கிரேசி மோகன்

ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்….வெண்பாவில் எழுத வழக்கம் போல் ஆசை வந்தது….காப்புச் செய்யுள் எழுதி கணபதியிடம் முடித்துத் தரும் பொறுப்பை விட்டு விட்டேன்….பார்க்கலாம் என்ன ஆகிறதென்று….

images

காப்புச் செய்யுள்
———————

“பண்டரி நாதரின் பக்த விஜயத்தை,
சுண்டெலி தாங்கும் சிவக்கொழுந்தே -விண்டுரைக்க
வாராய் விநாயகா வாக்கில் அமர்ந்தெனக்கு
தாராயுன் தம்பியின் தமிழ்”…..கிரேசி மோகன்…

“வனிதை பதுமா வதியை வரித்து
புனிதமண வாழ்வில் புகுந்தார்;-இனிதான
பாரியா ளோடு பிணைந்தாலும், போக்கினார்
பூரியானில் பூரித்து போது”

“விரகதா பத்தால் வெயிலாய் தலையில்,
கரகமாடும் சூட்டைக் குறைக்க, -உருகுமுந்தன்,
பாதப் பனிமலரை ராதேவை” என்பதாய்
கீதகோ விந்தக் கவி”

“பதிவிரதா தர்மம் பழகிடும் பத்மா
வதிவழி பாடு ,விரதம் -துதியென்று
கஷ்டப் படாமலே கண்டாள் கணவனாய்,
அஷ்டபதி நாயகனை அன்று”….

—————————————————————————

images (1)
நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி பண்டரி விட்டலனை வாழ்த்தி
களிகொள் அடியார்தம் கூட்டு….

இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்.

தொட்டால் சுடுவான் தொடாமல் இருப்போரை
கொட்டோகொட் டென்று குளிர்விப்பான் -விட்டலன்
சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை
பட்டறையில் வைப்பான் புதைத்து

வாழை யடிவாழை வந்தோர் வளத்துடன்
வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள் -ஏழை
சகாயா ஏபாண்டு ரங்கா என்னுள்
புகாயோ புகல்வாய் பதில்.

வண்டரி யென்றரி யாமலே வந்திரு
புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
கொட்டுதே தேளாய்க் கடுத்து.

சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
வாத புரீசன் வடமதுரா மன்னவன்
கீதகோ விந்தந்தாள் காப்பு.

“விட்டலை(விட்டு அலை) பாற்கடல், வீர மராத்தியர்
கட்டளைக்கு கல்லேறி காத்திருக்கும்- விட்டலை,
பாண்டுரங்க நாதனை, பண்டரி தேவனை
வேண்டுவோர்க்கு வாழ்விலென்றும் WIT”….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.