Blog

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    –ஜியாவுத்தீன்.

    எம்ஜிஆர்:
    1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
    திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
    தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
    அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!

    ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!

    திரைப்படங்களில் கதாநாயகிகளைக் காப்பாற்றிப் பழக்கப்பட்ட இவரது கரங்கள், நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக் கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக விளங்கிய இவரின் அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்குள் போவதற்கு முன் …

    எம்.ஜி.ராமச்சந்திரன்:
    1917ம் ஆண்டு, இலங்கையில் பிறந்த மலையாளக் குடும்பத்துப் பிள்ளை இவர். ஆனால் வாழ்ந்து முடித்ததோ அன்னைத் தமிழ்நாட்டில், அச்சுப் பிறழாமல் அசல் தமிழனாக! மலையாளி என்றாலும் கேரளத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை, தமிழ்நாட்டுக்கு வந்தாலும், இலங்கையை மறந்து விடவுமில்லை! யாருக்கும் பாதகமின்றி தான் ஏற்றுக்கொண்ட பணிகளில், கொள்கைகளில் தடம் மாறாமல் தடம் பதித்தத் தங்கமகன் இவர்! தந்தையை இழந்து, தமிழ்நாட்டை நாடிவந்து, முதல் தடம் பதித்தது மதுரை பாய்ஸ் கம்பெனியில்! நாடக நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கிய நமது எம்ஜிஆர் அவர்கள், 1936ம் ஆண்டு அடியெடுத்து வைத்தார் தன் வலது காலை, தமிழ்த்திரையுலகில்! சதிலீலாவதி படம் மூலம் சதிராட இவர் வந்ததும், சதிராடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கதிகலங்கிப் போனார்கள்! போட்டியிட முடியாமல் ஒதுங்கியே நின்றார்கள்!

    பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!

    இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள்தான் பண்டிகை நாட்களாகக் கருதப்பட்டன.

    பொன்மனச்செம்மல்:
    துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

    அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

    திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

    தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

    மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

    எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

    எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

    தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

    வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

    திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.

    புரட்சித் தலைவர்:
    தன் திரைப்படங்களை தான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்குப் பயன்தரும் வகையில் அந்தந்தக் காலகட்டங்களில் அமைத்துக் கொண்டார். அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் மேடைகளுக்கு கலைஞர் கருணாநிதியையும் திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் துப்பாக்கியின் இரு குழல்களாக்கி கட்சியை வளர்த்தார், கொள்கைகளைப் பரப்பி வந்தார். அண்ணாவின் தொண்டனாகத் தொடங்கிய அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியுயர்வு பெற்றார். 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்க, எம்ஜிஆர் கட்சியின் பொருளாளர் பொறுப்பேற்றார். சிறிது காலத்திலேயே கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலக்கப்பட்டு தனிக்கட்சி கண்டார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தப் பெயரும் மாறிவிடக் கூடாது, கருணாநிதியும் தன் கட்சிப் பெயரை தவறாக விமர்சிக்கக் கூடாது என்று யோசித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவுபூர்வமாகத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டினார். அவரது செல்வாக்கால் தனிக்கட்சி துவங்கி ஒரு ஆண்டுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகத் தன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை வெல்ல வைத்தார். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆளும் கட்சிக்கு எதிராக இவரது கட்சியை கோயம்புத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்தனர். கட்சி துவங்கி 5வது ஆண்டிலேயே தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சரானார். நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு நாடாள வந்து ஒரு புதிய புரட்சியைத் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்தே நடிகராக இருந்த பலரும் அரசியலில் ஈடுபட தைரியம் பெற்றனர். இரு துறைகளிலும் தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற பேராசை, கர்வம், ஆணவமின்றி, அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய நிலை வந்ததும் தானாகவே திரையுலகை விட்டு விலகி, இளைய தலைமுறைக்கும் புதுமைக்கும் வழிவிட்டு ஒதுங்கினார்.

    நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.

    அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.

    மக்கள் திலகம்:
    எம்ஜிஆரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு யாரும் உணவருந்தாமல் திரும்பமுடியாது. தாய்மைப் பண்புக்குதாரணமாய், வயிற்றுப் பசிக்கு உணவிட்டு அனுப்புவது அவரது தலையாய பண்பு. அதேபோல், ஏழைகள் யாரும் உதவி என்று அவரது வீட்டுப் படியேறினால் வெறும் கையுடன் திரும்புவதும் நடக்காத ஒன்று. கேட்டு செய்த உதவிகள் ஒருபுறம், வெளியுலகுக்குத் தெரியாமல் கேளாமலே செய்த உதவிகள் எண்ணிலடங்கா.

    எம்ஜிஆரை நாடி, அவரது ஆதரவை நாடி, அவரது புகழெனும் ஆலமரத்தினடியில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் வந்தனர். ஆனால் யாரிடமும் கையேந்தி நிற்க ஆண்டவன் அவரைத் தாழ்த்தியதுமில்லை, அந்நிலைக்கு அவரைத் தள்ளியதுமில்லை. தன் இறுதி மூச்சுவரை வாரி வாரி வழங்கினாரே தவிர, தனக்கு வேண்டும் என்று வாரி வைத்துக் கொண்டதில்லை. ஏழைக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, ஏழையின் சாபத்திற்கு என்றும் ஆளானதில்லை. தமிழ் மக்கள்மீது பாசத்தைப் பொழிந்தாரேயன்றி, அரசியல் வேசத்தைக் காட்டி ஏமாற்றியதில்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை, வள்ளல் என்றே பெயர் பெற்றார். யார் குடியையும் கெடுத்ததில்லை, பலரின் குடி உயர காரணமாய் இருந்திருக்கிறார். தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழருக்கே துரோகமிழைக்கும் பலருக்கு நடுவில், மலையாளி என்றாலும் தன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த தமிழ் மக்களுக்கு உண்மையானவராக இருந்தார். தமிழரெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த நாகரிகத்திற்கு மாற்றாக, தமிழில் கையெழுத்திட்டு தன்னை வளர்த்த மண்ணுக்கு மாண்பைக் கூட்டினார், நன்றியைக் காட்டினார்! பொழுதுபோக்காக மட்டுமே இருந்த திரைப்படம் என்னும் சாதாரண ஊடகத்தை, கருத்துக்களை விதைக்கவும், கொள்கைகளை முழங்கவும், தத்துவங்களை உரைக்கவும் விழிப்புணர்வை வெளிப்படுத்தவும் கூடிய பலமான ஆயுதமாக மாற்றிக் காட்டினார். மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால் போதும், உலகையே வெல்லலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டினார்.

    பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு போக மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.

    1950களில் தொடங்கி 1977 வரை தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாய் வலம் வந்த மக்கள் திலகம், அதன்பின் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக மாறி, தமிழ் மக்களின் இதயங்களில் முதல்வராய் வலம் வந்தார். உடற்பயிற்சி, தங்க பஸ்பம், ஆரோக்கியம் என்று அனைவருக்கும் போதித்த அந்தத் தேக்குமர தேகத்தை, பொன்னொத்த பளிங்கு மேனியை, வெற்றிகளால் வேயப்பட்டிருந்த அந்த நிழல்தரும் குடிலை, கதாநாயகிகள் ஊஞ்சலாடிய அந்தக் கட்டுடலை, நோய் என்னும் சாத்தான் ஏதோ ஒரு துரதிர்ஷ்ட சமயத்தில் ஏமாற்றி உள்நுழைந்து, உருக்குலைக்கத் துவங்கினான். அந்தச் செய்தி கேட்டு, அகில உலகமும் அதிர்ச்சியடைந்தது, அல்லாடித்தான் போனது, ஆறுதல் கொள்ள வழியின்றி கதறித் துடித்தது. அவரது அருமையும் தேவையும் தெரிந்த அன்னை இந்திராகாந்தி, தனி விமானம் தந்து உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.

    சிகிச்சை முடிந்து திரும்பியவரை வரவேற்க தமிழகமே விமான நிலையத்தில் திரண்டது. தன் வலிமை குறைந்து விடவில்லை என்பதை அதன்பின் பல நிகழ்ச்சிகளில் அவர் நிரூபித்திருக்கிறார். ஆனாலும் விதி வலியது என்னும் சொல்லுக்கேற்ப காலன் அவர்மீது காதல் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து போய்விட்டான்.

    அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்த சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அவர் குணம்பெறவேண்டி, காட்சி தவறாமல் ஒளிபரப்பப்பட்ட ‘ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’ மற்றும் ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற’ ஆகிய பாடல்கள் திரையில் இடம்பெற்ற போது அவருக்காக கண்ணீர் சிந்திய மனங்களில் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தமிழ் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

    மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.

    வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!

    Share
  • புகைப்படம்… குறுங்கவிகள்..

    நாகினி

     

    புகைப்படம்.. குறுங்கவிகள்…

    புகைந்த உறவு
    புதைந்து போனது
    புகைந்த புகைப்படத்துடன்..
    ***
    நினைவலைகளை
    இனிமையாக மீட்டி வந்தனர்
    புகைப்படத்தில் பள்ளித்தோழர்கள்..
    ***
    நவீன அறிவியல் குல்பி
    மற்றவரைத் தேடாமல் தனக்குத் தானே
    புகைப்படம் எடுப்பது ‘செல்பி’!
    ***
    தன்கையே தனக்குதவி
    பழமையின் நவீனம்
    புகைப்படக்கலையில் செல்பி..
    ***
    கண்ணீர் மாலை
    சூடிக் கொடுத்தான்
    புகைப்படத்தில் கணவன்..
    ***
    கண்ணில் படவில்லை
    மழலை பருவம் கண்படு மென
    புகைப்படம் எடுக்கவில்லை!
    ***
    புன்னகை மாற்றமாகி
    புகைப்படத்தில் முகம்
    புதுமையாய்த் தெரிகிறது..
    ***
    முதுமையை இளமையாக மாற்றும்
    புகைப்படக் கலை நுட்பம் நம்பிக்கை
    முகத்தில் மண்அள்ளி தூற்றும் !!

    .. நாகினி

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    –நர்கிஸ் ஜியா.

    எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

    சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

    எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

    இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

    ‘தேக்குமரம் உடலைத் தந்தது,
    சின்னயானை நடையைத் தந்தது,
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
    பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

    புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

    இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்! ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழவேண்டும்!

    கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

    ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

    என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

    ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
    அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

    என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

    அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

    ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

    இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

    ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
    இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

    என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

    இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

    மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

    வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

    வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

    அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

    எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

    தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

     

     

     

     

     

     

     

    நர்கிஸ் ஜியா
    அஜ்மான்
    ஐக்கிய அரபு அமீரகம்

     

    Share
  • பெண்ணே நீதான்!

    -ரா.பார்த்தசாரதி

    ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான்
    பாலூட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்
    என்னோடு விளையாடி அன்புகாட்டியவளும் நீதான்
    திருமணப் பந்தலில் கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
    நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோசனை கூறுபவளும் நீதான்
    நான் மூப்பு அடைந்தால் என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
    மானிட சக்தியின் மறு அவதாரமாய்ப் பராசக்தியாய்  இருப்பவளும் நீதான்
    குடும்பத்தில்  மந்திரி தாய் மனைவி ஆகிய பல பதவிகளும் நீதான்
    குடும்பத்தின் பல்கலைக்கழகமாய்த் திகழ்பவளும்  நீதான்
    பாரதிகண்ட  புதுமைப்பெண்ணும்  நீதான்!

    Share
  • சர்வதேச மகளிர் தினம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    imagesஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி பிரான்சு நாட்டில் பெண்களால் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்றவற்றை முன்னிறுத்தி துவக்கப்பட்ட இந்தக் கிளர்ச்சிதான் உலகெங்கும் பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வித்தாக அமைந்ததும் இந்தக் கிளர்ச்சிதான். மிக முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாகவே இது கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1921ம் ஆண்டிலிருந்து, 94 ஆண்டுகளாக ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். சமீபக் காலங்களில்தா‌ன் நம் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் சூடுபிடித்துள்ளன. நம் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், மகளிருக்கான உரிமைகள், இட ஒதுக்கீடுகள், ஆண், பெண் பாலின சமநிலையில் வேறுபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    நாட்டில் முதல் முறையாக பாலியல் வன்முறைக்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் நிர்பயா என்ற பிசியோதெரபி – மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் நடந்த பயங்கரம். 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் துடிதுடித்து இறந்தார் நிர்பயா.

    சர்வதேச மகளிர் தினமான இன்று, அமெரிக்கப் பெண்களுக்கு எதிரான புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சட்டத்திற்கு பல தன்னார்வ அமைப்புகளும் வரவேற்பு அளித்துள்ளன. 1994ல் கொண்டு வரப்பட்ட பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம், தற்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கும், நேர்மறை வளர்ச்சிக்கும் இச்சட்டம் வித்திடும் என்றும், தங்களது கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படச் செய்யும் எனவும், உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவி செய்யும் வகையில் இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நம் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையில் பெருமளவு குறைந்திருந்தாலும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருவது கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி. 2010 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்கள் எண்ணிக்கை 9,893,708 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 11,004,520 ஆகவும் இருந்தது. அதாவது 5.44% ஆண் குழந்தைகளுக்கு, 4. 69% பெண் குழந்தைகளே பிறந்துள்ளன. இது எதிர்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு. உடனடியாக இதற்கான தீர்வைக் காண்பதும் அவசியமாகிறது. இந்தியாவில், இரண்டு சதவிகித பெண்கள் மட்டுமே 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்துகொள்கிறார்கள். 20 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களே திருமணத்திற்கு முன்பே கணவனை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். 40 சதவிகிதத்தினர் தங்கள் திருமணம் குறித்து ஏதும் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். வரதட்சணையாக குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சமாக கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் போன்றவைகளும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

    உலகிலேயே மிகக் குறைவான பெண் தொழிலாளர்கள் வரிசையில் நம் இந்தியா 11ம் இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. சென்ற பதினைந்து ஆண்டுகளில், அதிகமான வேலை வாய்ப்பு இருந்த பத்து துறைகளில், எட்டில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. பெண்கள் விரும்பி ஏற்கும் மற்ற இரண்டு துறைகளான ஆசிரியர் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் அதிகமான பங்களிப்பு இருந்தாலும், அதுவும் பாதிக்கும் குறைவாகவே இருக்கிறது.

    அரசியலைப் பொறுத்தவரை பெண்களின் சுய உரிமைகள் சார்ந்த தீர்மானங்களில் பெரும்பாலும் ஆண்களின் அரசியல் ஆதிக்கம் சார்ந்த முடிவுகளே எடுக்கப்பட்டுள்ளன. 16 வது மக்களவையைப் பொறுத்தவரை எப்பொழுதையும்விட மிக அதிக அளவிலான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், 62 என்ற எண்ணிக்கை 11 சதவிகிதமே ஆகும். நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தில் 66 அமைச்சர்களில், 8 பேர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 23 சதவிகித பெண்களே உள்ளனர். மாநிலங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான பெண் சட்ட மன்ற உறுப்பினர்களே உள்ளனர். நாகாலாந்து, மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலங்களில் பெண் அமைச்சர்களும் மிகவும் குறைவாகவே 7 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். எட்டு மாநிலங்களில் பெண் அமைச்சர்களே இல்லை. மூன்று பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்துறை அமைச்சகப் பொறுப்பேற்றுள்ளனர். அதில் இருவர் முதல் அமைச்சர்கள். இருவருக்கு மட்டுமே நிதி அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது என்பது வெள்ளிடைமலை. அது சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் நிதர்சனம்.

    Share
  • ஸ்ரீ ரமண பகவான்….

    images (1)

    பகவான் ஸ்ரீரமண மஹரிஷியின் ஆராதனையை முன்னிட்டு…..
    பகவான் உவாச
    ——————————
    ’’சித்தப்பா வீட்டில்நான், செத்தப்பா ஆனதும்,
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை, -வத்தாத,
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை,
    சாவதனில் கண்டேன் சுகம்’’….

    ’’வந்தது சாவு, வரட்டுமே சாவென்றால்,
    எந்தஎது சாகிறது என்றவினா, -தந்த,
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று’’….

    ’’வந்த இறப்பை, வரவேற்று வாசியின்றி,
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய், -இந்த,
    உடலை எடுத்து, சுடலை நெருப்பில்,
    விடுவதைப் பார்த்தேன் வியந்து’’….
    ’’உடல்போன பின்பும், உயிர்போன பின்பும்,
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன், -மட’நான்’போய்,
    தான்குவித்த குப்பையை, தானே களைந்தது,
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….கிரேசி மோகன்….
    ————————————————————-
    ’’சொக்கப்ப நாய்க்கர், மதுரைச் சந்தில்இ,
    லக்கம் பதிணொன்னில் லீலையாய், -மிக்கதோர்,
    அச்சமாம் காலனை, துச்ச மெனவுதைத்த,
    அச்சிறுவன் தாளே அரண்’’….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————–

    Share
  • அம்மாவும் சாதனைப் பெண்தான்

     

    ஆர்  எஸ் கலா
    unnamed

    ஆண்டி ஆனாலும் அரசன் ஆனாலும்

    பூமியில் அடி எடுத்து வைக்கும்

    முன்பே முதல் அடி வைத்தது அம்மாவின்

    கற்பத்தில் இருக்கும் போதே நாம்

    கொடுத்த உதை தான் நம் முதல் அடியே

    அன்னையின் அடி வயிற்றில் தான்
    ஆரம்பம்..

    இதை உணராத பிள்ளை

    இறுதி நேரம் தடி கூடக்
    கொடுக்க மனமின்றி

    பிடி
    சோறு கொடுக்க இரக்கமின்றி

    கோடித்துணி கொடுக்க அக்கறை இன்றி

    சிறு இடம் வீட்டில் ஒதுக்கப் பாசம் இன்றி

    தவிக்க விடுகின்றனர் தனிமையில்

    தள்ளியே வைக்கின்றார்கள் பத்து மாதம்

    சுமந்தவளைப் பதைக்க விடுகின்றார்கள்

    பால் ஊட்டி வளர்ததவளை விரட்டி

    விடுகின்றார்கள் நிலாக் காட்டி சோறு

    ஊட்டியவளைநிராகரித்து விடுகின்றார்கள்

    தன் தொடை மீது தலை சாய்த்து தாலாட்டுப்
    பாடியவளை

    துணைக் கரம் கொடுக்காமலே

    தூரமாகவே அனுப்பி விடுகின்றார்கள்

    அரண்மணை போல் வீடு அன்னை இல்லம்
    பேரு

    அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்

    தான் தன் தாய்க்குச் செய்வதையே

    அவன்
    பிள்ளை அவனுக்குச் செய்யும்

    என்பதையே
    மறக்கான் தாய் பட்ட வலியையும் நினைக்காமல்
    இருக்கான்

    தாமைக்குநிகராக ஒன்றும்
    இல்லை

    இறைவனும் அதன் பின்னே
    என்று உணர்ந்தால்

    ஒவ்வொரு பிள்ளையும்
    மறைந்து விடும் முதியோர் இல்லம்

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • பெண்கள் தினம்

    maxresdefault
    ”பெண்கள் தினத்தில்” பகவான் ஸ்ரீரமணர் பசி தீர்த்த
    பெண்கள்….எச்சம்மா பாட்டி, முதலியார் பாட்டி, கீரைப்பாட்டி
    இவர்களை நினைப்போம்….

    ”போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
    பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
    எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
    தொழுத விதம்தான் தவம்”….

    ”முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
    முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
    சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
    கீரைக் கிழவியாம் காண்”….கிரேசி மோகன்….

     

    Share
  • பனமரக் காடு

    ass

     

    பனமரக் காடு
    பாரதி பிறந்த நாடு !

    முதிர் கன்னியவள் படும்பாடு
    ஆடவனே நீ கொண்டாடு
    கன்னியவள் வாழ்வை பந்தாடு !

    கவிஞா நீ பாடு பாடு
    பாரதப் பண்பாடு !

    #றியாஸ்முஹமட்
    கத்தார்

    Share
  • மகளிர் தின வாழ்த்துக்கள்

    சக்தி சக்திதாசன்

    என் இனிய அன்பு உள்ளங்களே !

    மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

    images

    சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
    சித்தியெனக்களித்தவள் என் அன்னை
    புத்தியெனக்களித்தவள் என் அன்னை
    முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

    தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
    தந்தான் அந்த ஆதிமூலம் பெண்மையின் மகத்துவம்
    எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
    வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

    அன்னையாராக அன்பு மழை பொழிவர்
    சகோதர சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
    காதலியராக கனவுகளுக்கு உயிர் கொடுப்பர்
    தொழியராக எம்முடன் துயர் பகிர்ந்திடுவர்

    அன்றொருநஃஅள் எம் முப்பாட்டன் பாரதி
    ஆணித்த்ரமாய் ஒலித்தான் பெண்ணின் பெருமை
    அந்நிய நாட்டார் எம்மை அடிமை கொள்வது போல
    அன்னை இனத்தை நாம் அடிமை கொள்ளலாகாது

    தெள்ளிய உண்மை நிலைகளைத் தமிழில்
    தெட்டத் தெளிவாய்ச் சொன்னவன் எம் பாரதி
    உள்ளத்தில் வாங்கினோமா நாம் உண்மைகளை ?
    உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

    வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
    சோதனை பல வென்று தன்னிரகற்ற
    சாதனை கண்ட மகவுகள் தந்தனர் தோழரே !
    போதனை அல்ல இது சத்தியம் என்பதே உண்மை

    மகளிர் தினம் இதுவென்று உலகில் ந்2ஆம்
    மார் தட்டிக் கொள்வதல்லை பெருமை
    மகளிர் மாந்தருள் மாணிக்கமெனும் உண்மை
    விளங்கிட எது செய்தோம் என்பதே கேள்வி ?

    சமுதாயம் , கலாச்சாரம் எனும் போர்வையில்
    மாதர்கள் கால்களில் பூட்டி விட்ட விலங்குகளை
    சமத்துவம் எனும் சத்திய உளி கொண்டு என்று நாம்
    உடைக்கின்றோமோ அன்றுதான் உன்மையான மகளிர் தினம்

    எமையீன்ற அன்னையர்க்கு, எமைப் போல பல
    உன்னத மகவுகளுக்காய் தம் வாழ்வை அர்ப்பணித்த
    தியாகச் செம்மல்களாம் மகளீர் அனைவருக்கும்
    வணக்கங்களோடு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • “அகில உலக பெண்கள் நாள் “

    தமிழ்த்தேனீ

    IWD-slider
    ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அல்லது அனைத்துலக பெண்கள் நாள் என்று கொண்டாடுகிறோம்.

    இறைவன் படைப்பிலே உருவான அத்துணை ஜீவராசிகளிலும் பெண்பாலினமும் ஆண்பாலினமும் படைக்க்கப் பட்டிருக்கிறது ஆனால் மனிதர்களத் தவிர மற்ற ஜீவராசிகள் பெண் அடிமையென்றும் ஆண் ஆளுபவன் என்றும் பேதம் பார்ப்பதில்லை ஆண்கள் கற்பழிப்பு கொலை போன்ற செயல்களை செய்து விட்டு அதை நியாயப்படுத்துவது போலப் பேசுவதும் , பெண்கள் வீட்டை விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வெளியே வரக் கூடாது அப்படி வருதல் முறையன்று என்றெல்லாம் பிதற்றுவதும் , அப்படிப் பிதற்றும் குற்றவாளியின் பிதற்றலை பேட்டி எடுத்து மக்களுக்கு அவற்றை ஒலி ஒளிக் காட்சிகளாக அளிக்கும் ஊடகங்களும் தவறாக தங்கள் விளம்பரத்துக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவதைப் பார்த்தால் நாம் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.

    . சகோதரியும் பெண்தான் , தாயும் பெண்தான், மனைவியும் பெண்தான், மகளும் பெண்தான். ஆகவே ஒவ்வொரு உறவு முறையிலும் பெண்களை அந்தந்த உறவுக்கேற்ப நடத்த பழக்கிய பின்னரும் மாக்கள் என்னும் நிலையிலிருந்த நாம் படித்து அறிவு பெற்று, விஞ்ஞானத்தில் முன்னேறி நம்மைப் பண்படுத்திக் கொண்டு மக்களாக மாறி இக்காலத்திலும் இன்னமும் ஆண்களில் சிலர் மாக்கள் என்னும் மிருகத்தின் மன நிலையிலிருந்து மாறாமல் தராதரம் பாராமல் எல்லாப் பெண்களையுமே பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மனோ நிலையிலிருந்து ஆண்கள் மாற வேண்டும்..

    பெண்களைப் பற்றி பலவிதமான கருத்துகள் ஆண்கள் மனதிலே இருந்தாலும் தொடக்க காலம் முதலே பெண்கள் அனைவருமே ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் என்னும் எண்ணம் கொண்டவர்கள் ஆண்கள். அதனாலேயே இலக்கியங்களிலும் , காவியங்களிலும் மற்று சரித்திரங்களிலும் ,புதினங்களிலும் இன்றைய திரைப்படங்கள் நெடுந் தொடர்கள், கதைகள் எல்லாமே இதே கருத்தை ஒட்டித்தான் தயாரிக்கப் படுகிறது.

    ஆனால் பெண் என்பவள் மஹா சக்தி என்று ஒப்புக் கொள்ளப்படும் புராணங்களில் கூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஆண்தான் உயர்ந்தவன் , பெண் அவனுக்கு சேவகம் செய்யவே இருக்கிறாள் என்றே போதிக்கப் படுகிறது.
    இந்த நவீன விஞ்ஞான யுகத்திலும் இன்னமும் ஆண்களும் பெண்களை சரியாக உணரவில்லை , பெண்களும் தங்கள் சக்தியை முறையாக முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது.

    பழைய காலத்திலிருந்து ஒரு சொல்வழக்கு இன்னமும் தொடர்கிறது, அது “ பெண் புத்தி பின் புத்தி “ என்பது
    அந்தச் சொல்வழக்கை நாம் தவறாக பொருள் புரிந்துகொண்டிருக்கிறோமோ என்பது என் சந்தேகம். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, பெண் குழந்தைகள் கர்ப்பகாலத்தில் அதிக காலம் கர்ப்பக் க்ருகத்தில் இருக்கும் ஆனால் ஆண்குழந்தை குறிப்பிட்டபடி 10 மாதத்திலேயே பிறந்துவிடும், பெண் குழந்தைகள் தாமதமாக பிறக்கும், ஆண் குழந்தைகள் சீக்கிரம் அதாவது பத்து மாதங்களுக்கு முன்னரே பிறக்கும் ,இது அனுபவ பூர்வ உண்மை.

    ஆண் முந்திக்கொள்கிறான், ஏனென்றால் எல்லாவற்றுக்கும் அவசரம் , நிதானமின்மை. இல்லறத்தில் அவசரப்பட்டு உணர்ச்சி கொள்பவன் ஆண் ,அதே போல அவசரமாக உணர்ச்சிகள் தணிந்து போவதும் ஆணுக்குதான்
    ஆனால் பெண் அப்படியல்ல யோசிப்பவள், நிதானமாக தீர்க்கமாக யோசித்து செயலாற்றுபவள், பெண்கள் மிக நிதானமாக உணர்ச்சி கொள்வார்கள், அதேபோல் அதிலேயே தங்கி நிதானமாக உணர்ச்சியை தணிப்பார்கள். எல்லாச் செயலிலும் பெண்களுக்கும் ஒரு நிதானம் இருக்கும். ஒரு குடும்பத்தில் உருக்கும் ஆண்கள் மூத்தவர்களாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண் ஆலோசனைகளை சரியாகச் சொல்லும் திறம் கொண்டவளாக இருப்பாள். பெண்களை மதிக்காத ஆண்கள் விவேகமில்லாதவர்கள்.

    நான் அடிக்கடி சொல்வேன் பெண் ஒரு சிறந்த நிர்வாகியாய் இருக்கிறாள் என்று தெரிந்தால் கணவன் நிர்வாகத்தை அவளிடம் கொடுக்கலாம். இவனை விட அவள் நிர்வாகத்தை நன்று திட்டமிட்டு நடத்துவாள் என்று
    ஆனால் வேதப்படிப் பார்த்தால்முதலில் தோன்றியவள் சக்தி,ஆதிசக்தி, அந்த ஆதிசக்தி தோன்றிய பின்னர்தான் அந்த ஆதி சக்தி தன்னிலிருந்து விஷ்ணுவை உருவாக்கினாள், விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ப்ரும்மாவை தோற்றுவித்தாள், அதன் பின்னர் சிவனைத் தோற்றுவித்தாள் ஆகவே பெண் புத்தி பின்னால் விளையப் போகும் அனைத்தையும் அறிந்த பின் புத்தி என்று பொருள் கொள்வோமே.

    இயற்கையிலேயே கவனித்துப் பார்ப்பவர்களுக்கு புரியும்பெண் குழந்தைகள் வெகு சீக்கிரமே கவிழ்ந்து கொள்ளும், தவழத் தொடங்கும்,உட்காரத் தொடங்கும், நிற்கத் தொடங்கும், நடக்கத் தொடங்கும், ஆனால் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைவிட காலதாமதமாகவே அனைத்து இயக்கங்களையும் செய்யும். ஏன் இப்படி என்று ஊன்றிக் கவனித்தால் இறைவனின் படைப்பின் ரகசியம் ,ஆச்சரியமான விஞ்ஞான ரகசியம் புரியும். இயல்பாகவே குழந்தைப் பருவத்தில் பெண்களுக்கு உடல் உறுப்புகள் உடலின் எந்த பாகத்திலும் வெளியே துறுத்திக்கொண்டிராது,

    ஆனால் ஆண் குழந்தைகளுக்கு முக்கியமான உறுப்புகள் உடலைவிட்டு வெளியே துறுத்திக்கொண்டிருக்கும்
    ஆதலால் முதலில் இயக்கங்களை தொடங்கும் பெண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது, ஆனால் ஆண் குழந்தைகள் வேகமாக இயங்கத் தொடங்கினால், பழக்கமின்மை காரணமாக கீழே விழுந்தால் துறுத்திக்கொண்டிருக்கும் ஆண் உறுப்பில் தாக்குதலை வாங்க வேண்டி வரும், அதனால் இயக்கங்கள் உடல் உறுதி பெற்று பெற்றுத்தான் மெதுவாக இயங்கும் ஆண் குழந்தைகளுக்கு, ஆனால் தாமதமாக வந்தாலும் பெண் குழந்தைகள் தளர்ச்சியின்றி வரும்
    அதைத்தான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு என்பர்.

    எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பெண்கள் நிதானப் படுத்திக்கொண்டு யோசிப்பதைப் போல ஆண்களால் முடிவதில்லை.

    உதாரணமாக ப்ரசவ காலத்தில், பத்து மாதம் சுமக்கும் காலத்திலும்,ப்ரசவம் நிகழும் நேரத்திலும், பதறாமல் இருக்க பெண்களால் முடியும் ஆனால் அந்தப் பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் ஆண்கள் பதறிக்கொண்டிருப்பார்கள், ஆனால் வெற்றிகரமாக ப்ரசவத்தையும் முடித்துக்கொண்டு கணவனுக்கும் ,தகப்பனுக்கும் தைரியம் சொல்பவள் பெண்

    இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் பிறப்பு என்றால் இறப்பும் இயற்கையே ஒரு பெண்ணை தவிக்க விட்டுவிட்டு ஒரு ஆண் அதாவது கணவன் இறந்து போகும் நிலை எற்பட்டால் துக்கத்தையும் ,சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு பெண்ணால் அவளுடைய அடுத்த கடமைகளை கவனிக்க மனவலு இருக்கிறது,அந்தப் பெண் தாயுமாகி தந்தையுமாகி அனைவரையும் அரவணைத்துக்கொண்டு மீண்டு விடுவாள், தன் குழந்தைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்திவிடுவாள், ஆனால் அப்படி கணவனை விட்டு மனைவி இறக்கும் நிலை வந்தால் ஒரு ஆணால் பதறாமல்,எண்ணம் சிதறாமல் இருக்க முடிவதில்லை, அவனுடைய கடமைகளை சரியாக நடத்த முடிவதில்லை என்பது கண்கூடு,ஒன்று அவன் குழந்தைகளை,கடமைகளை சரிவர ஆற்ற முடியாமல் திகைத்துப் போவான், மனமொடிந்துபோவான், பதறுவான் அல்லது மனம் சிதறுவான். தன் சுகத்துக்காக தன் கடமைகளை மறந்து மற்றோர் பெண்ணை நாடி, தான் பெற்ற குழந்தைகளையும் தன் பெற்றோர்களையுமே மறந்துவிடும் ஆண்கள் தான் அதிகம், தாயுமானவன் என்னும் உயர்ந்த நிலையை அடையும் ஆண்கள் கோடியில் ஒருவரே.

    நிதானமாக ஆராயாமல் அவசரகதியில் முடிவுகளை எடுப்பவன் ஆண். நிதானமாக யோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பவள் பெண் அதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை, பின்னால் வரபோக்கும் எந்த ஒரு நிகழ்விலும் பதறாமல். முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கும் தீர்க்க தரிசிகளுக்கு பின் புத்தி என்று பெயரென்றால் அதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன் ஆமாம்

    “ பெண் புத்தி பின் புத்திதான் “

    அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா உயர்ந்தது ஜாதி?

    மனிதமும்,உலகமும் காப்போம்,
    மௌனம் உணர்த்தாத பொருளை
    சொற்கள் உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc1947@gmail.com
    http://www.peopleofindia.net

    Share
  • ஆண்மையின் தாய்மை!

    -முனைவர் கமலம் சங்கர்

    தாய்மை என்னும் சொல் பெண்மையை நினைவுபடுத்துவதே. பத்து மாதம் கருவிலே சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணின் பொறுப்பு இயற்கையின் அற்புதம். பெண்மையின் பூரணத்துவம் தாய்மையில் என்பது உலக வழக்கு. ஏன்? ஒவ்வொரு பெண்ணுமே ஏற்பதும் கூட.

    கவியரசர் கண்ணதாசன்,

    எந்த மனதில் பாசம் உண்டோ

    அந்த மனமே அம்மா அம்மா  (படம் : எங்க மாமா)

    என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.

    அன்பு இல்லாத ஆண்மனம் உண்டா?

    பாசம் பொழியாத ஆண்மனத்தைக் காட்ட முடியுமா?

    அன்பும் பாசமும் காட்டி உருக வைக்கும் அண்ணன் பாத்திரம் திரைப்படங்களில் காட்டப்படும் போது பாசத்துக்கு ஓர் உருவம் கிடைக்கிறது.

    மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி

    திருமகளே செல்க!

    வாழ்ந்த வீடும் கொண்டவன் வீடும்

    மணம் பெறவே செல்க!  (படம் : பச்சை விளக்கு)

    பிறந்த வீடும் புகுந்த வீடும் அவளால் சிறக்க  வேண்டும் என நெகிழ்ந்து வாழ்த்தும் அண்ணனின் மனம் அன்னையின் மனம்தானே?

    தாயின் முகமிங்கு நிழலாடுது

    தந்தை மனமிங்கு உறவாடுது

    கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று

    பாடும் குரல் கேட்குது  (படம் : தங்கைக்காக)

    என்று தங்கை ஒருத்தி தன் அண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் உணர்ந்து வணங்குகிறாள்.

    அன்பு காதலாகும் போது… ஆணின் மனம் உருகித் தவிக்கும்போது… தாய்மையும் அவனது உயிர்த் துடிப்பாகிறது. காதலனே – கணவனே – தாயாகி உருகும் பாடல்கள், உருக வைக்கும் திரைப் பாடல்கள் எத்தனை!

    பெண் காதலில் முதன்முதலாக உணர்வதே பாதுகாப்புத் தரும் அணைப்பு. தாயின் அணைப்புக்குப் பின், தந்தை தரும் பாதுகாப்புக்குப் பின் வளர்ந்த பெண் அதே பிம்பத்தை உணரும் ஓர் ஆணிடம் தன் மனத்தைப் பறிகொடுக்கிறாள். மனம் அவள் மனத்தில் பொங்கும் தாய்மை தரும் இதத்தை சுவைக்கச் சுவைக்க… தன்னை இழப்பதும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை அவளுக்கு.

    தாயார் அணைந்திருந்த மயக்கமுண்டுநான்

    தந்தை மடியிருந்த பழக்கமுண்டு

    நீ யாரோ நான் யாரோ தெரியாதுஇன்று

    நேர்ந்தது என்ன வென்று புரியாது.  (படம் : பரிசு)

    என்றும்,

    தங்கமகள் கூந்தல் என்று

    தாய் முடித்துப் பூவும் வைப்பாள்

    மங்கை மணம் முடிந்துவிட்டால்

    மணவாளன் பூ முடிப்பான்  (படம் : கைராசி)

    என்றும் பெண்ணொருத்தி தாயின் அன்பைக் காதலனிடம் காணும் இயல்பைக் காட்டுகிறார் கவியரசர்.

    உயிரை வளர்ப்பானாம் காதலன்

    தாம் விரும்பி மணமுடிப்பார்

    தம் உயிரில் நமை வளர்ப்பார்  (படம் : கைராசி)

    உண்மை! உயிரோடு சேரும் உறவுதானே காதல்? முதலில் சேர்க்கிறது. அதன்பின் ஆணின் உயிர் வளர்க்கும் உயிராகிறாள் பெண்.

    குழிவிழுந்த கன்னத்தை என்

    இதழில் மூடவாஉன்னைக்

    குழந்தையாக்கி மடியில் வைத்துப்

    பாட்டுப் பாடவா?  (படம் : பனித்திரை)

    என்று கேட்கும் காதலன் கனிவின் உருவமாகிறான்.

    பெண்ணுக்கு வேண்டியது அதுதான். அவள் பிள்ளை பெற்றுத் தாயானாலும் அவள் மனத்தில் புதைந்து கிடக்கும் ‘குழந்தை மனசு’ அதைக் கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கும் அப்போது மகிழும்!

    சின்னச் சின்னப் பறவை

    அன்னை அவள் மடியில்

    தவழ்வதுபோல் நான் தவழ்ந்திருப்பேன்  (படம் : போலீஸ்காரன் மகள்)

    இப்போது புரிகிறதா பெண்ணின் மனசு? அதன் எதிரொலியாக…

    கண்ணை மெல்ல மறைத்து

    உன்னைக் கையில் எடுத்து

    காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்  (படம் : போலீஸ்காரன் மகள்)

    இப்படி நம்பிக்கையளிக்கிறான் ஆண். பெண்ணின் எதிர்பார்ப்பு, அவனிடம் தான் பெறத் தவிக்கும் தாய்மை வெளிப்பாடு! அவ்ன் அந்தத் தாய்மையுணர்வை நம்பிக்கையாக்கி, உறவுக்கு உரம் சேர்க்கிறான். பெண்ணின் உயிரோ கொடியாகப் பின்னிக் கொள்கிறது.

    ஆலங்குடி சோமுவும் இத்தகைய நுண்மையான மனவோட்டத்தைத் தீட்டுகிறார்.

    ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி

    அருகில் நெருங்கிடவோ

    உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே

    அள்ளி அணைத்திடவா?

    அன்னையைன் போலே உன்னுடல் தன்னை

    வருடிக் கொடுத்திடவாநீ

    அமைதியுடன் துயில் கொள்ளும்

    அழகை ரசித்திடவா?  (படம் : கார்த்திகை தீபம்)

    குழந்தையின் கண்களைத் தன் கையால் மூடி மூடி எடுப்பதும் – அள்ளி அணைப்பதும் – வருடிக் கொடுப்பதும் – உறங்க வைப்பதும் – உறங்கும் அமைதியான அழகை ரசிப்பதும், முத்தமிடுவதும்… அட எல்லாமே தாய்மை வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிற செயல்கள்!

    தலையைத் தடவி – உச்சி முகர்ந்து – கன்னம் வருடி.. பூச்சூட்டி… என்றெல்லாம் ஆண் செய்யும் செயல்கள் பெண்ணை எப்படிக் குழந்தையாக்கிக் குதூகலிக்கச் செய்கின்றன என்பது அவளுக்கு மட்டும்தான் புரியும், அவள் இணங்குவதிலிருந்து அவனுக்குத் தெரியும்.

    ஆணின் மனத்தில் பொங்குத் தாய்மைப் பிரவாகமே பெண் உணரும் காதல்! காமம்!! தாம்பத்திய சுகம்!!! எல்லாம்! எல்லாம்!! எல்லாமே!!!

    கவியரசரின் கடைசிப் பாடலான ‘கண்ணே கலைமானே’ பாடல், ஆண் உள்ளத்தில் உறைந்து பிடந்து விரிந்து வானளவு பரவிய தாய்மை வெளிப்பாடுதானே?

    உலக வரலாற்றில் போற்றப்படும் தலைவர்கள் எல்லாருமே இத்தகைய தாய்மையை அடித்தளமாக்கி மனித குலத்துக்கு வளம் சேர்த்தவர்கள் தாமே?

    தாய்மை உடல் சார்ந்த மொழி அல்ல, உள்ளம் சார்ந்தது; உயிரைச் சார்ந்தது.

    எனினும்…

    உடலாலும் தாய்மை ஏற்று அதன் மணம் பரப்புபவள் பெண்! ஆம்! இது இயற்கையின் அதிசயம்!

    உயிராலும் உள்ளத்தாலும் மட்டுமே தாய்மை ஏற்று, அந்த வரத்தைப் பரிசாக்குகிறான் ஆண்! ஆம்! இது இயற்கையின் பேரதிசயம்!

    இந்த இணைப்பே இயற்கை இந்த உலகம் என்றும் வாழ வழங்கியிருக்கும் கொடை! அற்புதம்! ஆச்சர்யம்! எல்லாமே!

    ஒற்றை வரியில் சொன்னால்…

    ஆண்மையின் தாய்மையே பெண்மையின் தாய்மைக்கு வேர்! எல்லா உறவுகளிலும்!! எல்லா நிலைகளிலும்!!!

    -முனைவர் கமலம் சங்கர், சென்னை.

    06.03.2015

    Share
  • சர்வதேச மகளிர் தினம் – தடைக்கற்களும் படிக்கற்களே!

    008

     

    பவள சங்கரி

    சுட்டும் விழிச்சுடர்!

    womens-day5

    நாடு விடுதலை பெற்றது – பெண் விடுதலை பெற்றாளா? – பாரதி கண்ட புதுமைப் பெண் உருவாகியிருக்கிறாளா?

    சுட்டும் விழி

    p86இந்த வினாவிற்கான முழுமையான விடை இன்னும் நமக்குக் கிடைத்தபாடில்லை. சமுதாய மறுமலர்ச்சியின் ஊடே, பெரும் போராட்டங்களின் மத்தியில் தன்னை எப்பாடுபட்டேனும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துடிக்கும் மகளிர், இன்றுவரை அதற்கான எல்லையை அடைந்திருக்கிறார்களா என்பதே ஐயம்தான். பெண்ணை விளம்பரப் பொருளாக்கும் வியாபாரிகளும், விற்பனைப் பொருளாக்கும் பத்திரிக்கைகள், அழகுப் பதுமைகளாகக் காட்சிப்படுத்தும் படைப்பாளர்கள், கவர்ச்சிப் பதுமைகளாக்கும் ஊடகங்கள், எப்படியேனும் அடக்கியாண்டு, அடிமைப்படுத்தத் துடிக்கும் ஆண் வர்க்கம், இவையனைத்தையும் உணர்ந்தும், வெளிவர மனமில்லாமல் பொன் விலங்கில் புத்தொளி வீசுவதாக கற்பனையில் உழன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினம், இப்படி பட்டியல் இன்னும் நீண்டு கொண்டுதான் உள்ளது. கல்வியறிவு பெறுதல் மட்டுமே இந்த விலங்கை உடைக்கும் சம்மட்டியாக செயல்படும் என்பதை அழுத்தமாகப் பதிவிட்ட பாரதியின் கனவு, இன்று ஓரளவிற்கேனும் கல்வியறிவு பெற்ற மகளிரின் எண்ணிக்கை கூடிய பின்பும் நிறைவேறியுள்ளது என்று கூற முடியாத நிலையில்தானே உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் போக்கும், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்துகொள்வது, ஒரு பெண்ணே பெண்ணிற்கு எதிரியாய் நிற்பது, காழ்ப்புணர்ச்சி கொள்வது என்பது போன்ற நிலைகளும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் செய்கிறது. பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், பொது மேடைகளிலும், தம் எழுத்துக்கள் மூலமாகவும் மட்டம் தட்டிப்பேசும் ஆண்கள் என்று தடைக்கற்களின் மீதான போராட்டங்களே வாழ்க்கையாகும் நிலையே உள்ளது.

    ஒரு வேளை, 1897 ஆம் ஆண்டு, ஜூலை 29 இல் சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதா அவர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதியதைப் போன்று இல்லாமல் இன்று சற்றே மாற்றம் இருக்கக்கூடும். “இந்தியா சிறந்த பெண்மணிகளை உருவாக்கும் நிலையில் இல்லை. மற்ற நாடுகளிலிருந்து கடன் பெறும் நிலையில்தான் உள்ளது. உங்கள் கல்வி, நேர்மை, தூய்மை, ஆழ்ந்த அன்பு, குறிக்கோள் மற்றும் அனைத்திற்கும் மேலாக துடிப்பான இரத்தம் போன்ற அனைத்தும் பெண்களுக்குத் தேவை” என்று கூறியபடி இன்று இல்லை என்பது வெள்ளிடைமலை. இன்று பல சகோதரிகள் பல்வேறு துறைகளில் தங்கள் வல்லமையைப் பறைசாற்றியவண்ணமே உள்ளனர்.

    இதற்காக தம் வாழ்வையே பணயம் வைத்து போராடியப் பெண்மணிகள் எண்ணற்றோர். அவர்பட்ட துயரங்களும் கொஞ்சமல்ல. நம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பேறு பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று உறுதியுடன் இருந்த காலகட்டத்தில் ஒரு பெண் மருத்துவப்படிப்பு படிப்பதென்பது அத்தனை எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை. உடன் பயிலும் பல ஆண் மாணவர்களுடன் ஒரு பெண் படிப்பதால், அந்த மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணம்காட்டி அவரை மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நல்லெண்ணம் கொண்ட, அச்சமயத்தில் துறை முதல்வராக இருந்த ஐரோப்பியர் ஒருவர், வெகு நிதானமாக, ‘கவனம் சிதறக் கூடியவர்கள் படிக்க வரவேண்டியதில்லை, இந்த ஒரு மாணவி கற்றால் போதும்’ என்று உறுதியோடு சொல்லியிருக்கிறார். அந்த ஒரு பெண்ணின் மன உறுதி இன்று எத்தனையோ முத்துலட்சுமிகளை உருவாக்கியுள்ளது.

    பெண்ணை சக்தியின் அம்சமாகப் பார்க்கும் நம் மண்ணில்தான் அவள் போகப் பொருளாக மட்டும் பார்க்கப்படும் கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் வழியாகத் தோன்றும் ஒரு ஆண், அப்பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்க்கத் துணிவது மனிதமற்ற செயல். ஆயினும் தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்களாகக் கடந்து, வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருப்போரும் ஏராளம்.

    சில காலம் முன்பு வரை திருமணம் ஆன பெண்கள் பணிக்குச் செல்வது பல காரணங்களினால் அரிதாகவே இருந்தது. ஆனால் இன்றைய பொருளாதார நிலையில் திருமணமாகாத பெண்கள் மட்டும் பணிக்குச் சென்று கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. குடும்ப வளர்ச்சி, அடிப்படை வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களுக்காக திருமணமான பெண்களும் வேலைக்குப்போக வேண்டிய சூழல் உருவாகிறது. தங்கள் கல்வி, வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் பரவலாக இருக்கின்றன. சில பெண்கள் குழுமங்களாகச் சேர்ந்து அதற்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள். குடிசைத் தொழில் என்ற பெயரில் ஏற்றுமதிக்கு ஏற்றவாறு தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அரசாங்கத் திட்டங்கள் மற்றும் வங்கியின் மூலம் கிடைக்கும் உதவிகள் போன்ற தேவையான பொது விசயங்களிலும் விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களில் பங்கு இன்று கணிசமாக உயர்ந்து வருவதைக் காண முடிகிறது.

    மேலைநாட்டுப் பெண்களைப் போன்று நம் இந்தியப் பெண்கள் உடற்பயிற்சிக்குத் தேவையான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கூற்றிலும் உண்மை இருக்கிறது. இதற்கான நல்ல ஆரம்பங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் வாய்க்கப் பெற்றாலும், பணி மற்றும் குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடும்போது தன்னுடைய உடல் நலம் என்பதற்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்மை. ஆனாலும் பொதுவான ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவைகள் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம். பண்டை காலத்திலிருந்து, சென்ற நூற்றாண்டு வரை பெண்கள் புகையிலை, சுருட்டு போன்ற ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் பழக்கங்கள் கொண்டிருந்தது, இன்று மிக மிக அரிதாகியுள்ளது. சில பின் தங்கிய கிராமங்களில் மட்டும் இது விதி விலக்கு. மேலைநாட்டு நாகரீகங்களான புகை பிடிப்பது, ஆணும், பெண்ணும் கலந்து நடனம் ஆடுவது போன்ற பழக்கங்கள் சில நவநாகரீக வட்டாரத்தில் தவிர்த்து, ஏனைய பெண்களின் நிலையில் சுய கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்ல முடிகிறது. ஒரு காலத்தில் தனித்து இயங்கவே முடியாத நிலையில் இருந்தவர்கள் இன்று கடைவீதிக்குச் செல்வது, மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கும், தேவையான போது வெளியூர் பயணங்களும் செல்வதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. என்றாலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் பெண்களை அச்சமூட்டத்தான் செய்கிறது. இதற்காக அரசாங்கம் இன்னும் முனைந்து திட்டங்கள் தீட்டவேண்டிய தேவையும் உள்ளது.

    நம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு, நம் வருங்காலச் சந்ததியினர் அதைத் தொடரும் வகையில் காலத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள நவீனத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்கும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். காரணம் இன்றைய நாகரீக உலகில், சுத்தம், சுகாதாரம், என அனைத்தையும் பேண வேண்டியதற்கான முக்கியத்துவமும் அதிகமாகிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படத்தான் செய்கிறது. அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதும் இன்றைய தேவை.

    ஈரோடு தந்தை பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற, விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார். திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும் வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர்.

    par0_image

    par0-009aஒரு காலத்தில் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒபாமா அமெரிக்காவின் தலைமைப் பதவியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…. ஆம், அப்பெண் ‘ரோசா பார்க்ஸ்’ என்ற கருப்பினப் பெண். அந்நாட்களில் கருப்பினத்தவருக்கென்று பேருந்தில் கூட தனிப்பட்ட இருக்கைகளே ஒதுக்கப்பட்டு வந்தன. ஒரு முறை ரோசா பார்க்ஸ், பேருந்தில் கருப்பின மக்களுக்கான இருக்கைகள் காலியாக இல்லாததால், மற்ற இருக்கையில் சென்று அமர்ந்திருக்கிறார். ஓட்டுனரோ அவரை அந்த இருக்கையில் அமர அனுமதிக்காமல் தகராறு செய்திருக்கிறார். அப்பெண்ணும் பிடிவாதமாக இருந்ததால், ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். ரோசா சிறை வைக்கப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் தலைமையில் போராட்டம் வலுப்பெற்றது. முன்னூற்றி என்பத்தி இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. அந்நாட்கள் முழுவதும் கருப்பினத்தவர் பேருந்துகளை புறக்கணிக்கின்றனர். ஆனால், அதன் பிறகு பெரும் மாற்றம் ஏற்படுத்திய இப்போராட்டம், ஒபாமா அவர்களை தலைமைப் பொறுப்பேற்பதில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்த சம்பவம் இது. 1996இல் குடியரசுத் தலைவர் கிளிண்டனிடம், ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கமும், 1999இல் காங்கிரசு தங்கப் பதக்கமும் பெற்றார். ஆயினும் தம் இறுதிக் காலங்களிலும் இனவெறி முழுமையாகத் தீரவில்லையே என்ற வேதனையிலேயே இருந்தார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மரியாதையான, தலைநகரில் இறுதி ஓய்விற்கான இட ஒதுக்கீடு பெற்ற, அமெரிக்க வரலாற்றின் ஒரே பெண் மற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர் ரோசா பார்க்ஸ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்வோ வாகனமோ சுமை அதிகமானால் சக்கரம் மண்ணில் புதையத்தான் செய்யும். சுமைகள் ஏறாமல் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளும் துணிவும் மகளிருக்கு அவசியமாகிறது. சில அற்ப விசயங்களுக்காகவும், அடுத்தவரின் அனாவசியமான விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதன் மூலமாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் அவலங்களும் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற சிறிய பின்னடைவுகளைத் தாண்டி வரும் கலையை பயில வேண்டும். நம்முடைய சின்னச் சின்ன சாதனைகளையும் பட்டியலிட்டு, அதை முன்னுதாரணமாகக்கொண்டு இன்னும் பெரிய சாதனைகளைச் செய்ய முனைய வேண்டும். நல்ல விசயங்கள் எவரிடம் இருந்தாலும் அதைக் கற்கத் தயங்கக்கூடாது. உலகில் அனைத்தும் அறிந்த மேதாவிகள் என்று எவரும் இலர் என்பதே நிதர்சனம் இல்லையா!

    படங்களுக்கு நன்றி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ’’மடிசொரியும்  பால்பசு  மகாவிஷ்ணு  கண்ணன்

      மடிசரிய  வாத்சல்ய  மாக, -கடிகாரம்

      பன்னிரெண்டு  காட்டும் பெரியமுள் சின்னமுள்போல்,

    பின்னிரெண்டும் அத்வைத போஸ்(POSE)….கிரேசி மோகன்…
    Share
  • பெரியாரின் பேட்டி

    — தேமொழி.

    அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:

    _________________

    சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.

    இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.

    pages finalபஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.

    சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.

    எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?

    உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.

    அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.

    காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.

    காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.

    நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.

    ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

    உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.

    இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.

    அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

    உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.

    _________________

    * இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.

    _________________

    பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
    நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
    ‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்

    மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
    “தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்

    Share