Blog

  • உடலே நலமா?

    – ரிஷி

     

    ‘மனசே சுகமா?’ என்று கேட்டிருப்போம். உடலே நீ நலமாக இருக்கிறாயா என்று கேட்டிருப்போமா?

     

    காலந்தோறும் உடலை வெறும் சதைக் கோளங்களின் திரட்சியாகவும், இதிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவியெடுக்காமல் இருப்பதே நாம் நம் ஆன்மாவிற்கு செய்யக்கூடிய தலையாய பணியாகவுமே கருதி இருக்கிறோம்; அவ்வாறே கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

    எல்லைகளற்று விரிந்து பரவிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தில் நாம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே திகழ்கிறோம். இங்கு ஒவ்வொருவரின் இருப்பிற்கும் பொருள் இருக்கிறது. நாம் இல்லையெனில் இப்பிரபஞ்சம் முழுமை பெறுவதில்லை. ஆற்றலை எவ்வாறு அழிக்க முடியாதோ அது போலவே நாமும்.

     

    ஆக, நம் பேருணர்வின் இருப்பை எளிமையாய் உணர்வதற்குக் கிடைத்த ஒரு அற்புதமான வடிவமைப்புதான் நம் உடல். நமக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் வல்லமை கொண்ட  உடலுடன் நாம் ஒருமித்திருக்கிறோமா?

    நமக்கும் நம் உடலுக்குமான நெருக்கத்தை, இசைவான பரிவர்த்தனையை சில உடல் செயல்முறைப் பயிற்சிகள் மூலம் சிறப்புற உருவாக்க இயலும். நமது உடல், மன, ஆன்ம அளவில் சிறைப்பட்டிருக்கும் ஆற்றலோ அல்லது குறுக்கும் தடுப்புகளோ விடுவிக்கப்பட்டால் இலகுத்தன்மையை உணரலாம். அளவிலா ஆற்றல், வெளியுடன் கூடிய பேருணர்வில் நிலைத்திருக்க முடியும்!

    பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றலின் வடிவங்கள்தாம், நாம் உட்பட! ஆற்றல் பாய்வு இயல்பாய், சுதந்திரமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வரையில் உடல், மன ரீதியில் எவ்வித பாதிப்பும் நேர்வதில்லை.

    ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் (Access Consciousness) எனப்படும் வாழ்வு நல மேம்பாட்டிற்கான உத்திகளையும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் அமைப்பின் மிகச் சிறந்த உடல் செயல்முறைப் பயிற்சிகளில் ஒன்றுதான் MTVSS என்பது.

    உடலின் செயற்பாடுகளில் எவ்விதமான குறைபாடுகள் இருப்பினும் அவற்றை சரிசெய்யும் திறன் கொண்டிருக்கிறது MTVSS. நோய் எதிர்ப்பு சக்தியை அபாரமான அளவில் அதிகரிக்கும் தூண்டுசக்தியாக, ஒவ்வொரு செல்லினுள்ளும் பொதிந்திருக்கும் ஆற்றலுடன் இயைந்து இது செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.

    MTVSS என்பதன் விரிவாக்கம் Molecular Terminal Valence Sloughing System ஆகும். அழுத்தமில்லாமல் மென்தொடுதலின் மூலமே இது செயற்படுத்தப்படுகிறது. மருந்துகளின்றி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையை இது பெற்றிருக்கிறது.

    எலும்புப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், வலி தரும் பலவித நோய்கள் மற்றும் உடற்காயங்கள் உட்பட பற்பலவற்றை குணப்படுத்த முடிகிறது.

    உடற்பயிற்சிக் கூடங்களில் 90 நிமிடங்கள் செயலாற்றுவதன் பலனை MTVSS மூலம் 20 நிமிடங்களிலேயே அடைய முடிவது குறிப்பிடத்தக்கது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடல் இலகுவாக செயல்பட உதவுகிறது. உறுப்புகளைப் புதுப்பிப்பதால் வளர்சிதை மாற்றம், மூச்சு, ஜீரணம், நரம்பு & எலும்பு மண்டலம், நிணநீர் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த மாற்றங்களைக் கொணர முடிகிறது.

    சுருக்கமாகச் சொன்னால், நம் உடல் எவ்வாறு இயங்கினால் நம் வாழ்வு வளம் பெறுமோ அவ்விதத்தில் உடலின் செயல்திட்ட வடிவையே (Blueprint) மாற்றியமைக்கலாம் என ஆக்ஸஸ் நிறுவனர் கேரி டக்லாஸ் குறிப்பிடுகிறார். சராசரியாக, ஒரு MTVSS செயற்பாடு 60 – 90 நிமிடம் வரை நீடிக்கலாம். அரை நாளிலேயே இதனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.

    இந்த உடல் செயல்முறைப் பயிற்சியை எவரும் எளிதாகக் கற்க முடியும் என்பதோடு யாவருக்கும் இச்சிகிச்சையை அளிக்கலாம். எவ்வித பக்கவிளைவுகளும் கிடையாது. உடல் நலம் பெறுகிறது என்ற விளைவினைத் தவிர வேறொன்றும் நேர வாய்ப்பில்லை. எவ்வளவுக்கெவ்வளவு நம் உடலில் இச்செயல்முறையை கையளிக்கிறோமோ அந்த அளவுக்கு உடல் புத்தாக்கம் பெறுகிறது.

    நம் பேருணர்வை விரிவடையச் செய்து இப்பிரபஞ்சத்துடன் எப்போதும் ஒன்றுபட்டிருப்பதன் மூலம் நமக்குப் பிடித்தவற்றை நிகழ்த்திக் கொள்ளும் வாய்ப்பாக அது அமைந்தால் எப்படி இருக்கும்? நமது உடல் அதற்கு எவ்வகையில் உதவ முடியும்?

    முடிவிலா உயிரியான நாம் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதே உடலின் மூலம் நமது இருப்பின் மகத்துவத்தை உணர்வதற்கே! முன்னோர்கள் இவ்வுடலைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள் அனைத்தையும் நமதாக்கி நமது செல்களில் பொதித்திருக்கிறோம். இவை போன்ற அனைத்து வரம்புகளையும் உடலின் மூலக்கூறு அளவில் சென்று அவற்றை நீக்குகிறது MTVSS செயல்முறை.

    இருபது முதல் முப்பது முறை வரை இதை செயற்படுத்தியிருந்தால் முற்றிலும் புதிய மாற்றத்தினை உடலில் உணரலாம். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுள் நிகழ்ந்த மாற்றத்தினை வெளிப்படையாக உணர்வார்கள். MTVSS மற்றும் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் பற்றி அவர்கள் அறிந்திராவிடில், இந்த மாற்றத்தினைக் கண்டு அதீத ஆச்சரியமும் அடைவார்கள். அதற்கான சாத்தியங்களை இது உள்ளடக்கியுள்ளது.

    Untitledவாழ்வு நல ஆற்றாளர் நிலா, ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸின் பல்வேறு வகுப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குகிறார். அதில் இந்த MTVSS செயல்முறைப் பயிற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டனில் வசித்து வரும் அவர் பல நாடுகளுக்கும் சென்று இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    உங்கள் உடல்நலனைப் பேணுவதற்கு இவ்வகுப்பினைத் தேர்ந்தெடுக்கத் தயக்கமிருந்தால் பின்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டு உங்கள் அதிர்வில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.  அதனடிப்படையில் முடிவெடுக்கத் தயங்காதீர்கள்.

    • இவ்வகுப்பில் கலந்து கொள்வதால் எனது உடல் நலம் இன்னும் ஆறு மாதங்களில் எவ்வாறு மாற்றமடையும்? ஐந்து வருடத்தில் என் உடல் நலம் எப்படி இருக்கும்?
    • இவ்வகுப்பின் மூலம் வியத்தகு ஆற்றலை என் உடல் பெறும் பட்சத்தில் நான் என்னவாக இருப்பேன்? என்னவெல்லாம் உருவாக்குவேன்? இவ்வுலகத்திற்கும், குடும்பத்திற்கும் எவ்விதமெல்லாம் பங்களிப்பை அளிப்பேன்?
    Share
  • அப்படித்தான்…


     செண்பக ஜெகதீசன்rainbowx

    மழைக்காகக் காத்திருந்தேன்,

    மழை வரவில்லை..

     

    அழகாய் வந்தது,

    ஆகாயத்தில் வானவில்..

     

    அப்படித்தானிருக்கும்

    ஆண்டவன் வரவும்…!

     

    படத்துக்கு நன்றி

    http://rainbowwallonline.wordpress.com/

    Share
  • “பவித்ரம்”

    பெருவை பார்த்தசாரதி

     DSC04625DSC04600DSC04602

    “பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.

    பத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம்  ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.

    “ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.  இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார்.  அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    அடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

    அறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும்  திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும்,  சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

    இவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும்  சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)

     

     

    Share
  • ஓடிப் போன புத்தர்

    தி.சுபாஷிணி

    பள்ளி கொண்டிருந்த அந்த புத்தர் சிலையைக் சென்ற வருடம் மைசூர் தசராவிற்கு சென்றபோது வாங்கி வந்தது. அதில் செரியால் ஓவியத்தின் அழகு படிந்து இருந்தது. முகத்தின் அமைதியில் அன்பான ஆக்கிரமிப்பு தெரிந்தது. குவிந்த உதடு உமிழ்ந்த சிரிப்பில் புத்தர் ஓவியத்தை நினைவூட்டியது. வந்தவுடன் அதை மிகவும் பத்திரமாக எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்தேன். அப்படி வைத்த சில நிமிடங்களில் அந்த அறையே சாந்தத்தின் அழகில் மிளிரத் தொடங்கி விட்டது. பக்கத்துவிட்டு சாரதாம்மா வந்திருந்தாங்க. அவங்களையும் அந்த புத்தர் சிலையைக் கவர்ந்தது. வந்ததும் என் மைசூர் பயணத்தைப் பற்றி விசாரித்தலும், உதடுகள்தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தன. அவரது கண்கள் புத்தரின் அழகில் வயித்துப் போயிருந்தன.

    சாரதாம்மா எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் இம்முறை இந்தியா வந்தபோது, அதிர்ஷ்ட வசமாக அவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் போயிருந்தேன். நான் காலையில் எழுந்து , பால் வாங்கி வரும்போது அவர்கள் எனக்குப் பழக்கமானார்கள். தினந்தோறும் காலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்று காபி குடிப்பது வழக்கமாகிவிட்டது. நல்ல டிக்காஷன் காபி. சரியான விகிதத்தில் பாலும் டிக்காஷனும் கலந்து, அளவான சர்க்கரையும் போட்டு, கசப்பும் தெரிந்த களிப்பான கமகமக்கும் மணமாக காபியைத் தரும் போது, அவர்களது தோழமையின் பரிவின் வாசனை மேலோங்கித் தெரியும். தன் கணவரோடு, மகன், மருமகள், 2 வயது பேத்தி என அளவிற்கு சிறிய குடும்பம் அவர்களுடையது. அவரைப்போலவே அவரது மருமகளும் என்னிடம் மிகவும் பிரியமாய் இருப்பாள். காபியில்தான் தொடங்கியது எனக்கும் சாரதாம்மாவிற்கும் உள்ள நட்பு. பின் காலை உணவு என்று நீண்டது. விதவிதமான சிற்றுண்டி தயாரிப்பதில் வல்லவர் அவர். மாதம் ஒரு தொகை வாங்கிக் கொண்டால்தான் நான் இந்த உதவியைப் பெற்றுக் கொள்வேன் என்று நான் சொன்ன அழுத்தத்தில், அவர்களது குடும்பம் ஒத்துக் கொண்டது. இப்படித்தான் பல நாட்களில் நிச்சயமாக எனக்கு அங்குதான் விருந்து நான் வெளியில் சென்றாலும், வெளி ஊருக்குச் சென்றாலும் இந்தியால் எனக்காக கவலைப்படும் ஜீவன் சாரதாம்மா தான். பல சமயங்களில் வெய்யிலில் அலைந்து திரிந்து ‘அப்பாடா’ என அவரது வீட்டில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் என் வீடு செல்வேன். அப்பொழுதெல்லாம் அவர்களது பரிவு என்னை உருக்கி எடுத்துவிடும். சாரத்மாவின் பேத்தி படு சுட்டி. அவளுக்கு பாட்டுப் பாடுவேன் இரண்டு வயது ஆகிறது. . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்குழந்தையை என் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவேன். அதற்காக விளையாட்டு சாமான்கள் கொடுத்து, அவளுடன் விளையாடுவேன். அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுப்பேன். அப்போது அக்குழந்தை பக்கத்திலிருந்து அமைதியாய் அனைத்தையும் கவனிதர்துக் கொண்டிருப்பாள். சாரதம்மாவிற்கு அது பேருதவியாக இருக்கிறது என்பார். சாரதம்மா தன் மருமகளை சொந்த மகள் போல் பாதுகாப்பாள். அதில் அவ்வளவு அன்பும் அக்கரையும் தெரியும். மருமகளும் பண்பும் பணிவும் உடையவளாய்த் திகழ்ந்தாள். . ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். வேலை நேரம் போக மாமியருக்கு உதவும் இயல்புடையது.

    ஆனால் சாரதம்மாவோ, அவள் பள்ளியிலிருந்து எடுத்து வரும் வேலைக்குத், தன் பேத்தியால் பங்கம் வராது பாதுகாப்பு அளிப்பார். எனக்கு மட்டுமல்லாது என்னைத் தேடி வருபவர்களையும் உபசரிப்பதில் மகிழ்ச்சிக் கொள்வார். அவர்களை வரவேற்றல், என் தபால்களை பார்த்து பதில் அளித்தல், இவை , அனைத்திலும், உபசரிப்பு, உதவும் குணம் எல்லாமே இயல்பாக இருக்கும். எனக்கு நம் கோயில் அமைப்பு, அவற்றோடு கூடிய தெய்வ வழிப்பாடுகள், விழாக்கள், தெருக்கூத்து எல்லாம் மிகவும் பிடிக்கும். இவ்வாறெல்லாம் எங்கு நடக்கும் என்று தேடி பிடித்துப் பார்க்கப் போய்விடுவேன். சாரதாம்மாவிற்கு இது தெரியும் என்பதால், ஒரு முறை அவர்கள் சொந்த ஊரில் நடந்த பூக்குழித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஊரில் அனைவரும் “சாரதம்மா சாரதாம்மா’ என அத்தனைப் பிரியமாகய் இருந்தார்கள். சாரதம்மாவும் தன் பிரியம் அனைத்தையும் அங்கேயே கொட்டிக் கவிழ்த்து, அவர்களை அபிஷேகம் பண்ணினார்.

    நான் அமெரிக்கா திரும்பும் நாட்களைப் பற்றி எண்ண, மனமில்லைதான். எவ்வளவுதான் சுதந்திர தாகம் எடுத்து அலைந்து திரிந்தாலும், இயல்பாய் இருக்கும் பெண்மைத் தன் குடும்ப அக்கரையில் சுருண்டு படுத்து விடும். அங்கிருந்து மகளும் மகனும் அழைக்கத் தொடங்கி விட்டனர். சாரதம்மாவிற்கு, அவர்கள் குடும்பத்திற்கு அவ்வப்போது ஏதாவது பரிசும் உண்டு. அவர்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை. அதற்காக சாப்பாட்டிற்குத் திண்டாடும் ரகமும் இல்லை. காஞ்சிபுரம் சென்றபோது அவருக்குப் பட்டுப்புடவை வாங்கி வந்து கொடுத்தேன். அவர்களது பேத்திக்குப் பட்டுப் பாவாடை நிச்சயம் கொடுத்திருப்பேன் என்பதை நீங்கள் நான் சொல்லாமலே அறிந்து கொள்வீர்கள் தானே! வீட்டில் உள்ள சில பொருட்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். தஞ்சாவூரில் ஒரு திருமணம் இருந்தால், மழைக்காலம் என்பதால் வீட்டு சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றேன். மழைவந்தால் வீட்டை திறந்து பாருங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் மறுக்கும் பண்பு உடையவரல்லர். நானும் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருச்சி, மதுரை என ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரத் தாமதமாகி விட்டது. வந்ததும் அவர்களிடமிருந்து காவியைப் பெற்றுக் கொண்டு விட்டிற்குச் சென்றேன்.

    வீடு படுசுத்தமாக காணப்பட்டது. சாரதம்மாதான் அடிக்கடி வந்து கவனித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் ஊரிலிருந்து எடுத்து வந்த ஞாபகம் அப்படியே இருந்தது, அலுப்பில் ஓய்வெடுத்துமுக் கொண்டேன். பின் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கினேன. என் படுக்கையறையில் என்னுடைய அம்மா கொடுத்த இரண்டு பட்டுப் புடவைகள் அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருந்தேன். அதைக் காணவில்லை சரி, பீரோவில் இருக்கும் என்று விட்டுவிட்டேன். மூன்று நாட்களுக்குப்பின், சமைலயறையில் இருந்த சிலப் பாத்திரங்கள் கண்ணில் படவில்லை. மனதில் ஏதோ நெருடியது. பீரோவைத் திறந்து அந்தப்புடவைகளைத் தேடினேன். கண்ணுக்குப் புலப்படவில்லை. மனம் பதட்டப்பட்டு விட்டது. என்னையறியாது ஓர் அச்சம் வெளிப்பட்டது. உடலும் உள்ளமும் வியர்த்துக் கொட்டியது. புடவைகள் காணாமல் போயின என்பது உரைத்தது. எனக்கு எதுவும் சொல்லவோ, நினைக்கவோ தோன்றவில்லை. வீட்டுச்சாவி சாரதம்மாவிடம்தான் இருந்தது. அவர்களை நான் தான் வீட்டை அவ்வப்போது திறந்து கவனித்துக் கொள்ளச் சொன்னேன். ஆனால் இப்படியொரு நிகழ்வை ? நினைக்கவே கூசுகிறது. இது மனதில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தது சாரதம்மாவிடம் கேட்கும் துணிவு என் உள்ளத்திற்கும் இல்லை. உரைக்க உதடுகளுக்கும் தைரியம் இல்லை.

    சஞ்சய் சுப்பரமணியம் கச்சேரி என்றால் எனக்கு பைத்தியம். ஒருநா£ள் அவரது கச்சேரி காலையில் ஆஸ்திக் சமாஜத்தில் நடந்தது. ஒரு இசை இலக்கியக் கூட்டம். அதில் சஞ்சய் கலந்து கொண்டு “ஓர் ஆய்வு” நிகழச்சியை நடத்தினார். அவரது வாய்ப்பாட்டின் மயக்கதில் அமிழ்ந்து, அவரது இசை நுணிக்க அறிவையும், துய்த்துவிட்டு வீடு வந்து சேர முற்பகல் 11.30 ஆகிவிட்டது. வழக்கம்போல் சாரதம்மாவின் வீட்டிற்குப் போய் அமர்ந்தேன். இன்னும் சஞ்சய் சுப்ரமணியத்திடமிருந்து நான் விலகவில்லை. சாரதம்மா குழந்தையை குளிப்பாட்ட பாத்ருமிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஆதனால் அவரின் ஹாலில் என்ன அமரச் சொல்லிவிட்டுக் குழந்தையைப் குளிப்பாட்டி விட்டு வருகிறேன் என்றார். எனக்கும் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது.

    அவர்கள் வீடு, எப்படி இருக்குமெனில், ஒரு குறுகிய வழி இருக்கும். முதலில் இரு அறைகள் உண்டு. ஒரு அறைதான் வசிக்கும் அறை. அதனுள் நுழைந்தால் அவர்கள் வீட்டுச் சமையலறை அடுத்து ஓர் அறை வாசல். நான் குளியலறைக்கு முதல் அறையில் இட்டு செல்லும் இடத்தில் நின்று விடுவேன். அதில் ஓரு பெரிய சோபா போட்டிருப்பார்கள். அங்கு உட்கார்ந்திருந்தால் அவர்களது சமயறையில் முழுப் பார்வையும் கிடைக்கும். எப்போது சோபாவின் நடுப்பகுதியில் உட்கார்வதால் சமையலறையின் இடதுபக்கம் பார்க்க முடியாது. இன்று வந்ததும் வராததுமாய் சோபா தொடங்கும் இடத்தில் அமர்ந்தேன். களைப்பும் இசை மயக்கம் இருந்ததால் முதலில் கண்மூடி, களைப்பின் …. மயக்கத்தின் கிறக்கத்தையும் அனுபவித்தேன். இப்படி ஒரு 5 நிமிடங்கள் சென்று இருக்கும். என் கண்கள் விழித்தன. முதலில் கண்டது அந்த வீட்டுச் சமையலறையின் இடது பக்கம். இதுவரை நான் அந்தப் பகுதியைக் கண்டதில்லை. அங்கு குளிச்சாதனப் பெட்டி ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சிறிய பெஞ்ச் ஒன்று இருந்து. அதில் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின் மிக்ஸி ஒன்று இருந்தது. அதனையொட்டி கிரைண்டரும் இருந்தது. பின் என் பார்வை மீண்டும் குளிர்சாதனப் பெட்டிகள் மேல் சென்றது. அவ்வளவுதான்! என்ன சொல்லேன்! என் இருதயம் துடிப்பை மறந்தது. மூச்சுத்திணறல் உண்டு பண்ணியது! அந்த குளிர்சாதனப் பெட்டியின் மேல் நான் மைசூரிலிருந்து வாங்கி வந்த அழகான அந்த செரியால் ஓவியம் வடிவத்திலமைந்த அந்த புத்தரின் பள்ளிக் கொண்ட சிலை புத்தர் எப்படி என் வீட்டிலிருந்து இங்கு வந்ததது! மனம் இதனால் செயல் இழந்தது.

    சாரதம்மா! நீங்களா இப்படி என்னிடம் கேட்டிருக்கலாமே! இரத்தம் அழுத்தம் அதிகரித்தது…………. என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடுவோமா! இதை நான் பார்க்கவில்லை என்ற அந்த மனதை சமாதானமாய் கொல்லச் செய்வோமா! என்ன செய்யலாம்! இதற்காக சிவசிவா, இது நாளுக்குப் பின்னும் தொடரும் நட்பை முறியடிப்பதா? என் நடபு முக்கியம். அப்படியெனில் அந்தப்புடவைகள், பாத்திரங்கள்… சாரதம்மா! ஏனிப்படி! கலக்கமாகி நிற்கிறீர்கள். சிலை உங்களைக் கவாந்தது எனக்கு எப்படி தெரிந்தது! இந்த புத்தரின் பால் உள்ள ஆசை திரும்பி பார்க்கச் செய்ததா? அடடா! என் கண்முன் ஏன் வைத்தீர்கள்! வீட்டில் பீரோவில் வைத்திருக்கலாமே! என் வீட்டின் வெறுமையை உணராதே போயிருப்பேனே! இந்த நிமிஷம் வரை அது வீட்டில் இல்லை என்கிற உணர்வே இல்லாமல் இருந்தேனே! அப்படியே என்னை விட்டிருக்கலாமே சாரதாம்மா! சாரதாம்மா! உங்கள் அன்பையும் நட்பையும் ஒருக்காலும் இழக்கமாட்டேன். அது என்னுடனே இருக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் செய்த இந்த காரியம் சரியில்லையே சாரதம்மா! அறிவு அச்சுறுத்தியது சாரதம்மா குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு சில நிமிடங்கள் வந்த விடுவார்கள். தயவு செய்து ஏதாவது செய்து அகற்று உடனே என்றது அறிவு.

    சட்டென்று எழுந்தேன்! வேகமாக உள்ளே நுழைந்தேன். பட்டென்று பற்றினேன் புத்தரை. என் பையில் போட்டுக்கொண்டு நான் அமர்ந்த இடத்திற்கு வந்து மீண்டும் அமர்ந்து விட்டேன். இதயம் படபடத்தது. ஏதோ பெரிய காரியம் முடித்தது போல் அமைதியாய் இருக்க முயன்றேன். நிமிடங்கள் கரைய கரைய நானும் இயல்பாகி விட்டேன். என்னை சரியாக்கி இயல்பாக்கி கொள்வதற்குகுள் சாரதம்மா வந்து விட்டார்கள். கமகமக்கும் குழந்தை சோப்பின் மனத்தோடு குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு காபி கொடுத்தார்கள். நானும் குழந்தையைக் கொஞ்சியவாறே காபியை கொடுத்துவிட்டு சாரதம்மாவிடம் விடைப்பெற்று கொண்டு என் வீட்டிற்கு கிளம்பினேன்.
    நான் மதிக்கும் நட்பை, புத்தர் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, புத்தர் இருந்த பையை மறக்காது என்னுடன் எடுத்துக் கொண்டு அடுத்த வீடாகிய என் வீட்டினுள் நுழைந்தேன்.

     

    படம் உதவி:  https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/521972_578076128869715_666810801_n.jpg

     

    Share
  • இன்னமும் நிறைவேறாத கனவு …

    தேமொழி

     

    Trayvon and Ilavarasan

     

    உலகின் இருவேறு மூலைகள், புவிக்கோளத்தின் வெவ்வேறு பக்கங்கள், இரு பகுதியிலும் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி சரியாக அரை நாள். ஒருநாட்டினர் உழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கலாச்சாரத்திலும் பெரிய வேறுபாடு. ஆனால் இரு நாடுகளும் ஒன்றாக எதிர் கொண்டிருப்பதும், இரண்டாம் மில்லினியத்திலும், இந்த நூற்றாண்டிலும் இப்படியா என்று அதிர்ந்து போயிருப்பதற்கும் காரணம் … இரு இளைஞர்களின் அகால மரணம்.

    இயற்கையின் சீற்றத்தினாலோ, போக்குவரத்து விபத்தினாலோ, அல்லது நோயின் காரணமாகவோ அவர்கள் வாழ்வு ஆரம்பமாவதற்குள் முடிந்திருந்தால்கூட ஒருவகையில் மனது சமாதானம் அடையும். ஆனால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்ததன் அடிப்படைக் காரணம், சமுதாயத்தில் இன்றும் நிலைத்து வாழும் வேற்றுமை என்னும் மனநோயால்  என்பது வேதனைக்குரிய செய்தி. மக்களிடம் பரவி இருக்கும் மூடத்தனமான வேறுபாடுகள் பற்றியக் கருத்துக்களின் காரணமாக; கருப்பு-வெளுப்பு வேறுபாடு, தாழ்வு-உயர்வு வேறுபாடு என்று இன்றும் நிலவும் கொடுமையின் தீவிரத்திற்கு பலியாகி உள்ளார்கள் இந்த இளைஞர்கள். இந்த இளைஞர்களில் ஒருவர் தமிழக மக்கள் தாழ்ந்த குலமாகக் கருதும் ஒரு குலத்தினைச் சார்ந்த இளவரசன். மற்றொரு இளைஞர் அமெரிக்காவின் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஃப்ளோரிடா மாநிலத்தில் வாழ்ந்த பள்ளிச் சிறுவன் ட்ரேவான் மார்ட்டின்(Trayvon Martin).

     

     

    சாதிப் பிரிவுகள் சொல்லி
    அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
    நீதிப் பிரிவுகள் செய்வார்
    அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
    சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
    அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
    ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
    தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

    என்று பாரதி அறிவுறுத்திச் சென்று ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் அறிவை அது சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு, தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா இவர்களின் காதல் கலப்புத் திருமணம் பட்டபாடு. செல்லங்கொட்டாய் கிராமத்து திவ்யா உயர் குலமாகக் கருதப்படும் ஒரு குலத்தில் பிறந்தவர். இவர் காதலித்ததோ நத்தம் காலனியைச்சேர்ந்த இளவரசனை. இவரோ தாழ்ந்த குலமாகக் கருதப்படும் குலத்தில் உதித்தவர். இந்த வேறுபாடுகள் காதலித்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. எங்கும் இயல்பாக இருக்கும், பெற்றோரின் அறிவுரைக்கு உடன்படாத பிள்ளைகளின் செயல்களால் வருத்தமடையும் குடும்பங்களின் பிரச்சனையும், இரு குடும்பங்களுக்குள் இருந்திருக்க வேண்டிய சாதாரண மன வருத்தங்களும், உறவுப் பிரச்னைகளும் தேவையற்றவர்களின் ஊடுருவலால் பெரிதாகி இளவரசன் வசித்த நத்தம் காலனி எரிக்கப்பட்டிருக்கிறது. காதலர்களையும் ஊர் ஊராக ஓடவைத்து இறுதியில் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

    இதற்கிடையில் பள்ளி நாட்களில் நண்பர்களாக இருந்த காதலர்களின் தந்தைகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இளவரசனுடன் சென்றுவிட்ட திவ்யாவின் செய்கையால் அதிர்ச்சியுற்ற அவளது தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பல உச்சக்கட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தாயுடன் சேர்ந்த திவ்யா, நீதிமன்றத்தில் இளவரசனை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டாதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்கொலையா, கொலையா என்று கணிக்க முடியாத விதத்தில் இளவரசன் இறந்திருக்கிறார்.

    இளவரசனின் மரணம் தற்கொலையா… கொலையாயோ… என்ற கேள்விகளையும் கடந்து, இளவரசன் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதின் அடிப்படையை ஆராய்ந்தால், திவ்யா – இளவரசனைப் பிரித்ததில் முக்கியப் பங்கு யாருக்கு என்னும் கேள்வியை எழுப்பினால், இதற்குக் காரணம் சாதிக்கொடுமை என்ற மனித நேயமற்ற செயல் என்பது தெரிய வருகிறது. இந்தக் காதல் கலப்பு மணத்தில் அரசியல் மூக்கை நுழைத்து, திவ்யாவின் வாழ்க்கையைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. பத்தொன்பது வயது இளைஞர் இளவரசனின் தேவையற்ற உயிரிழப்பிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் சாதி வேற்றுமை பாராட்டி ஆரம்பத்தில் இருந்தே இளவரசன்-திவ்யா காதலைக் குலைத்தவர்கள்.

     

    அடுத்து அமெரிக்காவின் கதை; சென்ற ஆண்டு (2012) பெப்ரவரி மாதம், இரவு நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள தெருமுனையில் இருந்த கடையில் மிட்டாயும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் ட்ரேவான். வசதியான மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்திருக்கிறது அச்சிறுவன் தங்கியிருந்த வீடு. இது போன்ற பகுதிகளில் குற்றங்கள், கொள்ளைகளைத் தவிர்க்க அப்பகுதி மக்களே கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான ஜார்ஜ் சிம்மர்மேன் (George Zimmerman), வெள்ளைக்கார தந்தைக்கும் பெரு நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கலப்பின மனிதர். சிம்மர்மேன் ஊர்தியில் வரும் பொழுது, அவர் கண்களில் தானுண்டு தனது வேலையுண்டு என்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ட்ரேவான் பட்டுவிடுகிறான்.

    கறுப்பர்கள் என்றாலே கயவர்கள் என்ற மனப்பான்மை இன்றும் பல அமெரிக்க மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் எண்ணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கறுப்பர்களைத் தேவையில்லாமல் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்களைத் தவிர்ப்பதும் பெரும்பான்மையோருக்கு வழக்கம். வசதியான கறுப்பர்கள் தங்களது விலை உயர்ந்த ஊர்தியில் சென்றால் காவலர்கள் அவர்களை நிறுத்தி, தேவையற்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது வண்டியின் உரிமத்தை சரிபார்த்து அது திருட்டு வண்டியா எனச் சோதனை செய்வதும், அவர்களை அடிக்கடி நிறுத்தி போதைப் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று வண்டியைச் சோதனை செய்வதும் மிகவும் கண்டனதிற்குள்ளானாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு இனத்தின் அடையாளம் கொண்டு, மனதில் ஒருவரைப்பற்றி ஆதாரம் இன்றி முடிவெடுக்கும் மனப்பான்மை ட்ரேவான் வீடு திரும்பிக் கொண்டிருந்த அன்றும் தனது வேலையைக் காட்டத் துவங்கியது.

    ட்ரேவானை ஒரு களவாணி என்று தானே முடிவு கட்டிய சிம்மர்மேன், காவல் துறைக்கு தொலை பேசியின் வழியாக ட்ரேவானைப் பற்றிய விவரம் கொடுத்திருக்கிறார். அவர் இது போன்று அடிக்கடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்பவரும் கூட. காவலர்கள் சிறுவனைத் தொடராதீர்கள் என்று பதிலுக்கு எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாது சிம்மர்மேன் சிறுவனைத் தொடர்ந்து சென்று கேள்விகள் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதன்முடிவாக ட்ரேவான் சிம்மர்மேனால் சுடப்பட்டு உயிரிழந்தான். சிம்மர்மேன் காவலரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார். பலமணி நேர விசாரணைக்குப் பின், இருவருக்கும் ஏற்பட்ட தாக்குதலில், ட்ரேவான் சிம்மர்மேனின் தலையைத் தரையில் மோதி மோதித் தாக்கியதால், வேறு வழியின்றி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக சிம்மர்மேன் ட்ரேவானை சுட்டுக் கொல்ல நேர்ந்ததாக வாக்குமூலம் பதிவு செய்தார்கள் காவலர்கள். சிம்மர்மேனின் தலைக்காயங்களைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து, அவர் மேல் குற்றம் இல்லை, இது திட்டமிடப்படாத தற்காப்பிற்காக எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு என அறிக்கை தயார் செய்து கொண்டு அவரை விடுதலை செய்து விட்டனர்.

    இவ்வாறு காவலர்கள் ஒரு சிறுவனின் உயிர்ழப்பிற்குக் காரணமான ஒருவரை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தாமல் விடுதலை செய்தது கறுப்பின மக்களுக்கும், மனித நேயமுள்ளவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கோபமூட்ட அவர்கள் ட்ரேவானின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திட்டமிடப்படாதக் கொலை, செகண்ட் டிகிரி மர்டர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிம்மர்மேன் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இந்த வழக்கு சென்ற மாதம் (ஜூன் 2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மாதம் (ஜூலை 2013) தீர்ப்பும் வழங்கப் பட்டது. சிம்மர்மேன் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.

    தீர்ப்பின் முடிவு கறுப்பின மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. பத்திரிக்கைகளும், ஆரய்ச்சி நிறுவனங்களும் மக்களின் கருத்துக் கணிப்பைச் சேகரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பான்மையான கறுப்பின மக்களுக்கும், மகளிருக்கும், இளைய தலைமுறையைச் சார்ந்த வெள்ளையர்களுக்கும் தீர்ப்பின் முடிவு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

     

     

    வழக்கின் முடிவைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்புகளின் உதவியின்றி, முன் தயாரிக்கப்பட்ட உரையினைப் படிக்கும் வழக்கம் போல் இல்லாமல், அதிபர் ஒபாமா உணர்ச்சிபூர்வமாக, மனம் திறந்து உரையாற்றினார். கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளைப் பற்றியக் கவலை அவர் உரையில் தொனித்தது. ட்ரேவான் கொலையுண்டபொழுது முன்னர் கருத்து தெரிவித்திருந்த அதிபர் ஒபாமா எனக்கொரு மகன் இருந்திருந்தால் இதே வயதில் ட்ரேவான் போலத்தான் இருந்திருப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது தன்னையே ட்ரேவான் இடத்தில் வைத்துப் பார்த்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததை ட்ரேவானுடன் ஒப்பிடுகிறேன். ட்ரேவான் போலத்தான் நானும் இனவேறுபாடுகளால் பல வேதனை தரும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டேன். மனிதர்களின் புறத்தோற்றத்தை, தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரை எடைபோடுவதைத் தவிர்த்து, அவர்களது குணத்தைக் கொண்டு மதிக்கும் நாள் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

    இக்கருத்தை முதலில் தெரிவிப்பவர் அதிபர் ஒபாமா மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரையும் விட்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். “எனது கனவு” (“I Have a Dream” – a public speech delivered by American activist Martin Luther King, Jr. on August 28, 1963) என்ற உரையில், “எனக்கொரு கனவிருக்கிறது, எனது நான்கு குழந்தைகளும் வளரும் இந்த நாட்டில் ஒரு நாள் வரும், அந்நாளில் மக்கள் அவர்களது தோலின் நிறத்தினைக் கொண்டு மதிப்பிடப்படாமல் அவர்களது குணத்தின் அடிப்படையில் மதிக்கப் படுவார்கள்”, என்றார்.

    ட்ரேவான்  வெள்ளை இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக இருந்திருந்தால், முதற்கண் அவன் சந்தேகக் கண்ணோடு பின்தொடரவேப் பட்டிருக்க மாட்டான், தனது நிலையை உணர்த்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியத் தேவையும் அவனுக்கு இருந்திருக்காது, அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வன்முறையின் இறுதியாக உயிரை இழந்திருக்கவும் நேர்ந்திருக்காது என்பதுதான் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை உண்மை.

    எந்த நாடாக இருந்தாலும் பிரிவினை வேறுபாடுகள் தலையெடுத்தாடி உயிர்ப்பலி கேட்கிறது. மனிதர்கள் தன்னை ஒத்த மனிதர்களைத் தாழ்வாகக் கருதாது தன்னைப் போன்ற மனிதராகவே மதித்து நடத்தும் காலம் இந்த உலகில் என்றுதான் வருமோ என்ற ஏக்கமும் வருகிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு அரை நூற்றாண்டு கழிந்தும் நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது.

     

    References:

    Shooting of Trayvon Martin – http://en.wikipedia.org/wiki/Shooting_of_Trayvon_Martin

    Polls Show Wide Racial Gap On Trayvon Martin Case, by ALANA LEVINSON, NPR News. July 22, 2013 – http://www.npr.org/blogs/itsallpolitics/2013/07/22/204595068/polls-show-wide-racial-gap-on-trayvon-martin-case

    Pew Research Center poll: Big Racial Divide over Zimmerman Verdict, Whites Say Too Much Focus on Race, Blacks Disagree. July 22, 2013 – http://www.people-press.org/2013/07/22/big-racial-divide-over-zimmerman-verdict/

    A Washington Post/ABC News poll: Vast Racial Gap on Trayvon Martin Case Marks a Challenging Conversation. July 22, 2013 – http://www.langerresearch.com/uploads/1150a1TheMartinZimmermanCase.pdf

    Ilavarasan’s family seeks probe by independent agency, The Hindu. Jul 20, 2013 – http://www.thehindu.com/news/national/tamil-nadu/ilavarasans-family-seeks-probe-by-independent-agency/article4935296.ece

    Dalit man’s death in Tamil Nadu: Ilavarasan’s parents seek CBI probe. NDTV. Jul 20, 2013 – http://www.ndtv.com/article/india/dalit-man-s-death-in-tamil-nadu-ilavarasan-s-parents-seek-cbi-probe-394744

    Ilavarasan: ‘Killed’ by politics? NDTV. July 20, 2013 23 – http://www.ndtv.com/article/india/ilavarasan-killed-by-politics-394887

     

    Videos:
    Kelada Manida – http://www.youtube.com/watch?v=ScA2TJ-IUkU
    I Have a Dream Speech – http://www.youtube.com/watch?v=smEqnnklfYs
    President Obama Speaks on Trayvon Martin – http://www.youtube.com/watch?v=MHBdZWbncXI

    Pictures Courtesy:
    http://www.thehindu.com/multimedia/dynamic/01511/08_ilavarasan_1511753f.jpg
    http://en.wikipedia.org/wiki/File:Trayvon_Martin_on_the_backseat_of_a_car.png

     

     

     

     

    Share
  • இராம கதை (1) – மின்னூல்

    எஸ். கோபாலன்

    gopal0001-206x300

    சரஸ்வதி துதி

    ஆக்கும் ஆண்டவன் அயனின் தேவி கலைமகளருள் நோக்கும் ஆசியும் உண்டாகில் அறியாமை எனும்
    இருள் அகலும் அறிவொளி வீசும்- அன்னவள்
    அருள் வேண்டி வணங்கி இராமகதை எழுதலுற்றேன்

    பால காண்டம்

    ஆதவ குல அரசன் தசரதன் செய்த
    மாதவப் பயனாய் அழகிய அயோத்தி நாட்டில்
    அன்னை கோசலைக்கு அருமை மைந்தனாய் அவதரித்து
    தன்னையே தரணிக்கு இராமனாய் அளித்தான் நாரணன்
    மூன்று இளவல்களாம் இலக்குவன் பரதன், சத்துருக்கனனை
    ஈன்று அளித்தனர் அன்னையர் கைகேயியும் சுமத்திரையும்
    உரிய காலத்தில் வசிட்டரை தங்கள் குருவாய்க் கொண்டு
    தெரிய வேண்டிய கலைகள் அனைத்தும் கற்றனரே அரசகுமாரர்
    வேள்வி காக்க வருக என மாமுனி விசுவாமித்திரன் அழைத்திட
    கேள்வி கேட்காது அவருடன் சென்றனர் இராம இலக்குவர்
    வில்லை நாணேற்றி அம்பெய்து வல்லரக்கி தாடகையை வதம் செய்து
    தொல்லை தர வந்த மற்ற அரக்கரையும் அழித்தொழித்தனர் அரசகுமாரர்
    முறையுடன் மறை விதிப்படி வேள்வி செய்து முடித்திட்ட மன
    நிறைவுடன் மாமுனி இராம இலக்குவரோடு மிதிலைக்குப் செல்லலானார்
    செல்லும் வழியில் கல்லாகிக் கிடந்த அகலிகையின் கதையை மாமுனிவன்
    சொல்லக் கேட்டு கல்லைக் காலால் தொட்டு காரிகைக்கு நல்லுயிர் அளித்தான் இராமன்
    வில்லைக் கொண்டு தாடகையின் உயிர் அழித்த அன்னாளில் உன் கைவண்ணம் கண்டேன் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிர் அளித்த இன்னாளில் உன்கால்வண்ணம்கண்டேனென அளாவிலா மகிழ்ச்சி கொண்ட மாமுனிவன் இராம, இலக்குவரோடு
    இணையிலா அழகும் வளமும் மிக்க மிதிலை நகர் அடைந்தாரே.
    ஓவியப் பாவையாய் மாடத்தில் நின்ற மைதிலியின் மைவிழிகளும்
    காவிய நாயகன் இராமன் மாடத்தின் முன் நின்று நோக்கிய விழிகளும்
    ஒன்றில் மேல் ஒன்று ஒன்றின மற்றவரின் உள்ளத்தை ஊடுருவின வென்றன ஒருவருக்காக மற்றவரை நின்றன இமைகள் சற்றும் அசையாமல்
    தனது தவப்புதல்வி மைதிலியை மணம் புரிந்திட வேண்டுமென விழைபவர்
    சிவனது வில்லை வளைத்திட வேண்டுமென்பது மன்னன் சனகனது நிபந்தனை.
    மற்ற கொற்றவரெலாம் வில்லை அசைக்கவொணாது
    முற்றும் தோற்றிட பாசமிகு அன்னை கோசலை
    பெற்ற மைந்தன் இராமன் முனிவரை வணங்கி
    வெற்றி பெற்றிட அவர்தம் ஆசி பெற்று
    ஏறு நடையுடன் கம்பீரமாய் எழுந்து சென்று
    மேரு மலையோ என வியக்கும் வண்ணம் அங்கிருந்த
    முக்கண்ணன் வில்லை எடுத்து, நிறுத்தி, தொடுத்திட்ட
    அக்கணமே இற்று விழுந்ததே! இன்ப அலை எழுந்ததே!
    நிலமகள் அருளிய திருமகள் மைதிலியின் கரதலம்
    நலமுடன் பற்றி யாவரும் வாழ்த்திட இராமனும் மணமுடித்தானே!
    மற்ற மூன்று தம்பியர் மூவர்க்கும் மிதிலை அரசகுமாரிகள் மூவரை
    உற்ற துணைவியராய் ஏற்று மணம் செய்வித்த தந்தை தசரதன்
    சுற்றம் படை புடை சூழ அயோத்தி நோக்கி செல்லுங்கால்
    சீற்றம் கொண்டு சீறி வந்த பரசுராமனை எதிர்கொண்டான்
    “முன்னேயே சற்று முறிந்திருந்த சிவதனுசை ஒடித்தது
    என்னேதான் வீரம் இராமா” என ஏளனம் செய்த பரசுராமன்
    என்பால் உள்ள திருமால் வில்லை வாங்கி வளைத்திடென
    திருமால் திருஅவதாரமாம் இராமனிடமே செருக்குடன் செப்பிட
    இலகுவாய் அவ்வில்லை வாங்கி வளைத்து நாணேற்றிய இராமன்
    இலக்கு இதற்கு எதுவென வினவ எல்லாமுணர்ந்த பரசுராமன்
    தான் செய்த தவப்பேறு முழுதும் இலக்காய் அளித்திட
    நாண் இருந்து புறப்பட்ட அம்பு தவப்பயனை கவர்ந்து மீண்டிட
    வில்லை வருணனக்கு அளித்த இராமனும் அவன் செயல் கண்டு
    எல்லை இல்லா இன்பம் அடைந்த யாவரும் அயோத்தி அடைந்தனரே!

    அயோத்தியா காண்டம்

    தலை மகன் இராமனுக்கு முடிசூட்ட தசரதன் எடுத்த முடிவுக்கு
    உலை வந்தது உருவமும் உள்ளமும் கோணிய கூனி உருவில்
    நெஞ்சு நிறைய இராமனிடம் வாஞ்சை கொண்ட கைகேயி உள்ளத்தில்
    நஞ்சைப் பாய்ச்சினாள் தந்திரக்காரியான கூனி மந்தரை
    முன்னவன் இராமனுக்கு அரசு கொடாது ஈரேழாண்டு அடவிக்கு அனுப்பிவிட்டு
    தன்னவன் பரதனுக்கு அரசளித்து அரியணையில் அமர்த்திட வேண்டுமென கைகேயி
    என்றோ கோரிய வரங்களை இன்றே தந்திடென இடியை இறக்கிட
    நன்றோ இதுவென தசரதன் அதிர்ந்து உதிர்ந்து மயங்கி சாய்ந்தானே
    பெற்ற அன்னை கோசலை கலங்கிட உற்றோர் யாவரும் மலங்கிட
    மற்ற அன்னை கைகேயி மகிழ்ந்திட கூடியோர் அனைவரும் நெகிழ்ந்திட
    மன்னவன் பதவியை சற்றும் பற்றிலாது துறந்து மரவுரி தரித்து
    தன்னவள் சீதையுடனும் பின்னவன் இலக்குவனுடனும் காடேக தயாரானான்
    தடுத்து நிறுத்தி இராமன் கானகம் செல்வதை தவிர்க்க மந்திரனும் மற்றவரும் முயன்றும் எடுத்த முடிவினின்றும் கொடுத்த வாக்கினின்றும் பிறழ விழையா இராமன்
    அன்னையர் மூவர் தவிர அயோத்தி உறைவோர் யாவரும்
    தன்னைப் பின் தொடர கானகம் நோக்கி செல்லலானான்..
    வழியில் சோலை ஒன்றில் இளைப்பாறி உடன் வந்தோர் யாவரும்
    விழிகள் அயர்ந்த வேளையில் நள்ளிரவில் மூவரும் கானகத்துள் சென்றனரே.
    இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக்கொண்டே நடந்து
    புனித கங்கை நதியின் வடகரை அடைந்து முனிவரின் தவச்சாலை சேர்ந்தனரே.
    தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லையென மைந்தன் இராமன் கானகம் ஏகினான் சிந்தை குலைந்த தந்தை தசரதனோ புத்திரன் பிரிவு தாளாது வானகம் ஏகினான்
    இடர் சூழ் கானகந்தன்னில் தன் இனத்தாரோடு இனிது வாழ்ந்த
    வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் காண வந்தான்
    தூய உள்ளத்தொடு தேனையும் மீனையும் அளித்த குகனை
    நேய உணர்வோடு உன்னோடு ஐவரானோமென தம்பியாய் இராமன் ஏற்றான் நாவாய் ஒன்று கொணர்ந்து எம்மைக் கங்கையின் அக்கரைக்கு அழைத்துப்
    போவாய் என இராமன் கூறிட குகனும் அவ்வாறே செய்தான்.
    பிரிந்து இராமன் செல்வதை எண்ணி வருந்திய குகனின் மனநிலை
    அறிந்து அவனைத் தேற்றி அவன் சேவையைப் போற்றி மூவரும் விடைபெற்றனரே.

    மாமுனிவன் பரத்துவாசன் மூவரையும் எதிர்கொண்டழைத்து அவர் ஆசிரமத்தில் தேன்கனிகள், காய்கள் அவர்களுக்கு அளித்து உபசரித்து உளம் மகிழ்ந்தார் தேவரும் தொழுதிடும் சித்திரகூடமலைக்குச் சென்று அங்கு தங்குக என்று முனிவர் கூறிட மூவரும் சித்திரக்கூடம் நோக்கி நடந்து யமுனை நதியை அடைந்தனரே.
    இலக்குவன் மூங்கிலால் தெப்பமொன்றை அமைத்திட அதில் இராமன் சீதை அமர்ந்திட இலக்கை நோக்கி இளையவன் நீந்திக்கொண்டே தள்ளிட தென்கரை அடைந்தனரே. தன் சித்திரங்களின் கூடமாக இயற்கை அன்னை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொண்ட சித்திரகூடத்தை அடைந்து எழிலான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனரே. அந்தி நேரம் நெருங்கி வந்திட இலக்குவன் பர்ணசாலை அமைத்துத் தந்திட இராமன் மிக மகிழ்ந்து சீதையுடன் குடிபுகுந்தான்.
    மிக்க மகிழ்வுடன் கேகேய நாட்டு மன்னன் அரண்மனையிலே, அயோத்தியில் உற்ற நிகழ்வுகளை சற்றும் அறியாது தங்கியிருந்த பரதன் விரைந்து அயோத்தி திரும்பிடுக என்ற தூதர் கொணர்ந்த செய்தியைப் பெற்ற நிறைந்த மனத்துடன் சத்துருக்கனனோடு அயோத்திக்கு புறப்பட்டானே. கோசல நாட்டை அடைந்த உடனேயே பரதன் கண்ணுற்ற அமங்கலக் காட்சிகள் அவனை மலங்கச் செய்தன.

    களையிழந்து வெறிச்சோடிக் கிடந்த அயோத்தியை கடுகி அடைந்து
    உளைந்த மனத்துடன் அரண்மனை புகுந்தானே.
    நடந்த நிகழ்வுகள் யாதென அறிந்த பரதன் எல்லை
    கடந்த கோபம் அன்னை கைகேயி மேல் கொண்டு
    கடும் சொற்களை அவளிடம் பேசினான்; பேயே பாவியேயென ஏசினான்; சுடும் கனல் துண்டுகளாய் வார்த்தைகளை அவள் மீது வீசினான்
    எந்தனை ஈன்று தீராப் பழிக்குள்ளாக்கிய உந்தனைக் கொன்றாலும் பாவமிலையென நிந்தனை செய்தான் வந்தனைக்குரிய தாயென இதுவரை கருதிய கைகேயியை. அவள் இழைத்த கொடுமையால் கானகம் சென்ற இராமனை தானே சென்று திரும்பி அழைத்து வந்திட கானகம் சென்றிட முடிவு செய்தான்
    குலகுரு வசிட்டர், அன்னையர் மூவர், சுமந்திரன் ,படையினர், குடிமக்கள் என பலரும் உடன் வர பரதன் சத்துருக்கனனுடன் கானகம் நோக்கிச் சென்றானே.
    பெரும் படையுடன் கங்கை வடகரை சேர்ந்த பரதன் அண்ணலுக்கு இடர்
    தரும் நோக்குடனே வந்துளான் என்றெண்ணி சீறியெழுந்தான் குகன்
    அண்ணனின் அருமை நண்பன் குகனென அறிந்து அவனைச் சென்று காணும் எண்ணத்துடன் அருகில் வந்த பரதனைக் கண்ட குகன் மனம் மாறியதே.
    மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
    சிரமேல் குவித்த இரு கரங்களும்
    பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
    நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும்
    கொண்ட பரதனை தன் அருகில்
    கண்ட குகனின் உள்ளம் உருகியதே
    அண்ணலின் சாயல் ஒத்த இவனால் பிழையேதும் இழைக்க
    எண்ணவும் இயலுமோ என உணர்ந்தான்.
    தனக்குரிய அரசுரிமையை வனவாசம் முடியும் வரையே இராமன் துறந்தான்
    தனக்கரிய என்றும் திரும்பப்பெற இயலாத அரச பதவியை பரதன் உதறினான் ஓராயிரம் இராமன் வரினும் ஒப்பிலா தியாகம் செய்துள்ள பரதனுக்கு நேராவாரோ என வியந்தான் வேடர்குலத்தலைவன் குகன்
    ஒருவரை ஒருவர் உளமாரத் தழுவினர் பரதனும் குகனும்
    ஒருவர் பதம் மற்றவர் பணிந்து வணங்கினர் இருவரும்.
    அக்கரை செல்ல உதவியை நாடிய பரதனையும் உடன் வந்தோரையும் மிக்க அக்கறையுடன் தன் நாவாய்களில் ஏற்றி பத்திரமாய் கொண்டு சேர்த்தான் குகன்.
    சற்று தூரத்தில் திரளாய் வந்திடும் மக்களை
    உற்று நோக்கியதில் பரதனையும் படையினரையும் பார்த்து
    கொதித்து எழுந்தான் சீறும் அரவத்தின் உருவமான இலக்குவன்
    துதித்துப் போற்ற வேண்டிய தமையனை காட்டிற்கு அனுப்பிவிட்டு
    தொடர்ந்து இங்கும் வந்து அவருக்கும் அன்னை சீதைக்கும்
    இடர் தந்திட எண்ணுவோரை அழித்துவிடுவேன் என
    இடியாய் முழங்கினான் கண்களில் கோபம் மின்னிட
    துடியாய்த் துடித்தான் வில்லில் நாணை ஏற்றிட.
    தம்பி பரதன் என்னைத் திரும்பி அயோத்தி அழைத்துச் செல்லவே வந்திருப்பான்
    நம்பிடு என்னையென ஆவேசமுற்ற இலக்குவனை ஆசுவாசப்படுத்தினான் இராமன்
    உள்ளம் உருக்கும் பரதனின் கோலத்தை கண்ணுற்ற இலக்குவனின் கோப
    வெள்ளம் தணிந்து விழிகளில் கண்ணீர் வெள்ளம் பெருகிற்றே.
    தந்தையின் நலத்தை தம்பி பரதனிடம் வினவிய இராமன் அவர்
    இறந்ததை அறிந்து இடிந்துபோய் மண்ணில் மயங்கி விழுந்தானே
    சற்று நேரம் கழித்து கண் விழித்து தெளிவடைந்த இராமன்
    முற்றும் கற்ற வசிட்டன் சொற்படி தந்தைக்கு நீர்க்கடன்களை செய்து முடித்தானே.
    மீண்டும் அயோத்தி திரும்பி வந்திடென பரதன் வேண்டுகோளை மறுத்து
    வேண்டும் தந்தையின் வாக்கை தவறாமல் காக்க என வலியுறுத்தி
    வனவாசம் முடிந்து நான் திரும்பி வரும் வரை நீயே ஆட்சி செய்திடு
    என பாசம் மிகு தம்பி பரதனுக்கு அன்புக் கட்டளையிட்டான் இராமன்.
    உன் பாதம் தாங்கும் பேறு பெற்ற பாதுகைகளை என்னிடம் தருக
    என் சிரம் மேல் தாங்கி அயோத்தி சென்று அரியணையில் வைத்து வழிபடுவேன் பாதுகைகளே உன் பிரதிநிதியாக அரசாளும் நான் அவற்றின்
    பாதுகாவலனாக பணி புரிவேன் என்றான் பரமோத்தமன் பரதன்;
    ஈரேழு ஆண்டுகள் வன வாசம் முடித்து திரும்பி அயோத்தி
    வாராது ஒரு நாள் தாமதித்தாலும் தீக்குளிப்பேன் என சூளுரைத்தான்.
    தலைமேல் பாதுகைகளைத் தாங்கிச் சென்று நந்தியெனும் சிற்றூரடைந்து தாமரை இலைமேல் தண்ணீர் போல பரதன் பற்றற்று வாழ பாதுகைகள் செங்கோலோச்சினவே.
    இராமனிடம் யாவரும் விடைபெற்று சித்திரக்கூடத்திலிருந்து நீங்கியபின்
    இராமனும் சீதை, இலக்குவனோடு தென் திசை நோக்கி புறப்பட்டானே.

    ஆரண்ய காண்டம்

    அத்திரி எனும் அருந்தவ முனிவனின் ஆசிரமம் அடைந்த மூவரையும்
    பத்தினி அனுசூயையும் முனிவனும் உபசரித்து உளமகிழ்ந்தனரே- பின்னர்
    தண்டகவனம் எனும் எழில் கொஞ்சும் வனத்தை மூவரும் அடைந்தபோது
    கண்டனரே எதிரில் விராதன் எனும் பெயர் கொண்ட வல்லரக்கனை வீழ்த்தினரே விராதனை இராம இலக்குவர் நீண்ட போருக்குப்பின்னர்
    வாழ்த்தினானே அவனும் சாபம் நீங்கி கந்தருவ உருவம் பெற்றபிறகு.
    தண்டகவனத்தின் எழில்மிகு காட்சிகளைக் கண்டு மூவரும் செல்கையில் எதிர்கொண்டனரே அங்கு வாழும் முனிவர்களை- அரக்கர்கள் தந்திடும்

    தொல்லைகளை அவர்கள் இராமனிடம் கூறி அவர்களைக் காத்திட வேண்டிட எல்லாயில்லா கருணை கொண்டு அவர்களுடன் பத்தாண்டுகள் வாழ்ந்தானே. அகத்தியனை சென்று காண்க என முனிவர்கள் உரைத்திட இராமனும் சீதை இலக்குவனோடு அவ்விடம் அகன்று தென்திசை சென்றானே.
    கடல் போல் பரந்த ஞானம் உடையோனும், தேவர்க்காக பரந்த
    கடல் முழுதும் ஒரு கையில் சேர்த்து விழுங்கி பின் உமிழ்ந்தவனும்,
    தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்து ஒருக்கால் உலகம் தடுமாற
    சமன் செய்ய தென் திசை வந்து ஈசனுக்கு சமமாய் அமர்ந்தவனும்,
    வஞ்சம் நிறைந்த வாதாபி எனுமசுரனை சீரணித்தவனுமான அகத்தியன்
    நெஞ்சம் மகிழ மூவரையும் வரவேற்று அன்புடன் உபசரித்தானே.
    அரியிடம் முற்காலத்திலிருந்து தற்போது தன்னிடமிருக்கும் வில்லையும் விரிசடைக்கடவுள் திரிபுரமெரிக்க மேருவை வில்லாக்கி எய்த அம்பையும் எதிரிகளுக்கு எமனாகும் அழிவற்ற சக்தி பெற்ற கூரியவாள் ஒன்றையும் கதிரவகுலத் தோன்றல் இராமனுக்கு அகத்தியர் அன்புடனும் ஆசியுடன் அளித்தாரே.
    பஞ்சவடி எனும் அழகிய இடத்திற்குச் சென்று வாழ்க என அகத்தியன் கூறிட
    பஞ்சு அடிகள் கொண்ட சீதையோடும், இலக்குவனோடும் அங்கு சென்றானே.
    அசைந்து அசைந்து அழகுடன் பாயும் கோதாவரிக் கரையில்
    அமைந்த பஞ்சவடி எனும் எழில்மிகு சோலையை அடைந்து
    இளையவன் இலக்குவன் அமைத்த அழகிய பர்ணசாலையில்
    துணையவள் சீதையுடன் இராமனும் சேர்ந்து வாழ்ந்தனரே.
    சூர்ப்பணகை எனும் பெயருடையாள் இலங்கை வேந்தன் இராவணன் இளையவள் பார்ப்பதற்கே அச்சம் ஏற்படுத்தும் பயங்கர தோற்றமுடைய அரக்கி அவள்
    மூவரும் தங்கிய அச்சோலைக்கு வந்து அழகுமிகு இராமனைக்கண்டாள்
    எவரும் மயங்கும் எழில் மங்கைஉருவம் கொண்டு இராமனிடம் வந்தாள்.
    தகாத அவள் பேச்சுக்களையும் செயல்களையும் கண்டு மனம்
    பொறாத இலக்குவன் அவள் செவிகளையும் மூக்கையும் கொய்து எறிந்தானே.
    இரத்தம் சொரியும் முகத்துடன் அவள் வந்த தோற்றம் கண்டு
    உன்மத்தம் கொண்ட அவள் சகோதர அரக்கர் கரன் தூடணன்,திரிசரன்
    வான் வையகம் அதிர பெரும்படையுடன் சென்று இராமனுடன் போரிட
    தான் ஒருவனாக வில்லொன்றே ஆயுதமாக அரக்கரையெல்லாம் அழித்தானே.
    பின்னமுற்ற முகத்துடன் தன் காலடியில் விழுந்த சூர்ப்பணகையைக்
    கண்ணுற்ற இராவணன் கடும் சினத்தால் கொதித்தெழுந்து இத்தகைய
    பெரிய இடர் இழைத்தவர் யாரென சூர்ப்பனகையை வினவ
    இரு மானிடர் இராம இலக்குவரின் செயல்களென விவரித்தபின்
    சூழ்ச்சியாக சீதையின் ஒப்பிலா மேனி அழகை விளக்கமாய் கூறி
    எழுச்சி பெறச் செய்தாளே இராவணனிடம் சீதையின் மேல் காம வெறியை.
    காமம் தலைக்கேறிய தசமுகன் சீதையைக் கவர்ந்திடும் வெறி உந்த
    மாமன் மாரீசனை மிரட்டி மாய மானாக மைதிலியிடம் அனுப்பிட
    மானைக் கண்டு மயங்கிய சீதை தனக்கு அந்த மான் வேண்டும் என
    இராமனை வேண்டிட இலக்குவன் தடுத்தும் இராமன் மான் பின் சென்றிட
    வெகு தூரம் வனத்துள் சென்று விரைவாய் அங்குமிங்கும் துள்ளி ஓடி
    நெடு நேரம் பிடிபடாத மானின் மாயை உணர்ந்த இராமன் வில்லையெடுத்து
    மானை நோக்கி எய்த அம்பு தாக்கிட மாரீசன் தன் சுய உருவத்தில்
    வானைப் பிளக்கும் ’சீதா,இலக்குமணா’ என்று இராமன் குரலில் கூவி வீழ்ந்தானே.
    கதறலைக் கேட்ட சீதை இராமனைக் காக்க விரைந்தெடன இலக்குவனை முடுக்கிட
    பதறல் வேண்டாம் இது அரக்கனின் மாயமென இலக்குவன் எடுத்துக் கூறிட
    வந்த சீற்றத்தால் கொதித்த சானகி கடுஞ் சொற்களால் இலக்குவனை சாடிட
    நொந்த மனத்துடன் இலக்குவன் அங்கிருந்து நீங்கி இராமனைத் தேடிச் சென்றானே.
    சீதை இருக்குமிடம் தேடி முதிர்ந்த முனிவன் உருவில் வந்த இராவணனனை
    பேதை சீதை அன்புடன் வரவேற்று அழைத்திட, பர்ணசாலையுள் வந்த கபட முனிவன் நான்முகன் சாபம் நினைவில்வர சீதையைத் தீண்டாது குடிலோடு பெயர்த்தெடுத்து
    தான் வந்த தேரினில் அதை வைத்து இலங்கை நோக்கி விரைந்து செல்லலானான்.
    சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட சமர் புரிந்த சடாயுவை சிவவாளால் சிறகொடித்துச் சிதைத்து இராவணன் வீழ்த்திட சடாயுவும் மண்ணில் விழுந்தானே. இலங்கை நோக்கி தோளில் குடிலைத் தாங்கி இராவணன் வான்வழியே சென்றடைந்து கலங்கி நின்ற சீதையை அசோகவனத்தில் அரக்கியர் நடுவே சிறை வைத்தானே.
    தேடிச் சென்று இராமனைக் கண்ட இலக்குவன் மகிழ்வுடன் தழுவிய பின்னர்
    ஓடி விரைந்து இருவரும் சீதையின் நிலை கண்டிட பர்ணசாலை திரும்பிட
    சீதையை பர்ணசாலையோடு காணாது திகைத்து தவித்த இருவரும் தேர் சென்ற பாதையைக் கண்டு அதன் வழியே சீதையின் தேடலில் சென்றனரே.
    ஏகும் வழியில் குருதிவெள்ளத்தில் கிடந்த சடாயுவைக் கண்டு தழுவினான் இராமன்
    போகும் உயிரைப் பிடித்து வைத்து இராமனிடம் யாவும் கூறி சடாயு உயிர்துறந்தான். பெற்ற தந்தையொத்த சடாயுவின் மரணம் கண்டு மனம் உருகி விழினீர் பெருகி
    உற்ற முறையில் ஈமக்கடன் யாவும் செய்து முடித்து இருவரும் பயணம் தொடர்ந்தனரே.
    மிகநீண்ட கரங்கள் கொண்ட கவந்தன் எனுமரக்கன் பிடியில் திடீரென சிக்கி,
    மீண்டனரே இருவரும் அவன் வானுயர் தோள்களை வெட்டி வீழ்த்திய பின்னர்.
    இராமன் கரம் பட்டு சாபம் நீங்கிய தனு எனும் அக்கந்தர்வன் ருசியமுக மலை வாழ்
    சுக்ரீவன் எனும் வானரக்கோன் துணை கொள்க எனக்கூறி வானுலகம் சென்றானே.
    சபரியெனும் தனது பக்தையை வழியில் கண்டு மகிழ்ந்த இராமன் அபரிமித பரிவுடன் அவள் அளித்த காய் கனிகளை ஏற்று உண்டபின்
    ருசியமுகம் மலைக்கு செல்லும் வழியை உலகுக்கே வழிகாட்டும் இராமனுக்கு கூறி வானுலகம் அடைந்தாளே கடுந்தவமியற்றும் முனிவரும் பெறமுடியா பேறு பெற்ற சபரி

    கிஷ்கிந்தா காண்டம்

    ருசியமுகம் மலையை இராம இலக்குவர் சென்றடைந்தனரே– அங்கு தன் அண்ணன் வாலி முகம் காணாது ஒளிந்து வாழ்ந்த வானரக்கோன் சுக்ரீவனைக் கண்டனரே. அண்ணன் வாலி தம்பிக்கிழைத்த கொடுமைகளை அங்கிருந்த அனுமன் விரிவாய்க் கூறிட அண்ணல் இராமனும் சுக்ரீவன்பால் பரிவு பொங்கிட உயிர்த் தோழமை கொண்டானே.
    வான் வழியே முன்னொரு நாள் இராவணன் கவர்ந்து சென்ற மங்கை ஒருவள்
    தான் அணிந்த அணிகலன்களை ஆடைத்துண்டில் முடிந்து நிலம் நோக்கி வீசிட
    அணிகல முடிப்புகளை வானரர் ஏந்திப்பிடித்து சுக்ரீவனிடம் கொடுத்த அவற்றை பணிவுடன் இராமனுக்குக் காட்டிட சீதை அணிகளைக் கண்ட இராமன் தன்வயமிழந்தானே. சூரிய குமாரன் சுக்ரீவன் சூரியகுலத்தோன்றல் இராமனைத் தேற்றிட
    கூரிய மதி படைத்த அனுமன் வாலியை வதம் செய்து சீதையைத் தேடுவோமென்றான்.
    ஒங்கி வளர்ந்த ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைத்த இராமன் திறன் கண்டு நீங்கியதே சுக்ரீவன் மனதுறுத்திய வாலியை அழிக்க இராமனனின் ஆற்றல் மேல் ஐயம்.
    அனைத்து உலகங்களையும் ஆட்டிப்படைத்த இராவணனையே தன் வாலில் கட்டிப் பிணைத்து எட்டு திக்கும் குருதி பெருக அலைக்கழித்த ஒப்பற்ற வலிமைமிகு வாலியும், தனது துணைவியைக் கவர்ந்து தனக்கும் கொடுந்துயரளித்த வாலியின் செயல்களை மனதுள் புதைத்து புழுங்கிப் பின் இராமன் துணை கிட்ட எழுச்சி பெற்ற சுக்ரீவனும்
    கடும் சமரில் பொருத தக்க தருணத்தில் மறைவிடமிருந்து இராமன் உயிரைத்
    தொடும் பாணம் ஒன்றை வாலியின் மேல் எய்திட அவனும் மண்ணில் வீழ்ந்தானே. மறைவாய் நின்று அம்பு எய்தது ஏனென வெகு நேரம் வாதிட்ட வாலி இறுதியில் இறைவனாய் இராமனை அறிந்து தலையால் வணங்கி போற்றினானே.
    அங்கதன் எனும் தன்னன்பு மைந்தனை இராமனிடம் அடைக்கலமாய் அளித்திட
    அங்கு தன் உடைவாளை இராமன் அங்கதனுக்கு ஈந்து அவனை ஏற்றுக்கொண்டானே. நிறைந்த மனத்துடனும் மிகுந்த நிம்மதியுடனும் வாலி வானுலகம் சென்றானே
    மறைந்த தந்தை வாலிக்கு இறுதிக்கடன்களை அங்கதன் மூலம் அனுமன் செய்வித்தானே
    உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் முடிசூட்டிய இராமன்
    சீரிய முறையில் ஆட்சி செய்து நான்கு திங்கள் கார் காலம் கழித்து படையுடன்
    என்னிடம் வருக என சுக்ரீவனிடம் கூறிய இராமன் வேறொரு மலைக்குச் செல்ல தன்னிடமான கிட்கிந்தைக்கு அனுமனொடும் மற்ற வானரர்களுடன் சுக்ரீவன் சென்றான்.
    சல்லாபத்தில் மூழ்கித் திளைத்து நான்கு திங்கள் சென்றதே அறியாது உல்லாசத்தில் தனை மறந்த சுக்ரீவன் செயல் கண்டு வெகுண்ட இராமன்
    நேரே சென்று சுக்ரீவனைக் கண்டு காரணம் அறிந்து வர இலக்குவனைப் பணித்திட
    போரே செய்யத் தயாராக கடும் சினத்துடன் இலக்குவன் கிட்கிந்தை அடைந்தான்
    தனது தவறை நன்குணர்ந்த சுக்ரீவன் இலக்குவனுடன் இராமனிடம் சென்றடைந்து
    மனது உருகி இராமன் செந்தாள்களில் விழுந்து வணங்கிட அவனும் மனமிரங்கினான்.
    கடல் போல் திரண்ட வானர சேனையைக் கண்டு இராமனும் மகிழ்ந்திட சீதையைத்
    தேடல் பணியில் அச்சேனையை அமர்த்திடும் வழி வகையை ஆய்ந்தனரே.
    நான்கு திசைகளிலும் செல்ல சேனையைப் பிரித்து சுக்ரீவன் ஆணையிட
    நன்கு எல்லாம் அறிந்த அனுமன், சாம்பவான் அங்கதன் தென் திசை சென்றனரே.
    வானர வேந்தன் சுக்ரீவன் சொல்லிய வழியில் சென்றபடியே சீதையைத் தேடிய
    வானர வீரர் சீதையைக் காணாது உளம் சோர்ந்து மனம் மலங்கி
    இறுதியில் மயேந்திர மலையில் கூடினரே; வானர அரசன் சுக்ரீவன்
    உறுதியாய் குறித்த ஒரு மாத தவணையும் கழிந்ததை எண்ணி கலங்கினரே.
    திரும்ப கிட்கிந்தா செல்லாது மலையிலேயே இருப்பதை அல்லது மரிப்பதை
    விரும்பிய வானரர்களிடம் உரையாடிய அனுமன் சடாயுவின் வீர்மரணம் பற்றி குறிப்பிட சற்று எட்டியிருந்த கழுகரசன் சம்பாதி அதைக் கேட்டு தன் தம்பி சடாயுவின் மரணம் பற்றி முற்றும் அறிந்திட அனுமனிடம் வந்து கேட்டறிந்தபின் தன் கதை சொல்லலானான்
    எரிக்கும் சூரிய கிரணங்களிலிருந்து தம்பி சடாயுவைக் காத்திட தன் சிறகுகளை
    விரித்துப் பரப்பியபோது அவை எரிந்து தீய்ந்திட சம்பாதி பறக்கும் நிலை இழந்தான்
    இராம நாம உச்சாடனம் செய்ய அனைத்து வானரரையும் சம்பாதி வேண்ட
    இராம நாம மகிமையால் தீய்ந்த சிறகுகள் துளிர்த்து பெரிதாய் வளர்ந்தனவே.
    இலங்கையின் வேந்தன் சீதையைக் கவர்ந்து வான்வழி சென்றதைக் கண்டிருந்த சம்பாதி இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ள செய்தியைச் சொன்னானே.
    மிகுந்த பாதுகாப்பும் காவலும் உள்ள இலங்கைக்கு பெரும் படையுடன் செல்வது
    உகந்தது ஆகாது ஒருவன் சென்று சீதையைக் கண்டு வருவதே உசிதமென சம்பாதி கூறிட வீர மாருதியே இதற்கு ஏற்றவன் என அனுபவப் பழம் சாம்பவான் உரைத்திட
    தீர மாருதியும் கம்பீரமாய் விஸ்வரூபம் எடுத்து மகேந்திர மலையில் நின்றானே.

    சுந்தர காண்டம்

    இராமனை மனதில் துதித்து தென் திசை நோக்கி இலங்கையை இலக்காக்கி
    இராமனின் வில் அம்பென வாயுகுமாரன் விண்வெளியில் விரைந்து சென்று
    எதிர் வந்த இடர்களையும் தடைகளையும் மதியாலும் வலிவாலும் வென்று
    எழில் மிகு பவள மலையிலிறங்கி அங்கிருந்து இலங்கையைக் கண்டு வியந்தானே. எங்கும் இருள் சூழ்ந்தபின் பவள மலையை விட்டகன்று இலங்கை ஊரடைந்து
    பொங்கும் கடலையே அகழியாய்க் கொண்ட மதில் சுவர் வழியே நகருள் புகுந்தானே. சல்லடைப் போட்டுத் தேடுவதுபோல் நகரிலும் அரண்மனையிலும் முழுதும் தேடியும் மெல்லிடையாள் சீதையைக் காணாது மனம் குழம்பிய அனுமன் வனமொன்றில் புகுந்தான்.
    அசோக வனமெனும் அவ்வனத்தில் அதுவரை சீதையைக் காணமுடியாததால் ஏற்பட்ட சோகமும் சோர்வும் அழுத்திட அனுமன் அங்கும் சீதையை இறுதியாய் தேட முற்பட்டான்
    பெருத்த உடலும் மிகுத்த கொடுமையும் கொண்ட அரக்கியர் சூழ்ந்திருக்க அவர் நடுவே கறுத்த மேகங்கள் மூடிமறைத்த வெண்ணிலவு போல் சீதை சிறை இருந்தாளே.
    புகை படிந்த ஓவியம்போல் பொலிவிழந்த தோற்றத்தோடு ஒளியிழந்த விளக்காய் நகை மறைந்து களை இழந்த முகத்தோடு வாடிய பயிராய் சீதை இருந்தாளே.
    வல்லரக்கிகளில் நடுவில் இருந்த ஒரே நல்லரக்கியாம் திரிசடை என்பவளிடம் ந
    ல்ல நிமித்தங்களாய் தனது இடது தோள் கண்கள் புருவம் துடிப்பதை சீதை கூறிட நல்லது இல்லாத தான் கண்ட கனவுகளை திரிசடையும் விவரமாய்க் கூறி அவை
    எல்லாம் இலங்கைக்கு வரவிருக்கும் பேரழிவை உணர்த்துவதாம் என்றாள்..
    கொடிய அரக்கிகளிடம் நடுவே சிக்கி வாடிய கொடி போலிருந்த சீதையை
    நெடிய மரமொன்றின் கிளையில் மறைந்திருந்து அனுமனும் நோக்கினானே.
    திரண்ட தோள்கள் கொண்ட இராவணன் அரம்பையர் அரக்கியர் திரண்டு உடன் வந்திட மருண்ட மான் போல் மிரண்டு அரக்கியர் நடுவிருந்த சீதை முன் நின்று
    இச்சகப் பேச்சுகள் பேசிய இராவணனை துச்சமாய் மதித்து உதாசீனம் செய்த சீதை மேல் உச்சமாய் கோபமுற்ற இராவணன் சீதை இணங்கிட இருமாத கெடு கொடுத்து அகன்றானே.
    தன் அவல நிலை கண்டு மாய்ந்த சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றபோது அவள் முன் வந்து நின்றான் அனுமன், ’இராமனது தூதன் நானென’ முழங்கிக் கொண்டே.
    அண்ணல் அடையாளமாய் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்திட கண்ணில் ஒற்றி இராமனையே நேரில் கண்டால் போல் புளகாங்கிதம் அடைந்தாள்.
    எந்தன் தந்தையும் நீ, தாயும் நீ, உயிர் கொடுத்த உத்தமனும் நீ என உளமாரப் போற்றினாள் உந்தன் செயலுக்கு செயக்கூடிய கைமாறுளதோ, சிரஞ்சீவியாய் வாழ்கவென வாழ்த்தினாள்.
    எந்தன் தோளில் சுமந்து சென்று உன்னை இராமனிடம் சேர்ப்பேனென அனுமன் வேண்டிட உந்தன் செயல் இராமன் வில்லுக்கும் வீரத்திற்கும் இழுக்காகுமென சீதையும் மறுத்தாளே.
    அனுமனிடம் சீதை தன் சூடாமணியை அடையாளமாய் இராமனுக்குக் காட்டக் கொடுத்திட அனுமனும் அதைப் பெற்று சீதையை வணங்கி விடை பெற்றுச் சென்றானே.
    பேரெழில் மிக்க அசோக வனந்தனை பேருருவம் எடுத்து முற்றிலும் அழித்தான் அனுமன் பெருஞ்சினம் கொண்ட இராவணன் கேடிழைத்த குரங்கினைப் பிடித்துவர அனுப்பிய கிங்கரர்,சம்புமாலி, ஐந்து தானைத்தலைவர்கள்,அட்சய குமாரன், அரக்கர் படையினரை பயங்கரமாய் தனித்தே நின்று அனுமன் சமரிட்டு முற்றிலும் அழித்து ஒழித்தானே.
    தசமுகனின் தனையன் மேகனாதன் தானே அனுமனுடன் சமர் செய்ய சென்று நான்முகனின் அத்திரத்தை பிரயோகிக்க அனுமனும் அதை மதித்து கட்டுண்டானே. கட்டுண்ட அனுமனை நகர் வழியே இராவணனிடம் இழுத்துக் கொண்டு சென்றனரே கட்டுக்கடங்கா கோபமுற்ற இராவணன் அனுமனை அவனைப்பற்றிய விவரங்கள் வினவ இணையிலா வில் வீரன் இராமனின் தூதன் நான் என்று தன் அறிமுகம் தந்த பின் துணையிலா அவன் துணைவி சீதையை கபடமாய் கவர்ந்து வந்து சிறை வைத்த இழிவான செயல் புரிந்த நீ சீதையை இராமனிடம் சற்றும் தாமதியாது திருப்பி அனுப்பி அழிவான முடிவிலிருந்து உன்னைக் காத்துக்கொள் என அனுமனும் உணர்த்தினானே. சிரம் பத்திலும் சினம் கொதித்த இராவணன் அக்குரங்கை கொன்றிட ஆணையிட அறம் அறிந்த தம்பி விபீடணன் தூதனைக் கொல்வது தகாத செயல் என்றுணர்த்திட வாலைச் சுட்டெரித்து அவ்வானரத்தை துரத்திடுக என இராவணன் கட்டளையிட உடலைச் சுற்றிய நாக பாசத்தைத் தளர்த்தி பருமானன கயிற்றால் அனுமனைக் கட்டி வாலில் தீ வைத்திட சீதையின் அருளால் கனலும் புனல் போல் குளிர்ந்திட
    வாலைச் சுழற்றி சீதையின் இருப்பிடம் விட்டு இலங்கை நகரத்தையே தீக்கிரையாக்கி தான் வந்த வேலை முடிந்திட சீதையிடம் சென்று வணங்கி விடை பெற்று
    வான் வழியே விரைந்து சென்று மகேந்திர மலையில் இருந்த வானரரை அடைந்தானே.
    கண்டேன் சீதையை எனும் செய்தியை இராமனிடம் கடுகிச் சென்று விண்டான்
    கண்டிலேன் உனைப் போல என அண்ணலும் அளவிலா ஆனந்தம் கொண்டான்
    அன்னை சீதை அளித்த சூடாமணியை அனுமன் இராமனுக்குக் காட்டிட
    தன்னை மறந்த இராமன் சீதையையே கண்டது போல் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். இலங்கையில் வாடும் சீதையின் நிலையை விரிவாய் விளக்கிய அனுமன்
    ஒருதிங்களே உயிர் வாழ்வேன் என சீதை கூறிய வாக்கையும் இராமனிடம் கூறிட
    தென் திசை நோக்கிச் செல்ல எழுபது வெள்ளம் வானர சேனைக்கு சுக்ரீவன் ஆணையிட பன்னிரு நாள் மலை வழி நடந்து தென் திசைக் கடலை யாவரும் அடைந்தனரே.

    யுத்த காண்டம்

    தென் திசைக் கடலின் கரையிலே இராமன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க
    தன் அரண்மனையில் மிக்க உற்றோருடன் இராவணன் மந்திராலோசனையில் இருந்தான் ஒருமுகமாய் கூடிய அரக்கர் யாவரும் இராமனுடன் போரிட்டு அழிக்கவேண்டுமெனக் கூற தனியனாய் விபீடணன் மட்டும் சீதையை இராமனிடம் திருப்பியனுப்பிட அறிவுறுத்திட நஞ்சு போல் இச்சொற்களை இராவணன் வெறுத்து விபீடணனை இகழ்ச்சியுடன் ஏசிட நெஞ்சு கனத்த விபீடணன் துணைவர் நால்வருடன் இலங்கை நீங்கி அக்கரை அடைந்தானே
    வானரப்படை சூழ வீற்றிருந்த இராமனிடம் விபீடணன் அடைக்கலம் வேண்டி பணிந்திட வானரத்தலைவர் யாவரும்,அனுமனைத்தவிர, அடைக்கலம் அளிப்பதை எதிர்த்திட அஞ்சனை மைந்தன் இலங்கையில் நேரில் கண்ட விபீடணன் பண்புகளை விளக்கிட நெஞ்சம் மகிழ்ந்த இராமன் அடைக்கலம் அளித்து விபீடணனை ஏற்றுக்கொண்டானே.
    கங்கையின் கரையில் குகனோடு ஐவரானோம் குன்றில் சுக்ரீவனோடு அறுவரானோம் எங்களை வந்தடைந்த உன்னோடு எழுவரானோமென அண்ணலும் மட்டிலா மகிழ்வுற்றான் இலங்கை அரசனாய் விபீடணனுக்கு இலக்குவன் கரங்களால் முடிசூட்ட இராமன் பணித்திட இருகை கூப்பி விபீடணன் பரதன்போல் இராமன் பாதுகைகளையே சிரமேல் சூடினானே.
    கருங்கடல் சூழ் இலங்கையின் அரண் அமைப்பையும் சேனைச் சிறப்பையும் பலத்தையும் பெருந்தோள் கொண்ட இராவணின் வலிமையும் விபீடணன் விரிவாய் விளக்கினான்.
    கரிய கடலைக் கடந்து இலங்கை அடைந்திட உரிய வழியாக வருணன்
    பெரிய மலைகளைக் கொட்டி அணை கட்டிட யோசனை கூறினான்
    வானரத்தலைவன் சுக்ரீவன் நளனெனும் வானரத் தச்சனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் வானரப்படைகள் குன்றுகளைப் பெயர்த்துக் கொணர்ந்து கடலில் கொட்டி மேடாக்கி
    நூறு யோசனை நீளம் பத்து யோசனை அகலம் கொண்ட அணையை
    மூன்று நாட்களில் இலங்கை வரை கட்டி சேதுபந்தனம் செய்து முடித்தனரே.
    இணையிலா இராமன் இலக்குவன் விபீடணன் வானரப்படைத்தலைவர்கள் வானரப்படைகள் அணை மேலே நடந்து சென்று கடலைக் கடந்து இலங்கைக் கரை அடைந்தனரே.
    ஒற்றர் மூலம் இராமன் விபீடணன் வானரப்படை சேதுபந்தனம் இவை பற்றிய செய்திகளை பெற்ற இராவணன் இனி செயத்தக்க செயல் யாதெனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
    மலை ஒன்றின் மீதேறி நின்று இலங்கையின் மாட்சியையும் காட்சிகளையும் கண்டு மலைத்த இராமன் இலக்குவனிடம் அவை பற்றி விவரமாய் விளக்கிக் கூறலானான் தசமுகன் இராவணனும் அச்சமயம் வானுயர்ந்த அரண்மனை கோபுர உச்சிக்கு வந்து கமலமுகன் இராமனைக் கண்ணுற்று கடுஞ்சினமுற்று கனல் விழிகளால் நோக்கினான்.
    சாரன் எனுமரக்கன் இராமன் தரப்பு விவரங்களை இராவணனிடம் விளக்கிச் சொல்லிட இராமன் விபீடணனிடம் அரக்கர் தரப்பு வீரர்களைப் பற்றிய விவரங்களை வினவிட அண்ணன் இராவணனை விபீடணன் முதலில் சுட்டிக்காட்ட சினத்துடன் சுக்ரீவன் திடுமென விண்ணில் பகலவனைப் பிடிக்கப் பாய்ந்த அனுமன் போல் இராவணன் மேல் பாய்ந்தான். கடுஞ்சமர் இருவரும் புரிந்து படுகாயம் அடைந்து இளைப்பாற சற்று நேரம் நின்ற வேளை திடுமென சுக்ரீவன் இராவணன் தலைமுடிமணி பறித்து இராமன் பாதத்தில் வைத்தானே. அரக்கர் படைகளை போருக்கு ஆயத்தமாய் கொடுமை மிகுந்த இராவணன் அணி வகுத்திட இரக்க மனம் படைத்த இராமனோ அங்கதனை இராவணனிடம் சமரசம் பேச தூதனுப்பிட மூர்க்கனான இராவணன் அங்கதன் சொற்களை செவிமடுக்காது அவனைத் தாக்க முற்பட தீர்க்கமான முடிவு போரே சமாதானமன்று என்று திரும்பிவந்த அங்கதன் உரைத்தான்
    இவ்வண்ணம் தொடங்கியதே இராம-இராவண வானர- அரக்கர் படை யுத்தமாய் கார்வண்ண இராமனின் அவதார நோக்கமான தர்ம- அதர்ம யுத்தம்!
    கடல் போல பரந்து நின்ற அகழியை மலைகள் மரங்களால் வானரப் படைகள் தூர்த்து திடல் போல மேடாக்கி அங்கிருந்து ஓங்கி நின்ற மதில் சுவர் மேல் தாவி அதனையழித்து திரண்டு வந்த அரக்கர் சேனைகள் மேல் குன்றுகளையும் மரங்களையும் வானரப்படை வீச மிரண்டு போய் அரக்கர் படைகளும் பின் வாங்கி திரும்பி ஓடினரே.
    அரக்கர் சேனை சேதமடைந்து திரும்பி வந்துவிட்டதை அறிந்து சினத்தால் சிவந்த அரக்கர்கோன் இராவணன் தானே போர்க்களம் சென்றிட முடிவு செய்தானே.
    குரக்கினச் சேனைகள் அவற்றின் தலைவர்கள் சுக்ரீவன், அங்கதன், அனுமன் யாவரும் அரக்கர்கோனுடன் கடும் சமர் புரிந்தும் வெற்றி பெற இயலாது தளர்ந்திட
    தசமுகன் தன்னுடன் போர்புரிய களமிறங்கிய இலக்குவன் வில்லாற்றல் கண்டு வியந்து நான்முகன் தந்த வேல் ஆயுதத்தை இலக்குவன் மேல் பிரயோகம் செய்திட
    நெஞ்சில் அதை ஏற்ற இலக்குவன் மூர்ச்சித்து விழுந்ததைக் கண்டு
    நெஞ்சம் பதறிய அனுமன் அவனைத் தூக்கி பாதுகாப்பான வேறிடம் சென்றானே.
    அஞ்சன வண்ண இராமன் தானே நேரில் இராவணனுடன் போர் புரிய வந்திட
    அஞ்சனை மைந்தன் குன்றொத்த தன் தோள்களில் இராமனைச் சுமந்து சென்று
    தேர் மீதமர்ந்து போரிடும் இராவணன் முன் சென்று நின்றிட
    போர் தொடங்கியதே இராமனுக்கும், இராவணனுக்கும் இடையிலே.
    அரக்கர் கோன் இராவணனும் இராமனும் எய்த அம்புகளால் வான்வெளி நிறைந்ததே!
    அரக்கர் வானரர் சேனைகள் களிறுகள் கரிகள் பிணங்களால் பூமியும் மறைந்ததே!
    வீரன் இராமனின் வில்லினின்று விடுபட்ட அம்புகள் விரைந்து சென்று தாக்கி தீரன் இராவணனின் வில் தேர் வெண்குடை வீணைக்கொடி மணிமுடி யாவும் வீழ்ந்தனவே.
    களமிறங்கிய இராவணன் யாவும் இழந்து தனியனாய் நிராயுதபாணியாய் நின்றிட உளமிரங்கிய இராமன் இன்று போய் நாளை வா போருக்கு என கருணையுடன் கூறினான் நிலை குலைந்த இராவணன் தலை குனிந்து தன்னிடம் சேர்ந்து ஈசனின்
    சிலை முன்னமர்ந்து தன் அவல நிலை குறித்து உளமுடைந்து புலம்பினானே.
    ஒப்பற்ற ஆற்றலுற்ற தம்பி கும்பகருணனை அவனது ஆழ்துயிலினின்று எழச் செய்த கொற்றவன் இராவணன் அவனை இராமனோடு போர்புரிய போர்க்களம் செல்லப்பணித்திட முற்றும் தவறானது சீதையைக் கவர்ந்தது என உணர்த்தியும் இராவணன் கேளாததால் சற்றும் தயங்காது செஞ்சோற்றுக்கடனாற்ற போர்க்களம் செல்ல கும்பகருணன் தயாரானான் போரில் தன் வீரமரணத்திற்குப் பின்னாவது சீதையை விட்டு விடுக என வேண்டியபின் தேரில் ஏறி பெரும்படையுடன் இராவணனனிடம் விடைபெற்று கும்பகருணன் சென்றானே.
    அண்ணன் கும்பகருணனைக் களத்தில் கண்ட விபீடணன் அவனைப் பாசத்துடன் அணுகி கார்வண்ணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்திடு என்று அன்புடன் விடுத்த வேண்டுகோளை மறுத்த கும்பகருணன் இராவணனைத் துறவேனென உறுதியுடன் கூறி மீண்டும் இராமனிடமே சென்று இனிது வாழ்ந்திடென விபீடணனை வாழ்த்தி அனுப்பினான்.
    காலனும் கண்டஞ்சும் கடும் தோற்றமும் ஆயுதங்களும் கொண்ட கும்பகருணனை எதிர்த்த நீலன் அங்கதன் சுக்ரீவன் அனுமன் வனரப்படையினர் யாவரும் போரிட்டு தளர்ந்தனரே. அங்கு அச்சமயம் வந்த இலக்குவனின் அம்பு மழையில் சிக்கித் தவித்து
    அங்கும் இங்கும் சிதறி ஓடி அரக்கர் படையினர் சீரழிந்தனரே.
    நேரிலே இலக்குவனின் வில்லாண்மையைக் கண்டு வியந்த கும்பகருணன்
    தேரிலே சென்று இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தானே.
    வாயு மைந்தன் தோள்களெனும் தேரிலமர்ந்த இலக்குவனின் வில்லினின்று விரைவுடன் பாயும் அம்புகள் கும்பகருணனின் தேரையும் தேர்ப்பாகனையும் வில்லையும் அழித்தனவே. சுக்ரீவனை சென்றடைந்த கும்பகருணன் அவனைக் கடுமையாய் தாக்கி வீழ்த்தியபின் அவனைத் தோளிலிட்டு சுமந்து இலங்கை நோக்கி செல்லலானான்.
    இதனைக் கண்ட இராமன் தனது வில்லம்புகளால் வான்வழிகள் அனைத்தும் அடைத்தான் இராமனை முதன்முறையாய் கண்ட கும்பகருணன் அவனுடன் சமர் புரியலுற்றானே.
    திரண்ட கும்பகருணன் கரங்களையும் கால்களைம் இராமனின் அம்புகள் சிதைத்திட வெருண்ட கும்பகருணன் விடாப்பிடியாய் தனது வாயையே ஆயுதமாக்கிப்
    போரிட்டான். மரணம் உறுதி என்று இறுதியாய் உணர்ந்த கும்பகருணன் இராமனை நோக்கி சரணம் அடைந்த தம்பி விபீடணனை இராவணனிடமிருந்துக் காத்திடுக எனவேண்டினான் தன் சிரத்தை அறுத்து எவரும் காணவியலாது ஆழ்கடலுள் அழுத்திடவும் வேண்டினான் தன் கரத்திருந்த வில்லில் நாணேற்றி அம்பெய்து இராமனும் அவ்வாறே செய்தருளினானே.
    மாய சனகனைப் படைத்து சீதை முன்னிறுத்தி அச்சுறுத்தி அவளை இணங்க வைத்திடும் தீய திட்டத்துடன் இராவணன் அசோகவனம் சென்று சீதைமுன் இருக்கையில்
    அளப்பரிய பாசம் கொண்ட சகோதரன் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி எட்டிட உளமொடிந்த இராவணன் அவ்விடமிருந்து அகன்று தன்னிடம் சென்றானே.
    இலக்குவனப் போரில் கொன்று இராமனையும் அவன் தம்பியை இழக்கச் செய்வேனென இலக்காய்க் கொண்டு அதிகாயன் எனும் இராவணன் மைந்தன் போர்க்களம் சென்றானே. தோள் தாள் தலை இவையெலாமின்றி கிடந்த கும்பகருணன் உடலை நோக்கித் துயறுற்று சூளுரைத்தான் அதிகாயன் இலக்குவனையும் கும்பகருணன் போல் செய்து முடிப்பேனென. வாயு மகன் அனுமன் தோள் மீதமர்ந்து இலக்குவன் அதிகாயனுடன் கடுஞ்சமர் புரிந்து நான்முகன் அத்திரத்தை இறுதியில் எய்திட அது அதியமான் சிரத்தை கொய்து சென்றதே.
    சோகக் கடலில் இராவணன் மனைவி தானியமாலி அதிகாயன் மரணத்தால் மூழ்கியிருக்க மேகனாதன்(இந்திரசித்து)எனும் மண்டோதரி வழி இராவணன் மைந்தன் அவ்விடம் வந்தான் அதிகாயன் சிறிய தந்தை கும்பகருணன் அவன் புதல்வர் கும்பன் நிகும்பன் மரணம் அறிந்து அதிகமாய் ஆத்திரமடைந்த இந்திரசித்து பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தான்.
    இந்திரசித்தை எதிர்த்த வானரவீரர்கள் பேரளவில் அழிந்திட வானரத்தலைவர் தளர்ந்திட இந்திரசித்தை எதிர்த்துப் போரிடஇலக்குவனால் மட்டுமே இயலுமென விபீடணன் இயம்பிட சூழ்ந்து நின்ற அரக்கர் படையை இலக்குவன் தன் வில்லம்புகளால் வீழ்த்திட
    வீழ்ந்த அரக்கர்களைக் கண்ட இந்திரசித்து தேரிலே சென்று இலக்குவன் முன் நின்றான். தேரிலே அமர்ந்து இந்திரசித்தும் அனுமன் தோளிலே அமர்ந்து இலக்குவனும்
    நேரிலே ஒருவரோடு ஒருவர் பொருதி கடுஞ்சமரில் ஈடுபட்டனரே.
    மேகனாதனின் தேர்க்கொடியையும் தேர்ப்பாகனையும் தேரில் பூட்டிய சிங்கங்களையும் வேகமாய் செலுத்திய அம்பு மழையால் இலக்குவன் வீழ்த்தியபின்
    அவனது கவசத்தை ஊடுருவி அவனது மார்பையும் அம்புகளால் துளைத்தான்
    தனது வில்லைத் தேரில் ஊன்றி செயலற்று நின்ற எதிரியைக் கொல்லவும் நினைத்தான் சித்து செய்வதில் பிரசித்தி பெற்ற இந்திரசித்துவிண்ணில் மறைந்து நாகபாசமெனும் அத்திரத்தை எய்திட இலக்குவன் வானரப்படையினர் யாவரும் கட்டுண்டு வீழ்ந்தனரே இரத்தம் பெருகிட இந்திரசித்து தன் அரண்மனைக்கு தளர்ச்சியைப் போக்கிடச் சென்றான் சித்தம் குலைந்த விபீடணன் தன் இயலாமையை எண்ணி எண்ணி புலம்பலுற்றானே. சமர்க்களம் அடைந்த இராமன் கட்டுண்ட இலக்குவனையும் மற்ற யாவரையும் கண்டு தன்னுளம் உடைந்து விழி நீர் பெருக விபீடணன் மூலம் யாவும் கேட்டறிந்தான்
    வானுலகத்திருந்து இவை யாவும் கண்ட கருடன் இராமன் கலங்குவதை காணச் சகியாது தானிருக்குமிடத்திருந்து மிகப்பரந்த தன் சிறகடித்துப் பறந்து வந்து இராமனிடம் சேர்ந்தான் கருடனின் வருகையால் நாகபாசங்கள் யாவும் சிதறிட கட்டுண்ட யாவரும் விடுபட்டனரே! கருடன் பின்னர் திருமாலின் அம்சமான இராமனிடம் விடை பெற்றுச் சென்றானே.
    பெற்ற மைந்தன் இந்திரசித்தை இராவணன் மறுபடியும் போர்க்களம் அனுப்புமுன்
    மற்ற அரக்கர் தலைவர்கள் இராவணனை வேண்டி போர்க்களம் புகுந்தனரே.
    நீண்ட நேரம் அவ்வரக்கர்கள் வானரத்தலைவர் இலக்குவன் இராமன் இவர்களுடன் பொருதி மாண்ட செய்தி இராவணனுக்கு எட்டிட அவன் இந்திரசித்தை களம் செல்லப் பணித்தான்.
    இந்திரசித்து பெரும் படையுடனும் ஆரவாரத்துடனும் போர்க்களமடைந்து அங்கு வந்தெதிர்த்த வானரப்படையைக் கடுமையையாய்த் தாக்கி பேரளவில் அழித்தானே. இலக்குவனுடன் பின்னர் தனியே நேருக்கு நேர் பொருதியபொழுது இந்திரசித்து இலக்குவனின் தாக்குதலில் தன் கவசத்தையும் தேரையும் இழந்து நின்றானே.
    மேகனாதன்மேல் இலக்குவன் பிரம்மாத்திரத்தை பிரயோகிக்க விழைந்திட
    கார்மேக வண்ணன் இராமன் மூவுலகங்களும் அதைத் தாங்க இயலாதென தடுத்தான். இதையறிந்த வஞ்சகன் இந்திரசித்து மாயமாய் விண்வெளி அடைந்து மேகத்தில் மறைந்து விரைந்து இலங்கை அடைந்து பிரம்மாத்திரம் செலுத்த வேள்வி மேற்கொண்டானே.
    அச்சமயம் நடந்துகொண்டிருந்த போரில் அரக்கர்படை பேரிழிவைச் சந்திக்க
    இச்செய்தி இராவணனையும் இந்திரசித்தையும் எட்டிட இருவரும் மிக்க சினமுற்றனரே. ஒருவரும் காணாவண்ணம் விண்ணில் மாயமாய் மறைந்திருந்து இந்திரசித்து
    பழம்பெரும் பிரம்மாத்திரத்தை கண்ணிமைக்கும்நேரத்தில் இராமன் படைமேல் விடுத்தானே. இலக்குவனும் எல்லா வானரத்தலைவர்களும் வானரப்படையினரும் பிரம்மாத்திரத்துக்கு இலக்காகி மூச்சிழந்து செயலற்று உயிரொடுங்கி நிலத்தில் வீழ்ந்தனரே.
    நடந்தது அறியாது வேறிடத்திருந்த இராமன் போர்க்களம் சென்றபொழுது அங்கு வீழ்ந்து கிடந்த இலக்குவனையும் அனுமனையும் சுக்ரீவனையும் மற்ற யாவரையும் கண்டு இன்னலுற்றுப் புலம்பினான் அழுதான் செய்வதறியாது திகைத்தான்
    தன்னாலேதும் செய்ய இயாலாமையை எண்ணி எண்ணி மருகினான்.
    இறந்தவன் போல் விழுந்து கிடந்த இலக்குவனைக் கண்ட இராமன் தன்னையே
    மறந்து அவன் உடலை தன் மார்போடு அணைத்து துயில்வுற்றான்.
    இராம இலக்குவர் உயிரிழந்தெனரென தூதுவர் செய்தியை இராவணனிடம் தெரிவிக்க இராவணன் பெருமகிழ்ச்சி அடந்து அண்டமே அதிரும் வண்ணம் ஆர்ப்பரித்தான்
    சீதையை அரக்கியர் காவலுடன் ஓர் விமானத்திலேற்றி போர்க்களத்திற்கு அனுப்பி பேதையை இராம இலக்குவர் வீழ்ந்து கிடந்த காட்சியைக் காணச் செய்தான்.
    கணவன் இராமனின் அசைவற்ற உடலைக் கண்ணுற்ற சீதை நஞ்சுண்டது போல் உணர்வும் உடலும் உயிர்த்தலும் ஓய்ந்து அடியற்ற மரம் போல் சாய்ந்தாளே.
    நெடு நேரம் கழித்து கண்விழித்த சீதையை நல்லரக்கியாம் திரிசடை அன்புடன் அணைத்து கொடும் அரக்கர் செய்த மாயையே அக்காட்சி என உணர்த்தி தேற்றினாள்.
    திருமாலின் அம்சமாம் இராமனையும் தம்பி இலக்குவனையும் சிரஞ்சீவி அனுமனையும் ஒருக்காலும் அதர்ம அரக்கர் படையால் அழிக்க இயலாதென சீதைக்கு தெளிவுறுத்தினாள்.
    களம் அடைந்த விபீடணன் முதலில் அனுமனைக்கண்டு மூர்ச்சை பெறச்செய்தான் உளம் மகிழ்ந்த இருவரும் சாம்பவானைத் தேடிச்சென்று அவனை உயிருடன் கண்டனரே. ஒருகணமும் தாமதியாமல் விரைந்து பறந்து சஞ்சீவினி எனும் உயிரளிக்கும் அருமருந்தினைக் கொணர்ந்திடு என அனுமனிடம் கூறிய சாம்பவான் அம்மருந்துள்ள
    கரிய மலைக்குச் செல்லும் வழியையும் அம்மருந்தின் அடையாளங்களையும் கூறினான் பெரிய உருவம் கொண்டு அனுமன் பறந்து சென்று மருந்திருக்கும் மலையையே அடியுடன் பெயர்த்துக் கரத்தில் தாங்கி வந்து போர்க்களம் அடைந்திட அம்மூலிகைக் காற்றால் உயிர்த்து எழுந்தனரே இலக்குவனும் மாண்டு வீழ்ந்து கிடந்த வானரப்படையினரும்.
    மிக்க மகிழ்ச்சியுற்ற இராமன் எதிரில் உயிருடன் நின்ற இலக்குவனைத் தழுவி பின்னர் தக்க தருணத்தில் சஞ்ஜீவினி கொணர்ந்த அனுமனை நீடுழி வாழ்கவென வாழ்த்தினான்.
    மாண்ட வானரப்படை மீண்டும் உயிர் பெற்ற செய்தி ஒற்றர் மூலம் அறிந்து
    வெகுண்ட இராவணன் தனக்கு மிக்க நெருங்கியவரோடு ஆலோசனை நடத்தினான்
    நிகும்பலை எனுமிடத்தில் அரக்கர் துயர் தீர்க்க தான் நடத்தயுள்ள வேள்வியைப்பற்றியும் வானரக்கும்பலை அவ்வேள்வி முடியும்வரை அவ்விடம் வாரது தடுத்திட
    மாய சீதையை உருவாக்கி அனுமன் முன் அவளைக் கொன்று எதிரியை திசை திருப்பிட தீய திட்டம் ஒன்றை இந்திரசித்து விளக்கிக் கூறிட இராவணனும் மகிழ்வுடன் இசைந்தான்
    சூழ்ச்சியாக மாய சீதையை வெட்டி வீழ்த்த அதைக் கண்ட அனுமன் அதிர்ச்சியால்
    வீழ்ச்சி அடைந்திட அயோத்தியை நோக்கி அதை அழிக்கச் செல்வதுபோல் போக்கு காட்டிய மேகனாதன் நிகும்பலையை அடைந்து வேள்வி இயற்ற முற்பட சீதை வதை செய்யப்பட்ட சோக செய்தியை அனுமன் இராமனிடம் சென்று தெரிவிக்க யாவரும் நிலை குலைந்தனரே.
    வண்டு உருவம் கொண்டு விபீடணன் அசோகவனம் சென்று சீதையை உயிருடன் கண்டு மீண்டு வந்து இராமனிடம் யாவும் அரக்கரின் மாயையே என உண்மையை விண்டான் மேகனாதனை வென்றிட அவன் வேள்வியை அழிப்பது அவசியமென விபீடணன் கூறிட வேகமாய் சென்றனரே நிகும்பலையை நோக்கி இலக்குவன் அனுமன் மற்ற யாவரும்.
    இலக்குவன் அம்பு மழை பொழிந்து அரக்கர் படையை அழித்தபின் யாககுண்டத்தை இலக்காக்கி அதனையும் அழித்து மேகனாதனின் வேள்வியையும் நிறைவுறாது செய்தானே உள்ளம் நொந்த இந்திரசித்து அனுமனுடனும் பின் இலக்குவனுடனும் போர் புரியலானான் வெள்ளம்போல் பாய்ந்தனவே ஒருவர் மேல் ஒருவர் எய்த அம்புகளும் ஆயுதங்களும் இறுதியில் இலக்குவன் இந்திரசித்தின் கவசம் தேர்க்கொடி தேர் யாவற்றையும் வீழ்த்த குருதி சொரிய இந்திரசித்து மாயமாய் மறைந்து இலங்கை சென்றடைந்தானே.
    மீண்டும் போர்க்களம் செல்லத் தயாரான மேகனாதன் தான் உயிருடன்
    மீண்டு வாராது மாண்ட பிறகாவது சீதையை விட்டு விடுக என்று தந்தையிடம் கூறிவிட்டு தேரிலே ஏறி பெருமுழக்கத்துடன் போர்க்களம் அடைந்து இலக்குவனைத் தேடிய அவனும் எதிரே வந்த இலக்குவனும் ஒருவர் மேல் விண்ணதிர அம்பு மழைப் பொழிந்தனரே. கடுஞ்சமர் புரிந்தபின் இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்திட
    திடுமென வானத்தில் மறைந்த இந்திரசித்தை இலக்குவன் கண்டறிந்து தனது வில்லினின்று கொடிய அம்பொன்றை எய்து இந்திரசித்தின் இடது கரத்தை வெட்டிட வில்லைப் பிடித்தவாறே அக்கரம் வானிலிருந்து நிலத்தின் மீது வீழ்ந்ததுவே.
    காலனும் அஞ்சும் மற்றொரு அம்பை விடுத்து இந்திரசித்தின் தலையைக் கொய்திட
    சூலம் பிடித்த வலக்கையுடன் உடலும் வெட்டுண்ட தலையும் தரையில் வீழ்ந்தனவே. மேகனாதன் சிரத்தைத் தாங்கிச் சென்ற அங்கதன்
    இராமனது பாதங்களில் காணிக்கையாய் வைத்து வணங்கினானே.
    தலை பத்து கொண்ட இலங்கைத் தலைவனும் அவனது தலைவி மண்டோதரியும் தங்கள் தலைமகன் மேகனாதனின் தலையற்ற உடலைக் காணும் தலைவிதிக்கு உள்ளாயினரே. சோகத்தில் நொந்து பின் கோபத்தில் வெந்த இலங்கை வேந்தன் இராவணன்
    மேகனாதன் தலையைக் கொய்த பகைவர்களின் தலைகளைப் பறிப்பேனென சூளுரைத்தான் தன்னிரு மைந்தர்கள் அட்சயகுமாரனையும் மேகனாதனையும் பறிகொடுத்த மண்டோதரி தன்னுயிர் கணவன் சீதையெனும் அமுதால் செய்த நஞ்சால் மடிவானோ என மயங்கினாள்.
    எல்லாத் திசைகளிலும் பரவி நிறைந்திருந்த அரக்கர் படையினரை இராவணன் அழைத்திட எல்லை இல்லாக் கடல் போல் இலங்கை வந்து குவிந்தனரே அம்மூலப்படையினர்.
    மூலப்படையினரை இராம இலக்குவருடன் போரிட்டு அழித்திட அனுப்பிய இராவணன் வானரப்படையினருடன் போர் புரிந்து அவர்களை அழித்திடத் தானே களமிரங்கினான் வானரப்படைகளைக் காக்குமாறு இலக்குவன், அனுமன் மற்ற யாவர்க்கும் பணித்த இராமன் தானொருவனாய் வில்லேந்ததி அரக்கர் படையுடன் போர்புரிந்திட முன்னே வந்தான். இராமனின் வில்லிலிருந்து பெய்த அம்பு மழையில் அரக்கர் படை அல்லலுற்று அழிந்தது இராமன் பின்னர் இராவணன் இலக்குவனுடன் போரிடும் இடத்தை சென்றடைந்தான் வாயுமகன் தோள் மீதமர்ந்து சமர் புரியும் இலக்குவன் விபீடணன் அளித்த யோசனைப்படி
    தசமுகன் எய்த கணைகளையெல்லாம் உரிய மாற்றுக்கணைகளால் முறியடித்தான் எதிரிக்கு துணையாயிருந்து குறிப்புகளைக் கூறிக்கொண்டிருக்கும் விபீடணனைக் கண்டு குருதி கொதித்த இராவணன் மயன் கொடுத்த கொடிய வேலாயுதத்தை அவன் மேல் வீசிட சரணம் என வந்தடைந்த விபீடணனைக் காப்பது கடமையெனக் கருதிய இலக்குவன் மரணம் வந்தாலும் பொருட்படுத்தாது அவ்வேலை தன் மார்பில் ஏற்று கீழேசாய்ந்தானே.
    கடுஞ்சினம் கொண்ட விபீடணன் இராவணன் தேர்க்குதிரைகளை பாகனை வீழ்த்திட நெடுவானில் சென்ற இராவணன் தம்பி மேல் அம்புகள் எய்து இலங்கை சென்றடைந்தானே வீழ்ந்து கிடந்த இலக்குவனைக் கண்டு யாவரும் கலங்கி நிற்க சாம்பவான் சொற்படி
    விரைந்து சென்று சஞ்ஜீவனி கொணர்ந்து இலக்குவன் உயிர் காத்தானே வீர அனுமன். விழித்தெழுந்த இலக்குவன் விபீடணன் நலம் குறித்து கேட்டறிந்து மகிழ அவ்விடம் மகிழ்ந்து நின்ற இராமன் இலக்குவனையும் அனுமனையும் உளமாரத்தழுவி வாழ்த்தினான்.
    ஒற்றர் மூலம் அரக்கர் படை அழிவையும் இராம இலக்குவர் உயிருடன் இருக்கும் செய்தி பெற்ற இராவணன் துணுக்குற்று போர்க்கோலம் பூண்டு தேரேறி போர்க்களம் புகுந்தானே. முக்கண்ணன் இந்திரனிடம் அவன் தெய்வீகத்தேரை இராமனிடம் அனுப்பப் பணித்திட தக்கதருணத்தில் தேர்ப்பாகன் மாதலி தேரை இராமன் முன் கொணர்ந்து நிறுத்தினானே.
    இலங்கை வேந்தன் இராவணனுடன் வந்த மிகப் பெரிய அரக்கர் படையை இராமன் தன்கையில் ஏந்திய வில்லினின்று பொழிந்த கணைகளால் அழித்து ஒழித்தானே! விரைவாய் இராமனை நோக்கி தேரினைச் செலுத்த பாகனை இராவணன் பணித்திட நேராய் இராமன் முன் தேரைக் கொண்டு நிறுத்தினானே இராவணன் பாகனும்.
    நேருக்கு நேர் இராமனும் இராவணனும் தம் இணையற்ற வில்களை ஏந்தி
    போருக்குத் தயாராய் தத்தம் தேர்களில் எதிர் கொண்டு நின்றனரே!
    இராவணன் எய்த அம்புகளையும் வீசிய ஆயுதங்களையும், படைக்கலங்களையும் இராமன் தன் வில்லினின்று பொழிந்த அம்பு மழையால் செயலிழக்கச் செய்தானே. விண்ணில் திடுமென இராவணன் தன் தேருடன் எழுந்து வானரப் படைகளை அழிப்பதைக் கண்ணுற்ற இராமன் தனது தேரையும் வானில் செலுத்த பாகன் மாதலிக்கு கூறினான். வான் வெளியில் இருவரும் தத்தம் தேர்களில் சுற்றிச் சுற்றி கடுஞ்சமர் புரிந்தட
    காணக் குழுமிய தேவர்கள் யாவரும் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றனரே! இலங்கை வேந்தன் தேர்க் கொடியை இராமன் அம்பெய்து வீழ்த்திய பின்னர் அவன் வீசிய
    கலங்க வைக்கும் அத்திரங்களையும் ஆயுதங்களையும் தக்க எதிர் படைகளால் அழித்தான். தானெய்த கணைகள் கொய்த இராவணன் சிரங்களும் கரங்களும் மீண்டுமீண்டு முளைத்திட பெய்ததே அம்பு மழை இராமன் வில்லிலிருந்து சிதறி வீழ்ந்தனவே இராவணன்
    தலைகள்! பின் இராமன் இராவணன் மேனி முழுதும் வில்லம்புகளால் மூடச்செய்தான்
    தன் நிலை குலைந்த இராவணன் தளர்வடைந்து செயலற்று மூர்ச்சித்து விழுந்தான் . சற்று நேரத்தில் தெளிவுற்ற இராவணன் மீண்டும் சமர் புரிய முயற்சித்திட
    இற்று இரு துண்டாய் அவன் வில் நிலத்தில் விழும்படியாய் இராமன் வீழ்த்தினான். நான்முகனின் கொடிய அம்பு ஒன்றை இராமன் இறுதியில் எய்திட நான்கு முகங்களுடன் தசமுகனின் மார்பில் அது பாய்ந்து உடலக் குடைந்து உயிரைக் குடித்து வெளிப்பட்டதே! தேரிலிருந்து இராவணன் உடல் சினம் மிக்க முகம் தரையில் பட வீழ்ந்ததுவே!
    தன் தேரிலே இராமனும் பூமியிலிறங்கிப் பின்னர் தேரை வானுலகிற்கு அனுப்பினான்.
    முறைப்படி இறுதிக்கடன்களை அண்ணனுக்கு செய்திடு என விபீடணனிடம் இராமன் கூறிட முறையிலா காமத்தால் தன் முடிவைத்தேடிக்கொண்ட அண்ணனை எண்ணி அழுதான். மண்டோதரி கணவன் இராவணன் மரணச் செய்தி அறிந்து போர்க்களம் அடைந்து
    மாண்டு கிடந்த அவன் உடலைக் கண்டு அதன் மீது வீழ்ந்து கதறிக் கதறி அழுதாள். எள்ளிருக்கவும் இடமின்றி உடல் முழுதும் அம்புகள் உயிரைத்தேடி துளைத்தனவோ உடலுள்ளிருக்குமோ சீதைமேல் வைத்த காதலென அதைத் தேடினவோ என்றெல்லாம் தலைசிறந்த கற்பரசிகளில் ஒருவளாய் போற்றப்படும் மண்டோதரி அரற்றி அழுது தலைவன் இராவணின் மார்பைத் தன் தளிர்க் கரங்களால் தழுவி உயிர் துறந்தாளே! அண்ணன் இராவணனுக்கும் அவன் மனைவி மண்டோதரிக்கும் மற்றும்
    எண்ணற்ற மாண்ட அரக்கர்களுக்கும் விபீடணன் ஈமக்கடன்களை செய்து முடித்தானே!
    விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இராமன் பணித்தபடி இலக்குவன் முடிசூட்டினானே. விபீடணனை இராமன் சீதையை சீருடன் அழைத்து வருக என அனுப்பினானே.
    அலங்கரித்த சீதையை இராமன் கட்டளைப்படி விபீடணனும் அழைத்து வந்திட
    படம் விரித்த பாம்பென இராமன் திடீரென சினம் கொண்டு சீதையை நோக்கி சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் கற்பு மேல் ஐயம் எழுப்பி கடும் சொற்களை வீசிட முற்றும் நிலை குலைந்த சீதை இலக்குவனை தீ வளர்த்திடச் செய்து அதை வலம்வந்து சொல்லாலோ மனத்தாலோ செயலாலோ களங்கமுற்றிருந்தால் எரித்தெடென தயக்கமே இல்லாமல் தீயினுள் புகுந்தாளே அவள் கற்புக்கனலின் வெப்பம் சுட்டெரிப்பதை
    தாங்க இயலாத அக்னித்தேவன் பெருத்த ஒலியுடன் சீதையைத் தன் கரங்களில்
    தாங்கிய வண்ணம் மேலுழுந்து வந்து சீதையை இராமனிடம் தந்தானே.
    சிவனும் பிரமனும் அங்கு வந்து இராமனே திருமால் சீதை இலக்குமி என உணர்த்தினரே. தசரதனும் வானுலகத்திருந்து வந்து உளமகிழ்ந்து வேண்டும் வரம் கேட்க இராமனிடம் கூற கொடியவளென கைவிட்ட கைகேயியையும் அவள் மகன் பரதனையும் மீண்டும் ஏற்று அடியவனெனக்கு வரம் தரவென இராமன் வேண்ட தசரதனும் அளித்து வானுலகமேகினான்
    விரைந்து சென்று பரதனை அடைந்திட ஊர்தி ஏதேனுமுளதா என இராமன் வினவிட மறைந்த இராவணன் குபேரனிடமிருந்து கவர்ந்த புட்பக விமானத்தை விபீடணன் அளித்திட வானரர் அரக்கர் அவர்கள் தலைவர்கள் யாவரும் மனித ரூபத்தில் விமானத்தில் அமர்ந்திட இராமன் இலக்குவன் சீதை மூவரும் அமர்ந்தபின் விமானம் விண்ணில் எழுந்ததுவே. செல்லும் வழியெலாம் இராமன் சீதைக்கு இலங்கை நகர், போர்க்களம் சேதுப்பாலம் என எல்லா இடங்களையும் காட்டிக்கொண்டே செல்ல கிட்கிந்தையில் விமானத்தையிறக்கி வானரப் பெண்களையும் அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிட சீதை கூறிட
    வானரத் தலைவன் அவ்வாறே செய்து முடித்திட விமானம் தன் பயணம் தொடர்ந்ததே. மாமுனிவன் பரத்துவாசன் ஆசிரமத்தின் அருகிலிருந்த இடத்தில் விமானத்தை இறக்கி அம்முனிவன் விருந்தினராய் தங்கி அவர் ஆசி பெறவேண்டுமென இராமன் விழைந்தான். வேதங்களில் வல்ல பரத்துவாசன் அனைவரையும் மிக்க அன்புடன் உபசரித்திட அவன் பாதங்களில் இராமனும் யாவரும் வீழ்ந்து வணங்கி அவர் உளமார்ந்த ஆசியை பெற்றனரே. பரதனிடம் சென்று தான் வரும் செய்தியைக் தெரிவித்திடென அனுமனிடம் இராமன் கூறிட துரிதமாய் பறந்து வழியில் குகனிடமும் கூறிய பின் நந்திக்கிராமம் சென்றடைந்தானே.
    வனவாசம் முடிந்து வர வேண்டிய அன்னாளில் அதுவரை இராமனைக் காணாது மனக்கிலேசம் அடைந்த பரதன் சத்துருக்கனனை தீ வளர்க்கச் செய்து அதில்
    புகுந்து உயிர்விட ஆயத்தமானபோது தன் பேருருவத்துடன் விண்ணிலிருந்து குதித்து அங்கு வந்த அனுமன் இராமன் வரும் செய்தியை அறிவித்து தீயையும் அணைத்தானே. இராமன் அனுப்பிய அடையாள மோதிரத்தை அனுமன் பரதனுக்கு காட்டிட யாவரும் இராமனின் மோதிரத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனரே. புட்பக விமானத்தில் இராமனும் யாவரும் அவ்விடம் அடைந்து நிலத்தில் இறங்கினரே. வசிட்ட முனிவர் பின்னர் கைகேயி, கோசலை, சுமித்திரை அன்னயரை இராமன் வணங்கினான் இரண்டு பாதுகைகளையும் பக்தியோடு பாத காணிக்கையையாய் அளித்து வணங்கிய பரதனை தன்னிரண்டு கரங்களாலும் தூக்கி நிறுத்தி இராமன் நெஞ்சாரத் தழுவி விழினீர் பெருக்கினானே! பின்பு இராமனும் அவன் தம்பிகளும் பழைய தோற்றங்களைக் களைந்து சரயு நதியில் நீராடி நன்கு அலங்கரித்த தோற்றத்தோடு தங்கத் தேரினில் அயோத்தி நகர் சென்றடைந்தனரே. வானரப் பெண்டிர் வானவர் பெண்கள் வடிவினராய் சுற்றி அமர்ந்து உடன் வர விமானத்தில் சென்று சீதையும் அயோத்தி அடைந்தாளே.
    இராமன் முடிசூட்டு விழாவிற்கு மறு நாளே நல்லனாளென நேரத்தையும் வசிட்டன் குறித்திட நான்முகன் ஆணைப்படி மயன் வியத்தகு மண்டபமொன்று கட்டி அமைத்தான் சுக்ரீவன் ஆணைப்படி ஏழுகடல் மற்றும் புண்ணிய நதிகளின் நீர்களை அனுமன் கொணர்ந்தான் தங்க பீடமொன்றில் இராமனும் சீதையும் திருமால் இலக்குமியென அமர்ந்து
    மங்கல ஒலிகளும் வாத்திய ஒலிகளும் வேத ஒலிகளும் முழங்க மங்கள நீர் முழுக்காடினரே.
    அனுமன் அரியணையைத் தாங்கிட அங்கதன் உடைவாளை ஏந்தி நின்றிட
    பரதன் வெண் கொற்றக்கொடை பிடித்திட இலக்குவ சத்துருக்கனர் வெண்சாமரம் வீசிட வேத விற்பன்னன் வசிட்டன் இராமனுக்கு முடிசூட்டினானே! அரக்க குரு சுக்கிரனும் தேவ குரு வியாழனும் இட்டமுறைப்படி இராமன் அரசு முடியைத் தலையில் சூடினானே இராமன் இளையவன் பரதனுக்கு இளவரசனாக முடிசூட்டி மகிழ்ந்தானே.
    அரியணையில் அரசி சீதையுடன் அமர்ந்த இராமன் வந்த விருந்தினர் யாவர்க்கும் உரிய முறையில் பரிசுகளித்து கௌரவித்து பேருவகையில் ஆழ்த்தினான் அண்ணல் இராமன் அனுமனை நெஞ்சாரத் தழுவுக என்று அருகில் அழைத்தான் அன்னை சீதை அழகிய முத்தாரமொன்றை அன்புடனும் ஆசியுடனும் அளித்தாள் தரங்கம்சூழ் இலங்கையின் புதிய வேந்தன் விபீடணனுக்கு தன் குலதனமான
    அரங்கனாதன் வழிபாடு விக்ரஹத்தை மனமுவந்து இராமன் அளித்தான் பின்னர் யாவர்க்கும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிட இராமன் விடை கொடுத்தனுப்பினான்

    அன்னவர் யாவரும் தத்தமிடங்களுக்கு மன நிறவுடனும் மகிழ்ச்சியுடனும் சென்றடைந்தனரே.
    மேல் உலகத்திருந்து இவ்வுலகம் வரை உள்ள ஈரேழு உலகத்தவரும் போற்ற இராமன் பால் போன்ற தூய உளம் கொண்ட தம்பியருடன் பல்லாயிரம் ஆண்டுகள் அரசாண்டானே!

    இராம கதை முற்றிற்று சுபம்

    பின்னவர் மூவரும் அன்புடன் சூழ்ந்திருக்க
    தன்னவள் சீதையொடு இராமன் வீற்றிருக்க
    அனுமன் இராமன் திருவடியில் அமர்ந்திருக்க
    என்றுமென் நெஞ்சில் நிறைந்த காட்சியாகுமே

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13

    தேமொழி

    கதகளி நடனம்

    kathak

     

     

     

     
     

     
     
     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

      

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12 >>

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 81 (22.07.13)

    மலர் சபாkovalan and vasanthamalai

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

     

    வசந்தமாலை, கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்

    அங்ஙனம் மாதவி கொடுத்த
    மாலையைக் கையில் வாங்கிய
    வேல் போன்ற செவ்வரி மேவிய
    நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,
    கோவலனைத் தேடிச் சென்று
    கூலங்கள் செறிந்திருந்த வீதியில்
    அவனைக் கண்டு
    அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.

    கோவலன் மாதவியின் திருமுகத்தை மறுத்தல்

    வசந்தமாலை தந்த கடிதத்தை
    வாங்க மறுத்த கோவலன்
    பின்வருமாறு கூறலானான்.

    நெற்றியில் திலகமும்
    அதன் மேல் கூந்தலும்
    புருவம் எனச் சிறிய கரிய வில்லும்
    கண்கள் எனக் குவளை மலரும்
    மூக்கு எனக் குமிழ் மலரும்
    வாய் எனக் கொவ்வைக் கனியும்
    உறுப்புகளாகக் கொண்டு….

    என் மேல் காதல் கொண்டவள் போல்
    மதர்த்த எண்ணத்தோடு
    என் முன்னே அன்றொரு நாள்
    இங்ஙனம் தோன்றி நடித்தாளே மாதவி..
    வசந்த மாலையே!
    இதுதான் அவள் நடித்த கண்கூடு வரி.

    கூந்தல் என மேகத்தைச் சுமந்து
    அதன் சுமை தாங்காமல் வருந்தி
    ஒளியைப் பொழியும்
    மதி போன்ற முகம் தன்னில்
    கண்கள் எனக் கயல்மீன்கள்
    உலாவித் திரிகின்ற
    தம் அழகை வெளிப்படுத்தி
    தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து
    ஒளியைத் தருகின்ற இளமுத்து போன்ற
    புன்னகையைக் காட்டி

    நான் ‘வா’ என்றழைத்தால் வந்தும்
    ‘போ’ என்று சொன்னபோது சென்றும்
    உண்மையாய் இருப்பவள் போல் நடப்பாளே..
    அந்தக் கரிய நெடுங்கண்ணி..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காண்வரி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 72 – 77
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி
    http://dinamani.com/weekly_supplements

     

    Share
  • வல்லமை அன்பர்கள் சந்திப்பு!…ஒரு தொகுப்பறிக்கை

    வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில், வல்லமையின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசிக்க, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என, பெருவை பார்த்தசாரதி வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, 13.07.2013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், எழும்பூர், பாந்தியன் சாலையில், வல்லமை ஆலோசகர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

     securedownload (8)

    இந்த அமர்வில் மறவன்புலவு சச்சிதானந்தன், இன்னம்பூரான், பேராசிரியர் நாகராஜன் வடிவேல், ஸம்பத் ராமசாமி, விசாலம், நூ.த.லோக சுந்தரம், மதுமிதா, முனைவர் பானுமதி (ஆதிரா முல்லை), மருத்துவர் செம்மல், பெருவை பார்த்தசாரதி, அண்ணாகண்ணன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். திவாகர் தொலைபேசி வாயிலாகவும் பழமைபேசி ஸ்கைப் வழியாகவும் பங்கேற்றனர்.

    விசாலம் அம்மையார் அவர்களின் இனிய பாடலோடு அமர்வு தொடங்கியது. முயற்சியினாலே வெற்றி கிட்டும் என்ற பொருள் அமைந்த பாடல், சந்திப்பின் நோக்கத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. திவாகர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு, வல்லமை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மேலும் ஒரு எழுத்தாளரை (1+1) வல்லமையில் எழுதவும் வாசிக்கவும் ஆற்றுப்படுத்த வேண்டும் என வேண்டினார்.

    இன்னம்பூரான் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

    வல்லமையில் பங்கு பெறும் அனைவரும், தங்கள் பெற்றோர் / உறவினரின் திறமைகளை வல்லமையில் வெளிக்கொணர வேண்டும். இதனைச் சுய விளம்பரமாகவோ, நம் பெற்றோர் பற்றி நாமே எழுதுவதா என்றும் நினைக்கக் கூடாது. வல்லமையில் இடம்பெறும் பதிவைப் படித்த பிறகு, வாசகர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குத் தோன்றிய கருத்தைப் பின்னூட்டமாகப் பதிவு செய்ய வேண்டும்; ஒரு பதிவை எவ்வளவு வாசகர்கள் படித்தார்கள் என்பது அந்தப் பதிவிலேயே தெரிவதற்கு வழி செய்ய வேண்டும்; வல்லமையை நடத்தத் தேவையான பணவசதிக்காக விளம்பரதாரர்களை அணுக வேண்டும்… உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்தார். மேலும், வல்லமையின் வளர்ச்சிக்காகத் தாம் ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது வல்லமையின் முடிவு என்றும் இன்னம்பூரான் அறிவித்தார்.

    வல்லமை மின்னிதழில் பின்னூட்டம் இடுகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓர் எளிய கணக்குப் புதிருக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதனைப் பரிசோதனை முயற்சியாக ஒரு வாரத்துக்கு நீக்கலாம் என்றும் குறிப்பிட்டார். ஸ்பாம் தாக்குதல்கள் அதிகம் வருவதன் ஆபத்தை அண்ணாகண்ணன் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பில் ஸ்கைப் வழியாகப் பங்கேற்ற பழமைபேசி, தமது வலைப்பதிவில் ஜப்பான், இஸ்ரேல் தொடர்பான பதிவுகளுக்கு ஸ்பாம் பின்னூட்டங்கள் அதிகமாக வந்ததாகக் குறிப்பிட்டார்.

    securedownload (1)

    மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள், வல்லமையைத் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்த வேண்டும். எங்கிருந்தாலும், எந்தக் கையடக்கக் கருவியின் வாயிலாகவும் வாசிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

    விசாலம் அவர்கள், மூலிகை மருத்துவம், மாற்று மருத்துவம் மற்றும் இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகள் வல்லமையில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று கூறினார்.

    பேராசிரியர் நாகராஜன் அவர்கள், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்றார். மேலும், வல்லமையில் வெளியாகும் படைப்புகளை மின்னூல் ஆகப் படிக்க, இதழ் 1, இதழ் 2 எனத் தொகுக்க வேண்டும் என்றார்.

    கவிதாயினி மதுமிதா அவர்கள், படைப்பாளர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர ஊக்குவிக்கும் விதமாக, சிறந்த நூல் விமர்சனப் போட்டி நடத்தலாம் என்றார். இதற்கான பரிசுகளுக்காகத் தாம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்தார். இந்தப் போட்டி குறித்த விவரங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும். மாதந்தோறும் சிறப்பிதழ் வெளியிடுவதை ஆதரித்த இவர், மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியிடலாம் என ஆலோசனை வழங்கினார்.

     securedownload

    திருமதி ஆதிரா முல்லை (முனைவர் பானுமதி) அவர்கள், தங்களின் படைப்புகள் வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும் அதை வல்லமையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் (இந்த முறை மறு பகிர்வு என்ற பிரிவில், ஏற்கெனவே வல்லமையில் செயல்பாட்டில் உள்ளது). மேலும், முக்கிய அறிவிப்புகளைக் குழுமத்தில் மட்டும் வெளியிடாமல், வல்லமை உறுப்பினர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிக்கும் தனி அஞ்சலாகவும் இட வேண்டும் என்றார்.

    நூ.த.லோக சுந்தரம் அவர்கள், வல்லமையின் இலக்குகளைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்றார். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த எதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்பது, மிகவும் விரிவான களமாய் இருக்கிறது. இன்னும் குறிப்பிடத்தகுந்த இலக்குகளை வகுக்க வலியுறுத்தினார்.

    ஸம்பத் ராமசாமி அவர்கள், அரசியல் தவிர மற்ற எந்தத் துறைக்கும் முன்னுரிமை அளித்து, புதிய படைப்புகளைப் பெற முயல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். வல்லமையில் அரசியல் கூடாது எனக் கட்டுப்படுத்த இயலாது, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல் என்பது வல்லமையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. வெளியிடும் கருத்துகளை சட்ட, நீதி நெறிகளுக்கு உட்பட்டு, உரிய சான்றுகளுடன், கண்ணியமாக வெளியிடலாம் என அண்ணாகண்ணன் நினைவூட்டினார்.

    securedownload (2)

     

    கூட்டம் முடிவடையும் நேரத்தில், மருத்துவர் செம்மல் அவர்கள், ஒரு போட்டியை அறிவித்தார். முதலில் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு படிக்கும் மாணவர்களில் சிறந்த 5 பேச்சாளர்களை அந்தப் பள்ளியே முன்மொழிய வேண்டும். வல்லமை கொடுக்கும் ஒரு தலைப்பில், அந்த 5 மாணவர்களும் தலா 7 நிமிடங்கள் பேச வேண்டும். அவற்றைக் காணொலியாகப் பதிய வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து காணொலியையும் அறிவியல் தமிழ் மன்றத்தின் யூடியூப்  தளத்தில் வெளியிட வேண்டும்.  இந்த 5 காணொலிகளும் அடுத்த 100 நாள்களில் எவ்வளவு பார்வைகளைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்தும் வல்லமை நடுவர் குழுவின் கருத்தினை ஒட்டியும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்தார். போட்டியில் பங்கேற்கும் பள்ளி, சென்னையில் இருந்தால் தாமே நேரடியாகச் சென்று பதிவதாகவும் வெளியூரில் இருந்தால் அந்தந்தப் பள்ளியே காணொலியைப் பதிந்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். போட்டியாளர்களைக் கொண்ட பள்ளியைத் தேர்ந்தெடுப்பது, போட்டிக்கான தலைப்பு, நடுவர் தேர்வு போன்ற பணிகளை வல்லமை கவனிக்கும்.  காணொலியைப் பதிந்து, வலையேற்றுவது, பரிசளிப்பு ஆகிய பணிகளை அறிவியல் தமிழ் மன்றம் ஏற்கும் என்றார்.

    பெருவை பார்த்தசாரதி, ஆசிரியர் குழுவின் பிரதிநிதியாகச் சில கருத்துகளை முன்வைத்தார். படைப்புகளைப் பதிவேற்றி வெளியிடும் முறையில் சற்று மாறுதல் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது, எழுத்தாளர்கள் அனைவரும் தங்களது படைப்புகளை ஒரு குறிப்பிட்ட வடிவம் என்ற முறை இல்லாமல், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப PDF அல்லது ஒருங்குறி அல்லாத வேறு எழுத்துருவில் ஆசிரியரின் முகவரிக்கு வந்து சேருகிறது. பிறகு அதனை ஆசிரியர் குழுவினர் பரிசீலித்து, எழுத்துப் பிழைகளைத் திருத்தி, உரிய படங்களைத் தேடி இணைத்து, முறையான ஒரு வடிவத்தில் வல்லமையில் பதிவேற்றப் பெறுகிறது. இவற்றுக்கு ஆசிரியர் குழுவினர் அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. சில நேரங்களில், சிலரின் ஒரு படைப்புக்கே ஒரு மணி நேரம் செலவிட நேர்வதும் உண்டு. எனவே, இம்முறைக்குப் பதிலாக, படைப்பாளர்களே, தங்கள் படைப்புகளைத் தாங்களே திருத்தி, முழுவதுமாக வடிவமைத்த (completes editing work) பிறகு, பதிவேற்றத் தயாரான நிலையில்  ஆசியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர், ஆசிரியரின் ஒப்புதலுக்குப் பிறகு அது வெளியிடப்படவேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் பணிப் பளு பெருமளவு குறையும். மேலும் படைப்பாளியே எப்படி வெளியாக வேண்டும் எனப் பக்கத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் பெறலாம். எந்த இடத்தில் எந்தப் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும் என்ற யோசனையைப் பெருவை பார்த்தசாரதி முன்மொழிந்தார்.

    இம்மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில், படைப்பாளிகள் தங்களது படைப்புகளைனத் திருத்தி வடிவமைத்த பிறகு அதைச் சரிபார்க்க மட்டுமே (editing and view) முடியும் என்பதையும், அதை வெளியிடும் (Publish) உரிமை ஆசிரியருக்கு மட்டுமே உரியது என்பதையும் பெருவை பார்த்தசாரதி நினைவூட்டினார்.

    மதியம் இரண்டு மணி அளவில், கலந்துரையாடல் கூட்டம் இனிதே முடிந்து, அசோகா உணவகத்தில் உணவருந்திவிட்டு அனைவரும் விடைபெற்றோம்.

    வல்லமை ஆலோசகர் விஜய திருவேங்கடம் அவர்கள், இந்தக் கூட்டத்துக்காகப் புறப்பட்டு வந்தபோதும், உரிய முகவரியை எடுத்து வர மறந்ததால், பெரும் அலைச்சலுக்குப் பிறகு, வேறு வழியின்றி வீடு திரும்பினார். அண்ணாகண்ணனின் முந்தைய செல்பேசி எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அது முதன்மைப் பயன்பாட்டில் இல்லாததால், மவுனித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய திருவேங்கடம் அவர்கள், திட்டமிட்டபடி, இந்தச் சந்திப்புக்கு வர இயலாமல் போயிற்று. வேறு நெருக்கடி காரணமாகச் செல்வ முரளியும் இதில் பங்கேற்கவில்லை.

    இந்தச் சந்திப்பில் பங்கேற்ற அனைவருக்கும் வல்லமை வளர் தமிழ் மையம், உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆலோசனைகள் வழங்கியும் நிதியளிக்க இசைந்தும் போட்டிகளை அறிவித்தும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கியும் பலரும் வல்லமையின் வளர்ச்சிக்கு வழிகோலுகின்றனர். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எங்கள் நன்றிகள்.

    ஒரு முக்கிய வேண்டுகோள்:: வல்லமையின் வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத அன்பர்கள் அனைவரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தம்மால் எந்த விதத்தில் வல்லமையின் வளர்ச்சிக்குப் பணியாற்ற முடியும் என்பதையும் தெரிவித்தால், பெரிதும் உதவிகரமாக அமையும். இணைந்து செயலாற்றுவோம், இன்னும் பல முத்திரைகள் பதிப்போம்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம்.

    Share
  • வார ராசி பலன்!…22-07-13 – 28-07-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:மாணவர்கள் கடினமான பாடங்களை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்காக, பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே சிறிய சண்டைச் சச்சரவுகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பெண்களுக்கு வரவும், செலவும் போட்டி போட்டுக் கொண்டு வரும். உள்ளன்போடு பழகுபவர்களின் ஆதரவு பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தனித்தெம்பைத் தரும். வியாபாரிகள் செலவுகளில் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள். கிடைக்கும் லாபத்தின் அளவு குறையாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டப்படி நடப்பதில் சிறு சுணக்கம் ஏற்படலாம்.

    ரிஷபம்: அலுவலக வட்டத்தில், உபத்திரவம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடாமல் இருக்க, அனைவரிடமும் பக்குவமாகப் பழகுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய விரோதம் மீண்டும் தலைகாட்டும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் மாணவர்களுக்கு அடிக்கடி பராமரிப்பு செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பணியில் இருப்பவர்கள் திடீரென்று வரும் இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பதன் மூலம் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளலாம்.

    மிதுனம்: இந்த வாரம் உங்கள் செல்வாக்கு மூலம் லாபம் அடைந்தவர்களேதக்க நேரத்தில் உதவி செய்ய யோசிப்பார்கள். பெண்களிடம் நெருக்கம் காட்டி வந்த உறவுகள் மெல்ல விலகும் . கலைஞர்கள் அவசரமாக பணியில் ஈடுபட்டாலும், விரும்பிய பலன் கிடைக்க, நண்பர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மதிப்பு, மரியாதை தெரியாதவர்களிடம் பழக நேரிடும். எனவே எந்த சூழலிலும் சொந்த விஷயங்களைப் பிறரிடம் பரிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும்.

    கடகம்: இல்லத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க, பெண்கள் நிதானத்தைக் கடைபிடித்து வந்தால்,உறவுகள் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமல் வேலைகளில் ஈடுபடலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பொறுப்புக்களை நிறைவேற்றுவதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் கடின முயற்சி மற்றும் அலைக்கழிப்புக்குப்பின் கலைஞர்களின் உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்கி வேலை செய்து கடனை அடைத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்துவதாக அமையும். பெண்கள் மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்வதன் மூலம் குடும்பப் பொறுப்புக்களை சரிவர செய்து நல்ல பெயரைப் பெறலாம். கலைஞர்கள் தங்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும்.

    கன்னி: இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப்படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம்,இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிப்பது நல்லது.. வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.

    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில், மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.

    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்சனைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும். கலைஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதைகள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட்களின் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ்தாபம் நீங்கும்.

    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.

    மீனம்: சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்த வாரம் சக ஊழியர்களின் போக்கில், இணக்கமும், சுணக்கமும் கலந்தே காணப்படும். எனவே பணியில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடந்த கால சோதனைகள் தந்த பாடங்களை நினைவில் கொண்டு செயலாற்றினால், வெற்றியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் . வியாபாரிகள் சரக்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெரிய தொகைக்கான வாக்குறுதி தருவதில் கவனமாய் இருப்பது நல்லது.

    Share
  • மகளின் அன்பு மடல்

     

    பொன் ராம்


    நான் உறங்க

    நீ விசிற

    நீ உறங்க

    நான் விசிற

    ஏன் மறுத்தாய்?

    உன்னால் இன்று

    உலகறிந்த அவைதனில்

    தூண்டி விட்ட

    பிரகாச விளக்காய்

    சுடர் விட்டு

    ஜொலிக்கின்றேன்!

    பெருமை கொண்டு நோக்க

    யாருமில்லை என்னருகில்!

    யாருக்காக இந்த வாழ்க்கை

    என பலமுறை

    உப்பு நீர் தலையணை

    உறவுகளிடம்

    உரைத்திங்கு

    வாழ்கின்றேன்!

    அறுசுவையும் தட்டிலிட

    அன்னையின் முகமோ அதிலாட

    சாப்பிட்டால் என்னருகில் நீ!

    கனவினில் வாழ்கின்றேன்!

    சிதறிய கண்ணாடித் துகளாய்

    சிரிக்கின்றேன்!

    மிதந்த பந்தாய்

    பெற்றவனின் பாசக்

    கணைகளுக்குள்

    கட்டுண்டு கிடக்கின்றேன்!

    கனவில் வந்துதித்த

    பயன் கருதா அட்சய பாத்திரமே!

    நிலவு முகம் காட்ட மறந்தனையோ!

    எத்தனை பிறவி வாழ்ந்தாலும்

    உனது மகளாய்ப் பிறக்க

    இறைவனிடம் வரம் கேட்க

    கவிதைச் சிறகுகளுடன்

    பறக்கத் துடிக்கும்  மகளின்

    தமிழ் விடு தூது.

     

     

    Share
  • “பத்ரமா இருங்கப்பா!”

    தி.சுபாஷிணி

    ‘அப்பா’ என்று கூப்பிட்டவாறே அப்பாவின் வீட்டினுள் செல்கின்றேன். முன் வீட்டில் அப்பா இல்லை. காலையில் படித்த செய்தித்தாட்கள் பெஞ்சில் இருக்கின்றன. எப்பவும் யாராவது ஒரு நண்பர் அமர்ந்திருக்கும் நாற்காலி காலியாக இருக்கின்றது. அப்பாவின் நாற்காலியில் அவர் எப்பவுமே விரித்துப் போட்டிருக்கும் துண்டுதான் இருக்கின்றது. பக்கத்தில் இருக்கும் ஈஸிசேரைக் காணவில்லை. மேசையின் மேல் உள்ள திறக்கப்படாத கேரியர் என்னைப் பாவமாகப் பார்த்தது. தேவையில்லாமல் ஒரு நிசப்தம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அதை விரட்டித் தள்ளிக் கொண்டு உள் வீட்டில் நுழைந்தேன். அப்பா கட்டிலில் படுத்துக் கொண்டு இருக்கின்றார்-. எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இந்தக் காலை வேளையில் படுக்கின்ற அப்பா இல்லையே என்னுடைய அப்பா என்று எண்ணம் ஓட, அதற்கு முன் என் கைகள் அவரது கையைப் பற்றிக் கொண்டன. அப்படியே அவரது அருகில் அமர்கிறேன். சிறுவயதில், இந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த ஊரையே வலம் வரமாட்டோமா என்று ஏங்கி இருக்கின்றேன். இந்த அப்பாவின் மகன் நான் என்று பெருமையாய் எங்கள் தெருவில் நடக்க ஆசைப்பட்டிருக்கின்றேன். ம்…இதுவரை நடந்ததில்லை!

    அப்படியே அவரையே என் கைக்குள் அடக்கி விட்டப் பரவசத்தில் இருக்கிறேன். அதை இன்னும் உறுதி செய்வதுபோல் அவரது உள்ளங்கை வெப்பம் என்னுள் பரவியது. மெதுவாக எனது ஒரு கையை எடுத்து அவரது நெற்றியில் வைத்துக் கொண்டே ‘அப்பா’ என்று அழைத்தேன்.

    ‘யாரு? சுந்தரமா!’ வாப்பா? என்ன இந்த நேரத்தில் என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினார் அப்பா.

    ‘ஆமாம்பா! சுந்தரம்தான்! என்னப்பா காய்ச்சல் அடிக்குதே!” என்றேன் நான்.
    “இல்லைப்பா! கொஞ்சம் சளி பிடித்திருக்குதுப்பா! அதனால் உடலில் சூடு இருக்குது. மற்றபடி பயப்படும்படி ஒண்ணுமில்லைப்பா’ என்றார் அப்பா.

    “அமாம்! இன்னேரத்துக்கு என்ன படுக்கையில் நீங்கள் படுத்துவிட்டீர்களே! சாப்பாட்டுக் கேரியர் கூட திறக்கவில்லை போலிருக்கு! கொஞ்சம் பயந்துதான் போய்விட்டேன் அப்பா. என்னுடன் வந்து இருங்கள் என்றால் அதற்கும் காரணங்கள் காட்டி தட்டிக்கழித்து விடுகிறீர்கள். உங்களிடம் எங்களால் பேசி ஜெயிக்க முடியாது போய்விடுகிறது” என்றேன் நான்.

    சரி! அதெல்லாம் இருக்கட்டும் சுந்தரம்! எழுந்து வா! என் படிக்கும் அறைக்குப் போகலாம் என்று அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு முன் வீட்டிற்கு வந்தார்.

    அப்பா! நான் வரும்போது இங்கு யாரும் இல்லை. அதுதான் பயந்து போய்விட்டேன்பா என்றேன் நான்.

    “என்னய்யா! பேரன் பேத்தி எடுத்துவிட்டாய். இன்னுமா குழந்தைபோல் பயப்படுவார்கள். இதோ பார்! நான் சரியாகத்தான் இருக்கின்றேன். பரிட்சை நேரம் என்பதால் படிக்கிற பசங்க எல்லாம் அவரவர் வீட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா சந்தேகங்களையும் நான் அவர்களுக்கு தீர்த்து வைத்துவிட்டேன். அது ஆசிரியர் தொழில் பார்த்ததின் நீட்சி என்னலாம். நம் வீட்டின் எதிரில் நடக்கும் கலை அறிவியல் மன்றம் இன்று நடைபெறவில்லை. இதனால் அதற்கு வரும் நண்பர்களும் இங்கு வரவில்லை. இதற்குப் போய் பயந்து போவாங்களா!” – இது அப்பா. பேசிக் கொண்டே அவரது நாற்காலியில் அமர்ந்தார். அமருமுன் தன்னிச்சையாக அவரது கைகள் நாற்காலியில் தொங்கிய துண்டை சரி செய்தது. சென்றமுறை நீயும் மருமகளும் வந்தபோது வாங்கிக் கொடுத்து விட்டுப் போன துண்டு இது என தன்னிடம் சொல்வது போல் என்னிடம் கூறிக் கொண்டே அமர்ந்தார் அப்பா.

    நானும் பக்கத்தில் தரையில் அமர்ந்து கொண்டேன். என் உயரத்திற்கும் அவரது மடிக்கும் உயரம் சரியாக இருந்தது. அவரது கைகளில் என் முகம் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பாதுகாப்பாக இருந்தது போல் உணர்ந்தேன். அவரும் என்னைத்தன் கைகளில் தாங்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தார். அந்த அறையை இருவரின் உணர்வுகள் கலந்து நிரப்பின. இந்நிலையை முடிக்க நான் விரும்பவில்லை. அதுவாகவே முடியட்டும் என வாளா இருந்தேன்.. அப்பாதான் “என்னப்பா! என்ன விஷயம்” என்று கேட்டு இதை முடித்து வைத்தார்.

    “உங்க மருமகள் ராஜியின் தங்கை மகன் மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடிக்க முடிவெடுத்துள்ளான். நானும் ராஜியும்தான் அப்பா இத்திருமணத்தை முன்னின்று நடத்துகின்றோம். இது திடீரென எடுத்த முடிவு. நாளை மறுநாள் சென்னைக்குப் போய், அங்கிருந்து முக்கியமானவர்களை அழைத்துக் கொண்டு விமானத்தில் போகிறோம்ப்பா!” என்றேன் நான்.
    “நல்ல விஷயம்தானே சுந்தரம்! ஏன் தயங்குகிறாய் அய்யா! என்னுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்குத் தெரிவித்துவிடு. நல்ல காரியம்! நாமதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்! சிறப்பாக செய்வாய் நீ. அதும் உன் மனைவி ராஜி மிகவும் அன்பானவள். எளிதில் பழகிவிடுவாள். தெளிவாக சிந்திப்பவள். நீதானேப்பா உன் தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைத்தவன். இதில் என்ன தயக்கம்! வேறு மாநிலம் என்பதாலா! நமக்கு மனிதர்கள்தாம்பா முக்கியம். மாநிலம் அல்ல! ஜமாய்த்து விடுப்பா. இருபக்க உறவுகளுக்கும் அனுசரனையாய் இருந்து விட்டுவா” என்று கடகடவென பேசி முடித்துவிட்டார் அப்பா.
    அப்பா! எப்பவுமே அப்படித்தான். அவருக்கு எப்பவும் நல்ல விஷயங்கள்தான் மனதுக்குப்படும். அப்பா! ஆனந்தமாய்த் தானும் இருந்து கொண்டு தன்னை அடுத்தவரிடமும் அந்த ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்துவிடுவார்.

    ‘நீங்கள் சொல்வது சரிதான் அப்பா! நான் தயங்குவது…’ என்று இழுத்தேன்.
    ‘என்னப்பா! எதுவாகிலும் தயங்காமல் கூறு’ என்று எனது தயக்கத்தின் திரையை விலக்க முற்பட்டார் அப்பா!

    “நாம் இருப்பதோ தென்கோடி, திருமணம் நடைபெறும் இடமோ வடகோடி. அங்கு சென்று திருமணம் முடித்து விட்டு வீடு திரும்ப 15 நாட்கள் ஆகும்பா. அதுதான் யோசிக்கிறேன்” என்று எனது மனத்தயக்கத்தை கூறினேன் அவரிடம்.

    “சுந்தரம்! நீ தயங்காது பயப்படாது சென்று வா. நீங்கள் இருவரும் வாழ்வினைத் தொடங்கி வைக்கப் போகிறீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது. மேலும் இது வெறும் சளித் தொந்தரவுதான். என் நண்பர்கள் அடிக்கடி வருகிறார்கள். என்னைப்பார்த்துக் கொள்வார்கள். உனக்குத்தான் தெரியுமே. நானும் என் உடல்நலத்தில் மிகவும் அக்கறைப்படுபவன் என்று இன்னும் சில வேலைகள் இருக்குப்பா.” என்றார் அப்பா.

    “அப்பா! அவ்வளவு தூரம் போகிறோமே என்றிருக்கிறது” என்றேன் நான்.
    “இதோ பாரு! சுந்தரம்! எந்த மனத் தடையுமில்லாது போய் வா. நீ எப்போதும் கூறிக் கொண்டிருப்பாயே அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும் என்று. அந்த அன்பு என்னைப் பத்திரப்படுத்தும். சலனப்படாமல் சென்று வா. ராஜியிடமும் நான் விசாரித்தேன் என்று சொல்லு. பணத் தேவையுமில்லை. என்னிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றது” என்றார் அப்பா.
    “நீ கிளம்புய்யா! உனக்கு ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யும் வேலை பல இருககும். நீ வரும் போது வந்து பார். இதை விட பிரமாதமாக இருப்பேன்” என்ற அப்பாவிடம் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். உடம்புதான் கிளம்பியது. மனம் அங்கேதான் கிடந்தது. ‘பத்ரமாய் இருங்கப்பா’ என்று கூறிவிட்டுத்தான் என்னுடன் சேர்ந்து கொண்டது.

    அப்பா வாழ்த்தி அனுப்பி வைத்தாற்போல் அழகாய் திருமண வேலைகள் நடந்தன. இரு பக்கத்தாருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. மாநிலம், மொழி எதுவும் இம்மகிழ்ச்சிக்குத் தடையே இல்லை. இங்கு எப்படி அக்கறையும் அன்பும் இருப்பதுபோல்தான் அவர்களிடமும் இருக்கின்றது. இந்தப் பெண்களிடம் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. என்னுடைய ராஜியாகட்டும், அவளுடைய அக்கா, அம்மா, தங்கைகள் மிகவும் சரளமாக தயக்கமின்றி பார்த்த மாத்திரத்தில் பழகி விட்டனர். ஏதோ அவர்களுடன் காலங்காலமாய் பழகினாற்போன்று அவர்கள் மொழி தெரிந்தவர்கள் போன்றும் மணிப்பூரையே கலக்கி விட்டனர். எப்படி, நம் தமிழ்நாட்டில், தான் பிறந்த ஊரில் நடக்குமோ அப்படியே ஒரு சடங்கு விடாமல் நடத்தி, அவர்கள் சடங்குகளைக் கேட்டு அதையும் செய்யச் சொல்லி விட்டனர். புது வாழ்வைத் தொடங்கப் போகிறார்கள் அல்லவா! எந்தப் பக்க மனத்தடங்கலும் வந்து விடக் கூடாதாம். இதை இடை இடையே சொல்லி, இறுதியிலும் சொல்லி திருமணத்தை வெகு சிறப்பாக இயல்பாக நடத்தி விட்டார்கள். அனைவருக்கும் பரம திருப்தி. விமானம் ஏறி சென்னை வந்ததும், ஊர் செல்லும் இரயிலில் கால் வைத்ததும் அப்பாவின் நினைவு என்னைப் பற்றிக் கொண்டு விட்டது. சொல்லி வைத்தாற்போல் ராஜியும் ‘என்னங்க! மாமாவின் நினைப்பு வந்துட்டுதுங்க. ஊர் சேர்ந்த முதல் காரியமாய் மாமாவைப் பார்க்கப் போகணும்’ என்று கூறினாள் ராஜி. அதற்கு என்னிடமிருந்து அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை.
    இரயில் கிளம்பியது. நினைவுகளும் கிளம்பி விட்டன. இரயிலின் தாளகதியில் இணைந்து கொண்டன.

    அப்பா ஆசிரியர் தொழிலைத்தான் முதலில் மேற்கொண்டார். ஆனாலும் எங்கப்பாவிற்கு நாங்கள் என்ன படிக்கின்றோம்? எப்படி படிக்கின்றோம் என்றே தெரியாது. அவ்வளவும் அம்மாவின் மேற்பார்வையில் நடந்தது. நாங்களும் எந்த இடயூறும் செய்யாது படித்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நூலக அளவிற்கு நூல்கள் இருக்கும். பல பத்திரிகைகள் வரும். எனவே எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பு இருந்தது.

    அப்பா படிக்கும் போதே ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் இயக்கத்தால் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். கதர்த்துணி விற்பதும், சுதந்திரப் போராட்டத்திற்காகத் தகவல் பரிமாற்றம் செய்யும் பணியிலும் ஈடுப்பட்டார். மேலும் பாரதி பாடல்கள் என்றால் அப்பாவிற்கு உயிர். காந்தியத்தின் வழி நடந்தார். பின் படிப்பை முடித்துவிட்டு எங்களூர் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தொழிலோடு காந்திய சிந்தனைகளையும் இயக்கத்தையும் மக்களிடையே கொண்டு சென்றார். இதற்காகத் தனி மன்றம் அமைத்தார். பல பிரமுகர்களை அழைத்து வந்து பேசச்செய்தார். அவரது நேர்மை தனக்கு இடையூறு தரும் என்று நினைத்தவர்கள் உடனே அப்பாவை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்கள் அம்மாவுடனே இருந்து விட்டோம். மாற்றலாகி வேறு ஊர் சென்றாலும் அப்பா சும்மா இருக்க மாட்டார். மன்றம் தொடங்குவார், பத்திரிகை நடத்துவார். இப்படிப் பல ஊர்கள் அவரைப் பார்த்து விட்டன. அவர் தொடங்கிய பல இலக்கிய சிந்தனை மன்றங்கள் இன்றளவும் அந்தந்த ஊர்களில் பல இருக்கின்றன. அந்தந்த ஊர்களுக்கு எப்போதாவது செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் “உங்கள் அப்பா தொடங்கிய மன்றம் இது தம்பி!” என்று கூறுவர். எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கும்.

    ஆனால் அப்பாவுடன் ஒருதரம்கூட எந்த ஊருக்கும் சென்றதில்லை. ஏதாவது திருமணம் என்று நாங்கள் கிளம்பினால்கூட அப்பா, தான் தங்கியிருந்த ஊரிலிருந்து நேராக வருவார். அங்கிருந்து நேராகத் திரும்பிச் சென்று விடுவார். அங்கு வந்த போதும் நாங்கள் வேறு சில நான்கு பேர்களோடுதான் நிற்க வேண்டியிருக்கும். சிறுவயதில் இது மிகவும் பாதித்தது. ஏன் இன்னமும் அப்பாவின் சுண்டு விரல் பிடித்து ஊர் சுற்ற வேண்டும். வேண்டுமோ வேண்டாமோ அர்த்தமிலாத கேள்விகளையும் அவரைக் கேட்டுத் துளைத்தெடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. ஏன் இன்னமும் அது நிறைவு பெறாத ஆசையாக தங்கிவிட்டது. இதோ! இந்த இரயில்கள் கடக்கும் விளக்குக் கம்பங்களாய், கடந்தாலும், நினைவில் கடக்காது நின்று கொண்டுதான் இருக்கின்றது.
    அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனந்தமாய் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் தன் கருத்துகளை நேர்மையாய் இருப்பதால் நன்கு வலியுறுத்திக் கூறுவார். மற்றவர் கருத்துகளுக்கு இடம் கொடுப்பார். இதெல்லாம் நான் வளர்ந்தபின் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவை. அவர் வாழ்வின் வேதம் கூறியவையாகும்.

    தன் ஆசிரியர் வேலைப் பணி நிறைவு ஆனதும் முன்பு பிரிந்ததற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அம்மாவும் அப்பாவும் விளங்கினார்கள். அப்பாவின் தெளிவான அறிவு, அம்மாவின் அன்பால் மேலும் மிளிர்ந்தது. எப்போதும் வீடு அப்பாவின் நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கும். நாங்கள் எல்லோரும் அவரவர் வாழ்வை நோக்கிப் பயணப்பட்டோம்.

    அம்மாவும் அப்பாவும் இணைநலங்களாய் வாழ்ந்தனர். முதலில் அம்மா அப்பாவை முந்திக் கொண்டார். அப்பாவை எங்கள் வீட்டிற்கு வந்து விடும்படி நானும் ராஜியும் அழைத்தோம். என் உடன் பிறப்புகளும் மகிழ்ந்தனர். அப்பா அம்மாவிற்கு செய்யும் சில சடங்குகள் முடிந்தபின் எங்களுடன் வந்தார். எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. தனக்காக வாழ்ந்த ஒருத்தியைப் பறிகொடுத்த துயரம்தான் அவரிடம் இருந்தது.

    இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க எனக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. இரயிலின் வேகத்தாலா அல்லது அப்பாவின் நினைவுகள் செய்த படபடப்பா என்று புரியவில்லை. ராஜியும் என்னை ஒரு மாதிரி பார்த்தாள். பின் அவள் சகோதர சகோதரிகளிடம் பேசத் திரும்பி விட்டாள்.
    அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய், இதே கடந்து செல்கின்ற வெய்யில் தின்னும் பச்சைத்தாவரமாய் என் இதயத்தில் பதிந்து கிடக்கின்றன. அப்பாவை அழைத்து வந்ததும் அப்பாவிற்கான அறையைக் காண்பித்தேன். தினந்தோறும் அப்பாவுடன் வாக்கிங் போக வேண்டும் என்று நினைத்தேன். அந்த வயதில் நிறைவு பெறாத ஒவ்வொன்றையும் செய்யத் துடித்தேன். அப்பாவைக் கடைகள் இருக்கும் தெருவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் நண்பர்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்று இவர்கள் என் நண்பர்கள் அப்பா என்று காட்டத் துடித்தேன். அப்பாவும் நானும் ஒரு சினிமா பார்க்க வேண்டும், இலக்கிய கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று இப்படிப் பற்பல.

    எதுவும் நிறைவேறவில்லை, நடைபெறவில்லை. அவர் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு காரில் வந்ததுதான் இருவரும் ஒன்றாக வந்த பயணம். அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அப்பாவை அழைத்துச் செல்லத்தயாராக இருந்தால், அவருக்கு அவரைப்பார்க்க, துஷ்டி கேட்க, இலக்கியப்பகிர்தல் என ஆட்கள் வந்து விடுவார்கள். அவரே கிளம்பலாம் என்றால் அன்று பார்த்து என் நண்பர்கள் இல்லை உறவினர்கள் வந்துவிடுவர். அப்பாவைப் பார்க்க அதிகம் பேர், அப்பா இங்கு இருப்பது தெரிந்து வரத் தொடங்கினர். அப்பாவிற்கு இது மிகவும் கஷ்டமாகி விட்டது. தன்னால் தன் மகனின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக உணரத் தொடங்கினார். அவரால் நண்பர்கள் இல்லாது, நாட்டு நடப்பின் கவலைகளைப் பகிராது இருக்க இயலாது. இதை உணர்ந்ததும், ‘சுந்தரம்’ என அழைத்தார் அப்பா. “வா வெளியில் இப்படி ஒரு உலா போயிட்டு வரலாம்” என்று அப்பா அழைத்தார் என்னை.

    எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! ‘அப்பாவா அழைப்பது’ என்று ஆவலாய் ராஜியிடம் கூட சொல்லவில்லை, கிளம்பிவிட்டேன். ராஜி இது பற்றிக் கிண்டலடிப்பது காதில் விழுந்தது. எனக்கு அப்பாதான் முதன்மையாகத் தெரிந்தார். அவரது அழைப்புதான் உன்னதமாகத் தோன்றியது. இருவரும் காலாற நடந்தோம். தேர்முட்டித் தாண்டி கோயில் குளத்தருகே போய் அமர்ந்து கொண்டோம். அன்று எந்த விசேஷ நாள் இல்லை போலிருக்கின்றது. குளத்தின் படிக்கட்டில் எந்த மனித அரவமும் இல்லை.

    அப்பாதான் முதலில் பேச்சைத் தொடங்கினார். “சுந்தரம்! உன் பொருளாதார வசதியெல்லாம் எப்படி இருக்கின்றது. ஒன்றும் கவலைப்படும்படி இல்லையே! சமாளிக்கும் அளவில்தானே இருக்கிறது” என்றார். எனக்கு திடுதிப்பென்று பொருளாதார வசதியைப் பற்றிக் கேட்டவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஒரு பேச்சின் துவக்கம் என்று பின்னர் புரிந்து கொண்டேன்.
    சுந்தரம்! நான் சொல்லப் போவதை என் உணர்வின் போக்கில் புரிந்து கொள்வாயா! என்று புதிர் போட்டார். “எதாக இருந்தாலும் சொல்லுங்கப்பா! உங்களப்புரிந்து கொள்ளும் அறிவை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள் அப்பா! தயங்காது கூறுங்கள். உங்களுக்கு ஏதாவது பணத் தேவையாப்பா-? உடனே சொல்லுங்கள். என்னிடம் அதைத் தாங்கும். அதையும் கடந்தால் தம்பிகள் இருக்கிறார்கள்” என்றேன் நான்.

    “சே! பணம் எனக்குப் போதுமான அளவு இருக்கின்றது. உங்களுக்குத் தெரியாது என்னிடம் என்னப்பா இருக்கும்! வாழத் தொடங்கின காலத்திலிருந்தே பொது வாழ்வில் ஈடுபட்டவன் நான். அதினின்று என்னை விலக்கிக் கொள்ள முடியவில்லை” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, “அதனால் என்னப்பா! நாங்களோ அம்மாவோ உங்களை ஒருபோதும் தடுத்ததில்லையே!” என்றேன் நான்.

    “அதனால்தான் நான் உன்னிடம் கூறுகின்றேன். என்னை நீ நன்கு புரிந்து கொள்வாய் என்று. என் நண்பர்கள் இங்கு நேரம் கெட்ட நேரத்தில் வருகிறார்கள். அதனால் உங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கிறது. உன் மகள் அனுக்குட்டிக்கு பரீட்சை நேரம் வேறு. சதா ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பதும், சத்தம் போட்டு விவாதிப்பதும் இடைஞ்சல்தானேப்பா! பாவம்! ராஜி அவளும் எத்தனை பேரைத்தான் கவனிக்க முடியும். நான் வேலை பார்க்கும்போது நீயே, குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாய். இனியும் உன்னை சிரமப்படுத்த விரும்பவில்லை. மேலும் அந்த வீடும் சும்மாகத்தானே இருக்கப்போகிறது. நான் இருக்கும் வரை அங்கு இருக்கிறேனே அய்யா!
    என் நண்பர்களும் சுதந்திரமாக வந்து போவார்கள். நீ கவலைப்படாதே! என்னால் என்று முடியாது என்று தோன்றுகிறதோ அன்று உன்னிடம் தானே அய்யா வருவேன்” என்று என் கைபிடித்து அவர் கையில் வைத்துக் கொண்டு கேட்டது, “தயவு செய்து தடுத்து விடாதே” என்பது போல் இருந்தது எனக்கு.

    அப்பாவுடன் ஆறு வயதுச் சிறுவனாய், பத்து வயதுப் பாலகனுக்கு இணையாக நடக்கும் இளைஞனாய் நடக்க நினைத்ததைத்தாண்டி, இப்போது அறுபது வயதில் தோழனாய் அன்று அவருடன் இருந்தது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. என்னை அவர் அப்படி மதித்ததை நினைத்துப் பூரித்துப் போய்விட்டேன். அந்த பூரிப்பே அவரை உணர்ந்த சந்தோஷத்தைக் கொடுத்து, பெருமிதம் கொள்ளச் செய்தது.

    “சுந்தரம்! உற்றார், உறவினர், நண்பர்கள் வேறுவிதமாக உன்னை நினைப்பார்களே என்று யோசிக்கிறாயா அப்பா! அவர்கள் கேட்டால் சொல், அப்பாவால் அவர் இருந்த வீட்டை விட்டு வர இயலவில்லை என்று. மேலும் அவரது சமுதாயப்பார்வை இன்னமும் முடிவடையவில்லை. அதற்கு அந்த வீடுதான் வசதி என்று கூறிவிட்டார் என்று சொல்” என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
    என் அப்பாவை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மா இறந்ததும் ‘வா அப்பா என்னிடம்’ என்றதும் தன் பைநாகப்பையைச் சுருட்டிக் கொண்டுவரும் பெருமாள் போல் என்னுடன் மறுபேச்சுப் பேசாது வந்தார். என்னிடம் இருந்து என் ஆசையை, என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து விட்டு, தன் உணர்வை எவ்வளவு அழகாக யாரும் நோகாது எடுத்துரைத்து விட்டார்.
    இதோ! இந்த பகல் கழித்த இரவின் மென்குளிர்போல், குறைந்த ஒளி இருட்டின் அழகுபோல் அந்த அனுபவம் எனக்கு இன்றும் என்னிடம் இருக்கின்றது. அந்த அனுபவத்தின் நெகிழ்ச்சியில் இரவின் ஆடை நெகிழ, சூரியனுக்கு வழி கிடைத்தது.

    விடிந்தும் விடியாத காலையில் வீடு வந்து சேர்ந்தோம். வந்ததும் வராததுமாக ராஜி ஏதோ மும்முரமாக பையில் போட்டாள். காலை உணவு தயாரித்தாள். இருவரும் உண்டோம். உடனே ராஜி என்னிடம் அந்தப் பையை கொடுத்தாள். நான் அப்பாவின் வீடு நோக்கிப் பயணப்பட்டேன்.
    இளம் வெய்யில், கொஞ்சம் கண்ணைக் கூசியும் கூசாமலும் இருந்தது. இந்தக்கூச்சம் அன்றைய தினத்தை அழகாய் துவக்கி வைத்தது. அதன் சந்தோஷத்தில் அப்பாவின் வீட்டில் நுழைகின்றேன்! அப்பா முன் கட்டில் நாற்காலியில் இருக்கிறார். பெஞ்சின் கீழே டிபன் கேரியர் சாப்பிட்ட அடையாளம் பதிந்துக் கிடக்கின்றது. என்னைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் எழுந்து வருகின்றனர். அப்பா என்னைப் பார்த்து விட்டார்.

    அப்பா! சுந்தரமா! வாப்பா! எல்லாம் நல்லபடியா நடந்ததா! வா! உள்ளேவா! நாம் அங்குபோய் பேசலாம் என்கிறார் உற்சாகமாய். தன் நண்பரிடம் ஊருக்குப் போய்விட்டு வந்திருக்கின்றான். பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. நான் கொஞ்சம் பேசி விட்டு வருகின்றேன் என்று என்னையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

    நான் ‘அப்பா’ என அவர் கைக்குள் என் முகம் புதைத்து அழுகின்றேன்.
    உன் அன்பு என்னைப் பத்திரப்படுத்தும் என்று கூறினேன்! பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று என்னை ஆசுவாசப்படுத்தினார் அப்பா.

    திருமணக்கதைகளை விளாவாரியாகக் கூறி, ராஜி கொடுத்துவிட்டப் பையைக் கொடுத்ததும், அவளது அன்பை அதில் அவர் கண்டார். அவர் கண்களில் அருவியாய் கொட்ட, அவரது வீட்டையே அது மூழ்கடித்துக் கொண்டிருந்தது. “பத்ரமா இருங்கப்பா” என் வார்த்தைகளை அதற்கு அணையாக வைத்துவிட்டு என் வீட்டிற்கு நான் கிளம்பினேன்.

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்

    8. தென் திசைப் பயணம்.

    அல் ஹுசைன் மசூதி படம் : சாகர்

    sa 1

    எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த அங்காடிகளில் ஒன்று கான் அல் கலிலி (Khan el Khalili Bazaar)அங்காடி. துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள எகிப்திய அங்காடி மிகவும் பழமை வாய்ந்தது, அதனைப் பார்த்து நாங்கள் பிரமித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இந்த அங்காடியினைத் துருக்கிய அங்காடி என்றும் அழைத்தனர். இந்த அங்காடி 14ம் நூற்றாண்டில் மல்முக் வம்சத்தினரால் கட்டப்பட்டது. மல்முக் வம்சத்தினர் துருக்கிய ஓட்டமன் பேரரசர்களின் ஒருவகை அடிமை வம்சத்தினர்.

    சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து புழங்கும் இந்த முக்கிய ஸ்தலம் சமீபத்தில் வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இருமுறை பலியானது. மேல்நாட்டுப் பயணிகள் அதிகம் வரும் இந்த இடம் என்பதால் 2005 மற்றும் 2009ல் இந்த அங்காடி தற்கொலை படை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் பல உயிர்கள் பலியானது வருந்தத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து எகிப்திய சுற்றுலா வருவாய் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சிறிது நேர தூரம்தான் என்றாலும் நாங்கள் வந்து சேர்வதற்கு ஐந்தரை மணி ஆகிவிட்டது. எங்கள் ரயில் எட்டு மணிக்கு எனவே எங்களால் அங்கு சிறிது நேரம்தான் செலவிட முடிந்தது.

    சென்னையில் உள்ள தியாகராயநகர் அங்காடிகளை போல் ஒரே கூட்டம். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணக் காவலர் வேறு.வண்டியை விட்டு இறங்கியவுடன் கண்ணில் முதலில் தென்பட்டது அல் ஹுசைன் மசூதி(Al Hussain Mosque) தான். கைரோவின் மிக புராதான மசூதிகளில் ஒன்று இந்த பெரிய மசூதி . முஹமது நபியின் பேரர் முகம்மது ஹுசைன் இப்ன் அலியின் (Mohamad Hussain Ibn Ali) தலை இங்கு அடக்கம் செய்யபட்டிருப்பதாகவும் அதனால் இது இஸ்லாமியரின் புனித தளங்களில் ஒன்று என்று மஹ்மூத் கூறினார். 1154ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி 19ம் நூற்றாண்டில் புதுபிக்கபட்டுள்ளது. இந்த முசூதியில் உள்ள மற்றொரு புனித பொருள் உலகில் உள்ள பழமையான குரான்களில் ஒன்றாகும். இந்த புனித ஸ்தலத்தில் முஹம்மது ஹுசைனின் மகத்துவத்தை விளக்குவதாகச் சொல்லும் ஒரு சலவைக் கல், “ஹுசைனும் நானும் ஒன்று, என்னை விரும்புவர்கள் அவரையும் விரும்புவர்” என்று பறை சாற்றுவதகவும் கூறினார்.

    அந்திவேளை தொழுகை நேரம் என்பதால் எங்களால் உள்ளே போகமுடியவில்லை.அடுத்ததாக நாங்கள் அங்காடிகளுக்குள் நுழைந்தோம். எங்கு பார்த்தாலும் எகிப்து தேச கலைப்பொக்கிஷங்கள், சிறியதாகவும் பெரியதாகவும் கண்களைக் கவர்ந்தன. பிரமிடுகள், எகிப்திய கடவுள் சிலைகள், ஸ்பின்க்ஸ் உருவங்கள் மற்றும் ஒபெளிஸ்க் எனப்படும் நீண்ட தூண்கள் என்று பலவிதமான பொம்மைகள். .

    சிலை வழிபாடு இல்லாத இஸ்லாம் மதம் போற்றும் நாடான எகிப்தில் இவ்வளவு விதமான சிலைகள்! இந்த சிலைகளையும் பண்டை எகிப்திய கோவில்களையும் கலையாகவும் அன்னிய செலாவணி ஈட்டும் நல்ல வியாபாரம் என்ற வகையில் புரிந்தமையால் இவற்றை எகிப்தியர்கள் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டனர்.

    மீண்டும் ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எங்களை எதிர்கொண்டன. காந்திஜி என் கடையில் வாங்கினார் நீங்களும்தான் வாங்குங்களேன் என்ற வியாபார தந்திரம் வேறு. ஹோரஸ், ரா, போன்ற கடவுள் பொம்மைகளை ரசித்துவிட்டு மெல்ல நகர்ந்தோம்.

    எகிப்திய பருத்தி ஆடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை, அந்த ஆடைகளின் சிறப்பு அதன் மென்மை தன்மை, இந்தப் பருத்தி ஆடைகளில் பண்டை எகிப்திய ஓவியங்களையும் கோவில்களையும் வரைந்தும், அச்சு செய்தும் விற்றனர். கிளியோபட்ரா (Cleopatra), ஹத்ஷேபுட்(Hatsheput) , ராமேசெஸ் (Rameses) போன்ற எகிப்திய ராஜவம்சதினர் மற்றும் பிரமிட் மற்றும் எகிப்திய கடவுள் வடிவங்கள் பெரும்பாலாகக் காணப்பட்டன!

    அரபிய தேசங்கள் என்றாலே ஜீணிகள் கொண்ட அற்புதவிளக்கு மிகவும் பிரசித்தம் இங்கேயும் அதுபோல வண்ண வண்ண வகைவகையான அற்புத விளக்குகள்.என்ற விளக்கில் எந்த ஜீணியோ?!

    கடைக்கடையாக பார்த்தவரே நடந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. மஹ்மூத் வந்து எங்களை அழைத்தும் தான் ரயிலுக்கு நேரமானது தெரிந்தது.

    காண் அல் கலிலி அங்காடி

    படம்: விக்கிபிடியா.

    sa 2

    அரைமணிநேர பயணத்தில் கிஸா ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அப்துல் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். மஹ்மூதிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் எங்கள் தென் திசை பயணத்தினை எதிர்நோக்கி உள்ளே சென்றோம்.

    உள்ளே எங்கு பார்த்தாலும் தமிழ். கூட்டம்கூட்டமாக இந்தியர்கள். என் மனைவி உடனே அவர்களில் சிலரைப் பார்த்து விசாரித்துப் பேசி வந்துவிட்டார். அவர்கள் எல்லாம் சென்னையின் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்றும் அணிவரும் எங்களைப் போலவே லக்சொருக்கு செல்கின்றனர் என்றும் அறிந்துகொண்டார். அவர்கள் ஒரு முழு சொகுசுப்படகையும் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரயில் வரும் நேரம் ஆனது! மெல்ல ஒரு வண்டி ரயில் நிலையத்துக்குள் வந்தது. ஒரு வருடம் குளிக்காத பிச்சைக்காரனைப் போல் ஒரே அழுக்கு. எல்லா ஜன்னல்களும் உடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. எங்கள் பயத்தை உணர்ந்தது போலவோ என்னவோ அப்துல்,

    “இது சாதாரண வண்டி, உங்கள் ரயில் சொகுசு வண்டி அது இன்னும் சிறிது நேரத்தில் வரும்” என்றார்.

    “எவ்வளவு நேரத்தில் வரும்” என்று வருண் “கேட்க வரும் நேரத்தில் வரும்” என்று அவர் பதிலளித்தார்.

    எங்களைப் போலவே இன்னும் சில குடும்பங்களும் ரயிலுக்குக் காத்திருந்தன. அவற்றில் சில மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகளோடு காத்திருந்தனர். அப்துல் என்னிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்தார். எங்களை லக்சொரில் மற்றொரு மெம்பிஸ் துணைவர் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார் என்றும் சொன்னார்.

    பேசிக்கொண்டேயிருக்கும்போது மெல்ல எங்களைத் தெற்குநோக்கி அழைத்துச் செல்ல அஸ்வான் நோக்கிச் செல்லும் சொகுசு துரித ரயில்வண்டி வந்து சேர்ந்தது.

    (தொடரும்)

    Share
  • வாலி – வாழி

    வாலி

    கவிதை வரிகளில் கலந்து வாழி

    தமிழின் அழகினில் நிறைந்து வாழி

    அரங்கனோடு  நீ உரங்கப்பா -உன்

    அடிகள் சேருமென் இரங்கற்பா  (வாலி)

     

    அமுத வரிகளில்     இசையக்   கல‌ந்தாய்

    அரியக்கருத்துகள்   இழையச்  சுரந்தாய்

    இருந்த போதினில் பாதி உணர்ந்தேன்

    இழந்தப் போதினில் யாவும் இழந்தேன்

    வாலி பெயரதின் மகிமையோ இது   (வாலி)

     

    செவிலித்தாயெனச் சேய்க்கு கிடைத்தாய்

    செவியில் ஓய்வினில் தமிழைக் கொடுத்தாய்

    தூங்கச் செல்லுமுன் துயரம் அழித்தாய்

    இன்று தூங்கியேன் துக்கம் அளித்தாய்

    வாலி பெயரதின் அருமையோ இது (வாலி)

     

    நதியின் புதரினில் தாடிக் காண்பேன்

    கதிரைப் பொட்டுடை நெற்றி காண்பேன்

    விதியின் வெகுண்டெழும் கோபம் காண்பேன்

    மதியில்  குளிர்ந்திடும் சிரிப்பும் காண்பேன்

    வாலி பெயரனில் உரிமையோ இது (வாலி)

    Share
  • குறவன் பாட்டு – 2

    குறவர் நாகரிகம்-அறிமுகம் 

     

    அவதார இராமனுக்கும் வனவாசம் தண்டனை,

    அழகான பாண்டவர்க்கும் வனவாசம் நிந்தனை,

    அகிலத்தை ஆண்டவர்கள் கொள்ளாத சிந்தனை,

    அன்புற்ற குறவர்க்குக் கானகமே அரண்மனை!                                                                                   11

     

    ஆழிசூழ் அகிலம் காத்து நிற்க,

    ஆண்டவன் படைத்தான் அடர் கானகம்,

    ஆதிநாள் முதற்கொண் டதனைத் தொழுது,

    ஆலயமாய்க் காக்கும் குறவர் கூட்டம்!                                                                                                   12

     

    இயற்கை வகுத்த இலக்கணம் காத்து,

    இலக்கை வகுக்கும் இன்னலை நீத்து,

    இரைப்பை நிறைத்து இலகுவாய் வாழ்ந்து,

    இரண்டற இயற்கையில் கலந்த நல்வாழ்க்கை!                                                                  13

     

    ஈரிதழில் புன்னகையை இன்புற்று ஏந்தி,

    ஈசனுக்கு மந்திரத்தை மனமாரச் சொன்னவனின்,

    ஈடற்ற திருவடியைப் பற்றோடு பற்றி,

    ஈகைகுணம் மேலோங்க வாழ்ந்திடுவர் குறவர்!                                                                 14

     

    உமிழ்நீரைச் சிலநேரம் உணவாகக் கொண்டாலும்,

    உதிர்ந்திலைகள் சருகாகிக் கானகமே வறண்டாலும்,

    உதிக்கின்ற கதிரவனால் உதிரமது உலர்ந்தாலும்,

    உழைக்கின்ற எண்ணத்தைத் தொலைக்காத குறவர்!                                                                      15

     

    ஊழ்வினைபோல் தொடர்ந்த வறண்டகாலம் நீங்கி,

    ஊனம் கொண்டிருந்த கானகமும் மாறும்,

    ஊறும் செவ்வுதிரம் உடலுக்குள் ஏறும்,

    ஊழியம் செய்திடுவான் குறவனவன் மீண்டும்!                                                                                  16

     

    எளிமையான வாழ்க்கையை ஏக்கமின்றி வாழ்பவன்,

    எதிர்மறையாய் வறுமையிலும் எண்ணிடாத எளியவன்,

    எண்ணிலாத கானமுதைக் கண்ணில் கண்டபோதிலும்,

    என்றுமதனை அபகரிக்க எண்ணிடாத தூயவன்!                                                                                17

     

    ஏர்பிடித் துலகம் பழகும் முன்னே,

    ஏற்பது இகழ்வென் றேற்றுக் கொண்டவன்,

    ஏற்ற இறக்கங்கள் எதிர்வரும் போதும்,

    ஏமுற மறவா திதயம் கொண்டவன்!                                                                                                          18

     

    ஐய மென்னும் தீ இன்றி,

    ஐம் புலனும் நோ யின்றி,

    ஐய னென்னும் அறு முகனை,

    ஐங்கரனின் இளையவனைத் துணைகொண்ட குறவர்!                                                  19

     

    ஒல்லாமை வரும்போதும் நில்லாமல் உழைப்பவன்,

    ஒவ்வாமை ஏதுமின்றிக் கானோடு வசிப்பவன்,

    ஒருபானைக் கூழையும் ஓர் நொடியில் குடிப்பவன்,

    ஒரு நாளும் உழைக்காமல் உண்ணாத குறவன் !                                                                            20

     

    ஓமெனும் மந்திரத்தைச் சொன்னவனின் தோழன்,

    ஓங்கிநிற்கும் கானகத்தைக் காக்கின்ற வீரன்,

    ஓரிரு மணித்துளியும் ஓயாது தினமும்,

    ஓடோடி உயிர்வளர்க்கும் காடோடிக் குறவன்!                                                                                     21

    Share