குருட்டுக் கவிதை!
-சரவணன், கோலாலம்பூர்
ஔவைக்கு கனி
கொடுத்திருந்த முருகன்
பாவம்.. பசித்திருந்த
குப்பம்மாள்களைத்தான்
கண்டு கொள்ளவே இல்லை….!
நந்தனுக்கு விலகி
வழிவிட்டிருந்ததாம்
நந்தியும்.. அப்போதும்கூட
சிவன் அழைத்திருக்கவில்லை
உள்ளே வா என்று…!
புழக்கடை வாசல்
மிதித்துவிட்டதற்காய்ச்
சூடு வாங்கியிருந்த
சுப்பனின் முதலாளியும்
அதிகாலைகள் தவறாமல்
சொல்லிவிடுவார்…
வினைதீர்ப்பாய் விநாயகாவென…!
யோசித்து ஆழ்ந்திருக்கையில்
அம்மா அதட்டினாள்…
நேரத்தோட கோயிலுக்குப் போ…
இல்லன்னா சாமி
கண்ணைக் குத்திரும்…!
நெடுஞ்சாண்கிடையாய்
நீட்டிப்படுத்து…தரிசனங்களுக்காய்
விழிகள் திறந்தேன்…
செட்டியார்களால் கட்டப்பட்டு
அவர்களுக்காய்
பாத்தியப்பட்டது… எனச் சொன்னது
முதற் பிரகாரம்…!
சாமி…
கண்ணைக் குத்தியிருக்கலாம்!!