பேரா. நாகராசன்

இந்த வார வல்லமையாளர்  [227\2013 – 28/07\2013

மெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

வாராது வந்த மாமணி என்று 20-ஆம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.

இணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர்.  இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது.  ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்

சிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை.  இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல்.  மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது

பெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து  வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்

photoமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்

பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது

முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள்.

  3. பன்முகச் சிந்தனையாளர்களும் சான்றோர்களும் நிரம்பிய வல்லமை குழுமத்தில் என்னை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்தமைக்கு பேரா. நாகராசன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    வல்லமை குழுமத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.  மீண்டும் நன்றியுடன்…
    ஆதிரா

  4. //வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ….. தேமொழி//

    தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேமொழி

  5. //தனுசு wrote on 31 July, 2013, 7:55
    வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி தனுசு அவர்களே

  6. //பார்வதி இராமச்சந்திரன் wrote on 31 July, 2013, 10:46
    வல்லமையாளர் விருது பெற்ற,முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

     திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  7. வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

  8. சகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை.

    அன்புடன்
    அசுரன்

  9. முனைவர் பானுமதி அவர்கள் இவ்வார
    வல்லமையாளர் என்பதில்
    மகிழ்ச்சி..
    மகிழ்ச்சி இரட்டிப்பாய்-
    அவர் என்
    முகநூல் நண்பர் என்பதால்..
    வாழ்த்துகள்…!

  10. //சச்சிதானந்தம் 
    வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சச்சிதானந்தம் அவர்களுக்கு

  11. //அசுரன் wrote on 31 July, 2013, 19:00
    சகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை
    அன்புடன்
    அசுரன்//

    ஓடோடி வந்து வாழ்த்தும் உங்க அன்புக்கு நன்றி அசுரன். 

  12. செண்பக ஜெகதீசன்… wrote on 31 July, 2013, 19:12
    //முனைவர் பானுமதி அவர்கள் இவ்வார
    வல்லமையாளர் என்பதில்
    மகிழ்ச்சி..
    மகிழ்ச்சி இரட்டிப்பாய்-
    அவர் என்
    முகநூல் நண்பர் என்பதால்..
    வாழ்த்துகள்…!//
    செண்பக ஜெகதீசன் சார் எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சி.  உங்கள்.  வாழ்த்துக்கு நன்றி.

  13. //பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது//

    பேரா. நாகராசன் சார்,
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என்னைக் கவர்ந்த சாதனையாளர் இசைக்குயில் எம். எஸ்.எஸ். அம்மா அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.