பார், பகலும் கழிந்தது இரவும் போனது
-கீதா மதிவாணன்
பார், பகலும் கழிந்தது இரவும் போனது,
சூரியன் மேற்கை அடைந்து மறைந்தது.
அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.
முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே
அந்தப்பொழுதும் இருந்தது.
எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,
பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்
மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.
முந்தைய இரவுகளைப் போலவேதான்
அந்த இரவும் இருந்தது.
அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,
இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
பறவைகள் கீச்சிசைத்தன,
அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.
வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது.
உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,
விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை,
தமிழாக்கம்: கீதா மதிவாணன்)
படத்துக்கு நன்றி: http://srilankaoneness.blogspot.com/2010/06/oneness.html
அழகான கவிதை. ரசித்துப் படித்தேன். இனம் தெரியாத ஏதோ ஒன்று மனம் தொட்டது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.
கவிதையில் ஒரு ஈர்ப்பு. பாராட்டுக்கள்.
பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும் தனுசு அவர்களுக்கும் அன்பான நன்றிகள்.