Blog

  • வாலியின் புகழ் வாழியவே…..!

     

    வே.ம.அருச்சுணன்– மலேசியா

    stars-with-vaali-1000-in-vasanth-tv-stills_4_165414123
    தமிழைக் கற்றவருக்கு
    ஆயுள் நீளம் என்பார்
    உன் நாவில் விளையாடியது
    தேன் சிந்தும் தமிழ் அல்லவா…..!

    மனம் குளிர்ந்த தமிழன்னை
    உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
    82 அகவையிலும் இளசுகளின்
    உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
    வாலிபக் கவிஞன் நீ………..!

    அற்புதக் கவிகளால்
    கவியரசு கண்ணதாசன் மனம்
    கவர்ந்த கவிஞனே
    கலைஞர் காவியம் பாடிய
    காவியக் கவிஞனே
    உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
    காவியத்தைச் செதுக்கி இருக்க முடியாது…………..!

    பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
    தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
    பாடல்களின் பிரம்மனே
    வாலியின் பெயரே உனை
    சிகரத்தில் நிறுத்தியது
    மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது………!

    நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
    பத்தாயிரம் பாடல்கள் தந்து
    தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
    கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்…………!

    இரவும் பகலும் உன்
    கடும் உழைப்பைக் கண்டு
    இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
    உழைப்பே மனிதனை உயர்த்தும்
    என்பதற்கு ஓர் உதாரணம் நீ
    தன்னம்பிக்கையின் சக்கரவர்த்தி நீ………!

    சோதனைகளைச் சாதனையாக்கிய
    கவிஞனே பல்லாண்டுகள் இன்னும்
    வாழ்வாய் என்ற கணக்கில்
    மண் விழுந்து விட்டதே
    தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
    எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்………!

    நீ மறைந்தாலும்
    உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
    எங்களை வாழவைக்கும்
    வாழியவே உன் புகழ்………….!

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)

     பவள சங்கரி

    “ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது.
    _நெல்சன் மண்டேலா

    tumblr_lxsk9376ZK1qfwg0ho1_500

    அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?

    நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?

    சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.

    ஆம், அவர் இன்னும் ஓராண்டுக்கும் மேலாக எவ்வளவுதான் உறுதியாக முயன்றாலும், அதற்கான விடை என்னவோ மேலும் விரக்தியான நிலைதான். எவ்வளவு அதிகமாக அதனை அறிய முற்படுகிறாரோ அவ்வளவு குழப்ப நிலைக்குத் தள்ளப்படப்போகிறார் என்பதே நிதர்சனம். அகத்தின் அழகு முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடிக்க, இனி எவரையும் தன் வாழ்நாளில் நம்பவே கூடாது என்ற எண்ணத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார். இறுதியில் மனமாற்றத்திற்காகத் தன் ஆன்மீகக் குருவைச் சந்தித்தவர், ஓரளவு சமாதானம் அடைந்தவுடன், எல்லாம் தன் துரதிருஷ்டம் என்ற முடிவோடு, யதார்த்தமான நிலைக்குத் திரும்பினார். சில விசயங்கள் ஏன் நடக்கிறது என்று நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத நேரத்தில் அதைவிட்டு விலகிவிடுதல் உத்தமம் இல்லையா. அதை விடுத்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு கால விரயமும், மன நிம்மதியையும் இழப்பதைக் காட்டிலும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை உணர வேண்டும். நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நிலை வரும்போது அதைக் கடந்த காலமாக ஒதுக்கிவிட்டு, அது எவ்வளவு வேதனையானதாக இருப்பினும் சரி, அடுத்ததை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டுமல்லவா. இது போன்ற ஏமாற்றுக்காரர்களை, நம்பிக்கை துரோகிகளை, நியாயமும், ஒழுக்கமும் கெட்டவர்களை பணியில் மூழ்கியிருக்கும்போது அறிய முடியாமல் போவதும் இயற்கையே. உலகம் முழுவதும் இது போன்ற ஏமாற்றமான முடிவை ஏற்படுத்துகிற உள்குத்து ஆசாமிகளும், கூட இருந்தே குழி பறிப்பவர்களும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சம்பவத்தில், நண்பர் ஆரம்பத்திலேயே, தான் அறியாமல் அவரிடம் ஏமாந்ததை உணர்ந்து கொண்டு அடுத்து ஆக வேண்டிய காரியத்தில் கவனம் கொண்டிருந்தால் எத்தனையோ காரியங்களை முடித்திருக்கக்கூடும். தன்னை சரியானவன் என்று நிரூபிப்பதற்கு ஒருவர் அதீத முயற்சி மேற்கொள்ள வேண்டியதாகிறது. தான் அதிகம் நேசிக்கும் தம் குடும்பத்தினரைக்கூட விமர்சிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் அதனாலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வந்துவிடுகிறது.

    வேலையைச் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகள் படும்பாடு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் மனதளவில் பிரச்சனைகளால் முடமாகிப் போனவர்களை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது அரிது. தங்களுக்குள்ளாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். ஒரு கதை படித்தது நினைவிற்கு வருகிறது. காட்டுத்தீ பரவியிருந்த ஒரு பெரிய வனத்திலிருந்து மீட்கப்பட்டு , ஒரு கூண்டின் மூலமாக பயணப்பட்டு வந்து சேர்ந்த ஒரு பெரிய சிங்கம், தேவையான இயற்கை உணவு, அதிகமான நீர் வளம் என அதற்குத் தகுந்த தங்குமிடமாக இருந்தும் அந்தச் சிங்கம் அந்தக்கூண்டை விட்டு வெளிவர மறுக்கிறது. அந்தக் கூண்டிற்குள் இருப்பதே தனக்குப் பாதுகாப்பான சூழல் என்று எண்ணுகிறது. கூண்டின் கதவு பரவலாகத் திறந்த பின்னும் அது வெளியே வர மறுத்து, அந்தக் கூண்டின் ஒரு மூலையில் சென்று முடங்குகிறது. ஒரு சிங்கத்திற்கு கூண்டில் அடைந்து கிடப்பதைக்காட்டிலும் அதிகமாக வேறு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. ஆனால் கூண்டிற்குள்ளிலிருந்து, தெரியாத புதிய உலகில் அடி எடுத்து வைப்பதைக்காட்டிலும் கூண்டிற்குள்ளேயே இறந்துபட்டாலும் தேவலாம் என்ற முடிவிற்கு வருகிறது. நம்மில் பலர் இந்த சிங்கத்தின் நிலையில்தான் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நாமே உருவாக்கிக் கொள்ளும் கூண்டில் அடைபட்டு வெளிவரத் தயங்குகிறோம். குறிப்பாக திருமண வாழ்க்கையில் தோல்வியுற்ற பல பெண்கள் அடுத்து வரும் நல்ல வாழ்க்கையைக்கூட ஏற்கத் தயங்குகின்றனர். வாழ வேண்டிய காலம் கடந்த பின்பு, உள்ளார்வமும், இழந்த இளமையையும் எண்ணி ஏங்கிப் போகின்றனர்.

    slide_8209_109366_large

    வலி நிறைந்த சூழலை விட்டு விலகி அதீதமான சுதந்திரம் பெறுவதற்கான வழி, முதலில் அந்தக் கூண்டை ஒப்புக் கொண்டு அதில் ஏறி வந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட வேண்டும். ஆனால் கூண்டில் அடைபட்டுக் கிடந்தால் பாதுகாப்பற்ற சூழலும், துன்பத்திலிருந்து தப்பிக்கும் உபாயமும் கிடைக்காது. மாறாக துன்பச் சுமை கூடிக்கொண்டேதான் போகும். பழக்கப்பட்ட கூண்டைவிட்டு வெளியே வர வேண்டுவதெல்லாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆர்வம் மற்றும் புதிய சூழலை எதிர்கொள்ளும் துணிச்சலும் மட்டுமே!

    பரந்த உலகில் அறிந்த கூண்டிற்குள் அடைபட்டு சித்திரவதைபடுவதைக் காட்டிலும், அறியாத புதிய சூழலை துணிவுடன் எதிர்கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வதே வெற்றிப்பாதை அல்லவா!

    தொடருவோம்

     படங்களுக்கு நன்றி ;

    http://www.huffingtonpost.com/

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • வெல்லவைக்கும் வேலன்…

     

     ‘வெல்ல வைக்கும் வேலன்’ திரு செண்பக ஜெகதீசன் அவர்களின் வல்லமைக்கான 100 வது படைப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூறு கவிபாடி அனைவரையும் மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    ஆசிரியர்

     

    செண்பக ஜெகதீசன்vel-images

    அலைவந்து பாடுதடி

    அறுமுகனின்  பேர்சொல்லி – அழகுச்

    சிலைவடிவில் அருள்தருவான்

    சிவன்மகன்தான் செந்திலிலே…

    (அலைவந்து..)

     

    நிலையில்லா வாழ்வினிலே

    நிலைத்திருப்போன் அவனல்லவா,

    விலைமதிப்பு ஏதுமில்லா

    வேலுமணி அவனல்லவா…

    (அலைவந்து..)

     

    சந்தனத்தில் குளிக்கின்றான்

    சவ்வாது பூசிடுவான்,

    அந்திவானச் சந்திரன்போல்

    அருளொளிதான் தந்திடுவான்..

    தந்தைகுரு அவனல்லவா

    தந்தையும்தான் சிவனல்லவா,

    வந்தனைகள் செய்வோர்க்கே

    வரமருளும் குகனல்லவா…

    (அலைவந்து..)

     

    கூடிவரும் பக்தரெல்லாம்

    கும்பிட்டுப் பலன்பெறுவார்,

    தேடிவந்த பொருள்பெறுவார்

    தெய்வத்தின் அருள்பெறுவார்,

    வேடிக்கைக் கதையில்லை,

    வெல்லவைப்பான் வேலவன்தான்

    எல்லையில்லாக் கருணையாலே…

    (அலைவந்து..)

    படத்துக்கு நன்றி

        http://pillaiyar.blogspot.in/2012/11/blog-post.html                       

    Share
  • நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

    தி.சுபாஷிணி

    மாலை மயங்கி மணி 5.30 ஆனவுடனயே, சந்திராவின் உடலும் உள்ளமும் பரபரத்தது. கணினியை ஷட் டவுன் செய்து விட்டு, தன் டிபன் பாக்ஸ், கைப்பை, செல்போன் எல்லாவற்றையும் சேரிகரித்துக் கொண்டு அலுவலகம் விட்டு வெளியேறினாள் சந்திரா. அவள் வீடு செல்ல ஓரு மணி நேர இரயில் பயணம் கூட்டம் அதிகம் இருந்தாலும், ரயில் செல்லும் வேகத்தில் முகத்திலடிக்கும் காற்று புத்துணர்வைத் தந்துவிடும். சந்திராவும் இரயில் ஏறி இடம் பிடித்து அமர்ந்ததும், அவளது செல்போனில் எஸ்.எம்.எஸ் வந்திருக்கின்றது என்று மெதுவாகக் சிணுங்கிக் கூறியது. அவளும் நிதானமா எடுத்துப் பார்த்தாள். அவளது தலைமகன் சத்யா தான் அனுப்பியிருந்தான். “மொட்டைமாடியிலிருந்த துணிகளை எடுத்து வீட்டினுள் வைத்துவிட்டு தானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, தம்பி சேகருக்கும் கொடுத்துவிட்டதாகவும், டியூசஷனுக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும்” அச்செய்தி கூறிது. சத்யாவை நினைத்ததுமே சந்திராவின் மனம் சஞ்சலப்படத் தொடங்கிவிட்டது.

    சத்யா இப்போதுதான் பாலிடெக்னிக்கில் சேர்ந்திருந்தான். ப்ளஸ்டுவில் அவன் எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்கவில்லை. சத்யாவைப் பொறுத்தவரையில் மிகவும் உண்மையாக உழைத்துப் படிப்பான். எப்போது எந்த பாடத்தில் கேட்டதும் தயங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறுவான். அனால் அவனால் அந்த அளவிற்கு பிரிட்சையில் பரிமளிக்க இயலவில்லை. அதன் காரணம் சந்திராவிற்கு இன்றளவும் புரியவில்லை. இதனால் அவள் அப்பா சங்கரனிடம் அடிக்கத் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பான். பக்கத்துவிட்டு ரமேஷை எதிர்விட்டு கணேஷைப் பார்த்தாவது கற்றுக்கொள் என்று அடிக்கடிக் கூறுவான் அவர் சொல்வதற்கு ஏற்றாற்போல், சத்யாவின் பரிட்சையின்போது அவன் உடல்நலம் சரியில்லாத போகும். இல்லாவிடில் அவன் தம்பிக்காக ஆஸ்பத்திரி செல்ல வேண்டிவரும். இவை ஒன்றும் இல்லாவிட்டாள் அவரது அம்மா அப்பா வருவார்கள். தாத்தா பாட்டியினால் இன்னமும் சங்கரனது கோபம் அதிகம் ஆகும். சந்திராவிற்கு இதெல்லாம் இவன் விஷயத்தில் ஏன் நடக்கிறது என்றே புரியவில்லை.

    சத்யா, சங்கரனது உடன் பிறந்தவர்களின் குழந்தைகள் போல் பிடிவாத குணம் உடையவன் அல்ல. பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வான் மற்றவர்களைப்போல் அல்லாது காலையிலும் மாலையிலும் சந்தியா வந்தனம் பண்ணுவான் கடவுள் பக்தி உள்ளவன். காயத்திரி மந்திரத்தின் பேரில் மிகவும் நம்பிக்கையுள்ளவன். தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி ஆகியேரிடமும் அன்பு கொண்டவன். அப்படியிருக்க பாழாய்ப்போன மார்க்கு மட்டும் அவனால் எடுக்க முடியவில்லையே ஏன்! ஏன்! என்று சந்திராவிற்கு அவள் செல்லும் இரயிலில் சக்கரம் போல் விடாது அவளிடம் கேள்விக் கேட்டுக் சுழன்று கொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு விதத்தில் அவனை மட்டும் தட்டுவது, ‘என்பதில் சங்கரன் பிடிவாதமாக இருந்தார். அவர் வீட்டில் இருந்தால் டி.வி. அலறும். அவருக்கு வேண்டிய நிகழ்ச்சிதான் அதில் ஓடிக்கொண்டிருக்கம். அது படிப்பதற்கு இடைஞ்சலாக இருக்குமே என்ற எண்ணம் ஏன் அவருக்குத் தோன்றுவதில்லை என்பது- சத்யாவிற்குப் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது. சத்யாவைப் பற்றிய யோசனையிலேயே அவளை அறியாது செக்குமாடு மாதிரி அவள் இறங்கும் விஜயநகர இரயில் நிலையத்தில் இறங்கி, எந்திரமாய் வழியில் கண்ட காய்கறியையும் வாங்கிக் கொண்டு விடு வந்த சேர்ந்தாள் சந்திரா. வீட்டுக் கதவைத் தட்டுகிறாள்.

    ‘அம்மா எனச் சின்னவன் சேகர் திறக்கிறான்.

    அவனைக் கட்டிக்கொண்டே, உள்ளே நுழைகின்றாள் சந்திரா.

    கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், பெரியவன் சத்யா விரைந்து வந்து, அம்மாவிடமிருந்து எல்லாப் பைகளையும் பெற்றுக்கொண்டு சமையல் அறையில் வைக்கிறான்.

    அப்பா எதிர்தாத்திற்குச் (எதிர்வீடு) சென்றிருக்கிறார் என்று தகவலைச் சொல்லிட்டு அவன் அறைக்குச் சென்று விட்டான் சத்யா.

    சந்திராவும் சேகருக்கு ஒரு முத்தத்தை வழங்கிவிட்டுக் கைகால் முகம் அலம்பி பொட்டு இட்டுக்கொண்டாள். சாமி விளக்கேற்றினாள். சமையலறையில் புகுந்து கொண்டாள். சப்பாத்தி செய்யு-ம் வேலை தொடங்கி விட்டது. முதலில் காய்கறிகளை ப்ரிஜ்லிருந்து எடுத்து அலம்பினாள். பின் கோதுமை மாவு எடுத்து சப்பாத்திக்கு பிசைந்து எடுத்தாள். காய்கறிகளை நறுக்கி, ஒரு அடுப்பில் அதை வேகவைத்தாள். மறு அடுப்பில் சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

    இதற்கிடையில் எதிர்வீட்டிலிருந்து திரும்பிட்ட சந்திராவின் கணவன் சங்கரன் காபி கேட்டுக் குடித்தார்.

    சத்யா, தன் பாடங்களை படிக்கத் திரும்பிச் சென்றுவிட்டான். சேகர் வீட்டுப் பாடங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அன்றைய இரவு இயல்பாகப் போவது போல் போய்க் கொண்டிருந்தது.

    வழக்கம்போல், சங்கரன் டி.வியைப் பெரிதாக அலறவிட்டுக் கொண்டிருந்தார். அந்த அலறல் சந்திராவிற்குத் தலைவலியைத் தரத் தொடங்கியது எனினும் அவள் சப்பாத்தியை சுட்டுப் போட்டு எடுப்பதில் கவனமாக இருந்தாள்.

    அதற்குள் சேகருக்குப் பசிக்கத் தொடங்கியதால், அவன் சமையலறைக்கு வந்து அம்மாவின் பின் நின்றான்.

    இதோ! பத்து நிமிடம்தான் கண்ணா! என்று தன்னைத் துரிதகதிக்குச் செலுத்தினாள் அவள். சொன்னாற்போல் பத்தே நிமிடத்தில் எல்லாம் தயார். இரவு உணவுக்கு அனைவரையும் அழைத்தாள். அம்மாவின் அழைப்பு கேட்டு சத்யா அறையை விட்டு வெளியே வந்தார்.

    ‘அவ்வளவு வேகமா சாப்பாட்டிற்கு’ என்பதுபோல் சத்யாவை முறைத்தார் சங்கரன். ஒரு வினாடித் தயக்கம் சத்யாவிற்கு. இதைக் கவனித்த சந்திரா, “சத்யா! எல்லோருக்கும் தட்டுக்களை அலம்பி எடுத்துவா! அப்படியே குடிக்கவும் ஜலம் வைப்பா” என்று வேலை கொடுப்பதுபோல் சமாளித்தாள்.

    சந்திராவைப் பொறுத்தவரை, தன் குழந்தைகள் இயல்பாய் படிக்க வேண்டும். ஆசையாய் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகம்தான். அதற்காக உயிரை விடவா முடியும். அவரவர்க்கென்று ஒரு சக்தி உண்டு. அதன்படிதான் செய்ய முடியும். உழைப்பும் முயற்சியும் வேண்டும். அதற்காக சும்மா தானாக வரும் என்று சோம்பி இருக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டவள். அதன்படிதான் தன் குழந்தைகளிடம் நடந்து கொள்வாள். எல்லாவிதத்திலும், அனுசரணையாய், அன்பாய், ஆதரவாய் இருப்பாள். இவளுக்கு நேர் எதிர் சங்கரன். பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு எதிர்பார்ப்பான். தன் குழந்தைகள் இருவரையும் எதிர் வீடு, பக்கத்துவீடு, தன் சகோதரர், சகோதரி குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவான். அவர்கள்போல் மார்க் வாங்க வேண்டும் என்று எப்போது பார்த்தாலும் இந்த ஒப்பிட்டுக் கூறுதல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இதனால் பெரியவன் சத்யா பலசமயம் சோர்ந்து போய் தன்னால் எதுவும் செய்ய இயலாதோ என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விடுவான். அப்போதெல்லாம் சந்திராதான் அவனுக்கு அனுசரணையாய் இருப்பாள். அவனுக்கு அவனை அழகாக எடுத்துக் கூறுவாள். அவன் அம்மாவிற்குச் செய்யும் உதவிகள், தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களிடம் இவன் நடந்து கொள்ளும் விதம், நண்பர்களுக்கு உதவி செய்யும் பண்பு எனச் சுட்டிக்காட்டி உற்சாகமூட்டுவாள். படிப்பு என்பது மார்க் எடுப்பது மட்டுமல்ல என்பாள். நீ உழைத்துப் படி உன் உழைப்பு வீணாகாது என்று தைரியம் சொல்வாள். ஆனால் இதெல்லாம் சங்கரன் இல்லாதபோதுதான். சங்கரன்முன் சந்தியா ஒரு சாதாரணமானவளாக அமைதி காப்பாள்.

    எந்திர கதியில் சாப்பாடு முடிந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து அடுப்பில் பாலை ஏற்றினாள். பால் மிகவும் பனிக்கட்டியாய் உறைந்திருந்தது. எனவே அடுப்பைக் குறைத்து வைத்துவிட்டு ஹா-லுக்கு வந்தாள்.

    சத்யா கம்ப்யூட்டரில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான். சங்கரன் சத்யாவிற்கு பின் நின்று கொண்டு ஏதோ காய்களை நகர்த்துமாறு கூறிக் கொண்டிருந்தார்.

    ‘என்னப்பா! நானே விளையாடுகிறேனே’ என்றான் சத்யா.

    ‘நான் சொல்வதுபோல் விளையாடினால் ஜெயிப்பாய்’ என்றார் சங்கரன்.

    ‘போங்கப்பா! விளையாட்டுத்தானே அப்பா! நான் விளையாடி நானே கற்றுக் கொள்கிறேனே’.

    ‘விளையாட்டுன்னாலும் ஜெயிக்கனும்னு வெறி இருக்கணும். அதான் உனக்குக் கிடையாதே. இல்லாவிட்டால் ப்ளஸ் டூவில் மார்க் குறைவாக எடுத்து என் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருப்பாயா? எதிர்விட்டு ரமேஷும், உன் மாமா பையன் சுரேஷும் கை கொள்ளா மார்க்குகள் எடுத்ததைப்பார்த்துமா ஆசை வரலை. எனக்குன்னு பிறந்து வச்சிருக்கியே! உன்னைச் சுற்றி இருந்தவா எல்லோரும் இன்ஜினியரிங் சேர்ந்தாச்சு. நீதான் வெறும் பாலிடெக்னிக்கில் சேர்ந்து என் மரியாதையெல்லாம் போக்கியுமா, இன்னும் என் சொல்பேச்சுக் கேட்க மாட்டேன்கிற’ என்று சொல்லிக் கொண்டே போனார் சங்கரன்.

    ‘கொஞ்சம் நிறுத்துங்கப்பா! வெறும் செஸ் விளையாட்டிற்குப் போய் என்னை இவ்வளவு தூரம் கேவலப்படுத்துறீங்களே அப்பா!

    அப்பா! நீங்க சொன்ன அத்தனைப் பேரும் நல்ல மார்க் எடுத்திருக்காங்கதான். ஆனால் அதற்கு அவங்க வீடே உதவியிருக்காங்கப்பா! இதோ! இந்த டி.வி. அலறல் சத்தத்திலே யாருக்கப்பா படிப்பு ஏறும், நீங்க ஒருநாளாவது நான் படிக்கிறேனே… டி.வி சத்தம் இடைஞ்சலா இருக்குமேன்னு யோசித்திருக்கீங்களாப்பா! எனக்கு போர்டு எக்ஸாம் போதும் டி.வி. ஓடிக்கிட்டேதானே இருந்தது. மற்றவங்களையெல்லாம் ஒப்பிட்டீங்களே அப்பா…. அவங்க அப்பா அவங்களுக்கு என்னவெல்லாம் வாங்கித்தர்றாங்க. ஒரு நோட்டுக்கு இரண்டாவது கேட்டால் சிக்கனமா எழுதிப் படிக்கத் தெரியாதான்னு திட்டுவீங்க. சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி வருவது நான்தானே அப்பா. என் கிளாஸ்மேட்ஸ் யாரும் ஒரு வேலை செய்யமாட்டங்கப்பா. பரிட்சை அன்றுகூட நூறு தடவை என்னை கடைக்கு விரட்டினீங்க. அம்மா தடுத்ததற்கு அம்மாவைத் திட்டினீங்கப்பா! நான் ஏதாவது எனக்கு வேணும்னு கேட்டதாக உங்களுக்கு நினைவிருக்காப்பா! அப்பாவிற்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னால் மார்க் எடுக்க முடியவில்லைன்னு எத்தனை தரம் அழுதிருப்பேன். உங்களுக்குத் தெரியுமா-? ஆமா அப்பா! சமீபத்தில் ஆக்ஸிடெண்ட்டில் நான் பைக்கிலிருந்து எகிறி விழுந்து, நொறுங்கிக் கிடந்தபோது கூட, எனக்கு வலிக்கவில்லைப்பா. நீங்கள் அதற்கும் என் மார்க்கை வைத்துப் பேசுவீர்களே என்று பயந்தேன். அதெல்லாம் விடுங்கப்பா! அத்தை, சித்தப்பா, பெரியப்பா என அவங்க பசங்களையெல்லாம் கம்பேர் பண்றீங்களே அப்பா! நீங்க ஏம்பா பெரியப்பா, அத்தை மாதிரி இன்ஜினியராகவும், டாக்டராகவும் ஆகலை?….. “ஐயாம் ஸாரிப்பா! நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்..” என்று வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியேறினான் சத்யா.

    இத்தனைநாள் கேட்க வேண்டும் என தன் ஆழ்மனத்தில் எழுந்த கேள்வியைக் கேட்டுவிட்டு நிதானமாய்ப் போனான். சின்னவன் சேகருக்கு ஒன்றும் புரியவில்லை. சந்தியாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தை கொட்டியதும் ஒருவிதத்தில் நல்லதுதான் என நினைக்கத் தொடங்கி விட்டாள்.

    சங்கரன் சிலையாய் சமைந்து போனார். சத்யா இறுதியாய்க் கேட்ட கேள்வி அவரைச் சுற்றி சுற்றி வளைய வந்தது. அடுப்பில் வைத்த பால் பொங்கி கீழே விழுந்து விடுவேன் என விளிம்பில் நின்று கொண்டிருந்தது.

    Share
  • அவள் கண்ணாடி

     

    -தனுசு-

     

    என் வீட்டுக்கு
    வந்த நாள் முதல்
    நீ
    சிறைப் பறவையானாலும்….
    உன் தேவை
    எனக்கு படும்போதெல்லாம்
    எந்த மறுப்புமின்றி
    என்னை ஏற்றுக்கொள்வதால்
    உன்னை
    எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது

    பனியின் குளிர்
    மழையின் சாரல்
    வியர்வை வாசம்
    தெருப்புழுதி
    இவைகள் என்னை தாக்கினாலும்
    அவைகளுடன் உன்னை நான் நோக்கினாலும்
    என் தேவை உணர்ந்து
    நீயும்
    மறுப்பின்றி
    உன் மீது படர
    எனக்கு இடம் தருகிறாய்

    நான் உறங்கையிலும்
    உடுத்துகையிலும்
    உடன் இருந்து பார்க்கும் நீ
    என்னை அலங்கரித்து அழகு பார்க்கையில்
    நீ
    அறியாத அந்தரங்கம்
    என்னிடம் மிச்சமேதுமில்லை

    உன் பள பள உடம்பை பார்க்கும் போதெல்லாம்
    புஷ்பாஞ்சலி விதத்தில்
    அரங்கேற்றம்
    செய்யும் என் சேட்டைகள்…
    இரவு
    பகல்
    வேறுபாடின்றி
    தந்தனா ராகம் பாடி
    அதை
    உன்னில் ரசிக்கவும் செய்கிறது.

    நான்
    வெய்யிலில் கறுத்து
    களைத்து வந்தாலும்
    கதவை மூட
    மறந்து வந்தாலும்
    அசதியில் தூங்கி
    கண் விழித்தாலும்
    குளித்து விட்டு
    புதுசாய் வந்தாலும்
    அமைதியாய் இருக்கும் நீ
    என்னை நிறுத்தி
    மீண்டும் உன்னைப் பார்க்கவைப்பது
    உன்னைத்தவிர வேறில்லை
    என் முன்னாடி நிற்கும்
    கண்ணடியே
    என் வீட்டு நிலைக்கண்ணாடியே.

     

    Share
  • அந்த நூறு நாட்கள்!…

    சு. கோதண்டராமன்

    அதிகாலையில் ஒரு கனவு.

       அஞ்சல் என்ற கூவல் கேட்டு வாசலுக்கு வந்தேன். தபால்காரர் தன் சைக்கிளில் இருந்தபடியே, “நீங்கள் தானே சங்கரன் என்பது?” என்றார்.

    “ஆம். நானே தான்.”

    “பதிவுத் தபால். கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

       ஒப்புகைச் சீட்டையும் பேனாவையும் கொடுத்தார். அடியில் வைத்துக் கொள்ள அவருடைய கடிதக் கட்டையும் தந்தார். அதை வாங்கி சைக்கிள் ஹாண்டில் பாரில் வைத்துக் கையெழுத்திட்டு விட்டு அவரிடம் கொடுத்தபின் தான் கவனித்தேன். அது ஹாண்டில் பார் அல்ல. கொம்பு. நன்றாகப் பார்த்தேன், சைக்கிள் இருந்த இடத்தில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. தபால்காரரைப் பார்த்தேன்.

    “நீர்….நீர் தான் எமன் என்பவரோ?”

    “இல்லை. நான் அவருடைய பணியாட்களில் ஒருவன். இந்த வட்டார அஞ்சல்காரன். பெயர் கிங்கரன்123.”

    “ஓஹோ, கிங்கரன் ஒன் டூ த்ரீ அட் எருமை மெயில் டாட் காமா!”

       தபாலைத் தந்தார். உறையில்லாத தனித் தாள். அதில் முத்துப் போல மூன்று வரிகள் எழுதப்பட்டிருந்தன.

       இன்றிலிருந்து நூறாவது நாள் நீர் நம்முடைய நரகத்துக்கு

    விசாரணைக்காக வரவேண்டும்.

    இப்படிக்கு,

    யம தரும ராஜா உத்திரவுப்படி சித்திரகுப்தன்.

    தலைமைக் கணக்கர்

    என்றிருந்தது. படித்ததும் சிரிப்பு வந்தது. கிங்கரனைப் பார்த்து, “என்னய்யா கடுதாசி எழுதியிருக்காங்க உங்க ஆளுங்க, மொட்டைத் தாத்தன் குட்டையிலே விழுந்தான் என்கிற மாதிரி. உங்க யமனையும் சித்ரகுப்தனையும் நிர்வாக இயல் கல்லூரியிலே சேர்ந்து ஒரு வருஷம் பயிற்சி பெறச் செய்யணும்.”

    “ஏன், என்ன விஷயம்?”

    “இன்றிலிருந்துன்னா என்றிலிருந்து? எங்கேயாவது தேதி போட்டிருக்காங்களா, பாருங்க, நீங்க கடிதம் கொடுத்த தேதியிலிருந்தா? இது எழுதின தேதியிலிருந்தா? இந்த வாகனத்திலே ஏறி நீங்க வரதுக்கே பத்து நாள் ஆகி இருக்குமே. நான் எந்தத் தேதியிலிருந்துன்னு கணக்கு வெச்சுக்கறது?”

    “கடுதாசி பட்டுவாடா ஆன தேதி தான் கணக்கு.”

    “ஏன்யா, இப்படி எல்லாரும் அஞ்சக் கூடிய விஷயத்தைக் கொண்டு வந்திட்டு, அஞ்சல் னு கூவுறியே, எல்லாரும் போஸ்ட்னு தானே சத்தம் போடுவாங்க”.

    “அந்தந்த வட்டாரத்தில் அந்தந்த மொழியில் பேச வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவு.”

    “தமிழ் நாட்டுக்கு வேணா வட்டார மொழி தமிழா இருக்கலாம். சென்னையின் வட்டார மொழி ஆங்கிலம் தான். இது தெரியாதா உங்களுக்கு? எந்த இசை அரங்குக்குப் போங்கள். தெலுங்கு, கன்னட, தமிழ்க் கீர்த்தனைகள் பாடுவார்கள். ஆனால் பேசுவது என்னவோ ஆங்கிலத்தில் தான். ஆன்மிக நிகழ்ச்சிகள்லே கூட நாலு வார்த்தை இங்கிலீஷ் கலக்காட்டா ஜனங்களுக்கும் புரியாது. பேசினவருக்கும் திருப்தி இருக்காது.

       “தொக்காவில் ஆங்கிலம் கலக்காமல் யாராவது பேசுறாங்களா? அன்னிக்கு ஒரு அம்மா சமையல் பகுதியிலே காப்பி போடச் சொல்லிக் கொடுத்தாங்க, கேளுங்க.”

       “டூ டீஸ்பூன் காபி பவுடரை ஃபில்டரிலே ஃபில் பண்ணுங்க. வாட்டரை பாயில் பண்ணி பவுடர் மேல போர் பண்ணுங்க. மில்க்கை பாயில் பண்ணுங்க. பெர்கோலேட் ஆன டிகாக்ஷனை ரிக்வயர்ட் குவான்டிடி எடுத்துக்கிட்டு மில்க்கோட மிக்ஸ் பண்ணுங்க. டூ டீஸ்பூன் ஷுகர் ஆட் பண்ணுங்க. காபி ரெடி. இந்தப் ‘பண்ணு’ தமிழ் தான் சென்னையின் வட்டார மொழி.”

    “இன்னும் டென் லெட்டர்ஸ் டெலிவரி பண்ணணும். நோ டைம் நௌ” என்று அவர் நகர்ந்தார்.

    “பாத்தீங்களா, ரெண்டு நிமிஷம் சென்னைக் காத்தைச் சுவாசிச்ச உடனேயே உங்களுக்குத் தமிழ் மறந்து போச்சு. மறுபடியும் சந்திப்போம். நூறு நாள் கழிச்சு வருவீங்கள்லே?”

    “அதுக்கு வேறு நாலு பேர் வருவாங்க”.

    “நீங்களும் வாங்க. அடையாளம் காட்டணுமில்லே. அவங்க பாட்டுக்கு வேறே யாரையாவது அழைச்சிட்டுப் போயிடப் போறாங்க.”

    அவர் போய்விட்டார்.

       ஆக, இறுதிப் பயணத்துக்கான பயணச்சீட்டு உறுதி ஆகிவிட்டது. விடுதலை! மாதத்தில் பாதி நாள் மருத்துவர் வீட்டின் வரவேற்பு அறையில் தவம் கிடப்பதிலிருந்து விடுதலை! வீட்டில் தொக்காவின் அறுவைத் தொடர்களிலிருந்து விடுதலை! வெளியில் செல்லும்போது நெருக்கடி, இரைச்சல், பெட்ரோல் புகை, சாக்கடை நாற்றம் இவற்றிலிருந்து விடுதலை! சாலையைக் கடக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதிலிருந்து விடுதலை! உற்சாகத்தில் மனம் துள்ளிக் குதித்தது.

       துள்ளிக் குதித்ததில் விழிப்பு வந்து விட்டது. மணியைப் பார்த்தேன்.   5-40. விடியற்காலைக் கனவு பலிக்கும் என்பார்கள். நல்ல கனவானால் தூங்கக் கூடாது, கெட்ட கனவானால் உடன் தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை இது நல்ல கனவு தான். இருந்தாலும் வழக்கத்தை விட 20 நிமிடம் முன்னதாக விழிப்பு வந்து விட்டது. அதனால் தூங்கிவிடுவோம் என்று தீர்மானித்துப் படுத்தேன்.

       தூக்கம் வந்தால் தானே. வழக்கமான தந்திரங்களைக் கையாண்டேன். அருவியைக் கற்பனை செய்து பார்த்தேன். ஆட்டுக் கூட்டத்தை எண்ணினேன். 100,99…. என்று தலை கீழாக எண்ணினேன். -15, -16 என்று எதிர்த் திசையில் போயிற்றே தவிர தூக்கம் வரவில்லை. மணி ஆறு ஆகிவிட்டது. எழுந்தேன்.

       கனவு பலிக்கப் போவது நிச்சயம். போவதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் என்ன என்று யோசனை செய்தேன். ஒன்றுமில்லை. வங்கிக் கணக்குகளுக்கு எல்லாம் வாரிசுப் பதிவு இருக்கிறது. வேறு யாரிடமும் கொடுக்கவேண்டிய, வரவேண்டிய கடன் எதுவும் இல்லை. சந்தோஷமாகப் புறப்பட வேண்டியது தான்.

       எப்படிப் போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.  எனக்கு மட்டும் ராவணன், இரணியன் போல சாகும் வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டால் நான் பல ‘கூடாது’களைக் கூறுவேன். மருத்துவ மனையில் சாகக் கூடாது. சாலையில், கோயிலில், உறவினர் நண்பர் வீட்டில் கூடாது. நோய் வந்து சாகக் கூடாது. சினிமாக் கிழவர்கள் போல இருமி இருமித் தலை தொங்கக் கூடாது. தற்கொலை, விபத்து கூடாது.

       இந்தக் கனவு விஷயம் மட்டும் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. என் மனைவி காதில் விழுந்தால் புராணத்து சாவித்திரி மாதிரி புருஷன் உயிரை மீட்கும் வரை போராடுவாள். இந்த நூறு நாளும் திருக்கடையூரிலேயே தங்கி இருந்து தினமும் மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ண வேண்டும் என்று ஆரம்பித்து விடுவாள். ஹோமம் செய்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் உலகில் யாருமே சாக மாட்டார்கள் என்ற வாதம் அவளிடம் எடுபடாது.

       ஆ, ஒரு விஷயம். போவதற்கு முன் என் கெட்ட குணம் ஒன்றைத் திருத்திக் கொண்டாக வேண்டும். அது என்ன என்று சொல்ல வேண்டுமா?

       இதோ, என் மனைவி ஆஸ்திரேலியாவில் உள்ள தன் தங்கையிடம் போனில் பேசுகிறாள். அதை ஒட்டுக் கேளுங்கள்.

       “இந்த மனுஷனோட காலம் தள்ளறது பெரிய ளொள்ளா இருக்கு. எப்படிக் காப்பி போட்டாலும் அதுக்கு ஒரு நொட்டாங்கு சொல்றது. ஒரு நாளைக்கு, இதுக்குப் பேரு என்னன்னு சொல்லிட்டு வை என்பார். திக்கா இருந்தா நாக்கைச் சுத்தறதே, இது காப்பியா, வடிச்ச கஞ்சியான்னு கேப்பார். கொஞ்சம் நீர்க்க இருந்தா இது கழுநீரா என்பார். சர்க்கரை குறைவா இருக்கு, இன்னும் கொஞ்சம் போடுன்னு சொல்ல மாட்டார், இந்தக் கஷாயத்தை மெதுவா உள்ளே எறக்கிட்டேன் என்பார். சர்க்கரை அதிகமா இருந்தா, என்ன விசேஷம் இன்னிக்கு பானகம் கரைச்சு வெச்சிருக்கே என்பார். நானும் எப்படி எல்லாமோ காப்பி போட்டுப் பாத்துட்டேன். இத்தனை வருஷத்திலே ஒரு நாளாவது நன்னா இருக்குன்னு சொன்னதில்லே. நீங்களே உங்களுக்கு வேண்டியபடி போட்டுங்கோன்னும் சொல்லிப் பாத்துட்டேன். அடுப்பே மூட்டத் தெரியாது. எப்படிக் காப்பி போடுவார்?”

       பாவம், அவள் மனத்தை எவ்வளவு புண்படுத்தி இருக்கேன். இந்தக் கெட்ட குணத்தை முற்றிலும் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம்மைப் பற்றின கசப்பான அபிப்பிராயம் தான் அவள் மனதில் நிலைத்து நிற்கும். இந்த நூறு நாளிலாவது அவள் மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

       காப்பி வந்தது. ‘வாயைத் திறக்காதே, வாயைத் திறக்காதே’ என்று மனதுக்குச் சொல்லிக் கொண்டேன். என்னிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லாததை அதிசயித்தபடியே டம்ளரை எடுத்துச் சென்றாள் மனைவி.

       மூன்று நாள் இப்படி எந்த விமரிசனமும் இல்லாமல் நான் காப்பி குடித்ததைப் பார்த்ததும் அவளுக்குப் பயம் வந்து விட்டது. மகனிடம் மெதுவாகச் சொன்னாள், “மூணு நாளா அப்பா ஒரு மாதிரியா இருக்கார்டா. சரியாப் பேச மாட்டேங்கிறார். உடம்புக்கு என்ன பண்றதுன்னு தெரியல்லே. கேட்டா ஒண்ணுமில்லேங்கறார். டாக்டர் கிட்டே தான் கேட்கணும்.”

       எனக்கு ஒண்ணுமில்லேன்னு நான் கதறியும் கேட்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். வழக்கமான மருத்துவர் தான். அவரிடம் நான் ‘தற்போது எனக்கு உடம்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனதும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் மனைவி குறுக்கிட்டு, “அவர் வழக்கம் போல இல்லே, டாக்டர். பேச மாட்டேங்கறார். நீங்க நல்லாப் பாத்து மருந்து கொடுங்க” என்றாள். அவரும் நாக்கை நீட்டு, மூக்கை நீட்டு, கண்ணைக் காட்டு, முதுகைக் காட்டுன்னு சொல்லி எல்லாவற்றையும் சோதனை செய்துவிட்டு, “வெளிப்படையா ஒண்ணும் தெரியல்லே. யூரின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்திடுவோம்” என்றார்.

       பல வகையான சோதனைகளுக்குப் போய் வருவதிலும் மருத்துவரிடம் காட்டுவதிலும் நாள் 92, 91, 90 என்று குறைந்து கொண்டு வந்தது. கடைசியில் ஒரு நாள் அவர், “இது உடல் சம்பந்தமான வியாதி அல்ல. நீங்கள் மன நல மருத்துவரிடம் காட்டுங்கள்” என்று சொன்னார்.

       ‘வேண்டாம், எனக்குப் பைத்தியம் இல்லை’ என்று கதறினேன். கேட்பார் இல்லை. ‘எந்தப் பைத்தியமும் தான் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டதாக வரலாறு இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்.

       மன நல மருத்துவர் பல விதமான வண்ண அட்டைகளை என் முன் பரப்பினார். மூன்று மூன்று அட்டைகளாக வைத்து, ‘நடுவில் உள்ளது என்ன கலர்?’ என்று கேட்டார். சொன்னேன். ‘வெரி குட்’ என்றார்.

       என் தலை எழுத்து. என் அறிவுத் தெளிவை இப்படி எல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டி இருக்கிறது!

       “எனக்கு ஒண்ணும் இல்லே, டாக்டர். வழக்கமா என் மனைவி போடற காப்பியைப் பத்தி வேடிக்கையா கமெண்ட் அடிப்பேன். அதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இவர்கள் அதைப் பெரிது படுத்தி என்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்காங்க” என்றேன்.

    “ஏன் நிறுத்திக் கிட்டீங்க?”

    “அவள் மனம் புண்படும் என்பதை உணர்ந்தேன். நிறுத்திக் கொண்டேன்.”

    “இது எத்தனை வருஷப் பழக்கம்?”

    “40 வருஷம்.”

    “40 வருஷப் பழக்கத்தை ஒரு நாள்ல நிறுத்த முடியாது. உங்களாலே இப்போ திடீர்னு இடது கையாலே எழுத முடியுமா? ஒரே நாள்லே மாற்றம் ஏற்பட்டதுன்னா அதுக்கு அடிப்படையா ஒரு வலுவான காரணம் இருக்கணும். அடி ஏதாவது பட்டதா? கீழே விழுந்தீங்களா? யாராவது தாக்கினார்களா?”

    “எதுவும் இல்லே.”

    “கனவு ஏதேனும் கண்டீர்களா?”

    “இல்லை.”

    நல்ல வேளை. என் உடம்பில் மெய்யறி சோதனைக் கருவி பொருத்தப் படவில்லை. இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும்.

       “மேலே போய் கம்ப்யூட்டர் டெஸ்டு செஞ்சிட்டு வாங்க” என்றார். அங்கே ஒரு கணினி முன் உட்கார்த்தி வைக்கப்பட்டேன். உங்கள் பெயர் சங்கரனா, ஆம் என்றால் ஒய் யை அழுத்துங்கள். இல்லை என்றால் என் னை அழுத்துங்கள் என்பது போல 400 கேள்விகள். கடைசிக் கேள்விக்கு நான் பதில் அளித்து முடித்ததும் கணினி முடிவுகளைத் தொகுத்து அச்சடித்துக் கொடுத்தது.

       அடுத்த அறைக்குப் போகச் சொன்னார்கள். அங்கே ஒரு கட்டிலில் படுக்க வைக்கப் பட்டேன். தலையிலும் கால்களிலும் மின் இணைப்புக் கொடுத்தார்கள். தூக்கம் வந்தது. அரை மணி நன்றாகத் தூங்கினேன்.

    பின் மீண்டும் மருத்துவரிடம் போனோம்.

       “உங்களுடைய திடீர் மாற்றத்துக்குக் காரணம் ஏதோ ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான். அதை நீங்கள் மறந்திருக்கலாம். அல்லது சொல்ல விரும்பாமல் இருக்கலாம். ஒரு மாதத்திற்கு தினமும் வந்து ட்ரான்க்விலைசர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை ஆறு மாதம் சாப்பிட வேண்டும்.”

       நீர் வழிப்படும் துரும்பு போல் எல்லாவற்றுக்கும் உட்பட்டேன். முதல் நாள் மாத்திரை சாப்பிட்டதும் நாள் பூராவும் தூங்கிக் கொண்டிருந்தேனாம். பயந்து போய் மருத்துவரிடம் சொன்னார்கள். அவர் வேறு மருந்து கொடுத்தார். அதன் பின் தூக்கமே இல்லாமல் போயிற்று. மீண்டும் அவரிடம் போய் மருந்தை மாற்றி வந்தார்கள்.

       இந்தக் குளறுபடியில் ‘கவுண்ட் டௌன்’ மறந்து போயிற்று. கனவு நாள் நினைவில் இருந்தது. பிப். 5. அது முதல் 100 நாள் என்றால் மே 15. அது தான் என் இறுதி நாள் என்று மனதில் இருத்திக் கொண்டேன்.

       தினம் ஆறு வேளை மாத்திரை சாப்பிடுவது தான் பிடிக்கவில்லை. எல்லாம் கேட்ட ராவணன் மனிதரால் சாவு வரக் கூடாது என்பதை மட்டும் கேட்க விட்டு விட்டானாம். நானும் பல கூடாதுகளை வேண்டிக் கொண்ட போதிலும் மனைவியின் அன்புத் தொல்லைக்கு ஆட்பட்டுச் சாகக் கூடாது என்பதை மட்டும் கேட்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில நாள் தானே என்று சகித்துக் கொண்டிருந்தேன்.

       மனம் அமைதியாக இருந்தது. சொல்லும் ஒவ்வொரு சொல்லையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் இன்னும் சில நாட்கள் தான் என்ற எண்ணத்தை மனதில் இருத்தியே செய்தேன். வழக்கத்துக்கு மாறாக, உடம்பில் எந்த நோயும் இல்லை. வேண்டிக் கொண்டபடி அமைதியாக என் உயிர் பிரியப் போகிறது.

       ஆயிற்று. மே 15 உம் வந்தது. காலையில் வழக்கம் போல எழுந்தேன். இது கடைசி முகச் சவரம், கடைசிச் சிற்றுண்டி, கடைசி மதிய உணவு, கடைசி உணவு என்று எல்லாம் முடிந்து, கடைசி மாத்திரையும் விழுங்கியாகி விட்டது. படுக்கச் செல்லும் போது நான் காலையில் எழுந்திருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எல்லோரிடமும் மானசீகமாக விடை பெற்றுக் கொண்டேன். படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.

       விழித்தேன். பொழுது விடிந்திருந்தது. வீட்டில் தான் இருக்கிறேன். அப்படியானால் நான் நேற்று இரவு சாகவில்லையா? கிங்கரன் ஒன் டூ த்ரீ, ஃபோர் ட்வெண்டி செய்திருக்கிறானா?

       அல்ல, அல்ல. அதிகாலைக் கனவு பலிக்கும் என்று நம்பியது என் அசட்டுத் தனம்.

       சாகாதது பற்றி வருத்தமில்லை. இந்த மாத்திரைத் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும்.

       காப்பி வந்தது. ஒரு வாய் உறிஞ்சினேன். இனி என்ன விரதம் வேண்டிக் கிடக்கிறது? விமரிசனத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான். மாத்திரையிலிருந்து விடுதலை பெற அதுவே வழி.

    “இது என்ன காப்பியா, பாயசமா?”

         “ஆரம்பி்ச்சுட்டீங்களா உங்க ளொள்ளை. மூணு மாசமா நிம்தியா இருந்தேன். அம்பி, ஒங்க அப்பாவை டாக்டர் கிட்டே அழைச்சிண்டு போய் அவர் வாயை அடைக்கிறதுக்கு ஏதாவது மருந்து இருந்தா வாங்கிக் குடு.”

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (66)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் அடுத்த மடலில் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலமாற்றம் மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில முன்னேற்றங்களாகவும், வேறு சில பின் தள்ளல்களாகவும் இருக்கின்றன.

    ஒவ்வொரு நாடும் காலத்தோடு தனது நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே அந்நதந்த அரசாங்கங்களின் மூலம் முயற்சிக்கின்றன.

    ஆதிவாசிகளான காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று நாகரீகமாக நகரங்களில் வசதிகளோடு வாழும் ஒரு நிலை மக்களின் தேவைகளின் நிமித்தமே சாத்தியமாயிற்று.

    நான் வாழும் இந்தப்புலம் பெயர் தேசமான இங்கிலாந்து நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் காலகாலமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

    எத்தனையோ நூறு வருடங்களாகப் பொருளாதார வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தைக் கண்ட நாடு இங்கிலாந்து. பல கண்டு பிடிப்புகள், பல ஆராய்ச்சிகள் என்பனவற்றின் பிறப்பிடமாக இவ்விங்கிலாந்து தேசம் விளங்கியிருக்கிறது.

    ஆனால் இன்றோ பொருளாதார வீழ்ச்சி எனும் சிக்கலுக்குள் அமிழ்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இப்பொருளாதாரச் சிக்கலுக்கு யார் காரணம் அல்லது இது ஏன் நிகழ்ந்தது எனும் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். நம் முன்னே பூதாகரமாக இருக்கும் உண்மை நாம் பொருளாதாரச் சிக்கல் எனும் நிலைக்காட்பட்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே.

    அடிமட்ட மனிதனும் தன் அன்றாட வாழ்விற்கு அல்லாடக் கூடாது எனும் காரணத்திற்காகவே இங்கிலாந்தில் பல காலங்களாக “சமூக வாழ்வாதாரம் (சோஷல் வெல்வெயார்) “ எனும் ஒரு சலூகை அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதாவது வேலையின்றித் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக ரசாங்கம் உதவிப் பணம் கொடுத்து வருகிறது.

    ஆனால் இத்தகைய சலுகையே இன்று மக்களின் சோம்பலுக்கு வித்திட்டு விட்டது எனும் கருத்தே பலரின் மத்தியில் மிகவும் பாரமான வினாவாக எழுந்துள்ளது.

    வேலையின்றி அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தையே தமது தொழிலாகக் கொண்டு வாழும் ஒரு பகுதி இன்று சமுதாயத்தில் உருவாகி விட்டது என்பது அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது.

    அரசியல்வாதிகளின் மத்தியில் காணப்படும் இந்த ஒருமித்த அடிப்படைக் கருத்துக்குக் காரணம் பொதுவான மக்களின் மனதில் அலையடிக்கும் பொதுக்கருத்துக் கணிப்பே.

    இத்தகைய “அரசாங்க உதவிப்பண” வாழ்வாளர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் இவர்களைப் பற்றிய அன்றாட ஊடகங்களின் அங்கலாய்ப்புகளும், இவர்களின் சலுகைத் துஷ்பிரயோகத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அரசாங்கத்திர்கு வரிப்பணத்தைச் செலுத்தி ஒழுங்காக வாழும் மக்களின் மனதில் ஒருவகை ஆவேசத்தைக் கிளறி விட்டுள்ளது.

    இதற்கு மிக முக்கியமான காரணம் இன்றையப் பொருளாதாரச் சிக்கல் என்று சொன்னால் மிகையாகாது. அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கைச் சீர் செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட இன்றைய கூட்டரசாங்கம் இந்த மூன்றரை வருடங்களில் அதற்கான வழி பல அரசாங்கத் திட்டங்களை கட்டுப்படுத்திப் பொதுத்துறைகளுக்கான செலவுகளைக் குறைப்பது என்று கூறி மக்களுக்கான சேவையில் பலரைக் குறைத்து விட்டது என்று கூறலாம்.

    தாம் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காகவே வரிப்பணத்தைச் செலுத்துகிறோம் ஆனால் தமக்கான சேவைகளைக் கட்டுப்படுத்தி, வேலையில்லாமல் வாழ்வோர்களுக்கான உதவிப் பணத்தை மட்டும் தாராளமாக வழங்குவது எவ்வகையில் நியாயமாகும் என்று பலரின் மனதில் சீற்றம் தோன்றியுள்ளது.

    அது மட்டுமல்ல மற்றைய நாடுகளில் இருந்து அகதிகளாகவும், குடியேற்றம் செய்பவர்களும் இதே சலுகைகளைப் பெறுவது எவ்வகையில் நியாயம் என்பது வலதுசார அரசியல்வாதிகளினதும், வலதுசார எண்ணங் கொண்டவர்களினதும் வாதம்.

    அதேசமயம் அரசாங்கம் செய்யும் ஆட்குறைப்பு முதலான பொருளாதாரக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின் மூலம் பதிவியிழந்த பலர் இத்தகைய உதவியகளைக் குறைப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார்களே ! இவர்களை சோம்பேறிகள் என்று வாதிடுவது எவ்வகையில் நியாயமாகும் என்று வாதிடுகிறார்கள் மறுசாரார்.

    பணிபுரியும் போது மிகவும் வசதியாக பெரிய மனைகளில் வசித்து வந்தவர்கள் பதவியிழந்த பின்பும் அதே மனையில் வசிப்பதற்கு எதற்காக அரசாங்கம் அவர்களுக்கு உதவிப்பணம் கொடுக்க வேண்டும் ? வேலையை இழந்து விட்டால் அவர்கள் தமது பெரியமனைகளில் வசிக்க வசதியில்லை என்றால் தம்மால் பராமரிக்கக் கூடிய சிறிய மனைகளுக்கு இடம் மாறவேண்டியது தானே நியாயம் என்று வாதிடுபவர்கள் பலர்.

    நாம் பணிபுரியும் போது அனைவரையும் போலத்தானே வரிப்பணம் செலுத்தினோம் இப்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் பதவியிழந்த நாம் எமது இல்லத்தை விட்டு குடிபெயர்ந்து சிறிய இல்லங்களில் வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயமாகும் என்பது மறு பகுதியினருடைய வாதம்.

    வேலையற்றோருக்கு கிடைக்கும் உதவிப்பணத்தை விட முறைவான தொலையே வேலை செய்யும் போது ஊதியமாகக் கிடைக்கிறது எனவே நாம் வேலை தேடிச் செய்வது எமக்கு நஷ்டமே என்பதால் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்வதையே தமது பணியாகக் கொண்டோர்கள் இல்லாமலில்லை.

    இவர்களில் பலர் இதை மிகவும் வெளிப்படையாக ஏதோ தமது புத்திசாலித்தனம் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் இதை ஊடகங்கள் வேறு ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அதுவும் அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றால் அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

    இந்த பொதுமக்களின் அபிப்பிராய அலையைத் தமக்கு சாதமாக்கிக் கொள்ள கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முயற்சிக்கிறது. அதன் பலனாக அவர்கள் கொண்டு வந்த பல புதிய சட்டங்கள் நேற்றிலிருந்து (15.07.2013) அமுலுக்கு வந்துள்ளன.

    இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..(2)

    விசாலம்

     

    திருஞான சம்பந்தர் “எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் “என்று இந்தத் திருத்தல ஈசனைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசரும் இவரைப்பற்றி “இன்னம்பரான் “என்று புகழ்ந்திருக்கிறார் . இத்தலத்திருநாதன் தன் பக்தன் சுதன்மனைக் காப்பாற்ற தானே கீழ்க்கணக்கராக மாறி சோழப்பேரரசர் முன் சென்று வரவு சிலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார் . இது என்ன கதை? சுதன்மன் என்ற சிவபக்தனும் அவன் தந்தையும் அந்தக் கோயிலில் கணக்கர்கள். முதலில் தந்தை பார்த்துக்கொள்ள பின் சுதன்மன் அதை ஏற்றுக்கொண்டான் . தினமும் வரவு செலவுகளை சண்டிகர் முன் ஒப்பித்து விடுவது அவன் வழக்கம் . சண்டீஸ்வரரே கணக்குகளுக்கு அதிபதி.  அவரே ஆடிட்டர்.  அவர் முன்னால் தப்பு கணக்கு காட்ட முடியாது. வரவுக்கேற்ப செலவும் இருக்கும் . அதற்கெல்லாம் சாட்சி சண்டிகேஸ்வரர்தான்.

    கோயில் திருப்பணி ஆரம்பமானது . பலர் நன்கொடையாக மரங்கள், சிற்பங்கள், பாறைகள் என கொடுத்தனர். அப்படிக் கொடுக்கும் போது சண்டிகேஸ்வரர் முன் நின்று தான் கொடுக்கப் போகும் பொருளைச் சொல்லி சம்மதம் வாங்கி கொடுப்பர். இதற்கெல்லாம் எழுத்து வழியாக கணக்கு வைத்துக் கொள்ளவில்லை எல்லாவற்றுக்கும் ஈசனே சாட்சி . திடீரென்று சோழ மன்னன் அந்தக்கோயிலுக்கு வந்து நடக்கும் பணிகளை பார்வையிட்டு பின் எல்லாவற்றுக்கும் ஏடுகள் மூலமாக கணக்கு காட்டவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார். சுதன்மன் ஈசனையே மனதில் நினைத்து கவலையின்றி வேலைகளை கவனித்தார். ஆனால் மன்னர் திரும்பவும் இதைப்பற்றி உடனே தகவல் சொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க சுதன்மனுக்கு இரவில் நித்திரை வரவில்லை. ஏதோ ஞாபகம் வந்ததைக் குறித்து எழுதி அனுப்பி வைக்கலாம் என்றால் பின்னால் ஏதாவது விட்டிருந்தால் தவறாகிவிடுமே ! குழம்பிப்போனான். பக்தன் கண் கலங்க விடுவாரா ஈசன்! கிளம்பிவிட்டார் தன் கணக்கர் சண்டிகேஸ்வரருடன் . சிவபெருமான் சுதன்மன் ஆனார். சண்டேஸ்வரர் கணக்குப் பிள்ளையானார் . பின் என்ன ? மிகத் துல்லியமான கணக்கு மன்னர் முன் சமர்ப்பிக்கப்பட்டது. பேரரசர் பிரமித்துப் போனார் . புகழ்ந்தார் பின் சுதன்மனுக்கு தலைமை கணக்கர் என்ற சான்றிதழ் வழங்கினார் . பின் தன்னிடம் இருந்த கணக்கர்களை சுதன்மனிடம் கணக்கு படிக்க அனுப்பிவிட்டார். நடந்த விவரம் எல்லாம் புரிந்தவுடன் சுதன்மன் “எல்லாம் என் ஈசனின் கருணை “என்று மெய்யுருகிப் போனான். சுதன்மனுக்கு உதவிய “எழுத்தறிநாதர்”எழுந்தருளியிருக்கும் இடம் தான் இந்த இன்னம்பூர் .சுதன்மன் எழுதாமல் மனதிலேயே எழுதி வைத்த கணக்கை எழுதியதலால் இவருக்கு இந்தப்பெயர் வந்ததாம்.

    ஊருக்குள் நுழைந்தவுடன் எளிதாக இந்தகோயிலைக் கண்டு பிடித்து விடலாம். முதல் பிரகாரத்தில் கிழக்குத் திசையில் சூரியனைக் காண்கின்றோம். உள் பிரகாரம் மிகப் பெரிதாக இருக்கிறது. மேற்கு பகுதியில் வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளது. தெற்கு மூலையில் கன்னிமூலை கணபதி அருள் புரிகிறார் . பின் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி . அருள்மிகு பாலசுப்பிரமண்யர், விஷ்ணுதுர்க்கை , ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ காலபைரவர் என்று பல தெய்வங்களைப் பார்க்க முடிகிறது. இந்த ஊரில் சூரியனும் ஈசனை வழிப்பட்டாராம். இதனால் சூரியன் பங்குனி மாதம் பதிமூன்று,பதினாலு,பதினைந்து தேதிகளில் ஈசன் மேல் தன் ஒளியை வீசி வணங்குகிறார். காலை நேரத்தில் இதைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் இந்தக் கண் கொள்ளாக் காட்சியை ரசிக்கும்.

    பண்டைக்காலத்தில் காலையில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி வந்தாலே நல்ல “வாகிங் ” தேகப் பயிற்சி என்பதை உணர்ந்து அந்தக் கால மக்களும் காலை ,மாலை இரு நேரங்களும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் பக்தியும் பெருகியது. ஆன்மீகமும் வளர்ந்தது . மனம் தவறு செய்யும் முன் இரு முறை யோசித்தது . கோயிலுக்குச் சென்று அமைதியாய் அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்து கர்ப்பகிரகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூலவரை தியானத்துடன் வணங்க அதனால் கிடைக்கும் அமைதியே தனிதான். ஓம் சாந்தி.

     

    Share
  • வாழ்க்கை நலம் – 18

     

    குன்றக்குடி அடிகள்

    18.  மோப்பக் குழையும் அனிச்சம்!  

    மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூகிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙனம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

    விருந்தினர் என்பவர்கள் புதியவர்கள். அதாவது முன்பின் தெரியாதவர்கள். அதாவது நாடுவிட்டு நாடு, கற்பதற்காகவும் புதிய அனுபவங்களைப் பெருதலுக்காகவும் பயணம் செய்து  வருபவர்களே விருந்தினர் (இன்று உறவினர்களை விருந்தினர் என்று அழைப்பது தவறான மரபு). இத்தகு விருந்தினர்களை, உழுவலன்புடையாரைப் போல இனிய பரிவு நிறைந்த புன்முறுவல் தாங்கிய முகத்துடன் வரவேற்க வேண்டும். அங்ஙனம் வரவேற்காது, அந்நியர் என்ற உணர்வுடன் முகத்தில் ஐயப்பாட்டுணர்வும் விருப்பமின்மையும் புலப்பட நோக்கின், வந்த விருந்தினர் மனத்துன்பம் அடைவர்; அவர்கள் சோற்றுக்காக வந்தவர்கள் அல்லர்; உறவுக்காக வந்தவர்கள். நன்மை செய்வதற்காக வந்தவர்கள்.

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து”

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • பிக்கோலிம் புளுகு – 6

    தேமொழி

    (கட்டுரையின் நிறைவுப் பகுதி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
    _____________________________________________

    Related Articles:

    War is over: Imaginary ‘Bicholim Conflict’ page removed from Wikipedia after five years, Eric Pfeiffer, Yahoo! News. Eric Pfeiffer, Yahoo! News January 4, 2013, http://news.yahoo.com/blogs/sideshow/war-over-imaginary-bicholim-conflict-page-removed-wikipedia-234717353.html

    A copy of the deleted Wikipedia’s Bicholim Conflict Article:  http://www.absoluteastronomy.com/topics/Bicholim_conflict
    _____________________________________________

     

    alorna fort

     

    எழுச்சியின் துவக்கம்

    மராட்டியர்கள் மேலும் படைகளை அனுப்பி போரிட இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள்  விரைவாகவும் திறம்படவும் முன் நிகழ்த்திய போர்களுக்கு எதிர் மாறாக, இப்போரில் போர்ச்சுக்கீசியர்களின் அதிநுட்ப போர்க்கருவிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது [9]. மராட்டியர்களின் படை வதாடியோவில் முற்றுகையில் சிக்கித் தவித்தது. அவர்கள் தங்களுக்கு அதிக இழப்புகளைத் தரும் நடவடிக்கைகளைத்  தவிர்க்க எண்ணி சூழ்நிலை சாதகமாக மாறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் [9].

    ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோ நகரில் வாழ்ந்த இந்துக்களை கைது செய்ததும், அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அருகில் உள்ள கோவாவின் கிராமப் பகுதிகளுக்கு வெகு வேகமாகப் பரவியது [16]. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர்களின் விருப்பத்திற்கு மாறாக மராட்டியர்களுடன் இணைந்த வதாடியோ மக்கள் படுகொலைகள்  செய்யப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் உருவெடுத்து கதைகள் பரவ ஆரம்பித்தது [11]. இப்ரம்பூர் நகரில் முதல் பெரிய எதிர்ப்பு தோன்றியது. இப்ரம்பூர் முதலில் மராட்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்பொழுது அவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் பலத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள் [9].  இம்பரம்பூர் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு போர்ச்சுக்கீசியப் படைகளை எதிர்க்க முனைந்தார்கள். ஆயுதமற்ற கலகக்காரர்கள்  நிகழ்த்திய இந்த எதிர்ப்பை, போர்ச்சுக்கீசியர்கள் வானை நோக்கிச் சுட்டுப்  பலரைக்  கதிகலங்கச் செய்தும், அடங்காது தொல்லைகள் கொடுத்தவர்களைச்  சிறையிலடைத்தும் சுலபமாக கலவரத்தை அடக்கி நகருக்கு அதிகம் சேதம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் [9].  இப்ரம்பூருக்கு வடக்கில் இருந்த அன்கோனம் (Anconem) நகருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது [9].

    எனினும், அலோர்னா கோட்டைக்கு வடக்கில் உள்ள தற்றாடிங்கம் (Tatradingam) என்ற குக்கிராமத்தின் மக்கள் கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்று, போர்ச்சுக்கீசியர்கள் பேர்நேம்மை  (Pernem) மராட்டியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்பந்தித்தார்கள், இதன் விளைவாக சிறிய சண்டையும் நிகழ்ந்தது [9]. அத்துமீறி கோட்டைக்குள் நுழைந்த கிராம மக்களிடம் போர்சுகீசியப் பிரதிநிதிகள் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது இராணுவ தளத்தின் மீது நிகழ்த்தப் பட்ட அத்துமீறிய ஊடுருவல் என்பதால், கோட்டையின் தளபதி  மக்களைத் தாக்க முடிவெடுத்து மக்களில் சிலரைக் காயமுறவும் செய்தார் [9]. அவர் கட்டளையின் கீழ் அதி உற்சாகமாகத்  தாக்கிய படையினர் மக்களில் பெரும்பகுதியினரை மரண காயங்கள் ஏற்படும் அளவிற்குத் தாக்கினர். காயமடைந்தோரால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் இயலாது போனது [9]. டி ஆல்பெகுயிர்கேவும்  (De Albequerque) படைத்தளத்தை பாதுகாக்க இத்தாக்குதல் அத்தியாவசியம் என்ற கண்ணோட்டத்துடன் இந்தத் தாக்குதலை அணுகியதால், இந்த வன்முறையை அவரும்  கண்டிக்கவில்லை[9].

    பிக்கோலிம் நகர மக்கள் டி மெல்லோ (D’Mello) தங்கியிருந்த அரசு மாளிகையைச் சூழ்ந்துகொண்டு இந்தப் படுகொலைகளை நிறுத்தச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள் [9]. ஆனால் டி மெல்லோ சர்ச்சைக்குரிய விதத்தில் படைகளிடம் நகரில் ஊரடங்கு உத்திரவை  நிறைவேற்றக் கட்டளை இட்டார் [9]. இந்த ஊரடங்கு உத்தரவு பிக்கோலிமின் பிற பகுதிகளுக்கும் அதிகப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டது  [9]. சிரிகவோ (Sirigao) பகுதியில் துவங்கிய மற்றொரு புரட்சி எழுச்சி பிக்கோலிம் பகுதி முழுமையிலுமே (போர்ச்ச்கீசியர்களின்  கட்டுப்பாட் டிற்குள் அடங்கிய பகுதிகளில்) அவசர நிலைப்  பிரககடனத்தை அறிவிக்கும்படி செய்தது[9]. பேரிநேமின் கிழக்குப் பகுதியும் இராணுவத்தின்  அவசரகாலச்  சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது [9].

    டிசெம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கும் பொழுது, பார்டெஸ் (Bardez) நகரின் ட்ராவிண்டா (Dravinda) பகுதியில், ஐந்திலிருந்து பத்து இந்துக்கள் அடங்கிய ஒரு குழுவினர்  நகரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் கோவாவை சுதந்திரமடையச் செய்து மராட்டியர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்கள் [11]. இத்தாக்குதல் மோசமான பழிவாங்கும் எதிர் விளைவை ஏற்படுத்தியது.  போர்சுக்கீசியர்கள் இந்த ட்ராவிண்டா கலகக் கும்பலை சுற்றி வளைத்தனர்.  இவர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்களையும், இப்போராட்டக் குழுவினரையும் தண்டிக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கிலிட்டனர் [11].

    புத்தாண்டு பிறந்ததும், போர்ச்சுக்கீசியர்கள் மவுலிஞ்சியம் (Maulinguem) பகுதியில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிறுபகுதியைத் தாக்கினர் [9]. வெற்றிகரமான இத்தாக்குதலின் இறுதியில் அதிக இழப்பின்றி நகரைக் கைப்பற்றினர் [9]. மீண்டும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி மேலும் சில குடிமக்களைக் கைது செய்தனர் [9]. பிக்கோலிம்மில் தாங்கள் இழந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் போர்சுக்கீசியர்கள் முன்னேறினார்கள். மராட்டியப்படைகள்  தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் செல்லத் தொடங்கியதும் கோவாவை விட்டு வெளியேற நேர்ந்தது[9]. எனினும், மேலும் பல மராட்டியப் படையினர் எல்லையில் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தனர் [9]. அந்நிலையில் கோவாவில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே பகுதி வதாடியோ மட்டுமே [9]. அங்கும் மராட்டியப் படை இரண்டு மாதங்களாக முற்றுகைக்கு கீழ் இருந்ததால் தீவிர மராட்டிய ஆதரவாளர்களும் அமைதியை இழக்கத் துவங்கினர் [9].

     

    சமாதான உடன்படிக்கை

    வதாடியோவில் மராட்டியர்களின் உணவுக் கிடங்குகள் போர்ச்சுகீசியர்களால் நாசப்படுத்தப்பட்டது, இது அவர்கள் உறுதியைக் குலைக்கும் இறுதிப் பேரிடியாக இறங்கியது. எனினும் மராட்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வதாடியோ நகர மக்கள் பட்டினி கிடந்து மரணத்தை தழுவும் அவலத்தை விரும்பாததால், 1641 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெள்ளைக்கொடியை உயர்த்தி சமாதானத்தைத் தெரிவித்துச்  சரணடைந்தார்கள் [9]. முதலில் இந்த நடவடிக்க்கையைச் சந்தேகித்த போர்ச்சுகீசியர்கள் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தார்கள்.  ஆனால் சிறு சிறு குழுக்களாக நகரில் இருந்து வெளியேறிய மராட்டியப் படைகள் எந்த வித தீங்கும் இழைப்பதாகத் தெரியவில்லை [9]. போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் பங்கிற்கு, மராட்டியப் படையினர் நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதித்தனர். உடனடியாக தங்கள் ஆயுதங்களை ஒப்புவிக்காத மராட்டியப் படையினரை மட்டுமே அவர்கள் கைது செய்தனர் [9]. மராட்டியப் படை வீரர்கள் போர்சுக்கீசியர்களைத் தாக்க எண்ணியிருந்தாலும் பலநாள் பட்டினியினாலும், மனஉறுதி குலைந்த நிலையிலும் மிக எளிதில் போரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என ஸ்ரீநிவாசன் வசந்தகுலன் கருதுகிறார். போர்ச்சுக்கீசியர்கள் மிக விரைவில் படைகளை பலப்படுத்தியதால் மராட்டியர்களைவிட போர்ச்சுக்கீசியப் படையினரின் எண்ணிக்கை நகரில் அதிக அளவு இருந்தது [9].

    பிப்ரவரி மாதத்  துவக்கத்தில் மராட்டியப் படைகள் இப்ரம்பூருக்குள் நுழைந்தது. ஆனால் இம்முறை அவர்கள் உடன்படிக்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைத் தெரிவித்தனர். மராட்டியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மராட்டிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப் படவேண்டும் என்றக் கோரிக்கைகளையும் முன் வைத்தனர் [9]. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியே டி’ ஆல்பெகுயிர்கேவை நேரில் சந்தித்து சமாதான உடன்படிக்கைக் கோரிக்கைகளைக் குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அந்த  உடன்படிக்கையின் படி; மராட்டியப் பேரரசுக்கும் போர்ச்க்கீசியர்களின் கோவாவிற்கும் இடையிலான எல்லையையும், அருகில் உள்ள  சிற்றரசுகளின் எல்லைகளையும் மராட்டியர்கள்  அங்கீகரிப்பதாகத்  தெரிவிக்கப் பட்டது [9].  பதிலுக்கு போர்ச்சுகீசியர்களும் தங்கள் வடபகுதியின் எல்லையை விரிவுபடுத்த முயற்சிப்பதில்லை எனவும் முடிவானது [9].

    இந்த உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணங்கள் பற்பல [11] [13]. மராட்டியர்கள் வதாடியோவில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களது படைவீரர்களை மீட்டு மீண்டும் தங்கள் படையில் இணைத்துக் கொள்ள விரும்பினர். மராட்டியர்கள்  தாங்கள்  முன் நினைத்திருந்ததைப் போல கோவாவை விரைவானத் தாக்குதல் மூலம் கைப்பற்றி  விடலாம் என்பது இனி நிச்சயமற்ற நிலை என அறிந்திருந்தனர். அத்துடன் முதலில் திட்டமிட்டபடியே மராட்டியப் பேரரசின் தென் எல்லையை மட்டும் பாதுகாப்பதே போதுமானது என்ற முடிவுக்கும் வந்தனர். இதனால் தெற்கெல்லையில் போரைத் தொடர அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் மூலம், இரு அரசுகளுக்கும் இடையே இருந்த மராட்டியர்களின் தெற்கெல்லை முழுவதிலுமே   அமைதியான முறையில்  பாதுகாப்பினைப் பெற வழி கிடைக்கும் [11].

    போர்ச்சுக்கீசியர்களின் கண்ணோட்டதில், பிக்கோலிம்மிலும் பேரிநேமிலும் ஏற்பட்டது போன்ற மக்களின் புரட்சிகரமான எழுச்சி விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவி, அந்த சூழ்நிலை மராட்டியர்களுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்ற அதிகப்படியான அச்சம் இருந்தது. அத்துடன் அவர்களுக்கு மராட்டியர்கள் எல்லைபகுதியில் படைகளைக் குவித்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது . ஒரே சமயத்தில் மக்களின் எழுச்சிப் போராட்டமும், எல்லையிலிருக்கும் மராட்டியப் படைகளின் தாக்குதல்களும் நிகழ்ந்தால்  கோவாவின் வட பகுதி முழுமையையுமே மராட்டியர் வசம் இழக்க நேரிடலாம்.  அத்துடன் பான்ஞ்சிம் (Pangim) மற்றும் வாஸ் கோடா காமா நகர்களின் பாதுகாப்பான நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் புரிந்திருந்தது [9] [11]. ஒப்பந்த பேச்சுவார்த்தை நிகழ்ந்த பொழுதே மராட்டியர்களும் தங்களால் இப்ரம்பூரை எந்தவித  எதிர்ப்புமின்றி தாக்க முடியும் என்பதையும் போர்ச்சுக்கீசியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் [11].

    ஒரு சில கோவா குடிமக்களுக்கு இந்த உடன்படிக்கை திருப்தி அளிக்கவில்லை. மராட்டிய எல்லையை விரிவுபடுத்த கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் பெரும்பாலோருக்கு இந்த உடன்படிக்கை ஏற்பட்டது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது. மராட்டியர்களுக்கும் போர்சுக்கீசியர்களுக்கும் ஏற்படும் உடன்படிக்கை மூலம் அமைதி நிலவிட்டால் தாங்கள் எதிர்கொள்ளும்  பாரபட்சமான நடவடிக்கைகள் தொடராது என இவர்கள் கருதினர் [2]. போர் கோவாவின் மக்களிடையே தோன்றிய எழுச்சியை நிறுத்தாவிட்டாலும் அதைத்  தீவிரமாகக் குறைத்தது. மேலும் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் போராட்டம் போர் என்ற முறையில் வரலாற்றில் எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக்  காரணம் இருதரப்பினருமே தாங்கள் போர் நிகழ்த்துவதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.  ஆயினும் மராட்டியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஒருவரை ஒருவர் தாக்க, போருக்குத் தங்களைத் தயார் படுத்திய வண்ணமே இருந்தனர் [9].

     

    பாரம்பரிய சிறப்பு

    வரலாற்றுச் சிறப்பு

    இந்தச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கையின் காரணத்தினால் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்தது. இதன் காரணமாக பின்னர் மராட்டியப் பேரரசு மிகவும் வலிமை நிறைந்ததாக இருந்த காலத்திலும் கோவாவை நோக்கித்  தனது  தெற்கு எல்லையை விரிவு படுத்த முயலவில்லை. இதனால் போர்ச்சுக்கீசியர்கள்  கட்டுபாட்டிலேயே கோவா தொடர்ந்து இருந்து வந்தது, பின்னர் இந்தியாவின் நடுவண் அரசின் ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் ஒன்றாக1961 இல்  இணைத்துக் கொள்ளப்பட்டது [17]. தற்கால கோவா தனக்கென ஒரு அரசாங்கமும், கலாச்சாரமும் கொண்டு, தன்னுரிமைப் பெற்று இந்தியாவின் ஒன்றிய ஆளுமைப் பகுதியாக விளங்கி வருகிறது.

    கலாச்சார சிறப்பு

    இந்தப் போர் மிகக் குறுகியது, இதன் தாக்கமும், போரின் இழப்புகளும், சேதங்களும் மிகக் குறைவு. இதன் காரணமாக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தையோ, திரைப்படத் தயாரிப்பளர்களின் கவனத்தையோ இது சற்றும் ஈர்க்கவில்லை.  1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிராங்க் மெச்காலஸ் (Frank McCallus) எழுதிய புதினமொன்றில் விவரிக்கப்பட்ட இந்தியப் புரட்சி பற்றிய நிகழ்ச்சியில் பிக்கோலிம் போர் போன்ற நிகழ்சிகளின் குறிப்பிடத்தக்க சாயல்கள்  உள்ளது [17]. மற்றொரு கோவாவின் எழுத்தாளர் விக்டர் டி’ ஸோசா 1958 இல் வெளியிட்ட ‘கோவாவில் வாழ்க்கை’ (Goan  Life, a Book by Victor D’ Souza) என்ற நூலில், கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவக் குடும்பம் ஒன்று மராட்டியப்  பேரரசின் மீது உள்ள தங்கள் பற்றுதலை விளக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலும் இந்தக்  கதை பிக்கோலிம்போரினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் [17].

     

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    ______________________________________

    குறிப்பு:
    இத்துடன் ‘பிக்கோலிம் போர்’ என்ற தலைப்பில் விக்கிபீடியாவில்  இடம்பிடித்து பின்பு நீக்கப்பட்ட,  அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுக் கட்டுரையின் மொழி பெயர்ப்பான ‘பிக்கோலிம் புளுகு’ கட்டுரையும் நிறைவு பெறுகிறது.

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

     

     

     

    Share
  • இராம கதை – ஒரு சிறு விமர்சனம்.

    நரசய்யா

    கைக்கு அடக்கமான ஒரு சிறு நூல்; ஆனால் கடலளவு தன்னுள் அடக்கியுள்ள பெரு நூல்! அப்படித்தான் இந்த இராமகதை என்ற நூலைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது!

    gopal0001

    அழகான அட்டைப்படம், பூஜை அறையில் வைக்கவேண்டுமென்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. 60 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், முதல் 28 பக்கங்களில் இராமகதை சுருக்கமாக, ஆனால் படிப்பதற்கு வசதியான எளிமையான் தமிழ் பேசுகவிதையில் வார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கம்பராமாயணத்தைச் சார்ந்து தான் எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நான் சமீபத்தில் திரு. மணவாளன் அவர்களைப் பற்றிப் பேசியதை நினைவு கூறுகிறேன். முனைவர் மணவாளன் 2011 ஆம் வருடத்திற்கான சரஸ்வத் சம்மான் பெற்றவர். இவ்விருது அவர் எழுதிய இராமகாதையும் இராமாயணங்களும் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், திபேத்தியம், தமிழ், பழைய ஜாவானியம், ஜப்பானியம், தெலுங்கு, அஸ்ஸாமி, மலையாளம், வங்கமொழி, கன்னடம், மராத்தி, இந்தி, ஒடிசி, பாரசீகம், மலேசியா, பர்மா, மரோனா, தாய், லாவோசியா, காஷ்மீரி, முதலான 48 மொழிகளில் உள்ள இராமாயணங்களை இந்த நூலில் மணவாளன் ஒப்பீடு செய்துள்ளார்! அதன் மூலம், ஒப்பீட்டுத் திறனாய்வுக்காக அவர் விருது பெற்றார். மனித இயல்பிலே ஒப்பிடுவது சாதாரணமாக நிகழ்வதே. ஒப்பிடுவதின் நோக்கம் இன்றைய பட்டிமன்றங்கள் போன்றது அல்ல; ஒன்றனை விட மற்றொன்று சிறப்பானது என்று கூறுவதற்கும் அல்ல; ஒவ்வொன்றின் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு மட்டுமே; ஒரு வழிமுறை அல்லது உத்தி எனலாம். அதுதான் ஒப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கம். அப்படிப் பார்க்கப்போனால், கோபாலனின் நூலும் இத்திறனாய்வில் பங்கு பெறலாம்!

    எது எவ்வாறாயினும் ஒப்பிடுகையில் நாம் பார்ப்பது என்ன?

    கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் , கம்பர் சொல்வது:

    வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
    நல்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
    கல்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
    வில்கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்.

    இதையே திரு கோபாலன் இவ்வாறு வார்க்கிறார்:

    மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
    சிரமேல் குவித்த இருகரங்களும்
    பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
    நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும் . . .

     

    அதே போல, கம்பனின் தாக்கம் மண்டோதரி கதறுகையில் முற்றிலுமாகவே காண முடிகிறது. இது போன்று பல இடங்களில், தமது விளக்கங்களில் கம்பனையே ஆசானாகக் கொண்டு எழுதியுள்ளமை தெரிகிறது. ஆங்காங்கு வால்மீகியையும் கருத்தில் கொண்டு படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுமாறு கதையை நடத்துகிறார். நூல் சிறிதேயாயினும் எங்கும் முக்கிய விஷயங்களைத் தவறாது சொல்லியுள்ளார்.

    சில இடங்களில் மொழி எளிமையில் அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையையும் ஒத்துள்ளது. பாட்டு கற்றவர்களுக்கு, பாடுவதற்கு வசதியாகக் கூட இருக்கலாம்!

    இராமகதை சொல்லி முடித்த கையோடு, பஜனை செய்வதற்கு வசதியாக, ஸ்ரீராமஜெயம் மகிமை, இராமாயண அட்சரமாலை, அனுமான் நாற்பது (ஹனுமான் சார்லீஸ் உரையுடன்) சங்கடமோசன அனுமானஷ்டகம், அனுமன், அனுமான் பிரசாதம் மற்றும் பக்தி கவிதைக் கொத்து முதலியவற்றையும் சுமார் முப்பது பக்கங்களில் தந்துள்ளார். முக்கியமாக ஹனுமான் சார்லீஸ் பாராயணம் செய்பவர்களுக்கு ஒரு பிரசாதம். ஏனெனில் இதுவரை வந்துள்ள சர்லீஸ் பொருளுரைக்குப் பதிலாக, இவரது உரையும் பாடத் தகுந்ததே!

    மொத்தத்தில் இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு சிறந்த பரிசெனவே சொல்லலாம். ஒரு சிறந்த அதிகாரியாக, மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சுமார் பத்து வருடங்கள் அரசு ஆலோசகராகப் பணிபுரிந்த கோபாலன், அளித்துள்ள இந்த நூல் அவரது சிறந்த சமூகத் தொண்டெனவே கூறலாம்!

    இப்படி ஒரு சிறந்த நூலை அளித்ததற்கு அவருக்கு இராமபிரான் அருள் பாலிக்கவேண்டுகிறேன்.

    தொடர்பிற்கு:

    திரு எஸ். கோபாலன்

    T – 75A, Triyambhava,

    Kalapatti Rd, (Near SITRA)

    Coimbatore – 641014,

    Mobile – 9600801888

    E-mail : subragopalan@hotmail.com

    Share
  • கென்யா பயணம் 1

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz
    எனக்கு வெகு நாட்களாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு முன் எகிப்துக்குப் போயிருக்கிறேன். அந்த நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு மாதிரி என்று சொல்ல முடியாது. அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ் நாடுகளின் தாக்கம் அங்கு அதிகம். (இப்போது அங்கு பல மாற்றங்கள் நடந்து கொண்டி- ருக்கின்றன.) அதனால் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். வட, தென் அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் ஒன்றையாவது பார்த்திருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஒரு நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது.

    நான் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கும் நாடுகளுக்கு என் கணவருடன் அவருடைய வேலை நிமித்தமாக அவர் போகும்போது போயிருக்கிறேன். சில நாடுகளில் ஆராய்ச்சிக்காக அந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் கணவர் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அவருடன் நானும் தங்கியிருந்திருக்கிறேன். வேறு சில நாடுகளில் மாநாடுகளில் கலந்துகொள்ளப் போனபோது சில தினங்களே என்றாலும் உடன் போயிருக்கிறேன். ஒரு நாட்டை, ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பல காலம் எடுக்கும் என்றாலும் அதைப் பற்றிய ஒரு பார்வை (glimpse) குறுகிய காலத்தில் கிடைக்கும். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்குச் செல்ல ஒரு முறை கணவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது என்னால் அவரோடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் பற்றிப் பல முறை ஏங்கியிருக்கிறேன்.

    இப்படிப் பல நாடகளாகக் காத்திருந்த வாய்ப்பு இன்னொரு விதத்தில் கிடைத்தது. நாங்கள் அமெரிக்காவில் வருடத்தில் பல மாதங்கள் தங்கியிருக்க ஆரம்பித்ததும் மைசூர் வீட்டிற்குக் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி மைசூரில் எங்கள் வீட்டு கார் ஷெட்டிற்கு மேல் ஒரு ஃப்ளாட் கட்டி அதை வாடகைக்கு விட்டால் வீட்டின் அருகில் நடமாட்டம் இருந்துகொண்டிருக்கும் என்று நினைத்தோம். ஃபிளாட் என்றால் ஒரு பெரிய அறையில் சிறிய சமையலறை, குளியலறை, ஹால் ஆகியவை எல்லாம் அடங்கிய ஒரு குடியிருக்கும் வச்தி ஃபிளாட்டைக் கட்டி முடித்ததும் யாருக்கு வாடகைக்கு விடுவது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்குத் தேவைப்பட்டால் காலிசெய்து கொடுப்பவர்களாகப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அந்தச் சமயத்தில் கென்யாவிலிருந்து எங்கள் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் வாடகைக்கு இடம் இருப்பதாக அறிந்து எங்களிடம் அது பற்றி விசாரிக்க எங்களை அணுகினர். படிப்பு முடிந்ததும் இடத்தைக் காலிபண்ணிவிடுவார்கள் என்பது எங்களுக்குப் பிடித்த அம்சமாக இருந்தாலும் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா என்ற கேள்விகள் தோன்றத் தொடங்கின. அவர்கள் படிக்கும் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்து எங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டோம். அவர் ‘அந்தக் கவலையை விடுங்கள். அவர்கள் நல்ல மாணவர்கள். அப்படியே ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் என்னிடன் வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவர் இப்படிக் கூறியது எங்களுக்கு மிகுந்த தெம்பை அளித்தது. உடனேயே அந்த மாணவிகளைத் தொடர்பு கொண்டு எங்கள் ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினோம்.
    அவர்கள் குடிவந்த நாளன்று ஒரு சிறிய லாரியில் தங்கள் சாமான்களைக் கொண்டுவந்தனர். அவற்றைப் பார்த்துவிட்டு , இத்தனை சாமான்களையும் எங்கள் ஃபிளாட்டிற்குள் அடக்கிவிடுவார்களா என்று நான் மலைத்தேன். எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டுவிட்டு ஒரு மாணவி வெளியே வந்துகொண்டிருந்தார். எல்லாச் சாமான்களையும் வைப்பதற்கு இடம் இருந்ததா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ‘தேவையான இடம் இருக்கிறது. அதில் ஒரு கஷ்டமும் இல்லை’ என்று அந்தப் பெண் கூறியதும்தான் எனக்கு நிம்மதியாயிற்று.
    அந்த மாணவிகள் இருவரும் நான்கு வருடங்களில் சட்டம் படித்து முடித்த பிறகு இடத்தைக் காலிசெய்யும் நேரம் வந்தது. ‘இனி இவர்களைப் போல் நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்களா? மறுபடி வாடகைதாரர் தேடும் வேலை இருக்கிறதே’ என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாணவிகளே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவரைக் கூட்டிவந்து எங்களுடைய அடுத்த வாடகைதாரராக அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது எங்களுக்கு மிகவும் நிம்மதியாகப் போயிற்று. இவரும் அதே சட்டக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் அவரைப் பற்றியும் முதல்வரிடம் விசாரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை அழைத்துவருமாறு கூறினோம். அவர் குடியேறி இரண்டு வருடங்களில் காலி செய்யத் தயாரானபோது இன்னொரு மாணவரைக் கூட்டிவந்தார். இவரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவரே. இப்படியாகக் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஒவ்வொரு வாடகைதாரரும் காலிசெய்யும்போது இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். எல்லோரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை அவர்களால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே நாங்கள் இருப்பதால் அவர்களுக்கும் எங்களால் எந்த விதத் தொந்தரவும் இல்லை. ஒரு வாடகைதாரர் காலிசெய்யும்போது இடத்தை நாங்கள் பார்ப்பது கூட இல்லை. புதிதாக வருபவரிடம் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள் அல்லவா என்று கேட்போம். அவர்களும் ஆம் என்பார்கள். நாங்கள் வெளியே இருக்கும்போது ஏதாவது ரிப்பேர் என்றால் அதை எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் மூலம் செய்து கொடுப்போம். இப்படியாக எங்கள் உறவு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்ததோடு அவர்களோடு எங்களுக்கு நட்பும் ஏற்பட்டு, அவர்கள் மேல் மட்டுமின்றி கென்யா நாட்டின் மேலும் ஒரு பற்று ஏற்படத் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடு ஒன்றைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவலும் பூர்த்தியாகும் தருணம் வந்தது.

    கென்யாவிற்கு வந்தால் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து தருவதாக அவர்கள் கூறியதும் கென்யாவிற்குப் போகும் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். இதுவரை எங்களுக்கு வாடகைதாரர்களாக இருந்த எல்லா மாணவ, மாணவிகளோடும் மின்னஞ்சல் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால், எங்கள் வீட்டில் இருந்துவிட்டு கென்யாவிற்குத் திரும்பிப் போயிருந்த எல்லோரிடமும் தொடர்புகொள்வது எளிதாக இருந்தது. கென்யாவிற்குப் போன பிறகுதான் தெரிந்தது அந்த நாட்டைச் சேர்ந்தவரின் உதவி எவ்வளவு உபயோகமானது என்பது. முதலில் வாடகைக்கு இருந்த பெண்களில் ஒருத்தி லண்டனில் வேலை பார்க்கிறாள். கென்யாவின் வெளியுறவுத் துறையில் வேலை பார்க்கிறாள். பழைய வாடகைதாரரில் இருவர் பக்கத்து நாடான ரவாண்டாவில் ஒரு கல்லூரியில் வேலைபார்த்துக் கொண்டிருகின்றனர். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நைரோபியில் இருந்தனர். எங்களை வந்து பார்த்தனர். முடிந்த அளவு உதவிகள் செய்தனர். ஒரு பெண் கென்யாவில் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைபார்க்கிறாள். இன்னொரு மாணவன் செஞ்சிலுவைச் சஙக்த்தில் வேலை பார்க்கிறான். சாகசச் செயல்களில் ஆர்வம் உடையவன் வன்முறை மலிந்த சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளுக்குப் போகும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறான். எங்கள் வீட்டில் தங்கிப் படித்த எல்லா மாணவர்களும் இப்போது நல்ல நிலையில் இருப்பதாக ஒரு பெண் குறிப்பிட்டாள். அதைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.

    அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைப்பதைப் போல இந்தியாவில் பட்டம் பெறும் கென்யா மாணவர்களுக்கு அவர்கள் நாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது போலும்.

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.worldatlas.com/webimage/countrys/africa/ke.htm#.UeXq1o3I2gQ

    Share
  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..

    விசாலம்

    சமீபத்தில் திரு இன்னம்பூரான் அவர்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது அவரது பெயர் அவரது ஊரைக்கொண்டு  வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டேன் என் வீட்டின் கீழே இருக்கும் வைஷ்ணவர் சமீபத்தில் கும்பகோணம் போய் அருகில் இருந்த பல பெயர்ப்பெற்ற கோயில்களைக் கண்டு அதன் குறிப்புகளையும் கொண்டு வந்திருந்தார்.ஏனென்றால் நான் எப்போதும் கோயில் பற்றிய செய்திகளை அறிய ஆவலாக இருப்பது அவருக்கு தெரியும் .அதில் அவர் போன கோயிலில் ஒன்று இன்னம்பூர் .

    ஆஹா அருமையான செய்தி என்று அவரிடம் பேசி பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன் ,இந்த இடம் முழுவதும் முதலில் சண்பகமரங்கள் மிகுந்த காடுகளாக இருந்தன.ஆகையால் இதற்கு சம்பகாரண்யம் என்ற பெயர் இருந்தது ஒரு சமயம் ஒரு காட்டு யானை அங்கு வந்தது அதற்கு மிகுந்த தாகம் ஏற்பட்டதால் நீரைத் தேடியது .தண்ணீர் கிடைக்காததால் தன் தும்பிக்கையினால் பூமியைத்தோண்ட முற்பட்டது.”டபார்”என்ற வெடி சத்தம் பூமி வெடித்து இன்னம்பரான் என்று போற்றப்படும் சிவன் லிங்கரூபமாக தோன்றினார்  காட்டுயானை அருகிலேயே தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிப்பட்டது.இந்த இடத்தில் பூஜை செய்ய சர்வ பாபங்களும் விலகுமாம் ஏனென்றால் இந்திரனது யானை ஐராவதம் பாற்கடலில் தோன்றி நாலு கொம்புகளைக் கொண்டது  ஒரு சமயம் துர்வாசருக்கு மரியாதை கொடுக்கத்தவறியது  துர்வாசரது கோபம் தான் தெரியுமே .பிடி சாபம் என்று சபித்துவிட்டார் மன்னிப்பு கேட்டவுடன் இன்னம்பூரில்தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி இறைவனை வழிபட சாபம் தீரும் என அறிந்து தீர்த்தம் உண்டுபண்ணியது பின் அதில் ஸ்னானம் செய்து சாபத்தைத் தீர்த்துக்கொண்டது அந்தத்தீர்த்தம்தான் “ஐராவத தீர்த்தம் “

    கோபுரம் தாண்டி வெளிப்பிரகாரத்தில்  கணபதி  பலி பீடம் ,நந்தி , சுகந்த குந்தளாம்பாள் அம்மன் எல்லாம் பார்க்கமுடிகிறது உள் பிரகாரம் வந்து மூலவர் நோக்கி நகர ஒருதூணில் நடனம் ஆடும் கணபதி அழகு சொட்ட ஆடுகிறார் பின் வருகிறது நித்யகல்யாணி அம்பாள் சந்நிதி அம்பாளின் அழகு முகமும் அதில் தவிழும் புன்னகையும் அந்த இடத்தை விட்டு அகல தோன்றுவதில்லை மூலவர் சந்நிதியில் துவாரபாலகரை தரிசனம் செய்து விட்டு உள்ளே பார்க்க அங்கிருக்கும் ஈசன் ஸ்ரீ அட்சரபுரீஸ்வரர்  என்ற பெயரில் அருள் புரிகிறார் தமிழில் அவர் பெயர் அருள்மிகு எழுத்தறிநாதர் .தமிழ் ஞானம் பெற்ற அகஸ்திய மஹரிஷி தமிழ் இலக்கியம் படிக்க இன்னம்பூருக்கு வந்து தான் தமிழ் இலக்கணம் கற்றாராம் இதனால் இந்த ஈசனுக்கு அட்சரபுரிஸ்வரர் என்ற பெயர் வந்தது என்கின்றனர் சிலர் .படிப்பில் வெற்றியடைய .காலேஜில் இடம் கிடைக்க வெளிநாடுக்கு மேற்படிப்புக்குச்செல்ல இங்கு பலர் வந்து பிரார்த்தனை செய்கின்றனர் முதன் முதலாக அட்சராப்பியாசம் செய்யவும் சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வருகின்றனர்  திக்கித்திக்கிப்பேசும்  குழந்தைகளுக்கு நாக்கில் ஈசனது மலரால் எழுத அந்த எழுத்தறிநாதர் நல்ல பேச்சுத்திறனை அளித்துவிடுகிறார்.இதனால் இவரே பிரும்மா,சரஸ்வதி ஆகிவிடுகிறார் பாபங்களைப் போக்குவதால் இவரே பரிகாரஸ்தலமாகி அருள்புரிகிறார் கும்பகோணம் திருவையாறு பாதையில் புளியஞ்சேரி என்ற இடம் வரும். அதிலிருந்து வலதுபக்கம் திரும்பி திருப்புறம்பியம்  வழியாக சுமார் 2 கிமீ சென்றால் இன்னம்பூர் வந்துவிடும்   மேலும் பல தகவல்கள் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்

    Share
  • விடுகதை!…

    புதுவைப்பிரபா

    சட்டைப்பாக்கெட்டிலிருந்த செல்போன் அதிh;ந்ததும், அன்னாh;ந்து சுவா; கடிகாரத்தை பாh;த்தேன். அது 5:35 என்று காட்டியது.  அந்த அழைப்பு அமரனிடமிருந்துதான் என்று தொரியும் எனக்கு. “அமரா. . . . . கௌம்பிட்டியா?  சாரி  நானும் தோ ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்”.

    பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளை அப்படியே மூடி மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புறப்பட்டேன்.  ஆமாம். எப்படிப்பட்ட முக்கியமான வேலையில் மூழ்கியிருந்தாலும் , அமரனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டால், அவ்வளவுதான். அதற்கு பின் எதிலும் நாட்டம் கொள்ளாமல், அவனை சந்திப்பதை நோக்கியே மனம் சிந்திகத்தொடங்கிவிடும். சும்மாவா! இருபத்திதைந்தாண்டு கால நட்பாயிற்றே!

      “சார்!. . . ரூம போட்டிடலாமா?  திரும்பி வருவீங்களா?”  வாட்ச் மேன் கேட்டான்.

     “ இல்ல இல்ல அப்படியே போயிட வேண்டியதுதான்”  என்றேன்.

     ‘‘சார்! நான் சொல்லேறன்னு தப்பா நெனைக்காதீங்க. இனிமே, ‘அப்படியே போயிடுவேன்னு’ சொல்லாதீங்க சார். நல்லா இல்ல! அதையே வேற மாதிரி சொல்லுங்க.”  முகத்தை இருக்கமாக வைத்துகொண்டு சொன்னான்.

      “ஐயையோ! சார்..விடு. நான் வாக்கிங் போயிட்டு, அப்படியே வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு காலையில வா;றேன். போதுமா? “

     அவன்  குனிந்து கொண்டே தலையசைத்தான்.

    ‘வார்த்தைகளிலா வாழ்;க்கை இருக்கிறது?  போயிடுவேன் என்றால்.. போய்விடுவேனா?  அவன் ஏன் அப்படி பயப்படுகிறான்?’  என்று சிந்தித்துக் கொண்டே வழக்கமாக வண்டியை விடும் இடத்தில் விட்டுவிட்டு காந்தி சிலையை நோக்கி நடந்தேன்.

    அலுவலகம் முடித்துவிட்டு மாலையில் கடற்கரையோரம் அரைமணிநேரம் நடந்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கத்திலிருந்தது. வேலை அதிகம் இருக்கும்  நாட்களில், நடையை முடித்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கே சென்று எட்டு எட்டரை வரை வேலை பார்த்துவிட்டு போவேன். அந்த அர்த்தத்தில் வாட்ச்மேன் கேட்கப்போய்தான்

     அமரன் எனக்கு முன்பே வந்து அமா;ந்திருந்தான்.  மற்றவா;களைப்போல மாலையில் நடந்தால் உடலுக்கு நல்லது என்பதற்காக இல்லாவிட்டாலும்;. அமரனோடான அந்த அரைமணிநேரம் சந்திபிற்காகவே தவறாமல் வருவதுண்டு.  இந்த மாலை சந்திப்பு குறித்து இதே உணா;வு இருப்பதாக அமரனும் சொல்லியிருக்கிறான்.

     வாடா. .. . என்ன . . . சிரிச்சுக்கிட்டே வாற. .. . ?”  அமரன் கேட்டான். வாட்ச்மேன் சொன்னதைச் சொன்னேன்.

     ‘‘ஆமாம்டா. வாழ்க்கை குறித்த பயத்தோட வாழறவங்தான் இங்க அதிகம்.  ஒருத்தனோட வாழ்க்கை துஎதுலியோ இருக்கிறதா நம்பறாங்க. ‘போறேன’;னா..‘போய்ட்டுவா;றேன்’னு சொல்லுங்கம்பாங்க. கல்யாணம் ஆவற மாதிரி கனவு கண்டா.. எழவு விழும்ன்னு அடிச்சி சொல்லுவாங்க. தோபாரு.. ரெண்டு வருஷமா நாம தொடா;ந்து பீச்சுக்கு வா;றோம்.  ‘வாக்கிங்’  போற கூட்டம் எப்படி பெருத்துகிட்டே வருது பார்;த்தியா?  எல்லோர்க்கும் உயிர் பத்தின பயம் அதிகமாயிகிட்டேபோகுது!”

      ‘‘சாரி அமரா, அந்த பயம் தப்புன்னு சொல்றியா?

    “தப்புன்னு சொல்ல.  வாழற எல்லோருக்குமே சாவற ரிஸ்க் இருக்கறப்போ அதையே எதுக்கு சிந்திச்சுகிட்டு இருக்கனும். நிச்சயமா, உயிரோடு இருக்ககிறவரைக்கும் சாவு வரப்போறதில்ல. அப்புறம்? போறதுக்குள்ள எதையாவது உருப்படியா குடும்பத்துகோ தெருவுக்கோ ஊருக்கோ, நாட்டுக்கோ, உலகத்துக்கோ, செய்ய முடியாமான்னு பார்க்கிறத விட்டுட்டு ‘ஐயையோ! நாம செத்துடபோறோம்ன்னு’ பயந்து பயந்து வாழறது, ஒரு வாழ்க்கையா?”

      “சாரி அமரா. அதவிடு. எதுக்கு அந்த சீhரியசான டாப்பிக்.  அப்புறம்  காஞ்சனாவுக்கு  ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்க சொன்னாங்கன்னியே.. எடுத்தாச்சா?”

    “அத ஏன்டா கேக்குற? அவளுக்கு எடுக்கப் போய், ‘ஏங்க உங்களுக்கும் நாற்பது வயசு ஆயிடுச்சி. நீங்களும் எடுத்துக்கோங்கன்னு அடம்பிடிச்சா.”

     ‘‘குட். எடுத்தியா? இல்லியா?”

     ‘‘எடுத்தேன்எடுத்தேன். சுகா;, பி.பி, கொலஸ்ட்ரால்எல்லாமே நார்மல்.  இன்னும் சொல்லப்போனால், அவளவிட எனக்கு எல்லாம்; கரைக்ட்டான லெவல்ல இருக்குது.”

     “ஓ.கே. ஓ.கே”

      ‘‘என்னடா ஓ.கே. இந்த டெஸ்டுக்கெல்லாம்கூட உயிர்பத்தின பயம்தான் காரணம்?”

     என் சட்டைப்பையில் இருந்த செல்போன் அதிர்ந்தது.  எடுத்து பேசி முடித்ததும், அமரன் எhரிச்சலோடு, ‘ ஏன்டா. . . எத்தனைதடவ சொல்றது? சைலன்;ட் மோடுல போட்டு, பாக்கெட்ல வைக்காதேன்னு. அந்த வைப்ரேஷன் ரேடியேஷன் உடம்புக்கு நல்லதில்லஹார்ட்அட்டாக் வருதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.”

     ‘‘இல்லப்பா. ஆபிஸ்ல, சைலன்ட்டல போட்டு வைக்கிறேனா..அத மாத்தியிருக்கனும்..மறந்துட்டேன்.”

     ‘‘ சரி. யாரு போனுல ?  யாருடா ஆஸ்பிட்டல இருக்கா?”  அமரன் ஆர்வமாய் கேட்டான்.

    “விழுப்புரத்திலந்து சித்தப்பா பையன் பேசினான். சித்தப்பாவுக்கு உடம்பு முடியலேன்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்கலாம். பல்ஸ் கொறஞ்சிகிட்டே போவுது.. சொல்லவேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாங்கலாம்.”

       “நீ போய், பார்த்துட்டு வரப்போறியா?  ஏன் கேட்கறேன்னா.. அவரு மூணு மணிநேரத்துல இல்ல மூணுமாசம் ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு”.

      ‘‘டேய்அவருக்கு வயசு ஏழுபத்தி ரெண்டு ஆகுதுடா”

    “ஆகட்டும்வயசுக்கும் சாவறதுக்கும் சம்மந்தமில்லடா. எண்பது வயசு, தொண்னூரு வயசுன்னு யாரும் வாழறதில்லையா? ஏன் சொல்றேன்னா  எங்க வீட்டு பக்கத்தில ஒரு பொரியவரு இன்னிக்கு போயிடுவாரு நாளைக்கு போயிடுவாருன்னு எட்டு வருஷமா இருக்கார்.”

     ‘‘அதுக்கு என்ன காரணம்ன்னு நீ நெனைக்கிறே?”

    ‘‘நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புhரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை. சரி..நீ விழுப்புரம் கௌம்பனுமில்லபுறப்படலாம்…”

    விழுப்புரம் மருத்துவமனைக்கு வந்து சோ;ந்தபோது மணி ஒன்பது. மருத்துவமனை என்றாலே எனக்குள் ஒருவித பதட்டம் தொற்றிக்கொள்ளும். அதனாலோ என்னவோ எனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருந்தது.

    ‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்..’ என்று வாட்ச்மேன் சொன்னதும், ‘செல்போன அங்க வைக்காதடாஹார்ட் அட்டாக் வருதாம்’ என்று அமரன் சொன்னதும் தேவையில்லாமல் நினைவுப்பரப்பில் வந்து நிழலாடியது.

     “அண்ணே வந்துட்டீங்களாண்ணே? இல்லண்ணே! ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதே டாக்டா; திரும்ப வந்து, ‘இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல் அவரோட பல்ஸ் இம்ப்ரூவ் ஆயிடுச்சு. அவரு சீக்கிரமே நார்மலுக்கு வந்துடுவார்ன்னு சொல்லிட்டு போயிட்டாருண்ணே!’ தலையை சொறிந்துகொண்டே, சித்தப்பா மகன் சொன்னான்.

     “சரிப்பா.. நல்ல விஷயம்தானே! இருக்கட்டும்”; என்று சொல்லிவிட்டு, சித்தப்பாவை அருகில் சென்று பார்த்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த போது, “அவரு மூணு மணிநேரத்துல இல்ல மூணுமாசம் ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு” அமரன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஏனோ பெருமையாக இருந்தது. சம வயதாக இருந்தாலும்கூட, உயிர் பற்றியும், வாழ்க்கைப்பற்றியும் அவனுக்கு தெரிகிற அளவிற்கு, அல்லது அந்த தத்துவம் புரிகிற அளவிற்கு நமக்கு புரியவில்லையே! ம்ம்.. என்று பெருமூச்சு விட்ட நொடியில், பாக்கெட்டினுள் செல்போன் அதிர்ந்தது.

    ஐயோ! நல்ல வேள அமரன் பக்கத்துல இல்ல’ என்று சிந்தித்துக்கொண்டே கையில் எடுத்தபோது, செல்பேசி திரையில் அமரன் என்ற பெயா; ஒளிர்ந்தது. சித்தப்பா பற்றி விசாரிப்பதற்காய் இருக்கக்கூடும் என்று எடுத்தேன். எதிர;முனையில் அமரனின் மனைவி காஞ்சனா கதறிக்கொண்டே,

    “அண்ணே..அவரு இறந்துட்டார்ண்ணேசாப்பிட்டுட்டு உட்க்கார்ந்தவா;, அப்படியே சாஞ்சிட்டார்ண்ணே எனக்கு ஒன்னுமே புரியலசீக்கிரம் வாங்கண்ணே..” என்றாள்.

    அதிர்ச்சித் தாக்கி அப்படியே விழுந்த என் காதுகளில், ‘‘நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை.” அமரனின் குரல் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது.

    Share
  • சரயு…

     

    பார்வதி இராமச்சந்திரன்

    images (1)

    சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி.

    அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி அவள்.

    தாழ்வாரத்துக் குறட்டில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தவள் திடீரென சிரித்ததும் ஆச்சரியமானது சுசிக்கு…

    ‘என்னாச்சுக்கா…

    ம்ம்.. நிமிர்ந்தாள் சரயு. முன் வகிட்டில் குங்குமச் சிவப்பு, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையுடன் சங்கமித்து, பொட்டுப் பொட்டாய் வியர்த்திருந்தது. கூர் மூக்கும் சின்ன உதடுகளும் பௌர்ணமி நிலவாய்த் தகதகத்து மின்னும் முகமுமாய், ரேணுவைப் போன்ற‌ தேவதையல்ல சரயு.  ஆயினும் அந்த மாநிற முகத்தில் துலங்கும் ஒளி சாதாரணமானதல்ல…

    ‘என்ன?’..

    ‘இல்ல சிரிச்சுட்டிருந்திங்கல்ல.. அதான்…’

    பதிலுக்குப் புன்னகைத்தாள். சில நேரங்களில் புன்னகையும் பல நேரங்களில் ஓராயிரம் அர்த்தமுள்ள மௌனமுமே அவள் வாசகம். அபூர்வமாகத்தான் வாக்கியங்கள் வெளிவரும்.

    சுசி தன் பார்வையை, சரயு அமர்ந்திருந்த   தாழ்வாரத்தைத் தாண்டிய முற்றத்தின் மீது வீசினாள்.  ரேணுவின்   குழந்தைகள் சியாமாவும் ரூபாவும் செப்பு சாமான்களோடு திண்ணையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. யுக யுகாந்திரமாய் பழக்கப்பட்ட அப்பா, அம்மா விளையாட்டு. எப்போதும் போல் அப்பா காரெக்டர் வேலையிலிருந்து  வருவதும் அம்மா   சமைப்பதும் நடந்து கொண்டிருந்தது.. ரூபா தான் அம்மா போல. அவள் புடவையாய் கட்டியிருந்த சுசியின் தாவணியோ, கால் மடித்து காய் நறுக்குவது போல் நடித்த பாங்கோ, பேசிய வசனமோ… ஏதொவொன்று சரயுவின் மோனத்தில் கல்லெறிந்து சிரிப்பலையை சிதறச் செய்திருக்க வேண்டும்.

    ‘வெளையாட்டுப் பாத்தீங்களா..

    அதற்கும் புன்னகை. கொஞ்சம் பொறுத்து, ‘நல்லா கவனிச்சுருக்குங்க ரேணுவையும் அவ வீட்டுக்காரரையும்’ என்றாள் சரயு.

    தன் யூகம் மெய்ப்பட்டதில் மகிழ்வடைந்து சுசி, மேலும் பேச்சைத் தொடரும் முன், சரயு எழுந்து சென்று விட்டாள்.

    சரயு அப்படித்தான்.. இப்போதல்ல.. எப்போதுமே.. தன்னிருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாததோடு, தனக்கு வேண்டியதைத் தான் தான் கேட்டுப் பெற வேண்டும் என்ற உணர்வே இல்லாதது போல் தோன்றும் சுசிக்கு.

    சுசிக்குப் பத்து வயதாயிருக்கையில் வீரபாண்டி அத்தையின் மகன் ஆறுமுகத்துக்கும் சரயுவுக்கும் கல்யாணம் நடந்தது. சுதி மாறாமல், சரயு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அடுத்த முகூர்த்தத்தில் எந்தப் பேச்சு வார்த்தையும் முன் பின் அபிப்பிராயங்களும் இல்லாமல், பூவுக்கடுத்து காய் என்பது போல் இயல்பாக நடந்த விஷயம் அது. உறவுகளும் இது இயல்பே என்பது போல் எந்தச் சந்தடியும் இல்லாமல் கல்யாணத்திற்கு வந்து சென்றனர்.

    ஊர்க்கோவிலில் கல்யாணம், வீட்டு முற்றத்தில் தட்டுப் பந்தல் போட்டு விருந்து, இரண்டாம் நாள் மறுவீடு என்ற எந்த மாறுதலும் இல்லாமல் நடந்தது நினைவிருக்கிறது.

    மாறியது ஒன்று மட்டும் தான். கல்யாணம் நடந்து நாலு வருடம் கடந்த பின், ரேணு அக்காவுக்கு கல்யாணம் கூடி வந்த போது வீரபாண்டி அத்தை பின் கட்டு கலகலக்கக் கத்தியது தான் மாற்றம்.

    “என்னா இது? என்னா இதுங்குறேன்… மூத்தவளுக்கு அஞ்சு பவுனுக்குச் செயினு மட்டும் போட்டு காது மூக்க மூடி கதவடச்சுட்டீக. ரெண்டாமவளுக்குப் பத்து பவுனுன்னா… என்னா போக்கத்தவுகளா நாங்க..”

    “இந்தாத்தா.. என்னா இம்புட்டு சத்தமாப் பேசுறீக.. வேண்டாமத்தா.. ஒக்காரு செத்த… அவுக என்னா வேணுன்னுட்டா செய்றாக.. மாப்புள ஊடு கொஞ்சந் தண்டி தே.. அவுக கேட்டத செய்யுறாக…”

    “அப்ப நாங்க இவுக தரந்தண்டிக்கு கொறச்சலுன்றீக… எம் புள்ள வெறும் பயலுன்றீக..”

    அப்பாவின் நண்பரான மாயாண்டி மாமா, பஞ்சாயத்துப் பேச வந்தவர், வெற்றிலையை மென்று துப்பினார். அத்தையை இகழ்ச்சியாகப் பார்த்தார்.

    ‘ஆத்தா… ஆரு இது.. ஒன்ன வளத்த அண்ணெ, அண்ணி  அவுக மக. ஒம் மேல வச்சுருக்க பாசந்தான அதுக மேலயு. அதுல வேத்தும இல்லாத்தா.. வேணுன்னு செய்வாகளா.. புரிஞ்சுக்க… வேணுன்னா.. இந்தக் கல்யாண முடுஞ்சு கொஞ்ச நாளு செண்டு ஒம் மருமகளுக்கும் அஞ்சு பவுன செய்யச் சொல்லு. இன்னும் இருக்குல்ல வளகாப்பு….பிள்ளப் பேறு…’

    அத்தை நொடித்தாள்.’ஆஆம்ம்ம்மா… பெரிய வளகாப்பு. ஊருல ஆளாளுக்குப் பேச்சு தாங்கல.. அண்ணெ மகளக் கெட்டி வந்து வருச நாலாச்சு. இன்னும் வகுறு தொறக்கலியே… சொந்தத்த பாத்து ஏமாந்தியான்னு. போன வாரம் சுங்குவார்பட்டிலந்து பொண்ணு கொடுக்கவே வந்திட்டாக  ரெண்டாந்தாரமா…’

    அப்பா அதிர்ந்து நிமிர்ந்தார்……’என்னா சொன்ன…?’

    ‘ஆங்… சொன்னாங்க சுடுசோறுக்கு சொரணயில்லன்னு… எம் புள்ள அளகுக்கும் எங்க ஊட்டுக்கு இருக்குற மரியாதக்கும் ஒண்ணுல்ல பத்து பொண்ணுக வருவாக எம் புள்ளக்கு..’

    ‘ஆத்தா.. மரியாத தவறுது… ஆரு முன்ன இப்புடியெல்லாம் பேசுற…. நல்லால்ல சொல்லீட்டே…’

    ‘ஆரு மரியாத தவறுனது. மூத்த மாப்புள இருக்க சொல்ல, அவனுக்கு சொல்லிவுடாம ரெண்டாவது பிள்ளக்கு பேசி முடுச்சுருக்காக. எங்க நடக்கும் இது?. என்னாடான்னு வெசாரிச்சாவுல்ல வெளங்குது… அஞ்சு பவுனு கூட்டிப் பேசுனது.’

    ‘ஆத்தா… மொத, மாப்புளக்கி சொல்லிவுடல, சீரு கம்மிண்டீக, அப்புறமேட்டு, மருமக இன்னம் புள்ள உண்டாகலண்டீக, அம்பூட்டுப் பெரிய மகராசி.. என்னாத்துக்கு பகுமானப் பேச்சுப் பேசூறெ… மூடி மறச்சுப் பேசாத ஆத்தா.. இப்ப என்னா முடிவு சொல்லுற.?’.

    ‘போடுற அஞ்சு பவுன இப்பவே போடணும். எம் புள்ளகிட்ட வந்து சொல்லிவுடாததுக்கு மன்னிப்புக் கேக்கணும். அப்பத்தே கண்ணாலத்துக்கு வருவோ. இல்லன்னா பெரச்சின தே சொல்லீட்டே….’

    ‘இது வேறென்னத்தயோ மனசுல வெச்சுப் பேசுது மாப்புள… நானு என்ன சொல்றேண்டா..’  மாயாண்டி மாமா  பேச.. அம்மா கண்கலங்க சாமி பிறையில் காசு வைத்து வேண்டினாள்.

    அதற்கப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது. ரேணுவின் கல்யாணத்துக்கு சரயு வரவில்லை. அதற்கடுத்த ரெண்டாம் நாள் பெட்டியோடு வந்து நின்றாள். அத்தான், பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போனதாய்ச் சொன்னாள்.

    அப்பா எதுவும் பேசவில்லை. அம்மாவும். நாலு  மாதம் கழித்து,  அத்தானின் இரண்டாம் திருமணத் தகவல் வந்த அன்று, உள்ளூர் தொழிற்பயிற்சிப் பள்ளியில்  தையல் ஆசிரியை வேலைக்கான படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கி வந்து தந்த போது தான் அப்பாவின் மனம் புரிந்து அதிர்ந்து அழுதாள் அம்மா. அப்போதும் சரயு எதுவும் பேசாமல், சலனமின்றி, விண்ணப்பம் வாங்கிக் கையெழுத்திட்டாள்.

    சியாமாவின் கத்தல் நனவுலகுக்கு இழுக்க, திரும்பிப் பார்த்த போது, ரேணு அம்மாவிடம் விசும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மாதமாக தினசரி நடப்பு.

    ‘என்னய என்னா பண்ணச் சொல்லுறீக?. அந்த மனுசெ என்னாடான்னா  ஊடு வாங்கக் கொஞ்சம் பணம் தவங்குது,  ஒங்கப்பாவத் தரச் சொல்லுன்றாரு. அப்பா என்னான்னா…’

    ‘ஒனக்குக் கொஞ்சம்மாச்சு அறிவுன்றது இருக்குதா?. இப்பத் திடீர்னு ரெண்டு லச்சத்த வெட்டுண்டா எங்குட்டு போவாரு?. இருக்குற  ஊடு கடனுல கெடக்கு. நாளக்கே அவருக்கு ஒண்ணுன்னா, ரெண்டு பொட்டப் புள்ளகள வச்சிட்டு எங்குட்டு போக முடியு?. ஆச்சி, இன்னு ஒண்ணு ரெண்டு வருசத்துக்குள்ளயு  சுசிக்கு கலியாணங்க் கெட்டணு. இப்பமே பொண்ணு கேட்டு வாராக. அதுக்கே காசக் காணுன்னுட்டு தள்ளித் தள்ளிப் போட்டுக் கெடக்கு. அவ வயசுல, ஒனக்கு பெருசு பொறந்தாச்சி. இம்புட்டுச் சடவுல, எவெ எக்கேடு கெட்டா எனக்கென்னா… எங்காரிய எனக்கு முக்கியமுண்டு பேசுறியே….’

    ரேணுவுக்கு சுருக்கென்றது போல, ‘பின்ன, என்னயு பெரியவள மாதுரி, பொறந்த ஊட்டோட கெடந்து சாகச் சொல்லுறியா.. எனக்கும் ரெண்டு பொட்டப் புள்ளக இருக்குல்ல…’

    அம்மா அசந்து போனாள். நானும் தான்.

    புயலடித்தது போல சரயு வந்து நின்றாள். எங்கிருந்தாளோ, என்ன கேட்டாளோ!

    ‘இதப் பாரு, என்னயப் பத்தி பேசுற வேல வெச்சுக்கிட்டா நல்லாருக்காது சொல்லீட்டே..  நானும் ஒன்னய மாதுரி, நாயமில்லாம,  நாம புகுந்த ஊட்டோட இருந்தாத்தே மரியாதன்னு   நெனச்சிருந்தா.. நீ இன்னக்கி, ஒரு புருசெனக்  கெட்டி, ரெண்டு புள்ளப் பெத்துருந்திருக்க மாட்ட…… ஒன் அளகுக்கு மயங்கின‌ எம் புருசெனோட மொறயில்லாத ஆசக்கிப் பணிஞ்சு போயி ஒன்ன ரெண்டாந் தாரமாக் கெட்ட ஒப்பாமெ.. அநியாயத்துக்குப் பயப்படக் கூடாதுண்டு இருக்கச் சொல்லத்தே நீ இன்னக்கி நிமுந்து இத்தத்தண்டிப் பேச்சுப் பேசூறே.. நெனப்புல வெச்சிக்க.. என்னா?’

    சொடுக்குப் போடுவது போலப் பேசியவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

    நானும் அம்மாவும் விழி அகட்டி அமர்ந்திருக்க, ரேணு வியந்து போய்ப் பார்த்தாள். பின், மெல்ல,  எழுந்து,  அக்காவின் தையல் மெஷினைத் தடவிக் கொடுத்தாள்.

     

    படத்துக்கு நன்றி:
    ஓவியர் இளையராஜா,

    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRAtiZzD79RBGr1-tGtxB2FyTUKmkpOdm-vObzwtyAafI-NCHil

     

    Share