Blog

  • உலகத்தில் சிறந்தது தாய்மை …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ulagaththil...

    எத்தனையோ பாடல்கள் எழுதப்படுகின்றன… எல்லாப் பாடல்களும் நம் நெஞ்சைத் தொடுவதில்லை… இதோ இந்தப் பாடல் நெஞ்சைத் தொடுவது மட்டுமல்ல… நெஞ்சில் நிறைகிற வகையைச் சார்ந்தது! அன்பின் தொடக்கம் அன்னையிடமே… இதை எந்தப் பிள்ளையும் மறப்பதில்லையே!

    Pattanathil-Bhootham

    பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் நடைபெறும் போட்டிப் பாடல் ஒன்று தருகின்ற விளக்கங்கள் கேட்டுப் பாருங்கள்… முதலில் நாகேஷ் அவர்கள் வட்டிக்காக வாங்குகிற வக்காலத்து.. அட.. இது சரிதானே என்று சொல்ல வைக்கும்! அடுத்து வருகிற கே.ஆர்.விஜயா … காதலை முன்மொழிந்து சபையில் கரவொலி வாங்கும்போது… அட… ஆமாம் என்றே நமக்குப்படும்! முத்தாய்ப்பாக ஜெய்சங்கர் மேடையேறி… தாய்மைக்காக வாதிடுகிற ஒவ்வொரு வரியும் கோபுரவாசல்போல உயர்ந்துநிற்கும்! இத்தகு எளிமையான வரிகளிட்டு தாய்மைக்கு ராஜகோபுரம் கட்டிவைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன்! ஆர். கோவர்த்தனன் இசையில்…. டி எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா மற்றும் ஏ.எல்.ராகவன் குரல்களில்…

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    காணத் துடிப்பது அது…
    சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
    இதயத்தில் இருப்பது அது…
    இதயத்தில் இருப்பது அது.. .

    அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
    அகிலத்தின்பெருங்கதை அது
    அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
    ஆனந்த மாளிகை அது
    உலகத்தில் சிறந்தது காதல்…
    அந்தக் காதல் இல்லையே சாதல்…
    உலகத்தில் சிறந்தது காதல்…

    அன்பின் உன்னதம் எங்கு அதிகமாக மிளிர்கிறது என்று பார்க்கும்போது வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும்தான்… ஆனால் அது தாய்மையிலன்றோ கோவில் கொண்டிருக்கிறது!

    உலகப் பொருளாதாரத்தின் மூலகாரணியாய் விளங்கும் பணம்… ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் தொடரும் அற்புத உணர்வு காதல்… இவையிரண்டையும் மிஞ்சி நிற்கும் தாய்மை! பாட்டுமன்றத்தில்கூட ஒரு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பையும் இனிதே வழங்கியிருக்கும் பெருமை எல்லாம் கவியரசே உனக்கே கைவந்த கலை! உன் கவிதைகள்… பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்காக நீ வடித்த அர்த்தமுள்ள சொல்லோவியங்கள்!!

    இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் …
    தன் தாய் தனக்காக பட்டபாடுகள் நெஞ்சில் எழாதவர் எவரிங்கே?
    கண்ணில் நீர்சொரியும் கருணை மேகம் அவள்தானே..

    கவியரசின் வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்களை ஆராதிக்காமல் இருக்க முடியுமா? கவிதா தேவியின் தலைமகனே உன்னிடத்தில் பூத்த உணர்வுப்பூக்கள் இன்றும்கூட உதிராமலிருக்கின்றன! இந்த பூமியில் இன்னும் கலப்படமாகாதது… அப்பழுக்கற்றது தாய்ப்பால் என்பார்கள்… அந்தத் தாய்ப்பாலுக்கு இணையான வரிகளாகவே இவற்றை நான் காண்கிறேன்… கேட்கும்போதெல்லாம் ஜீவன்வரை நனைகிறேன்!!

    உள்ளே உயிர் வளர்த்து…உதிரத்தால் பால் கொடுத்து
    அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
    தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
    சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
    பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
    பால்தரும் கருணை அது – சிலர்
    பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
    பழம் தரும் சோலை அது
    இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
    கொடுக்கின்ற கோவில் அது – தினம்
    துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
    அணைக்கின்ற தெய்வம் அது

    அண்மையில் ஓரிடத்தில் படித்தேன்… ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஒரு ஆண்… ஒரு பெண் … என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆண் குழந்தை உயிருடனும் பெண் குழந்தை இறந்தும் என்று மருத்துவர்கள் சொல்ல… அந்தத் தாய் இறந்த பெண் குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்து இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக அழுகிறாள்… ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்… இறைவனின் காதில் அந்தத் தாயின் குரல்கேட்டதுவோ என்னவோ… அந்தப் பெண் குழந்தை சிணுங்கத் தொடங்குகிறது… மருத்துவர்களே அதிசயத்த இந்த நிகழ்வில் நாம் அறிந்துகொள்வது… அந்தச் சிசுவுக்கு மீண்டும் உயிரூட்டியது தாயின் அரவணைப்புதானே… தாய்மையைின் மேன்மைக்கு நிகராக இத்தரணியில் ஏதுமில்லை… ஏதுமில்லை… ஏதுமில்லை…

    படம்: பட்டிணத்தில் பூதம்
    பாடல் : கண்ணதாசன்
    இசை: கோவர்த்தனன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
    நடிகர்கள்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ்
    _______________________________________________

    உலகத்தில் சிறந்தது எது?
    எது.. எது.. எது?
    உலகத்தில் சிறந்தது எது – ஓர்
    உருவமில்லாதது எது
    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
    அனுபவமாவது அது.. (உலகத்தில்)

    ஆளுக்கு ஆளு தருவதுண்டு
    அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
    நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு
    நல்ல நல்ல திட்டங்களும் வருவதுண்டு

    அது இல்லையென்றால் எதுவும் இல்லை
    தொழில்லை… முதலில்லை… கடனுமில்லை
    சொல்லப்போனால் உலகமெங்கும்
    வரவில்லை… செலவில்லை… வழக்குமில்லை…
    அதன் ஆயுள் கெட்டி …
    மெல்லப் பார்க்கும் எட்டி …
    அதன் பேர்… …டி..
    தெரியல்லே.. ..ட்டி…
    இன்னுமே தெரியலே…
    . . . . வட்டி..

    வட்டி… உலகத்தில் சிறந்தது வட்டி
    ஒர் உருவமில்லாதது வட்டி…
    உலகத்தில் சிறந்தது வட்டி
    வட்டி.. வட்டி.. வட்டி (உலகத்தில்)

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    காணத் துடிப்பது அது…
    சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
    இதயத்தில் இருப்பது அது…
    இதயத்தில் இருப்பது அது… (உலகத்தில்)

    அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
    அகிலத்தின்பெருங்கதை அது
    அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
    ஆனந்த மாளிகை அது
    உலகத்தில் சிறந்தது காதல்…
    அந்தக் காதல் இல்லையே சாதல்…
    உலகத்தில் சிறந்தது காதல்…

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    மறக்க முடியாதது – காதல்
    கட்டி அணைப்போரும் கலந்து மிதப்போரும்
    மறக்க முடியாதது – காதல்!

    உள்ளே உயிர் வளர்த்து… உதிரத்தால் பால் கொடுத்து
    அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
    தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
    சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
    பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
    பால்தரும் கருணை அது – சிலர்
    பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
    பழம் தரும் சோலை அது
    இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
    கொடுக்கின்ற கோவில் அது – தினம்
    துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
    அணைக்கின்ற தெய்வம் அது

    அது தூய்மை…
    அது நேர்மை…
    அது வாய்மை…
    அதன் பேர் தாய்மை…
    உலகத்தில் சிறந்தது தாய்மை… அதை
    ஒப்புக் கொள்வதே நேர்மை…

    உலகத்தில் சிறந்தது தாய்மை..
    உலகத்தில் சிறந்தது தாய்மை..
    உலகத்தில் சிறந்தது தாய்மை..

    காணொளி : https://youtu.be/c0toeUW9fEs

    https://youtu.be/c0toeUW9fEs

    Share
  • அடங்கினால் நன்மை அன்றோ !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
    பருகத் தந்த அம்மா
    காலைத் தூக்கிக் கண்ணில்வைத்து
    கட்டிக் கொஞ்சிய அம்மா
    வேலைவேலை என்று சொல்லி
    வெளியில் தினமும் போனால்
    பாலகரின் நிலையைச் சற்றுப்
    பார்த்தல் நன்று அன்றோ!

    வேலைக்கார அம்மா வந்து
    வீட்டைப் பொறுப்பு எடுப்பார்
    பாலைக் காய்ச்சும் அம்மாவப்போ
    படுக்கை விட்டு எழுவார்
    ஓடியெழுந்து  அங்கு வந்து
    உடையை எடுத்து மாட்டி
    ஓடிடுவாரே காரை நோக்கி
    உரத்துக் கத்திக் கொண்டே!

    ஆடியாடி ஐயா வந்து
    அரை குறையாய் நின்று
    ஆங்கிலத்தில் முணு முணுத்து
    அங்கு மிங்கும் திரிவார்
    மேசையிலே வைத்த ரொட்டி
    மெது மெதுவாய் ஆறும்
    வெளியில் செல்ல வந்த ஐயா
    வெறுப்புக் கொண்டு முறைப்பார்!

    வேலைசெய்ய வந்த  அம்மா
    மூலை ஒதுங்கி நின்று
    வாலைச் சுருட்டும் நாயைப்போல
    மெளனம் ஆகி நிற்பார்
    சத்தம்போட்டு சத்தம் போட்டு
    காரை எடுக்கும் ஐயா
    சப்பாத்தை விட்டு விட்டுச்
    சலித்துக் கொண்டே செல்வார்!

    தூங்கியெழுந்த பிள்ளை அங்கு
    துவண்டு வந்து நின்று
    தாங்க வொணாத் தாகத்தோடு
    தாயை நினைந்து நிற்கும்
    வேலைக்கார அம்மா அங்கே
    விரைந்து வந்து நின்று
    பாலைக் கையிற் கொடுத்துவிட்டுப்
    பருகு என்று சொல்வார்!

    பாலைப் பருக விருப்பமின்றி
    பார்க்கும் ஒரு பார்வை
    வேலைக் கார அம்மாவுக்கு
    விசரை ஊட்டி நிற்கும்
    கையைக் காட்டி கண்ணையுருட்டி
    பாலைப் பருக வைக்க
    வேலைக் கார அம்மாதானும்
    வேர்த்துக் களைத்துப் போவார்!

    பள்ளி செல்ல விருப்பமின்றி
    துள்ளி ஓடும் பிள்ளை
    கையைப் பிடித்து கூட்டிச்செல்ல
    களைத்துப் போவார் அவரும்
    மெல்ல ஏதும் சொல்லிவிட்டால்
    விக்கி விக்கி அழுதே
    பள்ளிசெல்லும் பாதைவிட்டு
    தள்ளி ஓடி நிற்கும்!

    வீடுவந்து சேர்ந்த பின்னர்
    வெறித்து வெறித்து பார்த்துத்
    தாறுமாறாய் சேட்டை செய்து
    சண்டை செய்தே நிற்கும்
    கூறுகெட்ட பிள்ளை என்று
    குறைகள் கூறி நின்று
    கோபங் கொண்டு கையெடுத்து
    குட்டி நிற்பார் மீண்டும்!

    ஆறு மணி ஆனதுமே
    அம்மா வந்து நிற்பார்
    தாறுமாறாய் இருக்கும் வீட்டை
    தானே பார்த்துக் கொதிப்பார்
    வேலைக்கார அம்மா உடனே
    வேலை விட்டுச் செல்வார்
    வீட்டுக்கார அம்மா அப்போ
    விறகில் தீயாய் நிற்பார்!

    பிள்ளையை அம்மா பாரார்
    பேயெனக் கத்தி நிற்பார்
    பிள்ளையோ தாயைப் பார்த்து
    பெரும் பயம் கொண்டேநிற்கும்
    அள்ளியே அணைக்கும் பிள்ளை
    அலமந்து அங்கே நிற்கும்
    அனுதினம் நடக்கும் கூத்து
    அடங்கினால்  நன்மை அன்றோ !

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (5)

    வையவன்

    சிவா வீட்டுக்குத் திரும்பிய போது தெரு முனையிலேயே திஷ்யா கதையைப் படித்திருப்பாள் என்று நினைத்தான்.
    அவளைப் பார்க்க வேண்டும் என்று மனசு துடித்தது. படி ஏறி வரும்போதே அவர்கள் வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டன.

    எதிர்ப்பட்ட சீதாவிடம் விசாரித்தான்.
    “பெங்களூர் அத்தை வந்திருக்காங்க.”
    அவனுக்குத் தபாலில் ‘நந்தவனம்’ வந்திருந்தது.

    இரண்டு நாட்கள் தன் மகிழ்ச்சியின் எதிரொலியை திஷ்யாவிடம் கண்டு அனுபவிக்க அவன் தவித்துப் போனான்.
    அதற்கு நேரம் வாய்க்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களுமாக பெங்களூர் அத்தையையே சுற்றினார்கள். திஷ்யாவோடு தனித்துப் பேச வசதிப் படவில்லை.

    அந்த பெங்களூர் அத்தையிடம் அவனை திஷ்யா அறிமுகம் செய்த போது எழுத்தாளர் என்று கூடச் சொன்னாள். அவன் கதை வந்த ‘நந்தவனம்’ இதழை அத்தையிடம் காட்டினாள்.

    எனினும் அந்த மகிழ்ச்சி அதன் முதல் கிளர்ச்சி எல்லாம் சூபர் எக்ஸ்பிரஸில் கடந்து செல்லப்பட்ட சின்ன ஸ்டேஷன் மாதிரி புறக்கணிக்கப்பட்டு விட்டது.

    அந்த இரண்டு நாட்களிலும் அவனுக்குத் தான் மாப்பிள்ளையோ தலைவரோ ஆன ஒரு சுயதிருப்தி. அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

    தாமு இல்லாததால் சமையலில் விமரிசை செய்து கொள்ளத் தோன்றவில்லை. மீண்டும் ஒருமுறை பிரீதாவைப் பார்க்கலாமா என்று யோசித்தான். பஸ் ஏறி எலியட்ஸ் ரோடில் அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கினான்.

    திடீரென்று மனசு மாறி மைலாப்பூர் பீச்சுக்கு அங்கிருந்து நடந்தான். லைட் ஹவுஸின் மீது ஏறினான். கட்டு மரமும் கயிற்றுச் சுருணையையும் காவல் காத்த கரையோரத் தனிமையில் பொங்கி வந்த அலைகளில் தன் குதூகலத்தைக் கரைத்தான்.

    நிலா உதித்தது.
    வெளிர் நீலக் கடல் கறுத்தது.
    அப்புறம் பாதரசம் கொட்டிய மாதிரி கடற் பரப்பு பளபளத்தது.

    ஆங்காங்கே வெள்ளைக் குதிரைகள் நுரைத்துக் கொண்டு உதறிச் சிலுப்பி மேலெழுந்தன.
    அந்த அலைகளில் பிரீதாவின் வாக்கு கேட்டது.
    “எப்படி வாழ்ந்தாலும் அது நிலையற்றது தான்”
    சிவா அலை முழக்கத்தை உற்றுக் கவனித்தான்.

    ஒரு வழக்கை ஆர்ப்பரித்துக் கொண்டே அலைகள் அவனிடம் சொல்ல வந்தன.
    அவன் உற்றுக் கேட்டான்.
    ஜனனம். மரணம். உதயம். அஸ்தமனம். எழுச்சி, வீழ்ச்சி; முடிவற்றது. முடிவற்றது.

    பெரிய அலை ஒன்று சீறிக் கொண்டு வந்து அவன் பாதம் வரை வந்து நனைக்காமல் பின் வாங்கிற்று.
    அவன் பார்வை தொட்ட நடுக்கடல் விளிம்பில் லட்ச தீபம் ஏற்றிய மாதிரி ஒளிப் பாலம் மிதந்தது.
    அங்கே நிர்ச்சலனம்.

    கண்ணுக்குத் தெரியவில்லை. போனவர்கள் சொல்லக் கேட்டு மனசு கற்பித்தது.
    உற்று அலைகள் பேசுவதை சிவா கேட்டான். நடுக்கடல்.
    எங்கும் அமைதி இருக்க முடியாது. அங்கேயும் அமைதி போல் தென்படும் ஓர் இயக்கம்தான் இருக்குமோ?
    இயங்கு, இயங்கு எழுந்து வீழ்ந்து உதித்து அஸ்தமித்து, பிறந்து மரித்து இயங்கிக் கொண்டே இரு. கரை கடக்க முயன்று கொண்டே இரு.

    சிவா யோசித்தான். கரை.. எது கரை? எங்கே கரை?
    எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சிவா பதமுற்றிருந்தான்.
    வெளியே ஒரு கார் நின்றிருந்தது. டோயோடா.
    வாசலில் தெருப்பக்கத்துப் போர்ஷன்காரர் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.
    “ஒங்களைத் தேடிட்டு யாரோ வந்திருக்காங்க”

    “யார்?”
    “ஒரு யங்மேன். மேலே இருக்கார்”
    சிவா அவசரமாகப் படியேறினான்.
    நேர் எதிரே கூடத்தில் எரிந்த விளக்கொளியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், வெற்றிவேல் தெரிந்தான். அவன் கையில் ‘நந்தவனம்.’

    உயரமாக நிமிர்ந்த முதுகோடு வெற்றிவேல் உட்கார்ந்திருப்பது வினோதமாயிருந்தது.
    ஒரு குங்ஃபூ சாம்பியன் மாதிரி…சேச்சே…ஒரு புத்தபிட்சு மாதிரி. ஊஹூம்… ஒரு யோகி மாதிரி…கரெக்ட்.
    உட்கார்ந்திருக்கிற வெற்றிவேலுக்குத் தலைப்பாகை கட்டி விட்டால் அவன் அசப்பில் விவேகானந்தர் மாதிரி இருப்பான்.
    காலடி ஓசை கேட்டு அவன் நிமிர்ந்தான்.

    மின் சக்தி பாயும் கண்கள்.
    “எங்கே போயிருந்தே?”
    “எப்போ வந்தே?”
    “ஒரு மணி நேரம் ஆச்சு”

    ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.
    வெற்றிவேல் உட்கார்ந்து கொண்டே கை நீட்டினான். சிவாவின் கரம் அதைச் சந்தித்தது. ஒரு குலுக்குக் குலுக்கியதுமே உடம்பில் உரம் ஏறிற்று. தான் பாதி பிரிந்து மீண்டும் வந்து இணைந்த பலம்.
    “எதற்கு?” என்று கேட்டான் சிவா.

    “இதற்கு” என்று தன் கையிலிருந்த ‘நந்தவனத்’தை உயர்த்திக் காட்டினான் வெற்றிவேல்.
    “என்னை ரொம்ப காக்க வச்சுட்டே!” என்று கையை விடுவித்துக் கொண்டே குற்றம் சாட்டினான்.
    “நீ வருவேண்ணு தெரியுமா என்ன?”

    “இதைச் சொல்லலே. உங்கிட்டே இருந்து தபாலை எதிர்பார்த்தேன்!”
    “எந்த விலாசத்துக்கு எழுதட்டும்? நீ தான் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஊருக்குப் போறியே!”
    அவன் கிண்டலாக சிவாவைப் பார்த்தான்.
    “அது பாதி உண்மைதான் இல்லியா?”

    அவனிடம் இவனும் இவனிடம் அவனும் உண்மையை ஒளிக்க முடியாது.
    உதட்டை மூடிக்கொண்டு சிவா மெதுவாகத் தலையை அசைத்தான்.
    “நீ எங்கே போய்ட்டே சிவா… இவர் வந்து ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிகிட்டிருக்காரே” என்று கையில் இரண்டு ஷர்பத் டம்ளருடன் வந்தாள் திஷ்யா.

    “பீச்சுக்குப் போயிருந்தேன்”
    டம்ளரைக் கொடுத்து விட்டு உள்ளே போனவள் வெற்றிவேல் மறைகிற மாதிரி சுவர் ஓரம் போய் நின்று கையை அசைத்து அவனைக் கூப்பிட்டாள் திஷ்யா.

    அவன் டம்ளருடன் அவளருகில் போனான்.
    “சப்பாத்தி பண்ணிகிட்டிருக்கேன். ரெண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க”
    “இரு… கேட்டுச் சொல்றேன்”

    சிவா வெற்றிவேலிடம் வந்தான்.
    “சாப்பிடுவோமா?”

    ஷர்பத்தைக் குனிந்து ஒருமுறை பார்த்துவிட்டு ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை கைப்பிடிச் சுவரின் மீது வைத்தான் வெற்றிவேல்.

    “நோ… நாம டெங்கனிக்கோட்டா போறோம்.”
    “எப்ப…”
    “இப்போ….”
    “இப்பவேவா?…”
    “ஏன்… எதாவது வேலையிருக்கா?”

    “இல்லே…” அவன் இழுத்தான்.
    “ஸால்வ் தி ப்ராப்ளம்” என்று திஷ்யாவிற்குக் கேட்காத மாதிரி அவள் நிற்கிற திசைக்குத் தலையைத் திருப்பிக் காட்டினான் வெற்றிவேல்.

    தன் ஷர்பத்தைக் குடித்துவிட்டு சிவா திஷ்யாவிடம் போனான்.
    “ஸாரி… திஷ்யா… நாங்க அவசரமா டெங்கனிக் கோட்டா போறோம்…”
    “எப்ப வருவே?” அவள் கண்களில் ஒரு புதிய உணர்வைக் கண்டான் சிவா.

    ஏக்கம்!
    அந்நியமானது, அவளுக்கு, அவனிடம் அவளுக்கு.
    “தெரியலியே… இரு கேட்டு…” இழுத்தான்
    அவன் நாக்கைக் கடித்தான்.

    வெற்றிவேலைக் கேட்டு அவளிடம் திரும்பி வருகிற நாளைச் சொல்ல நினைத்ததன் அசட்டுத்தனத்தை எண்ணி அவன் கண்ணை மூடிச் சிரித்தான்.

    அந்தச் சிறிய கணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த மானசீக இடைவெளி சட்டென்று குறைந்ததை அவன் உணர்ந்தான்.

    வெளியே வெற்றிவேல் காத்திருக்கிறான். சிவா வந்தான்.
    “சரி… கிளம்பு… நான் ஏதாவது டிரஸ் எடுத்துக்கணுமா?”
    “வேண்டாம்…”

    “எத்தனை நாள் அங்கே இருப்போம்?”
    “ரெண்டு நாள். நாளை மறுநாள் ஒன்னைக் கொண்டு வந்து இங்கே விட்டுடறேன்.”
    திஷ்யாவுக்குக் கேட்டிருக்கோம். கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னானோ?
    வெற்றிவேல் எழுந்தான்.

    “ஒரு லுங்கியாவது எடுத்துக்கறேனே…”
    “லுங்கி… பனியன், வேஷ்டி, சட்டை எல்லாம் காரிலே ரெடியா இருக்கு. கௌம்பு”
    மறு வார்த்தை பேசாமல் காத்திருந்த திஷ்யாவுக்கு சிறிதாகத் தலையசைத்து விட்டு வெற்றிவேலின் பின்னால் படியிறங்கினான் சிவா.

    காரில் உட்கார்ந்து கதவைச் சாத்தும் போது அது மூடும் ஓசை கூட மெல்லத்தான் வந்தது. சொன்ன சொல்லைக் கேட்கிற மாதிரி கார் ஸ்டார்ட் செய்ததும் புறப்பட்டது.

    பின்னால் பார்த்து விட்டு ரிவர்ஸ் எடுத்தான் வெற்றிவேல்.
    சந்து திரும்பி சாலை வந்ததும் பேச்சை ஆரம்பித்தான்.
    “என்னடா?”

    “சொல்லுடா”
    “தேசீயப் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கியா?”
    வெற்றிவேல் குத்தலாகக் கேட்டான்.

    “எதைச் சொல்றே… வேலை தேடறதையா?”
    “இல்லே. ‘லவ் பண்றதை”

    “ஓ… அந்தப் பொண்ணை வச்சு சொல்றியா? டோண்ட்பி ஜெலஸ், அது சும்மா பரிச்சயம்”
    “ஒரு நண்பனை காதலி முதலில் பங்கு போடறா. அப்புறம் முழுசா கபளீகரம் பண்ணிடறா…”
    “எனக்கு இன்னும் அனுபவமில்லே”

    “நம்பறேன். உன் நந்தவனம் கதை…” என்று வெற்றிவேல் இடது கைப் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.
    சிவாவுக்கு மார்பு விம்மிற்று.

    “ஆனா எனக்கு வருத்தமா இருந்தது”
    “ஏன்..”
    “ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ. இன்னிக்கு ஓடிட்டிருக்கிற லட்சியம் இல்லாத வாழ்க்கை மாதிரி…”

    வெற்றிவேல் ஒரு சைக்கிள்காரருக்கு ஹார்ன் செய்தான்.
    “எதிர்மறையா அணுகியிருக்கேன். ஹீரோயிஸம்…நீ சொல்றியே அந்த லட்சியம், அது குற்றுயிரா இருக்குண்ணு காட்டியிருக்கேன்.”

    “எதிர்மறை எதிர்மறையைத் தான் தோற்றுவிக்கும்.”
    “இங்கே எதுவும் எதையும் தோற்றுவிக்காது. ஓயாமே குடுமிபிடிச் சண்டை நடக்கும். ஒரு விஷயம் கிடைச்சா கொஞ்ச காலம் வெறும் பேச்சுப் பேசுவாங்க. அப்புறம் சென்ஷேனலா வேற ஏதாவது கெடைக்குமானா அதை விட்டு நகந்துடுவாங்க.”

    “ஊருக்குப் போயிருந்தேன். நண்பர்களைப் பாத்தேன் எல்லாரும் ஒன் கதைண்ணு தெரிஞ்சுகிட்டாங்க.”
    “என்ன சொன்னாங்க?” சிவா ஆவலோடு கேட்டான்.

    “டர்ஜனீவ் மாதிரி இல்லேண்ணா ஒருத்தன். டால்ஸ்டாய் மாதிரி இல்லேண்ணா இன்னொருத்தன். புதுமைப்பித்தன் ‘பவர்’ இல்லேண்ணான் வேற ஒருத்தன்.”

    “நீ என்ன சொன்னே?”
    “நன்றி சொன்னேன். அத மாதிரி இது மாதிரிண்ணு சொன்னா அவமானப்படுத்தற முயற்சி. இது பரவால்லே நீ ஒன் மாதிரி எழுதியிருக்கேண்ணு மறைமுகமான சர்ட்பிகேட்.”

    சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.
    “ஸோ…தே டோன்ட் லைக் இட்!”
    “யூ டோன்ட் பாதர்… ஒனக்குப் புடிச்சிருக்கு இல்லே, எழுது.”

    “என் அம்மாவைப் பார்த்தியா?”
    “உன் அப்பாவைப் பார்த்தேன்.
    சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான்.
    “எங்கே?”

    “டெங்கனிகோட்டா பக்கத்திலே. அண்செட்டி என்கிற சின்ன ஊரிலே. ஒரு சிவன் கோயில்லே. நேத்து வரிக்கும் அங்கே தான் இருந்தார்… அவருக்கு என்னை அடையாளம் தெரியலே…நான் புரிஞ்சுகிட்டேன். ஒடனே ஒனக்குத் தெரிவிக்கணும்னு.. நோ ஒன்னைக் கூட்டிட்டுப் போயி காட்டணும்னு தோணிச்சு.”

    “தாங்க் யூ…” என்று அவன் தோளைத் தொட்டான் சிவா. அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
    “எப்படி இருக்கார்?”

    “பெரிய ரிஷி மாதிரி தாடி வச்சிருக்கார். தலை நரைச்சு தாடி நரைச்சுப் போயிருக்கு… மீதி எல்லாம் நேரிலே பார்.”
    வெற்றிவேல் ஒரு பெரிய அசைவ ஹோட்டல் எதிரே காரை அதற்காக அனுமதித்திருந்த இடத்தில் நிறுத்தினான்.
    அது அசைவம் என்று தெரிந்தும் வெற்றிவேலுக்காக சிவா ஆட்சேபிக்கவில்லை.

    “கார் வாங்கினயா வெற்றி?”
    “இல்லே… ஒரு பந்தயத்திலே ஜெயிச்சேன்.”
    “பந்தயமா?”

    “ஆமா…” அவன் கதவை மூடிப் பூட்டிக் கொண்டே சொன்னான்.
    “அண்செட்டியிலிருந்து பெங்களூர் போற ரோட்லே என் மோட்டார் பைக்லே இந்தக் காரை ஓவர்டேக் பண்ண முடியாதுண்ணு ஒரு கோடீஸ்வரன் சொன்னான். இந்தக் காரே பந்தயம்ணு கட்டினான். தட் வாஸ் எ சாலஞ்ச்..ஜெயிச்சுட்டேன்.”

    “காரை எப்படி வாங்கிக்கிட்டே? இது ஒன்னாலே முடியாதே!”
    வெற்றிவேல் கம்பீரமாகப் புன்முறுவல் செய்தான்.

    “யூ ஆர் கரெக்ட்… இதை எவன் எடுத்துக்கப் போறான்? ஆனா அந்தக் கோடீஸ்வரனுக்கு இது ரொம்ப அற்ப விஷயம்.. அவன் ஒரு அமெரிக்கன். டெட்ராயிட்லே மோட்டார் கம்பெனி மானேஜிங் டைரக்டராம். கேம் ஈஸ் எ கேம்னு சொன்னான்.”
    இருவரும் சாலையைக் கடந்து கொண்டே பேசிச் சென்றனர்.

    “போட்டி, யந்திரத்துக்கும் மனுஷனுக்கும் தான், பரிசுக்காக இல்லேண்ணு சொன்னேன். யூ… ப்ரீக்ணு சொன்னான். ஆல்ரைட்… இதை நான் ஜெயிச்சேண்ணு ஓர் அடையாளத்துக்காக மெட்ராஸுக்கு எடுத்துட்டுப் போறேன், ஒரே ஒரு ட்ரிப் மட்டும் அப்புறம் திருப்பி எடுத்துக்கோண்ணு சொல்லிக் கொண்டு வந்திருக்கேன்…”
    அவர்கள் ஹோட்டலிற்குள் நுழைந்து கையலம்பினர்.

    வெயிட்டர் வந்ததும் வெற்றிவேல் ஆர்டர் சொன்னான்.
    “ரெண்டு தந்தூரி சிக்கன்…”

    வெற்றிவேலை சிவா இடைமறித்தான்.
    “ஒரு தந்தூரி சிக்கன். ஒரு ப்ரெட் பட்டர் ஜாம்.”

    “மறந்துட்டேண்டா சிவா… நீ இருக்கறப்ப இந்த கசாப்புக் கடைக்கு வந்திருக்க வேண்டாம்.”
    “இட்ஸ் ஆல் ரைட்… நீ எழாதே உட்கார்”
    வெயிட்டர் ஆர்டர் எழுதிக் கொண்டு போனான்.

    இருவரும் காத்திருக்கும் வேளையில் வெற்றிவேல் ஒரு கேள்வி போட்டான்.
    “வேலை கெடைச்சிருச்சா?”
    “கெடைச்சிருந்தா சொல்லியிருப்பேன்.”

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(144)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இந்தவார மடலிலே உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    மனித சமூகமானது காலம் காலமாகப் பல மாறுதல்களுக்கு ஏற்ப தமது வாழ்வு முறைகளை மாற்றியமைத்துத் தம்மை ஒரு நாகாரீகமான சமுதாயம் என்று குறிப்பிடுமளவிற்கு மாற்றமடைந்திருக்கிறது என்பதுவே ஒரு பொதுவான கருத்தாகிறது.

    மனிதராய் நாம் பிறந்து, மனிதராய் நாம் வாழ்வதென்பது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையில் எத்தனையோ விதமான நோய்களுடன், எத்தனையோ விதமான அங்கவீனங்களுடன் பலர் பல கடுமையான போராட்டங்களினூடு மிகவும் துணிச்சலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டமிது.

    பையிலே நாலணா காசு கூட இல்லாமல் மற்றவர்களின் கருணை மனதை தமது மூலதனமாகக் கொண்டு தம் நாளை ஆரம்பிக்கும் எத்தனையோ ஆயிரம் மக்கள் இவ்வகிலத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

    அவர்கள் யாரும் தமது இல்லாமையின் ஏக்கத்தினால் தமது வாழ்வை முடித்துக் கொள்ள எண்ண மாட்டார்கள். அப்படி எண்ணுவதும் தவறு. நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரம் நம் ஒருவருக்கும் கிடையாது.

    அதுகூட ஒரு வகையான கொலையாகவே கருதப்பட வேண்டும்.

    என்ன! எதை நோக்கி சக்தியின் இவ்வார மடல் பயணமாகிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இங்கிலாந்திலே கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று என் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணியதால் தான் இம்மடலின் கருவாக அது அமைகிறது.

    TF2இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள “டெல்ஃபோர்டு’ ( Telford) என் னும் இடத்திலே கடந்த சனிக்கிழமை ஒரு துயரகரமான சம்பவம் நிகழ்ந்தது.

    வயதில் நாற்பதுகளில் உள்ள ஒரு மனிதன் கார் பார்க் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்து தன் வாழ்வை மாய்த்துக் கொண்டான்.

    அம்மனிதன் அத்தகைய ஒரு முடிவையெடுக்க அவன் வாழ்வில் அவன் எத்தகையதோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்று எண்ணும் போது அது மிகவும் ஆழமான மனவருத்தத்தையே உருவாக்குகிறது.

    அது ஒருபுறமிருக்கட்டும் …

    நாககரீகமான உலகில் நாகரீகமடைந்த மனிதர் என்று கூறிக் கொள்வோர் இந்த 22ம் நூற்றண்டிலே மற்றொரு சக மனிதனை நோக்கி நடந்து கொண்ட முறையே என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

    TF3அக்கட்டடத்தின் உச்சியில் ஏறத்தாழ 2 மணிநேரம் குதிப்பதற்குத் தயாரான நிலையில் நின்றிருந்த அம்மனிதனை பாதுகாப்பாகக் கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அந்நகர பாதுகாப்புப் படையினரும், தீயணைக்கும் படையினரும் முயன்று கொண்டிருந்தனர்.

    தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடியது.

    இக்கூட்டத்தில் இருந்த பலர் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அவனது துர்ப்பாக்கிய நிலையை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

    “எதற்காகத் தயங்குகிறாய் குதித்து விடு நேரமாகிறது ” என்றும் …

    TF1“மேலிருந்து குதித்தால் உன் உடல் எவ்வளவு தூரத்திற்கு துள்ளப்போகிறது பார்க்க வேண்டும் குதித்து விடு” என்றும் பலவகையான கோஷங்களில் அம்மனிதனைக் குதிப்பதற்குத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.

    பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளையும் புறக்கணித்து இக்கோஷங்கள் தொடர்ந்தன.

    விளவு! அக்கட்டடத்தில் இருந்து பாய்ந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டான் அம்மனிதன்.

    இவ்வாறு கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் காட்டுமிராண்டிகளே, அவர்களை அடையாளம் கண்டு போலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50,000 பேர் இணையத்தளம் வாயிலாக கையொப்பமிட்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அவ்வாறே கூச்சலிட்டவர்களில் ஒருவரை தாம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின் மூலம் அடையாளம் கண்டு விட்டதாகப் போலிசார் கூறுகின்றனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ, இல்லையோ? அது ஒருபுறமிருக்க மனிதர் என்று கூறிக்கொள்வோர்கள், அடுத்தவர்களின் அழிவில் ஆனந்தம் காணும் இவ்வகையான மனோபாவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    இத்தகையோர் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும், இப்படியானவர்கள் இத்தனை பகிரங்கமாக தமது மிருக உணர்வினை வெளிக்காட்டுமளவிற்கு எமது சமுதாய உணர்வு மழுங்கி விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.

    உலகின் பல பாகங்களிலும் மதங்களின் பெயராலும், மொழிகளின் பெயராலும் அநியாமகப் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

    வேறு பலபாகங்களில் தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் பலபுதுவிதமான நோய்கள் பலரைத் தமக்கு இரையாக்குகின்றன.

    இவைகளைத் தடுக்க உலகின் பல நாடுகளில் உள்ள பல அமைப்புகள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றன.

    இந்தச் சூழலில் ஒரு உயிர் அநியாயமாகப் போகப் போகிறதே எனும் உணர்வு இல்லாமல், அவ்வுயிரைக் காப்பாற்றத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்காமல் அவ்வுயிரைப் பறிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் இம்மக்களும் நான் வாழும் இதே நாட்டில் வாழ்கிறார்கள் என்று எண்ணும்போது என் உடலே கூசுகிறது.

    ஆனாலும்,

    கடந்த வாரம் நடைபெற்ற “காமிக் ரிலீவ் (Comic Releif)” எனும் பீ.பீ.சி தொலைக்காட்சி நடத்திய வறியநாடுகளுக்கு உதவுதற்கான நிதிசேகரிப்பு நிகழ்வில் ஒரு பில்லியன் பவுண்ஸ் அளவிற்கு நிதியுதவி ஈந்த கருணை மிக்க மக்களைக் கொண்ட நாடு இது எனும் நினைப்பு என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.

    “மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா” என்று புரட்சித் தலைவரின் படத்தில் வரும் பாடலின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

    நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு, ஆனால், அதற்கேற்ற வகையில் நமது உள்ளங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றனவா ?

    சிந்திக்க வேண்டிய கேள்வியுடன் விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் …

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பொல்லாத சமுதாயம் புண்ணானது என் இதயம்!

    ஆர். எஸ். கலா

    ஒட்டிப் பிறந்தோம்
    வெட்டிப் பிரித்து
    ஒன்றாக வளர்ந்தோம்.
    தாய்  தந்தைக்கு இரு
    பிள்ளையென வாழ்ந்தோம்.
    அன்புக் கடலில் ஆழமாக
    புதையுண்டு மகிழ்ந்தோம்.
    குறை இல்லாச் செல்வத்தில்
    புரண்டே வந்தோம், படிப்பில்
    இருவரும் பட்டம் பெற்றோம்.
    அன்புக்கு இலக்கணமாகத்
    திகழ்ந்தோம்; தாயின் பாசத்துக்கும்
    அரவணைப்புக்கும் பணிந்து அடங்கி
    நடந்தோம்; குறை சொல்ல ஏதும் இல்லை
    எங்களைப்  புகழ்ந்து கூற விரும்புவதில்லை.
    பெற்றோர் பிறரிடம் தன் புகழ்ச்சியை
    அவர்கள் விரும்புவதும் இல்லை.
    இருந்தும் எங்களின் நேர்மையான
    உழைப்பு ஊருக்குள் அடையாளம்
    காட்டியது; பல பத்திரிகையிலும்
    வானொலியிலும் முகநூலிலும்
    தொழிலாளர் தினம் அன்று வெளியாகி
    எங்களுக்குப் பெருமையைப் பெற்று
    தந்தது; அனைத்து ஊடகங்களும்
    இதைப் பார்த்த பல தொழில்அதிபரின்
    வீட்டில் இருந்து எங்களை மாப்பிள்ளை
    கேட்டு வர ஆரம்பித்தனர்; அம்மா
    முடிவை எங்களிடமே விட்டு விட்டார்.
    ஆஹா! இது  நமக்குச் சரி வராதுடா
    தம்பி என்றான் அண்ணா;  நாங்கள்
    இருவரும் ஒரு சிறு மாற்றத்துக்காக
    அண்ணா தம்பி என்று அழைப்போம்.
    மற்றபடி இருவரும்  ஒட்டியவர்கள்தானே!
    நானும்  ’ம்ம்’  என்று தலை அசைத்தேன்.
    திடீரென அப்பாவை பார்த்துக் கூறினான்,
    ”அப்பா நீங்களே பாருங்கள் எங்களுக்கு
    அது போதும்!” என்று கூறி என்னை நோக்கினான்.
    நானும்  ”சரி” என்பது போல் தலைஅசைத்தேன்.
    அப்பா வேறு வழி இல்லாமல் தானே  தன்
    மருமகளைத் தேடத் தயார் ஆனார்; அம்மா
    அப்பாவை அவர் இளமைக் கால நினைவைச்
    சொல்லி ஏதோ கேலி செய்தார்;  பல
    நாள் சென்று அப்பா இரு படம் கொடுத்துச்
    சொன்னார், ”இவைதான் நான் பார்த்த
    மருமக்கள்!”  என் பெயர்  ’தீபக்’, அண்ணா
    பெயர் ’திலிப்’;  எங்கள் பெயரைக் கூறி
    அடையாளம் சொன்னார், எந்தப் பெண்
    யாருக்கு என்று; எனது வருங்காலதேவதை
    ஒரு அதிபரின் மகள்; திலிப்பின் தேவதை
    ஒரு தொழில்அதிபரின் மகள்; இருவரும்
    இரு புகைப்படங்களையும் பார்த்துச்
    சம்மதம் தெரிவித்தோம்;  பிறகு என்ன?
    அம்மா சும்மா இருப்பாரா? ஓடி ஓடி
    வேலைகளை ஆரம்பித்தார்;  ஜாதகம்
    பார்ப்பதும் அவை சரியெனக் கூறியதுமே
    பெண் பார்க்கும் படலம்; இப்படி எல்லா
    சடங்கு சம்பிரதாயமும் முடிந்து  தாலி
    கட்டுவதுதான்  இனி வேறு ஒரு தடையுமே
    இல்லை;  சில வாரங்களில் அதுவும் பல
    பெரியோர் மதிப்பு நிறைந்த மனிதர்கள்
    சொந்தம் பந்தம் என்று  திருமண மண்டபமே
    பத்தாத அளவு மக்கள் கூட்டம்! சும்மாவா
    பின்னே? இரு வீட்டுச் சொந்தங்கள் உறவுகள்
    தெரிந்தோர்  ’ம்ம்’  சொல்லவே முடியாத
    அளவு பட்டியல் நீளும்;  மங்கள வாத்தியத்தின்
    ஓசையுடன் இருவருக்கும் இனிதே திருமணம்
    நடந்து முடிந்தது; அமைதியான வாழ்க்கை
    நிறைவான இல்லற இன்பம் என்று வாழ்ந்து
    வந்தோம்;  வேறு வேறு வீட்டுப் பெண்ணாக
    இருந்தாலும் அவர்களும் எங்களுடன் சேர்ந்து
    ஒற்றுமையாகப் பழகியே வந்தனர்; அம்மா
    அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே
    இல்லை;  ஒரு நாள் சும்மா சுத்திப் பார்க்கச்
    சென்றோம்  நான்கு பேரும்; அன்றுதான்
    எங்கள் பின்னாடியே வந்தான் எமன்!
    ஒரு குடிகாரனின்  லாரி மோதியதில்
    எங்கள் வண்டி விபத்தானது; சில மணி
    நேரம் சென்று நான் கண் திறந்தேன்.
    அருகில் எங்கள் உறவினர் இருந்தார்
    அவரிடம் மற்றவர்களைப் பற்றி வினா
    எழுப்பவே, அவர் சிறு சிறிதாக எனக்கு
    எடுத்து உரைத்தார்; இறுதியில் கூறிய
    வார்த்தை என் தலையில் இடி விழுந்தது
    போல் இருந்தது; ”ஐயோ!” என்று கதறினேன்.
    என்ன பயன்? எமன் அழைத்து விட்டான் என்
    மனைவியையும் சகோதரனையும்! இரு
    உயிர் போய் இரு உயிர் எஞ்சியது; அம்மா
    என்ன ஆனாரோ என்று ஏங்கியவாறு
    ஓடி வந்தேன்; அம்மா உயிர்உள்ள பிணமாக
    இருந்தார் சகோதரன் இறந்த உடல் அருகே.
    அதற்குப் பக்கவாக்கில் என் மனைவி அமைதியாக
    உறங்குகிறாள்; என் கரம் கட்டிய தாலிதான்
    முன் இருக்கு; நான் ஒரு ஆண் என்றதையும்
    மறந்து கதறினேன், துடித்தேன், தவித்தேன்!
    உடன் பிறப்பா? மனைவியா? யார் அருகில்
    இருப்பேன்?  என் சகோதரன்  மனைவிக்கு
    இன்னும் நினைவு திரும்பவில்லை; அவள்
    வந்து கேட்டால் எப்படி பதில் உரைப்பேன்?
    இப்படியே அழுது அழுது ஓடாகத் தேய ஆரம்பித்த
    நான் ஓராண்டு வரை அழுதேன்; அண்ணா
    மனைவியும்  அழுது அழுது ஓய்ந்து போய்
    அவள் உடல் நோய்க்குத் துணையாகப் போனது
    பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்; நேரம்
    இருக்கும் போது போய் வருவேன்; அதிகம்
    போவது இல்லை; என்னைக் கண்டால்
    அவர் கணவன் ஞாபகம் வரும்; பாவம்!
    எனப் போவதைக் குறைத்து விட்டேன்; நானும்
    இப்போது கொஞ்சம் கவலையில் இருந்து
    நீங்கி வேலையில் கவனத்தைச் செலுத்திக்
    கொண்டு இருக்கின்றேன்;  இந்த நேரத்தில்
    தான் அம்மா எனக்கு மறுமணம் செய்யத்
    தயாரானார்; இதைஎன்னால் ஏற்றுக் கொள்ள
    இயலவில்லை; என் மனைவி புன்னகையுடன்
    புகைப்படத்தில் என் கட்டில் அருகே இருக்க,
    கட்டிலில் இன்னொருத்தியா மனம் இடம்
    கொடுக்கவில்லை;  அப்போது ஒரு கேள்வியை
    அம்மாவிடம் கேட்டேன்; சகோதரன் மனைவிக்கு
    ஏன் இதைச் செய்ய நீங்கள் நினைக்கவில்லை
    என்று! உடனே அம்மா பொங்கி எழுந்தார்! அவள்
    விதவை, மறு மணமா? அது எப்படி சாத்தியம்?
    வெள்ளை உடையுடன்தானே இருக்க வேண்டும்?
    அது தமிழன் கலாச்சாரம் என்றார்;  ஒரே மேடையில்
    தாலி கட்டியது;  ஒரே நாள் இருவரும் துணையை
    இழந்தது; ஆனால் எனக்கு மட்டும் மறுமணம்,
    அவர் வீட்டுக் கைதி! என்ன ஞாயமடா இந்தப்
    பொல்லாத உலகத்தில்?  நான் மறுத்து விட்டேன்.
    அம்மா பிடிவாதம்  பிடித்தார்; உடனே ஒரு
    ஆலோசனை கூறினேன்; ”நான் மறுமணம்
    செய்வதாயின் ஒரு விதவையைப் பாருங்கள்;
    இல்லை என்றால் எனக்கு வேண்டாம், விடுங்கள்!”
    என்றேன்;  அம்மா ஆடிப்போனார்; பொல்லாத
    சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப்  பின்
    பற்றும் வரை பெண்ணுக்கு முழுமையாக இல்லை
    எதிலும் சுதந்திரம்! நினைத்தாலே இதயம்
    கனக்கிறது; ஐயோ பாவம் சகோதரன்
    மனைவி!!

     

    Share
  • உழைப்புக்குத் தேவை துடிப்பு!

    -ஆர். எஸ். கலா

    எடுத்த காரியத்தை இறுதிவரை
    தொடர்ந்திட உறுதி பூண்டு விடு
    எதிர்காலத்தில் எதிலும் வெற்றி                       தொழிலாளி
    பெறுவேன் என்று நெஞ்சில்
    நிறுத்திவிடு!

    செய்வன திருந்தச் செய்
    கவலையை விட்டொழி
    காலத்தை வென்று நிரந்தர
    வெற்றியைக் கண்டிடு!

    முன்னேற்றத்தையே விரும்பு
    முறையுடன் அதை நிறைவேற்றிடு
    கல்விக் கண்ணோடு பெரியோர்
    சொல்லையும் கேட்டிடு, ஒளி
    விளக்காய்ச் சுடர்விடு நின்று!

    சோம்பேறியாகாதே
    துவண்டு விடாதே
    எதிர்காலக் கனவை
    கலைய விடாதே தொலை
    நோக்கி போல்  துல்லியமாகக்
    கணித்திடு உன் வெற்றியை
    புத்தியின் துணையோடு!

    உழைப்பில் முன்னேறு
    உழைப்பை முழுமையாக நம்பு
    உடல் வருத்தி உழைத்திடு
    உனக்குள் இருக்கும் திறமையை
    மடமை என்னும் திரையால்
    மூடாதே!

    உன் தொழிலை நம்பு
    அதையே நேர்வழியில்
    தொடங்கு, வரும் வருவாயை
    விரையம் செய்யாதே
    கறைபடிவது  கையானாலும்
    சிறைவாசம் செல்லாத்
    தொழிலைத் தேர்ந்தெடு!

    மேலே மேலே உயர்ந்திடு
    குணத்திலும் தொழிலிலும்
    தினமும் மேலோங்கும்
    சிந்தனையை வளர்த்திடு!

    சிகரம் தொட்டிடு சிறப்பாக
    வாழ்ந்திடு  தட்டிப் பறிக்காதே
    பிறரிடம்
    விட்டுக் கொடுக்காதே
    உன் நியாயமான கோரிக்கையை!
    கேளிக்கை வாழ்வை ஒதுக்கிடு
    வாழி வாழி என்று வாழ்ந்திடு
    உன் துடிப்பான உழைப்பைக்
    கொண்டு!

    பெற்றோர் போற்ற மற்றோர்
    வாழ்த்த உலகில் உன் புகழ்
    பறக்கட்டும், நீ சிந்திய வியர்வைத்
    துளிகளும் புகழாக மணம் பரப்பட்டும்
    உண்மையான உன்னதமான
    உழைப்பையே நம்பித் துடிப்போடு
    நீயும் இறங்கு!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”வெல்வெட்டு வண்ணத்தில், வேய்ங்குழல் ஊதுகிறான்
    கல்வெட்டுச் சிற்பம்போல் கண்ணபிரான், -புள்கொட்டும்(பறவைகள் கூவும்)
    போததி காலையில் பூபாள பூபாலன்,
    யாதவனைக் காண எழு”….கிரேசி மோகன்….

     

    Share
  • மாற்றம் மக்களிடமே தேவை

    ஞா.ஜார்ஜ்
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம பல்கழைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    images (1)

    இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஓர் தனிப்பெரும் நாடாகவும் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. பல சாதனைகள் ஒருபுறம் இருக்க மக்கள் சாதி மதம் இனம் மற்றும் மொழி ஆகிய காரணங்களால் வேறுபட்டும் இருக்கின்றனர். பலதரப்பட்ட மக்களைக் கொண்டு உருவாகும் அரசு மக்களை முதன்மைப்படுத்துவதாகவும் மக்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் இருப்பது அவசியம். மக்களால் உருவாக்கப்படும் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் எப்படி மக்கள் பங்கேற்பை அளிக்கின்றனர் என்பதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. அதுவல்லாது வெறும் வாக்கை அளித்துவிட்டதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஆதரவாக தங்களுடைய பங்கேற்பை அளிப்பதுதான் நமது முதற்கடமை. இது அனைத்துதரப்பு மக்களுக்கும் பொருந்தும். வெறுமனே அரசு சரியில்லை அரசு செயல்பாடு சாமானியமக்களை சென்றடையவில்லை அரசு அதிகாரிகள் சரியில்லை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்று குறைகூறுவது முட்டாள் தனமான ஒன்று. அரசு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் திட்டமிடுதலிலும் சுயநலம் கலந்து இருப்பதாக கூறும் மக்கள் தங்களின் பங்கேற்பும் செயல்பாடுகளும் எப்படி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மக்களின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் மக்களின் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு என்னுடைய இரயில் பயணத்தில் நான் கண்ட சில உதாரணங்கள் நான் மதுரையில் இருந்து இராமேசுவரம் வரையில் பயணித்த போது என்னுடன் பயணித்த சில நூறு பயணிகளை நான் நன்கு கவனித்தேன். அவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இரயில்வேத் துறை சார்பில் ஓர் அறிவிப்பு பலகை இருந்தது அதில் இரயில்வண்டி நிற்கும் போது கழிவறை பயன்படுத்துவதை தவிர்கவும் என்று. ஆனால் அதிகப்படியான மக்கள் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. இப்படி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்புமக்களும் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது என்பது சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாக இருப்பதுடன் அரசு செயல்பாட்டில் குறுக்கிடுவதாகவும் உள்ளது. சமூக அக்கரையின்மையின் காரணமாக இவர்கள் செய்யும் செயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமை வேலை செய்யப் பணிக்கிறது. அடிமைத் தனமான வேலையை தலித் மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் தங்களின் அவசரத்திற்காகச் செய்யும் இந்த இழிவான செயலால் வரும் விளைவை மலத்தை அகற்றுபவர் என்ற முறையில் தலித்துக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்திருத்தம் 2013-ன் படி மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வேறுதொழிலில் ஈடுபட கடனுதவி அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதலியன இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அத்துடன் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை பணி அமர்த்துவதும் அவர்களை மனிதக் கழிவகற்ற பணிப்பதும் சட்டப்படி குற்றம் அதைமீறினால் அபதாரம் மற்றும் சிறை தண்டனை என்பன இச்சட்டத்தின் சிறப்பு. ஆனால் இன்றைக்கும் மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்கள் அனைவரும் தலித்துக்களாக இருந்து வருகின்றனர். இந்தப் பணி பலரையும் முகம் சுழிக்கவைக்கக்கூடிய மற்றும் அருவறுக்கத்தக்க செயலாக இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களிடம் இருக்கும் சுயநலம் தான் காரணமே தவிர அரசு இதற்கு பொறுப்பு என்று கூறுவது தவறு. மக்களுக்கான அரசு மக்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையான சட்டங்களை இயற்றுவது திட்டங்கள் தீட்டுவது ஓர் அரசின் கடமை. அதுபோல் மக்களும் அரசின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் அதில் பங்கேற்பையும் அளிப்பது மக்களின் கடமை. ஆதலால் தான் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் சரியாகவே இருந்தாலும் அதை நடைமுறையில் மக்கள் ஏற்காதவரை அது இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்ட திட்டமாகவே தான் இருக்குமே தவிர நடைமுறையில் அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும்சரி சமூகத்திலும்சரி எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. எனவே பொது இடங்களில் மலம் கழிப்பது இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகிய சமூகச் சீர்கேடுகளைக் குறைப்பதும் அதைச் சமூகத்தில் முற்றிலும் அகற்றுவதும் என்பது அரசு மற்றும் மக்களின் ஒருமித்த செயல்பாட்டில்தான் உள்ளது. இதற்கான முயற்சியாக அரசு தனிமனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அது போல சமூகத்தின் சுகாதாரமும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக சமூக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இது போன்ற சமூக விழிப்புணர்வின் மூலம் மக்களின் மனங்களில் ஏற்படும் உள்ளார்ந்த மாற்றம்தான் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வழிகோலிடும்.

    மற்றொரு நிகழ்வு என்னவென்றால் இராமேசுவரம் என்பது இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பிற மதத்தவரும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட இராமேசுவரத்தில் இந்துக்களின் கலாச்சாரப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கர்மகாரியங்கள் நடத்துவது பின்பு கடலில் புனித நீராடுவதும் வழக்கம், அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் உடுத்திவந்த உடைகளை கடலில்விடுவதும் வழக்கம். ஆனால் இந்தச் செயலால் கடலில் துணிகள் மிதப்பதுடன் புனிதநீர் என்று கருதப்படும் கடல்நீர் மாசுபடுகிறது. கடல் நீர் மாசுபடுவதால் மீன் வளத்தைகுறைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்செயலால் கடற்கரை ஓரத்தில் மீன் உற்பத்தி குறைகிறது. இதனால் கரைஓர மீன்பிடிதொழில் செய்யும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவுவரை துணிகள் கடலுக்கடியில் படிந்தும் மிதந்தும் காணப்படுகின்றது. கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும் துணிகளை போடுவதற்கான தொட்டிகள் அமைத்து இருந்தாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை. இதைப்பற்றி சில சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டபோது என்னதான் அறிவிப்பு பலகை மற்றும் துணியைப் போடுவதற்கு தொட்டிகள் அமைத்துத்தந்தாலும் வரும் பக்தர்கள் துணிகளை விடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செயலற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உள்ளாட்சி அமைப்பும்சரி கோயில் நிர்வாகமும் சரி வெறும் அறிவிப்புப் பலகையுடன் நில்லாமல் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும் முன்வரவில்லை அதற்கான செயல்பாட்டை எடுத்ததாகவும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு உள்ளாட்சி அமைப்புகளின் சமூக அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது. சுற்றுலாத் துறையும் அதன் துறைசார்ந்த செயல்பாட்டில் ஒரு குறைபாட்டுடன் தான் செயல்படுகிறது. இது போன்று அரசுத்துறைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி மக்கள் பேசுவதை விடுத்து முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கானத் தீர்வாக கலாச்சாரம் என்ற பெயரில் பாவங்களில் இருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பொதுஇடம் அதிலும் புண்ணியத்தலத்தை அசுத்தம் செய்வதை ஒவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து அவர்களுக்குள்ளாக வரும் மாற்றம் தான் இப்போது தேவை.

    சமூக வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளான சாதியப் பாகுபாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து களைய, படித்தவர் படிக்காதவர் மற்றும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் வரும் ஓர் சீரிய மாற்றம் தான் சமூகப் பிரச்சனைகளைக் குறைத்து ஒரு மேம்பட்ட சமூகம் உருவாக வழிவகுக்குமே தவிர சட்டங்களைக் கடுமையாக்குவது புதிய திட்டங்கள் தீட்டுவதினால் ஒருமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே முதலில் மக்கள் மனங்களில் தான் மாற்றம் தேவை என்பது தான் என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.

    Share
  • முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    aahaa1

    aahaaவாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்!

    இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கவிஞனால் மட்டும் அப்படியே படம்பிடித்துக்காட்ட முடிகிறது! காவியக்கவிஞருக்கு அது கைவந்த கலையாக!

    பாடலின் தொடக்கம் முதல் தொய்வில்லாத ஒரு உந்துதல்… மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது பாருங்கள்… கேளுங்கள்! ஆனந்தம் அலைமோதும் எண்ணங்களில் வார்த்தைகள் வந்துவிழாதா என்ன? சுவையான கீதம் நம்மை இனிமையான சூழலுக்கு அழைத்துச் செல்வதும்… மதுரமான இசையில் ஆழ்த்துவதும் சராசரி பாடலுக்கே சாத்தியப்படும்போது… வார்த்தைகளை கவிஞர் சர்க்கரை, தேன்பாகு போல் கொட்டிக்கவிழ்த்திருக்கும் இப்பாடல் ஈர்க்கமாலிருக்குமா?

    ஆழ்ந்த சிந்தனையிலிருந்து அற்புத வரிகள் தோன்ற பாய்ந்துவரும் வெள்ளமென பாடல் பிறக்கிறது… எளிமையெனும் ரதமேறி குரல்வழியே நாம் அந்தக் குதூகலத்தை அடையலாம்..

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே!

    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    இவை என்ன காதலுக்கு எழுதிவைக்கப்பட்டிருக்கும் வேதவரிகளா?

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?
    (முதன் முதலில்…)

    நந்தவனம் இதோ இங்கேதான்
    நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
    உயிர் வாழுமே
    (முதன் முதலில்…)

    உத்தரவே இன்றி உள்ளே வா
    நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
    அந்த நொடி அன்பே என் ஜீவன்
    வேறெங்கு போனது பாரடி உன்னில்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    என் சுவாசக் காற்றில் எல்லாம்
    உன் ஞாபகம் உன் ஞாபகம்
    (முதன் முதலில்…)
    ____________________________________________
    படம்: ஆஹா (1998)
    பாடல்: வாலி
    இசை: தேவா
    பாடியவர்: ஹரிஹரன்
    காணொளி: https://www.youtube.com/watch?v=OqC-Y9YGNxE&spfreload=10

     

     

    https://youtu.be/XCggs6WA9Nk

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    images
    சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
    என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே வழிகாட்டி !
    கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம் சரவணனின்
    சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா !

    உயரே பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
    பயனை நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ னுருவாகும் !
    நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
    அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !

    (18.03.2015)
    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

    Share
  • ஐந்து கை ராந்தல் (4)

    வையவன்

    “அகத்து வரூ”

    க்வார்ட்டர்ஸின் கதவுக்கு மாட்டியிருந்த பச்சை ஸ்கிரீனை’த் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டாள் பிரீதா. கதவுக்கு வெளியே வாசற்படியருகில் சிவா நின்றான். கையில் குக்கர் வைத்த அட்டைப் பெட்டி.
    “எந்தா குக்கரோ?” என்றாள். அவள் புன்னகையில் ஒரு பசுமைக் குளிர்ச்சி இருந்தது.
    வெளியே வாட்டிய வெய்யிலில் அவளைப் பார்ப்பதே குளிர்ச்சியாக இருந்தது.

    ட்யூட்டி முடித்துக் குளித்திருந்தாள். தலை ஈரம் ஆறும் முன் போட்ட மலையாளக் கொண்டை. பூசினாற் போன்று பருத்த அவளது செம்மஞ்சள் மேனிக்கு இந்த பச்சை நைலக்ஸ் மட்டுமல்ல எந்த உடையும் பொருத்தம்தான்.
    விளக்கு வைத்த மாதிரி ஒரு பார்வை. அந்த குறுஞ்சிரிப்பில் கண்களின் சுடர் தெறித்தது.

    சிவா காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு படியேறினான். நடுவே ஓடிய காங்க்ரீட் பாதையின் இரு பக்கமும் தண்ணீருக்குத் தவிக்கும் சின்னத் தோட்டம்.

    “இண்டர்வ்யூ கழிஞ்ஞோ?” என்ஙறு அவன் கையிலிருந்த குக்கர் பெட்டியை வாங்கிக் கொண்டே கேட்டாள்.
    பிரீதாவிடமிருந்து ஒரு பெர்ஃப்யூம் வாசனை வந்தது.

    “இவ்விட இரீ” என்று ஒரு பிரம்பு நாற்காலியைக் காட்டி ஆதுரமாகப் புன்னகைத்தாள்.
    பிரீதாவின் புன்னகையிலும் சிரிப்பிலும் கண்கள் ஒளிவிட்டன. இவளுக்கும் பாவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவள் முகத்தின் நேர்மை கேட்டது.

    எவ்வளவு சுருக்கமாக இவள் தன் பிரியத்தை வெளியிடுகிறாள்!
    “இதோ வருந்து” என்று பிரீதா மீண்டும் உள்ளே போனாள்.

    பக்கத்திலிருந்த டீப்பாயில் ஒரு மலையாள தினசரி மடிந்து கிடந்தது. புழுக்கத்திற்கு விசிறிக் கொள்ள எடுத்தான். கீழே நந்தவனம். அந்த வாரத்து இதழ். பிரதா தமிழ் கற்று வருகிறாள் என்று நினைவு வந்தது.
    எந்த இடத்தில் அவனது கதை பார்க்கக் கிடைக்கிறது!

    பத்திரிகையை எடுக்கும் போது கை லேசாக நடுங்கிற்று. அட்டைப்பட ஓவியத்தைப் பார்க்கும் போது அவனுக்கு மறுபடியும் அம்மா நினைவு வந்தது. கண்கள் ஊற்றெடுத்தன-பார்வை மறையுமளவு.
    ‘மனமே இன்பத்திலும் துன்பத்திலும் சமமாயிரு.’ தாமுவின் முதல் கதை பிரசுரமாயிருந்தால் அவன் இவ்வளவு கிளர்ச்சியுறுவானா? வெற்றிவேல்?

    ‘லகானை’ இழுத்த மாதிரி அவனுக்குள் ஒரு தன்வசம் கிட்டியது.
    ‘டபிள் ஸ்ப்ரெட்’டாக அட்டையின் முன்னும் பின்னும் ஏழு வண்ணத்தில் பரவியிருந்த ஓவியம்.
    பிரித்தான். அவனது கண்ணீரும் கண் விழிப்பும் உதிரமும் பெருமூச்சும் சிதறியிருந்த வரிகள்; பொடிப் பொடியான ஒவ்வோர் எழுத்தும் அவனது வெற்றியைச் சிற்றுளியால் கொத்திய ஒவ்வொரு கொத்து போன்று சிரித்தன.
    பிரீதா ஒரு கண்ணாடித் தம்ளரோடு திரும்பி வந்தாள். லெமன் ஜூஸ்.

    “கழிக்கூ”
    பிரீதா நீட்டியதை வாங்கிக் கொண்டான். ‘பிரிஜ்’ஜிலிருந்து வந்ததால் டம்ளர் சில்லென்றிருந்தது.
    “இண்டர்வ்யூ எந்தாயி?”
    ஒரு விழுங்கு குளிர்ச்சியில் வெய்யில் பரவசம் எல்லாமே மட்டுப்பட்டன.
    “மாமூல்”

    “மாமூலென்னு பரஞ்ஞால்?”
    “ஜஸ்ட் ஃபர் நேம் ஸேக். ஆளை ஏற்கெனவே தீர்மானிச்சாச்சு. பத்தாயிரம் ரூபாய்.”
    “ஆ லெட்டரினெ கொடுத்தோ?”

    அது மாதிரி நூறு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டும் பைலுமாக பருத்த மனிதர்கள் நாலைந்து பேர் இண்டர்வியூ ஹாலுக்கு வெளியே திரிந்தார்கள்.
    “அதுக்கு அவசியமே ஏற்படலே”

    அவன் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. பிரீதாவின் முகத்தில் வருத்தம் ஏடு கட்டியது.
    ‘இவளிடம் சொல்லலாமா?”

    தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்று நிஜமாய் விரும்பும் இவளுக்கு இது தெரிய வேண்டுமே!
    சிவா பத்திரிகையை அந்தப் பக்கத்தின் நடுவில் கை வைத்து அவள் முன்பு நீட்டினான்.
    “எந்தாணு?” அவள் வாங்கி எழுத்துக் கூட்டினாள்..

    “எதிரெலியே நீ எங்கே?”
    சிவா சிரித்து விட்டான்.
    “தெற்றாணோ?” தப்பு செய்த குழந்தை மாதிரி அவள் ரசமாக விழித்தாள்.

    “எதிரொலியே நீ எங்கே?”
    அவன் திருத்திப் படித்தான். அவன் விரல் கீழே எழுதியிருந்த பெயரைச் சுட்டிக் காட்டியது.
    “சிவா…’ அவள் விழிகள் ஒரு கணம் நிலை குத்தின. இமைகள் படபடத்துக் கொண்டே அவன் மீது மொய்த்தன.
    “ஹாய்.. நிண்டேதோ?”

    “ஆம்” அவன் அடக்கப் புன்முறுவலுடன் தலையாட்டினான்.
    புது வியப்புடன் பார்த்தாள். பக்கங்களைப் புரட்டினாள் படங்களைப் பார்த்தாள். கவர்ஸ்டோரி என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டிப் படித்தாள்.

    அட்டைப் படத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
    மீண்டும் அவன் மீது ஒரு பார்வை. அதில் ஒரு புது மரியாதை பிறந்திருந்தது.
    இனி அவளுக்குத் தான் பழைய சிவா இல்லை.

    வேலை தேடுகின்ற, தங்க நிழல் தந்தவர்களுக்குச் சமைத்துச் சேவகம் புரியும், பரிவிற்குரிய பழைய சிவா இல்லை.
    “கங்ராஜூலேன்ஸ்.. க்ளாட். ஐ’ம் வெரி க்ளாட். எனிக்கு எத்ர சந்தோஷமென்னு பரயாம்பாடில்ல”
    அவளது கரிய இமைகளில் பருத்துச் சிவந்த உதடுகளில் துளும்பிய களிப்பிலே ஒரு தூய்மை இருந்தது. அது ஒரு கன்று மரமாகிக் கனி குலுங்கக் கண்ட மகிழ்ச்சி.
    சிவாவுக்குச் சிலிர்த்தது.

    இவள் பார்வைக்கு தான் ஒரு வேலைக்காரன். தன் வெற்றியில் இவள் என்னமாய் பூரிக்கிறாள்!
    அந்தத் தூய்மையான களிப்பும் உற்சாகமும் கண்ணுக்குத் தெரியாத ட்யூப் இணைப்புக்களில் சொட்டுச் சொட்டாய் தனக்குள் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.

    “இங்ஙன நீ வல்யவனாயி”
    நீ பெரிய மனிதனாய் விட்டாய் என்று அவனது உலகம் ஒரு சங்கீத மலையாளத்தில் முதன் முறையாக அவனுக்கே எடுத்துக் கூறியது.

    “ஞான் இன்னு நினக்கு ஸ்வீட் தரும்”
    சிவா தடுக்குமுன் பிரீதா பச்சைத் திரையின் உள்ளே மறைந்து விட்டாள்.
    வெய்யிலில் பசி நடையாய் நடந்த கால் வலி எல்லாம் மறந்து விட்டது.
    ஸ்க்ரீனுக்கு மாட்டியிருந்த உலோக வளையங்கள் நகர்ந்து விலகியதால் ரீங்கரித்தன. திரையை ஒதுக்கிவிட்டு பிரீதா வந்தாள்.

    “அகத்துவரூ”
    அவன் இதுவரை அந்த வீட்டினுள் நுழைந்ததில்லை. தயங்கினான்.
    “கம் ஆன்… டோன்ட் பி ஷை!”
    லெமன் ஜூஸ் தீர்ந்த காலி டம்ளருடன் அவன் எழுந்தான்.
    “தரூ” அதை அவள் வாங்கிக் கொண்டாள்.
    நுழைந்தவுடனே ஒரு குளுமை. இள நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். மொசைக் தரை; லாமினேட் ஒட்டிய மேஜை நாற்காலிகள்.

    எதிரில் சுவற்றில் ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் குருவாயூரப்பனின் பளிங்குச் சிலை. அதற்கு வெளியே ஊதுவத்தி ஸ்டாண்டில் சந்தன ஊதுவர்த்தி மென்மையாகப் புகைந்தது.
    ரூமை ஒட்டி சிறு நடை; வலப்புறம் படுக்கையறையில் நீல நைலான் கொசுவலை கட்டிலுக்கு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது.

    உள்ளே நீண்ட நடை வழி. சமையலறையும் பாத்ரூமும் டைனிங் ஹாலும் உள்ளே இருக்க வேண்டும்.
    சிவாவை மேஜையருகே உட்கார வைத்துவிட்டு அவள் நேரே உள்ளே போனாள். இரண்டு கைகளிலும் இரு பீங்கான் ‘ஸாஸர்’களை ஏந்தித் திரும்பினாள்.

    மேஜையின் மீது வைத்தாள். ரஸகுல்லாவும், வறுத்த முந்திரியும்.
    “நீங்க?”

    “நீயாணு ‘கஸ்ட்.’ கதா க்ருத்தாய கஸ்ட்”
    அவன் ஸ்வீட்டை விண்டு வாயில் போட்டதும் வயிறு பசித்தது.

    அவள் அவனுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு மேஜை மீது ஊன்றிய இரு கரங்களாலும் மோவாயைத் தாங்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
    அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

    ‘உச்சய்க்கு எந்தெங்கிலும் கழிச்சோ?”
    மத்தியானம் ஒன்றும் சாப்பிடவில்லை. அந்த தகவல் இவளுக்கு எதற்கு.
    “கழிச்சு” அவன் மலையாளம் பேசினான்.

    “எந்த கழிச்சு?”
    “சோறு”
    “நுண”
    “இல்லை. மெய்தான்.”

    பிரீதா நம்பினாள். மலையாளத்தில் விடுவிடென்று பேசிக் கொண்டு போனாள். அவள் கண்களில் இளமை நினைவுகள் தலையெடுக்கும் மெல்லிய துயர் படர்ந்தது.

    “சிவா, எனக்கு ஓர் இளம் பருவத் தோழன்இருந்தான். செரு துருத்தியில். செருதுருத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? ஷோரனூர் ஜங்ஷனுக்குப் பக்கத்தில்…”
    “மகாகவி வள்ளத்தோல் பிறந்த ஊர்…”
    “அதேதான். கேரள கலாமண்டலி பிரசித்தி ஆச்சே”
    “கேள்விப்பட்டிருக்கிறேன்.”

    “அங்கே கதகளி பயில்வதற்காக கொடுங்கல்லூரிலிருந்து அவன் வந்திருந்தான். செக்கச் செவேலென்று ஒரு பெண் மாதிரி… உன் சாயலில் இருப்பான்.”

    “என் சாயல் என்பது எது? பெண் மாதிரியா… சிவப்பா?” சிவா சிரித்துக் கொண்டே கேட்டான்.
    “உன் முகம்… உன் நடை… உன் உயரம்”

    “அப்போது அவனுக்கு பதின்மூன்று வயது. கவிதை எழுதுவான். பாடுவான்”
    “பெண் குரலா?”

    “இல்லை… கம்பீரமான ஆண் குரல். உச்ச ஸ்தாயிக்குப் போனால் மனசை அடிமை கொள்ளும் பௌருஷம், முகத்துக்கும் இயல்புக்கும் பொருந்தாத கம்பீரமான குரல்.”
    அவனை இவள் காதலித்திருப்பாளோ!
    பிரீதாவே சொன்னாள்.

    “என்னை அவன் காதலித்தான். நானும்…”
    சிவா வாய்க்குக் கொண்டு போன ஸ்பூனை நிறுத்தினான்.
    “இட்ஸ் எ காஃப் லங்… கன்றுக்குட்டிக்காதல். கற்பூரம் எரியற மாதிரி, காட்டுக் குயில் பாடற மாதிரி.. மாசுமறு வில்லாத களிப்பு.. எனக்கும் பதின்மூன்று வயது”

    அவன் என்னவானான்? ஏமனுக்கோ துபாய்க்கோ தினாரோ ரியாலோ சம்பாதிக்கப் போய் விட்டானா…
    பிரீதாவே தொடர்ந்தாள்.

    “ஒரு நாள் என் கண்ணெதிரில்.. நான் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே அந்த பிரபாகர் செருதுருத்தியில் ஓடும் பாரதப்புழா நதியில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான்.. நாலாவது மைலில் அவன் பிரேதம் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.”

    சமையலறையில் ஒரு டப்பா உருண்டது. பூனையோ! பிரீதா அசையவில்லை.
    “சிவா… அதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மரணம்!”
    வெண்டிலேட்டர் மீது வெய்யில் தாளாமல் வந்து உட்கார்ந்த இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிட்டன.

    “உன்னைப் பார்க்கும் போது பிரபாகர் ஞாபகம் வருகிறது. உன் மாதிரியே, அவனும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான். ராஜவம்சம், அவன் முழுப் பெயர் ஆனப்பாலம் பிரபாகர வர்மா”
    இதை ஏன் சொல்கிறாள்? இன்று.. இந்த வேளையில்…

    “மாத்ருபூமியில் அவன் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது… ஆனால்…”
    “ஆனால் என்ன?”

    “அது அவன் மறைந்த பத்தாம் நாள்தான் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று”
    சிவா அவள் கண்களில் நீர் துளிர்த்ததைப் பார்த்து தலை கவிழ்ந்தான்.
    “அப்புறம் மரணம் அடுத்தடுத்து வந்து முகம் காட்டி விட்டுப் போயிற்று. அம்மா.. தம்பி.. அக்கா… ஒவ்வொருவராய் சட்டுச் சட்டென்று மறைந்து போனார்கள்… ஐம் ஸாரி…” அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டே புன்முறுவல் செய்தாள்.
    “ஏன்?”

    “என்னவோ பேசிக்கிட்டே போய் உன்னை வருத்தப்படுத்திட்டேன். ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லறேன்…”
    “இட்ஸ் ஆல் ரைட்”
    “தாமுவுக்குத் தெரியுமோ?…
    “இல்லே”

    “ரொம்ப சந்தோஷப்படுவார்”
    “ஆமாம்”
    “சாப்பிடு”
    “மதனபள்ளியிலிருந்து தந்தி வந்தது. ஊருக்குப் போயிருக்கார். அப்பா ஸீரியஸாம்…”

    “அறியாம், போன் செய்து”
    அவன் முந்திப் பருப்பைத் தின்று முடித்துக் கையலம்ப எழுந்தான். அறை மூலையிலிருந்த வாஷ் பேஸினைக் காட்டினாள் பிரீதா.

    பேஸின் அருகே சின்ன நாப்கின் தொங்கியது. கழுவியதும் கை துடைத்து கொண்டான்.
    “வீடு ரொம்பத் துப்புரவா இருக்கு. பர்ஃபெக்ட்லி க்ளீன்.”
    அவள் நாணத்தோடு சிரித்தாள்.

    “தாங்க்யூ”
    நாற்காலியில் அவன் வந்து உட்கார்ந்தான்.
    “சிவா… இனி வேலை தேட வேண்டாம். எழுதணும். அற்புதமாய்… உன்னதமாய் எழுதணும்.”

    அவன் அவளை வரம் வழங்கும் தேவதையைப் பார்ப்பது போல் நோக்கினான்.
    “ஜீவிதம் அநித்தியமாணு. ஒவ்வொரு நிமிஷமும் அநித்தியமாணு.”
    அழகும் ஆரோக்கியமும் இளமையும் பொலிந்து நின்ற அவளிடமிருந்து இந்த வாக்கு வருவது அதிசயமாக இருந்தது.

    அவன் பிரீதாவையே உற்றுப் பார்த்தான். அவள் மலையாளத்தில் சொல்லிக் கொண்டே போனாள்.
    “ஆனால் இந்த வாழ்க்கையின் மீது நீ நேசம் வைத்தால் அது நிலைத்து நிற்கும். அதற்கு அர்த்தமுண்டு. இந்த ஜனங்கள் மீது நீ அன்பு வைத்தால் நீ காவியங்களைப் படைக்கலாம்…”

    சிவாவின் கண்களுக்குள் ஊடுருவியது போன்று அவள் பேசினாள்.
    “ஆனா அந்த அன்பு பரிசுத்தமா இருக்கணும். லவ் ஃபர் லவ் ஸேக்”

    சிவாவுக்கு இன்னும் சற்று நேரம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அதிக நேரம் இருந்து விட்டோம் என்று நினைத்தான். உடனே விடை பெற்றுக் கொண்டான்.

    Share
  • நிதர்சனம்

    சரஸ்வதி ராஜேந்திரன்.

    வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.

    மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
    “ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.

    நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
    நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
    நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.

    முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”

    “ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”

    “அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …

    “வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.

    Share
  • அவ்வளவுதான் விளக்கம்!

    நாகினி

     

    மனமது புரியவில்லை
    உண்மை மனிதமெது விளங்கவில்லை
    வெற்று வாய் வார்த்தை
    வெறுமை துயரதை துடைப்பதில்லை

    தன் நிலை புரியவில்லை
    குழம்பும் மனமது தெளியவில்லை
    மதியில் தெளிவு இருந்தும்
    விளம்பும் பொய்யதை கழற்றவில்லை

    தினம் தேடியும் கிடைக்கவில்லை
    பால்வெண்மை மனதினோர் உயிர்க்கவில்லை
    முகம் பார்த்து பேசிடுவோர்
    அகம் காண விழையவில்லை

    வானளக்கும் வாயோரத்திலில்லை
    அகங்குளிரும் அன்யோன்யம் எனுமுணர்வில்லை
    போலி முகமணியா மனிதமெது
    விளக்கம் தெளியும் விளக்கமில்லை!!

    … நாகினி

    Share
  • சிந்தனையில் சிகரம் தொடு!

    -ஆர். எஸ். கலா

    மண்ணில் போட்ட விதை
    அத்தனையும் முளை
    விடுவதில்லை

    முளையிட்ட விதை அத்தனையும்                   fruit tree
    பிழைப்பதும் இல்லை

    முளைத்த விதை அத்தனையும்
    விரிச்சமாவதும் இல்லை

    விரிச்சமான விதை அத்தனையும்
    பூத்துக் குலுங்கி காய்ப்பதுமில்லை

    காய்த்த  காய் அத்தனையும்
    கனியாவதும் இல்லை

    கனிந்த காய் அத்தனையும்
    புசிக்க உதவுவதும் இல்லை

    சுவைத்த கனியில் இருந்து
    கிடைத்த விதை அத்தனையும்
    மீன்டும் மண்ணில் புதைவதும்
    இல்லை

    குளம் குட்டை குப்பையில்
    பாதி, மீதி பாதையில் மிதி
    பட்டு உடைந்து வீணாகவே
    போகின்றது

    இச் சிறு விதையிலே
    இத்தனை ஏமாற்றங்கள்
    என்றால்…

    மனிதன் தன் வாழ்க்கையைக்
    கடக்கும்  ஒவ்வொரு நொடிப்
    பொழுதும்  எத்தனை ஏமாற்றங்களை
    அவன்  பார்க்க வேண்டி இருக்கும்

    அந்த ஏமாற்றமே அவனின்
    ஏற்றமான படி என்று துணிந்தால்
    விரைந்து விழும் வெற்றிக் கனி
    அவன் கையில்

    கல்லிலும் முளையிடும் விதை உண்டு
    மண்ணிலும் மடிந்து விடும்
    விதை உண்டு

    துணிந்து வெற்றி காணும் மனிதனும்
    உண்டு சோர்ந்து தோல்வி காணும்
    மனிதனும் உண்டு

    சிறு விதையில் விரிச்சம்  காணும்
    விதை போல் சிறந்த சிந்தனையில்
    வெற்றி காண முயற்சிசெய் மானிடனே!

     

    Share
  • திருப்புமுனைத் திருப்பதி!

    கோதை நாராயணன்

    அமர்க்கள 
    ஆரம்பம் எங்கள் 
    திருப்பதிப் பயணம்…!
    பெருமாளின் திருவடிப்                               balaji
    பெருமை உணர்ந்த 
    பரவசம் அனைவரிடமும்…!

    சந்திப்புகள் வந்தும் 
    சலிக்காமல் சென்ற ரயிலின் 
    வேகத்தை நட்பு கொண்டு 
    விவேகமாய் இறங்கியதும் 
    புரிந்தது தைரியத்தின் விலை…

    ஆவலாய்ப் பயணித்த எங்களின் 
    அடுத்த கட்டமோ அம்பாளை நோக்கி…
    என் தாய் திருவடி தேடிய யாவரும் 
    மெய் மறந்த அவ்வேளை,
    ரோஜா மணக்க 
    பட்டு ஜொலிக்க 
    தெய்வீகம் திணறச் செய்ய 
    அலங்காரத்தில் அம்சமாய் அம்பாள் 
    அன்பால் எங்களை ஆட்கொள்ள…
    பிரார்த்தனைக்கு வார்த்தையின்றித் தேடப் 
    பிள்ளையின் பசி அறியாத தாயாயென்ன ?
    இன்னும் 
    இனிமையாய் ரோஜா மணம் …!

    இன்முகமாய் நாங்கள்… 
    அவளின் கண்கள் பேசியதோ 
    பெருமாளைக் காணக் காத்திருந்த 
    பக்த கண்களோடு ரகசிய மொழி…

    அவளின் அருள் தித்திப்பில் 
    திகைப்பாய் நகர்ந்தோம் திருவடி காண…
    வகை வகையாய் வரிசைகள்…
    வான் முழுதும் கலந்த 
    என்பெருமாளின் அருள் சுகந்தம்…
    இடர்களை இடித்து 
    இன்பம் தரும் நம்பிகையொளி…

    ஆம்…தந்தார் தரிசனத்தை அமைதியாய்…
    மெய்சிலிர்க்கக் காணக் கண்கள் கோடி…
    சில்லென்று உணர்ந்த தருணம் 
    சிங்காரமாய் தெய்வமே…ஏழுமலையானே…ஸ்ரீனிவாசா…
    தங்க மேனியில் தணலாய் ஜொலிக்கக் 
    குவிந்த எங்கள் கரங்கள் 
    குறை தீர்ந்த திருப்தியில்…!

     

    Share