Blog

  • “அம்மா”

     

    மீ.விசுவநாதன்

    amma
    உயிருள் உயிரைக் காத்து
    ஒருநாள் வெளியில் விட்டு
    பயிலும் பாச மெல்லாம்
    பாலுடன் ஊட்டி வந்து
    வெயிலும் மழைக்கு முள்ள
    வேற்றுமை உணர்வு காட்டிப்
    பயிரைப் பசுமை யாக்கிப்
    பருவத்தில் நடக்க விட்டாள் !

    விட்ட தொரு வேகம்
    விளக்க மேதும் இன்றிக்
    கட்டை இதுசுகம் தேடிக்
    கட்ட றுந்துபோய்த் தானே
    தொட்ட தோபல துன்பம் !
    சூழ்ந்துள கூட்ட மெல்லாம்
    விட்டு வெகுதூர மோட
    விலகா தென்னரு கிலே

    பொட்டாகப் பொலிந்து நிற்பாள்!
    பூமியின் புழுதிக் காற்றை
    சிட்டுநான் சுவாசித் தாலோ
    சிந்தையில் நொந்து போவாள் !
    கெட்டு நான்போன போதும்
    கீழ்மையில் கிழிந்த போதும்
    கொட்டிய தன்கண்ணீ ராலும்
    குழந்தை எனைவாழ்த்தி நாளே !

    திட்டினேன் ! கோபப்புய லாகப்
    பேசியும் தீர்த்தேன் ! நாவால்
    சுட்டேன் ! அன்பு கூறும்
    தூய மொழியெ லாமும்
    தட்டிக் கழித்தேன் ! வாழ்வில்
    தடம்புரண் தழுத என்னைக்
    கட்டி அணைத்து அன்பு
    காட்டிய கைகளைப் பார்த்து

    வெட்கிப் போனேன் ! தீது
    பேசி வேட்டை நாயாய்க்
    கொட்டிய வார்த்தை எல்லாம்
    குழந்தையின் மழலை என்றாள் !
    மட்டிலா மனதின் ஊற்று
    மண்விண் பிரவாக மாகத்
    தட்டின்றிச் செழிப்ப தென்றால்
    அம்மம்மா அனைத்தும் நீயே !

    (20.09.1982)

    Share
  • கி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ ​சொல்லதிகார ஆராய்ச்சி”

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.

    கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

    கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் ​தொடக்கக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் “காந்தமலை” என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. இவர் அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.

    தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.

    கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே கி.வா.ஜ. வுக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய, “போற்றிப்பத்து” என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. “ஜோதி” என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.

    1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.

    கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

    1927-ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927-ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக் கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.

    உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.

    கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.

    1932-ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை எழுதி, “கலைமகள்” இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் “கலைமகள்” இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமு​மே கராமாகும்.

    கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும். 1932-ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மணந்து ​கொண்டார்.

    கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.

    வாகீசகலாநிதி, திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க்கவி பூஷணம், உபன்யாசகேசரி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித்தவமணி, ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன.

    கி.வா.ஜ., உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.

    கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் “கல்கி” நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

    பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருட்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

    மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.

    கி.வா.ஜ.வின் வாழும் தமிழ்:
    தினமணியில் கி.வா.ஜ. ​தொடர்ந்து ​தொல்காப்பியம் ​சொல்லதிகாரம் குறித்து எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்​பாக இந்நூல் விளங்குகின்றது. ​தொல்காப்பியம் அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்ததாக கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.

    இந்நூலில் கி.வா.ஜ. அவர்கள் முழு​மையாகத் ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்திற்கு உ​ரைவகுக்கவில்​லை. சிற்சில இலக்கணச் ​செய்திக​ளை​யே இதில் விளக்கிச் ​செல்கின்றார். ​பெரும்பான்​மையும் ​சேனாவ​ரையர் உ​ரை​யையும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் உ​ரை​யையும் கி.வா.ஜ. ​அவர்கள் விரிவாக விளக்கிச் ​சென்றுள்ள​மை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் 32 கட்டு​ரைகள் இடம்​பெற்றுள்ளன. இதில் கிளவியாக்கத்தில் இடம்​பெற்றுள்ள 19 நூற்பாக்களுக்கு விரிவாக கி.வா.ஜ. அவர்கள் விளக்கவு​ரை எழுதியுள்ளார்.

    பெயரியல் பற்றி 10 கட்டு​ரைகளிலும், ​​வேற்று​மை குறித்து 2 கட்டு​ரைகளிலும், விளிமரபு குறித்தும் இ​டைச்​​சொல், உரிச்​சொல் பற்றி ஒவ்​வொரு கட்டு​ரையிலும், எச்சவியலில் இடம்​பெறும் ​சொல் குறித்த சில நூற்பாக்களுக்கும் இந்நூலில் சு​வைபட கி.வா.ஜ. அவர்கள் விளக்கம் கூறுகிறார். இறுதியாக இடம்​பெறும் 32-ஆவது கட்டு​ரையான உள்ளு​றை என்பதில் தாம் வாழும் தமிழ் நூலில் எடுத்துக் கூறியுள்ள ​தொல்காப்பிய நூற்பாக்களின் ​தொகுப்​பை கி.வா.ஜ. ​மொழிந்துள்ளார்.

    வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணம்

    தாம் ​தொல்காப்பியச் ​சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்நூலிற்கு “வாழும் தமிழ்” என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணத்​தை, “வாழ்க்​கையின் நி​லை​யை ​மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிக​ளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புக​ளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆக​வே ​தொல்காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிச் ​சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் தமி​ழைப் பற்றிப் ​பேசுகிறது. இந்தக் கருத்துட​னே, ‘வாழும் தமிழ்’ என்ற ​பெய​ரை இந்தப் புத்தகத்திற்கு ​வைத்​தேன்”(ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்.

    மேலும் கி.வா.ஜ. இந்நூலில் பழந்தமிழர்களின் வாழ்க்​கை​யை எடுத்து​ரைக்கின்றார். இத​னை, “​தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப்​பெறும் இலக்கணச் ​செய்திக​ளை மு​றையாகத் ​தொகுத்துத் தருவதும் அன்று; ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்தில் உள்ள ​செய்திகளாகிய சிறு பு​ழைகளினூ​டே பரந்து, விரிந்த பண்​டைத் தமிழர் வாழ்க்​கை​யைப் பார்க்க முயலும் முயற்சி” (ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுவது ​நோக்கத்தக்கது.

    கி.வா.ஜ. வாழ்க்​கை​யோடு இ​ணைத்து ​சொல்லதிகாரத்தில் இடம்​பெற்றுள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். இவ்விளக்கமானது எளி​மையானதாகவும், தனித்தன்​மையு​டையதாகவும் அ​மைந்துள்ளது. ​பழந்தமிழர் வாழ்க்​கை​யில் பயன்படுத்தப்பட்டு வரும் ​சொல்​வழக்​கை ​வைத்தும் இன்று அச்​சொல் எப்​பொருளில் மக்களி​டை​யே வழங்கப்பட்டு வருகின்றது என்ப​தையும் கி.வா.ஜ. உதாரணத்துடன் இந்நூலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்குச்​சொற்க​ளைப் பயன்படுத்தி விளக்கம் கூறுதல்:
    கி.வா.ஜ. அவர்கள் ​நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும்​போது ந​டைமு​றையில் வழக்கில் மக்கள் வழங்கும் வழக்குச் ​சொற்க​ளைப் பயன்படுத்தி எளி​​மையாக விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ​சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவான,

    “உயர்தி​ணை என்மனார் மக்கட் சுட்​டே;
    அஃறி​ணை என்மனார் அவரல பிற​வே;
    ஆயிருதி​​ணையின் இ​சைக்குமன ​சொல்​லே”

    என்பதற்கு மிக எளி​மையாக தமிழில் எழுதப் படிக்கத் ​தெரிந்​​தோரும் புரிந்து ​கொள்ளும் வண்ணம் கி.வா.ஜ. அவர்கள் விளக்குகின்றார்.

    வழக்கில் வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று நாம் ​பேசுவது வழக்கம். உயர்தி​ணை என்ப​தை வாயுள்ள பிராணி என்றும் அஃறி​ணை என்ப​தை வாயில்லாப் பிராணி என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்(ப.,3). உணர்ச்சி​யைச் ​சொல்லும் ஆற்றல் ​பெற்ற மனிதன் அது ​பெறாத பிற என்ற இரண்டு வ​கைகள் அ​மைந்துள்ளன. உத்தி​யோகஸ்தர்-உத்தி​யோகஸ்தர் அல்லாதார் ​கெஜட்டில் வரு​வோர்-அல்லாதார் என்று வழக்கத்தில் வழங்குவர். அ​தைப்​போன்​றே மனித சாதி​யை உயர்தி​ணை​யென்று பிரித்தபிறகு மற்றவற்​றை இழிந்த தி​ணை​யென்று ​சொல்லாமல் அல்லாத தி​ணை என்று பிரித்தனர்; அல்லாத தி​ணை என்றாலும் அல்தி​ணை என்றாலும் ஒன்றுதான். என்று எடுத்து​ரைத்து உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் ​பொருள்க​ளை உயர்தி​ணை என்று வகுத்து​ரைப்பர் மக்கள் அல்லாத பிற ​பொருள்க​ளை அஃறி​ணை என்று ​சொல்லுவார்கள் ​சொற்களும் அந்த இரண்டு தி​ணைகளாக வழங்கும் என்று எளிய விளக்கம் தருகின்றார்.

    பொரு​ளைக் குறிக்கும் ​சொல்​லை பெயர் என்றும் ஆற்ற​லின் உருவத்​தைக் குறிக்கும் ​சொல்​லை வி​னை என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். ​மேலும் ​பொரு​ளை சிவம் என்றும் ஆற்ற​லை சக்தி என்றும் தமிழர்களின் வாழ்க்​கை ​நெறி சார்ந்து ​சொல் என்பதற்கு கி.வா.ஜ. விளக்கம் கூறுகின்றார்.

    பழ​மொழிக​ளைக் கூறி விளக்குதல்:
    முன்​னோர்களின் அனுபவ ​மொழிக​ளே பழ​மொழிகளாகும். இப்பழ​மொழிகள் வாழ்க்​கை​யை விளக்கும் பண்பாட்டுப் ​பெட்டகங்களாகும். பால் என்பது குறித்து விளக்கவரும் கி.வா.ஜ. அவர்கள் பல உதாரணங்க​ளைக் கூறி அத​னை எளி​மையாக விளக்குகிறார். அ​னைத்தும் ஒன்றாக இருந்தாலும் அ​வை ஒவ்​வொன்றும் ஒவ்​வொரு விதத்தில் ​வேறுபட்டு நிற்கின்றது. உயர்தி​ணையில் பால் என்பது ஒன்றாக இருப்பினும் அ​வை ஆண், ​​பெண், பலர் என்றும் அஃறி​ணையில் ஒன்று பல என்றும் நம் முன்​னோர்களால் பகுக்கப்பட்டிருப்பது ​நோக்கத்தக்கது.

    இத​னை கி.வா.ஜ.அவர்கள் “தாயும் பிள்​ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் ​வே​றேதான்” (ப.,9) என்ற பழ​மொழி​யைக் குறிப்பிட்டு விளக்கம் தருகின்றார். மனிதன் சமுதாய உணர்ச்சி​யோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற்​கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி மனித​னை ஆக்குகின்றன. தனிமனிதன் ​தோன்றுகிறான் அவன் தன் முயற்சியினால் மற்றவர்க​ளோடு ஒன்றுபட்டு சமுதாய உணர்ச்சி ​பெறுகிறான் என்று கி.வா.ஜ. ​தெளிவுறுத்தி,

    “ஆடூஉ அறி​சொல் மகடூஉ அறி​சொல்
    பல்​லோர் அறியும் ​சொல்​லொடு சிவணி
    அம்முப்பாற்​சொல் உயர்தி​ணை யவ்​வே
    ஒன்றறி ​சொல்​லே பலவறி ​சொல்​​லென்று
    ஆயிருபாற் ​சொல் அஃறி​ணையவ்​வே”

    என்ற ​தொல்காப்பிய நூற்பாவிற்கு விளக்கம் தருகின்றார்.

    ஆண், ​பெண் தவிர்ந்த மூன்றாவது பாலினமாக விளங்கும் திருநங்​கை பற்றிய பால்பகுப்​பை தமிழர்தம் வாழ்க்​கை ​நெறி சார்ந்து கி.வா.ஜ.அவர்கள் விளக்குகின்றார். அவர், “தமிழ் உயி​ரோடு வளர்ந்த ​மொழி. வாழ்க்​கை​யை ஒட்டி வந்த ​மொழி. அதன் இலக்கணமும் ​நெட்டுருப்​போட்டுத் த​லைவலி​யை உண்டாக்கிக் ​கொள்ள வந்ததன்று. ….ஆக​வே வாழ்க்​கையில் அலியின் நி​லை எவ்வாறு அ​மைந்திருக்கிறது?… யாராவது தம்​மை அலி என்று ​சொல்லிக் ​கொள்ள விரும்புவது உண்டா?

    ப​டைப்பி​லே ஆண், ​​பெண் என்ற பிரிவி​லே ​சேராவிட்டாலும் ​செயற்​கையினால் தா​மே விரும்பி எந்தக் கூட்டத்தி​லே அவர்கள் ​சேருகிறார்க​ளோ அந்தக் கூட்டத்திற்குரிய பாலில் ​சேர்த்து வழங்குவ​தே சரி என்று ​சொன்னார். ஆக​வே ​பேடி வந்தாள், ​பேடி வந்தான் என்று ​சொல்லும்​போது அந்தப் ​பேடியின் வாழ்க்​கை கூட நமக்குத் ​தெரிந்து ​போகிறது. மகளி​ரோடு ​சேர்ந்து வாழ்கிறதும் ஆடவ​ரோடு ​சேர்ந்து பழகுகிறதும் ​சொல்லி​லே​யே ​தொனிக்கின்றன” (பக்.,13-14) என்று ​தெளிவுறுத்துகின்றார்.

    கடவுள் தத்துவத்துடன் இ​ணைத்துப் ​பொருள் கூறுதல்:
    தெய்வம் பற்றிய தமிழர்களின் பால்பகுப்​பை, “​தெய்வத்துக்குச் சாதி, தி​ணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியாணிப்பதற்கும் உரு அ​மைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் ​வேண்டும். தனக்குத் ​தெரிந்த உருவத்​தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆக​வே ​தெய்வத்​தைச் சிந்த​னைக்குக் ​கொண்டுவந்து உரு அ​மைக்கும்​போதும் ​பேச்சுக்குக் ​கொண்டு வந்து உ​ரையாடும்​போதும் தான் அறிந்த தி​ணையுள்ளும் பாலுள்ளும் ​வைத்து வழங்கினான்; ​தேவன் வந்தான், ​தேவி வந்தாள் என்று ​பேசினான்”(ப.,15) என்று வாழ்க்​கை​யோடு இ​ணைத்து கி.வா.ஜ.விளக்குகின்றார்.
    கடவுள் தி​ணை, பால் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனால் கடவு​ளை இதற்குள் அடக்க இயலாது. ​சொல்லில் வழங்கும்​போதுதான் ​தெய்வத்திற்கு தி​​ணை, பால் வகுக்க இயலும். ​​பேடி முதலிய ​சொற்க​ளைப் பற்றி விளக்க வந்த ​தொல்காப்பியர்,

    “​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்
    ஆண்​மை திரிந்த ​பெயர்நி​லைக் கிளவியும்
    ​தெய்வம் சுட்டிய ​பெயர்நி​லைக் கிளவியும்
    இவ்​வென அறியும் அந்தம் தமக்கு இல​வே
    உயர்தி​ணை மருங்கின் பால்பிரிந்து இ​சைக்கும்” (487)
    என்று குறிப்பிடுகிறார்.
    ​​
    மேலும்,
    “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் ​தெள்​​ளேணம் ​கொட்டா​மோ”

    என்று மாணிக்கவாசகப் ​பெருமானின் திருவாசக அடிக​ளை எடுத்துக் கூறி, ஆயிரம் திருநாமம் ​சொல்லிக் ​கொட்டும்​போ​தே இ​றைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்​மை உள்ளத்தின் அடித் தட்டி​லே ஒலித்துக் ​கொண்​டே இருக்கிறது. அது​போலத்தான் ​தெய்வத்​தை ஆணாகவும் ​பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் ​பேசும்​போ​தே அத்​தெய்வம் இப்பிரிவுகளுக்​கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்த​தென்ப​தை​யே ​தொல்காப்பியர்”​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்” என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் என்று கி.வா.ஜ. விளக்கம் தருகிறார்.

    தொல்காப்பியரின் இந்நூற்பாவிற்கு கி.வா.ஜ., “அலிக​ளையும் ​தெய்வத்​தையும் வந்தான் ​போனான், வந்தாள் ​போனாள் என்று ​சொல்வ​தைக் ​கொண்டு இப்படிப் ​பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் ​தெரியவில்​லை என்று நி​னைக்கா​தே. ​பைத்தியக்காரத் தமிழன் ​தெய்வத்​தையும் தன்​னைப் ​போல ​வேட்டியும் புட​வையும் கட்டுவது என்று நி​னைத்துவிட்டா​னென்னு பரிகாசம் ​செய்யா​தே அந்தப் பாற்பிரி​வைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரிய​வை அல்ல; கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று அவர் இதன் மூலம் ​சொல்லாமற் ​சொல்லவில்​லையா? கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்கா​தே.

    நம்​மைப் ​போலப் ​பெண்டு பிள்​ளைகளுடன் வாழ்பவ​ரென்று ஏமாந்து ​போகா​தே. ​​எல்லாம் ​வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று சமயக் குரவர்கள் ​சொல்வது ​போல இருக்கிறதல்லவா இது? ஆம் ஒன்று ​சொல்​லைப் பற்றிய தத்துவம்; மற்​றொன்று ​பொரு​ளைப் பற்றிய தத்துவம். ​சொல்லின்றிப் ​பொருள் இல்​லை; ​பொருளின்றிச் ​சொல் இல்​லை.”(பக்.,15-16) இ​றைத் தத்துவத்​தை எடுத்துக்கூறி விளக்கிச் ​செல்கின்றார். இது, “சிவம் இன்றி சக்தி இல்​லை; சக்தி இன்றி சிவம் இல்​லை” என்ற சிவத்தத்துவத்​தை விளக்குவதாக அ​மைந்துள்ளது ​நோக்கத்தக்கது.

    நிகழ்ச்சிக​ளைக் கூறி விளக்குதல்:
    ஒரு நூற்பாவிற்கு விளக்கம் கூறும்​போது க​தை​போன்று ஒரு சிறு நிகழ்ச்சி​யைக் கூறி அதன் வழி நூற்பாவிற்கு விளக்கும் கூறும் மு​றை​யையும் கி.வா.ஜ. இந்நூலில் ​கையாண்டுள்ளார். அச்சிறு நிகழ்ச்சி சு​வையாகவும் அவர் காலத்திய ​சொல்லாடல்க​ளை அறியத்தகுவனவாகவும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.
    சுருங்கச் ​சொல்லி விளங்க ​வைக்கும் தன்​மையும் நிகழ்ச்சிக​ளைக் கூறி நூற்பாக்க​ளை விளக்கும் மு​றையில் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. ​தொல்காப்பியர் கூறும்,

    “​செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”(496)
    ​செப்​பே வழீஇயினும் வ​ரைநி​லை இன்​றே
    அப்​பொருள் புணர்ந்த கிளவியான”(498)

    என்ற ​செப்பு, வினா குறித்த நூற்பாக்களுக்கு கி.வா.ஜ. பின்வரும் க​தை​போன்ற நிகழ்ச்சிக​ளை எடுத்துக்கூறி விளக்கத் தருகின்றார்.

    “ஒரு ​வேளாளன் நிலத்​தை உழுது ​​கொண்டிருக்கிறான். அந்த நிலம் ஒரு ​பெருவழியின் அருகில் இருக்கிறது. யா​ரோ பிரயாணி கடம்பூர் என்ற ஊருக்குப் ​போய்க் ​கொண்டிருக்கிறான். தான் ​போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக் ​கொள்வதற்கு அவன் உழவ​னைப் பார்த்து, “ஐயா கடம்பூருக்கு வழி எது?” என்று ​கேட்கிறான். உழவன் இரண்டு மாடுக​ளை ஏரில் பூட்டி உழுகிறான். இடத்து மாடு, வலத்துமாடு என்று அந்த மாடுக​ளைச் ​சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம்பூணி, வலம்பூணி என்று ​சொல்லி வந்தார்கள். வலப்பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் ​பொருள். “இடத்தி​லே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று” என்று அந்த உழவன் ​சொல்கிறான். ‘கடம்பூருக்கு வழி யா​தோ?’ என்று ​கேட்ட வழிப்​போக்கனுக்கு அந்தக் காலத்துப் ​பேச்சில், “இடம்பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் ​சோல்கிறான். பட்டுக்​கோட்​டைக்கு வழி ​கேட்டவனிடம் ​கோட்​டைப் பாக்கின் வி​லை ​சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணனாகத்தான் இருக்க ​வேண்டும். இந்த வினாவுக்கும் வி​டைக்கும் பட்டுக்​கோட்​டை, ​கொட்​டைப்பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எது​கையினால் ​தொடர்பு இருக்கிற​தே​யொழியப் ​பொருளால் ஒரு ​தொடர்பும் இல்​லை”(ப.,18)என்று விளக்கம் தருகின்றார். இந்நிகழ்​வை முதலில் கூறிய கி.வா.ஜ. அவர்கள் அந்நூற்பாக்களுக்குரிய எளி​மையான விளக்கத்​தை,
    “வினா வி​டை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க ​வேண்டும்” என்று ஒரு சூத்திரம் ​சொல்லுகிறது. பிறகு, “வினாவுக்கு ​நேர்முகமான வி​டையாக இல்லாவிட்டாலும் ம​றைமுகமானதாக இருந்தாலும் வி​டை ​என்​றே ​கொள்ளலாம் என்று ஒரு சூத்திரம் வருகிறது”(பக்.,18-19) என்று க​தை நிகழ்வி​னைக் கூறிய பின்னர் எடுத்து​ரைக்கின்றார்.
    “வினாவுஞ் ​செப்​பே வினா​வெதிர் வரி​னே”(497)

    எனும் நூற்பாவிற்கு, ஒரு வினாவிற்கு எதி​ரே வி​டை தரும் கருத்​தோடு ஒரு வினா​வே வந்தாலும் அதுவும் வி​டைதான் என்பது ​பொருளாகும். இத​னை கி.வா.ஜ. அவர்கள் ​நேர்வி​டை, ம​றைவி​டை, ஏவல் வி​டை என்ற வி​டை வ​கைக​ளைப் பற்றி விளக்கிவிட்டு,
    “ஐந்நூறு ரூபாய் பணம் ​கொடுப்பாயா?”
    “பணம் இல்​லை என்பது ​தெரிந்தும் ​கேட்பது நியாயமா?”
    ​கேட்ட ​கேள்விக்கு இல்​லை​யென்று ​நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வ​ளைத்துச் ​சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆனால் அந்தப் பதில் மற்​றொரு ​கேள்வி உருவத்தில் இருக்கிறது இது வினா​வெதிர் வினாதல். “உனக்கு எத்த​னை பிள்​ளைகள்?” “அதற்​கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கி​றேனா என்ன?” இதுவும் வினா​வெதிர் வினாதல்”(பக்.,27-28) என்று உ​ரையாடல் வழி விளக்குவது எளி​​மையிலும் எளி​மையாகவும் இலக்கணத்​தைச் சு​மையாக இல்லாது சு​வையாகவும் ஆக்குகின்றது.

    உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிதல்:
    கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு உ​ரைகூறும்​போது ​பெரும்பான்​மையும் உ​ரையாசிரியர்களின் கருத்​தை ஒட்டி​யே உ​ரைகூறிச் ​செல்கின்றார். முதலில் தனது கருத்​தைக் கூறிவிட்டுப் பின்னர் உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிந்து கூறுவது கி.வா.ஜ.வின் உ​ரைத்திற​னை புலப்படுத்துவதாக உள்ளது. தகுதி வழக்​கையும் இயல்பு வழக்​கையும் பற்றி விளக்கும்​போது,

    “தகுதி வழக்குகளுக்கு ஏ​தேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்​கைக் காரணமும் இன்றி ​வேறுபட்டு வரும் ​பேச்சு வ​கை உண்டு. ​

    பேச்சு வழக்கி​லே அ​வை அப்படி வந்து விட்டன. அவற்​றை வழக்கு என்று வகுத்திருக்கின்றனர். ​வெள்ளாடு என்று ஒரு வ​கை ஆட்​டைச் ​சொல்கி​றோம். தமிழ்நாட்டில் வாழ்ந்து ​வெள்ளாட்​டைப் பார்க்காத அயல்நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிறார். அவர் ​வெள்ளாடு என்ற ​சொல்​லைக் கண்டவுடன், ​​வெள்​ளை நிறமு​டைய ஆடு என்றுதான் அர்த்தம் ​செய்து ​கொள்வார். இர்​கே வாழ்ந்து ​பேச்சு வழக்​கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானாலும் அது ​செவள்ளாடுதான் என்று ​தெரியும். அப்படிச் ​சொல்லக் காரணம் என்ன? ​தெரியாது. ​நெடுங்காலமாக அப்படித்தான் வழர்குகிறார்கள் என்பது​வே காரணம். இத​னை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீ​ரை, சில நீர் என்று முற்காலத்தில் ​சொன்னார்களாம். அதனால் உ​ரையாசிரியர்கள் அத​னை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ‘குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீ​ரைச் சிறிது என்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்பு​டை​யை மீயடுப்பு என்றலும் ​போல்வன வழக்காம்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.

    காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் ​சொற்க​ளே வருகின்றன. ஆனாலும் அவற்றின் ​பொரு​ளைக் கண்டுபிடிக்க, ச​பை மரியா​தை​யையும் உலக வழக்​கையும் பற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது. ​சொல்லுக்குச் ​சொல் ​வைத்து இதற்கு இது ​பொருள் என்று காண சூவண்டிய ​மொழியில் இது ஒரு விந்​தை. ​சொல்லுக்குப் புறம்​பே அ​மைந்த ​பொரு​ளை உ​டையனவா​கையால் இ​வை வறு என்று தள்ளக் கூடாது. தள்ளினால் வாழ்க்​கை​யைப் புறக்கணித்தவர்கள் ஆ​வோம். இவற்​றைத் தள்ளாமல் ​கொள்ள ​வேண்டும் என்று ​தொல்காப்பியர் ​சொல்கிறார்.”(பக்.,42-43)
    என்று எடுத்து​ரைக்கின்றார். அதன் பின்னர்…

    “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
    பகுதிக் கிளவி வ​ரைநி​லை இல​வே”
    என்ற நூற்பாவி​​னைக் இயம்பி, தகுதி​யையும் உலக வழக்​கையும் தழுவிப் ​பேசப்படும் பகுதியி​லே வரும் ​சொற்கல் நீக்கப்படுவன அல்ல. அவற்​றைக் ​கொள்ள ​வேண்டும் என்பது இதன் ​பொருள்” (ப.,43) என்று எளிய மு​றையில் தனது விளக்கத்​தை எடுத்​தோதுகின்றார். இது கி.வா.ஜ. அவர்களின் உ​ரைகூறும் தனித்தன்​மைக்கு எடுத்துக்காட்டாக அ​மைந்துள்ளது.

    தமிழ்ப் பண்பாட்​டை விளக்கி உ​ரை கூறுதல்:
    கி.வா.ஜ.அவர்கள் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் உயர்ந்த எண்ணங் ​கொண்டவர். எதற்காகவும் கூட தமிழ்ப் பண்பாட்​டையும் தமிழினத்​தையும் விட்டுக்​ கொடுக்காத ​நெஞ்சுரங் ​கொண்டவர். கி.வா.ஜ.,

    “இனச்சுட்டில்லாப் பண்பு​கொள் ​பெயர்க்​கொ​டை
    வழக்காறு அல்ல ​செய்யுள் ஆ​றே”
    எனும் ​தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ.

    “தமிழர் ​தெளிவாகப் ​பேசத் ​தெரிந்தவர்கள். அவர்கள் ​மொழியில் ​சொல்லுக்குப் பஞ்சம் இல்​லை. இப்​போது எத்த​னை​யோ வார்த்​தைகளுக்குத் தமிழ் ​தெரியாமல் இடர்ப்படுகி​றோ​மே! என்று சில நண்பர்கள் ​கேட்கலாம். இந்த நாட்டி​லே எண்ணும் எண்ணத்துக்கும் ​சொல் இல்​லை என்றால் அதுதான் கு​றைபா​டே ஒழிய இறக்குமதியான சரக்குக்குப் ​பேர் இல்​லை​யே என்றால் ​பொருள் இறக்குமதியாகும்​போது ​பெயரும் இறக்குமதியாக ​வேண்டியதுதான். அந்தப் ​பெயர் இங்​கே வந்து உரு மாறி​யோ ​சொல்​லே மாறி​யோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்​தை இல்​லை என்றால் அது இங்கிலீஷின் கு​றை அல்ல. அவர்கள் ஊரில் இட்டிலியாகிய ​பொருள் இல்​லை. அதனால் அதற்குரிய ​சொல்லும் இல்​லை. உலக வழக்காகிய ​பேச்சி​லே மயக்கமில்லாமல் இருக்க ​வேண்டும்”(பக்.,45-46)

    நம்வீட்டு ​வே​லைக்காரர்களில் இரண்டு ​பேருக்கு ராமன் என்ற ​பெயர் இருக்கிறது. அந்த இரண்டு ​பே​ரையும் ​வேறு பிரிக்க ​நெட்​டை ராமன், குட்​டை ராமன் என்று அ​டை​கொடுத்துப் ​பேசுவதுதான் ​தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒ​ரே ராமன் இருக்​கையில், ​நெட்​டை ராம​னைக் கூப்பிடு என்றால் புதிதாக யாராவது அ​தைக் ​கேட்கும்​போது அவர் ​நெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்​டை ராமன் ​வேறு இருக்கிறான் ​போலும்! என்று அவர் எண்ணுவார். ஆக​வே ராம​னைக் கூப்பிடு என்று ​சொன்னா​லே ​போதும்.

    “ஆழிசூழ் உலக​மெல்லாம் பரத​னே ஆள” என்று கம்பர் பாடுகிறார். ​பேசும்​போது, ஆழி சூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிறான் என்பது அநாவசியம். ஆழி சூழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் ​சொல்வது சில சமயங்களில் மயக்கத்​தைக் கூட உண்டுபண்ணும் கம்பர் பாடலாமா? என்றால் அது கவி​தைக்குரிய உரி​மை. அலங்காரம் பற்றி அப்படிச் ​சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு(ப.,48)
    என்று தமிழர்தம் பண்பாட்டு மரபும் ​பெரு​மையும் புலப்படுமாறு விளக்கம் கூறுகின்றார்.

    அ​​தோடு மட்டுமல்லாது தமிழர்கள் இறக்குமதி ​செய்யாது புதிய புதிய ​பொருள்க​ளைத் தாங்க​ளே உருவாக்குதல் ​வேண்டும் என்ற கருத்​தையும் கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாமல் ​சொல்லிச் ​சென்றிருப்பது அவரின் உயர்ந்த எண்ணத்​தைப் புலப்படுத்துவதாக அ​மைந்துள்ளது. ​தொல்காப்பியத்திற்கு தமிழர் பண்பாட்டு அடிப்ப​டையில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் கூறும் பாங்கு இதில் புலப்படுவது ​நோக்கத்தக்கது.

    ந​கைச்சு​வையுடன் உ​ரைகூறுதல்:
    கி.வா.ஜ. அவர்கள் ந​கைச்சு​வையுடன் ​உ​ரையாற்றுவதில் வல்லவர். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் ந​கைச்சு​வை மிளிர உ​ரையாடுவார். சி​லே​டையாகப் ​பேசி எல்​லோ​ரையும் ந​கைச்சு​வையில் ஆழ்த்திவிடும் க​லை கி.வா.ஜ. ​அவர்களுக்​கே ​கைவந்த ஒன்றாகும். இத்த​கைய ந​கைச்சு​வைப் பண்பு இலக்கணத்திற்கு ​விளக்கம் கூறும் கி.வா.ஜ. வின் உ​ரையிலும் இடம்​பெற்றுள்ளது.

    “பால் மயக்குற்ற ஐயக்கிளவி
    தான் அறி ​பொருள் வயின் பன்​மை கூறல்”

    “உரு என ​மொழியினும் அஃறி​ணைப் பிரிப்பினும்
    இருவீற்றும் உரித்​தே சுட்டுங்கா​லை”

    என்ற நூற்பாக்களுக்கு விளக்கம் கூற வந்த கி.வா.ஜ. அவர்கள்,
    “குழந்​தை தா​யைப் பார்த்து, அம்மா உன்​னை என் கல்யாணத்துக்குக் கூபட்பிடமாட்​டேன் என்றதாம் தாய், “ஏன் அப்பா?” என்று ​கேட்டாள்.

    “ நீ உன் கல்யாணத்துக்கு என்​னைக் கூப்பிட்டா​யோ?” என்று ​கேட்டது குழந்​தை. ​கேள்வி​யைக் ​கேட்ட தாய் சிரித்து மகிழ்கிறாள். குழந்​தைத் தன்​மை யா​கையால் அந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ….சந்​தேகத்​தை ​வெளிப்படுத்தும் விஷயத்தில் ​பைத்தியக்காரத்தனத்​தை ​வெளிப்படுத்தாமல் பார்த்துக் ​​கொள்ள ​வேண்டும் என்ற கவ​லை இலக்கணக்காரருக்கு உண்டாகி இருக்கிறது. .. ஆ​ணென்றும் ​பெண்​ணென்றும் ​தெரியாத சந்​தேகத்​தைச் சந்​தேக பா​ஷையி​லே ​பொதுவாகச் ​சொல்ல​வேண்டும். ஆணுக்கும் ​​பெண்ணுக்கும் ​பொதுவாக ஒரு வார்த்​தை இருந்தால் ​சொல்லலாம். அந்த வார்த்​தை இன்ன​தென்று இலக்கணம் ​சொல்கிறது. வாழ்க்​கையிலிருந்து ​தெரிந்து ​கொண்டுதான் ​சொல்கிறது.”(பக்.,54-55) என்று தமக்​கேயுரிய ந​கைச்சு​வை உணர்வுடன் விளக்குகின்றார்.

    க​தையி​னைக் கூறி ​விளக்கம் தருதல்:
    கி.வா.ஜ.அவர்கள் ஒரு ​பொருள் பற்றி விளக்க முற்படும்​போது அத​ன் ​பொருள் ​கேட்​போருக்கு மனதில் பதியும் வண்ணம் சிறு சிறு க​தைக​ளைக் கூறி அத​னை விளக்கிச் ​செல்வார். விளிமரபு​னைப் பற்றி விளக்க வந்த கி.வா.ஜ. அண்​மை விளி குறித்தும் ​சேய்​மை விளி குறித்தும் ஒரு க​தையி​னைக் கூறி விளக்கிச் ​செல்கிறார்.

    ஒரு ​செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் ​கொண்டிருந்தார். ஏ​தோ சத்தம் ​கேட்டு விழித்துக் ​கொண்டார். படுத்தபடி​யே கவனித்த​போது தம் வீட்டில் திருடன் வந்திருப்பது குறிப்பாகத் ​தெரிந்தது. உட​னே எழுந்திருந்து ஏதாவது எசய்தால் திருடன் தம்​மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன ​செய்வது என்று பயந்தார். ​மெல்ல அருகில் இருந்த தம் ம​னைவி​யைச் சத்தம் ​போடாமல் நிமிண்டி எழுப்பிப் ​பேச ஆரம்பித்தார்.

    “ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்​தை பிறக்கப் ​போகிறது. அதற்கு என்ன ​பெயர் ​வைப்பது?” என்று ​செட்டியார் ​கேட்டார்.

    “எங்கள் தகப்பனார் ​பெய​ரை ​வைக்கலாம்” என்றாள் அவள்.

    அ​தெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற ​பெய​ரைத்தான் ​வைக்கப்​போகி​றேன். பல நாளாக அப்படித்தான் மனசில் நி​னைத்துக் ​கொண்டிருந்க்கி​றேன். நீயும் நல்லபடியாகப் பிள்​ளை ​பெற்றுக் குழந்​தை கடவுள் அருளால் நன்றாக இருந்தால் அவ​னை அலங்காரஞ் ​செய்து ​கொஞ்சு​வேன். ராமா ராமா என்று வாயார அ​ழைப்​பேன். “ என்றார்.

    “நான் ​வேறு ​பெயர்தான் ​வைப்​பேன்” என்றாள் அவர் ம​னைவி.

    “முடியா​வே முடியாது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைப்​பேன். ராமா ராமா என்றுதான் கூப்பிடு​வேன். நீ என்ன எனக்குச் ​சொல்வது?” என்று ​பேசிக்​கொண்​டே; ராமாஅஅ! ராமாஅஅ! என்று பலமாக அ​ழைத்துக் கூவத் ​தொடங்கிவிட்டார்.

    பக்கத்து வீட்டு ராமன் ​செட்டியார் இந்தக் குர​லைக் ​கேட்டுத் தம்​மைச் ​செட்டியார் அ​ழைக்கிறா​ரென்று எண்ணி, ஏ​தோ அபாயம் ​போலும்! என்ற நி​னைவினால் அவசரமாக எழுந்து வந்து கத​வைத் தட்டினார். இந்தச் ​செட்டியார் எழுந்து ​போய்க் கத​வைத் திறந்து அவ​ரை அ​​ழைத்து வந்தார்.

    “என்​னை ஏன் அ​ழைத்தீர்கள்?” என்று வந்தவர் ​கேட்டார்.

    “பாதி ராத்திரியில் உங்க​ளை நான் எதற்காக அ​ழைக்கி​றேன்? எனக்குப் பிள்​ளை பிறந்தால் என்ன ​பெயர் ​வைப்பது என்பது பற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைத்து அ​ழைப்​பேன் என்​றேன். இவள் ​வேறு ​பெயர்தான் ​வைக்க ​வேண்டும் என்றாள். நான் ஒ​ரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடு​வேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காடடி​னேன். நான் ​சொல்வதில் நம்பிக்​கை இல்லாவிட்டால் அ​தோ இருக்கிறா​ரே அவ​ரைக் ​கேட்டுப் பாருங்கள்” என்று ​சொல்லி ​மேல்பர​ணைக் காட்டினார்.

    செட்டியார் விழித்துக் ​கொண்டது முதல் ஒன்றும் ​செய்யத் ​தோன்றாமல் திருடன் அங்​கே ஒளிந்து ​கொண்டிருந்தான். ​செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகுதான் ராமன் ​செட்டியாருக்கு நண்பரு​டைய தந்திரம் ​தெரிந்தது. திருட​னை இரண்டு​பேரும் ​சேர்ந்து பிடித்துச் ​செய்ய ​வெண்டிய​தைச் ​செய்தார்களாம்.”

    இப்படி ஒரு க​தை ​வெகு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்குகிறது. ​செட்டியார் குழந்​தை​யை அ​ழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் ​போட்டிருக்க ​வேண்டாம்; ராமாஅஅஅ என்று நீட்டியிருக்கவும் ​வேண்டாம். அவர் அயல் வீட்டு ராம​னை அ​ழைக்க​வே அப்படிச் ​செய்தார்; அவன் தூங்குவான் என்று எண்ணி​யே அதிகமாக நீட்டினார்.

    அயலில் இருப்ப​வ​ரை அ​ழைப்பது ஒரு விதம்; தூரத்தில் இருப்பவ​ரை அ​ழைப்பது ​வேறு விதம். அ​ழைப்ப​தை விளித்தல் என்றும் ​சொல்வதுண்டு. இப்​போது ம​லையாளத்தில் அந்தச் ​சொல்சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவ​னை முன்னிட்டு அ​ழைப்ப​தை விளி என்று ​சொல்வார்கள். அப்படி அ​ழைக்கும்​போது அவனு​டைய ​பெயரின் உருவம் ​வேறுபடுகிறது. ராமன் என்பவ​னை விளிக்கும்​போது அந்தச் ​சொல் ராமா என்று ஆகிறது. ​பெண்​ணை விளிக்கும்​போது ​பெண்​ணே என்று ​சொல்கி​றோம். இந்த ​வேறுபாடு ​பெயர்ச்​சொல்லுக்கு உரிய, ​வேற்று​மை என்னும் பகுதியில் வருகிறது. விளி ​வேற்று​மை அல்லது எட்டாவது ​வேற்று​மை என்று இ​தைச் ​சொல்வார்கள்”(பக்.,144-145)

    என்று விளி என்ப​தைப் பற்றி கி.வா.ஜ. அவர்கள் க​தையின் வழியாக விளக்கிக் கூறுகின்றார். இதுசு​வையாகவும் மனதில் பதியும் வண்ணமும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.

    இலக்கியப் பகுதி​க​ளைக் கூறி ​சொல்லாய்வு ​செய்தல்:
    கி.வா.ஜ.அவர்கள் சூத்திரங்களுக்கு விளக்கம் கூறும்​போது இலக்கியப் பகுதிகளில் இருந்து பாடல்க​ளைக் ​கொடுத்து ​சொல்லாய்வு ​செய்கின்றார். இரண்டாம் ​வேற்று​மையின் ​பொருள்க​ளான காத்தல், ஒப்பல் ஊர்தியின் இ​ழையின் உள்ளிட்டவற்​றை விளக்கும்​போது,

    “ஆக்க ​வே​லை, அழிவு ​வே​லை என்று இப்​போது ​சொல்கி​றோம் ஆக்க ​வே​லை​யைக் கடவு​ளே முதல்ல் ​செய்துவிடுகிறார் அவர் ஆக்கிய உயிர்க​ளையும் உடல்க​ளையும் உலகத்துப் ​பொருள்க​ளையும் தக்க வண்ணம் காத்த​லே ஆற்றலு​டையவரு​டைய கட​மை.
    “ஆபயன் குன்றும் அறு​தொழி​லோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின்”

    என்று திருக்குறள் ​சொல்கிறது….. மனிதனு​டைய ​செய்​கைக்கு உட்படும் ​பொரு​ளைப் பற்றிச் ​செல்லும்​போது ஐ என்ற இரண்டாம் ​வேற்று​மை உரு​பைக் கூட்டிச் ​சொல்வது தமிழ் மரபு. அ​தைப் பற்றிச் ​சொல்லும் இடத்தில் ​தொல்காப்பியர், ​பொருளானது எந்த எந்தத் ​தொழிலுக்குஉட்படும் என்ப​தைச் சிறிது ​சொல்கிறார். மனிதன் ​செய்யும் ​தொழில் அ​னைத்​தையும் ​சொல்லி முடிக்க முடியுமா? ஆனாலும் அவர் மிக முக்கியமான​வை என்று கருதிய 28 ​தொழில்க​ளைச் ​சொல்லிவிட்டு, இ​வை ​போன்ற பிறவற்​றையும் ​சேர்த்துக் ​கொள்க என்று குறிப்பிடுகிறார்.

    காப்புக்குப் பின் பல ​தொழில்க​ளைச் ​சொல்லும் ​தொல்காப்பியர் க​டைசியில் சி​தைப்பு என்ற ​தொழி​​லைச் ​சொல்கிறார். அழித்தல் என்பது அதன் ​பொருள்.

    காத்தலும் சி​தைத்தலுமாகிய இரண்டு ​தொழில்க​ளையும் நி​னைக்கும்​போது அரசனு​டைய நி​னைவுதான் தமிழருக்கு வருகின்றது. இவ்விரண்டுக்கும் உதாரணம் ​சொல்ல வந்த உ​ரையாசிரியர்கள், ஊ​ரைக் காக்கும், நாட்​டை அழிக்கும் என்​றே காட்டுகிறார்கள். அரசனது முதல் கட​மை தன் நாட்​டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானால் பலவாறு ​யோசித்து முடிவு கட்டியபிற​கே ​வேறு வழியின்றி இறுதியாக ​வைத்துப் ப​கைவன் நாட்​டை அழித்தல் அவன் ​செயல் என்ற கருத்து இவற்றிலிருந்து ​தோன்றுகிறது.

    ஊ​ரையும் நாட்​டையும் காப்பாற்றுகின்ற அரச​னைக் குடிமக்கள் ​போற்றுவார்கள்; புகழ்வார்கள். இவன் கடவு​ளை ஒப்பான் என்றும் அன்பினால் தா​யை ஒப்பான் என்றும் நன்​மை பயப்பதனால் தவத்​தை ஒப்பான் என்றும் உபமானம் ​சொல்வார்கள். கம்பர் தசரத​னைப் பற்றிச் ​சொல்லும்​போது இப்படிப் பல உவ​மைக​ளைக் கூறுகின்றார்.

    “தாய்ஒக்கும் அன்பில்
    தவம் ஒக்கும் நலம் பயப்பில்
    சேய்ஒக்கும் முன்னின்​றொரு
    செல்கதி உய்க்கும் நீரால்
    ​நோய் ஒக்கும் என்னில்
    மருந்​தொக்கும், நுணங்கு ​கேள்வி
    ஆயப் புகுங்கால் அறி​வொக்கும்”
    என்று வருகிறது இராமாயணப் பாட்டு.” (பக்.,125-126)

    என்று திருக்குற​ளையும் கம்பராமாயணத்​தையும் எடுத்துக்கூறி இரண்டாம் ​வேற்று​மைப் ​பொருளாகிய காத்தல் என்ற ​​தொழிற்​சொல்​லை கி.வா.ஜ. ஆய்வு ​செய்கின்றார்.

    இங்ஙனம் கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாராய்ச்சி தமிழின் சிறப்​பையும் தமிழர்களின் சிறப்​பையும், பண்பாட்​டையும் எடுத்துக்காட்டுவதாக அ​மைந்துள்ளது. வழக்கில் வழங்கும் ​சொற்க​ளை ​வைத்து கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாய்வு ​செய்வது என்​றென்றும் தமிழ் வாழும் என்று அறுதியிட்டுக் கூறுவதாக அ​மைந்துள்ளது. கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாய்வில் தமிழர்தம் வாழ்வியல் ​நெறிமு​றைகள் புலப்படுவதுடன் தமிழ் ​மொழியின் தனித்தன்​மை, அதன் இலக்கண இலக்கியத் ​தொன்​மை உள்ளிட்டனவும் ​தெளிவுறுத்தப்பட்டுள்ளன.

    மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • தனி நபர் துதியின் எல்லை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக அரசின் முதல்வர் – ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் என்றென்றும் தமிழக மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படுபவர் – ஜெயலலிதா அதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வழக்கிலிருந்து அவர் விடுதலை பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் அ.தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மேயர் 1008 ஓமகுண்டங்களை வளர்த்து 1008 பிராமணர்களை வைத்துப் பூஜைகள் நடத்தியிருக்கிறார். இவையும், குறிப்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அவரது விடுதலைக்காகச் செய்யப்பட்ட வழிபாடுகளாகத்தான் இருந்தன. அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை தங்கள் தெய்வமாகவே கொண்டாடட்டும்; அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கட்டும்; அந்தத் தெய்வத்தை யாரும் தண்டிக்க முடியாது என்று நினைக்கும் அறிவிலிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

    ஆனால் இப்போது அவர் வழக்கிலிருந்து விடுதலை பெற தமிழக அரசின் அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள்தான் இவர்கள் செய்யும் செயல்களின் அறியாமையால் வேதனையையும் தமிழக மக்களின் வரிப் பணத்தை இப்படி செலவழித்து தமிழக அரசின் கஜானாவைக் காலிபண்ணுகிறார்களே என்பதால் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ள செய்திகள்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 32,000-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளனவாம். இதில் பல பெரிய கோவில்கள்; மற்றவை சிறியவை. இவற்றில் இருந்து தினமும் ஐந்து கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு அதன் பிறகு அந்த பிரசாதங்கள் அந்தந்த கோவில் ஊழியர்களால் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒப்படைக்கப்படுகின்றனவாம். காலை பத்து மணிக்கு பார்த்தசாரதி கோவிலை வந்தடையும் இந்தப் பிரசாதங்களை பார்த்தசாரதி கோவில் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வீட்டில் சமர்ப்பித்துவிடுவாராம். கடந்த மூன்று மாதங்களாக நாள் தவறாமல் இப்பணி நடந்து வருகிறதாம். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அந்தக் கோவில் ஊழியர்கள் பிரசாதத்தை பார்த்தசாரதி கோவிலுக்கு எடுத்து வரும் செலவை அறநிலையத் துறையே ஏற்றுக்கொள்கிறதாம். என்றைக்கு எந்தெந்த கோவிலிலிருந்து பிரசாதம் வர வேண்டும் என்பதையும் அறநிலையத் துணை ஆணையர்களே முடிவுசெய்கிறார்களாம்.

    இப்படிப் பூஜை நடத்துபவர்களும் பரிகாரம் செய்பவர்களும் இறைவன் இளிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் போலும். தவறு செய்தவர்களை அவர்கள் தவறு செய்தவர்கள்தானா, அந்தத் தவற்றுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா என்று நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தவறு செய்யவில்லை என்று இவர்கள் நினைப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுபவர்கள் இறைவனை இளிச்சவாயன் என்று நினைக்காமல் வேறு என்ன நினைக்கிறார்கள்?

    இறைவனை இளிச்சவாயன் என்று அம்மாவின் பக்தர்கள் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் தமிழக அரசின் அறநிலையத் துறையிலிருந்து இந்த பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் பணம் செலவழிப்பது சட்டப்படி சரியில்லை என்பதை இதுவரை யாரும் உணரவில்லையா? முதலாவதாக, மதச்சார்பற்ற ஒரு அரசின் பணத்தை ஒரு மதத்தின் – அதாவது இந்து மதத்தின் – செயல்களுக்கு மட்டுமே செலவிடுவது சட்டப்படி குற்றம். இரண்டாவதாக, தனி மனிதர் நன்மைக்காக ஒருவருக்கு அரசு பொதுப் பணத்தைச் செலவிடுவதும் குற்றம். மூன்றாவதாக, கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மேல்நீதிமன்றத்தில் இன்னும் அக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்படாதவருக்குப் பூஜைகள் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிடுவதும் குற்றம்.

    இப்படிக் குற்றங்கள் புரிந்துவரும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் செயல்களைத் தடுக்க யாருமே முன்வரவில்லையா? இதுதான் தமிழகத்தில் ஜனநாயகம் செயல்படும் முறையா? தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

    பி.கு. இது கட்டுரையாளர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமையின் கருத்து அல்ல  – ஆசிரியர்

    Share
  • ஐந்து கை ராந்தல் (2)

    வையவன்
    2
    “அக்கா”
    “ம் ம் ம்”
    “அக்கோவ்”
    “கேக்குது.. சொல்லு”
    “ஷூ இல்லாமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.”
    “ப்ரேவோ”
    “நெஜம்மா சொல்றேன்!”
    “நானும் நெஜம்மாதான் பாராட்டறேன். உள்ளிருப்பு வேலை நிறுத்தமோ!”
    “ஆமாம்”
    “சரி… ஒடனே கவனிக்க வேண்டியதுதான்…”
    “……”
    “என்ன ஷூ சார் ஒங்களுக்கு வேணும்?”
    இடையில் இட்லிப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து மூடும் ஒலி.
    “அம்பாஸிடரா… கட் ஷூவா.. கமாண்டரா… கான்வாஸ் ஷூவா… ஒனக்கு எது வேணும்?”
    வேறொரு குரல் குறுக்கிட்டது.
    “திஷ்யா… டிபன் ரெடியாம்மா”
    “இட்லி வெந்துகிட்டிருக்குப்பா”
    இடைவெளி விட்டுப் பின் ஒரு வயசான கரகரத்த குரல் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தது.
    “காக்கக் காக்க கதிர்வேல் காக்க…”
    “அக்கா, ஒனக்கு கேலியா இருக்கா?”
    கடுகு பொரிந்தது. தாளிதம் மணந்தது.
    “நீ ஒரு ஜோக் அடிக்கும்போது நான் அடிக்கக் கூடாதா?”
    “ஷý கேக்கறது ஒரு ஜோக்கா? நீ கூட போன வருஷம் வரிக்கும் ஒரு ஸ்டூடண்ட் தானே! எல்லாப் பெண்களும் ப்ளஸ்-டூ க்ளாஸ்லே வாட்ச் கட்டிக்கிட்டு வர்றாங்கன்னு நீ என்ன அடம்பிடிச்சே! இப்போ நான் கிரிக்கெட் ப்ராக்டிஸ் வேற பண்றேன்.”
    “நான் ஒரு சின்ன அட்வைஸ் தரட்டுமா?”
    “ஷý”
    “மொதல்ல இதக் கேளு.”
    “சொல்லு”
    “ஷý இல்லாமே ஸ்கூலுக்குப் போக அவமானமா இருந்தா போகாதே.. நின்னுடு.. பொட்டலம் கட்டப்போ.. சுண்டல் வித்துப் பார்… கிரிக்கெட் கத்துகிட்டு நீ டெஸ்ட் மாட்ச் விளையாடப் போறதில்லே!
    வேலைக்கு அலையறப்ப பிச்சைக்காரன் நோட்டீஸ் நீட்டறா மாதிரி நீ ஸ்போர்ட் சர்ட்டிபிகேட்டைக் காட்டறதைவிட சுண்டல் விக்கறது மேல்.”
    “அக்கா…”
    “இரு… இரு… நான் முடிக்கல்லே… நீ ஏன் ரிஸ்ட் வாட்ச் கட்டிக்கிட்டேண்ணுதான் கேட்கப் போறே….? நான் நர்ஸ் ட்ரெயினிங்கை மனசிலே வச்சிகிட்டுதான் அதை வாங்கணும்னு அடம் பிடிச்சேன்! இப்ப எல்லாமே எவ்வளவு பெரிய மடத்தனம்ணு தெரியுது!”
    நடுவிலே ஓர் அபாய அறிவிப்பு கிறீச்சிட்டது. சீதா கத்தினாள்.
    “அக்கா… இந்த ஆனந்து என் கலர் பாக்ஸை எடுத்துணு தரமாட்டேங்கறான்.”
    திஷ்யாவின் கவனம் ஆனந்துக்குத் திரும்பிற்று.
    “ஆனந்து… கீதா கலர் பாக்ஸ் அழுக்கு… கோரம்.. உவ்வே… ஒனக்கு வேண்டாம்டா கண்ணு…”
    “நான் தரமாத்தேன்… எனக்கு அவளுக்குதான் ஓணும்… உவ்வேதான் ஓணும்”
    “அப்ப சரி… அதை நீயே வச்சுக்க… சீதா நான் ஒனக்கு பளபளாண்ணு கோல்டன் கலர்பாக்ஸ் வாங்கிக் குடுக்கறேன்… என்ன?”
    “எனுக்கு?”
    “ஒனக்குதான் உவ்வே

    போதுமே”
    “வாந்தாம்… எனக்குத்தான் கோத்லன் கலர் பாக்ஸ்… இது கோரம்… ஆயி…”
    “அம்மாடி… அக்கா, நீ ஜீனியஸ்”
    “ஒன் சர்டிபிகேட் போதும். கொழந்தையே எதிரிலே வச்சுகிட்டு கலர் பாக்ஸை ஏன் காட்டறே…?”
    “ஸாரிக்கா”
    “அக்கா…”
    “என்ன பிரேம்?” ஆயாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கேட்டாள் திஷ்யா.
    “நீ சுண்டல் விக்கச் சொல்றியே… விக்கறேன்… பண்ணித் தர்றியா?”
    “ஓ… எஸ்…”
    “திஷ்யா…”
    “வாங்கப்பா டிபன் ரெடி”
    “இன்னிக்கு டி.எம்.ஓ. இன்ஸ்பெக்ஷன்! வந்திருக்கிற ஆள் கிங்கரன். கம்பவுண்டர்னாலே எரிச்சலாம். ஸ்டாக் ரிஜிஸ்டரைக் குடை குடைண்ணு குடையறானாம். சாப்பாட்டுக்கு வர டயம் இருக்காது. வார்டு பாயை அனுப்பறேன். நீ கொடுத்து அனுப்பிச்சுடு”
    “சரிப்பா… நீங்க வாங்க”
    திஷ்யாவுக்கு குரல் தாழ்ந்தது.
    “டேய் பிரேம், ஒன் ‘பிரச்னை’ புரியுது. கீழ்ப் போர்ஷன் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போறதாம். வாட்ச் ஒண்ணு வேணும்னாங்க. என் வாட்சைக் காட்டினேன். பிடிச்சுப் போச்சாம். ஒண்ணாந்தேதி பணம் தருவாங்க. அப்பறம் நீ ஷý வாங்கலாம்.. ரைட்டா?”
    “ரைட்… ரைட்… டபிள் ரைட்…”
    “அப்ப தட்ட எடுத்துட்டு வந்து நீயும் உட்காரு… ஸ்கூலுக்கு டயம் ஆகப்போறது”
    சிவா வெகு நேரமாக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தான். பக்கத்துப் போர்ஷனில் நடந்த ஒலிச் சித்திரம் நின்று விட்டது. மாடிப்படி ஏறியதும் நேர்க்குத்தாகத் தெரியும் சமையல் அறையில் அவன் காதில் பக்கத்துப் போர்ஷன் சங்கதிகள் ஒட்டுக் கேட்காமல் தானாகக் காதில் வந்து விழுந்தன.
    இந்த திஷ்யாவுக்ள் எத்தனை திஷ்யாக்கள்.
    சண்டைக்காரி… சமாதான விரும்பி… சைக்காலஜிஸ்ட்… ராஜதந்திரி…
    இந்தப் பாராட்டை அவளிடமே வாய்விட்டுச் சொல்லத் தோன்றியது. சொன்னால்?
    முந்தானையை விசுக்கென்று வரிந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டுக் கொண்டு சூடு பறக்க திஷ்யா முறைத்து நிற்கும் ஒரு காட்சியை அவன் கற்பனை செய்தான்.
    “இப்படித்தான் ஐஸ் வைக்க ஆரம்பிக்கறது. பூ சுத்தி விட்டு லவ்வுண்ணு வந்து அசடு வழிய வேண்டியது!”
    வாணலியில் காய்ந்த எண்ணெயில் அவன் சிதறிய நீர்த்துளி ஆக்ரோஷமாய்ச் சீறிற்று. சிவா கடுகைத் தூவினான்.
    “இது காதலா?”
    அட கஷ்டகாலமே.. அந்தக் கேள்வியை நிஜமாகவே திஷ்யா கேட்டு விட்ட மாதிரி சிவா மிரண்டான்.
    “டூ ஐ லவ் ஹர்?”
    என்ன சனியன் இங்கிலீஷ் வேண்டியிருக்கிறது. நான் அவளைக் காதலிக்கிறேனா?
    கடுகு கருகிவிட அரிந்த வெங்காயத்தை சிவா அதில் கொட்டினான்.
    ரஷ்ய நாவலாசிரியர் டர்ஜனீவின் கதாநாயகன் மாதிரி தான் கொண்டிருப்பது காதல் தானா என்று அலசுகிற வியாதிக்குத் தான் ஆளாய் விட்டது அவனுக்கே விநோதமாக இருந்தது.
    டாங்.. டாங்.. என்று கூடத்துக் கடிகாரம் மிலிட்டரிக் கண்டிப்போடு ஒன்பது அடித்தது.
    பத்தரைக்கு இண்டர்வ்யூ. இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பல்லவன் பிடித்து வேர்த்து விறுவிறுத்து பல்லைக் காட்டத் தயாராக வேண்டும்.
    இன்னும் ‘சிக்கன்’ தயாராகவில்லை. அவனுக்கு இருக்க நிழலும் உண்ணச் சோறும் ஒரு விலாசமும் தந்திருக்கும் தாமுவுக்கு இந்த ‘சிக்கன்’ பிடிக்க வேண்டும்!
    காலையில் எழுந்ததும் அவன் எங்கே போனான்?
    சிவாவின் மனசு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மீண்டும் காதலுக்கு வந்தது.

    திருப்பத்தூரில் கல்லூரி வாழ்க்கையில்… மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில்… நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அசட்டுத்தனங்களும் துணிச்சல்களும் நினைவு வந்தன.
    கான்வெண்ட் விடும்போது… சினிமா விடும்போது… ஆரம்பிக்கும்போது… கோவில் வாசலல்… எவ்வளவு அசட்டு மூட்டைகள்… எத்தனை பரிதாப ரகங்கள்.
    கடைசியில் அவர்களிடமிருந்து விலகி விலகி இப்போது நானும் அதற்கு ஆட்பட்டு விட்டேனா?
    தெரியவில்லை.
    நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேலை இல்லை.
    வேலை இல்லாத ஒவ்வொருத்தனும் கொஞ்சம் காதல் பண்ணிக் கொண்டிருப்பான். வேலை கிடைத்ததும் எல்லாம் சரியாகிவிடும்.
    வேலை என்ற எண்ணம் ஒரு பந்தயக் குதிரை மாதிரி ஓடி வெற்றிக் கம்பத்தின் அருகே நின்றது.
    சர்ட்டிபிகேட்டுகள் அரைக் கிலோ தேறும். அந்தப் போட்டியில் முதல்… இந்தப் போட்டியில் இரண்டாவது அந்த கேம்ஸ்… இந்த ஸ்போர்ட்ஸ்…
    சிவாவுக்கு அவற்றின் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. தாமுவின் சிநேகிதி பிரீதா ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொடுத்திருந்தாள். அமைச்சரின் பி.ஏ.வுடைய ஆசை நாயகிக்கு பிரீதா தங்கள் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் பிரசவம் பார்த்திருந்தாள். கஷ்டமான கேஸாம். அவளது வாஞ்சையான சிகிச்சைக்குக் கிடைத்த சின்ன வெகுமதி அது.
    அதை வாங்கிக் கொள்ள முதலில் அவனுக்குப் பிடிக்கவில்லை.
    “இதாணு லோகம்” என்று அவன் கையில் திணித்தாள் பிரீதா.
    அதை வாங்கும்போது அவன் கை தயங்கியது.
    வெற்றிவேல் நினைவு வந்தான்.
    ‘மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்களென்றால்என் கூட வெளியினில் வாருங்காணும்?’ – என்று டெஸ்கின் மீது இரண்டு கைகளால் தாளம் தட்டிக் கொண்டு அவன் பாடும் பாட்டு நினைவு வந்தது.
    வெற்றிவேல்… மன்னித்துக் கொள்… நீயும் நானும் மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்கள்தான்…
    இப்போது சிங்கங்களை மதிப்பவன் இல்லையடா… சிங்கங்கள் அசட்டு மிருகங்கள் என்று உதறிவிட்டு ஜனம் பறக்கிறது. சிங்கத்தைவிட சிங்க மேக்கப்தான் இப்போது கவர்ச்சி…
    அரைத்த மசாலாவை எண்ணையில் வெந்து கொண்டிருந்த சிக்கனில் கலந்து கொண்டே உள்ளூர சிவா தொலைதூரத்தில் இருந்த வெற்றிவேலிடம் மன்னிப்புக் கோரினான்.
    ராயப்பேட்டை ஹைரோடில் ஒரு மாவு மிஷின் கிறீச்சிடுகின்ற ஒலி காற்றில் மிதந்து வந்தது. அந்த ஓசை. மாவை அரைத்து முடித்துவிட்டு கைப்பிடிச் சக்கரத்தை சுழற்றிவிடும் அந்த ஓசை அவனுக்குப் பிடிக்கும்.
    திருப்பத்தூர் முதலியார் ரைஸ் மில்லின் ஓசையில் ஒரு பாராயண ஒலி கேட்டும்.
    அதை நாராயண நாமமாகெ நனைத்துக் கொண்டே தவிடு விடுவாள் அம்மா.
    அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் கர்ண கடூரமாகக் கிறீச்சிடும் அந்த ஓசை பழகிப் பிடித்து விட்டது.
    எதுவெல்லாம் மனிதனுக்குப் பிடித்து விடுகிறது!
    பிடிப்பதற்குப் பழக்கம்தான் தேவையோ! இடை விடாத பழக்கம். அப்புறம் லயிப்பு. இப்போது திஷ்யாவிடம் லயிக்கிற மாதிரி. தின்று தின்று தின்றதையே மீண்டும் தின்கிற வேட்கை மாதிரி.. தாமுவுக்குப் பிடித்த சிக்கன் மாதிரி… தாமுவுக்குப் பிடித்த பிரீதா மாதிரி…
    தாமுவுக்கு பிரீதா ஒருத்தி தானா? எத்தனையோ…? மீண்டும் மீண்டும் இந்தப் பெண்களிடம்… அவ்வப்போது ஒவ்வொருத்தியுடன் தாமு எதைத் தேடுகிறான்? என்ன கண்டுபிடிக்கிறான்?
    ‘சிக்கன்’ மணம் கும்மென்று வந்தது.
    போன வாரம் தான்செய்தது ‘டாப்’ என்று தாமு பாராட்டிய ஞாபகம் வந்தது. இன்றைக்கு அப்படி இருக்குமா?
    போன வாரத்தின் சுவை… அதற்கொரு மறுபதிப்பு… மீண்டும் ஒரு புதுப்பதிப்பு…
    பழக்கம் என்ற பாதையில் மனதனின் மனச் சக்கரம் முன்னும் பின்னும் பின்னும் முன்னும் விடுதலை இல்லாமல் ஓடி அதற்குச் சுகம் என்று அர்த்தம் கற்பித்துக் கொள்கிறதோ!
    சுகம்…அது என்னவென்று இன்னும் முழுக்கப் பரிச்சயமாக வில்லை.
    கெரஸின் தீர்ந்து வருவதால் ஸ்டவ்வில் ஒலி குறைந்தது. அடுத்த வாரம் காஸ் அடுப்பு வந்து விடுமென்று தாமு சொல்லிக் கொண்டிருந்தான்.
    சுகம் என்பது கெரஸின் அடுப்பிலிருந்து காஸ் அடுப்பில் சமைக்கும் மாற்றமா?
    சுகம் தெரியவில்லை. துக்கம் தெரிந்தது. பளு தெரிந்தது.
    என்ன படித்து என்ன பட்டம் வாங்கி என்ன பயன் என்ற உழற்சியில் நெஞ்சை ஏதோ ஒரு பாறாங்கல் அழுத்திற்று.
    ரைஸ் மில்லின் தவிட்டு நெடியிலிருந்து இம்மி இம்மியாக அம்மாவின் நுரையீரல்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்த வியாதியிலிருந்து அவளுக்கு ஒரு சிறை மீட்சிக்கு வழியில்லை.
    ஒண்ட இடம் தந்து உணவளிக்கும் தாமுவுக்கு இன்னும் சோற்றுச் சுமையாயிருப்பதிலிருந்து விடுதலையில்லை.
    “ஸார்…ஸார்”
    வெளியே ஓர் அதிகாரக் குரல்.
    அவன் எழுந்து வருவதற்குள் மீண்டும் ஓர் அவசரம்.
    “வீட்லே யாரு?”
    சிவா லுங்கியை இறக்கிவிட்டு வெளியே வந்தான் தந்திச் சேவகன் கேசவன்.
    “ஹலோ நீங்களா சார்?…இங்கியா இருக்கீங்க?”
    சிவா புன்னகையுடன் தலையசைத்தான்.
    “போன மாசம் அனுப்பிச்சீங்களே கதை… அது வந்துடுச்சா சார்”
    கதையைப் போஸ்ட் செய்யும்போது அவன் பார்த்தான்.
    “இன்னும் வரலியே…”
    “வந்தா எனக்கு பத்திரிகையைக் கொடுங்க சார்”
    “வந்தாதானே… ஓ”
    “டெலிகிராம் சார்.”
    “பேரு”
    “ஜே. தாமோதரன்”
    “அவர் வெளியே போயிருக்காரே”
    “நீங்க ஸைன் பண்ணி வாங்கிக்குங்க”
    சிவா கையெழுத்திட்டான்.
    மதன பள்ளியிலிருந்து வந்த தந்தி. தாமுவின் அப்பா அடித்திருக்க வேண்டும்.
    எப்போதோ பார்த்த அவர் போட்டோ மனசில் ஒரு ‘ப்ளாஷ்’ அடித்துவிட்டுப் போயிற்று.
    இருபுறமும் ஒதுக்கிவிட்ட கிருஷ்ண தேவராயர் மீசை. கண்ணில் இன்னும் ஜமீன் மிடுக்கு. இறுகிய கீழுதட்டில் ராஜரீகம்.
    ஜமீன் போய்விட்டது.
    ஜமீன் வம்சக் கொடியில் பீட்டர்ஸ் ரோடில் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தும் மெக்கானிக் முளைத்தாயிற்று. இன்னும் மிடுக்கு போகவில்லை.
    தர்மராஜ ரெட்டிகாரு உடம்பில் ஓடும் அதே ஜமீன் ரத்தம் தாமுவிடமும் ஓடுகிறது. அதே ராஜரீகம்.
    நான் தான் என் ஹீரோ. இதே செய்திதான் அவனிடமும் ஓடுகிறது.
    தாமு மதனபள்ளி மண்ணை உதறி எட்டு வருஷமாகப் போகிறது. நூற்றுப் பதினெட்டு ஏக்கர் நிலத்தை தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக உதறிவிட்டு சென்னைக்கு வந்தவன் தாமு.
    ராயப்பேட்டையில் மட்டுமல்ல, சென்னையில் பல பகுதிகளில் காரும் ஸ்கூட்டரும் வைத்திருப்பவர்கள் தாமுவுக்குப் புன்னகையுடன் கை உயர்த்துகிறார்கள்.
    அவனது ஒர்க்ஷாப்பில் கார்களும் வேன்களும் கியூவிலே காத்திருக்கின்றன.
    சிவா வந்த எட்டு மாதத்தில் எத்தனையோ மதன பள்ளிக்காரர்கள் தாமுவைத் தேடி வந்து போயினர். தர்மராஜ ரெட்டிகாரு வந்ததில்லை.
    மகனின் பாதை சரியாயிருக்கும் என்ற எண்ணமா? அல்லது வெறும் மோட்டார் மெக்கானிக் என்ற இளக்காரமோ?
    எவனானால் என்ன?
    வெற்றிவேல் பாடுவது மாதிரி ஆண்பிள்ளைச் சிங்கம்.
    மரியாதை அவனைத் தேடிவரும். பிரீதா மாதரி… பல பெண்கள் மாதிரி.
    பிரீதாவும் தாமுவும்…
    ஒழுக்கத்தின் எந்த அளவு கோலை வைத்து அவர்கள் உறவை அளப்பது?
    அவன் அங்கே ராத்தங்குகிறான்… அவர்கள் இருவரும் விஸ்கி குடிக்கிறார்கள்.
    இப்படி ஒருத்தியல்ல பலர் உண்டு என்று தர்மராஜ ரெட்டிகாருவுக்குத் தெரியுமா?
    இந்த தந்தி என்ன சொல்ல வந்திருக்கிறது?

    தொடரும்

    Share
  • தாய்மை

    விவேக் ரவிச்சந்திரன் 

    images
    உயிரே என்னை நீ தாங்கினாய்..
    உலகை எனக்கு நீ காட்டினாய் 
    உனக்கு நான் என்ன தருவேனோ…
    அம்மா அம்மா என்  ஆசை அம்மா..
    அம்மா அம்மா என்  ஆசை அம்மா..

    அன்பின் உருவம் நீ ஆகினாய்..
    அடைக்கலம் தருமோர் குடையாகினாய் 
    அதிசயம் நீ இன்றி காண்பேனோ….
    ஆலயம் வாழும் தெய்வமுண்டோ?
    அம்மா அம்மா என்  ஆசை அம்மா..
    அம்மா அம்மா என்  ஆசை அம்மா..

    தொப்புள் கொடி சொந்தமிது…
    தொட்டில்முதல் பந்தமிது..
    உரைத்திட மொழிகள் இருந்தாலும் – நான் 
    உரைத்திட்ட முதல் வார்த்தை…
    அம்மா அம்மா 

    தாய் மடி மெத்தையது 
    தலை சாய்க்கும் சொர்க்கமது 
    உறங்கிட உலகே இருந்தாலும் – என் 
    உலகமே நீ தான் 
    அம்மா அம்மா 

     
    விவேக் ரவிச்சந்திரன் 
    சென்னை 

    Share
  • வாழ்க்கை

    நாகினி

    pon3

    நேர்படப் பேசி
    நேர்படச் செயலாற்றி
    நேர்பட நடந்தால்
    நேர்படமாகும் நித்தியவாழ்க்கை

    கூர் புத்தியைக்
    கூர் நல்நூலால்
    கூர் ஆழ்படிப்பால்
    கூர் வழிநடத்தலே உயர்வாழ்க்கை

    பார் விளக்கும் பண்பை
    பார் போற்றும் தெம்பை
    பார் வணங்கும் நல்லோரைப்
    பார் தொழப்பற்றுதலே அருள்வாழ்க்கை

    நாள் கோள் தாள் ஒன்றும் குறைதரா
    கோள் மூட்டும் தீப்பண்பே
    நாள் முழுதும் துயர்தரும்
    தாள் எனவுணர்தலே சத்தியவாழ்க்கை..!!

    … நாகினி

    Share
  • புலிவால் பிடித்தோமடா

    ஆர்.எஸ். கலா

    unnamed

    வெளி நாட்டு வாழ்க்கை
    விவகாரம் நிறைந்ததடா….

    விட்டெறியும் காசை
    நோக்கி செல்லும்
    போது விட்டுச் செல்வது
    உறவை மட்டும் இல்லையடா….

    உணர்வு உணர்ச்சி ஆசை
    அதனுடன் சேர்த்து நாம்
    நம் நாடு உயிருடன்
    திரும்புவோம் என்ற நம்பிக்கை
    இத்தனையும் விட்டுச்சென்றால்
    கிடைப்பது வெளிநாட்டு
    வாழ்க்கை………

    வாழ்க்கை அது என்ன வாழ்கையடா
    வாய்திறந்து விவாதிக்க முடியாத
    ஓட்டமடா…….

    உட்கார முடியாத உழைப்படா
    உறவுக்கு மடல் போட முடியாத
    பணிச்சுமையடா……

    விட்ட காசை எடுக்க வேண்டும்
    என்ற வேகமடா அடகு வைத்த
    பத்திரம் மீட்ட வேண்டும் என்ற
    இலட்சியமடா……

    கட்டிய மனைவியைக் கனவில்
    கட்டி அணைத்து பாசமான
    மகளுக்கு நினைவில் முத்தம்
    கொடுத்து காச்சி மூச்சி என்று
    கத்தும் சத்தங்களுடன் கண்
    மூடி தூங்கும் நிலைமையடா….

    இளமை ஆசைகளை பலியாக்கி
    இளமையை இரையாக்கி
    இன்பத்தைக் கொலை செய்து
    துன்பத்தில் துவண்டு எடுப்பது
    தான் வெளிநாட்டுப் பணமடா……

    விபத்து என்று ஒன்று நடந்து
    இறப்பை நோக்கினால் இறுதிக்
    கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது
    இல்லையடா…..

    தொட்டு உடலை துடைக்க
    உறவுகள் பக்கம் இல்லையடா
    கொட்டி விடுவான் அரபி ஏதோ
    ஒரு திரவியத்தை மூடி விடுவான்
    பெட்டியை…….

    போட்டு விடுவான் பெட்டியை
    பொதியோடு பொதியாக மாதங்கள்
    பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா…..

    உடல் அடக்கம் இன்றி கடைமைக்
    காரியங்களும் கைவிடப்பட்டு
    உறவுகள் கவலையில் இருந்து
    விடுபட்ட பின்னே நம் உடல்
    கிடைப்பது திண்ணமடா….

    மனைவி மக்கள் புகைப்படம்
    பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்
    என்று கூறவும் தைரியம் இல்லையடா
    பாவிகள் சிலர் கையில் சிக்கினால்
    என் மனைவி மானம் புகையாக
    போகுமடா……

    ஊரார் கண்ணுக்கு தெரிவது
    எங்கள் ஊதியம்
    ஓட்டு வீடு கிடைத்தமையால்
    உறவுக்கு குதூகலம்
    உண்மை நிலவரத்தை மறைத்து
    உள்ளுக்குள் அழுது உடலை
    வருத்தியே வாழ்வது எங்கள்
    வெளி நாட்டு வாழ்க்கையடா…..

    திணார் டாலர் ரியால்
    கொடுக்கும் வலி கொஞ்சம்
    இல்லையடா சொல்லவே வார்த்தை
    நிறையவே உள்ளதடா அதுக்கு
    எல்லையே இல்லையடா…….

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    இலங்கை தளவாய்

    Share
  • வாழ்க்கைப் பயணம்

    -திருக்குவளை மீ.லதா 

    பால் நிலவாய் வண்ணம் கொண்டேன்
    பருவம் மாறக் கனவு கண்டேன்
    கார்முகில் வண்ணன் கரம் பிடித்தேன்
    காவிரி நதியில் சங்கமித்தேன்
    யுத்த பூமியாய் மாறி நிற்கப்
    பூத்ததோ புதிய பூ ஒன்று!
    புன்னகை சிந்திட நிற்குது இங்கு
    கவலை இல்லாது வாழ்ந்திட்டேன்
    காலம் முழுவதும் மகிழ்ந்திட்டேன்
    காலன் வந்ததும் கலங்கிட்டேன் 
    வாழ்ந்த வாழ்க்கை நினைத்திட்டேன்
    இதுவே போதுமென்று அமைதியுற்றேன்
    கல்லறை தனிலே உறங்குகின்றேன்!

    Share
  • பிரியாமல் வாழ்வோம்

    ஆர் எஸ் கலா

    unnamed (1)
    ====================
    உறவு என்று நாம்
    உரிமையாக வில்லை
    பந்தம் என்னும்
    சொந்தத்தில் பலமாக
    இணைந்தோம்…!!!

    சொந்தத்தை
    வளர்த்தோம்
    பிரியாமல்
    வாழ்வோம்..!!

    உணர்வாலும்
    உணர்ச்சியாலும்
    அன்பாலும்
    இன்ப துன்பத்திலும்
    உதவுவோம் பக்க பலமான
    உறவு என்று உலகுக்கு
    உணர்த்துவோம்…!!!

    தோள் கொடுப்பேம்
    இறுதி ஊர்வலத்தில்
    மட்டும் இல்லை..!!

    சோகம் கொண்டு
    துவண்டு விடும்
    வேளையிலும்..!!!

    நாடு விட்டு நாடு
    சென்றாலும்
    நாகரீக வாழ்வை
    நோக்கிச்
    சென்றாலும்.
    நாட்டுப் பற்றை
    நாம் மறக்காது
    நினைத்திருப்போம்..!!

    மழலைப் பருவ
    நட்பையும்
    தெப்பக் குளக்
    குளியலையும்
    மனதில் ஓட
    விட்டு ரசித்துப்
    பார்ப்போம்..!!

    உடல் பிரிந்து
    தொலை தூரம்
    வந்த பின்னும்
    உணர்வால்
    நட்புக்களைப்
    பிரியாமல்
    வாழ்வோம்..!!

    பிரிவு என்பது
    வாழ்வில் ஒரு
    அங்கம் அதை
    பட்டா போட்டு
    அமர விடாமல்
    விரட்டவே மனதில்
    உள்ள அன்பு என்னும்
    அதிகாரியால் மட்டுமே
    முடியும்..!!

    பிரிவு வரட்டும்
    நாம் பிரியாமல்
    வாழ்வோம்
    உடலை விட்டு
    உயிர் பிரியும் வரை….

    சொந்த பந்தங்கள்
    நட்புக்களையும்
    நினைவாலும்
    உணர்வாலும்
    உள்ளத்தாலும்
    பிரியாமலே
    வாழ்வோம் …!!!!

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • வெண்ணிலா வானில் வரும்வேளை…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    மன்னிப்பு

    மலரிதழ் திறப்பு எப்போது தெரியுமா? மனிதர்கள் கண்டதுண்டா? இயற்கையின் நிகழ்வினில் எல்லாம்.. எப்போதும் ஒரு ரகசியப் பதிவாகவே இருக்கும்! அவையவை தத்தம் இயல்பினில் இயங்கிக் கொண்டிருக்க.. கவிஞர்களின் கற்பனை வலை விரிப்பில் மட்டும் கருத்து முத்துக்கள் – அந்த ரகசியங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கும்!

    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

    ‘மன்னிப்பு’ திரைப்படத்திற்காக ஒரு மந்தகாசப் பாடல் ஒன்றை கவிஞர் வாலி அவர்கள் தீட்டியிருக்கிறார். அந்த மாலைப் பொழுதில் மங்கிய நல் நிலவொளியில் காதலர்கள் சந்திக்கின்றனர்! முத்தமிழும் மோகனமும் கூடிநிற்க.. காதல் பாமாலை சூடுகின்றனர்!

    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

    அழகிய தமிழ்மொழியில் எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைக் காணுங்கள்!

    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

    அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலே டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் இழைந்தோடும் இனிய நாதமிது! இதுபோன்ற பாடல்களை ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனந்த ராகமிது ஆரம்பமாகிறது! அணைக்கின்ற வேளையிது.. அனுபவிப்பெல்லாம் அனுபல்லவியாகிறது! கவிதை மழை பொழிகிறது! இசையருவி வழிகிறது! இதயமது நனைகிறது! இன்னுமென்ன சொல்ல வேண்டும் இந்தப் பாடல்பற்றி!!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நாட்டியச் செல்வி வெண்ணிற ஆடை நிர்மலாவும் திரையில்…

    http://youtu.be/d3WYzyc_8ME

    காணொளி: https://www.youtube.com/watch?v=d3WYzyc_8ME&spfreload=10

     

    பாடல்: வெண்ணிலா வானில் வரும் வேளையில்
    திரைப்படம்: மன்னிப்பு (1969)
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    _______________________________________________________________

    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ………………..
    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    ஆசை கொண்ட இதயமது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
    வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
    மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    கன்னி என்தன் வடிவமது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
    காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
    பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    மஞ்சள் வெயில் மாலை அது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    முத்து ஒன்று பிறந்து வரும்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    Share
  • நட்பா காதலா ?

    — எல். கார்த்திக்.

    பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்தாலும் அவள் கண்கள் இன்னும் மாறவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இன்னுமும் அதே கூர்மையான பார்வை. பாரதி பாடியது போன்ற ஒளிப் படைத்தக் கண் அவளுடையது என்றே ராஜா கருதினான்.

    மெல்ல அவன் நினைவுகள் கல்லூரி முதல் வருடத்திற்குச் சென்றது. முதல் முதலாய் அவளைப் பார்த்தது அன்று அவள் அணிந்திருந்த சிகப்பு தாவணி இன்னும் அவன் கண்களை விட்டு அகலவில்லை. தூர இருந்து பார்த்ததோடு சரி பேசவெல்லாம் முயலவில்லை. கல்லூரியின் கட்டுப்பாடு அவனை பயமுறுத்தியது.

    சில சமயம் பத்தாவதில் கூடப் படித்த அவனது ஒருதலைக் காதல் நாயகி உமாவின் முட்டைக் கண்களை சுமதியின் சிறிய கண்களோடு ஒப்பிட்டிருக்கிறான். ஒருதலைக் காதல் என்றால் உமாவிற்கும் தெரியாத காதல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். இப்பொழுது கல்லூரிக்கு வந்தவுடன் மனம் குரங்காய் தாவத் துடித்தது.

    சுமதி பேரழகி என்று சொல்ல இயலாது என்றாலும் அவள் வகுப்பில் இருந்தவர்களில் அவள் பேரழகி என்றே சொல்ல வேண்டும். கூர்மையான பார்வை வீசும் கண்கள், அந்தக் கண்களில் பூசிய அஞ்சனம் , கண்ணியமான உடை அதை அணியும் விதம், பேசும் பொழுது காதில் ஆடும் ஜிமுக்கி, எப்பொழுதும் எதிராளியை நேரடியாய் கண்ணில் பார்த்து பேசும் தைரியம் இதெல்லாம் அவனைக் கவர்ந்தது. அனைவற்றிற்கும் மேல், வகுப்பில் இருந்த ஆண்களில் இவனைத் தவிர அவள் வேறு யாரிடமும் பேசாதது அவனுக்குத் தைரியம் அளித்தாலும் பயமும் கூடவே இருந்தது. உன்னிடம் நட்பாய் பழகினேன் இப்படி செய்து விட்டாயே இப்படி கேட்டுவிட்டாயே என சொன்னால் என்ன செய்வது என மனதிற்குள் போட்டுத் தன் காதலை புதைத்து விட்டான். மாதங்கள் செல்ல, அவர்கள் பழக்கம் அதிகரித்தது. வீட்டிற்கு போன் செய்யும் அளவிற்கு பழக்கம் அதிகரிக்க அவர்கள் நட்பு வட்டங்களில் வதந்தி புகையத் துவங்கியது.

    சுமதியும் அதை மறுக்க, ராஜா மறுக்கத் துவங்கினான். மெலிதாய் விழுந்த விரிசல் பெரிதாக , பார்வை மட்டுமே என்றாகியது. இரண்டாமாண்டில் துவங்கிய விரிசல் இறுதி வரை நீண்டது.

    இன்றும் கல்லூரி இறுதி நாள் அவன் நினைவில் பசுமையாய் இருந்தது. இன்று அவளிடம் கேட்டுவிடலாம் என்றெண்ணினான். மற்றவர் அனைவரும் சென்றுவிட அவளைத் தடுத்தான். வெளியே செல்ல எத்தனித்தவள் டெஸ்கில் சாய்ந்து நிற்க, அவளெதிரே ராஜா. அவனை விட உயரம் குறைவால் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே நின்றாள்.

    “ எனக்கு இன்னிக்குத் தெரிஞ்சாகனும் “

    “என்ன ?”

    “ உண்மையை சொல்லு. அது உண்மைதானே ?”

    “ இன்னிக்கு கேட்டு தெரிஞ்சிகிட்டு என்னாகப் போகுது ? இனிமே தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை “.

    மின்னலாய் சொன்னவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியேறினாள். அன்றுப் பார்த்தவளை ஆறு வருடம் கழித்து நேற்றுதான் சந்தித்தான். இடையில் இவனுக்குக் கல்யாணம் ஆகி, முதல் பிரசவத்திற்கு இப்பொழுது மனைவி ஊருக்கு சென்றிருந்தாள். நண்பர்கள் மூலம் இவன் விலாசம் பெற்று திருமணத்திற்கு அழைக்க வந்து சென்றாள் .

    இன்று வரை அவனுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

     

    Share
  • தந்திரம்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன்.

    காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.

    அன்றும் அப்படித்தான்.

    மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.

    தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான்.

    மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் குடுக்கின்கறேன் என்றேன்.

    மெதுவாக நழுவி விலகினான்.

     

     

    Share
  • அவரைப் போல …

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

     

    பொங்கல் அன்று தவம் கோயிலுக்குப் போனபோது, மனைவியின் கைப்பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அது அவரது தோள்ப்பட்டையில் இருந்து ஊஞ்சலாட்டம் ஆடியது.

    அந்தக் காட்சியை பல இளம் பெண்கள் பார்த்து விட்டார்கள்.

    “எங்களுக்கும் அவரைப் போல மாப்பிள்ளை வேணும்” என்று தமது பெற்றோரிடம் அன்புக் கட்டளை இட்டார்கள் அவர்கள்.

     

     

     

     

     

    Share
  • “குருவே வணக்கம்”

    மீ.விசுவநாதன்

     

    mvs
    குருவே வணக்கம் குறையைக் களைய
    அருள்தா! மனத்துள் அழகுத் திருவின்
    உருதா! இனிநம் உறவுப் பிரிவைக்
    கருதா களிப்பே களி. (1)

    சலனம் சலனம் சலனம் மனதுள்!
    உலவும் எதுவும் ஒருதீக் கலகம்!
    பலவும் சிலவும் பதியே எனதாய்
    நிலவும் இறையே நிலா. (2)

    இரவும் பகலும் இனியன் உனதே!
    அரவும் அழகே! அழகு விரவும்
    நிலவும் உனதே! நிலவின் நிழலின்
    குலவும் ஒளியே குரு. (3)

    கூப்பிட்டார் போனேன்நான்; கும்பிட்டு நின்றங்கே
    காப்பிட்டார் போல்குருவைக் கண்ணாலே சாப்பிட்டேன்;
    ஆப்பிட்ட வாழ்விலே ஆச்சர்யம்! ஆச்சர்யம்!
    பாப்பிச்சை இட்டாரே பார்.. (4)

    நிந்தித்தேன் என்குருவை; நீவாவா என்றதுமே
    சந்தித்தேன்; மந்திரத்தைத் தந்தவர்தாள் சிந்தித்தேன்;
    முந்தித்தேன் சொல்லமுதம் மொத்தமுமே நன்றாகச்
    சிந்தைத்தேன் ஊற்றான தே. (5)

    ஒருவன் இறைவன் உனதுள் உறைவன்;
    துருவன் நினைவில் உருவில் வருவன்;
    கருவில் தெரிவன் கருத்தில் நிறைவன்
    குருவின் வழியே குறி. (6)

    பனைக்கு யரவுன் பணத்தால் கொடிய
    வினையை விரட்டி விடநீ நினையாய்!
    நினைக்க நினைக்க நிறையும் குருவின்
    தினைத்தவப் பார்வையே தீர்வு. (7)

    உயிரில் கருணை உடலில் தனிமை
    கயிறில் அரவம் கவனம் பயிலும்
    பெரிய குணமே பெயர்நற் குருதான்;
    அரிதாம் அவரை அறி. (8)

    ஆணவத்தால் தூற்றுவதும்; ஆசையினால் தீண்டுவதும்
    பூணுகிற மானிடப் பொய்முகம்! தாணுவிந்தாள்
    காணுகிற நற்குருவின் கால்பிடிக்கத் தேவருமே
    பேணுவராம் உன்கால் பிடித்து. (9)

    அளவான ஆசை, அளவாய் உணவு,
    களவான எண்ணம் கரைய உளத்துள்
    குருபாதம் வைத்து குறிபார்த்துப் போற்ற
    ஒருநாதம் கேட்குமே ஓம். (10)

    மூடன், அறிஞன், முக,மனம் மாறும்நல்
    வேடன், பணத்தேடன், வீட்டின்பம் நாடனவன்,
    கூட(ஆ)ன் அருளாளர் கூட்டத்தில் என்றாலும்
    சீடனெ னும்குருவே சீர். (11)

    கூட்டுக் குருவி குரல்கேட்டான் ஓடியவ்
    வீட்டுப் புலவன் விடுவித்தான்! ஏட்டுச்
    சுவடினி சொத்தல்ல தூய குருவின்
    சுவடினி ஒன்றேதான் சொத்து. (12)

    கவிதை ரசிக்கும் கலையை, சிறுபுல்
    புவியில் சிரிக்கும் பொழுதை, செவியில்
    குவியும் இசையை, குறையின் றறியப்
    புரியும் குருவின் புகழ்.. (13)

    மழைதரும் செல்வம்; மதிதரும் சீதம்;
    பிழைதரும் ஞானம்; பெருங்கண் ணழைப்பில்
    தழைவிடும் காதல் தவத்தால் தெளிவாய்
    இழைக்கும் குருவே இதம் (14)

    முரட்டுத் தனத்தை முறிக்கும் கருணை
    விரட்டும் விதியை விரட்டத் திரட்டும்
    அறத்தை! அதையும் அழகாய் உணர்த்தும்
    திறத்தைத் தரும்குரு தேன். (15)

    எழுத்தும், கருத்தில் எழும்நற் சிறப்பும்,
    அழுத்தும் மனதின் அடங்காப் பழுதாம்
    கொழுத்த சினமும், குருவின் அருகில்
    பழுத்து விழும்நற் பழம் (16)

    துன்பம் துணிவையும், சோதனை தெம்பையும்
    இன்பமாய்ச் சேர்க்கும்; இனியதை ஒன்றுதான்
    உன்மனம் வேண்டினால் ஒர்குரு நிச்சயம்
    உன்முன் வருவார் உணர். (17)

    உன்னை உரசி ஒளியினைக் காட்டியே
    தன்னை உனக்குள் தடவியந்த முன்னை
    வினையை வெளிச்ச விழியால் அறிந்திடும்
    பொன்னொளி ஞானி புகழ். (18)

    மாத்திரை போட்டிந்த மாத்”திரை” வாழ்க்கையில்
    யாத்திரை செய்கின்றோம்! அந்தநம் யாத்திரை
    நேரமோர் மாத்திரை நேரம் குருவின்னற்
    சீரடி போற்றுதல் சீர். (19)

    அரியும் சிவனும் அதுபோல் பலவாய்த்
    தெரியும் இறையும் தெளிவாய்த் தெரியும்
    விரிவாய் குருவாய் விளக்க விளக்கப்
    புரியும் புரியாப் புதிர். (20)
    வாக்கு வரமும் வளர்கவி வார்த்தையும்
    நாக்குள் நிறைய நயமுடன் தேக்கின்
    பலமாய் வெளிவர, பாமகளே ஆசான்
    குலமாய்த் தெரிவாள் கொலு. (21)

    நதியென வாழ்வு நடக்கும் அழகில்
    புதியன காண்பாய்! புரட்டும் கதியை
    மதிவழி வெல்வாய்! மயக்கம் எதற்கு?
    பதிவழி நற்குருநீ பார். (22)

    கொஞ்சு கிளிபோல் குருவிருப்பார்; சீடனின்
    பஞ்சு மனக்குகைப் பாபங்கள் கொஞ்சமும்
    மிஞ்சா வகைதனில் மீட்டிடுவார்; அன்புவாழ்
    நெஞ்சில் அவரே நிஜம். (23)

    ஆணவம், ஆத்திரம், ஆசை அனைத்துமே
    காணாது போய்விடக் கண்ணசைப்பார்! கோணாது
    பூணுவோர் உள்ளத்தில் பூப்போலே தோன்றிகுரு
    தூணாக நிற்பார் துணை. (24)

    நிகழும் தவறும் நிறையென மாற்றும்
    புகழ்மிகு நற்குரு புண்யம்; திகழும்
    அகழ அரிய அறிவை அறிய
    முகிழும் முயற்சி முகம். (25)

    சின்ன அலகினால் சின்ன மணிநெல்லை
    என்ன அழகாய் எடுக்கிறது! தின்னும்
    இரைக்கி னியபாடம் இப்படிச் சொன்ன
    இறைக்குக் குருவே இணை. (26)

    கற்றநம் வித்தை கணக்கி லடங்காது!
    பெற்றநம் செல்வம் “பினாமிக்கும்” போகாது!
    சுற்றம் அழுதால் சுடலைக்குத் துக்கமில்லை;
    உற்ற குருதாள் உணர் . ( 27)

    தீயது வென்பதும் தீஞ்சுவை என்பதும்
    மாயது வென்பதே மாகுரு வாயதன்
    தாரக மந்திரம்! தன்னை அறிந்தவர்
    சீரடி தானே சிவம். (28)

    உதயத்தில் தீச்சிகப்பு உச்சியிலே வெள்ளை
    விதவித வண்ணத்தில் விண்ணில் கதிரின்
    அதிசயம் மாயம்! அனைத்துமே மாயம்!
    பதியவைத் தார்குரு பார். (29)

    கல்லும் கனியக் கவிபாடி னாலுமே
    சொல்லும் செயலும் சுகந்தர, வெல்லும்நற்
    கல்வியிற் சான்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோர்
    நல்லகுரு, சீடர் நயம்.. (30)

    அவனொருவ னானாலும் அத்தனையும் அந்த
    அவனுள்ளே தானடங்கும்; ஆமச் சிவமே
    எவருள்ளும் நீங்காத “ஏகாந்தி” என்றார்
    தவகுரு! செய்வேன் தவம். (31)

    நதியையே பார்த்திருந்தேன்; நன்றாக வெங்கோ
    அதிராமல் மெல்ல அசைந்தே சுதியுடன்
    செல்கிறது ; எத்தனையோ செய்திகளை என்குருபோல்
    நல்லதுவாய்ச் சொல்லும் நதி. (32)

    படித்துப் படித்தும் படியாது ஞானம்;
    அடித்துப் பிடித்தே அதுதன் நடிப்புத்
    திறத்தால் வெளியில் திமிறியே ஓடும்;
    அறத்தான் குருவே அரண். (33)

    சோலை மலரழகு சூரியன் வீழ்ந்திட
    மாலையில் வாடிடும் ; மாலையின் வேலையே
    காலைபோல் மல்லிப்பூக் காடெனக் காட்டுதல் ;
    வேலை யிதிறை வினை . (34)

    கிலிதரும் பாம்பு , கிளி ,புறா , ஆந்தை,
    புலி,நரி, ஓநாய், புழு ,ஈ, எலியும்
    களியுடன் உன்னைக் கனிவுடன் காண
    ஒளிக்காத உள்ளன்பே ஒம். (35)

    அல்லா கிறிஸ்து அரிசிவனும், பூமியில்
    புல்லாய் மலையாய் புதுப்புனல் “சில்”லாய்,யோர்
    கல்லாய்,அக் கல்லுள் கனியும் உயிராய்யிவ்
    வெல்லாம் இலை ; குரு வேர். (36)

    வைரமும் வேண்டாமோர் வைரநெஞ்ச மும்வேண்டாம் ;
    வைரமும் மண்தானே ! வையாதே வைராசை ;
    வை,ரச மாகவுள் வைராக் கியம்,குரு
    வை,ரசித் தேதினம் வாழ். (37)

    ஊர்க்குருவி வந்து ஒருசிலநாள் வாழ்கிறது ;
    நீர்க்குமிழி ஒன்று நிறங்காட்டி ஓர்நொடியில்
    பார்க்கும்நம் கண்ணெதிரே பட்டெனப் போகிறது ;
    தீர்விதற்க்(கு) உன்குருவைத் தேடு. (38)

    அடக்கமு முள்ளே அகங்காரம் கொள்ளத்
    தொடக்கமு மாகும்; துளியும் அடக்க
    நடக்கா அசுரனதை நற்குருவின் பார்வை
    அடக்கும்; அதுநல்(ல) அருள். (39)

    தீப ஒளி யைநீ தீயென எண்ணாதே!
    கோபத் துடிப்பினைக் கொஞ்சமும் தாபமின்றி
    ஆபத் திலாது அணைக்கிற ஆத்மவொளித்
    தீப மெனவே தெளி. (40)

    காற்றுள் ளிருந்து கவிதை எழுதிட
    ஊற்றுக்கண் யார்சொல்? உருத்தெரியாத் தோற்றத்தால்
    போற்றும் இசையெனப் புல்லாங் குழல்வழி
    தேற்றும் இறையெனத் தேர். (41)

    மாமழை பெய்து மணிக்குள மாறெல்லாம்
    பூநுரை பொங்கியே போகிறது ; தானுறை
    கோவிலாய் என்னுள் குருவிருந்(து) ஆசிகள்
    தூவிடத் தீரும் துயர். (42)

    கொதிக்கும் அனலும் குளிர்ந்த புனலும்
    மதிக்கும் குருவின் மனதின் விதிகே
    அடங்கும்; அவரின் அருகே அமர்ந்தால்
    அடங்கும் அகந்தை அகம். (43)

    சொப்பு விளையாடும் சூழலில் தப்பியே
    அப்பாவின் தோள்தாவி அன்பாலே கப்பென
    அப்பிடும் செல்லமாம் அன்புக் குழந்தைபோல்
    தொப்பென வீழ்ந்து தொழு. (44)

    எப்படியோ வாழ எனக்குப் பிடிக்காது ;
    தப்படியே என்றாலும் தாங்கியே ஒப்படைப்பேன்
    அப்படியே என்னை அவரிடம் ; அக்குருவோ
    எப்படியும் காப்பார் எனை. (45)

    சரிவிடு போகட்டும் சங்கடமாம் காலம் ;
    எரிதொடு வாழ்வே எதிரே தெரிந்தும்
    அறிவுடை ஆசார்யன் அன்பொன்றே என்றும்
    குறியெனக் கொள்ளல் குணம். (46)

    குமரன், அழகன், குகனவன் என்றும்
    அமர சுகமே(ய) அளிக்கும் கமலன் ;
    சமரில் தலைவன் ; சரியாய் குருவாய்
    அமர்ந்தான் மனது(ள்) அவன். (47) 29.10.2014 இன்று “கந்த ஷஷ்டி”

    செவிப்பூ குளிர செவிக்குள் குவியும்
    கவிப்பூ வினங்களின் கற்பனை வாசம்;
    தவிப்பு, மகிழ்ச்சி, தளர்ச்சி, அனைத்தும்
    சுவைஎனச் சொன்னார் குரு. (48)

    விந்ததனைக் காத்து , வெளிநினைவை உட்திருப்பி
    முந்தனைதும் தூள்தட்டி மூளைக்குள் பொந்தினிலே
    வந்தனைசெய் ! ஓங்கார வார்த்தைப் பொருளுக்குக்
    கந்தனையே காரணமாய்க் காண்.. (49)

    தேமா, புளிமாவும் தெய்வீகப் பாட்டிற்குத்
    தாமாகத் தாங்கத் தவம்செய்யும் ; ஏமாந்தால்
    பாட்டைக் கெடுத்துவிடும் ; பக்குவப் பட்டோரின்
    கூட்டும் குருவின் கொடை . (50)

    குடைக்கு ளிருந்தாலும் கொஞ்சம் மழைநீர்
    உடையில் தெளிக்கும் ; உயிரோ உடையின்
    கடைக்குள் சிலநாள் கலந்து பறக்கும் ;
    விடைக்கு குருவே விடை. . (51)

    “நான்”மறைய “நீ”தெரிவாய்! “நானழிய “நீ”யுதவு!
    தேன்துளியைப் போய்ப்பருக தேவகுரு தா(ன்)னென்றும்
    ஆனதெலாம் என்கின்றேன்! ஆணவப் பேயோட்ட
    ஞான குருதாள் நலம்.. ( 52)

    சிரிசிரி வாய்வலிக்க; சிந்தனையில் அந்த
    “ஹரிஹர” வல்லவனை ஹாயா வரித்தால்
    கரியுமே தானகந்தைக் காட்சி; மகிழ்ச்சி
    புரியுமே தானகன்ற பூ. (53)

    கண்ணைத் திறந்து கவலை மறந்துபார்
    எண்ணம் எதுவும் இருந்திடா திண்ணனாய் ;
    உண்மையில் உள்ளத்தை ஊமையாய் வைக்கவரும்
    தண்மை அமைதி தரும். (54)

    சொப்பனத்தில் வாழ்க்கையும் , சொப்பனமாய் வாழ்க்கையும்
    குப்பனுக்கும் அப்பனுக்கும் கொள்கையில் அப்படித்தான் !
    துப்புத் துலக்கு தொடர்ந்து குருமூலம்
    அப்போ தறிவாய் அதை . (55)

    அருவிதா னோடி அழகுநதி பேராய்
    பெருகி கடலாகி பேரு ருகுரு
    வருளாய்த் தெரியும் ! வழியை அறிந்து
    வருவோர் பெறுவர் வரம். (56)

    மைனாவும் பேசுமாம் , மைவிழியும் , பேனாவின்
    மை”நா”வும் பேசுமாம் ! மௌனமாம் மெய்”நா”க்கள்
    கைமேல் பலனுடன் கண்டாலும் வேண்டாதாம்
    பொய்யாகப் பேசும் புகழ். (57)

    அம்மா அசைத்த அடிமனதுள் என்முன்னே
    எம்மாம் பெரிய எதிர்காலம் ! தும்பைப்பூ
    சும்மா சிவன்தலை சூட்டென்றாள்! என்குரு
    எம்புட் டருளினர் ஏற்று. (58)

    சின்னக் குழந்தை சிரிக்கிறது ; ஓவென
    என்ன நினைத்து எதற்கது தன்னை
    மறந்து அழுகிறது ; மண்ணில் பிறந்தால்
    இறந்தும் இருக்க இரு. (59)

    திரையில் தெரியும் திருமுக மெல்லாம்
    கரையில் கலந்து கரையும் திரைதான்!
    விரைவில் இதனை விளங்கிட வேண்டின்
    கரையில் குருதாள் கதி. (60)

    வேண்ட மனமுமே வேண்டா திருக்கையில் ,
    வேண்டும் வரமென்ன வேண்டுமாம் ? வேண்டுமே
    தீண்டும் திரியினைத் தீபோல் , குருநாதர்
    தீண்ட”நான்” தீயும் திரி. (61)

    “அறுபதில் பார்க்கலாம் ஆன்மிகம் , இன்று
    பெறுவதில் என்னபயன் ?” பிள்ளாய் உறுமாதீர் !
    எப்போதும் உள்ளிருக்கும் இன்பமாம் ஒன்றிலே
    இப்போதே ஒன்ற இதம். (62)

    தெருத்தெருவாய் நீயலைந்து தேடிப் பிடிக்க
    உருத்தெரி யாதுனக்கு ; “ஓமு”ள் ளிருப்பதும்
    கண்ணில் படாது ; கருத்தினை நன்கறிய
    எண்ணி குருதா(ள்) இணை. (63)

    என்ன உபசரிப் பென்ன அவமதிப்
    பென்னென்ன நித்தம் கிடைத்தாலும் – தன்னையது
    பொன்னாக்கு மென்று பொறுமையைக் காப்போரை
    மன்னவனாய்க் கொண்டாடும் மண். (64)

    அரிதாரம் பூசி அரிவேடங் கொண்டா (ல் )
    அரியாக மாட்டாய் ! அதுவோர் எரிபனி
    என்று தெளிக ! இதயத்துள் கேட்குமொலி
    ஒன்று யிரதுவே ஓம். (65)
    ஆழக் கடலுக்குள் ஆணிமுத்தெ டுக்குமவன்
    கூழுக்குக் கூலியாளே ! குற்றமில் லாழ
    மனத்துள்ளே முத்தெடுத்தல் மற்றோர் பிறப்புக்
    கனத்தைக் கருவறுக்கும் கை. (66)

    குப்பை , மனதில் குவிந்து கிடக்கிறது ;
    எப்போ தெறிவேன் எனதறியேன் ; அப்பா
    குருநாதா நெஞ்சம் குவித்தழைத் தேனே !
    இருதாள் இருத்தி(யி) இரு. (67)

    பாயாசம் , அப்பம் , வடைஎன் றலைந்துள்ளே
    ஆயாசம் இப்போ(த) அடைந்தோமே ; ஓயாத
    வாயடைத்து மோனத்தின் வாய்திறந்தால் நெஞ்சுக்குள்
    நோயே வராதாமே “ஓய்” ! (68)
    (“ஓய்” என்பது நெல்லை மாவட்ட வழக்குச் சொல் ஓய்”)

    இல்லத்தில் மூத்தோ(ர்) இருந்தால் “முதியோரின்
    இல்லம்” ; முதியோரை எங்கேயோ(ர்) இல்லத்தில்
    விட்டோர்க்கு வீடில்லை, பேரில்லை, “ஸத்குரு”
    கிட்ட வரமாட்டார் கேள். (69)

    விழும்போ தருவிநிறம் வெள்ளை; தெளித்து
    விழும்நீர் நிறமில்லை ; விண்மண் னெழுகின்ற
    வேத முதல்வன் நிறமும் குணமுமிலான்;
    சேத னவனையே சேர். (70)

    எவர்வந்து பாராட்ட இங்கே தியானம்;
    சுவருக்கு மத்தியில் சுத்த சிவமாம் !
    அவருக்குங் காட்டாதே ஆழ்ந்துள் இருத்தல்
    தவமெனக் கொள்ளத் தகும். (71)

    அழுவா ரதுபொய் ; அணைப்பா ரதுபொய் ;
    தொழுவா ரதுபொய் ; துளியன் பொழுக
    வருவா ரெவர்சொல் ? வருநா ளேனும்
    குருவருள் தேடிக் குவி . (72)

    காலைக் கதிரைக் கண்திறந் துள்ளுக்குள்
    வேளை யொருகணம் வேண்டிக்கொள் ; நாளையைச்
    சோலை மணம்போல் சுகமாய்ச் சீர்செய்யும்
    வேலை நமக்கு விதி. (73)

    துங்கைக் கரையில் துளிநேரம் நெஞ்சுக்குள்
    தங்க அழைத்தேன் தவகுருவை – செங்கதிர்ச்
    சோதித் திருமுகம் சோதித்தி டாதென்னுள்
    போதித் தழகன்றோ பொன். (74)

    குதிரையோர் சாட்டைச் சொடுக்கி லடங்கும் ;
    அதிகாசை , ஞான(ம்) அரும்பின் மிதிபடும் !
    ஆணவச் சிங்கம் அடங்கவே செய்யாது ;
    வேணு மொருகுரு வே.. (75)

    சுருள்சுருளாய் மேகம் சுருண்டடிக்கும் காற்றால்
    பெருமழையைக் கொட்டும் ; பெருகும் கருவம்
    குருவருள் தாளினைக் கும்பிட் டடங்கும் ;
    திருவடியைப் பற்றித் தெளி . (76)

    இசையில் கரைந்தே எதுவும் மறந்தே
    அசையா நிலைத்த அறிவு – திசைக(ள்)
    அனைத்து மெனது(ள்) அலையிசை ஆணை ;
    நினைக்க இறையே நிறை. (77)

    இருசக் கரவண்டி இந்தநம் வாழ்க்கை ;
    ஒருசக் கரம்பெற்றோர் ; ஊக்கும் குருதாள்
    மறுசக் கரமாகும் ; மண்ணி லெவர்தான்
    மறுப்பரித் தெய்வ வரம். (78)

    நாடகம் உள்ளம் ; நடிக்கும் குணந்தானே
    பூடகமாய் உள்ளிருக்கும் பூச்சான வேடங்கள் ;
    கூடிப் பிரியும் உயிரிருக்கும் தோற்கூட்டை
    வேடிக்கை பார்த்துச் சிரி. (79)

    வாழைக்கு என்றுமே வற்றாத நீர்வேண்டும் ;
    ஆழமாய் உள்ளிருக்கும் ஆத்மாவாம் வாழைக்கு
    ஆசானே பக்குவமாய் அன்றாடம் நீரிரைப்பார் ;
    பேசா துனக்குள்ளே கேள் (80)

    துள்ளும் குணமீன்நான் தூண்டிலுக்குள் சிக்காமல்
    தள்ளியே போய்வந்தேன் ; தண்ணீரை அள்ளிக்
    குடிக்கும் குருகையைக் கொஞ்சமே தொட்டேன் !
    நொடிக்குள் மறைந்தயுகம் நூறு. (81)

    பாண்டி விளையாடும் பச்சைக் குழந்தையாய்த்
    தாண்டிக் குதித்துத்தான் “தானிருட் கூண்டு
    விடவேண்டும் ; பற்றெல்லாம் விட்ட குருசொல்
    நடந்தா லழியுமே நான். (82)

    பொய்யும் புரட்டும் புதிதல்ல பூமிக்கு ;
    கையோடு மெய்யாகக் கண்டாலு(ம்) ஐயா
    வருமோ இறையின் வழிக்கே மனது !
    குருவழைக்கத் தட்டுமோ கூறு. . (83)

    தீபத் திருநாள் தெரிவிக்கும் நற்செய்தி ,
    “பாபத்தைச் செய்யாதே , பண்பில்லாக் கோபத்தைப்
    பேணும் மனிதருடன் பேணாதே நட்பென்று”
    காணும் ஒளிகுரு கண். (84)
    (இன்று திருவண்ணாமலை தீபத் திருநாள்.)

    மலைக்கும் மடுவுக்கும் மாபெரும் மாற்ற
    மிலைஎனச் சொல்லவோ வென்னுள் விலையிலா
    மந்திரந் தந்தார் ; மரத்தையே பொன்னாக்கித்
    தந்த குருவே சரண். (85)

    உரிக்க உரிக்க உருத்தெரி யாமல்
    மரிக்கும் மனமே வசமாய்த் தெரியும்
    வழிக்கு வரும்போல் வழுக்கியே ஓடும் ;
    வழிக்குக் குருவே வரம். (86)

    பணத்தால் பணிவும் பனிபோல் பண்பும்
    குணமாய் வருவது குலத்தின் மணமாம் !
    சுணக்கம் வருமெனில் சொல்வாய் குருவே
    வணக்கம் ; வருமே வளம். (87)

    கோபக் குணமே குடிகொண்ட கீழோனாய்ச்
    சாப வரம்பெற்றுச் சண்டையில் பாபத்தால்
    கெட்டுப் புழுவாய்க் கிடந்த வனைகுரு\
    கிட்ட வழைக்கக் கிரி. (88)
    (கிரி – மலை )

    கண்டவர்முன் கைகட்டிக் காணாது பொய்சொல்லும்
    தண்டப் பிழைப்புத் தரவேண்டாம் ; கண்டத்தில்
    நீலம் வரித்த நிசமாம் குருநாதா
    சூலத்தால் “நானை”ச் சுடு. (89)

    வாக்கு நலம்வேண்டும் , வற்றா நலப்பணிவும் ,
    காக்கும் குணமும் கனிவான போக்குமே
    வேண்டும் வரமாக வேண்டும் ! குருவருள்நாம்
    வேண்டத் தருமே நிஜம் (90)

    “பலேஎனக் கூறியே பாராட்டும் போதும் ,
    எலேயிது நல்லா(யி) இலைசரி “போலே “
    எனச்சொல்லும் போதும்நீ இன்பமே கொள்க
    வெனக்கூறு வார்குரு வே. (91)
    உறக்கம் , விழிப்பு , உறங்கா நினைப்பு
    இறக்கும் வரைக்கும் இருக்கும் ; இறந்தும்
    பிறக்கும் உயிராய்ச் சிரிக்கு மதுதான்
    சிறக்குமுன் னாத்ம சிவன். (92)

    புறத்தே இருக்கும் புகழில் மயங்கி
    அறத்தை அழிக்கு(ம்) அகமே ; நிறுத்துன்
    தவறைநீ. ! நெஞ்சுள் தனித்திருந்து “நான்”பார் !
    அவரேதான் ஆத்ம அசல். (93)

    பசிக்குணவும் , பட்டாய்ப் படுக்க இடமும்
    மசித்தத் தெளிந்த மனதும் , சுகிக்க
    சிவனின் உருவும் சிறப்பெனச் சொன்ன
    தவகுரு வாக்கே வரம். (94)

    செய்த பணிநன்று ; செய்யவோ அவ்விறை
    செய்யும் கருணை ; வினைவழி உய்வேன் ;
    விளையாடும் ஆசானோ வேறாரென் நண்பன் ;
    களைப்பேது வாழ்வே களி. (95)

    என்னறிவு என்திறமை யெல்லாமே உன்பிச்சை ;
    உன்னைத்தான் கேட்பே(ன்) உதவிட ; அன்னையே
    நான்கேட்கா மல்தருவாய் ஞானம் ; குருவாகத்
    தானாக வந்தவளே தாய். (96)

    பிள்ளை , மனைவி ; பிரியாத பாசத்தால்
    முள்ளை மலரென்றும் மோனத்தைக் கள்ளின்
    மயக்க நிலையாயும் மாற்றித் திரிந்தேன் ;
    மயக்கத்தைத் தீர்த்தார் மகான். (97)

    பட்டம் பதவி பணமெல்லாம் உன்னையே
    விட்டு விலகும் ; விளையாடும் தொட்டில்
    உறவெல்லாம் உன்னுடைய துட்டால் விலகும் ;
    துறமனமே ஆன்மத் துணை. (98)

    சுற்றி இருக்கின்ற சூழலே சொர்கந்தான் ;
    வற்றாத ஆனந்தம் வாய்த்துளது முற்றாக !
    நெஞ்சம் நிமிர்த்தியே நேராய் நடைபோட்டு
    கொஞ்சிக் குடும்பமாய்க் கொள் . (99)

    கூறு மொழியில் குணம்நன்கு கொண்டிருந்தால்
    நூறு வயதும் நோயின்றி ஆறுகுளம்
    நீந்திக் குளித்திடலாம் ; நீதிநெறி நின்றாலோ
    ஏந்திக் கொளுமே இறை. (100)

    “கட்டிடம் கட்டிக் கனவுலகில் வாழ்ந்தாலும்
    பொட்டென உள்ளே பொறியொன்று தட்ட
    விழிப்பாய் ! உலக விளையாட்டைக் கண்டு
    விழிப்பாய் இரு ! உள் விழி ” (101)
    முற்றுமே கற்க முடியாதென் றாலுமே
    கற்றவ ரெப்போதும் கர்வத்தால் கற்றதை
    மற்றவர் முன்னேபோய் மார்தட்ட மாட்டாராம் !
    கற்றுத் தெளிந்தோர் கனி. (102)

    மனமே மறந்திடு மற்றொர்செய் தீமை !
    தினமே படிப்பு , செயலில் முனைப்பு ,
    இலக்கியம் , ஏழ்மைக்(கு) இரங்குத லென்றால்
    அலையாதே நிற்கும் அகம் (103)

    குருவை நினை;முடிந்தால் கும்பிடு , கூப்பிக்
    கிருபைதா என்றுநீ கேள்;தன் பெருமை
    கருதா மனம்தர கண்ணீர் மழையால்
    உருகிப் பணிந்தா(ல்) உயர்வு. (104)

    பெரிது கடலே ; பெரிதுதான் வானம் ;
    அரிதாம் குருவி(ன்) அருளே பெரிதினும்
    மிக்கப் பெரிது ; மிகையில்லை வேண்டுநீ
    தக்க குருவைத் தர. (105)

    கம்பீரக் கண்ணனின் கண்களைப் பாரேன்டீ !
    நம்பீரங் கிக்குண்டாய் நன்றாக எம்புட்(டு)
    அழகுடீ !நீலனாய் ஆழ்கடல் வண்ணக்
    குழந்தையாம் கோபால் குரு. (106)
    (ஓவியர் கேசவ் முகநூலில் அனுப்பியிருந்த “கண்ணனின்” ஓவியத்தைப்பார்த்து எழுதியது)

    கவலையை மீறும் களிப்பும் , கவிதைத்
    திவலையமு தத்துளி தேனும் , சுமையை
    ஒழித்த மனமும் உடனே எனக்குள்
    பொழிய குருவே புகல். (107)

    இசைஞான மில்லை , இறைபக்தி யில்லை ,
    தசையாசைக் கோய்வில்லை , தர்மப் பசையென்னை
    ஒட்டவே யில்லை உயர்குருவே உந்தாளி(ல்)
    ஒட்டினால் உள்கேட்கு(ம்) ஓம் (108) 29.12.2014

    எளிய பிராத்தனை

    சிந்தனையே இன்றியும் , சித்தம் வெளியாகி
    பந்தமேது மின்றியே பஞ்சாயுள் அந்தச்
    சிவனையும் விட்டுச் சிரித்த விழியாய்
    இவனைநீ வைப்பாய் இனிது.

    (குருவே வணக்கம் என்னும் தலைப்பில் நாளுக்கொன்றாக நூற்றியெட்டு வெண்பாக் கவிதைகளை எழுத நினைத்தேன். அது இன்றோடு 29.12.2014 நிறைவடைகின்றது. குருவருள் எங்கும் நிறையட்டும்.)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கனியிருக்க காய் கவர்ந்தற்று
    ——————————————————————————

    crazy
    ”தலைமயிற் பீலிமர தக்‌ஷிணா மூர்த்தி,
    கலைபயில் கோலின்றி* கீதை, -சிலைஒயில்,
    பாதக் கனியருந்தி கீதக்காய் கொள்ளாத
    மேதையா ஐம்புல மாடு’’….!!!!!!….கிரேசி மோகன்….

    *கோலின்றி-புல்லாங்குழல் இன்றி….

    Share