Blog

  • இமயம் – ஓர்துயரம்

     

    சத்தியமணி

     

    முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
    முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
    இமயம் நிமிர்ந்த கம்பீரம்
    இன்று அதற்கும் ஓர்துயரம்
    சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
    சுழற்றி போட்டது காட்டாறு
    பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
    பாதியிழந்தது கூட்டாறு
    கேதாரம் தான் ஆதாரம்
    வெள்ளத்தால் பெரும் சேதாரம்
    பொங்கி பெருகிடும் கங்கையிலே
    புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
    தங்கி தரிசனம் தரும் எழிலில்
    பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
    மலைநாட்டவரின் மந்தாகினி
    கொலையாட்டமும் கண்டதனால்
    பயமும் வெறுமையும் உடன்தாக்க‌
    பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
    ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
    வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
    அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
    உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்

     

    Share
  • புறம் போற்றும் அறம்!

    மேகலா இராமமூர்த்தி

     

    இயந்திரங்களைச் சார்ந்தே இன்றைய வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அலுவலக நேரம் தவிர்த்த மீதி நேரத்தையெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலேயும், அலைபேசியில் நண்பர்களோடு அரட்டை அடிப்பதிலேயுமே நாம் பெரும்பாலும் கழித்துவிடுகின்றோம். மடிக் கணினியில் மடியின்றி (சோம்பலின்றி) உலவிக் கொண்டிருப்பதில் இன்பம் காணத் தொடங்கிவிட்டபிறகு நாம் தூங்கும் நேரம் கூடக் கணிசமாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் (கவலையோடு) கருத்துத் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் சூழல் இவ்வாறு மாறிவிட்டதனால் அறிவுச் செல்வங்களாம் நூல்களை வாங்கிப் படிப்பதற்கு நமக்கு நேரமே இருப்பதில்லை; அப்படியும் புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலோ நம்மில் பலர் விரும்பி வாங்குவது விரைவில் பணக்காரர் ஆவது எப்படி? வாழ்க்கையில் உடனடியாக வெற்றிகளைக் குவிப்பது எப்படி? என்பது போன்று வாழ்வின் வளங்களையும், நலங்களையும் உடனே அடைவது குறித்து எழுதப்படும் புத்தகங்களையே என்பதே கசப்பான உண்மை. பண்பட்ட நல்வாழ்விற்கு வழிகாட்டும் நம் பண்டைய இலக்கியங்கள் வாசிப்பாரற்றுத் தூசுபடிந்திருப்பதாக பதிப்பகத்தாரே தெரிவிக்கின்றனர்.

    செல்வந்தர் ஆவதையும், மற்றவரை வீழ்த்தி வாழ்வில் வெற்றி பெறுவதையுமே அல்லும் பகலும் சிந்தப்பதை விடுத்துத் தனிமனித ஒழுக்கம், தன்னலமற்ற தன்மை, எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சல், நன்னெறிகளையும், ஆன்றோர் காட்டிய அற வழிகளையும் பின்பற்றி நடப்பது போன்றவை குறித்தும் நாம் சிந்திக்கத் தலைப்படுவோமேயானால் நேரிய வழியில் நடைபயின்று வாழ்வில் வெல்லலாம்.

    ‘தமிழர்களின் பொற்காலமாய்’த் திகழ்ந்த சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாய் இன்றும் விளங்கி நம் பண்பாட்டையும், நாகரிகத்தையும் செம்மைப்படுத்தப் பேருதவி புரிகின்றன என்றால் அது மிகையில்லை.

    சிறந்த சிந்தனைச் சிற்பிகளான சங்கப் புலவர்களும், சமண முனிவர்களும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும், ஏனைய சான்றோரும் காலத்தை வென்றுநிற்கும் மிக உயரிய சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்போது நாளிதழ்களிலும், வெகுஜனப் பத்திரிகைகளிலும் அதிகமாகப்  பேசப்படுகின்ற சுயமுன்னேற்றச் சிந்தனைகளும், மனவளக் கலைகளும் ஏற்கனவே நம் தமிழ்ச் சான்றோர்களால் விரிவாகச் சொல்லப்பட்டவையே.

    சிறந்த வாழ்வியல் சிந்தனைகளை, சித்தாந்தங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இன்றும் திகழ்வது அறத்தையும், மறத்தையும் தன்னிரு கண்களாகப் போற்றும் ’புறநானூறு’ஆகும். அதில் நிறைந்திருக்கும் அறச் சிந்தனைகளோ கடலளவு; அவற்றிலிருந்து ஓர் கையளவே பகிர்ந்துகொள்ள முனைகின்றது இக்கட்டுரை.

    வாழ்வைச் சிறப்பாக நடத்திச் செல்லவும், சமூகத்தில் மதிப்போடும், நல்ல பதவியோடும் வாழ்வதற்கும் அடிப்படைத் தேவையாக விளங்குவது கல்வியறிவே. அந்தக் கல்வியைக் கற்க வேண்டிய முறையையும், அழியாத கல்விச் செல்வத்தைப் பெற்றவன் சமூகத்தில் பெறுகின்ற சிறப்பையும் அற்புதமாக விளக்கியுள்ளது ஓர் புறப் பாடல். இப்பாடல் ’ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்னும் மன்னனால் இயற்றப்பட்டதாகும். சங்க நூல்களில் புலவர்களேயல்லாது புரவலர்களாகிய அரசர் பெருமக்களும் சிறந்த பல பாடல்களை இயற்றியுள்ளனர். அதற்குத் தக்கதோர் சான்றாக விளங்குகின்றது இப்பாடல்.

    உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்

    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

    பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்

    சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்

    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

    மூத்தோன் வருக வென்னாது அவருள்

    அறிவுடை யோனாறு  அரசுஞ் செல்லும்

    வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

    கீழ்ப்பா லொருவன் கற்பின்

    மேற்பா லொருவனும் அவன்கட் படுமே. ”  (புறம்: 183)

     

    ’ஆசிரியர்க்கு ஓர் துன்பம் ஏற்படும்போது ஓடிச் சென்று உதவியும்; அவருக்குத் தட்சிணையாகப் (அக்கால குருகுலக் கல்விமுறையில் குருதட்சிணை உண்டு; அதைத்தருவது மாணவர்தம் கடமை.) பொருள் கொடுத்தும்; எக்காரணம் கொண்டும் ஆசிரியர்பால் கோபம் கொள்ளாது கல்விச் செல்வத்தை மாணவர்கள் பெறவேண்டும். (ஒழுங்காகப் படி என்று சொன்னதற்காக ஓர் ஆசிரியையே சென்னையில் ஓர் மாணவன் சமீபத்தில் கொடூரமாகக் கொன்றது இங்கே நினைவுகூரத்தக்கது. நற்பண்புகளைப் பள்ளிகளும், பெற்றோரும் போதிக்கத் தவறுவதால் வரும் தீய விளைவே இது.)

    பெற்ற தாயே ஆனாலும் தன் பிள்ளைகளில் கல்வியில் சிறந்தவன் எவனோ அவனையே அவளும் போற்றுவாள். அதுமட்டுமா? அரசனேயானாலும் வயதில் மூத்தவனைவிட அறிவில் மூத்தவனின் சொற்களுக்கே அவனும் மதிப்பளிப்பான். சாதி வேறுபாட்டையும் களையும் ஆற்றல் பெற்றது கல்வி. நன்கு கற்றவன் குலத்தில் தாழ்ந்தவனாயிருப்பினும், அவனிடம் கல்வி பெறுவதற்காக மேற்குலத்தவனும் அவனைப் பணிவான்என்று இப்பாடல் கல்வியின் சிறப்பை அழகாய்ப் பட்டியலிடுகின்றது. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் இன்றைக்கும்நூற்றுக்கு நூறுபொருந்துவதாகவேயிருப்பது எண்ணி மகிழத்தக்கது. ’கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்று அவ்வை மூதாட்டியும் கல்வியின் அவசியத்தைக் கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

    சங்கப் புலவர்களில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றவர் நக்கீரர் என்னும் புலவர். (‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற ‘திருவிளையாடல்’ புகழ் நக்கீரரே தான்.) இவர் ‘கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றார்.  இவருடைய தந்தையார் ‘கணக்காயனாரும்’ சங்கப் பாடல்கள் சிலவற்றை இயற்றியுள்ளார். மகனாரும் தந்தையை விஞ்சும் புலமை பெற்றவராய்த் திகழ்ந்து கால வெள்ளத்தில் அழியாத அமரத்துவம் பெற்ற பாடல்களால் தமிழன்னைக்கு அணி சேர்த்துள்ளார். அனைவரும் அறிய வேண்டிய அவருடைய அருமையான பாடலொன்று சமத்துவச் சிந்தனைகளைச் சிறப்பாய் வெளிப்படுத்தியுள்ளது.

    ”உலகையே ஒரு குடை நிழலில் ஆளுகின்ற மன்னனாயினும் சரி; காட்டில் விலங்குகளின் பின்னே திரிகின்ற நகரத்து நாகரிகமறியாத மனிதனாயினும் சரி, உண்பது, உடுப்பது முதலியவை இருவருக்கும் பொதுவானவையே. மனித வாழ்வின் பிற தேவைகளும் அப்படியே. ஆகவே, மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை, அது தேவையுமில்லை என்கிறார் இவர்; அத்தோடு நின்றாரில்லை. செல்வம் பெற்றவர்களே! அதனை வறியவர்களுக்கு ஈந்து மகிழுங்கள்! எல்லாச் செல்வத்தையும் நாமே துய்ப்போம் என்று எண்ணாதீர்கள்! அதனால் பலவற்றை (அறம், பொருள், இன்பம்) இழக்க நேரிடும்” என்று ஈதலின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
    உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
    அதனால், செல்வத்துப் பயனே தல்;
    துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.” (புறம்: 189)  என்பது அப்பாடல்.

     

    இதைத்தான் நம் வள்ளுவப் பேராசானும்,

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்: 322) என்று கூறுகிறார்.

    ‘Great minds think alike’ என்பது இதைத்தானோ?

    மற்றொரு கருத்தாழம் மிக்க புறநானூற்றுப் பாடல் நம் சிந்தையைக் கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளது. அதனையும் சற்று கவனிப்போம் வாருங்கள்.

    ”மெத்தப் படித்த சான்றோர் பெருமக்களே! மீன்முள் போன்ற நரைமுடியையும் சற்றும் பயனில்லாத முதுமையையும் உடையோரே! யமன் மழுவென்னும் கூரிய ஆயுதத்தோடு உங்களைப் பிடித்துக்கொண்டு போக வரும் வேளையில் நீங்கள் (செய்த தீய செயல்களை எண்ணி) வருந்திப் பயனில்லை. எனவே உங்களால் யாருக்கும் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமலாவது இருக்க முயலுங்கள்! (இது ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பன்ச்’ டயலாக் போல இருக்கிறது இல்லையா?!) அதுதான் எல்லாரும் விரும்புவது; அதுமட்டுமல்ல…உங்களை நல்ல கதிக்குக் கொண்டு செல்லும் வழியும் அதுதான்.” என்கின்றது பொருளாழம் மிக்க அப்பாடல்.

    பல்சான் றீரே! பல்சான் றீரே!
    கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள்,
    பயனில் மூப்பின், பல்சான் றீரே!
    கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    எல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.” (புறம்: 195)

    இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் ‘நரிவெரூஉத்தலையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ’நரி அஞ்சும் தலையை உடையவர்’ என்பது இதன் பொருள். (அப்படியென்றால் ஒருவேளை…அவருடைய தலை நாய்த்தலையாக இருக்குமோ?! என்ற ஐயமும், வியப்பும் நமக்கு ஏற்படுகிறது.) பெயர் சற்று நகைச்சுவையாக இருந்தபோதிலும் அவர் தன் பாடலில் சான்றோர்களுக்குச் சொல்லும் அறிவுரை சாமானியர்க்கும் பொருந்துவதாகவே உள்ளது. (Though he is considered as dog-headed, his principles are dogmatic!!)

    புலவரின் அறிவுக் கூர்மைக்கும், பொதுநலச் சிந்தனைக்கும் சான்று பகர்கின்றது மேற்கண்ட பாடல்.

    அடுத்து நம்மை ஈர்ப்பது ‘பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பெருந்தகையின் பாடலொன்று. மனித வாழ்க்கை என்னும் நாடகத்தில் நீக்க இயலாத இரு பாத்திரங்கள் (characters) இன்பமும், துன்பமுமே அல்லவா! அதைத் தவிர்ப்பதோ, தள்ளிவைப்பதோ மனிதர்களால் ஆகக்கூடியதா?

    நடைமுறை வாழ்வில் நாம் காணுகின்ற துன்பத்தையும், இன்பத்தையும் அளிக்கக் கூடிய இரு நிகழ்வுகளை நம் கண்முன் ஒருங்கே அரங்கேற்றி, அச்சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளைக் கற்பிக்கும் ஓர் ’வாழ்க்கைக் கல்வி’ ஆசிரியராகவே இப்புலவர் நமக்குக் காட்சியளிக்கின்றார். நெஞ்சை நெகிழவைக்கும் அப்பாடல் நமக்கு ஓர் சிறந்த வாழ்வியல் பாடமே!

    ஓரி னெய்தல் கறங்க வோரில்

    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

    புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்

    பைத லுண்கண் பனிவார் புறைப்பப்

    படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்

    இன்னா தம்மவிவ் வுலகம்

    இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.” (புறம்: 194)

    ”இவ்வுலகம் இனிமையானதில்லை… ஒரு வீட்டில் சாப்பறை (சாவு மேளம்) ஒலிக்க, இன்னொரு வீட்டிலோ திருமண மேளம் முழங்குகின்றது. ஒருத்தி பூக்களை அணிந்துகொண்டு கணவனோடு மகிழ்ச்சியாக இருக்கின்றாள்; இன்னொருத்தி கணவனை இழந்து கண்ணீர் சொரிய நிற்கின்றாள். இத்தகைய முரண்பாடுகளோடு இவ்வுலகைப் படைத்த நான்முகன் (பிரம்மா) பண்பில்லாதவன் என அவனைச் சாடும் புலவர், மானிடர்களே! உலகத்தின் தன்மை இப்படிப்பட்டதுதான்; இதற்காக நீங்கள் வருந்துவதில் பயனில்லை. எதையும் தாங்கும் இதயத்தோடு வீட்டின்பத்தை (சொர்க்கம்) அடைவதற்குகந்த நல்லனவற்றைச் செய்து வாழுங்கள்” என்று அறிவுறுத்துகின்றார் பக்குடுக்கை நன்கணியார். பின்பற்றத்தக்க சிறந்த அறிவுரை தானே? துன்பம் கண்டு துவளாத மனநிலை மட்டும் நமக்கு வாய்க்குமேயானால் வாழ்வில் வெற்றி பெறுவது ஒன்றும் சிரமமான செயலில்லை அல்லவா!

     இதே பொருள்பட அமைந்த குறள் ஒன்றை நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக்கும்.

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

    அல்லற் படுவ தெவன்.” (குறள்: 379)

    நல்லனவற்றைக் கண்டு மகிழ்கின்ற மனிதன், துன்பம் வரும் வேளையில் துவள்வது ஏன்? என வினவும் தெய்வப்புலவர் ’இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகவே பாவியுங்கள்’ என்றே வலியுறுத்துகின்றார் இக்குறளில்.

    ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனும், ஆற்றிலே செல்லுகின்ற தெப்பம் போன்றது இம்மானுட வாழ்வு என்பதை அறிஞர்களின் நூல்கள் வாயிலாய் உணர்ந்துகொண்டோம். ஆகவே பெரியோரை (அறிவிலோ, செல்வத்திலோ!) வியந்து போற்றவும் வேண்டாம்; சிறியோரை இகழவும் வேண்டாம் என அறிவுறுத்துகின்றார். எத்துணைப் பொருள் பொதிந்த பொன்மொழிகள்!!

    கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே;
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)

    இதுபோன்று இன்னும் எத்தனையோ புறப் பாடல்கள் நம் மனத்தைப் பண்படுத்தி வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும், நல்லனவற்றையே செய்து நிலைத்த புகழையும், இன்பத்தையும் பெறவும் வலியுறுத்திச் செல்கின்றன. அற வழியில் பொருளீட்டி அதனைத் தாமும் துய்த்து, பிறர்க்கும் ஈந்து அதன் வாயிலாய்க் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்வதுதான் மானுட வாழ்விற்கு முறையானது என்பதனையே இப்புலவர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் கூறிச் சென்ற நன்னெறிகளைப் பின்பற்றி நடந்தால் நம் வாழ்க்கைப் பயணம் வெற்றுப் பயணமாக இல்லாமல் பொருள் பொதிந்த வெற்றிப் பயணமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

     

    Share
  • பங்கஜ வல்லித் தாயார்

     

    சு. ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    திருவெள்ளரைத் திருத்தலத்தின் பங்கஜ வல்லித் தாயார்

    கோட்டோவியமாக…

    பார்க்க, ரசிக்க…

     

    PankajaVallith Thaayaaar

    Share
  • வீணைக்கு ஒரு பூட்டு

    விசாலம்telegram-images

    அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா? ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட  கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும்  வீரமா ? தந்தி மேல்  மோஹனம்  காந்தாரம் வரைச்சென்று வீரத்தை அள்ளி வழங்கும் .சோகமா ? வந்துவிடும் சுபபந்துவராளி , வராளி ஹிந்தோளம் போன்ற  ராகங்கள்..    முன்பெல்லாம்  யாராவது தேசத்தலைவர் மறைந்தால்  சட்டென்று கண்டுப்பிடிப்பது இந்த  ராகங்களில் தான் .  டிவி  முதன் முதலாக ஆரம்பித்த நேரம்   முக்கால்வாசி பேர் ரேடியோவையே பொழுது போக்காக கொண்டிருந்தனர் . அழகாக சினிமா பாடல்கள் பாட திடீரென்று அது நின்று போய் ஒரு  சோக ஒலி  வயலின்  மூலமாகவோ  வீணை சிதார் மூலமாகவோ திடீரென்று எழும்  “ஐயோ  ஏதோ ஒரு தலைவர்  காலமாகிவிட்டார் போலிருக்கு  ” என்று எல்லோரும் உன்னிப்பாக சோகத்துடன் செய்தி கேட்க தொடங்குவார்கள் .  சரி இந்த வீணைக்கு இப்போது வருவோம்

    நான் சொல்ல வந்த வீணை  “டெலிகிராம்” . 1844 வருடம் திரு சாம்வேல் மார்ஸ் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உலக முழுதும் தன் தந்தியால்  நவரச பாவங்களை வழங்கி  பலரையும் உய்வித்த அந்த வீணை.    தற்போது அதற்கு ஒரு பெரிய பூட்டு போடப்பட்டு  தந்தியும்    அறுந்து நிற்கிறது ,      முதல் தந்தி   மே 24 வாஷிங்டன்னிலிருந்து  பல்டிமோருக்கு அனுப்பப்பட்டது   இந்தக்கண்டுப்பிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்
    .
    இதோ வருகிறார்  எங்கள் தெருவுக்கு வரும்  தந்திக்காரர்   அவரது உடையே தனி அழகுதான், காக்கி கலரில் பேன்ட்டும், ஷர்ட்டும் சட்டைப்பையின் மேல் புறம் ஒரு வில்லையும்,  பார்க்கவே பொது ஜன தோழன் என்பது நிதரிசனமாக தெரியும்   சைக்களை மிதித்தபடி  நேரம் ,காலம்  பார்க்காமல்  வருகிறார் . காலை ,மதியம்  அல்லது முன்னிரவு சுமார் பத்துவரை   அவரைப்பார்க்க   மனம் பக்  பக்கு என்றாலும்   காலை நேரம்    அவர் தரும் தந்தியை வாங்கும் தைரியம் இருக்கும் .  ஆனால் இதுவே தூங்கும் போது நடு நிசியில்  அவர் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் !   எங்கும் அமைதி .  இருள்   முன் வாசல் கேட்டை அவர் தட்ட வேண்டும் அது பாதுக்காப்பிற்காக பூட்டுப்போடப்பட்டிருக்கும். பாவம் அவரும் “சார் சார் என்றோ ஐயா என்றோ  வாசலை வேகமாக தட்டுவார் .     தூரத்திலிருந்து ஒரு கருப்பு   நாய் தன் பட்டன் போன்ற கண்களை உருட்டி இவரைக்குறி வைக்கும் .அந்த நாய் வருவதற்குள்  இங்கு கதவு திறக்கபடவேண்டும்    “சுப்பு என்ன இப்படி தூங்கற  ! வாசல்ல யாரோ கா மணியாய் உடைக்கிறா?தந்தியோ என்னவோ ” சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு வயிறெல்லாம பிசையறது “வரேம்மா “என்றபடி சுப்பு  வந்து கதவைத் திறக்கிறார் . தந்திக்காரர் தந்தியை நீட்டுகிறார். மனம் பதைபதைக்க கை நடுக்கத்துடன்  அதை வாங்குகிறார் .தந்திக்காரரும்  அதைப்பிரிக்கும்  வரை அங்கேயே நிற்கிறார் , ராஜி டைட்   டெலிவரி  ” என்ற வரிகள்  இருக்க  நாலு பக்கமும்   கரிய வரிகள் வரையப்பட்டுள்ளன   இந்தச்சந்தர்ப்பத்தைப்பார்த்தால்   நாதநாமக்கிரியா  ராகம் விணைத்தந்தியில் மீட்ட அது அப்படியே சோகத்தைக்கவ்விக்கொண்டு  அந்த வீட்டினுள் நுழைந்து அக்கம்பக்கத்திலும் பரவுவதைப்போல்  தோன்றும்  இந்த உணர்வு இந்தக்கால  ஈமெலில் கிடைக்குமா ?
    அதே தந்திக்காரர் மறு நாள்  காலை அதே  தெருவில் நுழைகிறார் . மனம் மகிழ்ச்சியுடன்   “என்ன முரளி சௌக்கியமா? என்று கேட்டபடி  கதவைத்திறக்கிறார்.  முரளி வருகிறார் , ” என்ன தந்தியா ” மனதில் கொஞ்சம் கலக்கம் இருக்க கேட்கிறார்  ஆனால் தந்தியில் சிவப்பு கோடு நாலு பக்கம் இருக்க   “அப்பாடி” என்றபடி ஒரு மூச்சு   “.  வெட்டிங் பிக்ஸ்ட் ,  லெட்டர் பாலோஸ்    சன்  ஹரி ”   இப்போது தந்தி கொடுத்த ஒலி கல்யாணி ராகம்  அந்தத்தந்தியை வாங்கிக்கொண்ட உடனேயே  மகிழ்ச்சியின் உச்சிக்குப்போய் மேல் காந்தாரத்தைத் தொட்டு உள்ளத்தைச்சிலிர்க்க செய்கிறது     “ஸீவீட் எடுத்துக்கோங்கோ ” என்றபடி உள்ளே போகிறார் .  இந்த உணர்ச்சி    கணிணி மூலம் அனுப்பும் மடலுக்கு  ஏன் வருவதில்லை . ஒரு இடத்தில் உனர்ச்சியில்லாத இயந்திரம் வேலை செய்கிறது இன்னொரு இடத்தில் உணர்வுகளுடன் கூடிய மனிதன் நேரில் பங்கு பெறுகிறான்  இதே போல் பயம் .பீபத்ஸம்   வாத்ஸல்யம்  வீரம் ஹாஸ்யம்  என்று பல ரசங்கள்  இந்தத் தந்தி மூலம்   நான்   அனுபவித்திருக்கேன்  ஒரு தீபாவளியன்று காலை என் பாட்டி இறந்ததைத் தாங்கி வந்த தந்தி இன்றும் என் மனதில் மங்காது இடம் பெற்றிருக்கிறது
    இந்தத் தந்தியே பல நேரத்தில் பலருக்கு உதவி  புரியும்  மூன்று நாட்கள் ஜாலியாக ஊட்டி போக ஆசை ஆனால் பாழாய்ப்போன ஆபீஸில் ஒரு லீவு கூட தரமாட்டேங்கறாளே “என்று அங்கலாய்க்கும் அம்பிக்கு  “மதர் சீரியஸ் ‘ என்ற தந்தி வந்து அவனுக்கு இந்த வாய்ப்பைக்கொடுக்கும் . சில சமயம்  தாத்தா இறந்துபோவார்   ஆனால் சில ஆபீஸர் இதைபுரிந்துக்கொண்டு ” ஏன் ரகு போனவருடமும் உன் தாத்தா காலமானாரே” என்று கேட்டபடியே லீவைத்தருவார் .சில பெற்றோர்களே இந்த வழியைச்சொல்லிக்கொடுப்பார்கள் , “டேய் ரகு இந்தத்தடவை பெண்பார்க்க கண்டிப்பாய் வந்துடு .  கல்யாணம் பிக்ஸ்  செய்யணும்
    “அம்மா என் பாஸ் லீவே தரமாட்டாரே ”    ”   அதற்கென்ன  பாட்டி உடல் நிலை மோசம்  உடனே வா ” என்ற தந்தி அனுப்பறேன்  ” வடநாட்டில் ஆங்கிலத்தில்  தந்தி அனுப்ப சிலர் மிகவும் திணறுவார்கள்  அந்தத்தந்தியைப்படித்து சில விபரீதங்களும் ஏற்பட்டதுண்டு   ஒரு சர்தார் தன் அப்பா லண்டன் போனதைச்சொல்ல  தன் தாய்க்கு  தந்தி அனுப்பித்தான்     “டேடி  கான்   யெஸ்டெர்டெ  ஹீ ஈஸ் இன் த வெல்  daddy gone yesterday  He is in the well ”     தன் அப்பா லண்டன் போய்விட்டாரென்றும் அவர் நலம்    என்றும் அடிக்க நினைத்து இது போல் தகவல் அனுப்ப  அவனது தாய் அலறியடித்துக்கொண்டு உடனே கிளம்பி வர  ……….ஒரே அமர்க்களம் தான் போங்கள் .
    இதே போல் ஒரு மாணவன்  தான்  காலேஜில் சேர்ந்ததை  ” அட்மிடெட்  இன் மெடிகல் ஆஸ்பிடல் . மெடிசன்  கிவன்  ”  என்று தன் விவசாயி அப்பாவுக்கு  தந்தி அனுப்பிக்க  அவரும் தன் நண்பர்கள் மூலம் விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டு   தன் மகன் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான் என மனம் பதைபதைக்க  தில்லி வந்தார் .  பார்த்தால் அவரது மகன் மெடிகல் சீட் கிடைத்த  குஷியில்  பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்   இது எப்படி இருக்கு ? கோயம்பத்தூரில் திரு ரத்ன சபாபதி கடந்த பல வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த வேலையைச்செய்து வந்தார் .அவர் ஆபீஸில் ஒரே நேரத்தில் அழுகையும் இருக்குமாம் சிரிப்பும் இருக்குமாம்  ஆங்கிலத்தில் பண்டில் ஆப் எமோஷன்ஸ் என்று சொல்வார்கள் . இதை உணர்ச்சிகளின் பிழம்புகள் என்று  சொல்லலாமா ?அவரது ஜோல்னாவில்  கொடுக்கவேண்டிய பல நிரம்பி இருக்கும் அதில் வாழ்த்துகள் . சோக செய்திகள் என்று பல கலந்து இருக்கும்  ஆனால் வருடங்கள் செல்ல கணினி வந்தப்பின் இது  அதிக அளவு குறைந்து ஜோல்னா பைக்கு அவசியமே இல்லாது ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டார்  தவிர  மிகச்சிலவு இல்லாமல்   மிக நம்பிக்கையுடன் அவசர செய்தியை அனுப்பும் சமாசாரமாகத்தான் இது இருந்தது என்பது உண்மை
    தந்தியில் டபிள் எக்ஸ் டெலிகிராம்  மரண செய்தியைக்கொண்டிருக்கும் அதற்கு எப்போதுமே முதன்மை இடம் அதற்கு க்யூ நிற்க வேண்டாம்  கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இந்த லைனில் வேலைச்செய்து வரும் திரு அண்ணாதுரை தினமும் சுமார் 15 கிமீ சைக்கிளை மிதித்து  100 தந்தி வரை கொடுத்துமுடிப்பார். இவருக்கு சூறாவளி . அடைமழை,  கடும் வெயில்  எல்லாம் பழக்கப்பட்டு போய்விட்டன .இரவில் நாய் துரத்துவது தான் கொஞ்சம் சங்கடமான விஷயம் என்கிறார் இவர் . வேலை கடுமையாக இருந்தாலும் ‘ஜாப் ஸாடிஸ்பேக்‌ஷன் எனக்கு மிகவும் கிடைத்தது மனம் நிறைந்திருந்தது ”  என்றார் .

    இந்திரங்களுடன் சேர்ந்து மனிதனே இயந்திரமாகி உணர்ச்சிகளில்லாத ரோபோவாகி வருகிறான் அண்ணன் தம்பி  பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய் தந்தையரிடமும் இயந்திரகதியில்  பேசி  தான் பேசாத நிலைக்கு ‘நோ டைம்’  என்று காரணமும்  காட்டி ,  அட கடவுளே   நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்   என நினைக்கத்தோன்றுகிறது    முதியோர் இல்லம்பெருகாமல் என்ன செய்யும் ?

    படத்துக்கு நன்றி

    http://frank-op.blogspot.in/2010/08/last-week-telegraph-started-bihar.html

    Share
  • விலங்குகள்

     

    தனுசு

    கள்ளிப்பாலுக்கு கொஞ்சம்
    கற்பழித்து கொஞ்சம்
    வரதட்சணையால்
    கரிக்கட்டையாகி கொஞ்சம்
    தலைபிரசவத்தில் கொஞ்சம்
    கணவன் கை விட்டு கொஞ்சம்
    காப்பார் யாருமின்றி கொஞ்சம்
    இப்படி
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பறிகொடுத்துவிட்டு
    காலியாகி போன பெண்ணுலகுக்கு
    ஒரு
    வேலிக்குள் இருந்தாலும்
    ஏனடா விலங்குகள்?

    அடுத்தவீட்டில்
    எதிர்வீட்டில்
    ஆலயத்தில்
    அலுவகத்தில்
    பேருந்தில்
    தெருவில்
    இருட்டில்
    பள்ளியில்
    கல்லூரியில்
    இங்கெல்லாம்
    கசக்கி மிதித்து
    அமிலம் வீசி
    இருப்பதையும் கிழித்து அழிக்க
    மனித விலங்குகள் இருப்பதாலா?

     

    Share
  • அறுமுகநூறு (19)

     

    சச்சிதானந்தம்

     

    நெடுவெண் நிலவின் ஒளியின் சுடரே,

    சுடுவெங் கதிரோன் சுடரும் நீயே,

    இடுகண் ணொடுங்க அருளும் கடலே,

    கடுகின் அளவும் உமையாம் அறியோம்!                                                                        91

     

    விண்மீன்கள் பலகோடி விளையாடும் நேரத்திலும்,

    ஒருமீனது சுடர்வீசிச் சிரிக்கின்ற வேளையிலும்,

    அறுமீன்கள் தோள்களிலே தவழ்ந்த தமிழுள்,

    நதிநீரில் மீன்போல நீங்காமல் மூழ்கிடுவோம்!                                                              92

     

    காமுகனாய் வாழ்ந்திருந்த காலங்கள் போதும்,

    அறுமுகனின் அரவணைப்பில் இனிவாழ வேண்டும்,

    ஆகமங்கள் அறியாத பாமரன் என்றாலும்,

    அன்புநெறி தவறாமல் உயிர்வாழ வேண்டும்!                                                               93

     

     

    பாலையாய்த் திரிந்த வாழ்க்கைப் பாதையை

    குறிஞ்சியென் றமைத்துத் திருத்திடும் தலைவன்,

    ஏழையாய்ப் பிறந்த எளியவர்க் கெல்லாம்,

    பார்வையால் அருளினை வழங்கிடும் முருகன்!                                                          94

     

    மெய்யென என்னை நினைக்கவு மில்லை,

    பொய்யென நெஞ்சம் வருந்தவு மில்லை,

    எய்தவன் உந்தன் எண்ணப் படியே,

    வையகக் கடைமை செய்கின் றேனே!                                                                              95

     

    Share
  • காட்டிலும்…

     

    செண்பக ஜெகதீசன்

     

    இறைவன் எழுதிய கவிதையை

    இசையமைத்துப் பாடிடும்

    வானம்பாடியும்,

    கானக் குயிலும்..

     

    மனப்பாடம் செய்திடும்

    மாந்தோப்புக் கிளிகள்..

     

    நடை பயின்று

    நாட்டியத்தில் காட்டிடும்

    வண்ண மயில்கள்..

     

    அந்த

    வேடமிட்டு நடிக்கும்

    வான்கோழிகள்..

     

    எல்லாம்

    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,

    நன்றாய் இல்லையே குணத்தில்

    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 16

    சு.கோதண்டராமன்

     

    வேதம் புதுமை செய்

    இடைக்காலம் வரை ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்த வேதங்களை மேலை நாட்டவர் கண்டுபிடித்து மிகுந்த முயற்சியுடன் கற்று மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஸாயணாசார்யர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை தான். ஸாயணரோ வேதங்களுக்கு வேள்விக் கண்ணோட்டத்துடனேயே உரை எழுதி உள்ளார். வேறு வகையான உரைகள் கிடைக்காத நிலையில் மேலை நாட்டவர் இதனையே வேதத்தின் உண்மையான கருத்து என்று கருதி அதன் அடிப்படையில்  சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

    இவர்கள் கூறுவதாவது, “பண்டைய ஆரியர்கள் மின்னல், நீர், காற்று, தீ முதலான இயற்கைத் தெய்வங்களை வணங்கினர். இந்தத் தெய்வங்களை மகிழ்விக்க வேள்விகள் செய்தனர். இவற்றில் இவர்கள் தீ வளர்த்து அதில் விலங்குகளைப் பலியிட்டும் சோமரசம் என்னும் போதை தரும் பானங்களை அளித்தும் வழிபட்டனர். தங்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இவர்கள் தேவர்களை வேண்டினர். விரோதிகள் என அவர்கள் குறிப்பிடுவது இந்த வேள்வி முறைக்கு மாறுபட்ட கூட்டத்தினரான திராவிடர் என்னும் கூட்டத்தாரை.”

    ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையான ஆரியர் குடியேற்றம்,  திராவிடர்களுடன் போர் முதலிய கொள்கைகள் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்து ஆளுவதற்கு வசதியாக இருந்தது. அவர்களது இந்தக் கண்டுபிடிப்புகளை மறு பரிசீலனை இன்றி ஒப்புக்கொண்ட நம் நாட்டு ஆசிரியர்களும் அக் கருத்துகளையே உண்மை என்பதாகப் பரப்பி வந்துள்ளனர்.

    இவ்வாறு வேதங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதால் பலரும் வேதத்தை இகழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் ஆன்மிகக் குறியீட்டு முறையில் வேதத்திற்குப் பொருள் கண்டு இது வரை தெளிவு படுத்தப்படாத பகுதிகளில் சிறந்த ஆன்மிகக் கருத்துகள் அடங்கி இருப்பதை வெளிப்படுத்தினர்.

    ஆன்மிகக் குறீயீடு என்பது என்ன? வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வி என்பது மனிதன் இறை நிலை அடையச் செய்யும் முயற்சியைக் குறிக்கும். இந்திரன் என்பது இடி மின்னல் தெய்வம் அல்ல. அது விஞ்ஞான சக்தியை அதாவது தெய்விகத் தன்மை கொண்ட மனத்தைக் குறிக்கிறது. அக்னி என்பது தீ அல்ல. அது ஞான சக்தி என்னும் அறிவுத் துணிவை அதாவது மேல்நிலை அடையவேண்டும் என்னும் இறை நாட்டத்தைச் சுட்டும். அவ்வாறே சூரியன் என்பது அறிவாகிய ஒளியையும், கோ (பசு)  என்பது அதன் கிரணங்களையும் குறிக்கும். வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ் எனப்படும் நெய்யுணவிற்கு ஞானத் தெளிவு என்று பொருள் கொள்ள வேண்டும். விருத்திரன் என்பது ஆரியருக்கு விரோதமான திராவிடர் இனத் தலைவன் அல்ல. அதன் வேர்ச் சொல்லான விருத் என்பது மறைத்தல் என்னும் பொருள் உடையது. அது அறிவை மறைக்கும்   அஞ்ஞானத்தைக் குறிக்கிறது.

    அரவிந்தர் தன் கற்பனையை வேத மந்திரங்களில் புகுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். ஸாயணருக்குக் காலத்தால் முந்தியவரான யாஸ்கர் என்பவர் வேதத்திற்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். அவர் சொற்களின் வேர் வரை சென்று பொருள் காண்பவர். அவரது வழி நின்றே அரவிந்தரும் இந்திரன் முதலான சொற்களுக்குப் புதிய பொருள் தருகிறார்.

    சடங்குகளைப் போற்றும் கொள்கை உடைய ஸாயணரும் சில இடங்களில் இத்தகைய குறியீட்டுப் பொருள் தருகிறார். பல இடங்களில் சடங்குகளுக்குப் பயன்படும் வகையில் வலிந்து பொருள் கொள்கிறார். இந்த முரண்பாட்டை நீக்குகிறார் அரவிந்தர். மேலும் பல சூக்தங்களில் ஸாயணரும் அவரை ஒட்டி மொழிபெயர்த்த மேலை நாட்டவரும் தரும் பொருள் புரியாத புதிராக உள்ளது. அரவிந்தரின் குறியீடு தான் அதைச் சரியாக விளக்குகிறது.

    உதாரணத்திற்கு ரிக் வேதம் 1-32 இன் மொழிபெயர்ப்பு இது.

    “1 இந்திரனுடைய வீரச் செயல்களை இங்கு சொல்லுகின்றேன். அவன் வஜ்ரி. மின்னல் அவனுக்குப் படை. அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகின்றேன். பாம்பைக் கொன்றான். மலைகளின் சார்புகளை உடைத்தான்.

                    “2 மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்து விட்டான். வானத்தாலாகிய வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான். நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக் கொண்டு செல்கின்றன, இரைந்து கொண்டு செல்லும் ஆவினம் போல.

                    “3 இந்திரன் ஏறு போன்றான். மூன்று படிகளிலே மதுவுண்டான். அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது.

                    “4 அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு மற்ற மாயாவிகளின் மாயைகளை எல்லாம் வென்றான். பின்பு சூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான். அதன் பிறகு இந்திரா, உனக்கோர் பகைவனுமில்லை.

                    “5 மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான். பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

                    “6 போர்த் தொழில் அறியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடுவோனும் மகாவீரனுமாகிய இந்திரனைப் போருக்கு அழைத்தான். இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகிற தனது திறமைகளை இந்திர சத்ரு ஒன்று சேர்க்க முயன்றான்.

                    “7 காலும் கையும் இல்லாதவன் விருத்திரன். இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப் படை இவனை மலையின் மீது கொன்றது. பலவற்றிலே விளங்குவோன் இந்திரன். ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல அவனை விருத்திரன் பகைத்தான், சிதறி வீழ்ந்தான்.

                    “8 ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே விருத்திரன் கிடந்தான். இவன் மீது நதிகள் சென்றன. அவை மனதின் மேல் ஏறிச் சென்றன. முன்னர் அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான். இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான்.

                    “9 விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள். தாய் மேலும் மகன் கீழுமாயினர். இந்திரன் அவள் மீது வீசியிருந்த படையை மீட்டுக்கொண்டான். கன்றுடன் கிடக்கும் பசுவைப் போலே கிடந்தனள் தாநு.

                    “10 தங்கு தடையில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது. விருத்திரனது உடல் மறைவைக் கண்டு நதிகள் விரிந்து பெருகின. இந்திரனைப் பகை கொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான்.

                     “11 கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்துக் கொண்டான். அவை பகைவனுக்குப் பத்தினிகள் ஆயின. அவற்றைப் பாம்பு காத்தது. நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட்டிருந்தது. விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான்.

                    “12 இந்திரா, முதற் பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான். அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க் காவலன் ஆயினை. கதிர்களை வென்றாய், சூரா, மதுவை வென்றாய். ஏழு நதிகளையும் பெருகும்படி விடுவித்தாய்.

                    “13 இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில் பகைவன் விளைவித்த மின்னலும் தென்றலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை. பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன. அவற்றையும் இந்திரன் வென்றான்.

                    “14 இந்திரா, பகைவனை அழித்தபிறகு, அச்சத்தோடு செல்லும் பருந்து போல, நீ எதன் பொருட்டாகத் தொண்ணூற்று ஒன்பது நதிகளையும் உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்கிறாய்? நீ கண்டு மனம் அஞ்சத் தகுந்த போராளி பாம்பினிடத்தில் ஏது?

                    “15 செல்வன நிற்பன அனைத்திற்கும் இந்திரனே அரசன். இவன் வயிரப் படையைக் கைக் கொண்டான். சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன். தொழில் செய்வோரை எல்லாம் இவனே ஆளுகின்றான். ஆரக் கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போல இவன் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றான்.

    மேலே கண்ட மொழி ஆக்கம் நமக்கு எதுவும் விளங்காது இருப்பதில் வியப்பு இல்லை. பாம்பு நதியைக் குகையில் அடைத்து வைத்திருந்தது, இந்திரன் அதைக் கொன்று நதிகளை விடுவித்தான் என்பது குழந்தைக் கதை போல உள்ளது. இதில் என்ன ஆன்மீகத் தத்துவம் இருக்கிறது, இது போன்ற கதைகளைக் கொண்ட வேதத்தைக் கொண்டாடுகிறார்களே என்று நமக்குத் தோன்றும். அதன் உண்மையான பொருளை அறிய அரவிந்தர் வழி நின்று பாரதி அளிக்கும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

    “இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி. இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு விருத்திரன் என்பது பெயர். (விருத்திரன்= மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள், அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம், அதாவது பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்குத் தாநு என்று பெயர். (தாநு= பிரிப்பது)

    “நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண், காற்று வானம் என. வானத்தின் மேலே உண்மை உலகம் இருக்கிறது. அந்த உண்மை உலகத்திலிருந்து நமது அறிவிலே ஞான ஒளியின் கிரணங்களும் தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

    “அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாயவொட்டாதபடி விருத்திராசுரனும், பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நம்முள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற்கூறப்பட்ட தேவநதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கி வைத்து அவை நமது அறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

    “இந்த விருத்திரனை வேதம் பாம்பு என்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கை கால் கிடையாது. வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

    “இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால் அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று தேவநதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் மண் காற்று வான் (உடல் உயிர் அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலை பெற்று அமிர்த பானம் (சோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மகரிஷிகளின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்கு அறிந்து கொண்டால் மந்திரங்களின் பொருள் தெளிவு படும்.”

    பாரதியின் இந்த விளக்கத்துக்குப் பின் இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு புதிய பொருள் விளங்குகிறது அல்லவா? இது போல மேலும் சில சூக்தங்களுக்குப் பாரதி புதிய பொருள் தருகிறார். அவர் மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் நான்கு வேதங்களையும் முழுமையாக மொழிபெயர்த்து வேதம் புதுமை செய்திருப்பார்.

    Share
  • பெண்ணென்றால் கேவலமோ?…….

     

    -பார்வதி இராமச்சந்திரன்

     

     

    பெண்ணென்றால் கேவலமோ?

    பெரும் பாவம் செய்தோமோ!!

    மண்ணிலே பிறவியெல்லாம்

    பெண்ணின்றிப் பிறந்திடுமோ?

     

    நல்லதொரு சுமை தூக்கி

    நாலெட்டு நடக்கு முன்னே

    இறக்கி வைக்க இடம் தேடி

    இங்குமங்கும் அலைகின்றீர்!!

    .

    பத்து மாதம் கருச்சுமந்து

    படும் பாடு நீர் அறிந்தால்

    பாரினிலே பெண்பிறவி

    பெருமையென்றே பேசிடுவீர்!!

     

    சூலறிந்த நாள் தொடங்கி

    சுகமான சுமையென்றெண்ணி

    தன்னுள்ளே உயிர் வளர்க்கும்

    தியாக வேள்விக்கு ஈடுண்டோ?

     

    முதல் மூன்று மாதம் வரை

    தலை சுற்றும், வயிறு குமட்டும்.

    குழம்பு கொதிக்கும் வாசமென்றாலும்.

    குடம் குடமாய் வாந்தி வரும்.

     

    புரண்டு படுக்க இயலாது.

    பூப் போல நடக்க வேண்டும்.

    பூமியின் பொறுமை எல்லாம்

    பொன்னுடலில் வர வேண்டும்.

     

    ஐந்து மாதம்  நிறைந்து விட்டால்

    அணையாத‌ பசித்தீ வாட்டும்

    எத்தனை முறை உண்டாலும்

    இன்னமும் வயிறு கேட்கும்.

     

    ஆறு மாதம்  ஆன பின்னே

    அயர்ந்து அமரச் சொல்லும்.

    அடி வயிற்றில் குழந்தை முட்டும்

    ஆழ்ந்த தூக்கம் தொலைந்து போகும்.

     

    நாலிரண்டு மாதத்திலே

    நாலெட்டு நடந்தால் திணறும்.

    நீர் கோர்த்து கால் வீங்கும்

    நிலவு முகம் பூசணியாகும்.

     

    ஒன்பதாம் மாதம் வந்தால்

    உள்ளங்கால் நரம்பு சுண்டும்.

    ஓரெட்டு நடக்கும் முன்னே

    உடலிலே அயர்ச்சி பொங்கும்.

     

    ஐயிரண்டு மாதத்திலே

    அங்கமெல்லாம் வலி பொறுத்து

    ஆருயிரின் ஓருறவை

    அகம் மகிழத் தருகின்றோம்.

     

    ஆயினும் பெண்ணென்றால்

    ஆயிரம் வசையொலிகள்.

    அன்பு தரும் உயிரில்லை.

    அரங்கேறும் கேவலங்கள்.

     

    அம்மாவும் பெண் தானே!!!

    அருமை மகள் பெண் தானே!!!

    அன்பு தந்து வாழ்விக்கும்

    அருந்துணைவி பெண் தானே!!

     

    பெண்களைத் தொழுது நிதம்

    பெருங்கோயில் கட்ட வேண்டாம்

    மண்ணிலே வாழ வந்தோம்

    வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (63)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.250px-HoeGrain
    இனியதோர் வாரத்திலே இகத்தின் நிகழ்வுகள் எழுதிடும் செய்திகளின் ஆழத்தின் அகழ்வுகளின் அடிப்படையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமிது.

    மனித வாழ்க்கையின் அடிப்படையே கருணையின் அடித்தளத்தில் தான் எழுப்பப்படுகிறது. அன்பு வாழ்க்கையின் ஆரம்பம் , ஆதாரம், முடிவு என்று எமது வாழ்க்கையின் அனைத்தையும் நிர்ணயிக்கும் காரணியாகிறது.

    அன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றதாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு, சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் பாசம், காதலர்களின் இதயத்தின் கனிவு , கணவன், மனைவியரிடையே கட்டி எழுப்பப்படும் அன்பு, அயலவர்களின் மீது காட்டும் பரிவு என அன்பு எடுக்கும் வடிவங்கள் ஆயிரம்.

    ஆனால் அதே மனித வாழ்க்கையில் தான் கொலைகாரர்களும் அடுத்தவருடைய வாழ்வைப் பறிக்கும் பாதகச் செயலின் காரணகார்த்தாக்களாகிறார்கள்.

    அதே அன்பு விளையும் மனதில்தான் கொலைவெறியும் 400px-Moors_murders_mapஎழுகிறது இவற்றில் சிலவற்றிற்கு நியாயமான காரணங்கள் எனச் சிலவற்றைக் காட்டினாலும் பல அகோரமாக அடுத்தவரின் வாழ்வை அரைகுறையாக முடிக்கும் அசுரத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகிறது.

    என்னடா? எதை நோக்கி இவனது இந்த வார மடலின் ஆரம்பம் அழைத்துச் செல்கிறது என்ற உங்களது ஆர்வத்துடனான கேள்வி எனக்குப் புரிகிறது.

    இங்கிலாந்து ஊடகங்களில் மிகவும் பிரபலமாக அடிபட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வாரம்பம்.

    தற்போது “கிரேட்டர் மான்செஸ்டர்” (Greater Manchester) என்றழைக்கப்படும் இங்கிலாந்திலுள்ள பகுதியில் 1963ம் ஆண்டு யூலை மாதத்திற்கும் 1965ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 27 வயதே நிரம்பிய இளைஞன் “இயன் பிராடி ( Ian Brady ) ” என்பவனும் , 23 வயதே நிரம்பிய யுவதி ” மைய்ரா ஹென்லி (Myra Hindley ) என்பவளும் சேர்ந்து நிகழ்த்திய ஜந்து சிறுவர்களின் கொலை ” த மோர்ஸ் மேடர்ஸ் (Moors murders ) என்று மிகவும் பிரபலம் பெற்றது.

    இவ்விருவரும் இணைந்து 10 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 5 இளம் உயிர்களை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்திக் கொலை செய்து இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள ” மோர்ஸ் ( Moors ) என்றழைக்கப்டும் பகுதியில் புதைத்திருந்தார்கள்.

    இவர்களது இந்த அகோரத்தனமான , மிலேச்சத்தனமான நடவடிக்கை அப்போதைய இங்கிலாந்து தேசத்தை மட்டுமல்ல உலகெங்குமே அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. மனிதர்கள் மனதில் இத்தகைய வெறி உருவாவது சாத்தியமா ? எனும் கேள்வி அனைத்து மனிதாபிமானமிக்க நெஞ்சங்களையும் உலுக்கி விட்டிருந்தது.

    இவர்கள் இருவரது குழந்தைப்பிராய வாழ்வில் இடம்பெற்ற வன்முறை மிக்க வளர்ப்பின் காரணத்தினால் மனம் மிருக உணர்வுகளை உள்ளடக்கி வைத்திருந்து அதன் வெளிப்பாடகவே இவர்களது இந்நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன என்பதே மனோதத்துவ நிபுணர்களின் விளக்கமாகவிருந்தன.

    எத்தகைய வடிவங்களில் இந்நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தாலும் இளம் உயிர்களின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் குடும்பத்தினரைத் மீளமுடியாத் துன்பச் சேற்றினுள் புதைத்த இவர்களை மிருகங்கள் என்று விவரிப்பதே சரியான விளக்கம் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக இருந்தது.

    இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    தான் செய்த கொடூரத்தை உணர்ந்து திருந்தி விட்டதாகக் கூறிப் பல வருடங்களின் பின்னர் பலமுறை “மைரா ஹென்லி” நீதின்றத்தில் தன்னை விடுவிக்கும்படி விண்ணப்பித்தும் அவையனை250px-David_and_maureen_smith_nee_hindleyத்தும் நிராகரிக்கப்பட்டன.

    அப்பெண்ணின் வாழ்க்கை 60வது வயதில் 2002ம் ஆண்டு சிறையிலேயே நிறைவுற்றது. அம்மனிதன் சிறையிலேயே ” சித்த சுவாதீனமற்றவன் ” என்று தீர்மானிக்கப்பட்டு மனோநிலை பாதிக்கப்பட்ட கைதிகளைப் பாதுகாக்கும் “ஆஷ்வேர்டு வைத்தியசாலையில்” அனுமதிக்கப்பட்டிருந்தான்.

    சில வருடங்களுக்கு முன்னால் தான் உணவு உட்கொள்ளாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்த அம்மனிதனுக்கு வலுக்கட்டாய உணவு கொடுத்துச் சிறையில் இங்கிலாந்து அரசாங்கம் உயிருடன் வைத்திருக்கிறது.

    தான் உண்மையிலேயே மனோநிலை அற்றவனில்லை என்றும் தன்னை வைத்தியசாலைச் சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்றும் படியும் கோரி அவன் செய்திருந்த மனு விசாரணைக்கு கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் இம்மிருக உணர்வுகளையுடைய இம்மனிதனுக்கு வழங்கப்பட வேண்டுமா? தமது குடும்ப அங்கத்தினர்களை இழந்த மனிதர்களுக்கு மீண்டும் இவன் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்த வேண்டுமா? எனும் வாதமே ஊடகங்களில் கடந்த வாரம் பிரபல்யமடைந்தது.

    அவனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவனுக்கு நீதிமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அவ்விதமான ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்பதே பலரது வாதமாகும்.

    மற்றவரின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்த ஒருவருக்கு மனிதர்களின் அடிப்படை சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா? என்பது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படி இருப்பினும் குற்றம் புரிந்தவராயினும் அவருக்கு அடிப்படை உரிமைகளை மறுப்பது எம்மையும் அவர்களது தரத்திற்கு இழுத்துச் செல்லாதா? என்பது மறுபுறம் உள்ளவர்களின் வாதம்.

    இப்படிப்பட்ட வாதத்தில் எது சரியானது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எமக்கு உள்ளதா?

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    27.06.2013

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (17)

    images (1)

    பவள சங்கரி

    அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள்.
    புத்தர்

    கருணையுள்ள இதயம் கடவுள் வாழும் இல்லம்!

    நல்ல எண்ணங்களே நம்முடைய நல்ல செயல்களுக்கு வித்தாகி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கச் செய்கிறது என்பது திண்ணம். அனைவரிடத்திலும், எப்பொழுதும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது நல்லதொரு கருத்து என்றாலும், நடைமுறையில் அது முழுவதும் சாத்தியமாகுமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் பழகப் பழக நாளடைவில் அது சாத்தியமாகும் என்பதும் சத்தியம். தம்மைத் தாமே வலிமையாகவும், புத்திசாலியாகவும் ஆக்கிக்கொள்ளவும் மற்றும் அதிக தன்னம்பிக்கையுடனும், நெகிழ்த் திறனுடனும் நடந்து கொள்ளச் செய்யும் யதார்த்தமான பாதை இது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ளும் போது, தம் அன்புக்குரியவர்களின் தேவைகளை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்வதற்கும் வழிவகை செய்யும். அஞ்சி நடுங்கச் செய்யும் கடினமான நேரங்கள் மற்றும் வாழ்க்கையின் இருண்ட காலங்களையும் கூட பொறுமையுடன் எதிர்கொள்ளச் செய்யக்கூடியது ‘கருணை’ என்ற இந்த மகோன்னத குணம். மிகக் கடினமான நேரங்களில் கூட தம் சுயநலத்திற்காக மட்டுமே கண்களை மூடிக்கொண்டு கருணைக் கடலில் மூழ்கித் தெளிவதன் மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற முடியும். அதனாலேயே சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக செயல்படக்கூடிய, ‘கருணை’ என்ற இந்த அற்புதமான குணத்தை வளர்த்துக் கொள்வது ஒரு வெற்றியாளருக்கு அவசியமாகிறது.

    images

    என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஆச்சரியப்படக்கூடிய ஒரு சம்பவம் இந்த இடத்திற்குப் பொருந்தக்கூடும். இயற்கையிலேயே கருணை எனும் அந்த தெய்வீகக் குணத்தைப் பெற்றவராயினும், யோகா, தியானம் என்ற சக்திகளின் மூலம் மேற்கொண்டு அதை உரம் போட்டு வளர்த்து தம் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பவர் சந்திரன். நகரத்தின் மையப்பகுதி என்றில்லாவிட்டாலும், பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்பவர். அதன் கீழ்பகுதியின் பின்புறம் ஒரு மூலையில் சிறிய இடத்தை மட்டும் தம் குடியிருப்பாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் அந்த நடுத்தர வயதுக்காரர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் கொடுக்கும் மீந்துபோன உணவுகளையும், பழைய துணிகளையும் பெற்றுக் கொண்டு தம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர். அன்றாடம் சந்திரன் தன் பங்கிற்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவசரமாக வெளியே செல்லும்போது கையில் கிடைக்கும் சில்லறையைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்கள் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதோ செய்ய வேண்டுமே என்ற தனக்குள் இருக்கும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அதைத் தவறாமல் செய்து வந்து கொண்டிருந்தாலும், ஒரு நாள் திடீரெனெ ஏதோ தோன்ற சில்லறையை எடுத்து தட்டில் போட்டுவிட்டு, வீடு வாசல், சொந்த பந்தம் இல்லாமல் அனாதையாய் இருக்கும் அந்த மனிதரின்மீது ஒரு பச்சாதாபம் மேலிட, அவருடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து நட்புடன் ஒரு பார்வையை வீசினார். சற்றே தடுமாறிய அந்த மனிதரும் திரும்பி பார்க்கத்தான் செய்தார். அந்த இடத்தில்தான் கருணையின் வாசல் திறந்தது!.

    நாட்கள் வாரங்கள், மாதங்களாயின. அந்த ஆதரவற்ற மனிதரைப் பார்த்து ஆரம்பத்தில் புன்னகைக்க ஆரம்பித்த சந்திரன், மெல்ல மெல்ல ‘நலமா’ என்ற ஓரிரு வார்த்தைகள் பேச முற்பட்டார். மாலையில் திரும்பும் போது ‘இன்று பொழுது நன்றாகப் போனதா’ என்று அன்பாக கேட்கும் வழக்கமும் கொண்டார். வெகு விரைவில் சந்திரனின் கருணையுள்ளம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, அந்த மனிதரின் மாற்றத்தில் தெரிந்தது. சுய பச்சாதாபம், சங்கோஜம் போன்ற கூட்டிலிருந்து மெல்ல வெளிவந்து சந்திரனைப் பார்த்து பதில் சொல்லவும் துணிந்தார். அவருடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த மாற்றங்கள் அவருடைய தன்னம்பிக்கையை உணர்த்தின. சந்திரனுக்கும் இது உற்சாகத்தை அளிக்க இதுவே வழமையாகி விட்டது. நல்ல நட்புணர்வும் தெரிந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த மனிதரைக் காணாமல் சந்திரனுக்கு பெரும் கவலையாகிவிட்டது. வாழ்க்கை ஓட்டத்தில் வெகு விரைவில் அந்த மனிதரைப் பற்றிய நினைவும் மறைந்து விட்டது.

    ஒரு நாள் சந்திரன் தன் பணி முடிந்து வீடு திரும்பும்போது அந்த மெத்தைப்படி அருகில் யாரோ ஒரு புதிய மனிதர், தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கி, ‘சார், நலமா’ என்று விசாரிக்கவும், எங்கேயோ பார்த்த முகமாக இருந்தாலும், யார் என்று சட்டென்று நினைவிற்கு வராமல் யோசித்தது, சுருங்கி, விரியும் நெற்றியின் மூலம் புரிந்தது. அந்த மனிதரும், வெகு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

    “சார், என்னைத் தெரியவில்லையா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஆதரவற்ற நிலையில், அடுத்தவரின் உதவியை நாடி காத்துக்கிடந்தபோது அன்பையும், நட்பையும் விதைத்து எனக்குள் தன்னம்பிக்கையை வளரச் செய்தீர்களே. அதுவரை ஒரு சடமாகக் கிடந்திருக்கிறேன் நான். நமக்கும் மரியாதை கொடுக்கவும், அன்பைக் காட்டவும் ஒருவர் இருக்கிறாரே என்ற எண்ணம் எனக்குள்ளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் சுயமரியாதையை தட்டி எழுப்பியது. மெல்ல என் அடிமைக் கூட்டிலிருந்தும் வெளிவர முடிந்தது. ஒரு கூலி வேலைத் தேடி முதலில் நல்ல உடை வாங்கினேன். பின் இன்னும் சற்று நல்ல வேலை தேடிக்கொண்டு, ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு இடம் வாங்கி தங்கியிருக்கிறேன். உங்களுடைய கருணையும், அன்பும், என்னையும் ஒரு மனிதனாக மதிக்கத் தோன்றிய எண்ணமும்தான் என் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிட்டது! என்மீதே எனக்கு ஒரு மரியாதை வந்ததற்கு காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன் என்று தன் கைகளை நீட்டினார். தன் கண்களைச் சந்திக்கவே தயங்கிக் கொண்டிருந்த மனிதர் இன்று கை குலுக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் வளர்ந்திருப்பது சந்திரனுக்கும் மன நிறைவைக் கொடுத்தது. இந்த மன நிறைவு சந்திரனின் அன்றைய பொழுதின் பணிகளை எளிதாகவும், மிகச் சிறப்பாகவும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது. உள் மனதில் ஒரு இனிமை சூழ்ந்திருந்ததால் உற்சாகம் பல நாட்களுக்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

    அன்னை தெரெசாவை நினைவு கூர்ந்தால் இந்த உண்மைக்கான ஆதாரம் தெளிவாகும். அவருடைய அமைதியான தன்னம்பிக்கை மட்டுமே அவரைத் தயக்கமில்லாத மற்றும் மனிதாபிமானமுள்ள தன்னலமற்ற சேவைகளுக்கு வழிநடத்தியது. உருவில் மிக எளிமையான, தோற்றம் கொண்டிருந்தாலும், மிகப் பரந்த மனப்பான்மையும், அபரிமிதமான மன உறுதியும் அவரை மிகப் பிரம்மாண்டமாகக் காணச் செய்தது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தம் இறுதிக் காலம் வரையில் துளியும் களைப்படையவில்லை அந்த அம்மையார். உண்மையான கருணையும், அன்பும் கொண்டால் களைப்பற்ற உற்சாகமான செயல்பாடுகளுக்கு உத்திரவாதம் உண்டு என்பதற்கு அன்னை தெரெசாவே முன் உதாரணம். கருணையைப் பொழிவதற்கு அதிக உழைப்போ அல்லது பெரிய முயற்சியோ தேவையில்லை. உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. அன்னை தெரெசாவின் பொன் மொழியான,

    “நம்மால் இந்த பூமியின் மீது பெரிய செயல்களையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறிய செயல்களை மட்டுமே செய்ய முடியும்” என்பதன் மூலம், இந்த சிறிய செயல்களே வாழ்க்கையின் பெரிய சாதனைகளை எதிர் கொள்வதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வழி என்பதை விளங்கச் செய்கிறது.

    மீண்டும் சந்திப்போம்

    படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://updateyourself.info/wp-content/uploads/2013/03/inspirational-words.jpg&imgrefurl=http://updateyourself.info/2013/04/inspirational-sunday-3-no-excuse/&h=960&w=1280&sz=116&tbnid=7tN9VCxvgbU_XM:&tbnh=95&tbnw=127&zoom=1&usg=__-w0LJLkrJbEn57B_VjDRHTfQcqU=&docid=Y3NgC37Es1nP5M&sa=X&ei=Jb7KUavTCIWNkAX4uID4BQ&ved=0CDUQ9QEwAg&dur=830

    Share
  • இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்!

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விஷயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா?

    சிறிய சமூகத்திற்கு இத்தனை பிரச்சனைகளா என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்கப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

    திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது, இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன. மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியச் சமுதாயம் கேட்பாரற்ற சமுதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா?

    தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தியச் சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும், சமுதாயத்தலைவர்களும் சொந்தச் சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?

    கடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாய பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமை வாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்க வைக்கும் முயற்சியில் அரசாங்கமோ, எந்த அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத் தயங்கும் நிலையில் எதிர்காலச் சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது. சக பத்திரிக்கைகளின் உதவியோடு பிரதமரை அணுகி பிச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது. எனினும், சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் கடப்பாடுதான் என்ன?

    இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி, சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன் மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர். 2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன்?
    அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே? சொல்லாமல் விட்டது ஏன்? உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே! உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்குக் கைமாறாக வேறு துறைக்குத் தலைவராக்கி விடுவார்கள். தங்களின் கல்வித் தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப் பயிலும் வாய்ப்பு பறி போய்விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே! அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன?

    மொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்குக் காவலனாகத் திகழவேண்டிய, அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையா? இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா?
    தமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசிய இந்து சங்கம், மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
    கையில் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது. இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும். ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள்.அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.

    நம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். தாய்த்தமிழைத் தூக்கிலிடும் தமிழ்த் துரோகிகளைத் தூக்கி எரிவோம். தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம்.அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம்!

    தாய்மொழித் தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா? இங்கே சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது. இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால், தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும்.

    தமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம். நமதுரிமையைக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்!

     

    Share
  • பணமூட்டை புகை மூட்டமானது

     

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

     

    சோற்றில் மண்ணைப் போடுதல்
    தர்மமாகுமா?
    காற்றில் விசத்தைக் கலத்தல்
    நீதியாகுமா?
    தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
    நல்லதாகுமா?
    மக்கள் தினம் அவதிபடுதல்
    மனிதநேயமா?
    நோய்கள் தாக்க வழிசெய்தல்
    இதயம் தாங்குமா?

    உலகெங்கும் உன் சொத்து
    மதிப்பே பல கோடி
    நாளெல்லாம் அதன் பேச்சு
    நிம்மதியோ ஓடிப்போச்சு!

    ஏழை சிறுகுப்பை எரித்தல்
    பெரும் குற்றம் நொடியில்
    நீதிதேவன் வாசலில் நிற்பான்
    கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
    காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
    தீ அணைப்பதற்கும் வானில்
    பணமழை பெய்யும் நீதிகேட்டால்
    முக்கியப் புள்ளிகளாம்
    மௌனமே பதிலாகும் என்றும்
    ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!

    மக்கள் அரசு நீதி காக்கும்
    பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
    பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
    புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
    காற்றாய்ப் பறந்து போகும்!

    இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித்தருவோம் மடமையில்
    எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    Share
  • வாழ்வை நேசிக்கும் வழியைத் தேடி…..

    அதிகரிக்கும் தற்கொலைகள்

    வாழ்வை நேசிக்கும் வழியைத் தேடி…..

    எஸ் வி வேணுகோபாலன்

    கடந்த ஓராண்டில் மட்டும் நமது நாட்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை எண்ணிக்கையில் பெண்களைப் போல் இரண்டு மடங்கு ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், ஒரு மணி நேரத்திற்கு 15 – அதாவது நாள் ஒன்றிற்கு 371 தற்கொலைகள் நிகழ்கின்றன என்று சொல்கிறது. இதில் கூடுதல் வருத்தம் என்னவெனில், இந்தப் புள்ளிவிவரத்திலும் தமிழகம் (16,927) முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (16,112), மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் (இரண்டிலும் 14,328) ஆகியவை அடுத்த இடங்களில் வருபவை. நகரங்களை வைத்துப் பார்க்கையிலும் நமது சென்னை மாநகரம் தான் முதலாவதாக இருக்கிறது. சென்னையில் 2,183 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்த நகரம் பெங்களூரு (1989) என்பதும் நோக்கத் தகுந்தது.

    எண்ணிக்கையை விட வேறு சில கோணங்களில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் சமூக அக்கறை கொண்டுள்ளோர் கவனத்தைக் கோருகிறது. இந்த எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு தற்கொலை, இல்லத்தரசிகள் செய்துகொண்டது. ஆண்களைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கு சமூக-பொருளாதார பிரச்சனைகள் அதிக காரணம் என்றால், தனிப்பட்ட துயரங்களும், உளவியல் பிரச்சனைகளும் பெண்களின் தற்கொலைக்கு அதிக காரணிகளாக இருந்திருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டோரில் 70.3 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.

    2002ம் ஆண்டுக்குப் பிறகு தற்கொலை எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் தான் இருந்து வருகிறது. 2011ல் 1,35,585 பேர் என்கிறது ஆவணக் காப்பகத்தின் விவரம். தொடர்ந்து அதிகமான தற்கொலைகள் நடக்கும் சில மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது.

    ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் விவரங்களைக் கடந்தும் சில அம்சங்களை நோக்க வேண்டியிருக்கிறது. அண்மைக் காலமாக குடும்ப பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள் அல்லது கடன் தொல்லைகள் காரணமாக தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கும் மனிதர்கள் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையும் இல்லாது செய்துவிடுவதை அதிர்ச்சியோடு பார்க்கிறோம். தாள மாட்டாத நெருக்கடி காரணமாக குடும்ப மொத்தமும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையோ, குழந்தை குட்டிகள், மனைவி ஆகியோர் கணக்கையும் தீர்த்துவிட்டுத் தாங்கள் பிறகு தங்களது வாழ்வை முடித்துக் கொள்ளும் சில மனிதர்களது விவரங்களையோ நாளேடுகள் விரிவாக வெளியிடுகின்றன.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில், காதல் தோல்வி – தேர்வில் தோல்வி ஆகிய காரணங்கள் கூடுதலாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு அப்பால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள், தவறான சேர்க்கை உள்ளிட்ட காரணங்களும் தற்கொலைக்கு இட்டுச் சென்றுள்ளன. தனிமை, கவனிப்பாரற்ற உளவியல் சுமை, பொருளாதார பாதுகாப்பின்மை போன்றவை காரணமாக தமது வாழ்வை முடித்தக் கொண்ட முதியோர் எண்ணிக்கையும் இந்தப் புள்ளிவிவரத்தில் கவலை அளிக்கிறது. நீண்ட கால நோயின் தவிப்பு தாளாமல் நிகழ்ந்த தற்கொலை குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன.

    தற்கொலை என்பது அவரவர் பலவீனம், தனிப்பட்ட விஷயம், இவற்றை எல்லாம் எதற்கு விவாதித்துக் கொண்டு..என்று நாம் கடந்து போய்விடமுடியாது. தனிப்பட்ட விஷயம் போன்று மேலாகத் தோற்றம் அளிப்பவை பலவும் சமூக ரீதியில் உள்ளான காரணங்களைக் கொண்டிருப்பவை.

    பொருளாதார சுமைகள், கடன்கள், வறுமை, பசி, பட்டினி போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கையில், இவற்றைத் தனிப்பட்ட விஷயமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? உடைந்து போகும் திருமண உறவுகள், குலைந்து போகும் பரஸ்பர நம்பிக்கை, தொடர்பற்று வாழும் சுவாரசியமற்ற வாழ்க்கை ஆகியவற்றை எப்படி எங்கோ ஒன்றிரண்டு நடப்பதாகப் புரிந்து கொள்ள முடியும் ?

    வளர்ச்சி, வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் அளந்து விட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வளர்ச்சி சீரானது அல்ல என்பதையும், அந்தச் சித்திரத்திற்குள் அடங்காதவர்களது எண்ணிக்கைதான் அதிகம் என்பதையும் நாம் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. பெருகிவரும் ஏற்றத் தாழ்வுகள், ஊதியத்திடையே நிலவும் வேறுபாடு பெரும் பள்ளமாக ஆகிக் கொண்டிருப்பது, நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நடக்கும் அன்றாட வாழ்க்கை இதன் ஒரு மோசமான பிரதிபலிப்பு தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

    எதிர்ப்புச் சக்தி அற்று வளரும் அடுத்தடுத்த தலைமுறையினர் பெரும்பாலும் தோல்வி ருசி அறியாது வாழப் பழக்கப் பட்டிருக்கின்றனர். சின்ன சறுக்கல், சிறு ஏமாற்றம் எதையும் அவர்களால் பொறுத்திட முடிவதில்லை. ஒரு கதவு மூடினால், நூறு கதவுகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுள் வேர் விடுவதில்லை. உரையாடலுக்கு வழியற்ற எந்திரத்தனமான சூழல் பள்ளிப் பிள்ளைகளைக் கூட காவு வாங்கிவிடுகிறது.

    மிக எளிதில் முறிந்து விழும் உள்ளங்கள் பரஸ்பரம் தங்களது சுமையை இறக்கி வைத்துக் கொள்ளக் கூட நட்பு வட்டம் உருவாக்கிக்க் கொள்வதில்லை. தங்களது ஒற்றை வழி சிந்தனை முட்டுச் சந்தில் போய் மோதிக் கொள்ளும்போது அவர்களால் நின்று நிதானித்து சிந்திக்கக் கூட முடியாத அளவு ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கிறது அவர்களது எண்ண ஓட்டங்கள். யாரையோ பழி வாங்கவோ, யாருக்கோ பாடம் கற்றுக் கொடுக்கவோ, யாரிடமிருந்தோ நிரந்தரமாக தப்பித்துச் செல்லவோ அவர்கள் தற்கொலையின் குகைக் கதவை சிரமம் எடுத்து நெம்பித் திறக்கின்றனர். மீட்சியற்ற சோர்வு மன நிலையின் வேதனை முனை அது.

    எப்படியும் தாம் மட்டும் வெற்றி பெற்று விட முடியும் என்ற போலிக் கனவுகளை நவீன தாராளமயம் உற்பத்தி செய்து தருகிறது. குறுக்கு வழி தடங்களில் வண்டியை இயக்கப் பயிற்றுவிக்கிறது. போட்டி மனப்பான்மை, வெறியூட்டும் பந்தய இலக்குகள், மாய மான் துரத்தும் வேட்கை இவற்றின் போதையில் ஆழ்ந்துவிடும் மனிதர்கள் அந்த நம்பிக்கை நூலேணியின் இழைகள் இற்று அறுந்துவிடும்போது பள்ளத்தாக்கில் போய் விழ நேருகிறது. தற்கொலை உணர்வு அவர்களது மேசையில் எப்போதும் அருந்துவதற்குத் தயார் நிலையில் மூடியைத் திறந்து வைத்திருக்கும் பானமாகக் காத்திருக்கிறது.

    தவறான உறவுகளோடு குற்ற உணர்வும் சேர்ந்தே வளர்கிறது. அதன் நீட்சி தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளில் சிக்கிவிடும்போது கொலைகளும், தற்கொலைகளுமே அதிலிருந்து வெளியேறும் ஒரே வழி என்று ஆகிவிடும் அபாயம் நேர்கிறது.

    மனித மனங்களை ஆட்டிப் படைப்பது தற்கால சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்கள் என்பதை ஒரு வரியில் இப்படி சொல்லி முடித்துவிட முடியாது. பெருத்த விவாதங்களுக்கான கருப் பொருள் இந்த ஒற்றை வரியில் அடங்கியிருக்கிறது. தற்கொலை புள்ளிவிவரங்கள் மிகப் பெரும் படிப்பினையாக நமது வாசலில் வந்து நிற்கின்றன. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளின் கதி, காசு உள்ளவர்க்கே இவை என்ற உயரத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நெறியோடு வாழ விரும்புவோரும் சரி, நெறியற்ற முறையில் எப்படியாவது இலட்சியக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்று துடிப்போரும் சரி தடுக்கி வீழ்ந்து விடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது சிரம் சாத்தியமானது. கொள்கை மாற்றங்கள் நிகழாமல், வாழ்க்கையின் போக்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாது.

    தளர்ந்து விடாத உள்ளங்களை ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி ஏற்படுத்தி விட முடியாது. ஆனால் ஊடகங்கள், அரசு நிறுவனங்கள், ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்கொலை எண்ணிக்கையைக் குறைக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை சிந்திக்க முடியும். தற்கொலை உணர்வுகளுக்கு எதிரான போராட்டத்தை பல நிலைகளில் நின்று நடத்த வேண்டியிருக்கிறது.

    புன்னகை தவழும் முகங்களை சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமூகம் செயற்கையாகக் கூட உருவாக்க முடியாது. வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை, கூட்டான வாழ்க்கை முறைமையில் ஈடுபாடு, பரஸ்பர கருத்து பகிர்வு, பரந்து நேசிக்கும் தோழமை உணர்வு இவற்றைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் முற்போக்காளர்களது முன்னுரிமைப் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. இசை தவழும் இதயங்கள், இசைவான சமூக சூழல், இனிமை பொங்கும் நேய உணர்வுகள் ஆகியவை பெருகும் உலகில் மரணங்கள் வலியின்றியும், இயல்பாகவும் நேரும்.

    ****************

    நன்றி : தீக்கதிர்

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 15

    குன்றக்குடி அடிகள்

    15. கற்புக்கடம் பூண்ட வாழ்க்கை

    காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

    காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில் நம்பிக்கையும் நல்லெண்ங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள்; மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால் நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

    “செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க்கு உரை”

    என்பது வள்ளுவம்.

    ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்க முடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பென்னும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

     
    ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share