தாய்மை
திருமதி. மீனாட்சி நாகப்பன், புதுக்கோட்டை
‘பெண்’ அவள் பேசும் பொற்சித்திரம்!
பெண்- அவள் மகத்துவம் பெறும் நன்னாள் எதுவன்றோ!
அது “தாய்மை”அடையும் நாளன்றோ!
மங்கை – அவள் மலர்மாலை, மாங்கல்யம் அணிந்து
மனங்கள் சங்கமித்து மண்ணுலகில்
கரு உருப்பெற்று, உயிர்பெற்று
கண்ணுக்கு கருவிழிபோல் காத்திடுவாள் கண்ணும் கருத்துமாய்!
மடியில் கிடத்தி மழலை மொழிகேட்டு
மனதும், நினைவும் மகிழ்ச்சியாகப்
பூரித்துப் புன்னகை பூப்பதும் பெண்ணாலே!
இடையில் தன்மழலையை இருத்தி வைத்து
இனிய மொழிகள் கேட்டிடுவாள்!
விண்ணகத்து நிலாக்காட்டிச் சோறு
ஊட்டிடுவாள்! தாய்மைப்பேறு பெருமை
பெற்ற தவத்தை நிறைவு செய்ய!
பள்ளி சென்ற சிறுபிள்ளை பாலகன் ஆனாலும்
தாயவளுக்கு தங்கக்குழந்தைகளே
அரியாசனத்தில்அமர வைப்பவர்கள்!
கருணையும் அன்பும் கலந்து
கருவிழியில் தேக்கிடுவாள்!
கண்ணீரில் தாலாட்டிடுவாள்
தாய்மைப்பேறு பெற்ற பின்!
’ஆண்-பெண்’ என்றழைக்கும்போது
ஏற்படும் கடினம்
’அம்மா – அப்பா’ என்றழைக்கும்போது
மென்மை ஆடை அணிகிறது
இந்தத் தாய்மைப்பேறு பட்டம்
பெறுவதால் தரணியில்!