வாலியின் புகழ் வாழியவே…..!
வே.ம.அருச்சுணன்– மலேசியா
தமிழைக் கற்றவருக்கு
ஆயுள் நீளம் என்பார்
உன் நாவில் விளையாடியது
தேன் சிந்தும் தமிழ் அல்லவா…..!
மனம் குளிர்ந்த தமிழன்னை
உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
82 அகவையிலும் இளசுகளின்
உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
வாலிபக் கவிஞன் நீ………..!
அற்புதக் கவிகளால்
கவியரசு கண்ணதாசன் மனம்
கவர்ந்த கவிஞனே
கலைஞர் காவியம் பாடிய
காவியக் கவிஞனே
உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
காவியத்தைச் செதுக்கி இருக்க முடியாது…………..!
பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
பாடல்களின் பிரம்மனே
வாலியின் பெயரே உனை
சிகரத்தில் நிறுத்தியது
மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது………!
நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
பத்தாயிரம் பாடல்கள் தந்து
தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்…………!
இரவும் பகலும் உன்
கடும் உழைப்பைக் கண்டு
இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
உழைப்பே மனிதனை உயர்த்தும்
என்பதற்கு ஓர் உதாரணம் நீ
தன்னம்பிக்கையின் சக்கரவர்த்தி நீ………!
சோதனைகளைச் சாதனையாக்கிய
கவிஞனே பல்லாண்டுகள் இன்னும்
வாழ்வாய் என்ற கணக்கில்
மண் விழுந்து விட்டதே
தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்………!
நீ மறைந்தாலும்
உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
எங்களை வாழவைக்கும்
வாழியவே உன் புகழ்………….!
கவிஞர் வாலியின் பாடல்களுக்கும் அப்பாடல்களில் அவர் கையாளும் வார்த்தைகளுக்கும் அந்த வாலியின் பலம் உண்டு. நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பாடல்கள் அதிகம்.
எல்லாம் வல்ல இறைவனிடம் அவருக்காக வேண்டிக்கொள்கிறேன்.