Blog

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    இன்னிசையில் பண்ணிசைக்கும் பொன்மணியின் வெண்பாக்கள்

    முன்னுரை

    கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றிற்கு இயைய இலக்கியத்தையோ கவிதைகளையோ நோக்குவது ஒன்று. படைப்பிலக்கியங்களில் மூழ்கிப் படைப்பாளன் அனுபவத்தோடு உள்ளார்ந்து ஒன்றி அவற்றினின்றும் பெறப்படும் கோட்பாடுகளை நிரல்படுத்தி நிறுத்துவது வேறொன்று. ஒரு சாதாரண கவிதைத் திறனாய்வாளன் என்ற வகையில் நான் பின்னதையே என் திறனாய்வுக் கோட்பாடாகக் கொள்கிறேன். எனவே யாப்பினை முன்னிறுத்திக் கவிதைகளை நோக்குவதையோ கோட்பாடுகளை முன்னிறுத்தி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதையோ நான் ஆதரிக்கவில்லை. ஆதரிப்பாரை நான் எதிர்க்கவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. ஆனால் கவிதையின் வெற்றி பொதுவானது. வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே நெறிசார் கல்வி பயின்று முகநூலில் விரல்விட்டு எண்ணத்தகும் கவிஞர் சிலருள் ஒருவராகவும் சொல் எளிமை, பொருள் ஆழம், அழகியல் முதலியவற்றைப் புற அழகாகவும் சமுதாயச் சிந்தனைகளை அடிநாதமாகவும் நவரசங்களையும் கவியில் கொண்டு வந்து கவிதையைச் சிறக்கச் செய்த சிறந்தவருள் ஒருவராகவும் திகழ்பவர் நாகை பொன்மணிதாசன். அவர் படைத்துள்ள ‘இன்னிசையில் என் வெண்பா’ என்னும் நூல் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தலைப்பு – தெளிவுக்காக ஒரு விளக்கம்

    விட்ட ஆகுபெயர் விடாத ஆகுபெயர் என்றெல்லாம் தமிழிலக்கணக்காரர்கள் சொல்வார்கள். ஆகுபெயரின் பொதுவான இலக்கணத்தோடு அவை எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆராயமாட்டார்கள்., கவலைப்படமாட்டார்கள்.. அது பற்றிய ஆராய்ச்சி இங்கில்லை. ‘இன்னிசை’ என்பது இன்னிசையைக் குறிக்காமல் இன்னிசை வெண்பாவைக் குறித்தது. இன்னிசை வெண்பா என்பதனாலேயே இது ஒரு ராகம் தழுவிச் செவிக்கு இன்பம் நல்கும் என்று பொருளில்லை. நேரிசை வெண்பாவின் இலக்கணக் கூறுகளில் பலவகைகளில் வழுவி வருவனவெல்லாம் இன்னிசை வெண்பாக்கள். அவ்வளவுதான். இந்த வழுவுதலில் எழுபத்தைந்து விழுக்காடு தனிச்சொல் இன்றி வருவது. அதனாலேயே பாட்டெழுதும் பலரும் அதுதான் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் என்று கருதிவிடுகிறார்கள். அது மட்டுமன்று குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் மூவகை வெண்பாக்களின் பெயர்க்காரணம் கொஞ்சம் புலப்படுவது போல ஏனைய நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்பவற்றிற்கான பெயர்க்காரணம் புலப்படுமாறு அமையவில்லை. இவையிரண்டுக்குமான காரணமே புலப்படாத போது நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல்களுக்கான காரணம் எப்படிப் புலப்படும்? ‘சிந்தியல்’ என்னும் சொல் மூன்றென்னும் எண்ணைக் குறிப்பதால் கொழு சென்ற நெறியே குத்தூசியும் செல்லுமாறு போல நான்கடியில் அமையும் நேரிசை வெண்பா மூன்றடியில் வந்தால் நேரிசைச் சிந்தியல் எனவும் தனிச்சொல் இன்றி நான்கடியால் அமையும் இன்னிசை வெண்பா மூன்றடியில் வந்தால் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் சொல்வது வழக்கானது. தந்தையின் பெயரே தெரியாத போது தனயனுக்கு நாம் முன்னெழுத்தைப் போட்டுக் கொண்டு வருகிறோம்.

    வெண்பாக்களைப் பற்றி இங்கே பதிவிடப்படும் கருத்துக்களெல்லாம் என் கருத்துக்களோ நானே உருவாக்கிய புத்திலக்கணக் கருத்துக்களோ அல்ல. அளப்பரும் புலமைக்கடல் அமிதசாகரர் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்ற நூலையும் அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரையையும் அடிப்படையாக வைத்தே பதிவிடப்படுகின்றன. காரணம் பொதுவெளியில் இந்தக் கட்டுரையைக் காணும் அன்பர் பலர், ஒரு பாட்டுக்கான இலக்கண அமைதிக்காக நான்கு நூல்களைச் சான்றாக்குவார்கள். அவர்களோடு இந்த வயதான காலத்தில் நான் மல்லுக்கட்ட முடியாது, எனவே காரிகை அடிப்படையில் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுள் ஏதும் ஐயமிருப்பினும் எடுத்துரைக்கலாம்.

    அளவடி நான்கும் சிந்தடி ஒன்றுமாக அமைந்து முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று நாள் என்னும் ‘நேரசை’ வாய்பாட்டானும் ‘மலர்’ என்னும் நிரையசை வாய்பாட்டானும், ‘காசு’, ‘பிறப்பு’ என்னும் குற்றியலுகர வாய்பாட்டானும் நிறைவடைவது நேரிசை வெண்பா எனப்படும். வெண்பாவின் ஈற்றடி பற்றிய மாற்றங்களும் ஆராய்ச்சிகளும் தனி.

    அப்படியானால் இரண்டாவது அடியில் தனிச்சொல் இன்றி வருவதுதான் இன்னிசை வெண்பா என்றால்,

    1. முதலடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    2. மூன்றாவது அடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    3. அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்றுவந்தால் அது என்ன பா?
    4. நான்கடிகளுள் எங்காவது கனிச்சீர் வந்துவிடின் அது என்ன பா?
    5. ஒரு விகற்பம் இரு விகற்பம் என்றமையாமல் நான்கடியும் நான்கு வகையாக அமைந்தால் அது என்ன பா?

    நேரிசை வெண்பாவிலிருந்து விலகி நிற்கும் மேற்சுட்டிய ஐந்து வேறுபாடுகளோடு வேறுசில வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் இன்னிசை வெண்பாக்களே. இந்த விரிவாக்கவுரை யாது நோக்கியதோவெனின் யாப்பிலக்கணத்தையோ கோட்பாடுகளையோ அடி நரம்புகளில் தன்மயப்படுத்திக் கொள்ளாமல் கவிதை செய்தால் அந்தக் கவிதையின் செப்பமும் அழகும் கெடும் என்பதை விளக்குவதற்காகத்தான். அது பற்றி இந்தக் கட்டுரையில் அவ்வப்போது  விளக்கப்படும்.

    சந்தத்தைச் சொந்தங் கொண்ட கண்ணதாசனும் பொன்மணிதாசனும்

    யாப்பிலக்கணத்தை ஓரளவு அறிந்தவராயினும் கண்ணதாசன் சந்தத்தை முன்னிறுத்தியே தன் கவிதைத் தொழிலைச் செய்திருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற காப்பியமான ‘மாங்கனி’ முழுமையான கட்டுமானச் சிறப்பைக் கொண்டதன்று. இதில் என்ன சிறப்பு என்றால் மெட்டுக்குப் பாட்டு என்னும் புதிய தொழில்நுட்பத்திலும் அவர் இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியிருக்கிறார். “சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ் சிந்துபல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்! இந்தத் தேச முற்றும் ஆண்ட கதை சொல்லும்” என்பது கண்ணதாசன் எழுதிய ஒரு திரையிசைப்பாடல் அவர் தமிழைச் சந்தம் நிறைந்த தமிழாகவும் சங்கீதம் பாடும் தமிழாகவுமே நோக்கியிருக்கிறார்.

    “செவ்வரி ஓடிய கண்களில் இரண்டினில்
    சேலொடு வேலாட – இரு
    கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும்
    கொஞ்சி மகிழ்ந்தாட”

    பாடலை மேம்போக்காகப் படிப்பவர்கள் இது குற்றாலக் குறவஞ்சியின் சாயல் என்றோ நகல் என்றோ சொல்லிக்கொண்டே கடந்து போய்விடுவார்கள். அவர்கள் பயணங்கள் முடிவதில்லை!.  நல்ல கவிஞனைப் பாராட்ட மறக்கலாம். நல்ல கவிதையை அடையாளம் காணத் தவறிவிடக்கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாகவும் பொறுப்புடனும் இருக்கிறேன்.

    “என்ன மன வேதனையும் என்ன ளவில் மாறிடுமே
    என்னருகில் மதுவிருந்தால் போதும்!
    உண்ணுகிற இரவி லென்னை ஊக்குகிற மது குடித்தால்
    திண்ண மெனக்கில்லையேது தீதும்!
    முன்னுக்குப் பின் முரணாக மூச்சு வரும் என்றாலும்
    கண்ணுனக்குள் காணுகிறேன் சொர்க்கம்!
    பெண்ணுனக் குள் காணுகிற பெரிதொரு இன்பமிது
    பேசயிலை இதனிடையோர் தர்க்கம்!”

    என்று ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பொன்மணிதாசன். சந்தத்தை உள்வாங்கி விருத்தம் போல ஒரு நாலடிச் சிந்தினைக் காவடி சிந்து போல் எழுதியிருப்பதைக் காணலாம். ஈரடிக்கு ஓர் இயைபாய் அமைந்த சந்தத்தை நெஞ்சில் நிறுத்தி அவரால் இப்படி எழுதப்படும் கவிதைகள் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே பொன்மணிதாசன் கவிதைகளைச் சுவைத்துத் திறனாய்வு செய்து ஆராய்கிறபோது யாப்பிலக்கணம் பின்னிறுத்தப்பட்டுச் சந்தத்தை முன்னிறுத்தும் உண்மையான கவிதைக் கொள்கையே எடுத்தோதப்படுகிறது. இதனால் கவிதைக்கு யாப்பு இன்றியமையாத ஒன்றன்று என்பது பொருளன்று. யாப்புக்குள் கவிதையைத் தேடுவது பிண அறையில் மணமகனைத் தேடுவது போல! கவிதைக்குள் யாப்பமைதியைத் தேடுவது சொந்தத்திற்குள் மாப்பிள்ளை தேடுவது போல!

    இன்னிசையில் என் வெண்பாவின் பாடுபொருள்

    இந்நூற் கவிதைகளை நன்கு உள்வாங்கி உளத்திருத்தி அணிந்துரை அளித்திருக்கும் அன்பர் தமிழ்ச்செம்மல் திரு.இராம.வேல்முருகன் அவர்கள் இதன் உள்ளடக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்க்குப் பேருதவியாக இருக்கிறது, எனக்கும் சேர்த்து.  “நட்பு, காதல், பசி தீர்த்தல், நுண்ணறிவு, நோய்தீர்த்தல், பிணி, சான்றோர் துணை, களவு, வறுமை, இறை நம்பிக்கை, தமிழ்ப்பற்று, உலகப்பற்று, தாய்மை, ஆண்மை, கொடைத்தன்மை, நூல் மற்றும் நூலைப்படித்தல்” என ஒரு கதம்ப மலர்க்கூட்டாக உள்ளது. நகைச்சுவை, இறைப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று நீதி நெறிகளைப் போற்றுதல், பெற்றோரைப் போற்றுதல்’ என அறுசுவை உணவை நமக்கு அள்ளித் தருகிறது” என்னும் குறிப்பு பயனுள்ளதாகும். அதே நேரத்தில் பொன்மணியின் வெண்பா ஆற்றலைப் புகழ்வதற்காக “வெண்பா எழுதுவாருடைய வாய்ச்சொல் பலிக்கும்” என்றெல்லாம் இட்டுக்கட்டி உரைப்பது கெட்டிக்காரன் புளுகாகவே முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம் என்பது கூட ஒரு அனுமானமே தவிர வரலாற்று உண்மை கிடையாது. உண்மையாகவே இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பில்லை., வழியில்லை. மக்கள் தொகை குறைப்புக்கு இப்படியொரு வழி இருப்பதாகப் பன்னாட்டு மன்றம் அறிவிக்கவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் காணும் சில பொருள் பற்றிய சிறப்புக்களை இனித் தொடரலாம்.

    பாடுபொருள் வறட்சியும் காலநிலை மாற்றமும்

    இன்றைய கவிதைகளில் காணப்படும் பாடுபொருள் வறட்சி பொன்மணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புக்களானாலும் நாளும் வெளிவரும் முகநூல் கவிதைகளானாலும் தன்னைப் பாதிப்பனவற்றைக் கவிதையாக்கும் இயல்பான ஆற்றல் இவருக்கு உண்டு. காலநிலை மாற்றம் என்பதும் அதனால் பெருகும் வெள்ளமும் காயும் வறட்சியும் மக்களைப் பாதிக்கிறது. ஆனால் கவிஞர்களை அவ்வளவாகப் பாதித்ததாகத் தெரியவில்லை. தலைவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து, தங்கள் மணநாள் வாழ்த்து முதலியனவற்றை எழுதிக்கொண்டும் தேடிப் பெறும் கவியரங்கங்களில் எதனையாவது எழுதி அதனைக் கவிதையென்று சொல்லும்படி வற்புறுத்தியும் பொழுது போகவில்லை என்றால் காதல் கவிதை என்ற பெயரில் குறுங்கவிதை எழுதுவதுமாக இன்றைய படைப்பாளர்களின் பொழுது கழிகிறது. அன்பர் பொன்மணிதாசனை இயல்பிலேயே கவித்துவம் துளிர்க்கப் பெற்றவராதலால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவியியல் வறட்சியைப் பாடுபொருளாக்கியிருக்கிறார்.

    “கோடை யிடியில்லை! கொட்டும் மழையில்லை!
    ஓடையில் நீரில்லை! ஓடநீர் ஆறில்லை!!
    தேடிக் கிடையாத் தெளிநீரைத் தேடியினும்
    வாடி அலைய வலி!”

    என்று ஒரு காலத்தில் நடந்த நதியைப் படுத்த நதியாகப் பார்த்திருக்கிறார் பொன்மணிதாசன். இரண்டாவது அடியின் மூன்றாவது சீரான ஓட நீர் என்பதை இரண்டாகப் பிரித்து “நீர் ஓட ஆறில்லை” எனப் படிக்க. கவிதையில் நதி நடப்பதைக் காணலாம். இந்தப் பாடலின் ஈற்றடியைக் கவனித்தால் ‘வாடி அலைய வலி’ என்று யாப்பிலக்கணம் காப்பாற்றப்பட்டு இருப்பதைக் காணலாம். அதாவது இன்னிசை வெண்பாவில் வெண்டளை மட்டுமே வரவேண்டும் என்னும் தவறான புரிதலால் இந்த நிலை. இந்த அடியை வாடி அலைவதே வலி! என்று மாற்றிப் படித்தால் கவிதையும் இனிக்கும்!

    அந்தக் கால இலக்கண ஆசிரியர்கள் நூலுள் வரக்கூடாத குற்றங்கள் பத்து என வகுத்து அவற்றுள் கூறியது கூறலையும் ஒன்றாக்கினர். இன்றைக்கு அறிவியலின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே. தட்டச்சுப் பிழை என்பதே இல்லை. இருக்கக் கூடாது. இப்போது அழிதிறன் கூடிய போனைப் பயன்படுத்துகிறோம். கணினியைப் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் கூறியது கூறிவிடுகிறோம். ஆம். இந்த நூலின் எழுபத்தைந்தாம் (76) பாடலாக உள்ள இதே பாட்டு இதே நூலின் நூற்று அறுபத்தேழாவது (167) பாடலாகவும் அச்சேறியுள்ளது. எனின் இந்தத் தவறு கணிப்பொறியின் தவறா? நம்முடைய தவறா? சிந்திக்க வேண்டாமா?  செய்தித் தொகுப்புக்கள் தொலைக்காட்சிக்கு உரியன. கவிஞர்களுக்கு அல்ல. அண்ணாவைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னால் நம் கவிஞர்கள் உடனே தொடங்கிவிடுவார்கள். “காஞ்சியிலே நமதண்ணா பிறந்தார் அன்று”. அண்ணா காஞ்சியிலே பிறந்தாரா? இல்லையா? என்பது காஞ்சி வட்டாட்சியர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் அண்ணாவுக்கு இருப்பிடச் சான்று வழங்கத் தேவையில்லை. இந்தச் செய்தியைக் கவிஞன் எழுதுகிறபோது “நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்று எழுதுவான். அதுபோல ஓடாத நதியைப் பாடிய கவிஞன் அது ஓடுவதற்கான வழியை இன்னொரு பாடலிலே பாடுகிறான்.

    “நல்லனசெய்! மறவாதே! நாம்வாழும் ஊருக்குள்
    உள்ள குளம் வார, ஓடும் வடிகால்கள்!
    செல்ல வழிகாட்டு! சீர்படுத்து ஏரியினை!
    வெள்ளமெனில் வேண்டாம் பயம்”

    தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனைக் கண்காணிப்பதும் கவலைப்படுவதும் உண்மைக் கவிஞனின் பணி. அந்தப் பணியை வெகு திறம்படச் செய்திருக்கிறார் பொன்மணிதாசன். நூலின் ஆறாவது பாடலாகச் செய்ய வேண்டியனவற்றையும் செழிப்பையும் பாடிய தாசன், எழுபத்தாறாம் பாடலில்தான் வறட்சியைப் பாடியிருக்கிறார். இது ஒரு தொகுப்பு நூல்தான் என்றாலும் இந்தச் சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை.

    மரபுத் தடம் பயிலும் பொன்மணிதாசன்

    அறிவைப் பற்றிப் பத்துக்கும் மேற்பட்ட குறட்பாக்களில் ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அதுபற்றிய பொருட்பால் ஆராய்ச்சி போதாதென்று கருதிய அவர், ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ என உவம அளவையால் காமத்துப்பாலிலும் ஆராய்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கற்றறிதல். மற்றொன்று கேட்டறிதல். இவ்விரண்டு சொற்களுக்கும் விகுதியாக அமைந்திருப்பது அறிதல். அறிதல் என்றால் என்ன? கற்றாலும் கேட்டாலும் உன்னுடைய அறிவையே நம்பு என்பதே. நண்பன் தீய வழிகாட்டலும் உண்டு. பகைவன் ஆக்கத்திற்கு வழிகாட்டுவதும் உண்டு. மனிதனுக்கு மூவகைப் பண்புகள் மாறிமாறி வரும். இந்தப் பண்பு மாற்றம் சொல்லின்கண் சோர்வு உண்டாக்கக் கூடும். எனவேதான் யார் எதனைச் சொன்னாலும் அச்சொல்லில் உள்ள மெய்ப்பொருளைக் காண்பது அறிவு என்கிறார். சொல்கிறவன் பொருளைச் சொற்களால் கூறுகிறான். கேட்பவன் சொல்லில் மறைந்துள்ள பொருளைக் காண்கிறான். இந்த நுண்ணியத்தை வள்ளுவரைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்? இந்த ஆழமான மரபினை வழிமொழிந்திருக்கிறார் பொன்மணிதாசன்.

    “சொல்வார் சொல்தன்னைச் சொன்னாலும் நம்பாதே!
    உள்ளாய்ந்த உண்மைகள் உள்ளதா? நோக்கிப்பின்
    நல்லதெனில் நாம் கொள்ளல் நன்மை பயக்குமாம்!
    சொல்லுணர் சொல்லேற்றுச் செய்”

    சொல் கருவி. கருத்து பொருள். சொல்பவன் சொல்லாள்கிறான். கேட்பவன் பொருள் கொள்கிறான். திருவள்ளுவர் சொல்லைக் கருதாது பொருளைக் கருதியவர்.

    “எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு”

    “பயன்கருதிச் சொற்கேள்!” என்னும் பாங்குடைய பொன்மணிதாசன் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரச் சாரத்தை ஒரு இன்னிசை வெண்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “மிக்கதொரு பட்டறிவால் மேன்மை அடைந்தோர்கள்
    தக்க தகஉரைப்பர்! தவறுகளும் நேராவே!
    சிக்கல் தவிர்க்கச் சிறந்தோர்கள் சொல்லுவதை
    ஒக்க உயரலாம் ஓர்!”

    மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஔவை மொழி. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும். பின் இனிக்கும் என்பது வழக்கியல் மரபு. இந்த நீண்ட மரபியல் தொடர்ச்சியை பொன்மணிதாசன் பாடலில் காணமுடிகிறது. இதுதான் மரபுக்கவிதை!

    “ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
    நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்”

    விதி, முறை, ஊழ், பால், தெய்வம், நியதி என்பன ஒருபொருட் கிளவி. எனவே தெய்வத்தின் பால் நம்பிக்கை வைத்த ஔவை பாடிய நல்வழி பாடல் இது. இந்த மரபு பொன்மணி வாக்கில் எப்படி வந்திருக்கிறது என்றால்,

    “வேண்டாத ஒன்று வேண்டுதல் வேண்டிவரும்
    தீண்டாத ஒன்றுமோர் தீண்டிடவே வேண்டிவரும்
    ஈண்டிடும் கல்வியில் இல்லை பொறாமையும்
    காண்டிடல் வெற்றி கடுகு”

    “ஒன்றை நினைக்கின் அஃதொழிந்திட்டு ஒன்றாகும்” என்னும் ஔவை வாக்கு இப்படிப் பதிவாகியிருக்கிறது. “நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தனோ!? என்பார் வள்ளலார். அடக்கத்தின் மறு உருவம் வள்ளலார்.

    “மற்றோர் வருந்த மனங்கோணச் செய்தல் ஓர்!
    சிற்றறிவுச் சிந்தை சினமும் செய்யாதே
    உற்றவரும் ஊடே உயரம் மறவா நீ
    கற்றது கைம்மண் அறி!”

    தமிழ்ப் பனுபவல்களின் சாரமே அறம்! அன்பு! அடக்கம்! என்னும் மூன்றுமேயாகும். இந்த மண்ணோடு கலந்த பண்புகள் அவை. அதனால் அவை மரபாயின. இந்த இன்னிசை வெண்பாவில் அடக்கத்தை முன்னெடுக்கும் ஒரு மரபியல் கவிஞரைக் காணுகிறோம்.

    தத்துவத்தில் மிதக்கும் தாசன்

    எந்தப் பாடலை எழுதினாலும் அதனுள் மானுட வாழ்வியல் தத்துவத்தைப் பொதிந்து வைக்கும் மரபினைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். கண்ணதாசனைத் தன் வழிபடு குருவாகக் கொண்டிலங்கும் பொன்மணிதாசன் தான் எழுதும் பாடல்களில் தத்துவத்திற்குத் தனியிடம் கொடுத்தும் பாடல்களில் தத்துவ முத்திரை பதித்து வந்திருப்பதை, வருவதை அறிய முடிகிறது.

    “விடிந்தது போலப் பிறப்பெனச் சொன்னான்
    விந்தையிலையே இறப்பினி லெதுவும்
    நடிக்க வந்த பின் நாணங் கொண்டால்
    நாடக மெப்படி நன்றாய் நடக்கும்?”

    அண்மைக்காலக் கவிஞரிடையே இத்தகைய இயல்பான தத்துவப் பார்வை காண்பது அரிது என்பது என் கருத்து.

    “என்னுள் எனைத்தேடி என்னைநான் காண்கிலனோ?
    என்னுள்ள ஏக்கத்தில் என்றேனும் ஓர்நாளில்
    கண’ணுள வருமந்த காட்சியதில் நிச்சயமாய்
    என்னையே காண்பேன் இனிது”

    “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” என்பார் வள்ளலார்.

    “மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா? தன்னை
    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?”

    என்பார் கண்ணதாசன். இந்த மரபியல் சிந்தனை பொன்மணிதாசனின் பாடல்களில் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    “நானெழுதும் பாட்டுதனை நானெழுத வில்லையெனில்
    தானெழுதிக் காட்டுகிறான் தம்பிரானும் யாரறிவார்?
    நானெழுதேன் என்னுமுண்மை நானறிந்த போதினிலும்
    நானென்ன சொல்வேன் சொல்!”

    ‘தத்துவம்’ என்பது மானுடத்தை விரக்தியை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளமன்று. மறைந்து கிடக்கும் உண்மையினைத் துல்லியமாகக் காட்டும் தனிப்பார்வை. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் ஒரு வரி மானுடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொண்டால் நீண்ட நெடிய தமிழ்மரபைப் புரிந்து கொள்ள முடியும்.

    காதலெனும் தீவினிலே

    தற்காலக் கவிஞர்கள் சந்திக்கும் பெரிய சவாலே பாடுபொருள்தான். இராமனைப் பாடுபொருளாக்கிய கம்பனையும் கண்ணகியைப் பாடுபொருளாக்கிய இளங்கோவையும் சீவகனைப் பாடுபொருளாக்கிய தேவரையும் கொஞ்சம் தள்ளிவைத்து அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடுபொருளாக்கிக் காவியம் பாடியவர் சேக்கிழார். இதனை வேறு வகையாகச் சொன்னால் தனிமனித உணர்வுகளைப் பாடுபொருளாக்கிய பழந்தமிழ் கவிதை, அக்கோட்பாட்டிலிருந்து சற்று ஒதுங்கி மக்களுள் சிறந்தாரையும் கடவுளரையும் பாடிய ஒரு நிலை வந்தது. பின்னர் அதனின்றும் விலகிப் பல்லோரைப் பாடுபொருளாக்கிய சூழலுக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. பக்தி இலக்கியக் காலத்துள் பலரும் சேர்ந்து ஒருவனைப் பாடும் நிலை வந்தது. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளைப் பாடியதும் நால்வர் பாடிய பதிகங்களும் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலைதான் பெரும்பாலும் வள்ளலார் காலம் வரை நீடித்து வந்தது. அவருக்குப் பின்னாலே தோன்றிய மகாகவி பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடினான். இது அவன் விரும்பிப் பாடிய பாடுபொருள். ஆனால் வேறுசில பாடுபொருள்களும்  எட்டையபுரக் கவிஞன் தோட்டத்தில் பதியம் போட்டுக் கொண்டன. அவருடைய தோழர் பாவேந்தர் பகுத்தறிவையும் மொழியையும் இனத்தையும் பாடல் யாத்தார். பாரதியைப் போலவே இவரிடத்தும் பல பாடுபொருள்கள் பதியம் போட்டுக் கொண்டன. அப்படிப் பதியம் போட்டுத் தழைத்த பாடுபொருள்களில் ஒன்றுதான் காதல். பக்குவக் காதலைப் பாவேந்தர்போல் வேறு யாரும் பாடியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அழகியலும் நெகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த காதல் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தர். பாவேந்தருக்குப் பிறகு, காதலை மென்பொருளாகப் பாடியவர் கண்ணதாசன்.

    “வையம் சிலிரித்தது நற் புனிதை ஏகி
    மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
    கையலுத்துப் போகுதென்று மரத்தின் வேர் மேல்
    கடிதுவைத்தாள்! “அத்தான் நீர் மறந்தீர் என்று
    மெய்யாக நான் நினைத்தேன்!” என்றாள். அன்னோன்
    வெடுக்கென்றுதான் அணைத்தான் “விடாதீர்” என்றாள்
    கையிரண்டும் மெய்யிறுக இதழ் நிலத்தில்
    கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்

    உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
    உடலிரண்டின் அணுவனைத்தையும் இன்பம் ஏறக்
    கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
    கடையுகமட் டும்பொருந்திக் கிடப்ப தென்று
    நிச்சயித்த மறுநொடியே பிரிய நேர்ந்த
    நிலைநினைந்தார் “அத்தான்” என்றழுதாள்! அன்னோன்
    வைச்சேன் உன்மேல் உயிரைச் சுமந்து போவாய்!
    வரும் என்றன் தேகம் இனிப் பிரியா” தென்றான்

    நீர் மொண்டு வருபவர் நெருங்குகின்றார்
    நினைப்பாக நாளைவா என்று சொன்னான்
    காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
    காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்பாள்
    ஓரவிழி சிவப்படைய அன்னோன் பெண்ணின்
    ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்
    தூரமெனும் ஒரு பாவி இடையில் வந்தான்
    துடித்ததவர் இருவர் நெஞ்சும் இதுதான் லோகம்”

    தலைவி, தலைவன் ஒருசில நிமிடச் சந்திப்பை அழியா இலக்கியமாக மாற்றிக் காட்டும் படைப்பாளுமை பாவேந்தருக்கே இருந்திருக்கிறது என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? நம் கவிஞர்கள் இதனை உணரவேண்டும். தாம் எழுதியனவே கவிதை என்று அடம்பிடிக்கக் கூடாது. நீங்கள் எழுதியது கவிதை என்றால் பாவேந்தர் எழுதியதை என்னவென்று சொல்லலாம்.? படைப்பில் கவிஞன் ஒளிந்திருக்கக் கூடாது. மறைந்துவிட வேண்டும். இங்கே பாருங்கள் கண்ணதாசன் செய்யும் அட்டகாசத்தை!

    “சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலை தன்னை முகில்கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைசெல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மைபோலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல் மறைத்தல் போலும்
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே”

    பாவேந்தரும் கண்ணதாசனும் முத்தக்காட்சியைத்தான் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு நளினம்? எவ்வளவு மென்மை? எத்தகைய உவமங்கள்? எத்தகைய எளிய சொல்லாட்சி! காட்சி கண்ணுக்குள்! இயல்பாகவே விரிகிறதே காட்சி!    இத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்த காதல் என்னும் பாடுபொருள் தற்காலக் கவிஞர்கள் கையில் கொத்துப்புரோட்டாவாக மாறிப் போயிருக்கிறது என்பது என்ன ஒரு அவலம். இவர்கள் உருவகங்களே காதலை வெளிப்படுத்துவதற்குப் போதும் என்று கருதிவிடுகிறார்கள். யாப்பில் காதலைக் கொண்டு வர இயலாதவர்கள் குறுங்கவிதை, புதுக்கவிதை என்று விரிந்து பரந்து ஆழ்ந்த காதலைக் குறுக்கிவிடுகிறார்கள். “மார்பைத் தா” என்று மனைவி கேட்கிறாளாம்! “மடியைத் தா” என்று மணாளன் கேட்கிறானாம். இது நடப்பியல். ஆனால் கவிதையாகுமா? ராஜபாட்டையாகச் சென்றிருக்க வேண்டிய காதல் இன்றைக்கு ஒற்றையடிப் பாதையில் அஞ்சிக் கொண்டே நடப்பதை நான் காண்கிறேன். இது என் பார்வை. அந்தப் பழைய ராஜபாட்டையில் பயணிக்க எத்தனிக்கும் கவிஞர் சிலருள் பொன்மணிதாசனும் ஒருவர்.

    வெண்பாவில் வைத்த விருந்து

    குறள் வெண்பாவில் காதலைச் சித்திரித்துக் காட்டுவது அரிசியில் செதுக்குவது போல. அந்த வித்தையைத் திருவள்ளுவரைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியவில்லை. பதினெண் கீழ்க்கணக்கில் சில காதல் வெண்பாக்கள். அவை வெற்றிபெற்றனவா என்பது விடைகாண முடியாத வினா. புகழேந்தி நள தமயந்தி காதலைப் பாடிய பிறகுதான் வெண்பாவுக்கே ஒரு வெளிச்சம் வந்தது. என்றாலும் நளவெண்பாவைப்போல ஒரு முழுமையான நூலையோ காப்பியத்தையோ யாராலும் செய்ய முடியவில்லை, பாவேந்தரின் மணிமேகலை வெண்பாவைத் தவிர. உதிரிப்பாடல்களாகவே வெண்பாக்கள் இன்றைக்கும் இயற்றப்படுகின்றன. காரணம் பாடுபொருள் செறிவின்மை, கற்பனை வறட்சி, சொற்களஞ்சிய வறுமை முதலியனவே. இருந்தாலும் ஒரு இருநூற்றுப் பதினாறு இன்னிசை வெண்பாக்களில் பல்வகைப் பாடுபொருளைப் பாடியிருக்கும் பொன்மணிதாசன் கொஞ்சம் வேறுபடுகிறார்.

    “தேனூறும் மாலையிலே தெள்ளமுது பொன்னுடலில்
    நானூர நங்கையவள் நற்றமிழாய்க் கையசைக்க
    பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே
    பூநூறு பூத்திடும் போது”

    பாட்டுக்கு உரைசொல்வது மலரைக் கசக்கி மோந்து பார்ப்பது போல. பூவைச் சூடிப் பார்க்க வேண்டும். வாடிப் பார்க்கக் கூடாது. இந்தக் கவிதை அத்தகையது. “பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே” கொஞ்சம் சிக்கலான இடந்தான். மிகக் கவனமாகத் தாண்டியிருக்கிறார். மேனியில் பாடியவர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலில் உள்ள தொடை விகற்பங்கள் பொறுக்கி எடுத்துப் போட்டவையல்ல. வழிகேட்டு வந்து தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டவை. முதலடியில் பொழிப்பு மோனை, அடுத்த மூன்றடிகளிலும் கூழை வந்து நெஞ்சை குளிர்விக்கிறது. சந்திப்பின் இனிமையைப் பொழுதின் மேல் ஏற்றிப் பாடியிருக்கும் கற்பனை வீச்சு அருமை மற்றும் இனிமை!

    இன்னிசையில் நாட்டார் மரபு

    கணக்கிலடங்காக் கம்பர்கள் வந்தாலும் எண்ணிலடங்காக் கவிப்பேரரசுகள் வந்தாலும் பேரரசுகளின் அடுத்த நிலையில் இருக்கும் கவிக்கோக்கள் என்னும் சிற்றரசர்கள் வந்தாலும் மரபுப்பாமணிகள் வந்தாலும் ஒரு சங்க இலக்கிய அகப்பாடலின் சித்திரிப்புக்கு அவர்கள் படைப்பு ஈடாகாது. அந்தச் சங்க யாப்பும் ஒரு நாட்டார் பாடல் கற்பனைக்கு ஈடு கொடுக்க இயலாது. சங்க இலக்கியம் கவிதைப் புனைவு. அன்றிலிருந்து இன்றுவரை நாட்டார் வழக்கு என்பது கவிதைப் புறப்பாடு.

    “அறுபத்தி நாலு மொழம்
    அள்ளி முடிச்ச கொண்டை
    அவுந்த விபரம் பின்னாடி
    ஏகுட்டி வேடுவப் பெண்ணே
    அத எனக்குச் சொல்ல வேணும் வேடுவப் பெண்ணே”

    தலைவி தன் காதலை வெளிப்பட உரைக்கக் கூடாது என்னும் அகத்திணை மரபை உடைத்து நொறுக்கிய பெருமை நாட்டார் மரபிற்கு உண்டு. இங்கே சிலர் எதற்கு மீறுகிறோம் என்று தெரியாமலேயே மீறிக் கொண்டிருப்பார்கள். மீற வேண்டியது எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

    “மாரு படர்ந்தவரே! மனக்கவலை வச்சவரே!
    தேமல் படர்ந்தவரே செல்லையா!
    இப்ப தேத்தாதிங்க எம்மனசச் செல்லையா”

    என்று பாடுகிறாள். என்ன ஒரு எளிமை? ஒப்பனை செய்யாத உணர்ச்சிகளின் ஊர்வலம். மாரு படர்ந்தவரே என்பதில் ஒளிந்திருக்கும் எழுவாய் ஆயிரம் அவையல்கிளவி விதிகளைக் கற்பிக்கிறது. இத்தகைய தூய்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் பொன்மணிதாசன் கவிதைகளில் காணுகிறபோது “துள்ளாத மனமும் துள்ளும்”

    “செப்பு நீ ஈயாவேன் செவ்விதழில் தங்கிடுவேன்!
    ஒப்பினால் தேன்குடிப்பேன்! ஒப்பலையேல் ஓய்வெடுப்பேன்!
    தப்பாது சொல்லுக நீ தாமதமும் வேண்டாமே!
    எப்போது சேதி வரும் எனக்கு?”

    எப்போது சேதி வரும் எனக்கு? என்னும் ஏக்கம் ஆணுக்கு வந்ததுதான் மரபு மீறல். இது மீறப்பட வேண்டும் என்று மீறியதன்று. தானாகவே மீறியது. காதல் தடையுடைக்கும் வெள்ளம் என்பதால். “சென்ற இடம் காணேன்! சிந்தை வாடலானேன்! சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்” என்னும் ஏக்கம் ஆதிமந்திக்குரியது. காதலுக்குப் பால் ஏது? திணை ஏது?

    “கண்ணில் குடியேறிக் காதல்தீ பற்றவைக்கும்
    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்கே!
    என்னாசைத் தீவுக்குள் எண்ணெயையும் வார்ப்பவளே!
    எந் நாளில் என் ஆவாய்ச் சொல்?”

    காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம்பார்!
    சாமம் வருமுன்னே சந்திப்போம் நல்லிரவை!
    ஓமத்தீ நெஞ்சுள்ளே ஓங்குதடி மென்மேலும்
    மாமன் மடி சாய மலர்ந்து”

    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்காம் காதலி. அடடா! நள்ளிரவு அல்ல நல்லிரவாம்! கவித்துவம் வெளிப்படும் மையம் இது. ‘காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம் பார்” கற்பனையின் உச்சம்! கவிதை உத்திகளால் சிறப்பது. காதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உட்பட்டதன்று தும்மல்போல் வந்து விக்கல் போல் மறைவது. அதனை எவ்வளவு நளினமாகச் சொல்கிறார் பாருங்கள்!

    பசி பாடிய பாவலர்

    “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்” என்பதால் திருவள்ளுவர் பசியின் கொடுமையை எதிர்மறையில் பாடியிருக்கிறார். அது தீர்க்க வேண்டிய கடமை என்பதையும் குறிப்பாக உணர்த்தியிருக்கிறார். பசிப்பிணி போக்கிய அறச்செல்வியாக மணிமேகலையைச் சாத்தனர் படைத்துக்காட்டியிருக்கிறார். இவர்கள் வழித்தோன்றலாக வடலூரார் “உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்., அவர் புறவினத்தார் மற்றவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக” என்று அருள் செய்திருக்கிறார்.  “பாலென வருவோர்க்குப் பால் தருவோம்! பசுங் கூழென வருவோர்க்குச் சோறிடுவோம்” என்பார் கண்ணதாசன். இது மரபின் தொடர்ச்சி. இதுதான் கவிதை மரபு. இந்த மரபில் வந்த பொன்மணி பாடுகிறார்.

    “உண்ணுதல் கேடில் ஒருவருக் கேனும் நீ
    உண்ணப் பகிர்ந்தினிது உண்ண நலம்பயக்கும்!
    தன்பசி தீருமுன் தாளாப் பசியுடையார்
    வன்பசி தீர்த்தலே வாழ்வு”

    ‘தாளாப் பசி’ என்பதனாலே அது ‘வன் பசி’ எனப்பட்டது. வன்பசி தீர்த்தலே வாழ்வு என்னும் தீர்க்கம் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் கவிஞனின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    நிறைவுரை

    இதுவரை கூறிய சில எடுத்துக்காட்டுக்களால் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெளிவாகியிருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்குப்போல ஒரு முழு நூலையும் இன்னிசை வெண்பாவினாலே யாத்த அரிய முயற்சியைக் கண்டிருக்கலாம். சமுதாய நோக்கும் கவித்துவமும் ஊறிக் கொண்டே இருக்குமானால் பன்முகப் பாடுபொருளும் கவிதையாக்கத்திற்குப் பயன்படும் என்னும் உண்மை அறிந்திருக்கலாம். பொன்மணிதாசனின் படைப்பாற்றல் புலப்பட்டிருக்கலாம். சந்தத்தை உள்வாங்கி இலக்கணம் பிசகாமல் எழுதும் அவரது புதிய முயற்சி புலப்பட்டிருக்கலாம். நாட்டுப்புற அழகியலைக் கவிதையில் கொண்டு வருவதிலும் காதலைப் பாடுவதில் மென்மையான அவரது அணுகுமுறையின் வீச்சையும் அனுபவித்திருக்கலாம். எல்லாவற்றையும் விட மரபு பற்றிய மயக்கம் களையப்பட்டிருக்கலாம். இத்தகைய வல்லமை உடைய கவிஞர் பொன்மணிதாசனை, அவருடைய கவிதைகளை  என்வழி அறிமுகப்படுத்துவதில் வல்லமை பெருமை கொள்கிறது. வல்லமையின் பெருமையில் எனக்கும் பங்குண்டு.

    (தொடரும்………)

    Share
  • மனித வடிவில்…… (சிறுகதை)

    மனித வடிவில்…… (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    விடியற்காலை நான்கு மணி இருக்கும்… “மீனவர்கள்  இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”………. காவல்துறை வாகனம் எச்சரிக்கை விட்டுக்கொண்டு இருபக்கமும் மணல் நிறைந்த தார்ச்சாலை வழியாக வேகமாகச் சென்றது.

    கீதாவுக்கு இது ஏழாவது மாசம் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கணவன் சுந்தரத்துடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “ஏங்க, மீனு இன்னும் கொஞ்சம் ஐஸ்கட்டில கெடக்கு. இன்னைக்கும் டூரிஸ்டுக்காரங்க வரலேன்னா அது நொஞ்சுரும்.  ஒலத்தவும் முடியாது. வெயிலடிக்குமானும் தெரியல”

    “என்ன பண்ண நம்ம பொழப்பு இப்படி ஆயிப்போச்சு.  தூக்கி வீசு. நமக்கு இந்த மீன் புடிக்கறதத் தவிர வேற ஒரு எழவுந்தெரியாது. ஏதோ கடலில போய் மீன் புடிச்சா மட்டு சாப்பாடு கெடச்சிடுமா?.  எப்போ கடலுதண்ணி வந்து நம்ம ஊர அழிச்சுதோ அதோட நம்ம எனத்தோட வாழ்க்கெயும் முடிஞ்சு போச்சு.”

    “ஏங்க புலம்புறிங்க. நா இப்ப என்ன கேட்டுட்டே”

     “பொலம்பாம என்ன பண்ண. வருசத்துல நாலஞ்சு மாசம் மழக்காலமாப்போச்சு, கடலுக்கும் போக முடியல. மாசத்துல பாதி நாளு புயலு எச்சரிக்க.  மீதி சில நாளு இலங்கக்காரங்களோட தாக்குதலு.  தனுஷ்கோடினு  ஒரு பகுதி இருந்துச்சு. அது அழிஞ்சு போய் இம்புட்டு வருசமாச்சு. அந்தப்பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு பாதுகாப்பு இருக்கா. இல்ல,  வீடுகதா நல்லா இருக்கா.  ஏ… சுனாமி வந்த ஊரெல்லா மறுபடியும் பழைய நெலமக்கு வரல?.  நம்ம ஊர மட்டும் பழய வரலாறா காமிச்சு சுத்துலா இடம்னு மாத்திட்டாங்க. இங்கே இருக்கறவங்க நெலமய யோசிச்சுப்பாரு.  சுத்துலாக்காரங்கள  நம்பித்தான நாம பொழப்பு நடத்துறோம்.  சுத்திப்பாக்க வர்றவிக  எல்லாரு  இங்க வந்து சாப்புடுறாங்களா?.  யாரோ ஒரு சிலரு வராங்க. அதிலே  பாதி நாளு அவங்களையும் விடறதில்ல. பொழுதுபோய் பொழுது விடிஞ்சா வயத்துப் பொயப்புக்கே வழியில்லாம இருக்கோ. வடக்கனுக  ஒருத்த ஊர வுட்டுட்டு வந்தாப்போதும் அப்படியே அவ ஊரயே கூட்டிட்டு வந்து இங்கிட்டு  தங்கிடறானுக. பொயப்புக்காக ஊருவிட்டு ஊரு போயிடறானுக. நாமதா சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா கெடந்து இங்கேயே சாகுறோம். இதக்கடந்து நம்ம யோசனப் போகுதா? உரிமையோடு பழகுன இந்த மண்ண விட்டுட்டு எங்கிட்டுபோயி ஒண்டறது. வாழ்வோ? சாவோ? அது இந்த மண்ணோடு தா அப்படின்னு எங்கப்பங்கார சொல்லிப்புட்டு போய் சேந்துட்டா. மனசு கேட்க மாட்டேங்குது. நாளக்கு எம்புள்ளயும் இந்த சொந்த பந்தத்தை விட்டுப்புட்டுப் போக மனசில்லாம இங்கனயே தங்கிக்கினு, நம்ம பொழப்பு இப்படித்தா முடியப் போகுது .” என்று தலையில் தட்டினான்.

    வங்காள விரிகுடாவும், இந்தியப்பெருங்கடலும்  சங்கமிக்கின்ற அழகிய இடம். பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலையின் இரு பக்கங்களிலும் கடல்.   ஒரு பக்கம் அமைதியானக் கடல். மறுபக்கம் அதிபயங்கர ஓசையை எழுப்பிக்கொண்டு அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கடல். சுற்றுலா வழிகாட்டிகள் அமைதியானக் கடல் பரப்பைப் பெண் கடல் என்றும் ஆர்ப்பரிக்கும் கடல் பரப்பை ஆண் கடல் என்றும்தான் விளக்குகிறார்கள். திரும்பிய திசை எங்கும் கடல்நீர். ஆர்ப்பரிக்கும் அலை ஓசை.  மிதமான ஈரக்காற்று. சுண்ணாம்பு போன்ற வெள்ளை மணல் படுகைகள். காற்றில் அடித்து வரும் அலைகளிலிருந்து நம்மீது தெளிக்கும் பன்னீர்த்துளிகளாய் நீர்த்துளிகள்.  கடலலைகளை இரசிக்கப்பிடிக்காத மனித மனமும் உள்ளதோ. அலையின் ஓசைகளில், அதன் ரம்மியங்களில் மூழ்கிப்போவது எத்தனை எத்தனை நினைவலைகள்.  ஆபத்துகள் நிறைந்தது என்று தெரிந்தும் கால்களை நனைக்காமல் மீள மனம் வருமா?.

    “மத்தவங்களுக்கு அழகா இருக்கற கடலு நம்மளபோல இருக்கற அன்றாடங்காட்சிகளுக்கு  ஒரு சாபமாப்போச்சு. அறுபது வருஷமாச்சு நாம எல்லாத்தயும் எழந்து”

    என்று புலம்பலைத் தொடர்ந்தான் சுந்தரம். “நம்ம பொழப்பப்பாரு…… யாராவது சுத்துலாக்காரங்க வந்தா போய் ‘சாப்பிட வாங்க’. ‘சாப்பிட வாங்க’ன்னு கெஞ்சி கையப்புடிக்காத கொறயா இழுக்கணும். அவன் பக்கத்துக் கடைக்கு போயிட்டா  அது மாமன் மச்சா கடையா இருந்தாலும் நமக்கு வியாபாரம் போச்சுன்னு அம்போன்னு இருக்க வேண்டியதுதா. அந்தி விழுந்தா வெளிச்சத்தில உட்கார வகுசு இருக்கா? பொழுதுபோக ஒரு டி.வி பொட்டி இருக்கா? ஊருக்கெல்லா கரண்டு இருக்கு. ஆனா நம்ம பொழப்பு இருட்டுக்குள்ளயே கெடக்கு. இங்க வர்றவனுகளப் பாக்கும்போது வயிறு பத்திகிட்டு வருது. அடுத்த ஜென்மத்துலயாவது நாம இவனுக வீட்டுல நாயாவாவது பொறக்க மாட்டோமான்னு தோணுது. என்னக்கோ ஊர சுத்திப்பார்க்க வர்றவனுக கடலுக்கு எல்லையே இல்லன்னு ஆசையா பாத்துகிட்டுப் போறானுங்க. ஆனா, நமக்கு இந்த ரெண்டு கடலுந்தானே எல்லையாவேப் போச்சு. ஒவ்வொரு பொழுதயும் பயந்துகிட்டே கழிக்க வேண்டியதா இருக்கு. இதில பாதி நாளு ஏதாவது மண்டபத்திலத் தங்க வெச்சர்றாங்க. கடல் தாயே….. ஒனக்குக் காது கேட்குமா……”

    “போதும் மாமா..  நா ஒண்ணும் பேசல. சும்மா பெனாத்தாம போய் படு. நாளைக்குக் கடலுக்குப் போவியாமா.”

    அடுத்தநாள் பொழுதுசாய சுந்தரம் வலைகளைத்தூக்கிப் படகில் போட்டுக்கொண்டு கடலை நோக்கிப் புறப்பட்டான். சாயுங்காலம் கிளம்பினால்தான் விடியற்காலம் மீனுடன் திரும்ப முடியும். இரவு அலைகள் அதிகமாக இருக்கின்ற நிலவொளியில்தான் மீனவர்களின் வேலையே ஆரம்பமாகிறது.

    2

    “ம்மா ரொம்பப் பசிக்குது மா…………. இன்னிக்காவது நம்மள யாராவது பாப்பாங்களாமா…….”

    குலசேகரனோட வாயப்பொத்தினாள்  இலட்சுமி.

    இலங்கையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்து இராமேஸ்வரம்சென்று, மகனை அப்துல்கலாம்போல படிக்க வைக்கணும்ங்கிறது குலசேகரனுடைய அப்பா பூமிநாதனுடைய கனவு. பூமிநாதனோட அப்பாவின் குடும்பம் இராமேஸ்வரம் வழியாக மீன்பிடிக்க வந்தபோது எல்லை மீறினதால இலங்கை கடற்படையால் கைது  செய்யப்பட்டவர்கள். அக்கைதிகளுள் ஒரு கூட்டத்தை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். அவரின் சண்டித்தனத்துக்குச் சரியானது  இயக்கத்தில சேர்வதுதான் சரியென்று இணைந்து விட்டார். உடன் வந்த நாலு பேரையும் சேர்த்து விட்டு, அங்கேயே கல்யாணமும் முடித்து  பூமிநாதனப் பெற்றெடுத்தார். இயக்கத்தோடப் போராட்டப் பயிற்சிக்காக பூமிநாதனையும் அழைச்சிட்டுப் போவார். மறைந்திருந்து தாக்கும் பயிற்சி அளிக்கும்போது கால்தவறி விழுந்து கல்லில் மண்டை அடி பட்டு இறந்திட்டார். மகனையும் அதே இயக்கத்துக்குத் தாரைவார்த்து கொடுத்துவிட்டார். ஆனா பூமிநாதன் வளர்ந்து பெரியவனானதும்   தெளிவானவனாகிவிட்டான். ‘எக்காரணம் கொண்டும் தன் மகனை இந்த இயக்கத்தில சேர விடக்கூடாதுன்னு மனைவி இலட்சுமியையும்  மகனையும் அவர் இயக்கத்தில சேர விடவே இல்லை.  அவர் சாகும்போது கடைசியா ‘எம்புள்ளய எப்படியாவதுப் படிக்க வைன்னு’ சொல்லிவிட்டு கண்ண மூடினார்.’ என்று கூறிய அவருடைய நினைவுகளை அசைபோட்டாள் இலட்சுமி.  ‘

    ‘அவருக்கு சத்தியம் செஞ்சுக் கொடுத்த வார்த்தைக்காக எம்புள்ளைய கூட்டிட்டு யாருக்குந்தெரியாம காட்டுவழியா இரவெல்லா நொழஞ்சு நொழஞ்சு ஒரு கடல் எல்லைக்கு வந்திருக்கே. ஏதாவது  மீன் புடிக்கிறவங்க கண்ணுல பட்டாக்கூடப் போதும். அவங்ககிட்ட எப்படியாவது கேட்டு இராமேஸ்வரம் போயிடுவே. நேத்து இரவு முழுக்க  இந்தக் குளுருலேயே உட்கார்ந்து கெடக்கோ. ஒரு படகெயாவது கண்ணுல காட்டு சாமி. என்று இலட்சுமி வானத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். ‘குலசேகர அப்படியே அவென்ட அப்பாவ உருச்சு வெச்சிருந்தா. அவ அப்பா எப்பவுமே இவனெ கலாம் கலாம்னுதா கூப்புடுவாரு. எப்படியாவது என்டெ தங்கத்தெ பள்ளிக்கொடத்தில சேத்தரணு. நானும் அவரும் ஜீவிச்ச வாழ்க்கக்கு என்னெ கண்ணோட மணியா வெச்சு  பாத்ததுக்கு அவருக்காக நா இதக்கூட செய்யலேன்னா அவரோட ஆத்மா சாந்தி அடையாம  அலயுமே.’ என்று புலம்பினாள்.

    காடு வழியாக நிமிர்ந்து நடக்காமல்  நடு நடுவே முட்டிப்போட்டு மறைந்து மறைந்து நடந்து வந்ததில அவர்களுடைய உள்ளங்கைகளில் வலியின் கொடூரம். குலசேகரனின் தலமுடியைக்   கைகளால் கோதிவிட்டு கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை புடவை முந்தானயால் ஒத்தினாள்.  திங்கட்கிழமைக் கெளம்பனது.  இப்போ புதன்கிழமை. நடுராத்திரி ஆயிடுத்து. ‘தூரத்தில் ஒரு படகு தெரிந்தது. சாமி இந்தப் படகெயாவது காட்டிடு சாமி.’ மெதுவாக நகர்ந்து வந்த படகு இலட்சுமியைப் பார்த்து நகர்ந்து வந்தது.கடவுளுக்கு அவளது பிரார்த்தனை கேட்ட து.

    திருமணமாகி நான்கு வருடத்திற்குப்பிறகு  கருத்தரித்த கீதாவை நினைத்துக்கொண்டு படகை செலுத்திய சுந்தரத்தின் கண்களுக்கு,  தூரத்தில் ஒரு சின்ன கை  அசைவது தெரிந்தது. மீன்பிடி படகு என்பதால் கொஞ்சம் வேகமாகச் செல்லும்.  மனம் கேட்கவில்லை. அவர்களை நோக்கிப் படகை நகர்த்தினான்.  இன்னும் இரண்டு மீட்டர் போனால் இலங்கை எல்லைப்பகுதி  வந்து விடும். அதற்குமுன் நீர் ஒழுகிப்போவது போன்ற அலைகள் குறைந்த  பெரிய நீர்  பரப்பு உள்ளது. சிறுவன் அந்தத் தண்ணீரில் குதித்துவிட்டான்.  யாரும் இல்லாமல் தத்தளிப்பானோ? மூழ்கி விடுவானோ?. அவனெக் காப்பாத்தப் போய் நமக்குச் சிக்கலாகி விடுமோ? பரவால்ல. சின்னப்பயனா தெரியுறா. நாலு வருடமா குழந்தை இல்லாத கவல என்னன்னு எனக்குத் தெரியும். படகு அவன் அருகில் செல்வதற்கு முன் அவன்  கொஞ்சதூரம் நீந்தி வந்து விட்டான். அவனுடன் நாப்பது நாப்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பொண்ணும்.

    ‘எங்கள காப்பாத்தவந்த எங்குலசாமி, எங்கள எப்படியாவது கூட்டிட்டு போ சாமி! எம் பையனைப் படிக்க வைக்கணு. இங்கே இருந்தா இயக்கத்தில சேர்த்து விட்டுருவாங்க.” என்று சுந்தரத்தைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

    “ஐயோ! சாமிங்களா நீங்க இலங்கக்காரங்களோ. ஆளவிடுங்கப்பா கொழந்தப்பய  தண்ணீல கெடக்கானேனு வந்தே.  இந்த வேல நமக்காகாது.  ஆள விடுங்க’ சாமி என்று துடுப்பைத் திருப்பினான்.

    “மகனே ஒன்னய பாக்குறதுக்கு எனக்குப் பொறக்காத பையனாட்ட தெரியுற தங்கோ. எங்களுக்குக் கல்யாணமான வருசத்தில கொழந்த பொறந்திருந்தா ஒன்னய மாதிரி வளர்ந்திருப்பாஞ்சாமி. எட்டு வருஷம்கிட்ட கொழந்த இல்லாம எல்லாக்கடவுளையு வேண்டிதா கெடச்சது. ரெண்டு நாளா எங்களக் காப்பாத்த கடவுள் வடிவத்தில  யாராவது வருவாங்கன்னு காட்டுக்குள்ளேயே கெடந்தோ மகனே.  எப்படியாவது கருணை வையுப்பா.  உங்குடும்ப நல்லா தழச்சு வளரு. என்று ஈரச்சேலையுடன் வணங்கினாள்.

    “ம்மா இங்கன இருந்து, அங்க ஒருசிலர கூட்டிக்கினுப்போக வருவாங்க  அப்ப வாங்க. இப்ப வந்தா சிக்கிருவீங்க.”

    தாயின் கதறல், சிறுவனின் முகம், ‘என்டெ மகனாட்ட  இருக்கேன்னு  வெள்ளந்தியா சொன்ன வார்த்தைகள். அந்த நேரத்தில அவர்களை அப்படியொரு நிர்கதியில் விட்டுட்டுப்போக அவனுக்கு மனம் வரவுமில்லை.  அவனை என்னமோ செய்தது.

    “அம்மா  நாமபோற வழியில போலீசுக்காரனுவ பாத்தாங்கன்னா என்னயும் சேத்து உள்ள வச்சிருவானுக.”

    சுந்தரத்தின் மன எண்ணங்களை உணர்ந்தவளாய் “இல்லெ மகனே நான் ஒனக்கு ஒங்க குடும்பத்துக்கு எந்த தொந்தரவு கொடுக்கமாட்டே. என்னை நம்புப்பா. இது என்டெ வீட்டுக்காருமேல சத்தியம். எங்கள எப்படியாவது  கரைகிட்ட வர கூட்டிக்கிட்டுப் போனாப் போதும். அதுக்கப்பறம் நாங்க கண்ணுலகூட படமாட்டோம். என்ன நம்புப்பா. இது என்டெ கடவுளா இருக்கற வீட்டுக்கார நெனச்சு சொல்றே.  என்ன கரையில மட்டும் சேர்த்தாப் போதும்.

    “நீங்க அங்கன போயி என்ன பண்ண முடியு?. நீங்க பேசுறதே ஒங்கள மாட்டிக்கொடுத்துரு.”

    “இல்லையப்பா எனக்கு ரொம்ப குளிருது.  குளிர்ல வாய் ஒளருது.  எனக்கு வேற மாதிரியும்  பேச வரும். என்ன பண்ண என்னோட வீட்டுக்காரோட மொழிய பேசும்போதெல்லா அவர்கூட இருக்கறதா நெனப்பு. நான் என்ன மாத்தி பேசிக்கடறே.”

    அவனுக்கு விட்டுச்செல்லவும் மனமில்லை. சிக்கலில் மாட்டவும் விருப்பமில்ல. சிலநிமிட தயக்கத்திற்குப்பிறகு “சரி சீக்கிர ஏறுங்க. ஆனா நாஞ்சொல்றத நீங்க கேட்கணு. நல்லா குமிஞ்சுதா ஒட்காரோனு. போலீஸ் ரவுண்ட்சு போயிட்டு இருப்பாங்க. ஏறுங்க………   நானே சாப்பாட்டுக்கே வழியில்லாமதா மீன்புடிக்கவே வந்தே. கொஞ்சம் முன்னாடிதானே சரக்குவண்டி போச்சு, அதுல போயிருக்கலாமில்ல.”

    “இல்லெ சாமி அதுல நெறெய பேரு இருந்தாங்க. எங்களக்காப்பாத்த  உங்களாட்ட ஒரு கடவுள், ஒரே ஒரு கடவுள் வருவாருனு காத்துக்கெடந்தோ.”

    இருவரையும் ஏறச்சொல்லி சைகைக் காட்டினான்.   இருவரும் சுந்தரத்துக்கு நேராக மீன் வலைக்கு  அந்தப்பக்கம் உட்கார்ந்தனர், மீன்கள் வலைக்குள் துள்ளிக் கொண்டிருந்தன. வலைக்கு அந்தப்பக்கமாக இருவரும் அமர்ந்தனர்.   மௌனம் சிறிதுநேரம் நீடித்தது.

    “இதா பாருங்கம்மா மணி ரெண்டுதா ஆகுது. நாம்போயி கரையில எறக்கி விட்டுடறே.  அதுக்கப்புற என்னான்ட எதுவு கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது.”

    “இல்லை மகனே உங்களை ஒரு தொந்தரவும் செய்ய இயலாது என்னை நம்புங்கள்.”

    சற்றுதூரம் சென்றதும் மோட்டார் படகில் போலீஸ்காரர்கள் ரோந்து வருவது தெரிந்தது. மீன்பிடித்து வருபவர்களை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சந்தேகத்திற்கு உரியப் படகுகள் ஏதாவது தென்படுகிறதானு  பார்ப்பதுதான்  அவர்கள் வேலை.

    “அம்மோ போலீஸ் வண்டி வருது. அப்படியே படுத்துக்கோங்க.”

    தனது சேலைக்குள் பொதிந்த உடம்போடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்த தனது மகனையும் சேர்த்து அப்படியே படுத்துக்கொண்டாள்.  சுந்தரம் சீக்கிரமாக  தார்ப்பாயைத் தூக்கி அவர்கள் மேலே போட்டுவிட்டு  அதற்கு மேல் மீன்வலையைத் தூக்கிப் போட்டான். மீன்கள் வலைக்குள் பிடைவது தார்ப்பாய் வழியாக அவர்கள்  உணர்ந்தனர், முடியாமல் குலசேகரன் நெளிந்தான். அவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள். உயிரைப் பாதுகாத்து ஊர்ப்போய் சேருவது எண்ணமாக இருப்பதால் அவள் தன் ஆடையின் ஈரத்தைப்பற்றி யோசிக்கவில்லை. ஆடை முழுவதும் ஈரம். குளிர் நடுக்கியது. சுமார் அதிகாலை இரண்டரை மணி இருக்கும், படகு கரையை அடைந்தது. உடன்வந்த படகுகள் எல்லாம் கரைசேர்வதுவரை மெதுவாக துடுப்பிட்டான்  சுந்தரம். “எல்லோரும் அரை மணி நேரத்தில் மீன மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப்போயிடுவாங்க. அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம எறங்கிப் போயிடனு சரியா…”

    அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்

    சுந்தரத்தின் மச்சினன்  கடற்கரையில் சைக்கிளில் காத்து நின்றான்.  சுந்தரன்  மச்சினனுடன் மீனை எடுத்துக் கொண்டு போனான். இலட்சுமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லாத சமயம் பார்த்து தலையைத்தூக்கி ஒருமுறை கடலைத் திரும்பி பார்த்தாள். ‘இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டோம்! பிறந்த மண்ணை விட்டு! அடிமை மண்ணை விட்டு! தன் கணவன் வாழ்ந்த  மண்ணை விட்டு. கண்ணீர் ததும்பி நின்றதால் கடல் எல்லை தண்ணீரின்றி சலனமற்று இருளாகத் தெரிந்தது. அமைதியான கடல். எல்லையில்லா நீர்ப்பரப்பு.  மீண்டும் தான் வாழ்ந்த மறுகரையை நினைக்கவே கூடாது என்று குனிந்து கடல்நீரை எடுத்துத் தலையில் தெளித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். குலசேகரன் தலை மீதும் தெளித்து விட்டாள்.  கண்களில் ஒத்தி கொண்டாள்.

    கும்ம்ம்மிருட்டு.  சாலை எது? ஓரக்கரை எது? என்று தெரியாமல் இருந்தது. அந்த ஊர் மக்களின் காவல்தெய்வம் சங்கிலிக்கருப்பனாக கடல் மட்டும் ஓயாமல் சிலம்பொலிகளாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. தனுஷ்கோடியின் வளைவு நன்றாகத் தெரிந்தது, இரு கடலும் சங்கமிக்கின்ற பகுதியைக் கூர்ந்து கவனித்தாள், அவளின் இடதுகை பக்கமுள்ள கடலோ அலைகளை வேகமாக வீசியது, வலது பக்கக்  கடல் அமைதியாக இருந்தது. துணியின் ஈரமும், காற்றின் வேகமும், யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயமும், அவர்களது நடையின் வேகத்தைக் குறைத்தது. குலசேகரனை இழுத்துக்கொண்டு முன்னோக்கி வேகவேகமாக நடந்தாள். ஆங்காங்கே சிலரின் நடமாட்டம் தெரிந்தது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. இனியும் விடிவதற்கு நேரம் இருக்கு. ஓடிப்போய் பாதி பிய்ந்து தொங்குகின்ற ஓர் ஒற்றைக்  குடிசையின்   பின்புறமாகத்   தஞ்சம் புகுந்தனர்.

    “ம்மா எனக்கு ரொம்ப ஒறக்கமா வருது.” இரண்டு நாட்களாக அலைந்துவந்த களைப்பு உண்மையில் அவளையும் தளர்த்தவே செய்தது.

    “ஒறங்கலாம் பா. நல்லாவெடியறவர இங்கதா இருக்கணு. வெடிஞ்சதுக்கப்பறோ டூரிஸ்டு வண்டிக வரத்தொடங்கனதும் கூட்டத்தோடு கூட்டமா இங்கன இருந்து போயிரலா.”  என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிய்ந்துபோன கூரைக்கடியில்  கிடந்த சில அட்டைகளை எடுத்து விரித்தாள். மகனை அதில் படுக்கச் சொன்னாள். அவன் படுத்ததும் உறங்கி விட்டான்.  காற்று பலமாக வீசியது. மணற்துகள்கள் குலசேகரனின் தலை முழுக்க ஒட்டியிருந்தன. அவனுடைய  தலையை தட்டி விட்டுக்கொண்டும், தடவிக்கொண்டும், தூங்கிக்கொண்டிருந்த குலசேகரனை  பார்த்துக்கொண்டே இருந்தாள். கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள். ‘என் ராசா என்னோட அடிவயுத்தில பால்வார்க்க வந்தவ. நல்லா இருப்படா மகனே. உனக்கு எந்த துன்பமும் நேரக்கூடாது என்று மனதில் எண்ணியவளாய் குளிரில் நடுங்கிக்கொண்டு இரு தொடைகளுக்கிடையில் கைகளை வைத்துப்  படுத்துக்கொண்டிருந்த தன் மகன்மீது  கண்ணீர்த்துளிகள் விழாமல் புடவையால் துடைத்துக் கொண்டாள்.  பாதி கிழிந்த அரிசிப்பையொன்று அங்கு கிடந்தது. அந்த அரிசிப்பைக்குள் குலசேகரனின் கால்களைத் தூக்கி  வைத்தாள். முட்டி  வரை மூடியது. பாதி உடல் மணலிலும் பாதி உடல் அட்டைகளிலுமாகப் படுத்துக்கொண்ட அவள் மகனின் மேனியை சேலையால் இறுக மூடினாள். தலை மணலில் படாதவாறு தனது கையை நீட்டி அதன்மேல் தலையை மெதுவாகத் தூக்கிவைத்தாள்.  கொஞ்சம் குளிர் நின்றது.

    3

    அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குடிசைக்குப்பின்புறம் என்பதால் யாரும் கவனிக்கவும் இல்லை. விடியலின் வெளிச்சம் பளீரென இருந்தது. வண்டிகளின் இரைச்சல், மக்களின் பேச்சு சத்தம், பலமொழிகளின் கலவை, காதுகளில் விழுந்தன. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா? இல்லை ஏதாவது வடக்குப் பகுதிக்கு வந்துவிட்டோமா எனும் அளவிற்கு இந்தி பேசுபவர்களின் கூட்டம் அதிகம், வயதான பெண்மணிகள் அரைக்கால் சட்டையில் வெள்ளைவெளேர் என்றிருக்கும் தொடைப்பகுதி தெரியும்படியான  டிரௌசரும், பனியனும் போட்டிருந்தனர். பனியனில் மார்புக்கு நடுவில் மாட்டிய கூளிங்கிளாசுடன்  நிறையப் பெண்கள். உடையில் ஆண்பெண் வித்தியாசமே தெரியவில்லை.

    சுற்றுலாப்பயணிகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த இலட்சுமி ‘என்ட வீட்டுக்காரரும் என்ன எப்பவும் அழகா சிங்காரிச்சுக்கத்தா சொல்லுவாரு. வாடிப்போய் இருந்தா அவருக்கும் பிடிக்காது. என்ன வருத்தமானாலும் நாம உடையில காட்டக்கூடாதுங்கறது அவரு விருப்பமா இருந்துச்சு.” என்று பெருமூச்சு விட்டாள்.’

    இரண்டு நாட்களாகப் புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல இடப்பட்டிருந்த தடை நீங்கியது.  அடுத்தநாள் நிறைய கூட்டம். கூட்டத்தோடு கூட்டமாக இலட்சுமியும் பையனுடன்சென்று தனுஷ்கோடியின் அழகைக் கண்டு ரசித்தாள். இரண்டு கடல்கள் சங்கமிக்கின்ற காட்சியைப்பார்க்க அவ்வளவு இரம்மியமாக இருந்தது. காலை உணவிற்கு நல்ல வேளை சுந்தரம்  கொடுத்த பிஸ்கட் இருந்தது.  தப்பிவந்து தமிழ்நாட்டை அடைந்ததில்  உருவான மகிழ்ச்சி வயிற்றை அடைத்திருந்தது. எப்படியாவது இராமேஸ்வரம் கோயில் செல்லவேண்டும். அரசு பஸ்ஸில் ஏறினால்  இடையில் செக்கிங் வந்தால் மாட்டிக்கொள்வோம், கையில் காசுவேறில்லை. இரவு முழுவதும் அமைதியாக இருந்த இடம் காலையில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்  நிரம்பி வழிந்தது. வெள்ளரிக்காய், மாங்காய் விற்பவர்கள், வண்டிகளில் வேர்க்கடலை மற்றும் சோளம் விற்கும் வியாபாரிகள், சங்கினாலான அலங்கார பொருட்களைத் தூக்கி நடப்பவர்கள். புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள். வழியோரங்களில் சுடச்சுட மீன் வறுவல்களின் வாசம்.  கருவாட்டுக்கடை, குளிர்பானக்கடை, ஐஸ்க்ரீம் வண்டி என அவ்விடமே பரபரப்பாக விளங்கியது. அதிகாலையில் அமைதியாக இருந்த இடமா இது. இடையிடையே காக்கி உடை அணிந்த காவல்காரர்களின் அறிவிப்பு. யாராவது வண்டியின்டிக்கியைத்திறப்பார்களா என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.   ரொம்ப நேரம் கழித்து ஒரு ஆம்னி பஸ்ஸின் டிக்கியைத் திறந்தவர் அதை சரியாக மூடாமல்  போனதைப் பார்த்தாள்.  அதற்குள் ஏறி பெட்டிகளுக்கிடையில் அவனுடன் அமர்ந்துகொண்டாள்.

    பஸ் இராமேஸ்வரம் நோக்கிச்சென்றது. பூனாரைமுனை  வந்ததும் ஏதோ சந்தேகம் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி டிக்கியைத்திறந்தார். இலட்சுமி கையெடுத்துக் கும்பிட்டாள்.  இவர்களை இப்போது நடுவில் இறக்கி விட்டால் நாம் சிக்கிவிடுவோம். உள்ளிருக்கும் பயணிகள் என்ன நினைப்பார்கள்.  பேசாமல் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிட்டான். சந்தன மாரியம்மன் தெரு வந்ததும் டிரைவர் வண்டியை மறுபடியும் நிறுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தப்பகுதியில் ஓட்டுநர் இறங்கி டிக்கியைத் திறந்து அவர்களை வெளியில் இறங்கும்படி சைகைக் காட்டினார். கையைப்பிடித்து இழுத்து வெளியில் இறக்கிவிட்டார். இருவரும் திசையற்று நின்றனர். இவ்வளவு நேரம் மூச்சடக்கி இருந்ததற்கு வெளிக்காற்று ஆசுவாசமாகத்தான் இருந்தது.  ஏதோ லட்சியத்தை அடையப்போவதுபோன்ற உள்ளுணர்வு. மகனின் தலைமுடியைக் கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். “பதினொரு  வயசுல எவ்வளவு பொறுமை, எவ்வளவு சாந்தம்,  எதையும் பொறுமையாக எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை உண்மையில் நான் கொடுத்துவெச்சவதா.  பசிவந்தாக்கூட வாயத்திறந்து கேட்க மாட்டேங்கறா. என்னுடைய நெலம தெரிஞ்சு நடத்துகுறா எஞ்செல்லமே” என்று குலசேகரனை, நாதியற்றவளாய்  கட்டி அணைத்தாள்.

    இறக்கிவிட்ட  பேருந்து சென்ற வழியிலேயே சிறிதுதூரம் நடந்தனர்.  அங்கேதான் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த வீடு, நினைவு மண்டபமாக இருந்தது, அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தஇடம் அவளுக்குக் கோயிலாகத் தெரிந்தது. நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு மண்ணைத் தொட்டு வணங்கினாள். மகனையும் தொட்டுக் வணங்க சொன்னாள். மனம் குளிர்ந்தது. கடல்வெப்பக்காற்று அவர்களைத் தென்றலாக வரவேற்றது.   இராமேஸ்வரம் கோயிலுக்கு எப்படி போகவேண்டுமென்று   வழிநெடுக விசாரித்து விசாரித்து,  கோவில் வாயிலை அடைந்தனர்.

    இராமாயணத்தில் இராமர்,  இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக  இலங்கையிலிருந்துத் திரும்ப வரும்போது இராமேஸ்வரம் மணலால் லிங்கம்  உருவாக்கி பூஜித்து  பாவத்தைக் கழித்த இடம் என்பது வரலாறு.  இராமேஸ்வரம் கடலில் மூழ்கி நீராடினால் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. சின்ன வயதிலிருந்தே இதேபோன்ற  புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் இலட்சுமி. எனவே, தனது புதிய வாழ்க்கையைக் கடலில் நீராடி பாவங்களைக் கழுவிய பிறகு தொடங்கலாமென்று கடலை நோக்கி நடந்தாள்.

    இராமேஸ்வரக் கடலில் அவ்வளவாக அலைகள் இல்லை.  அமைதியாக  இருந்தது. இராமர் பூசை செய்ததால் அவரைப்போலவே அமைதியாகிவிட்டதோ? இலட்சுமி மகனுடன் கடலில் மூழ்கி எழுந்தாள். பலராலும் அகற்றி விடப்பட்ட துணிகள், துண்டுகள், விட்டுப்போன சோப்புகள் என ஆங்காங்கே கிடந்தன. அவள் மனதிலும் புதிய எண்ணம் தோன்றியது. கடலில் நீராடியபிறகே கோயில் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும்  நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆனால் சீட்டு எடுக்க வேண்டும். சீட்டு வாங்கக் காசில்லை. கோயிலுக்கு  வெளியிலேயே பலர் வாளியை வைத்துக்கொண்டு அழைத்தனர்.

    காற்றில் ஏதோ ஒரு சீட்டு பறந்துவந்து இலட்சுமியிடம் விழுந்தது. சீட்டை கையிலெடுத்து கண்களில் ஒத்தினாள். தீர்த்தமாடும் பகுதிக்கு நடையும் ஓட்டமுமாக விரைந்தாள். அன்றைக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஏனோ, மனதில் குளிர்ச்சி பொங்கியது.  தீர்த்தத்தில் நீராட எங்கு முதலில் செல்லவேண்டும் எனற ஐயமின்றி ஒவ்வொரு கிணறுக்கருகிலும் ஒன்று இரண்டு என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. முதல் தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம். தன்பெயரில் முதல் தீர்த்தம் இருந்ததில் அவளுக்கு பூரிப்பு. கருங்கற்களாலான ஆழமான சின்னக் கிணறு அது. அதில் வாளி விட்டு தண்ணீர் முகந்து எடுக்கிறார்கள். கூட்டமாக நின்றால் அவர் எல்லார் மீதும் படும்படி அள்ளி வீசி ஊற்றுவார். வாளி மிகப்பெரியதொன்றுமில்லை. பெரிய மக் மாதிரி இருக்கும். ஓவ்வொரு கிணறுக்கும் கொஞ்சதூரம் நடக்க வேண்டும். சுற்றிலும் மதில். ஓயாமல் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால்,  கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை. கிணற்றுமேடுமீது நின்றுதான் அவர் முகர்ந்து ஊத்துகிறார். ‘நளதீர்த்தம்’. ‘சேதுமாதவதீர்த்தம்’, ‘நீலதீர்த்தம்’ என சில தீர்த்தங்கள் தள்ளித்தள்ளி இருக்கும்.  ஒரு கிணற்றினை இரண்டாக பகுத்ததுபோல. ‘சிவ தீர்த்தம்’. ‘சந்திர தீர்த்தம்’ ‘சர்வ காயத்ரி’, ‘சரஸ்வதி’, ‘சாவித்திரி தீர்த்தமும்’. ‘கங்கா’, ‘யமுனா’, தீர்த்தமும் அடுத்தடுத்து இருந்தது. தீர்த்தநீர் தலையில் விழ விழ அவளுக்கு புத்துணர்ச்சியும் புது எண்ணமும் பிறந்தது.   இறுதியாக ‘கோடி தீர்த்தம்’.  மற்ற தீர்த்தங்களை  யாரோ ஊற்றுவார்கள்.              கோடிதீர்த்தத்தை அர்ச்சகர்தான் ஊற்றுவார். வாளியில் அல்ல  சின்ன கமண்டலத்தில். ‘இராமன் லிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும்போது நீர் தேவைப்பட்டதால் தனது அம்பின் நுனியை, பூமிமீதுவைத்து அழுத்தியதால் பூமியைப்பிளந்துகொண்டு வந்த தீர்த்தமே இந்த  ‘கோடி தீர்த்தம்’ என்று மகனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.’ கோயிலில் ராமநாதசுவாமி உட்பட அனைத்து சாமிகளுக்கும் இந்தக் கோடி தீர்த்தத்தில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். இருபத்தி இரண்டு தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு ஆடைமாற்றியப்பிறகு சிவபெருமானை தரிசிக்க வரிசையில் நிற்கவேண்டும். இலட்சுமியிடம் ஈர  உடையை மாற்றி உடுத்த வேறு ஆடை கூட கிடையாது. குலசேகரனுக்கும் அதே நிலைதான். சிறிதுநேரம் வெயிலில் நின்றால் காய்ந்துவிடும் என்று வேகவேகமாக நடந்தாள். பெரிய பெரிய தூண்கள். தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். ஒரேமாதிரியான வளை வடிவில் அரண்மனைபோல அமைக்கப்பட்ட பிரகாரங்கள், கருங்கற்சுவர்கள் என ஒவ்வொன்றும் ஆச்சர்யம் தரும்விதமாக சினிமாக்களில் பார்ப்பதுப்போல இருந்தன.

    “கடவுளே என்னை யாருமே அடையாளம் கண்டுக்கக் கூடாது. ஏங்கிட்ட எதுவு கேட்கவு கூடாது” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் இலட்சுமி. ஊர், பெயர், வீடு, வேலை, குடும்பம்னு இப்படி எல்லாமும் இருக்கறவங்களே எதை எதையோ தேடி அலையும்போது எதுவும் இல்லாத அவளுக்கு வேறுவிதமான  பதட்டம். கடவுளைத் தரிசிக்க வரிசையில் நிற்பதற்காக அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது இடது பக்கம் ஒரு பெரிய விநாயகர் சிலை. அதை சிலர் நின்று வணங்கிச்செல்கிறார்கள். சிலர் போகின்ற போக்கில் வணங்குகிறார்கள். இலட்சுமியும் அதைக் கவனிக்காமல்தான் சென்றாள். அச்சிலைக்கு பூசைசெய்யும் வயதானப்பாட்டி  ‘இங்கே வாம்மா’ என்று இலட்சுமியை அழைத்தாள்.  “ஐயோ ஏதோ சிக்கல் போல மாட்டிக்கொண்டோம்” என்று பயந்து பயந்து அருகில் போனாள்.

    ‘பாட்டி மூன்று விரல்களால் விபூதியைத்தொட்டு அவ்விருவர் நெற்றியிலும் பூசிவிட்டாள். மறுபடியும் விபூதியில் விரல்களை நெனைத்து ‘இனி ஒனக்கு எல்லா காரியமும் நல்லா நடக்கும்மா. கவலய விடு.’  என்று  நெற்றியில் பூசினாள். கடவுள் நேரடியாகக் காட்சி தரமாட்டாரே இதுபோல வேறு வேறு உருவத்தில் காட்சி தருவது போலிருந்தது.  இந்தப் பாட்டி மட்டுமல்ல கடவுள்? தப்பித்து, தனுஷ்கோடிக்கு வரத் துணையாக இருந்த சுந்தரனும் கடவுள்தான். அறிந்தோ அறியாமலோ பஸ்ஸில இவ்வளவு தூரம் வரஉதவின பேர் தெரியாத அந்த டிரைவரும் கடவுள்தான். இவ்வளவு நேரம்  சந்தேகப்பட்டு எந்த கேள்வியும் கேட்காத  இந்தப் பிரபஞ்சமே கடவுள்தான் என்று எண்ணிக்கொண்டாள்.  ஆனால் இவர்கள் மனித உருவில் வந்த கடவுள்கள். இலட்சுமி மயங்கி பாட்டியின்  காலுக்கடியில் விழுந்துவிட்டாள். கண்விழிக்க சற்றுநேரம் ஆனது. கண்விழித்துப் பாத்தால் அவளைச்சுற்றி பலர் ‘உடோ உடோ னு’ சொல்ற வார்த்தைகள் மட்டும் அவள் காதில்  விழுந்தது. கூட்டத்தில நின்றிருந்த பெரிய மீசைவைத்த செக்யூரிட்டி அவளது கண்களுக்குப் போலீசுக்காரராகத் தெரிந்தார். கூட்டத்தில குலசேகரனைக்காணவில்லை. அவளுக்கு ஓ ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அவளது கண்கள் அவனையே தேடின. அவனை மட்டும் தேடின. குலசேகரா…….. குலசேகரா…… எதுவும் நினைவில் இல்லாதவளாய் நிலையற்றுத் தேடினாள்.

    Share
  • மருத்துவ அறிவியலின் எதிர்காலமும், செயற்கை நுண்ணறிவின் தாக்கமும்

    மருத்துவ அறிவியலின் எதிர்காலமும், செயற்கை நுண்ணறிவின் தாக்கமும்

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை,
    MaGa Tech Gramam Pvt Ltd, சேலம், இந்தியா
    natarajangravity@gmail.com

    முன்னுரை

    மருத்துவத்துறை மிக நெடிய வரலாறு கொண்டது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு மருத்துவத்துறையானது மனிதர்களின் அறிவிற்கு ஏற்ப வளர்ந்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் வந்த அறிஞர்கள் ஆங்காங்கே அவர்களின் அறிவின் வளர்சிக்குத் தக்க வகையில் மருத்துவ அறிவியலானது புதுமைகள் புகுத்தப்பட்டுப் வளர்ந்து வந்துள்ளது. மருத்துவ அறிவியல் துறை வேறெந்தத் துறையையும் விட அதிக கவன ஈர்ப்பைப் பெறும் துறையாகவும் மற்றும் அனைத்து அரசாங்கங்களினால் அதிகமாக செலவழிக்கப்படும் துறையாகவும் இருக்கிறது. ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வேறெந்தத் துறைகளையும் விட மருத்துவ அறிவியல் துறையிலேயே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல் கணிதவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் கண்டறியப்படும்  புதுப்புது அறிவியல் நுட்பங்கள் மருத்துவத் துறையை மேம்படுத்தப் பெரிதும் உதவுகிறது.

    செயற்கை நுண்ணறிவு

    இருபதாம் நூற்றாண்டில் கண்ணிகளின் அறிமுகம் மனித இனத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. கணினிகளில் வரவு மனித இனத்தின் சிந்திக்கும் முறையை புரட்டிப் போட்டுள்ளது. இன்று கணினிகள் இல்லாத துறை என்பதே இல்லாத அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் கணினிகளின் பங்களிப்பு ஆக்கிரமித்துள்ளது. மிகச் சமீபத்திய முன்னேற்றமாக கணினி அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது வளர்ந்து வருகிறது [1]. இத்தகைய  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதனால் எட்ட முடியாத பல்வேறு கணித நுட்பங்கள் மற்றும் கணக்கீடுகள் ஆகியவை  செய்யப்படுகின்றன. கணினிகளின் செயற்கை நுண்ணறிவு  என்பது இயந்திரக் கற்றல், சுயமாகச் சிந்தித்தல், விரைந்து முடிவெடுத்தல், மற்றும் தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நவீன உலகத்தின் புதிய எண்ணெய் வளம் என மின்னணுத் தகவல்கள்  வரையறுக்கப்படுகின்றன. இத்தகைய தகவல்களை ஒன்றிணைத்து, அவற்றில் கணக்கீடுகள் செய்து ஒரு கணினியானது கற்றுக்கொள்கிறது. இன்றைய உலகத்தில் பெருமளவு இயக்கமானது கணினித்துவம் ஆக்கபட்டதன் விளைவாகத் தகவல்கள் எங்கும் கிடைக்கின்றன. இத்தகைய தகவல்களை ஆங்காங்கே இருக்கும் கணினிகள் தொகுக்கின்றன. இத்தகவல்களைக் கணினியானது ஆய்வு செய்து, வகைப்படுத்தி அதிலிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறது. உதாரணமாக ஒரு கண்காணிப்புப் படமி இருப்பதாக வைத்துக் கொள்வோம் இந்த கண்காணிப்புப் படமியில் 24 மணி நேரமும் பெறக்கூடிய தகவல்களை எடுத்துக்கொண்டு ஒரு கணினியானது ஆராயும்போது, எத்தனை நபர்கள் இந்த கண்காணிப்பு படமியில் பதிவாகி உள்ளனர்? எத்தனை வாகனங்கள் பதிவாகியுள்ளன? அத்தகைய வாகனங்களில் எண்கள் என்ன என்ன? மற்றும் மனிதர்களின் முகங்கள் யாவை? ஆகியவற்றை  தனது பிரித்தறியும் திறன் மூலம் ஆய்வு செய்கிறது. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களைத் தனது நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்கிறது. மீண்டும் அதே மனிதரோ அல்லது  அதே வாகனமோ அப்பகுதியைக் கடக்கும்போது தனது நினைவகத்தில் உள்ள சேமிப்பு தகவல்களின் ஒப்பீட்டிலிருந்து மீண்டும் வரும் தகவலைக் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்கிறது. இவ்வாறாக இந்த இயந்திரமானது கற்றுக்கொண்டு தகவல்களின் மூலம் தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. இச்செயல்முறை தொடர்ச்சியாக நடக்கிறது. இதை இயந்திரக் கற்றல் எனலாம். இந்த இயந்திர கற்றலை  அடிப்படையாகக்கொண்டு, விரைந்து முடிவெடுக்கும் திறனானது அந்த கணினிக்குக் கைக்கூடுகிறது.  உதாரணமாக விரும்பத்தகாத ஒரு நபர் வருகிறார் என்றால் அவரது முகத்தை ஆய்வு செய்து வைத்திருக்கும் கணினியிடம், அந்நபர் வரும்போது எச்சரிக்கை மணி எழுப்பும் வண்ணம் கட்டளையிட்டு வைக்கலாம். இவ்வாறான தானியங்கிக் கட்டளையானது அந்நபர் மீண்டும் அலுவலகத்திற்குள் வரும்போது இயல்பாகவே எச்சரித்து விடுகிறது. இதன் மூலம் கணினிக்கு முடிவெடுக்கும் திறனும் வந்து விடுகிறது. மேலும் இவ்வாறான செயல் முறைகள் மூலம் தனது கற்றலையும் மற்றும் முடிவெடுக்கும் திறனையும் தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய அமைப்பின் தொகுப்பு செயற்கை நுண்ணறிவு என வழங்கப்படுகிறது. இதேபோன்ற  செயல்முறையையானது பல்வேறு இடங்களில், பல்வேறு பயன்பாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    தானியங்கிச்  சிற்றுந்துகள்

    தானியங்கி சிற்றுந்துகளில் [2] சோதனை ரீதியிலும் மற்றும் வர்த்தக ரீதியிலும் இத்தகைய செயற்கை நுண்ணறிவானது பயன்பாட்டில் இருக்கிறது. இத்தகைய சிற்றுந்துகள் செயற்கைக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட இருப்பிடக் கருவிகள் மூலம் தமது இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது. மேலும் புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம் ஆகியவற்றை முன் அறிவித்தலின் மூலம் உணர்ந்து கொண்டு இத்தகைய சிற்றுந்துகள் சாலைகளில் இயங்குகின்றன. மேலும் அவை சாலைகளில் செல்லும்போது சாலைகளில் உள்ள பிரிப்புக்கோடுகளைக் கண்டறிந்து  அவற்றின் ஊடாகப் பயணம் செய்கின்றன. சாலைகளில் உள்ள எச்சரிக்கைப் பலகைகளையும் இவை கணித்துக் கொள்கின்றன. சாலைகளின் சந்திப்புகளில் உள்ள நிறுத்தங்களில் விளக்குகளின் வண்ணங்களை இத்தகைய சிற்றுந்துகள் புரிந்து கொள்கின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களுக்கு ஏற்பத் தமது இயக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய்ச்  செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இவ்வகையான சிற்றுந்துகள் இயக்கத்தில் உள்ள போது ஏதாவது வாகனமுமோ, விலங்குகளோ குறுக்கே வந்து விட்டால் மிகக் குறுகிய நேரத்தில் முடிவெடுத்து வாகனத்தை நிறுத்தி விடுகின்றன. அல்லது மாற்றுப்பாதையில் திரும்பி விடுகின்றன. இத்தகைய செயல்முறைகள் தொடர்ச்சியாக நடக்கும் போது ஒரு பாதையில் உள்ள வாகனங்களின் ஓட்டம், பாதையில் உள்ள மேடு பள்ளங்கள் மற்றும் நிறுத்தற்குறியீடுகள் ஆகியவற்றை இத்தகைய  செயற்கை நுண்ணறிவுச் சிற்றுந்து கற்றுக்கொண்டு, மிக விரைவாக அந்த பாதைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களை விட மிகவும் திறம்பட இத்தகைய சிற்றுந்துகள் இயங்கும் எனவும், மேலும் எதிர்காலத்தில் சாலை விபத்துகள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நிகழக்கூடிய காலகட்டமும் வரும் என்று செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு

    மருத்துவத் துறையிலும் இத்தகைய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முடியும் என்ற விஞ்ஞானிகளின் கருத்து வலுப்பெற்று வருகிறது. மருத்துவத் துறையின் எதிர்காலம் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவின் காலமாகவே இருக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர் [3]. இது கீழ்க்காணும் பல்வேறு வழிகளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

    தனித்த  மருத்துவ வரலாறு

    இத்தகைய முறையில் ஒரு குழந்தை பிறக்கும் போது அக் குழந்தையைப் பற்றிய விரிவான தகவல்களான  பிறப்பு விவரங்கள், மரபியல் தகவல்கள், ஆரம்பகாலத்  தடுப்பூசிகள், உடல் எடை மற்றும் உயரம் போன்ற அடிப்படை அளவீடுகள்  ஒரு பொதுவான, பாதுகாப்பான, மறைகுறியாக்கம் செய்யப்பட்ட (encrypted) கணினித் தரவுத்தளத்தில் தொகுத்து வைக்கப்படும். இந்தத் தரவுத்தளம் உலகளாவிய அல்லது பிராந்திய அளவிலான சுகாதார அமைப்புகளால் நிர்வகிக்கப்படலாம் [4]. எவ்வாறாக ஒரு குழந்தை பிறந்தவுடன் ஆதார் எண் போன்ற  தேசிய அடையாள எண் கட்டாயமாக்கப்படுகிறதோ, அது போன்றே உலகளாவிய அல்லது தேசிய அளவிலான தனித்துவமான மருத்துவ அடையாள எண்ணும் எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படலாம். இந்த எண், ஒரு தனிநபரின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மருத்துவத் தகவல்களைப் பாதுகாப்பாக அணுகவும், பகிரவும் உதவும் ஒரு திறவுகோலாகச் செயல்படக் கூடும். இதன் மூலம் அக் குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஏதாவது ஒரு மருத்துவ ரீதியிலான சிக்கல் ஏற்பட்டால், அவர்களின் மருத்துவ வரலாற்றை உடனடியாக அணுகி, அந்தக் குழந்தையைக் கண்காணிப்பதும், சிகிச்சையளிப்பதும் எளிதாகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பொதுக் கணினியில் தொகுக்கப்பட்ட தகவல்கள், அவ்வப்போது அந்தக் குழந்தை ஏதாவது ஒரு உள்ளூர் கிளினிக் முதல் சிறப்பு மருத்துவமனை வரை எங்கு சென்று காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டால் கூட, தானியங்கி முறையில் புதுப்பிக்கப்படும். எந்தத் தேதியில் இந்தக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்தது? உடல் வெப்பம் எவ்வளவு இருந்தது? என்ன அறிகுறிகள் தென்பட்டன? எந்த மருத்துவர் இந்தக் குழந்தைக்கு மருத்துவம் பார்த்தது? அவரது சிறப்பு என்ன? மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரி என்ன? மற்றும் எத்தகைய மருந்துகள் (பெயர், அளவு, உட்கொள்ளும் முறை) இந்தக் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்டது? மருந்தின் பக்க விளைவுகள் ஏதும் இருந்ததா? ஆகிய தகவல்கள் இந்த பொதுக் கணினியில் பாதுகாப்பாக ஏற்றம் செய்யப்பட்டுத் தகவல் புதுப்பிக்கப்படும். மேலும், பிற்காலத்தில் இந்தக் குழந்தை வேறு ஏதாவது உடலியல் உபாதைகளுக்காகவோ, ஒவ்வாமை, விபத்துக்  காயங்கள், நாள்பட்ட நோய்கள் காரணமாகவோ மருத்துவத்திற்குச் சென்றாலும் அல்லது மனநல ஆலோசனை பெற முயன்றாலும், இத்தகைய கணினியில் உள்ள தகவல்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, அந்தக் குழந்தையைப் பற்றிய முழு மருத்துவ வரலாறான  முந்தைய நோய்கள், சிகிச்சைகள், ஒவ்வாமைகள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவை  முன்கூட்டியே மருத்துவருக்குக் கிடைத்துவிடும். இது அந்தக் குழந்தைக்கான சரியான, துல்லியமான வைத்தியத்தை உடனடியாகத் தொடங்குவதை எளிதாக்கி விடுகிறது. அவசரகால சிகிச்சைகளில், மயக்கமடைந்த நிலையில் உள்ள ஒருவரின் மருத்துவ பின்னணியை அறிய இது மிகவும் உதவும். விபத்தில் சிக்கியவர் யாரெனத் தெரியாவிட்டாலும், கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் மருத்துவ வரலாற்றை அணுகி, அவருக்கு இருக்கும் நோய்களை அறிந்து விரைந்து முடிவெடுப்பதற்கான அதிக வாய்ப்புகளை இத்தகைய தகவல்கள் தருகின்றன.

    துல்லியமான நோயறிதல்

    செயற்கை நுண்ணறிவானது, மேம்பட்ட பட பகுப்பாய்வு கணினி முறைகளைப்  பயன்படுத்தி, மருத்துவப் படங்களை (எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, PET ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஆகியவை ) ஆய்வு செய்து, மனிதர்களால், குறிப்பாக ஆரம்ப கட்டங்களில், எளிதில் கவனிக்க முடியாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கண்டறியும் வண்ணம் திறன் மிக்கதாய் உருவெடுக்கும் [5] . வழமையாக, கதிரியக்கவியல் நிபுணர்கள் இந்தப் படங்களை ஆய்வு செய்து நோய்களைக் கண்டறிவார்கள். செயற்கை நுண்ணறிவு இந்த நிபுணர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான படங்களை நொடிகளில் பகுப்பாய்வு செய்து, நோயின் அறிகுறிகளை மிகத் துல்லியமாகக் சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக, நுரையீரல் எக்ஸ்-ரேயில் உள்ள மைக்ரோ அளவிலான கட்டிகளைக் கூட செயற்கை நுண்ணறிவு கண்டறிய முடியும். புற்றுநோய்க் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, கட்டியின் வகை, அளவு மற்றும் பரவல் போன்ற முக்கிய தகவல்களை வழங்குவதன் மூலம் சிகிச்சையை விரைவுபடுத்த முடியும். மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்வதில் செயற்கை நுண்ணறிவு மனித கதிரியக்கவியல் நிபுணர்களை விட அதிக துல்லியத்தை வெளிப்படுத்துகிறது. நீரிழிவு ரெட்டினோபதி போன்ற கண் நோய்களை ஆரம்பத்திலேயே, பார்வை இழப்பு ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து, லேசர் சிகிச்சை போன்ற முறைகள் மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும். நரம்பியல் தொடர்பான நோய்களான அல்சைமர் அல்லது பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகளை மூளை ஸ்கேன்களில் கண்டறிந்து, முன்கூட்டியே சிகிச்சை அளிக்க உதவ முடியும்.

    சிகிச்சைக்கான பரிந்துரைகள்

    ஒரு மருத்துவர் ஒரு குறிப்பிட்ட வகையிலான நோய்க்குத் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட மருந்துகளைக் கொடுக்கிறார் என்பதை கணினியானது இயந்திரக் கற்றல் மற்றும் ஆழ் கற்றல் (Deep Learning) போன்ற மேம்பட்ட நுட்பங்கள் மூலம் கற்றுக்கொள்கிறது [6]. பெரிய அளவிலான மருத்துவ தரவுத்தொகுப்புகளையம், மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகள், ஆராய்ச்சிக்  கட்டுரைகள், மில்லியன் கணக்கான நோயாளிகளின் மருத்துவ வரலாறு  ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், எந்த நோய்க்கு எந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைச்  செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொள்கிறது. உதாரணமாக, ஒரு மருத்துவர் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு,  இத்தகைய மருந்துகளை, அவற்றின் எண்ணிக்கையோ மற்றும் அளவையோ மாற்றம் செய்து கொடுக்கிறார் என்றாலும், அதனையும்  அத்தகைய நோயாளியின் மருத்துவ வரலாற்றைப் படித்து, முந்தைய சிகிச்சைகள், மருந்தின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் போன்றவற்றை ஆராய்ந்து, நோயின் தன்மையைப் புரிந்து கொண்டு, மருந்தின் அளவைக் கணினியானது கற்றுக்கொள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிநபரின் மருத்துவ விவரங்கள், மரபியல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நோய்க்கான மிகச் சரியான மற்றும் பாதுகாப்பான மருந்தை முன்கூட்டியே பரிந்துரை செய்யும் அளவிற்குச்  செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு நோயாளியின் மரபணு அமைப்பு, அவர்களின் நோய்க்கான தனிப்பட்ட மரபணு காரணிகள், வாழ்க்கை முறை (உணவுப் பழக்கம், உடற்பயிற்சி), சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தனிப்பட்ட காரணிகளை ஆயிரக்கணக்கான மற்ற நோயாளிகளின் தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து, தனிப்பயனாக்கப்பட்ட, துல்லியமான சிகிச்சை முறைகளை வழங்க முடியும். புற்றுநோய் சிகிச்சையில், கீமோதெரபி மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதிலும், கதிர்வீச்சு சிகிச்சையின் அளவைத் தீர்மானிப்பதிலும் செயற்கை நுண்ணறிவு மருத்துவர்களுக்கு உதவ முடியும்.

    மருந்து கண்டுபிடிப்பு

    புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும், ஏற்கனவே உள்ள மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதிலும் செயற்கை நுண்ணறிவு  முக்கிய பங்கு வகிக்கிறது [7] . வழமையான  மருந்துக்  கண்டுபிடிப்பு முறைகள் மிகவும் நீண்ட காலமும், அதிக செலவும் பிடிக்கும் செயல்முறையாகும். செயற்கை நுண்ணறிவு இந்த செயல்முறையை வேகப்படுத்துகிறது. பெரிய அளவிலான தரவுத்தொகுப்புகள், ஆயிரக்கணக்கான வேதியியல் கலவைகள், உயிரியல் இலக்குகள், நோய்களின் மூலக்கூறு வழிமுறைகள், மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, புதிய மருந்து மூலக்கூறுகளைக் கண்டறிவதற்கும், எந்தெந்த மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகச்  செயல்படக்கூடும் என்பதைக் கணிப்பதற்கும், மருத்துவ பரிசோதனைகளை வடிவமைத்து விரைவுபடுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விரைவாகக் கண்டுபிடிப்பதில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றி வருகிறது.

    நோய்த் தடுப்பு மற்றும் பொது சுகாதாரம்

    செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவிலான சுகாதாரத் தரவுகளை – நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள், சமூக ஊடக தரவுகள், பயணத் தகவல்கள், சுற்றுச்சூழல் தரவுகள் – ஆய்வு செய்து, தொற்று நோய்கள் பரவுவதைக் கண்காணிக்கவும், எந்தெந்த பகுதிகளில் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை செய்யவும் உதவுகிறது [8] . ஒரு புதிய வைரஸ் பரவத் தொடங்கும்போதே, அதன் பரவல் வேகத்தையும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் கணிக்க முடியும். பெரிய அளவிலான சுகாதாரத் தரவுகளை ஆய்வு செய்து, நோய்கள் பரவுவதற்கான காரணிகளையும், வாழ்க்கை முறை காரணிகள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற ஆபத்து காரணிகளையும் கண்டறிய முடியும். இதன் மூலம், பொது சுகாதார அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளான தடுப்பூசி முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் அபாயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் தயார் செய்யவும் செயற்கை நுண்ணறிவு உதவும்.

    புதிய எல்லைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

    மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போதுள்ள நிலையைத் தாண்டி, கற்பனைக்கு எட்டாத பல புதிய வாய்ப்புகளையும், தொழில்நுட்பங்களையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நாம் விவாதித்த அம்சங்களைத் தாண்டி, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையில் மேலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் சில முக்கிய வழிகளானவை இங்கே விவரிக்கப்படுகிறது.

    திரவ உயிர்மருத்துவம் (Liquid Biopsy)

    செயற்கை நுண்ணறிவு, இரத்த மாதிரிகள், சிறுநீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்களில் உள்ள நோய் குறிப்பான்களைக்  (biomarkers) கண்டறிந்து நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் [9] . பாரம்பரிய பயாப்ஸி முறைகள் ஆக்கிரமிப்புத்  தன்மை கொண்டவை. மேலும் அவை சில நேரங்களில் ஆபத்தானவை. திரவ உயிர்மருத்துவம், ஆக்கிரமிப்பு இல்லாத மற்றும் வலியற்ற முறையில் நோய்களைக் கண்டறிய உதவுகிறது. உதாரணமாக, புற்றுநோய்க் கட்டியிலிருந்து வெளியேறும் சிறிய டிஎன்ஏ துண்டுகளை இரத்தத்தில் கண்டறிந்து, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இத்தொழில்நுட்பம், நோயின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், சிகிச்சையின் விளைவுகளை மதிப்பிடவும் உதவும்.

    செயற்கை உயிரியல் மற்றும் உயிர் அச்சிடுதல் (Synthetic Biology and Bioprinting)

    செயற்கை நுண்ணறிவு, செயற்கை உயிரியல் மற்றும் உயிரியல் அச்சிடுதல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து, சேதமடைந்த திசுக்கள் மற்றும் உறுப்புகளை ஆய்வகத்தில் உருவாக்க உதவும் [10]. இந்தத் தொழில்நுட்பம், உறுப்பு தானம் கிடைக்காமல் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும். செயற்கை நுண்ணறிவு, உயிரியல் அச்சிடும் செயல்முறையை மேம்படுத்தவும், உருவாக்கப்படும் உறுப்புகளின் தரம் மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் உதவும். உதாரணமாக, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், ஒரு நோயாளியின் சொந்த செல்களிலிருந்து முழுமையான செயல்பாட்டுடன் கூடிய சிறுநீரகம் அல்லது கல்லீரல் போன்ற உறுப்புகளை உருவாக்க முடியும்.

    அறுவை சிகிச்சையில் நுண்ணறிவும் ரோபோக்களும்

    கேன்சர் போன்ற வியாதிகளை மருத்துவ ரீதியில் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை கணிப்பதில் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது [11] . ஒரு குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்கு, பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கும்போது, செயற்கை நுண்ணறிவு அந்தந்த சிகிச்சை முறைகளின் வெற்றி வாய்ப்புகளை, நோயாளியின் தனிப்பட்ட மருத்துவத் தரவுகளின் அடிப்படையில் கணித்து, மருத்துவர்கள்  சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. மருத்துவர்கள் செய்யும் அறுவை சிகிச்சைகளையும் இத்தகைய செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொள்கிறது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அமைப்புகள், மருத்துவரின் கைகளின் இயக்கங்களை துல்லியமாகப் பின்பற்றிச்  செயல்பட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. எளிமையான அறுவை சிகிச்சைகள் முதல் மிகக் கடினமான, நுட்பமான அறுவை சிகிச்சைகளான  இதய அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவை வரை செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட ரோபோக்களின் உதவிகொண்டு மிகச் சுலபமாகவும், அதிக துல்லியத்துடனும் முடித்து விட முடியும் என மருத்துவ உலகம் நம்புகிறது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் குறைந்த தழும்பு, குறைந்த இரத்த இழப்பு, தொற்று அபாயம் குறைவு மற்றும் விரைவான குணமடைதல் போன்ற நன்மைகளை வழங்குகின்றன. மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சைகளை அதிக துல்லியத்துடன் செய்யவும், நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்று அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் உடல் சோர்வைத் தவிர்க்கவும் ரோபோட்டிக்ஸ் உதவுகிறது.

    மருந்து விநியோகத்தில் நானோ தொழில்நுட்பம் – இலக்கு அடிப்படையிலான சிகிச்சை

    செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பத்துடன் இணைந்து, குறிப்பிட்ட நோயுற்ற செல்களை மட்டுமே இலக்கு வைத்து மருந்துகளை விநியோகிக்கும் மேம்பட்ட நானோ துகள்களை வடிவமைக்க உதவக் கூடும் [12]. இந்த இலக்கு அடிப்படையிலான மருந்து விநியோகம், மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, பக்க விளைவுகளைக் குறைக்கவும் உதவும். உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சையில், நானோ துகள்கள் புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து மருந்துகளை விநியோகித்து, ஆரோக்கியமான செல்களைப் பாதுகாக்கும்.

    சவால்கள் மற்றும் நெறிமுறைகள்

    இந்த அற்புதமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், சில சவால்களையும், நெறிமுறை சார்ந்த கேள்விகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் [13].

    • தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவத் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதும் மிக முக்கியம்.
    • சார்பு (Bias): செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், பயிற்சி அளிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இந்த சார்புத்தன்மையை நீக்குவது மிகவும் அவசியம்.
    • வேலைவாய்ப்பு மாற்றம்: செயற்கை நுண்ணறிவின் பரவலான பயன்பாடு, மருத்துவத் துறையில் சில வேலைவாய்ப்புகளை மாற்றக்கூடும். இதற்கு ஏற்றவாறு, புதிய திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.
    • பொறுப்புடைமை: ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு தவறான முடிவை எடுத்தால், யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழும். இதற்கான தெளிவான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது.

    முடிவுரை

    பல்வேறு கணினி சொல்லும் தகவல்களின் தொகுப்பு ஆய்வுகளின் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் உதவி கொண்டு மருத்துவயியலில் மாபெரும் முன்னேற்றத்தை எதிர்காலம் சந்திக்க இருக்கிறது.  எனவே மிகச் சமீபத்திய எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆளுமை என்பது தவிர்க்க இயலாத ஒரு தொழில்நுட்பமாகவே இருக்கும். மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் பிரகாசமாகவும், பல்வேறு சாதகமான சாத்தியக்கூறுகள் நிறைந்ததாகவும் உள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்கள், நோய்களைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும், நோய்களைத் தடுப்பதிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். அதே நேரத்தில், இந்தத் தொழில்நுட்பங்களை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவதும் அவசியமாகும்.  மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் கைகோர்க்கும் இந்த புதிய சகாப்தம், ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை நோக்கிய நமது பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    உசாத்துணைகள்

    [1]. Allen, G. (2020). Understanding AI technology. Joint Artificial Intelligence Center (JAIC) The Pentagon United States, 2(1), 24-32.

    [2]. Elliott, D., Keen, W., & Miao, L. (2019). Recent advances in connected and automated vehicles. journal of traffic and transportation engineering (English edition), 6(2), 109-131.

    [3]. Haleem, A., Javaid, M., & Khan, I. H. (2019). Current status and applications of Artificial Intelligence (AI) in medical field: An overview. Current Medicine Research and Practice, 9(6), 231-237.

    [4]. Schork, N. J. (2019). Artificial intelligence and personalized medicine. Precision medicine in Cancer therapy, 265-283.

    [5]. Das, S., Biswas, S., Paul, A., & Dey, A. (2018). AI Doctor: An intelligent approach for medical diagnosis. In Industry Interactive Innovations in Science, Engineering and Technology: Proceedings of the International Conference, I3SET 2016 (pp. 173-183). Springer Singapore.

    [6]. Ali, Z., Huang, Y., Ullah, I., Feng, J., Deng, C., Thierry, N., … & Qi, G. (2023). Deep learning for medication recommendation: a systematic survey. Data Intelligence, 5(2), 303-354.

    [7]. Qureshi, R., Irfan, M., Gondal, T. M., Khan, S., Wu, J., Hadi, M. U., … & Alam, T. (2023). AI in drug discovery and its clinical relevance. Heliyon, 9(7).

    [8]. Malik, Y. S., Sircar, S., Bhat, S., Ansari, M. I., Pande, T., Kumar, P., … & Dhama, K. (2021). How artificial intelligence may help the Covid‐19 pandemic: Pitfalls and lessons for the future. Reviews in medical virology, 31(5), 1-11.

    [9]. Foser, S., Maiese, K., Digumarthy, S. R., Puig-Butille, J. A., & Rebhan, C. (2024). Looking to the future of early detection in cancer: liquid biopsies, imaging, and artificial intelligence. Clinical Chemistry, 70(1), 27-32.

    [10]. Ramesh, S., Deep, A., Tamayol, A., Kamaraj, A., Mahajan, C., & Madihally, S. (2024). Advancing 3D bioprinting through machine learning and artificial intelligence. Bioprinting, e00331.

    [11]. Moglia, A., Georgiou, K., Georgiou, E., Satava, R. M., & Cuschieri, A. (2021). A systematic review on artificial intelligence in robot-assisted surgery. International Journal of Surgery, 95, 106151.

    [12]. Adir, O., Poley, M., Chen, G., Froim, S., Krinsky, N., Shklover, J., … & Schroeder, A. (2020). Integrating artificial intelligence and nanotechnology for precision cancer medicine. Advanced Materials, 32(13), 1901989.

    [13]. Chen, Y., & Esmaeilzadeh, P. (2024). Generative AI in medical practice: in-depth exploration of privacy and security challenges. Journal of Medical Internet Research, 26, e53008.

    Share
  • எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

    எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ……. ஆஸ்திரேலியா

    உள்ளத்தில் தமிழுணர்வு  ஊற்றெடுக்க உழைத்தாரே
    ஊரூராய் அலைந்தாரே  உவேசா தமிழாசான்
    தெள்ளுதமிழ் நூல்களைத்  தேடிநின்ற வேளை
    செல்லரித்த சேதிகேட்டுத் திகைத்தவரும் நின்றாரே

    ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார் அவரும்
    காடுமேடு பாராமல் நடந்தலைந்தார் நாளும்
    நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார் அவரும்
    பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகியே விட்டார்

    ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிக்க
    காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தரு ஐயா
    பூட்டியே வைத்தவேட்டைப் புத்தகமாக்கி வைத்த
    பாட்டனே எங்களையா பணிந்துமே போற்றுவோமே

    ஏடெலாம் இடைஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
    கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
    புதைகுழி வெட்டியேட்டைப் புதைத்தது கண்டபோது
    புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

    மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
    கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
    அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
    செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்

    பைந்தமிழ் மொழியைக் தேர்ந்துமே கற்றாய்
    பலருமே வியக்க தமிழாகி நின்றாய்
    சொந்தமாய்ச் சேர்த்த சொத்தாய் நினைத்து
    சுந்தரத் தமிழினைக் காத்துமே நின்றாய்

    நந்தமிழ் சங்கநூல்கள் யாவரும் கற்றுநிற்க
    வெந்தழல் புகுந்தவேட்டைப் வேகமாய் பற்றி
    நொந்திடச் செய்தாரை வந்தனை செய்துநின்று
    செந்தமிழ் காத்தநம் செம்மலைப் போற்றுவோமே

    பல்கலைக்கழகம் செய்யும் பணியினைத் தனியேநின்று
    நல்மனம் கொண்டுசெய்த நாயகன் நீயேஐயா
    இன்தமிழ் சிறந்துநிற்க என்றுமே உழைத்தவையா
    எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய்

    வடமொழி படித்தால் வானுலகு உவந்தேற்றும்
    வசதிபல கிடைப்பதற்கு ஆங்கிலமே கைகொடுக்கும்
    இவையனைத்தும் புறந்தள்ளி ஏந்தினார் தமிழதனை
    உலகவாழ்வில் தமிழதனை உயிராக எண்ணினரே

    மேடையில் பேசுதற்கும் விதம்விதமாய் எழுதுதற்கும்
    சங்கத் தமிழினைத் தன்னுழைப்பால் எமக்களித்தார்
    ஊணுறக்கம் பாராமல் ஓய்வின்றி உழைத்ததனால்
    ஏடிருந்த அத்தனையும் எம்சொத்தாய் ஆக்கினரே

    சாமிநாத ஐயர் தமிழுக்குச் சொத்தாவார்
    நாம்படிக்க நூல்களை நற்றுணையாய் ஈந்தளித்தார்
    எழுதினார் பதிப்பித்தார் ஏந்தினார் தமிழை
    என்றுமே தமிழுலகில் இருந்திடுவார் உவேசா

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
    தையில் பூசம் பற்பல சிறப்பு
    கந்தனை நினைத்து வந்தனை செய்திட
    வந்ததே தைப் பூசத் திருநாள்

    அருவமாய் இருந்தது உருவம் ஆனது
    அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
    ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
    அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
    மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
    மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

    வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
    வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
    காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
    சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

    புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
    எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
    தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
    எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

    காது குத்துவார் காரியம் தொடங்குவார்
    கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
    தம்மை மறந்து அலகும் குந்துவார்
    தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

    தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
    சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
    ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
    உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

    Share
  • குமரித் தலபுராணத்தில் அகஸ்தீஸ்வரம்

    முனைவர் த. ஆதித்தன்

    புராணம் என்பதற்குப் பொதுவாக  ‘பழமை, தொன்மை, பழங்கதை’ என்னும் பொருள்களை அகராதிகள் தருகின்றன. யாழ்ப்பாண அகராதி, ‘கதை, காந்த  முதலிய புராணம், இஃது ஞானமறுபத்தினான்கி னொன்று, பழங்கதை, பூருவம்’ என்கிற பொருள்களைக் கொடுக்கிறது. நா. கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதி, அபிதான சிந்தாமணி ஆகியவையும் புராணங்கள் குறித்து விளக்குகின்றன.  அவை பதினெண் புராணங்கள் குறித்தும், வேதங்களுக்கும் புராணங்கள் வியாக்கியாதமாயுள்ளன என்பதாகவும் பதிவு செய்துள்ளன.

    பதினெண் புராணங்களாகச் சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரம்மம், பதுமம், ஆக்னேயம், பிரமனகவர்த்தம் ஆகியன வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி உப புராணங்களும் பதினெட்டு உள்ளன.  அவை உசனம், கபிலம், காளி, சநற்குமாரம், சாம்பவம், சிவதர்மம், சௌரம், துர்வாசம், நந்தி, நாரசிங்கம், நாரதீயம், பாராசரீயம், பார்க்கவம், ஆங்கிரம், மாரீசம், மானவம், வாசிட்டலைங்கம், வாரூனம் என்பனவாகும்.

    உபபுராணங்கள் குறித்து வெவ்வேறு பட்டியல்கள் உள்ளன. இவை ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபடுகிறது. இவற்றுள் மேற்குறிப்பிட்டவை முதன்மையான உபபுராணங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழில் உள்ள புராணங்களை, ‘கடவுள் புராணம், சான்றோர் புராணம், தல புராணம்’ என மூன்றாகப் பகுப்பதுண்டு. இவற்றுள் கடவுள் புராணமும், தல புராணமும் தொடர்புடையன என்பதே அறிஞர்களின் கருத்தாக உள்ளது.  கடவுள் பற்றிய புராணங்கள் தெய்வங்கள் தெய்வீக நிலையில் நின்று செயல்படுவதை விளக்கும். இத்தெய்வங்களின் செயல்கள் ஒரு தலத்தைச் சார்ந்து அமைகின்றபோது அவற்றை எடுத்துரைப்பனவாக அமைவன தலபுராணங்கள் ஆகும்.

    காப்பியங்களில் தன்னிகரற்ற தலைவனைப் போற்றுவது இயல்பாக உள்ளதைப் போன்று இறையன்பரைப் பாடுவன சான்றோர் புராணம். இவ்வகைமையுள் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்திற்கு முதன்மை இடம் உண்டு. இந்நூல் சிவனடியார்களின் கதைகளைப் புராணமாகப் பாடிய சிறப்பிற்குரியது. இதேபோன்று சேக்கிழார் புராணம், திருவாதவூரடிகள் புராணம், பட்டினத்துப் பிள்ளையார் புராணம், புலவர் புராணம் போன்றவை குறிப்பிடத்தகுந்த தொடக்கக் காலச் சான்றோர் புராணங்களாகும்.

    ஓர் இடத்தில் அதாவது தலத்தில் இருந்து அருள் பாலிக்கும் இறைப்பொருள் குறித்தும் அவ்விடத்தின் சிறப்புகள் குறித்தும் விவரித்துக் கூறும் தலபுராணங்கள் தமிழுலகில் தனித்து ஆராயத்தக்கன. இடைக்கால வடமொழிச் சார்பு கருதி மான்மியம், மகாத்மியம் போன்ற வடமொழிப் பெயர்களைத் தாங்கினாலும் இவை தமிழ் இலக்கியச் சிறப்புடனேயே திகழ்வதனைக் காணலாம்.

    தமிழ்த் தலபுராணங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. முதலில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த இவை செய்யுள் வடிவில் பெருகி ஏட்டிலும் எழுதி வைக்கப் பெற்றன. பிற்காலத்தில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக வசன நடையிலும் இப்புராணங்கள் நூல்களாக மலர்ந்தன. இவ்வகையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுத் தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரையிலான சுமார் 400 செய்யுள் நடையிலான தலபுராணங்கள் பற்றி இன்று அறியமுடிகிறது. 500க்கும் மேற்பட்ட உரைநடையிலான புராண நூல்களும் எழுதப்பட்டுள்ளன என்கின்றனர். தலபுராணங்கள் குறித்து ஆய்வுகள்  பல வெளிவந்துள்ளன. ஆனால், இந்நாள் வரையில் ஆய்வுலகில் கவனம் பெறாத ஒன்றான ‘குமரித்தலபுராணம்’  சுவடியானது தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் உள்ளது.

    குமரித் தலபுராணம்

    உலகின் தொன்மையான நூலகங்களுள் ஒன்றான சரசுவதி மகால் சோழ அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். பிற்காலத்தில் தஞ்சை மராட்டியர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இங்கு அரிய சுவடிகளும் ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. அதில் உள்ள சுவடிகளில் ஒன்று குமரித் தலபுராணம் (சுவடி எண்.1603). நமது மண்சார்ந்த சுவடி அங்கிருப்பதனைக் கண்டு மகிழ்ந்தேன். பதிப்பிக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.

    சுவடி பெயர்த்து எழுதப்பெற்ற கையெழுத்துப் பிரதியை ஆழ்ந்து நுணுகிப் பார்க்கும்போது இதன் மூலச் சுவடி மிகவும் சிதைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று.  மேலும், இச்சுவடியின் தொடக்க ஏடும் முடிவு ஏடும் இல்லையென்பதால், இப்புராணத்தின் ஆசிரியர், காலம் போன்ற செய்திகளை அறிந்துகொள்ள இயலவில்லை.

    பாதுகாக்கப்படும் ஓலைச் சுவடியானது 300 ஆண்டுகள் முதல் 400 ஆண்டுகள் வரை நல்ல நிலையில் இருக்கும். பின் பிரதிசெய்தே அதன் தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பிரதி செய்யப்படும் சுவடியில் பெயர்த்தெழுதுபவர் கால எழுத்தமைதியே இடம்பெறும். எனவே அவ்வெழுத்தமைதியைக் கொண்டும் காலத்தைச் சரியாகக் கணிக்க இயலாது.

    பொதுவாகப் பதிப்புப் பணி மேற்கொள்ளப்படும் நூல்களின் பல பிரதிகள் கிடைக்கக்கூடும். பல சுவடிகள் இருந்தால் அவற்றை ஒப்புநோக்கி மூலபாடத் திறனாய்வு செய்து சிறந்த பதிப்பாகக் கொண்டுவரலாம். குமரித் தலபுராணம் என்னும் பதிப்புப் பணிக்கு எடுத்துக்கொண்ட சுவடியில் ஒரு பிரதி மட்டுமே கிடைத்துள்ளது. ஒப்பீடு செய்வதற்கு வேறு சுவடிகள் கிடைக்கப் பெறவில்லை. எனவே அத்தகைய பணியினை மேற்கொள்ள இயலவில்லை. வேறு பிரதிகள் கிடைக்கும் வேளையில் பதிப்பு செம்பதிப்பாக மாறும். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும்.

    முழுமையான சுவடியும் கிடைத்திடின் இன்னும் சிறப்பு. கிடைத்துள்ள சுவடியிலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. கிடைக்கப்பெற்றுள்ள பாடல்களிலும் சில சிதைந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 470 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை 13 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை,

    1. திருநாட்டுச் சிறப்பு
    2. குமரியெனும் பெண் வரலாற்றுச் சருக்கம்
    3. குமரியெனும் பெயர் வரலாற்றுச் சருக்கம்
    4. சேது வரலாற்றுச் சருக்கம்
    5. குகனாண்டேசுரர் சருக்கம்
    6. இந்திரன் தவம்புரிச் சருக்கம்
    7. அகத்தியேச்சுரச் சருக்கம்
    8. தேவி தோற்றச் சருக்கம்
    9. மதுகயிடவச் சங்காரச் சருக்கம்
    10. மகிடாசுரன் இந்திரனோடு யுத்தச் சருக்கம்
    11. கன்னித்தாய் வரலாற்றுச் சருக்கம்
    12. கன்னிநாயகி முனிவர்களுக்கு அபயம் கொடுத்த சருக்கம்
    13. கன்னி நாயகி சோலைபுகுச் சருக்கம்

    என்பனவாம்.

    திருநாட்டுச் சிறப்பு என்னும் முதல் சருக்கமானது மொத்தம் 36 பாடல்களை உடையது. அதில் 17 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. முதல் 19 பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை. 20ஆவது பாடல் தொடங்கி 36ஆவது பாடல் வரையில் கிடைத்துள்ளன.

    இச்சருக்கமானது குமரி மாவட்ட நிலப்பரப்பின் வளத்தினையும், சிறப்பினையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. “நுண்ணோன்பர் கண்ட நானிலமும்…” (திருநாட்டுச் சிறப்பு, பாடல்-21) என்னும் அடி நில வளத்தினை எடுத்துரைக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலங்களையும் கொண்டது குமரி மாவட்டம்.

    தற்காலத்திலும் காட்டுவளம், மலைவளம், வயல்வளம், கடல் வளம் என்னும் நானில வளங்களையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. இதைப் போன்றே அக்காலத்திலும் நானில வளங்களைப் பெற்றுக் குமரி சிறந்து விளங்கியிருக்கிறது என்பதனைக் குமரித் தலபுராணம் வாயிலாக அறியமுடிகிறது.

    இச்சருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல ஊர்களின் பெயர்கள் இன்னும் அதே பெயர்களிலேயே வழங்கப்படுகின்றன. சான்றாகப் பூதப்பாண்டி, திருப்பதிசாரம், கோட்டாறு, தோவாளை, சுசீந்திரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் கோட்டாற்றின் சிறப்பினைக் குறித்து மட்டும் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வணிகத் தலைமை மையம் என்று சொல்லும் அளவிற்கு, கோட்டாறு முதன்மை பெறும் இடமாகத் திகழ்கிறது.

    திவ்விய தேசங்கள் எனப்படும் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவாழ்மார்பன் கோயில் அமைந்துள்ள இடம் திருப்பதிசாரம். சக்தி வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட குமரித் தலபுராணத்தில் வைணவத் தலமான திருப்பதி சாரத்தினையும் சிறப்பித்திருப்பது இந்நூலாசிரியரின் சமயப் பொறையினைக் காட்டுகிறது.

    தொன்மங்களின் அடிப்படையில் குமரிக் கண்டத்தின் எச்சமாக இன்றைய குமரி மாவட்டம் பேசப்படுகிறது. தொன்மைக் குடிகளின் இடம் என்ற பெருமையினைப் பறைசாற்றும் வகையில்,

    பொங்கு பல கலைகளெல்லாம்
    புனையறத் தேர்ந்து கற்ற
    சங்கந ற்றமிழோர் வாழ்ந்த
    யிவ்வளநா டென்றோது

    (திருநாட்டுச் சிறப்பு, பாடல்-36)

    என்கிறார் ஆசிரியர். சங்கத் தமிழர் வாழ்ந்த மண்ணான குமரியில் பல கலைகளில் சிறந்தோர் வாழ்ந்தனர் என்ற பெருமை மட்டுமல்லாது, நானில வளத்துடன் சிறப்புகள் பல பெற்றது குமரி என்பதனை எடுத்துரைப்பதாகத் திருநாட்டுச் சிறப்பு என்னும் சருக்கம் அமைந்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம்

    மொத்தமுள்ள 13 சருக்கங்களுள் இரண்டு சருக்கங்களில் அகஸ்தீஸ்வரம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது சருக்கமான குமரியெனும் பெண் வரலாற்றுச் சருக்கத்தின் 38ஆவது பாடலில் அகஸ்தீஸ்வரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அதன் விரிவாக அமைந்த அகத்தியேச்சுரச் சருக்கம் என்னும் ஏழாவது சருக்கத்தில் மொத்தம் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள்  சில பாடல்களின் அடிகள் முழுமையாக இல்லை. சுவடி மிகவும் சிதைந்து காணப்பட்டதால் அதனை முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் போகியுள்ளது.

    குமரியெனும் பெண்வரலாற்றுச் சருக்கத்தில் குமரி நகரின் பெருமையையும், வளத்தையும் முதலில் குறிப்பிட்டு விட்டுப்பின் எத்தகைய பாவம் செய்தவரும் குமரியில் நீராடி இறைவியை வழிபட்டால் பாவம் தீர்ந்து  மீண்டு வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குமரி பகவதியின் பிறப்பு, அகத்தியர் வந்து வழிபட்ட செய்தி போன்றவை இடம்பெறுகின்றன. இச்சருக்கத்தின் 38ஆவது பாடலில்  இடம் பெற்றுள்ள புராணச் செய்தியானது, சிவபெருமானின் திருமணத்தின்போது கைலாயத்தில் பெரும் திரளான கூட்டம் ஏற்படுகிறது. அதனால் கைலாயம் தாழ்ந்து குமரி உயர்ந்ததாம். அதனைச் சமன்செய்ய அகத்தியரைச் சிவன் குமரிக்குச் செல்லுமாறு கூறியதோடு, அங்கேயே திருமணக் கோலத்தில் காட்சியளிப்பேன் என்று கூறினாராம். அகத்தியரும் அவ்வாறே செய்தார் என்பதாகும். அகத்தியேசுரச் சருக்கத்தில் இதன் விரிவான செய்தி இடம்பெற்றுள்ளது.

    சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி அகத்தியர் குமரிக்கு வருகிறார். கடலில் தீர்த்தமாடுகிறார். அன்னையை வழிபடுகிறார். பின்னர் குமரியில் அமைந்த குகநாதன் பாதங்களை வணங்கியுள்ளார். குகநாதீஸ்வரர், அன்னை பகவதி ஆகியோரை வழிபட்டபின்பு திருமணக் கோலம் காண வேண்டிச் சிவனை வழிபட்டிருக்கிறார். இப்புராணத்தில் பகவதி குறித்து ‘இப்பகுதியைச் சார்ந்த பாணாசுரன் பிரம்மாவிடம் தனக்கு மரணம் என்று நிகழ்ந்தால் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் நிகழ வேண்டும் என்று வரம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வரம் பெற்ற பாணாசுரன் கர்வம் கொண்டு தவறுகள் செய்கிறான். அதனால் அவனை அழிப்பதற்காக, பார்வதியின் அம்சமான பகவதி குமரியில் சிறு பெண்ணாகப் பிறந்தாள்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. குகநாதீஸ்வரர் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. இதில் குகன் என்ற பெயரில் முருகப் பெருமான் சுட்டப்படுகிறார். தந்தை  சிவபெருமானைச் சீடனாகக் கொண்டு பிரணவத்தின் பொருள் உரைத்தவர் முருகன். இதனால் முருகனுக்குத் தோசம் உண்டானதாம். அத்தோசம் அகல அன்னை பார்வதியின் வழிகாட்டலின்படி அவள் குமரியாக அருள்பாலிக்கும் கன்னியாகுமரியில் சிவலிங்க வழிபாடு மேற்கொண்டிருக்கிறார். அவ்வாறு குகன் என்னும் பெயர் தாங்கிய முருகன் வழிபட்ட சிவன் குகநாதீஸ்வரர் எனப்படுகிறார். குமரித்தல புராணத்தில் குனாண்டேசுவரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடங்களில் வழிபாட்டினைச் செய்தபின் அகஸ்தீஸ்வரத்தில் வழிபாட்டினைச் செய்து இறைகாட்சி பெற்றார் அகத்தியர். அப்போது சிவன்,

    வாய பேரூவகை பொங்க
    வாக்கினை மறந்த வென்றா…
    நீயும் நீடு பாங்குறாய்
    நினக்கு வேண்டுவ சொல் கென்றான்

    (அகத்தியேச்சுரச் சருக்கம், பாடல் -31)

    என்றார். சிவன் அகத்தியரிடம் வேண்டும் வரம் கேட்கச் சொன்னதும்,

    நீங்கிடர் திருந்து வந்து
    நின்றுனைப் பூசித்தோர்க்குப்
    பாங்குறுந் தீர்த்த மாடி
    பரிசுடன் றெரிசித் தோர்க்கு
    மாங்கவர் வேண்டல் யாவும்
    அருள் செய்ய வேண்டு மென்றான்

    (அகத்தியேச்சுரச் சருக்கம், பாடல்-33)

    தீர்த்தமாடி இவ்விடங்களை வழிபட்டபின் தாம் வழிபட்ட அகஸ்தீஸ்வரத்தில் இறையை வழிபடுபவர்கள் வேண்டுவனவற்றிற்கு அருள் செய்ய வேண்டும் என்றார் அகத்தியர் எனக் குமரித் தலபுராணம் சொல்கிறது.

    அகத்தியேச்சுரச் சருக்கத்தின் இறுதி ஏடுகள் மிக நொறுங்கியுள்ளதால் அதன் முழுச் செய்தியையும் அறிய முடியவில்லை. அடுத்த சருக்கமான தேவி தோற்றச் சருக்கத்தின் தொடக்கமும் ஏட்டின் சிதைவால் அறியமுடியாததாக உள்ளது.

    குமரித்தல புராணத்தின் மூலம் அகஸ்தீஸ்வரம் புராணத் தொன்மை பெற்றுள்ள இடம் என்பது புலனாகிறது. இவ்வாறு சிறப்புப்பெற்ற அகஸ்தீஸ்வரம் ஊரின் உருவாக்கம், அமைவிடம் குறித்து ஆராயவேண்டியுள்ளது. தொன்மையும், பாரம்பரியமும் மிக்கதாகக் கருதப்படும் அகஸ்தீஸ்வரம் ஊரின் வரலாறு, நிலவியல் ஆகியன ஆராயப்பட வேண்டும். பண்பாட்டு இயக்கவியலின் விளைவாக அமையப்பெற்ற ஒரு சிறப்பான வரலாற்றுச் செயற்பாங்கின் பின்னணி  ஊரின் ஆக்கத்தில் இருக்கலாம். தொல்லியல் நோக்கில் பார்க்கும்போது ஊர் உருவாக்கம் நாட்டின் பொருளாதார மண்டலங்களின் அடிப்படையில் அமைவனவாகும். குடியேற்றப் பகுதிகள் உருவாவதற்கு எவ்வெவ் அலகுகள் பின்பற்றப்பட்டன என்பதனை முதலாம் பரமேஸ்வர வர்மனின் (கி.பி.670-680) கூரம் செப்பேடு எடுத்துரைக்கிறது. அதில் விவசாயத்திற்குரிய மண்வளம், நீர் மேலாண்மைத் திட்டம், கட்டுமானத்திற்கான மண்வளம், குடியிருப்புப் பகுதி, தண்ணீர் பகிர்மான அலகு, மழைநீர் சேகரிப்பு, சமூகவியல் மையமாகக் கோயில், வணிகர், கருவி தயாரிப்போர் போன்ற அலகுகள் குறித்தும் அவை ஊர்கள் உருவாக்கத்தின்போது எவ்வாறு பின்பற்றப்படும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறது. இக்கூறுகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு  தொல்லியல், நிலவியல், ஆய்வியல் நெறிமுறைகளின்படி அகஸ்தீஸ்வரம் சார்ந்த செய்திகளை மேலாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போது புதிய வரலாற்று உண்மைகளும் புலப்படக்கூடும்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    தென்பசியாரின் ‘தமிழ்ப்பாவை’ – ஒரு மதிப்பீடு

    முன்னுரை

    தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’ என்பார் பாரதி. தமிழமுதின் சுவை காண்பது காரணம். அமரர் ஆவது காரியம். தமிழ்ச்சுவை கண்டால் தேவராகலாம். காண்பார் குறைந்துவரும் காலம் இது! காரியச் சிறப்பு உழைப்பின் கனஅளவைப் பொருத்தது. புதுக்கவிதைகளையும் ஹைக்கூ கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் படித்தவர்கள் “தமிழமுதின் சுவைகண்டோம்” எனச் சொல்லிக் கொள்வது அவர்கள் உரிமை. பழந்தமிழ் பெருமரபை உள்வாங்கித் தமிழிலக்கியங்களின் சுவையுணர்வது என்பது அவ்வளவு எளிதன்று. அகநானூறு படிப்பதும் ஆனந்தவிகடன் படிப்பதும் ஒன்றன்று. எனவே மரபை இன்னதென்று புரிந்து கொள்வதும் அதனை உள்வாங்குவதும் பாடவந்த பொருண்மையை மரபார்ந்த சொற்களால் கவியாக்குவதும் எல்லாருக்கும் கைவரப்பெறாது. அது யாருக்குக் கைவரப்பெறும என்பதை அவ்வளவு எளிதாக அறிந்து கொள்ளவும் முடியாது. அப்படிக் கைவரப் பெற்ற சிலருள் ஒருவர்தான் தென்பசியார் இராமதாசு.! விழுப்புரத்திற்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூரின் பெயர்தான் தென்பசியார். ஆடுதுறை மாசாத்தானார், ஆலங்குடி வங்கனார், ஆலத்தூர் கிழார் ஒக்கூர் மாசாத்தியார், பிசிர் ஆந்தையார் என்பாரைப் போல இவர் தென்பசியார் இராமதாசு. ஊரால் பெயர் பெற்ற ஓட்டுநர். அன்னார் எழுதிய ‘தமிழ்ப்பாவை’ என்னும் பாவை நூலைப் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    தென்பசியாரும் தமிழ்ப்பாவையும்

    தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற பாவைகள் பலவான காரணத்தால் அவற்றினும் பிரித்துணர்வதற்கு இவர்  தான் எழுதிய தமிழ்ப்பாவை என்னும் நூலைத் “தென்பசியார் தமிழ்ப்பாவை” என ஊரோடு சேர்த்து உணர வைத்திருக்கிறார். தென்பசியார் இராமதாசு எழுதிய தென்பசியார் தமிழ்ப்பாவை எனல் பொருந்தும். தன்னால் முடிந்த வெளிச்சத்தைத் தமிழுக்குத் தர வேண்டும் என்னும் காரணத்தால் தமிழ்ப்பேரொளி எனப் புனைபெயர் வைத்துக் கொண்டுள்ள இக்கவிஞர் கண்ணாடி அணிந்துதான் கவிதை எழுதுகிறார். தமிழால் தனக்கு ஒளி கிடைக்கும் என நம்புகிறார். நம்பினார்க்கு நலிவில்லை. கள்ளமில்லா வெள்ளையுள்ளத்திற்குச் சொந்தக்காரரான இவரின் கடுஞ்சினம் பலராலும் அறியப்பட்டதே. கோபம் இருக்குமிடத்தில்தான் குணமிருக்கும். .இவரிடம் இரண்டும் இணைந்தேயிருக்கும். கவியரங்குகளில் கவிபாடும் தமிழ்ப்பேரொளி விழுப்புரம் – புதுவை தடத்தில் அரசுப் பேருந்து இயக்கும் ஐம்பது வயது இளைஞர். பல்துறைக் கவிஞர்களைக் கண்ட சங்கக் காலத் தமிழ்க்கவி மரபு  தற்போது விழுப்புரம் புதுவைத் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை!

    தமிழ்ப்பாவையின் பாடுபொருள்

    தமிழின் மீது பாடப்பெற்ற அல்லது தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற அத்தனைப் படைப்புக்களும் தமிழின் பெருமையைச் சொல்வதாகவும் தாய்மொழி காக்கத் தமிழினத்தைத் தட்டியெழுப்புவனவாகவே அமைந்திருக்கின்றன.  இதில் என்ன சிக்கல் என்றால் தமிழ்விடு தூது என்னும் நூலுக்குப் பின்னாலே வந்த படைப்புக்கள் எதுவும் தமிழ்விடுதூதினை விஞ்ச இயலவிலலை. இவற்றுள் தனித்தன்மை வாய்ந்தது ஒரே நூல்தான். அது பாவலர் ஐயா பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவை. அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் சிறையில் எழுதப்பட்டது. இந்தி வந்தால் தமிழ் கெடும் இன்னும் ஏன் உறக்கம்? என்று பெண்குலத்தைத் தட்டியெழுப்பிய அருமையான நூல். யாப்புக்கு யாப்பு., கவிதைக்குக் கவிதை, கற்பனைக்குக் கற்பனை, உணர்ச்சிக்கு உணர்ச்சி, கருததுக்குக் கருத்து என்னும் இயைந்த கலவையால் ஆன இதயம் கவர்ந்த நூல் அது. எனவே பாவை இலக்கியத்தின் கருவறை ஆராய்ச்சி காலங்கடந்த ஒன்று. தமிழ்மொழியைத் தாயாக உருவகப்படுத்திப் பாடும் முறைமையும் பழைமையான ஒன்றுதான். இட்டளியின் வடிவ ஆராய்ச்சியும் அதன் அரிசி மாவு மூலத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதில் எள்ளின் முனையளவுப் பயனும் விளையப் போவதில்லை. பாவலர் பெருஞ்சித்திரனார் அவர்கள் கருத்தியலைப் பின்பற்றும் தம்பி பேரொளி இந்தத் தன்னுடைய தமிழ்ப்பாவையில் தமிழ் பாடுவதன்றி மொழி சார்ந்த வேறு சில சமுதாயக் கூறுகளையும் பாடியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைக்கான காரணம். கவிதை அறிவு சார்ந்ததன்று; உணர்வு சார்ந்தது. உணர்ச்சியின் வெளிப்பாடு. தூய நெஞ்சிலிருந்து வெளிப்படும் எந்தத் தூய உணர்ச்சியும் கவிதைக்கான காரணக் களமாகும்.  ஒரு பேருந்து ஓட்டுநருக்குத் தமிழில் மரபுக் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்ததற்கு இந்தத் தூய்மைதான் தலையாய காரணம். தெள்ளிய நீரும் தெளிந்த உள்ளமும் ஒன்று. அது பேரொளிக்குரியது.

    தமிழ்ப்பாவையின் உள்ளடக்கம்

    ‘பாவை’யைத்  தனிப்பட்ட சிற்றிலக்கிய வடிவமாக மரபுக்கவிஞர்கள் கருதுகிறார்கள். உண்மையில் ‘பாவை’ என்பதைத் தனி இலக்கியமாகத் தமிழில் காணமுடியவில்லை. தொடக்கக்காலப் பாவை என்பது ஆண்டாள் பாசுரங்களில் ஒன்றாகவும் திருவாசகத்தின் பதிகங்களில ஒன்றாகவுமே அறியப்படுகின்றன. திருவாசகத்தில் காணப்படும் திருச்சதகமும் ஒரு பதிகமே. அவற்றின் கட்டமைப்பும் மொழிச் செழுமையும் வெளிப்பாட்டு உத்தியும் தனியிலக்கியமாகக் கருதக் கூடிய அளவுக்கு இருந்ததால் அவை தனியிலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கலாம். அகப்பொருள் புறப்பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றுபறறி ஒரு நூறு பாடல்களால் பாடப்பெறும் இந்தச் சதகத்தின பாடுபொருள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு அமைந்திருக்கிறது என்பதைத் தமிழிலக்கிய வரலாறு குறித்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றி மணிவாசகர் பாடினார். நாடுபற்றிப் பாடப்பெற்ற சதகங்கள் பாண்டிமலச் சதகம் சோழமண்டலச் சதகம், கொஞ்குமண்டலச் சதகம், ஈழமணடலச் சதகம், தொண்டமலச் சதகம். முதலியவைகளும் சமயங்கடந்த நிலையில் யாழ்ப்பணாம் சதாசிவப் பிள்ளையால் எழுதப்பட்ட இயேசுநாதர் திருச்சதகம் குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய நந்தீசர் சதகம் முதலியவைகளும் இங்கே உள்ளன. குருபத தேசிகர் எழுதிய குமரேச சதகமும் கொல்லிமலை அறப்பளீசுவரர் மேல் பாடப்பெற்ற அம்பலவாணரின் அறப்பளீசுவரச் சதகமும் இங்கே உண்டு. கட்டமைப்பு உள்ளம் கவர்ந்துவிட்டால் கவிவாணர்கள் ஆதி பாடுபொருளை மாற்றி  தாம் விரும்பிய பாடுபொருளைக் கட்டமைப்புக்குள் அடைக்கலமாக்கிவிடுகிறார்கள்.

    பாவை இலக்கியக் கட்டுமானமும் சதகத்தை ஒத்தே விரிவடைந்துள்ளது. மார்கழிப் பாவையாக இருந்த அது மாதப்பாவையாக மாறியது கண்ணதாசனின் தைப்பாவையில். மாதவரம் துரை வசநதராசனின் கற்பனைக் காதலி தேன்பாவையாகத் தோற்றம் கொணடாள். தானே எழுதிக் கொள்ளும் தன் வரலாற்றைத் (AUTOBIOGRAPHY) தற்பாவையாக்கிக் காடடினார் வசந்தராசன்.  செல்வமீனாட்சி சுந்தரனார் தன்னுள்ளங்கவர் கள்வனைப் பெரியார் பாவையில் நாயகனாக்கியிருக்கிறார். இன்ன பொருளை இன்ன யாப்பில்தான பாடவேண்டும் என்னும் இறுக்கமான தமிழ்க்கவிதைக் கட்டுமானம் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது அலலது மாற்றப்பட்டுள்ளது என்பதை இதனால் அறியக்கூடும்.  அதாவது கட்டுமானத்தில் மரபையும் பாடுபொருளால் புதுமையையும் உள்ளடக்கிய அர்த்தநாரீஸவராக இந்தப் பாவையிலக்கியங்கள் திகழ்கின்றன என்றலும் பொருந்தும்.

    இயல்பிலேயே சமுதாயப் பார்வையும் மொழிப்பற்றும் படைப்பிலக்கிய ஆர்வமும் கொண்ட தமிழப்பேரொளி தமிழ்ச் சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் புரையோடி போயிருக்கின்ற போலித்தனத்தைச் சாடுவதற்கும் மொழிப்பற்றும் இனஎழுச்சியும் பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுவதற்கும் இன்னபிற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பாக இவ்விலககியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஓட்டுநர் எழுதிய இலக்கியம் என்பதற்காக எத்தகைய விதிவிலக்கும் இவருக்குத் தரப்படவில்லை. இலக்கியத்தில் ஏது இட ஒதுக்கீடு? வழக்கமான தரமதிப்பீட்டுக் கருவிகளைக் கொண்டே தமிழ்ப் பாவை அளககப்படுகிறது.

    அவையடக்க மரபு

    பாடுபொருளின் பெருமையையும் பாடுகிறவனின் சிறுமையையும் பாடுகிறவனே வெளிப்படுத்தும் ஓர் இலக்கிய உத்திக்கு அவையடக்கம் என்று பெயர். இது உத்தியே ஒழிய உண்மை ஆகாது. உண்மையில் இராமனை விடக் கம்பன் பெரியவன். கல்வியிற் சிறந்தவன் கம்பன். இராமனைக் கருணை மாக்கடல் என்று அறிமுகம் செய்கிறவனே கம்பன்தான். அறிமுகம் செய்யுமிடத்தில கம்பன் இருக்கிறான். தன்னுடைய படைப்பிலக்கியப் பேராற்றலைத் தானே வெளிப்படுத்திக் கொள்வது அடக்கத்திற்கு முரணாகும் ‘தன்னை வியந்து தருக்கலும் கேடு தரும்’ என்பது தமிழ்நெறி. எனவேதான கம்பனைப் போன்ற பெருங்கவிஞர்கள் அவையடக்கம் கூறிப் பிறரை வணங்கித் தம் படைப்புத் தொழிலைத் தொடங்கினார்கள். ஆனால் கவிஞர் அனைவரும் அவையடக்கம் கூறவில்லை. காப்பியங்கள் எல்லாமும் அவையடக்கம் கொண்டிருக்கவில்லை. சிலப்பதிகார்த்திலே ஏது அவையடக்கம்? பெரிய புராணத்திலே ஏது அவையடக்கம்? இந்தப் பின்புலத்திலேயே

    ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஓர்
    பூசை முற்றவும நக்குபு புக்கென
    ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
    காசில் கொற்றத்து இராமன் கதையரோ

    என்னும் கம்பனின் அவையடக்கத்தைக் காண வேண்டியதிருக்கிறது. பாடுபொருளோடு இரண்டறக் கலந்துவிடும் போது கடவுள் வாழ்த்து தொடங்கிய கவிஞர்கள் கூட அவையடக்கத்தை மறந்துவிடுகிறார்கள். அபிராமியின் பெருமை பாட வந்த அபிராமிபட்டர் அபிராமி அந்தாதிக்கான அவையடக்கத்தை நூலின் இருபததாறாவது பாடலில் பதிவு செய்திருக்கிறார்.

    ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
    சாத்தும் குழல் அணங்கே.! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
    நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே!

    நூலின் தொடக்கத்தில் நூலுக்கு வெளியே நின்று பாடப்பட்ட அவையடக்கம் நூலுக்கு உள்ளே பல பாடல்கள் சென்ற பிறகு பாடப்பட்டிருக்கிறது என்பதை இதனால் அறியமுடிகிறது. நூலுக்கு வெளியிலும் இல்லாமல் இடையிலும் இல்லாமல் தமிழ்ப்பாவையின் முதற்பாடலிலேயே அவையடக்கத்தை நூற்பகுதியாகவே வைத்துப் புதுமை செய்திருக்கிறார் தமிழ்ப் பேரொளி

    “வார்குழல் பின்னலே வண்ண நிலவே!
    சீர்த்தமிழ் உன்னைச் சிறுவனோ யாதறிவேன்?
    கூர்மதியாள் என்றன் குறைகள் களைந்திடுவாய்!
    நாரோடு பூமணக்கும் நற்றமிழே நீ வாழி!
    கூறான வாளேந்திக் குற்றங்கள் நீ தடுப்பாய்!
    ஆர்த்தென்னை நீ தாங்கு!”

    என்றெல்லாம் பெருந்தமிழ் அன்னையைப் பேதை நிலையிலிருந்து அவையடக்கம் பாடியிருக்கிறார்.  நு{லின் அகவுறுப்பாகப் பாடப்பெற்ற இந்த அவைபயடக்கம் ஏனைய எட்டடிக் கொச்சமாக இலலாமல் பத்து அடிகளைக் கொணடிருப்பதும் ஒரு சிறப்பு.

    கட்டுமானப் பெருமையும் உள்ளடக்க வெறுமையும்

    தென்பசியார் முகநூலில் பயணிக்கும் ஒரு கவிஞர். அவர் கவதையைப் பற்றி அறிவதற்கு முன்பாகவே யாப்பினைப் பற்றி அறிந்திருக்கிறார். அல்லது அறியச்செய்பபட்டிருக்கிறார். கவதை உணர்வைச் சார்ந்தது என்பதையும் கடடுமானம் அறிவைச் சார்ந்தது என்பதையும் அவருக்கு அறிவுறுத்தும் ஆசிரியர் கிடடாமல் போனது தவக்குறையே. மேலும் பாடுபொருளும் கட்டுமானமும் தம்முள் பின்னிப் பிணைந்தவை என்பதை அவர் முற்றும் உணரவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. .இவரை வாழ்த்திப் பாடும் பாடலொன்று “யாப்பேந்தி வாழியவே” எனத் தொடங்கி முடிகிறது, இந்த வாழ்த்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தென்பசியார் வெண்டளை விரவிய கொச்சகக்கலிப்பாவில் இந்தப் பாவையை நிறைவு செய்திருக்கிறார். அதனால் உள்ளடக்கமாகிய பொருளும் அது வெளிப்படுத்தும உணர்ச்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பட்டுப் புடவையை இரவல் கொடுத்த கதை என்பது இதுதான்!

    “தொல்காப்பியம் தந்த தொல்;தமிழே”

    “இரணடடியில் வள்ளுவனும் இவ்வுலகு  நன்னெறியில்
    நிரந்தரமாய்ச் சென்றிடவே நீள் குறள் யாத்தளித்தான்”

    “காவியம் கண்டெடுத்துக் கம்பனவன் நற்றிமிழில்
    ஓவியம் தநதளித்தான் ஒண்டமிழ் தன்னிலே

    “தீவிரமாய்ப் பாடும் தேவாம் தெய்வ நு{லாம்”

    நற்றமிழ் தந்த நறுமணச் சொல்லெடுத்துத்
    தெற்றியில் பாடும திரிகூட ராசப்பர்

    வெற்றுடல் மேனியிலே வெந்தழல் மேலிடும்
    பற்றில்லாப் பட்டினத்தார் பாட்டெல்லாம் பாடிவைததார்”

    குறிஞ்சிப் புகழ்பாடிக் கொற்றவன் நட்பேந்தி
    அறிவோங்கும் பண்ணெலலாம ஆர்த்தளித்தார்

    நம் கபிலர்”

    “நெறிகள் வகுத்தளித்தார் நீதி நூல் ஔவையாரும்”

    “சொற்சிலம்பாடிய சேரன் இளங்கோவன்”

    “கொற்றவனைக் கூடிய ஆண்டாள்”

    பொற்றமிழின் மேகலையாய்ப் பெண்ணணியும் சேர்த்தளித்த சாத்தனார்”

    என்று முந்தைய நூல்களைப் பட்டியலிடுவதை இவர் மரபுவழிச் சிந்தனை என்று எண்ணிக் கொள்கிறார். இத்தகைய தொகுப்புக்களையும் தொன்மங்களில் சித்தரிக்கப்படும் கதைகளையும் பெரியபுராணச் செய்திகளையும் எல்லாம் ஒன்றாக்கி “எல்லாரும் நீயாய் இருந்தமையால்” என்று தமிழ்விடு தூது ஆசிரியர் கவிநயத்தோடு விளித்து எழுதியிருக்கிறார் என்பதை இங்கே சுட்ட வேண்டியது என் கடமையாகிறது.

    தமிழ்ப்பாவையும் தமிழினமும்

    தமிழைப் பற்றித் தமிழில் பலரும் பல வடிவங்களில் பாடியிருந்தாலும் பாவேந்தரை விஞ்ச முடியவிலலை என்பது ஆய்வுண்மை. தமிழைப் பாடுகிறபோது ‘தன்னை யிழந்து தன் நாமம் கெட்டு’விடுவார் பாவேந்தர். ஆனால் தமிழுணர்ச்சி என்பது அவரோடு நின்று விடாதல்லவா? அதனால் அவ்வுணர்ச்சி இன்றுவரைத் தொடர்கிறது. தமிழ் நேற்றும் பாடுபொருள்.இன்றும பாடுபொருள். நாளையும் பாடுபொருள். காரணம் அது ஒரு வினைவேக மாற்றி! தமிழனைத் தூங்காது காக்கும் துணைவன் தமிழே! தமீழனத்திற்குத் தமிழ் என்பது உயிர் வளி!

    தமிழைப் பற்றிப் பலரும் பாவையிலக்கியம் செய்திருப்பதால் பாடுபொருளால் இநத நூல் புதுமை படைக்கவில்லையெனினும் தமிழைப் பாவையிலக்கியத்தால் தானும் பாடவேண்டும் என்னும் கவிஞரின் வேட்கை கொஞ்சம் தணிந்திருக்கிறது. நல்ல கணவனைப ;பெற வேண்டும் என்னும் வேண்டுதலைப் பழந்தமிழ் பாவையிலக்கியத்தின் உள்ளடக்கமாக இருந்தாலும் காலச் சூழலுக்கேற்ப உள்ளடக்க மாறுதல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.  பெருஞ்சித்திரனார் செந்தமிழ்ப் பாவை எழுதியதற்கும்  வசந்தராசன் தேன்பாவையை தீட்டியதற்கும் செல்வமீனாட்சி சுந்தரம் பெரியார் பாவை எழுதியதற்கும் இதுதான் காரணம்.  எனவே கட்டுமானம் ஒன்றாயினும் உள்ளடக்கம் மாறுபடுவது இலக்கிய வளர்ச்சியையே குறிக்கும்.

    “ஒற்றுமையை நாளும் உருக்குலையச் செய்கின்றார்
    கற்றுணரும் நம்மொழியைக் கண்டபடி ஏசுகின்றார்!
    சற்றும் உனக்கதிலே சங்கடங்கள் நேரலையோ?
    வெற்று முழக்கங்கள் வீண்வேலை தானே?
    வற்றும் தமிழ் வேட்கை! வண்டமிழும் வாழுமோ?
    பெற்றுவக்கும் மேன்மையெல்லாம் பேராண்மை செந்தமிழால்!
    குற்றம் குறையிருப்பின் கூடிக் களைந்திடுவோம்!”

    என்ற கவிதையில் ஒரு உண்மைத் தமிழ்க்கவிஞனின் உள்ளத்து ஆதங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படுவதைக் காணலாம்.

    தமிழ்ப்பாவையின் ‘தொடையழகு’

    தமழில் உள்ள் நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களுள் பலவற்றை இந்தத் தமிழ்ப் பாவையில் காண முடிகிறது, தொடைவிகற்பங்கள் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும். தொடைவிகற்பங்களின் இனிமையைப் பாடலைச் சொல்லிக் கேட்கிறபோது உணரலாம்.  எந்தச் சிறப்பும் இல்லாத செந்தொடைப் பாட்டுக்கள் அவ்வளவாகச் சிறக்காது, அவை சிறக்க வேண்டுமானால் பாடுபொருள் மிக நுண்ணியதாக அமைநதிருத்தல் வேண்டும். தமிழ்ப்பாவை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு பாடுபொருளாதாதலின் தொடை விகற’பங்களின் செவிப்பயன்பாடு அதிகமாகவே தெரிகிறது.

    தொடுகிற இடமெல்லாம் தட்டுப்படுகின்ற தொடையழகு! உடம்புக்குத்தான் உயிர் காவல். உயிருக்கு உடம்பு காவல். அல்ல. அருவப் பொருளாகிய உயிரின் இருப்பை உருவப் பொருளாகிய உயிரே உறுதி செய்கிறது. உணர்ச்சியும் கருத்துமாகிய கவிதையின் உயிர்ப்புப் பகுதிகளை எண்ணிக் கவிதை செய்வார் எண்ணிக்கையில் சிலரே! ஆனால் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும் தொடைவிகற்பங்களில் கவனம் செலுத்திக் கவிபுனைவார் எண்ணிக்கையில் பலர். ஒரு நல்ல கவிதையில் கருத்தியலாகிய அகவழகும் புறவழகாகிய தொடைவிகற்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்தால்தான் கவிதை சிறக்கும். காலத்துக்கும் அது வாழும்.! கம்பன் கவிதையின் நிலைப்பாட்டுக்கும் காளமேகத்தின் கவிதை வேடிக்கைப் பொருளானதற்கும் இதுதான் காரணம். சொல்ல வேண்டியவறறைச் சொல்கிற முறையில் சொல்வதுதான் கவிதை!.

    கருத்தியலை உணர்ச்சியோடும் ஏனைய புற அழகுகளோடும் கலந்து கவி செய்வார் சிலருள் தமிழ்ப்போரொளியும் ஒருவர். முப்பது கலிப்பாக்களில் இழைந்தொளிரும் தொடைவிகற்பங்களைச் சுட்டுவது கற்பாருக்கு ஒரு வழிகாட்டியாக அமையக்கூடும்.

    1. “பதிகமெல்லாம் பாடிடவே பற்றுவைத்தேன் பாடிடவே” என்பதில் முற்று மோனையும்
    1. “நாரோடு பூமணக்கும் நற்றமிழே! நீ வாழி என்பதில் பொழிப்பு மோனையும்
    1. “பீடு நடைபோட்டுப் பேராண்மை கூடட்டும்” என்பதில் உயிரெதுகையும்
    1. “அன்னைத் தமிழுக்கோர் ஆலயம் என்றெண்ணி” என்பதில் ஒரூஉ எதுகையும்
    1. “இன்பம் பயக்குமாம் இன்தமிழ் என்றாங்கு” என்பதில் மேற்கதுவாய் எதுகையும்
    1. “சிற்பம் போல் சீத்தலைச் சாத்தனார் சிந்தையிலே” என்பதில் கீழ்க்கதுவாய் மோனையும்
    1. நூல் முழுமையும் அடியெதுகைகளும்

    அமைந்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கவிதைத் திருமகளை நடமாட விட்டிருக்ககிறார் போரொளி. தடங்கண்டு காரோட்டும் ஒரு தமிழ்ப்பிள்ளையின் தடம் மாறா கவிதைச் செப்பம் கவனத்திற்குரியது. பாராட்டுக்குரியது. பாவையே அழகு என்றால் அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் தொடைவிகற்பங்களைப் பற்றி இன்னும் எழுதலாம்.

    இதுதான் மரபுக் கவிதை. இது உருவத்தால் மணிவாசகரையும ஆண்டாளையும் முன்னிறுத்தி உள்ளடக்கத்தால் பெருஞ்சித்திரனாரைப் பின்னிறுத்துவதால் மரபுக் கவிதையே! பாடலைத் தொடங்குவதற்கு முன்பே விளம் விளம் மா என்றும் காய் காய் கனி என்றும் வாய்பாடுகளுக்காகப் பாடல் புனைவோர் கவிதைத் தொழிலுக்கும் போரொளியின் கவிதைத் தொழிலுக்கும் வேறுபாடு உண்டு. வாய்பாடுகளுக்காகக் கவிதை எழுதுவது என்பது வேறு. கவிதைகளுக்குள் அமைந்துள்ள வாய்பாடுகளைக் காண்பது பேறு!. முன்னதில் வாய்பாடுகள் முன்னிற்கும். பின்னதில் கவிதை சிலிர்க்கும்.! வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் பின்னிறுத்தி எழுதியிருந்தால் கம்பன் இன்னும் பாலகாண்டத்தில் பாதியைக் கூட எழுதியிருக்க முடியாது.

    தமிழ்ப்பாவைபயில் கண்ட உத்தி மரபு

    நான் அடிக்கடிக் குறிப்பிடுவதுபோல நூன்மரபில் தொடங்கி மரபியல் முடிய உள்ள தமிழ் மரபுகளே தமிழ்க்கவிதை மரபுமாகும். தொல்காபபியமே ஒரு கவிதையியல் நூலாதலின் அதன் உள்ளடக்கம் அத்தனையும் தமிழ்மரபே. இதனை உணராத பெரும்பாலோர் யாப்பை மட்டுமே அதிலும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முதலியவற்றையே மரபெனக் கருதி மயங்குவர். இதனால் என்ன விளைவு? எனின் கவிதைகளில் யாப்பினைக் கண்டறிவதே ஆராய்ச்சி என்றாகிவிடுகிறது, அறிவு கண்கொண்டு கவிதையை சுவைக்க எத்தனிக்கிறவன் எவனும் கவிதை ரசிகனாக இருக்கவே முடியாது, அப்படி இருந்திருந்தால் நாம் ஒரு டிகேசியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் கவிதை உத்திமரபுகள் தமிழ்ப் பாவையுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காண முடியும்.

    “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

    என்பார் திருவள்ளுவர். இவ்விரண்டனையும் இவராகச் சொல்லாமல் சிலர் சொல்வார்கள் என்று எடுத்துக்காட்டுவதுதான் உத்தி மரபு. கணிதம் என்பார் சிலர். இலக்கியம் ;என்பார் சிலர். நானோ இவையிரண்டுமே மானுடத்திற்குத் தேவையானவை என்பதுதான் என் கருத்து’ என்கிறார் திருவள்ளுவர். “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்னும் பாட்டு திருவள்ளுவர் உத்தி கண்ணதாசன் சிந்தையில் குடிகொண்ட மரபு.

    “தர்மம் என்பார் நீதியென்பார்! தரம் என்பார்!
    சரித்திரத்தைச் சான்று சொல்வார்!
    தாயன்பு பெட்டகத்தைச் சந்தியிலே நிறுத்திவிட்டுத்
    தனமான வீரர் என்பார்!
    மர்மமாய்ச் சதிபுரிவார்! வாய்பேசா அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்!
    கர்ம வினையென்பார்! பிரம்மன் எழுத்தென்பார்!
    கடவுள் மேல் குற்றம் என்பார்!”

    திண்ணைப் பேச்சு வீரர்களைப் பட்டுக்கோட்டை அடையாளப்படுத்துகிற வெளிப்பாடடு உத்தி மரபு  இது. இதுபோலப் பல பாடல்களைக் ;காட்டலாம். இந்த மரபினை ஒரு அகப்பாடலில் வைத்துக் காடடினார் கண்ணதாசன்.

    “பொன்னென்பேன்! சிறு பூவென்பேன்”
    காணும் கண்ணென்பேன்! வேறு என்னென்பேன்?”

    இயல்பான கவிஞர்களுக்கு இது கைவந்த கலை!.

    “பொன்னெனபார்! பூவென்பார் போற்றிப் புகழ்ந்திடுவார்!
    தன்னையே ஈந்து தமிழென் உயிரென்பார்!
    மன்றம் முழுதும் மணித் தமழ் போலில்லை!
    என்றே முழங்கிடுவார் ஏற்றங்கள பெற்றிடுவார்!
    தொன்மை மொழியென்பார்  தென்றலே வீசுமென்பார்!
    நன்மை பயக்கும் என்பார் நல்லதே செய்யுமென்பார்!
    இன்னல் வரும்போது எங்கேதான் செல்வாரோ?
    நண்ணலே வேண்டாமோ நற்றமிழே எம்பாவாய்!

    என்னும் பாவையுள் இந்த உத்தி மரபு கவிஞரையும் அறியாமல் பதிந்திருப்பதைக் காணலாம்.

    சிறுமை கண்டு பொங்கும் தென்பசியார்

    பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவையில் சில தொடர்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    “வல்லடிமை கொண்டார், வரும்பொருளிற் பங்கெடுத்தார்!
    மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்!
    தொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்”

    “கற்றவரோ செந்தமிழால் காசு பணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்”

    “கோல்வலியால் — ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
    வால்பிடிக்கச் செய்த வடவர் கொடுமொழியை
    மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்”

    இந்த எழுச்சியும் வேகமும் பேரொளியின் பாவையிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. தமிழை அழிப்பதற்குப் பகைவர செய்துவரும் பல்லாண்டு முயற்சிக்கு நம்மவரே துணை செய்யும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, அது பற்றி எழுதப்போனால் அது ஆராய்ச்சிக் கட்டுரையாக மாறிவிடும்.

    மாசு மருவற்ற மாத்தமிழ் போற்றிடவே
    தூசு படியாமல் தூயதமிழ் காத்திடவே
    நேசம் மிகுந்தோராய் நேர்வழி சென்றெங்கும்
    கூசும் வசையறியார்! கூடித்தமிழ் வளர்த்தார்

    இது இருந்தநிலை. ஆனால் இன்றைய நிலைஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ? பாடுகிறார்!

    பேசும் மொழிக்கோ பழி வந்து சேருகையில்
    காசு பணம் யாவும் கண்ணை மறைக்கிறதே!
    சூசகமாய் வெல்லுதற்குச் சூழ்ச்சிவலை பின்னுகின்றார்!
    காசினியில் வீழ்ச்சி கண்டிடுமொ எம்பாவாய்?

    இந்த ஆதங்கம் நூல் முழுமையும் இழையோடுகிறது. “கேடு நினைப்போர்க்குக் கேண்மை வழிசென்று சூடு கொடுத்திடவா!” என்று தமிழையே அழைக்கின்றார்.

    ‘சதிவலைப் பின்னலிலே சாய்ந்திடுமோ? எந்தமிழோ
    விதிவழி என்றே வியன்தமிழை விட்டிடவோ?
    கதியென்று உன்னையே காலமெல்லாம் போற்றி
    துதித்து நிற்கும் கையுடையார் துன்பமற்றோர் எம்பாவாய்!”

    ‘தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்னும் பாவேந்தர் அடி பேரொளியின் பாவையில் ‘துன்பமற்றோர்” என வெளிப்படுகிறது. ‘தமிழ்க்காப்பு’ என்பதை மையப் பொருளாகக் கொண்டு பேரொளி பாடியிருக்கும் இந்தப் பாவையுள் மரபின் கூறுகள் மலரின் மணம் போல இழைந்து பற்றிலாத ஒரு சமுதாயத்தின் மேல் பாடப்பெற்ற பதிகம் போல் நிலவுகிறது.

    நிறைவுரை

    பாவை பாடிக் கோவை பாடியவர் மணிவாசகப் பெருமான். இதற்குப் பின்னால் இவர் என்ன பாடப்போகிறார் என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. முகநூல் கண்ட கவி முத்துக்களில் ஒருவர். என்ன? யாப்புதான் கவிதை என்னும் தவறான போதனைக்கும் வழிகாடடுதலுக்கும் ஆளாகிப் போனவர். எழுபத்தைந்து மதிப்பெண் வாங்க வேண்டிய தமிழ்ப்பாவை வெறும் அறுபது மதிப்பெண்களை மட்டும் பெற்றுத் தேருகிறது. இருந்தாலும் அது முதல் வகுப்பு எனக் கருதி அமைதியடையலாம். அவர் யாப்பேந்தி வாழ்ந்ததெல்லாம் போதும். கற்பனை ஏந்தி கவிபுனையட்டும்! உணர்ச்சிகளைப் பேராறாய் ஓடவிடட்டும். சமுதாயச் சிக்கல்களைப் ;பாடுபொருளாக்கட்டும். பாவை பாடிய வாயால் ஒரு பரணி பாடட்டும்; தமிழ்க்கவிதைகள் நிலைத்திருப்பதற்குக் காரணம் யாப்பே என்னும் மயக்கம் நிலவுகிற வரை தமிழ்நாட்டில் தமிழ்க்கவிதை செழிக்கவோ சிறக்கவோ வாய்ப்பில்லை. அவர்களே எழுதி அவர்களே அச்சடித்து அவர்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். தேவைப்படுகிற நேரத்தில் அவர்களே விருதுகளை அளித்துக் கொள்ள வேண்டியதுதான். கவிதையின் நிலைதான் கவலைப் பட வைக்கிறது, நான் தமிழ்ப்பேராளியிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

    “பனைமரமும் தென்னை மரமும் கூட முறையே ஓலையையும் கீற்றையும் தாம் இருந்ததற்கு அடையாளமாக ஒரு வடுவை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது. அது மனிதர்கள் கால் பதிந்து மரத்தில் ஏறுவதற்குத் துணையாய் நிற்கிறது. அதுபோல் தாம் வாழ்ந்ததற்கும் அடையாளமாக ‘தமிழ்ப் பாவை என்னும் தன்னிகரற்ற நூலைத் தரணிக்கு அளித்திருக்கிறார்”

    என இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் கூறியதைவிட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்! தமிழ்ப் பேரொளியின் விரல்கள் வெல்ல என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(513)

    குறளின் கதிர்களாய்…(513)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(513)

    ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.

    – திருக்குறள் – 741 (அரண்)

    புதுக் கவிதையில்…

    அறிவொடு ஆண்மையும்
    பொருளும் உடையோராய்ப்
    பகைவர்மீது படையெடுத்துப்
    போர் செய்யச்
    செல்பவர்க்குச்
    சிறந்ததாகும் அரண்,
    அதுபோலப் பிறர்
    படையெடுப்புக்கு அஞ்சித்
    தம்மைப்
    பாதுகாத்துக் கொள்ளும்
    புகலிடமாகவும் அரண்
    சிறந்ததாகும்…!

    குறும்பாவில்…

    ஆற்றலுடன் பகைவர் மீது
    போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
    செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!

    மரபுக் கவிதையில்…

    ஆண்மை யறிவு பொருளெனவே
    அனைத்தும் கொண்டே படையெடுத்தல்
    வேண்டிச் செல்ல வேண்டுமரண்
    வேந்தன் தனக்குச் சிறப்பாக,
    வேண்டு மதுவே மற்றவர்க்கும்
    வெல்ல வருவோர் படையெடுப்பில்
    தாண்டி வராமல் தற்காப்பாய்த்
    தடுக்கும் அரணே தேவையாமே…!

    லிமரைக்கூ…

    கொண்டே மனதினில் முரண்
    போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
    செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!

    கிராமிய பாணியில்…

    கோட்ட கோட்ட
    நல்ல கோட்ட,
    நாட்டுக்குப் பாதுகாப்பு
    நல்ல கோட்ட..

    அடுத்தவங்களோட
    படயெடுத்துப் போற ராசாவோட
    ஒடமகளப் பாதுகாக்கக்
    கோட்ட
    ஓதவியா இருக்கும்,
    அதுபோல
    அடுத்தவங்க படயெடுப்புக்குப்
    பயந்து தற்காப்பா
    ஒளிஞ்சிக்கதுக்கும் கோட்ட
    ஒதவியாத்தான் இருக்கும்..

    அதால,
    கோட்ட கோட்ட
    நல்ல கோட்ட,
    நாட்டுக்குப் பாதுகாப்பு
    நல்ல கோட்ட…!

    Share
  • மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    அண்ணாகண்ணன்
    மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.
    83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
    இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
    இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.
    யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
    யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.
    பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.
    யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.
    யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.
    இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும்.
    Share
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    அண்ணாகண்ணன்

    அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.

    அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.

    இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.

    இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.

    #us #usa #america #india #indians #illegalimmigration

    Share
  • கேரள மருத்துவக் கழிவுகள் – என் முதல் கேள்வி

    கேரள மருத்துவக் கழிவுகள் – என் முதல் கேள்வி

    அண்ணாகண்ணன்

    கேரள மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கன்னியாகுமரியில் இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை மீண்டும் கேரளத்துக்கே அனுப்பி வருகின்றனர். இவற்றுக்கு ஆகும் செலவு குறித்துத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் என் முதல் கேள்வி, கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள சோதனைச் சாவடிகளைக் கடந்தே இந்த லாரிகள் வந்துள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் பணியில் இருந்தோர், என்ன செய்தனர்? முறையாகச் சோதிக்கவில்லையா? அவர்களும் உடந்தையாகச் செயல்பட்டனரா? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதா? சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனரா? சோதனைச் சாவடி அலுவலர்களும் குற்றவாளிகளாக ஏன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் அனுமதித்ததால் தானே இந்த லாரிகள், தமிழ்நாட்டுக்குள் நுழைந்தன? இந்த அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவக் கழிவுகளை அனுப்பியோர் மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் குப்பை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களே பல இடங்களில் குப்பைகளை எடுத்துச் செல்லாமல், ஆங்காங்கே தீவைத்து எரிக்கின்றனர். இதன் விளைவுகளை எடுத்துரைத்து, இதுகுறித்துப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் அலட்சியமாகச் செயல்படுவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மேலும், குப்பை அகற்றுதல், வகை பிரித்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் முழுமையாக எந்திரங்களைப் பயன்படுத்துவதே இந்தச் சிக்கலுக்குத் தொலைநோக்குடன் கூடிய தீர்வாக இருக்கும்.

    #waste #medicalwaste #kerala #tamilnadu

    Share
  • நினைவுகள் கரைந்திடும் மாயம்

    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

    மரத்தில் பூத்த கதிர் மலர்
    காமபாணம் கொண்டது
    நிலத்தில் பூத்த கவி மலர்
    காதல்நாணம் கொண்டது
    குளத்தில் பூத்த பதுமமோ
    இதழ்விரியச் சிரித்தது மின்
    தளத்தில் பூத்த பதிவிலோ
    தமிழும் பொழியச் சிவந்தது

    இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
    விழித்ததும் மறைந்து போகும்
    உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
    முதிர்வினில் மறந்து போகும்
    பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
    பிணியினில் மறத்து போகும்
    பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
    இறப்பில் எரிந்து போகும்

    பயணம் முடிந்த தருண மெல்லாம்
    சீட்டை கிழித்திடும் நாளும்
    அயனம் மாறிடும் உதய மெல்லாம்
    ஏட்டைப் புரட்டிடும் மேலும்
    சயனம் நிரந்தர மாகிடுமேனி
    சடலம் என்றவர் காணும்
    நயனம் பெருகிடும் நீராற்றில்
    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

     

    Share
  • விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

    விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தப் பிடிப்பையும் தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அதை நடத்திய விஜய் சேதுபதி உள்ளிட்ட தோழர்களைப் பற்றியும் அழித்தொழிப்பு வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றை விட, காவல் துறையில் உள்ளே போட்டி, பொறாமை, அதிகார அடுக்குகள், விசாரணை என்ற பெயரில் நிகழ்த்திய கொடூரங்கள், போராளிகளுடன் சண்டையிடும்போது சகோதரக் காவலர்களையே இரகசியமாகக் கொன்றது, தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சரணடைய வந்தவரையே சுட்டுக் கொன்றது, மனிதர்களைக் கொன்றதை விட அறம் கொன்ற நிகழ்வுகளை அதிகமாக அறிய முடிந்தது.

    சூரியின் காதலியாக நடித்த பவானி ஸ்ரீ (தமிழரசி), முதல் பாகத்தின் இறுதியில், காவல் துறையின் நிர்வாண விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என இரண்டாம் பாகத்தில் எங்கும் காட்டவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட சூரி, நான் தமிழரசியுடன் எங்காவது போய் வாழ்ந்துக்கிறேன் என்கிறார். அப்படியானால், அவரைக் காவல் துறை விடுவித்துவிட்டதா?

    சுயநலத் தலைவர்கள், அவர்களின் நலனுக்காக உழைக்கும் அதிகாரிகள், இவர்கள் இணைந்து சுரங்கத் திட்டத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி, இதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று சாய்க்கிறார்கள். இந்தத் தலைவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே நியாயமான காவலர்களுக்கும் கடமை ஆகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அற வீழ்ச்சியின், அதிகார துஷ்பிரயோகத்தின், அரச பயங்கரவாதத்தின் களமாக மாறி நிற்பதைக் கனத்த நெஞ்சத்துடன் காண்கின்றோம்.

    சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், ராஜிவ் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பு மிகச் சிறப்பு. முக்கியமாக, விஜய் சேதுபதியின் உடல்மொழியும் துணிச்சலும் தலைமைத்துவமும் அபாரம். இந்தப் படத்துக்காக அவரைத் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன். இளையராஜாவின் இசை சிறப்பு. இயக்குநர் வெற்றி மாறன், தனது அறச்சீற்றத்தைக் கலாப்பூர்வமாகத் தொடர்ந்து முன்வைக்கிறார். போராடியவர்களின் நியாயத்தைக் காட்டுவதோடு, அநியாயம் செய்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதையும் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்.

    #viduthalai #viduthalai1 #viduthalai2 #soori #vijaysethupathi #vetrimaaran

    Share
  • குடியரசு பாரதம் 26 01 2025

    குடியரசு பாரதம் 26 01 2025

    குடியரசு பாரதம் 26 01 2025
    சத்தியமணி

    வந்தே மாதரம்
    வாழிய பாரதம்
    தங்கும் பொன்னே
    தாய் மண்ணே !!
    எங்கே அறமும்
    அங்கே திறமும்
    இங்கே பிறந்தோம்
    தரம் விண்ணே !! ()

    வண்ணம் காட்டும் மயிலைப் போல்
    பண்பாடை காட்டும் பாரதம்
    கண்ணம் காட்டும் மகளைப் போல்
    தர்மம் காட்டும் பாரதம்
    அண்ணம் காட்டும் நளினம் போல்
    தூய்மைக் காட்டும் பாரதம்
    இன்னும் காட்டும் தெய்வீகம் போல் கும்பம் காட்டும் பாரதம் ()

    விண்ணில் ஏவும் கணைகள் மூலம்
    வீரம் காட்டும் பாரதம்
    எண்ணில் அடங்கா எழிலால் நாளும்
    தீரம் காட்டும் பாரதம்
    கண்ணில் தோன்றும் கருணை ஊற்றை
    வாழ்வில் ஊட்டும் பாரதம்
    மண்ணில் வளரும் தேசம் யாவும்
    வாழ்த்தும் உயர்வில் பாரதம்.

    Share
  • செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

    செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

    பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுக் கருப்பொருளில் ஆசிரியப் பெருமக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு

     

    Share