Blog

  • குறளின் கதிர்களாய்…(8)

     

     

    desertindex

     

        குறளின் கதிர்களாய்… (8)

     

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

    வற்றன் மரந்தளிர்த் தற்று.

                    -திருக்குறள்- 78 (அன்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    பாலை நிலத்தில்

    பசும்மரம் துளிர்த்தாலும்,

    பொசுக்கும் வெயிலில்

    பட்டுப்போகும்..

     

    இதுதான் கதை,

    இதயத்தில் அன்பில்லாத

    இவ்வுலக வாழ்க்கையிலும்…!

     

    குறும்பாவில்…

     

    பாலையில் துளிர்க்கும் மரம்,

    இதயத்தில் அன்பில்லா வாழ்க்கை..

    இரண்டுக்கும் அழிவுதான்…!

     

          மரபுக் கவிதையில்…

     

    எங்கும் மணலாம் பாலையிலே

    எந்தச் செடியும் வளராது,

    தங்கிடும் காய்ந்த மரமதுவும்

    துளிர்த்து வரினும் பட்டுவிடும்,

    எங்கும் இதுபோல் தானாகும்

    எத்தனை உறவுகள் இருந்தாலும்

    கங்காய் வாழ்வை அழித்திடுமே

    கொஞ்சமும் அன்பிலா இதயமதே…!

     

    லிமரிக்…

     

    பாலையில் துளிர்த்திடும் மரம்

    பட்டிடும் கருகியே சிரம்,

    அகத்தன்பு சாகாது,

    வாழ்வதுவே ஆகாது

    வெயிலால் பட்ட மரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    பாலவனம் பாலவனம்,

    பலனேயில்லாப் பாலவனம்..

     

    மணலாத்தான் நெறஞ்சிருக்கும்,

    மருந்துக்கொந் தண்ணியில்ல..

    காலவச்சாச் சுட்டுப்புடும்,

    மரத்தவச்சாப் பட்டுப்போவும்..

     

    மனுசனுக்கு அன்புவேணும்

    மனசுக்குள்ள அன்புவேணும்..

    மனுசவாழுவு இதுதாம்பா-

    அன்புருந்தா சோலவனம்,

    அதில்லண்ணா பாலவனம்

    அதிலநிக்கும் பட்டமரம்..

     

    பாலவனம் பாலவனம்,

    பலனேயில்லாப் பாலவனம்…!

     

    படத்துக்கு நன்றி

     http://www.piersonplaza.com/about_the_area/index.html      

    Share
  • சிலை அழுதது – 1

    தேமொழி

     

    அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசியக் கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர்.  ‘உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட்’, ‘உன் ஆன்மா சாந்தி அடையட்டும்’, ‘நீ எங்களை பெருமை அடைய செய்துவிட்டாய், ‘நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி’, என தங்கள் மனதில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள்.

    வெய்யிலுக்கு கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த ‘ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்து பேசாமல் கிசு கிசு என்று பேசிக் கொண்டிருதாலும் அதுவும் ஒரு கசமுசா சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.  தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதி சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது.  தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.

    ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப் பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர்.  வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.  வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள்.

    தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.  முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள், ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற, மற்றவர் தற்கொலைப்படைத் தாக்குதலில்  (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.  சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த ‘ப்ளாக் ஹாக்’ (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர்.  இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை.  இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததில் அப்பா வில்லியம்த் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார்.  இப்பொழுது  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

    தேவாலயத்தின் கதவு திறந்தது.  அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்தஇடத்தில் பேரமைதி நிறைந்தது.  ரிச்சர்ட் விமானப் படையில் இருத்தால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ‘பால் பியரர்ஸ்’ ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப் பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர்.  அவர்களுக்கு முன் புறம் ஒரு வீரரும் பின் புறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர்.  அவர்களுக்குப் பின்னர் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர்.  உள்ளூர் தொலைக்காட்சி நிலைய படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும்  மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப்  படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி,  90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப் பெட்டியை ஏற்றினார்கள்.  பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைதாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.  எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்ன காவல்துறை ஊர்தியும், அதற்கும் முன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர்.

    இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின்  உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள்.  சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்சைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காக பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட, சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள்.  அப்பா வில்லியம்ஸுடன்  அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது.  தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாக கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது.  சாலையின் போக்குவரத்து சிறிது தடங்கலுற்றது.  காவலர்களின்  சைகைக்கு காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள்  தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற பேஸ் பால் கேப் தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றி தலைகுனிந்து  அஞ்சலி செலுத்தினர்.

    வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது.  பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ், உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்தது.  அதைப் பார்த்ததும் அபியின்  கண்கள் கலங்கியது.  பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது.  எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாக மூட்டியிருக்கிறார்.  அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

    அப்பா வில்லியம்ஸ் உணர்சிகளற்ற  சிலையாகவே  அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது.  மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள்.  ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கு தற்காலிகமாக போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள்.  இருபாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைகாகத் தயாராக நின்றார்கள்.

    வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியை கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாக சடாரென சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசியக் கொடியை உருவினார்கள்.  பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து, தொடர்ந்து நீவிவிட்டவாரே மடிக்கத் தொடங்கினர்.  சிவப்பு வெள்ளை பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும்  கொண்ட பகுதி  வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர்.  அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு களைந்து சென்றனர்.

    கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார்.  ரிச்சர்டின் அம்மாவும், அபியும் எழுந்து நின்று கொண்டார்கள்.  பாதிரியார்கள் ஒவ்வொருவராக பிரார்த்தனை முடித்து ஆமன் சொல்லி முடித்ததும், வீராங்கனை அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அபியின் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லி சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார்.  அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து  ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும்  ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினர், அல்லது விசும்பினார்.  ஆனால் அப்பா வில்லியம்ஸ் சிலை போன்ற உணர்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார்.

    சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர்.  அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமானக் குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர், அவள் முகத்தில் இருந்து அபி அதிர்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது  கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள்.  ரிச்சர்டின் அம்மா அபி என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.   இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார்.  வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டு தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.

    வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணீர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப் பட்டது.  இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    (தொடரும்)

     

    படம் உதவி:
    http://photoblog.statesman.com/wp-content/uploads/2010/08/lkv-processionblog.jpg
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSpWyVdRB2zx_sg0bNyNy2fu6UMxzJz829AJ5VT_6wHx35ES5Dd2w
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSyODas5KYOAvTZTve6GwZ1CXq8829lzqMsozsY1jYdVCmGDlIz1A

     

     

     

    Share
  • ‘ஓடும் செம்பொனும்’…

    செண்பக ஜெகதீசன்goldindex
    இரும்புக்கு இல்லாத மதிப்பை,

    தங்கத்துக்கும் வெள்ளிக்கும்

    தந்து, ஆசையில்

    தடுமாறுகிறான் மனிதன்-

    தடம்மாறியே..

     

    புடம்போட்ட தங்கங்களாய்

    கடவுளின் உண்மை அடியவர்கள்..

    அவர்கள்தான்,

    ‘ஓடும் செம்பொனும்

    ஒக்கவே நோக்குவார்’…!

     

    படத்திற்கு நன்றி

    http://www.123rf.com/photo_5811938_gold-bar-isolated-over-square-white-background.html

    Share
  • ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    அஞ்சலி: கவிஞர் வாலி

    ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    vaali 2

    எஸ் வி வேணுகோபாலன்

    ஆனைக்கட்டித் தெரு ரவி தான் எனக்கு முதன்முதலில் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றை ரசனையுடன் வாசித்துக் காட்டியது. கண்ணதாசனையும், வாலியையும் திரைப்படப் பாடல்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ரவி தான் அவர்களைக் கவிஞர்களாக அடையாள படுத்தியது. என் அண்ணனுடைய கல்லூரித் தோழர் அவர் (இப்போது எங்கே இருக்கிறீர்கள் ரவி ?). எட்டாம் வகுப்பு படிக்க நான் காஞ்சிபுரம் செல்ல நேர்ந்த அந்தக் காலம் எனக்கு நிறைய இலக்கிய வாசல்களைத் திறந்து வைக்கத் தொடங்கியது. எழுபதுகளில் குமுதம் இதழில் வாராவாரம் கண்ணதாசனும், அதே நேரத்தில் ஆனந்த விகடனில் வாலியும் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர். முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை என்று தொடங்கிய வாலியின் நான் என்ற தலைப்பிலான கவிதை ஓர் அருமையான அறுசீர் விருத்தம். கிளிப் பொருத்திய அட்டை ஒன்றைக் கையில் வைத்தபடி சிந்தனை முகமாக உட்கார்ந்திருக்கும் வாலியின் புகைப்படம் இன்றும் என்னுள்ளத்தில் பொருந்தியிருக்கிறது. .ஆனால், வாலி, மக்கள் மத்தியில் திரைப்படப் பாடல்களால் தான் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். வாலியின் மறைவு சாதாரண மக்களையும் பேச வைப்பது அதனால் தான்..

    ஐந்து பத்தாண்டுகள். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள். எத்தனையோ நடிக நடிகையருக்காக, எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் அமர்ந்து எத்தனையோ பாடகர்கள் குரல் வழி தமது அனுபவத்திலிருந்தும், கற்பனையின் வெளிப்பாடாகவும் விரிந்த அவரது பாடல் உலகம் திரை இசைப் பாடல்கள் குறித்த ஆய்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் .இருக்கிறது. குறும்பும், நையாண்டியும் நிறைந்த பாடல் வரிகள் முதற்கொண்டு காதல், கொண்டாட்டம், சோகம், தனிமை என பல வித உணர்வுகளையும் தத்தகாரம் என்று சொல்லப்படும் திரை இசை மெட்டுக்குள் கொண்டு வந்தவர் அவர். இனிமையும், உருக்கமும், வேகமும், எழுச்சியும் இசையமைப்பாளரின் திறமை, கற்பனை, இசைக் கலைஞர்களின் உழைப்பு என்றிருந்தாலும் பாடல்களைக் காலம் கடந்து நிற்கச் செய்வதில் பாடல் வரிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சாதாரண மக்கள் மனத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அசாத்திய எளிமையும் வேண்டியிருக்கிறது. கருத்தும் பளிச்சென்று வந்து விழுந்தாக வேண்டும். இந்தத் திறன் பெற்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடிகிறது. இதில் வாலிக்கு தவிர்க்க முடியாத தனியிடம் இருக்கவே செய்கிறது. தான் இயற்கை எய்தும் காலம் வரை அவருக்கு அந்த ஆற்றல், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவான உளவியல் வாய்த்திருந்தது என்பது முக்கியமானது.

    எம் ஜி ஆரின் ஒரு முழு படத்திற்கு அத்தனை பாடல்களையும் எழுதி அவை வெற்றி பெற்றது வாலியை முக்கிய கவிஞராக அடையாளப்படுத்தியது. அந்தப் படம் படகோட்டி. ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம், ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற வரிகளின் நுட்பம் அசாத்தியமானது. எம் ஜி ஆர் தனது படங்களில் பாடலுக்கு தனி கவனத்தை எடுத்துக் கொள்வார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த சமூக தாக்கத்தை அவர் வாலியிடம் கண்டெடுத்ததை அடுத்தடுத்து தமது படங்களில் இடம் பெறச் செய்து கொண்டார். சிவாஜி நடித்த பாபு படத்தின் புகழ் பெற்ற இதோ எந்தன் தெய்வம் என்பது வாலியின் அருமையான பாடல்களில் ஒன்று. அதிலும் அவர் தி மு க வின் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற முழக்கத்தை கடைசி சரணத்தில் கொண்டு வந்திருப்பார்.

    அதே பாபு படத்தில் இன்னொரு பாட்டு. வரதப்பா கஞ்சி வரதப்பா என்பது பழைய காலத்து மடக்கணி சரக்கு..அதைப் பல்லவியாகக் கொண்டு சிவாஜி நடித்த பாபு திரைப்படப் பாடல் ஒன்றை எழுதியிருப்பார் வாலி. அந்தக் காலத்தில் கூடையில் கேரியர்களை (பம்பாய் டப்பாவாலா போல) எடுத்து வரும் பெண் பாத்திரத்தை முன்வைத்து அந்த வீதி நடனப் பாடல். கஞ்சி கலயம் தன்னைத் தலையில் தாங்கி வஞ்சி வரதப்பா என்று தொடரும் பல்லவி.

    அதன் ஒரு சரணத்தில் இப்படி வரும்:

    குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது – அது
    அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது – அது
    பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

    சமையல் எல்லாம் கலக்குது – அது
    சமத்துவத்தை வளர்க்குது

    சாதி சமய பேதமெல்லாம்
    சோத்தைக் கண்டா பறக்குது – ஆமாம்
    சோத்தைக் கண்டா பறக்குது

    பல வித்தியாசமான பாடல்களை திரைப்படங்களுக்காக எழுதியவர் வாலி. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ( இரு கோடுகள் ) பாடல் ஓர் ஆணின் வாழ்வில் ஒருவர் அறியாமல் மற்றவர் இடம் பெற்றுவிடும் இரு பெண்களின் குரலாக ஒலித்தது. சக்கை போடு போடு ராஜா (பாரத விலாஸ்) மனசாட்சியோடு பேசித் திண்டாடும் நாயகனின் பாடல். மௌன ராகம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தன்மையில் அமைந்திருந்தது. மணமுடித்தவனோடு மனம் பொருந்தி இல்லறம் காண முடியாது தவிக்கும் பெண்ணும், அவளைப் புரிந்து கொள்ள இயலாது தத்தளிக்கும் ஆணுமான பாத்திரப் படைப்புக்கு (மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா ) வாலியின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் மதிப்பு கூட்டியிருந்தன. அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகம் பொருந்திய ரசனையில் வெற்றி பெற்றவை என்றாலும், உன்ன நெனச்சு பாட்டப் படிச்சேன் என்ற சுய கழிவிரக்கப் பாடல் தனித்துவம் வாய்ந்தது.

    திரைப்படப் பாடல்களில் பல்லவி சரியாக அமைவது மிக மிக முக்கியமான அம்சம். கண்ணதாசன், வாலி இருவரின் பெருமைக்குரிய விஷயம் இந்தப் பல்லவி. பத்ரகாளி படத்தில் ஜேசுதாஸ், பி சுசீலா குரல்வழி சிறப்பு பெற்ற வாலியின் “கண்ணன் ஒரு கைக் குழந்தை” பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மெட்டு அப்படி. எல்லா வரிகளையும் இந்த முதல் வரியில் வரும் சொற்களைக் கொண்டே தாள லயத்திற்குப் பிசகின்றிப் பாடிவிட முடியும். பூக்காரி படத்தில் முப்பது பைசா மூணு முழம் என்று ஒரு பல்லவி வரும். பத்து பைசா ஒரு முழம் என்று பாடிப் பாருங்கள். கணக்கு தான் சரியாக வரும். மெட்டு ஓடிவிடும். அதே போல் பூக்காரப் பெண்கள் விரைந்து விற்றுத் தீர்க்க எப்படி சொல்லி வாடிக்கையாளரை அழைப்பார்களோ அந்த சங்கதியும் இந்தப் பல்லவியில் இருக்கிறது. பூக்காரப் பெண்ணிடம் வம்பு செய்ய ஆட்கள் இருப்பதும், அவள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதும் அந்தப் பாடலில் உண்டு. அதன் கடைசி சரணத்தில் அரசியலும் இருக்கிறது (இந்தா தம்பி செந்தாமரைப் பூ, இருக்கிற துட்டை நீ போடு. நம் கண்ணாயிருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்குப் பூ போடு என்ற வரிகளின் சந்தமும், எளிமையும் கவனிக்கத் தக்கது).

    எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில், மு க முத்து திரையுலகில் நுழைந்தபோது அதை மனத்தில் வைத்து அவருக்காக எழுதப் பட்ட வரிகள் உள்ளிட்டு வாலியின் பாடல்கள் பலவற்றில் அரசியல் வாடை வீசும். ஜெயசங்கர் படத்தின் பாடல் ஒன்றில், ராமரை வருணிப்பது போல், முழுக்க முழுக்க எம் ஜி ஆர் புகழ் பாடும் ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா என்ற பாடலும் வாலி தான் எழுதியிருக்க முடியும். திரைப்படங்கள் சிலவற்றிற்கு வசனமும் எழுதியிருக்கும் வாலி, கலியுகக் கண்ணன் படத்தில் தேங்காய் சீனிவாசன் கடவுளைப் பார்த்துக் கேள்வியாகக் கேட்கும் ஓரிடத்தில் “ஓய் உமக்கு கருணாநிதின்னு பேரு வச்சது சரிங்காணும், எல்லாக் கேள்விகளுக்கும் ரெடிமேடா பதில் வச்சிருக்கீர் என்று எழுதியிருப்பார். மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார் வாலி. அவரது சம்பூர்ண ராமாயணம் என்ற சமூக நாடகத்தில், புராண பாத்திரங்களும் வருவார்கள். அனுமன், ராமனைப் பார்த்து ஏ டி எம் கே ராமச்சந்திரா என்று அழைப்பார். ராமன் அதிர்ந்து போய் என்ன இது அரசியல் என்பார். அதில்லை, நீங்கள் அயோத்தியாவின் தசரத மகாராஜாவுக்கும் கவுசல்யாவிற்கும் பிறந்தவர் தானே, உங்கள் இனிஷியலைத் தான் அப்படி சொன்னேன் என்பார். அரங்கம் அதிரும். கவியரங்க மேடைகளிலும் அவரது அரசியல் வெடிகள் பிரசித்தம்.

    திரையுலகில் கண்ணதாசன், வாலி இருவருக்குமான பொற்காலம் ஒன்று பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியோ, கணினியோ வந்து சேராத – ரசிகர்கள் வானொலிக்கு மிகவும் கடன்பட்டிருந்த அந்த காலத்தில், சிவாஜி-எம் ஜி ஆர் படங்களை வைத்து விவாதங்களும், முரண்பாடுகளும், விளையாட்டுச் சண்டைகளும் நடந்தது போலவே, இந்த இரு கவிஞர்களின் பாடல்களை வைத்தும் ஒரு தளத்தில் அப்படியான சர்ச்சைகள் நடப்பதுண்டு. யார் எந்தப் பாடல் எழுதியது என்பதில் கருத்து மாறுபாடுகளும் தோன்றிவிடும். இதயத்தில் நீ படத்தில் வாலி எழுதிய உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் என்ற பாடலும் (பழகி வந்த புதிய சுகம் பாதியிலே மறைந்தாலும் என்று தொடங்கும் அதன் தொகையறா (?) சிறப்பாக இருக்கும்), கண்ணதாசன் எழுதிய ஆனந்த ஜோதி படத்தின் நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலும் ஒன்றே போல் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வுகளை உள்ளடக்கியவை.

    வாணி ஜெயராம் என்ற அற்புதமான பாடகியை தமிழ்த் திரை இசையில் எம் எஸ் வி அறிமுகம் செய்த மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடல் வாலியின் இனிய பாடல்களில் ஒன்று. நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), என் கல்யாண வைபோகம் உன்னோடுதான், மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே) போன்ற பல பாடல்களை வாணி பாடினார். இசை ராகங்கள் குறித்து வாலிக்கு ஞானம் இருந்தது அவரது பாடல்களில் அப்படியே வந்திறங்குவதைப் பார்க்க முடியும். நீ ஒரு ராக மாலிகை என்ற பாடலில் பல ராகங்களின் பெயரை அத்தனை ரசமாக வருணிப்பின் வரிகளுக்குள் வாலி.

    எப்போதும் சத்தமாகப் பாடும் எல் ஆர் ஈஸ்வரி, ‘காதோடு தான் நான் பாடுவேன்’ என்று மெல்லிய குரலில் பாடிய அந்தப் பாடல் வாலி எழுதியது. அது இடம் பெற்ற வெள்ளிவிழா படத்தில் அதன் இசை அமைப்பாளர் இன்னொரு சாதனையும் செய்தார். தனது இசையமைப்பில் வேறு ஓர் இசை அமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனைப் பாடவைத்தார். எம் எஸ் வி பாடிய உனக்கென்ன குறைச்சல் என்ற அந்த அருமையான பாடலில், தனிமையை இப்படி விவரிப்பார் வாலி: கடந்த காலமோ திரும்புவதில்லை. நிகழ் காலமோ விரும்புவதில்லை. எதிர்காலமோ அரும்புவதில்லை. இது தானே அறுபதின் நிலை. ஆனால் இளமை நம்பிக்கை துள்ளும் மடை திறந்து பாடலில் (நிழல்கள் – எஸ் பி பாலசுப்பிரமணியன்) நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்த காலம் என்று எழுதியிருப்பார் அவர்.

    திரைக்கதையை பாடல்களில் சொல்லிவிடுவது வேறெங்கும் கிடையாது என்று ஒரு முறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அதை அத்தனை கச்சிதமாகச் செய்ததில் வாலியும் ஒருவர். தசாவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலில் சைவ வைணவ முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட அடிப்படை விஷயத்தைக் கொண்டு வந்திருப்பார். ஆனால் மதங்களைக் கடந்து நேசிக்கும் மனம் அவருக்கு இருந்ததை அவரது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அவர் வெளிப்படுத்தி வந்ததுண்டு. நீ இல்லாத இடமே இல்லை என்று தொடங்கும் அல்லா அல்லா என்ற பிரபல பாடல் அவர் எழுதியது தான்.

    அவரது “அம்மா” என்ற கவிதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் கி வா ஜகந்நாதன், சிருங்கார ரசம் என்பது கத்தியில் நடப்பதைப் போன்றது, பாரதி எழுதியதையே வ ரா விமர்சித்திருப்பார். அவர் இந்த தொகுப்பைப் பார்த்தால் வாலியின் சில கவிதை வரிகளை என்ன சொல்வார் என்று எழுதியிருந்ததாக நினைவு. கவிதையை விடவும், திரைப்படப் பாடல்களில் வாலி எத்தனை விரசமாகவும் எழுதித் தர சித்தமாக இருந்தார். கொச்சையான ரசனை தூண்டும் வரிகளையும், வலிய எழுதித் தள்ளிய வெற்று அடுக்குமொழி சொற்கள் நிரம்பிய கவிதைகளையும் வாலி மிக இலகுவாக தவிர்த்திருக்க முடியும். அத்தனை அனுபவ மொழியும், சொல் வளமும் அவருக்கு வாய்த்திருக்கவே செய்தது. தாள லயமும், சந்தமும், சொல் நயமும், இலக்கிய வாசிப்பும் அவருக்குக் கை கூடியிருந்தது. ஆனாலும் அவர் அப்படியான பாடல்களில் ஒரு போதை உருவாக்கிக் கொண்டார்.

    நான் என்ற அவரது கவிதையில் ஓரிடத்தில், உள்ள வயல் நெடுக உணர்வென்னும் ஏர் கொண்டு/ மெல்ல உழுதுவிட்டு மேவுகின்ற கற்பனையாம்/ நல்ல விதை தூவி நற்கவிதை பயிராக்க/ வல்ல புலவர்தம் வரிசையிலோர் உழவன் நான் என்று சொல்லியிருப்பார். 82 வயதில் அவர் மரணமுற்ற போது, இன்றைய தலைமுறையினர் அவரை அறிந்திருக்கும் வியப்புக்குரிய விஷயம், அவரது தொடர்ச்சியான எழுத்தினால் மட்டும் சாத்தியமானது அல்ல, மறக்க முடியாத வரிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது பழைய பாடல்களில் அவரது திறமையின் வேர்கள் ஊடோடி இருப்பது தான் காரணம். அதைவிடவும் முக்கியமானது, தமது வாழ்நாள் முழுக்க தமக்குப் பேரும் புகழும் வாய்த்திருந்தாலும், கர்வம் ஓங்கிவிடாது மற்றவர்களைப் பற்றி உன்னதமாகவும், மேலான சொற்களிலும் மதித்துப் பேசிவந்த அவரது வாழ்க்கை அறமும் கவனிக்கத் தக்கது. ரசனையும், சொல் நயமும் மிக்க பல வித்தியாசமான பாடல்களை திரை உலகுக்குத் தந்த வாலியின் நினைவுகள் நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் (மறுபடியும்) !

    ***************
    நன்றி வண்ணக்கதிர் ஆகஸ்ட் 4, 2013

    Share
  • வாரணாசிக் ‘கரப்பான் பூச்சி’

    தமிழ்த்தேனீ

      காசி  என்பது இந்துக்களின்   புனித ஸ்தலம், இப்படிப்பட்ட காசியின் புனித  வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண  கரப்பான் பூச்சி  என்பதே  மிகவும் விசேஷமான  செய்தி, இந்த கரப்பான் பூச்சியை  சாதாரண  கரப்பான் பூச்சி  என்று நான் சொன்னதே தவறு,

    காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும்  கடந்து, எவராலும் அழிக்க முடியாத  அளவுக்கு எதிர்த்து  நின்று இன்று வரை  தன் இனத்தை  வெற்றிகரமாக  பெருக்கிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி  இந்த கரப்பான் பூச்சிகள்,

    மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள், என்பதை  நான் பிரயாணம் செய்த  பெங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் என்னுடைய  பயணச் சீட்டை  சரிபார்க்க வந்த  அதிகாரி சொல்லும்போதுதான்  எனக்கே இந்த ஞானோதயம் உண்டானது என்றால்  அது மிகையல்ல

    இரவு  மணி 11.30   பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன இருக்கையின் கீழே பெட்டிகளை வைத்துவிட்டு அப்பாடா  இரண்டு நாட்களாக தூக்கமில்லை, காலையில்  பெங்களூர் சென்று சேரும்வரை இன்றாவது  நிம்மதியாக  தூங்க வேண்டும் என்ற   எண்ணத்துடன்  விளக்கை   அணைத்துவிட்டு  படுக்கையில்  படுத்தேன் , காதில் ஏதோ குறு குறுவென்றது  எழுந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தால் ஒரு சிறிய கரப்பான் பூச்சி,

     ஆஹா  நம் காதில் இந்தக் கரப்பான் பூச்சி  உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்  என்ற எண்ணமே  என்னை திடுக்கிட வைத்தது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே படுக்கையில் நிறைய கரப்பான் பூச்சிகள்  மேயத்தொடங்கின, சற்று நேரத்தில் அந்த அறை முழுவதுமே  கரப்பான் பூச்சிகள், அந்த  அறையில் இருந்த அனைவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  தூங்கிக்கொண்டிருந்தனர்,

    என்னால் தூங்க   முடியவில்லை.  பயணச்சீட்டை  பரிசோதனை செய்யும் அதிகாரியை  அழைத்து என்ன இது, இப்படி  கரப்பான் பூச்சிகள் இருந்தால் எப்படி  தூங்குவது  என்றேன் நான், அதற்கு அந்த அதிகாரி சார் இந்த கரப்பான் பூச்சிகளை  சாதாரணமாக நினைக்காதீர்கள், இவை அத்தனையும்  வாரணாசி என்னும் புனித ஷேத்திரத்திலிருந்து  வந்தவை  என்றார் நமட்டுச் சிரிப்புடன்.

    உடனே  நான் அப்படியா  ! அப்படியானால்  இவைகளைக் கையெடுத்து  கும்பிடத்தான்  வேண்டும் என்று கூறிவிட்டு  கைகளை  மேலே உயர்த்தி  வாரணாசி கரப்பான் பூச்சிகளுக்கு  ஒரு கோவிந்தா  போட்டேன்.

    அந்த அதிகாரி  உடனே  சிரித்தார்!  சரி எப்படியும் தூங்கப் போவதில்லை  இவரிடமாவது  பேசிக்கொண்டிருப்போம்  என்று அவர் வேலைகளை  முடித்துவிட்டு  வரும் வரையில் காத்திருந்தேன்,   அவரும் வந்து  நட்பு முகத்துடன்  என் பக்கத்தில் அமர்ந்தார், என்ன சார் செய்ய முடியும் நீங்க  என்கிட்ட சொல்றீங்க, நான்  மேலிடத்தில் சொல்ல முடியும் அவ்வளவுதான் என்றார். ஆனால் மேலிடத்திலும்   அவர்கள் மிக  அக்கறையுடன் பொறுப்பாகத்தான்   செயல்படுகிறார்கள், குறிப்பாக  இந்த பெட்டி வாரணாசியிலிருந்து  வந்த  தொடர் வண்டியிலிருந்து  பிரித்து    பெங்களூர் செல்லும்  இந்த  வண்டியுடன்  இணைத்திருக்கிறார்கள்

     நீங்களே  யோசித்துப்பாருங்கள்  வாரணாசியிலிருந்து  வரும் தொடர் வண்டியில் பிரயாணம் செய்வோர்  அனைவருமே  தொடர்வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே  உணவுப் பொருட்களை  உண்கிறார்கள்,அது தவறில்லை ,ஆனால்  மீதமாகும் உணவுப் பொருட்களை அதற்குண்டான குப்பைத்தொட்டியில் போட்டால் நல்லது,அப்படியில்லாமல்  கண்ட கண்ட இடங்களில்  போடுகிறார்கள். அந்த உணவுப் பொருட்களை  மோப்பம் பிடித்து  கரப்பான் பூச்சிகள்  வருகின்றன, அரசாங்கத்தையே  குறை கூறிக்கொண்டிருப்பதை  விடுத்து  நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து  நடந்துகொண்டால்  ஓரளவு  சுத்தத்தையும் ,சுகாதாரத்தையும், அதன் மூலமாக  ஆரோக்கியத்தையும் நாம் பெற முடியும், என்றார்,

    ஆமாம்  தொடர் வண்டியில் இணைக்கப்படும் பெட்டிகளை  சுத்தப்படுத்துகிறீர்களே பிறகும் எப்படி இந்தக் கரப்பான் பூச்சிகள் வருகின்றன  என்றேன்

    சார்  இந்தப் பெட்டிகளை  எல்லா ஜன்னல்கள், கதவுகள்  அனைத்தையும் மூடிவிட்டு  ஒரு குறிப்பிட்ட சிறிய மாத்திரையை  வைப்பார்கள், அந்த மாத்திரை  சற்று நேரத்தில்  காற்றில் கரைந்து  ஒருவிதமான  ரசாயன  மாற்றம் ஏற்படுத்தி அந்தப் பெட்டியில் உள்ள  அனைத்து  கரப்பான் பூச்சிகளையும் கொன்றுவிடும்,

    அதன் பிறகு குறிப்பிட்ட நேரம்  கழித்து  இந்தப் பெட்டியை  சுத்தம் செய்வார்கள், அதன் பிறகே  இந்தப் பெட்டிகளை  இணைக்கிறோம், என்றார்

    சரி  இவ்வளவு  செய்தும்  கரப்பான் பூச்சிகள்  இருக்கிறதே எப்படி என்றேன் நான், அதற்கு அவர்  அதுதான்  விசேஷம், நாம் செய்த  புண்ணியம்,  பெட்டிகளை  ஜன்னல், கதவுகள்  எல்லாம் மூடலாம்,ஆனால் இந்த இணைப்புப் பெட்டிகள் மொத்தமாக இருக்கும்   மிகப்பெரிய இடமான கேரேஜில் இந்த  மாத்திரைகளை  வைத்து  மூடிவைக்க முடியாது. அங்கே  உணவுப் பொருட்கள் இருக்கும் இணைப்புப் பெட்டிகளை நோக்கி  இந்த கரப்பான் பூச்சிகள்  படையெடுத்து  ஆக்ரமிப்பதை  தடுக்க முடியாது.  இந்தப் பெட்டி  வாரணாசியிலிருந்து வந்தவுடன்  அதிலிருந்து  பிரித்து  சுத்தம் செய்ய நேரமில்லாமல்  உடனே  இந்த  ரயிலுடன் இணைக்கப்பட்டதால்  நம்மால்  வாரணாசி கரப்பான் பூச்சிகளை தரிசனம்  செய்ய முடிந்தது.

    அது நம் கொடுப்பினை என்றார், வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்த வண்டி .  அப்போது காமசமுத்ரா  என்னும்  ஸ்டேஷனைக் கடந்து சென்றது, இந்தக் காமசமுத்ரத்தில் நாம் என்ன செய்தாலும் சில விளைவுகளிலிருந்து தப்பிக்க  முடியாது  என்பது புரிந்தது. பயணச்சீட்டு  பரிசோதகர் நான் மீண்டும் ஒரு முறை உள்ளே  சென்று என்னிடம் புகார் கொடுப்பவர்களை  சந்தித்து  வருகிறேன், நீங்கள்  இந்த வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் மகத்துவத்தை  உணர்ந்து யோசித்துப்பாருங்கள்  என்று கூறிவிட்டுப் போனார்.

    நானும் வாரணாசியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்,  வருணா,  அசி  என்னும் இரு நதிகள் சங்கமிக்கும்  இடமாக இந்தப் பகுதி  அமைந்திருப்பதால் , இந்த இரு நதிகளின் சங்கமத்தால்  வாரணாசி  என்னும் பெயர் பெற்றது இந்த  இடம், புகழ் பெற்ற  காசி விஸ்வநாதர். ஆலயத்தில் சைவர்கள்  வழிபடும்  பன்னிரண்டு லிங்கங்களுள் ஒரு முக்கியமான  லிங்கமான  ஜோதிலிங்கம் இருக்கும் இந்த  ஷேத்திரம்  உத்திரப் பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில்  அமைந்துள்ளது,

    ஒவ்வொரு இந்துவும்   வாழ்க்கையில்  ஒரு முறையாவது  காசிக்கு சென்று ,அங்கே  உள்ள  கங்கையில் நீராடி புனித ஸ்தலங்களை தரிசித்து வந்தால்  முக்தி கிடைக்கும்   என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட  ஷேத்திரமான  காசிக்கு செல்லும்போது  தாங்கள் மிகவும் விரும்பும் ஏதேனும் ஒன்றை  இனி வாழ்நாளில்  உபயோகப்படுத்த மாட்டேன்  என்னும் உறுதி எடுத்துக்கொள்வது  வழக்கம்,.

    சூரிய  வம்சத்தில்  தோன்றிய  சகரன்  என்னும் மன்னன் அஸ்வமேத  யாகம் செய்தான். இதைக் கண்ட  இந்திரன் தன்னுடைய  இந்திர பதவி பறிபோய்விடுமோ என்று பயந்துஅச்வமேத யாகத்துக்கு என்று தேர்வு செய்து வைத்திருந்த  குதிரையை திருடிக்கொண்டு போய், இமாலயத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த கபிலர் என்னும் மஹாமுனியின் ஆஸ்ரமத்தில்   கட்டிவைத்தான்,

    இதை அறியாத   மன்னன் சகரனின்  புதல்வர்கள் அஸ்வமேத யாகத்திற்கு வைத்திருந்த  குதிரையைத் தேடிக்கொண்டு  வரும்போது அந்தக் குதிரையை கபிலரின் ஆஸ்ரமத்தில் கண்டு  அவர்தான்  அந்தக் குதிரையை திருடிக்கொண்டுவந்து  கட்டி வைத்திருக்கிறார்  என்று தவறாக  எண்ணி அவரை துன்புறுத்தினர்,

    ஒரு தவறும் செய்யாத  கபிலர்  கோபமடைந்து   மன்னன் சகரனின் பிள்ளைகளையும், அவர்களுடன் வந்த  அனைவரையும்  தன் தவ வலிமையால்  எரித்து சாம்பலாக்கினார். இதை  அறிந்த  சகரன் மிகவும் விரக்தி அடைந்து அவனுடைய பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் அடைந்து தவம் செய்து  சொர்கம் புகுந்தான்.

    கபில முனிவரின்  கோபத்துக்கு ஆளான இளவரசர்கள் யாருக்குமே முக்தி கிடைக்கவில்லை, அம்சுமான் மன்னனின் அரண்மனைக்கு வந்த தவஸ்ரேஷ்டர்கள் கபிலரின் தவ வலிமையால் எரிந்து போனவர்களின் சாம்பலின் மீது தேவலோகத்தில் பிரவகிக்கும் கங்கையின் நீரைத் தெளித்தால்  அவர்கள் முக்தி அடைவார்கள்  என்று கூறியதால் கங்கையை பூமிக்கு  கொண்டுவர  அனைத்து முயற்சிகளும் செய்தான்.

    ஆனால் அவனால் இயலாமல் போனது. அம்சுமானின்  குமாரன் அசமஞ்சன் தானும் பெரு முயற்சி செய்தான் அவனாலும் முடியவில்லை,  அசமஞ்சனின்  குமாரன் பகீரதன்  அந்த முயற்சியைத் தொடர்ந்தான்.

    பகீரதன்  கங்கையை  பூமிக்குக் கொண்டு வரும் நோக்கில்கடுந்தவம் செய்தான். இதைத்தான்  பகீரதப் ப்ரயத்தனம் என்பர்,  அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.

    காசிக்கு போவது என்பது  அந்தக் காலத்தில் மிகவும் கடினமான  ஒரு செயல், பிரயாணம் மட்டுமல்ல, காசிக்குப் போவதற்கு கொடுப்பினை இருந்தால்தான் போய்வரமுடியும் என்பது  இந்துக்களின் அசைக்கமுடியாத  ஒரு ஆன்மீக நம்பிக்கை.

    ஒன்று மிக நன்றாகப் புரிந்தது! கொடுப்பினை இருந்தால்தான் வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் தரிசனமும் கிடைக்கும், ஆமாம் என்னைத்தவிர அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மேல்  வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்  வர்ண பேதமில்லமல், ஜாதி வித்யாசம் பார்க்காமல், ஆண் பெண்  பேதமில்லாமல், கீழ் ஜாதி, மேல்ஜாதி பேதமில்லாமல், வர்ணாஸ்ரம தர்மங்களைப் பற்றியெல்லாம்  யோசிக்காமல்  ஊர்ந்து கொண்டிருக்கின்றன,

    நான் வாரணாசிக் கரப்பான்பூச்சிகளையும், அவைகள்  ஊர்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரையுமே  ஒரு வித பயத்துடன், பக்தியுடன் பார்த்துக்கொண்டே  இருந்தேன்,

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    rkc1947@gmail.comhttp://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

     

    Share
  • வல்லமை வாழ்த்தி வழியனுப்புகிறது!

    திரு இசைக்கவி ரமணன் அவர்களின் அமெரிக்கா/கனடா நாட்டு இலக்கியப் பயணம் சிறப்புற வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    Invitation Aug 6

    வணக்கம்!

    நாளை இரவு அமெரிக்கா/கனடா நோக்கிச் செல்கின்றேன். அதற்கு முன்பாக, மாலையில் ஒரு சிறிய சிறப்பான நிகழ்ச்சி. கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் பாட்டு, உங்களோடு. அப்படியே துர்கா சப்த ஸ்லோகி, மனோன்மணி மாலை ஆகிய குறுந்தகடுகள்,(தர்மா ராமனுடன் உரையாடல்கள்) A Drop from the Gita என்னும் மின் நூல் இவற்றை வெளியிடுகிறேன். இவற்றைத் தயாரித்து அளிப்பவர்கள் சென்னை ஸ்வாதி ஸொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர்.

    வாருங்களேன்! வந்து என்னை வழியனுப்பி வைத்தமாதிரியும் இருக்கும்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    கடித இலக்கியம் என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப் பற்றிய ஒரு சில பதிவுகளும் என் வலைப்பூவில் உண்டு. கடிதம் எழுதுவதும் அதை ரசித்துப் படிப்பதுமே ஒரு கலை. ஆதியில் கடிதங்கள் பலவிதங்களாக அனுப்பப்பட்டதைப் பழைய காவியங்கள் பலவகையாக சொல்வதை நாமும் படித்திருக்கிறோம். எத்தனைதான் இக்காலத்தில் மிகப் புதுமையான அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும் உணர்ச்சிகரமான உள்ளத்தோடு, அந்த உணர்வில் பேனா மைகொண்டு கலந்து எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சியோ அல்லது திருப்தியோ, இந்த தற்கால வசதிகளில் கிடைக்காது என்பது என்னவோ வாஸ்தவம்தானே.

    கடிதங்களால் மனத்தின் குறைகளை நம்மால் இறக்கிவைக்க முடியும் என்பதும் கடிதங்களால் உறவுகள் பலமடையும் என்பதும் நாம் அனுபவத்தில் கண்டதுதான். தேவன், குமுதினி போன்ற பெரிய எழுத்தாளர்கள் இந்தக் கடிதங்களைக் கொண்டே பல கதைகள் எழுதியுள்ளார்கள்., ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நீதி சொல்லும்

    கடிதங்களில் காதல் கடிதம் மிகவும் ருசிகரமானவைதான். காதலி எழுதினாலும் சரி, காதலன் எழுதினாலும் சரி, அதன் தனித்துவம் மட்டும் அவர்கள் இருவருக்குமே தெரியும், அதன் மகத்துவமும் புரியும். உணர்ச்சிகளின் இதய ஓட்டத்தை அவர்களால் மிகச் சரியாக வெளிப்படுத்த இந்த கடிதங்கள் எழுதப்படுகின்றன என்பதோடு அவர்கள் காதலையும் கெட்டிப்படுத்துகிறது என்பது கூட உண்மைதான். ஆனால் இன்றைய அதிநவீன உலகில் இக்கடித இலக்கியம் அழிந்துவருவதாகத்தான் தோன்றுகிறது.இப்படி நினைக்கையில்தான் இந்த வாரத்தில் ஒரு தமிழ்மடல் கண்டேன்.. இதோ உங்கள் பார்வைக்கு.

    என் உயிரானவரே…!

    vinmugilalஎப்பொழுது வருவீர்கள், பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள், கதவடைத்த சன்னல்களும், உட்புறம் தாழிட்ட கதவும், நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில். இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டு, மகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும். இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில், தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.

    தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரை, நோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்ததில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.

    மஞ்சள் முகம் தழுவி, குங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.

    கொல்லை புற தென்றல், தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சும் கண்ணீர், கொஞ்சம் ஏக்கம், கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை. உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா? ஓடிவந்து அணைத்துக்கொள்வேனா? முகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனா? பிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ…?

    என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா? உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமா? முத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமா? என்னவளே என்று இதயம் அரற்றுமா? இதழ்கள் காதில் கிசுகிசுக்குமா? மீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில், தேகம் சிலிர்த்தெழுமா?
    இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறது, என் உயிரான நீங்கள் இல்லாமல், தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.

    என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம். எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே”

    உணர்ச்சிகள் இயல்பாகப் பொங்கும் இக்கடித இலக்கியத்தை எழுதியவர் தமிழ்ச்செல்வி அவர்கள். இவரின் தமிழ் இக்கடிதத்தில் சுகமாய் விளையாடி தாலாட்டுப் பாடி நம்மையும் சற்று மயக்கமடையச் செய்கிறதைக் காணலாம். அந்தத் தமிழ் மயக்கத்தைத் தந்த தமிழ்ச்செல்வியை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்!!

    கடைசி பாரா: திரு க. சச்சிதானந்தத்தின் ‘குறவன் பாட்டு”

    துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

    கலவரம் பூணும் கானுருக் கண்டு!

    குலவறம் காக்கும் குறவனின் மனமோ

    இலகுறக் கண்டு கானினை வெல்லும்!

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-2)

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    220px-Alexander_The_Greate_and_Roxane_by_Rotari_1756

    அலெக்சாண்டரின் திக்விஜயத்தில் தோல்வியுற்ற பாரசீக நாடுகளில் ஒன்றான பாக்டிரீயாவைச் சேர்ந்த நாட்டியக்காரி ரொக்ஸானா அவனுக்குக் கிடைத்த போர்ப்பரிசு. பாக்டிரீயாவை வீழ்த்தியதும் அதன் சிற்றரசன் அளித்த ஒரு மாலை விருந்தின்போது பதினாறு வயது நிரம்பிய அப்பேரழகியைக் கண்டவுடன் அவள் மீது மையல் கொண்டான் முப்பது பிராயத்தை எய்திய அலெக்சண் டர்,அவன் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பாக்டிரீயக் காவலன் அவளை அன்றிரவு மாசிடோனிய மன்னனின் கூடாரத்துக்கு அனுப்பி வைத்த்தும், அவளுடன் தான் அன்றிரவு நடத்திய சம்பாஷணைகளும் அவன் நினைவில் வந்ததும றக்கமுடியாதுதான்!

    அன்று அந்தக் கூடாரத்தில் உள்ள தீப்பந்த வெளிச்சத்தில், ரொக்ஸானா ஒரு தங்கச்சிலை போல் நின்றிருந்தாள். அலெக்சாண்டர் அந்த பதுமையின் அருகில் சென்று நோக்கினான். சற்றுமுன் பல இளம் பெண்டிர் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சியில் பார்த்தவளா இவள்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பேரழகி உண்மையிலேயே எனக்கு ஒரு போர்ப்பரிசுதான்  என யோசித்தவாறு அவளைச் சுற்றி வந்தான். அவன் எண்ணத்தை அவள் பூரணமாக ஆக்கிரமித்தாள்.

    செம்பஞ்சு வண்ண மேனி, சிறிய பாதங்கள், அல்லித்தண்டுகளை ஒத்த கால்கள், குறுகிய இடை, பருவச் செழிப்பின் உந்துதலால் பூரித்திருந்த இனமலர்கள், கோலமயில் கழுத்து, அப்பொழுதே அலர்ந்த தாமரையை வெட்கிக்க வைக்கும் வதனம், படைத்த சிற்பியின் கைத்திறனால் நன்று செதுக்கப்பட்ட மூக்கு, செம்மை படர்ந்த இதழ்கள், தீக்‌ஷண்யமான கண்கள், மகுடம்போன்ற கரிய அளகம்… இவையெல்லாம் அவள் முன்னழகு என்றால், அவள் பின்னழகு அவனை மேலும் சொக்க வைத்தது.

    அந்த மெய்மறந்த நிலையில் அக்கூடாரத்தில் சற்று நேரம் மவுனம் ஆட்சி செய்தது. அவ்வமைதியை முடிக்கும் வகையில் அவள் பேசலுற்றாள்.

    “மாவீரரே! இப்போது  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். தங்கள் இன்ப வேட்கைக்கு பலியாகத் தயாராக வேண்டுமா? எப்பொழுதெல்லாம் உங்களைப் போன்ற அரசர்கள் போர்வெறி கொண்டு ஒரு நாட்டை வீழ்த்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் காமவெறி கொண்டு பேதைப் பெண்களைத் துன்புறுத்துவதுதானே வழக்கம்!” என்று கண்ணீர் மல்கும் கண்களோடு தழுதழுத்த குரலில் கேவினாள் ரொக்ஸானா.

    ”பெண்ணே! என்னை ஏன் ஒரு காமாதுரனாக நினைக்கிறாய்? அழகினை ஆராதிக்கும் ஒரு இளைஞனாக ஏன் கருதக்கூடாது? மாலை விருந்தின்போது நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் உன்னைக் கண்டது முதல் என் மனம் என்னை உன் அடிமையாக ஆக்கிவிட்டது. நான் ஈராஸின் பாணத்துக்கு பலியாகிவிட்டேன். உன்னை முறைப்படி மணம்புரிய வேண்டும் என்பதே என் முடிவு, உனக்கு சம்மதமா? ஒரு உண்மையை உன்னிடம் கூறியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே இரு மனைவியர் உண்டு. அரசர்கள் பல தாரங்களை மணப்பது புதிதல்லவே. உனக்கு விருப்பம் இல்லை என்றால் உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை மிக்க கவுரவமாக திருப்பி அனுப்பி வைப்பேன்.”

    அலெக்சாண்டரின் இந்த வெளிப்படையான கூற்று ரொக்ஸானாவின் மனத்தை நெகிழச் செய்தது.

    ”எனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டமா? மாமன்னர் அலெக்சாண்டருக்கு இந்த அபலை நாட்டியக்காரி மீது காதலா? இது என்னை ஏய்க்கும் பொருட்டு கூறப்படும் உபசார வார்த்தைகளா அல்லது மெய்யான சொற்களா?”

    “பெண்ணே உன் பெயர் என்ன? நான் கூறுவது இறைவன் மீது ஆணையாக முற்றிலும் உண்மை. உன் ஒப்புதலுடன் உன்னை என் பட்டமகிஷியாக்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.”

    ”மன்னர் மன்னரே, என் பெயர் ரொக்ஸானா. என்னை தங்கள் பட்டத்து ராணியாக்கப் போகிறீர்களா? உங்கள் மனைவியரும், உறவினர்களும், அரசாங்க ஆலோசகர்களும் மற்றும் உமது நாட்டின் சான்றோர்களும் இதனை ஒப்புக் கொள்வார்களா?”

    “ரொக்ஸானா, என் விருப்பத்திற்கு விரோதமாக என் அன்னை ஒலிம்பியா ஏதும் சொல்லமாட்டார். மற்றவர்கள் அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம்முடைய திருமணம் என் அன்னையின் முன்னிலையில்தான் நடக்கவேண்டும். அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.”

    “என் மனத்திற்கு இனியவராகிவிட்டவரே, மணம் எப்போது நடந்தாலும், இனி நான் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுக்குத்தான் சேவை செய்வேன். நீங்கள் எங்கு சென்றாலும் நானும் ஒரு தோழியாக உங்களை நிழல்போல் தொடர்வேன்.”

    “ரொக்ஸானா, மிக்க மகிழ்ச்சி, நீ என் கூடவே இருந்தாலும், நம் திருமணம் நடக்கும்வரை  நான் வரம்பு மீறமாட்டேன்,  ‘இது உறுதி’  என்றான் அலெக்சாண்டர்.

    “எத்தனை உத்தமமானவர் நீங்கள்!” என்றாள் அவள் ஒரு பெருமூச்சோடு.

    அன்றிலிருந்து அப்பாரசீகப் பேரழகி அலெக்சாண்டரின் பாசறையிலேயே வசித்தாள். அவ்வப்போது அவன் கூடாரத்துக்குச் சென்று அவனுக்கு உணவளிப்பது, போர்க்காயங்களுக்கு களிம்பு தடவுவது, உரிய காலத்தில் மருத்துவர் சொல்லியபடி மருந்துகளைக் கொடுப்பது, நடனம் மற்றும் இனிய பேச்சுகளால் அவனை மகிழ்விப்பது போன்ற சேவைகளைப் புரிந்து வந்தாள்.

    கூடாரத்தின் வாயிலில் ஒரு இனிமையான வாசம் வந்து அவன் மூக்கைத் துளைத்த்தும் அவன் நிகழ்காலத்துக்கு வந்தான். அங்கே ரொக்ஸானா நின்றிருந்தாள்.

    eros

     

    ”ஈராஸ்” கிரேக்கர்களின் காதல் தேவன்.

     

     

     

     

    (தொடரும்)

    Share
  • ” திருக்குறளே தேசிய நூல் “

    தமிழ்த்தேனீ

     

    ” திருக்குறளே தேசிய நூல் ”

     

    1331

     

     

     

     

     

     

     

    இருவரியில் இணைத்தார்  இதயங்களைப் பிணைத்தார்

    ஒருவழியில் சொன்னால்  உலகத்தையே வளைத்தார்

    இருவரியில் முப்பாலும்  அப்பாலுக்கும் அப்பாலும்

    எப்பாலை உண்டாலும்  அப்பாலும்  மறுபடியும்

    தமிழ்ப்பாலாய் உரு மாறும் தாய்ப்பாலாய்த் தரமேரும்

    தமிழுக்கே உரித்தான தரமான அமிழ்தம் தருகின்ற இருவரிகள்

     

    ஓரடியார் ஈரடியார் மூவடியார் நாலடியார் யாரடியால் அளந்தாலும்

    தமிழ் வாமனனாய் குறுகி நின்று ஈரடியால் அளந்திட்ட வள்ளுவனின்

    சீரடியால் பொன்னடியால் இவ்வுலகம்  அளந்த ஈரடியாம் திருக்குறளே

    அமிழ்தாய் தொடக்கமாய் நடுவாய் முடிவாய்  மறுபடியும்

    தொடக்கமாய் தொடர்ந்தே வாழுகின்ற வள்ளுவனின்  ஈரடிகள்  ஈரம் இருக்கின்ற

    இதயங்களை வீரம் விளைகின்ற உதயங்களை மானம் காக்கின்ற

    தமிழர்களை  தலை நிமிர்ந்தே நிற்க வைத்த ஈரடிகள்  காலம்  கடந்து

    நின்று ஜாதிமத பேதமின்றி தேசங்களைத் தாண்டி தேகங்களைத்

    தீண்டி  தன்னைத் தானுணரும்  மனப்ரயாணம் மகிழ்ச்சியாய் மனிதர்

    செய்ய,  ஈரடியால் அமைந்த பாதை மனமயக்கம்  தீர்க்கும் பாதை

    இரு கரையும்  ஈரடியாம் நடுவினிலே  நாம் நடக்க  அமைத்து

    வைத்த நல்ல பாதை சாகாவரம் பெற்று நிற்கின்ற கோலத்தில் தானே

    இருந்தாலும் திருக்குறளை காலமெல்லாம் நிற்க வைத்த

    வள்ளுவனின் ஈரடியில்  மனித நீதி புகழ்மணந்து

    ஆறாய்ப் பெருக்கெடுக்க  வயல் வெளியின்

    இருமருங்கில் நியாயங்கள் பசுமையாய் ஓங்கி வளர பொது

    மறையாய்ப்  புகழ் பெற்ற இதுவன்றோ  தேசிய நூல்

    அத்துணை மாந்தருமே ஆகாவென்றே வாழ்த்துகின்ற

    திருவடியாம்  திருக்குறளே  தேசிய நூல்

    Share
  • வார ராசி பலன்!…05-08-13 – 11-08-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: பெண்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிக கவனம் செலுத்தலாம். மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பெற்றோர்கள் பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. .கலைஞர்கள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும் . மாணவர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடி கவனம் தேவை.

    ரிஷபம்: நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். பெண்கள் உறவுகளோடு வீண் வாக்குவாதத்தில் இறங்கமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர், தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். அதிகமாக புகழ்பவர்களிடமிருந்து கலைஞர்கள் விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும்.

    மிதுனம்முதியவர்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால்,ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் கலைஞர்களின் கனவுகள் நனவாகும். மாணவர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செயவதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

    கடகம்: இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் எப்போதும் கனிவாகப் பேசுவது அவசியம். மாணவர்கள் நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதிப் பார்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு இருக்க, பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள் வது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் , நல்ல இதயங்களை புண்படுத்தாமல் நடப்பது நன்மையைத் தரும்.

    சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட முடியும். மாணவர்கள் நண்பர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், நல்ல பெயரோடு பெறும் லாபமும் அதிகரிக்கும். இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: கலைஞர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மாணவர்கள் , தேர்வு நேரங்களில் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம். பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கை யைப் பெற, பொறுமையாக செயல்படுவது முக்கியம். எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்படலாம்.

    துலாம்: பெண்கள் குடும்பத்தில் சச்சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். வியாபாரிகள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இல்லையென்றால் சில தொந்தரவுகள் தோன்றும்.

    விருச்சிகம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் அவ்வப்போது தோன்றும் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளை முடித்தால் உறவுகள் நடுவே உங்கள் அந்தஸ்து உயரும். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: பெண்கள் பணிபுரியும் இடம் மற்றும் இல்லத்தை நேர்த்தியாக வைத்திருப்பார்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். பணியில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெய ரைப் பெறுவது எளிதாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் திறமையால் பிறர் கவனத்தையும், வாய்ப்புக்களையும் ஈர்ப்பார்கள். மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.

    மகரம்: பெண்கள் தங்க நகைகளை இரவலாய் வாங்குவது, இரவலாய் கொடுப்பது- இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பணியில் இருப்பவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்:முதியவர்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறா ர்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினர் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். பொது வாழ்வில் இருபவர்கள் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். மாணவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 83 (05.08.13)

    மலர் சபாpicture 83

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    முன்பு ஒரு முறை
    யான் அவளைப் பிரிந்து வாழ்ந்தபோது
    பிரிவாற்றாமையால்
    மிக்க வருந்துபவள் போல் காண்பித்து
    எனது உறவினர் முன்
    தான் மிகவும் துயரப்படுபவள் போல் பாவித்து
    துயரங்களை எல்லாம்
    ஆராய்ந்து கூறுபவளாய் நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த தேர்ச்சிவரி.

    வண்டுகள் வந்து ஊதிப் பூக்கவைக்கும்
    பூங்கோதையை உடைய அவள்
    மாலைப் பொழுதினில்
    காம நோயால் வருந்துபவள் போல் காண்பித்து
    கண்ணில் படுகின்ற சுற்றத்தாரிடம்
    தம் துன்பத்தைக் கூறி
    அவர்கள் அனுதாபத்தைப் பெற நடிப்பாளே…
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காட்சிவரி.

    பிரிவுத்துயர் தாங்காமல்
    காமநோயுற்றவள் போல
    அடுத்து அடுத்துப்
    பொய் மயக்கம் கொண்டு
    என் சுற்றாத்தாரிடம் தன் துயர்
    எடுத்து எடுத்துக் கூறி நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த எடுத்துக்கோள்வரி

    ஆயிழையே,
    அவள் ஒரு ஆடல் மகள் ஆதலால்
    இங்ஙனம் இயல்பாய் அவள் நடித்த நடிப்புகள்
    அவள் கலைக்குப் பெருமை சேர்ப்பதேயாகும்!
    என்றெல்லாம் இகழ்ந்து கூறிய கோவலன்
    மாதவி அவள் கடிதம் பெற மறுத்துவிட்டனன்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 101 – 110
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://cheapestinindia.com/price/raja-ravi-varma-painting-title-radha-waiting-for-krishna-in-kunjavan-723379

    Share
  • ‘ஸ்மாட் போன்’ கதை.

    – கே..எஸ்.சுதாகர்

    வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

    I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

    “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!

    கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைசிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

    மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு ‘பிளானி’ற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.

    நண்பன் ஒருவன் மலிவான கடையென ஒன்றை அறிமுகம் செய்திருந்தான். அங்கே வந்திருந்த கஸ்டமர்ஸ் எல்லாரிடமும் புதிது புதிதான கைத்தொலைபேசிகள் விதவிதமான நாதமெழுப்பிய வண்ணம் இருந்தன. அவர்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன். கவுண்டரில் மூன்றுபேர்கள் நின்றார்கள். எனது முறை வந்ததும் அவர்க்ளிடமிருந்த பிளான்கள் பற்றிக் கதைத்தேன். நான் தற்போது பாவிக்கும் ரெலிபோனைப் பார்க்க முடியுமா என்று அவன் கேட்டான். பொக்கற்றுக்குள்ளிருந்த பழைய நோக்கியா போனை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் பாம்பைக் கண்டுவிட்டவன் போல திடுக்கிட்டு, இரண்டு அடிகள் பின் நகர்ந்து மெதுவாக நழுவி உள்ளே ஓடினான். நான் எனது போனை உடனடியாக எனது பொக்கற்றுக்குள் செருகிக்கொண்டேன். கவுண்டரில் நின்ற மற்ற இருவரும் உதட்டிற்குள் புன்னகை ஒன்றைத் தவழவிட்டார்கள்.

    அந்தப்புன்னகை எனக்கா, அல்லது உள்ளே சென்றவனுக்கா என்று தெரியாமல் மலங்க விழித்தேன்.

    சற்று நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெண் வந்து அந்தக்கவுண்டரில் நின்று கொண்டாள். அருகேயிருந்த ஒரு இருக்கையைக் காட்டி என்னை அதிலே அமரும்படி சொன்னாள்.

    நேரம் நகர்ந்தது. ஒருவரும் என்னைக் கவனிப்பதாக இல்லை. என்னைக்கண்டு மிரண்டு உள்ளே சென்றவன், கதவொன்றை மெதுவாக நகர்த்தி நான் போய்விட்டேனா என்று பார்த்தான். கடைக்கு அவர்கள் இனத்தவர்கள் வருகின்றார்கள், போகின்றார்கள்.

    “அவங்கடை கடை. வருவார்கள்…. போவார்கள். இதிலே நமக்கென்ன வேலை?” எழுந்து கொண்டேன். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் நடையைக் கட்டினேன்.

    உடுப்புக்கடையொன்றிற்கு முன்னால் ராசன் அண்ணன் தனது காரை எடுத்து இடம் மாற்றிக் கொண்டு நிற்கின்றார். கார்க்கண்ணாடியூடாக எனக்குக் கையைக் காட்டினார். ராசன் அண்ணை எனது ஊரவர். அவருடைய அம்மா கைராசி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருக்கின்றார் என்று அறிந்திருந்தேன். அவ வந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இன்னமும் நாங்கள் அவரைப்போய் பார்க்கவில்லை.

    இக்கணம் ராசன் அண்ணை பேசப்போகின்றார். அவர் தொடங்குவதற்கு முன்னால் நானே தொடங்கிவிட வேண்டும்.

    “அண்ணை! இன்னும் உங்கடை அம்மாவை வந்து பார்க்கேல்லை. மகளின்ரை படிப்பு. ஒரே பிஷி”

    “எனக்குத் தெரியும்தானே தம்பி. அதைப்பற்றி நான் ஒண்டும் குறையா நினைகேல்லை. அம்மா உள்பட எல்லாரும் உடுப்புக்கடைக்குள்லைதான் நிக்கினம். ஒரு மணித்தியாலமாபோச்சு. இன்னும் உடுப்பு வாங்கினபாடில்லை. அதுதான் ஒருக்கா காரை மாத்தி விடுவோமெண்டு வந்தனான். இல்லாட்டி உடுப்புக்கு மேலாலை ஃபைன் கட்டவேண்டி வந்திடும்.”

    “அப்ப நல்லதாப்போச்சு. அம்மாவைப் பாத்து ஒரு ஹலோ சொல்லுவோம்.”

    இரண்டுபேருமாக கடைக்குள் நுழைந்தோம்.

    இந்த இடத்திலை கைராசியக்காவைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இப்ப அவவுக்கு எண்பது தாண்டியிருக்கும். அப்ப அம்பது இருக்கேக்கை அது நடந்தது. சின்னனிலை ஒருமுறை சரியான இருமலாலை படுக்கையாக இருந்தேன். பத்துப்பன்னிரண்டு வயதிருக்கும். அப்ப ஒருநாள் அவ எங்கடை வீட்டுக்கு வந்தா. அம்மா எனது வருத்தம்பற்றி அவவிடம் ஆலோசனை கேட்டார். உடனே கைராசியக்கா ஒரு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்கடை வீட்டுத்தோட்டப்பக்கம் போனா. கொஞ்ச மண்புழுக்களைப் பிடித்துக் கொண்டு வந்தா. துடிக்கத் துடிக்க அவற்றை நறுக்கி தாச்சிச்சட்டிக்குள்ளை போட்டு வறுக்கத் தொடங்கினா. பிறகு அதுக்குள்ளை நீரை விட்டுக் காய்ச்சி, அந்தக் கசாயத்தை வடித்தெடுத்துக் கொண்டு வந்தா. நான் மூண்டுமுறை வீட்டைச் சுத்தி ஓட்டம் பிடித்துவிட்டு பனை வடலிக்குள்ளை ஓடி ஒளிச்சிட்டன். ஒவ்வொரு பனை பனையா ஒளிச்சிருந்து கடைசியிலை என்னை அமுக்கிப் பிடிச்சே விட்டா. பிறகென்ன… வாயை இழுத்துப் பிடிச்சு ஒரே அமுக்காக மருந்தை விட, மூக்குக்குள்ளாலை கொஞ்சம் வர வாயுக்குள்ளை மிச்சம் முழுவதும் போய்ச் சேர்ந்தது. அந்த ஒருமுறை மருந்தோடை இருமல் பறந்து போச்சு. ஆனா கைராசியக்கா பற்றின பயம் தொற்றிக் கொண்டது.

    உடுப்புப்போட்டுப் பார்க்கும் இடத்திற்கு முன்னால் எல்லாரும் குழுமி இருந்தார்கள். கைராசியக்காவைக் காணவில்லை.

    “எங்கே கைராசியக்கா?”

    “அப்பம்மா உள்ளுக்கை உடுப்புபோட்டுப் பார்த்துக் கொண்டு நிக்கின்றா” என்றாள் ராசன் அண்ணையின் கடைசி மகள். பேர்த்தியும் உரிச்சு வைச்சாப்போல கைராசியக்கா மாதிரித்தான். சூரியோதயத்திற்காகக் காத்து நிற்பவர்கள்போல அதைச் சூழ்ந்து எல்லாரும் நின்றார்கள்.

    ”இஞ்சை மீனாச்சியக்காவினரை மகன் சிவயோகன் உங்களைப் பாக்கவெண்டு வந்து நிக்கின்றார்” ராசன் அண்ணை குரல் கொடுத்தார்.

    “ஏன் என்னைப் பாக்கிறதுக்கு இதுதானோ அவருக்குக் கிடைச்சிருக்கிற இடம்?”

    கைராசியக்காவின் குரல் உள்ளிருந்து கேட்டது. தொடர்ந்து கதவை நீக்கியபடி கைராசியக்கா காக்ரா சோளியுடன் வெளியே வந்தார். சூரிய உதயம்!

    “அப்பம்மாவுக்கு நல்ல வடிவா இருக்கு. இதையே வாங்குவம்” என்றாள் பேர்த்தி.

    அவவைப் பார்க்க சோளக்கொல்லை பொம்மைக்கு சொக்காய் புதுசா மாட்டினமாதிரி இருந்தது.

    ”போகிற போக்கிலை குண்டியிலை தட்டினா லைற் எரியுறமாதிரிச் சீலை இருந்தாத் தாங்கோ எண்டு கைராசி அக்கா கேட்டாலும் கேட்பா”

    “என்ன கைராசியக்கா மொடேர்ணா நிக்கிறியள்?” எனது கேள்வி அவவைக் கோபப்பட வைத்திருக்க வேண்டும்.

    “உனக்கடா வெளிநாடு வந்து திமிர் கூடிப்போச்சு. உனக்கொண்டு சொல்லிறன் கேள். ’காக்காய்ச்சோளி’ போடவேண்டுமெண்டது என்ரை சின்ன வயசு ஆசை. இப்பதான் நிறைவேறியிருக்கு. அப்ப ஒரு பத்துப்பன்னிரண்டு வயசிருக்கும். என்ரை அப்பனிட்டைக் கேட்டன். என்னை மரத்தோடை கட்டி விளாசு விளாசெண்டு விளாசிப்போட்டான். பிறகு என்ரை புருஷனைக் கேட்டன். உஷூம்… பிறகு பிள்ளை! ஆர் உவன் ராசன் தான். உவனாலும் முடியாமல் போச்சு. இப்ப எத்தினையோ தலைமுறை கடந்து பேத்தி வாங்கித் தாறாள். ஒரு பெட்டைச்சியாலை முடியிற காரியம் ஆண்வர்க்கத்தாலை முடியாமல் போச்சுது எண்டதுதான் இப்ப என்ரை கவலை”

    “அம்மா. உது வடிவா இருக்கு. உதையே வாங்குவம்” என்றான் ராசன். எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

    “நான் இந்த உடுப்போடையே வரப்போறன். நீ போய் கவுண்டரிலை காசைக் குடுத்திட்டு வா. நான் இந்தத் தம்பியோடை கதைச்சுக் கொண்டு நிக்கிறன்”

    “நல்லா இருக்கு கைராசியக்கா…. இப்ப உங்களைப் பாக்க சிம்ரன் மாதிரி இருக்கு” கைராசியக்காவுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது ரெலிபோன் கிணுகிணுத்தது. மனைவிதான்.

    ரெலிபோனைக் கையிலெடுத்து ஒரு ஹலோ சொல்லவில்லை. எனது ரெலிபோனைப் பறித்து அருகே இருந்த குப்பைக்கூடைக்குள் எறிந்தா கைராசியக்கா.

    “எட அறுவானே! உனக்கு ஒரு ரெலிபோன் வாங்க வக்கில்லை. என்னோடை கதைக்க வந்திட்டாய். உதாலை ஒரு படம் எடுக்கலாமோ சொல்லு… இந்தாபிடி… இதிலை கதை!” என்றபடியே தனது மார்புக்குள் செருகியிருந்த கைத்தொலைபேசியை எடுத்து நீட்டினா கைராசியக்கா.

    அது ஒரு ’ஐ போன் 5’ என்று உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.

    Share
  • வேர்களுக்கு நன்றி சொல்வோம் …

    20130728001059_00001எஸ்.ஆர்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் மிகச் சிறந்த தொழிலதிபர், நிலக் கிழார் சமூக நல ஆர்வலர், சிறந்த எழுத்தாளர், என பன்முக நாயகராக விளங்குபவர். அன்னைத் தமிழ் மற்றும் தாய் மண் இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றும் வல்லமையாளர். எம்.ஏ. வரலாறு பட்டதாரியான இவர் பல்வேறு நூல்களும், தினமணி, காலைக்கதிர், தினமலர் போன்ற நாளேடுகளில் பல்வேறு பிரபலமான தொடர் கட்டுரைகளும் எழுதி அனைவராலும் அறியப்படுபவர். இவருடைய நூல்களில் மிக முக்கியமானவைகள், ‘தண்ணீரைத் தேடி’, ‘சரங்கள்’, ‘அண்ணா ஒரு அண்ணல்’ போன்றவைகள். உழவர் பெருமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டவரான இவரின் படைப்புகள் அனைத்தும் பெரிதும் உழவர் பெருமக்களின் வாழ்வின் மலர்ச்சியின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது சிறப்பு. திராவிட இயக்கத்தின் வரலாற்றை அதன் அடித்தளத்தினூடே அருமையாக ஆய்வு செய்திருப்பவர். மிகச் சிறந்த சிந்தனையாளர். நதிநீர்ப் பிரச்சனையான காவிரி, முல்லைப் பெரியாறு ஆகியவைகளின் தோற்றம் மற்றும் அதன் பிரச்சனைகள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவித் திறமும், உரைத்திறமும் ஒருங்கே அமையப் பெற்றவர். விவசாயம், நதிகள், தண்ணீர் பிரச்சனை பற்றி இவர் எழுதியுள்ள ‘நதிகளின் சங்கமம்’ என்ற நூல் அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியக் குறுநில மன்னர்கள் ஒற்றுமையின்றி வாழ்ந்த காலமது. வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம் இந்திய நாட்டையே வளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டது. இவர்களை எதிர்த்துப் போரிட்டு தம் இன்னுயிரையும் தியாகம் செய்த எண்ணற்ற தியாகச் செம்மல்களில் சிறந்த போர்க்கலை வல்லவன், தேசப் பற்றும், வீரமும், விவேகமும் என அனைத்தும் அமையப் பெற்ற வீரமகன் தீரன் சின்னமலையும் ஒருவர். இவருக்கு ஈரோடு மாநகரில் மாபெரும் விழா எடுக்க முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் என்ற பேருவகையுடன், தாய் நாட்டிற்காகத் தம் இன்னுயிர் ஈந்த அந்த மாபெரும் வீரனின் வாழ்க்கை வரலாற்றை இத்தருணத்தில் எழுதி வெளியிட்டிருப்பது சாலப் பொருந்தும். கன்னட நாட்டின் போர்வாள் என்று பாராட்டப் பெற்ற திப்புசுல்தானின் கரத்தைப் பலப்படுத்தியவர் தீரன் சின்னமலை. கொங்கு மண்ணில் அவதரித்த மாவீரன் , மூன்று முறை கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை புறமுதுகுகாட்டி ஓடச் செய்தவன் தீரன் சின்னமலை. 1805ம் ஆண்டு ஆடித் திங்கள் 18ம் நாளான, இதே நாளில் ஆங்கிலேயர்களால் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலை பற்றிய வாழ்க்கை வரலாற்றை தெள்ளுத் தமிழில், அழகு நடையில் கட்டுரை வடித்துக் கொடுத்து அவர் நினைவைப் போற்ற நமக்கும் வாய்ப்பளித்திருக்கும் திரு எஸ்,ஆர்,எஸ் அவர்களை வல்லமை வாழ்த்தி வரவேற்கிறது. இன்னும் பல்வேறு ஆகச் சிறந்த படைப்புகளை அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

      தீரன் சின்னமலை நினைவு நாள் 31.07.1805 … 

    எஸ், ஆர். சுப்பிரமணியம்

    நல்ல இமயம்

    நலம் கொழிக்கும் கங்கை நதி – மகவாய் வளர்க்கும் தாய் காவேரி

    வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை

    செழுங்கரும்புத் தோட்டங்கள், செந்நெல் வயல்கள்

    தின்னக் கனிகள்

    தெவிட்டாப் பயன்மரங்கள்

    புராணங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள்

    தத்துவக்கோவைகள், உபதேச மஞ்சரிகள், அறப் பேருரைகள்

    இத்தனையும் செறிந்திருக்கும் நாடு, இந்தியத் திருநாடு !

                    வளங்கள் அனைத்தையும் இயற்கையிடம் வரமாகப் பெற்ற இந்தியா, கருத்துக்கு எட்டாத காலம் முதல் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. முத்தும், பவளமும், வைரமும், வைடூரியமும் வரம்பின்றிக் கிடைக்கும் தேசம் இந்தியா என்று கேள்விப்பட்டவர்கள் ஆசியாவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வந்து கொண்டே இருந்தார்கள்.

                    கொட்டிக்கிடக்கும் தங்கத்தையும், மணியையும் கொண்டுபோக வந்தவர்கள் பலபேர்! தத்துவ ஞானத்தின் தாய்வீடு என மதித்துக் கற்க வந்தவர்கள் பலபேர் ! கொள்ளலாம் என்றும், தமது பொருள்களைக் கொடுக்கலாம் என்றும் கடலின் முதுகில் ஏறிக் காற்றின் துணையால் கரையில் வந்து இறங்கியவர்கள் பலபேர் ! பாருக்குள்ளே இது எப்படி நல்லநாடு என்று பார்ப்பதற்காக, காடுமலை பலகடந்து, சமவெளிகளில் சஞ்சரித்து, மன்னர்களையும் மக்களையும் சந்தித்து, பயணிகளாய் வந்தோர் பலர் !  ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கண்டு வரலாம் என்பதற்கும் கற்றுவரலாம் என்பதற்கும் வழிகேட்டு வந்த கலைவாணர்கள் பலர் ! மாயங்கள் நிறைந்த மர்மதேசம் இந்தியா என்று கேள்விப்பட்டு, மனதில் வளர்த்த கதைகளை நனவாக்க வேண்டும் என்று அலை அலையாய் வந்த அன்னிய மக்கள் பலர் ! உலக இனங்களை எல்லாம் ஒருமுறையாவது காணவேண்டும் என்று துடித்த, உன்னதத்துக்கு இன்னொரு பெயர்தான் இந்தியா ! இத்தனை பெருமைகளையும் முற்று மோனையாகப் பெற்ற இந்தியாவைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அத்தோடு நிற்கவில்லை !  அள்ள அள்ளக் குறையாத அத்தனைச் செல்வங்களையும் கொள்ளை கொள்ளத் துடித்தார்கள். காட்டுமிராண்டி மனிதர்கள் கொள்ளை கொண்டு போனது ஒருபக்கம் ! நாகரிக நாட்டில் சுரண்டிக் கொண்டு போனது ஒரு பக்கம் !  இப்படி முப்புறமும் பாரதத்தை முற்றுகையிட்டவர்கள் தாக்கிய தாக்குதல்களால் இந்திய வரலாறே திசை மாறிப் போனது. உலகப் பந்து காயப்படுவது இடியாலோ, மின்னலாலோ, சூறாவளியாலோ, சுனாமியாலோ அல்ல ! அதில் வாழ்கின்ற மக்களின் வன்செயலால் !

                    தனது சுதந்திரத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நாடு, மற்ற நாடுகளின் சுதந்திரத்தைக் கண்டு மாச்சரியம் கொள்வதும், அவற்றை அடிமைப்படுத்த முயல்வதும் மனித நேயத்துக்கு விடப்படும் அறை கூவலாகும். இதற்கு அதிக ஆராய்ச்சி வேண்டியதில்லை. அண்மைக்கால நூற்றாண்டுகள் இதற்குச் சாட்சியளிக்கும். 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில வணிகர்களும், ஆங்கில அரசும் இந்திய மக்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கேட்டால் மண்ணும், மலையும் உருகும் ! சோப்பு, சீப்பு விற்க வந்தவர்கள் ஒரு துணைக் கண்டத்தையேச் சூறையாடி, கொள்ளையடித்து, ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆவிகுடித்த பயங்கரக் கதையே ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த இந்திய அடிமை வரலாறு !

                    வணிகக்குழு அமைத்து வியாபாரம் செய்யவந்த கிழக்கு இந்தியக் கம்பெனியினர் இந்திய குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களாகத் துடித்தனர். அந்நாளிலேயே அவர்களது ஆதிக்கம் காலூன்றுவதை எதிர்த்த வீரப் பெருமக்களில் கொங்கு நாட்டுப் பகுதியில் தீரன் சின்னமலை 07.04.1756இல் பிறந்தார். இவருக்கு  தீர்த்தகிரி சின்னமலை என்றும், தம்பாக்கவுண்டர்  என்ற செல்லப் பெயரும் உண்டு.  18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805).

    பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்
    நன்றி: பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்

                    15.08.1947இல் நாம் விடுதலை பெற்றோம்.  நாம் பெற்ற விடுதலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.  பலர் விடுதலைக்காகப் போராடினர்.  அப்போரில் சொல்லொணாத் தொல்லைகளுக்கு உள்ளான பலர் தம் இன்னுயிரையும் ஈந்தனர். இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக நடைப்பெற்ற போராட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

                    ஆங்கிலேயர் ஆட்சி அமையும் போதே அவர்கள் தலைமையை ஏற்க மறுத்துப் போராடியது என்பது முதல் கட்டம்.

    எந்த உத்தரவிற்கும் காத்திராமல் தாங்களாகவே முன்வந்து, விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை பலிபீடத்தில் ஆகுதியாகத் தந்த வீரத் திலகங்கள் பலர். அவர்களில்,

    நெட்கட்டுங்சேவல் புலித்தேவன் 1767

    சிவகங்கை முத்துவடுகநாதப் பெரியஉடையாத்தேவர் -1772

    ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி – 1795

    தஞ்சாவூர் அமர்சிங் – 1798

    சிவகங்கை வேலுநாச்சியார் – 1798

    பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் -1799

    மருது சகோதரர்கள் – 1801

    ஊமைத்துரை – 1801

    போன்ற பலரும் தென்தமிழகம் சார்ந்தவர்கள். வட தமிழ்நாட்டின் சுதந்திரக்கனல் அவியவில்லை எனக்காட்ட முனைந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரின் விரட்டும் வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை (1756).

                    ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றிய பின், அவர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியது இரண்டாவது கட்டம்.

                    இரண்டாம் கட்டப் போருக்கு திலகர்,  மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், தீரர் சத்தியமூர்த்தி  போன்றோர் தலைமையேற்றனர்.  இது தான் இந்திய சுதந்திர வரலாறு…

                    ஆடிப்  பதினெட்டு… இன்று போர்க்களம் முடிந்தது. தருமத்தின் வாழ்வைச் சூது கவ்விய இருண்ட காலம் முடிவு பெற்றது. குருட்சேத்திரத்தின் மகாபாரதப் போரில் தருமம் இறுதி வெற்றி பெற்ற நாள். அமுதமும், விஷமும் ஒரே இடத்தில், நன்மையும் தீமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காலதேவனின் கணக்குப் புத்தகத்தில் ஜனனமும், மரணமும் ஒரு பக்கத்தில் எழுதப்படுகிறது. தருமம் அரியணையேறிய அதே நாளில் என் மண் எனக்கே சொந்தம், பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணருக்கே அடிமை என்று வாழ்வோம் என்று உரிமைக்கு வாழ்ந்த ஒரு உன்னத சுயமரியாதைக்காரனை ஒண்ட வந்த பிசாசுகள் சங்ககிலிக் கோட்டையின் அரண்களின் நடுவே தூக்கிலிட்டுக் கொன்றனர்.

                    கங்கையைச் சிமிழுக்குள் அடைக்க நினைத்தனர், அகம்பாவக்காரர்கள். எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு வெற்றி எக்காளமிட்டனர், ஆதிக்க வெறியர்கள். அலைகடலை நில்லென்று உத்திரவிட்டனர் அதிகார ஆட்சியாளர்கள். ஆம், கொங்கு நாட்டில், 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட வீரப்போர் புரிந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.

    20130727235840_00002

                    நில வளத்திற்கும், மக்கள் மனவளத்திற்கும், உறுதியான ஊக்கத்திற்கும், இடைவிடாத உழைப்பிற்கும் பெயர் பெற்றது கொங்கு மண்டலம். சங்க காலத்திற்கு முன்னரே சிந்துவெளி நாகரிகம் போல் நொய்யல் வெளி நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் கொங்கு நாட்டவர்கள். பல்வேறு பன்முகப்பட்ட மாட்சிகளையுடைய கொங்கு மண்டலம் வணிகத்தின் பொருட்டு இங்கு வந்து நாட்டை வளைக்க முற்பட்ட கிழக்கிந்திய கம்பெனியாரை வேர் கொள்ளச் செய்யாமல் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டது.

                    சின்னமலைக்கு ஒரு அண்ணனும் (குழந்தைசாமி) மூன்று தம்பியரும் (பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி) ஒரு தங்கையும் (பருவதம்) இருந்தனர். மூத்த அண்ணன் குழந்தைச்சாமிக்கும் கடைசி சகோதரரான குட்டிச்சாமிக்கும், தங்கை பருவதத்துக்கும் மட்டுமே திருமணம் நடந்தது.  மற்ற சகோதரர்கள் மேலப்பாளையத்தில் விவசாயத்தில் ஈடுபட்டனர்.

                    அக்காலத்தில் கொங்கு நாட்டில் பல இடங்களில் இருந்த சிலம்பக் கூடங்களில் தடிவரிசை, மல்யுத்தம், வில் பயிற்சி, புலிப் பாய்ச்சு, வாள் போர், போன்றவைகளை இளைஞர்கள் கற்றனர்.

                    தீர்த்தகிரியும், பெரியதம்பியும் கிலேதாரும் மேலப்பாளையத்தில் இருந்த சிலம்பக் கூடத்தில் இதுபோன்ற போர்க்கலைகளையெல்லாம் நன்கு கற்றதோடு, அதில் நல்ல பயிற்சியும் பேராற்றலும் பெற்றனர். அப்போது மைசூர் மன்னர் உடையார் மரபினர் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தனர்..  காங்கேய நாட்டில் வசூலிக்கப்படும் வரிப் பணம் சங்ககிரி சதுக்கத்துக்குச் சென்று பின்னர் மைசூர் சேரும்.

                    ஒருமுறை தீர்த்தகிரி சகோதரர்கள் மூவரும் காட்டுவழி சென்ற போது சங்ககிரிக்கு வரிப்பணம் எடுத்துச் செல்வதைப் பார்த்த தீர்த்தகிரி சகோதரர்கள் அவர்களை மறித்து விசாரித்து ‘இது கொங்கு நாட்டுப் பணம், மைசூருக்கு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவர்களிடமிருந்து பிடுங்கி அப்பணத்தை ஏழையருக்கும், இரவலருக்கும் பகிர்ந்து அளித்தனர்.

                    வெறும் கையோடு சங்ககிரிக்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறவே, சில வீரர்கள் தீர்த்தகிரியை பிடித்துச் செல்ல மேலாப்பாளையம் வந்தவர்களை சிலம்பக் கூடப் பயிற்சியாளரின் ஆட்கள் மூலம் சங்ககிரி வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சங்ககிரிப் பணியாளர்கள் வரிப்பணத்தை பறிந்தவர்  யார் என அறிவிக்கக் கேட்கவே, ‘சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று அவர்களிடம் கூறவே எங்கும் ‘சின்னமலை” என்பதே பேச்சாயிற்று பின்னர் அப்பெயரே நிலைத்தது தீர்த்தகிரிக்கு.

                    இந்த நிகழ்சிக்குப் பின்னர் சின்னமலை தனக்காக ஒரு படையை உருவாக்கிக் கொண்டார்.  தன்னோடு கருத்து ஒத்த மற்ற பாளையக்காரரின் துணையையும் நாடி ஆதரவைப் பெருக்கிக் கொண்டார்.

                    07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடக நாட்டுத் தலைமை ஏற்றுக் கிழக்கிந்தியக் கம்பெனி எதிர்ப்புப் போரை மிகவும் தீவிரப்படுத்தினார்.  மைசூர் உடையார்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்குநாடு அப்போது திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படைக்குப் போர் வீரர்கள் தேவைப்பட்டதால் கொங்கு வீரர்கள் திப்புவின் படைக்கு அழைக்கப்பட்டனர். சின்னலையின் தூண்டுதலால் கொங்கு வீரர்கள் பலர் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

    ஒரு நாள் பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை, வேலப்பன் ஆகியோருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியாக மைசூர் சென்றார். சின்னமலை.

    அமைச்சர் பூரணய்யாவும், தளபதி சையது சாயபுவும், சின்னமலையை வரவேற்றுத் திப்புவிடம் அழைத்துச் சென்றனர். ஜாகோபின் கழகம் பிரெஞ்சு விடுதலை மன்றப் படைவீரர்கள் சீரங்கப் பட்டணத்தில் அப்போது இருந்தனர்.  அவர்களிடமும், கொங்கு வீரர்கள் சிறந்த போர்ப்பயிற்சி பெற்றனர்.  அங்கு கொங்குப்படை அமைக்கப்பட்டது.  கருப்பசேர்வை பிரெஞ்சு மொழியை நன்கு கற்றார்.  அதன் பயனாக திப்புவிற்காக நெப்போலியனிடம் சென்ற தூதுக்குழுவில் கருப்பசேர்வை இடம் பெற்றார். நான்காம் மைசூர் போரில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது.

    04.05.1799ல் போர் முனையில் திப்பு வீரமரணமடையவே சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது.   அதற்குப் பின்னர்தான் கொங்கு நாட்டு பெருமக்கள் அளித்த காட்டுப் பகுதியில் வேளாளர்  பெருமக்களின் ஆதரவோடு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டிச் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கினர்.

    சீரங்கப்பட்டணம் உடன்படிக்கைப்படி கொங்கு நாடு கம்பெனிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி கம்பெனியார் வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலும் அப்பகுதி இருந்தது.  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.

    திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின் அவருடைய வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் கம்பெனி எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல் பெற்று விளங்கினார். கொங்குத்தூதர்கள் வெங்கடரமணய்யா, ரிஷாசாகிப், விருப்பாட்சி கோபால நாயக்கரின் தூதர் தும்மச்சி முதலியார் மூலம் காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாற தூண்டாஜி வாக் பணித்தார். அதனை எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.

    கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து உதவி பெற விரும்பியது. அணைகுந்திப் பாளையக்காரர், விஜயநகர அரசின் வாரிசுகள், நிஜாமின் சர்தாரிகள், ஷோலாப்பூர் ராயதூக்குத் தலைவர்கள், குவாலியரின் சிந்தியா, திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர்.

    மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார்.

    இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது. கோயமுத்தூர் கொங்கு நாட்டின் ஒரு முக்கியமான பகுதி. 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மைசூர் மன்னர்கள் சாமராஜ உடையார் கிருஷ்ணராஜ உடையார் கோவைப்பகுதியை ஆட்சி புரிந்தனர்.  அவர்கள் சார்பில் குமாரதேவய்யன், குறிக்கார மாதய்யன் ஆகியோர் கோவையில் அதிகாரம் செலுத்தினர்.

    ஐதரும், திப்புவும் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் கையில் வந்தது.  அப்பொழுது கோவைக்கு ஒரு கோட்டை இருந்தது.  திப்பு சுல்தான் பலப்படுத்திய கொங்கு கோட்டைகளில் கோவைக் கோட்டையும் ஒன்று. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலை மாறியது. மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கோவை ஆங்கிலக் கம்பெனியார் கைக்கு வந்துவிட்டது.  ஜெனரல் மெடோஸ் தலைமையில் கோவைக் கோட்டையில் ஒரு படை இருந்தது.

    பவானியின் வடகரையில் சத்தியமங்கலம் அருகே திப்புவின் படையோடு மோதிய பிளாயிட் தோற்றோடி வந்து கோவைக்கோட்டையில்தான் தஞ்சம்புகுந்தான். 1800ஆம் ஆண்டு, கோவைக் கோட்டையின் தலைவனாக விளங்கியவன் லெப்டினன்ட் கர்னல் கே.மக்னிஸ்டர் என்பவன்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் 5ம் பட்டாளம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.  அங்கிருந்து கொண்டு தளி, விருப்பாட்சி, மலபாரோடும் தொடர்பு கொள்ள ஆங்கிலேயர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டனர்.

    கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்தனர்.  எப்படியாவது கோவைக் கோட்டையை மீட்பது என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.

                    கோவைப் புரட்சியை 03.06.1800 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். 03.06.1800 அன்று மொகரம் நாள்;. முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். அந்தச் சந்தர்ப்பத்தில் கோட்டைமீட்பு எளிதாகும் என்று கருதினர். ஒரு மாதம் முன்பே விடுதலை வீரர்கள் பலர் கோவைக்குச் சென்று மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடையே பெருத்த ஆதரவு இருந்தது. எல்லாவகையான உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.  கோவை நரசிங்கராவ் விடுதலை வீரர்கட்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் விரைவில் கோவைக்கு வருவதாகச் சின்னமலைக்கு இரகசியத் தகவல் அனுப்பியிருந்தனர். ஓசூர் பத்தே முகம்மதும், இச்சிப்பட்டி ரோனோன் உல்லாகானும் வந்த கொண்டிருந்தனர். கஜ்ஜல்ஹட்டிக் கணவாயிலிருந்து ஒசூர் கானி ஜா கான் 4000 குதிரை வீரர்களோடு வந்து கொண்டிருந்தான். திண்டுக்கல் லக்கம நாயக்கரும், விருப்பாட்சி கோபால நாயக்கரும் உதவி அனுப்பி இருந்தனர்.

                    சின்னமலையின் நண்பர்களான பூந்துறை வாரணவாசி, ஈரோடு வெள்ளை கவுண்டர், பெருந்துறை குமாரவெள்ளை, அரவக்குறிச்சி பெரியதம்பி ஆகியோரும் தம் ஆட்களுடன் வந்து விட்டனர். கோவை நகரை ஒட்டிய மணியக்காரம்பாளையம், கணபதி, சிரவணம்பட்டி, பேரூர், இராமநாதபுரம், புலியகுளம், பூளைமேடு ஆகிய இடங்களில் வீரர்கள் தலைமறைவாகினர்.

     சேலத்திலிருந்து பரமத்தி அப்பாச்சிக்கவுண்டர், நீலப்பகவுண்டர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். சின்னமலை பெரிதும் எதிர்பார்த்தது வட கர்நாடகத்  தலைவர் தூண்டாஜிவாக், மேல் கர்நாடகக்தலைவர் மாகி கிருண்ணப்ப நாயக்கர் ஆகியவர்களின் படை வருகையைத்தான். கடைசி நேரம்வரை அவர்கள் வரவில்லை. மிக முக்கியமானவரான தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை. காரணமும் தெரியவில்லை.

                    சிவகங்கை மருதுபாண்டியர் கூட படை அனுப்புவதாகக் கூறியிருந்தனர். தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்த சைகையும் வராததால் மருது பாண்டியர் படைகளை அனுப்பவில்லை. இருப்பினும் சின்னமலை சோர்வடையவில்லை. பம்பரமெனச் சுற்றிக் கொண்டிருந்தான். மொகரம் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. விடுதலை வீரர்கள் மாறு வேடத்தில் பால்க்காரர் போலவும், காய்கறி விற்பவர் போலவும், சோதிடம் கூறுபவரைப்போலவும்,  விறகு வெட்டுபவரைப் போலவும் கோவைக் கோட்டை அருகில் சென்று நோட்டம் பார்த்தனர்.

                    சில விடுதலை வீரர்கள் தங்கள் ஆர்வத்தின் காரணமாக மொகரத்தின் முதல் நாளே கோட்டை அருகில் போர் நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமாயினர். புதிய நபர்களின் நடவடிக்கைகளைக் கண்ட கோவை தாசில்தார் கோவைப் புரட்சிச் செய்தியை உணர்ந்தார். உடனே தளபதி மக்ளிஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளைப்படைகளையும், ராஜபுத்திரப்படைகளையும் அவர் தயார்படுத்தினார். முஸ்லீம் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டையின் எல்லா நிலைகளும் உஷார் ஆயின. நகரெங்கும் பல பகுதிகளில் பரவலாக இருந்த விடுதலைப் படையினர் ஒன்று சேர்வது தடுக்கப்பட்டது. விடுதலை வீரர்களிடையே செய்திகள் உரிய காலத்தில் சென்று சேர ஏற்பட்ட தடைகளும் கோவைப் புரட்சி தோல்வி அடைய ஒரு காரணமாக இருந்தது.

                    வெண்ணைய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை ஆயிற்று. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். இன்னும் பலர் அடுத்த ஆணையை எதிர்பார்த்து நின்றனர். சின்னமலை சகோதரர்கள் ஓடாநிலை திரும்பினர்.

                    மக்ளிஸ்டாரின் படைவீரர்கள் 42 பேரை விடுதலைக் கைதிகளாகப் பிடித்தனர். பவானியில் இருந்த வில்லியம் கேரோவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 42 பேரும் பல இடங்களில் தூக்கில் போடப்பட்டனர். இந்நிகழ்ச்சி 08.06.1800 அன்று நடைபெற்றது. ஒரு சிலர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூக்கிலிடப்படுவதற்கு முன் ஆங்கிலேயர் , ‘போலி  இராணுவவிசாரணை’ நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர்.

                    சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் ஆர்வக்கோளாறால் நடைபெறாமல் தோல்வி அடைந்தது. இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போரில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

                    கோவைப்புரட்சிக்குப் பின்னர் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினார். சின்னமலையிடம் சங்ககிரிக் கம்பெனி அதிகாரி, சின்னமத்தம்பி என்பவரைத் தூதாக அனுப்பினார். கம்பெனி ஆதிக்கத்தைச் சின்னமலை ஏற்றுக்கொண்டால் அவரையே அப்பகுதிக்குத் தலைவர் ஆக்குவதாகவும், வரிப்பணத்தில் பத்தில் மூன்று பகுதி கம்பெனிக்குக் கொடுத்தல் போதும் என்றும் பேரம் பேசினார். சின்னமலை இசையவில்லை. கம்பெனியார் அதிர்ச்சியுற்றனர்.  சின்னமலையுடன் போருக்கு ஆயத்தமாயினர்.

                    எப்படியும் சின்னமலையை ஒழித்துவிடுவது என்று கம்பெனியார் முடிவு செய்தனர். அதற்காகச் சின்னமலையுடன் மூன்று பெரும் போர்களை நடத்தித் தோற்றனர். 1801-ல் காவிரிக் கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடைபெற்ற போரில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் கம்பெனித் தளபதி மேக்ஸ்வெல் கொல்லப்பட்டான். அரச்சலூரில்  கம்பெனியின் குதிரைப்படையைக் குண்டுவீசி நிலைகுலைய வைத்து பின்வாங்கி ஓடுமாறு செய்தனர். ‘பல இடங்களில் தன் பெரும்படையால் வெற்றி பெற்ற மேக்ஸ்வெல் ஒரு சிறிய படையிடம் தோற்றார்’  என்று கம்பெனிக் குறிப்பு  கூறுகிறது.

    ஆங்கிலேயப் படைகளின் நடவடிக்கைகளை உளவு சொல்ல, சின்னமலையின் நெருங்கிய நண்பர் வேலப்பன் கள்ளிக்கோட்டையில் ஆங்கிலேயப் படையில் ரகசியமாகப் பணி புரிந்தார். 1805-ஆம் ஆண்டு திடீரென வேலப்பனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 32 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில் மறைந்து வாழ முடிவு செய்தார். சின்னமலை மற்றும் அவரது ஆட்களுக்கு சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட ஒரு நாள் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து நின்றன. சின்னமலை தப்பிய செய்தி அறிந்து ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டார். தொடர்ந்து பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையைத் துளைத்தெடுத்தன. கோட்டை மண் மேடாகும் வரை அவை ஓயவில்லை.

    கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். கோட்டை இடிக்கப்பட்டதை விட, நண்பர் வேலப்பனின் மறைவு அவரை வாட்டியது. தொடர்ந்து கருமலையிலேயே தங்கினார். அங்கு பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார். கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் அவருக்கு உதவினார்கள்.

    தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டார். இந்த காலகட்டத்தில் சமையல்காரன் நல்லப்பனை ஆங்கிலேயேரின் ஆள் ஒருவன் சந்தித்தான். பணம் கைமாறியது., சின்னமலையின் நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்தான் கயவன் நல்லப்பன்.

    ஆங்கிலேயப்படை சின்னமலையையும், சகோதரர்களையும் சூழ்ந்து கைது செய்து முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் வர சின்னமலையும் அவரது சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொங்கு நாடே கண்ணீர் விட்டு அழுதது. சின்னமலை உள்ள இடமே தன் இடம் என்று கருதிய கறுப்பசேர்வை சங்ககிரி கோட்டையில் சரணடைந்தார்.

    31.07.1805 ஆடிப் பதினெட்டு பண்டிகை நாள் …….. கொங்கு நாட்டு வரலாற்றில் ஒரு கொடிய நாள் ……. சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கதவுகள் அடைக்கப்பட்டன். 10 வாயில்களும் மூடப்பட்டன. மலையில் தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  கடைசி நேரத்தில், தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் ஆசை வார்த்தை கூறினான். மயங்காத சுதந்திரச் சுடரொளி சின்னமலை மார்ஷல் முகத்தில் காரித்துப்பினார்.

    சங்ககிரி மலை உச்சியில், பொழுது காண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே நான்கு தூக்கு மரங்கள் தயாராக இருந்தன. சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். தூக்கிலிடும் ஆட்களை தன் கண் சைகையால் அப்புறப்படுத்தினார், சின்னமலை. நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர்.

    சுதந்திரச் சுடர் அணைந்தது …..  கொங்கு மாவீரர்கள் கொடியவர்  சூழ்ச்சிக்குப் பலியாயினர். …..  கொங்கு நாடே கதறியது   …..   தியாக சீலனை இழந்ததால்  …..!

                                                                                        முற்றும்.

    Share
  • ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு!

    வெங்கட் சாமிநாதன்

    இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து சூழல் மிக அடர்த்தியாக எழுப்பப்பட்டிருக்கிறது. கதையென்று ஏதும் இல்லாது சூழல் கொஞ்சம் அதிகமாகவே அடர்த்தி கொண்டுள்ளது. அனிச்ச மலரில் பிராமணப் பெண் என்று அழுத்திச் சொல்ல வேண்டாத இடங்களில் எல்லாம், பள்ளிக்கூடத்தில் கூட பிராமணப் பேச்சு வலிந்து புகுத்தப்பட்டுள்ளது. சிறு பெண்கள் சித்திரம் தடித்த கோடுகளால் வரையப்பட்டுள்ளது. மூன்று பேரில் பார்வதி ராமசாந்திரனின் சரயு கதை தான் சாதாரணமாக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வையும் அதன் பாரம்பரிய சிக்கல்களையே சொன்னாலும் குறைந்த சொற்களில் திறம்படச் சொல்வதில் வெற்றி கண்டுள்ளது.

    என் தேர்வு பார்வதி ராமச்சந்திரனின் சரயு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    பழமை பேசி, தேமொழி இருவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்.

    கடந்த ஒரு வருட காலத்தில் மூன்று நான்கு புதிய திறன்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்..

    போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகள்:

    2.

    உறக்கத்திலோர் உளறல் !!!

    3.

    ஓடிப் போன புத்தர்

    4.

    “பத்ரமா இருங்கப்பா!”

    5.

    நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

    6.

    அந்த நூறு நாட்கள்!

    7.விடுகதை!…

    8.

    சரயு…

    9.

    ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

    10.

    முசுட்டுத் தாத்தா …

    11.

    நன்றி

    12.

    புரியாத புதிர்

    13.

    டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

    14.

    பேச்சி

    15. ‘நீர்’

    17. அனிச்ச மலர்கள்

     

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இப்பொழுதுதான் போட்டி ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடிவிட்டது. முதன் முதலில் நாம் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் திரு வையவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனே மிக உற்சாகமாக, “நல்ல விசயம்தானே உடனே செய்யுங்கள், அதற்கான பரிசுத் தொகையும் அறிவித்துவிடுங்கள். எங்கள் டிரஸ்ட் மூலமாக நான் கொடுத்து விடுகிறேன். அதுமட்டுமல்லாமல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது, இதே ஜூலை மாதம் 2012ம் ஆண்டு. சிறுகதைப் போட்டிக்கு பல படைப்பாளிகள் தங்கள் அற்புதமான படைப்புகளை வழங்கி இப்போட்டியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றனர். போட்டிக்கான பரிசுக் கதையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முதுபெரும் எழுத்தாளர், மிகச் சிறந்த விமர்சகர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் காலந்தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அனைவருக்கும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இப்போது அடுத்தக் கட்டத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நகர்கிறது. விரைவில் அதற்கான முடிவும் அறிவிக்கப்படும். இதுவரை போட்டியில் தங்கள் பங்களிப்புகளை அளித்துள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் வல்லமைக்கு ஆதரவு அளித்து வரும் நம் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் பலப்பல நல்ல நல்ல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே.

     

    அன்புடன்

    பவள சங்கரி

    Share