Blog

  • சிறைக் கைதிகள் .. !

     

    சி. ஜெயபாரதன், கனடா

    jay

    பூமியே நமக்கோர் சிறை !
    வானிற் பயணம் தடுப்பது ஈர்ப்பு !
    காணி நிலத்தில் கட்டி வாழும்
    குடிசை நமக்குச் சிறை !
    காலை மாலை நம்மைத்
    தாலாட்டும்
    நகரம் ஒரு பெருஞ் சிறை !
    வாலிபத்தில் கண்மூடித்
    தாலி கட்டிப்
    போட்டது உன் கழுத்தில்
    பொன்விலங்கு !
    வீட்டுக் குடும்பம், பலர் வாழும்
    கூட்டுக் குடும்பம்
    மாட்டுக் கொட்டச் சிறைகள் !
    அங்கே நீ
    போட்டாய் எனக்குப்
    பூவிலங்கு !
    அஞ்சலி தேவிக்கு
    கொஞ்சும் சலங்கை கட்டி
    படாதிபதி
    இடுவார் கால் விலங்கு !
    சேயை உண்டாக்கி
    தாயிக்குத்
    தப்ப முடியாத
    நித்தியப் பாச விலங்கு !

    ஆத்மாவுக்கு
    தோல் உடம்பு போடும்
    ஆயுள் விலங்கு !
    உன்னுடைய
    சிறைக் கைதி நானா ?
    என்னுடைய
    சிறைக் கைதி நீயா ?
    சதி பதியை எக்காலமும்
    சிறையில் பூட்டி
    சாவியை வீசி எறிந்து
    பல்லாங் குழி ஆடிவரும்
    பொல்லாத விதி !

    +++++++++++

    Share
  • இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?

    எம்.ரிஷான் ஷெரீப்

    arisha

    இலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.

    வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் ‘நன்றி உதயா’ எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

    உலக வரலாற்றுச் சின்னங்களிலொன்றான சீகிரிய குகையோவியங்கள் இலங்கை தொல்பொருளியலாளர்களால் பாதுகாக்கப்படுபவை. அவற்றினை திட்டமிட்டோ, வேண்டுமென்றோ சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் பாரிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு, அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவது அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்களை மீள்புனரமைப்பதற்காகவும் எனில் ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை எதற்காக? தான் செய்த தவறினை ஒப்புக் கொண்டு விட்டார். இனி ஒரு போதும் அவ்வாறு செய்யவும் மாட்டார். இந் நிலையில் இவ்வாறான தண்டனை அதிகபட்சமானது இல்லையா?

    எனில் வாக்குவேட்டைகளுக்காக மட்டும் நம் வீடுகளுக்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளோ, ஊடகவியலாளர்களோ, எழுத்தாளர்களோ, கவிஞர்களோ, அநாதரவான பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்களோ, பெண்ணியவாதிகளோ, வலைப்பதிவர்களோ, தமிழ் இணையத்தளங்களோ யாரும் ஏன் இந்த அபலைப் பெண்ணுக்காகக் குரல் எழுப்பவில்லை? இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறதென நீதி கேட்டு ஏன் ஒரு ஆழமான பதிவு கூட இல்லை? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘தமிழனுக்கு ஒரு இன்னலென்றால் உயிரைக் கொடுப்பேன்’ என வீறு கொண்டு பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த ஏழைத் தமிழச்சியை தண்டனையிலிருந்து மீட்க மறந்துபோனதேன்?

    இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்கள் கூட பண பலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் ‘தவறு’களாகக் கருதப்பட்டு தண்டனைகளிலிருந்து தப்பி விடுகின்றன. ஆனால் ஏழைகள் செய்யும் சிறு தவறுகள் கூட பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த ஏழைப்பெண் அறியாமையால் செய்த தவறுக்கு இவ்வளவு பாரிய தண்டனையெனில், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொலைகாரர்கள், பாலியல்குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரும் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஓரிரு நாட்களில் வெளிவருவது எவ்வாறு?

    சீகிரிய குகையோவியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள ஊழியர்கள், இந்தப் பெண் பத்து எழுத்துக்களைக் கிறுக்கும்வரையில் எங்கே போயிருந்தனர்? அவர்கள் தம் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் பெண் இவ்வாறு கிறுக்கியிருக்கச் சந்தர்ப்பம் வாய்த்திருக்காதே? ஏன் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை ஏதுமில்லை?

    இந்த அபலைப் பெண்ணுக்குரிய இந்தத் தண்டனை அநீதமானது. இரண்டு வருடங்கள் சிறையில் சித்திரவதைகளோடு கழித்துவிட்டு வரப் போகும் உதேனி சின்னத்தம்பி எனும் இளம்பெண்ணின் எதிர்காலம் முழுவதும் இனிமேல் இருளன்றி வேறென்ன?

    இனியும் தாமதமில்லை. தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் நீங்கள் நினைத்தால் இவரின் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவிட்டு இவரைக் காப்பாற்றலாம். இவரை இப்போதே காப்பாற்றப் போகின்றவர் யார்?

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    எஸ். சசிகலா

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரை ஒரு சகாப்தம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழும் நாளில் வாழ்வது வாழ்க்கையல்ல, இறந்தபின்னும் வாழும் வாழ்க்கைதான் சிறந்தது என்றொரு பொன்மொழி உண்டு.  அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்தே நீக்கமற நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்.

    • உதயம்

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்ன் முழுப்பெயர் எம் ஜி ராமச்சந்திரன். 1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தார். தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவர்,பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு. சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால், நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துதுறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களை மனதளவில் பெரியதாக அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

    • மண வாழ்க்கை….

    எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.

    • திரை வாழ்க்கை….

    அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார். எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம்நாடோடி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது .ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

    • அரசியலில்………

    திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோதும், திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள்தங்கள் மனங்கவர்ந்த நாயகரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு,அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார்.    தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை  மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த காரணத்தால், அவர் கட்சி தோல்வியைச் சந்திக்கவே இல்லை. 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

    • பொன்மனச் செம்மல்

    எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றளவும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை யாராலும் மறக்கவே மறுக்கவே முடியாது. எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.அதனாலேயே பொன்மனச் செம்மல் என்று மக்கள் இவரை அன்போடு அழைத்தனர்.

    • மறக்க முடியாத மாமனிதர்

    எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதும்கூட, ”அறியாமல் செய்யும் இவர் பாவங்கள் மன்னிக்கக்கடவது….” என்று பரமபிதா சொன்னதாக பைபிள் சொல்கிறது. அதற்கு இணையாக, இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

    1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி இராமாவரம் இல்லத்துக்குள்ளே புகுந்த எம்.ஆர். இராதா, வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம் பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டு போய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

    அந்தத்தன்மைதான் எம்ஜிஆரின் உயரிய குணங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதுவே இன்றளவும் மக்கள் மனதில் அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த இக்கட்டான நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வவல்லமையும், செல்வாக்கும் படைத்த செம்மல் காத்து நிற்கிறார்.

    தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் போலத்தான் வாழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

    • கேட்டவர்க்கு கேட்டபடி…

    பள்ளிக் குழந்தைகள் பசியோடு பயிலக்கூடாது என்பதற்காக, மதிய உணவுத்திட்டத்தை வழி வகுத்தவர் மக்கள் திலகம்.

    பசி என்று ஒருவன் வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார். இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கேட்கிறார்.

    1967-ல் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பின், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகையில்,கலைஞர் வள்ளலைச் சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். அதைக் கேட்ட மக்கள் திலகம், ஒருநிமிடம் யோசித்தார். அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

    அதற்குப்பிறகு, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து,மதியச் சாப்பாட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு  இன் முகத்துடன் இலட்சிய நடிகரின் தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை எடுத்து வந்து வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்….என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

    அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

    அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

    உடனே, “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

    “சரி நீங்க சாப்பிடுங்க..” ஒப்புதல் அளிக்கிறார் இலட்சிய நடிகர். அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார்.

    வள்ளல் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் வானத்தையும் வசப்படுததும் வலிமை பெற்றவர் என்பதும், நினைத்ததை முடித்துக் காட்டும் வல்லமை மிக்கவர் என்றும், நம்பி வந்தவர்களுக்காக நட்புக்காகத் தன்னையே இழக்கத் துணிகிற குணமும் தெளிவாகத் தெரிகிறது. அதுவே அவரை மனதில் வாழும் மனிதராகவும் வைத்திருக்கிறது.

    • வாடிய பயிரைக் கண்ட வள்ளல்

    1972-ல் வள்ளல் துவங்கிய கட்சி, 1977-ல் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அசுர பலம் கொண்டு வளர்ந்த நேரமது. வள்ளல் தமிழகம் முழுவதும் சுற்றி வலம் வருகிறார். அப்பொழுது ஏரி-குளங்களில் வற்றி, வாடிய பயிர்களும், வாடிய முகங்களும் மட்டுமே வள்ளலின் பார்வையில் படுகின்றன.

    கங்கை காவிரித் திடமெல்லாம் சட்டச் சிகலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் தன்னிடம் இல்லாத பட்சத்திலும், தன்னால் ஆனதைச்செய்ய முடிவெடுக்கிறார் வள்ளல். உடனே கர்நாடகப்பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷணன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,மறுநாள் மதியம் அவர் வீட்டிற்குச்சாப்பிட வருவதை தெரிவிக்கிறார்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் அவர்கள், இதற்கு முன்பு பலமுறை வள்ளலை விருந்துக்கு அழைத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாக வருகிறேன்’ என்று மழுப்பி வந்த வள்ளல், இன்று வலிய போன் செய்து வருகிறேன் என்று சொன்னதும், அமைச்சருக்கும், அவரது தாயாருக்கம் ஆனந்தம் தாளவில்லை! அமைச்சரின் தாயார் வள்ளலின் தீவிர ரசிகையும் கூட!

    மறுநாள் மதியம் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து சாப்பாட்டு நேரத்திற்குச் சரியாக வந்த வள்ளலை, அமைச்சரின் தாயார் அக மகிழ்வுடன் சாப்பிட அழைக்கிறார். அவரே விழுந்து விழுந்து உபசரிக்கிறார்.

    வந்த நோக்கத்தை அமைச்சருக்குத் தெரிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வள்ளல், இரண்டுமூன்று வாய் சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே விக்க  ஆரம்பிக்கிறார். வள்ளலின் தொடர் விக்கல் சத்தம் கேட்டு,அடுக்களையில் இருந்தவாறே, “ஏம்பா! பிள்ளை சாப்பிட முடியாம விக்கிக்கிட்டு இருக்குது. பக்கத்துல இருக்கிற நீ பார்த்துக்கிட்டு இருக்கியே? தண்ணிய எடுத்துத் தரக்கூடாதா?” என் கடிந்து கொள்கிறார்.

    உடனே வள்ளல், “எங்கே உங்க பிள்ளை தண்ணி தர்றாரு?” என்று சூசகமாய்ச்சொல்ல அதற்கு அமைச்சரின்தாயார், உனக்கா என் பிள்ளை தண்ணி தரமாட்டேங்குறான்…” என்று யதார்த்தமாகய் சொல்லிக் கொண்டே தண்ணீர் சொம்பை நீட்டுகிறார்.

    அமைச்சரின் தாயாரிடமிருந்து தண்ணீர் சொம்பை வாங்கிய வள்ளல், “அம்மா நீங்க எனக்குச்சாப்பிட சோறும், குடிக்கத் தண்ணீரும் தாராளமாக கொடுக்கிறீங்க..! ஆனா தமிழ் நாட்டுல சாப்பிட சோறே கிடைக்காத அளவுக்கு ஜனங்க தண்ணியில்லாமத்தவிக்கிறாங்க. பயிர் பச்சையெல்லாம் வாடிக் கிடக்குது…” என்று தான் வந்த நோக்கத்தைக் கோரிக்கையாக அமைச்சரின் தாயார் மூலம் அமைச்சரின் பார்வைக்கு நேரடியாகத் தெரிவிக்கிறார் வள்ளல்.

    புரிந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர், நட்பு நாடி வந்து நாசுக்காகத் தன்நாட்டு மக்கள் பிரச்சினையை முன் வைத்த வள்ளலைக் கட்டித் தழுவிக்கொள்கிறார். வள்ளல் பெங்களூரில் இருந்து சென்னை வந்து சேருவதற்குள் கர்நாடகத் தண்ணீர் தமிழகம் வந்து சேர்கிறது.இப்படி சாப்பாட்டு வேளையில்கூட சரித்திரம் படைத்தவர் வள்ளல் ஒருவர் மட்டும்தானே!

    • பெற்றால்தான் பிள்ளையா?

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ‘முதலாளி’ என்று அழைத்த சிலரில் சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலு மணியும் ஒருவர். அவர் எம்.ஜி.ஆரைத் தன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டும் நினைக்காமல், தன் மனதில் வைத்து தன் குடும்ப உறுப்பினராகவே பாவித்து வந்தார். தன் வீட்டில் எந்த ஒரு விசேஷம் நடத்த நினைத்தாலும் எம்.ஜி.ஆரைக் கலந்தாலோசிந்துத்தான் முடிவெடுப்பார்.

    ஒரு நாள் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் வந்தார் வேலுமணி.

    “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?”

    “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….”

    “சொல்லுங்க!”

    “பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

    “அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

    “இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழை! அது மட்டும்மல்லாம, அம்மா-அப்பா இல்லாத அநாதை! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குது அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..”.

    என்ன முதலாளி ஸ்டேட்டஸ்? இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”

    மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார். வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள்.

    அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லியவர், காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோம் சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்றார் பொன்மனச்செம்மல்.  அவரின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

    “கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்று மனம் உருகி மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

    திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. காரில் வரும் பொழுதுதான், நின்று போகவிருந்த தனதுதிருமணம், மக்கள் திலகத்தாலதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற விவரம் தோழிகள் மூலம் மணப்பெண் சாந்திக்குச்சொல்லப்படுகிறது. அவ்வளவுதான், மணமேடைக்குச்செல்ல வேண்டிய மணப்பெண் சாந்தி, காரைவிட்டு இறங்கியவுடன் பொன்மனச் செம்மலை நோக்கி ஓடி வருகிறார். அதுவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரைத் தனக்கு அப்பாவா பார்க்கிறோமே என்கிற பரவசத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

    அந்த குணம்தான் எம்ஜிஆரை மக்களின் மனதில் அணையா விளக்காக வைத்திருக்கிறது.

    • மனங்களில் வாழ்கிறார்

    உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

    தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

    இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 47

    சு. கோதண்டராமன்.

     

    சிரத்தை

    Sambrani Powder2

    பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது.

    சிரத்தை என்பது என்ன? இது பல அம்சங்கள் அடங்கியது.

    1. ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கம் என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    2. அதை எப்படிச் செய்வது என்று அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    3. யாரிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அவரை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவரிடத்தில் உள்ள நம்பிக்கை கடைசி வரை நிலையாக இருக்க வேண்டும். பாதி வேலையில் இருக்கும்போது நாம் செல்லும் பாதை சரியானது தானா என்ற சந்தேகம் வர இடம் கொடுக்கக் கூடாது.

    (சிரத்தையின் முக்கிய பகுதி இந்த நம்பிக்கை என்பதால் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் சொல்லப்படுகிறது. சிரத்தை என்பது விடாத நம்பிக்கை. நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார் பாரதி. ஆனால் நம்பிக்கை தவிர வேறு சில அம்சங்களும் கொண்டது சிரத்தை.)

    4. அவர் சொன்னபடி, இலக்கை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும்.

    5. அதற்கு மாறான செயல் எதுவும் செய்யக் கூடாது.

    6. இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால் மனம் தளராது தொடர்ந்து முயல வேண்டும்.

    சிரத்தையோடு படிக்கும் மாணவன் தன் இலக்கு 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது என்பதை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்கிறான். எதை எதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சொன்னபடி திட்டமிடுகிறான். அவர் மேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்ன சொல் தவறாது படிக்கிறான். எல்லா முயற்சிகளையும் செய்கிறான். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறான். கவனத்தைச் சிதறடிக்கக் கூடிய வேலைகளைப் புறக்கணிக்கிறான். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறான். அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளால் மனம் தளராமல் முழு கவனத்துடன் படிக்கிறான்.

    இத்தனையையும் மனதில் கொண்டு ஒரு செயலைச் செய்தால் அது சிரத்தையுடன் செய்யப்பட்டதாகிறது. சிரத்தையுடன் செய்யப்பட்ட செயல்கள் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் அதில் ஏற்பட்ட படிப்பினை அடுத்த முறை வெற்றி பெற நிச்சயம் உதவும். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் காரியம் பலன்  தராது. முயற்சி வீணாகும். மனதுக்கும் உடலுக்கும் துன்பம் தரும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிரத்தை பலன் தரும். சிரத்தை இல்லாதவர் வாழ்வு சீரழியும்.

    ரிக் வேதத்தில் 10வது மண்டலம் 151வது சூக்தம் ச்ரத்தா சூக்தம் எனப்படுகிறது. சிரத்தை என்னும் பண்பு இதில் போற்றப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட கருத்துகளைப் பார்ப்போம்.

    அக்னியை மூட்டுவதும் ஆகுதி அளிப்பதும் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை சிரத்தையோடு கொடுத்தால்தான் பலன் கிடைக்கும். தேவர்களும் தங்களை விட வலிமை வாய்ந்தவர்கள் மீது சிரத்தை கொண்டிருக்கிறார்கள். சிரத்தை  செல்வம் தரும்.

    இப்படிப்பட்ட சிரத்தையை அடைவது எப்படி? அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தா தேவியைத் தியானித்தால்தான் சிரத்தை வளரும் என்கிறது வேதம். அதாவது சிறு செயல்களைச் சிரத்தையுடன் செய்ய முயன்றால் அதுவே பெரும் செயல்களிலும் சிரத்தையை வளர்க்கும். இதைச் சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.

    சடங்குகள்:

    சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன. எப்படி என்று பார்ப்போம்.

    சந்தியா வந்தனம் முதலாக எத்தனையோ சடங்குகளை நாம் அனுசரிக்கிறோம். ஒவ்வொன்றிலும் பல மந்திரங்கள் உள்ளன. பல செயல்கள் அடங்கி உள்ளன. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு செயலோடு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். அவற்றுடன் மூச்சும் இணைய வேண்டும்.

    துவக்கத்தில் இதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நம் மனதுக்குள் நாமே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். அதுதான் சங்கல்பம் எனப்படுகிறது.

    நாமாகவே விரும்பி நம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது.

    சிராத்தம் என்பதற்குச் சிரத்தையுடன் செய்யப்படுவது என்பது பொருள். எல்லாச் சடங்குகளும் சிரத்தையாகத்தான் செய்யப்படவேண்டும். ஆனால் இறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் செய்யப்படும் சடங்கு மட்டும் சிராத்தம் எனப்படுவது ஏன் என்றால் இதில் கர்த்தா மட்டும் அல்லாது அவனது குடும்பத்தவரும் செய்து வைக்கும் புரோகிதரும் மற்றவர்களும் கூட சிரத்தையை அனுசரிக்க வேண்டும். இன்ன மாதிரித் தூய்மை செய்து கொள்ள வேண்டும், இன்னின்ன பொருள்களைப் பயன்படுத்தலாம், இன்னின்ன பயன்படுத்தக் கூடாது, இன்ன மாதிரி உடை அணிய வேண்டும், இலையின் நீளம் இவ்வளவு இருக்க வேண்டும், இன்னின்ன திசைகளில் உட்கார வேண்டும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுப்பாடுகள் இதில் உள்ளன. இது பல பேருடைய சிரத்தைக்கும் ஒரு சோதனைக் களம்.

    ஜப்பானியர் டீ குடிப்பதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதில் செய்யப்படும் முயற்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் பல்வேறு சடங்குகளும் அது போன்ற மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் தாம். எல்லா வைதீகச் சடங்குகளிலும் ஏதோ சில வேத மந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொருளைப் பார்த்தால் சடங்குக்கும்  சொல்லப்படும் மந்திரத்தின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இராது.

    உதாரணமாக, தர்ப்பண மந்திரத்தில் வரும் மதுவாதா ருதாயதே என்ற மந்திரம் “என் கொள்ளுப் பாட்டனாரே, திருப்தி அடைவீர்களாக” என்று பொருள் தருவது அல்ல. இது தர்மத்தை அனுசரிக்கிறவனுக்கு உலகமே இனிமையாக உள்ளது என்பதைக் கூறுவது.

    சிராத்தத்தின் போது இலை போடப்படும் இடத்தைத் தர்ப்பையால் கூட்டும்போது சொல்லப்படும் மந்திரம், “இங்கிருந்து போய்விடுங்கள், இந்த இடம், இறந்து போன இந்த மனிதனுக்காகப் பித்ருக்கள் ஒதுக்கியது, யமன் இதை ஒளியாலும் நீராலும் அலங்கரித்துள்ளார்” என்பது.

    தெய்வத்துக்குச் சாம்பிராணி போடும் போது சொல்லும் தூரஸி தூர தூர்வந்தம் என்ற மந்திரம் என் பகைவனை அழி என்று வேண்டுவது. பரிஷேசனத்தில் சொல்லப்படும் மந்திரம் ஸவிதா என் புத்தியைத் தூண்டட்டும் என்ற வேண்டுகோளையும் ருதத்துடன் ஸத்யத்தை சேர்த்து உணர்ந்து வாழ்வோமாக என்ற அறிவுரையையும் கொண்டது.

    எதற்காக, இப்படி சம்பந்தமில்லாத வேத மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்? உண்மை என்னவென்றால், வேத மந்திரங்களின் பொருள் முக்கியமல்ல. அவை சிரத்தையோடு கற்கப்பட்டவை, சிரத்தையோடு பாதுகாக்கப்படுபவை, சிரத்தைப் பயிற்சி பெற்ற வைதிகர்கள் அதை உச்சரித்து வழி நடத்துகிறார்கள் என்பதால் நமக்கும் சிரத்தை ஏற்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் வெவ்வேறு மந்திரங்களை வெவ்வேறு சடங்குகளுடன் இணைத்து வைத்தனர்.

    வேதம் பயிற்றுவிக்கப்படும் முறை பற்றி நாம் நன்கு அறிவோம். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்ததால் தான் வேதம் இன்றளவும் உருமாறாமல் இருக்கிறது. கடுமையான சிரத்தைப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவருவதால் தான் எல்லா வைதிகச் சடங்குகளிலும் புரோகிதர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்கின்றனர்.

    புரோகிதரின் பொறுப்பு மிகப் பெரியது. ஒரு சமுதாயத்தையே வழி நடத்தி முன்னேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிரத்தைக் குறைவு ஏற்பட்டால் சமுதாயம் முழுவதும் பாதிக்கப்படும். தானும் சிரத்தையுடன் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் சிரத்தையை ஏற்படுத்துவது தான் அவர்களது முதல் லட்சியம், பணம் சம்பாதிப்பது அல்ல.

    சமிதா தான மந்திரம், அக்னியே எனக்குச் சிரத்தையைக் கொடு என்று வேண்டுகிறது. சிறு வயதிலிருந்து சந்தியா வந்தனம், சமிதா தானம் முதலானவற்றின் மூலம் சிரத்தைப் பயிற்சி ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுகிறான். பிராமணர்களுக்கு என்று கடவுள் விசேஷமாக அறிவைக் கொடுக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறையில் இந்தச் சிரத்தைப் பயிற்சி தான் அவர்களது அறிவைச் சுடர் விட்டு விளங்கச் செய்கிறது. தந்தை சந்தியா வந்தனத்தைக் கைவிடுவதன் மூலம் தன் சிரத்தைக் குறைவைக் காண்பித்தால் அவரையே முன் மாதிரியாகக் கொண்டு பையனும் கைவிடுகிறான். சமுதாயம் சீரழிய இது காரணமாகிறது.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அடக்கு முறையால் அமல் நடத்தப்படுகின்றன, ஆசிரியர் இல்லாத நேரத்தில் கட்டுப்பாட்டை மீறும் ஆசை ஏற்படுகிறது. வீட்டில் வைதிகச் சடங்குகளின் கட்டுப்பாடுகள் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் அவற்றை மீறும் துணிச்சல் ஏற்படுவதில்லை. அவற்றில் பயம், பக்தி, சிரத்தை மூன்றும் கலந்து இருப்பதால் அவை மாணவர்களின் ஒழுக்கத்தை நல்ல முறையில் வளர்க்கின்றன.

     

     

    படம் உதவி: https://anticastregoneria.wordpress.com/blog/page/22/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(142)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினிய வாசக நெஞ்சங்களே !

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள். மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெறும் வாரத்தில் உங்களை இம்மடலின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன்.

    மார்ச் 8ஆமாம் மார்ச் மாதம் 8ம் திகதி மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எம் வாழ்விலே அனைத்து வடிவங்களிலும் மகளிர் எம்முடன் இணைந்தே நடக்கிறார்கள்.

    அன்னையாக, சகோதரிகளாக, இல்லத்துணைவியராக, இதயம் கவர்ந்த காதலிகளாக, அன்பார்ந்த தோழிகளாக மகளிரின் பாத்திரங்கள் எம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

    இன்றைய நூற்றாண்டிலே உலகின் பல பாகங்களிலும் மகளிரிருக்குரிய உன்னதமான இடம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள்.

    ஆனால் 17ம் நூற்றாண்டிலே வாக்குரிமை அற்றவர்களாக, இரண்டாந்தரப் பிரஜைகளாக அவர்களுக்குரிய … அவர்களுகுரித்தான மதிப்பு கெளரவம் என்பன கொடுக்கப்படாத காலம்.

    அடிமைவாழ்வு, மனிதனை மனிதன் அடிமை கொண்டு அடக்கி வாழப்பண்ணுவது எனும் முறை மிகவும் சாதாரணமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்த காலம்.

    மேலைத்தேசங்களில் குறிப்பாக … இங்கிலாந்து, அமெரிக்க போன்ற நாடுகள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்தி வாழ்ந்த காலம்.

    அத்தகைய காலக்கட்டத்திலே தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த அமெரிக்க ஆப்பிரிக்க நாட்டவர்கள் மத்தியில் பெண்கள் பலரும் இருந்தது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் மத்தியிலிருந்து இத்தகைய கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களே அருகியிருந்த காலத்தில் அடிமை வாழ்விற்கெதிராக குரல் கொடுத்த ஒரு அமெரிக்க வெள்ளை இனப் பெண்மணியை ஏறெடுத்துப் பார்ப்பது இம்மடலின் நோக்கமாகிறது.

    harriet-Beecher-Stowe2“ஹாரியட் பீச்சர் ஸ்டோ” (Harriet Beecher Stowe), யார் இந்த ஹாரியட் ?

    அமெரிக்க வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு அரிய எழுத்தாளர் தான் இந்த ஹரியட்.

    1811 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் (Conneticut) எனும் இடத்திலுள்ள லிச்வீல்ட் (Lichfield) எனும் இடத்தில் ஒரு மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்.

    பெண்கள் பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இவர் பல பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தனது 21வது வயதில் ஒஹையோ எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    1836ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி “கல்வின் எலிஸ் ஸ்டோ” (Calvin Ellis Stowe) என்பவரை மணம் புரிந்தார். இவரது கணவர் ஸ்டோ அடிமைத்தளையை உடைத்தெறியும் பிரச்சாரப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.

    இவரது கணவருடன் இவரும் அப்போதைய அடிமை வாழ்வில் இருந்து ஒளிந்து வாழும் ஆப்பிரிக்கர்கள் வாழும் நிலக்கீழ் ரெயில்பாதையில் இணைந்து கொண்டனர்.

    இத்தைகைய அனுபவங்களின் மூலம் அடிமை வாழ்வின் கொடுமைகளைப் புரிந்து கொண்ட இவருக்கு, 1833ம் ஆண்டு கெண்டகி எனும் இடத்தில் நடந்த அடிமை ஏலத்திற்கு சென்று பெற்ற நேரடி அனுபவம் உள்ளத்தில் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.

    மனிதனை மனிதன் அடிமை கொண்டு ஏலம் போடும் நிகழ்வின் அனர்த்தம் அவருக்கு அடிமை வாழ்வினை உடைக்கும் பிரச்சாரத்திற்கு உத்வேகம் கொடுத்தது.

    1851ம் ஆண்டு இவர் தனது படைப்பான “அங்க்கிள் டாம்ஸ் கேபின்” (Uncle Tom`s Cabin) எனும் தொடர் கட்டுரையின் முதலாவது தொடரை “நேஷனல் எரா” (National Era) எனும் பத்திரிகையில் எழுதினார்.

    1852ம் ஆண்டு இத்தொடர் மிகவும் பிரபலமடைந்ததால் அது ஒரு நூலாக வெளிவந்தது. இந்நூலின் 300,000 பிரதிகள் வெளியான முதல் ஆண்டிலேயே விற்பனையாகியது.

    lincoln_meets_stoweஇவரது இந்நூல் அடிமை வாழ்வின் கொடூரத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தது. மனிதர்களை இயந்திரங்களாக உபயோகித்து தமது வாழ்வின் வசதிகளை பெருக்கிக்கொள்ளும் வெள்ளை முதலாளிகளினதும், நிறவேற்றுமை கொண்ட உள்ளங்களினதும் மனக்கருமையை வெள்ளைத்திரையில் படம் போட்டுக் காட்டியது.

    இவரது இந்நூல் அடிமைத்தளையை உடைக்கப் பாடுபடும் உன்னத மனிதர்களுக்கு ஒரு மாபெரும் உந்து சக்தியைக் கொடுத்தது. அடிமைகளை விடுவிக்க வேண்டும் எனும் கருத்து மேலோங்கியிருந்த அமெரிக்காவின் வடபகுதியில் இவரது நூலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் நிறவேற்றுமை மிகுந்திருந்த அமெரிக்காவின் தென்பகுதியில் இந்நூல் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகியது.

    அடிமைத்தளையை உடைத்தெறிவதற்கான உள்நாட்டு யுத்தம் அமெரிக்காவில் முடிவுற்றதும் 1862ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி ஹாரியட் அவர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தார்கள்.

    20 நாவல்களுடன் பல சமூகப் பிரச்சனைகளை முன்னெடுக்கும் தொடர்களை எழுதிய இந்த சமுதாய வீராங்கனை தனது 85 வது வயதில் காலமானர்.

    இவருக்கு “பெரியதோர் சமுதாயப் புரட்சியை ஆரம்பித்த சிறியதோர் பெண்மணி” எனும் அடைமொழி கொடுக்கப்பட்டது.

    abraham-lincoln-

    இன்றைய இந்தக் காலகட்டத்திலே மகளிர் தினத்தைக் கொண்டாடும் எமக்கு கடந்த கால வரலாற்றில் மகளிர் செய்த அரும்பெரும் சாதனைகள் புரிந்தால் மட்டுமே இன்றைய சாதனை வீராங்கனைகளுக்கு தகுந்த ஆதரவு கொடுக்கலாம்.

    இந்த மகளிர் தினத்தில் இதை நமது மனதில் ஆழமாக நிறுத்திக் கொள்வது அவசியமானது.

     

     

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • காலம்

    மீ.விசுவநாதன்

    images (1)
    மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி
    பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல்
    ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே
    ஆரெனத் தேடு(ம்) அதை

    Share
  • ஐந்து கை ராந்தல்

    வையவன்

    என்னுரை

    தனி மனிதன் X சமூகம்
    லட்சியம் X நடைமுறை
    கருத்துக்கள் X செயல்கள்
    சத்தியம் X கலைப்படைப்பு

    இந்த முரண்பாடுகள் மனித சமூகம் தோன்றியது முதல் தொடா்பவை. ஒரு நூற்றாண்டு மாறும்போது இவற்றின் கூா்மை மாறுபடுகிறது.

    ஒரு பொது நோக்கில் இவை ஒன்றுடன் ஒன்று மோதும் முரண்பாடுகளாகத் தோற்றம் அளிக்கலாம். தீர யோசித்தால் இவை ஒவ்வொன்றும் அதன் எதிர்மறையாகத் தென்படும் மற்றொன்றின் உந்து சக்தியே என்பது தெரிய வரும்.

    ஒன்று மற்றொன்றினை முழுமைக் கூறாக்கும் (Complementary) சங்கிலியே என்று அறியலாம்.

    இந்த முரண்பாடுகள் இன்றி எந்த நாவலையும் எழுதுவது சாத்தியமில்லை. சார்ந்திருக்கும் நிலைகளில், எழுதும் நோக்கத்தில் தான் வேறுபாடு.

    மக்களை அந்த நேரத்தில் மகிழ்விப்பது. இதுவே பல நாவல்களின் நோக்கம். சில நாவல்களுக்கு வெவ்வேறு உத்தேசங்கள்.
    அந்தச் சிலவற்றிலும் கருத்துக்கள் பேசும் வகை ஒன்று. பேசாத வகை ஒன்று. இந்த நாவல் இரண்டாம் வகை.
    இன்று கேலிக்குரியதாகக் கருதப்படும் தேசபக்தி (பயப்படாதீா்கள், இது சுதந்திரப் போராட்ட நாவல் அல்ல) எனக்குள் ஆழ்ந்து வேரோடி விட்டது. ஒரு கையறு நிலைதான் (Helplessness). அந்த களத்தில் விளைந்த கருத்துக்கள் இந்த நாவலில் வெயில் காய்கின்றன.

    எத்தனை வெடிகுண்டுகள் எங்கெங்கே வெடித்தாலும் என்னுள் இருந்து நீங்க மறுக்கிற தேச பக்தி, இந்த நாவலில் சில கருத்துக்களைச் செயல்வடிவமாக்கிய ஒரு மனிதனைச் சிருஷ்த்திருக்கிறது. இதுவே நான் வழங்க விரும்பும் வாக்குமூலம்.

    முதற்பாகம்

    உலகம் எத்தனை பரிணாம கதிகளைக் கண்டிருக்கிறது? யுகத்திற்கு ஒரு தரம் இயற்கையும் எத்தனை ஜீவராசிகளை உற்பத்தி செய்து அவற்றிற்குப் புதிய புதிய வளா்ச்சிகளைக் கொடுத்திருக்கும்?

    முடிவற்ற இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் புதிர் தான் என்ன?

    ஜனன மரணம் என்ற தொடா் நிகழ்ச்சியில், அா்த்தங்களையும் அனுபவங்களையும் தேடுவதுமான – வாழ்க்கை என்ற – இந்த மாயமான வேட்டை எதைக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

    இதன் ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே?

    கன்யாகுமரிக் கடற்கரை.

    சித்ரா பௌர்ணமிக்கு முந்திய தினம். பதினாலாம் பிறை.

    யாருமற்ற அந்த நெடுமணற் பரப்பில், மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு, கால் சட்டையும் அரைக்கைச் சட்டையும் அணிந்தவாறு, எதிரில் அலை மோதுகின்ற சமுத்திரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ரகுநாதன்.

    புதிர்களில் எல்லாம் பெரும் புதிர் போன்ற அந்தச் சமுத்திரம் அவனது சித்த வெளியில் எண்ணிலா அலைகளை எழுப்பி விட்டது.

    வானிலே அமுதகலசம் வைத்தாற் போன்ற நிலவு. மத்தியானமெல்லாம் தகித்த வெயிலின் கொடுமை, ஒரு துா்க் கனவு போல் நீங்கி, விறுவிறுப்போடு காற்று வீசிக் கொண்டிருந்தது.

    ரகுநாதன் மெல்லக் கரையோரமாக நடக்கத் தொடங்கினான்.

    எல்லையற்ற அந்தச் சமுத்திரவெளி, அதில் பொதிந்த மகத்தான அா்த்தங்கள்.

    ஓங்கார கர்ஜனைக்குள்ளே – அந்த ஓசைகளின் கா்ப்பக்கிரகத்தில் கொலு வீற்றிருக்கும் அந்த மஹா சாந்தியையும் நிதானமாகத் தரிசித்துக் கொண்டிருந்தான் ரகுநாதன்.

    மனத்தின் அடிவாரத்தில் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. சந்திர ஒளியின் வெள்ளி ஜரிகைகள், ஆா்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் மேலே கண்ணின் எல்லை வரை சிந்தி இருந்தன.

    ஜலப் பரப்பில் அங்கங்கே சின்னஞ்சிறு தீபங்கள் வைத்தது போல் ஜொலிப்பு…அலைகள்…சீறும் அலைகள்…ஓங்கி எழுந்து விஸ்வரூபம் காட்டும் அலைகள்…

    தணிந்து தலை குனிந்து புதிய மனைவியைப் போல், நாணத்துடன் கரையை முத்தமிடும் அலைகள்… தாயின் அணைப்பை நாடி ஆவேசத்தோடு வருவது போன்ற அலைகள்.

    ரகுநாதன் வானை நிமிர்ந்து பார்த்தான்.

    மேலே நிலவிய நிலவு வெளிச்சம்! குழந்தையின் விளையாட்டைப் புன் சிரிப்போடு பார்ப்பது போல் வானம் சாந்தமாக இருந்தது.

    ஆறடி உயரமுள்ள அந்த ஆஜானுபாகுவான உடல், நிலவெரியும் வானின் கீழ் கடலின் முன்னால் மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அந்தக் காட்சி, மனித குலத்தின் லட்சியம் ஒன்று இயற்கையின் முன்னே ஒரு வெற்றிச் சின்னம் போல் நிற்பது போலிருந்தது.

    ரகுநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் என்பதையும், நண்பா்கள், உல்லாசப் பயணம் என்ற உலக ஞாபகங்களையும் ஒரு கணம் மறந்தான்.

    இரண்டு கடல்கள் ஒரு மகாசமுத்திரத்தின் மடியில் ஐக்கியமாகி நிற்க, தொண்ணூறு கோடி மக்களின் ஜன்ம பூமியான ஒரு தேசமே – அவா்களது நிலைக்களமான ஒரு மாபெரும் தேசமே அந்தச் சங்கமத்தை மௌனமாகச் சந்தித்துக் கொண்டிருப்பது போல் ஓா் நினைவு அவன் நெஞ்சில் மூண்டது.

    அவன் மெல்லக் கண்களை மூடினான்.

    ஒவ்வொரு தரமும் வீசிய காலத்தின் அலைகளால், இந்த தேசத்தின் மீது வந்து குவிந்த மாற்றங்கள், ஒவ்வொரு அலையும் எழுதி விட்டுச் சென்ற நாகரிகச் சின்னங்கள்.

    இதன் உயா்வு தாழ்வு மாண்புகள், சீா்கேடுகள் யாவற்றையும் இதோ ஆா்ப்பரிக்கும் இந்தச் சமுத்திரம்…இதே வானம்….இவை பார்த்துக் கொண்டே இருந்தன என்று எண்ணுவதில் ஓா் இணையற்ற சோகம் நெஞ்சில் மூள்கிறது.
    திடீரென்று விர்…விர்ரென்று விசில் ஊதும் ஓசை கேட்டதும்தான் அந்த மனோ நிலை கலைந்தது. விசிலின் ஒலி நாலா பக்கத்திலும் பரவிக் கேட்டது.

    “தன்னைத் தேடுகிறார்கள்!”

    ரகுநாதன் தனது நினைவுகளிலிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்தான்.

    கால்கள் கடற்கரை மணலில் நெறிய நடப்பது சுகமாக இருந்தது. மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் காந்தி நினைவு மண்டபம்.
    வலது புறமாக கடலின் எதிரே அரங்கம் கட்டியது போன்ற ஒரு கல் மண்டபம். எங்கும் ஆள் சந்தடியே இல்லை. தூரத்தில் கேட்கும் விசிலொலி. அலையோசையில் கரைந்து கனவில் எங்கோ கேட்பது போல் தொனித்தது.

    கையை வீசி வீசி ஆட்டிக்கொண்டே, புரொபஸா் ராமபத்ரன், ஒா்க்ஷாப் போர்மனுடனும், குரூப் கேப்டன் பாலுசாமியுடனும் வந்து கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

    ரகுநாதன் அவா்களை எதிர் கொள்வதற்காக வேகமாகச் சென்றான்.

    “இட் இஸ் வெரி ரெக்லெஸ் மிஸ்டா் ரகுநாதன்!” என்று சூடாக ஆரம்பித்தார் ராமபத்ரன்.

    “ஸாரி சார்….!” என்று அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஆளுக்கொரு பக்கமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

    “நீங்கள்ளாம் கொயந்தைங்களா சார், ஒரு வாட்டி ரெண்டு வாட்டி சொல்லிச் சொல்லி அய்வுறதுக்கு! இம்மா ராத்திரியிலே தன்னந்தனியா இப்படி வந்து நிக்கறீங்களே இல்லே எதினாச்சியும் ஒண்ணு அசந்தா்ப்பமா நடந்துச்சுன்னா ஆா் சார் ஜவாப்பு?” போர்மன்.

    “என்னப்பா ரகு, எல்லாப் பாவியும் நிம்மதியா தூங்கறானுங்க. மோகினிப் பிசாசு மாதிரி இந்த நடு ராத்திரியிலே இங்கே நின்னுட்டு இருக்கறியே, நாங்க அங்கே என்னா அலை அலைஞ்சுகிட்டிருக்கோம் தெரியுமா? போன மனுஷன் என் கிட்டேயாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக் கூடாது?” – பாலுசாமி.

    “மிஸ்டா் ரகுநாதன்; நாங்கள்ளாம் குடும்பஸ்தா்கள். இப்படிப் பொறுப்பில்லாமே நடந்து எந்த விபரீதமாவது ஆயிட்டா என்ன ஆகும்னு யோசிக்க வேண்டாம்” – பாலுசாமி.

    தனது செய்கைக்கு வருந்துவது போல் ரகுநாதனின் பரந்த முகம் சற்று இருண்டது.

    தலை குனிந்தவாறே “ரொம்ப ஸாரி, மன்னிச்சுக்கோங்க!” என்றான்.

    எதையோ உணா்ந்த ராமபத்ரன் சட்டென்று சாந்தமடைந்தார்.

    “நோ… நோ… இட் ஈஸ் நாட் எ கொஸின் ஆஃப் ஃபர்கிவிங்! நீங்களா தெரிஞ்சுக்கிட்டா சரி தான்” என்று அடங்கிய குரலில் சொன்னார்.

    அவரது முகம் சற்று சங்கடப்பட்டது.

    “சரி… சரி! போகலாம் நடங்க சார்” என்று போர்மேன் முனுசாமி சொல்லவும், நால்வரும் கடற்கரையிலிருந்து மாணவா்கள் தங்கியிருந்த சத்திரத்திற்கு நடந்தனா்.

    வழியில் சிறிது நேரம் வரை அந்த நிகழ்ச்சியின் வெப்பம் தணிய, எல்லோரும் மௌனமாக நடந்தார்கள். பாலுசாமி தான் முதலில் ஆரம்பித்தான்.

    “மூன்லைட் ரொம்பப் பிரமாதம் சார்! வழியெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்த அரட்டையையும் கூத்தையும், கடற்கரையிலே வச்சுக்கிட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”

    “எங்கே சார்! அதான் வந்ததுமே ஓஞ்சிப் போயி படுத்துக்கினீங்களே!”

    “ரகு. பரவாயில்லே சார், கடற்கரை நிலவை ரொம்ப அனுபவிச்சிருக்கான். கட்டைப் பிரம்மசாரிகள் கடற்கரை நிலாவை ஒரு வேதனையோட தான் அனுபவிப்பாங்க! ”

    “அது உன் மாதிரி ஆசாமிக்கு, ரகுவுக்கு வேறே ஏதாவது பெரிய ஃபீலிங் உண்டாகியிருக்கும். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டா் ரகு?” பேச்சாகிய சொக்கட்டானை, ரகுவை சமாதானப்படுத்துவதற்காக நகா்த்தினார் ராமபத்ரன்.

    “ஊஹும், அப்படியென்ன பிரமாதமான உணா்ச்சிகள் சார்! கடலும், காத்தும், நிலவும் நல்லா இருந்தது. அதான் அப்படியே நினைவு மறந்து நின்னுட்டேன். நேரம் ஆன ஞாபகமே இல்லை. அதனாலே தான் ஒங்களுக்குத் தொந்தரவு. ”

    “இல்லை மிஸ்டா் ரகு! நீங்க அதை தப்பா ஃபீல் பண்ணவே வேண்டாம். மத்தவங்களை விட ஒங்களை எனக்கு நல்லாத் தெரியும். வழியெல்லாம் கரெக்டா நடந்துட்டு இங்கே இந்த எடத்திலே இப்படி நடந்ததாலே, இந்த எடம் ஒங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன் பரவாயில்லே.”

    “எல்லாம் நிம்மதியாத் தூங்கறானுங்க….நாம்ப நிலாவையும் அனுபவிச்ச பாடில்லை… தூக்கத்திலேயும் சிவராத்திரி. ”
    “அடடா, பாலுசாமி, அதான் பஸ்ஸிலே வழியெல்லாம் துங்கிட்டு வர்றலே. என்னய்யா ஓயாமே பேசிகிட்டு போரடிக்கிறே!”
    “ஒங்களுக்கென்ன சார், நீங்க குடும்பஸ்தர்! எங்களைச் சொல்லுங்கோ?” என்று உஸ்ஸென்று பெருமூச்சு விட்டு ஆயாசப்பட்டுக் கொண்டான் பாலுசாமி. அரட்டைக் கலைஞன் அவன்.

    “யூ ஸ்கௌண்டிரல்” என்று அவன் காதைச் செல்லமாக முறுக்கியவாறே சிரித்தார் ராமபத்ரன்.

    காலேஜ் டூா் என்றால் மாணவா்களோடு அவரைத் தான் சோ்த்து அனுப்பி வைப்பார்கள். நிறையச் சுதந்திரம் கொடுப்பார்.
    எந்த இடத்தில் கட்டி மேய்க்க வேண்டுமோ அங்கே கறாராகவும் இருப்பார்.

    ‘ஊ ஊ’ என்று கத்தினான் பாலுசாமி.

    “இவரைப் போய் குரூப் கேப்டனாகப் போட்டிருக்காங்களே” என்று கையை விரித்துக் கொண்டு அங்கலாய்த்தான் போர்மேன் முனுசாமி.

    ரகுநாதன் புன்னகையுடன் நடந்தான். லாட்ஜ் நெருங்கவே எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்.

    லாட்ஜிற்குள் பெட்ஷீட்டும் ஹோல்டாலுமாக மூலைக்கொருவா், ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருப்பது போல் படுத்திருந்தான்.

    ஒவ்வொருவரும் ஓா் உலகம்; குறும்பு, கிண்டல், சர்ச்சை, உல்லாசம், அபிப்ராயம், ஆசைகள், உள்ள உலகம். ரகுநாதன் பறவைக் கண்ணோட்டம் விட்டான்.

    வாழ்க்கை ஆச்சரியமாக இருந்தது. அற்புதமாக இருந்தது. எத்தனையோ இரவுகளில் தூங்குவதில் அவா்கள் ஆழ்ந்து கிடப்பதை ரகுநாதன் பார்த்ததுண்டு. ஆனால், இப்போது தொலைவில் ஒலி செய்யும் கடலின் குரலும், அந்த சமுத்திர தரிசனத்தால் உயா்ந்து நின்ற நினைவுகளும் சேர, தேசத்தின் தென் கோடியில் அவா்களை ஒன்றாகச் சோ்த்துப் பார்க்கும் போது புதுமையாகவே இருந்தது.

    இவா்கள் ஒவ்வொருவரும் என்ன ஆவார்கள்?

    பொதுவாக அவா்களைப் பற்றி ஏற்கனவே சில அபிப்ராயங்கள் ரகுநாதனுக்கு இருந்தன. மாணவப் பருவத்தின் வேடிக்கை, தன்னிச்சையான போக்கு எல்லாம் தெரிந்தது தான்.

    ஆனால், வீறும் பொலிவும் மிக்கதொரு புதிய எதிர்காலத்தை இந்த தேசத்திற்கு இவா்களே சிருஷ்டிக்கப் போகிறார்கள்.
    அறிந்தோ அறியாமலோ, தடுக்க முடியாத ஒரு பிரளயம் போல் ஒரு தினம் – இன்று வரை கனவிலும் நம்பிக்கையின் ஊமை ஒளியிலும் மட்டுமே நிற்கும் அந்த தினம் வரும் போது!

    இவா்களே அந்தப் புது யுகத்தின் சிற்பிகளாகப் போகிறார்கள் என்று தோன்றியதும் மார்பு விம்மியது.

    அவா்கள் அனைவரின் மீதும் அடக்க முடியாத பாசம் தோன்றியது.

    “எஸ், குட் நைட் மிஸ்டா் ரகுநாதன்!”

    “குட் நைட் சார்!”

    “ஸ்வீட் ட்ரீம்ஸ்!” என்று குறும்புக்காரப் பாலுசாமி குதா்க்கமாகச் சொன்னான்.

    “மறுபடியும் சமுத்திரக் கரைக்குப் போயிடப் போறீங்க!”

    “ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அவன் வாய் தனக்குள் மெல்ல முணுமுணுத்தது. எதிர் காலம், தேச முழுவதும் மாற்றம் பெறும் ஓா் எதிர்காலம். அதைத் தவிர வேறென்ன இனிய கனவுகள் என்று எண்ணியவாறே நரேந்திரனை நெருங்கினான்.

    தூக்கத்தில் நரரேந்திரன் வாய் சிறிது திறந்து விட்டிருந்தது.

    அவனுக்குப் பக்கத்திலிருந்த காலியிடத்தில் தன் படுக்கையை விரித்தான்.

    கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக! (May God Bless You.) என்று கோணல் கோணலாகத் தனது ஆங்கில ஞானமும் தையல் ஞானமும் சொற்பம் என்று அறிவிப்பது போல், அம்மா பின்னிய தலையணை உறை தென்பட்டது.

    அம்மா!

    அவள் எந்த நேரமும் எங்கும் என் பக்கத்திலேயே இருக்கிறாள்.

    அவளை மறந்து விடும் சந்தா்ப்பங்களில் எங்காவது எளிமையான ஆனால், தலை வணங்க வேண்டிய ஞாபகங்களுடன் அவள் தோன்றி விடுகிறாள்.

    அவனது விண்ணுயரப் பறக்கும் நினைவுகளுக்கு இறக்கைகளாக இருக்கிறாள்.

    ஞானம், உணா்ச்சி, உடல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவளே வித்தாக இருந்து அவனுள் விளைந்திருக்கிறாள்.

    ரகுநாதன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

    விடியற்காலையில் சூரியோதயம் பார்ப்பதற்காக ஒரு கோஷ்டி, தூங்கிக் கொண்டிருப்பவா்களைத் தட்டியெழுப்புவதும், கிண்டலாகப் பஜனை பாடுவதும், அமாக்களப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரகுநாதன் விழித்துக் கொண்டான்.

    நரேந்திரன், காலையிலேயே எழுந்து சமுத்திரக் குளியலுக்காக ரகுவுக்கும் தனக்குமாகத் துணிகளையும் சோப்புப் பெட்டியையும் தேடிக் கொண்டிருந்தான்.

    ஒற்றை நாடி உடம்பு, பெரிய உதடுகள், உணா்ச்சி ததும்பும் கண்கள்.

    “அடடே நரேன், என்னப்பா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே?” என்று உடலை முறுக்கியவாறே எழுந்து படுக்கையைக் சுற்றத் தொடங்கினான்.

    “அப்பப்பா, இந்த கலாட்டாவிலே தூங்கினா அது யோக சாதனை தான். சூர்யோதயம் பார்க்கணுமே அது தான்” என்று இழுத்தான் நரேந்திரன்.

    சாதாரணமாக அவன் எழுந்திருப்பதற்கு மணி ஏழரையாகி விடும்.

    “பாத்துக்கோ….பாத்துக்கோ…. நீ சூரியோதயத்தைப் பாத்து எத்தனை வருஷம் ஆச்சோ, ஏதோ கன்யாகுமரி தயவிலே…” என்று இழுத்தான் பக்கத்திலிருந்த நந்தகோபால்.

    “டேய், டேய்! நீ பெரிய இவன். இவன் எழுந்திருக்கிறப்போ பொழுது சாஞ்சு போவுது. இவன் போயி அவனைச் சொல்ல வந்துட்டான்” என்று நந்தகோபால் மூக்கை உடைத்தான் ஸ்ரீதரன்.

    புரொபஸா் ராமபத்ரன், இரண்டு மாணவா்கள் புடை சூழ மௌனமாக ஒவ்வொருத்தரையும் பார்த்து அட்டெண்டன்ஸ் குறித்துக் கொண்டார்.

    “ஹலோ குட்மார்னிங் சார். ராமகிருஷ்ணன் எங்கே சார்? காக்கா ஓட்டப் போயிட்டானா?”

    “யப்பா கிவிக் ஸாட்! வேலையைப் பாருடா” என்றான் உடன் வந்தவா்களில் ஒருவன்.

    “குட் குட்” என்று அவனுடைய “கட்டிங்” கை ஆமோதித்தார் புரொபஸர்.

    “கேரி கூப்பா்…. கேரி கூப்பா்….” என்று பூமிநாதனுடைய இடுகுறிப் பெயரை ஹைக்கோர்ட் பியூனைப் போல ஒருவன் கூப்பிட்டான்.

    “ஹலோ ரகுநாதன்”

    “குட்மார்னிங் சார்!”

    “வாட் எ ஒண்டா். நரேந்திரனா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டான்?”

    “என்ன சார் பண்றது. நாலு வீட்டுக் கல்யாண லவுட் ஸ்பீக்கர் மாதிரி கார்த்தாலேந்து ஒரே கலாட்டா”

    “குட்…. குட்” என்று அவா்களை தாண்டினார் புரொபஸா்.

    “ரகு இந்தப் பசங்களோட சேர்ந்தா சூரியோதயத்தை உருப்படியாகப் பார்க்க முடியாது. ஸோபியா லாரனும் பிரிஜிட்டி பார்டெட்டும் தான் பேசுவானுங்க. பொறப்படு சீக்கிரம்.”

    இளைஞா் பட்டாளம் வெளியே வந்தது ஒரு வழியாக.

    விடியற்காலை நேரத்தின் குளா்ச்சி. வானத்தில் சாம்பல் வெளுப்பு.

    கிழக்கே உதய ஸ்தானத்தைச் சுற்றி விசிறியது போன்ற வெள்ளை ஒளி திசைக்குக் காவிய சோபை தந்தது.

    பல ஜீன்ஸுகளுக்கும் டீ ஷா்ட்டுகளுக்கும் மத்தியில் கதா் ஜிப்பாவும் வேட்டியுமாக வித்தியாசமாகத் தெரிந்தான் ரகுநாதன்.

    அந்த இளைஞா் கூட்டத்தில் தீ நாக்கின் நிறம் போல் பளிச்சென்ற சிவப்பும், அகன்ற தோள்களும், கம்பீரமான உயரமும் முகத்தில் இரண்டு கனல் எரிவது போன்று ஆழ்ந்து ஒளி பொருந்திய கண்களும் தனித்து நின்றன.

    பரந்த நெற்றி, பழங்கால ரோமானிய சிற்பங்களைப் போன்ற முகக்கட்டு.

    அதில் தசை வலிமையின் மிடுக்கிற்குப் பதில் ஆத்ம ஒளி தவழ்ந்தது.

    நோஞ்சானாக இருந்தது, ஏழ்மை இவைகளால் பால்யப் பருவத்தில் ஒரு தாழ்வு பனப்பான்மை அவனுக்கு.

    எல்லாப் பாடங்களிலும் முதல் மார்க் வாங்கும் அவனை வஞ்சந் தீா்த்துக் கொள்ள மற்றப் பிள்ளைகள் சீண்டிச் சீண்டித் துன்புறுத்துவார்கள்.

    உடம்பு இருந்தால்?

    அந்த நாளில் ஏக்கம் மனசைக் கவ்வும். ஒரு பயில்வான் வீட்டுப் பையனுடன் சினேகம் ஏற்பட்டது.

    அவா் பஸ்கி, தண்டால், சிலம்பம் சுற்றுதல், பிடிவேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்.

    பொழுது விடிந்ததும் அவா் வீட்டுக்குத் தான் போவான். அப்படிப் பழகி வளா்த்த உடம்பு.

    காந்தி நினைவு மண்டபத்தை நோக்கி ரகுநாதனும் நரேந்திரனும் பிரிந்து நடந்தனர். சங்கு விற்கும் கடைகளும், இளநீர்க் கடைகளும் ஓரிரண்டு காலையிலேயே திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    இரவில் கேட்ட கடலின் கர்ஜனை மட்டுப்பட்டிருந்தது. விடுமுறைக் காலமானதால் நிறையப் பேர் சூா்ய தரிசனத்திற்காக அந்த விடியற் காலையிலேயே கூடி விட்டனர்.

    வடக்கத்தியக் குடும்பம் ஒன்று காதிலும் கழுத்திலும் நகைகள் தொங்க, நிறையக் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தது.

    காந்தி நினைவு மண்டபத்திற்குள் இருவரும் நுழையும் போதே, மனதில் எல்லா அலைகளும் அடங்கிய அமைதி தோன்றிற்று.

    காந்தியடிகளின் மார்பளவுச் சிலை மட்டும் வைக்கப் பட்டிருக்கும் அந்த விசாலமான கூடம். அங்கு நிலவிய மௌனம்.
    சத்தியத்தின் வெற்றி போன்ற காந்திஜியின் புன்னகை, மனித சிந்தனை அந்த மகத்தான புருஷனுக்கு நினைவுச் சின்னம் எழும்பத் தோ்ந்தெடுத்த இடம்.

    ரகுநாதனின் மனம் பொங்கி, உணா்ச்சிகள் முகத்தில் சுனை போல் பெருகின.

    மண்டபத்தின் மாடிக்குச் சென்றால் வெகு அருகில் கடலைப் பார்க்கலாம்.

    வானில் பீடிகையாக, கிழக்கே வெள்ளைப் பூச்சின் நடுவில் கணப்பு நெருப்பின் தணல் போல் ஜ்வாலை விட்டது.

    மெல்ல மெல்ல அவை பொன்னொளி பெற்றன. நீலமயமான கடல் நீரில் பொற்பாலமிட்டவாறே கதிரவன் மெதுவாகத் தலை நீட்டினான்.

    தகிக்கின்ற நெருப்புக் கோளம் ஒன்று மெதுவே “மோகனமாம் சோதி பொருந்தி முறை தவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாட” பேருண்மை ஒன்று தனக்குகந்த ராஜஸப் பொலிவோடும், ஆக்கினையோடும் எழுவது போல் அவனது உதயகதியில் ஒரு ஞான சன்னதம் வெளிப்பட்டது.

    இரு நண்பா்களும், பேச்சற்று அவனது சன்னிதியில் நின்றனா். உணா்ச்சியலைகள் உள்ளத்தில் பொங்கினாலும் எவ்வித வார்த்தை வெளியீடுகளினாலும் ஈடுகட்ட முடியாத அந்த ஜோதி சொரூபத்தில் தன்வயமிழந்து, அதற்குத் தலை தாழ்வதே உகந்ததாய் இருந்தது.

    கிறுகிறுவென்று வானில் உயா்ந்து எழுந்த பின்னால், சூரியனின் ஆரம்ப கிரணங்கள் கடலை அலங்கரிக்கத் தொடங்கின.
    விவேகானந்தா் பாறை, அலைகள் மோதி நீா்த்தெறிப்பால் மின்னிற்று.

    அப்போது தான் வாய் திறந்தான் ரகுநாதன்.

    “அதோ, அது தான் விவேகானந்தா் பாறை!”

    நரேந்திரன் பாறையைப் பார்த்தான். பாறை கரையை விட்டுப் பல கஜ தள்ளிக் கடலில் இருந்தது. கண்கள் சுடா்விட அந்தப் பாறையையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சொல்ல விரும்பித் திரும்பிய நரேந்திரனை அந்த முகம் பிரமை தட்டச் செய்தது.

    உடம்பில் ஓடும் மின்சார ஓட்டத்தால் கண்கள் கூரிய கத்தி போல் பளபளக்க சிவந்த முகத்தில் சூரிய ஸ்பரிசம் பட்டு அந்த முகமே அற்புத தேஜஸ் பெற்றிருப்பதாக நரேந்திரனுக்குப் பட்டது.

    நரேந்திரன் கடற்கரைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

    கடற்கரையில் ஓா் இளைஞனும் யுவதியும் ஒரு சிறு பெண்ணும் மூன்று பெரியவா்களுமாகப் பாறையை வேடிக்கைப் பார்த்தனா்.

    இளைஞன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருப்பதும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தடுப்பதும் இங்கிருந்து ஊமைக் படத்தில் தெரிவது போல் தென்பட்டன.

    “அங்கே போகலாம் வா!” என்று நரேந்திரனின் கரத்தை இறுகப் பற்றினான் ரகுநாதன். அபூா்வமாக எப்போதோ உணா்ச்சி வசப்படும் போது தான் அப்படி நடந்து கொள்வான்.

    இருவரும் மண்டபத்திலிருந்து இறங்கி வருவதற்குள் அந்த இளைஞன் கடலில் இறங்கி விட்டிருந்தான்.

    “அண்ணா, ரொம்ப தூரம் போக வேண்டாம்” என்று கரையிலிருந்தவாறே கத்தினாள் அந்தப் பெண்.

    “ராஜு ஜாக்கிரதை” என்று கவலை தோய்ந்த குரலில் ஒரு பெரியவா் கூறினார்.

    ஒரு கால் நொண்டியாக இருந்ததால் இரண்டு கரங்களிலும் தாங்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு நின்றிருந்தார்.

    கூடவே ஒற்றை நாடியாக, சிவப்பாக மத்திய வயதான ஓா் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். சம்மா் கிராப்புடன் சற்றுப் பருத்த மனிதன் ஒருவனும் அடா்த்தியான மீசையுடன் ஆஜானுமாகுவான ஒரு மனிதனும் அந்த இளைஞனைக் கவலையோடு பார்த்தனா்.

    ஒரே பார்வையில் மிகவும் செழிப்பான குடும்பம் என்று தெரிந்தது.

    கடற்கரையை நெருங்கியதும் ரகுநாதன் ஜிப்பாவைக் கழற்றத் தொடங்கினான்.

    மார்புத் துணி விலகியதும் தான் அவனது உடம்பின் திண்மையும் நிறமும் பளிச்சென்று தெரிந்தன.

    கரையோரத்தில் நின்ற அந்தப் பெண் யதேச்சையாகத் திரும்பிய போது ரகுநாதனைப் பார்த்தாள். நரேந்திரன் தான் அவளைக் கவனித்தான். அந்தப் பெண்ணும் திரும்பி விட்டாள்.

    அந்தக் குடும்பமே கரையில் இறங்கும் ரகுநாதனையும் கரையில் இருக்கும் அந்த இளைஞனையுமே பார்த்தனா்.

    அந்த இளைஞன் மோதியடிக்கும் அலைகளில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

    ஒரு தரம் அலையால் மோதிப் பின்னுக்குத் தள்ளப்படுவதும் மறுபடி அதன் வேகத்தோடு முன்னுக்குப் போவதுமாக சஞ்சரித்தான்.

    அவன் முன்னேறிச் செல்லச் செல்ல, கரையில் நின்றவர்களின் கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது.

    “அண்ணா திரும்பி விடு… திரும்பி விடு” என்று கைகளை ஆட்டியவாறே தெரிவித்தாள் யுவதி.

    “ராஜு… ராஜு”

    “தம்பி…போதும்… போதும் வா. ”

    அவன் அவா்களைக் கவனிக்கவேயில்லை. விடா முயற்சியோடு முன்னேறிக் கொண்டிருந்தான். அவன் சோர்வுற்றது, கைகளை நிதானமாகத் தூக்கிப் போடுவதிலேயே தெரிந்தது.

    ஒரு பேரலை தனது மாபெரும் படத்தை உயா்த்தியபடியே கிளம்பிய போது அவன் உடல் சற்று எழும்பிற்று. மடிந்து விழுந்த அலை வேகமாகக் கரையை நோக்கிப் பாய்ந்தது. அவன் எங்கே போனான் என்பதே தெரியவில்லை.

    அலைகள்…மீண்டும்…அதன் ஆட்டம்… அவனைக் காணவில்லை.

    “அண்ணா…அண்ணா… ” என்று கத்தினாள் அவள்.

    “ராஜு” என்று பீதியடைந்தவராகக் கூக்குரலிட்டார் பெரியவா்.
    சட்டென்று அவன் தலை தெரிந்தது. நீந்துகிறான்!

    அவா்கள் எச்சரிக்கை நீந்திக் கொண்டிருந்தவன் காதில் விழவில்லை.

    அவன் கைகள் ஒன்று மாற்றி ஒன்று வேகமாக விழுந்தன.

    அதில் ஒரு வேகம். உறுதி.

    கவனித்துக் கொண்டே இருந்த ரகுநாதன் திடீரென்று அந்த நீச்சலில் ஒரு மாற்றம் கண்டான்.

    அலையினால் இழுத்துச் செல்லப்படுவது போலோ, மூழ்கிக் கொண்டிருப்பது போலோ ஒரு தடுமாற்றம்.
    ஒன்று, இரண்டு, மூன்று.

    சட்டென்று ரகுநாதன் மனதில் ராஜு தன்வசமிழந்து விட்டான் என்று உள்ளுணா்வு பளிச்சிட்டது.
    மடமடவென்று ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்தான்.
    ஒரே பாய்ச்சலாக் கடலுக்குள் பாய்ந்தான்.

    “ஏய் ரகு… ரகு” என்று நரேந்திரன் கத்த, நண்பா்கள் கத்த அதற்குள் ரகு வெகு தூரம் போய் விட்டான்.
    கிட்டத்தட்ட ராஜுவை நெருங்கினான்.

    சட்டென்று ஒரு பெரிய அலை. அது அவனை ஒதுக்கி முன்னே தள்ளியது.
    தூரத்திலிருந்து பார்த்தவா்களுக்கு ரகுவும் களைத்து விட்டவன் போல் தெரிந்தது.
    “ரகு…ரகு…” என்று நரேந்திரன் கத்தினான்.

    “ராஜு… ராஜு” என்று கரையில் இருந்த அவன் குடும்பம் கத்தியது.
    அதற்குள் இன்னொரு அலை.

    உயா்ந்து எழுந்த அந்த அலை, ரகுவை ராஜுவுடன் இணைத்து விட்டது.
    சட்டென்று அவனது கைகளை ரகு பிடித்துக் கொண்டான்.
    பிறகு எழுந்தது ஒரு பேரலை.

    அது இருவரையும் ஒரு சேர வாரித் தூக்கி அரைப் பனை மர உயரம் கொண்டு போயிற்று.
    “ரகு…ரகு…” என்று கரையிலிருந்து நண்பா்கள் கூக்குரல்

    “ராஜு…ராஜு” என்று அவா்கள் குடும்பத்தினா் கூக்குரல்.

    சட்டென்று ஏதோ நாடகம் முடிந்த மாதிரி இருவரையும் கரைக்குக் கொண்டு வந்து புரட்டித் தள்ளியது அந்த அலை.
    முதலில் சுதாரித்து எழுந்தவன் ரகு தான்.

    எழுந்தவுடன் அவன் ராஜுவின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.
    சிறிது நேரம் கழிந்தது.

    அதிர்ச்சியும் படபடப்பும் கடலில் இருந்து ஒருவனை மீட்டதற்கான பாராட்டும் பரவசமும் ஒருவாறு அடங்கின.
    பரஸ்பரம் அறிமுகம் நடந்தது.

    “நான் கிருஷ்ணராஜன், எம்.பி.பி.எஸ்ஸுக்கு படிக்கிறேன். ஸ்டான்லி மெடிகல் காலேஜ் ஐந்தாவது வருஷம்!”
    “அடே ஆச்சரியம் தான். நான் ரகுநாதன். கிண்டி என்ஜினியரிங் காலேஜிலே மெக்கானிக்கல் படிக்கிறேன். நாலாவது வருஷம். இது என்னுடைய நண்பன் நரேந்திரன். கல்லூரி சகா, கவிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன், நடிகன், பேச்சாளன், இன்னும் என்னென்ன உண்டோ அவ்வளவும்.”

    “அடேயப்பா! இவா் அப்படித் தான் சார். அதை எல்லாம் நம்பாதீங்க!” என்று அசடு வழியச் சிரித்தான் நரேந்திரன்.
    “வணக்கம்” என்று அதே முத்துச் சுடா் போன்ற புன்னகையுடன் அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான் ராஜு.
    இது ஒரு கள்ளமில்லாக் குழந்தை, மண் என்னும் மாசிடையே தோன்றிய சோதிவானவன் என்று ராஜுவின் முகத்தைப் பார்த்தவாறே எண்ணிற்று நரேந்திரனின் கவியுள்ளம்.

    ராஜு தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தான்.

    அப்போது சுற்றிலும் கூடி இருந்த மாணவா் கூட்டம், முண்டியடித்துக் கொண்டு வரும் ஒருவரை உள்ளே விட்டது.

    தொடரும்.

    Share
  • தலைநிமிர்ந்தென்றும் வாழ்க !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்  

    மண்ணிலே நல்ல வண்ணம்
    வாழ நாம் வேண்டுமாயின்
    கண்ணிலே பெண்ணை வைத்துக்                       indian woman
    காத்திடல் வேண்டும் அன்றோ? 

    உண்டிடும் சோறும் ஆகி
    உணர்வுடன் கலந்து நின்று
    மண்ணிலே எம்மைக் காக்கும்
    மருந்துமே பெண்கள் தானே! 

    சிவனது பக்கம்தன்னில் உமையவள் இல்லாவிட்டால்
    அவனது சக்தியெல்லாம் அசைவிலா நின்றேபோகும்
    எமனது கையிற்பட்ட இன்னுயிர்க் கணவன்தன்னைப்
    புவிதனில் மீட்டுவந்த புனிதமும் பெண்மையன்றோ! 

    பாரதிகண்ட அந்தப் பக்குவம்வந்த பெண்ணை
    நாமெலாம் காணும்போது நமக்கெலாம் பெருமையன்றோ?
    ஊரெலாம் பெண்கள்வாழ்க உலகெலாம் போற்றவாழ்க
    தாரணிமீது பெண்கள் தலைநிமிர்ந் தென்றும்வாழ்க! 

    மங்கலம்தருவார் பெண்கள் மதியுமாயும் இருப்பார்பெண்கள்
    பொங்கிட இன்பம்தந்து பொறுப்புடன் இருப்பார்பெண்கள்
    இங்கிதம்தருவார் பெண்கள் எதையுமே பொறுப்பார்பெண்கள்
    எங்களின் வாழ்விலென்றும் இலட்சுமி பெண்கள்தானே!

     

    Share
  • அவன், அது , ஆத்மா

      (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

                                                           மீ.விசுவநாதன்

    அத்தியாயம் : இரண்டு

    வாழையடி வாழை

    amvi1

    “அவனது” அப்பா வழித் தாத்தா அ.(நந்தனாராயாணன்) விஸ்வநாத ஐயர். அவரது மனைவி முத்துலட்சுமி அம்மாள். “முத்தம்மை” என்றுதான் அந்த கிராமத்தில் எல்லோரும் அழைப்பார்கள். மகாலட்சுமி போல இருப்பாள். மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர். சித்த வைத்தியம் நன்கு தெரியும். கிராமத்தில் எந்த வீட்டில் நிறை மாத கர்ப்பிணி இருந்தாலும் “முத்தம்மை” கைராசியில் நல்ல குழந்தை பிறக்கும். பார்வையில் கனிவும், பழக்கத்தில் அன்பும் நிறைந்தவள் முத்தம்மை. அவளுக்கு பகையே கிடையாது.

    தினமும் அதிகாலையில் தாமிரபரணி நதியில் குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து புடவை மாற்றிக் கொண்டு, துளசிக்கு தண்ணீர் விட்டு, ரேழியில் உள்ள பூஜை விளக்கை ஏற்றி நமஸ்கரிப்பாள். அதற்குப்பின் வீட்டில் உள்ளவர்களுக்கு காப்பி கொடுத்து விட்டு, கையில் ஒரு ஜாடியில் பாலும், ஒரு கிண்ணத்தில் வெத்தலை பாக்கு பழத்துடனும், ஸ்ரீ ஆதிவராகரை தரிசனம் செய்து விட்டுத்தான் மற்ற வேலைகள். வரும் வழியிலேயே ஒரு சுமங்கலிக்கு அந்த வெத்தலை பாக்குப் பழத்தை கொடுத்துவிட்டு, கையில் வைத்திருக்கும் கொஞ்சம் கற்கண்டுத் துண்டுகளை எதிரில் பார்க்கும் குழந்தைகள் கையில் தருவாள். தெருவில் நிற்கும் பசுவையும் . கன்றையும் பிரதக்ஷிணம் செய்து விட்டுத்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பாள். அவன் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று வரும் பொழுது கற்றுக் கொண்ட பண்புகள் அனந்தம். சொல்ல மறந்தேனே….முத்தம்மைக்குக் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்கள். மிஞ்சியது முத்தம்மையைச் சேர்த்து ஐந்து பேர்கள். அந்தில் ஒரு சகோதரனும் உண்டு.

    கூட்டுக் குடும்பம்

    அவனது தாத்தா விஸ்வநாத ஐயர் , முத்துலட்சுமி தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவர் மீனாஷிசுந்தரம். அவரை மூக்காண்டி என்றும் கூப்பிடுவார்கள். முதலில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போனதால் மூன்றாவது குழந்தை பிறந்தால் மூக்குக் குத்து கின்றோம் என்று வேண்டிக்கொண்டதால் மூக்காண்டி என்ற பெயரும் வந்தது. சுந்தரம் என்றே அழைத்து வந்தனர். இரண்டாவது பிள்ளையின் பெயர் கணபதி சுப்பிரமணியன். இளையவர் என்பதால் “சின்னம்பி” என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். இளைய குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக பாசம் காட்டும் பொழுது மூத்த குழந்தைக்குக் கோபம் வருவது இயல்பு தானே. அப்படிதான் ஒருமுறை மூத்த குழந்தை சுந்தரம் தனது தம்பியைத் தர தர வென்று இழுத்துச் சென்று மரபீரோவின் அடியில் திணித்து விட்ட நிகழ்ச்சியைச் சொல்லி அந்த வீட்டு உறவினர்கள் இப்போதும் சிரிப்பதுண்டு.

    விஸ்வநாத ஐயருக்கு இராமலிங்கம் ஐயர், சிவராம கிருஷ்ண ஐயர் என்ற இரண்டு சகோதரர்களும், குப்பம்மாள் , சோமு என்று இரு சகோதரிகளும் இருந்தனர். தம்பி இராமலிங்கத்திற்கு பார்வதி என்ற மனைவியும், அனந்தநாராயணன், குளத்துமணி ( R.H.K ரமணி என்று எண்கணித ஜோதிடப்படி பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார்) இரண்டு மகன்களும், விசாலாக்ஷி, சகுந்தலா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். கடேசித் தம்பி சிவராம கிருஷ்ண ஐயர் சிலோனில் வேலை செய்து வந்தார். அவரை “கிட்ட சித்தப்பா” என்றுதான் அழைப்பார்கள். அவரது மூத்த தாரம் இறந்து போனதால் அவருக்குப் பிறந்த பெண்குழந்தையான பாலாம்பாளை தனது சகோதரர்கள் பொறுப்பிலேயே விட்டு வைத்திருந்தார். அவர்களும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தனர். அழகான அன்பான கூட்டுக் குடும்பம்.

    சில வருடங்கள் சென்று தம்பி சிவராம கிருஷ்ணனுக்கு, அவர்கள் வசித்து வந்த அதே வடக்குத் தெருவில் இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்த நன்கு பழக்கமான குடும்பதில் இருந்து சுப்பலக்ஷ்மி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு இராஜலட்சுமி, சங்கரி என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிலகாலம் சிலோனில் வளர்ந்து கல்லிடைக்குறிசிகுத் திரும்பி வந்தனர்.

    கையும் வாயும் சுத்தம்

    amvi

    அவனது தாத்தா விஸ்வநாத ஐயர், “மானாமதுரை , திருநெல்வேலி” போன்ற ஊர்களில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலில் தினசரி வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அவர் கணக்கில் புலி. கையெழுத்தும் முத்தாக இருக்கும். வாரம் ஒருமுறை அவர் கல்லிடைக் குறிச்சிக்கு வந்து செல்வதுண்டு. சந்திர விலாஸ் ஹோட்டல் மேனேஜர் பெயரும் அ. விஸ்வநாத ஐயர் தான். அவரது மனைவி சங்கரம்மாள், முத்தம்மையின் மூத்த சகோதரியின் மூத்த பெண். அதனால் ஒருவகையில் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அவனது தாத்தாவுக்கு நெருங்கின உறவுதான். உறவு என்பதால் வேலை செய்யும் இடத்தில் அந்தப் பாசத்தை எல்லாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சரக்கு மாஸ்டர் வரவில்லை என்றால் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் விஸ்வநாத ஐயரே சமையலும் செய்யத் தொடங்கி விடுவார் என்று அவனது தாத்தா தனது மேனேஜரை மெச்சுவார். அவருடன் தானும் அந்த ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் எந்த வேலைக்கும் தன்னைத் தயாராக வைத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வார். அவருக்குக் கையும் வாயும் சுத்தம்.

    அந்தச் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அ.விஸ்வனாத ஐயர் தான் கல்லிடைகுறிச்சி “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளிக்கு” நிர்வாகியாகப் பலகாலம் இருந்து அந்தப் பள்ளிக் கூடத்தின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவராக இருந்தவர். “விஸ்வநாதையர் சங்கரம்மாள் அறக்கட்டளை” யை ஏற்படுத்தி எத்தனையோ ஏழை மாணவ, மாணவியர்களுக்கு சாதி, மத பேதம் இல்லாமல் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் எல்லாம் சரியான காலத்தில் தேவையான குழந்தைகளுக்கு வழங்கி வந்தார். இப்போது அரசாங்கம் தருகிறது. முன்காலத்தில் அது மிக அவசியமாக இருந்தது. “விஸ்வநாதையர் சங்கரம்மாள்” டிரஸ்ட் மூலம் கிடைத்த புத்தகத்தைப் படித்துத்தான் இன்று நான் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்று நன்றியோடு சொல்லுகின்ற பழைய மாணவர்கள் பல பேர்களை அவன் பார்த்திருக்கிறான்.

    சில வருடங்கள் சென்று அவனது தாத்தா திருநெல்வேலி சந்திரவிலாஸ் ஹோட்டலில் இருந்து செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலுக்கு மாற்றிக் கொண்டு வந்தார். அங்கு வேலை செய்யும் பணியாளர் களிடமும், சாப்பிட வரும் ரயில்வே ஊழியர்களிடமும் மிகுந்த அன்போடு பழகுவார். ஒரு முறை அவன் அவனது தாத்தாவுடன் செங்கோட்டைக்குச் செல்வதற்காக கல்லிடைகுறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் நுழையும் பொழுதே பிளாட்பாரத்தில் இருந்து வண்டி மெதுவாகப் புறப்பட்டு விட்டது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு தாத்தா ஓடி வருவதைப் பார்த்து “மெதுவா வாங்க தாத்தா சாமி” என்று கடைசிப் பெட்டியில் இருந்த கார்டு(guard) சுந்தரம் பிள்ளை சிகப்புக் கொடியைக் காட்டி வண்டியை நிறுத்தி தன்னுடைய பெட்டியில் ஏற்றிக் கொண்டு சென்றது அவனுக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஒருவரிடம் எப்படி நாம் பழக வேண்டும் என்பதைப் பெரியோர்களின் நடத்தையில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அன்பினால் யாரையும் வெல்ல முடியும்.

    அவனுக்கு ரயில் என்ஜினும், அதில் இருந்து வெளிவரும் புகையும், அதன் ஒருவித நிலக்கரி வாசனையும் மிகவும் பிடிக்கும். அதை அவனுக்குக் கற்றுத் தந்ததே “செங்கோட்டை” ரயில் நிலையம்தான். அவனது தாத்தா அவனை செங்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் ஆரியங்காவுக்கு, ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்துவர ஒருமுறை அழைத்துச் செல்லும் பொழுது, அந்தப் புகை வண்டி ஒரு குகையின் வழியாகச் சென்றது. அப்போது சில நொடிகள் ஒரே இருட்டாக இருக்கும். அவனுக்கு பயம் வரக்கூடாது என்று அவனைத் தன்னோடு சேர்த்துக் கட்டி கொண்டு “இப்ப வந்துரும் பாரு வெளிச்சம்” என்று சொன்னது அவனது காதுகளில் இப்போதும் ஒலிக்கிறது.

    இன்றும் திருநெல்வேலி ரயில்வே நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவுப் பகுதிக்குப் பக்கத்தில் முதல் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு சின்னக் கடையில் “சந்திரவிலாஸ்” சிற்றுண்டி வகைகள் கிடைகின்றது. அங்கு கிடைக்கும் உப்புமா, பூரிக் கிழங்கு , வடை, இட்லி எல்லாமே மிகச் சுவையாக இருக்கும். பூரிக்கிழங்கும், உப்புமாவும் சூப்பராக இருக்கும். ஒரு பொட்டலதின் இன்றைய விலை ரூபாய் இருபது மட்டுமே…. இந்த சந்திரவிலாஸ் சுவையைத் தெரிந்த வாடிக்கையாளர்களான காலையில் இரயில் வண்டி இறங்கிவரும் பயணிகளும், மாலையில் சென்னைக்குச் செல்லும் பயணிகளும் நிச்சயம் இதை ஒருகை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அதன் பெரிய கடை மேம்பாலத்திற்குக் கீழே ஸ்ரீ சாலைக்குமரன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. அந்த அழகான முருகனை தரிசித்து விட்டு அப்படியே சந்திரவிலாஸில் ஒரு காபி யாவது குடித்துவிட்டு வருகிற வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்திரவிலாஸ் ஹோட்டலின் முதலாளி வெங்கடாசலம் ஐயரின் (பேரன்) மகன் மணி ஐயரின் இளைய மகன் சேகர் தான் இன்று நிர்வகிக்கிறார் என்று அவன் அப்பா கூறக் கேட்டிருக்கிறான்.

    அவன் பிறந்தான்

    பெரியவர் பிரும்மஸ்ரீ விஸ்வநாத ஐயரின் மகனாகப் பிறந்த மீனாக்ஷி சுந்தரத்துக்கும், கேரள மாநிலம் திருச்சூர் வெள்ளிநேழியில் பிறந்து வளர்ந்து திருநெல்வேலி ஜில்லாவின் கல்லிடைக்குறிச்சிக்கு வாழ வந்த பிரும்மஸ்ரீ சுப்ரமணிய ஐயர், மரகதம் அம்மாள் தம்பதியரின் இரண்டாவது பெண் இராமலக்ஷ்மிக்கும் பிறந்த சீமந்த புத்திரி ஸ்ரீ பார்வதி என்ற பாலா. அவனுக்கு அக்கா என்று முந்திக் கொண்டாள்.

    அந்தக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து மன்மத வருஷம் ஆனி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு ஒரு மணி ஐம்பத்து நாலு நிமிஷத்தில் , பரணி நக்ஷத்திரத்திரம் கூடிய சுப தினத்தில் (14.07.1955) கல்லிடைக்குறிச்சி, டுண்டி விநாயகர் தெருவில் 38ம் எண் இல்லத்தில் அவன் பிறந்தான்.

    அவன் பிறந்த செய்தியை அவனது அப்பா, செங்கோட்டையில் இருந்த தனது அப்பாவுக்கு (அ. விஸ்வநாத ஐயர்) ஒரு தபால் கடிதம் மூலமாக இப்படித் தெரிவிக்கிறார்:

    ” ஸ்ரீமது அப்பா அவர்களுக்கு குழந்தை மீனாக்ஷி சுந்தரம் அநேக கோடி நமஸ்காரம். இவ்விடம் யாவரும் ஷேமம். அவிடம் தங்களுடைய தேக சௌக்கியத்திற்கு எழுதவும். இப்பவும் இன்று இரவு ஒரு மணி ஐம்பது நாலு நிமிஷத்தில் சௌ. ராமாள் பிரசவித்து பிள்ளைக் குழந்தை பெற்றாள். சுகப்பிரசவம். குழந்தையும் தாயாரும் சௌக்கியம். பரணி நக்ஷத்திரம் , கொடி சுற்றிப் பிறந்திருக்கிறது. வாஞ்சி அம்மாஞ்சி, அத்தான் முதலியவர்களிடம் சொல்லவும். அம்மா எல்லாவரும் பார்த்து விட்டு வந்தார்கள். குழந்தை நன்றாக இருக்கிறது. சௌகரியப்பட்டால் குழந்தையைப் பார்த்து விட்டுப் போகவும். வேணும் சுபம். லக்ஷ்மீபதி சகாயம்.

    பி.கு. அப்பா வரும்பொழுது முடிந்தால் ஒரு சக்கைப் பழம் வாங்கி வரவும்.

    yours affectionately,
    V. Meenakshisundaram 15 .07.1955

    புண்ணியவாஜனத்தன்று வேத மந்திரங்கள் முழங்க அவனுடைய தகப்பனார் தன்னுடைய மடியில் அவனை வைத்துக் கொண்டு, அவனது வலது காதில்,

    “விஸ்வநாதன், விஸ்வநாதன் ,விஸ்வநாதன்,” என்று அவனது தாத்தாவின் பெயரை நாமகரணம் செய்தார்…

    பெயரைச் சொல்லிக் கூப்பிடக் “கண்ணன்” என்று வைத்தார்கள்.

    “அவனை” இறைவன் படைத்தது தமிழ் செயுமாறோ…அவன் அது ஒன்றும் அறியான் பராபரமே…..

    (21.01.2015) அவன் அடுத்த வாரம் வருவான் ……….

    படங்களுக்கு நன்றி ; அன்னபூரணி

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -இ. சாந்தகலா, மலேசியா

    பாட்டோடு அமர்ந்தது  வண்டு
    வண்ண  மலர்   மேலே   அதையும் 
    சேர்த்து  சுமந்தது   தண்டு!

    அவசரக்  கடன்  வட்டி
    உழைத்து  ஓடாக  தேய்ந்தும் அவன்
    இன்னும்  முடிக்கல  கட்டி!

    வெட்டிச்   சாய்ந்தது  மரம்
    கட்டிய  கூட்டில்  இருந்து  விழுந்த
    முட்டை உடன்  மரணம்!

    மடிப்புக்  கலையாத  சட்டை
    பையில்  அழகிய   புகைப்படம்
    புரோக்கர்  நெற்றியிலோ  பட்டை!

    விளையாடிய அந்த  மழலை
    கணக்குப்  படிக்க  தன் தாயிடம்
    வாங்கி எடுத்தாள்  விரலை!

    ஏழைக்கு நிலா விளக்கு
    அமாவாசை  அன்று  இருள் வந்தால்
    போட முடியாது வழக்கு!

    மனிதன் அழித்தான் காட்டை
    நிரை போட்டு வளர்த்து விட்டான்
    அடுக்கு மாடி  வீட்டை!

     

    Share
  • பாலும் பழமும் கைகளில் ஏந்தி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    Paalum_Pazhamum1

     

     

    1961ல் வெளிவந்த திரைப்படம் பாலும் பழமும். நடிகர் திலகமும் கன்னடத்துப்பைங்கிளி என்றழைக்கப்படும் சரோஜா தேவியும் போட்டி போட்டு நடித்திருக்கும் அற்புதக் காவியம்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் அனைத்துப்பாடல்களும் அமரத்துவம் பெற்றவை! கவிஞரிடம் வார்த்தைகள் இப்படி வரிசையாய் வந்து காத்திருக்கும் என்று பலரும் பலமுறை சொல்கிறார்களே… அதற்கான சத்திய சாட்சியான பாடல்கள்!

    இன்றைக்குக் கூட இணையதளத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தைக் காணும் பேறு பெற்றேன்! ஆம்.. கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதிய தருணங்களைப் பற்றியெல்லாம் சுவைபட எடுத்துரைத்த காட்சியில் மெய்மறந்துபோனேன்!

    Paalum_Pazhamumகதையை முழுதாய் கேட்கும் பழக்கமில்லாமல்… எந்த இடத்தில் பாடல் இடம்பெற வேண்டுமோ அந்தக் காட்சியமைப்பை … அவ்விடத்துக் கதையை மட்டும் கேட்பாராம்! ம்… சரி… என்ன டியூன் போட்டிருக்கிங்க என்று இசையமைப்பாளர் பக்கம் திரும்புவாராம்! அடுத்த சில நொடிகளில் பாடல்… (ஏதோ முன்பே எழுதிவைத்ததை எடுத்துத் தருவதுபோல்) வந்து விழுமாம்! இதையும் தாண்டி இன்னும் பல படங்களில் கவிஞரே… ஒரு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் வேண்டும்… எந்த இடங்களில் என்பதை நீங்களே முடிவு செய்து எழுதித்தாருங்கள் என்கிற வகையினரும் உண்டாம்! கேட்க கேட்க ஆனந்தம் மேலிட்டது! ஒரு சூரியன்… ஒரு சந்திரன்… ஒரு கண்ணதாசன் என்றே எனக்குப் பட்டது!

    இதோ இந்தப் பாடல்.. படத்தின் பெயரைத் தாங்கி.. அன்பின் பூரணமாய் விளங்கிய மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார்! அழகுநிலாவை மடியில் எடுத்து ஆனந்தத்தேன் ஊட்டும் கதாநாயகன் தன் பொறுமையால், பண்பட்ட நடிப்பால், அமைதியாய்… உள்ளம்உருகவைக்கும் உன்னத ஆற்றலால் உயிரூட்டமிக்க பாடல் தருகிறார்!

    பாடல்… அது கதையோடு இணைந்து நடந்து வருகிறது! வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயல்பானவையாக… சராசரி மனிதன் உச்சரிக்கும் எளிமையானவையாக அமைவதுதான் கண்ணதாசன் பாடலின் தனிச்சிறப்பு! இப்பாடலை இசையமைத்து எழுத வைத்தார்களா? அல்லது எழுதிவிட்டு இசையமைத்தார்களா என்று உறுதியாய் சொல்லமுடியாத அளவு பாடலும் இசையும் இணைந்து காட்சிதருகின்றன!

    கணவன் – மனைவி ஒருவரையொருவர் எப்படித் தாங்க வேண்டும் என்கிற இலக்கணம்காட்டும் திரைப்படம்! குறிப்பாக உடல்நலம் குன்றிடும்போது … காட்டவேண்டிய அக்கறை, பரிவு, பாசம், கருணை, இவைகளை எள்ளளவும் குறையின்றி இருவருமே நடிப்பில் பரிணமித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்!

    உச்சமாய் கவிஞர் தொட்டுக்காட்டும் வரிகளைப் பாருங்கள்… ஈன்ற தாயை நான் கண்டதில்லை… எனது தெய்வம் வேறெங்குமில்லை… உயிரைக்கொடுத்தும் உனை நான் காப்பேன்… உதயநிலவே கண்துயில்வாயே…

    இல்லறவாழ்வில் இதயவீணை மனைவிதான் என்பதை நிரூபணம் செய்துவைக்கிற பாடலிது! இதயம் முழுவதும் அன்பில் ஆட்சிநடத்திடும் அன்புத் துணைவியை எண்ணி உருகிடும் கணவன் உச்சரிக்கும் அத்தனையும் அன்புமலர்களே!

    டிஎம்.செளந்திரராஜன் தனக்கே உரித்தான பாவணைகளுடன் பாடிய பாடலிது! அச்சரம் பிசகாத உச்சரிப்பிற்கு அவரைவிட இங்கே வேறு யார்? இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்களின் வெற்றிப்படைப்புகளில் பாலும் பழமும் பவித்ரமானது!

    பாலும் பழமும் கைகளில் ஏந்தி
    பவழ வாயில் புன்னகை சிந்தி
    கோல மயில் போல் நீ வருவயே
    கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

    பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
    பேசிப் பழகும் மொழி மறந்தாயே
    அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
    அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

    உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
    உறங்க வைத்தே விழித்திருப்பாயே
    கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
    காதற் கொடியே கண் மலர்வாயே

    ஈன்ற தாயை நான் கண்டதில்லை
    எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
    உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
    உதய நிலவே கண் மலர்வாயே

    (பாலும்)

    ____________________________________________________
    படம்: பாலும் பழமும் (1961)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி எம் சௌந்தரராஜன்

    காணொளி: https://www.youtube.com/watch?v=KBRKgeC_qZU

    http://youtu.be/KBRKgeC_qZU

    Share
  • இமெயில் காதல் …

    –ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    Love-Emailசுமதியும், சுரேஷும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரி. அவர்களின் சந்திப்பே பஸ்சில்தான்.

    தினம் இருவரும் இமெயில் மூலமே தொடர்பு கொண்டு அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வர். நாளடைவில் இமெயில் நட்பு காதலில் முடிந்தது.

    சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில் பணியில் சேர்ந்தான். சுமதியின் சம்மதம் பெற அன்புடன் அவன் அனுப்பிய வார்த்தைகள்.

    Ennodu-Mattum Anbudan Iniya Life-ல் இணைவாயா !

    Share
  • அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4

     

    Russia and American treaties

    Gorbachev and Reagan

     

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?

    ++++++++++++++

     

     

    அணு ஆயுதத் தடுப்பு முயற்சிகளில் அகில நாட்டுச் சூழமைவில்  எவ்விதப் பலவீனமும் அனுமதிக்கப் பட வில்லை.   அந்தத் தடுப்புக் காலம்  இன்னும் முற்றுப் பெறவு மில்லை.   அச்சம் உண்டாக்கும் இந்த உலகில் அணு ஆயுதங்கள் யாவும் அபாயகர மானவையே !  அதே சமயத்தில் பிரான்ஸ் அவை தரும் பாதுகாப்பையும் இழக்க விரும்ப வில்லை.  நம்மை நேரிடை யாகவோ, மறை முகமாகவோ பாதிக்கக் கூடிய, பிரான்சின் எதிர்காலப் பாதுகாப்பு நிலைமையை நாம் தவிர்த்திடக் கூடாது.

    பிரான்காய் ஹொலாண்டே [Francois Hollande, French President]

    அணு ஆயுதங்கள் உலகைப் பாதுகாப்புக் களங்களாய் மாற்றாது பயங்கர தளமாய் ஆக்கிக் கொண்டு வருகின்றன.   பிரான்ஸ் அரசாங்கத்தின் அணு ஆயுதத் தகர்ப்புத் தளர்ச்சியை நாங்கள் வன்மையாய்க் கண்டிக்கிறோம்.  ஜனாதிபதியின் பேச்சு அகில நாட்டு மனத் துடிப்பு களைக் [Tension] குறைக்காது,  உலக அமைதிக்கு முரணான நிலைமையை உண்டாக்குகிறது.

    ஐகான், பிரான்ஸ் [ICAN – International Campaign to Abolish Nuclear Weapons]

     

     

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடு வதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

     

     

    அணு ஆயுதத் தடுப்பு பற்றி பிரெஞ்ச் ஜனாதிபதியின் அறிவிப்பு:

    2015 பிப்ரவரி 19 இல் பிரெஞ்ச் ஜனாதிபதி செய்த அறிவிப்பில், உலகம் பயங்கரத் தளமாய் ஆகி விட்ட தென்றும்,  அதனால் பிரான்ஸ் பாதுகாப்பைத் தொடர்ந்து நிலைப் படுத்த அணு ஆயுதக் காப்பு முறை முக்கியம் என்றும் கூறினார்.   உடனே அதை எதிர்த்து மட்டம் தட்ட,  ஐகான் [ICAN – International Campaign to Abolish Nuclear Weapons] பிரான்ஸ் கிளை எதிர்ப்பாளர் மறுப்புரை ஒன்றை வெளியிட்டார்.   “அணு ஆயுதங்கள் உலகைப் பாதுகாப்புக் களங்களாய் மாற்றாது பயங்கரத் தளமாய் ஆக்கி விட்டன.   பிரான்ஸ் அரசாங்கத்தின் அணு ஆயுதத் தடுப்புத் தளர்ச்சியை  நாங்கள் வன்மையாய் கண்டிக்கிறோம்.  ஜனாதிபதியின் பேச்சு அகில நாட்டு மனத் துடிப்புகளைக் [Tension] குறைக்காது,  உலக அமைதிக்கு முரணான நிலைமையை உண்டாக்குகிறது,”  என்று குறிப்பிட்டார்.   2009 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா உலகில் அணு ஆயுதங்களைக் குறைத்த பிறகு  முற்றிலும் நீக்கப் போவதாய் வாக்குறுதி அளித்துத் தளர்ச்சியுற்றதை, பிரெஞ்ச் ஜனாதிபதியின்  2015 பிப்ரவரி அறிவிப்பு மேலும் பலவீனமாக்கி யுள்ளது.

    ரஷ்ய-அமெரிக்கா ஊமைப் போர் [Cold War] கால உச்சத்திலிருந்து [70,000 – 80,000], அணுப்போர் ஆயுதங்களின் எண்ணிக்கைகள்  குறைந்துள்ளன !  தற்போது [2015 பிப்ரவரி] இன்னும் நீக்கப் படாமல் சுமார் 16,300 அணுப்போர் ஆயுதங்கள் உள்ளன.  அவற்றுள் 4000 இயக்கத் தகுநிலை ஏற்பாட்டில் இருக்கின்றன.  மற்றும் 1800 குறுகிய ஆணைத் தருணத்தில் ஏவிடத் தயாராக உச்ச எச்சரிக்கை []High Alert on Short Notice] நிலையிலும் உள்ளன.

     

     

    தற்போது உறுதி செய்யப் பட்ட முறையில் ஒன்பது உலக நாடுகளில் அணுப்போர் ஆயுதங்கள் இருப்பு தெளிவாகியுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன், சைனா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா ஆகியவை.  பிரான்சிடம் சுமார் 300 அணுப்போர் ஆயுதங்கள்,  16 அடிக்கடல் ஏவு  கணை அணுப்போர் ஆயுதக் கப்பல்கள் [Submarines], 54 வான் – தரை இடைநிலைப் பயண [Air to Surface Medium Range Missiles] ஏவு கணைகள் உள்ளன.

    அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !

    அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

    ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

    அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

    இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

    ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

    ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

    1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுக மாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

     

     

    இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.

     


    அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?

    1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

     

     

    எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?

    இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.

    பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

    அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

     

     

    பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.

    அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.

     

    Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
    Attacks on Cities
    Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
    Wounded 70,000 40,000 102,000 1,830
    Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
    Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
    Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
    Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
    Weapon(s) ‘Little Boy’ 15 kT

    (15,000 tons of TNT)’Fat Man’ 21 kT

    (21,000 tons of TNT)1,667 tons1,129 tons

     

     

    அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

    1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

    1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

    அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.

    2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

    அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

     

     

    3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

    வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

    4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

    அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

    5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

    இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

     

    6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

    அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

    7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

    அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்ற வற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

    பாரத அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

    “பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

    இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன !  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை !  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை !  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

     

    (தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

    6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

    8.  http://www.history.com/topics/cold-war/cold-war-history/videos/reagan-meets-gorbachev [1985]

    9. http://www.greenworldinvestor.com/2011/07/08/pros-and-cons-of-nuclear-weapons-list-of-facts-and-debate/ [July 8, 2011]

    10.  http://healthresearchfunding.org/pros-cons-nuclear-weapons/  [April 28, 2014]

    11. http://www.spacewar.com/reports/Nuclear_deterrent_important_in_dangerous_world_says_Hollande_999.html  [February 19, 2015]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 28, 2015

    Attachments area
    Preview YouTube video This 1946 film shows actual footage of the atomic bomb destruction of Hiroshima and Nagasaki Japan

    This 1946 film shows actual footage of the atomic bomb destruction of Hiroshima and Nagasaki Japan

    Preview YouTube video Hiroshima & Nagasaki After the Atomic Bombings: Documentary Film – People, Radiation

    Hiroshima & Nagasaki After the Atomic Bombings: Documentary Film – People, Radiation

    Preview YouTube video 10 Horrifying Facts About Nuclear Weapons

    10 Horrifying Facts About Nuclear Weapons

    Preview YouTube video [ #documentaries ] THE FACTS ABOUT NUCLEAR WEAPONS

    [ #documentaries ] THE FACTS ABOUT NUCLEAR WEAPONS

    Preview YouTube video THERMONUCLEAR WAR: Physics of the Atomic Bomb (720p)

    THERMONUCLEAR WAR: Physics of the Atomic Bomb (720p)

    Share
  • வையவனின் புதிய தொடர் ஆரம்பம்!

    avaiya

    சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச் செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.

    வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காகதமது 12ம் வயதில் ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை ’வையவன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.

    இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான ‘ஜமுனா’விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதி குவித்தார். உயிரோட்டம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி, வைரமணிக் கதைகள், ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம், போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். பாடிப்பறந்த குயில், நங்கூரம், செண்பக மரங்கள், தீபிகா போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. நிசப்தகோபுரம், வெடிவழிபாடு போன்றவை இவரது கவிதை நூல்கள். கண்ணாடிச் சிறையில் சில கடல்கள், ஒரு புதிய பறவை போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. ஆனந்த பவன், இடிபாடுகள் போன்றவை நாடகங்கள் ஆனந்தபவன் பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. ‘Loving Animals’ Nation builder Nehru’ போன்ற இவரது ஆங்கில நூல்களும் குபிப்பிடத்தகுந்தன. “வையவன் கதைகள் என்ற தலைப்பில்இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.

    நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும். வார்த்தை ஜாலங்களோ, மிகைப்படக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்தரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் காமுகண்டே டைரி என்ற நாவலை ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெர்த்த மகாபலியின் மக்கள் (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. ஆண்மை, மாலை மயக்கம் போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ் சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. மகாகவி என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி – ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஜெகசிற்பியன் ஒரு பார்வை நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆழ்கடலியல் லேசர், அழிவில்லாத ஆற்றல், விண்வெளியும் மனித மேம்பாடும், நோயறியும் கருவிகள் போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதை வசனத்தில் உருவான நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.

    சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த தாரிணி பதிப்பகம் மூலம் தமிழிலும், English Titles பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் ஐக்கியா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுது்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.

    மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் ஜீவகன்.மகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.

    ‘ஐந்து கை ராந்தல்’ புதினம் குறித்த மதிப்புரை

    “உலக இலக்கிய வரிசை யில் சேர வேண்டிய நாவல்”

    டாக்டர். திரு. வி.ஆனந்தமூர்த்தி
    ((M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D )

    எனது ஆய் வுப் படிப்பிற்காக நான் பல மொழிகளில் வெளிவந்த உலக நாவல்களை வாசிக்கவே ண்டி வந்தது. தமிழ் வாசக தளத்திற்கு பல்வே று அயல்நாட்டு நாவல்களை அறிமுகப்படுத்திய விமர்சகர் திரு. க.நா.சு ப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்த பல நாவல்களை அந்த ஆய்வின் பொருட்டு வாசிக்க வே ண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது
    அந்தப் பின்னணியில் உலக நாவல் இலக்கியம் எனக்களித்த மாபெரும் தரிச னத்தில் ஏற்பட்ட புலப்பாட்டில் திரு.வையவன் அவர்கள் எழுதியுள்ள ஐந்து கை லாந்தர் கையெழுத்துப் பிரதியாக என்னிடம் வந்தது.

    தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. தம் நாவல் கலைத்திறனையும் இலக்கிய மே தைமையையும் வெளிப்படுத்திய பல நாவலாசிரியர்கள் தொட்ட கதைக் கரு எதுவும் இல்லாத புதுமையாக வளர்ந்துவரும் ஒரு நகரத்தின் பல நூற்றாண்டுகளைப் பிரதிபலிக்கிற கருப்பொருள் வையவன் ஏற்ற கருப்பொருள்.

    இந்திய நாகரிகத்தை.. இந்திய நாட்டை வந்து தாக்கிய ஜைனம் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்ற நான்கு மதங்களையும் சார்ந்த கதாபாத்திரங்களை வெவ்வே று நாட்டின் மக்களை ஒன்றுகூடி ச ந்திக்க வைத்து ஒரே நகரின் வாழ்க்கைக் களத்தில் அவர்களை நடமாடவிட்டு ஏற்கெனவே பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்கள் அவர்களை எப்படி தமக்குள் ஒருவராக ஏற்றுக்கொண்டு நேசித்தும் பகைத்தும் அதே சமயம் பின்னிப்பிணைந்து வாழ்கிற வாழ்க்கையைக் காட்டும் நாவல் இது.

    வையவனின் பாத்திரப்படைப்புகள், நாவல் கலை ,உணர்வுகள் உரையாடல்களையும் சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கும் பாங்கு தமிழுலகம் நன்கறிந்த சேதி. இந்த நாவலின் உலகு தழுவிய பார்வையால் மனித குலத்தைஏ மார்போ டு மார்பாகக் கட்டித தழுவிக்கொள்ளும் அவரது மே ன்மை எடுத்துக் காட்டாகி நிற்கிறது.

    ரஷ்ய எழுத்தாளனின் இதயம் மாணிக்க மணியாகத் திகழ்ந்தது என்று புஷ்கினைப் பற்றிக் கூற னே ர்ந்தபோ து கோகுல் கால் கூறியதை எண்ணிப்பார்க்கிறேன்

    இந்திய எழுத்தாளனின் அதுவும் தமிழ் எழுத்தாளனின் இதயம் எந்த மொழி இலக்கியத்திற்கும் இளைத்ததல்ல. நேசம் ம் தவிர அவர்களால் வே று எவ்விதமாகவும் மனிதர்களையோ தேசத்தையோ பார்க்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல். கருத்தோ ட்டங்கள் நாவல் கலை நுணுக்கங்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்தே போ னாலும் அறிவுத் தேட்டங்கள் கணத்திற்குக் கணம் புதுமைகளைப் படைத்துக் கொண்டே எ ன்றாலும் உயிர் நேசம் உயிர்கள் ஒன்றோடு ஒன்று காட்டும் பரிவு பற்று பாச ம் என்பன ஒருபோ தும் மாறாது மகர நட்சத்திரம்போல் ஒளி வீ”வதை நாவல் வடிவில்வையவன் புலப்படுத்தி இருக்கிறார்

    “‘பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.

    ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.

    பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
    பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:

    ‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது..” என்று மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்னையான உயிர்வாழ்தல் பற்றிய அவர் பார்வை வெளிப்படுகிறது

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற அபூர்வமான பந்தப்பிணைப்பை விலகி நின்று அவர் தரிசித்து நம்மையும் தரிசிக்க வைக்கிறார்.

    இத்தகைய ஒரு நாவல் தமிழுக்கு லபித்தது அதிருஷ்டம் என்று தான்சொல்ல வேண்டும் உலக நாவல் இலக்கிய வரிசை யில் ஒன்றாக வைத்துப் போ ற்ற வே ண்டிய நாவல் இது.எனக்கு டால்ஸ்டாய் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை

    Share