நான் அறிந்த சிலம்பு – 84 (12.08.13)
புகார்க்காண்டம் – 08. வேனில்காதை
திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை மாதவிக்கு உரைத்தல்
அழகிய பொன் தோடு அணிந்த
அழகுமுகத்தை உடைய மாதவி
அழகிய தாழை மடலில்
வரைந்து அனுப்பிய திருமுகத்தைக்
கோவலன் வாங்க மறுத்தான்.
இதனை உரைக்க,
வாடிய மனதுடன்,
இதழ்விரி மாலையணிந்த மாதவியிடம்
விரைந்து சென்றனள் வசந்தமாலை.
மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
கண் துயிலாது கிடத்தல்
இதைக்கேட்ட மாதவி
“சிறந்த அணிகலன்கள் அணிந்தவளே!
இம்மாலைப் பொழுதில் அவர் வருவார்;
வாராது போனாலும்
நாளைக் காலையில் அவரைக் காணலாம்”
எனக் கூறினாள்.
பின் செயலற்ற மனத்தோடு
தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது
அழகிய மலர் போன்ற கண்களையுடைய அவள்
இமைகள் மூடாது வாடியே கிடந்தனள்.
வெண்பா
செந்தாமரை மலர்கள் விரிந்தன;
மாமரங்களில் தளிர்கள் அழகுடன் துளிர்த்தன;
அழகு பொருந்திய அசோகம் இதழ் விரித்தது;
இளவேனில் காலம் வந்துவிட்ட இவ்வேளையில்
அழகிய கண்களையுடைய
மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால்
என்னவெல்லாம் துன்பறுமோ!
உலகில் ஊடிப் பிரிந்து
வாழும் உள்ளங்களே!
நீங்கள் எல்லாம் கூடி வாழுங்கள்!
இது மன்மதன் ஆணை!
என்று கூவி அறிவித்தன குயில்கள்.
மாதவி பாடிய கானல்வரி கேட்டு
ஊடி நிற்கும் கோவலனே!
உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த
அவளின் அழகிய முகத்தை
இந்த இளவேனில் பொழுதில்
நினைவு கூர்ந்து காண்பாயாக!
(வேனில் காதை முற்றிற்று.
அடுத்து வருவது கனாத் திறம் உரைத்த காதை)
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 126
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
படத்துக்கு நன்றி:
https://www.facebook.com/PaintingsLover