Blog

  • தமிழ் என்னுயிர்

    க.பிரபு தமிழன்tamil-images

    ஆட்சூழும் மானிட நட்பு
    வேண்டாம் – தமிழெனும்
    என் தாய் மொழியான
    நீயே போதுமெனக்கு

    பாரியும் ஆதவனும் சேர்ந்து
    காட்சியளித்தாலும் வியக்க
    மாட்டேன் – ஒரு சிறுபிள்ளை
    தமிழில் கதைத்தால் போதும்
    என் இதயத்தை அப்பிள்ளை
    பேசும் வரை உறங்கச்
    செய்வேன்

    தமிழே நீ என்னுடனிருந்தால்
    பசியில்லை சுவாசிக்க
    காற்றும் வேண்டியதில்லை
    நாவிற்கு தாகமில்லை
    தொலைதூரம் நடந்தாலும்
    கால்களும் கண்களும்
    சோரவில்லை
    உன்னைப் பற்றி எழுத
    கைகளும் ஓயவில்லை
    எழுத்தாணியின் கூர்மையும்
    குறையவில்லை

    என் உடலின் குருதியான தமிழே

    உலகிற்கு பொன்னும் பொருளுமே
    உயிர் செல்வங்கள்
    எனக்கோ நீயே இவ்வுலகின் மிக
    உயரிய செல்வம்

    படத்திற்கு நன்றி
    http://www.care4tech.com/dev-design/how-to-install-tamil-font-for-ms-office-video-tutorials/492/

    Share
  • கென்யா பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவற்றில் ‘நைரோபி நேஷனல் மியுசியமும்’ ஒன்று.  கிழக்கு ஆப்பிரிக்கா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்கை ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த அரும்பொருள்களை சேகரித்துவைக்க ஒரு இடத்தைத் தேடியபோது மியுசியம் ஒன்று அமைக்க அரசு முடிவு செய்தது.  முதலில் ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட மியுசியம் பின்னால் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களையும் சேமித்துவைக்கப் பெரிய இடத்திற்கு மியுசியத்தை மாற்றியது.  அதுவும் போதாமல் பின் இப்போது மியுசியம் இருக்கும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டி பல பிரிவுகளாக அதை அமைத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கென்யாவின் கவர்னராக இருந்த ராபர்ட் கோரிண்டன் என்பவரின் பெயரில் (Robert Coryndon)  கோரிண்டன் மியுசியம் என்று அழைக்கப்பட்ட இது 1963-இல் கென்யா சுதந்திரம் அடைந்தபிறகு நைரோபி நேஷனல் மியுசியம் என்ற பெயர் பெற்றது.

    இது நாங்கள் தங்கியிருந்த் ஓட்டலுக்கு மிக அருகாமையில் இருந்ததால் காலை எட்டரை மணிக்கு மியுசியம் திறப்பதற்கு கொஞ்சம் முன்னாலேயே அங்கு இருந்தோம்.  காலை அதைத் திறப்பதற்கு முன் தினமும் அதைச் சுத்தம் செய்வார்கள் போலும்.  சுத்தம் செய்யும் பெண்கள் கற்களினால் ஆன தரையை வாளியையும் துடைக்கும் துணியையும் கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்கள்.  வளர்ந்துவிட்ட நாடுகளில் இப்படி கைகளினால் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருக்கும்.

    மியுசியத்தின் முகப்பில் தாயும் சேயுமான பெரிய கற்களால் ஆன சிலை நம்மை வரவேற்கிறது.  ஒரு பக்கமாக பெரிய டைனஸோர் ஒன்றின் மாதிரி இருக்கிறது.  மியுசியத்தைச் சுற்றி பல வகைத் தாவரங்கள் அடங்கிய தோட்டம் இருக்கிறது.  அதில் பல அரிய மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    மியுசியத்திற்குள் முதல் முதலாக டிக்கெட் வாங்கி நுழைந்தது நாங்கள்தான்.  மியுசியத்திற்க்குரிய நுழைவுக் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு கென்யா நாட்டவர்களை விட மிகவும் அதிகம்.  எல்லா உல்லாசப் பயண இடங்களிலும் இப்படித்தான்.  அதிக தூரம் நடந்தால் எனக்குக் களைப்பாகிவிடும் என்பதால் இம்மாதிரி அதிகம் நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஒன்றை மியுசியம் அதிகாரிகளிடமிருந்து இலவசமாகவோ வாடகைக்கோ எடுத்துக்கொள்வதுண்டு. இங்கும் அம்மாதிரி கேட்டோம்.  அங்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன.  இரண்டின் சக்கரங்களிலும் போதிய காற்றழுத்தம் இல்லையென்றும் காற்றை அடைத்துத் தருவதாகவும் கூறினார்கள்.  நம் நாட்டில் சைக்கிளுக்கு காற்றடிப்பது போலவே அந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்குக் காற்றடித்தார்கள்.  இதுவும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  மேலைநாடுகளில் இப்படிக் கைகளால் காற்றடிப்பதைப் பார்க்க முடியாது.

    இந்த மியுசியம் கென்யாவின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துச் சொல்ல அமைக்கப்பட்டது.  கென்யாவின் காடுகளில் அதிகமாகக் காணப்படும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் நகரின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.  நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் மாதிரி ஓட்டலின் முன் முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.  கென்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மிருகங்களின் படங்களைப் பார்க்கலாம். கென்யர்கள் தங்கள் காடுகளில் இருக்கும் இந்த விலங்கினங்களால் மிகவும் பெருமை கொண்டுள்ளார்கள்.  அதன் அடையாளமாக எல்லா இடங்களிலும் இதன் மாதிரிகளைப் பார்க்கலாம்.

    மியுசியத்திற்குள் நுழைந்தவுடனேயே பெரிய யானையின் மாதிரி ஒன்று இருக்கிறது.  மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட, பிரபலமான இந்த யானை இறந்த பிறகு அதன் உடலைப் பதப்படுத்தி மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த மியுசியத்தின் ஒரு பகுதியில் இம்மாதிரி பல primates-களின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள்.  இன்னொரு பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் பறவைகளின் மாதிரிகள் இருக்கின்றன.  கென்யாவின் சரித்திரத்தை விளக்கும் காட்சிப் பொருள்கள், படங்கள் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  பிரிட்டிஷ் அரசு போட்ட கென்யா-உகாண்டா ரயில்பாதை பற்றிய விபரங்களும் ரயிலின் மாதிரிகளும் அவை சம்பந்தப்பட்ட படங்களும் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  இக்காலத்திய கலைப் படைப்புகளும் ஒரு பகுதியை அலங்கரிக்கின்றன.  முதல் மனிதன் கென்யாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ஆதாரமாக அகழ்வாராச்சியில் கிடைத்த பல அரிய பொருள்கள் ஒரு பகுதியில் இருக்கின்றன.  தனியாக ஒரு பகுதியில் பாம்பு, ஆமை போன்ற ஊரும் மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன.

    பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கென்யாவை விடுவித்து கென்யா சுதந்திரம் கிடைக்கக் காரணமாகயிருந்த் முதல் ஜனாதிபதி ஜேமோ கென்யாட்டாவின் வாழ்க்கை வரலாறு, அவர் பிரிட்டிஷை எதிர்த்துச் செய்த சாகசச் செயல்கள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சியை இன்னும் சில மாதங்களில் இந்த மியுசியத்தில் திறக்கப் போகிறார்களாம்.  அது சில மாதங்கள் இங்கு இயங்கிவிட்டுப் பின் மற்ற மியுசியங்களுக்கு கொண்டுபோகப்படும்.  (இந்த கென்யாட்டாவின் மகன்தான் இப்போது ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவருகிறார்.  இவர் மேல் இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள அகில உலக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  நாட்டின் நலனுக்காகப் பல தியாகங்கள் புரிந்த ஜேமோ கென்யாட்டாவின் மகன் ஊழல் வழக்கில் ஈடுபட்டிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஊழல் புரிந்தவர்களையும் எல்லா நாடுகளிலும் தங்களை ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் போலும்.)

    கென்யாவில் பல இடங்களில் இருக்கும் மியுசியங்கள் எல்லாம் National Museums of Kenya  என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.  எல்லா மியுசியங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் நைரோபி நேஷனல் மியுசியம் 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

    மியுசியத்தில் உள்ள கழிப்பறைகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் காணப்படும் கழிப்பறைகளுக்கு ஒப்பாக மிகவும் சுத்தமாக இருக்கின்றன.  கென்யாவில் எல்லாப் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன.  அநேகமாக எல்லா இடங்களிலும் ஐரோப்பிய மாடல் டாய்லெட்டுகளும் சில இடங்களில் அவற்றோடு இந்திய மாடல் டாய்லெட்டுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளை உப்யோகிப்பதை நினைத்தாலே தலை சுற்றும்.  ஏன் நம்மால் அப்படிக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை?

    நைரோபியில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் உகுரு (Uhuru) பார்க் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பார்க்.  உகுரு என்றால் சுவாஹிலி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தமாம்.  கென்யா சுதந்திரம்அடைந்த பிறகு இப்பார்க்கிற்கு இந்தப் பெயர் வந்ததாம்.  இதில் 80,000 பேர் வரை கூடலாம்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற பின் இந்தப் பார்க்கிலிருந்து மக்களுக்குத் தன் கொள்கைகளை அறிவிப்பாராம்.

    இந்தப் பார்க்கிற்குள்ளேயே ஒரு சிறிய ஏரி இருக்கிறது.  அதில் பார்க்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் படகு விட்டு மகிழலாம்.  சிறு குழந்தைகளை சிறுவருக்கான சிறிய கார்களில் உட்காரவைத்து இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பூங்காவிற்குள் உளள வீதியில் தள்ளிக்கொண்டே ஓடுகிறார்கள்.  இதற்குக் கட்டணம் உண்டு.  இப்படித் தள்ளிக்கொண்டே போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  சிறு குழந்தைகளுடைய முகங்களில் பலவகையான வர்ணம் கொண்டு சித்திரம் தீட்டுகிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.  சிறு குழந்தைகள் பலர் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.  குழந்தைகளை மட்டக் குதிரையில் உட்காரவைத்து குதிரைகளை நடத்திக்கொண்டு போகும் பொழுதுபோக்கும் உண்டு.  குழந்தைகள் அதை வெகுவாக ரசிக்கிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.

    இந்தப் பார்க்குக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  இது ஏழைகள் பலருக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.  நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  அன்று பார்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கு வந்திருந்தவர்களில் பலர் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.  அங்கு விற்கும் தின்பண்டங்களும் நம் நாட்டு எள்ளுருண்டை, குச்சி ஐஸ் போன்றவை.  சிறு குழதைகளுக்கான பலூனும் விற்கப்பட்டன.  கொக்கோ கோலா மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  எங்கும் வியாபித்திருக்கும் இறைவன்போல் இந்த கொக்கோ கோலா மாத்திரம் உலகின் எல்லா இடங்களுக்குள்ளும் எப்படியோ புகுந்துவிடுகிறது.

    கென்யாவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம்.  இம்மாதிரி எளியவர்கள் வரும் இடங்களில் கென்ய நாட்டு இந்தியர்களைப் பார்க்கவில்லை.  இந்தியர்கள் பலர் ரயில்பாதை போடும்போது அதில் வேலைபார்க்க இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொழிலாளர்களாக முதல்ல் கொண்டுவரப்பட்டார்கள்.  வேலை முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு கென்யாவிலேயே தங்க விரும்பியவர்களை தங்க அனுமதித்ததாம்.  அவர்களில் பலர் வாணிபம் செய்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பின்னர் வணிகம் செய்வதற்கென்றே இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் கென்ய நாட்டு மக்களோடு ஒன்றிப் பழகுவதில்லை.  கல்யாண சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.  அவர்களுடைய குடியிருப்புகள் தனியாக இருக்கின்றன.  கென்யாவின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்கு முக்கியமாதலால் கென்ய மக்களும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவது மாதிரித் தெரியவில்லை.  ‘கென்யமக்கள் நவீனத்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பாகவே அவர்கள் தொழில் நடத்தி வசதியான நிலைக்கு வந்துவிட்டார்கள்’ என்று ஒரு டாக்சி ஓட்டுனர் கூறினார்.

    (தொடரும்).

    நைரோபி பற்றியும் மியுசியம் பற்றியும் சில படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    Nairobi

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    Museum

    https://picasaweb.google.com/108173580006522327175/NairobiNationalMuseum?authkey=Gv1sRgCMbKkI7C59_n9wE

     

    படங்கள்: மெல்லியல்

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (21)

    பவள சங்கரி

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

    பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.

    மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

    3.bp.blogspot.com--A2e7CEAq6dg-UEJX_Q97iXI-AAAAAAAAA_E-NJ9xRqdIF-k-s1600-quotes-life2

    நாம் எல்லோருமே மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்பும், கருணையும், பெருந்தன்மையும், பொறுமையும், மன்னிக்கும் மனமும் நிறைந்த அமைதியான உலகைக்காணவே விரும்புகிறோம். குற்றங்களும், தவறுகளும் மலிந்து கிடக்கிற மக்களின் செயல்கள் நம்மைக் கோபமூட்டி, ‘இவர்களெல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ’ என்று எண்ண வைக்கிறது. நேர்மையற்ற வியாபாரிகள், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொறாமை நிறைந்த சமூகம், சுயநலம் நிறைந்தவர்கள், கருணையும், அன்பும் துளியும் இல்லாதவர்கள் என்று பலவகையான மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் உலகம் இப்படி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிட்டதே என்று நொந்து போகிறோம். இப்படி அடுத்தவரிடம் குறை காண ஒவ்வொரு முறையும் நம் ஆள்காட்டி விரலை நீட்டும் அதே சமயம் நம்முடைய மற்ற மூன்று விரல்களும் நம்மையே குறிபார்ப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். அடுத்தவரின் தரத்தை எடை போடும் அந்தக் கருவி தமக்கென்று வரும்போது தம்மையறியாமலே நியாயத்தை விட்டு விலகிப்போய்விடுகிறது. தமக்கான தீர்ப்பும் பாரபட்சமாகவே ஆகிவிடுகிறது.

    உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடிய நாம் அதற்கேற்றார்போல முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அன்பு, கருணை, நேர்மை, அமைதி, சுயநலமின்மை போன்ற அனைத்திலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கிற அந்த தரத்தை நம்மிடம் முதலில் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா? அப்படி இருக்கும்போது நாமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் முடியும். செய்த தவறுகளை துணிச்சலாக ஒப்புக்கொள்ளும்போது மட்டுமே நம்மால் அதைத் திருத்திக்கொள்ளவும் முடியும். நேர்மையான பார்வையுடன் நம்மை நாமே உணர ஆரம்பிக்கும்போதே நன்மையும், தீமையும் கலந்ததுதான் மனித மனம் என்பது விளங்கும். நம்முள் சக்தியும், பலவீனமும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள ஆரம்பித்தாலே அடுத்தவரைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டமும் கபடமற்ற முறையில், மன்னிக்கும் மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்துவிடும். முள்ளை முள்ளால் எடுக்க முடிவது போல வெறுப்பை, வெறுப்பால் நீக்க முடியாது. புத்தர்பிரான் சொல்வது போல, வெறுப்பை அன்பு கொண்டு மட்டுமே கைப்பற்றமுடியும் என்பதே மாறாத சட்டம். மன்னிக்கும் மனம் மட்டுமே என்றுமே அமைதி காண இயலும். மன்னிக்கும் குணம் மட்டுமே அன்பின் உச்சம். முழுமையாக மன்னிக்கும் மனம் மட்டுமே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெற வல்லது. இந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்தக்கூடியது.

    quotesthoughts.com-wp-content-uploads-2013-02-motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence

    ஓய்வில்லாத மனம்

    வெகு நாட்களுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து வந்த என் தோழி திடீரென்று தொலைபேசியில் அழைத்து கோவைக்குச் செல்லும் வழியில், மதிய உணவிற்கு வருவதாகச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். இரண்டு மணி நேரம் இருக்கிறதே, எத்தனையோ செய்யலாமே என்று ஆர்வக் கோளாரில் இனிப்பு, காரத்துடன், அவளுக்குப் பிடித்த காளான் பிரியாணி, தயிர் சேமியா, ஆந்திரா ஸ்டைல் பகாலாபாத், பன்னீர் மஞ்சூரியன் என அனைத்தையும் செய்ய ஆயத்தமானேன். நான்கு அடுப்பும் ஒரே நேரத்தில் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது. பரபரவென ஒவ்வொன்றாக நறுக்கி தாளித்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆகிவிட்டது. அவள் அவசரமாகச் செல்வதால் வெகு நேரம் காக்க வைக்க முடியாது. இந்த பரபரப்பில், காளான் பிரியாணியில் ஊற்ற வேண்டிய தேங்காய்ப்பாலை பிசிபேலாபாத்திலும், பிசிபேலாபாத்தில் போட வேண்டிய மசாலாவை காளான் பிரியாணியிலும் போட்டுவிட்டேன். குழப்பம் அதிகமாக இரண்டையும் அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, தயிர் சேமியாவை முதலில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அடுத்து அன்னாசிப்பழக் கேசரியும் அருமையாக வந்துவிட்டது. பிசிபேலாபாத்தை மீண்டும் வேறு பாத்திரத்தில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அவள் சொன்னபடியே குறித்த நேரத்திற்கு வந்தாள் குடும்பத்துடன். சுவையான விருந்து என்று மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டுச் சென்றாள். எனக்கும் மன நிறைவாக இருந்தது. இதை ஆரம்பத்திலேயே நிதானமாக முடிவெடுத்துச் செய்திருந்தால் இரண்டு பதார்த்தங்கள் வீணானதைத் தவிர்த்திருக்கலாம். ‘Mearsure twice, cut once’ என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவிற்கு வந்தது. இருக்கக்கூடிய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, முடிந்ததை மட்டும் நிதானமாகச் செய்திருந்தால் இன்னும் அதிக தரத்துடன், சக்தி, காலம், பணம் என அனைத்து விரயத்தையும் தவிர்த்திருக்கலாம்.

    மனதின் அதிகப்படியான பணி நெருக்கடிச் சுமை குறிந்த விழிப்புணர்வைக் கொண்டோமானால் நம்முடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான பெரும் மாற்றங்களைச் சந்திக்க முடியும். தத்தம் சக்தியின் அளவை அறிந்து அதற்கேற்றவாரு பணி நிர்ணயம் செய்யும் பழக்கம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலாபலன்களையும் தரவல்லது. பலவிதமான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி குழப்பம் ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொருப் பணியாக எடுத்துக் கொண்டு அதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்தி செயல்படும்போது அதன் பலன் மிகத்தரமானதாக ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்பதே நிதர்சனம். மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான உழைப்பைப் போடுவதான தோற்றம் அளித்தாலும், நம்முடைய சக்தி ஒழுங்கில்லாமல் தன் வழியில் சென்று இறுதியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மனதிற்குள் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அளவிற்கு அதிகமான பொருட்களை அடைக்கும் போது, அது எத்துனை அழகான பொருட்களாக இருந்தாலும் ஒரு கசகசப்பை ஏற்படுத்தி அழகைக் கெடுத்துவிடும். சுத்தம் செய்வதற்கும் சிரமமாகவும் இருக்கும். எந்த நேரத்தில் எந்தப் பணியைச் செய்ய வேண்டும், எதை முதலில் செய்ய வேண்டும் என்று நிதானமாகத் திட்டமிடல் மட்டுமே வெற்றிக்கான பாதையை அடையும் வழி. இது போன்ற தெளிவான திட்டமிடல், குழப்பமானதொரு இருண்ட மனக்குகையிலிருந்து பளிச்சென்ற சூரிய ஒளி நிறைந்த பகுதிக்குள் வந்தது போன்றதொரு சுதந்திரமான நிலையை உருவாக்கும். இந்தச் சுதந்திர நிலையே வெற்றிக்கான ஆதாரம்.

    அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா!

    0133

    படங்களுக்கு நன்றி :

    http://kootation.com/life-quotes-saying-wallpaper-and-animation/3.bp.blogspot.com*-A2e7CEAq6dg*UEJX_Q97iXI*AAAAAAAAA_E*NJ9xRqdIF-k*s1600*quotes-life2.jpg/

    http://kootation.com/motivational-quotes-thoughts-inspirational-success-hardwork-confidence/quotesthoughts.com*wp-content*uploads*2013*02*motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence.jpg/

    Share
  • “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து”

    தமிழ்த்தேனீ 

     

    toysசமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு அலமாரி திறந்து அதிலிருந்து குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டு பொம்மைகள் கீழே சிதறின. பார்த்து மலைத்துப் போனேன். ஆமாம் ஒரு கடையில் இருப்பதைப் போல் விதம் விதமாக அவ்வளவு பொம்மைகள்.

    ஆனால் யாருக்காக அவை வாங்கப் பட்டனவோ அந்தக் குழந்தை அழுது அடம் பிடித்துத்கொண்டு கீழே விழுந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆமாம்  அந்தக் குழந்தை இவ்வளவு விளையாட்டு பொம்மைகள் இருந்தும்  திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்றுக்கு  அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    ஆகவே விளைவை யோசித்தால் அந்தப் பொம்மைகள் யாரால் வாங்கப்பட்டதோ  யாருக்கு கொடுக்கப்பட்டதோ இருவருக்குமே திருப்தி இல்லை,

    ஏன் இவ்வாறு குழந்தைகள் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது அவர்களுடைய வேலைகளில் அந்தக் குழந்தை தலையிடாமல் இருந்து, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்து அவர்கள் விளையாடவேண்டும். என்னும் சுயநலம் அதிகமாக இருக்கிரதே தவிர, ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் நிலை மாறிவிட்டது.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கக் கூடாது, சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்காக ஏற்பட்ட வாங்கிக் கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  அந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தையும்  முரட்டுத் தனத்தையும் வளர்க்கும்  பேராசை எனும் கருவியாக, திருப்தி இன்மை என்னும் கருவியாக மாறிப் போனது  கொடுமை என்றால், இந்தக் கொடுமையை உணராத பெற்றோரின் மனநிலை இன்னமும் கொடுமை.

    எந்தப் பொம்மை வாங்கிக் கொடுத்தாலும்  அந்தப் பொம்மையை விளையாட முழுதுமாகக் கற்றுக் கொள்ளாமல், அதன் அதிக விலையை[ப் பற்றித் தெரியாமல், அதன் அருமையை உணராமல், அடுத்தடுத்து கிடைக்கும் பொம்மைகளால்   கவரப்பட்டு எதிலுமே நிலையில்லாமல் தவித்து அத்துணை பொம்மைகளையும் அலக்‌ஷியப் படுத்தி அடம் பிடிக்கும் குணத்தையும், திருப்தி இல்லாமை என்னும் பிடிவாத  குணத்தையும் மட்டுமே  உள்வாங்கும் குழந்தைகள்  நாளடைவில் வாழ்க்கையில், காதலில், படிப்பில், விளையாட்டில், எதிலுமே திருப்தி இல்லாமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல, காதிலே ஒரு உயர்தர செல்போனை வைத்துக் கொண்டு  சாலையில் வாகனங்கள் வருவதுகூடத் தெரியாமல், ஆபத்துக்களை உணராமல் விரக்தியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    எண்ணிப் பார்க்கிறேன்,  எங்கள் குழந்தைப் பருவங்களை, அதிகமாகத் தெரிந்து கொள்ளாமல், அதாவது  அந்தப் பருவத்துக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தெரிந்து கொண்டு, மனதிலே கள்ளமில்லாமல் ஆடி, ஓடித் திரிந்த  குழந்தைகளாக, ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதிலே திருப்தி கொண்டு அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தெரிந்த குழந்தையாக இருந்து, எப்போதும் மனதிலே உற்சாகமாக, குதூகலமாக வளையவந்த அந்தக் காலங்களில்  பெற்றோர்களும்  குழந்தைகளும் எல்லோருமே  அதிக ஆசைப்படாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும்  பொன்னான வாசகத்தை மனதிலே வாங்கிக் கொண்டு  மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பது புரிகிறது.

    குழந்தைகள் பல விளையாட்டுப் கேட்டாலும்  அந்தப் பல பொருட்களில்  எது அந்தக் குழந்தைக்கு வேண்டும்  என்று பெற்றவர்களும் புரிந்துகொண்டு, அதைக் குழந்தைகளுக்கும் புரியவைத்து  தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து  வாங்கிக் கொடுத்த அந்தப் பொருளின்  உபயோகத்தையும்,, குழந்தைகளுக்கு உணர்த்து  அந்தக் குழந்தைகளின்  திருப்தி என்னும் உயரிய குணத்தை  வளர்த்து   வாழ்க்கையில் அவர்களை சிறப்பாக யோசிக்க வைத்து , உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காமல் ஆராய்ந்து   முடிவெடுக்கும்  நல்ல பொறுப்பான குழந்தைகளாக வளர்த்த அந்தக் காலத்துப் பெற்றோரும், அதைப் புரிந்து கொண்டு நற்குணங்களை வளர்த்துக் கொண்ட அந்தக் காலத்துக் குழந்தைகள், இந்தக் காலத்துப் பெரியவர்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.

    தீர்க்கமாக சிந்தித்தும் திடமான முடிவுகள் எடுக்காமல் எப்போதும் அலைபாயும் மனதோடு வாழும் இந்தக் காலத்துக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், அவர்களின் வளர்ப்பு முறைகளையும் பற்றிக் கவலை வருகிறது. இந்தத் தலைமுறையினரைக் காணும் போது மனம் பதைக்கிறது.

    உடனடியாக யோசித்து உண்மைகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தக் காலத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் கவனித்து  தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய முது மொழி    “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து “  இல்லையென்றால் வாழ்க்கை இப்படித்தான் சிதறிப் போகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(68)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    வணக்கத்துடன் மீண்டும் உங்களை இம்மடலில் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் சுதந்திரம், ஒரு நாட்டின் இறைமை, ஒரு நாட்டின் தனித்தன்மை என்பன அந்நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

    தமது நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டில் தங்கியிருக்கும் எந்த நாடுமே உளசுத்தியோடு நேர்மையாக தம்முடைய கொள்கைகளை வழிநடத்துவதென்பது முடியாத காரியம்.

    ஆனால் இன்றய உலகச் சூழலில் பெரும்பான்மையான் நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சில சிறுபான்மையான நாடுகளிலேயே தங்கியிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டினது பாதுகாப்பிற்கும் அந்நாட்டின் இராணுவமே பொறுப்பாகிறது. தம்முடைய நாட்டிற்கான இராணுவத்தில் இணைந்து பணிபுரிவோர் தம் நாட்டின் மீதுள்ள அதீத பற்ரின் அடிப்படையிலே இணைந்து கொள்கிறார்கள்.

    நாட்டின் இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது என்னவோ அடித்து விழுந்து ஓடிப்போய் பணியில் அமர்ந்து கொள்லும் வகையில் பெரியதோர் ஊதியமாக இருக்காது. இருந்தாலும் தமது நாட்டிற்கு அந்நியதோர் நாட்டினாலே ஆபத்து என்று கண்டு கொண்டதும் தமது உயிரைப் பணயம் வைத்து அந்நதந்த நாட்டு இராணுவங்கள் போரிடுவது அவ்விராணுவத்தினரின் தியாக மனப்பான்மையையே சுட்டிக் காட்டுகிறது.

    எதிலும், எங்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல இவ்விராணுவத்தினர் மத்தியிலும் சில சுயநலம் கொண்ட,வர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் மிகச் சொற்ப அளவிலேயே கணப்படுவார்கள்.

    சரி என்னடா இவன் இராணுவத்தைப் பற்றி ஏதோ எமக்குத் தெரியாதவைகளைச் சொல்ல வந்தது போல சொல்லிக் கொண்டே போகிறான் என்று நீங்கள் சலிப்படையாதீர்கள் வழக்கம் போல எனது பீடிகைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

    கடந்தவாரம் இங்கிலாந்து தொலைக்காட்ச்சியில் தேசிய சேவையான பீ.பீ.சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது எழுத என் எண்ணப் பரிமாணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேற்கண்ட ஆரம்பம்.

    சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் கண்ட போர்கள் கனமானவை, அதிக உயிரிழப்புகளைக் கொண்டவை. அவை மேற்கொள்ளப்பட்ட காரணங்களின் பின்னனியில் இருக்கும் நியாயத்தைப் பற்றி வாதிப்பதல்ல எனது இம்மடலின் நோக்கம். ஆயுதங்களின் பங்குபற்றி தற்போது இராணுவ சேவையிலிருந்து விடுபட்ட இராணுவ வீரர்களின் நிலை பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை பற்றிய கருத்தோட்டமே இது.

    அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்பட்டது.

    களத்தில் நடைபெறும் போர் என்பது என்ன? மற்றொரு மனித உயிரைக் கொலை செய்வது அதேநேரம் எதிரியால் தனது உயிருக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் வாழ்வது. இவையிரண்டும் ஒரு மனிதனின் மனதில் எப்போது பெரும்பான்மையாகக் குடி கொண்டிருந்தால் அம்மனிதனின் மனநிலை சீராக இருக்க முடியுமா?

    ஆனால் இத்தகிய சீரற்ற மனோநிலையைத் தாங்கி அதைலிருந்து வெளிவந்து விடக்கூடிய வல்லமை பலருக்கு இருந்தாலும் இம்மனோநிலையில் சிக்கி வாழ விரும்பாமல் தமது வாழ்வை முடித்துக் கொண்டு விடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

    2012ம் ஆண்டில் அப்கானிசஸ்தானில் பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களில் ஏழு பேர் தமது உயிரைத் தாமாக மாய்த்துக் கொண்டார்கள் எனவும் மேலும் 14 பேரின் மரணம் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டாலும் அவர்களின் மரணத்தைப் பற்றிய விசாரணை முற்றுப்பெறாததால் அவை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என உத்தியியோகபூர்வமான அறிக்கை சொல்கிறது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை அறிக்கை ஒன்று கூறுகிறது..

    நான் மேற்சொன்ன கணிப்பு பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர்களைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாணியாற்றி விட்டு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்ப்பி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் தமது உயிரைப் பறித்துக் கொண்டார்கள் என்று இதே அறிக்கை கூறுகிறது..

    இராணுவ நடவடிக்கை என்பது பல சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கை ஆகிரது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் தமது கண்முன்னால் தமது நண்பர்களின் உயிரைப் பறிகொடுத்தோர், தம்மோடு உண்டு, உடுத்தி, உறங்கி வாழ்ந்தோர் தமது கண்முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்ணுற்றோர் என பலவகையானோர் மனோநிலையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

    ஆனால் இத்தகைய மனஓநிலை பாதிக்கப்பட்டவர்களாக அரியப்பட்டோர் இராணுவ வாழ்க்கையில் இருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்போது அவர்களின் ஆரோக்கியத்தின் தொடர்ந்த பராமரிப்பை அரசாங்கம் சர்வரச் செய்கிறதா எனும் கேள்வியே இப்போது எழுந்துள்ளது.

    இவ்விடயத்தில் இப்போது இங்கிலாந்து ஊடகங்களில் எழுந்துள்ள வினாக்கள் அரசாங்கத் திணைக்களத்தையும் ஓரளவு தட்டி எழுப்பியுள்ளது.

    அது தவிர இத்தகிய தற்கொலைகளுக்குள்ளானவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

    எமது பாதுகாப்பிர்காக, எம் நாட்டின் அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கி தமது உயிரைப் பணயம் வைப்போருக்கு நாம் எத்தகய கெளரவத்தை அளிக்கிறோம்? எமது அரசாங்கத்தில் இராணுவப்பிரிவுக்கான அமைச்சர்கள் இதனை எத்தனை தூரம் மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுகிறார்கள்?

    கேள்விகளுக்கான விடைகள் சாதாரணத் தேர்தல் கோஷங்களாக இல்லாமல் நாட்டிற்க்குச் சேவை செய்யும் மனிதர்களில் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கொள்கைகளாக மிளிர வேண்டும் என்பதுவே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    17.07.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • குறவன் பாட்டு – 4

    
    
    சச்சிதானந்தம்
    கானகம் செல்லுதல்

     

    
    அரும்பொருள் சேகரிக்கக் கானகம் செல்லுதல்
     
    
    

    மனிதனின் வாடை அண்டாக் காட்டில்,

    தன்னந் தனியாய்ச் செல்லும் குறவன்,

    கடவுளும் கூடக் காணாக் காட்சியைக்,

    காணும் வாய்ப்பைப் பெற்றிருந் தானே!                                                                                                           31

     
    புலியைப் பின் தொடர்ந்து செல்லுதல்
     
    
    

    கடமான் ஒன்றை உணவாய்ப் பிடிக்கத்,

    தவறாய்ப் பின்னால் பதுங்கிப் பாய்ந்த,

    கிழட்டுப் புலியைப் பலமாய் உதைத்து,

    உயரத் துள்ளிப் பாய்ந்தது மானே!                                                                                                                      32

     

    உதைபட்ட புலியின் இரண்டு பற்கள்,

    சிதைவுற்று மண்ணில் சிதறிக் கிடக்க,

    பதைப்புற்ற புலியும் பசியில் மறைய,

    அதைக்கண்ட குறவன் பலசேக ரித்தான்!                                                                                                        33

     

    புலிநடந்த கால்தடத்தை வைத்ததனின் வயதறிந்து,

    தனிமையிலே நடமாடும் முதுமைப்புலி என்றுணர்ந்து,

    தொடர்ந் ததனைத் தொடர்ந்து சென்று,

    அது வசிக்கு மிடமறிந் தான்!                                                                                                                                   34

     

    அடர்ந்த் திருக்கும் கானகத்தில், உடல்

    தளர்ந் திருக்கும் புலியைத்தேடி, தோள்

    வளர்ந் திருக்கும் வாலிபக் குறவன்,

    துணிந்து தினம் பின் தொடர்ந்தான்!                                                                                                                   35

     

    மானடிக்கும் பலமிழந்துமெல்லப் பின்னர்

    முயலடிக்கும் திறனிழந்து, நாட்கள் செல்லச்செல்ல

    உயிர்வாழும் மனமிழந்து,  ஊன்வளர்க்கும் உணவிழந்து,

    நீர்பருகும் வழிமறந்து, உயிர்துறந்த புலி!                                                                                                       36

     

    உயிர்துறந்த புலிசுமந்து,  பல்நகங்கள் பிளந்தெடுத்து,

    உடல் கிழித்துக் கறி எடுத்து,  

    தோல் தனித்துப் பிரித்தெடுத்து,  அள்ளி

    நீர் தெளித்து சுத்தம் செய்தான்!                                                                                                                          37

     

    துறவறம் பூண்ட முனிவனைப் போலக்,

    குறவனும் புலித்தோல் தனிலே அமர்ந்தான்,

    அறநெறி ஆகம விதியினும் உயர்ந்த,

    அன்பெனும் நெறியினில் தினம் நடந்தான்!                                                                                                38

    Share
  • கொண்டாடுவோம் தேசியத் திருநாட்களை

    முனைவர். ப. பானுமதி

    “ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
    சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

    என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.

    நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.

    பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.

    “பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
    காரணம் யாதெனும் அறிவுமிலார்”

    என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
    மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.

    இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.

    எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.

    சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.

    சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.

    சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

    கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.

    புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.

    ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.

    அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.

    ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

    மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
    வானையளப் போம்கடல் மீனையளப்போம்
    சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
    சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

    என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.

    ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.

    அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.

    “விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

    Share
  • வாழ்க்கை நலம் – 20

    குன்றக்குடி அடிகள்

    20.  மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!

    நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது. மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு ஆய்வு செய்தல் – அணுகுதல் ஆகாது.

    மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது.  அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பை தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ  தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி – அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும்.

    இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும்.  முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி  ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று – அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

    எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில் அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச்  சரிபார்த்தல் முறை. அதுபோலவேதான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப் பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

    “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.”

    குறள் – 118

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • அனிச்ச மலர்கள்

    தேமொழி

    179584442_37af375c16மணி ஒரு மூன்றேகால் இருக்கலாம். கடைசி பீரியட். ஸ்டெல்லா டீச்சர் மின்கலன்களின் வகைகள் பற்றிய பாடத்தை நடத்திவிட்டு, பாடப் புத்தகத்தில் அந்தப் பாடத்தின் கீழ் இருந்த 2, 3, 6 கேள்விகளுக்கு விடை எழுதி வரவேண்டியது மறுநாளுக்கான வீட்டுப் பாடம் என்றும், மின்கலங்கள் 1, 2, 3 படங்களை டயாக்ராம் நோட்டில் வரைந்து அந்த வார இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். கடைசி மணி அடிக்கும் வரை மிச்சம் இருக்கும் நேரத்தில் வீட்டுப் பாடத்தையோ, படங்கள் வரைவதையோ செய்யலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். படிய தலை வாரி இரட்டை சடைகள் போட்டுக்கொண்டு, நீலம் வெண்மை நிறங்களில் பாவாடை சட்டை, தாவணி போன்ற சீருடை அணிந்த மாணவிகள் தங்கள் வேலைகளை மும்முரமாகச் செய்தார்கள். ஸ்டெல்லா டீச்சர் கையில் இருந்த சாக்பீஸ் பொடியை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே மாணவிகளின் இருக்கைகளின் இடையே இருந்த இடைவெளியில் நடந்து கொண்டே கண்காணித்தார்கள்.

    வகுப்புகள் அமைதியாக இருந்ததால் பள்ளியே அமைதியாக இருந்தது. அவ்வப்பொழுது வெளிய பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டிய சாலையில் ஓடும் பேருந்துகளின் ஓசையைத் தவிர வேறு ஓசை இல்லை. மாடியில் இருந்த அந்த ஸ்டெல்லா டீச்சரின் வகுப்பின் வெளியே, வராந்தாவில் வேக வேகமாக யாரோ நடந்து போகும் ஓசைக் கேட்டு அனைவரும் ஒட்டு மொத்தமாகத் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். தமிழாசிரியை இரங்கநாயகிதான் படபடப்பாக நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு கடைசியில் இருக்கும் வகுப்பிற்குச் சென்றார். அவர் நடையில் ஒரு பதட்டம் தெரிந்தது. இன்று மாலையில், மாடியில் இருக்கும் மெடோனா ஹாலில் நடக்கப் போகும் வீரமாமுனிவர் தமிழ்சங்க நிகழ்ச்சியை ஒட்டி நடக்கும் பள்ளியின் கலைநிகழ்ச்சியின் மொத்தப் பொறுப்பும் அவருடையது. அதனால்தான் அந்தப் படபடப்பு என அனைவருக்கும் புரிந்தது. சிறிது நேரத்தில் புயல் போல மீண்டும் அவர்கள் வகுப்பைத் தாண்டி வந்த வழியே திரும்பிச் சென்றார். ஸ்டெல்லா டீச்சரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன மிஸ் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?” என்றார். திரும்பிப் பார்த்த இரங்கநாயகி, “ஒன்னண்டயும் ஒருதரம் கேட்டுட்டாப் போறது” என்றவாறு இவர்கள் வகுப்பிற்குள் வந்தார்.

    “இன்னக்கி சாயங்காலம் ரீட்டா பரத நாட்டியம் ஆடுறா இல்ல, அலங்காரம் செஞ்சுட்டு கால்ல சலங்கையக் கட்டுறப்ப கைதவறி விட்டுட்டா, அது மேடைக்கும், பின் ஸ்க்ரீனுக்கும் சுவருக்கும் இடையே எங்கேயோ போய் இடுக்கிலே விழுந்துடுத்து, மேடை அடியில் இருட்டில் தேடியும் கிடைக்கலே. டொமினிக், ஜோசப் ரெண்டு பேரையும் கொஞ்சம் தேடிப் பார்த்து எடுத்து கொடுங்கோப்பான்னு கேட்டேன். அவாளும் மேடைக்கு அடியில் எலெக்ட்ரிக் வயர் போற இடத்திலே நன்னா தேடிட்டோம் அங்க இல்ல மிஸ் அப்படிங்கறா. என்ன செய்றதுன்னு நேக்கு தெரியலே. வேற சலங்கையும் இல்ல. ரீட்டாதான் சபிதா மிஸ் கிளாசில விஜயாவும், சாந்தா மிஸ் கிளாசில மீனாளும் டான்ஸ் ஆடுவாங்க டீச்சர். அவங்க வீட்டில இருந்து கொண்டு வந்து கொடுப்பங்களான்னு கேட்கிறேன்னு சொன்னா. இருடிம்மா நானே கேக்கிறேன். ஸ்டூடெண்ட் கேட்டா எந்த டீச்சரும் பெர்மிஷன் கொடுக்க யோசிப்பான்னு நானே வந்தேன். சபிதா மிஸ் ஸ்டூடெண்ட் இன்னைக்கி ஆப்செண்டாம். அதான் சாந்தா மிஸ் கிளாசுக்குப் போறேன், ஏன் ஸ்டெல்லா உன் ஸ்டூடெண்ட்ஸ் யாரானும் வச்சிருப்பாளோ?” என்று கேட்டவர், ஸ்டெல்லா டீச்சர் பதிலுக்குக் காத்திராமல் மாணவிகளை நோக்கி, “ஏண்டிம்மா உங்க யார் ஆத்திலேயாவது சலங்கை இருக்கா? ஆத்துக்குப் போயி எடுத்துண்டு வந்து கொடுத்தா ஷேமமா இருக்கும்,” என்றார்.

    மாணவிகள் அமைதியாக இருந்தார்கள், “பதில் சொல்லுங்கம்மா யார்கிட்டேயும் இல்லையா?” என்றார் ஸ்டெல்லா டீச்செரும் தொடர்ந்து. “என் மாமாப் பொண்ணு டான்ஸ் ஆடுவா டீச்சர், நான் போய் எடுத்து வரவா?” என்றாள் லலிதா. “நோக்கு புண்ணியமாப் போகும், ஸ்டெல்லா இவள ஆத்துக்கு அனுப்பி எடுத்துண்டு வரச் சொல்லேன், நாழியாறது” என்றார். “சரி மிஸ். நான் அனுப்பி வைக்கிறேன். நீங்க நிம்மதியா அடுத்த வேலையைப் பாருங்க,” என்றார் ஸ்டெல்லா டீச்சர். அவரை அனுப்பிவிட்டு, மாணவிகளிடம் திரும்பி லலிதாவுக்குத் துணையா அவகூடப் யாராவது போயிட்டு வாங்கம்மா, யாரு போறீங்க?” என்றார். “நான் போறேன் மிஸ்,” என்றாள் கோதை.

    கோதை அந்த வகுப்பின் கிளாஸ் லீடர், மிகவும் சூட்டிகை. உறையூரில் இருக்கும் வக்கீலின் பெண். நாச்சியார் கோயிலின் பக்கம் வீடு. தினமும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் பள்ளிக்கு வருவாள். அப்பா அரசு தரப்பு வக்கீல். பெண் இப்பொழுதே தன்னை அரை வக்கீல் என நினைத்துக் கொண்டுதான் வாதம் செய்வாள். துணிச்சலின் மறு பெயர் கோதை. குறிப்பாக ஒன்றும் சொல்ல முடியாதவாறு பார்வைக்கு மிகவும் சராசரியான தோற்றமுள்ள ஒரு பெண். ஆனால் தலைமை ஏற்று நடத்தும் தகுதிகள் அதிகம். அடுத்த ஸ்கூல் பீப்பிள் லீடராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அவளைத் துணைக்கு அனுப்ப அதிகம் யோசிக்கத் தேவை இல்லாததால், “சரி, சீக்கிரம் போயிட்டு வாங்கம்மா” என்றார் ஸ்டெல்லா டீச்சர்.

    லலிதா மெதுவாக, “மிஸ் நான் சலங்கையை கோதையிடம் கொடுத்தனுப்பி விட்டு வீட்டிலேயே இருந்துக்கவா? திருப்பி வர்றச்சே ஸ்கூல் முடிஞ்சிருக்குமே” என்றாள். அவள் ஏற்கனவே மாலையில் நடக்கப் போகும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலை என்று அனுமதி கேட்டிருந்ததும் டீச்சரின் நினைவிற்கு வந்தது. “நல்ல யோசனைதான், ஆனால் திரும்பி வர்றப்ப கோதை தனியால்ல வரணும். இப்ப அவளுக்கும் துணைக்கு ஒரு ஆள் அனுப்பணுமா? யாரும்மா இவங்களோட போறீங்க?” என்று கேட்டு டீச்சர் வாய் மூடவில்லை, “நான் போயிட்டு வரேன் மிஸ்,” என்று ரஹமதுனிசா கிளம்பினாள். டீச்செருக்குப் பகீர் என்றது. ரஹமதுனிசா கோதை மற்றும் லலிதாவின் உற்ற தோழி. மூவரும் எங்கு போனாலும் பிரியாமல்தான் இருப்பார்கள்.

    ரஹமதுனிசா மிகவும் பெரிய இடத்துப் பெண். அவள் அப்பா ஜாஃபர்ஷா தெருவில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் பெரிய பணக்காரர். உறையூர் பீடி, கல்கி பீடி, இஞ்சின் பீடி, ஹாட்டின் பீடி, சங்கு மார்க் லுங்கி போன்றவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வார். அவருடைய பெண்ணை டிரைவரை நம்பி அவர்களது காரில் அனுப்பாமல், அவர் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் ரிக்க்ஷாக்களில் ஒன்றில் துணையுடன் பள்ளிக்கு அனுப்புவார். ஆட்டோவில் கூட அவள் பள்ளிக்கு வந்ததில்லை. யாரும் தனது பெண்ணை சுலபமாகக் கடத்திவிடக்கூடாது என்ற திட்டமோ என்னமோ. ரஹமதுனிசா ஒரு நாளுக்கு மொத்தமாக ஒரு கிலோ மீட்டார் கூட நடந்தால் அது அதிசயம்தான். இவளை அனுப்பினால் ஏதும் பெரிய இடத்து வம்பு வந்து சேருமோ என்று டீச்சருக்குத் தோன்றியது. ஆனால் அதைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டி மாணவிகளுக்கு முன்பு சொல்லத் தயக்கமாக இருந்தது. “சரி சீக்கிரம் போயிட்டு பத்திரமா சீக்கிரமா வாங்கம்மா, வாட்ச்மேன் சூசையண்ணன் விடமுடியாதுன்னு சொன்னா, நான் ஹெச் எம்மிடம் பெர்மிஷன் சொல்லிக்குவேன்னு சொல்லுங்க, மாடிப்படியில் தட தடன்னு ஓடாதீங்க, ஸ்கூல் இன்னமும் முடியல்ல நினைப்பு வச்சுக்கோங்க,” என்றார்.

    “வாப்பா, இன்னா இவ்ளோ ஸ்லோவா இருக்க” என்றாள் ரஹமதுனிசா. அவளுக்கு தாய்மொழி உருது, தமிழ் அவளிடம் படாத பாடு படும். வாப்பா, போப்பா என்றுதான் பேசுவாள். “இருடி, இவ ஒருத்தி அவசரப்படுத்திண்டு” என்று முணுமுணுத்தவாறு தனது புத்தகங்களை சேகரித்து வயர் கூடைக்குள் திணித்தாள் லலிதா. தனது குடும்பப் பின்புலம், வளர்ப்புச் சூழ்நிலையால் யாரையும் வாடி போடி என்று ‘டீ’ போட்டுதான் லலிதா பேசுவாள். இருவருக்குமிடையில் கோதை பேசுவது கொஞ்சம் மொட்டையாக இருக்கும். யாரையும் ‘டீ’ போடுவது மரியாதைக் குறைவு என்று கண்டித்து வளர்க்கப் பட்டவள். எனவே,”சரி கிளம்புங்க ரெண்டு பேரும்” என்று தனது வழக்கமான முன்னின்று நடத்தும் பாணியில் பேசி அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

    டீச்சர் எதிர்பார்த்தது போலவே ஹெச் எம்மின் பெர்மிஷன் ஸ்லிப் இல்லாமல் சூசையண்ணா பள்ளி முடியும் முன் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. ஸ்டெல்லா டீச்சர் ஹெச் எம்மிடம் எங்களுக்காகப் பெர்மிஷன் கேப்பாங்க, என்று மாணவிகள் சொன்னதும் அவர்கள் வகுப்பை அண்ணாந்து பார்த்தார். மாடி வராண்டாவில், நெட்டிலிங்க மரங்களுக்கிடையே தலையை  நீட்டிப்  பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லா டீச்சர் அனுப்புங்க, அனுப்புங்க என்று கையால் ஜாடை காட்டினார்.  “இவங்க ஒருத்தங்க, ஹெச் எம் எனக்கு கண்டிஷனா சொல்லியிருக்காங்க, இப்போ நான் அனுப்பிச்சா, யாரைக் கேட்டு செஞ்சே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி அனுப்பலாமின்னு ஹெச் எம் என்னையில்ல திட்டுவாங்க” என்று முணுமுணுத்தவாறு பெரிய கேட்டில் இருந்த சிறிய திட்டிவாசல் போன்ற கேட்டைத் திறந்துவிட்டார் சூசை.

    மாணவிகள் வெளியே வந்ததும் பேசிக்கொண்டே இடதுபுறம் திரும்பி, செயின்ட் ஜோசப் சர்ச் நோக்கி நடந்தார்கள்.

    கோதை, லலிதாவின் வேகத்திற்கு ரஹமதுனிசாவால் ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. அவள் காலில் அணிந்திருந்த, அவளது அத்தா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த கலையழகுள்ள புதுச் செருப்பும் கடித்தது, அதனால் அவள்  பின் தங்க ஆரம்பித்தாள்.

    “ஏம்ப்பா, ஒன் வீடு ஆண்டார் வீதிலதான இருக்கு”

    “ஆமாண்டி, இப்பவே ஆரம்பிச்சுட்டியா? நடக்க முடியலையா?”

    “என்னம்மா பேகம், புதுச் செருப்பு கடிக்குதோ? ” என்று விளையாட்டாகக் கேட்ட கோதை லலிதாவிடம், “கொஞ்சம் மெல்லப் போ, பாவம் ரஹமதுனிசாவுக்கு நம்மைப்போல நடந்து பழக்கம் இல்லை, பாரு இப்பவே முகம் சிவந்து வேர்த்து விட்டது,” என்று சொல்லி நடையை நிதானமாக்கினாள்.

    ரஹமதுனிசா கொஞ்சம் கழுக் மொழுக் வகை. பெண்கள் எல்லோரும் நீல நிறப் பாவாடை தாவணி, வெள்ளை சட்டை அணிந்து பள்ளி வந்தால், இவள் சீருடையைத் தலைகீழாக்கி வெள்ளை நிறப் பைஜாமா, நீல நிற குர்தா அணிந்து வெள்ளை துப்பட்டா போட்டு வருவாள். யாரும் கிள்ளிப் பார்க்க விரும்பும் சிறிது உப்பிய கன்னம், தலை நிறைய உள்ள நீண்ட அடர்த்தியான முடியை இரட்டையாகப் பிரித்து குதிரை வால் போலப் போடுவாள். சுருக்கமாகச் சொன்னால், அசப்பில் “காத்திருந்த கண்களே, கதை அளந்த நெஞ்சமே” எனப் பாடி ஆடும் ஜெயலலிதா போல உடை, நிறம், சாயல், வளர்த்தி எல்லாம்.

    பள்ளிக்குப் பின்புறம் உள்ள கோட்டை ஸ்ட்ஷனுக்கு இரயிலில் வந்திறங்கி பள்ளிக்கு வரும் பெருகமணி, எலமனூர், ஜீயபுரம், முத்தரசநல்லூர் போன்ற பக்கத்துக்கு கிராமத்துப் பெண்களோடு நிறுத்தினால் தள தள வென்று தனித்துத் தெரிவாள். அவள் காலில் தங்கக் கொலுசு போட்டிருப்பதை பிற மாணவிகள் அதிசயமாகப் பார்ப்பார்கள். தங்கத்த காலில் போடக்கூடாது, அது லக்ஷ்மி மரியாதைக் கொடுக்கணும் என்றும் சிலர் சொல்லிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் பள்ளியில் அவள் தனித்துத் தெரிவாள். யாராவது அவளை “பம்பிளிமாஸ்” என்று கேலி செய்தால் அவள் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் கோதை அவளுக்கு வக்காலத்து வாங்கி சாமியாடி, வக்கீல் போலப் பேசிப் பேசியே நியாயம், அநியாயம் என்று நீதி கேட்டு பெண்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். கோதையின் தாக்குதலில் அகப்பட்ட பெண்களுக்கு ஹெச் எம்மின் அறைவாசலில் செய்த தவறுக்கு அரை நாள் முட்டி போடுவது கூட பிச்சாத்து தண்டனையாகத் தெரியும். ரஹமதுனிசாவைத் திட்டவோ, கோபிக்கவோ உரிமையுள்ள ஒரே உயிர் கோதை என்பது பள்ளியில் எழுதாத சட்டம்.

    காந்தி சிலை, மெயின் கார்ட் கேட், செயின்ட் ஜோசெப் சர்ச் எனக்கடந்து, பர்மா பஜாரில் நுழைந்து, தெப்பக்குளம் அருகில் இடது பக்கம் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியை நோக்கி நடந்தார்கள். சிந்தாமணி சூப்பர் மார்கெட்டில் இருந்து வந்த பாப்கார்ன் வாசனை மூக்கைத் துளைத்தது.

    கோதை லலிதாவிடம், “லலிதா, உன்னை ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சேன், நீ ஏன் உன் வீட்டுப் பக்கம் இருக்கும் சாவித்திரி வித்யா சாலைக்குப் போகாம நம்ம ஸ்கூல்ல சேர்ந்தே?” என்றாள்.

    அதன் பொருள்… நீ ஏன் உங்க வீட்டுப் பக்கம் இருக்கும் மற்ற அய்யர் வீட்டுப் பெண்களைப் போல வீட்டின் அருகிலேயே இருக்கும் பிராமணர்கள் பள்ளியில் சேரவில்லை? ஏன் சிறிது தொலைவில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்கூல்லுக்கு வருகிறாய் என்பது. இப்படி கேட்பது நாகரிகமில்லை என்பது அவள் வளர்க்கப் பட்ட விதத்தினால் கற்றுக் கொண்ட பாடம். அதனால் மேலோட்டமாக நயமான வார்த்தைகளால் கேட்டாள்.

    “ஒ..அதுவாடி, என் அப்பா அம்மா ஆக்சிடெண்டுல போன பிறகு, மாமா அவராத்துக்கு என்ன அழச்சுண்டு வந்திட்டார். நான் எங்க ஊர்ல ஒரு கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். மாமா அவாட்டே என் ட்ரான்ஸ்ஃபர் சர்டிஃபிகேட் கேக்கறச்சே, எங்க ஸ்கூல்ல ஹெச். எம்மாக இருந்த மதர் நம்ம ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி, டி சி யோட நம்ம ஸ்கூல் ஹெச் எம்மிற்கு ஒரு ரெகமண்டேஷன் லெட்டரும் கொடுத்தாங்க. அதனாலேதான் வருஷ நடுவிலயும் அட்மிஷனுக்கு சிரமப் படாம ஸ்கூல்ல சேர முடிஞ்சது. மாமாவாலயும் மறுக்க முடியல,” என்றாள்.

    கோதைக்கு அந்த பேச்சை அத்துடன் விட்டுவிட விருப்பமாக இருந்தது. லலிதாவின் பெற்றோர் மரணத்தை பற்றிய நினைவை தேவையில்லாமல் தூண்டிவிட்டு விட்டோமோ என்று யோசித்தாள். பேச்சை மாற்ற எண்ணி, “உன் மாமா பெண் டான்ஸ் கத்துக்கறாங்களே, நீ ஆட மாட்டியா?” என்றாள்.

    “நான் பாட்டு கத்துண்டிருக்கேன், நேக்கு சக்கீதம்னா ரொம்ப இஷ்டம். இரண்டு பேரும் படிப்பு முடிஞ்சதும் நான் பாட அவள் அதற்கு ஆடற மாதிரி ப்ரோக்ராம் கொடுக்க திட்டம் போட்டிருக்கோம். இப்போ கூட கொஞ்ச நாள்ல திருவானைக்கா கோயில்ல ஒரு ப்ரோக்ராமும், அத்திம்பேர் ஆத்து கல்யாணத்தில் ஒரு ப்ரோக்ராமும், எஸ். ஆர். காலஜில ஒரு ப்ரோக்ராமும் கொடுக்கப் போறோம்.”

    “ஏய் நீ ரொம்போ பெரிய ஆளுதாம்பா!!!”

    “ரஹமதுனிசா சொல்றது சரி, ப்ரோக்ராம் நடக்கறப்போ சொல்லு, நானும் வந்து பாக்கறேன்.”

    “சரி செஞ்சுட்டாப் போறது, இதுதான் என் மாமா வீடு” என்று ஒரு வீட்டைக் காட்டினாள். வீட்டு வாசலில் முற்றத்தில் செங்காவி கோலம் போட்டு, பச்சை வண்ணத்தில் வாசல் கம்பிக் கதவிற்கு வண்ணம் பூசி, சிறிது பழையதான தோற்றத்துடன் அந்த வீடு இருந்தது. வாசலில் இருந்த கம்பிக் கதவின் இடுக்கு வழியே உள்ளே கையை விட்டு, தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் லலிதா. நிலைப்படியில் இருந்து சற்றே சரிவாக இறங்கிய சிவப்பு சிமிண்ட் தரையின் இருபுறமும் தூணுடன் திண்ணைகள் இருந்தது. அடுத்து அக்கால மர வேலைப்பாடு உடைய கதவும், அதனுடன் மாவிலைத் தோரணமும், குங்குமம் சந்தனம் இட்ட நிலைப்படியும் இருந்தது. வீட்டின் வாசலில் இருந்து அடுத்து ஒரு அறை, பிறகு நடுவில் மேல் பக்கம் கம்பி போட்ட முற்றம், அதில் பித்தளை அண்டா சொம்பு, மாவாட்டும் கல், பிறகு ஒரு நீண்ட நடை, என்று கொல்லையில் துளசி மாடம் வரை வாசலில் இருந்தே தெரிந்தது. திண்ணையைக் கண்டதும் செருப்பைக் கழற்றி விட்டு, குடு குடு என்று ஒடி, “உஸ்… அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு, முகத்தை துப்பட்டாவால் துடைத்து விட்டு உட்கார்ந்து காலை அமுக்க ஆரம்பித்தாள் ரஹமதுனிசா. அவளது சோர்வைப் பார்த்து சிரித்தார்கள் கோதையும் லலிதாவும்.

    “போங்கப்பா, சிரிக்காதீங்கப்பா, என்னால முடியல, நானு இங்கன உட்காந்துப்பேன், கொஞ்சம் தண்ணி கொடுப்பா தாகமா இருக்கு.”

    இருடி, ஜலம் கொண்டு வரேன். அதோ அங்க பொஸ்தம் படிக்கறாளே அவ என் பாட்டி, தூணாண்ட பூ தொடுக்கறாளே அவள் என் மாமி.”

    முற்றத்தில் ஒரு ஈசிச்சேரில் உட்கார்ந்து, காவிப் புடவையுடன் தலையை முக்காடு போட்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு வயதான அம்மா ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருதார். இவர்களை ஒரே ஒரு முறை மட்டும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார், எதுவும் பேசவில்லை. பெண்கள் கொடுத்த வணக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை. மாமி புன்னகையுடன் “வாங்கோம்மா, லல்லி இவாள்ளாம் உன் பிரெண்ட்ஸா, ஏண்டி சுருக்க வந்திட்ட, ஸ்கூல்ல உங்கள சீக்கிரமா விட்டுட்டாளா?” என்றார் மாமி.

    லலிதாவிற்கு லல்லி என்று வீட்டில் பெயரா என்பது போல தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். லலிதா உள்ளே சென்று மாமியிடம் பேசிக் கொண்டே மாலை பள்ளி நிகழ்ச்சிக்கு சலங்கை வேண்டும் என்று கேட்பது அவர்களுக்கு கேட்டது. பிறகு ஒரு சொம்பில் நீரும், மறு கையில் சலங்கைகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். ரஹமதுனிசா தண்ணீரை வாங்கி அண்ணாந்து மடக் மடக்கெனக் குடிக்க, கோதை தனது காலில் சலங்கைகளை வைத்து அழகு பார்த்தாள். பிறகு சலங்கைகளை ரஹமதுனிசாவிடம் கொடுத்துவிட்டு பாதி நீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

    “லல்லி” என்று உள்ளிருந்து மாமியின் குரல் கேட்டது.

    சரி, நீங்க ஜலம் குடிசிட்டு சொம்பை இங்கேயே வச்சிடுங்கோ, இதோ வந்திடறேன்”

    அவள் உள்ளே சென்றதும் வாசல் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெரியவர் வேகமாக உள்ளே வந்தார், நெற்றியில் பட்டை, சிவ சிவ என்று எழுதியிருந்த காவித்துண்டைப் மேலே போர்த்தி, தலையில் குடுமி வைத்திருந்தார்.

    இவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்து, “வாங்கோம்மா, லலிதாம்பிகாவோட பிரெண்ட்ஸா?” என்று கேட்டு பதிலை எதிர் பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டார். பெண்கள் இருவரும் அரக்கப் பரக்க எழுந்து கும்பிட்டு, இவர்தான் லலிதாவின் மாமாவா? என்று யோசித்து “ஆமாம்… மாமா” என்று சொல்லுவதா? இல்லை  “ஆமாம்… சார்,” என்று சொல்லுவதா? என்று குழம்பியதைக் காண அவர் காத்திருக்கவில்லை.

    மீண்டும் வேகமாக உள்ளிருந்து அடுத்து இருந்த அறைக்கு வந்து நிலைக்கண்ணாடி பதித்த கதவுடன் இருந்த மர பீரோவைத் திறக்க முயன்றார். அது பூட்டி இருந்தது. அலமாரியின் மேல் கையால் துழாவி சாவியைத் தேடினார். அது கிடைக்கவிலை. உள்புறம் நோக்கி “லலிதாம்பிகா, அலமாரி சாவி” என்று தந்தி மொழியில் குரல் கொடுத்தார். பிறகு இவர்களைத் திரும்பிப் பார்த்து, “மாமி பண்டிகைக்கு பட்ஷணம் செய்திருக்கா, உங்களுக்கு தட்டையும் சீடையும் லலிதாம்பிகா கொண்டு வந்து தருவா, சாப்பிட்டுட்டு போங்கோ, காஃபி குடிப்பேளா, மாமி காஃபி நன்னாயிருக்கும், ” என்றார்.

    பெண்கள் இருவரும் மாமா என்று கூப்பிடலாம் என்று இதற்குள் முடிவு செய்துவிட்டது போல, “இல்லே மாமா, காஃபி குடிக்கிற பழக்கமில்லே” என்றார்கள் கோரஸ்ஸில்.

    “நினைச்சேன்,” என்று சொல்லிய அவரிடம் சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு லலிதா வேகமாக உள்ளே ஓடத் திரும்பினாள்.

    பெண்கள் இருவரும், “லலிதா, நாங்க கிளம்பறோம் நேரமாவுது,” என்று கூறியவாறு எழுந்தார்கள்.

    “ஒரு நிமிஷம் இருங்கடி, இதோ வர்றேன்” என்று லலிதா மீண்டும் உள்ளே ஓடினாள்.

    மாமா அலமாரியைத் திறந்து, குடைந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதவை மூடாமல் அப்படியே விட்டு விட்டு மீண்டும் உள்ளேஅவசராமகச் சென்றார்.

    family album photo 1கோதை திண்ணையில் அமர்ந்தவாறே அந்த திறந்த அலமாரியின் கதவில் இருந்த நிலைக்கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அதில் எதிர் சுவரில் இவர்கள் கண்களுக்கு மறைவாக மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் பிரதிபலித்தது. அதில் ஏழெட்டு வயது உள்ள சிறுமி ஒருத்தி ஒற்றைச்சடை பின்னி குஞ்சம் வைத்து, சடையில் பூவைத்து தைத்து, அந்த சடை அலங்காரம் பின்புறம் இருந்த நிலைக்கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு நின்று கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடையும் நிறைய நகைகளும் அணிந்திருந்தாள். அந்த சிறுமியிடம் லலிதாவின் சாயல் இருப்பது போலத் தெரிந்தது.

    “ஏய் இவளே, இந்தப் பொண்ணு லலிதா மாதிரி இல்ல?”

    “யாருப்பா?”

    “அதோ அந்தக் கண்ணாடியில் தெரியும் படத்தைப் பார், அந்தப் பொண்ணு.”

    கையில் வைத்திருந்த சலங்கையுடன் எழுந்து, படத்தை நன்றாகப் பார்க்க நிலைப்படியைத் தாண்டி ஒரு காலை வீட்டின் உள்ளே வைக்கப் போனாள் ரஹமதுனிசா.

    “ஏய், நில்லுடி, யார் ஒன்ன ஆத்துக்குள்ள வரச் சொன்னா?” என்று அதட்டினாள் இதுவரை அவர்கள் அங்கிருப்பதையே கவனிக்காதது போல படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் பாட்டி.

    செல்லப் பெண்ணாகவே வளர்க்கப் பட்ட பெரிய இடத்துப் பெண் ரஹமதுனிசா இந்த அதட்டலையும், அதில் இழைந்தோடிய அவமானப் படுத்தும் தொனியையும், தான் அவமரியாதை செய்யப்படும் காரணத்தையும் புரிந்து விக்கித்துப் போனாள். அவளுடைய தங்கக் கொலுசு போட்ட தூக்கிய கால் “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” பாடலுக்கு அபிநயம் பிடிப்பது போல் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. கையில் இருந்த சலங்கை கை நழுவி சிவப்பு சிமெண்ட் நடைபாதை சரிவில் கிண்கிணித்தவாறு சரிந்தோடியது.

    பாட்டியின் குரல் கேட்டு சட்டென்று எகிறிய கோபத்துடன் புயல் போல வெளியேறிய கோதை, வாசலைக் கடந்து நடு வீதிக்குச் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். ரஹமதுனிசா இன்னமும் அப்படியே திகைத்துப் போய் நிற்பதைப் பார்த்து ஆத்திரத்துடன், “ஏய் உனக்கு அறிவில்ல, ரோஷமில்ல, வா வெளியே,” என்று திட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

    அவள் குரல் கேட்டு அதிர்ச்சியிலிருந்து  மீண்ட ரஹமதுனிசா, “ஏய்…ஏஏய்… கோதை கொஞ்சம் இருப்பா” என்று கூவியவாறு வெளியே ஓடினாள். தவறவிட்ட சலங்கை நினைவிற்கு வர மீண்டும் உள்ளே ஓடி தரையில் கிடந்த சலங்கைகளை எடுத்துக் கொண்டு, வழியல் கிடந்த அவளது செருப்பை கவனியாது மிதித்து, அதில் இருந்த அலங்கார மணிகள் அவள் காலில் குத்தி பதம் பார்த்துவிட, வலி தாளாமல் இரண்டு நொண்டு நொண்டிவிட்டு செருப்பையும் சலங்கைகளையும் கைகளில் அள்ளிக் கொண்டு வெறுங்காலுடன் கோதையைத் தொடர்ந்து மூச்சிறைக்க ஓடினாள்.

    கையில் பலகாரத் தட்டுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த லலிதா, அவர்களைக் காணாது திகைத்து, என்ன இவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார்கள் என நினைத்தாள். பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்களோ என நினைத்து. “பாட்டி அவாள்ளாம் போய் நாழியாச்சா, பட்ஷணம் கொண்டு வரதுக்குள்ளே போய்ட்டாளே” என்றாள்.

    பாட்டியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. லலிதாவைப் பொருட்படுத்தி நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

    பலகாரத் தட்டுகளைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசல் கம்பிக் கதவைத் தாண்டி வெளியில் வந்து, மேற்கு நோக்கி மறையத் தொடங்கிய சூரியனின் ஒளியினை மறைக்க கையைத் தலைக்கு மேல் வைத்து லலிதா பார்த்த பொழுது, ஆண்டார் வீதி வளைந்து திரும்பும் முக்கில் ரஹமதுனிசாவின் வெள்ளை துப்பட்டா காற்றில் படபடத்து பார்வையில் இருந்து மறைந்தது.

     

     

    படம் உதவி:
    மாணவிகள்: http://www.flickr.com/photos/maemae/179584442/
    அனிச்ச மலர்: http://upload.wikimedia.org/wikibooks/ta/thumb/a/a7/Anicham.jpg/150px-Anicham.jpg

     

    Share
  • உள்ளம் கவர்ந்தானை

    ஷைலஜா

    shylajas snapஎங்கள் வீட்டிற்கு ரங்கன் வந்ததிலிருந்து தாத்தா ரொம்பவும் பிசி ஆக ஆகிவிட்டார். யார் அந்த ரங்கன்?. அப்படி என்ன அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?.

    ரங்கன் சுமார் நாலு மாதக் குரங்கு. தாத்தாவுக்கு ரங்கனை குரங்கு என்று சொன்னால் கோபம் வரும். இனிமேல் நாமும் ரங்கன் என்றே அவனை அழைப்போம். அவன் இந்த வீட்டில் நுழைந்ததே தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு கவனக்குறைவு காரணமாகத்தான். தேங்காய் உரிக்க மண்ணுக்குள் சொருகியிருந்த கடப்பாரையை எடுக்க மறந்ததன் விளைவு தாய் குரங்கு கடப்பாரை நுணிக்கு பலியானது. அப்போது அனாதையாக இருந்த குட்டிக்குரங்கை, ஸாரி.. ரங்கனை உடனே தாத்தா வாரி அணைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். தோட்டத்தில் இருந்த அத்தனை வேலையாட்களையும் கடிந்து கொண்டு ஒரு வாரம் பேசவேயில்லை.

    உள்ளே நுழைந்த உடனே நேராக தாத்தாவின் ரூமுக்குள் அவனுக்காக ஏகப்பட்ட வசதிகள் தயாராகிக்கொண்டிருந்தன. காஷ்மீரிலிருந்து அவரது மகளால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சால்வை மெத்தையாகவும், சோலாபூர் கம்பளம் போர்வையாகவும் மாறியிருந்தன. பால் அருந்த பீங்கான் கப், சாப்பிட ஒரு ப்ளேட், பழங்கள் என்று ஒரு மினி ஜூவாகவே அந்த அறை மாறியிருந்தது.

    தாத்தாவின் அறை ஏறக்குறைய ஒரு ஐசியு அறையாகவே காணப்பட்டது. யாருக்கும் அனுமதி கிடையாது. முதல் ஒரு வாரம் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு சின்னத் திரை சீரியலே தயாரித்துவிடலாம். தாத்தாவுக்கு வேண்டிய உணவு, காபி, டிபன் கூட ரூமுக்கு வெளியேயிருந்து கொடுக்கப்பட்டது. ரங்கனுக்குத் தேவையான பால், வாழைப்பழம் ஆகியவையும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது.

    மாலை நேரத்தில் தாத்தாவின் பால்ய நண்பர் பாபு வந்து ரங்கனை பரிசோதிக்க வருவார். அவர் தான் அந்த ஊரின் முதல் வெடினெரி டாக்டர்.

    “இது ஒரு ஜெனரல் டிப்ரெஷன். கவலைப்படவேண்டாம். சரியாப் போயிடும். இன்னும் பதினைந்து நாளைக்குள் ரங்கனை காவேரிக்கரை ஓரம் உள்ள தாத்தாச்சாரியார் தோப்பில் விட்டு விடலாம். கவலைப்படாதேடா.. திருமலை” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

    ரங்கனுக்கு பாலோ பழமோ பிடிக்கவில்லை. தாத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த தட்டை திறந்தவுடன் ஓடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டது. அவருக்காக வைத்திருந்த உப்புமாவை தனக்குத் தர வேண்டும் என்று கண்களால் கெஞ்ச, தாத்தா ரங்கனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார். கத்திரிக்காய் கொத்ஸு வையும் அது மிகவும் ரசித்து சாப்பிட தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

    உடனே பாபுவுக்கு ஃபோன் போட்டு, “ பாபு.. ரங்கனுக்கு என்னோட உப்புமா தான் பிடிச்சுருக்கு. கொடுத்துவிட்டேன். தப்பில்லையே?” என்று கேட்டார்.

    பாபு “ஓ.கே. கோ.. அஹெட். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றார்.

    ‘எத்தனை பறவைகள், விலங்குகள், அதன் பசியை போக்கிக்கொள்ள பசியாறுகின்றன.. இப்படி ஒவ்வொறு உயிரினத்துக்கும், அதற்கு பிடித்த உணவை இறைவன் ஏற்கனவே படைத்துவிட்டான். ஒரு குரங்குக்காக இப்படி உயிரை விடுகிறானே… எத்தனை இளகிய மனஸு..’ என்று தனக்குள் பாபு சிரித்துக்கொண்டார்.

    அன்று இரவு அவனுக்கு காஷ்மிர் ஷால்வை, முள்ளாய் குத்தியதோ என்னவோ, தாத்தாவின் அருகிலே படுத்துக்கொண்டான். தாத்தாவின் வேட்டி நுணியை பிஞ்சு விரல்களால் பிடித்தவாறு மெல்ல தூங்க ஆரம்பித்தான்.

    சிறிய வயதிலே தன்னுடைய தாயை இழந்த திருமலைக்குத் தான் தெரியும் ‘ஒரு தாயின் பிரிவு என்றால் என்ன என்று. பாபு சொல்கிற மாதிரி பதினைந்து நாட்களுக்குள் எப்படி எப்படி சரியாகும்? இன்னமும் அம்மாவை இழந்த துக்கம் என்னுள் புதைந்து கிடக்கிறது. கொஞ்சம் தட்டி விட்டால் போதும், இப்பவும் இந்த தலையணையும் போர்வையும் நனையும் வரை கண்ணிலிருந்து ஜலம் வரும். மனிதர்களுக்கு மட்டும் தானா இந்த பிரிவு, ஏக்கம் எல்லாம்? மிருகங்களுக்கு கிடையாதா?. பதினைந்து நாட்கள் கழித்து ரங்கனை நிச்சயம் பிரியத்தான் வேண்டுமா?.. வேறு வழியே இல்லையா?’ இப்படி பல கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் வேறு வழி இன்றி அவர் நித்திரையில் லயிக்க ஆரம்பித்தார்.

    மறு நாள் முதல் ரங்கன் ரொம்பவும் உரிமையுடனும், நீண்ட நாள் பழகிய தினுசில் தாத்தாவுடன் விளையாட ஆரம்பிக்க அந்த அறையில் சிரிப்பும், விளையாட்டும் வீட்டில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின

    அதற்கு மேல் அந்த அறையில் ரங்கனை வைத்திருக்க அவசியமே இல்லாமல் போயிற்று. ஹால், சமையல் அறை, மாடி, தோட்டம், என்று இப்படி எங்கெல்லாம் தாத்தா செல்கிறாரோ அங்கெல்லாம் அவன் அவருடன் உலவ ஆரம்பித்தான்.

    தாத்தா வாக்கிங்க் ஸ்டிக் வைத்துக்கொண்டு இருப்பதைப் போல அவனும் ஒரு சிறிய குச்சியுடன் அவர் பின் நடப்பது வேடிக்கையாக இருந்தது.

    “போகிற போக்கைப் பார்த்தால் அவன் பெயரில் உயிலையே எழுதி வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று பாட்டி சொல்ல.

    தாத்தா “ பாவம் தாயில்லா ஜீவன். யாரு இருக்கா அவனுக்கு? மிருகங்கள் மனிதர்களுக்காக தங்களின் வாழ்க்கையே அர்ப்பணம் செய்யவில்லையா? அது நாம் நடமாடும் தெய்வமாக கும்பிடும் மாடாகட்டும் அல்லது நாயாகட்டும், நம் வாழ்க்கையில் எத்தனை பெரிய உதவிகளை பிரதி பலன் பார்க்காமல் செய்கின்ற்ன!. நாம தான் கடவுளுக்கு அர்சசனை செய்தால் அவர் நமக்கு என்ன கொடுப்பார்னு கணக்கு பார்க்கிறோம்.” தாத்தா உணர்ச்சி பொங்க பதில் அளிக்கவும் பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

    ஆயிற்று. பாபு சொன்ன பதினைந்தாம் நாள் ‘டாண்’ என்று வாசலில் நின்று கொண்டு, “ திருமலை! சீக்கிரம் வா.. காரில் ஏறு. ரங்கனை வழி அனுப்பிவிட்டு வரலாம்” என்று கூவ, திருமலை “ பாபு! சொன்னா கேளுடா.. கொஞ்ச நாளுக்கு அப்புறம்

    பார்துக்கலாம். இப்போ என்ன அவசரம்?” என்றார்.

    “இதோ.. ஐந்து நிமஷம். அவனுக்குப் பிடித்த அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்ஸு கொடுத்துவிட்டு அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

    அரை மனதுடன் காரில் ரங்கனுடன் ஏறிக்கொள்ள, பாபு காரை வேகமாக மாம்பழ சாலையை கடந்து இடது புறமாக செலுத்தினார். வெட்டிச்சாய்த்துவிட்ட பல மரங்களின் நடுவே அங்கும் இங்குமாய் தெரiிந்த நாலைந்து மரங்களை நோக்கி நெருங்க நெருங்க திருமலைக்கு துக்கம் தொண்டையை அடைத்துகொண்டது.

    பாபு காரைத்திருப்பிக்கொண்டு, “ திருமலை, காரை விட்டு இறங்க வேண்டாம். இங்கேயே அவனை இறக்கி விடு. அவன் போய் விடுவான்” என்றார்.

    மனதைக் கல்லாக்கிக்கொண்டு ரங்கனை காரின் கதவைத் திறந்தவுடன் விட்டு விட்டு வந்த வேகத்தில் வேகமாக காவிரிப் பாலத்தைக் கடந்து மெயின் கார்டு கேட் தேவர் ஹால் எதிரே உள்ள பத்மா காபியில் நுழைந்து காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.

    திருமலைக்கு காபி வேப்பிலை சாறு போல கசந்தது. அவர் மனம் எல்லாம் ரங்கனின் பின்னே. ‘தப்பு செய்து விட்டோமே. அவனை இனிமேல் பார்க்க முடியுமா? அவனை மற்ற குரங்குகள் ஏற்றுக்கொள்ளுமா?’ ஒரே கவலை திருமலைக்கு.

    திருமலையிடம் பாபு, “திருமலை! பீ ப்ராக்டிகல். நாம விலங்குகளின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. ரெண்டு நாளில் அதுக்கு எல்லாம் சரியாப் போயிடும்.” என்றார்.

    “என்ன செய்வது. உன் மாதிரி நான் கல் நெஞ்சக்காரன் இல்லை”
    திருமலையின் வார்த்தையில் சோகம் தோய்ந்திருப்பதை பாபுவால் உணர முடிந்தது.

    திரும்பி வருகையில் ஜோஸஃப் கல்லூரியைக்கடந்து சத்திரம் பஸ் ஸ்டான்டை தாண்டி காவேரிப் பாலத்தின் மேல் கார் செல்லும் போது திருமலையின் கண்கள் தாத்தாச்சாரியார் தோட்டத்தைத் துளைக்கத் தொடங்கியது.

    பாபுவின் கார் இடது புறம் திரும்பி அம்மா மண்டபம், காந்தி சிலையை கடந்து மேலூர் ரோடில் உள்ள வீட்டின் முன் நிற்கும் போது வீட்டின் வாசல் முன் ரங்கன் அவருக்காக காத்து நின்றான்.

    தாத்தாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்து அவரது வேட்டி நுனியை கையால் கவ்வி அவர் மேல் பாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்த, பாபு, “ என்னை மன்னிச்சுடுடா. அவன் இவ்வளவு திரும்பி வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா போய்விடும்? பீ ஹாப்பி அண்ட் எஞ்சாய் வித் ஹிம். நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

    வழக்கம் போல இரவு 9 மணிக்கு தாத்தாவும் ரங்கனும் அவர்களின் அறையில் படுத்தனர். ரங்கன் தாத்தாவின் அருகில் படுத்துக்கொண்டான். தாத்தா “ என்னை மன்னிச்சுடுடா.. இனிமேல் அந்த தப்பு செய்ய மாட்டேன்” என்றபடியே ரங்கனை வாஞ்சனையாக வருடியபடியே தூங்கிப்போனார்.

    இரவு ஒரு மணி இருக்கும். திடீரென்று ரங்கன் தாத்தாவின் தோள்களைக் குலுக்கி ஆரவாரம் செய்ய, தாத்தா விழித்துக்கொண்டார். அவரை இழுத்துக்கொண்டு பாட்டி அருகில் சென்றான்.

    கீழே நிலை தவறி விழுந்திருந்த அம்புஜம் தலையில் லேசான அடி பட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. முகத்திலும், கைகளிலும் வியர்த்திருந்தது. அவள் அப்போதுதான் விழுந்திருக்கவேண்டும்.

    ஆம்புலன்ஸை வரவைத்து, அமெரிக்கன் ஆஸ்பத்திரி விரைந்தார்.

    பாட்டிக்கு அவசர சிகிச்சை அளித்த டாக்டர் “ சிவியர் ஹார்ட் அட்டாக். நல்ல வேளை. உடனே வந்தீர்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். இந்த மருந்துகளை உடனே வாங்கி வாங்கோ” டாக்டர் இப்படி சொன்னதும் திருமலையின் பார்வை ரங்கனின் பக்கம் சென்றது.

    ‘இப்படி ஒரு பெரிய விஷயத்தை செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போல உட்கார்ந்திருக்கிறானே!. ரங்கனின் வருகைக்கு பாபு சொன்ன காரணம் இது தானோ?’ என வியந்தார்.

    அப்புறம் என்ன!.. ரங்கனிடம் அந்த வீட்டில் எல்லோரும் அன்பைப் பொழிந்தனர். ரங்கனுக்கு கிடைத்த மரியாதையும் சலுகைகளும் ஏராளம்.

    ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தாத்தாவுக்கு உடம்புக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ கவலைப்படாதீர்கள். சரியாகிவிடும். வயசானாலே ஏதாவது சின்ன நோய் அப்பப்ப வருவது தான்.” வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு சென்றார்.

    தாத்தா அன்று இரவு அவருக்குப் பிடித்த உப்புமாவை சாப்பிடவில்லை. ரங்கனுக்கும் ஊட்டிவிடவில்லை.

    அன்று இரவு படுத்தவர்தான், மறு நாள் காலை எழுந்திருக்கவில்லை. ரங்கன் தாத்தாவின் பிரிவை பொறுக்கமுடியாமல் அவரைச் சுற்றி சுற்றி வந்தான்.

    தாத்தாவின் உடலைத் தகனம் செய்து காவிரியில் அஸ்தி கரைத்துவிட்டு வந்தாயிற்று.

    ரங்கனுக்கு தாத்தாவின் அறையில் இருந்த அவனுடைய தட்டில் உப்புமா பறிமாறப்பட்டது.

    மறு நாள் காலை எழுந்து பார்க்கும்போது ரங்கன் அறையில் இல்லை. தட்டில் உப்புமா அப்படியே இருந்தது.

    ரங்கனை கடைசியாக காவிரிக்கரை ஓரத்தில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். அவனுடைய குச்சி மட்டும் வீடு வந்து சேர்ந்தது. அதற்கு அப்புறம் அவனை யாரும் பார்க்கவே இல்லை.

    Share
  • ‘நீர்’

    மாதங்கி

    நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒருமணிநேரம், இரண்டுமணிநேரம் அல்ல, இரண்டு வாரங்களாக நின்றுகொண்டிருக்கிறேன்; தரையில் அன்று ; தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறேன். நேரடியாக இல்லாவிட்டாலும் நான் நின்றுகொண்டிருக்கும் இடம், நிலுவையில் உள்ள கப்பலில் இருக்கிறது; பாதகமில்லை, எனக்கு; ஆனால் இந்த மனித ஜீவனுக்கு? இந்த பாரக்கப்பலில் மாட்டிக்கொண்டிருப்பவருக்கு?

    நான் யார்? என் பெயர் என்ன என்பது தேவையில்லை. சித்தகாங்கு துறைமுகத்தில் பொருள்கள் அடங்கிய பெரிய பெட்டிகளை கப்பலில் ஏற்றிச்செல்ல நிறைய கண்டெய்னர்களைப், பார்த்திருப்பீர்களே, அவற்றில் ஒன்றுதான் நான்.

    சித்தகாங்கு துறைமுகம் பிரம்மாண்டமானது. கி.மு நான்கில் இங்கிருந்துதான் மலாயாவிற்கு புத்தகுப்தர் சென்றாராம்; பெரிப்ளக்ஸ் குறிப்புகளில் இருக்கிறதாம். யுவான் சுவாங்கு, ஃபாஹியன், டாலமி, இபின் படூடா எல்லோருமே இத்துறைமுகத்தைப் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்களாம். பிற்காலத்தில் போர்த்துகீசியர், ஆங்கிலேயர் ஆகியோர் வசம் இருந்ததாம். யாரோ பேசும்போது கேட்ட நினைவு.

    என் இப்போதைய கவலையெல்லாம் இந்த மனித உயிரைப் பற்றியது மட்டுமே. எந்த மதம், மொழி, இனம், நாடு என்ற பேதம் பார்க்க நான் மனிதப்பிறவி அல்லவே; எனக்கு அது ஒரு மனித உயிர் அவ்வளவுதான். அவனுக்கு ஜீவன் என்ற பெயரை நானே வைத்துவிட்டேன். ஜீவன் தற்சமயம் என்னுடன் தான் இருக்கிறான்.

    சித்தகாங்கு துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும்போது இவனைப்போன்ற பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவன் இவன். தனியார் நிறுவனங்களின் நிரந்தரக் கூலிப் பட்டியலில் அன்றாடம் காய்ச்சிகளாய் இடம்பிடிக்கவும் முடியாமல் தற்காலிகக்கூலி என்ற பெயரில் நாள் ஒன்றுக்குப் பன்னிரண்டுமணிநேர உழைப்பையும் போட்டுவிட்டு கண்காணிப்பவன் என்ன சில்லரை கொடுக்கிறானோ அதை மறுபேச்சின்றி வாங்கிப்போய் வீட்டிலிருக்கும் ஒன்பது உயிர்களுக்கும் படியளப்பவன்.

    அவனுக்குப் பல கனவுகள் இருந்தன. எழுதப்படிக்கத் தெரியாததால், கண்காணிப்பவனிடம், அடிஉதை, கெட்டபேச்சு, இவற்றைக் கேட்டுத்தொலைக்கவேண்டியிருக்கும்போதெல்லாம், மாலை மங்கியபின் மகள் முக்தா எண்ணெய் விளக்கொளியில் குழிகள் நிறைந்த மண் தரையில் நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதியவாறு சத்தம்போட்டு படிக்கும் காட்சியை நினைத்துக்கொள்வான். எப்பவாவது மகள் முக்தா, தனக்குக் கொடுக்கும் தேத்தண்ணீரில் ஒருநாளாவது பாலூற்ற முடியுமா என்று தயங்கித்தயங்கி கேட்பாள். என் அன்பு முக்தாவுக்காக; நாளெல்லாம் உழைத்துவிட்டு இரவு படுக்கும்போதுகூட முழுமறைப்பு இல்லாத, கொசுக்கடியும் நாற்றமும் வீசும் தடுப்பு அடியில் படுத்துறங்கும் மனைவிக்காக. மடபாரி ரயில் நிலையத்தின் மறுபுறம் குப்பைக்கூளங்களுக்கு மத்தியில், இருப்பதைக் கொண்டு குடிசைகட்டி வசிப்பவர் பலர் இருந்தனர், இவனும் நான்கு குச்சிகளுக்கு மேல் பொருத்தியிருந்த ஒரு பழைய பிளாஸ்டிக் விரிப்பாலான கூரையை, விட்டு எங்குபோனாலும், நம்வீட்டுக்குப்போகணும் என்று மழலை மொழிபேசும் பவனுக்காக, என்று எண்ணி அடக்கிக்கொள்வான்.

    அடிமட்டக்கூலியைக் கொடுக்கும்போதும் அதிலிருந்தும் பாதிக்கும் மேல் கமிசன் எடுத்துக்கொண்டு சில்லரையை கூலி விநியோகிப்பவன் ஒருமுறை வீசிப்போட்டபோது, அவன் காட்டிய ரோசம் தற்காலிக கூலிவேலையை மட்டும் பறிக்கவில்லை, மருந்துவாங்கக் காசின்றி, பேதிகண்ட இரட்டைக்குழந்தைகளின் உயிரையும் பறித்துக்கொண்டது.

    சில நாள்கள் கழித்து, அந்தத் துறைமுகத்தில் இருந்த வேறொரு தனியார் நிறுவனத்தின் நிரந்தரக்கூலி ஒருவனின் நட்புகிடைத்து, அவன் உபகாரத்தால், தற்காலிகமாகச் சுமையேற்றும் வேலை கிடைத்திருந்தது. அப்போது ஏதோ கணக்கெடுக்க வெளிநாட்டுக்காரர்கள் சிலர் வந்தார்கள். கூடவே மொழிபெயர்த்துச்சொல்ல உள்ளூர்காரன் ஒருவனையும் கூட்டிவந்திருந்தார்கள். அவனுடைய மாத வருமானம் கேட்டார்கள். அவர்கள் பணத்தில் இவன் கூலி ஒரு நாளைக்கு ஒரு வெள்ளியாம், உள்ளூர்காரன் சொன்னான். இவர்கள் இப்படி வெளிநாட்டுக்கு கணக்கெடுக்க வந்திருக்கிறார்களே, இவர்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கெல்லாம் யார் காவல், ஜீவன் யோசித்தான். அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள். மனைவி பானுவுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி மகள் முக்தாவை யாரும் கடத்திப்போய்விடக்கூடாது, என்ற பயம் இப்போது அடிக்கடி வருகிறது. காலிப் பயல்கள்; மனுசன் காசின்றி இருந்தாலும் அது பெண்பிள்ளை என்னும் பட்சத்தில் ஏழை பணக்காரன், சாதி வேறுபாடு பார்ப்பதில்லையே, காசநோயில் வாழும் பெற்றோருக்கு ஒரு வாரமாகத்தான் மருந்து வாங்கிக்கொடுக்க முடிகிறது. என்றாவது ஒரு நாள், கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு மிதிசைக்கிள்வேன் ஓட்டுநராகி, பின் சொந்தமாக ஒரு மிதிசைக்கிள்வேன் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தான். வாங்கியபின் பின்பக்கத்திலிருக்கும் கூண்டுக்கதவில் முக்தாவை வண்ணச்சாயத்தால் படம் எழுதச்சொல்லலாம். சாமான்களைக் கட்டிவைக்க பலத்த கயிறு ஒன்று வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படியே தொங்கும் விளக்கு ஒன்றை தயாராக வைத்துக்கொண்டால் இரவு சவாரி மிதிக்கும்போது வெளிச்சத்திற்கு உதவும். வியர்வையைத் துடைக்க இருக்கை அருகில் ஒரு கைத்துண்டு வைத்துக்கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் வீட்டினரை எங்காவது பின்புறக்கூண்டில் அமர்த்தி அழைத்துச்செல்லலாம். இவை எல்லாவற்றையும் விட தினமும் இரண்டு வேளை கஞ்சி வீட்டினர் எல்லோருக்கும் கிடைக்கும் என்பது அவனுக்கு ஒரு மனத்தெம்பைத் தந்தது. கொஞ்சம் துணிவாங்கி கோடிக்கடை பாய்’ இடம் கொடுத்து குழந்தைகளுக்கு நல்ல சட்டை தைத்துத்தரச்சொல்லிப் போட்டுப் பார்க்க வேண்டும்.

    பன்னிரண்டு மணிநேரம் பகல் ஷிப்ட் பார்த்தால் அடுத்த பன்னிரண்டு மணிநேரவிடுப்புக்குப் பின்தான் வேலைக்கு வரமுடியும். ஓரிருநாள்கள் இரண்டுமூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு, அடுத்த ஷிப்ட் பணி வரும் வரை சும்மா இருக்கவேண்டாமென்று, தளத்தைப் பெருக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டுப்பார்த்தான்; விரட்டிவிட்டார்கள்.

    நான்கு நாள்கள் ஒருவேளை எல்லோருக்கும் உணவுகிடைத்தால் ஐந்தாவது நாள் ஏதேனும் புதிய பிரச்சனை ஒன்று முளைத்துவிடுகிறது. கைக்குழந்தை பவனுக்கு பால்மாவு வாங்க காசில்லாவிட்டாலும் கஞ்சிவேளைதவிர இக்கடுங்கோடையில் உதடுகள் அடிக்கடி உலர்ந்து வெடித்துப்போய் அழுகிறது. தெருவில் இருக்கும் அவர்கள் இருப்பிடத்திற்கு வெளியே வெட்டவெளியில் அவர்களுடைய சமையல் பாத்திரங்கள் அருகில் எங்கேனும் தண்ணீர் கிடைத்தால் குடித்துவிடுகிறது. பெற்ற பிள்ளைக்குக் குடிக்க நல்ல தண்ணீர்கூட கொடுக்கமுடியாத பாவி என்று ஜீவன் நேற்று முட்டிக்கொண்டு அழுதான். பானு ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டி அருகிலிருந்த குட்டைநீரை ஓடிஓடிப்போய்க்குடித்து அடிக்கடி சுகவீனம் அடைந்துவிடுகிறது. எங்கோ கிடைத்த ஆரஞ்சுப்பழக்கொட்டைகளை முக்தா ஒரு தகர டப்பாவில் மண்நிரப்பி வைத்திருக்கிறாள். ஒரு மழை திடீரென்று வந்துவிட்டால் மூங்கில் கழிகள் விழுந்துவிடுகின்றன. ஒரு குடிசை கட்டிக்கொள்ளவேண்டும்.

    பத்துவயது முக்தா மெலிந்தவளாய் இருக்கிறாள். நல்ல மனம் கொண்ட வைத்தியர் ஒருவர், இலவசமாகக் கொடுத்த பால்மாவு டப்பா எத்தனை நாள்தான் வரும். இப்படித்தான் அவன் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

    இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று பார்க்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். பன்னிரண்டு மணி நேர பகல்நேரப் பணியில் பளுதூக்கும் வேலை முடிந்தபின் இரவுப்பணிக்கு கூலி ஒருவன் வராததால் ஜீவன் அதை ஒரு நாள் ஏற்றுக்கொண்டு, கிடைத்த கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு அடுத்த பகல்நேரப் பணி இல்லாததால், தளம் பெருக்கும் வேலையை முடித்துவிட்டு துறைமுகத்தில் கவனிப்பாரற்றுக் இருந்த ஒரு கண்டெய்னர் உள்ளே, அதாவது என் உள்ளே, ஒரு தேத்தண்ணீர்க் கிண்ணத்துடன் நுழைந்தவன் தன்னைமறந்து கண்ணயர்ந்துவிட்டான். .

    இருட்டியபின் அவன் உள்ளே இருப்பதை அறியாமல் என்னுடைய கதவு சீலிடப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரை நோக்கிக் கிளம்பியது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறான், சீலிடாதீர்கள் என்று என்னால் முடிந்தவரை அலறினேன். ஜீவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யார் காதிலும் நான் அலறியது விழவில்லை.

    நானும் பதற்றம் கூடிட கவனித்துக்கொண்டிருந்தேன். சிலமணிநேரங்களில் விழித்தவன், நிலையைப் புரிந்துகொண்டு அலறினான். இரும்பாலான என் உட்சுவர்களைப் பலங்கொண்ட மட்டும் தட்டினான், கத்தினான், கதறினான். அவன் அவ்வப்போது உடைந்துபோய்ப் புலம்பியதை வைத்துதான் அவனைப் பற்றிய விவரங்களை நான் தெரிந்துகொண்டேன். அதை உங்களுக்கும் கூறி வந்தேன். ஆனால் கப்பல் தன் பயணத்தைத் துவங்கி பலமணிநேரங்கள் ஆகிவிட்டது. உறங்கினான், விழித்தான், புலம்பினான், உதைத்துப்பார்த்தான், அழுதான். என் பக்கவாட்டில் இருந்த தகடுகளில் அங்கங்கே ஆணிகளும் ஸ்க்ரூக்களும் பூட்டப்பட்டிருந்ததால் சுவாசிக்க காற்று சில துளைகள் வழியே வந்தது. பொதுவாக என் போன்ற கண்டெய்னர்களில் சணல் பொருள்கள், இரசாயன உரங்கள், மீனுணவுத் தயாரிப்புகள் போன்றவை பெட்டிகளில் இடப்பட்டு ஏற்றப்படும். என்னுள் ஒரே ஒரு பெட்டிதான் ஜீவன் வருவதற்கு முன் இருந்தது. அதில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை,

    ஜீவன், உன் சக்தியை வீணாக்காதே ஐந்து நாள்களில் சிங்கப்பூர் சென்றுவிடுவோம். உனக்கு ஒரு வழிபிறக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அதே சமயம் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு வேலைவாய்பைத் தேடி வருபவர்களுக்கு கடும் தண்டனை என்பதும் எனக்குத் தெரியும். முன்பொருமுறை இதேபோல் எங்கிருந்தோ வந்த சரக்குக் கப்பலின் இருவர் கண்டெய்னரின் மாட்டிக்கொண்டு, ஒருவன் கப்பல் வெய்யிலில் ஏற்பட்ட சூட்டில் இறந்திட பிணத்துடன் இருந்த மற்றொருவனை சிங்கப்பூரின் பாசில் பஞ்சாங் முனையத்தில் கப்பல் வந்த உடனேயே கண்டெய்னர்களை இறக்கிவிட்டதால் கண்டுபிடித்து, மருத்துவமனையில் சேர்த்து பின் சில தொண்டூழியர்கள் உதவியால் அவனை விசாரித்து, உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டபின், அவனை, அவன் நாட்டிற்கு, நல்லபடியாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதில் வந்தவனைப் பற்றியோ அவன் வாழ்க்கை பற்றியோ எனக்கு எதுவும் தெரியவில்லை. பயணமே நீண்டுவிட்டதுபோல் தோன்றியது, நாங்கள் கிளம்பியதிலிருந்து ஒரே மழை வேறு. சிங்கப்பூர் போய் சேர்வதுவரையாது ஜீவன் உயிரோடு இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருந்தேன். இவன் கதையைக் கேட்டபின் இவன் எதோ எனக்கு மிகவும் வேண்டியவன் போல் தோன்றிவிட்டதா, அல்லது இவனுடைய குடும்பத்திற்கு இவனுடைய அவசியத்தைப் பற்றி நினைத்தா என்று திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை. இவன் உயிரோடு இருக்க வேண்டும், இருப்பான், அவ்வளவுதான்.

    சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்துசேர்ந்ததை எனக்குப் பழக்கமான வெளியுலக ஒலியாலும், வாசனை மூலமாகவும் தெரிந்துகொண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜீவன், போராடிப் போராடி ஓய்ந்திருந்தான். கத்தாதே, துறைமுகம் சேர்ந்தவுடன் உரக்கக்கூவிட உனக்குத் தெம்பு வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியது அவன் காதில் விழவில்லைநம்பிக்கையுடன் இருக்கத் தீர்மானித்தேன். வேறெதுவும் என்னால் செய்ய இயலாத பட்சத்தில், இது ஒன்றுதான் வழி.

    மறுநாள், இராட்சத கிரேன்கள் சில, துறைமுகத்தில் காத்துக்கொண்டிருந்த சில கப்பல்களில் இருந்த சில கண்டெய்னர்களை இறக்கின. நாங்கள் இறக்கப்படவில்லை. என்னை யாரும் சட்டை செய்யவில்லை. எங்கள் அருகிலேயே யாரும் வரவும் காணோம். ஒரு வாரமாக துறைமுகத்திலே காத்துக்கொண்டேயிருக்கிறேன். . உடலில் உள்ள தண்ணீர்சத்தெல்லாம் வற்றிட அவன் மயங்கியிருந்தது எனக்கு மிகவும் பதற்றத்தைத் தந்தது. ஒரு வேளை இறந்துவிடுவானோ, பவன், முக்தா இவர்களின் கதி, இவன் குடும்பம்,… கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டேன்.

    கோடைவெப்பம் என் இரும்புச்சுவர்களை இன்னும் அதிகமாகத்தாக்க, நான் என் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறேன்.

    இதைத்தான் இக்கதையின் துவக்கத்தில் உங்களிடம் சொல்லத் துவங்கினேன்.

    ஜீவன் உடலின் நீர்ச்சத்தெல்லாம், வற்றி, பசியால் கண்கள் பஞ்சடைந்து அவ்வப்போது தூக்கமும், விழித்தால் அரை மயக்கமுமாய் இருந்தான். ஒவ்வொரு விழிப்புக்கும் பிறகு தன் சக்தியெல்லாம் திரட்டி சுவர்களில் ஓங்கி ஓரிரு முறை குத்துவான், கத்திப்பார்ப்பான், இப்போது இரண்டு நாள்களாக அதற்கும் அவனிடம் திராணி இல்லை.

    சில கிரேன்களின் உதவியால் நானும் வேறு சில கண்டெய்னர்களும் இடம்மாற்றப்பட்டோம். இவை வியட்நாம் செல்லும் கண்டெயினர்கள் என்று ஒலிபெருக்கியில் ஒருவர் அறிவித்துக்கொண்டிருந்ததைக் கேட்டு திடுக்கிட்டுப்போனேன்.

    சீருடை அணிந்த சிப்பந்திகள் இருவர் ஏதோ சோதனைக்கு நான் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் வந்தபோது, ஜீவன், இதைவிட்டால் உனக்கு இனி வாய்ப்பு இல்லை, உன் உயிர் மட்டுமன்று உன் குடும்பத்தினரின் உயிரும் இப்போது நீ எடுக்கும் முயற்சியில்தான் உள்ளது அலறினேன். இங்கே இறங்காமலே வியட்நாம் பயணம் என்றால், ஜீவனின் கதை முடிந்தகதையாகிவிடுமே. கடைசியாக ஒரு முறை தள்ளாடிய ஜீவன், தன் பலத்தையெல்லாம் திரட்டி ஓங்கி ஒரு முறை தட்டினான். கூக்குரலிடக்கூட அவனுக்கு முடியவில்லை. சோர்வுற்று மயங்கி கீழே விழுந்தான். நாங்கள் வியட்நாம் செல்லும் கப்பலிலா இருக்கிறோம். அப்படியானால், இங்கு எங்களைத் திறக்கவே மாட்டார்களே. என் புலன்களை மூடிக்கொண்டேன், செவி மட்டும் விதிவிலக்காக.

    என்னுடைய பின்குறிப்பு

    பங்களாதேசத்திலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்லும் சரக்குக் கப்பலுக்கு தெரியாமல் வந்துவிட்டோமே, என்று இருவர் முணுமுணுத்தனர். அவர்கள் சுங்கச் சாவடி அதிகாரிகள் என்பதை அவர்களுடைய சீருடையை வைத்துப் புரிந்துகொண்டேன்.

    அந்த இருவரில் ஒருவர், “நாம் படகிலிருந்து இறங்கும்போது ஏதோ ஒரு கண்டெய்னரில் லேசாக சத்தம் கேட்டதுபோல் இருந்ததே” என்று மற்றவரிடம் சொன்னார்.

    Share
  • மெய்க் கீர்த்தி

     பத்மநாபபுரம் அரவிந்தன் rest

    மரங்கள் கூட அசையாத

    வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க

    இருள் பழகி பாதை தெரிந்தது..

    விடியலின் போதவன் போகும்

    ஊர் போய் சேர்ந்திருந்தான்.

    வரையவே வராது என்றிருந்தவன்

    வரைந்து பார்ப்போமே என

    வரைந்த ஓவியங்கள்

    பெருந்தொகைக்கு விலை போயின..

    முயன்று பார்க்கலாமென அவன்

    முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்

    வென்றெடுத்தான்…

    போதுமென்ற நிறைவோடு

    ஓய்ந்திருக்க

    என்ணியவன் ஒதுங்கி இருக்கையிலே

    மரணம் அவனை ஆரத் தழுவியது…

    படத்துக்கு நன்றி

    http://www.visualphotos.com/image/2×4377802/dubai_uae_man_taking_rest_on_park_bench_along

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பேரா. நாகராசன்

    இந்த வார வல்லமையாளர்  [227\2013 – 28/07\2013

    மெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

    வாராது வந்த மாமணி என்று 20-ஆம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.

    இணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர்.  இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது.  ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்

    சிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை.  இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல்.  மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது

    பெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து  வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்

    photoமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்

    பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது

    முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 19

    இன்னம்பூரான்

    auto-stik1மக்கள் நலத்தை நீண்டகாலமாக அசட்டை செய்வது போதாது என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைகளையே துச்சமாக மதித்து, சாக்குப்போக்குச்சொல்லி, சால்ஜாப்பு ராச்சியம் நடத்திய தமிழக அரசுக்கு, கொதித்தெழுந்த உச்சநீதி மன்றத்திலிருந்து ஒரு ‘சுளீர்’ அடி ஒன்று இன்று. சுரணையுடன், உரிய நடவடிக்கைகளை எடுத்து சீரிய ஆணைகளை அரசு பிறப்பிக்குமா என்ற ஐயம் நம்மை ஆட்டிப்படைத்தால், அது வியப்புக்குரியது அல்ல. ஏனெனில், எந்தக்கட்சி அரசாண்டாலும், ஏழை, எளியவர்கள் பிள்ளையார் கோயிலாண்டிகள் தான். ஊருக்கு இளைத்தவர்கள். தீண்டாமைச்சுவர்களும், இரட்டை டம்ளர் அவலமும், கந்து வட்டி கந்தரகோளமும், கல்வி தந்தைகளின் அசுரகதி திரவியம் தேடுதலும், சுண்ணாம்பு காளவாய் கொத்தடிமைகளும், சிறார்களை வறுத்தெடுத்து முறுக்கு சுடுவதும், தோட்டி மலம் சுமக்கும் அபாண்டமும் சட்டமீறல்களே. அவை சமுதாயத்தின் சுமுகத்தைக் குலைப்பதை பொது சமுதாயம் கண்டு கொள்வது இல்லை; அரசு கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்கிறது. கடமை தவறுகிறது.

    சரி. விஷயத்துக்கு வருவோம். தருமமிகு சென்னை மாநகரத்தில் நடுத்தர மக்கள் ஆட்டோரிக்க்ஷா சவாரி செய்ய அஞ்சுகிறார்கள்; ஆனால், தவிர்க்கமுடியவில்லையே.

    “பள்ளிக்கு செல்ல ரொம்பி வழியும் ஆட்டோரிக்க்ஷா!

    கொள்ளைப்பணம் கேட்டாலும் கொடுத்தாகவேண்டும்.”

    “ரயிலை பிடிக்கணுமா, செல்லக்கண்ணு.

    மயிலிறகு இறக்கி வை, செல்லக்கண்ணு.”

    அவசரமா ஆஸ்பத்திரி போகணுமா, ராசா?

    பரவசமா காசு கேட்பான், ஆட்டோ சங்கரு.”

    பாட்டு என்ன வேண்டிக்கிடக்கு? பாட்டு! இது ஷோக்கு சமாச்சாரம் இல்லை, சுவாமி. பூஜை வேளையிலே கரடி புகுந்தமாதிரி தமாசு என்ன வேண்டிக்கிடக்கு? பாயிண்டுக்கு வருவோம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து, இந்த ஆட்டோரிக்க்ஷா அனாச்சாரம் சென்னை வாழ் மக்களை எரி தணலில் வீழ்ந்த புழுவைப்போல துடிக்க வைத்துள்ளது. ‘ஆட்டோரிக்க்ஷா’ என்ற பேச்சு எழுந்தவுடனேயே மன உளைச்சல், ரத்த அழுத்தம், அபரிமித கவலை, அவமானம், அனாவசிய வாக்குவாதம், விட்டால் போதும் என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களைப் பாடாய் படுத்துகிறது என்பதும், அவரவர்கள், தவிர்க்க முடியாத கட்டாயங்களால், ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனரின் பேராசைக்கு உட்பட்டு நடப்பதும், ஆட்டோரிக்க்ஷா அட்டூழியம் தமிழகம் முழுதும் ஆக்கிரமித்து விட்டது என்பதும், ஊரறிந்த உண்மை.

    பழங்கதை பேசினால், ஆளுக்கொரு சரடு அவிழ்த்து விடுவார்கள், அதிகார மையங்கள். இந்த விவகாரத்தில், முதல் அதிகாரமையம்: ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள். அவர்களில் பெரும்பாலோர் லேவாதேவிக்காரர்கள். பசை இருப்பதால், நிதி நிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் பக்கம். காவல்துறை அதிகாரிகளும் பெருமளவில், பினாமியாக, ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள் என்ற தகவல், பல வருடங்களாக, யாதொரு மறுப்பும் இல்லாமல், உலா வருகிறது. இது முதல் அதிகார மையத்தை விட வலிமை வாய்ந்தது. பயிரை மேயும் வேலிக்கு ஆதிக்கம் அதிகம். ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனர்கள், மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒரு சிலரை தவிர, பெரும்பாலோர் ஈவு இரக்கமற்றவர்கள்; மனசாட்சியை தொலைத்தவர்கள். காசு பறிப்பவர்கள்.

    இந்த சூழ்நிலையில், கனம் கோர்ட்டாரிடம் அரசு இடக்கு செய்யும் டைம்-லைனை பாருங்கள்.

    டைம்-லைன்:

    டிசம்பர் 3, 2012:

    விண்ணப்பதாரர் எஸ்.வி.க்ருஷ்ணமூர்த்தி அவர்களின் மனுவை பரிசீலித்த உச்சநீதி மன்றம், இரண்டு வாரங்களுக்குள் ஆட்டோரிக்க்ஷாவுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. வழக்கை ஜனவரி 28, 2013 அன்று விசாரிக்கப்போவதாக உத்தரவிட்டது.

    ஜனவரி 28, 2013:

    தமிழக அரசு வக்கீல் திரு. குரு கிருஷ்ணகுமார் நான்கு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அது அளிக்கப்பட்டது.

    மார்ச் 4, 2013

    ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்று செம்பை பாடியது போல, விண்ணப்பதாரரின் கோரிக்கைகளை அரசு ஆராய்கிறது எனக்கூறி, திரு. குரு கிருஷ்ணகுமார், மறுபடியும் எட்டு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அதுவும் பொறுமையுடன் அளிக்கப்பட்டது.

    மே 6, 2013.

    திரு. குரு கிருஷ்ணகுமார் மறுபடியும் வாய்தா கேட்டார்! விண்ணப்பதாரர் ஆக்ஷேபித்த போதிலும், பொறுமையையே பூஷணமாகக்கொண்ட கனம் கோர்ட்டார் மனமுவந்து கேட்டபடி இரண்டு மாத வாய்தா அளித்தனர். இனி தாமதிக்காமல் கட்டணங்களை அரசு நிர்ணயித்து ஆக வேண்டும் என்ற வற்புறுத்தல், அந்த வாய்தாவின் உள்ளுறை. ஜூலை 22க்குள் அவ்வாறு செய்யப்படும் என்ற வாக்குறுதி அரசியல் தரப்பில் அளிக்கப்பட்டது.

    26 07 2013

    அரசு வக்கீல் திரு.எல்.என்.ராவ் அவர்கள், பல முனைகளில் இது விஷயமாக முன்னேற்றம் இருந்தாலும்,மேலும் அவகாசம் வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் வாய்தா விண்ணப்பம்!

    பொறுமையிழந்த கனம் கோர்ட்டார் ( நீதிபதிகள் ஆர்.எம்.லோடா அவர்களும், இப்ராஹீம் கலிஃபுல்லா அவர்களும்) வாய்தா கொடுத்தாலும், அரசை கண்டித்தனர். ரூபாய் 10,000/- அபராதம் விதித்தனர். அதை விண்ணப்பதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டனர். ஆதியோடந்தமாக, இந்த வாய்தா அவலத்தை விவரித்த பின்னர், இறுதியாக நான்கு வார வாய்தா கொடுத்துள்ளனர். இத்தகைய அபராதம், வற்புறுத்தல் எல்லாம் அரசுக்கு ஒரு தலை குனிவு தான்.

    இந்த அழகில், மற்ற இடங்களைப் பற்றி, சற்றே கவனிப்போம்.

    ஹிந்து இதழ் ஆங்கில பதிப்பில் (ஜூலை 28, 2013) திரு. ஜே. வெங்கடேசன் குறிப்பிட்டது:

    புது டில்லி: முதல் கட்டணம் ரூ.25 /- + ரூ.8 /- கி.மீட்டருக்கு;

    மும்பாய்: முதல் கட்டணம் ரூ.15 /- + ரூ.9.87/- கி.மீட்டருக்கு;

    பெங்களூரு: முதல் கட்டணம் ரூ.20 /- + ரூ.11 /- கி.மீட்டருக்கு;

    ஹைதராபாத்: முதல் கட்டணம் ரூ.16 /- + ரூ.9/- கி.மீட்டருக்கு.

    முதல் கட்டணத்தொலைவில் சற்று வித்தியாசங்கள் இருந்தாலும், இரவு நேரத்தில் 25% அதிகப்படி கட்டணம் என்றாலும், மேற்படி நகரங்களில் இருப்பதை விட சென்னையில் பலமடங்கு அதிகம்; அடாவடி. கேள்வி முறை இல்லை.

    கொசுறு: இந்த 2ஜி விவகாரத்தில் ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டியின் தலைவர் திரு.பி.சி.சாக்கோ அவர்கள் ஆடிட்டர் ஜெனெரல் வரம்பு மீறி அரசின் கொள்கைகளை விமரிசித்தார் என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஒருவன் நாள்தோறும் பீடி பிடித்ததால் அவனை நுரையீரல் புற்று நோய் பீடித்தது. டாக்டர் அது பற்றி எழுதியதை ஆக்ஷேபித்து அவரின் நண்பர், ‘டாக்டர் புற்று நோயை பற்றி மட்டும் சொல்லவேண்டும். பீடி பிடித்தது பற்றி பேசுவது, கொள்கை விமரிசனம் என்று கண்டித்தாராம். அது நினைவுக்கு வந்தது.

    இன்னம்பூரான்

    28 07 2013

    Share
  • பேச்சி

    IMG_5273பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமன் எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான்.

    “எங்கடா போற?”

    “தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”

    “ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”

    “ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”

    ”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”

    ”சரிடா பெருமாளு!”

    அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமன்.

    “பழமு, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”

    “இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”

    “அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”

    “என்னாத்தா இருக்குது?”

    “கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”

    “அப்பிடின்னா என்னாத்தா?”

    “கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”

    “எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”

    “டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!

    பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.

    அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமன். அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,

    “கண்ணூ பழமு! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

    ”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

    “அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”

    அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமன் அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.

    கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமன்:

    சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
    சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
    வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
    வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!

    ஓடிக் கொண்டு இருந்த காட்டாற்றில், பூக்களை நழுவவிட்ட பழமன், அந்த ஆற்றின் கரையோரமாக வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த ஆறினாலேயே அந்த ஊர்கள் மிகச் செழிப்பு பெறுகிறது.

    பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும்,தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.

    இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமன், அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமனைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.

    ”பழமா, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”

    “ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”

    “இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”

    “சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”

    “இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”

    “சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”

    “உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.

    செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.

    செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமா?”

    “தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”

    ”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமன் வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.

    இதைக் கேட்ட பழமனுக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமனிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.

    “இந்தாடா பழமு, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”

    “ம்ம்ம்… ம்ம்ம்… செரீங்க…ம்ம்!”

    சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமன் மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!

    பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
    எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
    வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
    சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!

    சூரிப் பழங்களையும், கள்ளிப் பழங்களையும் சுவைத்தவாறு, வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் பாலகன் பழமன். சென்று கொண்டிருந்த இட்டேரியில் இருந்து பிரிந்து, சிறுகால்த் தடம் வழியாக அவ்ர்களுடைய வயலுக்குச் செல்லும் இடம் நெருங்க, அவனுள் இனம் புரியாத ஒரு அச்சம் மேலிட்டது.

    அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடுகடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,

    “அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”

    “அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”

    “அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”

    “அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”

    “செரீங்க அப்பாரு!”

    ”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”

    “அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”

    “நீ தெகிரியமா இருடா…அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”

    இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமன். இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.

    வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
    சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
    நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

    இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமன் பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.

    இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,

    ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
    கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
    பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
    பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!

    தனது வயலுக்குள் மகிழ்வாய் நுழைந்த பாலகனைக் கண்டு, கூரைச் சோறு கண்ட காகம் போன்றதொரு விரைவில், அவனது செல்ல நாய் பேச்சிஓடோடி வந்தது. தன் வயலுக்குள் காலடி வைத்த குதூகலத்துடனும், தன் செல்லத்தைக் காணுகிற மகிழ்வுடனும் பேச்சியை நோக்கி குதியாட்டம் இட்டவாறு ஓடுகிறான் பழமன்.

    எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமனின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.

    பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.

    “அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன். ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.

    “ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”

    “கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”

    “ம்ம்… நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”

    “அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”

    “ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”

    “ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.

    “செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”

    “ப்ளொள்!”

    “அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”

    “செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”

    சிறுவன் பழமனும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.

    உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமன்.

    பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.

    அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமன். ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.

    இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பழமன்.

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
    மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
    கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
    கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
    தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
    நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
    மயிலைகூடப் போட்டி போடும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    வண்டி ஓட்டியதில் சலித்துப் போன பழமன், தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பழமன் மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!

    Share