தனிமை!

-மெய்யன் நடராஜ், இலங்கை

வாலிபத்தைத் தின்று தீர்த்து 
வயோதிகத்தின் நுழைவாயிலில் நின்று 
வரவேற்புச் செய்கிறது தனிமை! 

ஞாபகச் சிறகசைத்து 
அண்டங்கள் தாண்டிப் 
பறக்கத்தொடங்கி விட்டது அது! 

நிழலின் கரம் பிடித்து 
நெடுந்தூரம் போன பின்னும் 
இளைப்பாற இடம்தேடி 
ஏக்கத்தில் தவிக்கத் தொடங்கியும் விட்டது! 

துயரங்களின் சுரம் பிரித்துத் 
துக்கங்களால் இசை அமைத்துத் 
தோல்வியின் பாடல்களும் 
பாடிக் கொள்கிறது! 

இதயத்தைச் சுட்டெரிக்கும் 
வாழ்வின் அவஸ்தைகளோடு 
விடைகள் இல்லாத கேள்விகளின் 
பாரம் சுமந்து 
புன்னகை தொலைத்து 
நாளையைப் பற்றிய போராட்டங்களோடு 
புறப்பட்டுப் போகிறது! 

மௌனத்தின் புலம்பல்களோடு 
மயானத்தை தழுவத் துடித்து 
ஊமையாய் ஊர்வலம் போகிறது ஒரு 
ஊதாரித் தனிமை!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *