பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

1

முனைவர் ஜ.பிரேமலதா,
தமிழ் இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),
சேலம் -7

முன்னுரை

மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.

வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை என பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.

புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு
புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம் (புறம்.398)

மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர். இதை, ‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை
‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’ பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை, தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை

‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’
‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’ (புறம்.54)
‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட
பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’ (பெரும்.173) போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

பிற்காலத்தில் தாம் அனுபவிக்கும் சுகவாழ்வு கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற எண்ணத்தில் கடவுளுக்கும் ஆடை அணிகலன்களை அவரவர் பொருளாதார சூழலுக்கேற்ப அணிவித்து மகிழ்ந்தனர். இதை பிற்கால பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக பிள்ளைத்தமிழ் நூல்களில் கடவுளைக் குழந்தையாகப் பாவிக்கும் நிலையில் பல்வேறு ஆடை அணிகலன்கள் அணிவித்து புலவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் காண முடிகிறது.

320970_469624646406535_1624382656_n
தெய்வம், வள்ளல், அரசனைப் பாடுவதற்கான வரையறைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறைவன், இறைவி இறையடியவர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் எனப் பாடுபொருள்( பாடப்படுவோர் )எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையைக் காண முடிகிறது. பிள்ளைத்தமிழ் பாடும் முறையில் பருவங்களிலும், பாடல் எண்ணிக்கையிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக ‘முதுமைத் தமிழ்’ என்ற ஒரு சிற்றிலக்கியமும் உருவாகியுள்ளது.சிற்றிலக்கிய பெருக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

பாடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை, அணிகலன்களிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு இறைவன், இறைவி, இறையடியவர், தலைவர்கள் என்ற அடிப்படையில் பத்து பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டுள்ளன.

1.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
2.குமரகுருபர அடிகள் – முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
3. கவி வீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ்
4. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ்
5. குமரகுருபர அடிகள் -மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
6. காழி ஞானதேசிகர் – அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
7.சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
8.த. கோவேந்தன் – திருவில்லபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
9. இரா. தேவா – அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
10. புலவர் இராமமூர்த்தி -மணிவேலனார் பிள்ளைத்தமிழ்

வருணனை

சங்க கால மாந்தர் குறித்த ஆடை,அணிகலன்கள் பற்றிய வருணனை பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன. பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய இரு சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களை வருணிக்கும் முறை, கடவுளரை வருணிக்கும் முறை குறித்து இலக்கணம் கூறுகின்றன. இவ்வாறு வருணிக்கும்பொழுது, பெரிதும் ஆடை அணிகலன்கள் பற்றிய வருணனைகளே இடம் பிடிக்கின்றன. தனித்த இலக்கியங்களாக இவை மாற்றம் பெற்றாலும் இன்று வரை அனைத்து வகை இலக்கியங்களிலும் ஒரு மனிதரையோ, கடவுளையோ அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் அணிந்திருக்கிற ஆடை அணிவகைகளைப் பற்றிய வருணனை இடம் பெறுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை 
கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் 
முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் 
படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் 
மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’’

என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.

பொதுவாக மனிதர்களை கேசாதி பாத முறையிலும், தெய்வங்களை பாதாதிகேச முறையிலும் வர்ணிக்கிற மரபு தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பிள்ளைத்தமிழ் தெய்வங்களை, குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபுடையது ஆதலால், கவிஞர்கள் கடவுளாகிய குழந்தைகளை வர்ணிக்கும் முறையில் தலையிலிருந்தே வர்ணிக்கின்றனர். குமரகுருபரரின் ஆண்பாற் பிள்ளைத்தமிழில் மட்டும் முருகன் பாதாதிகேச முறையில் வருணிக்கப்படுகிறான். அவரே மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அம்மையை கேசாதிபாதமாகவே வருணிக்கிறார்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் செங்கீரைப் பருவத்தில்,
மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின் வச்சிர வொளியாட
மாசறு தேசுறு முத்தியல் சுட்டிறன் மதியுடு வென வாடக்
கணிதம் லொளிதரு குண்டல மாறிரு கதிரவன் போலாடக்
கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர் கண்டிகை சூளுமாடப்
பணிதரு மரதனம் விரவிய கரவளை பலபல விதமாடப்
பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை பகர்கிண் கிணியாட
அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி தாடுக செங்கீரை (செங்.7)

என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனையில் முருகன் அணிந்துள்ள அணிகலன்களும் சுட்டப்படுகின்றன.

ujiladevi.blogpost.com (3)

தலை உச்சி – நெத்திச்சுட்டி (முத்தியல் சுட்டி)
காது – ஒளிதரு குண்டலம்
கண்டம் – கண்ட சரம் + கண்டிகை
கை – வளையல்
இடை – கிண்கிணி
கேசாதிபாத வருணனை இடம்பெற்றுள்ளது.

இதுபோல மற்றொரு பாடலில் சப்பாணிப்பருவத்தில் குழந்தை முருகனுக்கு தாய் அலங்காரம் செய்கின்றாள்.

காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற் கவினொழுகு பொற்சுட்டியுங்
கரியகவூ சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு கதிர் முத்த மிளிர்தொங்கலுஞ்
சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு தூமணிப் பொன்னரமும்
தோளிலண் பன்மணிக் கேயூர முஞ்சிறிய தொந்திசரி யரை நாணுடன்
சீதுமுறு நாதமுரல் கிண்கித் தொகுதியுஞ் செந்தளி ரினுஞ்சிவந்த
சீறடித் துணையிலணி செம்பொற் சதங்கையும் செய்யநூ புரமு மசையத்
தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர சப்பாணி கொட்டியருளே (சப்.5)

காது – வச்சிரக் குண்டலம்
நெற்றி – பொற்சுட்டி
மார்பு – தூமணிப் பொன்னாரம்
தோள் – பன்மணிக் கேடழரம்
இடை – அரைஞாண்
கால் – பொன் சதங்கை

இதுவும் கேசாதி பாத வருணனையில் அணிகலன்களாக சொல்லப்பட்டுள்ளன.
முருகன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படும் அணிவகைகளில் மற்றவை. ‘கடம்பிணி புயத்தன்’ (காப்பு-10) என முருகன் அணிகலனையொட்டிப் புகழப்படுகிறான்.

‘மலர்த்தொடை மைக்குழலிற் சூடி’ (சப்பாணி-9, ப.21)

என குழந்தையின் உச்சியில் இடப்பட்ட கொண்டையிற் பூக்கசாக் கட்டி சூடியுள்ள அழகு சுட்டப்படுகிறது. சிற்றில் சிதைக்கும் பருவத்தில் கால்களில் அணிந்திருக்கும் ‘புனைசெய் சதங்கை’ (சிற்றில்-7) சுட்டப்படுகிறது. கழுத்தணி மாலைகளாக ‘தொடலை’ (சிற்றில்-4), ‘சங்குமணி’ (வருகை- 7),

‘நறுந்தெறியல்’ (சிறுதேர் – 6), ‘கண்டசரம்’ (செங்கீரை-18) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

தலையில் சூடுபவையாக ‘கொக்கின் இறகு’ (வருகை-3)
‘மலர்த்தொடை மைக்குழலிற்சூடி’ (சப்பாணி-9) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்

“தேட அரிய மணியரைஞாண்
சேர்க்க வருக விரற்காழி
செறிக்க வருக திலகநுதல்
தீட்ட வருக மறுகில் விளை
யாட வருக. . . “(வாராணை-3)

பொன் அரைஞாணும், விரலுக்கு மோதிரமும் பூட்டிக்கொள்ள வருமாறு குழந்தை முருகன் அழைக்கப்படுகிறான்.

“குடுமி திருத்தி மலர்சொருகிக்
கோலம் புனைந்து கொண்டாடி” (சிற்றில் – 9)
“பூட்டுங் கலன்கள் வகை வகையே” (சிற்றில்-10)

பாதாதிகேச வருணனையில் முருகன் அழகினை குமரகுருபர அடிகள் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வாராணைப் பருவத்தில் படம் பிடிக்கிறார். முருகன் அழகு நடை பயில நின்ற காலத்தை அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் அசைந்து அசைந்து ஒலி எழுப்புவதை இப்பாடல் அழகுற எடுத்துரைக்கிறது.

செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
சிலம்பொடு கலின்கலினெனத்
திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப் பொலந்
திண்தோளின் வளை கவிப்ப
அம்பொற் பகட்டு பார் பிற்சன்ன வீரமும்
ஆரமும் திருவில் வீச (வென்றிமாலை)
அணி மகர குண்டலம் பரிதி மண் மரமென்ன
அலர்கதிர்க் கற்றை சுற்றப்
பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
பட்டமொளி விட்டெறியப்பப் (வருகை – 1)

இங்கு
காலில் – சிலம்பு
இடையில் – அரைமணி (உடைமணி)
கைகளில் – வளையல்
மார்பில் – சன்னவீரமும், ஆரமும்
காதில் – மகர மீன் வடிவிற் செய்யப்பட்ட குண்டலம்

போன்றவற்றை முருகன் அணிந்திருந்த செய்திகள் பதிவாகியுள்ளன. மேற்கூறப்பட்ட பாடல்களினால் முருகன் சிலம்பு, அரைமணி, வளையல், சின்ன வீரம், ஆரம், மகர குண்டலம், பண்மணிக் கேயூரம், பொன் சதங்கை, நெற்றிச் சுட்டி, பொன்னாகரம், கண்ட சரம் போன்ற ஆபரணங்களை அண¨ந்திருந்ததாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள கண்ணபிரான் மீது பிள்ளைத்தமிழ் சிங்கபுரக் கண்ணன் பிள்ளை இயற்றியர் சிவசூரிய நாராயணன். இயற்றியுள்ளார்.

“பொன்னுலாவும் பட்டுலாவும் பூவுலாவும் மேனியா” (முத்தம்-9) பொன்னும் பட்டும் பூவும் திருமாலின் மேனியில் உலவுகின்ற அளவிற்கு நிறைந்திருந்தைதையே கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தண்டுலாவும் கடலுலாவும் சங்குலாவும் கரத்திலே
தனுவுலாவும் சுழலுலாவும் பொருளுலாவும்
மெழிலினம்” (முத்.8) என்று கண்ணன் உடலில் பொன் அணி, பூ மாலை இவற்றோடு பட்டாடை அணிந்திருப்பதாக வருணிக்கிறார்.

சங்க கால இலக்கியங்களில் விறலியரை வருணிக்கப்படும் பாடல்கள் கேசாதிபாதமாக வருணித்தன. பின்னர் இறைவனைப் பாடும் முறையில் இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்ற நிலையில் இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறையான கேசாதிபாதம் பக்தி இலக்கிய சிற்றிலக்கியங்களில் கடவுளரைப் பாடும் நிலையில், காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.

சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறை நிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாற்றம் பெற்ற நிலை என்பது கருதத்தக்கது.

ஆடை வகைகள்

கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முத்தப்பருவத்தில் குழந்தை முருகனை நீராட்டி அழகு படுத்தும் அலங்கார நிலை சுட்டப்படுகிறது.

தொடுகை மனக்கு . . .பூசித்
தூதுவரிட் டிள வெந் நீராட்டித்
துகிலால் ஈரம் புலர்த்தி மஞ்சள்
தோய்வேப் பிலநீர் சுற்றியபின்
குடுமி திருத்தி நீறணிந்து
குலவு நிலக்கப் பணிந்து முத்தங்
கொள்ளக் கனிவாய் முத்தமரன்
கொள்வான் குனியு மமையத்தின்(முத்தம்-4)

இந்தப் பாடல் குழந்தையை, மணப் பொருட்களை இட்ட வாசனை வெந்நீரில் நீராட்டித் துகிலால் ஈரம் நீங்க உலர்த்தியதைக் குறிப்பிடுகிறது. பின் மஞ்சள் நீரில் வேப்பிலை இட்டு திருஷ்டி கழிக்கின்றனராம். பின் குடுமியைத் திருத்தி, நெற்றியில் திருநீறு அணிவித்து அலங்காரம் செய்ததைக் குறிப்பிடுகிறது. நிலத்திலுள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசியதை (முத்தம்-4) மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.

முத்து அனைவரையும் கவரும் ஒரு அணிகலனாகும். அந்த முத்துக்கள் பிறக்குமிடம் பற்றி ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் குறிப்பிடுகின்றன.

“உழுவை கருமா மருப்பு முத்தும்
வனைக்கார் கமுகு கழை முத்தும்
வன சங்கரும்பு மதிமுத்து
மாதர் மிடற்றின் வருமுத்தும்”(முத்தம்-3)
என பத்து வகையான முத்துக்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்கள்

பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களை எடுத்து ஆராய்ந்தபோது குமரகுரபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முத்தப்பருவத்தில் தேவர்கள் அணியும் அணிகலன்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்திரன், குபேரன், திருமால் முதலியோர் பெருஞ்செல்வர்கள் இவர்களில் சிந்தாமணி என்னும் அரியமணி இந்திரப் பதவிக்குரியது. அது இந்திரனிடம் உள்ளது. குபேர பதவிக்கு உரியது வான்மணி. அதை உடையவன் குபேரன். திருமால் பதவிக்கு உரியது கௌந்துப மணி. அது திருமாலுக்குரியது.

வானத் தரசு கோயில் வலர்

சிந்தாமணி, அலகையோர் கோன் நகரில் வளரும் வான்மணி, பதுமநாடன் மார்பில் வளர் பருதி மணி (முத்தம்-2)
முதலான பதிவுகள் ஒவ்வொரு பதவிக்கும் உரியதாக ஒரு மணி இருந்ததைச் சுட்டுகிறது. குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்அம்மையை பெற்றெடுத்த தாயாக பாண்டிமாதேவி சுட்டப்படுகிறாள்.

அப்பாண்டிமாதேவி மயிர்ச்சாந்து பூசப்பட்டுக் குழைந்திருக்கும் கூந்தல் உடையவராகவும், (சிவபெருமான் காப்பு-3)

நெற்றியில் திருநீறு மூன்று கோடுகளாக அமைந்திருக்க, முத்துச்சுட்டி, தலையில் உச்சிக் கொண்டை,
தலையணி, காதில் குதம்பை அணி, பொன் கொப்பும் அணிந்தவளாக விளங்குகின்ற பாண்டிமா
தேவியின் தோற்றம் கேசாதிபதமாக வருணிக்கப்படுகிறது.

‘நீராட்டி ஆட்டு பொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி’ (ம.மீ.அ.பி. செங்கீரை-1)

மதுரை மீனாட்சியின் தோற்றமும் கேசாதி பாகமாகவே வருணிக்கப்படுகிறது. தலைமுடியில் அணிந்திருக்கும் உச்சிக் கொண்டை, நெற்றியில் அணிந்திருக்கும் நெற்றிச் சுட்டி, காதில் அணிந்திருக்கும் மகரக் குழைகள், திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள், மற்றும் கிண்கிணி இவற்றை அணிந்து செங்கீரை ஆட வருக என கவிஞர் அழைக்கிறார். (மு.மீ.அ.பி. செங்கீரை-6) பிற பாடல்களில் அம்மை, குதம்பை என்னும் காதணி (செங்-8) இடையில் மணிமேகலை என்னும் இடைஅணி (வருகை -1) கையில் வெண்மை நிறமான சங்கு வளையல்கள் (நீராடல்-2) அணிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.

ஆடை-பொன் சரிகையால் செய்து உடுத்தப்பட்ட
இடை ஆடை, மற்றும் முத்து அழுத்திச் செய்யப்பட்ட மேலாடை, ஒட்டியாணமாகிய
இடை அணியும் அணிந்தவளாக (ஊசல்.10)

அழகிய மாமுலையம்மை, சிந்தூரப் பொட்டை நெற்றியலிட்டு பொற்பட்டமும், திகழ்சுட்டியும் சூட்டி, அழகிய கொண்டையில் சிவாளி முத்தும், சூரியப் பிறையும், சந்திரப் பிறையும் சூடி, தங்க வளையல்களும், அமுதாரியும், சன்னவீரமும், மணிமேகலையும் அணிந்து நடந்து வர வேண்டுமென்று புலவர் (வருகை-1)

கணித நூல் புலமை வல்லோர், கணக்கினுக்கும்
அகப்படாததாகிய ஒப்பனை செய்பவளே

“கணித இவர் புலமை வல்லோர்
கணக்கினு மகப்படா ததாகியே ஒப்பனை செய்” (அம்மானை-4)

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசல் பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் பொழுது, ‘மகரக் குழைகளும ஊசலாட’ என மகரமீன் போன்ற குண்டலங்களும் ஆடியதாக பாடுகிறார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மை, அம்மானை ஆடுவதற்கு மரகதக் கல்லும், நீல மணிக் கல்லும், முத்து போன்றவற்றைப் பதித்த அம்மானைக் காய்களைக் கொண்டு நேர்த்தியாக அம்மானை ஆடிய சிறப்பு பாடப்பட்டுள்ளது. (அம்மானை – 10)

“வள்ளொளி மரகதமும் முழுநீலமும்
ஒண்தரளத் திரளும்
ஒருகொளி பொங்க இழைத்திடும் அம்மானை”

த. கோவேந்தன் பாடிய ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பலவகை அணிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.

ஆண்டாள் ‘பூட்டிய சித்திரப் புரிவளையும், (சப்பாணி-57)’, மேலாடை அணிந்தவளாகவும், (சப்பாணி-64), மகிழ மலர் மாலை அணிந்தவளாகவும் (வாராணை 71) வெண்பட்டுடை, (காமநோன்பு-116) அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள முகம்பார்க்க கண்ணாடி உடையவள் (அம்புலி-83) இந்திர நீலத்தின் அருமணியை, பசுந் தகட்டில் பதித்த ஊசல் உயைவள் (ஊசல் 100) ஒளி சொரிகின்ற முத்துமணியும் முழு மணிகளில் ஆன மாலையையும் தோளில் அந்தவள் (ஊசல்-104), என்று ஆண்டாளின் ஆடை அணிகலனை ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எடுத்தியம்புகிறது.

காழி ஞானதேசிகர் இயற்றிய அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், மாமுலையம்மை முத்துச்சரமணிகளும், சங்கிலியும், விரலில் கணையாழியும், காதில் மகரக் குழைகளும் இருப்பில் பட்டினகப் பட்டங்களும் அணிந்து செங்கீரை ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. (அ.மா. செங்கீரை-6)

பிள்ளைத்தமிழில் பிற தெய்வங்கள்

சிவன் தோற்றம்

1. வேழாடை (கி.வே.மு. சப்பாணி.2)
2. இடையில் புலி அதள் உடையர் (ஆ.பி. தாலம்-47)
3. கரி உரி உடுத்தவன் (ஆ.பி. சப்பாணி-48)
4. அரவு அணி (ஆ.பி. தால்-47)
5. முதுகெலும்பு மாலையை கோர்த்து கழுத்தில் அணிந்தவனாக (கி.வே.மு. செங்-8)
6. சடைமுடியும் வளரும் இளம்பிறை, கங்கை நதி,
7.வெள்ளெருகம்பூ சூடியவன் (அ.மா.பி. காப்பு-2)

சிவன் திசை ஆடை அணிந்தவன் (ம.மீ.அ.பி. நீராடல்-4) இவ்வாறு சிவன் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகிறது. இடையில் புலித்தோலையும், தோளில் யானைத் தோலையும் போர்த்துக்கொண்டு, சிவன் கழுத்தில் பாம்பு மாலையையும், முதுகெலும்பு மாலையையும் அணிந்தபடி சடைமுடியில் பிறை நிலவும் கங்கை நதியும் அணிந்திருக்கும் சிவனது தோற்றம் இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்களில் சுட்டப்படுகிறது.

திருமாலின் தோற்றம்

TM-7

திருமாலின் தோற்றம் பற்றிய வருணனையில் அவதாரத்திற்கேற்ப ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகின்றன. இராமர் அவதாரத் தோற்றத்தில் ‘மரவுரி’ (ஆ.பி.தால-47) அணிந்தவராகவும், கண்ணன் அவதாரத் தோற்றத்தில் இடையில் சங்கு சக்கரம், வில், வாள், தண்டு இணைந்த பொன்மணி வடத்தை (ஆ.பி.வாராணை 71)யும், குண்டலங்கள் (காமநோன்பு-112) கௌத்துவ மாலை காமநோன்பு-114) பட்டாடை (ஆ.பி. வாராணை-68) அணிந்தவராகவும் சுட்டப்படுகிறார்.

திருமால் தோற்றத்தில் துளசி மாலையும், காதில் மகர குண்டலங்களும் (அ.மா.பி. காப்புப்-1) அணிந்து பாம்பணையில் படுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடவுளர் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பிற மகளிர் அணிந்த ஆடை அணிவகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், ஆய்ச்சியர் அணிந்துள்ள அணிகலன்களாக எளிய மலர்மாலைகளே சுட்டப்படுகின்றன.

கொன்றை நறுங் குழலையும், முல்லையின் அரும்பையும், செழித்த மலர்களையும் கூந்தலில் கட்டி முடித்தவர்களாக ஆய்ச்சியர் குறிப்பிடப்படுகின்றனர். (அ.மா.செங்கீரை-5)

ஆண்டாள் பிள்ளைத்தமிழில் கற்களை பொன்னில் பதிக்கும் முறை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. ஒருமணியானது பேராற்றினுள்ளே சேறிடத்தே அணு அளவினதாகத் தோன்றி, சிவப்பு நிறமுற்றுப் பதினாறு ஊழிக்காலம் கடந்த பின்னரே முழுமை பெறும் தன்மையுடையது. ஆந்த மணி மிகப் பருத்தது. அதனைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டி, தக்க அளவு செய்து, அணிகலன்ற குழி செய்து பதித்து நகை செய்வர் (வருகை 76) என மணி மண்ணில் உருவாகும் முறை குறிப்பிடப்படுகிறது.

அடியவர் தோற்றத்தில் ஆடை அணிகலன்கள்

அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், திருநாவுக்கரசரின் எளிய தோற்றம் காட்டப்படுகிறது. காதில் குழையும், மேனி முழுதும் திருவெண்ணீரும் அணிந்தவராகச் சுட்டப்படுகிறார் (சப்பாணி-7)

சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் பிள்ளைத்தமிழ் சார்ந்த காப்புப் பருவத்தில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருநீற்றுக் காப்போ உண்மையான அணிகலன் என அவருக்கு திருநீற்றை மட்டும் நெற்றியில் அணிவித்ததாகப் பாடுகிறார்.

“வேறுபல காப்பும் மிகை என்றவை விரும்பார்
திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்”

பொதுவாக குழந்தைக்கு மந்திரித்த காப்பு கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல், ஐம்படைத்தாலி கட்டுதல் முதலான காப்புகளை அணிவிப்பார். ஆனால் சேக்கிழார் திருநீறே சிறந்த காப்பு எனக் கருதியதை இங்கு ஞான சம்பந்தர் வாழ்க்கைமூலம் காட்டுகிறார்.

தலைவர்கள் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

கவிஞர் இராதே எனப்படுகின்ற இரா. தேவா, அன்னை தெரசா பிள்ளைத்தமிழ், இயற்றியுள்ளார். இதில் அன்னை தெரசாவை பாட்டுடைத் தலைவியாக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டிருந்தாலும், குழந்தை தெரசாவிற்கு ‘வெள்ளுடை’ மட்டும் அணிவித்து ‘வெள்ளுடையம்மை’ (பாடல்-14) என்று வெள்ளையாடை அணிந்த தோற்றத்தையே தருகிறார். ஆடை அணிகலன்களை வருணிப்பதற்குப் பதில்,

“வெள்ளுடை யம்மை குமிழ் சிரிப்பின்
விளைவில் வறியோர் வாழ்வுயரும்
வெற்றிச் செல்வி சிரிப்பழகி”” (பாடல்-14)

அன்னை தெரசாவின் பொன் நகை அவளுடைய புன்னகையே என்று பாடுகின்றார். தருமபுரி மாவட்டதைச் சார்ந்த கவிஞர் மணிவேலனார். இவர் மீது பாடப்பட்ட நூலே பாவலர்மணிவேலனார் பிள்ளைத்தமிழ். மணிவேலனார் காலில் அணிந்ததாகச் சிலம்பு(வருகை-4) மட்டுமே கூறப்பட்டுள்ளது.

முடிவுரை

சங்க நூல்களில் பாடினி, விறலி பாத்திரங்கள் ( பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை) கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ளன. சங்ககால செல்வந்தர்,ஏழையர் குறித்த பதிவுகளிலும் நிலைக்கேற்ப ஆடை அணிகலன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருணனை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களிலும் தொடர்ந்துள்ள திறத்தை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. கடவுளர் பற்றிய வருணனையில் அதிகமாக இடம் பெறும் ஆடை அணிவகைகள், காலம் செல்லச் செல்லச் செல்ல அருகி பக்தி இலக்கியக் காலத்தில் அடியவருக்கு எளிய தோற்றமும் திருநீறுமே அணிகலன் என்று கருதப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த இலக்கியங்களில் அவையும் அருகி காலத்திற்கேற்ப நகையணிதல் தவிர்க்கபட்டுள்ளதைக் காண முடிகிறது.

துணைநின்ற நூல்கள்

1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009
2. கவிவீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985
3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013
4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.
5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.
6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000
7. சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை – பதிப்பு 1972.
8. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்
9.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

படங்களுக்கு நன்றி

https://www.facebook.com/saivaneri

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

  1. பிள்ளைத் தமிழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழை என் தைவழிப்பட்டி சிலமுறை சொல்வதுண்டு.

    தாங்கள் பல பிள்ளைத்தமிழ்களையும் குறிப்பிட்டு விளக்கியமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *