நினைக்கத் தெரியாத மனமே
– ரா.பார்த்தசாரதி.
ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.
ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத் துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.
தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.