தேமொழி

(தொடர்ச்சி)

முன் குறிப்பு:
இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

_____________________________________________

Related Articles:

_____________________________________________

 

வதாடியோ போர்:

 

alorna fort
வதாடியோவிற்காக நிகழ்ந்த போர் விரைவில் முடிந்துவிட்ட ஒன்று என்றாலும் கோவாவில் போர்சுக்கீசியர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அது. வதாடியோ அமைந்திருந்த இடத்தின் முக்கியதத்துவத்தினால் மராட்டியர்கள் வதாடியோவைக் கைப்பற்றுவது பிக்கோலிம் நகரை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர உதவும் எனக் கருதினார்கள். போர்சுக்கீசியர்கள்  தேவையான பாதுகாப்பை அந்நகரைச் சுற்றி அமைத்திருந்தபோதிலும், அந்நகருக்கென நிரந்திர படை பாதுகாப்பிற்காக இல்லாமல் இருந்தது [9]. வதாடியோவைக் காக்க ‘ஆல்பர்ட் பின்ட்டோ’ பேர்நெமில் இருந்து பிக்கோலிமிற்கு வரவழைக்கப் பட்டார் [9]. எதிர்பார்த்தவாறே மராட்டியர்கள் வடக்கிலிருந்து வதாடியோவைத் தாக்கினர். போர்சுக்கீசியர்கள்  உடனடியாக பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தனர் [9]. இத்தாக்குதலால் மராட்டியக் குதிரைப்படை சிதறுண்டது.  தொடர்ந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைக்கும் சிறிது இழப்பு நேர்ந்தது [9]. போர்சுக்கீசியர்களின் பீரங்கித் தாக்குதலின் குறி திறம்பட அமையாததால் மராட்டியக் குதிரைப்படையை அழிக்க முடியாது போனது [9].

போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோவின் வடக்குப்புற எல்லையைக் காக்கும் வகையில் படைகளை நிறுத்தினர். குதிரைப்படைகள் போர்ச்சுக்கீசியர்களை நெருங்கித்  தாக்கி இழப்புகளை ஏற்படுத்த உதவும் வகையில் மராட்டியக் காலாட்படை அவர்களை எதிர்கொண்டது [9]. ஆனால் மோதல் துவங்கியவுடன் போர்ச்சுக்கீசியர்கள்  மராட்டியர்களின் பாதுகாப்பு வளையத்தை விரைவில் உடைத்து மராட்டியர்களை தாக்கி அவர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினர். இதன் விளைவாக மராட்டியர்களின் போர்த்திட்டம் சிதைந்ததுடன்  அவர்களது காலாட்படைக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. படைத்தளபதிகள் கொடுத்த திறனற்றக் கட்டளைகளினால் மராட்டியக் குதிரைப்படை போர்சுக்கீசியர்களின் எதிர்த்தாக்குதலை தடை செய்யக் கால தாமதம் ஆனது [9].

வதாடியோவின் வட முனையில் நிகழ்ந்த இப்போர்தான் பிக்கோலிம்  போரில் தீவிரமான ஒன்று. தொடர் தீவிரத் தாக்குதல்களும், இரு பக்கங்களுக்கும் ஏற்பட்ட சம அளவு இழப்புகளும் தாக்குதல் நிகழ்ந்த நாளில் பெரும்பான்மையாக இருந்தது [9]. இறுதியில் இருள் கவிழத் தொடங்கியதும் ஆல்பர்ட் பின்டோ தனது போர்ச்சுக்கீசிய வீரர்களை முன்னேறுவதை நிறுத்துமாறும், வதாடியவிற்குத் திரும்புமாறும் கட்டளை இட்டார் [9]. இப்போரின் இழப்பினைப்  பற்றியத் தகவல்களை வரலாற்றில் மராட்டியர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ குறிப்பிடாவிட்டாலும் இழப்புகள் அதிகம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது [9]. இப்போரில் நிகழ்ந்த இழப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானித்துவிடக் கூடும் என்பதினால் இரு தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த அதிக இழப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்கலாம் என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு மறுநாள் மராட்டியர்கள் மீண்டும் விடிவதற்கும் முன்னரே வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர்[9]. அதிகாலையில் தாக்குதல் வெற்றிகரமாகத் துவங்கினாலும் மீண்டும் மராட்டியர்களின் திட்டம் தோல்வியுற்றது. ஆல்பர்ட் பின்ட்டோவின் ராணுவத் திறமை மராட்டியர்களின் சாதக நிலையை முறியடித்து அவர்களை வடக்கு நோக்கித் துரத்தியது. ஆல்பர்ட் பின்ட்டோவின் அணுகுமுறையின் காரணமான திறமையான வழிநடத்துதலால் போர்ச்சுக்கீசியப்  படைகளுக்கு குறைவான சேதம் விளைந்தது [9]. ஆனால் மராட்டியக் குதிரைப்படையினர் திறமையாக தெற்கு நோக்கி முன்னேறி நகரில் இருந்த போர்ச்சுக்கீசியப் படையினரையும் தாக்கத் துவங்கினர் [9].  மராட்டியக் குதிரைப்படையினரின் தீவிரத் தாக்குதலால், போர்ச்சுக்கீசியர்களின் பெரும்பான்மையான படை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி வதாடியோவில் சரணடையும் நிலை ஏற்பட்டது [9].

போரின் நிலையை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோவிற்கு கோபம் ஏற்பட்டாலும், வெள்ளை நிற சமாதானக் கொடியை உயர்த்தி வதாடியோவிற்குள் பின்வாங்க நேர்ந்தது [9]. ஆனால் படைகள் பின்வாங்குதல் ஆல்பர்ட் பின்ட்டோவின் திறமையின் காரணமாக ஒழுங்குமுறையான கட்டுபாட்டுடன், படைகளின் இழப்பை குறைக்கும் வகையில் இருந்தது.  இக்காரணத்தினால் பின்வாங்கி நகருக்குள் நுழைய இரவாகிவிட்டது [9]. மராட்டியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமையாக திட்டமிடப்பட்டு ஆல்பர்ட் பின்ட்டோவின்படைகளைத் தாக்கத் தயாரான நிலையில் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர் [9]. இவ்வாறு படைகள் நகர்த்தப்பட்டதால் மராட்டியர்களின் குதிரைப் படை வதாடியோவின் வடக்குப் பகுதிக்கு தள்ளப்பட்டது.  இரு தரப்பினரும் வெற்றி உறுதி என நம்பியதால் போர் நள்ளிரவு வரைத் தொடர்ந்தது [9]. ஆனால் இறுதியில் சோர்வடைந்த  போர்ச்சுக்கீசியப் படையினர் நகரின் தென் பகுதிக்குப் பின்வாங்கிய பின்பு அப்பகுதியைப் பலப்படுத்திக் கொண்டு, நகரின் வட பகுதியை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றடையுமாறு விட்டு விட்டனர் [9].

இவ்வாறு ஊர் இரண்டுபட்ட பிறகு மராட்டியர்கள் குடிமக்களை  நகரின் இருபகுதிகளுக்கும் தடையின்றி போய் வர அனுமதித்தனர். மராட்டியர்களின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோ ஊரடங்கு சட்டம் போன்ற முறையினை அமல்படுத்தி, தனது படையின் ஒரு பகுதி வீரர்களை நகரமக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினார்.  குறிப்பாக உயர் ஜாதி இந்துக்கள் எனப் பின்புலம் கொண்ட பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர் [9]. இக்குடிமக்கள் நகரின் வடபகுதிக்குச் சென்று மராட்டியப் படையைச் சந்தித்து, மராட்டியர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டது [9].  இந்த சந்தேகத்தில் சிறிது உண்மையும் இருந்தது. மறுநாள் மதியம் இருதரப்பினர் படையும் இக்கட்டான செயலிழந்த நிலையில் இருக்கும் பொழுது, வடபகுதியில் இருந்து வந்த குடிமக்களின் கூட்டமொன்று போர்ச்சுக்கீசியர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்கத் துணிந்தது. இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதும், கடினமான முறையில் தண்டிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அவர்களின் துரோகச் செயலுக்காக ‘வாஸ் கோடா காமா’ நகருக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் [9]. எனினும், போர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கை வதந்தியாக விரைவில் மக்களிடையே பரவி, குடிமக்களிடையே அமைதி குறைந்த காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் குடிமக்கள் தென்பகுதிக்கு வருவதையே தடை செய்துவிட்டனர்[9] [11]. இந்நிலை ஏற்படக் காரணம் மராட்டியர்கள் வதந்திகளை மிகைப் படித்தியதால் ஏற்பட்டதன் விளைவு என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

நிலைமை எதுவாயினும் நகரின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கு இடையே இருந்த இருவேறுபட்ட இறுக்கமான சூழ்நிலை மக்களிடையே அமைதியின்மையை அதிகப்படுத்தியது [9]. மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரின் வடபகுதியில் இயல்பு நிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  ஆனால் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தென்பகுதியில், வசதிபடைத்த, சலுகை அளிக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான குடிமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது [9]. மறுநாள் மராட்டியர்கள் தங்கள் காலாட்படையை நகர்த்தி போர்ச்க்கீசிய்ர்களைத் தாக்கியவாறு முன்னேறத் துவங்கினர். போர்ச்சுகீசியர்களும் தங்கள் படைகளை ஒருங்கிணைத்து பதிலுக்குத் தாக்கி, மராட்டியர்களின் காலாட்படையை பின் வாங்கச் செய்தனர் [9]. மராட்டியர்கள் மேலும் வேகமாக முன்னேறி இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து குடிமக்களிடம் அவர்கள் விடுதலை அடைந்துவிட்டனர் எனக் கூறுவதில் நேரத்தைச் செலவழித்தனர் [9]. போர்சுக்கீசியர்கள் தங்கள்  பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்த பின்பு குடிமக்களை அவர்கள் வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளை இட்டனர்[9]. வீட்டிற்குள் செல்வதற்குப் பதிலாக குடிமக்கள் போர்ச்சுக்கீசியப் படையை எதிர்த்து கலவரம் செய்யத் தொடங்கியதால் வதாடியோ நகரின் தென்பகுதியின் கட்டுப்பாடு நிலைகுலையத் துவங்கியது [9]. இவ்வாறு போர்ச்சுக்கீசியப் படை கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தை செலுத்திக்  கொண்டிருந்த பொழுது, இரவில் மீண்டும் மராட்டியர்கள் எதிர்பாராவிதமாகத் தாக்கத் தொடங்கினர். விரைவாகவும் தீவிரமாகவும் நிகழ்த்திய தாக்குதலின் முடிவில் மராட்டியர்கள் நகரின் தென்மேற்கில் உள்ள மிகச் சிறிய பகுதிக்குள் போர்ச்சுக்கீசியர்களை ஓரங்கட்டினார்கள் [9].

ஆல்பர்ட் பின்ட்டோ தனது படையினரை வதாடியோ நகரின் தென்பகுதியில் உள்ள சாலைக்குப் பின்வாங்கச் செய்தார். இதன் மூலம் மறுநாள் காலையில் நகரை முற்றுகை இடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது [9]. போர்ச்சுக்கீசியப் படையினருக்கு வதாடியோ நகரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ‘வாஸ் கோடா காமா’ நகரில் இருந்து புதிய கட்டளைகள் வந்தன [9]. இரு நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் நகருக்குள் செல்லும் விநியோக வழிகளைத் துண்டித்தனர் [9]. அவர்கள் மக்களை நகரெல்லையில் இருந்த வயல்களுக்கும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் எதிர்பாராத முற்றுகை போன்ற சூழ்நிலைக்கு தயாராகாத மக்கள் உணவின்றித் துன்புற்றனர் [9]. நவம்பர் மாத தொடக்கத்தில் மக்கள் வதாடியோ நகரில் இருந்து வெளியேறி போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிபணிந்தனர். அவர்களில் சிலர் துரோகியர்கள் எனக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர்த்து நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப் பட்டவர்களில் பெரும்பாமையோர் கத்தோலிக்கப் போர்சுக்கீசியப் பிரிவினராவார்கள் [9] [11] [16].

(தொடரும்)

 

References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.

Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

 

_____________________________________________

 

 

படம் உதவி:
அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *