தேமொழி
ஒடிஸி நடனம்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 >>
சச்சிதானந்தம்
இறை வணக்கம்
ஐயமற்று உள்ளத்தில் மைய மிட்ட,
ஐங்கரனுக் கன்பொழுகக் கவிதை யிட்டு,
வையகத்தைக் காத்து நிற்கும் கானகத்தை,
மையமாக வைத்தினிய கவிதை செய்வோம்! 1
எளிதினும் எளிய கவிதை சொல்லி,
இனிதினும் இனிய குறவன் கதையைப்,
புதிதினும் புதிய முறையில் சொல்லப்
புதியவன் முயற்சிக்கு முருகன் துணை! 2
நன்றியைச் சொல்லி நெகிழ்வ தற்காக,
ஒன்றியென் மனதில் உன்னை நினைத்தேன்,
இன்றியுன் கருணை, கவிதைகள் ஏது?
சண்முகன் உன்னால் பண்களைச் செய்தேன்! 3
பரமனை வணங்கிக் குறவனைப் பாடப்,
பாமரன் செய்யும் முயற்சி இது,
ஓமெனும் மந்திரம் பயின்றவன் அருளால்,
பாவெனும் மந்திரம் பழக வந்தேன்! 4
குறிஞ்சி வணக்கம்
நானிலத்தில் முதல் நிலம்,பொங்கும்
பாநயத்தைத் தரும் நிலம்,உயர்
மாமலைகள் அதன் பலம்,அடர்
கானகமாய் வளர்ந்திடும்,குறிஞ்சிக்கு வணக்கம்! 5
குமரன் முகமெனக் குளிர்ந்த குறிஞ்சியை,
விமலன் சடையென விரிந்த குறிஞ்சியை,
கமழும் நறுமணம் நிறைந்த குறிஞ்சியை,
மமனம் குவித்து வணங்கிடு வோமே! 6
ஓரறிவு உயிர்கள் முதல், உயர்
ஆறறிவு மனிதன் வரை, வாழப்
பேருருவம் எடுத்து நின்று காக்கும்
கானகத்தைக் கரம் கூப்பித் தொழுவோமே! 7
தமிழ் வணக்கம்
பயிற்சி இல்லாதவன் செய்திடும் முயற்சியில்,
முயற்சியின் பலனாய் நவின்றிடும் நவிற்சியில்,
பிழை இருந்தால் பெரும்பிழை பொறுத்தருள்க,
பைந்தமிழே செந்தமிழே காத்தருள்க! 8
சொற்பிழை பொருட்பிழை இன்சுவை கெடுக்கும்,
தளை தட்டும் கவிப் பிழை,
இலக்கண விதிகளை மீறிடும் பெரும்பிழை,
எப்பிழை இருப்பினும் பொறுத்தருள் தமிழே! 9
முன்னோர் வடித்த நூல்களில் இருந்து,
மேன்மை பொருந்திய கற்பனை நயங்களை,
மென்மை நிறைந்த சொற்றொடார் வழங்களை,
மனமறியாமல் கையாண்டிருந்தால் ஏற்றருள் தமிழே! 10
மலர் சபா
புகார்க்காண்டம் – 08. வேனில்காதை
மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்
கட்டுப்பாட்டுடன் இதுகாறும்
தன்னுடன் இருந்த
‘நிறை’ எனும் குணம்
காமத்தின் மிகுதியால்
கட்டவிழ்ந்து போனதால்…..
இணைந்தே இதுகாறும்
தம்முடன் இருந்த
அறுபத்து நான்கு கலைகளும்
தொடர்ந்து தம்முடன் வாராமல் போனதால்…..
கலைகள் அவற்றுள் ஒன்றான
பண்பாடும் அவள் திறன்
அவள்தமக்கே நட்பு மறந்து
உட்பகையாகி நின்று
பிறர் புறங்கூறக் காரணமாய் அமைந்திட்டதே……
இங்ஙனம் மழலை மாறாத
மொழிகள் பலவும்
தமது நாவினால்
சொல்லிக் கொண்டே
மடல் வரைந்தனள் மாதவி.
பசலை படர்ந்த மேனியளாய்
கோவலன் நினைவு மிகுந்து வருந்தும்
மாலைக் காலத்தே
தம் தோழியாம் வசந்தமாலையை
வா என்றழைத்து
“தூய மலர் மாலை போன்ற
இக்கடிதத்தில் யாம் எழுதியவற்றின்
பொருள் அனைத்தும்
கோவலனுக்குப் புரியுமாறு எடுத்தியம்பி
இப்போதே இங்கு அழைத்து வருக” என்றனள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 65 – 71
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html
படத்துக்கு நன்றி
http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05
காயத்ரி பாலசுப்ரமணியன்
வார ராசி பலன்கள்::
மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் கல்வி விஷயத்திலும், அக்கறை செலுத்தி வந்தால், குழந்தைகளோடு இல்லத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி யாக இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு செலவினங்கள் கூடினாலும் பணப் பிரச்னைகளை தீர்த்து வைக்க நட்பு கை கொடுக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடு ப ட் டி ருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.மாணவர்கள் வீண் சந்தேகங்களை ஒதுக்கி துணிச்சலுடன் பணியாற்றினால். எதிலும் வெற்றிதான்! இந்த வாரம் கலைஞர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும் இயல்பான வேலைகள் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.
ரிஷபம்: இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். பெண்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற உறவுகள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். வியாபாரிகள் வெளி நாட்டில் இருந்து எதிர்பார் த்த வர்த்தக உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.மாணவர்கள் கோபத்தை கைவிட்டு செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும், சிறு தொழில் புரிபவர்கள் வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
மிது னம் : அலங்காரப் பொருட்கள், மற்றும் ஆயத்த ஆடைகளை விற்கும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் அவ்வ ளவாய் இராது . மாணவர்கள் மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். இந்த வாரம் குடும்ப மருத்துவ செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.. . செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயலாற்றி நல்ல பெயர் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை ஓரளவு குறையும்
கடகம்: பெண்களின் மனக் குறை தீர, குல தெய்வ வழிபாடு கை கொடுக்கும். வியாபாரிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பிபொருட்களை கடன் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேவைக்கதிகமாக பணம் கொடுக்க வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். இந்த வாரம் கலைஞர்களுக்கு திடீர் பண நெருக்கடி உண்டாகலாம்.
சிம்மம்: இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்படாமலிருக்க பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த சூழலிலும் கவனமாக இருப்பது அவசியம். சரளமான பணவரவால் பெண்களின் கடன் பிரச்னைகள் தீரும். .மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது. பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை குறை சொல்வதைத் தவிர்த்து நல்ல முறையில் வழி காட்டினால், வேலைகள் விரைந்து முடியும்.
கன்னி: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும். பெண்களுக்கு உறவுகளால் சில அனுகூலங்கள் வந்து சேரும். வேலையில் இருப்பவர்கள் எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக அதிக பணம் ஒதுக்க வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த வாரம் மாணவர்களுக்கு நண்பர்களால் செலவுகள், சங்கடங்கள் வந்து நீங்கும். கலைஞர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
துலாம்: பெண்கள் பணம் மற்றும் , நகையை கவனமாக கையாளுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்காமலிருந்தால், கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து விடலாம். வியாபாரத்திலிருக்கும் போட்டிகளை சமாளிக்க வியாபாரிகள் திட்டமிட்டு செயல்பட,வருகின்ற லாபம் கணிசமாக அதிகரிக்கும் . வேலையில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டுவதால், புதிய பொறுப்புக்களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வார்கள். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும்.
விருச்சிகம் : கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பாடங்கள் சுமையாய் சேராமல் இருக்க மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. கலைஞர்கள் கொஞ்சம் சிக்கனமாகவும்,பொறுமையாகவும் செயல்பட வேண்டிய வாரமிது. கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும் . வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சுமூகமான நிலை காணப்படும். எனினும் புதிய முயற்சிகளுக்கு கடன் வாங்குகையில் யோசித்து செயல்படுவது நல்லது.
தனுசு: கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முதியவர்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும் உயர் கல்வி பயில பாடுபடும் மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பண வரவோடு வாடிக்கையாளர்களின் வரவும் கூடும். பெண்களின் வேலை பளு அதிகரிக்கலாம்.
மகரம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம் பெண்களுக்கு விழா, விருந்து என்று பொழுது மகிழ்ச்சிகரமாக செல்லும். இந்த வாரம் கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரிகள் கடன் வாங்கி செலவு செய்வதைக் குறைத்துக் கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாய் மாற, உடன் இருப்பவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம்.
கும்பம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் கோபம், படபடப்பு இரண்டையும் குறைத்துக் கொண்டால் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க இயலும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புக்களை சிறப்பாய் செய்து வர, பணி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எளிதாகும். மாணவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறலாம். இந்த வாரம் கலைத் துறையினருக்கு அரசு அளிக்கும் விசேஷ சலுகைகளைப் பெற்று மகிழும் வாய்ப்புக்கள் வந்து சேரும்.
மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை கவனித்து நல்வழிப்படுத்தினால், நல்ல பாதையை நாடுவதுடன் கல்வியிலும் கவனம் செலுத்துவார்கள். ,வீடுகளை வாங்கி விற்கும் துறையில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் விழிப்புண்ர்வோடு இருந்தால், எந்த பாதிப்பும் வராது. பெண்கள் இரவலாகப் பெறும் விலையுயர்ந்த பொருட்களைப் பத்திரமாக வைத்தால், பணம் வீணாவது கணிசமாகக் குறையும் . கலைஞர்கள் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பக்குவமாக நடந்து கொண்டால், நட்பும், உறவும் கசக்காமல் இருக்கும்.
செண்பக ஜெகதீசன்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
-திருக்குறள்- 129 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
தீபட்ட புண்ணதுவும்
தீதின்றி ஆறிவிடும்
தொடர்ந்து நீ மருந்திட்டால்..
தீயொத்த கொடுஞ்சொல்லால்
பட்ட வடு
போகாதே வாழ்நாளெல்லாம்…!
குறும்பாவில்…
தீப்புண் ஆறிடும் விரைவில்,
மாறுவதில்லை
சுடுசொல் சுட்ட வடு…!
மரபுக் கவிதையில்…
எரியும் நெருப்பு மேனியிலே
எங்கே படினும் புண்ணாகும்,
எரியும் வேதனை குறைந்திடவே
எடுக்கும் மருந்தில் குணமாகும்,
சரியாய்ப் பிறரைப் புரியாமல்
சொல்லும் கொடிய சுடுசொல்லால்
பெரிதாய்ச் சுட்ட வடுவதுதான்
போவ தில்லை இதயத்திலே…!
லிமரைக்கூவில்…
விரைவில் ஆறிடும் தீக்காயம்,
வன்சொல்லாய் வந்ததுதான் மாறாமல்
வடுவாய் நிலைத்திடும் நாக்காயம்…!
லிமரிக்…
புண்ணாகும் தீயினில் தொட்டால்,
போய்விடும் மருந்ததில் விட்டால்,
உறவும் தேறாது
வடுவும் மாறாது
வார்த்தைத் தீயால் சுட்டால்…!
கிராமிய பாணியில்…
கிட்டப்போனா சுட்டுப்புடும்
தொட்டுப்புட்டா வெந்துபோவும்
பாத்து நடந்துக்கோ – தீயப்
பாத்து நடந்துக்கோ..
சுட்டுப்புட்டா சோந்திடாத
கட்டுப்போட்டா ஆறிப்போவும்
காயமெல்லாம் மாறிப்போவும்..
ஆனாலும்,
பாத்து நடந்துக்கோ – தீயப்
பாத்து நடந்துக்கோ..
நாக்குசுட்டா ஆறாதய்யா
அந்தவடுவு மாறாதய்யா
ஆயிசுக்கும் போவாதய்யா..
அதாலே,
பாத்துப் பேசிக்கோ- நல்லதா
பாத்துப் பேசிக்கோ…!
எஸ் வி வேணுகோபாலன்
இளவரசன் மரணம் மிகுந்த அதிர்ச்சிக்குரிய விதத்தில் நேரிட்டுள்ளது. எட்டு மாத தொடர் போராட்டம், அலைக்கழிப்பு, மன உளைச்சல், இருபத்து நான்கு மணி நேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்றே நாற்புறமும் நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருக்குமாறு மிரட்டிக் கொண்டிருந்த சாதிய சக்திகளின் சவால்கள் நிரம்பிய அச்சம் நிரம்பிய சூழல்……இவற்றினிடையே தத்தளித்துக் கொண்டிருந்த இரு மலர்களில் ஒன்று உதிர்ந்து விழுந்தே விட்டது. உளவியல் ரீதியாக ஏற்கெனவே அவர்கள் மீது வீசப்பட்டிருந்த கட்டாரி, இப்போது உடலியல் ரீதியாக அந்த இளைஞனின் மரணத்தை அறிவித்திருக்கிறது. வாழத் துடித்த இளைஞனின் அகால மரணம் இது என்பது கவனத்திற்குரியது.
ஊடக விவாதங்கள், பெரும்பாலும் அது தற்கொலையா கொலையா என்று திருப்பிவிடப்பட்டது. ஒரு நண்பர் சொன்னார், தமக்கு வந்த முதல் செய்தி இப்படி இருந்ததாம்: ‘இளவரசனை தற்கொலை செய்துவிட்டனர்’ என்று. வாய் தவறி சொல்லப்பட்டது போல் தெரியும் இந்தச் சொற்களை வேறு முறையில் வாசித்தால் எத்தனை ஆழமான உண்மையும், சமூக அதிர்ச்சியும் இந்த வாக்கியத்தில் நிரம்பியிருக்கிறது. காதல் மணத்தில் இணைந்த இளவரசனும், திவ்யாவும் ஒரு சேர இருந்தவரைக்கும்கூட ஒரு வன்மம் மிகுந்த தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையாகத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் மிக வேகமாக நிகழ்ந்துவிட்ட சில நடப்புகளை அடுத்து திவ்யா தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துப் பிரிந்து சென்றுவிட்ட பிறகு, முன்னைவிடவும் பதட்டம் கூடிய சூழலின்வசம் இளவரசன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பின்புலத்தில் நேர்ந்திருக்கும் அவரது மரணம் ஓர் அராஜக அரசியல் வன்முறைக் களத்தில்பலி வாங்கப் பட்ட உயிர் என்பதை எப்படி மறுக்க முடியும்?
உயிர்களையே பலி கேட்கும் சமூக திரட்டல், இப்போது குதித்துக் கொண்டாடவோ, கொக்கரிக்கவோ என்ன சாதித்தது என்பது வேதனை தரும் கேள்வி. தாமாக உள்ளன்போடு பேசிய அந்த அப்பாவிப் பெண்ணிடமிருந்து பின்னர் எத்தனை சொற்கள் மாறி மாறி பிடுங்கி எடுக்கப் பட்டன. தந்தையும் இல்லாத நிலையில், தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாகவும், ஆனால் தமது கணவர் இளவரசன்பால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று முதலில் சொன்ன அவர், பிறகு அடுத்தடுத்துப் பேசுகையில் வேறு முறையிலும் கருத்துக்கள் சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்தன. சாதி இத்தனை பெரிய அம்சமாகத் தங்களது திருமண வாழ்வில் குறுக்கிடும் என்று தாம் உணர்ந்திருக்கவில்லை என்று சொன்ன அவர், அம்மா விருப்பத்தையும் பெற்று மீண்டும் இளவரசனுடன் இணைவேன் என்றும் சொன்னார். ஆனால், பிறகு தாம் அப்படி சொல்லியிருக்கவில்லை, இனி இளவரசனோடு இணைவது என்ற பேச்சே இல்லை என்று சொல்லிவிட்டதாக இறுதியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
தமது உள்ளத்தின் அன்பில் தோய்த்தெடுத்த சொற்களை அந்தப் பெண் தமது உதடுகளை நோக்கி எடுத்துக் கொண்டுவருவதற்குள் அதன் பாதையிலேயே அந்தச் சொற்களை வழி மறித்து, அடித்துத் திருத்தி வலியும், வேதனையும் நிரம்பிய வேற்று மொழி ஒன்றை இரத்தப் பிசுக்கோடு வெளியேற்ற வைத்ததில் என்ன ஆனந்தம் ஆதிக்க சக்திகளுக்கு? சொல்லப்பட்டவையும், மாற்றிச் சொன்னதாக மாற்றிச் சொல்லப்பட்டவையும், சொன்னதாக சொல்லப்பட்டவையும், சொல்லாதது என்று அறிவிக்கப்பட்டவையுமாக சொற்களும் கற்களும் இறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகேதான் கிடைத்திருக்கிறது இளவரசனின் உடல். அது வாழ்வைத் தொலைத்தவரின் சடலம் அல்ல, வாழ்வு பறிக்கப்பட்டவரின் உடல்.
ஒரு காதல் மணத்தை முன்வைத்து ஏற்கெனவே விளைவிக்கப்பட்ட ஒரு மரணம் – அதன் நிமித்தம் மேலும் ஒரு மரணமும் தேவைப்பட்டிருக்கிறது ஆதிக்க உணர்வுகளின் வேட்கைக்கு. மிகச் சில மணி நேரங்களில் இடித்தும், எரித்தும் தரைமட்டமாக்கப்பட்ட முன்னூறு வீடுகளின் கரிப்புகையும், சாம்பல் நாற்றமும் இன்னமும் அடங்காதிருக்க, இளம் காதல் வாழ்க்கையின் மீது தீர்மானமாக வீசப்பட்ட தீ பற்றி எரிகிறது இப்போது! குடும்பங்களும், குடியிருப்புகளும், சமூகமும் எல்லாம் ஒரு வன்மத்தின் சாபத்திற்கு இலக்கு ஆக்கப்பட்டாற்ப் போல கலைத்துப் போடப்படுவதை எந்த நாகரிக உலகம் அனுமதிக்க முடியும்?
அடிப்படை மனித உணர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் சமூகம் தன்னைப் பண்பட்டதாக அறிவித்துக் கொள்ள முடியாது. ஏற்புடைமையும், நிராகரிப்பும் வேண்டுமானால் அவரவர் விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம். தாங்கள் விரும்பாததைக் கிள்ளிப் போடவும், அதன் மீது நெருப்பை அள்ளிப் போடவும் யாருக்கும் உரிமை கிடையாது.
கால காலமாக நட்பும், நேயமும் கெழுமிய அண்டை அயலாராக மற்ற சமூகத்தினரோடு வாழ்ந்து வந்ததாகவே நாய்க்கன் கொட்டாய் பகுதியின் காலனி மக்கள் நவம்பர் 7 தாக்குதலுக்குப் பின் சென்று சந்திக்கும்போது கூறினர்.பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில், கொண்டாட்டங்களில், திருவிழாக்காலங்களில் கலந்து பழகியவர்கள், சேர்ந்து உண்டவர்கள் எப்படி திடீரென்று வாளை உருவிக் கொண்டு எதிரே வந்து நின்றனர் என்ற மலைப்பில் இருந்து அவர்கள் மீளாததைப் பார்க்க முடிந்தது. மண்ணில் புதைந்திருக்கும் வேரில் கலந்தது மாதிரி மனத்தின் அடியாழத்தில் கிடக்கும் உணர்வுகளைக் கீறி வெறுப்பும், பகைமையும் வெடிக்குமாறு தூண்டுபவர்கள் எப்படி மக்கள் தலைவர்களாக விளங்க முடியும்?
மூன்று காலனிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மையிலும் ஓர் அரசியல் பளிச்சென்று புலப்பட்டது. கலப்பு மணம் செய்திருந்த தலித் குடும்பங்கள் மீது வன்முறை கூடுதலாக நிகழ்த்தப்பட்டது. அந்த வீடுகள் மிக அதிகபட்ச வன்மத் தாக்குதலின் சாட்சியங்களாக நிற்கின்றன. தங்களை விட உயர் சாதி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் தலித் வாலிபர்களின் நோக்கம் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவது, பிறகு அந்தப் பெண்ணைக் கைவிடுவது என்றெல்லாம் பா ம க தலைவர்கள் பொழிந்து தள்ளிய அவதூறுகளை, மிக காட்டமாகவும், ஆவேசத்தோடும் மறுத்த பெண்மணி ஒருவரை, வங்கி ஊழியர் இயக்கத்தின் சார்பில் அந்தப் பகுதிக்குச் சென்றபோது நாங்கள் சந்தித்தோம்.
“என்னைத் திருமணம் செய்தபிறகு எனது கணவர் ஒற்றை நயா பைசா கூட எனது பெற்றோரிடம் சென்று மிரட்டிப் பறிக்கவில்லை. நாங்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. எங்களை ஏற்காத எனது பெற்றோர் வழி உறவுகள் யாரையும் எனது குழந்தைகளுக்கு இன்றுவரை தெரியாது. எங்களை ஏன் வம்புக்கிழுக்கிறது பா ம க ? அடுத்தடுத்து தேர்தலில் தோல்வி கண்ட அந்தக் கட்சிக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் திவால் ஆகிப் போன பிறகு, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தங்களை முன்னிறுத்த வேறு எதுவும் கிடைக்கவில்லை. தலித் விரோத அரசியலை முன்னெடுக்கின்றனர்” என்றார் அவர். கணவரை இழந்துவிட்ட அந்தப் பெண்மணியின் வீட்டில் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரம், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாக்கிய வெறி கும்பலுக்கும் இதெல்லாம் தெரியும். தங்களுக்கு எந்தத் தொடர்பும் அற்ற ஒரு நிகழ்வுக்காகத் தங்களை இப்படி தாக்க இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேட்டனர் அவர்கள்.
முட்புதர்களுக்கு இடையே வயதுக்கு வந்த தனது மகளையும், நடுங்கிக் கொண்டிருந்த சிறு வயது மகனையும் பெரும் அச்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு அன்றைய பாழிரவு எப்படி கடந்து போகும் என்று தாம் பட்ட பாட்டை, தையல் நாயகி என்ற பெண்மணி டிசம்பர் 5, 2012 அன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்ட மேடையில் எடுத்துரைத்தபோது அதிர்ந்து கேட்டது ஜனத் திரள். ‘நாளை மீண்டும் இதைப் போலவே தாக்க வந்தால் நாம் என்ன செய்வோம்’ என்று தனது மகன் கேட்டதைச் சொன்ன அவர், தலித்தாகப் பிறந்தது எங்கள் குற்றமா என்று கேட்ட கேள்விக்கு ஆதிக்க சக்திகளின் பதில் என்ன?
ஒரு தருமபுரி செய்தி மட்டும்தான் கவனத்தை தேசிய அளவில் ஈர்த்திருக்கிறது. அதற்கு முன்பாகப் பல நிகழ்வுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடக்கவே செய்தன. கட்டைப் பஞ்சாயத்துகள் நடத்தி இப்படியான காதல் திருமணங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன. ரத்து செய்து அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பங்கள் மிரட்டப்பட்டன. தத்தமது மகனையோ, மகளையோ தீர்த்துக் கட்டிவிடுமாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட கொடுமைகளும் நடந்திருக்கின்றன.
தருமபுரி நிகழ்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமையம் உயிர்மை இதழில் எழுதிய “பெத்தவன்” நெடுங்கதை (பாரதி புத்தகாலயம் அதை சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது) அத்தகைய அதிர்ச்சி மிக்க நடப்புகளை நேரடியாகப் பேசியது. உழைப்பாளி மக்களை அடையாள அரசியல் எப்படி கூறுபோடுகிறது என்பதை அதன் இலக்கிய வடிவம் தொட்டுக் காட்டியது.
தலித் காலனி மக்களுக்கு ஆர்வத்தோடு வங்கிச் சேவை கிடைக்க உதவிய கிராம வேளாண் வங்கி ஊழியராக இருந்த நாகராஜன், திவ்யாவின் தந்தை என்ற முறையில், சாதி ரீதியாகக் கூட்டப்பட்ட பஞ்சாயத்து எதிரே எப்படி கூனிக் குறுகி நிறுத்தப்பட்டார் என்பதும், அதன் தொடர் நிகழ்வுகளில் நேர்ந்த அவரது மரணமும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட தாக்குதல் வன்முறையும் ஒரு தனிப்பட்ட காதல் திருமணத்திற்கு எதிரானது மட்டும் அல்ல. ஓர் அரசியல் நடவடிக்கை அது. சமூக எச்சரிக்கை. தங்களது அணியைத் தமது அரசியல் விருப்பங்களுக்கு ஒத்திசைவாகத் திரட்டுதலின் வன்முறை அறிவிப்பு அது. தங்களைப் போன்றே இருக்கும் வேறு பல இடைநிலை சாதி அமைப்புகளையும் தங்களது பாணியிலேயே நடந்து கொள்ளுமாறு தங்களது மேடையில் நிறுத்தி வைத்து அறிவுறுத்தும் அபாய அரசியல் அது.
தாராளமய கொள்கைகளால் காயப்பட்டுப் போயிருக்கும் அன்றாட வாழ்க்கை, கல்வி-சுகாதாரம் எல்லாம் காசு உள்ளவர்க்கே என்று ஆக்கப்பட்டிருக்கும் சவாலான நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றின் பின்புலத்தில் தங்களது பொது எதிரிக்கு எதிராகத் திரள வேண்டிய மக்களை மிகுந்த சுயநலத்தோடு பிரித்துப் போடும் இத்தகைய அரசியல் யாருக்கு சாதகமானது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். கொலைகளும், தற்கொலைகளும் பெருகும் ஒரு சமூகமாக தமிழகம் உருமாறிக் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பாக வெளியாகும் அண்மைக் கால புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பவை.
ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, இரண்டு உள்ளங்களின் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் நேர்ந்த காதல் திருமணம் இன்று ஒரு பொது பிரச்சனையாக மாற்றப் பட்டதும், அவர்களது விருப்பத்திற்கு எதிரான திசையில் அந்த வாழ்க்கை இப்போது மிக கோரமான முறையில் முடிக்கப்பட்டிருப்பதும் இந்த நிகழ்வுகளை இன்னும் ஆழமான புரிதலோடு பார்க்குமாறு சமூகத்தைப் பணிக்கின்றன. சாதி கௌரவம் என்ற போர்வையில் நடத்தப்படும் அத்து மீறிய தலையீடுகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றன. வன்மமும், வன்முறையும் குடும்ப வாழ்க்கையின் சன்னல்களை உடைத்தெறிந்து உள்ளே நுழைவதை உரத்த குரலில் நிராகரிக்குமாறு வற்புறுத்துகின்றன. சோதனை மிகுந்த இந்த நேரத்தில் அன்பின் வழியது உயிர்நிலை என்ற உன்னதமான வாழ்க்கை நெறியை உயர்த்திப் பிடிக்குமாறு மன்றாடிக் கேட்கின்றன. பகைமையும், வெறுப்பும், கசப்பும் பரவி விரவும் – மானுடத்திற்கு எதிரான – கருத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு – காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ முன் வரும்போது அதற்கு ஆதரவு தந்து இன்பம் அடையப் பழகுமாறு கோரிக்கை விடுக்கின்றன. உழைப்பாளி மக்களின் விடியல் தங்களிடையே பிரிந்து கூறுபட்டு நிற்பதில் அல்ல, ஒன்றுபட்டு நிற்பதில், பொது எதிரிக்கு எதிராகக் கூட்டாகப் போராடுவதில் தான் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தமது தாயின் அருகே இளவரசன் இறுக்கம் கலந்த – ஆனால், நம்பிக்கை மிஞ்சி இருந்த பார்வையோடு நின்ற காட்சியும், பாதுகாப்பு வளையத்துக்குள் பதட்டத்தோடு திவ்யா பார்த்த பார்வையும் நாளேடுகளை நிரப்புகின்றன. இரண்டுக்குமே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அது ஆரோக்கியமான மாற்று சிந்தனையின் வழித் தடத்தில் இருக்கிறது.
**************
நன்றி: வண்ணக்கதிர் (ஜூலை 14, 2013)
தமிழகத்தை ஒட்டிய வடகடலிலும் தென்கடலிலும் 12 ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து கடலியல் வல்லுனராகி, ஐநா.வில் 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்த திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேர்காணல்
1. சேதுக் கால்வாய்த் திட்டத்தால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து என்கிறார்களே, அஃது உண்மையா?
சேதுக் கால்வாய் தமிழன் கால்வாய்.
கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே மன்னார் வளைகுடாவையும் இணைக்கின்ற 165 கிமீ. நீளமும் 12 மீ. ஆளமும் 300 மீ. அகலமும் கொண்ட வழித்தடம்.
55 கிமீ. நீளத்துக்கு கோடிக் கரைக்கு அருகே கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.
55 கிமீ. நீளத்துக்கு சேதுத்திடல் பகுதியில் கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.
இந்த 85 கிமீ. நீளத்தைத் தவிர வேறு எந்தக் கடல்தரையையும் ஆழமாக்கவில்லை.
இந்த 165 கிமீ. நீள வழித்தடத்தில் கடல்தரையில் பவளப் பாறைகள் இல்லை, கிடையவே கிடையாது.
பவளப்பாறைகள் எங்கே இருக்கின்றன?
வடகடலில்
தென் கடலில்
இலங்கைக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தில் இருந்து ஆகக் குறைந்தது 20 கிமீ. தொலைவில் பவளப் பாறைகள் இருக்கின்றன.
தமிழகக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தின் தென்முனையில் இருந்து 20 கிமீ.தென்மேற்கே மேற்கே செங்கால் தீவை ஒட்டிப் பவளப் பாறைகள் இருக்கின்றன.
பவளங்கள் இல்லாத கரையோரக் கடல்கள் உலர் வலையக் கடல்களில் இல்லை. ஆனால் அவை பாறைகளாக அமைகின்ற கரையோரங்கள் மிகக் குறைவு. ஒதுக்கிடக் கரையோரங்களைத் தேடிப் பவளங்கள் பாறைகளாகக் குவிந்து வளர்கின்றன.
கால்வாய் அமையும் 165 கிமீ. நீளத்திற்கு இரு பகுதிகளிலும் 20 கிலோ மீட்டர் அகலம்வரை பவளப் பாறைகள் இல்லை, இல்லவே இல்லை.
சேதுக் கால்வாயை அமைக்கக் கடல் தரையை ஆழமாக்குவதால் பவளப் பாறைகள் உடையும், பெருகுவது குறையும், பாதிப்புறும் என்ற கருத்துப் பொருளற்ற புனைவு.
2. இந்தத் திட்டத்தால் கடல் குதிரைகள் போன்ற அரிய வகைக் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மையா?
கடலில் கப்பலை ஓட்டினால் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும். கப்பல்கள் எங்கே ஓடினாலும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கும். விசைப் படகுகளையோ கட்டுமரங்களையோ ஓட்டினாலும் பாதிப்பு இருக்கவே இருக்கும். அதில் எவ்வித ஐயமும் இல்லை.
கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால் யாரும் கப்பல்களை ஒட்டாமல் விடுவதில்லை. தொழிலுக்கு மீனவர் போகாதிருப்பரா?
தூத்துக்குடியில் இருந்து வடக்கே இராமேச்சரம் வரை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் உயிரினப் பாதுகாப்பு வலையம் உண்டு.
அங்கே அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன.
சேதுஅணைக்குத் தெற்கே உள்ள அந்த உயிரினப் பாதுகாப்பு வலையத்தில் கால்வாயின் வழித்தடம் அமையாது. அதனால் அந்த அரிய அரிய வகையான கடல்வாழ் உயிரினங்களுக்குக் கால்வாய் ஆழமாக்குவதால் எந்தப் பாதிப்புமில்லை.
3. சேதுக் கால்வாய்த் திட்டம் மீனவர் வாழ்வுக்கு எதிரானது என்று சொல்கிறார்களே! உங்கள் கருத்து என்ன?
1. அடிப்படைத் தகவல்கள் காண்க, அதன்பின் ஆய்க.
தமிழ் நாட்டின் மொத்தக் கடற்கரையின் நீளம் 1,076 கிமீ. அதனுள் கோடிக்கரைக்குத் தெற்கே கால்வாய் அமையும் கடலை ஒட்டிய கரை 545 கிமீ. நீளம் (50.6%).
நாகப்பட்டினம் மாவட்டம்170 கிமீ.
திருவாரூர் மாவட்டம் 20 கிமீ.
தஞ்சாவூர் மாவட்டம் 45 கிமீ.
புதுக்கோட்டை மாவட்டம்39 கிமீ.
இராமநாதபுரம் மாவட்டம் 271 கிமீ.
மொத்தம் 5 மாவட்டங்களில் 545 கிமீ.
தமிழ் நாட்டில் 442 மீனவ ஊர்கள் உள. அவற்றுள் 224 ஊர்கள் (50.6%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் 60 மீனவ ஊர்கள்.
திருவாரூர் மாவட்டம் 04 மீனவ ஊர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 27 மீனவ ஊர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் 34 மீனவ ஊர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் 99 மீனவ ஊர்கள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 224 மீனவ ஊர்கள்.
தமிழ் நாட்டில் தோராயமாக 5.5 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர் (2011 கணக்கு). அவர்களுள் 3.79 இலட்சத்தினர் (69%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி வாழ்கின்றனர்
நாகப்பட்டினம் மாவட்டம் 140,000 மீனவர்.
திருவாரூர் மாவட்டம் 13,000 மீனவர்.
தஞ்சாவூர் மாவட்டம் 21,000 மீனவர்.
புதுக்கோட்டை மாவட்டம் 15,000 மீனவர்.
இராமநாதபுரம் மாவட்டம் 190,000 மீனவர்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 379,000 மீனவர்
தமிழ் நாட்டில் தோராயமாக 40,000 மீன்பிடிக் கலங்கள் உள (2011 கணக்கு). அவற்றுள் 21,000 000 மீன்பிடிக் கலங்கள் (53%) சேதுக் கால்வாய் வழித்தடத்தை ஒட்டிய தமிழக மீனவர்களிடம் உள.
நாகப்பட்டினம் மாவட்டம் 1500 கரையோரக் கலங்கள் 4,000 விசைப் படகுகள்.
திருவாரூர் மாவட்டம் 50 கரையோரக் கலங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 1000 கரையோரக் கலங்கள் 200 விசைப் படகுகள்.
புதுக்கோட்டை மாவட்டம் 200 கரையோரக் கலங்கள் 50 விசைப் படகுகள்.
இராமநாதபுரம் மாவட்டம் 10,000 கரையோரக் கலங்கள் 4,500 விசைப் படகுகள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 12,750 கரையோரக் கலங்கள் 8,750 விசைப் படகுகள்
தமிழ்நாட்டின் கடல் உயிரின வள உற்பத்தி மொத்தம் தோராயமாக 4 இலட்சம் மெட்ரிக் தொன். அதில் இந்த 15 மாவட்டங்களில் 2.5 இலட்சம் மெட்ரிக் தொன் (60%)கடல் உயிரின வளத்தைக் கரையேற்றுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் 100,000 மெட்ரிக் தொன்.
திருவாரூர் மாவட்டம் 2,800 மெட்ரிக் தொன்.
தஞ்சாவூர் மாவட்டம் 15,200 மெட்ரிக் தொன்.
புதுக்கோட்டை மாவட்டம் 12,000 மெட்ரிக் தொன்.
இராமநாதபுரம் மாவட்டம் 120,000 மெட்ரிக் தொன்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 250,000 மெட்ரிக் தொன்.
தமிழ்நாட்டின் 50% கடற்கரைநீளத்தில் வாழும், 70% மீனவர்கள், 60% கடல் உயிரினவள உற்பத்தியைக் கரையேற்றுகிறார்கள்.
இந்த ஐந்து மாவட்டங்களே மீன் உற்பத்திக் களஞ்சியங்கள். இந்த மீனவர்கள் எங்கே மீன் பிடிக்கிறார்கள்?
இந்த 5 மாவட்ட மீனவர்களுள் 65% சதவீத மீனவர்கள் வடகடலில் மீன் பிடிக்கிறார்கள்.
வடகடலின் மற்றறொரு பெயர் பாக்கு நீரிணை. வடகடலின் மொத்தப் பரப்பளவு 10,000 சகிமீ. இதில் சரிபாதி இலங்கைக்குச் சொந்தமானது.
எனவே ஏறத்தாழ 5,000 விசைப்படகுகள், 10,000 கலங்கள் என வைத்திருக்கும் 3.2 இலட்சம் மீனவர்களும் இந்த 5,000 சகிமீ. பரப்பளவிலுள்ள கடல் உயிரின வளத்தையே தம் வாழ்வாதாரமாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
1974ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்குப் பின்னரே இந்தக் கடற்கரையோர மீனவர்களின் பரப்பளவு 5,000 சகிமீ. ஆகச் சுருங்கியது.
அதற்கு முன்பு எல்லையற்ற கடல். அப்பொழுது அண்ணளவாக இந்தக் கரையில் ஒன்றரை இலட்சம் மீனவர் எண்ணிக்கை. கடற்கலங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டவில்லை. விசைப்படகுகளோ 1,000 வரைதான் இருந்தன. மீன் உற்பத்தியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்னைத் தாண்டவில்லை.
அக்காலங்களில் இலங்கை மீனவர்களும், ஈழத்து மீனவர்களும், தமிழக மீனவர்களும் ஒரே கடலில் எல்லைகள் தெரியாமல் மீன்பிடித்தது மட்டுமில்லை, தாங்கள் பிடித்த மீன்களை இரு கரையோரங்களின் சந்தைகளில் விற்பார்கள். திருமண உறவுகளையும் வைத்திருந்து உறவுமுறையுடன் மீன்பிடித்தனர். கடலில் ஒருவருக்கு ஒருவர் பேருதவியாக இருந்தனர்.
இது 1974க்கு முன்பு. கள்ளத்தோணி என்றும், கடத்தல்காரர் என்றும் தமிழரைச் சிங்களக் கடற்படை சிறைப்பிடித்த சுட்டுவீழ்த்திய காலங்கள். மீனவர்களை அல்ல.
கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கரையோர 5 மாவட்டங்களிலும் விசைப்படகுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. இக்காலத்தில் இறால், சிங்க இறால், நண்டு போன்ற உயிரின வகைகள் ஏற்றமதிப் பொருளாயின. ஏற்கனவே இக்கடலில் சுழியோடிக் குற்றிய சங்கு, வங்காள தேசத்திற்கும், கடலட்டை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த காலம்.
கடல்பரப்பு அளவு மாறவில்லை. கடல் வளக் கொள்ளளவு மாறவில்லை. ஆனால் மீனவர்கள் எண்ணிக்கையோ மூன்று மடங்காகியது. விசைப்படகுகள் எண்ணிக்கையோ ஐந்து மடங்கு பெருகியது. கடலோரக் கலங்களின் எண்ணிக்கையும் பெருகியது.
கடலின் வளமோ மாறாமல் இருக்க, மக்கள் தொகைப் பெருக்கமும், ஏற்றுமதி வாய்ப்புகளும், மீன்பிடி பரப்பளவில் சரிபாதி குறுக்கமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையுப் பாதிக்கத் தொடங்கின.
1970களில் இக்கடலருகலுள்ள மீனவர்களின் தனிமனித வருவாய்க் கடுமையாகக் குறைந்தது. எனவே தமிழக மீனவர்கள் தமிழக எல்லைக்குள்ளான 5,000 கிமீ. பரப்பளவைத் தாண்டி, இலங்கையின் 5,000 சகீமீ. பரப்பளவிலும் சென்று மீன்பிடிக்கத் தொடங்கினர்.
இலங்கைப் போரினால், 1980களுக்குப் பின்பு இலங்கைக் வட கரையோரங்களில் மீன்பிடிக்கத் தடை. அக்காலத்தில் சிங்களக் கடற்படை போராளிகள் எனத் தமிழரைத் தேடியது. எனவே மீனவர்களையும் துன்புறத்தத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களைச் சிங்களப்படை கடுமையாகத் தாக்கத் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்வள உயிரின உற்பத்தி வளர்ச்சி வேகம் தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களிலும் குறைந்தது. தனிநபர் வருமானம் குன்றியது. மீன்பிடிப் பரப்பெல்லைகள் குறுகின. மக்கள் தொகை பெருகியது. கலங்கள் பெருகின. இம் மீனவர்களின் வாழ்வாதாரம் படிப்படியாகச் சீர்குலைந்தது.
தமிழ்நாட்டின் மொத்த மீனவர்களுள் இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்கின்ற மீனவர்களுக்குரிய திறமைகள், ஆற்றல்கள் ஆழ்கடல் மீன்பிடியை ஒட்டியதல்ல. அவை தரவைக்கடல் அல்லது கரையோரக் கடலை ஒட்டியது. ஆனாலும் ஏனைய மாவட்ட மீனவர்களை விட இவர்களுக்குக் கடல் வாழ் அனுபவம் அதிகம்.
வைகாசி, ஆனி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்கள் அவர்கள் கடலுக்குள் போவதைக் குறைத்துக் கொள்ளும் மாதங்கள். ஏனெனில், உயிரின மீன் உற்பத்திக்கு உரிய காம விதைகள், கருக்கட்டல்கள், கடலின் பருவ நிலை மாற்றங்கள் இந்த நான்கு மாதங்களில் மிகை. வைகாசியில் அரசே மீன்பிடையத் தடுக்கிறது. மார்கழியில் பருவநிலை தடுக்கிறது.
வழமையாக இந்த மீனவர்கள் மதியம் 2 மணிக்குக் கடலுக்குச்செல்வர், விடிய 4 மணிக்குக் கரை திரும்புவர். அதற்கேற்றவாறு அவர்கள் படகுகளில், விசைப்படகுகளில் வசதிகளை வைத்திருப்பர்.
ஆற்றல், திறமை, கடல்வாழ் அனுபவம் கொண்ட மூன்று லட்சம் மீனவர்கள், தனிநபர் வருவாய்க் குறைவாலும், அறுவடைப் பற்றாக் குறையாலும் துன்புறும் பொழுது வேறு தொழில்களுக்கு அவர்கள் போகாமலும், தமக்குத் தெரிந்த தொழிலை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்குத் திட்டமிடுவோரே வழிகாட்ட வேண்டும்.
சேதுக்கால்வாய்த் திட்டம் அத்தகை வழிகாட்டல் திட்டமே. மீனவரின் வாழ்வாதரத்தைப் பன்மடங்கு பெருக்கும் வழிகாட்டல் திட்டமே.
இத்திட்டத்துக்கு அமைய கோடிக்கரைக்கும் காங்கேயன் துறைக்கும் இடையே 55 கிமீ. நீளத்துக்கு 300 மீ. அகலத்தில் கடல் தரையை 12 மீ. ஆழமாக்கினால், 3 இலட்சம் மீனவர்களின் மீன்பிடிப் பரப்பெல்லை இன்றைய 5,000 சகிமீ. இலிருந்து, நாளையே 16 இலட்சம் சகிமீ. பரப்பளவாக விரியும்.
தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரைகள் மேற்கு எல்லை. வங்க மியான்மார் கடற்கரைகள் வடக்கு எல்லை. தாய்லாந்து, மலேசியா, சுமாத்திரா கடற்கரைகள் கிழக்கெல்லை. இந்த எல்லைகள் கொண்ட வங்காள விரிகுடாவின் 16 இலட்சம் சகிமீ. பரப்பளவு கொண்ட தமிழருக்காக மீன்பிடிக்க விரியும்.
வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதாரக் கடல் வலையத்துள் ஆண்டுக்கு 22 தொடக்கம் 30 இலட்சம் மெட்ரிக் தொன் கடல் உயிரின வளத்தை அள்ளும் வாய்ப்பு இந்திய மீனவர்ளுக்கு உண்டு.
வங்காள விரிகுடாவின் இந்த வளத்தை இப்போது தாய்லாந்தும், தாய்வானும் இந்தோனேசியாவும் நவீனமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களை வைத்துக் கடலில் சில வாரங்கள் தங்கிக் கடலுயிரின வளங்ளை அள்ளிக்கொண்டு போகிறார்கள். இந்தியப் பொருளாதார வலையத்துள் தாராளமாக வந்து அள்ளிக்கொண்டு போகிறார்கள். தாய்வான் கப்பல்கள் சீனாவின் கிழக்குக் கரையிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து வருகின்றன.
மியான்மர், வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய ஏனைய எல்லை நாடுகள், இந்தோனேசியா தாய்லாந்து வைத்திருக்கும் மீன்பிடி நவீனக் கப்பல்களை வைத்திருக்கவில்லை.
வங்காள விரிகுடாவின் இந்த 22-30 இலட்சம் மெட்ரிக் தொன் கடலுயிரின வளங்களில் பெரும்பாலானவை சூரை மீன்களும் சுறாக்கள் போன்ற நெடுங்கடல் உயிரின வளங்கள். கரையோர வளங்களான இறால், நண்டு, திருக்கை போன்ற கடல்தரையினவோ, நெத்தலி, சாலை, சிறுசுறா போன்ற நூற்றுக்கணக்கான மீன் வகைகள் நெடுங்கடலில் மிக மிகக் குறைவு.
சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்ட மீனவர் பயன்படுத்தும் கலங்கலளோ வலைகளோ சிறிய மீன்களையும் தரை வகையினரையும் நோக்கியன.
சூரை மீன், பெருஞ்சுறா வகைகள் ஒரு மீனே ஒரு கிலோவுக்கு அதிக எடை கொண்டன. பல நூறு கிலோ எடையுள்ளனவும் உள.
இரு வாரங்களுக்கு மேல் கடலில் தங்க வேண்டும். நெடுந் தூண்டில்களை மிதக்க விட வேண்டும். அள்ளிய மீன் வளத்தை உறைபனிக் குளிரில் சேமிக்க வேண்டும்.
கடலில் தங்கும் நாட்களுக்கு உணவு, நீர், படுக்கை வசதி கொண்டு செல்ல வேண்டும். கரைக்கு வந்தவுடன் இறக்கத் துறைமுக வசதி, சேமிக்க உறைபனி வசதி, சந்தைக்கு உறைபனிப்பெட்டகச் சரக்குந்து வசதிகள் வேண்டும்.
100 பாரிய மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீனவத் தொழிலாளர், ஆண்டு தோறும் ஆகக் குறைந்தது 10 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்களை வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதார வலையத்துளிருந்து அள்ளிக் கொணடு வரலாம்.
சேதுக் கால்வாயின் வடக்கில் 55 கிமீ. ஆழமாக்கினாலே வங்காள விரிகுடா முழுவதும் இந்த 5 மாவட்ட மீனவர்களுக்குத் திறநக்கும். தனிநபர் வருமானம் உயரும். வாழ்வாதாரம் பெருகும். மீன்பிடி தொழில் நுட்பம் மேம்படும்.
விசைப்படகுகள் ஓட்டியோர் மீகாமானாகப் பயில்வர். வீச்சு வலையோடும் விடுவலையோடும் முடங்கி முனங்கியோர் நெடுந்தூண்டிலுடன் சுறாக்களையும், சூரைகளையும் அள்ளிக் கொண்டு வந்து மகிழ்வர். கடலாடிகளாக மீண்டும் தமிழரின் தொழில் தரமுமுயரும்.
நாகப்பட்டினம், காரைக்கால், அதிராம்பட்டினம், இராமேச்சரம், தனுக்கோடி ஆகியன சேதுத் திட்டத்தின் மீனவர் வளர்ச்சி முயற்சியாகப் பாரிய கப்பல்களை நிறுத்தும் துறைமுகங்களாகும். கப்பல் கட்டும் தொழிலகங்கள், கப்பல் திருத்தும் நிலையங்கள், கப்பல் சார் பணியாளருக்கான பயிலகங்கள், தொலைத் தொடர்பாளர், செய்மதித் தொடர்பு இணைப்பாளர் பயிலகங்கள், எனக் கடற் பயணம்சார் அமைப்புகள் ஐந்து மாவட்டங்களிலும் அமைப்பதற்குச் சேதுக்கால்வாய்த் திட்டம் வழிகாட்டியாக அமையும்.
உறைபனிக் கிடங்குகள் இத்துறைமுகங்களை ஒட்டி அமையும். அந்தக் கிடங்குகளில் இருந்து ஏற்றிச் செல்லும் உறைபனிப்பெட்டகச் சரக்குந்துகள் பெருகும். சூரை மீன்களைத் தகரத்தில் அடைக்கும் தொழிலகங்கள் சூழும். கடலுயிரினச் சேமிப்பு, பதப்படுத்தல் துறைகள் வளர, அத்துறைகளில் வல்லுனரை உருவாக்கும் பயிலகங்கள் அமையும்.
கரையேறிய கடல் வளத்துக்கு ஏற்றுமதிச் சந்தையே சிறப்பிடமாதலால், சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டிப் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு பெருகும்.
நாமக்கல்லில் சரக்குந்து, சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, ஈரோடில் மஞ்சள், திருப்பூரில் பின்னலாடை என மையம்கொண்டு அந்தந்த மாவட்டங்கள் வளர்ந்தது போல, சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்டங்கள் மீன்பிடித் தொழிலை மையமாக்கி வளரும். பிற மாநிலத்தவர் மற்றும் அந்நிய முதலீட்டாளரை ஈர்க்கும்.
அறுவடைக்காக இலங்கை எல்லைக்குள் அலைபாயாது, சிங்களக் கடற்படையின் அட்டூழியத்திற்கு உட்படாமல், 16 இலட்சம் சகிமீ. ஆக விரிந்த கடற் பரப்பில் தாய்லாந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மீன்பிடிக் கப்பல் கலங்களின் அத்து மீறலுக்கு இடம் கொடாது, இந்த ஐந்து மாவட்ட மீனவர்களும் வங்காள விரிகுடாவின் கடலுயிரின வளத்தை அள்ளிக் கொண்டுவரச் சேதுக்கால்வாய்த்திட்டம் வழிவகுக்கும்.
சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தென் பகுதியாகச் சேதுத் திடல்களின் ஊடே 30 கிமீ. நீளத்துக்கு, 300 மீ. அகலத்துக்கு, 12 மீ. ஆழத்துக்குக் கப்பல் கால்வாய் அமைப்பதாகும்.
இவ்வாறு ஆழமாக்கல் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கான வாழ்வாதாரக் கொடையாகும்.
பாம்பன் பாலத்துக்கு கீழேயுள்ள கால்வாய் வழி தென்கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், நெடுங்கடலுக்கும் போகும் வலுவற்றன. பாம்பன் பாலத்தைக் கடந்து தெற்கே போகும் இவற்றைக் கரையோரக் கடலில் மீன்பிடிக்க விடாது தடுப்போர் மன்னார் வளைகுடா உயிரினப் பாதுகாப்பு வலையத்தினர்.
பட்டினப்பாலையில் தொடங்கிப் பத்திப் பாடல்கள் காலத்திலும் பாரதியார் ஊடாக இன்று வரையும் பேசப்படும் தென் கடலின் பரப்பளவு 20,000 சகிமீ. தென் கடலுக்குக் கீழே இந்துப் பெருங்கடலோ எல்லை தெரியாது விரிகிறது.
தென் கடலின் பெருவளமே முத்துப் படுகைகள். அவை படிப்படியாக அழிந்து வருகின்றன. முத்துப் படுகைகள் 2000 ஆண்டுகளாக வளர்ந்த தென்கடல் பகுதியில், தூத்துக்குடிக்குக் கிழக்கே, இலங்கையின் புத்தளத்துக்கு மேற்கே, கடலுயிரினப் பாதுகாப்பு வலையம் சார்ந்த பகுதியில் எண்ணெய்க் கிணறுகளுக்கான ஆழ்துளைகளை அமைக்க ஒரு சதுரத்தைச் சீனாவுக்கும் மற்றச் சதுரத்தை இந்தியாவுக்கும் கொடுக்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையால் முத்துப் படுகைகள் முற்றாக அழியும் வாய்ப்பும் பரம்பரை வளங்கள் அற்றுப்போகும் நிலையும் உருவாகி வருகிறதே.
தென்கடலுக்குக் கீழே, கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரித் தரவை (Wadge Bank) உள்ளது. ஆழ் கடலுக்கு நடுவே ஆழமற்ற மேட்டுத் தரவை. 1974 வரை இக் குமரித் தரவையில் இலங்கை மீன்பிடிக் கலங்களுக்கே மீன்பிடி உரிமை இருந்தது. இழுவைக் கப்பல்களை அனுப்பிப் பெருமளவு மீன்வளத்தை அவை அள்ளிச் சென்றன.
1974இன் கச்சத் தீவு உடன்பாட்டில் இந்தத் தரவையின் மீன்பிடி உரிமை இந்தியாவுக்காயது. எனினும் 1974 தொடக்கம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கைக் கப்பல்கள் மீன்பிடிக்க அந்த உடன்பாடு வழிசெய்தது.
எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் இன்று வரை இலங்கை மீன்பிடி இழுவைக் கப்பல்களே அங்கு மீன்வளங்களை அள்ளிச் செல்கின்றன. கன்னியாகுமரி மீனவர்கள் இதை நன்றாக அறிவார்கள். அவர்களிடம் இழுவைக் கப்பல்கள் இருந்தால் அங்குள்ள கடலுயிரின வளங்களைக் கொணரலாம்.
தெற்கே இந்துப் பெருங்கடலில் இந்தியப் பொருளாதார வலையத்துக்கு உள்ளேயும் புறத்தேயும் சூரை மற்றும் சுறா மீன்களை அள்ளிச் செல்ல ஐரோப்பிய யப்பானிய மீன்பிடிக் கப்பல்கள் வருகின்றன.
உறைபனிச் சேமிப்பு வசதியும் தகர மீன் தொழிலகமும் கொண்ட, பாரிய தாய்க்கப்பல்கள். அவற்றுக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டுவரும் சிறிய ஊட்டக் கப்பல்கள் எனப் பன்னாட்டு மீன்பிடிப் படைகளே அந்தக் கடலில் மாலைதீவுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் நிலைகொண்டுள்ளன.
ஐரோப்பியக் கப்பல்களுக்கு இடியாகோ கார்சியா, இறியூனியன் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன. யப்பான் மற்றும் தாய்வான் கப்பல்களுக்குச் சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன.
சேதுக் கால்வாயின் தென் கால்வாயான சேதுவை ஊடறுக்கும் கால்வாய் அமைந்ததும், இராமேச்சர மீனவர்கள் இந்துப் பெருங்கடல் வரை நெடும் பாய்ச்சலில் செல்லலாம்.
குமரித் தரவைக்கு இழுவைக் கப்பல்களைக் கொண்டு செல்லலாம். இந்துப் பெருங்கடலுக்குச் சூரை மீன்பிடிக் கப்பல்களுடன் போகலாம்.
100 மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீன்பிடித் தொழிலாளர், ஏறத்தாழ 15 இலட்சம் மெட்றிக் தொன் மீன் வளங்களை ஆண்டுதோறும் அள்ளிவரும் வாய்ப்பைச் சேதுக் கால்வாய்த் திட்டம் அமைத்துக் கொடுக்கும்.
தமிழக மீனவர்களின் கப்பல்கள் கட்டணமெதுவுமின்றிச் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிப்பு இந்த மீனவர் வாழ்வாதார வளர்ச்சித் திசையை நோக்கியதாம்.
வடகடலுக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா விரிந்திருக்கிறதே. வட கடலுக்குத் தெற்காகத் தென்கடல், குமரித் தரவை, இந்துப் பெருங்கடல் யாவும் விரிந்து வரவேற்கிறதே.
வாழ்வாதாரம் பறிபோகிறதே எனக் கொடி பிடிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பெருக்கக் கப்பல்களின் சுக்கான்களைப் பிடிப்பார்களாக. கடலாடிகளாகிக் கடல் உயிரின வளங்களை அள்ளிக் கொணர்வார்களாக.
வறுமையை விரட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கித் தொழில் தராதரத்தை உயர்த்தச் சேதுக் கால்வாயை வரவேற்போமாக.
திருவாரூர்த் திருத்தலத்தின் “ஆலம்கொண்டாரும், உமாதேவியும் கோட்டோவியங்களாக…
பார்க்க,ரசிக்க…
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே வணக்கம் ,
உங்களை அடுத்த மடலில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உங்கள் முன்னே நான். விசித்திரமான சூழல் வித்தியாசமான காலங்கள் மாற்றங்களை வலுவாக அனைவர்க்குள்ளும் புகுத்துகின்றன.
மனிதர்களுடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் காரணிகள் , அவனின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள், அவனுடைய எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிக்கும் வழிமுறைகள் என்பன ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்நாட்டின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இம்மென்னெடுப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஜனநாயகம் என்று சொல்லப்படும் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்னும் முறை சில நாடுகளிலும் , சர்வாதிகாரம் என்று தம்மைத்தாமே அந்நாட்டுக்கு அதிபர்களாக்கிக் கொள்ளும் வகையில், அந்நாட்டு ராணுவங்களினால் மக்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வகையுமே பிரதானமாக இன்றைய நடைமுறையில் எம்முன்னே முன்னெடுக்கப் படுகின்றன..
இம்முறைகளில் ஜனநாயகம் எனும் முறையில் நடக்கும் தேர்தல்களில் நடக்கும் தில்லு முல்லுகளைப் பற்றி நான் இங்கே கணக்கிலெடுக்கவில்லை அந்நாட்டின் அரசியல் நடப்புகளை பற்றியே குறிப்பிடுகிறேன்.
சரி இந்த வகையிலே நான் இவ்வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்த விடயத்திற்கு வருவோம்.
இங்கிலாந்து அரசியலில், அரசியல் உலகில் பொதுவாக பேசப்படும் ஜனநாயக முறையிலான வகையிலேயே தேர்தல் நடைபெற்று அரசாங்கங்கள் தெரிவாகின்றன.
இங்கிலாந்தில் 1900 ம் ஆண்டு வரை இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டு இருந்தன. அவை கன்சர்வேடிவ் கட்சியும் , லிபரல் கட்சிகளுமே யாகும். இவைகளில் கன்சர்வேடிவ் கட்சி பிரபுக்களையும் , நில முதலாளிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது லிபரல் கட்சி தாம் சுதந்திரமான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அக்கட்சியிலும் பணமுதலைகளே இருந்தார்கள்.
இதன் காரணமாக சாதாரண அன்றாடத் தொழிலாளரின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் வகையிலான அரசியலைப் பிரதிபலிக்கும் கட்சி இல்லை என்ற தொழிலாளரின் ஆதங்கம் 1900ம் ஆண்டு இங்கிலாந்தில் லேபர் கட்சியைத் தோற்றுவித்தது,
சாதாரண தொழிலாளர்களின் கூடுதலாக ஆரம்பித்த இக்கட்சிக்கு பலகாலங்கள் அரசாங்கம் அமைக்கும் வகையிலான ஆதரவு இருந்ததில்லை. அக்கால லிபரல் கட்சியுடன் இணைந்து அவர்களின் அரசாங்கம் அமையும் போது தமது கொள்கைகளை சிலவற்றை அதனுடன் முன்வைப்பது ஒன்றே இவர்களது அன்றைய அரசியல் முனைப்பாக இருந்தது.
1916ம் ஆண்டளவில் லிபரல் கட்சி இரண்டாக பிளவு பட்ட போதே லேபர் கட்சியின் செல்வாக்கு மிகைப்பட்டது. அக்கட்சி தனது முதலாவது அரசாங்கத்தை 1924ம் ஆண்டு “ராம்சி மக்டொனால்ட்” என்பவரின் தலைமையில் அமைத்தது. இவர் லேபர் கட்சியின் முதலாவது பிரதமராவார்.
இங்கிலாந்தின் தொழிலாளர் யூனியன்கள் இணைந்து அவ்விணைப்பினால் உருவானதே லேபர் கட்சியாகும். இன்றுவரை இங்கிலாந்தின் ஏதாவது தொழிலாளர் யூனியனில் மெம்பராக இருந்தால் அவர்கள் செலுத்தும் சந்தாப்பணத்தின் ஒரு பகுதி லேபர் கட்சிக்கு அளிக்கப்படுகிறது.
இது தவறு என பல காலமாக வாதிட்டு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சாரத்தினால், யாராவது தொழிலாளர் யூனியன் மெம்பர் விரும்பினால் தமது சந்தாப்பணத்திலிருந்து லேபர் கட்சிக்குத் தாம் பணம் கொடுக்க விரும்பவில்லை என்று அறிவித்தால் அவர்களது சந்தாவிலிருந்து லேபர் கட்சிக்குப் பணம் செல்வதை நிறுத்தலாம் என்பது சட்ட மூலமாக்கப்பட்டது.
சரி இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்கிறீர்களா?
இன்றைய காலகட்டத்தின் அரசியல் மாறிவிட்டது. லேபர் கட்சிக்குள் தொழிலாளர் யூனியனின் ஆதிக்கம் கூடி அவர்கள் கண்மூடித்தனமான கோரிக்கைகளை முன்வைப்பதினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாதிருக்கிறது எனும் வாதத்தை முன்வைக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பலம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு லேபர் கட்சித் தலைவர் “எட் மில்லிபாண்ட்” லேபர் கட்சியை தொழிலாளர் யூனியன்களிலிருந்து அந்நியப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஆமாம் கட்சியை ஸ்தாபித்தவர்களின் உறவைத் துண்டித்து அவர்களை அந்நியப் படுத்தும் முயற்சியில் “எட் மில்லிபாண்ட்” வெல்வாரா? இங்கிலாந்து மக்களின் மனதில் உள்ள லேபர் கட்சிக்கும், யூனியன்களுக்கு உள்ள தொடர்பின் பிரதிபலிப்பு மாறுமா?
காத்திருப்போம் காலம் விடையளிக்கும்
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
http://www.facebook.com/sakthi.sakthithasan
பவள சங்கரி
மகிழ்ச்சியின் ஒரு வாயில் அடைபட்டால், அடுத்தது திறக்கிறது, ஆனால் நாம் மூடிய அந்தக் கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்ட மற்றொரு கதவைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. – ஹெலென் கெல்லர்.
வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே எதிர்கொள்வோம்!
“சில நேரங்களில் நம் வாழ்க்கையில் வருவதை, எந்தத் தடுப்பு நடவடிக்கையோ, முன்கூட்டிய திட்டமோ அல்லது தீர்மானமோ என ஏதுமின்றி உள்ளது உள்ளபடி, அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாம் தொடர்ந்து அந்த விளைவை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, தற்செயலான மற்றும் வளர்ச்சிக்கு மிகக் குறுகிய இடமே அளிக்கிறோம்”.
ஜீனைன் கேரோன்
சில நேரங்களில் வாழ்க்கை தொடர்ந்த பற்பல எதிர்மறை விளைவுகளை வரிசையாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உணருகிறோம். நம் பாதையில் இடருகிற மிகப்பெரும் தடைக்கற்களை எதிர்த்து அப்புறப்படுத்த நினைக்கிறோம். வாழ்க்கை பெரும் பாரமாகவும், மகிழ்ச்சியை மொத்தமாக கபளீகரம் செய்யக்கூடியதாகக்கூடத் தோன்றலாம்.
வாழ்க்கை என்றுமே ஒரு சவாலாகத்தான் இருக்கிறது. சில நேரங்களில் சலிப்பும் கூட ஏற்படுகிறது. ஆனால் அறிவுடைமை என்பது அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறது. நம் வாழ்க்கையில் தடைகளும், தவிப்புகளும் தவிர்க்க முடியாத பகுதிகளே. அதிலிருந்து எவரும் தப்பிக்க இயலாது. ஆகவே நம் பாதையில் இடறும் எதையும் பொறுமையுடன் மற்றும் கௌரவத்துடன் கடக்கப் பழக வேண்டும். துன்பமோ அல்லது மன அழுத்தமோ நம்மைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வாழ்க்கையின் அழகை முழுமையாக இரசிக்கத் தடையாக இருக்கும் அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையையும் தீவிரமாக உணரக்கூடாது. மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நம்மைச் சுற்றியே இருப்பதால், அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு கொள்ள அதனைப் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
“அனைத்துமே உங்களுக்கு எதிராகப் போவதாகத் தெரியும்போது, விமானம் காற்றோடு இல்லாமல் அதனை எதிர்த்துக்கொண்டுதான் மேலெழும்புவதை நினைவில் கொள்ளுங்கள்”, என்கிறார் ஹென்றி ஃபோர்ட்.
பேட்ரீசியா நாராயணன் , 54 வயதில், இன்று ஒரு மிகப்பெரும் தொழிலதிபர். பிறநாட்டு கூட்டமைப்பின் இந்திய வர்த்தகக் குழு மற்றும் தொழிற்துறைகளின் , (FICCI) ஆண்டின் சிறந்த பெண்மணி விருதை வென்றவர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 வயது இளம் பெண்ணாக அவர் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. ஆம், ஒரு குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன்னுடைய 20வது வயதில் இரண்டு குழந்தைகளுடன், வேலையில்லாத கணவனுடன் நடுத் தெருவிற்கு வந்துவிட்டவர். தன் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்தபடியே, உழைத்து தன்னையும், தம் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தார். மற்ற சாதாரணப் பெண்களைப் போல சோகத்தில் மூலையில் முடங்கிவிடாமல், அடுத்தவருக்கு பாரமாக இராமல் துணிவுடன் தம் வாழ்க்கையை தாமே எதிர்கொள்ளத் துணிந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் நல்ல வருமானத்துடன் பணியில் இருந்தபோதும், அவர்களை அண்டிப் பிழைக்க விரும்பவில்லை அவர். எப்படியும் வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும், தீவிர ஆவலும்தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. சமையல் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர் பேட்ரீசியா. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தம்முடைய கைப்பக்குவத்தைப் புகழ்ந்ததன் விளைவு, அதையேத் தம் தொழிலாக்கிக் கொள்ளத் திட்டமிட்டார். ஊறுகாய், பழக்கூழ், என நண்பர்கள் மத்தியில் சிறிய அளவில் தம் வியாபாரத்தைத் தொடங்கியவர், பின்பு சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு தள்ளு வண்டியில் சிறிய உணவகத்தை ஆரம்பித்தார். அதற்கான உரிமம் பெற ஓராண்டிற்கும் மேலாக பெரும் போராட்டத்தை நடத்தினாலும், இறுதியில் வெற்றி வாகை சூடி, முதலில் வீட்டில் தயாரித்த கட்லெட், ரொட்டி,பஜ்ஜி, சமோசா, தேநீர், காப்பி மற்றும் சிறு தீனி வகைகளை விற்க ஆரம்பித்தார். இதற்காக அவர் தம் கணவர் மற்றும் ஐந்து உதவியாளர்களுடன், நாளொன்றுக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாழ்க்கையின் மற்ற கோர முகங்களையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது. 1991ல் அவருடைய திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்குள், 2004ம் ஆண்டில் தன் அன்பு மகள் பிரதீபா, திருமணம் ஆன கையோடு, தன் கணவனுடன் ஒரு சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தது பெரும் சோகமாகிப் போனது. அதற்குப் பிறகு மகன் பிரவீண் தம் வேலையை விட்டுவிட்டு வந்து தாயுடன் உதவியிருக்கிறார். மருத்துவ ஊர்தியின் உதவி இல்லாத பகுதியில் அடிபட்டதால் தம் மகளையும், மருமகனையும் காப்பாற்ற முடியாமல் போனதால், அதிகமாக விபத்து நடக்கக்கூடிய அந்த இடத்திற்கு விரைவாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்கிக் கொடுத்தார். 2006ம் ஆண்டில் சந்தீபா என்ற தன்னுடைய சொந்த உணவு விடுதியை திறந்தார். சென்னையில் வெற்றிகரமாக 19 கிளைகளைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது இன்று அது. ஐம்பது பைசாவில் ஆரம்பித்த அவருடைய ஒரு நாளைய வருமானம் இன்று ரூபாய் 200,000 என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முயற்சியும், மன உறுதியும் மட்டும் இருந்தால் எந்தத் தடையையும் தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூட முடியும் என்பதற்கு பேட்ரீசியா ஒரு உதாரணம்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு , நாம் நினைத்ததைப் பிடிக்க வேண்டும். அதுதான் அறிவாளிகளின் திறன். வாழ்க்கையின் இனிய தருணங்களைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்படும் சிக்கல்களை கருணையுடன் ஏற்று அதை நம் மதிப்பை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணிக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றால் அதைக் கொண்டாடுவோம். இல்லையென்றால் நாம் துணிவுடன் முயற்சி எடுத்ததற்கு மகிழ்ச்சி கொள்ளலாம். இது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், சுய மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும். அதே சமயம் நல்ல அனுபவங்கள் மூலம் வாழ்க்கையின் உச்சத்தை அடைவதும் திண்ணம்.
வாழ்க்கையின் வெற்றி என்பது சொத்துக்களையும், கோடி, கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலும் மட்டும் இல்லை. நல்ல உறவுகளையும், நட்புகளையும் சம்பாதித்துக் கொள்வதிலும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதிலுமே இருக்கிறது. பல நேரங்களில் அதிகமாகச் சேரும் இந்த சொத்தும், பணமும் மிக எளிதாக உறவுகளையும், நட்புகளையும் விலக்கி வைத்துவிடுகிறது. தம்மிடம் உள்ள பணம் ஏமாற்றி பிடுங்கப்பட்டுவிடுமோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே, அதையே காவல் காத்துக்கொண்டு ஒருவரையும் அண்ட விடாமல் தள்ளி நிற்பவரும் ஒரு வகையில் உறவில்லாத ஏழைகளே. இதனை உணருவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்து தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வெறுமை மட்டும் உறவாகிப்போக நல்ல உறவுகளுக்காக ஏங்கியே தீர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுபவர்களும் உண்டு. வாழும் காலத்தில் நல்லவைகள் அனைத்தையும் சிந்திந்து செயல்பட வேண்டியது முக்கியம் இல்லையா.
மன நிம்மதியே ஒருவருக்கு மிகப்பெரும் சொத்து. ஏனைய மற்ற சொத்தும், காசு பணமும் மட்டும் ஒருவருக்கு மன நிம்மதியை அளிப்பதில்லை!
மீண்டும் சந்திப்போம்
படங்களுக்கு நன்றி:
http://www.vallamai.com/wp-content/uploads/2013/07/tumblr_lmbd7k5mNI1qcxieko1_500.jpg
குன்றக்குடி அடிகள்
17. அன்பாற்றல்
அன்பு – இஃது ஓர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு; தீமையைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.
உயிர்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஓடிப்போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது: ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.
அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிட மாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.
கதிரொளியில் – வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோல சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடதிற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். “ஆற்றலுடமையே வாழும்” என்பது உண்மை.
ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!
“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்”
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
தேமொழி
(தொடர்ச்சி)
முன் குறிப்பு:
இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
_____________________________________________
Related Articles:
_____________________________________________
வதாடியோ போர்:

வதாடியோவிற்காக நிகழ்ந்த போர் விரைவில் முடிந்துவிட்ட ஒன்று என்றாலும் கோவாவில் போர்சுக்கீசியர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அது. வதாடியோ அமைந்திருந்த இடத்தின் முக்கியதத்துவத்தினால் மராட்டியர்கள் வதாடியோவைக் கைப்பற்றுவது பிக்கோலிம் நகரை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர உதவும் எனக் கருதினார்கள். போர்சுக்கீசியர்கள் தேவையான பாதுகாப்பை அந்நகரைச் சுற்றி அமைத்திருந்தபோதிலும், அந்நகருக்கென நிரந்திர படை பாதுகாப்பிற்காக இல்லாமல் இருந்தது [9]. வதாடியோவைக் காக்க ‘ஆல்பர்ட் பின்ட்டோ’ பேர்நெமில் இருந்து பிக்கோலிமிற்கு வரவழைக்கப் பட்டார் [9]. எதிர்பார்த்தவாறே மராட்டியர்கள் வடக்கிலிருந்து வதாடியோவைத் தாக்கினர். போர்சுக்கீசியர்கள் உடனடியாக பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தனர் [9]. இத்தாக்குதலால் மராட்டியக் குதிரைப்படை சிதறுண்டது. தொடர்ந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைக்கும் சிறிது இழப்பு நேர்ந்தது [9]. போர்சுக்கீசியர்களின் பீரங்கித் தாக்குதலின் குறி திறம்பட அமையாததால் மராட்டியக் குதிரைப்படையை அழிக்க முடியாது போனது [9].
போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோவின் வடக்குப்புற எல்லையைக் காக்கும் வகையில் படைகளை நிறுத்தினர். குதிரைப்படைகள் போர்ச்சுக்கீசியர்களை நெருங்கித் தாக்கி இழப்புகளை ஏற்படுத்த உதவும் வகையில் மராட்டியக் காலாட்படை அவர்களை எதிர்கொண்டது [9]. ஆனால் மோதல் துவங்கியவுடன் போர்ச்சுக்கீசியர்கள் மராட்டியர்களின் பாதுகாப்பு வளையத்தை விரைவில் உடைத்து மராட்டியர்களை தாக்கி அவர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினர். இதன் விளைவாக மராட்டியர்களின் போர்த்திட்டம் சிதைந்ததுடன் அவர்களது காலாட்படைக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. படைத்தளபதிகள் கொடுத்த திறனற்றக் கட்டளைகளினால் மராட்டியக் குதிரைப்படை போர்சுக்கீசியர்களின் எதிர்த்தாக்குதலை தடை செய்யக் கால தாமதம் ஆனது [9].
வதாடியோவின் வட முனையில் நிகழ்ந்த இப்போர்தான் பிக்கோலிம் போரில் தீவிரமான ஒன்று. தொடர் தீவிரத் தாக்குதல்களும், இரு பக்கங்களுக்கும் ஏற்பட்ட சம அளவு இழப்புகளும் தாக்குதல் நிகழ்ந்த நாளில் பெரும்பான்மையாக இருந்தது [9]. இறுதியில் இருள் கவிழத் தொடங்கியதும் ஆல்பர்ட் பின்டோ தனது போர்ச்சுக்கீசிய வீரர்களை முன்னேறுவதை நிறுத்துமாறும், வதாடியவிற்குத் திரும்புமாறும் கட்டளை இட்டார் [9]. இப்போரின் இழப்பினைப் பற்றியத் தகவல்களை வரலாற்றில் மராட்டியர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ குறிப்பிடாவிட்டாலும் இழப்புகள் அதிகம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது [9]. இப்போரில் நிகழ்ந்த இழப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானித்துவிடக் கூடும் என்பதினால் இரு தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த அதிக இழப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்கலாம் என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].
போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு மறுநாள் மராட்டியர்கள் மீண்டும் விடிவதற்கும் முன்னரே வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர்[9]. அதிகாலையில் தாக்குதல் வெற்றிகரமாகத் துவங்கினாலும் மீண்டும் மராட்டியர்களின் திட்டம் தோல்வியுற்றது. ஆல்பர்ட் பின்ட்டோவின் ராணுவத் திறமை மராட்டியர்களின் சாதக நிலையை முறியடித்து அவர்களை வடக்கு நோக்கித் துரத்தியது. ஆல்பர்ட் பின்ட்டோவின் அணுகுமுறையின் காரணமான திறமையான வழிநடத்துதலால் போர்ச்சுக்கீசியப் படைகளுக்கு குறைவான சேதம் விளைந்தது [9]. ஆனால் மராட்டியக் குதிரைப்படையினர் திறமையாக தெற்கு நோக்கி முன்னேறி நகரில் இருந்த போர்ச்சுக்கீசியப் படையினரையும் தாக்கத் துவங்கினர் [9]. மராட்டியக் குதிரைப்படையினரின் தீவிரத் தாக்குதலால், போர்ச்சுக்கீசியர்களின் பெரும்பான்மையான படை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி வதாடியோவில் சரணடையும் நிலை ஏற்பட்டது [9].
போரின் நிலையை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோவிற்கு கோபம் ஏற்பட்டாலும், வெள்ளை நிற சமாதானக் கொடியை உயர்த்தி வதாடியோவிற்குள் பின்வாங்க நேர்ந்தது [9]. ஆனால் படைகள் பின்வாங்குதல் ஆல்பர்ட் பின்ட்டோவின் திறமையின் காரணமாக ஒழுங்குமுறையான கட்டுபாட்டுடன், படைகளின் இழப்பை குறைக்கும் வகையில் இருந்தது. இக்காரணத்தினால் பின்வாங்கி நகருக்குள் நுழைய இரவாகிவிட்டது [9]. மராட்டியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமையாக திட்டமிடப்பட்டு ஆல்பர்ட் பின்ட்டோவின்படைகளைத் தாக்கத் தயாரான நிலையில் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர் [9]. இவ்வாறு படைகள் நகர்த்தப்பட்டதால் மராட்டியர்களின் குதிரைப் படை வதாடியோவின் வடக்குப் பகுதிக்கு தள்ளப்பட்டது. இரு தரப்பினரும் வெற்றி உறுதி என நம்பியதால் போர் நள்ளிரவு வரைத் தொடர்ந்தது [9]. ஆனால் இறுதியில் சோர்வடைந்த போர்ச்சுக்கீசியப் படையினர் நகரின் தென் பகுதிக்குப் பின்வாங்கிய பின்பு அப்பகுதியைப் பலப்படுத்திக் கொண்டு, நகரின் வட பகுதியை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றடையுமாறு விட்டு விட்டனர் [9].
இவ்வாறு ஊர் இரண்டுபட்ட பிறகு மராட்டியர்கள் குடிமக்களை நகரின் இருபகுதிகளுக்கும் தடையின்றி போய் வர அனுமதித்தனர். மராட்டியர்களின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோ ஊரடங்கு சட்டம் போன்ற முறையினை அமல்படுத்தி, தனது படையின் ஒரு பகுதி வீரர்களை நகரமக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினார். குறிப்பாக உயர் ஜாதி இந்துக்கள் எனப் பின்புலம் கொண்ட பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர் [9]. இக்குடிமக்கள் நகரின் வடபகுதிக்குச் சென்று மராட்டியப் படையைச் சந்தித்து, மராட்டியர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டது [9]. இந்த சந்தேகத்தில் சிறிது உண்மையும் இருந்தது. மறுநாள் மதியம் இருதரப்பினர் படையும் இக்கட்டான செயலிழந்த நிலையில் இருக்கும் பொழுது, வடபகுதியில் இருந்து வந்த குடிமக்களின் கூட்டமொன்று போர்ச்சுக்கீசியர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்கத் துணிந்தது. இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதும், கடினமான முறையில் தண்டிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அவர்களின் துரோகச் செயலுக்காக ‘வாஸ் கோடா காமா’ நகருக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் [9]. எனினும், போர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கை வதந்தியாக விரைவில் மக்களிடையே பரவி, குடிமக்களிடையே அமைதி குறைந்த காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் குடிமக்கள் தென்பகுதிக்கு வருவதையே தடை செய்துவிட்டனர்[9] [11]. இந்நிலை ஏற்படக் காரணம் மராட்டியர்கள் வதந்திகளை மிகைப் படித்தியதால் ஏற்பட்டதன் விளைவு என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].
நிலைமை எதுவாயினும் நகரின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கு இடையே இருந்த இருவேறுபட்ட இறுக்கமான சூழ்நிலை மக்களிடையே அமைதியின்மையை அதிகப்படுத்தியது [9]. மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரின் வடபகுதியில் இயல்பு நிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தென்பகுதியில், வசதிபடைத்த, சலுகை அளிக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான குடிமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது [9]. மறுநாள் மராட்டியர்கள் தங்கள் காலாட்படையை நகர்த்தி போர்ச்க்கீசிய்ர்களைத் தாக்கியவாறு முன்னேறத் துவங்கினர். போர்ச்சுகீசியர்களும் தங்கள் படைகளை ஒருங்கிணைத்து பதிலுக்குத் தாக்கி, மராட்டியர்களின் காலாட்படையை பின் வாங்கச் செய்தனர் [9]. மராட்டியர்கள் மேலும் வேகமாக முன்னேறி இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து குடிமக்களிடம் அவர்கள் விடுதலை அடைந்துவிட்டனர் எனக் கூறுவதில் நேரத்தைச் செலவழித்தனர் [9]. போர்சுக்கீசியர்கள் தங்கள் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்த பின்பு குடிமக்களை அவர்கள் வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளை இட்டனர்[9]. வீட்டிற்குள் செல்வதற்குப் பதிலாக குடிமக்கள் போர்ச்சுக்கீசியப் படையை எதிர்த்து கலவரம் செய்யத் தொடங்கியதால் வதாடியோ நகரின் தென்பகுதியின் கட்டுப்பாடு நிலைகுலையத் துவங்கியது [9]. இவ்வாறு போர்ச்சுக்கீசியப் படை கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த பொழுது, இரவில் மீண்டும் மராட்டியர்கள் எதிர்பாராவிதமாகத் தாக்கத் தொடங்கினர். விரைவாகவும் தீவிரமாகவும் நிகழ்த்திய தாக்குதலின் முடிவில் மராட்டியர்கள் நகரின் தென்மேற்கில் உள்ள மிகச் சிறிய பகுதிக்குள் போர்ச்சுக்கீசியர்களை ஓரங்கட்டினார்கள் [9].
ஆல்பர்ட் பின்ட்டோ தனது படையினரை வதாடியோ நகரின் தென்பகுதியில் உள்ள சாலைக்குப் பின்வாங்கச் செய்தார். இதன் மூலம் மறுநாள் காலையில் நகரை முற்றுகை இடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது [9]. போர்ச்சுக்கீசியப் படையினருக்கு வதாடியோ நகரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ‘வாஸ் கோடா காமா’ நகரில் இருந்து புதிய கட்டளைகள் வந்தன [9]. இரு நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் நகருக்குள் செல்லும் விநியோக வழிகளைத் துண்டித்தனர் [9]. அவர்கள் மக்களை நகரெல்லையில் இருந்த வயல்களுக்கும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் எதிர்பாராத முற்றுகை போன்ற சூழ்நிலைக்கு தயாராகாத மக்கள் உணவின்றித் துன்புற்றனர் [9]. நவம்பர் மாத தொடக்கத்தில் மக்கள் வதாடியோ நகரில் இருந்து வெளியேறி போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிபணிந்தனர். அவர்களில் சிலர் துரோகியர்கள் எனக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர்த்து நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப் பட்டவர்களில் பெரும்பாமையோர் கத்தோலிக்கப் போர்சுக்கீசியப் பிரிவினராவார்கள் [9] [11] [16].
(தொடரும்)
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.
Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003
_____________________________________________
படம் உதவி:
அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg
சு. கோதண்டராமன்
நையப் புடை
மகாகவி பாரதி வேதங்களைப் பொருளுணர்ந்து கற்றவர் என்றும் அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்தவர் என்றும் கண்டோம். ஆனால் நான் பெற்ற அத்வைத இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. வேதாந்தம் என்பது அதற்கு உரிய தாகமும் வயதும் சூழ்நி்லைகளும் வாய்க்கப் பெற்றோருக்கு மட்டுமே உரியது. மற்றவர் உலகக் கடமைகளிலிருந்து தப்புவதற்காக வேதாந்தத்தில் புகுந்து ஒளிந்து கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்து.
“எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.”
வயதான பிறகு கடோபநிஷத்தையும் சுந்தர காண்டத்தையும பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று கூறின பாரதி இளைஞர்களுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் கூறும் அறிவுரைகள் அவரது புதிய ஆத்திசூடியில் உள்ளன. மற்ற விஷயங்களில் புதுமை செய்தது போல, வேதாந்தத்தையும் உலகியலையும் ஒருங்கே போற்றியதன் மூலமும் பாரதி புதுமை செய்துள்ளார்.
அவருடைய புதிய ஆத்திசூடியில் காணப்படும் நையப் புடை என்ற வாசகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம்! அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.
பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது யாரை நையப் புடைக்கக் கூறுகிறார்?
பாரதியை முழுமையாகப் படித்தால் இதன் உட்பொருள் தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப் புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.
பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா,
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.
பாரதியாரின் அச்சமில்லை பாட்டு பிரசித்தமானது.
இச்சகத் துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மற்றவர்கள் தன்னைத் துச்சமாக எண்ணித் தூற்றினாலும், பொருள் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், வேசையர் வலை வீசினாலும், நண்பரே துரோகம் செய்த போதிலும், பெரும் படை தன்னைக் கொல்ல வந்து நின்றாலும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிறார்.
அச்சத்தை அழித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வே கிடைக்குமாம்.
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
மனிதருக்கு இயல்பாக ஏற்பட்ட அச்சத்தை நீக்கித் தனக்கு அருள வேண்டும் என மகாசக்தியை வேண்டுகிறார்
ஐயம் தீர்த்து விடல் வேண்டும் புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்
மகாசக்தியின் பாதங்களைச் சரணடைந்து விட்டதால் தன் அச்சம் நீங்கிவிட்டதாகக் கூறி மார் தட்டுகிறார் கேளுங்கள்.
மரணமும் அஞ்சேன் நோயினை அஞ்சேன்
மார வெம்பேயினை அஞ்சேன்
அக்கால மக்களின் கோழைத்தனத்தைப் பார்த்து,
அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்
காலா என் காலருகே வாடா
சற்றே உனை மிதிக்கிறேன் என்றும்
யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே
உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை
என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.
தொன்மைக்கு அஞ்சேல்
கீழோர்க்கு அஞ்சேல்
தீயோர்க்கு அஞ்சேல்
பேய்களுக்கு அஞ்சேல்
தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.
ஆறுவது சினம், நயம்பட உரை — ஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.
ரௌத்திரம் பழகு
வெடிப்புறப் பேசு
கொடுமையை எதிர்த்து நில்
சீறுவார்ச் சீறு
என்ற வாசகங்களாலும்
தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா
என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது!
ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் அச்சம் தவிர்த்து வாழ வேண்டும் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார்.
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.
நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.
உடலினை உறுதி செய்
ஊண் மிக விரும்பு
இளைப்பது இகழ்ச்சி என்றும்
அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.
அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.
நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,
காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.
நமது மூன்றாவது எதிரி மௌட்டியம் (மூடத்தனம்). அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்– அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-
சோதிடம் தனை இகழ்
தொன்மைக்கு அஞ்சேல்
பிணத்தினைப் போற்றேல்
புதியன விரும்பு
மௌட்டியம் தனைக் கொல்
வேதம் புதிது செய்
நமது நாலாவது எதிரி சோம்பல்.
ஓய்தல் ஒழி
நாளெல்லாம் வினை செய்
யவனர் போல் முயற்சி கொள்
கெடுப்பது சோர்வு என்றும்
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர்
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.
அச்சத்தை ஒழிக்கவேண்டும், வலிமையைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதிக்கு எப்படி ஏற்பட்டது? சந்தேகமில்லாமல் வேதத்திலிருந்து தான். இது தொடர்பாக விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.
“வலிமை, வலிமை-இதுதான் உபநிடதத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறும் செய்தி. நினைவில் வைக்க வேண்டிய ஒரு பெரும் விஷயம் இதுவே. என் வாழ்க்கையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட மிகப் பெரும் பாடம் இதுவே. உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.
“ஆம், உலகிலேயே அபீ: (பயப்படாதே) என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிஷத் ஒன்று தான். உலகின் வேறு எந்த சமய இலக்கியத்திலும் கடவுளின் தன்மையாகவோ மனிதனின் தன்மையாகவோ அச்சமின்மை கூறப்படவில்லை.
“உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோத- எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதே. இளைஞர்களே, எழுந்திருங்கள், விழியுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. வாய்ப்புகள் நம் கண் முன்னே விரிந்து தயாராகக் காட்சி தருகின்றன. தைரியமாக இருங்கள். அஞ்சாதீர்கள். நம்முடைய சமய இலக்கியத்தில் மட்டும் தான் அச்சமின்மை என்ற சொல் ஆண்டவனின் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் அச்சமற்றவர்களாக ஆக வேண்டும். வேலை முடிந்துவிடும்.
“உண்மையான வேதாந்தி ஆவதற்கு முதல் படி அச்சமற்று இருக்க வேண்டும். பலவீனம் தொலைய வேண்டும். இது மிகவும் கடினம் தான். உலகப் பற்றை முற்றிலும் துறந்தவர்கள் கூடச் சில சமயம் மனதின் அந்தரங்கத்திற்குள் பலவீனத்தை உணர்வார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சராசரி மனிதனைப் பற்றிக் கேட்பானேன்? அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஆயிரம் ஆயிரம் விஷயங்களுக்கு அடிமையாகப் பயந்து பயந்து வாழ்கின்றனர்.”
பாரதியின் அச்சமில்லை என்ற பாட்டுக்கும், வலிமை கொண்ட தோளினாய் வா வா வா என்ற வரிகளுக்கும் வேர் எங்கிருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?
வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்–அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.