Blog

  • கண்ணீர் அஞ்சலி!

    -ஆர். எஸ். கலா

    வானம் மேலே ஆழ்கடல் கீழே
    இரண்டுக்கும் இடையில்
    நடந்தவை என்ன? யாரிடம்
    கேட்பது யார் பதில் உரைப்பது
    விண்ணில் பறந்து மண்ணில்
    எங்கே விழுந்த விமானமே?                             airplane

    ஓர்  ஆண்டு பூர்த்தி அடைந்தும்
    சென்ற உயிரின் உடல்
    கண்டதில்லை எட்டாத தொலைவில்
    தொலைத்து விட்டுக்  கொட்டும்
    அருவியாகக் கண்ணீர் சிந்துகின்றது
    உறவு மறவாமலே!

    பிறப்பின் அடையாளம் உண்டு
    இறப்பின் அடையாளம் எங்கே?
    உயிர் துறந்த  நாள் என்று என
    அறிய நாமும் போவதோ எங்கே?

    இன்முகத்துடன்  கை அசைத்து
    இன்பமாக விடை பெற்றுச் சென்ற
    உடலின் ஒரு அங்கம்
    கூடக் கண்டதில்லை!

    தங்கமே
    செல்லமே என்று கதறியும்
    ஆனது ஒன்றும் இல்லை
    இன்று வரை இது என்ன
    கொடுமை? இறைவா உமக்கு
    இதுவும் ஓர் விளையாட்டா? கூறி
    விடு விடை விரைவாக!

    சுமைதாங்க முடியாமல் வாடித்
    தாகத்தில் நீர் அருந்த ஆழ்
    கடலில் இறக்கி மறைந்தாயோ?
    மேலே மேலே உயரும் இலட்சியத்தில்
    நட்சத்திரத்துடன் போட்டி போட்டு
    மேகத்திலே மோதி மறைந்தாயே
    எம்.எச்.370 விமானமே?!

    உன் உருஅறையை நம்பி ஆயிரம்
    ஆயிரம் கனவுகளுடனும்
    ஆசைகளுடனும் உள்ளே நுழைந்து
    அமர்ந்த உயிர்கள் அனைத்தையும்
    அடையாளம் அறியாதவாறு அழித்தாயே
    உலகில் மனித இனம் வாழும் வரை
    வாழும் உன் நினைவும்!

    முடிவறியா நிலையில்  இன்று வரை
    உள்ளது நிலை இது
    பயணித்து உயிர்நீத்த
    அனைத்து உயிர்களின் ஆத்மா
    சாந்தி அடைய இறைவனை
    வேண்டுவோம்   சாந்தி  சாந்தி!

     

    Share
  • பண்பாளரைப் போற்றிடுவோம்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    படைப்புகள் பல படைத்துவிட்டே
    பார்க்க ஒன்றுமறியாதார் போல்
    பாத்திறம் படைத்தோர் நிறைகுடமாய்
    பண்பு தளும்பாதிருப்பர்!

    படைப்புகள் சில படைத்ததற்கே
    பாக்களுக்கெல்லாம் அரசர்தானென்று
    பகட்டுவேடமிட்டே குறைகுடமாய்
    பண்பற்றே தளும்பிடுவர்!

    பலகனங்களைத் தோளிலும் மனதிலும் தாங்கிடுவர்
    பண்பாளர் தலைக்கனம் மட்டும் தாங்காதார்
    பண்படுத்தியே பண்ணியற்றிடுவர்-மனம்
    புண்படுத்திடப் பண்ணியற்றார் அவர்!

    பலகனங்களை நாவினில் தாங்கிடுவர்
    பண்பிலாத் தலைக்கனமதைத் தாங்கியவர்
    பண்பற்ற பண்ணினை இயற்றிடுவர்-மனம்
    புண்பட்ட நெஞ்சினை மேலும் கீறிடுவர்!

    பண்புற்ற பண்பாளரைப் போற்றிடுவோம்
    பண்பற்ற பண்பாளரல்லாதவரை ஓட்டிடுவோம்!

     

    Share
  • வீறுகொண்டு எழு!

    -திருக்குவளை மீ.லதா

    வீரம் விளைந்த மண்ணு!
    விவேகம் நிறைந்த மண்ணு!
    பெண்மையைப் போற்றும் மண்ணு!       indian woman

    புலி விரட்டிய பெண்டிரும்
    போர் புரிந்த  பெண்டிரும்
    போதனை செய்த பெண்டிரும்
    வாழ்ந்த வாழ்க்கை வரலாறாய்!
    இன்றோ வானம் வசப்பட்டும்!
    போர்க்களமான வாழ்க்கை??

    சூறையாடப்படும் கற்பும்
    சுருக்கிட முடியும் கயிறுமாக
    வாசல் தாண்டி வந்தால்
    வாழும் வாழ்க்கை கேள்விக்குறியாய்
    மடிந்து போகும் பெண்ணே!
    விடியல் நோக்கி நடைபயிலேன்!
    குறுகிப் போகாதே  கண்ணே!
    நிமிர்ந்து நின்று பதிலுரையேன்!

    உலகம்  உனக்கும் குடை விரிக்கட்டும்!
    மலர்தூவி வாழ்த்துப்பா பாடட்டும்!
    எழுத்தாணி எழுதட்டும் ஏட்டிலே உன் புகழை!

     

    Share
  • வாழும் வழி!

    -கலாம் சேக் அப்துல் காதிர்

    உண்ணுவதில் வேண்டுமய்யா கட்டுப் பாடு
    உணராதோர் உடல்நலத்தில் தட்டுப் பாடு
    எண்ணுவதில் தீமைகளை வெட்டிப் போடு
    இதயமதில் அன்பாலே கட்டிப் போடு
    கண்ணெனவே செயல்களையும் நோட்டம் போடு
    கண்டிப்பாய் நடைப்பயிற்சி எட்டுப் போடு
    பண்ணுகின்ற காசுகளில் திட்டம் போடு
    பக்குவமாய்ச் செலவுசெய்யக் கட்டம் போடு!

    Share
  • லொட்டோ

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    lotto-logo-ballsஎமது தொழிற்சாலை முகப்பில் ராஜாவின் பிரேதம் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது.

    ராஜா நன்றாக வேலை செய்வான். வேலை இடத்தில் பல பேரைச் சேர்த்து ‘பவர் போல்’ போடுவான். ஆரம்பத்தில் இலக்கங்களைச் சரி பார்த்த நண்பர்கள், காலப் போக்கில் அவனில் நம்பிக்கை வைத்து அவனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

    மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் வேலை மாறி தொலைதூரம் போனான். அங்கே மாளிகை கட்டினான். இன்று கொலையுண்டு கிடக்கின்றான்.

    Share
  • அழகான மண்குதிரை …

    –நிர்மலா ராகவன்.

    நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும்.

    அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்?

    அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது…

    ‘நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் அதை எதிர்பார்க்க?’ அந்தராத்மா இடித்துரைத்தது.

    பழகின தெருக்களிடையே பஸ் நுழைந்து சென்றபோது, இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடம்தான். கண் அனிச்சையாகக் கடிகாரத்தில் பதிய, அடிவாயில் கசந்தது.

    ‘முதலில் இந்தக் கடிகாரத்தைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும்!’

    அந்த பாழாய்ப்போனவன் கொடுத்த பல பரிசுகளுள் ஒன்று அது. பாவி, புகழ்ச்சியையும், பரிசுப் பொருட்களையும்கொண்டு, எந்தப் பெண்ணையும் வீழ்த்திவிடலாம் என்று நன்கு உணர்ந்தவன்.

    “உன் அழகுக்கு அழகு சாதனங்களே வேண்டாம். இருந்தாலும், கடையிலே இதைப் பாக்கறப்போ, ஒனக்குக் குடுக்கணும்னு தோணிச்சு!” அரைகுறை மலாயில் சொல்லிவிட்டு, லிப்ஸ்டிக், முத்துபதித்த வளையல் இப்படி ஏதாவது கொடுப்பான் அவன்.

    இவ்வளவு அன்பானவர் இப்படி, பங்களா தேஷிலிருந்து நாடு விட்டு நாடு வந்து, இரவு பகலெனப் பாராது உழைக்கிறாரே என்று நந்தினிக்குப் பச்சாதாபம் மேலிடும்.

    ‘இவருடைய அழகுக்குச் சினிமா நடிகராகி இருக்கவேண்டும். எல்லாப் பெண்களும் இவருடைய காலடியில் கிடக்க மாட்டார்களா!’ தன் எண்ணத்தை அவனிடம் தெரிவித்தாள், ஒரு முறை.

    வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அந்தப் பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது நந்தா. ஒன்னைமாதிரி அழகான ஒரே பொண்ணோட அன்புதான் எனக்குப் பெரிசு. சில சமயம் நினைச்சுப்பேன், ஒன்னைச் சந்திக்கணும் என்கிறதுக்காகவே பிழைப்பைத் தேடற சாக்கில இப்படி வேற நாட்டுக்கு விதி நம்மை அனுப்பி இருக்குன்னு!”

    நந்தினிக்குப் பெருமையாக இருந்தது. தனக்கு எந்தக் காலத்திலும், எவரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது கிடையாது என்று பட்டது அவளுக்கு. அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது, அப்பாதான் ஓயாது அவளது அழகைப் புகழ்ந்துகொண்டு இருப்பார். அதனால் உண்டான கர்வத்தில் அவளுக்குப் படிப்பில் சுவாரசியம் இல்லாது போயிற்று. பிற பெண்களிடமும் அலட்சியம்.

    அப்பா அகாலமாகப் போனபோதும் அவர் அறியாமல் விதைத்த விஷக்கன்று வாடவில்லை. ‘நான் அழகி!’ என்று தலைநிமிர்ந்து நடப்பாள். பார்ப்பவர்கள் எல்லோருமே சொல்லிவைத்தாற்போல் ஒரு முறைக்கு இரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தது நந்தினி தன்னைப்பற்றிக் கொண்டிருந்த கணிப்பை ருசுப்படுத்தியது போலிருந்தது.

    யாருடனும் ஒத்துப்போகாமல், என்னமோ மகாராணியாகத் தன்னைப் பாவித்து நடந்துகொள்ளும் மகளின் போக்கு அவளுடைய தாய்க்குக் கவலையை ஊட்டியது. அப்பா இல்லாத பெண் என்று அருமையாகவேறு வளர்த்துவிட்டோமே! இவளுடன் யாரால் ஒத்துப்போக முடியும்?

    பலவாறாக யோசித்தவள், “ஒனக்கும், கோபாலுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடணும்னு அத்தை ஆசைப்படறாங்க, நந்தினி. ஒனக்கும் வர்ற பத்தாவது மாசம் பதினேழு முடியப்போகுது,” என்று மெள்ள ஆரம்பித்தாள்.

    நந்தினி சிரித்தாள் — சினிமாவில் வில்லன் சிரிப்பானே, அந்தமாதிரி.

    “என்னடி?” என்றாள் அம்மா, அதிர்ந்துபோய்.

    “பின்னே என்னம்மா? ஆசைக்கும் ஒரு அளவு வேணும். எவ்வளவு சுயநலம் இருந்தா, அந்தக் கறுப்பனை என் தலையில கட்டலாம்னு யோசிச்சிருப்பாங்க அவங்க!”

    தாயின் முகம் வாடியது. “அப்படியெல்லாம் தூக்கி எறிஞ்சு பேசாதே, நந்தினி. அப்பா இருக்கிறபோதே சொல்லிட்டு இருந்ததுதானே! ஒறவும் விட்டுப் போகாது, அப்புறம்… கோபாலும் தங்கமான பிள்ளை!”

    நந்தினி மீண்டும் சிரித்தாள், இளக்காரமாக. “ஏதோ, நிறம்தான் தங்கம் மாதிரி இல்ல. குணமாவது தங்கமா இருந்தா சரி!”

    “ஆனாலும் ஒனக்கு இவ்வளவு மண்டைக்கனம் கூடாது!” அம்மாவின் அதட்டல் அவளைப் பாதிக்கவில்லை.

    “அம்மா! நான் எனக்குப் பிடிச்சவரா, அழகானவரா ஒருத்தரோட பழகிப் பாத்துட்டு, அப்புறமாத்தான் பண்ணிப்பேன். என்னோடது காதல் கல்யாணமாத்தான் இருக்கும். ஒருத்தரோட சேர்ந்து வெளியே போனா, பெருமையா இருக்க வேணாம்?”என்று இரைந்தாள்.

    அவளையும் அறியாது, அத்தான் கோபாலையும், அவளுடைய தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கிரனையும் ஒப்பிட்டுப் பார்த்தது அவள் மனம். அந்தக் கிரனுடன் இணைந்து நடந்தால் எப்படி இருக்கும்! ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

    “ஓயாம வீடியோ பாத்தா இப்படித்தான்! காதல், கீதலுன்னு பினாத்திக்கிட்டு, கண்டவனை இழுத்துக்கிட்டு வராதே,” என்று அலுத்துக்கொள்ளத்தான் முடிந்தது பெற்றவளால்.

    அதன்பின், தற்செயலாகச் சந்திப்பதுபோல், கிரனைக் கேண்டீனிலும், மாடிப்படிகளிலும் பார்த்துப் பேச முற்பட்டாள் நந்தினி. அவனிடம் மணி கேட்டாள். அவனுடைய மலாயைப் பாராட்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே, அவனது கவனம் அவள்பால் திரும்பியது. முதலில் சற்றுப் பயந்தவனைப்போல் இருந்தவன், சிரிக்கச் சிரிக்கப் பேசினான்.

    பல நூறு பெண்கள் வேலைபார்க்கையில், அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதியாது, தன்னை நாடுகிறார் இந்த அழகர் என்ற நினைப்பில், நந்தினியின் தலை மேலும் அண்ணாந்தது.

    அவனுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவுக்குப் போனாள். கதாநாயகியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, அவனது பரந்த தோளில் சாய்ந்தபடி நடந்தாள். சிறுசிறு பரிசுகளால் அவளை மேலும் திணற அடித்தான் அவன்.

    “ஒனக்கு என்னென்னமோ குடுக்கணும்னு ஆசை அடிச்சிக்குது. ஆனா, நான் ஏழை. இருந்தாலும், ‘ஓவர்டைம்’ பண்ணி வந்த காசில ஆசை ஆசையா இதை வாங்கிட்டு வந்தேன்!” என்று வசனம் பேசியபடி, ஒரு நாள் அந்தக் கடிகாரத்தை அவன் அவளுக்கு அணிவித்தபோது, என்னமோ அவன் கையால் தாலியே கட்டிக்கொண்டதுபோல் பூரித்துப்போனாள் நந்தினி. தனக்காகவே தூக்கம் முழித்து, உடலை வருத்தி வேலை பார்த்திருக்கிறார்! இந்த அன்புக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாமே என்று நெகிழ்ந்துபோனாள்.

    காய் கனிந்ததைப் புரிந்து கொண்டவனாக, “ரெண்டு நாள் நாம்ப ரெண்டு பேரும் இப்படியே ஜாலியா, எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா, டார்லிங்?” என்று கொஞ்சினான். அவள் யோசிப்பதற்கே இடம் கொடாது, இறுக அணைத்தபடி நடந்தபோது, நந்தினி இவ்வுலகில் இல்லை.

    கிரனின் மடியில் உட்காராத குறையாகச் சாய்ந்தபடி அவள் அயலூர் போகும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோதுதான் அது நடந்தது.

    எங்கிருந்தோ வந்தான் கோபால். நேரே கிரனுக்கருகில் வந்தவன், யோசியாமல் அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். எதுவும் பேசாது, நந்தினியின் கையைப் பிடித்து இழுத்தபடி நடந்தான்.

    தன்னை மீட்கக் காதலர் ஓடி வருவார் என்று எதிர்பார்த்த நந்தினிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    வீட்டுக்குள் நுழைந்ததுமே, “நீ இன்னும் மைனர். அதனால அந்த ரௌடியைப் போலீசில பிடிச்சுக் குடுக்க என்னால முடியும். ஆனா, ஒனக்கும் சேர்த்துத்தான் கெட்ட பேரு வரும். அதான் அவனை விடறேன்,” என்று அதட்டியவன், “இனிமே நீ வேலைக்குப் போக வேணாம். ஒழுங்கா, வீட்டில இரு!” என்றான் கண்டிப்புடன்.

    “அதைச் சொல்ல நீ யாரு?” என்று சீறினாள் நந்தினி.

    அவன் எதுவும் பேசவில்லை. அதுவரை பேசியதே அதிகம் என்று நினைத்தவன்போல, வெளியே நடந்தான்.

    உள்ளேயிருந்து வந்த அம்மாதான் அவளுடைய கேள்விக்குப் பதிலளித்தாள். “மரியாதையாப் பேசுடி. ஒன் குணம் தெரிஞ்சும், பெரிய மனசோட, ஒன்னைக் கட்டிக்க ‘சரி’ன்னிருக்கான் கோபால்!”

    “அம்மா!” குரலில் அதிர்ச்சியைவிட அதட்டலே அதிகமிருந்தது.

    “இன்னும் நாலு நாளில கல்யாணம், கோயிலிலே வெச்சு. கண்ட பயலோட நீ… ஒன்னை இப்படியே விட்டா, நான் விஷத்தைத்தான் தேடிப் போகணும்!”

    “நான் கிரனைத்தான் கட்டிப்பேன்!”

    “புரியாம உளறாதே நந்தினி. அவன் வெளிநாட்டுக்காரன். காண்டிராக்டிலே வந்திருக்கிறவன். அப்படியே பேருக்கு ஒன்னைக் கட்டிக்கிட்டாலும், கையில புள்ளையைக் குடுத்தப்புறம், ஒன்னை ‘அம்போ’ன்னு விட்டுட்டுத் திரும்பப் போயிடுவான். ஒன்னையுமா கூட்டிட்டுப் போவான்? அங்கே அவனே சோத்துக்கு வழி இல்லாமதானே இங்க வந்திருக்கான்! “

    “எனக்காக அவர் இங்கேயே இருப்பாரு!” என்றவளின் சுருதி இறங்கிப் போயிருந்தது.

    “அடம் பிடிக்காதே, நந்தினி. ஒன்னை அழ வைக்கணும்னு எனக்குமட்டும் ஆசையா? இந்த நாட்டு ஆம்பளையைக் கட்டிக்கற பொண்ணு அயல்நாடா இருந்தா, அவ இங்கேயே தங்கலாம். ஆனா, நீ ஒருத்தனைக் கட்டிக்கிட்டா, அவனால அது முடியாது. அவன் திரும்பிப் போய்த்தான் ஆகணும்”.

    உண்மை பயங்கரமாக இருந்தது. சொற்ப வருடங்களே கிரனுடன் வாழ்ந்துவிட்டு, பின் அவனுடைய குழந்தைகளுடன் திண்டாடிக்கொண்டு, வாழாவெட்டியாக, எல்லாருடைய இளக்காரத்துக்கும் ஆளாக வேண்டுமா அவள்?

    ஆயினும், கிரன் இல்லாத வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலையில், அழுகை பீறிட்டது. அவருக்கு மட்டும் இதெல்லாம் முன்பே தெரியாமல் இருந்திருக்குமா? பின் ஏன் தன்னிடம் இவ்வளவுதூரம் பழகி, தன்னைப் பைத்தியமாக அடிக்கவேண்டும்?

    அடுத்த சில தினங்கள் அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து, ஓயாது அழுதாள். இடையிடையே யோசித்தாள். அம்மா அவளுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறார்கள் என்று விளங்கியது.

    மண் குதிரை அழகாக இருக்கலாம். அதற்காக, அதை நம்பி ஆற்றில் இறங்குவார்களா யாராவது?

    வெறும் அழகுக்காகத் தன்னைப் பலியிட்டுக்கொள்வது அபாயகரமானது, அறிவீனம் என்ற முடிவுக்கு வந்தாள். அந்த முடிவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை.

    பலியாடுபோல் திருமணப் பந்தலிலே கோபாலினருகே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. கடைசியில், தனக்குக் கொடுத்துவைத்தது இந்தக் கறுப்பருடன் சேர்ந்த வாழ்வுதான் என்ற எண்ணம் உறைக்கையில், துக்கம் பொங்கியது.

    அன்றிரவு.

    “நீ என்னென்னமோ நினைச்சு கனவு கண்டிருப்பே! என்னால எல்லாம் பாழாயிடுச்சு, இல்ல?” என்ற புதுக்கணவனின் தொனி குத்தலா அல்லது கரிசனமா என்று அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும், கோபால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தனியறையைவிட்டு வெளியேறி, சோபாவில் படுத்துக்கொண்டபோது, நந்தினிக்கு அவன் நாலு வார்த்தை அதட்டியிருந்தால் தேவலை என்று தோன்றியது.

    கோபாலைப் பொறுத்தவரை, குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துகொண்டான். அவள் கேட்குமுன், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிப்போட்டான். அதே சமயம், அவள் ஒருத்தி இருப்பதைக்கூட பொருட்படுத்தாதவனாக நடந்துகொண்டான்.

    இப்படி ஒரு உம்மணாமூஞ்சியுடன் வாழ்நாள் பூராவும் எப்படித்தான் தள்ளப்போகிறோமோ என்ற பீதி நந்தினியைப் பிடித்துக்கொண்டது. மௌனம் சாதித்தே தன்னைக் கொல்வதற்குக் கல்யாணமே செய்து கொண்டிருக்க வேண்டாமே என்று ஆத்திரப்பட்டாள். ஆனால், வாய்விட்டு கணவனை எதுவும் கேட்கவும் அவளுடைய சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை.

    நந்தினிக்கு அவள் தாயிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

    “தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு…,” என்று இழுத்தவளைப் பாராமலேயே, “நாளைக் காலையில தயாரா இரு. பஸ்ஸிலே ஏத்தி விடறேன்!” என்று விறைப்பாகப் பதிலளித்தான் கோபால்.

    ‘ஒங்களையும்தான் அழைச்சிருக்காங்க!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள்.

    அவர்களுக்குத் தலைதீபாவளி. இதுகூடவா தெரியாது அவனுக்கு?

    “என்ன நந்தினி? இளைச்சு, கறுத்துப் போயிட்டியே! ஏதேனும் ‘விசேஷமா’?” பக்கத்து வீட்டு சரசா கண்ணைச் சிமிட்டியபடி கேட்டபோது, நந்தினிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.

    இருவரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தாம். அப்போதெல்லாம் சரசாவுடன் முகம்கொடுத்துக்கூடப் பேசமாட்டாள் நந்தினி, தன் அழகுக்கு சர்வசாதாரணமாக இருந்தவளுடன் என்ன பேச்சு என்று இறுமாந்திருந்தவளாக. ஆனால் அவளோ, அதையெல்லாம் மறந்துவிட்டு, தோழமையுடன் வந்து குசலம் விசாரிக்கிறாள்!

    ‘அழகோ, அழகில்லையோ, எல்லாரும் ஒரு நாள் வளர்ந்து ஆளாகத்தான் போறோம். கடைசியிலே பிடி சாம்பலாத்தான் போகப்போறோம்’. அவளுக்குப் புத்தி புகட்டவென்று அம்மா எப்போதோ சொன்னது காலங்கடந்து இப்போது புரிந்தது.

    யார் தன் அழகை ரசித்துப் பெருமைப்பட வேண்டுமோ, அவரே தன் முகத்தைப் பார்க்கக்கூட வெறுத்து விலகுகிறார்! நந்தினிக்குக் கண்ணீர் ததும்பியது.

    அதற்குத்தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்ட தோழி, ” இன்னுமா அந்த வெளிநாட்டானை மறக்கலே, நீ? விட்டுத்தள்ளுவியா!” என்று சமாதானப்படுத்திவிட்டு, “நம்பகூட வேலை செய்தாளே, குண்டு சுசீலா, அவளை நீ போன கையோட செட்டப் செய்துட்டான்,” என்று தெரிவித்தாள்.

    “யாரு?” தெரிந்தும் தெரியாதவள்போல் கேட்டாள் நந்தினி.

    “எல்லாம் அந்தத் தடியன் கிரன்தான். நாங்க அவளுக்கு எவ்வளவோ புத்தி சொல்லிப்பாத்தோமே! ‘ஒங்களுக்குப் பொறாமை!’ன்னுட்டா. இப்ப வயத்திலே ஒண்ணு. அந்தப் பழிகாரன் அப்புறம் இங்க ஏன் இருக்கான்?”

    சரசா விவரித்துக்கொண்டே போனபோது, தான் எப்படிப்பட்ட கண்டத்திலிருந்து தப்பினோம் என்று அதிர்ந்தாள் நந்தினி. அன்று அத்தான் மட்டும் அவனை அடித்து, தன்னை இழுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால், தானும் இப்படி… ஐயோ!

    மற்றவள் தன்பாட்டில், “ஒன் கல்யாணத்திலே நாங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டோம், தெரியுமா? ‘சொந்தம்கிறதாலே இப்படிக் கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாதவருக்கு இவளைக் குடுக்கறாங்களே! இவ கலரென்ன, அவர்…” என்று சொல்லிக்கொண்டேபோனபோது, ஆத்திரத்துடன் இடைமறித்து, “அட்டையைப் பாத்த உடனே, புஸ்தகத்தோட உள்ளே இருக்கிறது என்னன்னு தெரியுமா? வெளித்தோலைப் பாத்து ஆளை எடை போடக்கூடாது!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

    அத்தான் தன்னை எப்பேற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்! இது புரியாமல், அவர்மேல் ஆத்திரப்பட்டோமே! எவனுடனோ கையைக் கோர்த்துக்கொண்டு தான் சினிமா, கடைத்தெரு என்று சுற்றியதை அறியாதவரில்லை. அப்படி இருக்கையில், வேறு யார் தன்னை மணக்க முன்வந்திருப்பார்கள்?

    இனியும் ஏன் வரட்டுக் கௌரவம் என்று ஏதோ இடித்துரைத்தது. உடனே அத்தானை போனில் கூப்பிடவேண்டும். ‘மாப்பிள்ளை வராம என்ன தலைதீபாவளி?’ன்னு அம்மா சத்தம் போடறாங்க. அடுத்த பஸ்ஸிலேயே வாங்க’என்று.

    ‘அம்மாதானே கூப்பிடறாங்க? நீ கூப்பிடலியே!’ என்று சீண்டுவாரோ? அந்தக் கற்பனையிலேயே நந்தினியின் இதழ்க்கடையில் புன்முறுவல் அரும்பியது.

    இக்கதை  வெளிவந்த தளங்கள்: சூரியன், வலைத்தமிழ்

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    அன்புக்கு ஏது வயது எனத் தம் குடும்ப விளக்கிற்கு இனிப்பூட்டும் கணவர், களிப்புடன் அதை ஏற்கும் இல்லத்தரசி, குதூகலத்தில் திளைக்கும் செல்லப் பிள்ளைகள்… என ஒரு கொண்டாட்ட மனநிலையை அழகாகப் படம் பிடித்த நித்தி ஆனந்துக்கு முதலில் பாராட்டுகள். வண்ணங்களின் கலவையும் உணர்வுகளின் வெளிப்பாடும் இந்தக் காட்சியில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

    16483711086_5e9d5432f1_z

    இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள். கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே பட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே பாய்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே ‘பிட்ச்’ ஆகிறது என்று பார்க்க முடியும்.

    மாறா உன் புன்னகையிலே
    மாறியிருந்தது என் உலகம்

    எனச் சங்கர் சுப்ரமணியனும்

    வெயிலின் வனாந்தரங்களை
    ஓய்விலா வாழ்வின் போழ்தை
    நிலாவின் குளிர்மை தந்து
    குலவி இருந்தவளே

    எனப் புனிதா கணேசனும்

    முகத்தில் விழுந்த சுருக்கங்கள்
    முடிந்து வைத்துள்ளது காலங்காலமாய்
    பகிர்ந்து கொண்ட காதலை
    பலங்கொண்ட ஆலம் விழுதுகளென!

    எனத் தமிழ்முகிலும்

    இருவர் மனமும் ஒன்றானால் எமது முதுமை இளசாகும்
    உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய்!

    என ஜெயராமசர்மாவும்

    முற்றிய வாழ்வின்
    முதன்மை வசந்த முகவரி
    சூழ்ந்த சுகவரி சுந்தரம் காட்ட

    என மெய்யன் நடராஜும்

    கணப்பொழுதும் மனதால் நீங்காத
    கானப் பறவைகளின் இல்லற பாடல்

    என நாகினியும் தீட்டிய வரிகளை ரசித்து மகிழ்ந்தேன்.

    இந்த வாய்ப்பில் எஸ்.பழனிச்சாமி ஒரு சிறுகதை எழுத, மீ.லதா, ஒரு நாவல் சுருக்கத்தையே எழுதிவிட்டார். செந்திலகம் என்ற ஜெயபாரதனின் சொல், செம் திலகம், செந்தில் அகம் என்ற இரு பொருட்சுவை தருகின்றது. நிரஞ்சன் பாரதி, அணிச்சல் (Cake) என்ற சொல்லை ஒரு படைப்பினுள் முதன் முதலாகப் பயன்படுத்தியுள்ளார்.

    சிற்சில சொற்கள், வரிகள் என்ற அளவில் பலவும் சிறப்புற இருந்தாலும், முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிறபோது, இப்னு ஹம்துன் எழுதிய இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    நாளும் இனிமை கூட்டியதும்
    நாவில் இனிப்பை ஊட்டியதும்
    காலம் முழுதும் இனித்திருக்கும்
    கடவுள் அருளாய் மணத்திருக்கும்.

    வாழும் பெண்ணின் உள்ளத்தில்
    வசந்தம் தன்னை மணந்தவரே.
    தோழன் போல துணைநிற்க
    துயரக் காற்றைக் கண்டதில்லை.

    பேரன் பேத்தி எடுத்தாலும்
    பெயரா உறவும் நமதன்றோ.
    வேர்கள் நாமே பரஸ்பரமே
    வெற்றி கண்டோம் வாழ்வினிலே.

    அன்பைத் தந்தாய் அனுதினமும்
    அதிலே திகட்டல் ஏதுமில்லை.
    உன்னை அன்றி வேறேதும்
    உவந்த இனிப்பும் எனக்கிலையே.

    இன்பம் வெற்றி உன்னாலே
    இதயம் கண்டது தன்னாலே.
    என்றும் காப்பான் இறையவனும்
    இந்த வாழ்வின் இனிமையினை.

    நன்றி சொல்லி வாழ்ந்திருப்போம்
    நல்ல வாழ்க்கை அதற்கென்றே.
    நின்று பார்க்கும் பிள்ளைகளே
    நேசப் பாடம் படிப்பீரே!

    இதில் ‘உன்னை அன்றி வேறேதும் உவந்த இனிப்பும் எனக்கிலையே’ என்று அழகுற உணர்ந்துரைத்த விதம் நன்று. இந்தக் கவிதையின் சிறப்பைப் பாராட்டி, இப்னு ஹம்துன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    மங்கல நாயகி முகமெங்கும்
    ஆயிரம் நிலவின் நட்சத்திரம்

    பொட்டும் பட்டும் பாட்டிசைக்க
    பளிச்சிடும் புன்னகைப் பெண்சித்திரம்

    அனுபவ வலிகள் மறைந்த
    ஆனந்த சுமைகளின் முகவரிகள்

    கொண்டவர் அருகிருக்க கோலமகள்
    வாரிசுகள் ஆர்ப்பரித்து அகமகிழ

    தொலைந்து கடந்த பிறந்தகாலம்
    நினைவில் நழுவிய வேளையிலும்

    குழந்தைமனம் மாறாக் குதூகலம்

    என வசீகரமாக வர்ணித்த ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    இந்த இரு கவிதைகளில் எதற்கு முதலிடம் எனக் கடுமையான போட்டி இருந்தது. ஏனெனில் ஜெயஸ்ரீயின் தொடக்கமும் இப்னுவின் முடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தன. எனினும் ஜெயஸ்ரீயின் கவிதை, பெரும்பாலும் காட்சிக்கு உள்ளே மட்டும் இருக்க, இப்னுவின் கவிதை, அதையும் கடந்து பயணித்தது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கும் அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கும் அழைத்துச் செல்வது, சிறந்த முறை. எனவே, இப்னு சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.

    இப்னு ஹம்துன், ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

     

     Ganymede -1



    பூதக்கோள் வியாழனின் துணைக்கோள்
    கானிமிடுவில்  ஓர் அடிக்கடல்,
    நீர்மயமாய் உள்ளது சூடாய் !
    வேறோர் துணைக்கோளில் சீறியெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள்  !
    சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும், மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டுகள் உருகித்
    தென் துருவத்தில் வெப்பத்தால்
    திரவமானது எப்படி ?
    ஊற்றுகள் வெடித்தெழ
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை நீர்மயம் பூதக்கோள் வியாழனின்
    சந்திரன்களில் !  புரியாதது
    பூமியில் நீர் சேர்ந்த முறை  !

    ++++++++++++++

    Ganymede Polar Aurorae

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cun34JQPfxM

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OLLbaoYJDuo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PKc6CaI9ZcQ

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2YVb0EmpgcU

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=En_Fe7QY-3E

    ++++++++++++++++++++++

    Hubble Telescope -1

    கானிமீடு [Ganymede] அடிக்கடலின் ஆழம் 200 மைலுக்கு [330. கி.மீ.] மேலிருக்காது. அதற்கு மேலாக இருந்தால் எங்கள் கணிப்புக்கு ஒத்து வராது.  எங்கள் கணிப்பு இலக்கங்கள் [Data] ஒரு சிறிதளவு [5 gram/liter] உப்புள்ள, 60 மைல் [100 கி.மீ] ஆழம் உள்ள ஓர் கடலுக்கு ஒத்து வருகிறது.

    ஜோவசிம் சௌர் [தலைமை விஞ்ஞானி, கொலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி]

    கானிமீடு அடிக்கடல் இருப்புக்கு அழுத்தமான சான்றை ஹப்பிள் தொலை நோக்கித் தகவல் இப்போது தந்துள்ளது.  காலிலியோ விண்வெளிக் கப்பல் பெருங்கடல் இருப்பை 2000 இல் அறிவித்தாலும், தற்போது ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த துருவ நிறத் தோரணங்கள் [Aurora] கானிமீடு ஒரு காந்தக் கோளம் என்றும் காட்டியுள்ளது.

    ஹெய்தி ஹாம்மல் [வானியல் ஆராய்ச்சி பல்கலைக் கழகம், வாஷிங்டன். D.C.]

    Image Gallery

    சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய சந்திரன் கானிமீடு [Ganymede] ஒரு பெரும் அடிக்கடலைக் கொண்டுள்ளது.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி தற்போது [மார்ச்சு 12, 2015] அனுப்பி யுள்ள தகவல் மூலம், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமீடுவின் இரண்டு துருவங்களில் நடனமிடும் ஒளிநிறத் தோரணங்களைக் [Aurorae] காண முடிகிறது. 1997 இல் பூதக்கோள் வியாழனைச் சுற்றத் தொடங்கிய காலிலியோ விண்கப்பல் அதன் துணைக்கோள் கானிமீடுவில் அடித்தளக் கடலிருப்பை அறிவித்தாலும், தற்போதைய ஹப்பிள் தகவல் துருவத் தோரணங்களே, அடிக்கடல் இருப்புக்கு அழுத்தமான சான்று அளித்தது.  அந்தக் கடல் நீர் இருப்பே கானிமீடு அடிக்கடலில் ஊர்ந்திடும் உயிரின இம்மிகளைப் பற்றி ஊகிக்க இடம் தருகிறது.  இப்போது ஐரோப்பிய விண்வெளிப் பேரகம் [European Space Agency ESA ] கானிமீடு துணைக்கோளைச் சுற்றி வந்து ஆராய சுயயியக்கி “ஜூஸ்” விண்ணுளவிக் கப்பலை [Robotic JUICE Probe] [JUICE – Jupiter Icy Moon Explorer] அனுப்பப் போகிறது. அது 2030 இல் பூதக்கோள் வியாழனைச் சுற்றத் துவங்கி, துணைக்கோள்களையும் ஆராயும்.

    ESA JUICE Explorer

    சூரிய மண்டலத் துணைக்கோள்களில் மிகப் பெரிதான கானிமீடு ஒன்று தான் தனித்துவ முறையில் ஒரு காந்தக் கோளாகத் தெரிய வருகிறது.  அதன் விட்டம் சுமார் 3000 மைல் [5300 கி.மீ.].  ஹப்பிள் விண்ணோக்கி முதன்முதல் துணைக்கோளின் துருவப் பகுதிகளில் ஓவியம் போன்ற ஒளித் தோரணங்களைக் [Aurorae] காட்டியுள்ளது.  கானிமீடுவின் காந்த கோளம் விண்வெளித் துகள்களை ஈர்த்து உண்டாக்கிய நாட்டியத் தோரணங்களைப் படம் எடுத்துள்ளது.  கணினிப் போலி மாடல்கள் மூலமே கானிமீடுவின் உட்தளக் கடல் இருப்பு ஊகிக்கப் பட்டுள்ளது. பூதக்கோள் வியாழனின் காந்த தளமே கானிமீடுவின் அடிக்கடல் உப்பு நீரில் துவித்துவ காந்தக் களத்தை [Secondary Magnetic Field] உண்டாக்கி, வியாழக் கோளோடு சமப்படுத்திக் கொள்கிறது.  கானிமீடு அடிக்கடல் நீரிருப்பு உயிரின இம்மிகள் உலவ வாய்ப்பு அளிப்பதால் விஞ்ஞானி களிடையே பேரார்வம் உண்டாக்கி யுள்ளது.

    Ganymede Sea water

     

    பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீரெழுச்சி ஊற்றுகள்

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன் முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்தி லிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது.  கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது  மாபெரும் கண்டுபிடிப்பு.  இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்..

    ஸிந்தியா ஃபிலிப்ஸ் [SETI Institute in Mountain View, California] [December 12, 2013]

    Relative Sizes

     

    முதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன் முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது.   அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம்.

    Enceladus Erupts

    Jupiter and Europa

    1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது.  ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை.   இப்போது  நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது.  மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது.   இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது.   கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    முந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார்.  அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர்.

    unnamed

    பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ்.   தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி  7 மணிநேரம்  நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.

    ஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம்.   தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO]  திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும்.   தரைக்கடியில் நீர் இருந்தால்,  அடியில் தோண்டாமலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.

    fig-1c-europa-internal-structure

    சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    “சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டியுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்திலிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. ”

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    Fig 1B Galileo Spaceship Launch

    2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானிகளுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக்கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால்,  பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன:  நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம்.   மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது.

    Encyladus

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    fig-2-hot-giant-geysers-in-enceladus-south-pole


    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] ”

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] ”

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Cassini Space Probe -1

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.Cassini Image of Water

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-3-greenland-ice-cold-land

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    fig-1c-how-the-geyser-does-function

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.
    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக் கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?

    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]

    33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]

    34.http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html[September 13, 2013]

    35. http://www.lpi.usra.edu/education/explore/ice/background/iceSolarSystem/  [October 9, 2009]

    36. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/spectacular-water-plumes-reaching-heights-of-200-kilometers-discovered-on-europa-.html  [December 13, 2013]

    37.  http://www.newscientist.com/article/dn24743-first-water-plume-seen-firing-from-jupiter-moon-europa.html?full=true&print=true#.Ur9Kr6i_gsU  [December 12, 2013]

    38.  http://en.wikipedia.org/wiki/Galileo_(spacecraft)  [December 28, 2013]

    39.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/nasa-captures-1st-natural-color-images-of-saturn-and-organic-rich-enceladus-one-of-the-most-accessib.html  [December 30, 2013]

    40. http://www.universetoday.com/111630/ganymedes-subsurface-ocean-is-like-a-club-sandwich/   [March 1, 2015]

    41.  http://www.bbc.com/news/science-environment-31855395 [March 12, 2015]

    42. http://www.spacedaily.com/reports/Hubble_observations_suggest_underground_ocean_on_Jupiters_largest_moon_999.html  [March 16, 2015]

    43.  http://en.wikipedia.org/wiki/Ganymede_%28moon%29  [March 20, 2015]

    44. http://article.wn.com/view/2015/03/13/Ganymede_oceans_on_Jupiter_s_moon_could_have_been_home_to_al/

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [March 21, 2015]

     

    Attachments area
    Preview YouTube video Hubble finds ‘best evidence’ for Ganymede subsurface ocean

    Hubble finds ‘best evidence’ for Ganymede subsurface ocean

    Preview YouTube video Large Salty Ocean Discovered on Jupiter’s Moon Ganymede

    Large Salty Ocean Discovered on Jupiter’s Moon Ganymede

    Preview YouTube video Hubble Observations Suggest Subsurface Ocean on Jupiter’s Largest Moon Ganymede

    Hubble Observations Suggest Subsurface Ocean on Jupiter’s Largest Moon Ganymede

    Preview YouTube video Largest liquid ocean in the Solar System – Liquid Universe

    Largest liquid ocean in the Solar System – Liquid Universe

    Preview YouTube video (History Channel) The Universe: Jupiter – The Giant Planet 1080p (Space Documentary)

    (History Channel) The Universe: Jupiter – The Giant Planet 1080p (Space Documentary)
    Share
  • இனிதினிது

    அண்ணாகண்ணன்
    Annakannan

    இனிதினிதினிதினிதினிதினிதினிது
    எமதெமதெமதெமதெமதெமதெமது
    அமுதமுதமுதமுதமுதமுதமுது
    எமதெமதெமதெமதெமதெமதெமது

    சரிசரிசரியென,சரிவரும்உலகு
    சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
    வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
    அரிதரிதரிதரிதரிதரிதரிது

    சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
    சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
    சிறகினில்திசைகளையளப்பதுமழகு
    சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு

    கருவுறுதிருதருவரகவிமதுரம்
    துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
    பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
    மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்

    கடகடபடபடமடமடவெனவே
    சடசடதடதடகிடுகிடுவெனவே
    உடனுடனுடனுடனுடனுடனுடனே
    முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    யுகாதி தின நல்வாழ்த்துகள்!

    crazy

    ”சுகாதிதுக் கங்களால் சூழ்ந்த உலகில்,
    தகாது தவிர்த்து தெலுங்கு, -யுகாதியில்,
    காமதேனு கண்ணனே காளையென் நெஞ்சடக்க,
    சாமதான பேததண்டம் செய்’’….கிரேசி மோகன்….

    Share
  • அவன், அது, ஆத்மா (4)

    மீ விசுவநாதன்

    அத்தியாயம் : நான்கு

    தாத்தா பாட்டி உறவு

    நன்றி:கே.வி. அன்னபூர்ணா
    நன்றி:கே.வி. அன்னபூர்ணா

    அவன் வாழ்ந்த சூழல் மிகவும் அன்பு மயமாக இருந்தது. அவன் , அவனுக்குத் தாய்வழித் தாத்தாவை “மாமாத் தாத்தா” என்று தான் அழைப்பான். பாட்டியை “மாமாம்மை”, அதாவது மாமாவின் அம்மா என்றும் , தந்தைவழித் தாத்தாவை , அவர் செங்கோட்டையில் வேலை செய்து வந்ததால் “செங்கோட்டைத் தாத்தா” என்றும், தந்தை வழிப் பாட்டியை “பெரியம்மா” என்றும் அழைப்பான். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அவனுக்கு அவன் அப்பாவுடன் பிறந்த ஒரு தம்பி, அவரது ஒன்றுவிட்ட இரண்டு தம்பிகள், அவர்களது மூன்று சகோதரிகள் என்று அனைவருமே “பெரியம்மா” என்று அழைத்ததால் அவனும், அவனுக்கு அக்காவும் பாட்டியைப் “பெரியம்மா” என்றுதான் அழைத்து வந்தனர்.

    அப்பாவின் கூட்டுக் குடும்ப வீட்டு எண்: 58- 57, வடக்கு ரதவீதியில் இன்றும் இருக்கிறது. இப்பொழுதும் அவன் அந்த ஊருக்குச் சென்று “தாமிரபரணி” நதியில் ஆனந்தமாகக் குளித்து விட்டுத் தான் வருகிறான். அவனுக்கு அந்த வீட்டில் இரண்டு தாத்தாக்கள், இரண்டு பாட்டிகள், மூன்று சித்தப்பாக்கள் என்று வீடே கல கல வென்று இருக்கும். அவனுடைய சின்னத் தாத்தா இராமலிங்கம் ஐயருக்கு அவனிடம் மிகுந்த பாசம் உண்டு.

    அவனுக்கு நான்கு , ஐந்து வயது இருக்கும். அவனை சின்னத்தாதா தன் மடியில் வைத்துக் கொண்டு , அவர் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளம் எடுத்து அவன் வாயில் தருவார். ” உங்க எச்சில கொழந்தைக்குக் கொடுப்பாளா” என்று அவரது மனைவியும், அவனுக்குப் பாட்டியுமான “சித்தியம்மா” கேட்ப்பாள். “சரிதான் போடி நீ…..அவன் என் செல்லம்” என்று அவனை அணைத்துக் கொள்வார். அவனுக்கு மூத்த சகோதரி “பாலா”. அவள்தான் அந்த வீட்டின் முதல் குழந்தை ஆனதால் அனைவருக்குமே அவள் செல்லக் குட்டிதான். சின்னம்பிச் சித்தப்பா, பெரிய சித்தப்பா, ரமணிச் சித்தாப்பா என்று வீட்டில் அனைவருக்கும் அவள்தான் முதல் செல்லம். ஒன்று விட்ட சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை என்ற உணர்வே இல்லாமல் எல்லோருமே ஒருதாய்ப் பிள்ளைகளாக வளர்ந்ததால் கிடைத்த பலமான உறவு அது.

    “ஆடிச்செவ்வாய்”

    ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையையும் “ஆடிச்செவ்வாய்” என்று அந்த கிராமமே கொண்டாடும். ஆடி மாதக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருக்கும். கன்னடியன் கால்வாயில் தண்ணீர் “ஸ்படிகமாக” நடந்து கொண்டிருக்கும். உள்ளே ஆழத்தில் நீந்தி விளையாடும் மீன்கள் நம் கண்களுக்கு மிக அருகில் இருப்பது போல இருக்கும். வயல் வெளிகளில் பசுமை தாண்டவமாடும். அப்படியே சிவன்கோவில் வழியாகத் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியில், வயலுக்காகப் பாய்கின்ற ஓடைத் தண்ணீரும் , அதன் வரப்பில் மெத்து மெத்தென்றிருக்கும் பசும் புற்களின் அழகும், அதன் மீது மின்னிக் கொண்டிருக்கும் வெண்பனி முத்துக்களும், நடை பாதை ஒரத்தில் வரிசையாகத் தானாக வளர்ந்த தும்பைப்பூ பூத்திருக்கும் சிறிய செடிகளும், கால்களில் செல்லமாகக் குத்தும் நெருஞ்சி முட்ச்செடிகளும், வயலுக்குள் களைபறிக்கும் ஆண்களும், பெண்களும் பேசிக் கொள்ளும் ஊடல் மொழியும் , சில சமயங்களில் அவர்களது சில்லரைச் சண்டைகளின் ஓசைகளும், குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும் மைனா, வால்குருவி, நாரை, கொக்கு, காக்கைகளின் மந்திர ஜாலக் குரல்களும், சிவன் கோவில் அரச மரத்தில் கூத்தடிக்கும் குரங்குகளின் “கிரீச்..கிரீச்” குரல்களும், மேற்கே ரயிவே பாலத்திற்கு அருகில் உள்ள “வடபத்திர காளிக்” கோவிலிலோ அல்லது வேறு எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்து காதில் நுழைகின்ற T.M.S. , சுசீலா , சுந்தராம்பாள் பாடல்களும் இன்றும் நினைவுகளுக்கு சுகமோ சுகந்தான்.

    ஆடிச் செவ்வாய்க் கிழமைக்கு முதல் நாள் இரவில், சிறுமிகளும், பெண்ளும், எந்த வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று மஞ்சளை வாங்கிக் கொண்டு வந்து நன்றாக மணக்க மணக்க மெழுகு போல அரைத்து வைத்துக் கொள்வார்கள். அன்று மாலை ஏழு மணிக்குள்ளாக அந்த அரைத்த மஞ்சளைத் தங்கள் தோழிகளின் வீட்டிற்குச் சென்று கொடுத்து, அவர்களை அடுத்த நாள் காலையில் ஆத்தங்கரைக்கு வருமாறு அழைப்பார்கள்.

    மறுநாள் காலையில், தங்களது தாயார் துணையுடன் ஆற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு “ஆடிச் செவ்வாய்க்காக” வாங்கப் பட்ட புதிய பாவாடை, சட்டைகளை அணிந்தும், ஆடிச் செவ்வாய்த் தலைச் செண்டு என்ற வட்ட வடிவில் உள்ள பூங்கொத்தினையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற மலர்களை அணிந்தும், புதிய வளையல்கள் குலுங்கவும், மஞ்சள் பூசிய முகத்தில் அழகான வண்ணப் பொட்டுமாகச் சிறுமியர்கள், நடுவயதுப் பெண்கள் என்று வயதுக்கு ஏற்றார்ப் போல பத்து பத்து பேர்களாகக் கூடி நின்று கொள்வார்கள்.

    அதன் பிறகு , அந்த கிராமத்தில் உள்ள எதேனும் ஒரு ஏழைச் சிறுமிக்கு மற்றவர்கள் எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த மஞ்சள், வளையல், வண்ண வண்ணப் பொட்டுகள், கொஞ்சம் தின்பண்டம் எல்லாம் தந்து அந்தக் குழந்தையின் தலையில் வயற்காட்டில் இருந்து கொண்டு வந்த ஒருபிடி இளங்கதிர்களை வைத்து இறைவனை நினைத்தும், ஆடி மாதச் சிறப்பினைப் பற்றியும் ஒரே குரலில் அழகாகப் பாடிக் கொண்டே வருவார்கள்..அது என்ன பாட்டுத் தெரியுமோ ?

    “ஆடிச் செவ்வாய்த் தேடிக் குளி,
    அரைச்ச மஞ்சளப் பூசிக் குளி,
    அரையாத மஞ்சள எனக்குத் தா…
    தொடுத்த பூவ நீ வச்சுக்கோ
    தொடுக்காத பூவ எனக்குத் தா..
    மாடப் புறா மஞ்சள் அரை
    கோவில் குளத்தில் குளித்து வா
    கோவிந்த ராயனை ஜபித்து வா “

    இப்படிப் பாடிக் கொண்டே கன்னடியன் கால்வாய் ஆண் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருக்கும் படித்துறை பக்கம் வரும் பொழுது,

    “ஆத்தங்கரைல குளிச்சவாளுக்கு
    ஆயிரம் தோசை
    வாய்க்கால்ல குளிச்சவாளுக்கு
    வாரிக்கட்டைப் பூசை “

    என்று உரத்த குரலில் பாடிச்செல்லும் அழகைக் காணக் கண்கள் கோடி இருந்தாலும் போதாது.

    அதன் பிறகு அவரவர்கள் வீட்டில் ஆடிச்செவ்வாய்க் கென்றே செய்திருக்கும் பொங்கலையும், தாளகக் குழம்பு, வடகம் போன்ற தின்பண்டங்களையும் சிவன் கோவில் கன்னடியன் கால்வாய்ப் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். அங்கு, அன்றைக்கு முக்கியமாகத் தலையில் பசுங்கதிர் வைத்தழைத்து வந்த பெண்ணிற்குத் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொங்கல், தாளகக் குழம்பு, வடகம், பட்சணங்கள் என்று அவரவர்களுக்குத் தகுந்த அளவில் தந்து மகிழ்வார்கள். வாய்க்காலில் மீனுக்கும் உணவிடுவார்கள். இவை அனைத்தும் காலை எட்டு மணிக்குள் முடிந்து விடும். அதன் பிறகு அந்தச் சிறுமியர்களும், பெண்களும் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள்.

    ஆடிச் செவ்வாய்க்கு , அவன் அக்காவுக்கு சித்தப்பாக்களும் பாவாடை, சட்டை, இனிப்புகள் எல்லாம் வாங்கித் தருவார்கள்.

    அன்று மாலை ஆறு மணிக்கு மேல், விளக்கு ஏற்றிய பிறகு, கிராமத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை ஒரு நாற்காலியில் அமர வைத்து அனைவரும் பாடுவார்கள். இறைவனுக்கு சுண்டல் நிவேதனம் செய்து விட்டு, அதை விநியோகம் செய்வார்கள். அது ஆண் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

    அக்கா, இவைகளை எல்லாம் நன்றாக ரசித்துச் செய்வாள். அம்மாவுக்கும் எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற கவனிப்பும், கண்டிப்பும் உண்டு. அவளது தோழிகளான கங்கா பாகீரதி, சாரதா, லெஷ்மண வாத்தியாராதுப் பாப்பா, திரிபுரசுந்தரி இன்னும் பலர் இந்த கோஷ்டியில் உண்டு. இந்தக் குழந்தைகளை எல்லாம் குஷிப் படுத்தி, ஒழுங்கு படுத்தக் கூடிய வராக, எல்லோராலும் அன்போடு “சிண்டாமாமி” என்றழைக்கப் பட்ட “வராக சீதாலட்சுமி” அம்மாள், 52, வடக்கு ரதவீதியில் இருந்தார்கள். அவரது கணவர் இராமலிங்க அண்ணாவி என்ற மிராசுதார். அவர்களுக்கு M.R.ஆதிவராகன், M.R.ராமநாராயணன் என்ற மகன்களும், சுப்பலக்ஷ்மி (சுப்பம்மா), பர்வதம், கோமதி என்ற மூண்று பெண்களும் இருந்தனர்.

    அவனப்பாவுக்கு ஆதிவராகன் பள்ளி தோழர். சித்தப்பா கணபதி சுப்ரமணியத்திற்கு ராமநாராயணன் நெருங்கிய தோழர். அவனும், அவனுக்கு அக்காவும் அந்தக் குடும்பத்துக் குழந்தைகளைப் போலவே அவர்களை “சித்தப்பா” என்றும், அத்தை என்றும்தான் இன்றுவரை அழைத்து வருகின்றார்கள். அவர்களது மகன்களான சங்கர், ரகு, சுரேஷ் அனைவருமே அவனுக்கு மிக நெருக்க மான நண்பர்கள்தான். அவனை, அந்த நண்பர்களின் குழந்தைகள் “கண்ணன் சித்தப்பா, கண்ணன் பெரியப்பா” என்றே அழைக்கின்றனர்.

    அப்படி ஒரு சினேக உறவை அந்த கிராமம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது.

    அவனுக்குத் தாய்வழித் தாத்தா “கணபதி லிங்கம் அப்பளம் டிப்போவில்” வரவு, செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை “கணக்கையர்” என்றுதான் அந்த டுண்டிவிநாயகர் தெருவில் அழைப்பார்கள். மிகவும் அமைதியான சுபாவம். அவனது சிறுவயதில் அவர்தான் அவனுக்குச் சின்னச் சின்ன சுலோகங்கள் கற்றுக் கொடுத்தார். மாலையில் அந்தத் தெருவில் அவன் வயதுத் தோழர்களான சுப்பாமணி (L .M. சுந்தரம் ஐயரின் மகன்) , ரங்கநாத வாத்தியாரின் மகன் இராமகிருஷ்ணன் என்ற கண்ணன் அகியோர்களுடந்தான் விளையாடுவான். சரியாக ஆறு மணிக்கு “விஸ்வம்…விளையாடினது போரும்..நமச்சிவாயா சொல்லணும்..” என்று அவன் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு, பிள்ளையார் கோவிலுக்குப் பின்னல் ஓடுகிற வாய்க்காலில் அவனது கால்களையும், கைகளையும் நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வார். அதன் பிறகு மாலை நேர மானதால் மேற்கு நோக்கி நிற்கவைத்து அவன் நெற்றியில் மூன்று முறையும், கைகளிலும், மார்பிலும், கழுத்துப் பகுதியிலும், இடுப்பின் இருபுறத்திலும் விபூதி இட்டு விட்டு, அவனிடம் “இங்க இந்தப் படில மேற்கப் பார்த்து கையக் கும்புட்டுண்டு இந்த சுலோகத்த நான் சொன்னப்பறம் மூணு தரம் நீ சொல்லு” என்று ,

    “கஜானனம் பூத கணாதி சேவிதம்
    கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
    உமா சுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “

    “குருப்ரும்மா குருர்விஷ்ணு குருத்தேவோ மகேஸ்வர:
    குருசாஷ்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நம : “

    அவனுக்கு விபரம் தெரிந்த நாளில் அவன் மனதில் அந்தத் தாத்தா சுப்ரமணிய ஐயர்தான் ஆன்மிக விதையை அவன் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.

    அவனுக்கு அம்மா அவனைச் செம்மைப் படுத்த, பள்ளிக் கூடம் அனுப்ப எண்ணினாள். அந்த நல்ல நாளும் வந்தது. அவனுக்குப் புதிய சட்டை, டிராயர் அப்பா வாங்கித் தந்தார். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவனை வீட்டில் உள்ள பெரியவர்களுக் கெல்லாம் நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அம்மா. அவனும் ரொம்ப ஆசையோடு அதைச் செய்தான். அனைவரும் அவனை ஆசீர்வதித்தார்கள். அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள்.

    வீட்டுப் பெரியோர்களைக் கலந்து கொண்டு ஒரு நல்ல நாளில் கோடை விடு முறைக்குப் பிறகு 1960ம் வருடம் ஜூன் மாதம் அவனுக்கு அப்பா அவனை அன்போடு கையைப் பிடித்துக்கொண்டு மேல மாடத் தெரு, வடக்கு மாடத்தெரு வழியாக பஜனை மடம் ஸ்ரீ ராமரை வழிபட்டு, ஸ்ரீ லக்ஷ்மீபதி (ஆதிவாரகர்) கோவில் வாசலுக்கு வந்தார். அவனிடம் கைகூப்பி கும்பிட்டு நமஸ்காரம் செய்யச் சொன்னார். அவனும் அப்படிதான் செய்தான். பிறகு அவர் கோவில் வாசலில் பரந்து கிடக்கும் கருங்கல்லில் “மூல கருடரை” நினைத்துத் தேங்காய் வடல் போட்டார்…அப்படியே நேராக தெற்கு மாடத் தெரு முனையின் உள்ளே இருக்கின்ற “லக்ஷ்மீபதி நடுநிலைப் பள்ளியில்” முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றார். சேர்த்தார். தந்தைக்குக் கடன் மகனைச் சான்றோனாக்குதல்.

    அவனைப் பார்த்து,

    “அம்பி …ஒன்னோடு பேர் என்ன ? என்றார் தலைமை ஆசிரியர்.

    “விஸ்வநாதன்” என்றான் அவன்.

    “நன்னாப் படிக்கணும்,….”

    ” அவன் தலையசைத்தான்”

    அந்தத் தலைமை ஆசிரியர்தான் ஒழுக்கத்திறக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்ற
    H. வேங்கட்ராமையர். அவனுக்கு அந்தத் தலைமை ஆசிரியரையும், பள்ளிக் கூடத்தையும்
    மிகவும் பிடித்திருந்தது.

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • சாப்பிடுபவர்கள் பலவிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (2)

    இந்தியாவில் நான் வளர்ந்துவரும்போது ‘எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்கள் யாரையும் சந்தித்ததில்லை. நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பவர்களை மற்றவர்கள் வேண்டுமானால் – அவர்கள் நிறையச் சாப்பிடுகிறார்களோ என்னவோ மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டால் – கொஞ்சம் இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் யாரையும் ‘சாப்பாட்டு ராமன்’ என்று எளிதில் கூறிவிடுவார்கள்.

    ஒரு முறை நான் பதின்ம வயதினளாக இருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டிற்குக் கிருகப்பிரவேச (அப்போது புதுமனை புகுவிழா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்) வைபவத்திற்குச் சென்றிருந்தோம். விசேஷம் முடிந்துவிட்டாலும் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் எங்கள் ஊருக்குத் திரும்புவதாக ஏற்பாடு. கிருகப் பிரவேசத்திற்குச் சமைத்த சாப்பாடு நிறைய மிஞ்சிவிட்டது. வீட்டுச் சொந்தக்கார அம்மாள் மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதைப் ‘பழைய சாதமாக’வும் மிஞ்சிய சாம்பார், ரசம் மற்றும் பொரியல்களை ‘சுண்டக் குழம்பாகவும்’ மாற்றிவிட்டார். மறு நாள் பெண் விருந்தினர்களுக்கு அதைக் காலை உணவாகக் கொடுப்பது என்று முடிவாகியது. (இந்தியாவில் ஏழைகளுக்கா பஞ்சம். மிஞ்சிய உணவைக் கொடுப்பதற்கு எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஏன் அப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை.) விருந்தினர்களில் கூட ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக நடத்தியிருக்கிறார்கள். ஆண் விருந்தினர்களை வீட்டுச் சொந்தக்காரர் காலை உணவிற்கு ஓட்டலுக்குக் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அப்படிச் சென்ற உறவினர்களில் ஒருவரைப் பற்றி என் தந்தையிடம் வீட்டுச் சொந்தக்காரர் ‘இவன் நிறையச் சாப்பிடுவான். அதிலும் ஓட்டல் பலகாரங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்றாராம். அந்த உறவினருக்கு நிறையச் செலவழிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு என் தந்தைக்கு மனதில் பெரிய சுமையை ஏற்றியதுபோல் இருந்திருக்கும் போலும். அதை ஆற்றிக்கொள்ள என்னிடம் சொன்னார். எனக்கும் அதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. நிறையச் சாப்பிடுவதாகச் சொன்ன அந்த உறவினர் வசதியில்லாதவர். பிறர் வாங்கிக் கொடுத்தால் நன்றாகச் சாப்பிடுவார் போலும். அது உண்மையாகவே இருந்தாலும் அந்தப் பணக்கார உறவினர் – கிருகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர் – அதைக் குறையாகச் சொல்லலாமா? தன் வீட்டு விசேஷத்திற்கு அத்தனை செலவு செய்திருந்தார். இன்றளவும் நான் இதை மறக்கவில்லை. வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

    அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று நான் யாரையும் எப்போதும் விமர்சித்ததில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர் நான் சமைத்ததை ரசித்துச் சாப்பிட்டால் மனதிற்கு நன்றாக இருக்கும். நான் சமைப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால் மறுபடி அவர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உண்டாகும். என் கணவர் மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்தவர்களில் யார் வீட்டிற்காவது விருந்திற்குப் போவோம் அல்லது யாரையாவது வீட்டிற்கு அழைப்போம். யார் வீட்டிற்குப் போனாலும் எனக்குப் பிடித்த உணவாக இருந்தால் எல்லோருக்கும் தேவையான அளவு இருந்தால் எந்த ‘பிகு’வும் பண்ணாமல் நன்றாகச் சாப்பிடுவேன். நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று விருந்திற்கு அழைத்தவர்களோ விருந்திற்கு வந்த மற்றவர்களோ நினைப்பார்களே என்று நினைப்பதில்லை.

    என் கணவரோடு வேலைபார்த்த ஒரு பெண் எனக்கு நல்ல தோழி. அவருடைய கணவர் வேறு ஊரில் வேலைபார்த்தார். அவர் தனியாக இருந்ததால் அடிக்கடி என்னை அவர் வீட்டிற்குக் கூப்பிடுவார். நானும் என் மகள்களும் போவோம். அவருக்குப் பொதுவாகச் சமைக்கவே பிடிக்காது. ஆனால் நாங்கள் போகும்போதெல்லாம் ஏதாவது எங்களுக்காகச் சமைப்பார். நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால் அவர் நிறையச் சாப்பிடுவதில்லை. எப்போதாவது என் கணவர் உடன் வந்தால் நாங்கள் மட்டும் போகும்போது சாப்பிடுவதைவிடக் குறைவாகவே சாப்பிடுவார். என் கணவரின் அலுவலகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‘pot luck’ விருந்து நடத்துவோம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டுவர வேண்டும். பின் எல்லோரும் எல்லார் உணவுகளையும் உண்டு மகிழ்வோம். அந்த விருந்தில் மேலே குறிப்பிட்ட என் தோழி கடைசியாக இனிப்பிற்காக வைத்திருக்கும் சிறிய தட்டில் உணவுகளைக் கொஞ்சமாக எடுத்துக்கொள்வார். மறு முறை போய் ஏதாவது பிடித்திருந்தாலும் அதை எடுத்துச் சாப்பிடுவது என்பது கிடையாது. பலர் முன்னிலையில் தான் மிகவும் கொஞ்சமாகச் சாப்பிடுபவர் என்று காட்டிக்கொள்வதுபோல் எனக்குத் தோன்றும். இவர் தனியாகத் தன் வீட்டில் இருக்கும்போது உண்ணும் உணவின் அளவுதான் இவர் நார்மலாகச் சாப்பிடும் அளவு என்று நினைக்கிறேன்.

    இந்த ‘pot luck’ விருந்தை என் கணவரின் அலுவலகத்தில் முதலில் ஏற்பாடு செய்ததே நானும் என் கணவரும்தான். (அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்து கற்றுக்கொண்ட பழக்கங்களில் ஒன்று.) அன்று அலுவலகத்தின் இயக்குனர் முதல் தோட்டவேலை செய்பவர்கள் வரை அனைவரும் அன்று சமம். எல்லோரும் வரிசையில் நின்று மேஜை மேல் பரப்பப்பட்டிருக்கும் உணவுகளில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சாப்பிடலாம். இந்த உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் ‘கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் முதலில் வந்து எடுத்துக்கொள்கிறார்களே’ என்பார்கள். அவர்களும் ஒரு நாள் நன்றாகச் சாப்பிடட்டும் என்பதற்காகத்தானே இந்த விருந்தையே ஏற்பாடு செய்தது என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

    அமெரிக்காவில்தான் நான் முதல் முதலாக எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் (‘I love to eat’) என்ற வார்த்தைகளைக் கேட்டேன். அமெரிக்காவில் உணவு அபரிமிதமாகக் கிடைப்பதும் எல்லோரும் வேண்டிய அளவு சாப்பிடலாம் என்பதும் (அமெரிக்காவிலும் சிலர் பசியோடு படுக்கப் போகிறார்கள் என்கிறார்கள். எனக்கு ஒருபோதும் இது எப்படி என்று புரிந்ததில்லை.) காரணங்களாக இருக்கலாம். இந்தியாவில் ‘எனக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நான் சந்தித்ததில்லை. நண்பர்கள் வீட்டிற்கோ உறவினர்கள் வீட்டிற்கோ விருந்திற்குப் போனால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத அயிட்டங்களையும் சமைத்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் சாப்பிட்டுவைப்பேன். அமெரிக்கர்கள் அப்படியில்லை. பிடிக்கவில்லை என்றால் அப்படியே வைத்துவிடுவார்கள். உணவு உட்பட எதையும் வீணாக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடம் அதிகம் இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள் போலும்.

    ஒரு முறை ஒரு அமெரிக்கத் தோழி என்னை ஒரு பீட்ஸா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். பீட்ஸாவை ஆறு துண்டுகளாகக் கொடுக்கும்படி சர்வரிடம் கூறினார். எனக்கு மூன்று, அவருக்கு மூன்று. எனக்கு பீட்ஸா பிடிக்கும் என்பதாலும் என் பற்கள் ஆரோக்கியமாக இருந்ததாலும் விரைவாகச் சாப்பிட்டேன். அவருக்கோ செயற்கைப் பற்கள். அதனால் பீட்ஸாவை மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்தார். ‘நீங்கள் நன்றாகச் சாப்பிடுகிறீர்கள்’ (You are a good eater) என்று எனக்கு நற்சான்று வழங்கினார். கூடவே ‘நான் இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டார். நான் இந்தியன் என்பதால் தவறாக எடுத்துக்கொள்வேனோ என்று நினைத்திருக்கலாம்.

    அமெரிக்காவில் ஒரு இடத்தில் கூடுபவர்களிடையே உணவைப் பரிமாறிக்கொள்வது அவ்வளவாகக் கிடையாது. இந்தியாவில் என் மகள்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பள்ளித் தோழிகளுக்கு என் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே என் மகள்களுடைய லஞ்ச் பாக்ஸில் அவர்களுடைய தேவைக்கு மேலேயே கொடுத்துவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படிக் கொடுப்பவர்களும் இல்லை; அதைப் பெற்றுக்கொள்பவர்களும் இல்லை.

    இந்தியாவில் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் போன்ற பேக்கரிகளுக்கு முன்னால் நிறையத் தெருநாய்கள் நின்றுகொண்டிருக்கும். பேக்கரிக்கு வருபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாய்களை விடுங்கள். அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கே இவர்கள் எதுவும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் சாப்பிடும்போது அதை ஏக்கமாகப் பார்க்கும் ஏழைகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் அப்படி ஒரு வகை ஜனங்கள் இல்லாதது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். Junk food என்னும் மலிவான உணவை உண்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பசிக்கும்போது சாப்பாட்டிற்குப் பிறர் கையை எதிர்பார்ப்பவர்கள் இல்லை.

    அமெரிக்கா வந்தபிறகு என் மகள் மற்றும் மூன்று மாணவிகளோடு ஒரே அறையில் சேர்ந்து வாழ்ந்துகொண்டு படித்துக்கொண்டிருந்தபோது எல்லாரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற பாடத்தை அவர்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘இவ்வளவு இருக்கிறது. அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களிலும் இப்படிப் பகிர்ந்து உண்ணாமை சிலரிடம் இருக்கும். முதலில் சாப்பிடுபவர்கள் வேண்டிய அளவு சாப்பிட்டுப் பின்னால் வருபவர்களுக்குக் குறைவாக வைத்துவிடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து வரும்போதே பெற்றோர்கள் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

    உணவைத் தானே உண்பதிலும் பகிர்ந்து உண்பதிலும் இப்படிப் பல வகை.

    Share
  • கருக்கலைப்பு

     

    மீ. லதா

    unnamed
    உன் கருவறையில்
    சிறைப்பட்ட என்னை
    பத்துமாதம் சுமக்க
    முடியாமல் பாதியிலே
    விடுதலை செய்தாய்

    கைமுளைத்து
    கால்முளைத்து
    பாதி உருவம்
    வந்த என்னை
    வேண்டாமென
    தள்ளிவிட்டாய்

    உன்னை
    பார்க்கவில்லை
    என் உறவை
    பார்க்கவில்லை
    இவ்வுலகை
    பார்க்கவில்லை
    கருவறையின்
    இருட்டறையில்
    என் காலம் முடிந்தது

    பனிக்குடத்தில்
    முழ்கியிருந்தேன்
    மூச்சிமூட்டவில்ல
    தத்தளித்து சுத்திவந்தேன்
    தாய் வயிற்றில் உள்ளே

    உன் உறவினிலே
    உருவான என்னை
    விலகி போன உறவாலே
    வெறுக்கிறாயே என்னை

    அரைக்குறையாய்
    அழித்துவிட்டாய்
    அரைநொடியில்
    அழித்துவிட்டாய்
    கருக்கலைப்பு
    செய்துவிட்டாய்
    கனவையும்
    கலைத்துவிட்டாய்

     

    Share
  • கண்போல் பக்தரைக் காக்கும் காளிகாம்பாள்!

     
    கவியோகி வேதம்

    images
    பாரதியார் தினம்வணங்கிச் சிலிர்த்த தேவி!
    .. பாடல்களை அவர்நாவில் வழங்கித் தேனின்
    சாரம்போல் தான்இருந்த அன்னை! பக்தர்
    …சன்னதியில் நெகிழ்ந்துநின்றால் தானும் ‘சூஷ்ம’ப்
    பாரமுடை மனம்கொண்டே கனியும் அன்னை!
    ….பலவரங்கள் தரும்அம்மா! மலடி என்ற
    சாரமில்லாத் திட்டுகளால் நொந்த பெண்கள்
    …தாய்மைபெற்றார்!.. அருள்வாளே “காளி” காம்பாள்!

    கடற்கரையில் முதன்முதலாய்த் தோற்றம் கொண்டாள்!
    …கனிந் (து)இங்கே தம்புசெட்டித் தெருவில் தானே
    இடம்பெயர, விஸ்வகர்மாக் குலத்தோர், “தாயே!”
    ….எனப்போற்ற, அவராலே கோவில் கொண்டாள்!
    படைவாளைச் சத்ரபதி “சிவாஜி”, முன்னால்
    … பணிந்துவைத்தார்! “இவள்”போரில் வெற்றி தந்தாள்!
    அடையாளம்,(?)- இவண்‘சிலை’யில் காண்பீர்! பாட்டால்
    … ஆர்ப்பரிப்பீர்! அருள்பெறுவீர்! உணர்ச்சி கொள்வீர்!

    சென்னியம்மன் பேரு(ம்)இவள் கொண்டாள்! லக்‌ஷ்மி
    …சேர்ந்தகண்ணும், வலது-‘சரஸ் வதி’யும் கொண்டாள்!
    உன்னிவந்த கலைஞர்க்கே பொருளும், கல்வி
    …ஒப்பில்லா நலம்யாவும் தந்த தாலே
    ‘சென்னியம்மா!’- எனப்பலரும் இவளைப் போற்ற
    .‘சென்னை’இதே எனநகர்ப்பேர் மாற லாச்சே!
    கன்னியர்கள் திருமணம்தான் நடக்க வேண்டிக்
    …கால்நடையாய்ச் சுற்றிவந்தால் ‘அது’ந டக்கும்!

    காலையிலே வாருங்கள்! நாத்தி கர்கள்
    ..கண்பனிக்க வேண்டுவரே! சிரித்தே அம்மா
    பாலையுமே தான்கொடுத்துப் பலதும் ஈவாள்!
    .. பதவிகளை இவளருளால் பெற்ற பேர்கள்
    மாலைகொண்டு நெகிழ்ந்(து)அழுவார்! பார்த்துள் ளேனே!
    .. மாயை,மன மாச்சர்யம் இவள்முன் நில்லா!
    சூலம்தான் எதற்காகக் கையில் கொண்டாள்?
    ..சூறைபோல் ‘மனம்’பெயர்க்க!.-. தெளிவீர் நீரே!

     

    Share