நினைவுகள் !!!
பி.தமிழ்முகில் நீலமேகம்
ஏடெடுத்து எழுதி வைக்க
எத்துனையோ நினைவுகளுண்டு !!!
நினைவுகளை எல்லாம்
வண்ண மலர்ச்சரமாக்கி
அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்
இலயித்திருக்க பொழுதேது ???
காற்றினில் கலந்து வந்து
நாசியில் படிந்திடும் – மலரின்
நறுமணம் போல்
நினைவலைகளில் கலந்து வந்து
நெஞ்சமதில் இனித்திடும்
இனிய இன்ப நினைவுகள் !!!
கதிரவனின் ஒளி பட்டு
மெல்ல விலகி ஓடும்
பனித்திரை என – உள்ளமதில்
படிந்த துன்பச் சுவடுகளை
துடைத்தெறியும் பேரலையென
மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!
மலரும் நினைவுகளால்
மனதினில் உருவாகுமோர்
மகிழ்ச்சி ஊற்று ! – அது
இதழின் ஓரத்தில்
கொண்டு வருமே
அழகானதோர் புன்னகை கீற்று !!!
நினைவுகள் – அவை தாம்
ஆகுமே உள்ளக் காயங்கட்கு
நல்லதோர் அருமருந்தாய் !!
அவையும் தான் வருடுமே
துடித்த தவித்த உள்ளங்களை
மென்மையான மயிலிறகாய் !!!
நினைவுகள்…
நினைவுகளை மலர்ச்சரமாக்கி நறுமணத்தில் இலயித்திருக்க …
மலரின் நறுமணம் போல் இன்ப நினைவுகள் …
துன்பச் சுவடுகளை துடைத்தெறியும் நினைவலைகள் …
மகிழ்ச்சி ஊற்று கொண்டு வருமே புன்னகை கீற்று …
உள்ளக் காயங்கட்கு அருமருந்தாய் வருடுமே மயிலிறகாய் …
நினைவுகள்…
ஆகா, கவிதையும் படமும் அழகோ அழகு தமிழ்முகில் .
பாராட்டுக்கள்.
அன்புடன்
….. தேமொழி
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!
மயிலிறகாய் வருடிய நினைவலைகளைச் சுமந்து வந்த அழகான கவிதை!!!.
/////நினைவுகள் – அவை தாம்
ஆகுமே உள்ளக் காயங்கட்கு
நல்லதோர் அருமருந்தாய் !!
அவையும் தான் வருடுமே
துடித்த தவித்த உள்ளங்களை
மென்மையான மயிலிறகாய் !!!/////
மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோதரி!!!.
மலரும் நினைவுப் பூக்களால்
தொடுத்த
மணக்கும் கவிதைச் சரம்..
வாழ்த்துக்கள்…!
@ பார்வதி இராமச்சந்திரன்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!
@ செண்பக ஜெகதீசன்
தங்களது அன்பான வாழ்த்துகட்கும், கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!