Blog

  • புதிய சுதந்திரப் பள்ளு

     

    புவனேஷ்வர்

     

    பல்லவி:th_india_flag

    ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – புத்தி

    ஆழத்தில் சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

    (ஆடுவோமே)

    சரணங்கள்:

    எங்கள்ம றைகளைப் போற்றி யறிவோம் – நல்ல

    முன்னோரின் சொல்வார்த்தை நம்பிநடப் போம்;

    அன்னியர்தம் கட்டுக்கதை தள்ளிடுவோமே – எம

    துண்மைவர லாற்றைப்பறைக் கூத்திடு வோமே.

    (ஆடுவோமே)

    செய்தொழிலை யீசனுக்கு என்றுகொடுப் போம் – அதில்

    இந்தத்தொழில் மட்டமென்று சொல்ல லொழிப்போம்;

    சொந்தத்தொழில் செய்துநம துள்ளம்நிறைப் போம் – பிறர்

    மண்ணுக்கினி ஏவற்ப்பணி செய்து மாயோம்.

    (ஆடுவோமே)

    நாம்வாழும் தேசம்நம தென்று அறிந்தோம் – இந்த

    மண்ணில்விளைப் பண்டமது நம்மதுணர்ந் தோம்;

    மேலையவர் சந்தைக் கதை விலைபேசோம் – அவர்

    ஆசைவார்த்தை கேட்டுமோசம் போக மாட்டோம்;

    (ஆடுவோமே)

    ஆறுமலைக் காடுயிங்கு பொதுவினில்வை ப்போம் – அதில்

    ஆருக்குமிங் குரிமையுண்டு என்று விதிப்போம்;

    வீறுகொண்டே தூய்மை பேணிடுவோமே பண்டை

    வீரரைப்போ லேயுறுதி மானம் வளர்ப்போம்.

    (ஆடுவோமே)

    சேற்றதனில் கால்பதிக்க அஞ்சுதல்செய் யோம் – நல்ல

    கொல்லைதனில் காய்கிழங்கு கீரை வளர்ப்போம்;

    பாலைத்த ரும்நல்ல பசுவளர்த் தேயவள்

    தாயெனவே கும்பிட்டுநாம் கொஞ்சி மகிழ்வோம்;

    (ஆடுவோமே)

    மேற்கிலவர் சொல்லுவதை யாய்ந்துதெளி வோம் – அதில்

    கொள்ளுவன கொண்டுமிச்சம் தள்ளிநடப் போம்;

    நம்வேர்கள் நாமறிந்து நலஞ்செய்குவோம் – பிறர்

    வஞ்சனைகள் பகுத்தறிந்து வழிகாணு வோம்;

    (ஆடுவோமே)

    பொருளீட்டல் குடும்பத்துக் கென்று வுணர்வோம் – வெறும்

    தொழில்மட்டும் வாழ்க்கையில்லை என்றுதெளி வோம்;

    உற்றவு றவுகளை நெஞ்சிற்சுமப் போம் – ஒரு

    தீங்குவர மாட்டாது பகிர்ந்துண்ணு வோம்;

    (ஆடுவோமே)

    மாதர்கு லத்துக்குப் போற்றுதல் செய்வோம் – பிறர்

    பெண்டிரும்நம் பெற்றவளும் ஒன்றெனச் சொல்வோம்;

    கொண்டவுயிர்க் கோமகளே நிறைகுடமென்னக் – கூடிக்

    கற்புநெறி நெஞ்சொழுகத் தோழமைகொள் வோம்;

    (ஆடுவோமே)

    கொண்டவனை நம்பியுயிர் நட்பாகு வோம் – அவன்

    வில்லாக நாணாகி நாம்வாழு வோம்;

    தாரமவள் தாயுமென நெஞ்சமுரைப் போம் – அவன்

    சக்கரம்நாம் மையத்திலே யச்சாகு வோம்;

    (ஆடுவோமே)

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – நல்ல

    காதல் நலமெனக ளித்தாடு வோம் ;

    காதலது நல்லின்பம் காதலி தெய்வம் – அதில்

    ஊறுசுவை யுண்டதுநல் லுயிர்க் கமுதாம்!

    (ஆடுவோமே)

    Share
  • சுதந்திரக் கவிதை

     

    சக்தி சக்திதாசன்

    flag

    அன்னை பாரதத்தின்
    அடிமை விலங்கொடிந்த
    உன்னதமான நாளதில்
    உளமார வாழ்த்துகிறேன்

    சுதந்திரக் காற்றைச்
    சுவாசிக்கும் இன்பத்தை
    சிந்திக்கும் போதெந்தன்
    தித்திக்கும் மனமென்பேன்

    கருணை மனம் கொண்டு
    கடமை தனை எண்ணி
    காந்தி எனும் தந்தை
    கட்டிய பெருங் கோட்டை

    நேற்றைய வியர்வையில்
    இன்றைய செடியொன்றில்
    நாளை மலரும் ரோஜாவாக
    நிமிர்ந்திடும் பாரத தேசம்

    கனவுகளில் மட்டும் அந்த
    கவியுலக வேந்த பாரதி
    கண்டு வந்த சுதந்திரத்தை
    கணக்கின்றிச் சுவைக்கின்றோம்

    உயர்ந்திடட்டும் இச்சுதந்திரம்
    உருவாகட்டும் புதுப் பாரதம்
    இல்லையென்போர் இல்லையென
    இருப்போர்கள் இயங்கட்டும்

    பொருளாதார ஏணியின்
    உச்சத்தை நோக்கி வேகமாய்
    நடைபோடும் பாரத தேசம்
    நிறைகிறது நெஞ்சம் இன்று

    உயிர்கொடுத்து மண் காத்த
    உத்தமர்கள் நினைவு வாழ
    உழைப்போர்கள் உயர்ந்திடும்
    உன்னத பூமியாக மாற்றிடுக!

    இளையோர்கள் விழித்திடுங்கள்
    இதயத்தைத் திறந்திடுங்கள்
    நாளை உங்கள் கைகளிலே
    நெஞ்சுயர்த்தி நடவுங்கள்!

    என்னினிய சொந்தங்களே !
    தமிழன்னை பாதம் பணிந்து
    தமிழாலே கவி தந்து
    வாழ்த்துகின்றேன் அனைவரையும்!

     

    Share
  • அரவிந்தப் பொய்கையாக்கு!

    சு.ரவிGandhiji   28 June 09 2
    Sri Arabindo 2
    வணக்கம் வாழியநலம்

     

    தேசத்தந்தைக்கும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவதரித்த

    சுதந்திரவீரர் மஹான் அரவிந்தருக்கும் ( மஹான் அரவிந்தரோடு

    பிறந்தநாள் கொண்டாடும்) அடியேனின் சிறு காணிக்கை..

    பார்க்க, ரசிக்க….

    “மோகத்  திரைவிலக்கி  மோனப்  புனலமிழ்த்தி

    யோகச்  சுடரெனக்குள்  ஏற்றிவிடு –  போகம்

    தருமிந்த  வாழ்வை  நெறிப்படுத்தி  நெஞ்சை

    அரவிந்தப் பொய்கையாக் கு!

    Share
  • மகான் ஸ்ரீ அரவிந்தர்

    ஷைலஜா

    Aravindharஅரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது

    1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

    1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

    தந்தையின் விருப்பத்திற்காக லண்டனில் படித்தாலும் ஐசிஎஸ் தேவில் வெற்றிபெற்றால் ஆங்கிலேய்ரகளின் சம்பளத்தைவாங்கிக்கொண்டு உயர் அதிகாரியாக இருக்க விரும்பாததற்குக்காரணம் ந்ம் இந்தியாவை அடிமைப்படுத்திய. வெள்ளையர்மீது அவருக்கிருந்த கோபம் அவர்களிடமிருந்த பாரதமாதாவைக்காப்பற்றவே 1893ல் இந்தியா திரும்பினார்.

    இந்துபிரகாஷ் மற்றும் வந்தே மாதரம் என்ற பத்திரிகைகள்மூலம் விடுதலை எழுச்சியை ஏற்படுத்தினார்.

    மணமான சில நாட்களிலேயே அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பொய்கேசில் அரவிந்தரை உள்ளே தள்ளினர் பிறகு வழக்குப்பொய் என வெள்ளையர்களே விடுதலையும் செய்தனர்.

    சிறைவாசத்தில் அவருக்கு கிருஷ்ணதரிசனம் கிட்டியது. பூரண யோகத்திற்குவித்திடவே இச்சிறைவாசத்தை இறைவன் தமக்கு அமைத்ததை உணர்ந்தார்.

    மகாகவி பாரதியார் தான் புதுவையில் அரவிந்தரை வரவேற்ற முதல் தமிழர்.பகவான் அரவிந்தரின் திருப்பாதம் புதுவையில் தொட்ட நாள்DSC08198

    4 4 1910 ஆகும். அரவிந்தரின் தரிசனம் கிட்டியமாத்திரத்தில் பலகாலம் தாம் தேடிய தெய்வம் இவர்தான் என பிரான்சிலிருந்து வந்த மிர்ரா கூற , .இந்த உலகத்து அனைத்து ஈவராசிகளுக்கும் எனக்கும் தாய் மிர்ரா அல்பொன்சா ..அன்னைதான் அவரை வணங்குங்கள் வாழ்வு மேலோங்கும்” என்றார் அரவிந்தர்.

    இரண்டு மகா அவதாரப்புருஷர்கள் ஒரே இடத்திலேயேயோகம் செய்து ஒரே சமாதியிலேயே இருந்துகொண்டு உலகத்தை ரட்சித்து வருவது என்பது பாண்டிச்சேரியின் அரவிந்த ஆஸ்ரமத்தில்தான்.

    இறைவன் தனக்கென்று ஒருநாட்டைதேர்ந்தெடுத்துள்ளான் அது இந்தியத்திருநாடு என்றார் அரவிந்தர்

    சாவித்ரி என்ற மகா மந்திர நூலைப் படைத்த அரவிந்தர் 1950 டிசம்பர் 5ம்தேதி அதிகாலையில் தனது உயிரைத்தன் விருப்பத்தின்படி உடலிலிருந்து விலக்கிக்கொண்டார்.

    இதன் மூலம் சத்திய ஜீவ சக்தியை ஐந்துநாட்கள் அதாவது 111மணிநேரம் பொன்னொளியைத்தன் உடலில் வெளிப்படுத்தொக்கொண்டு இருந்தார்.

    இன்றும் சூட்சம உலகில் இருந்துகொண்டு அன்னையெனும் மகாசக்தியுடன் தனது அருளையும் அளிக்கும் மகான் அரவிந்தரின் பிறந்த நாளும் தாயகம் சுதந்திரம்பெற்ற திருநாளும் ஒன்றாக அமைந்து.ள்ளதில் வியப்பென்ன!!

    Share
  • எங்கே போகிறது காலம்-சுதந்திரதின நல் வாழ்த்துகள்

    சத்தியமணி

     

    சுதந்திரதின நல் வாழ்த்துகள்
    வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

    எங்கே போகிறது காலம்

    இங்கே யேன‌லங் கோலம்

    மேலே எழுகிறது நாசம்

    கீழே  விழுகிறது தேசம்….ஓ..()

     

    குழிகள்பறித்து   முடமானார்

    விழிகளிருந்தும் குருடானார்

    செவிகளிருந்தும் செவிடானார்

    அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ஓ..()

     

    கற்ற    கல்வி  தரும் பட்டம்

    உற்ற  வேலை யின்றி கட்டம்

    வரிகள் போக வருமானம்-அவ

    மானம் இங்கு வெகுமானம் ……ஓ..()

     

    மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு

    மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு

    சாதி பெயரில் வாக்கு சீட்டு

    மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……ஓ..()

     

    நீதிநியாயம் வெறும் பேச்சு

    பாதிதர்மம் எங்கு போச்சு

    வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

    என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……ஓ..()

    Share
  • இனி ஒரு சுதந்திரம்!…

    பெருவை  பார்த்தசாரதி

     

    இனி ஒரு சுதந்திரம்!…

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

    images11

    இன்று (15-08-2013) 67 வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஏழெடுக்குப் பாதுகாப்பின் அரவணைப்பில், நமது நாட்டின் தலைவர்களால் நாடெங்கிலும் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இந்தியாவின் சாதனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    இந்த சுதந்திர தினத்தின்போது மிகவும் பெருமைப் படவேண்டிய முக்கியச் செய்திகளுள், இந்தியாவில் தயாரித்த பிரமாண்டமான விமானம்தாங்கிக் கப்பல் “விக்ராந்த்” கண்டிப்பாக இடம்பெற்று அனைவராலும் பாராட்டப் படவேண்டிய தகுதியான செய்தியாக இருக்கிறது. தேசியக்கொடியேற்றி தலைவர்களெல்லாம் சிறப்புரையாற்றும்போது, இதுபோல் இன்னும் பல இந்தியப் பெருமைகளை அள்ளி அடுக்குவார்கள்.

    இதே ஆண்டில் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளோடு நம்மை ஒப்பிடும்போது, 60 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் நிறைய வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதில் மற்ற நாட்டிற்கு இல்லாத பெருமை நமது நாட்டிற்கு உண்டு. அதே சமயத்தில் மற்ற விஷயத்திலும் அதாவது, உலக வங்கியில் இந்தியாவின் கடன் பாக்கி, பொருளாதார நிலைமை, நாட்டின் பாதுகாப்பு, தற்காப்பு இலக்கணம், அனைவருக்கும் கல்வி போன்றவற்றில், மற்ற நாடுகளை விட இன்னமும் பின் தங்கி இருப்பது வருத்தம் தரக்கூடியது.

    ஆனால், நம் சுதந்திரம் அடைந்து என்ன சாதித்திருக்கிறோம் என்று நம் வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களைக் (சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவர்கள்) கேட்டுப் பாருங்கள், அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்காது. ஏனென்றால்?…..காலணி ஆதிக்கத்தால் அன்று பாரதம் பாதிப்படைந்திருந்த போதிலும், நேரத்திற்கு எல்லாம் கிடைத்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பற்றி, மரியாதையும் மதிப்பும் மேலோங்கி இருந்தது பற்றி, வேடிக்கையாக உதாரணங்கள் சொல்லி விவரிப்பார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டால், அண்டை மாநில உறவுகள் மோசமடைந்தது, கல்வி வியாபாரமாகியது, லஞ்சம் தலைவிரித்தாடுவது, இப்படி நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளை அள்ளி அடுக்குவார்கள். மற்ற விஷயத்தைவிட இன்று அதிக அளவில் பெருகி வரும் “முதியோர் இல்லம்” அதில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

    நாளை சுதந்திர தினம்,

    இன்றே டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி பதுக்கி விடத் துடிக்கும் இளைஞர் பட்டாளம்,

    புதிய சினிமாப் படம் பார்ப்பதற்கு டிக்கட் வாங்க, சுதந்திர தினத்தன்று கியூவில் நிற்கும் பாமர ஏழை மக்கள்,

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விடுமுறையை வீணடிக்கும் கூட்டம்,

    இதுதான் சுதந்திர தினக் கொண்டாட்டமாக இன்றய நிலை.

    ஒரு காலத்தில் நமது நாடு “பாரதம்” என்ற பெயரில் உலகம் முழுவதும் அறியப்பட்டு, அங்கே நமது நாட்டின் கலாச்சாரம் மேலோங்கி இருந்தது. இன்று அது மாசு படத்தொடங்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதுதில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை உலகையே உலுக்கியது, இதுபோல தருமபுரி சம்பவம் போன்ற பலவற்றைச் சொல்ல முடியும்.

    சுதந்திரம் அடைந்த ஆண்டிலிருந்து, இன்று வரை என்னன்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?..

    எந்தந்த துறைகளில் நாம் இன்னும் முன்னேறவில்லை?…

    நம் நாட்டில் கல்வி அறிவு பெற்ற இளைய சமுதாயத்தினர் ஏன் வெளிநாட்டில் பணி செய்கிறார்கள்?..

    சுதந்திர இந்தியாவில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், ஆலயங்களிலும் ஏன் குண்டு வெடிப்பு?…

    “சுதந்திரம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?…

    பேச்சுச் சுதந்திரத்தால் வன்முறை,

    எழுத்துச் சுதந்திரத்தால் கலவரம்,

    மொழிச் சுதந்திரத்தால் இனப்படுகொலை,

    ஒவ்வொரு ஆண்டும் “சுதந்திரதின” விழாவைக்கூடத் தகுந்த பாதுகாப்பின்றி சுதந்திரமாகக் கொண்டாடமுடியவில்லையே ஏன்?..

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால்!.. எல்லாவற்றுக்கும்  இன்னும் ஒரு சுதந்திரம் தேவை  என்று போராட வேண்டி இருக்கும்.

    மஹத்மா, நேதாஜி, நேரு, திலகர், வஉசி போன்ற பல தலைவர்களை நினைத்து நாட்டுப் பற்றோடு சுதந்திர தினத்தை உண்மையிலேயே கொண்டாடுகிறோமா?.. என்றால்!…. “இல்லை” என்பதே சரியான பதிலாக இருக்கும் போலிருக்கிறது.

    downloadஇதையெல்லாம் அன்றே யோசித்துப் பார்த்ததால்தானோ என்னவோ, 200 ஆண்டுகால காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது, அந்த மகிழ்ச்சியில் “மஹாத்மா” அவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதை இங்கே, இந்த நேரத்தில் கண்டிப்பாக நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவித்தார்களோ, அது இப்போதும் குறைந்த பாடில்லை. இருந்தாலும், இதுவரை சாதித்ததை நினைத்து, நேர்மறை எண்ணங்களோடு  “சுதந்திர தின வாழ்த்துக்களை”   ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

    “அனைவருக்கும் அறுபத்து ஏழாவது சுதந்திர தின வாழ்த்துக்கள்”

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐம்பெரும் தேவியரின் அணிவகுப்பு!

    பவள சங்கரி

    DSC00600

    ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்று வழமையானதொரு நிகழ்வாக இராமல் ஒவ்வொரு ஆண்டும் அரங்க அமைப்பில் தொடங்கி, கூடுதலான எண்ணிக்கையிலான புத்தக விற்பனை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், பிரபலங்களின் சந்திப்பு என மென்மேலும் மெருகேறிக்கொண்டே போகும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் இந்த 2013ம் ஆண்டில் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாக, சென்ற 12-08-2013ல், அற்புதமான பெண் படைப்பாளிகள் ஐவர் ஒருங்கே அலங்கரிக்கும் அற்புத மேடையை அமைத்துக் கொடுத்திருக்கும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் மகத்தான சாதனை பாராட்டிற்குரியது. ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று நிரூபிக்கும் வகையில் இந்தப் பெண்கள் ஐவரும் தம் எண்ணற்ற படைப்புகள் மூலம் சமுதாயத்தில் பெரும் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர்கள். இப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தவர் மற்றொரு பெண் சாதனையாளரான, எம்.பி. என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளரும், மறைந்த மாபெரும் மனிதரான திரு சுத்தானந்தம் அவர்களின் துணைவியாருமான திருமதி வசந்தா சுத்தானந்தம் அவர்கள். தம்முடைய தலைமை உரையில் புத்தக வாசிப்பின் அருமை குறித்தும், புத்தகப்பிரியரான தம் கணவரின் நினைவுகள் குறித்தும் தங்கள் இல்லத்தில் அவர் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு இலக்கிய நூல்கள் நிறைந்த நூலகம் குறித்தும் சுவைபட விளக்கினார். ஐம்பெரும் தேவியரின் அறிமுகங்களை வெகு நேர்த்தியாக, மிகச் சிறப்பான முறையில் தமக்கே உரிய நாவன்மையுடன் நிகழ்த்தியிருந்தார், நிகழ்ச்சியின் அமைப்பாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து இரத்தினச் சுருக்கமாக, அழகாகச் சிறு உரை நிகழ்த்தியவர் யாழி நிறுவனங்களின் தலைவர், திருமதி.எழிலரசி மதிவாணன் அவர்கள்.

    jyothi

    முதலில் பேசிய மாபெரும் எழுத்தாளரான, அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தே தன் மூச்சு எனத்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது எழுத்து மட்டுமே என்று வாழ்பவர். காலங்கடந்து நிற்கும் அரியதொரு பொக்கிஷமான, சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்ற , 900 பக்கங்கள் கொண்ட சிறந்த சுதந்திர எண்ணங்களைச் சுமந்து வந்திருக்கும் ‘மணிக்கொடி‘ என்ற புதினத்தை தன் வாழ்நாளின் சாதனையாகக் கொண்டு படைத்தவர். வெகு அழகாக, நகைச்சுவை உணர்வுடன், எந்த மேடை அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் வெகு இயல்பாக நம் வீட்டுப் பெண்மணி போல, காலத்தின் அருமை கருதி மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்றார், நம் ஜோதிர்லதா கிரிஜா அம்மையார் அவர்கள்.

    அடுத்து பேசிய திருமதி விமலா ரமணி அவர்கள். இவருடைய படைப்புகளின் எண்ணிக்கைகளை திரு ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்ட போது இது எப்படி சாத்தியம் என்று மிக ஆச்சரியமாக இருந்தது. கற்பனை ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. சின்னச் சின்ன கதைகளுடன், பல மேற்கோள்களுடன் மிக அழகான மேடைப்பேச்சும் அளித்து சபையோரை வெகு எளிதாக தம் புறம் இழுத்துவிட்டார். இவருடைய பேச்சில் என்னை மிகவும் கவர்ந்தது, கவிஞர் அப்துல் ரகுமான் சொன்ன மேற்கோளான, “புத்தகம் வெறும் காகிதம்தான். ஆனால், அதைப் படிக்க படிக்க ஆயுதமாக மாறும்” என்பதும், ‘success’ என்ற ஆங்கில வார்த்தைக்கான விளக்கமும்.நல்ல சமுதாய சிந்தனைகள் வளர வேண்டுமென்றால் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். எழுத்து என்பது ஒரு அக்னி போல, ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆவது போலவும், வக்கீல் மகன் வக்கீல் ஆவது போலவும். ஒரு நடிகை மகள் நடிகை ஆவது போலவும்., ஒரு எழுத்தாளர் மகனோ அல்லது மகளோ எழுத்தாளராகி விட முடியாது. எழுத்தாளரின் வாரிசு என்பதாலேயே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிட முடியாது, அதற்கு சிந்தனை அவசியம். சிந்திக்கும் திறமை இருந்தால் மட்டுமே அவன் எழுத்தாளர் ஆக முடியும் என்றும் ஆணித்தரமாகக் கூறியதுதான்!

    அடுத்து வந்த அற்புதமான கவிஞர், இரா.மீனாட்சி அவர்கள், சாகித்ய அகாடமி விருதின் குழு உறுப்பினராக இருந்தவர், கவிக்கோ என்ற பட்டம் பெற்றவர், சிறந்த கவிஞர், படைப்பாளி என்பதையும் மீறி, தான் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதையும் நிரூபிக்கும் வகையில் பாண்டிச்சேரி ஆரோவில் குழந்தைகள் காப்பகத்தின் ‘அக்கா’ என்று போற்றப்படும் அன்பு நெஞ்சம் கொண்டவர். தம் உரை முழுவதையும் அழகான கவிதை நடையிலேயே வழங்கியவர். பழம்பெரும் படைப்பாளிகளின் கீர்த்தியை வெகு நேர்த்தியாக கவிச்சரமாகக் கோர்த்து, அற்புதமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ‘தரையில் இறங்கும் விமானம்’ தந்த தவப்புதல்வி எழுத்தாளர் திருமதி இந்துமதி இவர்தான் என்பது அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கையிலும் பிரதிபலித்தது. இயற்கையோடு ஒன்றிய எண்ணங்களைச் சுமந்து, வாழ்க்கையை மிக அழகாக இரசிக்கும் வல்லமை பெற்றவர் என்பதையும் அவர்தம் உரையின் மூலம் எளிதாக விளங்கிக் கொள்ள முடிந்தது. வாசிக்கும் வழமையே தம் மூச்சாகக் கொண்டு வாழ்பவர் என்பதைத் தம் பேச்சின் மூலம் வெகு இயல்பாக உணர்த்தியவர். ஒரு குழந்தைக்கு பாட்டி, தாத்தாவின் அருகண்மை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அற்புதமாகத் தம் பாட்டியின் நினைவலைகளுடன் பகிர்ந்து கொண்டார். தன்னைப்போலவே தன் மகனும் சிறந்த புத்தகப் பிரியர் என்பதை மிகப்பெருமையான ஒரு தாயாக தலை நிமிர்ந்து கொண்டாடிய விதம் அருமை. நல்ல சமுதாயச் சிந்தனையாளர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபித்தார், இந்த மிகச் சிறந்த படைப்பாளியான இந்துமதி அவர்கள்.

    DSC00566

    இறுதியாக அத்துனைப் பேரையும் பேச்சு மூச்சின்றி கட்டிப்போடச் செய்தவர், உலகறிந்த மிகப்பெரும் படைப்பாளியான திருமதி சிவசங்கரி அவர்கள். வ.உ.சி. பூங்கா மைதானத்தின் பிரம்மாண்ட கூட்டத்தைக் கண்ட சிவசங்கரி அவர்கள் மிகவும் பிரம்மித்துப் போனார்கள். இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு புத்தக விழாவிலும் பங்கேற்று இருந்தாலும், இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்போல இதுவரை எங்கும் பார்த்தது இல்லை என்றும் “உங்களை எழுத்தாளராகிய நான் தலைவணங்கி பாராட்டுகிறேன்” என்றும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் அவர்களின் பேச்சு பற்றியும் மிக வியந்து பாராட்டினார். இவருடைய மிக நீண்ட சாதனைப்பட்டியல் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்தம் வாழ்நாள் சாதனையாக எண்ணி, மகிழ்ந்திருப்பது, அவருடைய 16 ஆண்டுகால முழுமையான உழைப்பான, இந்திய மொழிகளின் பாலங்களாக அமைந்ததுதான். 47 நாட்கள் என்ற அவருடைய புதினம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவரே பேசியது சுவையாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய இந்த நாவலை , ஒரு கல்லூரிக் கருத்தரங்கில் வைத்து மாணவர்களின் மத்தியில் ஆய்வு செய்தது குறித்து அவர் சொன்ன தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றைய காலகட்டத்திலும் மிகப்பொருத்தமாக இருக்கக்கூடியது. அவருடைய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற புதினம் மனதை விட்டும் என்றும் அகலாத ஒரு சிறந்த சமுதாய அக்கறையுடனானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிகச் சிறந்த இந்த சமகால எழுத்தாளர்களுடன் கலந்து உரையாடியதில் உள்ளம் பூரித்ததும் உண்மை. எத்துனைப் பிரபலமாக இருந்தாலும், மிக எளிமையாகவும், அன்புடனும், மனித நேயத்துடனும் பழகுவதிலும் உள்ளம் நெகிழச் செய்தார்கள்.

    Share
  • சிலை அழுதது – 2

    தேமொழி

     

    “மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் உங்கள் வண்டி வரும் என்று காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ எங்களை அனுமதிப்பீர்களா?” என்ற குரல் கேட்டு அபி திரும்பினாள்.  வாட்ட சாட்டமான உருவத்துடனும், துக்கத்தை அனுசரிக்க கருப்பு ஆடை அணிந்திருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் இருகைகளிலும் பிடித்துக் கொண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார்.  அவள் அவமானப் படுத்தப்பட்டு விட்டுச் செல்லப்பட்டதைப் பார்த்திருந்தாலும், அது தனக்குத் தெரியாதது போல நாகரிகமாக கேள்விகளை எழுப்பிய அவர் மேல் அபிக்கு ஒரு மரியாதை வந்தது.

    “என் பெயர் அபிகெயில்… அபி என்று எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிடுங்கள், நீங்கள்…உங்கள் பெயர் மிஸ்டர் …” என இழுத்தாள்.

    “என் பெயர் தாமஸ் ஜோன்ஸ், டாமி என்று என்னை எல்லோரும் அழைப்பது  போலவே நீங்களும் கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.  இது எனது மகள் கேண்டிஸ்ஸும், மகன் கேரியும்,” என அறிமுகப் படுத்தினார்.

    சிறுவர்கள் இருவரும் அபியின் கையைக் குலுக்கினர்.  அபிக்கு வழிகாட்டியவாறு தனது வண்டியை  நோக்கி நடந்த டாமி, தான் ரிச்சர்டின் பள்ளிநாட்களின்  நண்பன் என்றும், இப்பொழுது மாநிலத்தின்  பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் என்றும் தன்னை அறிமுகப்டுத்திகொண்டார்.  டாமியும் அபியும் முன்னிருக்கையிலும், குழந்தைகள் பின்னிருக்கையிலும் அமர்ந்து கொள்ள, டாமி நகரை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

    “உன்னை எங்கே இறக்கிவிடவேண்டும் அபி?”

    “நான் விடுதியில் இருந்து தேவாலயத்திற்கு வாடகை வண்டியில்தான் வந்தேன்,  அங்கிருந்து மயானத்திற்கு ரிச்சர்டின் பெற்றோர்களுடன் வந்தேன், என்னை நான் தங்கும் விடுதியிலேயே இறக்கிவிட்டால் நலம், விமானநிலையதிற்கு அருகில் இருக்கும் ‘ஹாலிடே இன்’னில் தங்கியிருக்கிறேன்.”

    “திரும்பவும் எப்பொழுது ஊருக்குப் போகிறாய்? எங்கள் வீட்டிற்கு வர நேரமிருக்குமா?”

    “வரவேற்பிற்கு வந்தனம் டாமி, ஆனால் நாளை அதிகாலை விமானப்பயணத்திற்கு திரும்பிச் செல்லும் பயணச்சீட்டை பதிவு செய்திருப்பதால் இம்முறை வர இயலாது, அடுத்தமுறை பார்ப்போம். சொல்லு டாமி, இதுவரை ரிச்சர்ட் தனக்கு ஒரு கால்பந்தாட்டக் குழு பயிற்சியாளர் நண்பன்  இருந்ததைச் சொன்னதில்லையே!”

    “இல்லை, இது எனது புதிய பணி அபி. பணியில் சேர்ந்து ஓராண்டுதான் ஆகிறது. எனது பின்புலம், கல்லூரியில் படித்தது எல்லாம் கணினி அறிவியல். கணினி நிரல்கள் எழுதுவதில் எனக்கு விருப்பம் அதிகம்.  ஆனால் பள்ளி நாட்களில் இருந்து கால்பந்தாட்டத்தில் சூரன்.  அதனால் நல்ல நிதியுதவி பெற்று புகழ் பெற்ற பல்கலையில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிறகு புகழ் பெற்ற சிலிக்கான்  பள்ளத்தாக்கு நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது.  ஆனால் மனிதரை மனிதர் காலை வாரிவிடும் வணிக நிறுவனங்களில் என்னால் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியவில்லை. என் கனவு, குறிக்கோள்  எல்லாம் கால்பந்தாட்டம்தான். அதனால் இந்த மாநிலப் பல்கலையில் பயிற்சியாளராக பணி புரிய ஒரு வாய்ப்பும் கிடைத்ததால் மீண்டும் ஊருக்கே வந்துவிட்டேன்.”

    “அதனால் என்ன டாமி? வாழ்க்கையில் உனக்குப் பிடித்த பாதையில் நீ பயணம் செய்கிறாய், அதுதானே முக்கியம்.  அத்துடன்  மாநில அரசுப்பணிகளில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பல்கலைகளின் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர்கள்தானே.  ஊதியத்தைப் பொறுத்தவரை நீ அதிகமாக தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்காது. உன் திறமை சரியாக வெளிப்பட்டால் பெரிய தேசிய அளவு குழுக்களிலும் நீ இடம் பெற வாய்ப்பும் கிடைக்கலாம், அப்படி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  அப்படி நடந்தால் தொலை காட்சியில் கால் பந்தாட்ட வீர்களிடம் நீ தொண்டை கிழியக் கத்துவதையும், அடுத்த பந்துகளை  எப்படி எதிர் கொள்ள வேண்டும்  என்று அவர்களுக்குப்  படம் போட்டு விளக்கித்  தலை தலையாக  அடித்துக் கொள்வதையும் பார்த்து ரசிக்கலாம் அல்லவா?” என்று அபி சிரித்தாள்.  “ஆனால் உன் கணினி நிரல்கள் எழுதும் திறமை வீணாகிறதே என்றுதான்…. என்று இழுத்தவள், திடீரென நினைவு வந்தவளாக, முகம் பளீரிட இரு…இரு … நீதானே பள்ளி இறுதி ஆண்டின் ப்ரோம்  நடனத்தில் உன் நடனத் துணையை ரிச்சர்டுக்கு மாற்றிக் கொடுத்து உதவி செய்த டாமி?” என்றாள்.

    “ஹ..ஹா..ஹா..” என்று சப்தமாகச் சிரித்த டாமி, “உனக்கு அதை ரிக்கி சொல்லியிருந்தாலும், நீ மறக்காமல் நினைவு வைத்திருப்பதுதான் ஆச்சரியம்” என்றான். பிறகு பள்ளி நாட்களை நினைத்து அவன் முகம் மலர்ந்தது.

    “ஷெர்லி டேவிஸ், ஆஷ்லி டேவிஸ் என்ற சகோதரிகள் இருவர், இரட்டையர்கள்” என்றாள்  அபியும் புன்னகைத்தப்படி.

    “அட, பரவாயில்லையே, உனக்கு நல்ல ஞாபக சக்திதான் அபி,”  என்று புருவத்தை தூக்கி கண்கள் விரிய வியந்தான் டாமி. “ஆமாம், இந்த ஷெர்லி ரிக்கியின் தோழி. பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்தின் போது அவனது நடனத்துணையாக  ரிக்கியுடன் அவள் நடனமாட ஒருவருக்கொருவர் முடிவு செய்திருந்தார்கள்.  அவள் சகோதரி ஆஷ்லி என் நடனத் துணைவி.  அந்த பள்ளி நாட்களின் இறுதி வாரத்தில்  ஒருநாள் நாங்கள் மெக் டானால்ட்ஸ் சிற்றுண்டிச் சாலைக்குச்  சென்று அரட்டை அடித்தவாறே கொறித்துக் கொண்டிருந்தோம்.  பேச்சு அப்படியே அரசியல் பக்கம் போயிற்று.  அப்பொழுது குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் இரண்டாம் முறையும் அதிபராக விரும்பி அதற்குப் போட்டியிட்டு ஜார்ஜ் புஷ் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.  ஷெர்லி ஒரு தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளி, ரிக்கியும்தான்.  நானும் ஆஷ்லியும் மக்களாட்சி கட்சியின் ஆதரவாளர்கள் என்றாலும் அரசியலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரிக்கி அன்று ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் இருந்தான்.  தேர்தலைப் பற்றியும் புஷ்ஷின் திறமை பற்றியும் ஷெர்லி ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவன் குறுக்கே குறுக்கே இடக்காகப் பேசி, புஷ் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர், போன தேர்தலிலேயே ஃப்ளோரிடாவில் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணித்தான்  அதிபரானார். இந்த முறை எத்தனை தடவை  வாக்குகளை எண்ணித் தொலைய  வேண்டுமோ இவரை மீண்டும் அதிபராக்க என்றெல்லாம் கூறி அவளைச் சீண்டிவிட்டுக் கொண்டே இருந்தான்.  அவளுக்கோ கோபம் ஏறிக் கொண்டே போனது.  இறுதியில் அவனது சீண்டலைத் தாளமுடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த  ஃப்ரென்ச் ஃப்ரயை அவன் முகத்தில்  விட்டெரிந்து, குடித்துக்கொண்டிருந்த மில்க் ஷேக்கை அவன் தலையில் கொட்டி முழுக்காட்டி விட்டு வெளியேறிவிட்டாள்.  பிறகு அவனுடன் முகம் கொடுத்தும் பேசவில்லை.  ரிக்கி விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்று சமாதானப் படுத்தியும் பார்த்தான். ம்ம்ம்ஹூம்… அவள் கோபமே குறையவில்லை. பிறகு ரிக்கிக்கும்  அவளது அடம் கோபத்தை ஏற்படுத்தியது.  எப்படி இவர்கள் இணைந்து நடனமாடப் போகிறார்கள் என்று நண்பர்கள் நாங்கள் பேசிக் கொண்டோம். அது போலவே இருவரும் எனக்கு நடனத் துணையாக நீ தேவையில்லை என்று ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுப் பள்ளியில் களேபரம் செய்தார்கள். மற்ற மாணவர்கள்  அனைவரும் தங்களது நடனத் துணை யாரென்று அச்சாரம் செய்து விட்டதால் கடைசி நேரத்தில்  மாற்று நடனத் துணையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.  கடைசியில் நானும் ஆஷ்லியும் ஆள் மாற்றிக் கொண்டு அவர்களுக்கு உதவ முன் வந்தோம். ரிக்கியும் ஆஷ்லியும், நானும் ஷெர்லியும் அந்த விழாவில் ஒருவருக்கொருவர் துணை”, என்றான் டாமி சிரித்தவாறு.

    ரிக்கியே இதனைப் பலமுறை அபியிடம் சொல்லியிருக்கிறான்.  இன்று டாமியும் அதையே ஆர்வத்துடன் சொல்லும் பொழுது அபி வியப்புடன் குறுக்கிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நண்பர்கள் கூட்டம் அனைவருக்கும் இது பசுமை மாறாத நிகழ்ச்சியாக இருப்பதைப் புரிந்து கொண்டாள்.  “இப்பொழுது அந்த சகோதரிகள் எங்கே இருகிறார்கள் டாமி?”

    “ஹ்ம்ம்… அவர்கள் அப்பாவிற்கு பிட்ஸ்பர்கில் வேறு ஒரு நல்ல வேலைக் கிடைத்ததும் குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்கள்.  ஷெர்லியும் ஆஷ்லியும் அங்கேயே பல்கலையில் படிப்பைத் தொடர்ந்தார்கள்.  பிறகு எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. ஃபேஸ்புக்கில் நானும் சில நண்பர்களும் அவர்களைத் தேடினோம். அடுத்த ஆண்டு பள்ளியில் நாங்கள் பட்டம் பெற்ற பத்தாமாண்டு விழா வருகிறது. அதனால் வகுப்புத் தோழர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டோம்.  இந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது.  திருமணமானதும் தனது  கணவர்களின்  குடும்பப் பெயருக்கு மாறிவிட்டார்கள்.  அதனால் சிரமம்.  உனக்குத் தெரியுமோ? அவர்கள் இருவருக்கும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள். ஆளுக்கு இரண்டு இரண்டு பையன்கள்.”

    “இதைக் கேட்டால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைவான்” என்றாள் அபி.  பிறகு தான் பேசியதில் உள்ள தவறு அவளுக்குப்  புரிந்தது. “இதைக் கேட்டிருந்தால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான், இல்லையா டாமி?” என்று கரகரத்த குரலில், கலங்கிய கண்களுடன் பரிதாபமாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

    அவளது கலங்கிய முகத்தை திரும்பிப் பார்த்த டாமி, இடது கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே வலது கையால் அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.  அவளது கண்ணீர்  அவனையும் கண் கலங்கச் செய்தது. தொண்டையைச் செருமிக் கொண்டு சாலையில் கவனமாக இருப்பவன் போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். பிறகு சோகமான குரலில், “உனக்கு ஒன்று தெரியமா அபி, பிற்காலத்தில் வாழ்வில் சிறந்த சாதனைகள் செய்யப் போகிறவனாக அவனை மாணவர்கள் நாங்கள் யாவரும் தேர்ந்தெடுத்தோம். அது கனவாகப் போய்விட்டது.”

    “ஆமாம், நானும் உங்கள் பள்ளியின் ஆண்டு மலரில் பார்த்திருக்கிறேன், உன்னையும் நீ  பெரிய பில்கேட்ஸாகவோ, ஸ்டீவ் ஜாப் ஆகவோ வரப் போகிறவன் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆண்டு மலரில் உன் படத்தையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது  தலை நிறைய சுருள் சுருளான கருகரு முடியுடன் ஒடிசலாக இருந்தாய்.  இப்பொழுது மொட்டைத் தலையுடன், சிறிது எடையும் போட்டு ஆளையே அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல்  இருக்கிறது.”

    “அடுத்த ஆண்டு நடக்கப் போகும் பத்தாண்டு சந்திப்பில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியப் போவது இல்லை எனத் தெரிகிறது, இல்லையா அபி? ஆனால் எங்களுடன் ரிக்கி அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை நம்புவது எனக்குச் சிரமமாக இருக்கிறது,” என்றான் கம்மியக் குரலில்.  சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.  ரிக்கியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க எண்ணினார்கள். வண்டியில் பெருத்த அமைதி நிலவியது. சிறுவர்களும் அவர்களது உரையாடலில் குறுக்கிடாமல், தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தார்கள். அபி பேச்சை மாற்ற எண்ணி அவர்கள் நல்ல பிள்ளைகளாக  நடத்து கொள்வதற்கு அவனையும் சிறுவர்களையும் பாராட்டினாள்.

    “எல்லாம் எனது அம்மா… அவர்களது பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பு செய்யும் மாயம். அவர்கள் நல்லொழுக்கதிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் நானும் என் மனைவியும் அவர்கள் வளர்ப்பில் குறுக்கிடுவதே இல்லை,” என்றான் பெருமையாக. பிறகு “நீ இப்பொழுது என்ன செய்கிறாய் அபி, எங்கிருக்கிறாய்?” என்றான்.

    “எனது மேல்படிப்பு முடிய இன்னமும் ஒரு ஆண்டு இருக்கிறது. நிர்வாக இயலில் நிதிநிர்வாகத்தை சிறப்புப் பாடமாகப் படிக்கிறேன்.  இப்பொழுது நியூ யார்க்கில் உள்ள வால்ஸ்ட்ரீட் நிதி நிறுவனம் ஒன்றின்  கிளையில் கோடைகாலத்தில் செயல்முறைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு பட்டம் பெற்றதும் பிரபல நிதி நிறுவனங்கள் ஒன்றில் உதவியாளராக சிறிது காலம் பணி புரிய உத்தேசம். தேவையான அனுபவம் கிடைத்ததும் சேமிப்பு, பங்கு முதலீடு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகராக சொந்தத் தொழில் செய்யும் திட்டம் இருக்கிறது.”

    “என் உத்தியோக வருமானங்களை ஒப்பிட்டு நீ கருத்து சொன்ன பொழுதே நினைத்தேன், நீ இவ்வாறு நன்கு பொருளாதார ரீதியில் ஆராய்ந்து முடிவெடுப்பவள் என்று. பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவள் என்று சொல், நல்ல திட்டம்தான். நீ தொழிலை ஆரம்பித்ததும் சொல், நான் உன் வாடிகையாளராகாச் சேர்ந்து பயன் பெறுகிறேன். முதலில் ஃபேஸ்புக்கில் நாம் நண்பர்களாக மாறுவோம்” என்றான்.  சிறிது நேர அமைதிக்குப் பிறகு திடீரென, “அப்பா வில்லியம்ஸிற்கு ரிக்கி உன்னை கலப்பு மணம் செய்து கொண்டதில் வருத்தம் என்பது இங்கு அவன் நண்பர்கள் யாவருக்கும் ஓரளவுக்குத் தெரியும்.  ஆனால் இன்று நடந்ததற்கு அவர் மீது வருத்தம் கொள்ளாதே.  பக்கவாதத்தினால் முடக்கப்பட்ட வாழ்க்கை, மகனின் இழப்பு, நிதிநிலைமை சரியில்லை என அடிமேல் அடி. ஏற்கனவே அவர் கொஞ்சம் முசுடு என்பது பலருக்கும் தெரிந்த உண்மை,” என்றான்.

    “என்ன நிதி நிலைமை சரியில்லையா?”

    “ஆமாம், ஏகப்பட்ட மருத்துவச் செலவு என நினைக்கிறேன்,  அத்துடன்  வசிக்கும் வீட்டின் மேலும் கடன் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.  கடன் அட்டையிலும் இனி வாங்க முடியாத நிலை. இது எனக்கு எதேச்சையாகத் தெரிந்தது.  எனது தம்பி பல்கலையில் படிப்பவன் அவ்வப்பொழுது கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து படிப்புக்குப் பணம் சேர்ப்பான். வில்லியம்ஸிற்கு சக்கர நாற்காலி வாழ்க்கை என்றதும் அவர்கள் வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டி வந்திருக்கிறது.  கட்டுமானப் பணியில் இவனும்  ஈடுபட்டிருந்தான். வாசலில் சக்கரநாற்காலிக்குத் தோதாக சரிவு அமைப்பது, சில வாசல்களை அகலப்  படுத்துவது, குளியலறையை மாற்றுவது போன்ற வேலைகள்.  அப்பொழுது ஒருமுறை அவரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றுவிட, தம்பியும் அவன் நண்பர்களும் வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.  தொலைபேசியில் பல அழைப்புகள் வந்ததாம்.  செய்திப் பெட்டியில் செய்திகள் விட்டுச்   சென்றவர்களில் இருந்து அழைத்தவர்கள் கடனை வசூல் செய்ய நெருக்கடி கொடுத்து, கிட்டிபோட்டு கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் என்று தெரிந்திருக்கிறது.  தம்பி சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்ன செய்வது வயதான பின்பு  நோய் என ஏதும் வந்தால் சிரமம்தான். மருத்துவச் செலவுகள் செய்துக் கட்டுப்படியாகாது.  வில்லியம்ஸிடம் வசதியாக சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் வாகனமும் இல்லை. ஒவ்வொருமுறை வெளியே செல்ல வாடகைக்கு வண்டி எடுக்க வேண்டியிருக்கிறது.  சொந்த வண்டி இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி வெளியே போய் வர வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்வது மனச்சுமையைக் குறைக்கும். எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கிக்  கிடக்கிறார்கள். போதாக்குறைக்கு அடிமேல் அடி விழுகிறது அவர்களுக்கு.  மனிதர் வெறுப்பின் உச்சத்தில் இல்லாமல் வேறு எப்படி இருப்பார்?”

    அபி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.  ரிக்கியின் அம்மா அப்பாவின் நிலையை நினைத்து, வயதான காலத்தில் பிள்ளைகள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, உதவிக்கு யாரும் இன்றி, கடனுடனும் நோயுடனும் போராடிக் கொண்டு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று தோன்றியது.  அவர்கள் நிலைமையை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்களுக்காக வருந்தியும் பரிந்தும் பேசும் டாமியின் மீது அவளுக்கு மதிப்பு அதிகமாகியது.  அவளை அவளது விடுதியில் விட்டுவிட்டு டாமியும் அவன் குழந்தைகளும் சென்றுவிட்டார்கள். அறைக்கு சென்று அபி விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ரிக்கியை நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை.  அவளுக்குரியவன் நகரில் மற்றொரு மூலையில் பெட்டிக்குள், தரைக்கடியில் மீளாத் துயில் கொண்டு இவள் வேதனையை பற்றிச் சிறிதும் அறியாமல் இருப்பதும், இவள் நகரின் மற்றொரு மூலையில் அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும்  நடக்கப் போகிறது என்று சென்ற வாரம் வரை அவள் நினைத்திருக்கவில்லை. அவனும் அவளும் சேர்ந்து கண்ட கனவுகளும், போட்ட திட்டங்களும் இப்பொழுது அர்த்தம் இல்லாமல் போனதை அவளால் நம்பமுடியவில்லை.

     

    (தொடரும்)

     

    படம் உதவி:
    http://www.road-reality.com/wp-content/uploads/2010/03/2011-Lincoln-MKZ-Hybrid-02.jpg
    http://mvgazette.com/sites/default/files/article-assets/main-photos/2012/ia_prom_dance.jpg

     

     

     

     

     

    Share
  • நம்பிக்கை… அதானே எல்லாம்!

    அன்பு நண்பர்களே,

    154802_391620084268266_1265729100_nநம் வல்லமை குடும்பத்தில் நம்மோடு இணையும் முனைவர்.நா.சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 8 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களில் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதியும் வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்து தமிழ் மீது கொண்ட மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.

    கல்லூரிக் காலங்களில் பொருநை எனும் மாணவ இதழைத் திறம்பட நடத்தி பலரின் பாரட்டுகளைப் பெற்றவர். பேச்சு,கட்டுரை, கவிதை போன்ற துறைகளில் சிறந்து விளங்கி தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் பரிசுகளை நிரப்பி பாராட்டுக்களைப் பெற்றவர். மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்.

    தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் நாளொரு கதை, உன்னாலும் முடியும் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருபவன். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள், நினைவுகள் (கவிதைத் தொகுப்பு) முதலான நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது நூலான “வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” என்ற நூலினை கடந்த 2012 ஆகஸ்டு மாதம் கோவை விஜயா பதிப்பகத்தார் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளனர்

    அன்புடன்
    ஆசிரியர்

    ‘ நீ பிறப்பதற்கு முன்பே

    உன் உணவிற்காக

    உன் தாயின் மார்பகங்களில்

    பாலினைச் சுரக்கச் செய்தவன் இறைவன்…’’

    -யாரோ.

    நம்பிக்கை தரும் வரிகள் இவைகள். இந்த உலகம் நம்பிக்கை எனும் வார்த்தைகளால் மட்டுமே சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தும் வரிகள். இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் வரிகள். அடுத்த நகர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனிதனையே வெற்றியும் எதிர்கொள்கிறது. நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதே வாழ்ந்துகாட்டிய மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற உண்மையாகும்.

    சமீப காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கும் விளம்பரம்… பிரபல நகைக்கடை ஒன்றிற்கு இளையதிலகம் பிரபு வரும் விளம்பம் அது. ஆதில் அவர் கூறும் வார்த்தைகள்தான் எனக்கு இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அந்த உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் நம்பிக்கை அதானே எல்லாம் ..

    நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும். அவை நல்ல நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். நேர்மறை நம்பிக்கையாக இருக்கவேண்டும். சமீபத்தில் எனக்கு ஒரு திருமணப்பத்திரிக்கை வந்தது. நண்பரின் திருமணம்… தேதியை பார்த்ததும் அசந்துபோனேன். நீங்களும் அசந்துபோவீர்கள். திருமணம் நடக்கும் நாள் 21.12.2012. உலகமே அழிந்து விடும் என்று அவநம்பிக்கைவாதிகள் குறித்த தேதி அது. உடனே நண்பருக்கு தொலைபேசியில் இரண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். முதல் வாழ்த்து அவனின் திருமணத்திற்கு… இரண்டாவது வாழ்த்து அவன் தேர்ந்தெடுத்த நாளுக்காக… வணிக விஞ்ஞானிகளைப் புறம்தள்ளிய அவனது நம்பிக்கைக்காக… உலகமே பயந்து ஒதுக்கிய அந்த நாளை நம்பிக்கையோடு தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்த அந்த நண்பரைப்போல நம்பிக்கையுடையவர்களால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

    “அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் இது நடக்குமா?”.. நம்மோடு இருக்கும் சிலரின் முணுமுணுப்புகளை நாம் கேட்டதுண்டு. நம்பிக்கை இழந்து பேசும் நண்பர்களைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கும். தனது இயலாமையை வெளிப்படுத்த அவர்களுக்குக் காரணம் வேண்டும் இல்லையா?… அந்த காரணம்தான் முணுமுணுப்பாக வெளிவருகிறது. தயவு செய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்திவிடுங்கள்.

    வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்குக் கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது?.

    இளைப்பாறுதல் தேவைப்படும்போதெல்லாம் மரக்குச்சியை கடலின்மேல் மிதக்கவிட்டு அதன்மேல் அமர்ந்து ஒரே சிந்தனையோடு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும் பறவைகள் நமக்கு நம்பிக்கையைக் கற்றுத்தந்து விடுகிறது.

    நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனைகளே நம்மில் பலருக்கு அதிகம். “கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வாடா” என்றால் “கடை பூட்டியிருந்தால் என்ன செய்ய?” என்ற சாதாரண கேள்வியில் இருந்தே தொடங்குகிறது நமது எதிர்மறைச் சிந்தனைகள்.

    ஒரு சிறிய கதை உங்களுக்காக…

    கனவுகளைச் சுமந்து நிற்கும் இளைஞன் அவன். சிறுவயதில் இருந்தே அவன் எதிர்மறைச் சிந்தனைகளாலும் சீக்குப்பிடித்த செயல்பாடுகளாலும் நிரம்பி காணப்பட்டவன். “நான் படிச்சு என்ன செய்யப்போறேன்..? இதுவரைக்கும் படிச்சவன்லாம் என்ன பண்ணிட்டான்?..” இந்த வசனங்களைப் போலான வசனங்களை அடிக்கடி பேசுபவன். “நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனங்கள்தான் அவனுக்கு மிகவும் பிடித்தவை. சுருக்கமாகச் சொன்னால் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்ட இளைஞன் அவன்.

    வீட்டில் யார் எது சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல விசயங்கள் எல்லாம் அவனது ஒரு காது வழியே புகுந்து மறு காது வழியே வந்து விடும். இவனை என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு நிறைவாக ஒரு குருவிடம் அழைத்துச் சென்றார் இளைஞனின் தந்தை. “குருவே ! இவனை நீங்கள் தான் மாற்ற வேண்டும். எதைச் சொன்னாலும் எதிர்மறையாகவே செய்கிறான்” என்றார். குருவோ சற்று நிதானமாகக் கேட்டு விட்டு “இந்த உலகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது. தவறுகளை உணரச் செய்வதன் மூலமே ஒருவரை மாற்ற முடியும். இவனின் தவறுகளை உணர வைக்க முயற்சி செய்கிறேன். உங்கள் மகனை என்னிடம் இரண்டு நாட்கள் விட்டுவிடுங்கள். திரும்பி வரும்போது திருந்தி வருவான்” என்றார்.

    மறுநாள் வழக்கம்போல்தான் விடிந்தது. குரு அந்த இளைஞனை அழைத்தார். “மகனே! இன்று உனக்கு ஆசிரமக் கூரைகளை வேயும் பணியினைத் தருகிறேன்” என்று கூறிவிட்டு கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். “இந்த உணவுப் பொட்டலத்தை வைத்துக்கொள். நீ சாப்பிட்ட பின்பு மீதமுள்ளதை உன் இடையில் கட்டி தொங்கவிட்டுக்கொள். எந்தக் காரணம் கொண்டும் அதனை கீழே வைத்துவிடாதே. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வெளியிலே சென்று விட்டார். இளைஞனும் தன் வேலையைத் தொடங்கினான். காலை உணவு நேரம் வந்தது. பொட்டலத்தைப் பிரித்தான். சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதைப் பொட்டலமாகக் கட்டி தன் இடையில் தொங்கவிட்டு விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

    மதிய நேரமானது. பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பொட்டலத்தைப் பிரித்தான். வெயில் அதிகமான காரணத்தாலும் ஏற்கனவே சாப்பிட்ட உணவு என்பதாலும் உணவு கெட்டு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. பசிதான்… கெட்டுப்போன உணவினைச் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் அருந்திவிட்டு வேலையைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் குரு அங்கே வந்தார். இளைஞனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. பொட்டலத்தை கொடுத்துவிடலாம் என்று குருவை நெருங்கினான். குருவோ பொட்டலத்தை வாங்கவில்லை. “வைத்திரு.வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

    மாலை நேரம் வந்துவிட்டது. துர்நாற்றம் அதிகமாகியது. கொசுக்களும் ஈக்களும் பொட்டலத்தை சுற்றின. இரவு வந்தது. குரு வரவில்லை. துர்நாற்றமும் கொசுக்களும் அவரைத் தூங்கவிடவில்லை. இரவு முழுவதும் தூங்காததால் காலையில் குருவை எதிர்பார்த்தான். குரு வந்தார். “குருவே! இதை வாங்கிக் கொள்ளுங்கள். இனி ஒரு நிமிடம் கூட இந்த பொட்டலத்தைத் தூக்க முடியாது” என்றான். குருவோ நிதானமாக “இதை ஏன் நான் வாங்கிக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். இது கெட்டுப்போன உணவுப்பொட்டலம். துர்நாற்றம் வருகிறது. என்னால் சுமக்க முடியவில்லை’’ என்றான் இளைஞன்.

    குரு இளைஞனுக்கு கூறிய பதிலில்தான் இந்தக்கதையின் அர்த்தமும் நம் வாழ்க்கையின் அர்த்தமும் அடங்கியுள்ளது. குருவின் பதில் ‘‘கெட்டுப்போன உணவினை உன்னால் ஒருநாள் கூட சுமக்கமுடியவில்லை. 20 வருடங்களாக கெட்டுப்போன மனதினை எப்படிச் சுமந்து கொண்டிருக்கிறாய். உடனடியாக அதனை அகற்றி எறி..” என்பதுதான்.

    தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என்று மனசாட்சியோடு எண்ணிப் பார்ப்போம். குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது. மனதினை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் கிடையாது. தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே எட்ட முடியாத இலக்கையும் எளிதில் அடையலாம் என்பதே சாதனையாளர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடமாக அமைகிறது.

    நம்மில் பலருக்கு விழிப்பதற்கும் எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. காலையில் எழும்பும்போது மனதிற்கும் உடலிற்கும் இடையிலே ஒரு பெரிய சண்டையே நிகழ்கிறது. “காலைல சீக்கிரமே எழுந்திருச்சா படிக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம்….” என்று மனம் பலவற்றைச் சொல்கிறது.

    உடலோ “நல்லா குளுருது. இப்போ எழுந்திருச்சு என்ன சாதிக்கப்போறோம்?. அதெல்லாம் எழுந்திருச்ச பிறகு பார்த்துக்கலாம்… இல்லை நாளைல இருந்து சீக்கிரமா எழுந்திருக்கலாம்” என்று சொல்லும். மனம் சொன்ன படி நடந்தவர்கள் எல்லாரும் சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள். உடல் சொன்ன படி கேட்டவர்கள் சராசரி மனிதர்களாக வாழந்து(?)கொண்டிருக்கிறார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை என்பதை உங்கள் மனசாட்சியைக் கேட்டு முடிவு செய்யுங்கள்.

    நல்ல நம்பிக்கையோடு செயல்படும் அனைவருமே சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதே சரித்திரம் நமக்குத் தரும் பாடமாக உள்ளது. நம்பிக்கையோடு செயல்படுங்கள் … வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

    நல்லவர்களிடம் பேசும்போதே

    நம்பிக்கை பிறந்துவிடுகிறது

    Share
  • மறுஜென்மம்

    நீச்சல்காரன்

    எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட  மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.
    யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின்  மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித்,  இந்திய மக்கள் தொகைக்  கணக்கின் படி  ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்;  மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய்  என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய  ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

    வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மாந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.

    அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒண்ண்ரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு,  எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான்.  காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் என எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…

    *                                   *                         *                                        *
    ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களை சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!

    Share
  • மகாபாரத முத்துக்கள்!

    புவனேஷ்வர்

    வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை “மகாபாரத முத்துக்கள்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வியாசர் சொன்னதைத்தான் தமிழில் ஓர் கதைசொல்லியாக சொல்லுகிறேன். மொழிபெயர்ப்பு + கதைசொல்லல் என்று கூட சொல்லிவிடலாம்.

    பாரத நாட்டுக்கே உரிய பண்பாடு, நாகரிக கோட்பாடுகள் ஆகியவை அந்நாளில் எங்ஙனம் இருந்தது என்பதை இக்காலத்தில் உள்ளோர் அறிந்து கொள்ள இவை உதவும். வெறும் கதையாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் குறைவறக் கூறும் பண்டை நூற்கள் உற்ற தோழர்களே.
    முதல் பாகமாக, பூரிசிரவஸ் வதம் என்னும் பகுதியைக் காணலாம். இது நான்கு பாகங்களாக வரும். ராமாயணத்தில் வாலி வதம் போல மகாபாரதத்தில் பூரிசிரவஸ் வதம் சர்ச்சைக்குரிய ஒன்று (அபிமன்யு வதம் தார்தராஷ்டிரர்கள் பண்ணினது. இது பாண்டவர் பக்கம் செய்த ஒன்று).

    அதில் முதல் பாகம் – துரோணரின் அறிவுரை:

    அன்புடன்,
    புவனேஷ்வர்

    மகாபாரத முத்துக்கள்: பூரிசிரவஸ் வதம் – பகுதி 1 – துரோணரின் அறிவுரை!

    அபிமன்யு அநியாய விதமாக ஜயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக “நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்குப் பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்” என கோரமான சபதம் பண்ணினான்.

    ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

    இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது தான். வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்குக் காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. பாணங்களை எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். “இதோ அருச்சுனன், இதோ விஜயன்” என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

    யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். வருஷ்ணி குலத்தவனும் அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைத்தான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம் கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது. அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி. “யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான். அவர்களின் வில்வன்மையை நான் இவனுடன் காண்கிறேன்” என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். எதிரியாக வந்தாலும் வீரனின் மித்தையை ரசித்து பாராட்டும் ஆசாரியரின் உயர்ந்த பண்பு தான் என்னே! சஞ்சயனும் “இன்றைய உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும், அருச்சுனனும், சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது” என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

    அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். கர்ணனை தான் கொல்வதாக அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

    பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

    ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். போர்க்களத்தின் நடுவே துரோணர் உபதேசித்த வார்த்தைகள் இனி. வருபவை. இவை வியாசரின் வார்த்தைகள். தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பு!

    “துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

    முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? “சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்” என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன், ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

    நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

    ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

    பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?

    பயந்து போன இந்தப் படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

    சாத்வத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

    நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனைப் போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தைக் கண்டால் என்ன செய்வாய்?

    இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

    உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

    சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

    இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

    பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை.”

    இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

    (தொடரும்…)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த பாழாய்ப்போன மனித ஜன்மத்துக்குத்தான் எத்தனை ஆசைகள். குழந்தையிலிருந்து இந்த ஆசை உணர்ச்சி ஆரம்பித்து விடுகின்றது. எதைப் பார்த்தாலும் அதைப் பெற முயற்சிக்கின்றது. தீபத்து ஒளியில் ஆசைப்பட்டு திரியில் கைவைத்து தீ சுடும் என்று தெரிந்தவுடன் அங்கே ஆசை அந்தக் குழந்தைக்குப் பயமாய் மாறுகிறது. ஆசை இப்படி குழந்தையாய் இருக்கும்போதே விஸ்வரூபமாய் மாறி பயமுறுத்தும் அந்த விந்தையையும் அந்த ஆசை என்கிற உணர்ச்சியையும் ஏன் படைத்தானோ ஆண்டவன்.

    ஆசைப்படாதே.. அவஸ்தைப்படுவாய், ஆசையே அத்தனை துன்பத்துக்கும் காரணம் என்று ஒருவர் சொல்கிறார்.. இன்னொருவரோ ‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.. அப்போதுதான் உன் இலக்கை எட்டுவாய்’ (இலக்கு என்ன என்பது இப்படிச் சொன்னவரைத்தான் கேட்கவேண்டும்) என்கிறார். ஆசை இங்கே குழப்பத்தையும் கூடவே உண்டாக்கி விடுகின்றது. எதை எடுத்துக்கொள்வது நாம். ஆசைதான் நன்மைக்கும் தீமைக்கும் நாம் அடியெடுத்துவைக்கும் வழி என்று எடுத்துக் கொள்ளலாமா..

    எனக்கு ஆசையே இல்லை என்று யாராவது சொன்னால் அவரை அடிமுட்டாளாகப் பார்க்கும் சமுதாயம் இதுவல்லவா.. இருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆசையை நாம் இங்கே பார்க்கலாமா?

    மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
    தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
    பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
    காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

    மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
    மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
    வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
    உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

    மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
    ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
    குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
    துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

    கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
    வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
    சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
    அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

    பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
    காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
    தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
    பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

    மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
    நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
    அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
    மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

    ஆஹா இத்தனை ஆசைகளா இவருக்கு.. ஆனாலும் இத்தனை ஆசைகளும் நிறைவேறும்போது இந்த சமுதாயமும் கூடவே அந்தப் பயனில் பங்கு பெறுகிறதல்லாவா.. ஆகையினால் இப்படி ‘வேண்டும் வேண்டும்’ என்று கேட்ட திரு சு. கோபாலன் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில் இந்த வார வல்லமையாளராகவும் தேர்ந்தெடுக்கிறோம்.

    கடைசி பாரா: தேமொழியின் குன்றக்குடி அடிகள் பற்றிய கட்டுரையிலிருந்து:

    ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 84 (12.08.13)

    மலர் சபாpicture 84

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை மாதவிக்கு உரைத்தல்

    அழகிய பொன் தோடு அணிந்த
    அழகுமுகத்தை உடைய மாதவி
    அழகிய தாழை மடலில்
    வரைந்து அனுப்பிய திருமுகத்தைக்
    கோவலன் வாங்க மறுத்தான்.
    இதனை உரைக்க,
    வாடிய மனதுடன்,
    இதழ்விரி மாலையணிந்த மாதவியிடம்
    விரைந்து சென்றனள் வசந்தமாலை.

    மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
    கண் துயிலாது கிடத்தல்

    இதைக்கேட்ட மாதவி
    “சிறந்த அணிகலன்கள் அணிந்தவளே!
    இம்மாலைப் பொழுதில் அவர் வருவார்;
    வாராது போனாலும்
    நாளைக் காலையில் அவரைக் காணலாம்”
    எனக் கூறினாள்.
    பின் செயலற்ற மனத்தோடு
    தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது
    அழகிய மலர் போன்ற கண்களையுடைய அவள்
    இமைகள் மூடாது வாடியே கிடந்தனள்.

    வெண்பா

    செந்தாமரை மலர்கள் விரிந்தன;
    மாமரங்களில் தளிர்கள் அழகுடன் துளிர்த்தன;
    அழகு பொருந்திய அசோகம் இதழ் விரித்தது;
    இளவேனில் காலம் வந்துவிட்ட இவ்வேளையில்
    அழகிய கண்களையுடைய
    மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால்
    என்னவெல்லாம் துன்பறுமோ!

    உலகில் ஊடிப் பிரிந்து
    வாழும் உள்ளங்களே!
    நீங்கள் எல்லாம் கூடி வாழுங்கள்!
    இது மன்மதன் ஆணை!
    என்று கூவி அறிவித்தன குயில்கள்.

    மாதவி பாடிய கானல்வரி கேட்டு
    ஊடி நிற்கும் கோவலனே!
    உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த
    அவளின் அழகிய முகத்தை
    இந்த இளவேனில் பொழுதில்
    நினைவு கூர்ந்து காண்பாயாக!

    (வேனில் காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கனாத் திறம் உரைத்த காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 126
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    https://www.facebook.com/PaintingsLover

    Share
  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share