    வெளியேறவில்லை இது வரை .நாளும் கடந்தது
    மாப்பிள்ளை வீட்டார் வரவுக்கு நாள் குறிக்கப்பட்டது
    வண்ணக் கனவில் மிதக்க தயாரானாள் குமுதினி
    வீடே குதூகலம் ஆனது சொந்த பந்தம் எல்லோரும்
    வந்து மிகவும் சந்தோசமாக வேலைகளை செய்து
    கொண்டு இருக்க வாணி மட்டும் இடை இடையே
    காணாமல் போவாள் தனிமைில் போய் அழுவதும்
    பிறகு வந்து கூடி நின்று சிரிப்பதுமாக இருந்தாள்
    மகனுக்காக அழுகை மகளுக்காக சிரிப்பு
    இரண்டுக்கும் இடையில் தாயின் தவிப்பு
    மாப்பிள்ளை வரும் நேரம் நெருங்க. நெருங்க
    குமுதினிக்கு சந்தோசத்துடன் சேர்ந்து
    ஒரு தவிப்பு  தோழியர்கள் கூடி நின்று
    கேலியும் கிண்டலுமாக இருக்க
    அவள் அழகு முகம் சிவக்க வாகனம்
    வரும் ஓசை கேட்டு எட்டிப்  பார்த்தனர்
    தோழியர் மாப்பிள்ளை வீட்டார் வந்து
    விட்டனர் ஒரே பட படப்புடன் அவளும்
    ஐன்னல் வழியே பார்த்தாள் அழகான
    உடையும் அமைதியான முகமும்  தாயோடு
    நடந்து வந்தான் புது மாப்பிள்ளையை வரவேற்றனர்
    வீட்டுப் பெரியோர்  சிறுது நேரம்
    பேசி முடித்து விட்டு குமுதினியை அழைத்தனர்
    அவளும் வெட்கத்தோடு வந்து அமர்ந்தாள்
    இருவரிடமும் சம்மதமா என ஒரு முதுமை
    தாத்தா வினா எழுப்பவே ஆமாம் என்று
    தலையாலே பதில் உரைத்தனர் ஒரு
    வழியாக நிச்சயம் முடிந்தது  திருமணம்
    ஓராண்டு முடிய என்று முடிவு எடுத்து
    மாப்பிள்ளை வீட்டாரும் சந்தோசமாக
    போனார்கள்  குமுதினி  அன்று முதல்
    ஆரம்பித்தாள் வண்ணக் கனவையும்
    கற்பனைக்  கவியையும் தனக்கே உரிமையாக்கி தன் கரம் பிடிக்க
    வரும் கணவனை நினைத்து
    வடித்தாள் சிறு கவிதை
    உறவோடு வந்தாய் உள்ளத்தை
    கூடியவர்கள் அறியாமலே
    அள்ளிச் சென்றாய் வெள்ளம் போல்
    விளையாடுது உன்நினைவு தினமும்
    இரவினிலே   தனிமையில் நான்
    ஒருத்தி தவிக்கின்றேன் உன்னை நிறுத்தி
    கவிதை எழுதி முடிந்ததும் தானாக படித்து
    சிரித்தாள்  மனதினிலே

    {5}

    குமார் குடும்பத்தில் ஒவ்வொருவரும்
    ஒவ்வொரு  மன நிலையுடன் நாட்களை
    கழித்து வந்தனர்  திரு மணத்துக்கு இன்னும்
    ஏழு மாதங்கள் இருக்கு முகுந்தன் வீடு வர
    இரண்டு மாதம் இருக்கு என்று வாணி
    மனதிலே கணக்குப் பார்த்த வண்ணம்
    இருந்தாள் வழமை  போல் அன்றும்
    பல விசயங்களை  பேசிவிட்டு உறங்கத்
    தயாரானார்கள் திடீர் என்று குண்டு
    மழை பொழிய ஆரம்பித்தது இவை
    ஒன்றும் புதிய ஓசை இல்லை இருந்தும்
    அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது
    மக்களின் குரல் ஓசையும் பலமாகவே கேட்டது
    வெளியேறிப் பார்க்க பயந்த மூவரும்
    பயந்த படியே அறையின் உள்ளே இருந்தனர்
    வெடி ஓசையும் செல்லும் மீண்டும் மீண்டும்
    பலமாக  வெடிக்கவே குமார் கூறினான்
    மகளிடமும் மனைவியிடமும்  நாம் இங்கே
    இருக்க வேண்டாம் என்று அழைத்தான்
    ஏற்கனவே தயாராக வெட்டி வைத்த குழிக்குள்
    சென்று அமரலாம் என்று அதன்படியே
    மூன்று பெயரும் ஓடி ஒழிந்தனர்  மெதுவாக குமாரின்
    கையைப்  பிடித்துக் கொண்டு சேர்த்தனர்
    தாயும் மகளும் பிறகு   ஓசை ஒன்றும்  காதில் விழ
    வில்லை ஒன்றும் புரிய வில்லை விடியும்
    வரை அமர்ந்து இருந்தனர் விடிந்ததும்
    வீட்டுக்குள்ளே குழியில் இருந்து
    வெளியேறியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி
    ஆம்  ஊரையே இராணுவம்  கைப்பற்றி
    அடித்து  உடைத்து வைத்திருந்தான் தன்
    பிடியில் இவர்களையும் சேர்த்துக் கொண்டு
    வந்து நிறுத்தினான் மக்களோடு மக்களாக
    அமர்ந்தனர் அங்கே பல உறவுகள் கதறுவது
    மனதை ஏதோ செய்தது   அன்று இரவு
    பொழிந்த குண்டுக்கு உறவை பலி
    கொடுத்தவர்களோ கதறி அழுதவண்ணம்
    இருந்தனர் இவர்கள் முகத்தைப் பார்த்த
    படியே கலங்கி இருக்கும் போது  ஒரு
    வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி
    விட்டான் குப்பை போல் அன்று அவன்
    துப்பாக்கிக்குப் பலியான மக்களின் உடலைக்
    கண்டதுமே எல்லோரும் கதறி அழுதனர்
    என் உறவு உன் உறவு என்ற வேற்றுமையே
    அப்போது இல்லை  அடித்து அதட்டி அடக்கி
    விட்டான் அழுதவர்களை உடலை அவர்கள்
    கண் முன்னே ஒரே குழியில் கொட்டி மூடி
    விட்டான் அப்போது வாணி இறைவனுக்கு
    நன்றி கூறினாள் இறைவா நல்ல வேளை
    என் மகன் வேறு ஊர்  சென்று விட்டான்
    எனக்கு இது போதும் என்று நன்றி
    கூறினாள் மனதிலே
    இறைவனுக்கு அப்போது  கடுமையான. குரலில்
    அழைத்தான்
    ஒரு சிங்கள மிருகம் எல்லோரும் எழுந்து
    செல்லவே கொண்டு போட்டான் ஒரு உடைந்த
    வீட்டில்  சுத்தியும் மரங்கள் கண் இமைக்கும்
    நேரத்திலே கம்பி வேலி போட்டு அடைத்தான்
    மிருகம் போல்  குப்பையில் மக்கள் கூட்டம்
    உணவு இல்லை நீர் இல்லை  ஒன்றும்
    புரியாமலே மக்கள் தவித்தனர்

    {6}

    இரு தினங்களுக்குப் பிறகு ஏதோ  கொஞ்சம்
    உணவு கொடுத்தான் அங்கே வயது வந்த
    பெண்கள் படும் அவஸ்தையும்  சிறு மழலைகள்
    துடிப்பதையும் பார்த்தால் கல்லும் கண்ணீர்
    சிந்தும் இந்த சிங்களவனுக்கு மனம் இரங்கவில்லை
    வந்து வந்து  யாராவது ஒருவரின் பெயர்
    கூறி விசாரணை என்று ஒரு உறவை அழைப்பான்
    சிறுது  நேரத்தில் பாதி உயிருடன் கொண்டு போடுவான்
    சிலரை கண்ணிலே காட்ட மாட்டான்  எமனைத்
    தவிர வேறு ஒரு தெய்வமும் கண்ணில் தெரிவதாக. இல்லை
    அதே போலவே  குமார் குடும்பத்துக்கும்  காத்திருந்தது
    கெட்ட நேரம்  கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
    போல் குமாரின் குடும்பம் பற்றி போட்டுக்
    கொடுக்கவும் ஒரு எட்டப்பன் இருந்தான் அவனுங்க
    கூடவே வேகமாக வந்த அந்த நாய் அழைத்தான்
    குமுதினியை கொஞ்சம் பேச வேண்டும் வா என்று
    அவள் நடுங்கவே வாணி கதறினாள் குமார்
    பதறிப் போனான் நான் வருகிறேன் ஐயா என்றான்
    வேண்டாம் நீ நொண்டி நொண்டி வர ஒரு நாளாகும்
    போய் பேசாமல் இரு என்று அதட்டினான் வாணி
    தான் வருவதாக கூறி எழுந்தாள் ஏய் கிழவி
    அடங்கு இல்ல போடுவேன் மண்டையில் என்று
    தள்ளி விட்டு குமுதினியை அழைத்துச் சென்றான்
    அவள் அழுது கொண்டே பெற்றோரைப் பார்த்தபடி
    சென்றாள் கூட்டிப் போய் பல மணி நேரமாகியும்
    குமுதினி வரவில்லை வாணி அழைக்காத
    தெய்வமே இல்லை  குமார் மெதுவாக  ஊண்டு
    காலில் சென்று ஒருவனிடம் விசாரித்தான்
    அவன் ஒரு தள்ளு தள்ளி விரட்டி விட்டான்
    அழுத கண்ணுடன் வந்து அமர்ந்தான் அன்றுதான்
    குமார் அழுவதை வாணி பார்த்தாள் எதையும் தாங்கும்
    தன்  கணவனின் கண் கலங்கியதுமே ஏங்கியே
    போனாள் வாணி பாதி மூச்சி நின்றது அவளுக்கு
    கொஞ்சம் அமைதியாக இருங்கள் வருவாள்
    நம் மகள் நாம் யாருக்கு கெடுதல் செய்தோம்
    என்று கணவனிடம் ஆறுதல் கூறினாள்
    அவள் உள்ளே  செத்துக் கொண்டு இருந்தாள்
    மாலையாகிப் போயும்
    மகள் வரவில்லை பார்த்த படியே இருக்க  ஒருவன் வந்தான்
    இரு ஆண்களை அழைத்துப் போய் வாணியை
    தூக்கி கொண்டு போகுமாறு கட்டளை இட்டான்
    அவனுங்க பதறும் நெஞ்சை அடைக்கியபடியே
    வாரி அள்ளி எடுத்துக் கொண்டு வந்து  படுக்க
    வைத்தான் வாடிய கீரையாட்டம் ஒன்றுமே
    தெரியாத கிழிசல் துணிபோல் குமிதினியின் நிலமை
    ஆம் பாவிங்க அவளை சீரழித்து  கடித்துக் கொதறி  போட்டு விட்டானுங்க
    பலர் ரசித்த அழகு மேனியை அலங்கோலமாக்கி
    பாதி உயிருடன் அள்ளி க்
    கொடுத்திருந்தானுங்க பாவிகள்
    உதிர்ந்த ரோஜாபோல் கிடந்தாள் தரையில்
    ஓவென்று அழுத வாணியின் குரல்அந்த
    நொடியே அடங்கியது மகளின் உயிர்
    பிரியும் முன்பே வாணியின் உயிர் அடங்கி
    விட்டது வாணியின் அழகு முகம் பார்த்த
    ஊர் மக்கள் இந்தக் அவலக்  கோலம் கண்டு கலங்கியவாறு
    தங்களின் கூடவே இருக்கும் பருவப் பெண்களின்
    மக்களை நினைத்து ஏங்கத் தொடங்கினர்
    குமுதினி தந்தை முகம் பார்த்தாள் பேச எத்தனித்தாள்
    வார்த்தை வெளியாகவில்லை மூச்சு வெளியாகி
    விட்டது ஒரே நாள் ஒரே நேரம் தன்  இரு விழியையும்
    இழந்தான் குமார் உயிர் போன கூடாக வெறுமை
    யானான்  அவன் தைரியம்  வைராக்கியம் அனைத்தும்
    ஓடியே போனது உடைந்த முருங்கை மரமாக
    அவன் மனம் இப்போது

    {7)
    மடி கொடுக்கும் மனைவியும்  இல்லை
    தோள் கொடுத்து தூக்க மகன் இல்லை
    தூக்கி சாத்த மகள் இல்லை  தான்
    அனாதையா ?இல்லை மகன் வருவானா?
    என்று தெரியாமலே அகதியாக  வாழ்ந்தான் குமார்
    தினம் தினம் அவன் தொலைத்த உயிர்களின்
    ஞாபகத்துடன்    குமாரின் உறவினர் சிலர்
    அவனைப் பாசமாக  பார்த்து  ஆறுதல் கூறி
    துணையாக இருந்தனர் அப்போதுஅவர்கள் எப்படியோ
    சிங்கள வெறியனின் கண்ணில் இருந்து
    தப்பி அருகில் இருக்கும்  தமிழ் நாட்டுக்கு
    ஓடி வந்தனர்  வரும் போது  ஏதேதோ கூறி
    கூடவே அழைத்து வந்தனர்   குமாரையும் வரும் போது
    குமார் உள்ளம் ஏங்கிய ஏக்கத்தைக் கூற
    எவராலும் முடியாது ஓடி ஓடி உழைத்த ஊர்
    கூடி வாழ்ந்த நாடு  உயிரில்  கலந்த மனைவி
    மகளின் உடல் புதைத்த மண் எந்த ஊரோ
    எந்த காடோ இருக்கானா இல்லையா உயிருடன்
    தன் மகன் என்று தெரியாத நிலமை இப்படி
    பல வேதனையுடன் அடி எடுத்து வைத்தான்
    அதற்கும் காரணம் தன் மகனே மகன்
    எப்போதாவது வரும் போது தான்
    உயிருடன் இருக்க வேண்டும் மகன்
    முகம் பார்த்து அவன் கையில் நீர் வாங்கி அருத்திய பின்னரே
    உயிர் பிரிய வேண்டும் ஈழத்தின்
    மண்ணிலே தன் உடல்  புதைக்க வேண்டும்
    தமிழன் நாடு எடுக்க வேண்டும் அதை அவன்
    பார்த்த பின்னரே உயிரை விட வேண்டும்
    என்று  ஒரு  சிந்தனையும் அ வை நடக்கும் என்ற
    நம்பிக்கையிலும்  முள் வேலியை
    விட்டு  வெளியேறினான்  ஆனால் ஆண்டுகள்
    பல கடந்தன தமிழ் நாட்டிலும் அவன் ஒரு
    அகதியாகவே வாழ்ந்தான் மகனும் வர
    வில்லை நாடும் கிடைக்கவில்லை  இறுதி
    மூச்சும் நிறுத்தப் போகின்றான் இன்றும் வரும்
    படகை எதிர் பார்க்கான் மகன் இதிலாவது
    வரமாட்டானா என்று மூன்று இனமும் ஒன்றாக
    வாழ்ந்த நாட்டில் ஒரு மொழிக்காரனின் ஓர
    வஞ்சனையால் எத்தனை நெஞ்சங்கள்  வலில்யின் இன்று
    உண்மை பாசங்களை இழந்து உறவுகளையும்
    இழந்து  பிறந்த மண்ணையும் இழந்து
    விழி  மெது மெதுவாக மூடுகின்றது
    மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகின்றது
    ஆனால் அவனின் ஏக்கம் மட்டும் நிலைத்து
    நிற்கின்றது நெஞ்சில் இவன் மூச்சு பறக்கும்
    ஆத்மா சாந்தி அடையாது என்று
    சுத்தி இருந்தவர்களின் குரல் முணுமுணுத்தது
    குமார் மூச்சு  முழுமையாக நின்றது விழி
    பாதியிலே நின்றது தன் மகனுக்காக வழி
    பார்த்த விழி மூடவேயில்லையே
    என்று  ஒரு கூட்டம்  நின்று புலம்புகின்றது.

        முற்றும்

    கவிக்குயில்  ஆர்  எஸ்  கலா

    மலேசியா

    Share
  • தென்மதுரை வைகை நதி …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    thenmadurai_vaigai_nathi
    வற்றாத ஜீவநதியாய் கவிதை … வெள்ளம் போலவே கரைபுரண்டு பாய்ந்து வருகின்ற உள்ளம் கவிஞர் வாலியிடம் தஞ்சம் எனும்போது வார்த்தைகளுக்கா பஞ்சம்? தர்மத்தின் தலைவன் திரைப்படத்திற்காக கவிதை ஒன்று கருவெள்ளம்கொண்டபோது … உயிர் கொண்ட பாட்டு இது! இராகதேவன் இளையராஜாவின் இசையாட்சியில் இதோ வார்த்தை நந்தவனம் பூத்துக் குலுங்குகிறது!

    வசந்த விழா ஒன்று நடந்து முடிகிறது! மெல்லிய கானம் பிறந்து வருகிறது! நல் உறவுகள் அன்பினிலே பின்னப்பின்ன ஆனந்த லயத்திலே மூழ்கவைக்கும் பாடல்! முத்தமிழை முறையாக கற்றுத் தேர்ந்த கவிஞர் வாலியின் கரம்பட்டக் காரணத்தால் கன்னித்தமிழ்க் கவிதை பிறந்ததடி! இன்பமது பொங்கி வழியும் இதமான பாடல் வளர்ந்ததடி!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, சுகாசினி கூட்டணியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா குரல்களில் தவழ்ந்து வரும் தென்றலிது!

     

    https://youtu.be/5dDTrxGzs2c

     

    காணொளி: https://youtu.be/5dDTrxGzs2c

    படம்: தர்மத்தின் தலைவன்
    பாடல்: வாலி
    இசை: இளையராஜா
    குரல்: எஸ். பி. பாலசுப்ரமணியம், பி.சுசீலா

    __________________________________ 

    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தேய்கின்றது
    தேய்கின்றது பொன் மாலை நிலா
    தேயாதது நம் ஆசை நிலா
    இது வானம் போலே வாழும் பாசம்
    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தென் மதுரை வைகை நதி

    நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
    அண்ணன் தம்பி யாரும் இல்லை
    தன்னைப் போல என்னை எண்ணும்
    நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
    தம்பி உந்தன் உள்ளம் தானே
    அண்ணன் என்றும் வாழும் எல்லை
    ஒன்றாய் காணும் வானம் என்றும்
    ரெண்டாய் மாற நியாயம் இல்லை
    கண்ணோடுதான் உன் வண்ணம்
    நெஞ்சோடுதான் உன் எண்ணம்
    முன்னேறு நீ மேன்மேலும்
    என்னாசைகள் கை கூடும்
    இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தென் மதுரை வைகை நதி

    நெஞ்சில் என்னை நாளும் வைத்து
    கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
    மஞ்சள் மாலை மேளம் யாவும்
    கண்ணில் காணும் காலம் இன்று
    பூவைச் சூடி பொட்டும் வைக்க
    மாமன் உண்டு மானே மானே
    உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
    கள்வன் இங்கு நானே நானே
    உன்னோடுதான் என் ஜீவன்
    ஒன்றாக்கினான் நம் தேவன்
    நீதானம்மா என் தாரம்
    மாறாதம்மா எந்நாளும்
    இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தேய்கின்றது
    தேய்கின்றது பொன் மாலை நிலா
    தேயாதது நம் ஆசை நிலா
    இது வானம் போலே வாழும் பாசம்
    தென் மதுரை வைகை நதி
    தினம் பாடும் தமிழ் பாட்டு
    தென் மதுரை வைகை நதி

    Share