Blog

  • மணி ஓசை!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    மணி ஓசை கேட்டவுடன்
    மனமெல்லாம் மகிழ்கிறது
    துணி வெல்லாம் பிறக்கிறது
    தூயநிலை வருகிறது!

    மால்மருகன் கோவில் மணி                              temple bell
    மருந்தாக இருக்கிறது
    தோல்வி எலாம் தொலைகிறது
    துவண்டநிலை போகிறது!

    வேலவனின் கோவில் மணி
    வினையெல்லாம் போக்(கு)கிறது
    நால்வேதப் பொருளை எல்லாம்
    நயமாகத் தருகிறது!

    சிவனாரின் கோவில் மணி
    சீர்திருத்த முயல்கிறது
    அவமானச் செயல் எல்லாம்
    அதுபோக்க முயல்கிறது!

    மாதாவின் கோவில் மணி
    மனங்குளிர வைக்கிறது
    ஆதாரம் தான் எனவே
    அதுஒலித்து நிற்கிறது!

    விகாரையின் கோவில் மணி
    விண்ணென்று ஒலிக்கிறது
    வீண் வார்த்தை பேசுவதை
    விட்டுவிடு என்கிறது!

    கோவில்மணி ஓசை கேட்டால்
    குணமெல்லாம் மாறுமையா
    குவலயத்தில் நாம் வாழ
    கோவில்மணி உதவும் ஐயா!

    ஆதலினால் கோவில் தன்னை
    அனைவருமே நாடிநிற்போம்
    ஆண்டவனின் அருள் பார்வை
    அனைவருக்கும் கிட்டும் ஐயா!

     

    Share
  • போச்சு எல்லாமே போச்சு!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    படித்த படிப்பும்
    வீணாகப் போச்சு
    வேலைக்காக அரசியல்வாதி
    கால் பிடித்து
    மானம் போச்சு!

    கையில காசி காணாது
    மாமா மச்சினன் உறவுகள்
    அறுந்து போச்சு
    இதுதானடா உறவுகள்
    என்று வெறுத்துப் போச்சு!

    வாழ்ந்தும் வாழாமலும்
    முடியும் நரைத்துப் போச்சு
    காதல் என் காதல்
    அது கண்ணீரில் கரைந்து போச்சு!

    என் வாழ்க்கை ‘இன்டரஸ்டிங்’
    இல்லாமல் போச்சு
    இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு
    ஜாலியாப் போச்சு!

    கல்குடா வாழ்க்கை
    வளைகுடா வாழ்க்கையாக
    மாறிப் போச்சு
    தனியாகவே வாழ்ந்து
    வெறுத்துப் போச்சு!

    ‘கிளாமர்’ காலமெல்லாம்
    மலையேறிப் போச்சு
    உழைத்த பணம் எப்படியோ
    தீர்ந்து போச்சு!

    ஊர் நிலமைகளை நினைத்து
    என் தூக்கமும் போச்சு
    ஊர் படையெல்லாம்
    பெரும் படையாகவும் ஆச்சு!

    பணம் இருந்தால் மாத்திரமே
    அரச உத்தியோகம் என்பது
    சரியாகப் போச்சு
    நாடு ரொம்ப கெட்டு போச்சு!

    பட்டம் படித்தவன்
    பாலைவனம் மேய்வது
    பழகிப் போச்சு
    சமூகமும் தம் நிலைமறந்து
    போச்சு!

    படித்தவர்களுக்கு
    வேலை என்பது
    குழந்தைப் பேச்சு
    இதைக் கேட்டுக் கேட்டு
    காதும் புளித்துப் போச்சு!

    நம்ம தலைவர்களும்
    இப்படியா என புரிந்து போச்சு
    காலத்தின் கோலம்
    மாறிப் போச்சு!

    நாடு ஏன்டா இப்படி
    குட்டி சுவராப் போச்சு
    என் கதை கேட்டு ஏன்டா
    உன் முகம் தொங்கிப் போச்சு!

    லாப்டொப்பிலும்,போனிலும்
    என் வாழ்க்கை போயாச்சு
    ஏன்டா இப்படி வெளிநாட்டு
    வாழ்க்கை கருகிப் போச்சு!

     

    Share
  • குருட்டுக் கவிதை!

    -சரவணன், கோலாலம்பூர்

    ஔவைக்கு கனி 
    கொடுத்திருந்த முருகன் 
    பாவம்.. பசித்திருந்த 
    குப்பம்மாள்களைத்தான் 
    கண்டு கொள்ளவே இல்லை….!

    நந்தனுக்கு விலகி 
    வழிவிட்டிருந்ததாம் 
    நந்தியும்.. அப்போதும்கூட 
    சிவன் அழைத்திருக்கவில்லை 
    உள்ளே வா என்று…!

    புழக்கடை வாசல் 
    மிதித்துவிட்டதற்காய்ச்
    சூடு வாங்கியிருந்த 
    சுப்பனின் முதலாளியும் 
    அதிகாலைகள் தவறாமல் 
    சொல்லிவிடுவார்… 
    வினைதீர்ப்பாய் விநாயகாவென…!

    யோசித்து ஆழ்ந்திருக்கையில் 
    அம்மா அதட்டினாள்…
    நேரத்தோட கோயிலுக்குப் போ… 
    இல்லன்னா சாமி 
    கண்ணைக் குத்திரும்…!

    நெடுஞ்சாண்கிடையாய் 
    நீட்டிப்படுத்து…தரிசனங்களுக்காய் 
    விழிகள் திறந்தேன்… 
    செட்டியார்களால் கட்டப்பட்டு 
    அவர்களுக்காய் 
    பாத்தியப்பட்டது… எனச் சொன்னது 
    முதற் பிரகாரம்…!

    சாமி…
    கண்ணைக் குத்தியிருக்கலாம்!!

     

    Share
  • எதிர்பார்க்கும் நட்பு!

    ரா. பார்த்தசாரதி

    குறையில்லாத  மனிதன்  இவ்வுலகில்  உண்டா?
    குறையினைச் சுட்டிக் காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
    குறையினைக் களைய நல்வார்த்தைகளை  எடுத்துரைப்பதுண்டா?
    இனிய சொல்கொண்டுதான்  அதனைத் தீர்ப்பதுண்டா?

    உலகமே  என்னை  ஒதுக்கி  வைத்தாலும்
    என்னைப்  பாதுகாத்து   நிழல் கொடுப்பாயா?
    நாளுக்கு நாள்  கணக்குப்  பார்க்கும் மனிதர்கள் இடையே
    தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா?

    நான் வெல்லும்போது  வாழ்த்துவதைவிட,
    நான் வீழும்போது  என்னைத் தாங்குவாயா?
    எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
    எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா?

    Share
  • தாய்மை

    திருமதி. மீனாட்சி நாகப்பன், புதுக்கோட்டை

    ‘பெண்’ அவள் பேசும் பொற்சித்திரம்!
    பெண்- அவள் மகத்துவம் பெறும் நன்னாள் எதுவன்றோ!     mom with child
    அது “தாய்மை”அடையும் நாளன்றோ!

    மங்கை – அவள் மலர்மாலை, மாங்கல்யம் அணிந்து
    மனங்கள் சங்கமித்து மண்ணுலகில்
    கரு உருப்பெற்று, உயிர்பெற்று
    கண்ணுக்கு கருவிழிபோல் காத்திடுவாள் கண்ணும் கருத்துமாய்!

    மடியில் கிடத்தி மழலை மொழிகேட்டு
    மனதும், நினைவும் மகிழ்ச்சியாகப்
    பூரித்துப் புன்னகை பூப்பதும் பெண்ணாலே!

    இடையில் தன்மழலையை இருத்தி வைத்து
    இனிய மொழிகள் கேட்டிடுவாள்!
    விண்ணகத்து நிலாக்காட்டிச் சோறு
    ஊட்டிடுவாள்! தாய்மைப்பேறு பெருமை
    பெற்ற தவத்தை நிறைவு செய்ய!

    பள்ளி சென்ற சிறுபிள்ளை பாலகன் ஆனாலும்
    தாயவளுக்கு தங்கக்குழந்தைகளே
    அரியாசனத்தில்அமர வைப்பவர்கள்!

    கருணையும் அன்பும் கலந்து
    கருவிழியில் தேக்கிடுவாள்!
    கண்ணீரில் தாலாட்டிடுவாள்
    தாய்மைப்பேறு பெற்ற பின்!

    ’ஆண்-பெண்’ என்றழைக்கும்போது
    ஏற்படும் கடினம்
    ’அம்மா – அப்பா’ என்றழைக்கும்போது
    மென்மை ஆடை அணிகிறது
    இந்தத் தாய்மைப்பேறு பட்டம்
    பெறுவதால் தரணியில்!

    Share
  • அவன், அது, ஆத்மா! (3)

    மீ. விசுவநாதன்

    புளியமரத்தடி ஜோசியர்

    அவன் பிறந்த பின்பு , அதன் குறிப்புகளை எடுத்துக் கொண்டு கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோட்டைத் தெரு புளியமரத்தடி ஜோசியர் ப்ரும்மஸ்ரீ இராமநாத ஐயரிடம் கொடுத்து அவனது ஜாதகத்தைக் கணித்தார்கள்.

    கல்லிடைகுறிச்சி புளியமரத்தடி ஜோசியர் மிகப் பிரபலம். அவரைத் தேடி வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துச் செல்லவது இன்றும் தொரடர்ந்து நடந்து வருகிறது. கல்லிடைக் குறிச்சி கிராமத்தின் ஆஸ்தான ஜோசியர் இவர்கள்தான். ஊர்க் கோவில் உற்சவங்களுக்கு நாள் பார்த்துச் சொல்வதும், பரிகாரங்கள் சொல்வதும், சாஸ்தாப்ரீத்தி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாள் குறித்துச் சொல்வதும் இவர்தான். இராமநாத ஜோசியருக்குப் பின் அவரது பிள்ளைகள் கோபால சர்மா, ராதா கிருஷ்ண சர்மா, செல்வி சுபா ஆகியோர் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இன்றும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு ஆஸ்தான ஜோதிடர் செல்வி. சுபா தான். இவர் ஒரு கணித ஆசிரியையும் கூட.

    amv

    கல்லிடைகுறிச்சியில் இருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிங்கம்பட்டி என்ற சிறிய கிராமம். அங்குதான் மிகப் பிரபலமான சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானம் இருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த மிக அழகிய ஊர். சுற்றி எங்கும் வயல் வெளிகளும், தோப்புகளுமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியான பூமி. சிங்கம்பட்டியில் இருந்து மிக அருகிலேயே உள்ளதுதான் மணிமுத்தாறு. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுத்தாறு நீர்த்தேக்கம் (118 அடி ஆழம் கொண்டது) இங்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தின் கால்வாய்ப் பாசனத்துக்கு மிக முக்கியமான பங்கு வக்கிக்கும் நீர்த்தேக்கமிது. மணிமுத்தாறு அருவியும், எண்பதடி ஆழங்கொண்ட தடாகமும் அழகாக இருக்கும். தண்ணீர் பளிங்கு போல இருக்கும். இளைஞர்களுக்கு இந்தத் தடாகத்தில் பாய்ந்து விழுந்து, முங்கி, எழுந்து நீந்தி விளையாடுவது தனி ஆனந்தம். அதற்கு மேலே மாஞ்சோலை என்ற பச்சைப் பசேல் என்றிருக்கும் குளிர்ந்த மலை சார்ந்த ஊர். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகம். இங்கு விளையும் தேயிலை உலகப் பிரசித்தி பெற்றது. அதற்கும் மேலே உள்ளது கோதையார் என்னும் ஊர். எப்பொழுதும் “சில்” லேன்றுதான் இருக்கும். இக்காடுகளில் புலி, சிறுத்தை, மான், மிளா , யானைகள் போன்ற வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த மலை புலிகளின் சரணாலயம்.

    அழகழகான வண்ண வண்ணப் பறவைகளும், சிங்கவால் குரங்குகளும் இந்தக் காடுகளில் அதிகம் காணலாம்.

    அந்தத் தென்பொதிகை மலைத் தொடரில் இன்னொரு பக்கத்தில் உள்ளது பாபநாசம். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு உள்ளது. அதன் கொள்ளளவு 144 அடி. மூன்று புறம் மலைப்பகுதியைக் கொண்ட அணைக்கட்டு. இந்த அணைக்கு நீர் வருகின்ற முக்கியமான பகுதியே “பாணதீர்த்த அருவி” ஆகும். இந்த அருவிக்கரை திரைபடத் துறையினருக்கு மிகவும் பிடித்தமான இடம். “ரோஜா” படத்தில் வரும் “சின்னச் சின்ன ஆசை”ப் பாடல் இங்குதான் எடுக்கப் பட்டது. இந்த அருவி நீர் விழுந்து ஓடிப் பெருகிய இடமே “பாபநாசம் அணைக்கட்டு”. அதில் இருந்து வெளிவரும் நீர்தான் மலையின் வழியாக ஓடி “கல்யாண தீர்த்தம்” என்று விழுந்து, அதற்கும் கீழே “அகஸ்தியர் அருவி” என்னும் பெயருடன் வருடம் பூராவும் வற்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியது. இந்த கல்யாண தீர்த்த அருவியில் குளிக்கும் பொழுது கால்வழுக்கி விழுந்த தன் மகளைக் காப்பாற்றச் சென்று தானும் அந்த அருவித் துறையிலேயே விழுந்து மறைந்தவர்தான் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகி “வ.வே.சுப்பிரமணியம் ஐயர்”. அவர் அருவியில் குளிக்கச் செல்லும் முன்பாக, தனது உடைகளை கரையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் வைத்திருக்கும் படித் தந்து சென்றார். அவர்தான் காமராஜர் அமைச்சரவையில் கல்வி மந்திரியாக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களுடைய சித்தப்பா, பின்னாளில் துறவறம் பெற்று சுவாமி சித்பவானந்தர் என்ற பெயருடன் திருப்பராய்துறை ஆஸ்ரமம் நிறுவி, ஆன்மிகத் தொண்டாற்றியவர். அவரது சீடரே சுவாமி ஒம்காரானந்தர். தேனீயில் வேத புரியில் ஆஸ்ரமம் அமைத்து மிகச் சிறந்த முறையில் ஆன்மிகச் சேவை செய்து வருகின்றார்.

    T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி

    amv1

    தென்பொதிகையில் களக்காடு, மணிமுத்தாறு, பாநாசம் மலைத் தொடரில் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் காட்டு நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்துக்குச் சொந்த மாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வரலாறு கொண்டது இந்த ஜமீன். இதன் 32வது பட்டத்து ராஜாதான் “தென்னாட்டுப் புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து ஷண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி” . சுருக்கமாக T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி. இவருக்கு இப்பொழுது சுமார் வயது எண்பதுக்கும் மேலாகிறது. நன்கு கல்வி கற்றவர். சிறந்த ஆன்மிகவாதி. இவர்தான் இந்த ஜமீன் பரம்பரையின் கடேசி ராஜா. ஜமீன் பட்டத்தைத் துறந்தவர்.

    தீர்த்தபதிப் பட்டம் வந்த வரலாறு

    சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்தின் குரு சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார். இப்போதைய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் கொள்ளுத்தாத்தா (பூட்டனார்) திவான் பகதூர் சுப்ரமணியத்தேவர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசித்தார். அப்பொழுது சாதுர்மாஸ்ய விரத காலம். ராஜா சுவாமிகளை வணங்கி தங்களது சிங்கம்பட்டி ஜமீனுக்கு விஜயம் செய்யும் படி வேண்டுகிறார்.

    தனக்கு வாரிசு வேண்டும் என்று பிராத்தித்து, சாதுர்மாஸ்யம் விரதம் முடிந்த பின்பு சுவாமிகளின் பல்லக்கைச் சுமந்துகொண்டு தங்களது ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். சிங்கம்பட்டியில் சில பிராமணக் குடும்பங்களை குடி அமர்த்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறார். அப்பொழுது சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார் அவர்களது ஜமீன் பாரம்பர்யம் பற்றித் தெரிந்து கொள்கிறார். பாணதீர்த்தம் வரை அவர்களது ஜமீனுக்கு உட்பட்டு இருந்ததால், அந்தப் பரம்பரைக்கு “தீர்த்தபதி” என்று பட்டம் தந்து ஆசீர் வாதித்தார்.

    அதனால் அடுத்த பரம்பரை ராஜாவின் பெயர் “முருகதாஸ் தீர்த்தபதி” என்று அழைக்கப் பெற்றார். அவர் தனது காலத்தில் சிருங்கேரி பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசனம் செய்து தனது குருநாதரை அவரும் பல்லக்கில் சுமந்து சென்று தனது குருபக்தியை வெளிப் படுத்தினார். இப்போதய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களும் தங்களது குருநாதரை இப்பொழுதும் குரு விச்வாசத்துடன் தரிசனம் செய்து வருகிறார்.

    ஒவ்வொரு வருடமும் ஆடி அம்மாவசை அன்று பாபநாசம் காரையாறு மலையில் உள்ள ஸ்ரீ சொரிமுத்தையனார் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, இரவில் “இரவில் ராஜ தரிசனமும்” தருகிறார். இந்த விழாவைக் காண லட்சக் கணக்கான மக்கள் இன்றும் கூடுகின்றார்கள். சிங்கம்பட்டி சமஸ்தான வாரிசுகள்தான் இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள்.

    1953 க்குப்பின் ஜமீன்கள் மறந்தது விட்டன. இருந்தாலும் அதன் பாரம்பர்யச் சின்னங்களை இன்றைய ராஜா பாதுகாத்து வருகிறார்.

    அதில் முக்கியமானது சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று திரும்பிய சமயம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குப் பரிசளித்த மரத்தாலான யானைச் சிறப்பம். பாஸ்கர சேதுபதி மன்னர், இப்போதய முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார்.

    இத்தனை பெருமை பெற்ற சிங்கம்பட்டி ஜமீன்தார்களால் அழைத்து வரப்பட்டு கல்லிடைகுறிச்சி கோட்டைத் தெருவில் குடியமர்த்தப் பட்டக் குடும்பம் தான் “புளிய மரத்தடி” ஜோதிடக் குடும்பம்.

    அவன் பிற்காலத்தில் 1996ல் அவனது முதல் சிறுகதைத் தொகுதி “இரவில் நனவில்” புத்தகத்தை கவிஞர் வாலி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துக் கொடுத்தான். அவர் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அவனைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி, ” ஒய் ஒமக்கு எந்த ஊர்?”

    “எனக்குக் கல்லிடைக் குறிச்சி என்றான்.”

    உடனே அவர்,” நான் “செல்வம்” படத்திற்காகப் பாட்டெழுதக் குற்றாலம் சென்றிருந்தேன்.. அப்பொழுதுதான் எனக்கு மகன் பிறந்த செய்தி வந்தது… பக்கத்தில் இருந்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான வி.கே. ராமசாமி என்னிடம், “கவிஞரே இப்படியே கல்லிடைக்குறிச்சிக்குப் போயி புளியமரத்தடி ஜோசியரைப் பார்த்து உங்க மகனோட ஜாதகத்தைக் குறிச்சிக்கிட்டுப் போகலாம் என்றார்..” என்று கல்லிடைகுறிச்சியின் பெருமையைச் சொன்னார். அதன் பிறகு கவிஞர் வாலி அவர்களை அவன் பல முறை சந்தித்து உரையாடும் பேரு பெற்றான். அதை அவன் சமயம் வரும் பொழுது எழுதுவான்.

    அவனுக்கு ஒரு வயது நெருங்கும் சமயம், அவனுக்குத் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் இருந்த பொழுது, வீடு வாசல் படியை முதல் முதலாகத் தாண்டியதற்காக திருஷ்டி சுற்றிப் போட்டார்களாம். எப்படித் தெரியுமோ?…உப்புக் கொழக்கட்டை செய்து, அதாவது சிறிது சிறிதாக அம்மணிக்கொழகட்டை செய்து, குழந்தை மெதுவாகப் படி தாண்டும் பொழுது அதன் தலையில் அந்தக் கொழக்கட்டைகளைக் கொட்டுவார்களாம். அதன் பின் அவைகளை எடுத்து வாய்காலில் மீனுக்கு உணவாகப் போட்டுவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஆசிதர வந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்குப் பழத்துடன் கொஞ்சம் கொழக்கட்டையும் தருவார்களாம்.

    இதுஎப்படி அவனுக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?..

    அவனுடைய நண்பனின் சகோதரி, போலீஸ் காரராத்துக் கோமு அக்கா , சென்னையில், தியாகராயநகர் பஸ்நிலையம் பின்புறம் போலீஸ்கோர்டேர்ஸ்ல் இருந்த (1973 ஜூலை மாதம்) பொழுது அவனுடைய நண்பர்கள் குட்டிச் சங்கர், பிரபுவுடன் பார்க்கச் சென்றான்.

    அப்பொழுது ,”அடேய்யப்பா..எப்படி வளந்துட்டே…ஒனக்கு ஒரு வயசாகற போது, வாசப்படி தாண்டின ஒடனே ஒன்னோடு பாட்டி எங்க எல்லார் கைலயும் கொழக்கட்டையைக் கொடுத்துக் கொழந்தை தலைவழியாக் கொட்டுங்கோடி” என்று சொன்னதுதான் ஞாபகம் வருது என்று சொன்னாள்.

    அதன் பிறகு அவன் படிப்படியாக முன்னால் வந்தான்….

    (01.02.2015)

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    m s s

    rajajiதிரையிசைப் பாடல் வரிசையில் இடம்பெறாவிட்டாலும் பொற்காலப் பாடல்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்ற இப்பாடல் இடம்பெறவேண்டும் என்கிற வேட்கையால் இணைக்கப்படுகிறது. மூதறிஞர் ராஜாஜி அவர்களால் இயற்றப்பட்ட பாடல் என்கிற அந்தஸ்தும்… சங்கீதவானில் புகழ்க்கொடிவீசிய பாட்டரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய வகையிலும்…

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பெறவேண்டிய ஆனந்த நிலையையே பல்லவியாக்கி… மறைபொருள் நோக்கிய மகத்தான தவமாக ஊனுருக… உயிருருக… தானுருகி யாவரும் கேட்க விரும்பும் பாடலாய்… எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு இன்புறத்தக்க பாடல்!

    ஐ.நா.சபையில் திருமதி.எம்.எஸ்சுப்புலட்சுமி அவர்கள் குரலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப்பாடலும் இதுவே என்கிற கூடுதல் தகவல் தமிழர்கள் அனைவரும் பெறுகின்ற பெருமை!

    பாடல்: ராஜாஜி
    பல்லவி
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா

    அனுபல்லவி
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 1
    வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    ராகம் காபி
    சரணம் – 2
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
    குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
    குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 3
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    ராகம்: சிந்துபைரவி
    சரணம் – 4
    கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 5
    யாரும் மறுக்காத மலையப்பா
    உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    Share
  • ஏங்கும் ஏந்திழை!

    -ஆர். எஸ். கலா

    காதல் இது காதல் இது
    கன்னி கொண்ட காதல் இது!
    காத்திருக்கச் சொல்லி விட்டு
    போன மன்னன் எங்கே?

    தூது சென்ற வெண் புறாவும்                          enthizhai
    துணையோடு வந்து நிற்க
    தூது விட்ட பெண் மனமோ
    ஏக்கம் கொண்டது இங்கே!

    கதவையும் திறந்து வைத்து
    கன்னி மனசையும் திறந்து
    வைத்தேன்!

    பொன்னின் செல்வன்
    போனது எங்கோ
    பொன்னான உன் பாதம்
    படுவது எப்போ?

    பாச வலை விரித்து
    என்னைப் பிடித்தவரே
    பாசாங்கான பாசம்
    காட்டி என்னைப் பதற
    விட்டவரே!

    நான்கு பக்கமும் சுவர்
    அடைப்பு நடுவிலே நான்
    அமர்ந்திருக்க
    நாலு பக்கமும் சுத்துதையா
    என் மூச்சுக்காற்று உன்
    பேச்சைத் தேடி!

    மஞ்சள் வெயிலும்
    மாலையாகிப் போனதையா
    மஞ்சள் முகமும் வாட்டம்
    காட்டுதையா!

    நீதான்  தஞ்சம் என்று
    என் நெஞ்சில் உன்
    நினைவை விதைத்தேன்
    நீதான் என் உலகம்
    என்று கனவில் மிதந்தேன்!

    போகாதே  போகாதே என்
    உள்ளத்தைக் கொல்லாதே
    உணர்வை  வதைக்காதே
    போதும்  போதும்  உன்
    விளையாட்டு என் எதிரே
    வந்து நில்லு என் உயிரே!

     படத்துக்கு நன்றி: fineartamerica.com

    Share
  • ஐந்து கை ராந்தல் (3)

    வையவன்

    படித்த தந்தியை மடித்து பைக்குள் போட்டுக் கொண்டான் தாமு. முகம் எந்த உணர்ச்சியும் காட்டாத வெற்றுக் காகிதம் மாதிரி இருந்தது.

    என்ன விஷயம்?
    சொல்ல மாட்டானா என்று சிவா எதிர்பார்க்கவில்லை. சொல்ல வேண்டுவதானால் சொல்லுவான் என்று அவனுக்குத் தெரியும்.

    ‘சிவா… ஒனக்கு டயம் ஆகுதே!”
    “நான் ரெடியாய்ட்டேன்.”
    “பீரோவில் பர்ஸ் இருக்கு…செலவுக்கு இருபது ரூபா எடுத்துகுடு.”
    “எதுக்கு எவ்ளோ? அஞ்சு ரூபா போதும்.”

    இந்த எட்டு மாதத்தல் எத்தனை இண்டர்வியூ எத்தனை ஐந்து… எத்தனை பத்து.
    “சைதாப்பேட் போகணுமில்லே”
    “ஆமா; அஞ்சு ரூபா போதும்.”

    தாமு நிதானமாக அவனைப் பார்த்தான். அவன் மனசைப் புரிந்து கொண்ட மாதிரி ஒரு புன்னகை செய்தான்.
    “ஒரு அக்கவுண்ட் வேணும்னா வச்சிக்கோ… வேலை கெடைச்சதும் நீ வாங்கினத்தையெல்லாம் திருப்பிக் கொடுக்க சௌகரியமா இருக்கும்… ஆனா வழியிலே இப்ப கஷ்டப்படாதே!”

    எதிராளி நாடித் துடிப்பை தாமு இரக்கமோ மென்மையோ பாராட்டாமல் இப்படி தொட்டு விடுவான். முகத்திரையை விசுக்கென்று இழுத்து விடுவான்.

    “அதுக்கில்லே”
    தாமுவே எழுந்துபோய் பர்ஸிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை உருவி சிவாவின் கையில் அழுத்தினான். “கீப் இட் ஐ ஸே.” அன்பை, பரிவைக்கூட அதிகாரமாகத் தான் தாமுவுக்கு சொல்லத் தெரியும்.
    சிவாவுக்கு மனம் தழுதழுத்தது.

    “விஷ் யூ ஆல் த பெஸ்ட்”
    “தாங்க்யூ… இன்னிக்கு மார்க்கெட்லே மீன் நல்லால்லே… சிக்கன்தான் பண்ணினேன்”
    “நீ?”
    “ரசம் வச்சுகிட்டேன்”

    தாமு ஒரு ‘ஜோக்’ கேட்ட மாதிரி சிரித்தான்.
    “நோ சிக்கன்ங… நோ ஃபிஷ்.. நோ மட்டன்… நோ டிரிங்ஸ்… நோ விமன்… நோ ஸ்மோகிங்… எல்லாம் நோ… நோ… நோ… நீ என்ன மனுஷன் சிவா?”

    “ஐ ஆம் நோபடி”
    தாமுவின் முகம் சட்டென்று சுருங்கிற்று.
    அதைச் சொல்லி இருக்க வேண்டாமோ! புளித்த மாவைப் போல் ஒரு விரக்தி பாத்திரத்தை விட்டு வழிந்து விடுகிறது.
    எத்தனை பத்திரப்படுத்தினாலும்.
    வெற்றிவேல்!

    அவனுக்கு தன்னிரக்கம் பிடிக்காது. விரக்தி பிடிக்காது.
    இரண்டு புருவங்களை உயர்த்திக் கொண்டு ஒரு வேலாயுதத்தை மனசில் பதிக்கிற பார்வை பார்ப்பான் இப்போது தாமு அப்படிப் பார்த்தான்.

    புதிய பல்ப் மாற்றிய மாதிரி தாமுவின் முகத்தில் ஓர் ஒளி பளிச்சிட்டது.
    “இட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி… ஒனக்கு ஒரு வேலை கெடைக்கறதுதான் ரெமடி. கெடைச்சுடும்.”
    “ஐ’ம் ஸாரி”
    “ஏன்?”

    “ஐ வாஸ் பிட்டர். கசப்பா பேசிட்டேன்.”
    “கசப்பெல்லாம் இனிப்பாகும் காலம் ஒன்று வரும்.”
    “தாங்க்யூ”

    சர்ட்டிபிகேட் ஃபைலை எடுத்துக் கொண்டு படியிறங்கப் போனவனை “சிவா” என்று கூப்பிட்டான்.
    சிவா நின்றான்.

    “நீ எனக்கு ஒரு சின்ன வேலை செய்யணும்.”
    “சொல்லுங்க.”

    “வர்ற வழியிலே மவுண்ட் ரோடிலே எறங்கு. பிரீதா, ஒரு குக்கர் கேட்டிருந்தா. முந்தா நாள் மாடலை எல்லாம் பார்த்து வச்சிட்டோம். நீ ஸ்பென்சர்லே எறங்கி கேஷ் கவுண்டர்லே தாமு கிட்டேருந்து வந்திருக்கேன்னு சொன்னியானா குக்கரைக் கொடுத்துடுவாங்க. வாங்கிட்டுப் போய் அவகிட்டே சேர்த்துடணும். வுட் யூ மைண்ட் திஸ் ட்ரபிள்…?”
    “நோ… நாட் அட் ஆல்”

    “அங்கே வேற யாரையும் அனுப்ப நான் விரும்பலே.”
    தனது அந்தரங்கத்துக்கு நீதான் உகந்தவன் என்ற மரியாதையை தாமு தருவதை உணர்ந்தான்.
    “நான் மதனபள்ளி போறேன். அப்பா சீரியஸ்ணு டெலிகிராம் வந்திருக்கு. வர எவ்வளவு நாள் ஆகும்ணு போய் எஸ்.டி.டி. பண்றேன். இதையும் அவகிட்டே சொல்லிடு.”

    தாமுவுக்குத்தான் இப்படி ஓர் அதிர்ச்சியை பக்குவத்தோடு ஏற்க முடியும். ரயில் தவறி விட்டதைப் பற்றிச் சொல்வது மாதிரி அவ்வளவு சாதாரணமாகச் சொல்ல முடியும்?

    இவன் கருங்கல் பாறையா…. தண்ணீரில் மிதக்கும் தாமரையா…
    சிவா பதறிப்போய் நிற்பதைப் பார்த்தான் தாமு.
    “டேக் இட் ஈஸி… அவர் நல்லா ஆயிடுவார். ஐ டுக் இட் ஈஸி… மனுஷனாலே அப்படி எடுத்துக்கறதுதான் முடியும்.”
    சிவாவின் பார்வை தாழ்ந்தது.
    “நீ பொறப்படு.”
    அவன் படியிறங்கினான்.

    அரைவாசிப் படிகள் கடந்திருப்பான். அதற்குள் தலைகுனிந்து கொண்டே தண்ணீர்க் குடத்தோடு திஷ்யா படியேறி விட்டாள். நாலைந்து படிகள் கடந்திருந்தாள்.

    படி குறுகலானது. மனிதனை விட இடம் முக்கியம் என்ற சென்னையின் சிக்கன சிரத்தையில் கட்டப்பட்டது. இடுப்பில் குடத்தோடு வரும் ஒருத்தியும் கையில் ஃபைலோடு வரும் ஒருவனும் ஒரே நேரத்தில் கடக்க முடியாது.
    அவள் ஐந்தாவது படி ஏறின பின்பு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

    குளித்து ஈரத்தலையைக் கொண்டை போட்டிருந்தாள். பவுடரும் மெல்லிய மையும் ஒரு சின்ன நேர் கோடு மாதிரி திலகமும் அவள் முகத்தின் செம்மையில் ஒரு சௌந்தர்யம் கூட்டியிருந்தன.
    சிவாவைப் பார்த்ததும் அவள் உதட்டில் குறும்புப் புன்னகை பளிச்சிட்டது.
    “என்ன காலம்பற வேட்டைக்கு கௌம்பியாச்சா?”

    “சகுனம்தான் சரியில்லே”
    “அப்ப திரும்பிப் போயிட்டு அப்பறமா வர்றது”
    “வந்த சகுனம் வந்தாச்சு. திரும்பிப் போனா தப்பிச்சுக்க முடியுமா?”
    “குடம் போறதுக்கு எடம் வேணுமே”

    மீண்டும் படியேறிச் செல்ல சிவாவுக்கு விருப்பமில்லை.
    “நான் ஒதுங்கி ஒட்டி நின்னுக்கறேன்”

    குடத்துத் தண்ணீர் சர்ட்டிபிகேட்டில் சிந்திவிடப் போகிறது என எதிர்ப்புறமாக ஒதுங்கினான்.
    ஒரு கணம். அந்தக் கன்னமும் விழியும் அவன் சமீபத்திற்கு வந்தன. அவளது இடையும் உடம்பும் அவனை லேசாகத் தொட்டு உரசிற்று.

    என்ன ஒதுங்கியும் திஷ்யாவின் இடது தோள் அவன் மார்பில் இடித்து விட்டது.
    இவ்வளவு நெருக்கம் இதற்கு முன்பும் ஒருமுறை கிட்டியிருக்கிறது. அது தற்செயல்.
    படிக்கட்டின் கீழே அவள் கையிலிருந்து எம்பிக் குதித்த ஆனந்தைத் தூக்க அவள் குனிய அவனும் குனிந்தான். இருவர் தலையும் முட்டிக் கொண்டன.

    ஒரு பெண்ணுடலுடன் நேர்ந்த முதலாவது சந்திப்பு அது இரண்டாவது சந்திப்பிலும் இப்படி ஒரு மோதல் தானா? படியேறிய திஷ்யா நின்றாள்.

    இடித்து விட்டோம் என்று நாக்கைக் கடித்துக் கொண்டே அவள் திரும்பிப் பார்த்தாள்.
    அந்தப் பெரிய கண்களில் மிதந்த மருட்சியும் வெட்கமும் அவன் மனசை எங்கோ கொத்தின. அவள் வாசனையும் அந்தப் பௌடர் வாசனையும் ஒரு வலை மாதிரி தன்னைச் சுற்றிக் கவிந்ததை சிவா உணர்ந்தான்.
    ஒரு தித்திப்பு உள்ளில் ஊறிச் சிலிர்த்தது.

    சிவா தன்னைச் சுய நிலைக்குக் கொண்டு வந்தான். கசப்பான சிரிப்பு ஒன்று அவனுள் கரைந்து மடிந்தது.
    தனக்கு என்று ஒரு வேலை உண்டோ இல்லையோ, விலாசம் உண்டோ இல்லையோ, மனுஷ புத்தி என்ன கூத்தாடுகிறது?
    எந்த முரண்பாடான சூழ்நிலையிலும் துளித்துளியாய் சிதறியிருக்கும் தேனுக்கு என்ன ஆவல் காட்டுகிறது!

    சிவா அந்த மயக்கத்திலிருந்து தன்னைக் கத்திரித்துக் கொண்டு படியிறங்கி, தெருவைக் கடந்து சாலைக்கு வந்தான்.
    வெளியே காலை, ஒன்பதரை மணிச் சென்னை ஜன்னி வேகத்தில் பதறிற்று. ஆபிஸ்… காலேஜ்… ஸ்கூல்.
    பஸ் ஸ்டாப்பின் ஓரம், பிரசவ வார்டுகளுக்கு எதிரே ஒரு கூட்டம் கையைப் பிசைந்து நிற்பது மாதிரி கால் மாற்றிக் கால் மாற்றி ஜனம் நின்றது.

    நிஜமாகவே ஒரு கர்ப்பிணியும் அங்கே நின்றாள். சிவா தன் உவமையின் பொல்லாங்கை ரசித்தான்.
    பிரசவம்! ஒவ்வொரு பஸ்ஸும் ஒரு பிரசவ வேதனை தானா? அவன் பெட்டிக் கடை ஓரமாக நின்றான்.
    கொலை, கொள்ளை, குண்டு வீச்சு, சட்ட சபையில் செருப்பு வீச்சு, ரயில் கவிழ்ந்தது என்று வீர சுதந்திரம் நமக்கு வழங்கியிருந்த அன்றாட மாமூல் சுபமங்களங்கள் பெட்டிக் கடைக்கு வெளியே தொங்கிய விளம்பரங்களில் பிரசவமாகியிருந்தன.

    ஒரு வாரப் பத்திரிகையின் விளம்பரத் தாள், மன அலை பாய்ந்து சட்டென்று நின்றது.
    “எதிரொலியே நீ எங்கே?”

    சிவா எழுதிய சிறப்புச் சிறு கதை.
    கொட்டை எழுத்துக்களில் தெரிந்த அந்த தலைப்பு எங்கோ கேள்விப்பட்ட மாதிரி யாருடையதோ மாதிரி பளீரென்று மண்டையில் அறைந்தது. தன் கதை என்பதைக் கீழே இருந்த பெயர் சுட்டிக் காட்டிற்று.

    ஆம்… அது அவன் எழுதியனுப்பியிருந்த கதை. தபால் பெட்டிற்குள் போடும்போது அது அங்கிருந்தே நேராக ஒரு குப்பைக் கூடையில் போய் விழும் என்று நினைத்துக் கொண்டு போட்டது.

    சரியாக ஒரு நிமிஷம். அவன் வெடித்துச் சிதறி வானில் வண்ண வண்ணமான வெளிச்சத் துணுக்குகளாகச் சிந்திய உணர்வு.

    ஒரு சூன்ய மூலையிலிருந்து உதைத்து எறியப்பட்டு வேகமாய்ச் சுழன்று ஒரு வெளியில் வந்து விழுந்த இம்சையான சுகப் பிரசவம்.

    பிறந்தோம். தின்று குடித்து வளர்ந்தோம். பொங்கிச் சலித்து மடிந்தோம் என்ற விதியிலிருந்து உந்தி எங்கோ ஒரு விதானத்திற்கு தள்ளிவிட்ட திக்பிரமை ஏற்பட்டது.
    அவன் பரவசமுற்றான்.

    கிளர்ச்சியுற்றான்.
    கூடவே சோகமுற்றான். ஏன் இந்த சோகம்? புரியவில்லை.

    அப்புறம்தான் சிவா மூச்சு விட்டான். ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது. இதயம் நூறு குதிரை வேகத்தில் துடிப்பது மாதிரி நினைத்தான்.

    சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டு கடைக்காரன் முன் நின்று விட்டான்.
    “என்ன சார் வேணும்?”

    “ஒரு நந்தவனம்” என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அவன் சட்டென்று விழுங்கினான்.
    இது தாமுவின் பணம். அவனுடைய சுய மரியாதையை மெச்சுகின்ற தாமுவின் பணம். அவன் வாய்க்கு வந்த வார்த்தைகள் மாறின.

    “சில்லறை இருக்கா…?”
    “இம்மாங் காத்தாலே சில்லறை கேட்டா எப்பிடி?”
    சிவாவின் கண்கள் கயிற்றில் கிளிப் மாட்டித் தொங்கிய அந்த வார நந்தவனத்தைப் பார்த்தன.
    “சரி… கொண்டா சார்”

    கடைக்காரன் கல்லாவுக்குள் ரப்பர் ‘பேண்டு’ போட்டுக் கட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணினான்.
    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாமுவிடம் வெளிப்பட்ட விரக்தி இப்போது வெகுதூரம் உலவித் திரும்பிய எதிரொலி போல் கேட்டது.

    “ஐ ஆம் நோபடி!”
    “தட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி”
    ரூபாய் நோட்டுக்களை வாங்கி எண்ணுவதற்கு முன் பஸ் வந்துவிட்டது.

    சிவா பாய்ந்து பஸ்ஸில் ஏறினான். அவன் எங்கே நின்றான். எப்படி இடம் படித்தான்…டிக்கெட் வாங்கினான்… எதுவும் அவன் மனசில் பதியவில்லை.

    பஸ்ஸின் நெருக்கடியில் அவன் பாதிக்கப்படவில்லை. அம்மாவை நினைத்தான். வெற்றிவேலை நினைத்தான். அப்புறம் அப்பா ஞாபகம் வந்தது. நான் எழுத்தாளனாகி விட்டேன் என்றால் அவர் என்ன நினைப்பார்?

    அவர் ஞாபகம் வந்து எத்தனை நாள் ஆகிறது?

    சென்னைக்கு வந்தபின் எட்டு மாதங்களிலும் ஒருமுறை கூட அவனுக்கு அவரை நினைக்கிற வாய்ப்பு ஏற்படவில்லை.
    இப்போது அவரைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது.

    கண்டக்டர் விசில் ஊதியதும் தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துவிட்டது என்று விழிப்புற்றான்.

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -ஆர். எஸ். கலா

    கை  நிறையப் பணம்
    கடந்த கால வாழ்வை  மறந்து                       rose
    விட்டது அவன் மனம்!

    நாட்டாமை வயிறு தொந்தி
    அவர் பயணம் செய்வதோ இரட்டை
    குதிரை பூட்டிய வண்டி!

    மனைவி தயங்கியே கடையில்
    கடன் கேட்கிறாள் கணவனோ மதுவில்
    மயங்கியபடி  பாதையில்!

    முட்களின் நடுவில் ரோஜா
    அதைக் கரம்கொண்டு பறித்துக்
    கொடுத்தார் ராணிக்கு ராஜா!

     

    Share
  • பெனிடோ முசோலினி

    கோபாலன் வெங்கட்ராமன்

    benito-mussolini1

    யார் இந்த முசோலினி? இவர் 1922 தொடங்கி 1943ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இத்தாலி நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். காலப்போக்கில் இவருடைய அரசியல் சமூகக் கொள்கைகளுக்குப் “ஃபாசிசம்” என பெயரிட்டு அழைத்தனர். இந்த ஃபாசிசக் கொள்கையை உருவாக்கி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடன் சேர்ந்து ஆற்றிய கொடுமைகளுக்குப் பிறகு இந்த சொல்லே மக்கள் வெறுக்கும் சொல்லாக மாறிவிட்டது. இத்தாலியின் பிரதமராக இருந்த முசோலினி 1943ஆம் ஆண்டில் இத்தாலியின் சோஷலிச குடியரசின் தலைவராக ஆனார். அவர் இந்தப் பதவியில் மக்களால் கொல்லப்பட்ட 1945ஆம் ஆண்டு வரை அதாவது ஏப்ரல் 28, 1945 வரை இருந்து வந்தார்.

    பெனிடோ அமில்கேர் ஆண்ட்றியா முசோலினி எனும் நீளமான பெயருடைய இவர் 1883 ஜூலை 29ஆம் தேதி பிறந்தவர். இறந்தது 1945 ஏப்ரல் 28. ஆக இவர் வாழ்ந்த 62 ஆண்டுகளில் இவர் உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் இறந்தார். வடக்கு இத்தாலியில் வெரானோ டி கோஸ்டா எனும் ஊருக்கு அருகில் பிரடாப்பியோ எனும் சின்னஞ்சிறு பகுதியில் பிறந்தார். இவருடைய தந்தை அலெஸ்சாண்டிரோ. இவர் ஒரு இரும்பு வேலை செய்யும் கொல்லர். சோஷலிசக் கொள்கையில் பிடிப்புள்ளவராக இருந்தார் இவர். முசோலினியின் தாயார் ரோசா மால்டோனி. இவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக இருந்தார். அமைதியும், அடக்கமும், இறை பக்தியும் உள்ளவராகத் திகழ்ந்தார். முசோலினிக்கு ஒரு தம்பி ஒரு தங்கை, தம்பியின் பெயர் அர்னால்டோ, தங்கை எட்விட்ஜ்.

    சிறு வயதில் முசோலினி ஒரு முரடன். யாருக்கும் கட்டுப்படமாட்டார். முன்கோபக்காரர், யாருக்கும் எதற்கும் அஞ்சமாட்டார். எதற்கெடுத்தாலும் சண்டைதான். சும்மா அடுத்தவனை அடித்துக் கொண்டிருந்தால் பள்ளிக்கூடத்தில் விட்டு வைப்பார்களா என்ன? வகுப்புத் தோழன் ஒருவனை கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டார் என்று இவரை பள்ளியைவிட்டு வெளியேற்றி விட்டார்கள். இத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் இவர் எப்படியோ, எங்கோ படித்து சிறிது காலம் பள்ளிக்கூட ஆசிரியராகவும் இருந்தார் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

    வாத்தியார் வேலை பிடிக்காமல் இவர் வேறு ஒரு நல்ல வேலை தேடி 1902இல் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கு இவருக்கு ஏதேதோ சிறு வேலைகளை கிடைக்க, இவர் அதில் இருந்து கொண்டே, சோஷலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி, அவர்கள் கூட்டங்களுக்கெல்லாம் செல்லத் தொடங்கினார். சோஷலிஸ்ட் என்றால் உடனே ஒரு தொழிற்சங்கமும் இருக்க வேண்டுமல்லவா, அப்படி இவர் ஒரு தொழிற்சங்கத்தில் பிரச்சாரகராக செயல்பட்டார். பையன் சாதாரணமாகவே முரடன், உடன் படிப்பவனையே கத்தியால் குத்தியவன், அப்படிப்பட்டவன் ஒரு தொழிற்சங்கத்தில் முக்கியப் புள்ளி என்றால் என்னவெல்லாம் செய்திருப்பார் யோசித்துப் பாருங்கள். தங்கள் சங்கத்தின் பிரச்சினைகளுக்காக தீவிரமாகப் போராடுவார். முதலாளிகள் இவர்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லையானால் போச்சு, உடனே வன்முறைக்குத் தூண்டுவார். அடிக்கடி தொழிலில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பார். இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தால் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன? இவரை அடிக்கடி பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். இவர் ஒரு சிறைப் பறவையாக ஆனார்.

    இப்படி இவர் நாளுக்கு நாள் தொழிற்சங்கத்தில் மிக வேகமாக முன்னேறத் தொடங்கினார். எப்போதும் கூட்டத்தில் உரையாற்றுவது, தொழிலாளர்கள் மனங்களில் சூடேற்றுவது, முஷ்டியை மடக்கி போராடத் தூண்டுவது, சோஷலிச கொள்கையை இனிக்க இனிக்க அவர்களுக்கு போதிப்பது, இப்படி அவருடைய வளர்ச்சி சோஷலிச வட்டாரத்தில் இவரை ஒரு பெரிய புள்ளியாக ஆக்கிவிட்டது. எழுதவும் செய்தார்; பேசினார், பத்திரிகைகளைத் தொடங்கினார், பொழுதுக்கும் இவர் உழைத்து ஒரு பெரிய சோஷலிஸ்ட் தலைவராக ஆனார்.

    1904இல் மீண்டும் இவர் இத்தாலி திரும்பினார். அங்கு இவர் இத்தாலி ராணுவத்தில் சேர்ந்தார். இடையில் 1909இல் இவர் மீண்டும் ஆஸ்திரியா சென்று அங்கு தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். இவருடைய தீவிர சோஷலிச கொள்கைகளை பத்திரிகைகளில் சூடுபறக்க எழுதி வந்ததால் இவரை ஆஸ்திரியாவைவிட்டு வெளியேற்றி விட்டனர்.

    இரும்பு பிடித்தவன் கையும், சொரி பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம். அப்படி இவர் இத்தாலிக்குத் திரும்பிய பிறகு சும்மா இருப்பாரா. அங்கும் இவரது சோஷலிசம் இவரை ஆட்டிவைத்தது. மேடை தோறும் சோஷலிச கொள்கைகளை உரக்கப் பேசி மக்களைத் தட்டி எழுப்பத் தொடங்கினார். பேசிப் பேசி, பேச்சு இவருக்கு தண்ணீர் பட்ட பாடாக ஆகிவிட்டது. இவர் ஒரு சிறந்த பேச்சாளராக ஆனார். இவர் பேச்சு உரத்த குரலில், ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, அதிகார தோரணையில் தன் கருத்துக்களை முன் வைப்பார். அப்படி சண்டமாருதமாகப் பேசுபவர்கள் பொதுவாகத் தாங்கள் பேசுவதில் உண்மை நிலைமை இருக்கிறதா என்பதைப் பார்க்க மாட்டார்கள். சகட்டு மேனிக்கு புள்ளி விவரங்களை அள்ளி வீசுவார்கள். எதிரிகளை துவம்சம் செய்வது போல அடித்துப் பேசுவார்கள். மக்களும் இதைப் போன்ற பேச்சுக்களைத்தானே காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, அடடா, என்ன பேச்சு, என்ன வீரம், எத்தனை புள்ளி விவரங்கள் என்று பேச்சில் மயங்கி ஏமாறுவார்கள். தான் சொல்ல வந்த கருத்தை அதுவே உலக மகா உண்மை என்பதுபோல ஆணித்தரமாக அடித்துப் பேசி மக்கள் மனங்களை கலங்கடித்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படிப் பேசுவதில் பாதிகூட உண்மை இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட பேச்சுக்களுக்குத்தானே காலம். தெளிந்த நீரோடை போல, அமைதியாக, அழகாக, சொல்ல வந்த கருத்தைச் சொன்னால், அவனை ‘போர்’ என்று மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட மாட்டார்களா?

    சண்டமாருத பேச்சாளரான முசோலினி சோஷலிச அகிலத்தில் ஒரு பிரபலமான, புகழ்மிக்க பேச்சாளராக மதிக்கப்பட்டார். பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருந்த முசோலினி 1912 டிசம்பர் 1ஆம் தேதி முதல் இத்தாலி சோஷலிஸ்ட் கட்சியின் செய்தித் தாளான ‘அவந்தி’க்கு ஆசிரியராக அமர்ந்தார். 1914இல் இளவரசர் ஃபெர்டினாண்ட் என்பார் ஆஸ்திரியர் ஒருவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல் உலக யுத்தம் தொடங்கியது அல்லவா? ஐரோப்பாவில் தொடங்கிய அந்த யுத்தம், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் சுற்றி வளைத்துக் கொண்டது, எனினும் இத்தாலி நாடு போரில் ஈடுபடாமல் தங்களை நடுநிலை நாடு என்று அறிவித்துக் கொண்டது. இத்தாலி நாட்டு சோஷலிஸ்ட் கட்சி பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் முசோலினியும் முதலில் தானும் தன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தே எழுதிவந்தார்.

    ஆனால் நாளாக ஆக அவருடைய கருத்துக்கள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. ஜெர்மனிக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் போரில் இத்தாலியும் சேர்ந்து கொள்ள வேண்டுமென்கிற கருத்துடையவர்களுடன் இவரும் ஒத்துப் போய் எழுதத் துவங்கினார். இவருடைய பத்திரிகை தலையங்கங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சார்ந்த சோஷலிஸ்ட் கட்சி இவர் கட்சிக்குள் இருந்துகொண்டே இப்படி எதிர் மேளம் கொட்டுவதை விரும்பாமல் இவரை 1914 நவம்பரில் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர்.

    1915 மே 23ஆம் தேதி இத்தாலி அரசாங்கம் தனது படைகளை யுத்தத்துக்குத் தயாராகும்படி கட்டளை பிறப்பித்தது. அடுத்த நாளே இத்தாலி ஆஸ்திரியாவின் மீது போர் தொடுத்து விட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இத்தாலியும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டது. முன்னாள் படை வீரர்களுக்கு இத்தாலி அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து முசோலினியும் 1915 ஆகஸ்ட் 31 அன்று இத்தாலி ராணுவத்தில் சேர்ந்து, துப்பாக்கிப் படையான 11ஆவது ரெஜிமெண்டில் பணியாற்றத் தொடங்கினார்.

    யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. பழையன கழியவும் புதியன புகுவதும் இயற்கையன்றோ. அதன்படி புதிய ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப் படத் தொடங்கின. முசோலினி பணியாற்றிய படைப் பிரிவில் புகுத்தப்பட்ட ஒரு புதிய பீரங்கி வெடித்து விட்டது. அந்த வெடி விபத்தில் முசோலினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பீரங்கி வெடித்ததில் பல இரும்புத் துகள்கள் இவரது உடலில் புகுந்துவிட்டன. இவரை ராணுவ மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு நீண்ட நாட்கள் சிகிச்சை செய்து கொண்டபின் இவர் உடல்நலம் தேறி வெளியே வந்தார், எனினும் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

    ராணுவத்திலிருந்து வெளிவந்த முசோலினி மீண்டும் அரசியலில் புகுந்தார். முன்பு தன்னை கட்சியைவிட்டு நீக்கிய சோஷலிஸ்ட் கட்சிக்கு இவர் தீவிர எதிரியாக ஆனார். சோஷலிஸ்ட் கட்சியை எதிர்த்து இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தாலியில் ஒரு பலம் வாய்ந்த அரசு அமைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அரசியல் கட்சிகள் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்று சொல்லி நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆளவேண்டுமென்று இவர் பேசத் தொடங்கிவிட்டார்.

    முதல் உலக யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட பிறகு ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலுமே மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக இத்தாலி நாடு யுத்தத்தால் பெரும் அழிவுக்கு ஆளாகி நாடு பொருளாதாரத்திலும் சீர்கேடு அடைந்து நிலை குலைந்து போயிருந்தது. இத்தாலியின் பழம் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்கிற உணர்வு, ஆர்வம், வெறி மக்கள் உள்ளங்களை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. புதிய இத்தாலியை உருவாக்க மக்கள் உறுதி கொண்டனர். இத்தாலிய தேசிய உணர்வு அனைவர் ரத்தத்திலும் புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆங்காங்கே இத்தாலிய தேசிய குழுக்கள் உருவாகத் தொடங்கின. இந்த நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டு முசோலினி சிதறிக் கிடந்த தேசியக் குழுக்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மத்திய குழுவை 1919 மார்ச் 23ஆம் தேதி தொடங்கினார். அந்த ஒன்றுபட்ட தேசிய சிந்தனை இயக்கத்துக்கு முசோலினியே தலைமையேற்றார்.

    முசோலினி தொடங்கிய இந்த தேசிய அமைப்புக்கு இத்தாலிய மொழியில் ஃபாசிஸ்ட் கட்சி எனும் பொருள் படும்படியான Fasci di Combattimento என்று பெயரிட்டார். புராதன கிரேக்க சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் இருந்த பெயர் இது. அந்த கட்சிக்கு ஒரு கொடியையும் இவர் அறிமுகம் செய்தார். ஏனைய மக்களிடமிருந்து பிரித்து அடையாளம் காண வசதியாகத் தன் இயக்கத்து உறுப்பினர்கள் கருப்பு நிற சட்டைகளை அணியவேண்டுமென பணித்தார். இவர்கள் கருஞ்சட்டை வீரர்கள் எனப்பட்டனர். முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்த இத்தாலியின் முன்னாள் ராணுவத்தினரை இவர் தன் கட்சிக்குக் கொண்டு வந்தார். அப்படி இவர் கொண்டு வந்த முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய படையே, பின்னாளில் இவரது பாதுகாப்புப் படையாக உருமாறியது. இத்தாலியில் “கருஞ்சட்டையினர்” என்றால் முசோலியின் ஃபாசிஸ்டுகள் என்று புகழ் பெற்றனர்.

    1922ஆம் ஆண்டு கோடை காலம். முசோலியின் ஃபாசிஸ்ட் கருஞ்சட்டை படையினர் இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி மக்கள் மனங்களில் ஒருவித அச்சத்தை உருவாக்கினார். இவரது கருஞ்சட்டைப் படையினர் போகுமிடங்களில் எல்லாம் இவரது பரம எதிரிகளான சோஷலிஸ்ட் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் தாக்கப்பட்டனர். அவர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களுடைய கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

    1922 செப்டம் மாதவாக்கில் ஒட்டுமொத்த வடக்கு இத்தாலியும் இந்த கருஞ்சட்டையினர் வசம் வீழ்ந்துவிட்டது. இவருடைய திக்விஜயத்தினாலும், அப்போது எதிரிகளுக்கு இழைக்கப்பட்ட தீங்கினாலும் உத்சாகமடைந்த முசோலினி 1922ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தன்னுடைய “பாசிஸ்ட் கட்சி”யின் மாநாடு ஒன்றை கூட்டினார். அந்த மகாநாட்டில் விவாதித்த விஷயம் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தை இரகசியமாகத் தாக்கிப் பிடித்துக் கொள்வது என்பதுதான்.

    கிளாரெட்டா பெட்டாசி

    அதே ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, கருஞ்சட்டைப் படையினர் பல குழுக்களாகப் பிரிந்து ரோம் நகரை நோக்கி “சலோ ரோம்” என்று புறப்பட்டு விட்டனர். இந்த படையொன்றும் அப்படி ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் கூடிய படைப் பிரிவுகள் அல்ல. ஏதோ கூட்டம் கூட்டமாகப் போய் வன்முறையில் ஈடுபடும் ஒரு கும்பல் போலத்தான் இருந்தது. என்றாலும் இப்படியொரு கூட்டம் தங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது எனும் செய்தி இத்தாலி அரசர் விக்டர் எம்மானுவல் III என்பார் வயிற்றில் புளியைக் கரைத்தது. பயத்தில் ஜன்னி கண்டுவிட்டது. என்ன செய்வது என்பதில் ஒரே குழப்பம். முசோலினியின் கருஞ்சட்டைப் படைதான் ரோம் நகரை நோக்கிச் சென்றதே தவிர முசோலினி மிலான் நகரில் தங்கியிருந்தார். பயத்தில் அரண்டுபோன மன்னர் விக்டர் எம்மானுவல் முசோலினிக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதன்படி இத்தாலியில் அவருடன் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கலாமா என்று அழைப்பு விடுத்தார். இப்படியொரு அழைப்பு வந்தால் ஆட்சிக்கும், பதவிக்கும் பவிஷுக்கும் ஆலாய் பறக்கும் முசோலினி சும்மா விடுவாரா என்ன? உடனே புறப்பட்டு விட்டார். அவருடன் அவருடைய கஞ்சட்டைப் படையினர் மூன்று லட்சம் பேரும் உடன் சென்றனர்.

    ‘புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேலே படுத்துக்கொள்ளுங்கள்’ என்றானாம் புலிக்கு பயந்து போன ஒருவன். அப்படி முசோலினி ரோம் நகருக்குச் சென்றவுடன் அரசர் இவரை இத்தாலியின் பிரதமராக 1922 அக்டோபர் 31ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்து விட்டார், அப்பாடா, தொல்லை விட்டது என்று பெருமூச்சு விட்டார். இதை, இதைத்தானே முசோலினி எதிர்பார்த்திருந்தார். அவர் விரும்பியபடி இப்போது அவர் இத்தாலியின் பிரதம மந்திரி, ஆகப்பெரும் பதவி கிடைத்துவிட்டது, இனி என்ன?

    நியமன பிரதமராக பதவியேற்ற முசோலினி தன் இடத்தை வலுப்படுத்திக் கொண்ட பிறகு ஒரு தேர்தலை நடத்தினார். மக்களுக்கு என்ன ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, நமக்கெல்லாம் நன்மைகள் வந்து கொட்டப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்த முசோலினியின் ஃபாசிஸ்ட் கட்சிக்கு ஏராளமாக வாக்களித்து கருஞ்சட்டையினரை அதிகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டனர் பாராளுமன்றத்துக்கு. 1922 அக்டோபர் 31ஆம் தேதி, முசோலினிக்கு அப்போது வயது 39. சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அவருடைய சாமர்த்தியத்தாலும் இத்தாலியின் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார்.ஆரம்ப சூரத்தனம் என்பர். தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் நடந்தது. பத்து வருஷங்களில் இத்தாலி நன்கு முன்னேறியது முசோலியின் ஃபாசிஸ்ட் ஆட்சியில். முசோலினி தன்னை சர்வ வல்லமை படைத்த ‘Duce’ என்று சர்வ அதிகாரம் படைத்த தலைவராக அறிவிப்பு செய்துவிட்டார். அதுமட்டும் போதுமா, பார்த்தார் இன்னும் பெரிய பதவியை ஏற்றால் என்ன? 1925 ஜனவரி 3ஆம் தேதி பாராளுமன்றத்தில் இருந்த இவர்களது மிருகபல மெஜாரிடியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை இத்தாலியின் சர்வாதிகாரி என்று அறிவித்து விட்டார் மகா கனம் பொருந்திய முசோலினி.

    ஐரோப்பாவின் மற்ற பல நாடுகளைப் போல இத்தாலிக்கும் உலகின் தூரக் கிழக்கு நாடுகளில் குடியேற்ற நாடுகளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எந்த நாட்டைத் தங்கள் காலனியாக மாற்றலாம் என்று எண்ணியதில் இவருக்குத் தோன்றியது எத்தியோப்பியா. 1935இல் ஆப்பிரிக்காவின் இந்த மன்னராட்சி நடந்து வந்த எத்தியோப்பியாவின் மீது படையெடுத்துச் சென்றார். மனிதாபிமானமின்றி எத்தியோப்பிய மக்களின் மீது விஷ வாயுவை உபயோகித்துப் போரிட்டத்தை மற்ற ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன. யார் எதிர்த்தால் என்ன, முசோலினியின் நாடுபிடிக்கும் ஆசை அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டது. 1936இல் எத்தியோப்பியா இத்தாலியிடம் சரணடைந்து விட்டது. இத்தாலியும் ஒரு பேரரசாக மாறிவிட்டது. அந்த பெருமையெல்லாம் முசோலினிக்கே. இதுதான் இவர் வாழ்வில் கிடைத்த புகழின் உச்ச கட்டம். இனி சரிவுதான்!

    ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரும் முசோலினியும்

    முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்து விஷவாயுவைப் பயன்படுத்தியதை மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கண்டித்த போதும், இத்தாலியை ஆதரித்த ஒரே நாடு ஜெர்மனிதான். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் முசோலினியைப் பாராட்டினார். இவர் ஜெர்மனியில் முசோலினியைப் போன்றே தன்னுடைய நேஷனல் சோஷலிஸ்ட் ஜெர்மானிய தொழிலாளர் கட்சி எனும் நாஜி கட்சியை உருவாக்கி ஆட்சி புரிந்து வந்தார். ஹிட்லருக்கு முசோலினி ஒரு ஆதர்ச புருஷராகத் தென்பட்டார். ஆனால் தொடக்கத்தில் முசோலினிக்கு ஹிட்லரைப் பிடிக்கவில்லை. இருந்தபோதும் ஹிட்லர் தொடர்ந்து முசோலினியை ஆதரித்தவுடன், அதுவும் அவருடைய எத்தியோப்பிய வெற்றியை யொட்டி ஹிட்லர் முசோலினியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

    1938இல் இத்தாலியில் வாழ்ந்த யூதர்களுக்கு இத்தாலி குடியுரிமை பறிக்கப்பட்டது. இத்தாலியில் ஆசிரியர்களாகவும், அரசாங்க ஊழியர்களாகவும் பணிபுரிந்த பல்லாயிரம் யூதர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். யூதர்களுடன் மற்ற இனத்தார், குறிப்பாக இத்தாலியர்கள் திருமண பந்தம் செய்துகொள்வதை சட்டம்போட்டுத் தடுத்தார் முசோலினி. ஜெர்மனியில் ஹிட்லர் செய்த யூதர்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும், இவரும் செய்து முடித்தார். 1939 மே மாதம் 2ஆம் தேதி முசோலினி அடால்ஃப் ஹிட்லருடன் ஒரு ஒட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஐரோப்பாவில் யுத்தம் வந்தால் இவ்விரு நாடுகளும் ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டுமென்பது ஒப்பந்தத்தின் நோக்கம். ஆம், அப்போது ஐரோப்பாவில் யுத்த மேகம் கவிந்து கொண்டிருந்தது.

    இரண்டாம் உலகப் போரும் இத்தாலியும்

    1939 செப்டம்பர் 1. ஜெர்மனி போலந்து நாட்டின் மீது படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 1940 ஜூன் 10; போலந்திலும், பின்னர் பிரான்சுக்கு எதிராகவும் ஜெர்மனி அடைந்த உறுதியான வெற்றிகளை யடுத்து முசோலினி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் எதிராக இத்தாலி போரில் ஈடுபடுகிறது என்பதுதான். இப்படி உலக யுத்தகளத்தில் ஐரோப்பாவின் ஜெர்மனியும், இத்தாலியும் இணைந்து போர் புரிந்தாலும் இவ்விரு நாடுகளும் சம அந்தஸ்து உடையதாக ஹிட்லர் கருதவில்லை. ஹிட்லரின் இந்த தற்பெருமைத் தனத்தை முசோலினி விரும்பவில்லை.

    போர் மேலும் மேலும் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஜெர்மானியர்களின் வெற்றி தொடந்தன. இப்படி ஹிட்லர் வெற்றி மேல் வெற்றி பெருவதை முசோலினி சற்று போறாமையுடந்தான் பார்த்தார். போர் திட்டங்கள் குறித்து ஹிட்லர் முசோலினியிடம் எப்போதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது. தன்னை ஹிட்லர் நம்பவில்லை என்பதில் முசோலினிக்கு மன வருத்தம் அதிகம். எனினும் ஹிட்லரின் வெற்றி ரகசியம் தான் என்ன என்பதை ஹிட்லருக்குத் தெரியாமல் தெரிந்து கொள்ளவும் முசோலினி முயற்சிகள் மேற்கொள்ளலானார்.

    ஹிட்லரைப் போலவே தானும் வேறொரு முனையில் யுத்தத்தைத் தொடங்கி வெற்றிகளைக் குவித்திட முசோலினி எண்ணம் கொண்டார். அவருக்கு ஒரு ஆசை. எகிப்தில் இருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்து எகிப்தை பிடித்துக் கொண்டால் என்ன? ஆனால் இந்த யோசனையை அவருடைய படைத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் விடாப்பிடியாக முசோலினி 1940இல் எகிப்து மீது படையெடுத்தார். தொடக்கத்தில் இந்தத் தாக்குதலில் வெற்றிகள் கிடைத்த போதும், நாளடைவில் சோர்வடைந்து போன இத்தாலி படைகளை ஜெர்மானிய படைகள் வந்து காக்க வேண்டியிருந்தது.

    எகிப்தில் தனது படைகள் அடி வாங்கியதில் முசோலினிக்கு அவமானம். அதிலும் தோல்வியடையும் தருணத்தில் ஹிட்லரின் தலையீட்டினால் தலை தப்பியதிலும் அவருக்கு வருத்தம் தான் என்ன செய்ய? இந்தத் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் 1940 அக்டோபரில் இவர் கிரீஸ் நாட்டின் மீது படையெடுத்தார். ஹிட்லர் இதை விரும்பாதபோதும் வீம்புக்கு முசோலினி கிரீஸுக்கு எதிராகப் போர் தொடுத்தார். அந்த போர் முனையிலும் முசோலின்யை தோல்வி எதிர்கொண்ட நிலையில் ஹிட்லரிடம் உதவி கோரினார். 1941 ஏப்ரல் 6இல் ஜெர்மனி யூகோஸ்லேவியா மீதும் கிரீஸ் மீதும் கடும் போரை நடத்தியது. போரின் முடிவில் இவ்விரு நாடுகளும் ஜெர்மானியர் வசம் விழுந்ததோடு, முசோலினிக்கு ஏற்படவேண்டிய தோல்வியும் தடுக்கப்பட்டது.

    காதலி கிளாரெட்டா பெட்டாசி

    முசோலினிக்கு இத்தாலியில் எதிர்ப்பு

    இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய சில காலத்துக்கு ஜெர்மானியப் படைகள் அசாத்திய வெற்றிகளைக் குவித்து வந்தது. ஆனால் விரைவில் நிலைமை மாறியது. ஜெர்மனியும் இத்தாலியும் தோல்வியின் சுவையை அறியத் தொடங்கின. 1943 கோடைக் காலம் பிறந்தபின் அதுவரை ரஷ்யாவினுள் புகுந்து வெற்றிகளை ஈட்டிய ஜெர்மனிக்குத் தோல்விகள் தொடர்ந்து வரத் தொடங்கின. ஜெர்மனி, இத்தாலி கூட்டுக்கு எதிரான நேச நாட்டுப் படைகள் குண்டுமாரிப் பொழிந்தன. ரோம் நகரில் குண்டுகள் விழத் தொடங்கின. இத்தாலியில் ஆட்சி புரிந்த ஃபாசிஸ்ட் கவுன்சில் உறுப்பினர்கள் முசோலினிக்கு எதிராகத் திரண்டு எழுந்தனர். அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் இத்தாலியை பதவி இறக்கம் கண்ட அரசரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென வலியுறுத்தினர். முசோலினி கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    1943 செப்டம்பர் 12ஆம் தேதி சிறையில் அடைபட்டிருந்த முசோலினியை ஜெர்மானிய உளவுப் படையொன்று உட்புகுந்து, சிறையில் இருந்த முசோலினியை விடுதலை செய்து அழைத்துச் சென்றது. விமானத்தில் மியூனிச் நகருக்கு முசோலினி கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஹிட்லரை சந்தித்தார். பத்து நாட்கள் சென்றன. அப்போது ஜெர்மானியின் ஆதிக்கத்தில் இருந்த இத்தாலியின் வடக்குப் பிரதேசத்தில் இத்தாலிய சோஷல் ரிபப்ளிக் என்றழைக்கப்பட்ட பகுதிக்கு முசோலினி தலைவராக ஹிட்லரால் நியமிக்கப்பட்டார்.

    இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் வீழ்ச்சி

    1945 ஏப்ரல் 27, இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வரும் சமயம். ஜெர்மனியும் இத்தாலியும் தோல்வியின் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தன. முசோலினி ஸ்பெயினுக்கு ஓடிப்போய்விடலாம் என திட்டமிட்டார். 1945 ஏப்ரல் 28ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த முசோலினியும், அவரது காதலியுமான கிளாரெட்டா பெட்டாசியும் இத்தாலிய தேசிய வாதிகளால் பிடித்துக் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓட நினைத்த முசோலினியும், கிளாரெட்டாவும் மக்கட் கூட்டத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, பிணங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கட்டி தலைகீழாகத் தொங்க விடப்பட்டன. காலையில் கண்விழித்து வெளியே வந்த மிலான் நகர வாசிகளுக்கு இப்படி சிலர் உடல்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவற்றைக் கீழே இறக்கு தரையில் கிடத்திய போதுதான் அந்த பிணக் குவியலில் முசோலினியின் உடலும் கிளாரெட்டா உடலும் இருப்பது தெரினது. உடனே நகர மாந்தர் கூட்டம் கூட்டமாக வந்து இந்தக் காட்சியைக் காணத் தொடங்கினர். அப்போது இவ்விருவர் இறந்த உடலின் முகத்தில் காறி உமிழ்வதற்காகவும், சிறுநீர் கழிப்பதற்காகவும் இத்தாலியர்கள் பெரும் வரிசையில் நின்று அந்த புனிதமான காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

    பின்னர் அரசாங்க படைகள் வந்து அவ்வுடல்களை மீட்டு மிலான் நகரிலுள்ள ஒரு இடுகாட்டில் புதைத்தனர். பின்னர் 1957 ஆகஸ்ட் 31இல் முசோலினியின் உடல் மட்டும் அவருடைய குடும்ப இடுகாட்டில் கொண்டு சென்று புதைக்க ஏற்பாடு செய்தனர். இப்படி ஒரு கொடிய சர்வாதிகாரியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ராங்கியாய் நிற்பது ராதையா ! கண்ணனா !
    மூங்கிலன்ன தோளிரெண்டும், மோனலிஸா -பாங்கியைப்,
    போல்முறுவல் ஏனுனக்கு போரடித்த தோமாட்டின்
    கால்வருடும் கிச்சுக் கிசுப்பு’’….கிரேசி மோகன்
    Share
  • பயிலரங்கஅழைப்பிதழ்

    மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    அன்புடையீர் வணக்கம்

    இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன்.

    தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்

    நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை

    asem

     

    asm1

     

    asm2

    நன்றி
    அன்புடன் மு.பழனியப்பன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    COMPULSORY EDUCATION போல COMPULSORY வாத்சல்யம்

    கூடாரை வெல்லும் கோவிந்தன் தன் பாகவதம் பகவானுக்கே வெளிச்சம்….
    ————————————————————-

    craz
    விரல்சொடுக்கிக் கன்றை வரவழைத்துக் காலில்
    சரண்படுத்தும் கட்டாய சாமி -உரலிடுக்கில்
    மாட்டிய போது மருதம் முறித்தன்று
    காட்டினான் வாத்ஸல்யம் காண் …. கிரேசி மோகன்….

    Share