Blog

  • அன்பே அழகானது – 5

    ராஜ்ப்ரியன்

    மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும்.

    உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

    என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

    நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

    ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

    ம்.

    வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

    நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

    உங்களுக்கு எதுக்கு சிரமம்.

    இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

    ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

    திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

    எங்க போறிங்க ?.

    லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

    ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

    ஓஹே.

    இவுங்க யார் டீச்சர் ?.

    நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

    சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

    சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

    வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

    குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

    ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

    அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

    பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

    எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

    பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

    நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

    பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

    வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

    என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

    அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

    பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

    அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

    வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

    வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

    ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

    முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

    ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

    நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

    ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

    ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

    ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

    பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

    இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான்.

    மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

    சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான்.

    டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

    யாருக்கு பாஸ்.

    உனக்குதான்யா

    நான் குழந்தை பாஸ்.

    டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.

    உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

    கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

    உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

    எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

    ஃபோர் அடிக்குதுப்பா.

    சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

    தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

    மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

    எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

    நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

    ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

    இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

    உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

    நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

    கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

    மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

    என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

    வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

    கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

    ம்.

    இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

    அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

    டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

    கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

    டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

    தொடரும்……………..

    Share
  • இவ்விடம் கல் உடைக்கப்படும்; செங்கல், ஜல்லி, மற்றும் கிட்னிக்கல்

     

    – டாக்டர் அல்கேட்ஸ்


    stock-illustration-7915155-medical-symbol-with-snakes-wings-and-skullநமது கிளினிக்கில் பிஸியான ஒரு மாலைப்பொழுது…

    நர்ஸ் 30 ஈ அடித்திருந்தார். நான் ஈ அடிப்பதா?? என் கௌரவம் என்னாவரது. அதனால் கொசு அடித்துக் கொண்டிருந்தேன். 18…….19……

    ”வணக்கம் ஐயா”

    ஐயாவா? சரி அரசியல் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியதான்.

    ”ஹிஹி வணக்கம், வணக்கம். வாங்க, வாங்க. உக்காருங்க. நீங்களும் உக்காருங்க மேடம்”. தம்பி அல்கேட்சு. ரொம்ப கொழயாத. நீ ஆளில்லாம கொசு அடிக்கிறது தெரிஞ்சிட போவுது.

    “ஐயா, என்னோட பேரு சிக்குன சடை. நீங்கள் நலமா, உங்க குடும்ப அன்பர்கள் நலமா? உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு?”ன்னார்.

    ”பரவாயில்ல சார். எனக்கு தான் அப்பப்போ லைட்டா முதுகு வலி வருது. கொஞசம் செரிமானமும் சரியில்ல”. (டேய் அல்கேட்ஸ்! நம்மளை பேக்ஷண்ட் ஆக்கிட்டு அவரு டாக்டர் ஆகப் பாக்குறாரு. சுதாரி…)

    ”க்கூம்.. என்ன ப்ராப்ளம்?”ன்னேன்.

    “ஐயா, எனக்கு பின் இடுப்புல வலி. பின்னாடிலேந்து முன்னாடி வருது”.

    வரக் கூடாதே…..”எத்தன நாளா?”

    “மூனு நாளுங்க”

    கீழ் முதுகை அழுத்தி, “இங்க வலிக்குதா?”

    “ஆஆ. ஆமாய்யா. நீங்க அழுத்தும் போது அதிகமாவுது”.

    ”ஒகே. இந்த வலி எங்கயாவது பரவுதா?”

    ”ஆமா. அப்படியே முன்னால வந்து விரை வரையும் பரவுது”. (தயவு செஞ்சு படிக்கிறத நிறுத்தாதீங்க. வல்காரிட்டி கிடையாது. இது பல பேருக்கு, உண்மையாக இருக்கும் பிரச்சினை. பேக்ஷண்ட்ஸ் அப்படித் தான் சொல்லுவாங்க. வலி அவங்கவங்களுக்கு வந்தா தானே தெரியும்).

    அப்படியா, சரி தான்.

    “ஒகே. உங்களுக்கு கிட்னில கல்லு இருக்கு”.

    அவர், வீட்டுக்காரங்களைப் பாத்து, “பாத்தியாடி. பக்கத்து வீட்டுல, இவரை சொப்ப மருத்துவர்ன்னு சொன்னாங்களே. கரெக்டா கண்டுபுடிச்சிட்டாரு பாரு” ன்னார், என்னிடம், “மிகச் சரியாக கண்டு புடிச்சிட்டீங்க மருத்துவரே”.

    “ஒ. அப்ப இது முன்னாடியே தெரியுமா?”

    “இதுக்கு முன்னாடி, 3 சிறுநீர் குழாய் மருத்துவர்களோட கருத்தும் இதே தானய்யா”

    ”3  யூராலஜிஸ்ட்டா? அப்போ இந்த ப்ராப்ளம் ரொம்ப நாளா இருக்கா?”

    “4 வருக்ஷமாக ஐயா”.

    இதுல ’ஐயா’ வேற. ஓ. அவரா இவரு??? தமிழ் சகளை!! வியாதிய புதுசா கண்டுபிடிச்சு பேர் வாங்கலாம்னா, நம்ம கரெக்டா கண்டுபிடிக்கிறோமான்னு டெஸ்டிங் பண்றாரே. இன்னிக்கு அம்பது ருவா கொடுக்குறத்துக்கு ஒரு மணி நேரம் பில்டப் போட்டு பேசப் போறார், சரி கடமைய செய்வோம்.

    “ஒகேங்க சார். நாலு வருக்ஷமா கிட்னில கல்லு. என்ன ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கீங்க?”

    “மொதல்ல, சின்ன வாளி ஊர்ல, மருத்துவர் நரிமூலத்துக்கிட்ட பாத்தேன். அவர் தான் சிறுநீரகக் கல்னு கண்டுபுடிச்சார், அவரு மாத்திரையும் தண்ணி மருந்தும் குடுத்தார். தக்காளிய வெதய நீக்குன பின்னாடி தான் சாப்பிடணும்னார்”

    “ஈஙு. நரிமூலமா? சின்ன வாளி டவுன்ல பெரிய யூராலஜிஸ்ட் ஆச்சே”.

    ”ஆமா, ஆனா அவரு மருந்து கொடுத்து சரியாவல. அப்புறம் மருத்துவர் சின்னத்தூள் கிட்ட காமிச்சேன். அவரு, 5 பாட்டில் உப்புத்தண்ணி (ஸலைன்) ஏத்தி, வேகமா ஒன்னுக்கு வர ஊசி போட்டார். முட்டிக்கிட்டு சிறுநீர் கழிச்சா கல்லு அடிச்சிக்கிட்டு வெளியேறும்னாரு, வெளியேறல. அப்புறம் மாத்திரையும், தண்ணி மருந்தும் கொடுத்தார்.”

    “கரெக்ட். ஸலைன் ட்ரீட்மெண்ட். அதான் அடுத்த ஸ்டெப். திரும்ப அவருக்கிட்ட போனீங்களா?”

    “இல்லய்யா, சரியாவலயே! அதனால மாத்திட்டேன். அப்புறம் மதிப்பிற்குறிய, மருத்துவர் வெட்டி சிலந்திய பாத்தேன்.”

    “ஈஙு. சிலந்தியா? அய்யோ, அவரு தமிழ்நாட்லயே ஃபேமஸ் யூராலஜிஸ்ட் ஆச்சே”. இவரு எதுக்கு என்க்கிட்ட வந்துருக்கார்? வீட்ல பொழுது போகலன்னு பேச வந்திருக்காரா?

    ”சிறுநீரகக் கல்லு பெருசா இருக்கு, மருந்துல கரையாது”ன்னார்.

    ”ஆமா. 5 மில்லிமீட்டர் சைஸ் கல்லு தான் மருந்தில கரையும். அதுக்கு மேல இருந்தா கரையாது”

    ”ஆமா. அதுக்கு ஒரு வைத்தியம் பண்ணனும்னார்”.

    ”என்ன வைத்தியம்?”

    அவர், வீட்டுக்காரங்கள மொறச்சார். “துணைவி வெளுத்த தேங்காய், அந்த வைத்தியத்த சொல்லு”

    அவங்க, “லித்தோட்ரிப்ஸி பண்ணனும்னு சொன்னார் சார். லித்தோட்ரிப்ஸிக்கு தமிழ் கெடயாது பாருங்க. அதான் என்னைச் சொல்ல சொன்னார்”.

    சரி தான், ஐயாவுக்கு மொழிப் பற்று முத்திப்போச்சு போல.

    அவர், ”நன்றி துணைவி. ஆனா அப்போ பணம் இல்லாததினால, முடியாதுய்யானேன். அப்புறம் மாத்திரையும் தண்ணி மருந்தும் எழுதிக் கொடுத்தார்.”

    அலுப்புடன், ”வேற என்ன சொன்னார்?”னேன்.

    “பால் சாப்பிடாதீங்க, சுண்ணாம்புச் சத்து சேந்தா கல்லு பெரிசாயிடும், அதனால தேநீரும், கொட்டை வடிநீரும் குடிக்கச் சொன்னார். அடப்போங்கையா! தமிழ் கோட்பாடுல, அதெல்லாம் அந்நியரோடது. நான் சாப்பிடுறதே பால், சோறு, காய்கறிகளின்னால சமையல், கவுச்சி, முட்டை தான். அந்நிய பொருளை தொடுறது இல்ல. நாம என்ன அவன்களுக்கு அடிமையா?”ன்னு சூடாயிட்டார்.

    ஆமா, இதெல்லாம் பேசுங்க. வைத்தியத்துக்கு மட்டும் இங்கிலீக்ஷ் டாக்டர்ட்ட வந்து, வெள்ளக்காரன் கண்டுபுடிச்ச மாத்திரையா முழுங்குங்க. அய்யோ, இன்னிக்குப் பாத்து ஆறு பேர் வந்துருக்காங்களே. முந்நூறு ருவா. சீக்கிரம் முடிடா அல்.

    ”சரி சார், ஆறு மில்லிமீட்டர் கல்லுனு பழைய ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது. அதுவும் கிட்னில இல்ல. யூரேட்டர்ல இருக்கு. அதாவது கிட்னிலேந்து நீர் வெளியேருற குழாய்ல சிக்கி இருக்கு. அதான் வலி பரவுது. லித்தோட்ரிப்ஸி தான் கடைசி ஆப்க்ஷன்”

    ”அப்படியா மருத்துவர் அவர்களே!”

    பேரு கெட்டாலும் பரவால்ல, இவர அடிடா அல்கேட்சு, ஏதோ கட்சி மீட்டிங் மாதிரி பேசுறாரு.

    “ஆமா சார். வேற வழியில்ல. கல்லு பெரிசாயிடிச்சி. எறங்கிடிச்சி வேற. இன்னும் எறங்குச்சுனா வலி ஜாஸ்தியாயிடும், யூரின்ல ப்ளட் கூட வரலாம்”

    “நானும் பாத்து பாத்து அலுத்துட்டேன் ஐயா. அந்த சிகிச்சை பண்ணிக்குறேன்”.

    ”ரைட்”. நான் ஃபோனை டயல் பண்ணி, நம்ம சிட்டில பெரியாளான ஈஙு.யானை முடிக்கு பேசினேன், “சார், குட் ஈவினிங் சார், நான் அல்கேட்ஸ் பேசுறேன். நம்ம வண்டிய நாளைக்கு சாயங்காலம், ஒரு ஆறரை மணிக்கு அணுப்பிடுங்க. ஆமா சார். எறங்கிடிச்சி, 6 மில்லிமீட்டர். உடைக்கணும். வண்டி சர்வீஸ் ஆயிடிச்சில்ல? ஒகே சார். அனுப்பிடுங்க”ன்னேன்.

    சிக்குன சடை பேயறஞ்ச மாதிரி ஆயிட்டார். “என்ன வண்டி சார்?”

    ”சாரா? நான், ’ஐயா’வாக்கும். நாளைக்கு ஆறரைக்கு உங்க கல்லை ஒடைக்கிறோம். கத்தியில்லாம, ரத்தமில்லாம, வலி இல்லாம. 20,000 கொண்டாந்திடுங்க”.

    பயத்துடன், “அப்படியா, சரிங்கையா”

    “தம்பி, பாத்து ரிவர்ஸ் எடு. சாக்கடைல வுட்றப் போற”ன்னு மெடிக்கல க்ஷாப் ஒனர் வண்டிய கைடு பண்ணினார்.

    நான், “மிஸ்டர் சிக்குன சடை, தமிழய்யா, இங்க வாங்க”

    அவர் நடுங்கிக் கொண்டே வந்தார். “குட் ஈவினிங் சார், என்ன பெரிய பஸ் ஒன்னு வந்திருக்கு?”

    “சார். லித்தோட்ரிப்ஸி ஒரு கோடி ருபா மிக்ஷின். எல்லாராலையும் வாங்க முடியாது. பேக்ஷண்ட்ஸ் அங்க ஒன்னு இங்கொன்னுன்னு தான் இருப்பாங்க. ஈஙு. யானை முடி, ஒரு ஐடியா பண்ணி, லோன் போட்டு, இந்த மெக்ஷினை வாங்கி, ஒரு பஸ்சுக்குள்ள அடைச்சிட்டார். இதுக்காக ஒரு பில்டிங் கட்ட வேணாம் பாருங்க. எங்க வேணுன்னாலும் எடுத்துக் கிட்டு போலாம். நம்மள மாதிரி, சிட்டிக்கு வெளியே இருக்குற இடத்துக்கும் போய் ஈஸியா கல்லு உடைக்கலாம். இது புடிக்கலைன்னா, நீங்க 15 கிலோ மீட்டர் போய், அழி ரப்பர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிடுங்க. நாலு நாள் அட்மிக்ஷன், டோட்டலா 60,000 வரும். என்ன இங்க பண்ணலாமா? இல்ல அழி ரப்பருக்கு போறீங்களா?”

    அவர் கன்வின்ஸ் ஆகி, பஸ் கிட்ட போனார்.

    “கல் ஒடைக்கிறதுல்லாம் ஏறு”. அடப்பாவி, மெக்ஷின் டெக்னீக்ஷியன், கண்டக்டர் லெவலுக்கு கூவறானே!!

    “தம்பி, எனக்கு கல்லு ஒடைக்கணும்”.

    “டிக்கட், ச்சி, டாக்டரோட சீட்டு இருக்கா?”ன்னான்.

    “இங்க பாரு, ஈஙு.அல்கேட்ஸ் சீட்டு”

    ”சரி,  உள்ள ஏறிப் படுங்க”

    உள்ளே…

    “சார். அந்த பெட்ல இருக்குற வளையத்துல இடுப்ப வச்சிப் படுங்க, அதுல போய் தலை வச்சிப்படுத்துருக்கீங்க? அப்புறம் மூளைக் கல்லு தான் உடையும். ஹாஹாஹா”

    “சரி தம்பி”

    ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக்

    “ஒகே சார், நீங்க போவலாம்”

    அவர் என்னிடம் வந்து, “சார், கல்ல ஒடைச்சாச்சா, எனக்கு ஒன்னும் தெரியலயியே”

    “இப்ப தெரியாது. நாளைக்கு, கல்லு பொடிப்பொடியா வெளியே வரும்”

    “எப்படி?”

    “சார், உங்களுக்கு என்ன தொண்டைலயா கல்லு? சிவலிங்கம் மாதிரி வாயிலேந்து வர… கிட்னிக் கல்லு சார். இத்தன நேரம் அது அல்ட்ரா சவுண்ட் வேவ்ல பொடியாகியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா யூரின்ல ஃபுல்லா வெளியேரும்”.

    “அப்படியா அய்யா, மிக்க நன்றி”

    ஐயா திரும்ப வந்திடிச்சா? பிரச்சினை இல்லாதப்போ இப்படி பேசுறாரு. சொந்தமா ஒரு பிரச்சினைனோனையும், கொள்கையெல்லாம் காத்துல பறந்துடுது. பிரச்சினை போன உடனே, பழய புத்தி உடனே வந்திடுதே.

    “சரி, சிஸ்டர் வெளிய இருக்காங்க. 20,000 குடுத்துட்டு கெளம்புங்க. ஆல் தி பெஸ்ட்”

    “சரி ஐயா”ன்னு போயிட்டாங்க.

    ஈஙு. யானைமுடிக் கிட்ட சொல்லி, “கிட்னிக் கல்: புதைந்திருக்கும் பொக்கிக்ஷம்” புக்க வாங்கித் தர சொல்லணும். இவ்ளோ பேக்ஷண்ட் அனுப்பி இருக்கேனே.

    “சார், சார் சார்”, அந்த டெக்னீக்ஷியன் ஒடி வந்தார்.

    “என்னயா?”

    “சார், அவருக்கு பண்ணும் போது மிக்ஷின் ரிப்பேர் ஆகி, ஃப்ரீக்குவென்ஸி ஜாஸ்தியாயிடிச்சி. சுத்தி உள்ள சில கல்லும் ஒடஞ்சிருக்கும்”.

    நான் சுத்திமுத்திப் பாத்தேன், “அடப்பாவி, என் மார்பிள் புள்ளையார் எங்கயா?”

    அவன் மேஜை மேலிருந்த மண்ணைக்காட்டி, “தோ இருக்கு சார்”ன்னான்.

    அடுத்த நாள், தமிழய்யா, சிக்குன சடை வந்திருந்தார்.

    “வாங்க, உக்காருங்க, இப்ப எப்படி இருக்கு?”

    “சார். நான் ஜெம்ஸ் அண்ட் ஜீவல்சில், ஜாதகத்தை குடுத்து, சஃபையர் மோதிரம் வாங்கினேன். இப்போ மோதிரம் இருக்கு, சஃபையரைக் காணல”.

    என்ன பண்றது, சரி சமாளிப்போம். நான், “ஐயா, சஃபையர் என்பது நம்மை பன்நெடுங்காலமாக, பரங்கியர் நம்மை அடிமைப்படுத்த உண்டாக்கிய சொல். வைர, வைடூரியம், மரகதப் பச்சை இருக்கும் போது, உமக்கு ஏனையா ஆங்கில சஃபையர் மோகம்?”ன்னு ஒரு போடு போட்டேன்.

    சட்டுனு சுதாரிச்சு, “ஆம் ஐயா. இருந்தாலும், அது விலை அதிகமாச்சே?”

    “ஐயா, நீங்கள் ’தமிழ் தமிழ்’ என கூறுகிறீர்கள், ஆனால் தங்கள் மனதின் அடியாழத்தில் ஆங்கில மனோபாவம் புதைந்திருக்கிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

    ”அது வந்து, கல்லு வெல ஜாஸ்தி…..”

    “சபையர். அதாவது போட்டுக் கொள்பவரை, ’சப்பை’ யர் ஆக்கி விடுகிறது”. மேலே பாத்து, “அம்மா மாரி, என்று தான் நீ உண்மையான தமிழனுக்கு நல்வழிக் காட்டப் போகிறாயோ?”

    “அது வந்து….”னு அவர் அப்படியே போயிட்டார். நான் வேர்வையை துடைத்துக் கொண்டேன்.

    3 வருக்ஷம் கழிச்சு….

    “ஈஙு. யானைமுடி சார். ஈஙு. அல்கேட்ஸ் பேசறேன். எனக்கு கிட்னில கல்லு. 7மிமீ, ஒடைக்கணும்”.

    “அட நீங்க எவ்ளோ பேர் அனுப்பிருக்கீங்க. உங்களுக்கு ஃபீஸ் கம்மி தான்”

    “தாங்க்ஸ் சார்”

    “அக்கவுண்ட் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ல, 43,000 ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. லாரி, ச்சீ, எக்யூப்மெண்ட் வீடு தேடி வரும்”.

    “சார், அல்மோஸ்ட் 30 பேக்ஷண்ட் அனுப்பியிருக்கேன், 43,000மா?”

    “புரியாம பேசாதீங்க அல்கேட்ஸ். விலை வாசி, டீசல் வெல ஏறிப்போச்சு. அழி ரப்பர் ஹாஸ்ப்பிட்டல் போய்ப் பாருங்க, 1,40,000 ஆகும். எப்படி வசதி?”

    “வண்டிய அனுப்புங்க சார்”

    டெக்னீக்ஷியன், “சார், ஃப்ரிக்குவென்சி கம்மியாயிடிச்சி, கல்லு ஒடஞ்சிருக்காது”

    “யோவ். கல்ல ஒடைக்கல, ஒன்ன ஜெயில்ல களி திங்க வெச்சுருவேன். சொளையா 43,000 கொடுத்திருக்கேன். ஒட மொதல்ல”

    ட்ரிங்க் டிக் ட்ரிங்க் டிக் ட்ரிங்ங்ங்ங்….. டகடும் டகடும் கொய்ங்ங்ங்…

    டகடும் கொய்ங்கா? வித்தியாசமா இருக்கு?

    “சார், உங்க வீட்டை ஒடச்சிட்டோம். ஸாரி”

    ஒருத்தர் வந்தாரு, ”வணக்கம் சார்”

    “வாங்க ஒக்காருங்க” னேன். சோகமாக, வீடு போச்சே….

    “சார், நான் முன்னாடி வைர யாவாரம் பாத்துக்கிட்டுருந்தேன். அப்புறம் ஒரு கன்ஸைன்மெண்ட்டுல தண்ணி பூந்த வைரமா அனுப்பிட்டாங்க. நொடிச்சு போச்சு. இப்ப தான் பழைய லாரி வாங்கி ஜல்லி லோடு அடிக்கிறேன்”.

    இவரு பேக்ஷண்ட் இல்லயா, “ஒகே”

    “நேத்திக்கு உங்க வீட்டு முன்னாடி ஒரு வண்டியப் பாத்தேன். ஏதோ கல்லு உடைக்கிறதுனு பேசிக்கிட்டாங்க. சார். அதான் நம்ம ஒரு பிஸினஸ் பேசலாம்னு வந்தேன். நம்மக் கிட்ட பாறை 8 டன் இருக்கு. அத 6ஙிஙி க்கு ஒடைக்க எவ்ளோ ஆகும்”

    ”ஹலோ ஒரு கல்லு உடைக்க 43,000 ருவா”

    அவரு அதிர்ச்சியாகி, “அப்படி என்ன கல்லு சார்?”

    ”கிட்னிக் கல்லு. உடம்புல கிட்னிக் கல்லு, பித்தப் பை கல்லுனு நெறய இருக்கு. இங்க பாருங்க”ன்னு என் கிட்ட இருந்த சில பித்தப் பை கல்லைக் காட்டினேன். ”நீங்களே வெச்சுக்குங்க”.

    5 வருக்ஷம் கழிச்சு,

    கிளினிக் வாசலில் ஒரு பி.எம்.டபிள்யு கார் வந்துது.

    பார்றா. நம்ம கைராசிக்கு பெரிய ஆளுங்கல்லாம் வராங்க….

    ஒருத்தர் அப்படியே பளபளன்னு வராரு. அப்படியே தகதகங்குது.

    “வணக்கம் சார், உக்காருங்க”ன்னேன்.

    “சார் என்ன தெரியலியா, நான் தான் ஜல்லி லாரி டிரைவர்”

    “யாரு……..?”

    “நீங்க அன்னிக்கு கல்லு கொடுத்தீங்கல்ல? அதக் கொண்டு போய் ஒரு சேட்டு கிட்ட காட்டினேன். அவரு இது என்னா பளபளன்னு இருக்கு. பல க்ஷேப்லையும் இருக்குன்னு பாத்தார். யானை, கூஜா, மான் கொம்பு மாதிரி. அப்புறம் கண்டு புடிச்சேன். இது முத்து மாதிரி. உடம்புக்குள்ளே இருந்துட்டு இருக்கிற முத்து. அப்புறம் எல்லா ஆஸ்பத்திரிக்கும் போயி அங்க கிட்னிக் கல்லு, பித்தப்பைக் கல்லு ஆபரேக்ஷன் நடக்கும் போது கல்லை வாங்கியாந்துடுவேன். இப்போ லண்டன்ல இருக்குற, இண்டர்நேக்ஷனல் ரேர் ஸ்டோன்ஸ் மியூசியத்துல கூட நம்ம கல்லு நாலு இருக்கு. ஸ்டோன் கலெக்ட்டர்ஸ் நல்ல ரேட்டு குடுத்து வாங்கிப்பாங்க. நம்ம ஹெட் ஆபிஸ் ஜுரிச்ல. எல்லாம் உங்கள்ட்டேந்து ஆரம்பிச்சது. புது வீடு கட்டியாச்சா? வரேன் சார்”.

     

    Share
  • நினைவுகள் !!!

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏடெடுத்து எழுதி வைக்க

    எத்துனையோ நினைவுகளுண்டு !!!

    நினைவுகளை எல்லாம்

    வண்ண மலர்ச்சரமாக்கி

    அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்

    இலயித்திருக்க பொழுதேது ???

     

     

    காற்றினில் கலந்து வந்து

    நாசியில் படிந்திடும் – மலரின்

    நறுமணம் போல்

    நினைவலைகளில் கலந்து வந்து

    நெஞ்சமதில் இனித்திடும்

    இனிய  இன்ப நினைவுகள் !!!

     

     

    கதிரவனின் ஒளி பட்டு

    மெல்ல விலகி   ஓடும்

    பனித்திரை என – உள்ளமதில்

    படிந்த  துன்பச் சுவடுகளை

    துடைத்தெறியும் பேரலையென

    மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!

     

     

    மலரும்  நினைவுகளால்

    மனதினில் உருவாகுமோர்

    மகிழ்ச்சி ஊற்று !  – அது

    இதழின் ஓரத்தில்

    கொண்டு  வருமே

    அழகானதோர்  புன்னகை கீற்று !!!

     

     

    நினைவுகள் – அவை தாம்

    ஆகுமே உள்ளக் காயங்கட்கு

    நல்லதோர் அருமருந்தாய் !!

    அவையும் தான் வருடுமே

    துடித்த தவித்த உள்ளங்களை

    மென்மையான மயிலிறகாய் !!!

     

     

    Share
  • வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் …

    தேமொழி

     

    “சாந்தி…சாந்தி…இதப்பாரு கதவத் திற… சாந்தீ …”

    என்ன இந்தப்பொண்ணு இப்படி செய்யறா? என்று எண்ணிய ராஜத்திற்குச் சட்டென்று முகம் முழுவதும் சூடாகியது. தலைக்குள் வேகமாக ரத்தம் பாய்வது போன்ற உணர்ச்சி வந்தது. இன்னமும் தனது மருமகள் சாந்தி செய்த செய்கையின் தீவிரம் புரிய ஆரம்பிக்கவில்லை ராஜத்திற்கு. ஒரு உப்புப் பெறாத விவகாரத்திற்கு அந்த விவாதம் தொடங்கியது. உண்மையிலேயே அது உப்புப் பெறாத விவகாரம்தான்.

    சென்ற ஆண்டு அந்த சிறிய ஊரின் கடைத்தெருவில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்த கணவர் வடிவேலு இறந்த பொழுது ராஜத்திற்கு அறுபத்தியிரண்டு வயது. அவர் ராஜத்தைவிட ஐந்து வயது மூத்தவர். சொந்தத் தாய்மாமன்தான். தாயற்ற பிள்ளையாக வளர்ந்த தனது அக்காவின் மகளான ராஜத்தைக் கைபிடித்தார்.

    ராஜத்தின் பள்ளிப் படிப்பு 11ஆம் வகுப்பு வரைதான். பதினாறு வயது ஆனதும் ஊரில் நல்ல சொத்து பத்தோடு இருந்த ராஜத்தின் தந்தை அவளை தனது மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்பொழுதும் வடிவேலுவிடம் இருந்தது அந்த ஒரு மருந்துக்கடைதான். அவருக்குப் பரம்பரையாக வந்த சொத்து அது. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று இறந்த மனைவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வடிவேலுவுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், அருமையாக செல்வச் செழிப்புடன் வளர்த்த தனது மகள் ராஜத்தை தன்னைப்போலவே வடிவேலுவாலும் அருமையாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ராஜத்தின் அப்பாவிற்கு சிறிதும் இல்லை.

    கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தனது மகளுக்கு முதல் குழந்தையாக அவரது பேரன் சந்திரன் பிறந்ததும் ஒரு நல்ல வீடாக வாங்கிக் கொடுத்தார். அதை தனது மருமகன் பேரிலும் எழுதி வைக்கவில்லை, தனது மகள் பேரிலும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு வடிவேலுவின் திறமையிலும் நம்பிக்கை இல்லை, சூட்டிகையாக இல்லை என்று அவர் கணித்திருந்த ராஜத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கணவன் ஏதாவது சிரமம் என்று கேட்டால் யோசிக்காமல் வீட்டை விற்க அனுமதித்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்பது அவர் எண்ணம். எனவே பேரன் பிறந்த கையோடு அவனது பெயரில் ஒரு வீடு வாங்கி எழுதி வைத்தார். பேரன் பெரியவனாகும் வரை யாரும் வீட்டை ஒன்றும் செய்ய முடியாது, பிறகு வளர்ந்து அவன் அம்மாவைக் காப்பாற்றுவான் என்பது அவர் தனது மகளுக்காகச் செய்த எதிர் காலத் திட்டம்.

    ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டுதான் ராஜம் தன் மருமகள் சாந்தியைக் கதவைத் திற என்று கெஞ்சிக் கொண்டிருதார். காலையில் குளித்து முடித்து, முடியைக் கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டு, முருகா என்று கை கூப்பி முருகனுக்கும், அருகிருந்த மறைந்த கணவரின் படத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திருநீரை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சமையலறைக்கு சாப்பிட வந்தார். நீரிழிவு நோய் வேறு படுத்துகிறது. வேளாவேளைக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்கு தலை சுற்றல் வந்துவிடுகிறது.

    ஒரு தட்டில் அடுப்பு மேடையில் இருந்த பாத்திரத்தில் இருந்து மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சட்னியையும் வைத்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். மருமகள் சாந்தி செய்த சமையல் அது. அவள் வாசலில் கீரையோ,காய்கறியோ வாங்கிக் கொண்டு பேரம் பேசும் சப்தம் கேட்டது. இரண்டு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன், சட்னியில் உப்பு இல்லை என்று தெரிந்து முகம் சுழித்தார்.

    பேசாமல் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கீரையுடன் உள்ளே வந்த சாந்தியிடம், “என்ன சாந்தி இது, நீ சட்னிக்கு உப்பு போடலையே”, என்றார். ஏதோ எரிச்சலில் இருந்த சாந்தி, “ஏன் உப்பில்லாவிட்டால் உங்களால் சாப்பிடமுடியாதா?” என்று எகத்தாளமாகக் கேட்டு விட்டுத் தட்டைப் பிடுங்கி பாத்திரம் விளக்கும் இடத்தில் தூக்கிப் போட்டாள்.

    இந்த அவமரியாதையில் அதிர்ச்சி அடைந்த ராஜம் திடுக்கிட்டு, “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு… ” என்று ஆரம்பிக்கவும், இடை மறித்தாள் சாந்தி.

    “எழுந்திரிங்க சொல்றேன்,” என்று அதட்டவும் மெதுவாக, ஒன்றும் புரியாமல் எழுந்தார். “இங்க வாங்க சொல்றேன்” என்று கையைப் பிடித்துத் தர தரவென்று வாசலுக்கு இழுத்துப் போய், “போங்க வெளியே” என்றாள்.

    “யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியே போகச் சொல்றே, இது என் வீடு, எங்க அப்பா எனக்கு கொடுத்த வீடு.”

    “இல்ல, இது என் வீடு, என் வீட்டுக்காரர் பேரில் இருக்கிற வீடு, அனுசரிச்சுப் போகத் தெரியலேன்னா போங்க வெளியே,” என்று சொல்லி ராஜத்தின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினாள். ராஜம் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்து, சாந்தி தள்ளியதில் நிலைத்தடுமாறி விழாமல் கம்பிக் கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாளித்தார்.

    அவர் கையைக் கம்பிக் கதவில் இருந்து விடுவித்து வெளியே தள்ளி, கம்பிக் கதவை மூடித் தாழ்ப்பாளில் ஒரு நவ்தால் பூட்டையும் போட்டு பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு சாந்தி உள்ளே சென்று விட்டாள்.

    கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ராஜம் அழைப்பு மணியை அழுத்தினார். மின்சாரம் இல்லாததால் அது வேலை செய்யவில்லை. அவமான உணர்வுடன் கண்ணில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருடன், “சாந்தி கொஞ்சம் கதவைத் திற” என்று குரலை உயர்த்தாமல் அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். அண்டை அயலில் யார் காதிலும் விழாமல் சாந்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் எப்படி அவளை அழைப்பது.

    கணவர் வடிவேலு உயிருடன் இருந்தவரை நன்றாகத்தான் ஓடியது. பெரியவன் சந்துருவிற்குப் பின், மீண்டும் ஒரு மகன் சங்கர், பிறகு ஆசை ஆசையாய் எதிர் பார்த்தது மாதிரி மகள் தேவி பிறந்தார்கள். அனைவரும் நன்கு படித்தனர். சந்துருவுக்கு  பக்கத்தில் ஐந்து ஊர் தள்ளி இருக்கும் பல்கலையில் பேராசிரியராக வேலை. திங்களன்று தொடர் வண்டி ஏறினால், அங்கேயே தங்கிவிட்டு வார இறுதிக்குத்தான் வீடு வருவான். சின்னவன் சங்கர் கணினி படித்துவிட்டு ஹைத்திராபாத்தில் வேலை, மகள் தேவிக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை அமைந்தது.

    சந்ருவிற்கு சொந்தத்தில் வடிவேலுவின் பலநாள் நண்பர் மகள் சாந்தியையே மணம் முடித்தார்கள். சாந்தியும் தன்னைப் போன்ற தாயில்லாப் பெண் என்பதால் ராஜத்திற்கு அவள் மீது என்றும் பரிவு உண்டு. சாந்தியின் திருமணத்தில் அவளுக்குப் போடுகிறேன் என்று வாக்கு கொடுத்த நகையைப் போட முடியாமல் போனது சாந்தியின் அப்பாவிற்கு. இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகியதில் திருமணத்திற்காக கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக, அடுத்த ஆண்டிற்குள் செய்து விடுகிறேன் என்று கூறித் தனது நெடுநாள் நண்பரிடம் கூனிக் குறுகினார்.

    அதைப் பற்றி இவர்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அடிக்கு மேல் அடியாக அவருக்கு மாரடைப்பு, மருத்துவமனைச் செலவு என்று தொடங்கி சம்பந்தி ஓராண்டிற்குள் உயிரையும் விட்டு விட்டார். சாந்தி குடும்பத்தின் சொத்தினைப் பங்கு போட்டுக் கொண்ட சகோதரர்களிடம் தந்தை தனக்குத் தருவதாகச் சொன்ன நகைகளைக் கொடுத்துவிட்டு பங்கு போட்டுக் கொள்ள சொல்லப் போவதாகச் சொன்னாள் சாந்தி.

    ஆனால் வடிவேலு தடுத்துவிட்டார். உனக்கு இருக்கும் சொந்தமே உன் அண்ணன்கள்தான். அவர்களுக்கேத் தெரிந்திருக்க வேண்டும் அவர்களது கடமையைப் பற்றி. அதை அவர்கள் மதிக்காத பொழுது சொத்து கேட்டு உறவை முறிக்காதே. அவர்கள் வரப் போக உனக்கும் உறவு என ஒருவர் இருக்க வேண்டும். உறவு முக்கியம். யாரும் இனி நகையைப் பற்றியோ சொத்தைப் பற்றியோ சாந்தியிடம் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்.

    அவரது பெருந்தன்மை நினைவுக்கு வந்து கண் கலங்கியது ராஜத்திற்கு. மருமகள் மாதிரியா வைத்திருந்தோம் அவளை என்று எண்ணியவாறு மீண்டும் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். ஆள் அரவமே இல்லை. எவ்வளவு நேரம்தான் வெளிப்படியில் நிற்பது. கால் வலித்தது. வாசல் படியில் அமர்ந்தார். அந்தக் காலத்து வீட்டின் வாசலில் இரு புறமும் இருந்த பெருந்திண்ணைகளை பாதுகாப்பிற்காகவும், இடத்தை உபயோகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் இரும்புக் கிராதி போட்டு அடைத்துக் கம்பிக் கதவுகள் போட்டதில் உட்காரும் இடம் பறிபோய் வாசல் படி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது அவருக்கு இப்பொழுது.

    வெயில் ஏறியது, மணி ஒரு பத்தரை இருக்குமோ என்று எண்ணினார். காலையில் இருந்து ஒரு வாய் காப்பி கூடக் குடிக்காமல் பசி காதை அடைத்தது. கணவர் வடிவேலு இறந்தவுடன் மருந்துக் கடையை சங்கருக்கு என்று குறித்து வைத்து, அதைக் குத்தகைக்கு விட்டு அதன் வருமானம் சின்னவன் சங்கருக்கு அனுப்புவது போல் சொத்து பிரித்தார்கள். பெரியவன் சந்துருவிற்குத் தாத்தா எழுதி வைத்த வீடே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்கள்.

    போன மாதம் கோடை விடுமுறைக்கு மகள் தேவி ஊருக்கு வந்த பொழுது ராஜம், தனக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த நகைகள் அனைத்தையும் அவளுக்குரிய சொத்தின் பங்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டார். அவள் தடுத்துப் பார்த்தாள். தனக்கு இருப்பது இரண்டும் பையன்கள்தான், வெளிநாட்டில் தனக்கும் நகைகள் போட வாய்ப்பில்லை எனவே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்துவிட்டார். தனது கடமை முடிந்தது போன்ற மகிழ்ச்சி அவருக்கு.

    அனால் இதற்குப் பிறகுதான் சாந்தியின் குணம் மாறியது. சாந்தியின் ஒரு பெண்ணும் ஒரு மகனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். சாந்தி தனது மாமியாரின் நகையை தனது மகளுக்குரியதாக நினைத்திருப்பாள் போலும். நேராகவே சண்டைக்கு வந்தாள். “பசங்கள மட்டியும் வச்சிருகிறவங்க, வேணாம், வேணாம்னு சொல்றாங்க, அப்படியும் அள்ளிக் கொடுக்காட்டி என்ன? இங்க கல்யாண வயசில ஒரு பேத்தி இருக்கிறது நினைப்பு இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள்.

    “நீ ஏம்மா அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறே? உனக்கு வேணும்னா உன் வீட்டுக்காரன செஞ்சி கொடுக்கச் சொல்லு. என் பரம்பரை சொத்தை என் பொண்ணுக்குக் கொடுத்தேன், அதில் உனக்கேன் கோபம்?” என்று ராஜமும் பதிலுக்குச் சண்டைக்குப் போனார். இந்தப் பிரச்சனையை வைத்து தினமும் இருவருக்குள் சண்டை வர ஆரம்பித்தது. வார இறுதியில் வீட்டிற்கு வரும் சந்துருவிற்கு இவர்களின் சண்டையைத் தீர்ப்பதற்கே சலிப்பாக இருந்தது. ஏன் வீட்டிற்கு வருகிறோம் என்று வெறுத்துப் போய் “மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று அவனும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான்.

    பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெருந்தேவி, வெய்யிலில் படியில் உட்கார்ந்திருக்கும் ராஜத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு, “தபாலுக்காக காத்திருக்கீங்களா பெரீம்மா, தபால்காரர் மத்தியானம்தான் வருவாரு” என்று அவளாகவே ஒரு காரணமும் கற்பித்து பதிலும் வழங்கிவிட்டுப் போனாள். இதற்கு மேல் மொட்டை வெய்யிலில் வாசல் படியில் உட்கார்ந்திருந்தால் அடுத்தவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று தோன்றியது ராஜத்திற்கு.

    தெருமுனையில் இருக்கும் ராமுத்தம்பி கடைக்கு சென்று மகனை அவன் கைபேசியில் அழைக்கலாம் என்றால் தொலைபேசி எண்ணும் தெரியவில்லை. தொலைபேசியில் ப்ரோக்ராம் செய்த பட்டனை அழுத்தி அழுத்திப் பேசியதில் எண் மனப்பாடம் ஆகாமலே போய் விட்டது. நல்ல வேளை இன்று வெள்ளிக் கிழமை, மகன் வீடு வந்துவிடுவான். மாலையில் அவன் வந்ததும் அவனுடன் வீட்டிற்குள் போய் விடலாம். இனிமேல் சாந்தியுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கொள்ளைப்புற தாழ்வாரத்தில் முடங்கிக் கொள்ளலாம். கயிற்றுக் கட்டில், கிணற்றடி, கழிவறை எல்லாம் வசதியாக இருக்கும். சொந்த வீட்டிலேயே அப்படி பின்னால் அனாதையாகக் கிடந்தால் ஊருக்கு நிலைமை தெரியும் அவமானம் இல்லை. சாந்தி ஒரு வேளை சோறு கொடுத்தாலும் குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்து விட்டு, அரை வயிற்றோடு படுத்துக் கொள்ளலாம்.

    வரட்டும், சாயுங்காலம் சந்துரு வரட்டும். இவ்வளவு நாள் இந்த வீட்டில் சாந்தி என்னை விட்டு வைத்திருந்ததே அந்த நகைக்காகத்தானா? பேரன் பெயரில் வீடு எழுதி வைத்த அப்பாவும் இப்படி நான் நடுத்தெருவில் நிற்பேன் என நினைத்திருக்க மாட்டாரே என்று எண்ணிய ராஜத்திற்குத் தன்னிரக்கத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மகன் வரட்டும், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது அவன் வர. இப்பொழுது மணி என்ன ஒரு பன்னிரண்டு இருக்குமா?

    ராஜத்திற்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அந்தக் காலத்தில் வீட்டின் பின்புறமாக வந்து தோட்டி சுத்தம் செய்யும் ட்ரை லட்ரீன் வைத்த பழைய வீடு. கொல்லைபுறம் நாராசாலையின் கதவு வழியாக அவர்கள் வந்து போக வழி இருக்கும். அதனால் வீட்டின் பின்புறம் போக இக்கால வீடுகள் போல பக்கத்து சந்து இல்லை. ஒவ்வொரு வீட்டுச் சுவரும் அடுத்த வீட்டின் சுவராக பங்கு போட்டு அமைந்த பழங்காலத்து வீடு. காலம் மாறி நவீன கழிவறையாக மாற்றியாகிவிட்டது, அனால் பின்புறம் உள்ள அதை அணுக வீட்டின் உள் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவளுக்கு இது போன்ற தேவைகள் இருக்கும் என்று சாந்திக்குத் தோணாதா? வரட்டும், சந்துரு வரட்டும் என்று மனம் கருவினார்.

    மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். உச்சி வெய்யிலில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிருந்தது . மெதுவாகத் தெருமுனைக்குச் சென்று அங்கிருந்த குட்டிச் சுவருக்குப் பின்புறம், மீண்டும் யாரும் பார்கிறார்களா என்று ஒருமுறைப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டு வந்தார். “ஐயோ என் நிலை இப்படி ஆயிடுச்சே, யார் யாரையோ பழிச்சேனே, என்ன இது ஆடு மாடு மாதிரி தெருவில் ஒதுங்கறாங்களேன்னு கேலி செய்வேனே, நானே அந்த நிலைமைக்கு வந்துட்டேனே, கடவுளே,” என்று மனதிற்குள் புலம்பினார்.

    அங்கிருந்தே வீட்டின் வாசல் படியைப் பார்த்த பொழுது அது உச்சி வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. சாயுங்காலம் சந்துரு வரும் வரை எங்காவது நிழலாகப் போய் உட்காரவேண்டியதுதான் என்று எண்ணியபொழுது, இரண்டு தெரு தள்ளி இருக்கும் வரசித்தி விநாயகர் கோயில் மணியின் ஒலி காற்றில் வந்தது. அங்கு போய் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளலாம், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வரலாம் என எண்ணிக் கோயிலை நோக்கி மெல்லத் தள்ளாடி தள்ளாடி நடந்தார். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

    கோயில் வாசலில் பிச்சை கேட்டவர்களைப் பார்த்த பொழுது விரக்தி சிரிப்பு வந்தது. நானும் இப்பொழுது உங்களைப் போலத்தான் என நினத்துக் கொண்டு உள்ளே சென்றார். யாரோ தங்கள் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ந்து சாமிக்கு சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதாமும் படைத்துவிட்டு அனைவருக்கும் தொன்னையில் அன்னதானம் கொடுத்தார்கள். யாராயிருந்ததாலும் நல்லா இருங்கப்பு, என்று மனதில் வாழ்த்திக்கொண்டு வரிசையில் நின்று சர்க்கரைப் பொங்கலும் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

    நீரிழிவு நோய்க்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆவது என்ற கவலை மின்னலெனத் தோன்றி, அதே வேகத்தில் வயிற்றுப் பசிக்கு முன் இப்படி யோசிப்பது தேவையில்லை என்றும் தோன்றியது. மனதில் இப்படி பிச்சைக்காரி போல தானம் வாங்கிச் சாப்பிடும் நிலைக்கு வந்தது ராஜத்தின் மனதை அறுத்தது. இதே கோயிலில் தனது பேரக் குழந்தைகளின் காதுகுத்திற்கு, கணவரின் நினைவு நாள் என்று தானும் அன்ன தானம் கொடுத்ததது நினைவு வரத் துக்கம் தொண்டையை அடைத்தது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. “நெஞ்சை அடைக்குதா ராஜம்,” என்ற கணவரின் பரிவான குரல் அவர் காதில் கேட்டது. கண்கள் இருண்டது. “ஆமாங்க, நெஞ்சை அடைக்குதுங்க, பாருங்க மாமா, உங்களுக்கப்புறம் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே, பிச்சைக்காரியா, அனாதையா ஆயிட்டேனே” என்று வாய் விட்டுப் புலம்பினார்.

    அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூஜை சாமான் விற்கும் கடைக்காரம்மா, “என்ன தாயீ சொல்ற, நெஞ்சடைக்குதா?” என்ற கேட்டு விட்டு அருகில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பாட்டிலில் நீர் இருப்பதைப் பார்த்து, “ஐயா, இந்தப் பெரியம்மாவுக்கு தொண்டையடைக்குதாம் கொஞ்சம் தண்ணி கொடுங்க,” என்றாள். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிறுவனிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, “கண்ணா, ஓடு. பாட்டிக்கு கொஞ்சம் தண்ணி கொடுப்பா” என்று அனுப்பினார்கள். அவன் “பாட்டி இந்தாங்க” என்று ராஜத்திடம் நீட்டிய பொழுது அவருக்கு மார்பில் சுரீரென்ற வலி ஏற்பட்டு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். நீருக்காக நீட்டிய கை துவண்டு விழுந்தது, பளீரென்று ஒரு ஒளி அவர் கண் முன் தோன்றி மறைந்தது போலிருந்தது ராஜத்திற்கு.

    “ஐயோ, பெரீம்மா இங்கன பாருங்க” என்று சுற்றி இருந்தவர்கள் அவரை உலுக்கி, பிறகு அவரை அடையாளம் கண்டு, அவரை அவரது வீட்டில் சேர்த்த பின்பு; அவர் மறைந்த செய்தி தெரிந்து அரக்கப் பரக்க ஓடி வந்த சந்துருவிடமும், அண்டை, அயலார், உறவினர்களிடம், சாந்தி சொல்லிக் கொண்டிருந்தாள்; “அத்தை மனசு சரியில்லேன்னு கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னாங்க, புண்ணியவதி, கோயில்லேயே சாமி கூட போய் சேர்ந்துட்டாங்க.”

    படம் உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

    என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.

    சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.

    டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.

    நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.

    பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.

    திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.

    **** **** ****

    கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு

    Share
  • காவியா & ஓவியா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்.

    சற்றே இடைவெளி.

    தூரிகை என்ற காரிகை  யோடு
    இணைபிரி யாமல் இழைந்த நாட்கள்.
    வண்ணங் களே என் எண்ணங் களாக
    வார்த்தைகள் இன்றி வாழ்ந்த தினங்கள்
    திடீரென் றொருதினம்,திரும்பிப் பார்த்தால்,
    கவிதைக் காதலி காத்திருந் தென்னிடம்
    கண்ணீ   ரோடு நியாயம் கேட்கிறாள்!

    “எதுகை, மோனை, சீர்,தளை, தொடை என
    எத்தனை அணிகள் பூட்டிநான் மிளிர்ந்தேன்!
    வெண்பா, விருத்தம்,, வித வித சந்தம்
    எனப்பல வடிவொடு வனப்புடன் ஒளிர்ந்தேன்!

    என்னொடு களித்த இனிய தினங்களை
    மறந்திடப் போமோ? மறுபடி எனை நீ
    மருவிட வாரா திருத்தல் தகுமோ?”

    கவிதைக் காதலி பெருக்கிய கண்ணீர்
    நெஞ்சில்  நெருப்பாய்ச் சுட்ட(து;)அதுமுதல்,
    வண்ணம், வடிவம், வரைதல் மறந்து
    கவிதாயி னியைக் கலந்து  மகிழ்ந்தேன்.
    மாதங்கள் நீண்ட காதங்க ளாயின!

    ஒருநாள் காலை உலவச் செல்கையில்,
    நீளப் பரந்த நீல வானத்தில்,
    பனித்துளி உறங்கும் பசும்புல் நுனியில்,
    மரங்கள் விரித்த மரகதப் பச்சையில்,
    பூக்கள்  சிரிக்கும் புதுவண்ணத்தில்
    ஓவியப் பெண்ணாள் ஒயிலாய் அழைக்கிறாள்!

    இத்தனை நாட்கள் இவளை மறந்து
    எப்படி இருந்தேன்?   ஈசா, இனிநான்
    ஒருநா  ளேனும்  ஓவியா இன்றி
    உறங்கிட மாட்டேன் என்றொரு துணிபுடன்
    விடுவிடு வென்று  வீடு திரும்பி
    தூரிகையா லொரு காகிதப் பரப்பில்
    கோடுகள், வளைவுகள் வண்ணங்களென்று
    ஓவிய உழவனாய், உழைக்கப் புகுந்தேன்

    எனக்குள் இருந்து ஒலித்தது ஒருகுரல்:

    ” உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
    ஓருபோ தவளே ஓவிய மானாள்.
    எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
    அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
    உன்விழியானாள்; உன்விரல் வழியே
    உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
    கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்

    கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!
    சிந்தனை என்ற ஆலயத்  துள்ளே
    மொழியெனும் பீடத் தமர்வாள்; வழிபடும்
    கவிதைப் பித்தர்தம் கணகளில் சரேலென்
    நொடிப் பொழு தளவில் மின்னலாய்த் தெரிவாள்
    எழுத்தும், வார்த்தையும் கழுத்தி லணிந்து
    அறிவெனும் மகுடமும், உணர்வெனும் ஆடையும்
    புனைந்து புதுப் புதுக் காவிய மென்னும்
    வாகனம் ஏறி வலம்வந்  திடுவாள்
    அருவியின் வீழ்ச்சியாய், அழகிய ஓடையாய்
    கட்டற்    றோடும்  காட்டாறு வெள்ளமாய்
    அமைதித் தென்றலாய் , அழிக்கும் புயலாய்
    எத்தனை வடிவெடுத் தாலும் உள்ளுறும்
    அனுபவமாவதும், , வெளிப்படும் கவிதையாய்
    யுகம்பல கடந்தும், படிப்பவர் நெஞ்சில்
    பரவசத் தீயைப் பற்ற வைப்பதும்
    பரா சக்தியின் செயலே உணர்வாய்!”

    ஓவியமாவதும் காவியமாவதும்
    உள்ளுறு சக்தியென் றுணர்ந்து மகிழ்ந்தேன்!

    இணைப்பு: பேலூர்- நாட்டிய சரஸ்வதி சாந்தலா தேவி
    பார்க்க, படிக்க, ரசிக்க…
     
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 77 (24.06.13)

    மலர் சபா
    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்

    அங்ஙனம் அளந்து அறிந்ததோடு
    இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்
    ஐந்தாம் நரம்பாம் இளியைக்
    குரலாய் நிறுத்தி
    ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.

    உழை குரலாகவும்
    உழை தாரமாகவும்
    குரல் குரலாகவும்
    குரல் தாரமாகவும்
    அகநிலை மருதம் புறநிலை மருதம்
    அருகியல் மருதம் பெருகியல் மருதம் எனும்
    நால்வகை சாதிப் பண்களையும்
    அழகுடன் இசைத்து
    வலிவு மெலிவு சமம் எனும்
    மூவகை இயக்கத்தாலும்
    முறைபட இசைத்துப் பாடினாள்.

    அதன் பின்பு
    அதன் இனத்தைச் சார்ந்த
    திறப்பண்புகளுடன் பாடும் நேரத்தில்
    கோவலன் பிரிவதனை நினைவு கூர்ந்து
    வாடினாள்; சற்றே மயங்கினாள்.
    விளைவாய், எடுத்துப் பாடிய
    பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
    பூங்கொடி போன்ற மாதவி மயங்கினாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 44
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://www.vimlapatil.com/vimlablog/raja-ravi-varma-rules-the-art-world-more-than-100-years-after-his-death-in-1906-at-the-age-of-58/

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 32

     

    இன்னம்பூரான்

     

    வெட்டவெளியில் கரும்புள்ளி: அப்டேட்

     

    Inline image 1

     

    இந்த எஸ்-பாண்ட் ஊழல் நமது புகழ் வாய்ந்த விஞ்ஞானிகளில் சிலரின் பொன்னாசையை அம்பலப்படுத்துகிறது. ஆமாம், சார்! காண்டிராக்டர் தங்கக்காசு தருகிறான். இவர்கள் கூறு போட்டுக்கொண்டார்கள்.

    கதை சுருக்கம்:

    இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (ரூ.2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தின் சூடு தாங்காமல், ஃபெப்ரவரி 2011ல் அரசே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுகிறது, தாங்கொண்ணா தாமதத்திற்கு பிறகு. போனவருடம், சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து, அரசு பிரகடனம் விடுத்தது. முந்திய கட்டுரையில் எழுந்த நான்கு வினாக்களுக்கு விடை தேடுவது தொடர்கிறது. முடிந்தபாடில்லை. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இந்த வெட்டவெளிச்சத்துறையை நன்கு அறிந்திருக்கும் ஜனாப் அப்துல் கலாம் அவர்கள், பொதுநலத்தை முன்னிட்டு, கருத்துக் கூறியிருக்கிறாரா என்று தேடித்தேடிக் களைத்து விட்டேன். அவர் கருத்துக்கூறவில்லையெனின், அதுவே முதல் கேள்வியாகி விடுகிறது.

    அடுத்த கட்டம்:

    ‘சாணோ,முழமோ’ தலைக்கு மேல் நீர் மூழ்கடிக்கிறது என்றால் வாதி-பிரதிவாதிகள் மத்தியஸ்தம் நாடுவார்கள். அது ஆராய்ச்சி மணி நியாயமாகவோ,அல்லது குரங்கின் கை பூமாலையாகவோ அல்லது ருத்திராக்ஷப்பூனையின் தந்திரமாகவோ, அல்லது வேறு எது வைபோகமாகவோ அமையலாம். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் நஷ்டமடைந்த தேவாஸ் மல்டி மீடியா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் மீது மத்தியஸ்தம் கோரி, லண்டனில் உள்ள அகில உலக ‘பஞ்சாயத்திடம்’ (International Court (ICC) of Arbitration in London) முறையிட தீர்மானித்தது. அதற்கு முட்டுக்கட்டை போட விழைந்தது, வெட்டவெளித்துறை. போன மாதம் (மே 2013) இந்திய உச்ச நீதிமன்றம் தேவாஸ் மல்டி மீடியாவின் கோரிக்கைக்கு தடை யாதுமில்லை என்று தீர்ப்பளிக்க, வெட்டவெளித்துறை மருண்டது! ஏன்? இது அடுத்து வரும் கேள்வி. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க விரும்பிய வெட்டவெளித்துறை அதற்காக சட்டத்துறையை அணுகியதும், சட்டத்துறை அதை ஏற்கவில்லை என்பதும் இன்றைய செய்தி. எனினும், அது அரசு வக்கீலாகிய சொலிஸிட்டர் ஜெனெரலிடம் ஆலோசனை கேட்டிருக்கிறது. Everyone is passing on the buck.

    இப்போது கேள்விக்களுக்கு தற்காலிக பதில்:

    சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து…

    அணுகுமுறை சரியாக படவில்லை. அவர்கள் தவறு செய்திருந்தால், தக்கதொரு தண்டனை/ ப்ராஸிக்யூஷன் தான் சரி. இல்லையெனில், இந்த இருண்டுங்கெட்டான் இகழ்ச்சியும் நியாயமில்லை.

    2.பிரதமரின் அலுவலகம் இதை அறியாததா?

    ஆவணங்கள் பேசட்டும். அவற்றை பொதுமன்றத்தில் வைத்தால் தான் உண்மை தெரியும்.

    3. ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஆவணங்கள் இருக்கும். அவற்றை பொதுமன்றத்தில் வைக்கவேண்டும்.

    4.இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன?

    கதை சுருக்கம் நோக்குக.

    இன்னம்பூரான்

    Image Credit: http://sd.keepcalm-o-matic.co.uk/i/keep-calm-and-pass-the-buck-3.png

    Share
  • பார், பகலும் கழிந்தது இரவும் போனது

     

    -கீதா மதிவாணன்

    பார், பகலும் கழிந்தது  இரவும் போனது,

    சூரியன் மேற்கை அடைந்து  மறைந்தது.

    அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.

    முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே

    அந்தப்பொழுதும் இருந்தது.

    எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,

    பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

     

    பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்

    மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.

    முந்தைய இரவுகளைப் போலவேதான்

    அந்த இரவும் இருந்தது.

    அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,

    இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

     

    பறவைகள் கீச்சிசைத்தன,

    அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.

    கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.

    வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது.

    உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,

    விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.

    பார், பகலும் கழிந்தது  இரவும் போனது.

     

    (மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை,

    தமிழாக்கம்: கீதா மதிவாணன்)

     

    படத்துக்கு நன்றி: http://srilankaoneness.blogspot.com/2010/06/oneness.html

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!..7

     

    சாகர்


    எகிப்திய அருங்காட்சியகம்

     

    நான்காயிரம் வருட தொன்மையான பொருட்களை உள்ளடங்கிய அருங்காட்சியகம் என்பதால், புகைப்படம் மற்றும் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கையில் இருந்த கேமராக்கள் மற்றும் காம்கார்டரை வாயிலில் உள்ள அலுவகர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாரிஸில்(Paris) உள்ள லூவ்ரு(Louvre), லண்டனில் உள்ள பிரிட்டிஷ்(British Museum) அருங்காட்சியகங்களை முன்பே பார்த்திருந்ததால் எகிப்திய கலைப்பொருட்களை பற்றி ஓரளவு இருந்த ஆர்வம், லண்டனில் துடுக்கமன்(Thutukhamun) மன்னரின் புதையல் பொருட்காட்சியை பார்த்தபின் இன்னும் அதிகமாயிற்று. இப்போது அவை எல்லாம் தோன்றிய இடத்தில உள்ள அருங்காட்சியகம் என்பதால், இது எப்படி இருக்கும் என்ற ஆவல் தூண்ட துரிதமாக உள்ளே போனோம்.

    கைரோ அருங்காட்சியத்தில் நுழைவு சீட்டு மம்மிகளின் அறைக்கு அனுமதி வழங்குவதில்லை அதற்க்கு தனி சிறப்பு கட்டணம். இவ்வளவு தூரம் வந்தாயிற்று அவற்றையும் பார்போம் என்று அதையும் வாங்கினோம்.

    எங்கோ பார்த்தாலும் ஸ்பின்க்ஸ் உருவங்கள். அருங்காட்சியகம் எகிப்திய வரலாற்றின்படி பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.எங்கள் வழிகாட்டி இந்த கலை கண்காட்சியை பார்க்க ஒரு மாதம் இருந்தாலும் போதாது எனவே நான் மிக முக்கியமானவை மற்றும் காட்டுகிறேன் மேற்கொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதை சுற்றி பாருங்கள் என்றார்.

    முதலில் எங்களை எகிப்திய தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்ட பல அயல் நாடு தொல்பொருள் ஆராய்சியாளர்களில்  சிலைகளை காட்டினார், கார்டர்(Carter), சாம்பியன்(Champillon) போன்ற இந்த மேதைகளை கடந்து உள்ளே சென்றோம்.

    ஒரு பெரிய படகு இருந்தது, செடார் (Sedar) மரத்தில் அமைக்கபற்ற இந்த படகு சுமார் நான்காயிரம் ஆண்டு தொன்மையானது. அஸ்வான் பாறைகளை நைல் நதியில் கொண்டுவந்து பிரமிடுகளை கட்ட உபயோகிக்க பட்டதாம் இந்த படகுகள்.

    பிரமிடுகளை கட்டிய குப்ர்(Khufre), மேன்கோவ்ரே(Menkuare) போன்ற பாரோக்களின் சிலைகளை பார்த்தபோது, இதுபோல் நமது நாட்டில் நம் மன்னர்களில் உருவங்கள் இன்று இல்லே என்று தோன்றியது.

    கிறிஸ்துவிற்கு 3100 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நார்மர்(Normar) மன்னரின் சிலைவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை முதல் முறையாக ஒரு தேசமாக ஆண்டவர், இவர்.

    திரும்பிய பக்கம் எல்லாம் பாரோக்களின் உருவங்கள் சிறுதும் பெரிதுமாக நின்றும்,அமர்ந்தும், படுத்தும் காணப்பட்டன.அவற்றில் ராமேசெஸ்ஸின் (Rameses) உருவச்சிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவற்றில் பாரோ (Pharoh) சிறுவனாக விரல் சூப்பும் காட்சி அழகாக இருந்தது.

    மம்மிகளின் சிறப்பு அறைக்கு அடுத்ததாக சென்றோம். 4000, 3000 வருடங்களுக்கு முன் ஆண்ட அந்த அரசர்கள் மற்றும் அரசிகளின் உடல்கள் மம்மிகளின் வடிவில் இன்னமும் பதப்படுத்திய நிலையில் காட்சியளித்தன. ஒரு சவக்கிடங்கு போன்ற ஒரு காட்சியளித்தாலும், எகிப்திய மருத்துவ கலாச்சர மகத்துவத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    இறந்தவரின் உடலை கோவிலின் குருமார்கள் அறுத்து உள்ளே உள்ள இருதயம், குடல், நுரையீரல் போன்றவற்றை எடுத்து தனித்தனி ஜாடிகளில் பதபடுத்தி வைத்தனர். பின்னர் உடலை பலவேறு முலிகை மற்றும் வாசனை பொருட்களை கொண்டு பதப்படுத்தி,துணி கொண்டு சுற்றி பதப்படுத்தினர். உடலை சவப்பெட்டியில் வைத்து மூடி,  அதனை சமாதி கையில் அல்லது பிரமிடுகளில் வைத்தனர். கூடவே ஜாடிகளில் உள்ள மற்ற அங்கபாகங்களையும் வைத்தனர்.

    அழுகும் அபாயம் உள்ள பாகங்கள் இல்லாமல் பதப்படுதபட்ட இந்த மம்மிகள் சுருங்கி மரப்பாச்சி பொம்மைகள் போல் காட்சியளித்தன.ஆயிரகணக்கான வருடங்களுக்கு முன் இறந்தாலும் இவை இன்றும் வரலாற்றின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

    மூன்றாம்  ராமேசெஸ் மன்னரின் மனைவி அவரை கொல்ல ஆள்வைத்து முயற்சித்ததாக வரலாறு. அவர் மம்மியை ஸ்கேன் செய்து அவர் குரல்வளை அறுக்கப்பட்டு இறந்தார் என்று இன்று உறுதி செய்து ஆயிரக்கணக்கான வருட கொலைக் கதைக்கு முடிவுரை எழுதின.

    சிறு வயதில் இறந்த துடுகமுன் அரசர் மிகவும் சிறப்பானவர் ஏன் என்றால் அவர் இரவு கோயிலில் கணக்கில் அடங்காத புதையல் மற்றும் புராதன பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இவர் சிறுவயதில் இறந்ததால் இவர் விஷம் கொடுத்துகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வரலாறு. சமிபத்தில் இவர் மம்மியை பரிசோதனை செய்து இவர் கால் எலும்பு முறிந்து இறந்தார், விஷம் உட்கொண்டதற்க்கு அறிகுறி இல்லை என தெரிய வந்தது.

    மம்மிகளின் அறையில் இரண்டாம் ரமேசிஸ்(Rameses), டுத்மொசிஸ்(Thutmosis), அவர் அன்னை ஹத்ஷேபுட்(Hatsheput) மற்றும் பல எகிப்திய மன்னர்களின் உடல்கள் மட்டுமன்று பல்வேறு மிருகங்கள் மற்றும் பறவைகளும் பதப்படுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பறவைகளும் மிருகங்களும் ஆயிரகணக்கான வருடம் பழமையானவை.  இறந்தவரின் பரலோக யாத்திரைக்கு துணையாகவும் உணவாகவும் இவை அமைந்தனவாம்.

    இந்த கதைகளை கேட்டறிந்தவாறு மெல்ல துடுகமுன் ராஜாவின் விசேஷ புதையல் கட்சி பகுதிக்கு வந்தோம். கார்ட்டர் என்னும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கண்டு பிடித்த இந்த அரசரின் இரவு கோயில் மிகவும் விஷேசமானது. அரசர்களில் பள்ளத்தாக்கு (Valley of Kings) என்றழைக்கப்படும் இடம் லக்சர்(Luxor) அருகில் உள்ளது. மற்ற கோயில்களில் இருந்த பொக்கிஷம் பொறும எல்லாம் திருடர்களால் களவாடப்பட்ட நிலையில் இந்த கோயிலில் ஆண்டு புதைத்த மேனிக்கு தங்கமும், பொக்கிஷங்களும் அப்படியே இருந்தன.

    இவற்றில் அந்த மன்னரின் மம்மி, மற்றும் தங்க முகமூடி அச்சு(Facemask), அவரை புதைத்த சவப்பெட்டி எல்லாம்  சிறிதளவும் சிதலமடையாமல் கிடைத்தன. மன்னரின் மம்மி அவர் உடல் அளவில் ஒரு பேட்டியின் வைக்கப்பட்டு அந்த பெட்டி மற்றும் ஒரு பெரிய வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு. கடைசியாக இவை ஒரு தங்க மூலம் பூசபட்ட ஒரு பெரிய பெட்டியில்(Sacrophagus) வைக்கபட்டிருந்தது. மன்னரின் உடல் பகுதிகள் முன்னர் குறிப்பிட்டது போல் பளிங்கினால் ஜாடிகளில் வைக்கபட்டிருந்தன.

    மன்னரின் தங்கமுகமூடி 11 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்டது. எகிப்தின் புராதன கிரீடமும் ஒட்டுதாடியும் கொண்ட இந்த குழந்தை முகம் பார்ப்பவரை வசீகரிக்கும் சக்தி கொண்டது.

    துடுகமுன் அரசரின் சிங்க சிங்காசனம், தேர், செங்கோல் மற்றும் கிரீடம் போன்றவையும் கண்டேக்கபட்டன. இவை அனைத்தும் ஓரிடத்தில கட்சி அளிப்பது கண்கொள்ள கட்சி. ஏற்கனவே லண்டனில் ஒரு முறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போதும் அலுப்பு தட்டவே இல்லை.

    நேரம் போவது தெரியாமல் இந்த கலை பொக்கிஷங்களை பார்த்து கொண்டேயிருக்க மஹ்மூத் வந்து காட்சியகம் மூடும் தருணம், நாம் போகவேண்டும் என்றார்.

    வண்டியில் ஏறியதும் நாம் இப்போது எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த கான் அல் கலிலி(Kahn el Khalili Bazaar)அங்காடி போய் சிறிது நேரம் செலவிடலாம். அதன் பின்னர் உங்களை கீஸா(Giza) ரயில் நிலையில் லக்சர் செல்லும் இரவு வண்டியில் கொண்டு ஏற்றிவிடுகிறோம் என்றார். (தொடரும்)

     

    Share
  • ராமகிரி நரசிம்மர்!…

    விசாலம்                                                                                                                                                                                                                              தட்டை நாட்டை ஆண்டு வந்த சாமைய நாயக்கர் ஒரு தடவை வேட்டை ஆடப்போனார்   கூடவே அவரது வேட்டை நாய்களும்  அவருடன் சென்றன . அப்போது ஒரு அதிசயம் நடந்தது .திடீரென்று வேட்டை நாய்கள் தாங்கள் மற்ற மிருகங்களைத் துரத்துவதற்குப்பதிலாக  பயந்தபடி ஓடி வந்தன .அதைத்துரத்தியதோ ஒரு கீரி . இது எதனால் நடந்திருக்கும் என   சிந்தனையில் ஆழ்ந்த மன்னர் அந்த இடத்தை ஆராய உத்தரவிட்டார்.அந்த இடத்தில் “கல்யாண நரசிம்மர்  “அருள் பாலித்து வருகிறார் என்று சேவகர்கள் செய்தியைக்கொண்டுவந்தார்கள்.

    அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றித் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படிச்சொன்னார்.  அந்தக்கனவை அப்படியே நனவாகச்செய்து   ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மருக்குப் பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் இந்த ஆலயத்தின்  வயது சுமார் அறநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் .

    இந்த  ஆலயத்தை அடைய நாம்  கரூர் செல்லும் பாதையில் போய்  கோவிலூர்  என்ற ஊரை அடைய வேண்டும்  அந்தச்சாலையில் சுமார் இரண்டு கிமீ தூரம் செல்ல “ராமகிரி” என்ற இடம்  வருகிறது ,

    இந்த ராமகிரி என்ற இடத்தில் தான் திரு கல்யாண நரசிம்மப்பெருமாள் திருக்கோயில்   அமைந்திருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம்  கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிரகாரத்துடன் இருக்கும்    இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன்  அருள் பாலிக்கிறார் .

    இதன் புராணக்கதையைப்பார்த்தால்  உக்கிரமாக வந்த நரசிம்மப்பெருமாள் பின்னால் சாந்தமாக மாறி அருள் பாலித்தார். இதன் காரணம் என்னவென்றால்  முதலில் அவரது உக்ரத்தைக்கண்டு  பலரும் பயந்து நகர சிறுவன் பிரஹ்லாதன் அமைதியாக கைகளைக்கூப்பியபடி  அவரைத்துதித்தான்.    நரசிம்மர் சிறிது சாந்தமாக  முப்பத்து முக்கோடி தேவர்களும்  ரிஷிகளும்  அங்கு வந்து வணங்கினர் . பின்  நரசிம்மர் லக்ஷ்மியை அரவணைத்தபடி  காட்சியளித்தார் .அந்த நேரத்தில் தேவர்கள் அவரிடம்  தங்கள் வேண்டுகோளை வைத்தனர்

    “ஸ்வாமி தங்களை நாங்கள் கல்யாண  நரசிங்கப்பெருமாளாகக்காண  விரும்புகிறோம் தாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து சேவை சாதிக்க வேண்டும்” அவர்கள் ஆசையும் நிறைவேறியது .அந்த இடத்திலேயே நரசிம்மரும்  அமர்ந்துவிட்டார் .

    அந்த வனப்பகுதியில்  “ராமகிரி” யில்  ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண  நரசிம்மப்பெருமாளாக அருள் பாலிக்கிறார்.அவர் திருமுகத்தைப்பார்க்கவே  மனதில் ஒரு அமைதியும் . ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பிச் சேவிக்கிறோம்  .

    ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும்   பிரமாதமாக  இங்கு பூஜை நடைப்பெருகிறது .பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது .நரசிம்மரைத்தொழுதால்  சத்ரு பயம் .பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும் . எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(4)

     

    செண்பக ஜகதீசன்

     

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து.

              -திருக்குறள்-90 (விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    முகந்து பார்த்தாலே

    முகஞ்சுருங்கி வாடிவிடும்

    அனிச்ச மலர்..

     

    அதுபோல்தான்,

    அகம்நொந்து வாடிடுவர்

    விருந்தினரும்

    முகம் மலரா ஒருநேர்

    பார்வையிலே…!

     

    குறும்பாவில்…

     

    வாடிடும் அனிச்சம் முகந்தாலே,

    விருந்தினர் நிலையிதுதான்

    வரவேற்கும் விருப்பிலாப் பார்வையிலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கையில் எடுத்துக் கசக்கவேண்டாம்

    காலில் போட்டு மிதிக்கவேண்டாம்,

    பைய எடுத்து முகந்தாலே

    பட்டென வாடிடும் அனிச்சமலர்,

    வைய மிதனில் வாழ்வினிலே

    வந்திடும் விருந்தை வரவேற்க

    மையென முகமது கறுத்துநோக்கில்

    மெய்யது சோர்ந்துதான் வாடுவரே…!

     

    லிமரைக்கூவில்…

     

    அனிச்சமலர் முகந்தாலே வாடும்,

    வரும்விருந்தை விருப்பின்றிப் பார்வையொன்று

    பார்த்தாலே பதைபதைத்து ஓடும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    கேட்டுக்கோ கேட்டுக்கோ

    குடும்பசேதி கேட்டுக்கோ..

    வாட்டவேண்டாம் வதக்கவேண்டாம்

    வாரியெடுத்து மோந்தாலே

    வாடிப்போவும் அனிச்சம்பூவு..

    ஊடுவந்த விருந்துகள

    ஓபசரிச்சி நடத்தவேணும்,

    மொகங்கறுத்துப் பாத்தாலே

    ஒன்னவுட்டு ஓடிப்போவும்..

    பாத்துக்கோ பாத்துக்கோ

    படிப்பினதான் பாத்துக்கோ…!


    Share
  • திருடி

    -தனுசு

    எங்கே சென்றாய்
    என்னவளே
    என்னை விட்டுசென்றது
    ஏனடி?

    எங்கே இருக்கிறாய்
    கள்ளியே
    என்னை பிரிந்து சென்றது
    ஏனடி?

    நித்தம் பித்தம்
    தந்தவளே
    இன்று மறைந்து சென்றது
    ஏனடி?

    இத்தனை அழைத்தும்
    மறுப்பவளே
    இன்று என்னடி ஆனது
    உனக்கு?

    பார்
    நீ இல்லாத இந்த இரவு
    எத்தனை இருட்டு?
    யார்
    சிறைவைத்து உன்னை
    விளையாடிப் பார்ப்பது!

    நீயும் ஒத்துக்கொண்டு
    ஓடி விளையாட
    இது நேரமா?
    உன்னைக்காணாமல்
    ஒடிந்துவிழும்
    என்னுயிரைப் பாரம்மா!

    சொல்லாமல்
    போன தேவியே
    அதனால்
    கொல்லாமல் கொல்லுது
    என் ஆவியே!

    எத்தனை இருளிலும்
    என்னால்
    உன்னை உணர முடியும்
    எத்தனை தொலைவிலும்
    என்னால்
    உன் திசையை அறிய முடியும்.

    ஆனால் இன்று
    உணரவோ அறியவோ முடியவில்லை
    இதை
    யாரிடம் கேட்டும் பயனில்லை.

    கேட்டால்
    இன்று அமாவாசை என்கிறார்கள்
    என் பிரயாசை அறியாதவர்கள்
    என்னை காக்க வைத்தது போதும்
    சீக்கிரம்
    ஓடோடி வா நிலா…..

     

    Share
  • ஓடும் பஸ்ஸில் ஒரு பைபாஸ் சர்ஜரி

     

    – டாக்டர் அல்கேட்ஸ்


    stock-illustration-7915155-medical-symbol-with-snakes-wings-and-skullநான் பொறந்தோன்ன, ஜோசியர கூப்ட்டாங்க. அவரு சொன்னாரு “இவனுக்கு சனி. நாக்குல ஜென்ம சனி”ன்னு.

    எனக்கு 18 வயசு இருக்கும் போது, அம்மா, “இவங்கப்பா ஊர்ல பெரும் புள்ளியா இருந்தாரு. இவன் நாக்குல கரும்புள்ளியோட சுத்தறான். ஐயோ”ன்னு தலைல அடிச்சுக்கிட்டாங்க.

    நம்ம வாய் திறந்தா அங்க சண்டை வந்துடும், பங்காளிங்க பிரிஞ்சுடுவாங்க, தலாக் நடக்கும், வீடு எரியும், இல்ல ஊர்க் கலவரம் கூட ஆகும்

    ———————————————————————————————————————

    Medical college- சேர்ந்த 18ஆவது நாள்….

    நம்ம கிராமத்துலேந்து தினமும் காலேஜுக்கு பஸ் தான். இப்போ ஊரில எல்லாரும் நான் ‘கோட்’டை தோள்ல தொங்கப் போட்டுட்டு போறத பாத்துட்டதுனால, எனக்கும் அலுத்துப்போச்சு. கோட்டை பைக்குள்ளேயே வச்சு தூக்கிட்டுக் கிளம்பிடுவேன்.

    பஸ்ல போகும் போதும் படிப்பேன், திரும்பி வரும் போதும் படிப்பேன். அப்போ நிறைய பேரு, நான் என்ன படிக்கிறேன்னு எட்டிப்பார்ப்பாங்க. நம்ம அனாடமி புக்ல தான் எலும்பு, சதை, தசைன்னு வெளிப்படையாவே படங்கள் இருக்குமே. அதைப் பாத்துட்டு வேற பக்கம் போயிடுவாங்க. நைட்ல அவங்களை எலும்பு மனிதன் அட்டாக் பண்ற மாதிரி கனவெல்லாம் வருமாயிருக்கும்.

    ஒரு நாள், என் புக்கை எட்டிப் பாத்து ஒருத்தர் பஸ்லையே மயங்கிட்டார். சோடாவுக்கு என்கிட்டயே காசு புடுங்கிட்டாங்க. அப்புறம் கண்டக்டர் வந்து, “தம்பி, நீங்க டாக்டருக்கு படிக்கிறீங்க, பெரிய விக்ஷயம் தான். அதுக்காக எவனாவது பஸ்ல மண்டையப் போட்டான்னா, என் வேலை போயிரும். தயவு செஞ்சு இனிமே நம்ம பஸ்ல படிக்காதீங்க தம்பி” ன்னாரு. ஸ்டார்ட்டிங்ல அவரும் எட்டிப்பாத்துருக்காரு. அப்புறம் 3 நாள் ஜீரம். இப்ப தான் திரும்ப டூட்டில ஜாயின் பண்ணினார். கனவுல அவருக்கு சதை மனிதன், எலும்பு மனிதனோட தொடை எலும்பைக் கடன்வாங்கிட்டு அத தூக்கிட்டு அவரை தொறத்துற மாதிரி வந்துருக்குமோ?

    சரின்னு அவர் குடும்பம் குட்டியெல்லாம் நெனச்சுப் பாத்து, அன்னைலேந்து பஸ்ல புக்க எடுக்காம நோட்ஸ் மட்டும் படிச்சேன்.

    ஒரு நாள், ஒருத்தர் நான் படிக்கிறதைப் பாத்துட்டு, “தம்பி. என்ன படிச்சாவுது?”ன்னார்.

    சிக்கிட்டான். “நான் டாக்டருக்கு படிக்கிறேன்”னேன்.

    “அப்படியா! பரவாயில்லயே. எங்க படிக்கிறீங்க?”

    “எலிப்புழுக்கை ஊருல”

    “என்ன சொல்றீங்க. அங்க மாட்டு டாக்டர் பள்ளிக்கூடம் தானே இருக்கு. ஓஹோ. மாட்டு டாக்டர் படிச்சவங்களும் டாக்டர் தானே! சரி தம்பி, நம்ப கிடேறி ஆட்டுக்கு 2 நாளா பேதி. மருந்து சீட்டு எழுதி கொடுங்களேன்”ன்னு கேப்பு விடாம பேசினார்.

    “ஐயா. நான் மனுச டாக்டருக்குத் தான் படிக்கிறேன். எலிப்புழுக்கைல நாலு வருக்ஷமா மெடிக்கல் காலேஜ் இருக்கு”ன்னேன் கோவமா.இருக்காதா பின்ன. வெட்னரி சைன்ஸ், என் 12 வது மார்க்குக்கே கெடச்சுது. MBBSக்காக் தான் யூரியா சாக்குல பணத்தை கொண்டாந்து கட்டினோம்?

    “ஹிஹி, வேகப்படாதீங்க தம்பி, ஹிஹி”

    “சரி” என்று நோட்ஸைப் பாத்தேன். (ulna and radius are the two bones in forearm. the muscles of forearm are ………….)

    “டாக்டர் தம்பி…”

    நானா? டாக்டரா? அப்படியே உச்சி வெயில்ல ஜில்லுனு லஸ்ஸி அடிச்ச மாதிரி இருந்தது.

    “க்கும். சொல்லுங்க”

    “நமக்கு ஒரு 6 மாசமா வலது தோள்பட்டைல வலி. கொஞ்சம் என்னானு பாருங்களேன்”.

    என்னது, அதுக்குள்ள பேக்ஷன்ட்டா? காலேஜ் சேந்தே 2 வாரம் தான் ஆவுது. இப்ப தான் கொஞ்ச நாளா டெட்பாடிக்கிட்ட நிக்கவே தைரியம் வந்துருக்கு. சரி என்னான்னு பாப்போம்

    “எங்க வலிக்குது?”

    அவர் திரும்பி, “இங்க தான் தம்பி”ன்னார்.

    ஒகே. தோள் பட்டை. க்ஷோல்டர். அங்க என்னா இருக்கு? ம்ம்ம் டெல்டாய்ட் மசிள் (மசிள்னா தசை. அது 2 எலும்புல அட்டாச் ஆயிருக்கும். அதால தான் நாம அசையவோ, நடக்கவோ, எழுதவோ முடியுது).

    “ஓகே. உங்களுக்கு டெல்டாய்ட் மசிள்ல வலிக்குது”

    “பாலிடாலா? அது 13 வருக்ஷம் முன்னாடி பொண்டாட்டி ஓடிப்போனப்போ குடிச்சது. அது சரியாயிட்டு தம்பி”

    ஓகே. டெல்டாய்ட் மசிளுக்கு ரத்தம் கொடுக்குறது, ஆக்ஸிலரி ஆர்ட்டரி, நெர்வ் சப்ளை (மூளைலேந்து நரம்பு) என்னவாயிருக்கும்??

    “ஒரு நிமிஷம், பாத்துட்டு சொல்றேன்”

    அவர், (தம்பி என்னாத்த பாக்கப் போவுது? ஏ யப்பா, இவ்ளோ பெரிய புத்தகத்த எடுக்குறாரே? நமக்கு புத்து நோயோ?)

    ஓகே. ம்ம்ம்ம். ஒகே. டெல்டாய்ட் மசிள் இஸ் சப்ளைட் பை மீடியன் நெர்வ் (Deltoid muscle is supplied by median nerve). மீடியன் நெர்வ் எங்கேந்து வருது? ஸ்பைனல் கார்ட் (தண்டுவடம்). ஸ்பைனல் கார்ட் எங்கேந்து வருது? ஓ மூளைலேந்தா. சரி தான். சொல்லிருவோம்.

    “இங்க பாருங்க”, நோட்டில் பேனாவை எடுத்து வரைந்து காட்டினேன். “இதான் தோள்பட்டை, இதான் டெல்டாய்ட் மசிள், இது அதோட நெர்வ். மூளைலேந்து வருது”.

    அவருக்கு வேர்க்க ஆரம்பிச்சுது.

    “இதுல எங்க வேணா ப்ராப்ளம் இருக்கலாம், தசை, இல்லாட்டி ரத்தக் கொழா, இல்ல தண்டுவடமோ, ஏன் மூளைல கூட இருக்கலாம்”

    அவர் கண்கள் போண்டா போல விரிஞ்சுது. வாய் ஆன்னு பொளந்துக் கெடக்கு.

    “இதுல பாருங்க, மூளைல செரிப்ரம்….”

    “எலிப்புழுக்கைல்லாம் எறங்கு”ன்னு கண்டக்டர் கத்தினார்.

    “அய்யோ. என் ஸ்டாப் வந்திரிச்சி. வரேங்க” என ஓடிப்போய் எறங்கிட்டேன்.

    பஸ் என்னைத் தாண்டிப் போவுது. பஸ் ஜன்னல்ல பாத்தா, அவரு கைகளால தலய புடிச்சுக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டுருக்காரு.

    ———————————————————————————————————————

    நாலு நாள் கழிச்சி…..

    வீட்டுக்குப் போக பஸ் ஏறப் போனேன்.

    “டாக்டர் தம்பி”ன்னு சத்தமா ஒருத்தர் கூப்ட்டாரு.

    அட இவரு நம்ம மொத பேக்ஷன்ட் ஆச்சே.

    “வாங்க. எப்படி இருக்கீங்க?”ன்னேன்.

    ஆள் மூனு நாள் தாடியோட, ஒரு அஞ்சு கிலோ கொறஞ்சிருந்தாரு. “தம்பி, நல்லாயிருக்கீங்களா? வாங்க டீக்குடிச்சிக்கிட்டே பேசுவோம்”ன்னு சோகமா கூப்ட்டாரு.

    ஹையா, ரொம்ப நாளா அந்தக் கடையில சூடா பக்கோடா சாப்பிடணும்னு ஆசை. நம்ம பாக்கெட் மணி அதுக்கு எடம் கொடுக்காது.

    2 ப்ளேட் பக்கோடா, 1 ப்ளேட் வாழைக்கா பஜ்ஜிய நானே முடிச்சேன். அவரு அப்படியே வீடு எரிஞ்சு போன மாதிரி என்ன சோகமா பாத்துட்டிருந்தாரு.

    “தம்பி. அன்னைக்கு பாதில உட்டுட்டீங்க”

    “ஆங். ஆமா. எங்க விட்டேன்?”

    “மூளைல செரிமானம்னு முடிச்சீங்க”

    “செரிப்ரம். இருங்க புக்கைப் பாக்குறேன்” என்று பையிலேந்து, ஒரு தலகாணி புக்க எடுத்தேன் (இது ரெஃப்ரன்ஸ் புக், 2300 பக்கம்).

    அவர் அப்படியே டெரராகி, பெஞ்ச்ல ஓரமா உக்காந்துட்டார்.

    நமக்கு இருந்த வியாதி முத்திருச்சு போல. இவ்ளோ பெரிய புக்க பாக்குறாரே..

    நான் படிச்சுக் காட்டினேன், “arm is supplied by axillary artery, which is a branch of subclavian artery, originating from arch of aorta, which starts from heart. இதுல என்ன சொல்லுதுன்னா, இதயத்துலேந்து அங்க ஒரு ரத்தக் கொழா வருது. அங்க கூட பிரச்சினை இருக்கலாம்”.

    “ஐயோ, என்ன சொல்ல வரீங்க?”

    “பிரச்சினை கைலேயும் இருக்கலாம், இல்ல தண்டு வடத்திலேயோ, இல்ல மூளை, இதயத்துல கூட இருக்கலாம்”

    “புத்து நோயோ?”

     

    “அட எனக்கே தோணல, நீங்க சொல்லிட்டீங்க. அதா கூட இருக்கலாம். மூளைல, செரிப்ரம், செரிபெல்லம்….அய்யோ, பஸ்சை எடுத்திட்டான்” என்று வேகமாக ஓடி, ஒடற பஸ்ல தொத்திக்கிட்டு போயே போயிட்டேன்.

    ———————————————————————————————————————————-   காலேஜில் ஜில்லாக்கு மண்டைன்னு ஒரு சீனியர். அவருக்கிட்ட போய், “அண்ணா, தோள் பட்டைல வலின்னா என்னவாயிருக்கும்”ன்னேன்.

    அவரு, தலைய சொரிஞ்சுக்கிட்டே, என்னை ஒரு ஃபைனல் இயர் பெரிய சீனியர் கிட்ட கூட்டிட்டு போனாரு.

    பெரிய சீனியர், “வாடா ஜில்லாக்கு மண்டை, இவன் யார்றா?”

    ஜில்லாக்கு, “அண்ணா இவன் புதுசா வந்துருக்குற ஜுனியர். ஸ்கூல்லயே தெரியும்”.

    என்ன பாத்தாரு, “என்னடா?”

    எனக்கு கைக்கால் ஒதற ஆரம்பிச்சுது. “அண்ணா, என்கிட்ட ஒரு பேக்ஷன்ட் வந்தாரு”

    “அடிங்ங். வந்து ஒரு மாசம் கூட ஆவல, அதுக்குள்ள கடை விரிச்சிட்டியா?” ன்னு செல்லமா தட்டினாரு. நான் டேபிள் மேல போய் விழுந்தேன்.

    எழுந்து, “இல்லணா, க்ஷோல்டர்ல வலியாம், பஸ்ட்டாண்ட்ல வச்சி மறிக்கிறாரு”

    “என்ன வயசு?”

    “நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். விவசாயி”

    “அட, எதையாவது வெயிட்டா தூக்கிருப்பாரு. இந்தா, இந்த சீட்டுல ஒரு ஆயின்ட்மென்ட்டும் ஒரு மாத்திரையும் எழுதியிருக்கேன். போடச் சொல்லு. 4 நாள்ல சரியாயிடும்”

    நான் தயங்கியபடி, “அண்ணா, மூளை, இதய பிரச்சினை இருக்காதா?”

    “யார்ரா இவன். மாமரத்துல கொய்யாக்கா காய்க்குமா? இனிமே இப்படில்லாம் கடை விரிச்ச, குடல வாய் வழியா வெளிய இழுத்திருவேன். போடா, ஓடு…”

    அப்படியே பைய தூக்கிக்கிட்டு, ரெண்டு கிலோ மீட்டர் ஒடியே பஸ்டாண்டுக்கு வந்துட்டேன். அடிவாங்காம தப்பிச்சோம்டா சாமி.

    ———————————————————————————————————————————-

    பத்து நாள் கழிச்சு…..

    “டாக்டர் தம்பி”

    ஆஹா. பெரியவரே உங்களுக்கு ஒன்னுமில்லன்னு சொல்ல நெனச்சு திரும்பினா…

    மூனு குண்டர்கள் அவர் பக்கத்துல. அப்படியே அடிவயத்துல கிறுகிறுங்குது. அவர் பைனஞ்சு கிலோ எடை கொறஞ்சிருந்தார்.

    “தம்பி, எனக்கு மூளைப்புத்து நோய்ன்னு, அன்னைக்கு நீங்க சொன்னிங்க இல்ல. அதே தான் தம்பி. பாருங்க வெயிட் எவ்ளோ குறைஞ்சிடிச்சி. எட்டு வயசுல போட்ட சட்டை இப்போ கொள்ளுது தம்பி. இவங்க நம்ம பசங்க. கருவண்டு, சில்வண்டு, டைனோசார்”

    “என்னது, டைனோசாரா?” ந்னு இரண்டு ஸ்டெப் பின்வாங்கினேன். இன்னும் ஒரு ஸ்டெப் வச்சிருந்தேன்னா, சாக்கடை.

    “ஆமா தம்பி. பொண்வண்டுன்னு தான் வெச்சேன். ஆனா பய, வீட்ல உள்ள எல்லாத்தையும் முழுங்க ஆரம்பிச்சுட்டான். சும்மா டேபிள் சேரையெல்லாம் கடிச்சே சாப்புடுவான்”ன்னு நாய்க்கு தலைய தடவற மாதிரி, அவன் தலைய தடவினார். “இப்போ கூட வீட்ல இருந்த புல்லட் வண்டிய கொஞ்சம் கொஞ்சமா சாப்ட்டுகிட்டுருக்கான். அதான் டைனோசார்னு பேரு”.

    அவன் பல்லு கொஞ்சம் கூரா இருக்கோ? அய்யய்யோ….இவனுங்க நம்மளை அடிக்கவே வேணாம். ரெண்டு பேருக்கு நடுவில நம்மள நிக்க வெச்சு கட்டிப்புடிச்சாலே போதும். தொண்டை காது வழியா வந்துடும், மூளை மூக்கு வழியா வந்துரும்.

    பெரியவர், எடை குறைஞ்சிருந்தாலும், நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தார்., “தம்பி. ஒரு வாரமா தூங்கல. அப்புறம் யோசிச்சு பாத்தேன். அட பொறந்த எல்லாரும் ஒருநாள் சாவ வேண்டியது தான. என்ன நமக்கு கொஞ்சம் முன்னாடியே சாவு வரப்போவுது. அவ்ளோ தான்”

    நான், “சார். நான் பெரிய டாக்டர்க்கிட்ட கேட்டேன். உங்களுக்கு ஒன்னுமி…”

    அவர் மறித்து, “உங்கள விட பெரிய டாக்டர் யார் இருக்கா தம்பி. நம்ம கதைய தான் அந்த தலகாணி புக்ல படிச்சீங்களே. சரி விடுங்க. நம்ம செல்லப் பயலுங்க, உங்கக் கிட்ட பேசணுமாம். மூனு நாளா இந்த பஸ்ட்டாண்ட்ல சுத்திக்கிட்டு இருக்கோம். வேற ஸ்டாப்ல ஏறீட்டீங்களோ. ஹஹ பரவால்ல”.

    தானாகவே எச்சில் விழுங்கினேன். இந்த நேரம் பாத்து, தொண்டை வரண்டுடிச்சி. வலியோட முழுங்கினேன்.

    கருவண்டு கரகரப்பான குரலில், “டாக்டர் தம்பி”ன்னான். அவனை அண்ணாந்து மேல பாத்தேன். யம்மா…பஸ்ல மூனு பேர் சீட்ல இவன் ஒருத்தனே ஒக்காந்தாலும் பத்தாதே. தல வேற இடிக்குமே. திரும்பயும் வலியோட எச்சில் முழுங்கல். அவன், “அப்பாக்கு மூளைல புத்து நோயா?”ன்னான்.

    “இ..இ..இல்லீங்க. அவருக்கு ஒஒ ஒன்னுமில்ல”

    பெரியவர் நெஞ்சை விரைத்துக் கொண்டு, “தம்பி, உண்மைய சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க? புத்து நோய்ன்னு தைரியமா சொல்லுங்க தம்பி”

    நான் கருவண்டைப் பாத்து, “இல்லீங்க அண்ணா. அவரு…”

    பெரிசு, “அட தம்பி கிழிஞ்ச ஊரு போலருக்கு. அங்க தான் வெளங்காத சாக்கு மூட்டைப் பயலுவோல அண்ணாம்பாங்க”.

    “அதெல்லாம் இல்லைங்கண்ணா”. மூதேவி பெருசு, கரெக்ட்டா ஊர் பேரைக் கண்டு புடிச்சிட்டாரே. ஐயோ, என்ன பண்ணுவேன்.

    கருவண்டு கண்கள் சிவந்து சத்தமா, “தம்பி, அப்பாக்கு புத்து நோயா இல்லையா?” என்ற படி பின் சட்டைக் காலரை தொட்டான்.

    “இல்ல. ஆமா. இல்ல.” அவன் கையை பின்னாடிலேந்து, லைட்டா தலைக்கு மேல எடுத்தான். கைப்பிடி தெரிஞ்சுது.

    “ஆமா அவருக்கு மூளைப் புத்துநோய்”ன்னு கத்தினேன். பேண்ட் ஏதோ ஒரு காரணத்துனால நனைஞ்சுது.

    கருவண்டு கைப்புடிய பழயபடி உள்ள எறக்கினான். மூனு பேரும் முட்டிப் போட்டு என் கையப் புடிச்சாங்க. “நன்றி தம்பி”. பெரிசு இப்போ நாலு கிலோ கூடின மாதிரி என்னைப் பெருமையா பாத்தார்.

    அவர், “நீங்க சொன்ன உடனேயே உயில் எழுதிட்டேன் தம்பி. இவனுங்க நான் சாகப் போறத நம்பாம நேர்ல தெரிஞ்சுக்கிட்டாத் தான் நம்புவோம்னு அடம் புடிச்சாங்க. அதான்”.

    “சரி சரி”, ஐயோ நான் நினைக்காமலேயே வாய்லேந்து தானா வார்த்தை வருதே.

    “வரோம் தம்பி, இந்தாங்க ஃபீஸ். பத்து ருபாய்”

    ——————————————————————————————————————–

    15 வருக்ஷம் கழிச்சு….

    சரி, அவருக்கு என்னாச்சுன்னு கேக்கறீங்களா. அடப் போங்க பாஸு. நான் இன்னிக்கும் எலிப்புழுக்கை ஊருக்கு போறதுன்னா, சொரிப்பேட்டைக்கு பஸ் புடிச்சி, 30 கிலோமீட்டர் சுத்தி, எலிப்புழுக்கை பஸ்ட்டாண்டுல பஸ் நுழையறதுக்கு முன்னால, ஓடுற பஸ்லேந்து எறங்கி ஒடுவேன். நீங்க வேற.

     

    Share
  • வார ராசி பலன்!…24-06-13 – 30-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: இந்த வாரம் மாணவர்கள் பட்ட பாடுக்கு நல்ல பல்ன் கிடைக்கும். வேலை செய்யும் போது பணியில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுத்தால், அவர்கள் தீட்டிய திட்டங்களில் சிறிது தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கையில் பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது. சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாக பழகினால், வேலைகளை நிம்மதியாக செய்ய இயலும். வேலை செய்யும் இடங்களில், பெண்கள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஈனவே தன்னுயைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. போட்டிகளில் வியாபாரிகள் புது யுக்திகளைக் கையாள்வது மூலம் வெற்றி பெற்லாம்.

    ரிஷபம்: பொது வாழ்வில் இருப்பவ்ர்கள் வார்த்தைகளை விட, செயலில் வேகம் காட்டுவது நல்லது என்பதை நினவில் கொண்டு செயல்பட்டால் அவர்களின் முன்னேற்றம் வளமாக இருக்கும். கூடுத் தொழில் புரிபவர்கள் பங்குதாரர்களிடையே ஒறுமையையை வள்ர்த்துக் கொண்டால், வாடிக்கையாள்ர்களின் தேவைகளை கவனிப்பது என்பது எளிதாகும். மாணவர்கள்பாராட்டுக்குரிய செயல்களை செய்து நல பியரைப் பெறுவார்கள். வார முதலி சுய தொழில் புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலைப்பளுவின் காரணமாக கலைஞர்களுக்கு இந்த வாரம் சற்று நெருக்கடியான வாரமாக அமையும்.

    மிதுனம்:  பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். இந்த வாரம் மாணவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்க ளுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கைகூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. சுயதொழில் புரிபவர் க கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். கலைஞர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கடகம்: பணியில் இருப்பவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால்,புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் இந்த வாரம் கட்டட பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.கலைஞர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல் பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். சுய தொழில் புரிபவர்கள் பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைபிடிக்க வேண்டாம்..

    சிம்மம்: கலைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டால், நன்மைகள் பல உண்டு. இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப் பாக பணிபுரிதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல்,இருந்தாலே பாதி கவலை குறைந்து விடும். கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம்.

    கன்னி: கலைஞர்கள் தாழ்வு மனப் பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால்,ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். வியாபாரி களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். சுயதொழில் புரிபவர் கள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாதவண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பொது வாழ்வில் இருப்பவர் களின் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.

    துலாம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.

    விருச்சிகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் எல்லோரிடமும், எல்லா விஷயங்களையும் விவாதிக்க வேண்டாம். பெண்கள் சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள் சுற்றியிருப்பவர்களின் வீண் புகழ்ச்சி யில் மாட்டிக்கொள்ளமல் கவனமாக இருப்பது நலம். சுயதொழில் புரிபவர்கள் இழப்புக்களை நினைத்து வருந்தாமல் முன்னேறிச் சென்றால், வெற்றியும் விரும்பும் புகழும் உங்கள் வசமாகும்.! கலைஞர்கள் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளும் காரியங்களில் வீண் விவாதம், அவநம்பிக்கை ஆகியவை குறிக்கிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    தனுசு: இந்த வாரம் சுயதொழில் புரிபவர்கள் கணக்கு வழக்குகளில் நிலவும் சிக்கல்களை சீக்கிரமாக தீர்த்து விட்டால், அபராதம் கட்ட வேண்டிய நிலையிலிருந்து தப்பித்து விடலாம். மாணவர்கள் பாடங்களை சேர்த்துப் போடாமலிருந்தால், தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். வியாபாரிகள் தங்களைத் தேடி வரும் வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. குடும்ப சச்சரவுகள் சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடைபிடிப்பது அவசியம். கலைஞர்கள் பண விவகாரங்களில் எவரையும் நம்பி செயல்படுவதை தவிர்த்து விடவும் .

    மகரம்: கலைஞர்கள் முக்கியமான விவகாரங்களில் பிறரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டால், திட்டமிட்டப்படி செயல்கள் நடை பெறும். வியாபாரிகள் நீண்ட தூர பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெண்கள் , முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்களை நம்பி பிறருக்கு எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்களின் உற்சாகம் குறையாமலிருக்க உணவு உரையாடல் இரண்டி லும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது. மாணவர்கள் சோம்பேறித்தனம் உங்களை பின் தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதியவர்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும்.

    கும்பம்:  பொது வாழ்வில் இருப்பவர்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் வரை பிறரிடம் வீண் வாக்குவாதத்தில் இறங்க வேண்டாம். பெண்கள் பணியிடத்தில் அவசியமற்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுங்கள். வேலைகள் சீராக நடைபெறும். பணியில் இருப்பவர்கள் வேண்டாத விஷயங்களில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து விட்டாலே மனம் நிம்மதியாய் இருக்கும். மாணவர்கள் உணர்ச்சிகளின் உந்துதல்படி முடிவெடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இழப்புக்களை பெருமளவு குறைத்து விடலாம். கலைஞர்கள் அதிக பரபரப்பு, அதிக ஓய்வு இரண்டும் உங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்ற இடம் கொடாதீர்கள்.

     மீனம்:மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது

    Share