Blog

  • நாணயமானவளே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    நீ துணையிருந்தால்
    எனக்கு
    யானைபலம்

    அன்றாடம்
    எல்லாம் எளிதாகிவிடுகிறது                     one-rupee
    இல்லையேல் அரிதாகிவிடுகிறது

    துக்கம்கூடத்
    துக்கமாயில்லை

    கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
    இல்லையேல்
    கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

    நீ இல்லாதபோதும்
    நிம்மதி இருக்கிறது
    கூட இருந்தால்
    அது கூடிவிடுகிறது

    நீ இல்லாதபோதும்
    எனக்கு
    முகவரியிருக்கிறது

    என் முகவரி
    என்னால் வந்தது
    அதன் ஒவ்வொரு
    அங்குல உயர்விற்கும்
    நானே காரணம்

    எனினும் என்னுடன்
    நீயும் இருந்துவிட்டால்
    பிறரைத்தேட வைக்கிறது

    இதுவரை
    என்னிடமிருந்தாலும்
    என்னிடம் வந்தாலும்
    உனக்குப் பெருமை
    இனி
    உன்னால் எனக்கும்பெருமை

    வாழ்க்கை
    பொருளுடையதாய் விளங்க
    நீதான் அடிப்படை

    நீயா நானா
    என்பதைவிட
    நீயும் நானும்
    சேர்ந்திருப்பதே
    தேவையானது
    நியாயமானது
    நாணயமானது

    நாணயமான
    வாழ்க்கைதானே
    நாகரீகமானது?

     

    Share
  • நினைக்கத் தெரியாத மனமே

    – ரா.பார்த்தசாரதி.

     

    ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.

    ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத்  துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த  ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.

    தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.

    அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    Share
  • பள்ளி நினைவு!

    -றியாஸ் முஹமட்

    பாதி ராத்திரியில்
    பாதிக் கனவுகளோடு,
    எழுந்து விடுகிறேன்
    ஒரு
    பரதேசியாக….

    உடலில் ஒரு
    இறுக்கம்.
    மனதில் ஒரு
    ஏக்கம்…

    கண்டது
    கனவுதானே என்றதும்
    கண் கலங்கிப்
    போனேன்.

    கண்ட கனவு,
    பள்ளிக் கனவு.
    பனிக் கட்டியாக
    உறைந்து விடுகிறது
    என்னிதயம்.

    கலையாத கனவுடன்
    கனத்த இதயத்தோடு
    பள்ளி வளாகத்தில்
    நுழைந்து விடுகிறேன்.

    அதுதான்
    என் பள்ளி,
    ஓட்டமாவடி தேசியப்
    பள்ளி…

    புதிய கட்டிடங்களின்
    குறுகுறுப் பார்வை
    என்னை உரசி விளையாட,
    அடையாளம் கண்டு
    ஆரவாரத்தோடு,
    அணைத்துக் கொண்டது
    ஹிஜ்றா அரங்கும்,
    அஷ்ரப் மண்டபமும்.

    நுழைந்து விடுகிறேன்
    பள்ளி வளாகத்தில்.
    பள்ளி மண்ணை
    அள்ளித் தின்றேன்,
    பள்ளி அறையில்

    படுத்துப் புரண்டேன்,
    பள்ளித் தண்ணீரை
    வயிறு முட்டக்
    குடித்தேன்.

    தீர வில்லை
    அந்தத் தாகம்,
    தாங்க முடியவில்லை
    இந்தச் சோகம்.

    சிறிய மாணவர்கள்
    செய்யும் சிறு
    குறும்புகளை
    நான் செய்து
    பழைய மாணவன்
    என்பதை மறந்தே
    போனேன்…

    அன்றைய
    வகுப்பறைகள்தான்
    இன்றும்…
    கலர் மாறியதே
    தவிர
    உருவம் மாறவில்லை.

    நாங்கள் அடித்த
    பந்துகளின் தடமும்
    விட்ட ராக்கெட்டும்
    எழுதிய எழுத்தும்
    வரைந்த ஓவியங்களும்
    காதல் கதைகளும்
    அன்று போல்

    இன்றும்
    பேசிக் கொண்டுதான்
    இருக்கின்றன
    மெளனமாக
    அஜந்தா ஓவியங்களாக….

    கலங்கிப் போன
    என் கண்கள்.
    வகுப்பறையை
    மேய்ந்தது…
    என் மேசையைத்
    தேடுகின்றது…
    என் பெயர்
    அடையாளம்
    இடப்பட்ட மேசை
    இன்றும் இருக்கலாமோ
    என்று!

    அடங்காத
    ஆசையை
    அடக்க முடியாது
    தேட முற்படுகையில்
    அந்தப் பிஞ்சு
    மாணவ முகங்கள்
    சொல்லாமலே சொன்னது
    இது உங்கள்
    நேரமல்ல
    எங்கள் நேரம்
    என்று….

    கனத்த இதயத்தோடு
    வெளியே வர
    நாட்டிய மரங்கள்
    நடனமாட
    அதே வேப்பையும்
    பனையும்
    அங்கேயே இருக்க

    எங்கே
    போனார்கள் என்
    பள்ளி தோழர்கள்
    மட்டும்…?

    கலங்கிப் போன
    கண்கள் தேட
    நிஜத்தை நினைக்க
    இரத்த நாளங்கள்
    இறுக்கமாக
    அமர்ந்து விடுகின்றேன்
    புதிய வகுப்பறையில்
    பழைய மாணவனாக!

    சிணுங்கி நிற்கும்
    சின்ன  மாணவனுக்கு
    எங்கே போய் – நான்
    வாங்கிக் கொடுப்பேன்
    சீனி மாமாவின்
    சீனி முட்டாசியும்
    சீவல், வடையும்!

    தாங்க முடியவில்லை
    இந்த வேதனை
    ஏன் இந்தச்
    சோதனை?

    நான் பிறக்க
    வேண்டும்
    என் தாயின்
    வயிற்றுக் கூடத்தில்
    அவள் (மீண்டும்)

    சேர்க்க வேண்டும்
    இதே என்
    பள்ளிக்கூடத்தில்!

     

    Share
  • அண்ணா!

    நாகினி

    images

    நடுத்தர குடும்பத்து நெசவாளர்
    நடராஜன் பங்காருஅம்மை பெற்ற மகவாளர்

    காஞ்சி தந்த பேச்சாளர்
    அண்ணா! திராவிட இயக்க மூச்சாளர்

    தமிழ் ஆங்கில எழுத்தாளர்
    மேடை நாடகப் புகழாளர்

    ராணி மங்கை மணவாளர்
    அண்ணா! அரசியல் வாழ்க்கைப் பயணாளர்..

    விடுதலை குடியரசு இதழாசிரியப் பொறுப்பாளர்
    திராவிட நாடு இதழ் தொடங்கிய மேலாளர்

    சுபப்பெலோஷிப் விருதுடன் யேல் பல்கலைக்கழகப் போற்றாளர்
    அண்ணா! மதராஸை தமிழ்நாடு ஆக்கிய பேற்றாளர்

    இறுதி ஊர்வலத்திலும் கின்னஸ் சாதனையாளர்
    அண்ணாசதுக்கத்தில் அஞ்சலிக்காகத் துயிலாளர்..

    அரசியல் இலக்கியம் இரு கண்ணாளர்
    அண்ணா! அடுக்குமொழி மேடைப்பேச்சின் மூச்சாளர்

    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் வித்தாளர்
    இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய விந்தையாளர்

    அண்ணாநூற்றாண்டு நூலகம் உருவாக்கப் பெயராளர்
    அண்ணா! பல்நூற்றாண்டிற்கும் மறையாத புகழாளர்..!!

    .. நாகினி

    Share
  • பண்டரி தரிசனம்!

    கிரேசி மோகன்

    ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்….வெண்பாவில் எழுத வழக்கம் போல் ஆசை வந்தது….காப்புச் செய்யுள் எழுதி கணபதியிடம் முடித்துத் தரும் பொறுப்பை விட்டு விட்டேன்….பார்க்கலாம் என்ன ஆகிறதென்று….

    images

    காப்புச் செய்யுள்
    ———————

    “பண்டரி நாதரின் பக்த விஜயத்தை,
    சுண்டெலி தாங்கும் சிவக்கொழுந்தே -விண்டுரைக்க
    வாராய் விநாயகா வாக்கில் அமர்ந்தெனக்கு
    தாராயுன் தம்பியின் தமிழ்”…..கிரேசி மோகன்…

    “வனிதை பதுமா வதியை வரித்து
    புனிதமண வாழ்வில் புகுந்தார்;-இனிதான
    பாரியா ளோடு பிணைந்தாலும், போக்கினார்
    பூரியானில் பூரித்து போது”

    “விரகதா பத்தால் வெயிலாய் தலையில்,
    கரகமாடும் சூட்டைக் குறைக்க, -உருகுமுந்தன்,
    பாதப் பனிமலரை ராதேவை” என்பதாய்
    கீதகோ விந்தக் கவி”

    “பதிவிரதா தர்மம் பழகிடும் பத்மா
    வதிவழி பாடு ,விரதம் -துதியென்று
    கஷ்டப் படாமலே கண்டாள் கணவனாய்,
    அஷ்டபதி நாயகனை அன்று”….

    —————————————————————————

    images (1)
    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி பண்டரி விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்.

    தொட்டால் சுடுவான் தொடாமல் இருப்போரை
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான் -விட்டலன்
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை
    பட்டறையில் வைப்பான் புதைத்து

    வாழை யடிவாழை வந்தோர் வளத்துடன்
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள் -ஏழை
    சகாயா ஏபாண்டு ரங்கா என்னுள்
    புகாயோ புகல்வாய் பதில்.

    வண்டரி யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து.

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு.

    “விட்டலை(விட்டு அலை) பாற்கடல், வீர மராத்தியர்
    கட்டளைக்கு கல்லேறி காத்திருக்கும்- விட்டலை,
    பாண்டுரங்க நாதனை, பண்டரி தேவனை
    வேண்டுவோர்க்கு வாழ்விலென்றும் WIT”….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”Gracy Krishna Bringing The Kingdom Of Heaven To Earth”….
    ————————————————————-

    crazy

    ”தராசில் அடியார்கள் தம்பாரம் தீர்க்கும்
    புரீசன் புவிபாரம் போக்க, -கிரேசியாய்(GRACYயாய்)
    வண்ணக் குழலூதி வாய்க்கெட்டும் தூரத்தில்,
    விண்மண் வசப்பட வைப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் – ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.

    வெங்கட் சாமிநாதன்

    சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் 1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள் அவை. தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக அவை இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

    தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாக சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சிய செய்தவர் நேரு.

    சைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.

    இந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம்! ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.

    இந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள் வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே.
    இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று.

    சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா.சுப்பிரமணியத்தின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும்? அதுவும் தமிழ் நாட்டிலா? சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராயச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடி சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.

    சமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம்.

    ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

    அது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.

    நான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரை அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,

    காரணங்கள் என்று நான் கருதுவது ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா? என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன?” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
    இந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .

    மிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது.

    இதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இக் கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்றோ, இது பற்றியோ விடுதலை தவிர வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தி இராது. இது ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாத.என் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும்? எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, உள்ளிருப்பது அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்

    இத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும்? பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.

    சமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டையாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர்.க் இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.

    ஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.
    சமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:

    கேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா?
    பதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.
    கேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்?

    பதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.

    முரசொலி 19.8.61

    எப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, குமாரி பராசக்தி, மந்திரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.
    அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.

    இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்க்ள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார்? திராவிட நாடு? எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி? பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார்? அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா? அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு!) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.

    இப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”

    “இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.

    பிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது?

    பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்”

    “”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”

    இதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில்.

    ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணால் போயின. ஏன்? பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்க்ள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்ன்ம் கொஞ்ச் காலம் காத்திருக்க வேண்டும்.
    இந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து? என்று.

    திமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து.

    இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா? வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு? இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.

    ஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

    அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள்? யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள்.

    பகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா? என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான். திருமாவலவன் கேட்பாரா? அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம்.

    “ஆச்சாரியார் என் நண்பர்தான்.ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா? என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, அந்த பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன்? யாரும் கேட்டார்களா? அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள்? என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள்? என்று தான் கெட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா? திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி?

    சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே? நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது? ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா?” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா? கேட்க வில்லை.இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது? என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை?

    இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார்,பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்?

    இந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.
    திமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன்? அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா?

    இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார்? அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.

    இதை யார் அக்காலங்களில் கேட்டார்கள்? கேட்பதில்லை. ஏன்? 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள்? கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    மகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ்காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள் என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தில் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ்காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்?

    கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக்காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய? மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது! கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகிவிட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது கவலைப் படுகிறார்களா?) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, பிரகாஷ் காரத் சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது.

    காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ்காரர், கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.

    மிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுகவின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீக மொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.

    இப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும். நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.

    இன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன.

    ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்?” என்று சொல்லப்படும்.

    சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபாலபுரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது!

    தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பது சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.

    எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.

    பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.

    இல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும்? எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ? ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள்? இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள்.

    சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும். விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.

    வெங்கட் சாமிநாதன்/14.2.2015.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 16, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் ந. சுந்தரம் அவர்கள்

     

    Dr. N. Sundaram. retired Professor of Hindi 1

    மேனாள் மாநிலக் கல்லூரி இந்திப் பேராசிரியர் முனைவர் ந. சுந்தரம் அவர்கள் தன் 80ஆவது வயதில் 1ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளதைப் பாராட்டி அவரது பணியைப் போற்ற விரும்பி, அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் மகிழ்கிறோம். அவரது தொடர் மொழிபெயர்ப்புப் பணியில் இப்புதிய சாதனையை குழுவினரின் பார்வைக்குக் கொண்டுவந்த வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ந. சுந்தரம் அவர்கள், பெரியகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவரின் மகனாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில், 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். நூற்பாலை ஒன்றில் பணிபுரிய இவரது தாய் கோவைக்குச் சென்றுவிட, பள்ளிப்படிப்பை முடிக்கும் பொருட்டு பெரியகுளத்திலேயே இவர் தங்க நேர்ந்தது. பெரியகுளத்தின் இந்திப் பிரச்சார சபாவில் தங்குவதற்கு இடமும், நூலகப் பணியும், அங்கே இந்தி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

    நடமாடும் நூலக ஊழியராக வாசகர்களின் வீடுகளுக்கு தமிழ் வார இதழ்களான கல்கி, ஆனந்த விகடன் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக மாதம் பத்து ரூபாய் ஊதியம் பெற்றார். அத்தொகை இவரது பள்ளிக் கட்டணத்திற்குப் பெரிதும் உதவியது. கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை பிற வாசகர்களுக்கும் முன்னரே தனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்சிகரமான அனுபவமாகக் கூறும் இவர் தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரத்தின் ரசிகர். இவரது பள்ளித் தோழர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன். அவருடன் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நூர்ஜகானாகவும், மேஜர் ஷாஜகானாகவும் ஒரு இந்தி நாடத்தில் நடித்துள்ளார்.

    ந. சுந்தரம் அவர்கள் இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார். அங்கு இவர்தம் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் இவரை இந்தியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பணித்தார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழி இலக்கியங்களிலும் ஆண்டாள், மீரா ஆகியோரைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வு செய்ய வழிகாட்டியதுடன், திவ்யப்பிரபந்தத்தை படிக்கச் சொல்லி பக்தி இலக்கியத்தின் சுவையையும் அறிய வழிவகுத்தார்.

    கோதை ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இந்தியில் மொழி பெயர்ப்பது ஒரு சவாலாக அமைந்தது இவருக்கு. தமிழ் சொல்லிற்கு ஈடான சமஸ்கிருத சொற்கள் எளிதில் கிடைப்பது போல இந்தியில் அமையாத பொழுது, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் இந்தி மொழிபெயர்ப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக ஆய்வை முடித்தார். ஃ போர்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த மொழியியல் கோடைப்பள்ளிகளில் பத்தாண்டுகள் மொழியியல் பயின்றார். அக்காலங்களில் திருக்குறளையும், பாரதியார் பாடலையும் இந்தியில் மொழி பெயர்த்தார்.

    இவரது வழிகாட்டியான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்தை இந்தியில் மொழி பெயர்த்திருந்தாலும், தமிழ்ச் சைவஇலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. சாந்திநிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பிற்காக இவரை அணுகியபொழுது, மகிழ்ச்சியுடன் அவ்வாய்ப்பை ஏற்று திருவாசம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களை இந்தியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.

    மொழிபெயர்ப்பை ஒரு தார்மீகக் கடமையாகச் செய்யும் இவர், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் “ஒரே ரத்தம்” நூலையும், அதிலுள்ள இந்திக்கு எதிரான கருத்துகளையும் சற்றும் பிசகாமல் அப்படியே இந்தியில் மொழிபெயர்த்த விதம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மொழிபெயர்ப்பின் நெறிகளை வெளிப்படுத்தி புகழ் சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

    ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை, பாகவதத்தில் “அநாயா ராதிதோ”என்ற அன்பைக் குறிக்கும் குறிப்பு மட்டுமே உள்ளது, ராதா என்ற பெயர் காணப்படவில்லை என்று கூறும் ந. சுந்தரம் அவர்கள், ஆழ்வாரின் நப்பிண்ணையுடன், பிற்கால இந்தி இலக்கியங்களில் காணப்படும் ராதாவை ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வும் செய்துள்ளார்.

    Dr. N. Sundaram. retired Professor of Hindi

    இவர் எழுதியுள்ள 40 நூல்களில் 25 நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் அழகு குறையாமல் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருப்பினும், அதை இவர் மிகவும் விரும்புகிறார்.

    இதுவரை இவர் இந்திக்கு மொழி பெயர்த்துள்ள திருமுறைகள் விவரம்:

    1 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளார்.

    2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்ப்பது தொடர்கிறது.

    4, 5, 6 திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளது

    7 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அறநிலையம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

    8 ஆம் திருமுறை திருவாசகத்தை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, கொல்கத்தா சாந்திநிகேதன், விசுவ பாரதிப் பல்கலைக்கழகம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

    10ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, அதனை தில்லிப் பதிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

     

    எண்பது வயதிலும் தளரா ஆர்வத்துடன் தமிழ் நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்து தமிழ்ப்பணியாற்றும் பேராசிரியர் சுந்தரம் அவர்களைப் போற்றுவதுடன், அவரது 2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இந்திக்கு மொழி பெயர்க்கும் முயற்சியை வல்லமைக் குழுவினர் பாராட்டி வாழ்த்துகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    தகவல்களும், படங்களும் தந்துதவிய இந்து நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கும் நன்றி.
    The language bond, SUGANTHY KRISHNAMACHARI, November 4, 2010, The Hindu
    http://www.thehindu.com/books/the-language-bond/article868614.ece

     

    முனைவர் ந. சுந்தரம் (Dr. N. Sundaram)அவர்களை தொடர்பு கொள்ள:
    தொலைபேசி: 0091 9444896916
    மின்னஞ்சல்: drnsundaram@gmail.com

    Share
  • போய்-போய் எனப்படுபவன் (தென்னாப்பிரிக்கச் சிறுகதை)

    – காஸே மொட்ஸிசி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

              களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு குறையுடனே பிறந்திருந்தான். ஆயினும் கூட, பத்து வயதாகும்போதே தனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல போய்-போய் பணம் உழைக்க ஆரம்பித்திருந்தான். அவன், நகரத்தில் பத்திரிகை விற்பதில் ஈடுபட்டிருந்தான். தேனீயைப் போல பணத்தை சேமித்து ஒளித்து வைத்திருந்த அவனுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு நீளக் காற்சட்டையும், காற்றுப் புகாத பல வர்ண ஆடைகளையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட காற்சட்டையும், பல வர்ணங்களிலான மேற்சட்டையும் உடுத்து, ஊன்றுகோலின் துணையுடன் நடமாடும் அவனுக்கு, தான் ஒரு வளர்ந்த மனிதனாகியிருப்பது போன்ற உணர்வு தோன்றியது.

              எஸ்தர் தனது புதல்வன் குறித்து பெருமைப்பட்டாள். தனது ஒன்பது வயதில் போய்-போய் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்திவிட்ட போதிலும் அவள் அதற்காகக் கவலைப்படவில்லை. ஏனெனில், அறிவைத் தேடிச் செல்லாமலேயே தனது மகனுக்கு வெற்றிகரமான வாழ்க்கையொன்றைக் கொண்டுசெல்ல முடியுமென அவள் நம்பினாள்.

              காலம் செல்லச் செல்ல போய்-போய் மூளை குழம்பிப்போன ஒருவனின் நிலைக்கு ஆளானான். தனது மகன் குறித்து எஸ்தருக்குள் இருந்த பெருமையெல்லாம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அவள் தனது மகனைக் குறித்து சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

              “மாஸேலோ, என்னோட பையன் மூடத்தனமான கேள்விகள் நிறையக் கேட்டுக் கேட்டு என்னைத் தொந்தரவு பண்றான். அவனோட தலைக்குள்ள என்ன புகுந்திருக்குன்னு எனக்குப் புரியல”

              எஸ்தர் தனது அயல்வாசிப் பெண்ணொருத்தியிடம் கூறினாள். எஸ்தர் மிகவும் கவலைக்குள்ளாகியிருப்பதை அறிந்த மாஸேலோ அவளைத் தேற்ற முயற்சித்தாள்.

              “இந்த வயசுல எல்லாப் பசங்களுமே இப்படித்தான். போய்-போய் பற்றி சொல்ல இருப்பதுவும் அவ்வளவுதான். என்னுடைய பசங்களைப் பற்றி சொல்ல இருப்பதும் அவ்வளவுதான்” என அவள் மிருதுவாகக் கூறினாள்.

              “அம்மா”

              “சொல்லு போய்-போய்?”

              “அம்மாவுக்குத் தெரியுமா? ஜோஹன்னர்ஸ்பர்க் ஸ்டேஷனிலிருக்குற படிக்கட்டுக்கள் ஓடுமாம்.”

              “ஆமாம். அது ‘Escavator – அசையும் படிக்கட்டுக்கள்’ என்று அழைக்கப்படுது.”

              என எஸ்தர் விளக்கினாள். அவளைச் சந்திக்க வரும் அநேகமான வாடிக்கையாளர்கள் அவளுக்கு அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்திருந்தனர். சிலவேளை அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்தது மெற்றிக் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும், மார்பில் மயிரடர்ந்த இள வயது மாணவனாக இருக்கலாம் என ஞாபகங்களைக் குடைந்தபடி யோசித்தாள்.

              “கீழே போகும் படிக்கட்டுகளும் தனியாக உள்ளது”

              “ஆனா, நான் முன்னாடி சொன்ன படிக்கட்டுகள் எப்பவும் மேலேயே போகுதாம். எனக்கு மேலே போற படிக்கட்டில் ஏறி கீழே போக முடியாதா?”

              “எனக்குத் தெரியல”

              “அம்மா முயற்சித்துப் பார்த்திருக்கியா?”

              “எனக்குத் தெரியாது. வாயை மூடிட்டிரு”

              “நான் முயற்சித்துப் பார்க்கப் போறேன்”

              போய்-போய் மேலே செல்லும் படிக்கட்டு நெடுகவும் கீழே இறங்க முயற்சித்ததோடு அது செய்யக் கூடிய ஒரு வேலைதானென அறிந்துகொண்டதில் அதிக பூரிப்புக்குள்ளானான். ஒரு புறம் மாத்திரமே வாகனங்கள் செல்லவேண்டிய பாதையில் வெற்றிகரமாக எதிர்ப்புறத்தில் வாகனத்தை ஓட்டிய சாரதிக்கு ஏற்படும் உற்சாகம் போய்போய்க்குள்ளும் ஏற்பட்டது.

              “அம்மா, எங்களுக்கு போலிஸ்காரன்கள் எதுக்கு?”

              “எங்களுக்கு போலிஸ்காரன்கள் மட்டுமில்ல. போலிஸ்காரிகளும் இருக்கிறாங்க”

              எஸ்தர் தனது மகனின் அடுத்த கேள்வியை எதிர்பார்த்தபடி கூறினாள்.

              “எங்களுக்கு அவங்க எல்லாம் எதுக்கு?”

              “மனுஷங்களக் கைது செய்ய”

              “நான் போலிஸ்காரனாகப் போறேன்”

              போய்-போய் கைவிலங்குச் சோடியொன்றையும் போலிஸ் ஊதியொன்றையும் கண்டெடுத்தான். அவற்றை எங்கு, யாரிடமிருந்து பெற்றுக் கொண்டானென்பது பரம ரகசியமாக இருந்தது. போலிஸ் ஊதியை ஊதுவதன் மூலம் போய்போய் எவ்வளவு திருப்தியடைந்தான்?! அவ்வாறே அந்த ஓசையைக் கேட்டு எஸ்தர் எவ்வளவு திகிலடைந்தாள்?!

              “நான் போலிஸ்காரன். குசினியில் கள்ளச்சாராயம் குடிக்கிற மனுஷங்களை நான் கைது செய்யப் போறேன்”

              போய்-போய் தனது கண்களிலிருந்து கடமையின் ஒளியைச் சிந்தியவாறு எஸ்தரிடம் கூறினான்.

              “நான் உங்களைக் கைது செய்றேன்”

              தனது பாத்திரத்தில் மதுபானத்தை அருந்தியபடி, நரைத்த தலையுடனிருந்த ஒருவரிடம் சென்ற போய்போய் கூறினான்.

              “சரி. கைது செய்”

              பையனுக்கு மகிழ்ச்சி தரும் எண்ணத்தில் வயதான அம் மனிதர் கூறினார். அத்தோடு தனது இரு கரங்களையும் நீட்டினார். கை விலங்குகளேறின.

              அதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகும் கை விலங்குகளை அகற்றுமாறு போய்-போயிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தலை நரைத்த மனிதரைக் காணக் கூடியதாக இருந்தது. முதல்தடவையே போய்போய் அதற்கு ஐந்து சிலிங் காசுகள் கேட்டிருந்தான். இப்பொழுது திரும்பவும் அதையே கேட்டான். தலை நரைத்த மனிதர் கோபத்துக்குள்ளானார்.

              “நீ இதைக் கழற்றலன்னா நான் உனக்குக் காலால…”

              அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே போய்-போய் தனது ஊன்றுகோலினால் அவரது நரைத்த தலையைத் தாக்கினான். ‘எஸ்தர்’ என அவர் ஓலமிட்டார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தலையிலிருந்து சில இரத்தத் துளிகள் சிந்தின.

              தலை நரைத்த மனிதன் தர வேண்டிய பணத்தை எஸ்தர் கொடுத்தாள். கை விலங்குகள் அகற்றப்பட்டன.

              “நானொரு போலிஸ்காரன்” எனக் கத்தியபடி போய்போய் வீட்டிலிருந்து தெருவுக்கு ஓடினான்.

              “நான் இனி ஒருநாளும் இந்த வீட்டுக்குக் குடிக்க வரமாட்டேன்”

              தலை நரைத்த மனிதன் கூறினார்.

              அதற்குப் பிறகு காலக்கிரமத்தில் எஸ்தரின் மதுபான வாடிக்கையாளர்களது எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவளது ஆண் நண்பர்களது வருகையும் படிப்படியாகக் குறைந்தது. போய்-போயின் நடவடிக்கைகளே அதற்குக் காரணமாக அமைந்தது. நள்ளிரவில் படுக்கையறைக்கு ஓடிவரும் போய்-போய், எஸ்தருக்கருகில் படுத்துக் கொண்டிருப்பது எவராயிருந்தபோதிலும் தனது ஊன்றுகோலால் தாக்கினான்.

              “இந்த வீட்டுல தேவைக்கும் அதிகமாக பூச்சிகள் இருக்கு”

              என ஒருநாள் போய்-போய் தனது தாயிடம் கூறினான். எஸ்தர் பதிலளிக்கவில்லை. தனது மகன் நொண்டியவாறே வீட்டிலிருந்து வெளியேறிப் போவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

              சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டசினளவு தீப்பெட்டிகளை வாங்கி எடுத்துக் கொண்டு போய்-போய் திரும்ப வந்தான். வாங்கொன்றில் அமர்ந்த அவன் தீப்பெட்டியொன்றைத் திறந்து தீக்குச்சியொன்றை வெளியே எடுத்தான். அதை எரித்த அவன் அதிலிருந்து எழுந்த நெருப்பைப் பார்த்துச் சிரித்தான். தீக்குச்சிகள் தீரும்வரைக்கும் அவன் அக் காரியத்தையே தொடர்ந்தபடி இருந்தான். அது முடிந்ததும் அடுத்த தீப்பெட்டியை எடுத்தான். சொற்ப நேரத்துக்குப் பிறகு பன்னிரண்டு தீப்பெட்டிகளும் முடிந்திருந்தன.

              “இப்ப என்கிட்ட பன்னிரண்டு சவப்பெட்டிகள் இருக்கு”

              வெற்றுத் தீப்பெட்டிகளை அவாவோடு பார்த்தவாறு போய்போய் மேலும் கூறினான்.

              “நான் இன்னிக்கு பன்னிரண்டு பூச்சிகளைப் பிடிச்சு கொன்னு பார்க்கப் போறேன்”

              அன்று பன்னிரண்டு பூச்சிகள் கொன்று புதைக்கப்பட்டன.

              மறுநாள் பலகைத் துண்டுகளையும், ஆணிகளையும் கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்த மகனை எஸ்தர் கண்டாள். அவன் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதால் அவனுடன் கதைக்க விரும்பாவிடினும் கூட, அவளால் கதைக்காமலிருக்க முடியவில்லை. அவள் தனது மகன் செய்துகொண்டிருக்கும் வேலை குறித்து விசாரித்தாள்.

              “நான் டொப்ஸிக்கு ஒரு சவப்பெட்டி செய்றேன்”

              டொப்ஸி, அக் குடும்பத்தின் வளர்ப்புப் பிராணியான நாய்க்குட்டி. வார்த்தையால் விபரிக்க முடியாதளவு பீதியோடு எஸ்தர் வினவினாள்.

              “ஆனா நாய்க்குட்டி செத்துப் போகலையே?!”

              “அது செத்துப் போன மாதிரி நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்”

              அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

              “அது ஒரு கெட்ட கனவு. அது இன்னும் சாகல”

              டக்.டக்.டக். சுத்தியலின் ஓசை கேட்டது.

              “அப்படீன்னா நான் அதைக் கொல்லணும். நான் இந்தப் பெட்டியில அதைப் போட்டுப் புதைக்கணும்”

              எஸ்தர் நாயைத் தேடிக் களைத்தாள்.

              “டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி”

              நாயைக் கண்டுபிடித்த எஸ்தர் அதனைப் பாதுகாக்க வேண்டி அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்த தனது மாமா ஒருவரின் வீட்டுக்கு அதனை எடுத்துச் சென்றாள்.

              அவள் திரும்பவும் தனது வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியிருக்கும். கதவு மூடித் தாழிடப்பட்டிருந்தது. அவள் கதவைத் தட்டினாள்.  ஜன்னல் வழியே பார்த்து போய்-போய் கத்தினான்.

              “இது என்னோட வீடு.. போயிடு”

              “போய்போய் இது நான். உன்னோட அம்மா”

              “போ..போயிடு.. என்னோட அம்மா இன்னும் பிறக்கல”

    **********************

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு :

     

    காஸே மொட்ஸிசி

     rishaa

             கரோபோ மோசெஸ் மொட்ஸிசி (Karobo Moses Motsisi ) என்ற இயற்பெயரைக் கொண்ட காஸே மொட்ஸிசி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

     

              1932 ஆம் ஆண்டு, ஜோஹன்னர்ஸ்பர்கில் பிறந்த இவர், அங்கேயே கல்வி கற்று பின்னர் சிறிது காலம் தென்னாபிரிக்காவின் கௌதெங்க் மாகாணத்திலுள்ள ப்ரிடோரியா எனும் நகரத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு ‘ட்ரம் (Drum) இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு ட்ரம் (Drum), த கிளாசிக் (The Classic), த வேர்ல்ட் (The World) ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 

     

              1977 ஆம் ஆண்டு, தனது 45 ஆவது வயதில் காலமான இவரது படைப்புக்களையெல்லாம்  ஒன்று சேர்த்து ‘ராவன்’ பதிப்பகமானது, 1978 ஆம் ஆண்டு ‘காஸே & கோ (Casey & Co)’ எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

    Share
  • அடியோடு புகை ஒழிப்போம்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
    வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய் புகைவிடுவார்
    சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
    சளைக்காமல் சுருட்டதனை தம்பாட்டில் சுவைத்துநிற்பர்!

    வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
    அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
    தங்கிநிற்போம் எனவெண்ணித் தனியாக மரமொதிங்கின்    cigar
    அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர்

    பார்க்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ஸ்டாப்பிலும் புகைத்துநிற்பர்
    போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்
    நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்
    பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர்!

    பேருந்தில் ஏறியதும் பெரும்சிரிப்பைத் தந்தபடி
    பெரியதொரு பைக்கற்றைப் பிரித்துமே எடுத்திடுவார்
    வெள்ளையாய்த் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து
    விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும்!

    ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
    மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
    உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
    ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர்!

    பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்
    பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்
    துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்
    துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார்!

    புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு
    புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு
    ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை
    தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார்!

    படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
    அடுக்கடுக்காய்ச் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
    நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
    நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது!

    காலைமாலை பார்க்காமல் கணக்கின்றிப் புகைபிடிக்கும்
    காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
    நாலுவேளை குடிப்பதற்குக் கஞ்சியின்றி இருப்பாரும்
    நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார்!

    பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
    பாங்காகச் சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
    கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனைக் கையில்வைத்துத்
    துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார்!

    மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்
    வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்
    அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை
    வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை!

    நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
    பாயிலே தாயோடு பால்குடித்துத் தூங்கும்பிள்ளை
    யாரையுமே பொருட்டெனவே தன்மனதில் நினையாது
    வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்!

    இருமுகின்ற நோயாளி இருதயத்தைச் சோதிக்கும்
    எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்
    சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதிச்
    சுவைத்திடுவார் சுருட்டதனைச் சுருண்டுநிற்பான் நோயாளி!

    நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
    நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்?
    நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்
    நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும்!

    பலபோதைச் சரக்குகளைப் பதப்படுத்திக் கலந்தெடுத்துப்
    பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி
    விதம்விதமாய்ச் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக
    விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே!

    அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி
    வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்
    இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி
    சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்!

    காலையிலே சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்
    வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்
    நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்
    நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும்!

    புகைப்பிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று
    பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்
    புகைப்பிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
    புகைப்பிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன்?

    குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று
    குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்
    துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்
    அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை!

    குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது
    அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்
     படுகுழியில் வீழ்த்துகின்ற பாதகனைக் களைந்தெறிந்தால்
    விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும்!

     

    Share
  • ஒற்றை இதயம் எத்தனைக் காயம்?

    -கவிஞர் காவிரிமைந்தன்

    அன்பின் அலைகள் தவழ்ந்து கிடந்தால்
    இன்ப நிலை தோன்றும்!
    ஆசை அலைகள் துள்ளி எழுந்தால்
    அடங்குதல் முறையாகும்!
    எங்கே மனிதன் எல்லைக்குள்ளே
    தன்னை வகுக்கிறான்?
    எல்லைகள் அங்கே மீறும்போது                             heart
    தொல்லைப் படுகின்றான்!

    சொல்லத் தெரிந்த மொழியிலெல்லாம்
    சொல்லிப் பார்க்கின்றான்!
    சொல்லாததுவே அதிகமென்று
    பின்னர் நினைக்கின்றான்!
    காலையில் எழுவதும் மாலையில் விழுவதும்
    கதிரவன் கணக்காகும்!
    கண்ணுக்குள்ளே கண்ணைவைப்பது
    கற்பனைச் செயலாகும்!

    காட்சிப் பிழைகள் கண்ணில் தோன்றும்
    காலத்தின் கட்டாயம்!
    கனவுகள் கலைவது காலையில் எழுந்தால்
    நிஜங்கள் தெளிவாகும்!
    தொட்டது எங்கே… விட்டது எங்கே…
    தொடர்ச்சி இங்கில்லை!
    புள்ளிகள் வைத்த கோலத்திலும்கூட
    புணர்ச்சிகள் கிடையாது!

    எனக்குள் நானே எழுப்பும் கேள்விகள்
    எல்லாமிங்கே அனுபவங்கள்!
    எண்ணிப் பார்த்து இன்னும் நடந்தால்
    எதிர்காலம் சுகமாகும்!
    கண்ணில்வழியும் நீருக்குமட்டும்
    களங்கங்கள் கிடையாது!
    மன கங்கை வழியும் நேரத்திலே
    மௌனங்கள் உடையாது!

    ஒற்றை இதயம் எத்தனை காயம்
    மனிதன் சுமக்கின்றான்!
    அத்தனைக்கும் காரணமறிந்து
    தனியே சிரிக்கின்றான்!
    எண்ணத் தேரில் கண்ணனை வைத்தால்
    வாழ்க்கைச் சீராகும்!
    எடுத்துச் சொன்ன கீதையின் சாரம்
    வாழ்க்கை நெறியாகும்!

    என்ன சாதியில் பிறந்தாய்
    என்பது கேள்வியில்லை!
    என்ன சாதிக்கப் பிறந்தாய் என்பதைத்
    தெளிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை!
    ஒவ்வொரு நாளும் உனக்களித்த
    இறைவனின் பரிசாகும்!
    உணர்ந்து நடந்தால் மனிதா
    உனைத்தானே உலகே வழி கேட்கும்!

     

    Share
  • கற்பதெப்போ?

    -கவியோகி வேதம்

    வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
    வாகாய்க் குழைப்பவன் நீயா?
    கூனல் இளம்பிறைச் சில்லில் அழகினைக்
    கூட்டும் சிற்பியும் நீயா?

    வண்ணத்துப் பூச்சியின் ‘ றெக்கையைப்’ பிடித்தே
    வர்ணம் தீட்டுவோன் நீயா?
    சுண்ணம் தீட்டாது புறாவினில் வெண்மையைச்
    சுடரவே விட்டவன் நீயா?

    என்னஓர் விந்தையும் இஃதுபோல் செய்யாமல்
    எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
    சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாய்ச்
    செய்திடும் தன்னல மானிடனே!

    மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
    மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
    தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
    தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

    பாதையில் போகையில் வாகனம் மோதினால்
    பார்த்துநீ ‘அவரை’யே காத்ததுண்டா?
    சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
    சுணங்கா(து) உதவிகள் செய்ததுண்டா?

    பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
    பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
    தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
    ‘தேவனாய்’ உயர்–வழி என்றுகற்பாய்?

     

    Share
  • இணைந்த இதயங்கள் …

    கலைமகள் ஹிதாயா.

    “வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை. ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்…வாழ்வதில் என்னடி அர்த்தம்….?”

    “பரீனா, வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால், அதை நானோ, நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? “ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே” என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம். ஆமாம், விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. அதனை ‘இறைவழி’ என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன். எனவே, எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை. ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.”

    அப்போ, காலமெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காகவே என்னை அவரையே திருமணம் செய்யும் படி சொல்கிறாய்”…? பரீனா பரிதாபமாகக் கேட்டாள்.

    “என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது….உன்னைத் தவிர வேறு ஓர் ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று, அன்று ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன். அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூவினாயே … நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று எதிர் பார்த்தாயே … ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூசியாகிவிட்டதே” இர்பானா கிண்டலாகப் பேசினாள்.

    “இர்பானா, என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய். “

    “நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா? பரீனா, கொஞ்சம் சிந்தித்துப்பார். நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.”

    இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது. பல்கலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை பெற்றோர் பிரித்து வைத்தார்கள். பரீனா பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள். நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.

    நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான். பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள் துன்பம் தடவிப் பார்த்தது. நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டான். இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது. திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.

    பரிசோதனை செய்வதற்காக வார்ட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள். பனித் துளிகளைப் போல் கண்ணீரை தூவினாள். நண்பி என்ற முறையில், இர்பானாவிற்கு தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்து வந்தாள் பரீனா. தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள். நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா, அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புழுவைப் போல் துடித்தாள்.

    உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவனது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள். சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தியது. தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள். கடைசியில் நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்.

    “இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி; நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி”.

    “பரீனா …..இப்பத்தாண்டி தெரியுது ….உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு. இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? “

    “அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்”.

    பரீனா சொல்லி முடித்து தலை நிமிர,  தாதி ஒருவர் வந்து அழைத்தாள். பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.

    நஜீம், “பரீனா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது. வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன். என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்”.

    சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னாள் “நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன். இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே”

    திடீரென்று பரீனா … பரீனா … என அழைக்கும் அழைப்பை கேட்டுத் திரும்பினாள்….அழைத்தவள் இர்பானா .

    ” என்னடி வந்திட்டியா?”

    “ஆமாடி “

    “எப்படி நஜீம் வருத்தமெல்லாம்?” இர்பானா கேட்டாள்.

    “கொஞ்சம் பரவாயில்லை இர்பானா “

    “பரீனா நஜீம் பாவம்டி, உன் பிரிவைத் தாங்க முடியாமல்தாண்டி அவர் இந்த நிலைக்கேத் தள்ளப்பட்டார். நீதாண்டி அவருக்கு நோய் ஏற்படக் காரணமாக அமைந்தவள்”

    இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா, அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது.

    “இதோ கேள் பரீனா….நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி. என் பெற்றோருக்கு இவன் மட்டுந்தாண்டி ஆண் செல்வம். என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள். என் தாய் காலமாக தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர், இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார். நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன். அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும், என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல…. அதனால்தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.”

    “இர்பானா…..அப்போ நீ என் மைனியாடி….? ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்….” இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே அழுதாள்.

    “இர்பானா என் வாழ்க்கையில் தான் துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்……இனிமேல் என்னவரை….ஆமாம், உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி”

    கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள். இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான்.

    பரீனா விடயத்தை விபரமாகச் சொன்னாள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர்தான்.

    இர்பானா நஜீமிடம், ” தம்பி, பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர். இறைவன் துணையால் அவள் உன் நோயை சுகப்படுத்துவாள். முதலில் நீ என்னில்லம் போக வா……இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்”, என்று அன்போடு அழைத்தாள். பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக….,
    நல்வாழ்த்து நான் சொல்வேன்………
    நல்லபடி வாழ்கவென்று….
    கல்யாணக் கோயிலிலே
    கணவன் ஓர் தெய்வம்மா……
    எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(63)

    -செண்பக ஜெகதீசன்

    களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (திருக்குறள்:929 – கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    விளக்கு வைத்துக்
    குளத்தில் விழுந்தவனைத்
    தேடிடும்
    வீணான செயல் போன்றதே,
    காரண காரியம் காட்டி
    அறிவுரை சொல்லிக்
    குடிகாரனைத்
    திருத்த முயல்வதும்…!

    குறும்பாவில்…

    குடித்தவன் திருந்தச்சொல்லும் அறிவுரையும்,
    குளத்துநீரில் விழுந்தவனைத் தேடக்
    கொளுத்திடும் பந்தமும் பயனில…!

    மரபுக் கவிதையில்…

    குளத்து நீரில் விழுந்தவனைக்
       கண்டு பிடித்துக் கரையேற்ற
    விளக்கு கொளுத்தித் தேடுதல்போல்
       வீணாம் செயலது ஏதுமில்லை,
    அளவை மிஞ்சிக் குடிப்பவர்க்கே
       அறியக் காரணம் சொன்னாலும்
    இளகி மனமது திருந்தாரே,
       இதுவும் அதுபோல் வீண்தானே…!

    லிமரைக்கூ…

    விழுந்தவனை விளக்குடன்தேடிப் பயனில்லை நீரில்,
    குடித்தவனைக் காரணம் பலசொல்லித்
    திருத்திவிடப் பார்ப்பதிலும் பலனேதுமில்லை பாரில்..!

    கிராமிய பாணியில்…

    தேடாத தேடாத
    தண்ணிக்குள்ள தேடாத,
    உழுந்தவனக் கண்டுபுடிக்க
    வெளக்குவச்சித் தேடாத,
    பந்தம்வச்சித் தேடுனாலும்
    பலனேதும் கெடயாதே…

    அதுபோல,
    சொல்லாத சொல்லாத
    காரணமெல்லாஞ் சொல்லாத,
    கள்ளுகுடிச்சவன் திருந்தமாட்டான்
    காதுலயும் வாங்கமாட்டான்,
    சொல்லாத சொல்லாத
    நல்லவார்த்த சொல்லாத…

    தேடாத தேடாத
    தண்ணிக்குள்ள தேடாத…!

     

    Share
  • தனிமை!

    -மெய்யன் நடராஜ், இலங்கை

    வாலிபத்தைத் தின்று தீர்த்து 
    வயோதிகத்தின் நுழைவாயிலில் நின்று 
    வரவேற்புச் செய்கிறது தனிமை! 

    ஞாபகச் சிறகசைத்து 
    அண்டங்கள் தாண்டிப் 
    பறக்கத்தொடங்கி விட்டது அது! 

    நிழலின் கரம் பிடித்து 
    நெடுந்தூரம் போன பின்னும் 
    இளைப்பாற இடம்தேடி 
    ஏக்கத்தில் தவிக்கத் தொடங்கியும் விட்டது! 

    துயரங்களின் சுரம் பிரித்துத் 
    துக்கங்களால் இசை அமைத்துத் 
    தோல்வியின் பாடல்களும் 
    பாடிக் கொள்கிறது! 

    இதயத்தைச் சுட்டெரிக்கும் 
    வாழ்வின் அவஸ்தைகளோடு 
    விடைகள் இல்லாத கேள்விகளின் 
    பாரம் சுமந்து 
    புன்னகை தொலைத்து 
    நாளையைப் பற்றிய போராட்டங்களோடு 
    புறப்பட்டுப் போகிறது! 

    மௌனத்தின் புலம்பல்களோடு 
    மயானத்தை தழுவத் துடித்து 
    ஊமையாய் ஊர்வலம் போகிறது ஒரு 
    ஊதாரித் தனிமை!

     

    Share