Author: தேமொழி

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்

     

    நீ(று)ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
    வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
    தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
    நூறா யிரவர்க்கு நேர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
    வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகி
    தாறா படினும் தலைமகன் தன் ஒளி
    நூறுஆயிரவர்க்கு நேர்

    பொருள் விளக்கம்:
    நீரினில் கிடந்தாலும் அதனுடன் ஒட்டாது விளங்கும் ஒப்பற்ற வைர மணியைப் போல, நன்கு வேறுபட்டுத் தெரியும் சிறந்த ஒளியை உடைத்தவர் சான்றோர், (தாற்றுதல் என்பது, தாத்துதல், தாத்திப் போடுதல் என்று வழக்கில் வழங்கி வரும், தானியங்களை தூசு தும்பற்று புடைத்துக் கொழித்துப் போடும் ஒரு முறை)  கொழித்துக் குப்பையில் நீக்கப்பட்டுவிட்டாலும் அந்தச் சான்றோரது பெருமை நூறாயிரம் மக்களின் பண்புடனும் ஒப்பிடும்பொழுது மங்காது தன்னொளி வீசி தனித்துத் தெரியும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோரின் புகழைப் புறக்கணிக்கலாம், ஆனால் மறைக்க இயலாது.

    இவ்வாறன சான்றோரின் புகழை,

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில். (குறள்: 233)

    தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை என திருக்குறள் விளக்குவதாகவும் கொள்ளலாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று கூறும் இக்காலக் கவிதையும் விளக்குவதாகக் கொள்ளலாம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 4, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்

    prof deivasundaram2

    தமிழகத்தின் இக்கால இளையதலைமுறை பல்கலைக்கழக பட்டம் பெற்றிருந்தாலும் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையோ அல்லது சரளமான ஆங்கிலத்தில் தங்கள் கருத்துகளை உரையாடல்வழிப்  பகிர்ந்துகொள்ள இயலாமைக்கோ காரணம் ஆங்கிலம் பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படாததே என்பது மொழியியல்துறை வல்லுநர்கள் கருத்து. தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் ஆங்கிலம் அறியாததால் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் அவர்களை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளில் சேர்த்தாலும், அங்கு பயிலும் மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும், மனனம் செய்து கற்கும் கல்விமுறையில் அவர்கள் கற்பது பெற்றோர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மொழியியல்துறை பயிற்சி இக்குறையை நீக்க இயலும். உலக நாடுகளில் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது, இத்துறை தமிழக அரசின் மெத்தனத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவிரைவாக இன்று அழிவுநிலையை நோக்கிச்  சென்றுகொண்டுள்ளது. இதனைப் பற்றிய எச்சரிக்கையைவிடுத்து சென்ற சனிக்கிழமை வெளியான தினமணி நாளிதழின்  “அழிவின் பிடியில் மொழியியல் துறை” கட்டுரைக்கு வழங்கிய தமது செவ்வி மூலம் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் மொழியியல் வல்லுநர் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். மொழியியல் துறையின் முக்கியத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரும், அதைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய இடையூறுகளை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் இளங்கலைப் பட்டமும், தமிழ், மொழியியல் புலங்களில் முதுகலைப் பட்டம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணினிமொழியியல் (computational linguistic) வல்லுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியியல் துறை, ஆராய்ச்சியாளர் பலரை அத்துறையில் உருவாக்கிய அத்துறை, அவரது பணி ஓய்விற்குப் பிறகு பல்கலைக் கழகத்தின் நிதிஒதுக்கீட்டினை இழந்து, பல்கலைக்கழகத்தின் அக்கறையின்மையால் நலிந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியாவர், தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்தவர் என்ற பல பெருமைகளை உடையவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்.

    prof deivasundaram3

    மொழியியல் பாடமென்பது எல்லா மொழிகளைப்பற்றியும் பொதுவாக அறிந்துகொள்ளும் துறை, ஆய்வு நோக்கம் அதன் அடிப்படை. எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிக்கும் திறமையை வளர்ப்பது மொழியியல் துறையின் பின்னணி. கல்லூரி மொழியிலக்கியப் பாடங்களில் 40 விழுக்காடு பாடத்திட்டம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடத்தைப்படிப்பது இலக்கிய வகுப்புகளில் படிப்பது அறிவியல் அடிப்படையில் மொழிகளை ஆராய்ந்து  அணுகும் தன்மையை உருவாக்குகிறது. இதனால் ஆங்கில, தமிழ் மொழிப்  பாடங்களை பயன்பாட்டுமுறையில் கற்பிக்கும் திறமையையும் ஆசிரியர்கள் பெறுவார்கள். இக்காரணத்தினால்  கல்வி நிறுவனங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது இன்றியமையாததாகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் பட்டம் பெற்றவர்களை பல்கலைக்கழகங்கள் பணிக்கமர்த்தின. ஆனால், மொழியியல் துறையில் பெறப்பட்ட முனைவர் பட்டம் இலக்கிய முனைவர் பட்டங்களுக்கு ஒப்பானதல்ல என்ற அரசாணையை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மொழியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக அறிவித்து அவர்கள் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மொழியியல் பட்டதாரிகளை பணிக்கமர்த்துவதையும் கல்விநிறுவனங்கள் கைவிடத் தொடங்கின. இதன்விளைவாகப் பணிவாய்ப்புகள் குறைந்து இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் எண்ணிக்கையும் அருகிவிட்டது. இவ்வாறாக ஆசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், ஆங்கிலம் தமிழ் கற்பித்தலும் பாதிக்கப்படும் என்று  கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பிறகு NDS Lingsoft Solutions Pvt Ltd மொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரும், இவருடன் இணைந்து பணியாற்றிய மொழியியலாளர்களும், கணினித்துறை மென்பொருள் பொறியாளர்களும் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த “மென்தமிழ்” – தமிழ்ச்சொல்லாளர் (a Tamil word processor) மென்பொருள் பணியை முன்னெடுத்து வருகிறார். இவரது “தமிழ்ச்சொல் 2000” என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.

    prof deivasundaram4

    கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக ‘மென்தமிழ்’ மென்மம் விளங்குகின்றது. ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி, இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி என இதில் ஆறு வகையான அகராதிகள் உண்டு. இம்மென்பொருள் இயல்மொழி ஆய்வு மற்றும் மொழிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவக்கப்பட்டது. ஒருங்குறி எழுத்துக்கள், குறியீடு மாற்றி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, மொழிமாற்றி போன்ற பலவகையான வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், அகரவரிசைப்படுத்துதல், சொல்லடைவு, எண் எழுத்து மாற்றி, கோப்பு மாற்றி, மற்றும்  மைக்ரோசாஃப்ட் 2007 வோர்ட் ப்ரோசெசசெர் போன்ற வடிவமைப்பு போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். மின்னஞ்சல் உட்பட்ட பதிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான் மென்தமிழ் மென்மம். இதற்கு முன்னதாக இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

    தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில், 2013-ஆம் ஆண்டின் “முதல்வர் கணினித் தமிழ் விருது”க்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பபட்டு சென்ற மாதம் விருது வழங்கி பாராட்டப்பட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கானப் பணிகளைப்   பாராட்டி வழங்கப்பவது இந்த விருது. தமிழையும் மொழியியலையும் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு  தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத்  தொடர்ந்து பணியாற்றிவரும் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கணினிவழி தமிழ் மொழிபெயர்ப்பு, மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் தமிழை ஒலிவடிவாகக்  கணினியே படிக்க வழி செய்வது போன்ற முயற்சிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இத்தகைய தமிழிலக்கியம், மொழியியல், கணினிமொழியியல் பின்புலம் கொண்டவர் கருத்தைப் புறந்தள்ளாது தமிழ அரசு என நம்புவோம். உலகில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம் ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களது அறிவுரையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம். இத்தகைய தமிழ் சான்றோரைப் பாராட்டி வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை மின்னிதழ் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல்களும் படங்களும் தந்துதவிய கீழ்காணும் தளங்களுக்கு நன்றி:
    https://muelangovan.wordpress.com/
    http://tamil.thehindu.com/tamilnadu/article6038477.ece
    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21848:2012-11-01-07-00-6&catid=1535:162012&Itemid=780

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்

     

    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவுந் தாம்படார் – எய்த
    நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
    புள்அரைக்கால் விற்பேம் எனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவும் தாம் படார் எய்த
    நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து
    புள் அரைக்கால் விற்பேம் எனல்

    பொருள் விளக்கம்:
    செய்த செயலின் பலன் சிறிதளவும் கைக்குக்கிட்டாது, (அவ்வாறு அவர் சொன்னபடி) செய்து முடிக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையும் பிறருக்கு அவரிடம் இருக்காது, தன்னல நோக்கோடு தற்புகழ்ச்சி பேசுபவரின் பேச்சானது, (தனது கைவசம் இல்லாது) வயலில் உள்ள பறவையை அரைக்கால் பொன்னிற்கு விற்பேன் என்று கூறும் வீண்பெருமை பேச்சிற்கு ஒப்பானது

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னால் செய்ய இயலாத காரியத்தைச் செய்வேன் என்று கூறும் வாய்ச்சொல் வீரராக தற்பெருமை பேசுதல் நல்லதல்ல.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல். (குறள்: 664)

    நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்பது குறள் கூறும் பாடம். அதையுணர்ந்து வெற்றுப்பெருமை பேசாது செயலில் இறங்குவதே ஒருவருக்கு மதிப்பைத் தரும் என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று

     

    அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் எனப்பாடும் செய்யும் – எறிதிரை
    சென்றுலாம் சேர்ப்ப ! குழுவத்தார் மேயிருந்த
    என்றூடு அறுப்பினும் மன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அறிவு அன்று அழகு அன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் என பாடும் செய்யும் எறி திரை
    சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
    என்று ஊடு அறுப்பினும் மன்று

    பொருள் விளக்கம்:
    அறிவுள்ளோர் செயலும் அல்ல, பண்புடையோருக்கு அழகுமல்ல, அறநெறி கடைபிடிப்போர் செயலும் அல்ல (என்ற வகையில்), சிறுமதி கொண்டோரின் இழிவான செயலாக அமைவது (யாதெனில்); காற்று நீரை வாரி வீசுவதால் அலைகள் கரையில் உலா வரும் இடத்தில் வாழ்பவரே, சூரியனையும் எதிர்க்கத் துணியலாம், ஆனால் அறிஞர்கள் நிரம்பிய சபையில் அவையடகமின்றி பணிவின்றி பேசுவது ஒருவருக்கு மதிப்பைத் தராது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறிஞர்கள் நிறைந்த அவையில் அவையடக்கத்தை கைவிடல் பெருமை தராது

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற. (குறள்: 95)

    அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது என்று திருக்குறள் காட்டும் பண்புகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 27, 2015

    இவ்வார வல்லமையாளர்கள்
    “குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள்

    kuralballoon-Benedict Savio and Selva Saravanah

    செம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்குத் “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில்தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் இருவர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரின் புதுமையான குறள் வெப்பவளிக்கூடு திட்டத்தையும், உலகசாதனை செய்வதற்காகத் திருக்குறளைத் தேர்ந்தேடுததற்காகவும் பாராட்டி இவர்களை இவ்வார வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

    ஊடக பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி  உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ் ” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை.

    angry bird Benedict Savioகடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். இந்த ஆண்டு ஜனவரியிலும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில்  “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்து செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது  நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூட்டில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா.

    kuralballoon Selva Saravanahஅடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலாக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தோன்றிய இந்த எண்ணத்தை செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்தபின்னர் சென்ற ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.

    ஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது …
    1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
    2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
    3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.
    4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது  கருத்து.

    kuralballoon planவரும் ஆண்டு 2016, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது ஒரு சிறப்பான திட்டம் என்பதில் ஐயமில்லை. பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும்  இவர்களது நம்பிக்கை.

    திருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியுள்ள இந்த முயற்சிக்குப் பிறர் ஆதரவையும் ஏற்க முன்வந்துள்ளனர் இத்திட்டக் குழுவினர். இந்த சாதனை முயற்சி செய்தியைப் பரப்புவதிலும், பொருளாதார ஆதரவு என்ற வகையில் பங்கேற்க விரும்புபவர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களது திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறலாம் என்ற தகவல்  வல்லமை இதழின் மற்றொரு செய்தியில்   பகிரப்பட்டுள்ளது.

    உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் ‘குறள் வெப்பவளிக்கூடு’ பறக்கவிட்டு தமிழிலக்கிய இலக்கிய நூலொன்றை பெருமைப்படுத்தி, அதன் மூலம் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்த விரும்பும்  பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரை இவ்வார வல்லமையாளராகப் வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    kuralballoon FB page

     

     

    “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon)பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
    அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துக் காணொளி: https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be
    பெனிடிக்ட் சேவியோ: https://www.facebook.com/reachbenny
    செல்வா சரவணா: https://www.facebook.com/selva.saravanah

    “திருக்குறள் வெப்பவளிக்கூடு” இணையப் பக்கங்கள்:
    https://www.facebook.com/kuralballoon
    https://www.kuralballoon.com

    இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவின் இணையப்பக்கங்கள்:
    https://www.facebook.com/tnballoonfestival
    http://www.tnibf.com/

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு

     

    இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் – திறத்துள்ளி
    நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
    இல்லம் சுடுகலா வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    இறப்ப சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி
    நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
    இல்லம் சுடுகலாவாறு

    பொருள் விளக்கம்:
    இழிந்த குணத்தை தனது இயல்பாகக் கொண்டவர்கள் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்தாலும், மேன்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர் அதற்காகாக அவரிடம் சினம் கொள்ள மாட்டார்கள். (இது எவ்வாறு எனில்) நன்கு கவனத்துடன் தேர்ந்தெடுத்த சிறந்த விறகுகளைக் கொண்டு அடுப்பெரித்துக் காய்ச்சினாலும், கொதிக்கும் வெந்நீரால் வீட்டை வேகவைக்க இயலாது என்பதைப் போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சிறுமதி கொண்டோர் செய்யும் கேடுகள் குறித்து அவர்மேல் சீற்றம் கொள்ளாதிருப்பது பண்பிற் சிறந்தோர் இயல்பு.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 20, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர்  றியாஸ்முஹமட் அவர்கள்

    றியாஸ் முஹமட்

     

    இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவரும் “கவியருவி றியாஸ் முஹமட்” அவர்களை இவ்வார வல்லமையாளராகப்  பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற திங்களன்று வல்லமை இதழில் சீதனம்”  என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையை எழுதியதற்காக வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார் கவியருவி றியாஸ் முஹமட்.   அக்கவிதையின் சில வரிகள் கீழே…

    சீதனம்

    கன்னிக்கு ஏன் வேதனை…?
    கருமச் சீதனத்தின் சோதனை!

    கன்னிக்கோ
    கலியாணம்
    கடந்த வயது…

    கலியாணச் சந்தையில்
    கனவுகளோடு
    காலூன்றி நிற்கும்
    கற்புக் கன்னி!

    கல்யாணராமர்களோ
    கன பேர்,
    கருமச் சீதனக்
    கனவுகளோடு…

    கல்யாணராமனுக்குக்
    காணிக்கையில்லை,
    காணிக்கை கேட்பவன்
    கடவுளுமில்லை!

    கரும்பு தின்னக் கூலியோ… ?
    கணவனாகக் காசோலையோ…?

    […]

    பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம்.    கதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாக சமீபத்தில் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள்.

    இருமாதங்களுக்கு முன், சென்ற பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார்.   வல்லமையிலும் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதிவரும் றியாஸ்முஹமட்  கலைமகள் அழைக்கிறாள்!”  என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசிங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளை தெளிவாக முழங்குகிறார்.

    றியாஸ் முஹமட்1

    வல்லமை இதழில் வெளியான  பாரதி கண்ட புதுமைப்பெண்,  பனமரக் காடு  போன்ற இவரது கவிதைகள், சென்றவாரத்தின் “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும்,

    இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது …
    செல்வம் திரட்டப்  பணி நிமித்தமாக அயல்நாட்டிற்கு சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும்,
    தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும்,
    பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்து பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும்,
    திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

    கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன….
    [குறிப்பு: கவிதைகளில் சில முழுமையாக வழங்கப் பெறாமல் கருத்தைக் கவர்ந்த, மனதைத்  தொட்ட கவிதையின் பகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, முழுக்க்கவிதைகளையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளைத் தொடர்ந்து சென்று படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்… ]

    எங்க ஊரு! இந்த ஊரு!!

    இலங்கையின் முத்துடா..!!
    கிழக்கிலொரு சிப்பிடா..!!
    செம்மண் புழுதிடா..!!
    சங்ககால வாசமடா..!!
    என் அன்னை மடிய‌டா..!!
    என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!

    ஊர் மெச்சி பாடும்
    இவன் கல்குடாவின்
    எழுத்தடா..!!

    ***
    ஓட்டமாவடி பாலம்

    உன்னை
    நினைக்கையில்
    மண் வாசனை
    வருகிறது,
    தாய் வீடு
    தெரிகிறது.

    காலில் ரெக்கைகள்
    முளைக்கிறது,
    இதயச் சிறகுகள்
    பறக்கிறது………..

    ***
    அம்மா

    தாயே,
    உன் தோளுக்கு மேல்
    நான் வளர்ந்தாலும்…
    தொலை தூரத்தில்
    நான் இருந்தாலும்…
    வீசுதம்மா
    உன் சேலை
    வாசம்…
    ஏங்குதம்மா,
    இந்தப் பிள்ளைப்
    பாசம்…

    இனி,
    வேண்டாமம்மா
    இந்த வெளிநாட்டு
    நேசம்.
    போதுமம்மா
    இந்தப் போலி,
    வேஷம்.
    இனி,
    உன் காலடியில்தான்
    என் சொர்க்கம்.
    உன்,
    மடியில்தான்
    என் மரணம்…

    ***

    தந்தைக்கு ஒரு கவிதை

    எழுத நினைக்கிறேன்
    ஒரு கவிதை,
    அடக்க முடியவில்லையே
    என் அழுகை!

    எழுது எழுது என்று
    நினைக்கிறது மனது
    அழுது அழுது
    என் பேனாவும் பழுது!

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    பேனாவை எடுத்தால்
    பேச்சு வரவில்லை வாப்பா
    ஏட்டை விரித்தால்
    எழுத்து வரவில்லை வாப்பா!

    காகிதமும் என் கண்ணீரால்
    கரைந்து போனதே வாப்பா
    தளை தட்டுது வாப்பா
    மூச்சு முட்டுது வாப்பா!

    எதுகை மோனை கூட
    அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
    நான் எழுதிய கவிதைகளும்
    கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

    கூடவே இருப்பீர்கள் என்றுதானே
    கொடி போலப் படர்ந்தேன்
    பாதியில விட்டுப் போகவா
    பனமரம்போல வளர்ந்தேன்?

    […]

    போங்கள் போங்கள்!
    என் வாப்பா மண் மறைந்தார்
    என்று சொல்பவர்கள்
    என் கண் மறைந்து போங்கள்!

    ***
    பணம்

    போனதும் விமானம்
    வந்ததும் விமானம்
    மறக்க முடியவில்லை
    ஏழையாகப் பிறந்ததால்
    நான்பட்ட அவமானம்…!

    வண்ண வண்ணக் காகிதம்
    வதங்கியது என் வாலிபம்
    எல்லாமே செய்தது
    இந்தப் பணம்
    இல்லாமல் ஆனேன்
    நடைபிணம்…!

    ***

    போச்சு எல்லாமே போச்சு!

    படித்த படிப்பும்
    வீணாகப் போச்சு
    வேலைக்காக அரசியல்வாதி
    கால் பிடித்து
    மானம் போச்சு!

    கையில காசி காணாது
    மாமா மச்சினன் உறவுகள்
    அறுந்து போச்சு
    இதுதானடா உறவுகள்
    என்று வெறுத்துப் போச்சு!

    வாழ்ந்தும் வாழாமலும்
    முடியும் நரைத்துப் போச்சு
    காதல் என் காதல்
    அது கண்ணீரில் கரைந்து போச்சு!

    […]

    கல்குடா வாழ்க்கை
    வளைகுடா வாழ்க்கையாக
    மாறிப் போச்சு
    தனியாகவே வாழ்ந்து
    வெறுத்துப் போச்சு!

    […]

    ஊர் நிலமைகளை நினைத்து
    என் தூக்கமும் போச்சு
    ஊர் படையெல்லாம்
    பெரும் படையாகவும் ஆச்சு!

    பணம் இருந்தால் மாத்திரமே
    அரச உத்தியோகம் என்பது
    சரியாகப் போச்சு
    நாடு ரொம்ப கெட்டு போச்சு!

    பட்டம் படித்தவன்
    பாலைவனம் மேய்வது
    பழகிப் போச்சு
    சமூகமும் தம் நிலைமறந்து
    போச்சு!

    படித்தவர்களுக்கு
    வேலை என்பது
    குழந்தைப் பேச்சு
    இதைக் கேட்டுக் கேட்டு
    காதும் புளித்துப் போச்சு!

    ***

    முதிர் குமரன்!

    வயதுக்கு வந்து பல வருடமாச்சு
    மீசையோடு வெள்ளை முடியும்
    எட்டிப் பார்த்தாச்சு !

    வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
    தெரிந்து போச்சு நானும் ஒரு
    முதுமைக் குமரன்
    என்று…!

    கூடப் படித்தவர்கள்
    எல்லாம்
    குடித்தனம் போயாச்சு!

    குழந்தை, குட்டிகளோடு
    கூடி வருகையில்,
    மனசு துடிக்கிறது,
    எரி மலையாக வெடிக்கிறது…!

    என் பள்ளிப் பருவத்திலேயே
    தாய்க்கு வந்தது வாதம்,
    கை, கால்களை
    முடக்கி வாழ்க்கையைச்
    சிதைத்து விட்டது!

    மூத்த தங்கை வயதுக்கு வந்து,
    இருபது வருடங்களாச்சு !

    கல்யாணச் சந்தையில்
    காலூன்ற நிற்கும்,
    இளைய தங்கை வேறு…!

    தங்கைகளை நினைத்து,
    உறங்கும் அம்மாவின்
    அழுகையும் அதிகமாச்சு !

    அவளின் மூச்சும்
    வரவரக் குறைந்து போயாச்சு !

    எங்கள் ஏழ்மை வாழ்வு
    கண்டு குடும்பத்தாரும்,
    அயலவரும்
    எட்டிப் போயாச்சு !

    எங்க வீட்டு எச்சி தின்னு
    வளர்ந்த செல்லப்
    பூனையும் வீட்டுச்சுவர்
    ஏறிப் போயாச்சு !

    குடும்பச் சுமையைக் குறைக்க
    முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

    வாழ்ந்தும் வாழாமலேயே,
    உடம்பு தளர்ந்து,
    இளமையும் போயாச்சு !

    இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

    என் தங்கைகளைக்
    கரை சேர்க்கும் வரை….
    கனவுகளைக் கண்களில்
    சுமந்து கொண்டு
    வாழும்
    நானும் ஒரு
    முதிர் குமரன்தான்!

    ***

    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!

    நடுச் சாமம் நாய்க் குரைக்க
    நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
    நீயில்லா வீடு பார்த்து,
    தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
    என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

    ஆராரோ ஆரிரரோ..,
    பக்கத்து வீட்டுத் தாலாட்டு
    காது கேட்டு, வாட்டுது மச்சான்
    என்னை வாட்டுது மச்சான்!

    எண்ணைக் கிணத்துல நீங்க
    உங்க எண்ணத்தில நாங்க
    ராப்பகலா தூங்காம நானிங்கு ஏங்க
    என்னத்த வாழ்ந்தோம் மச்சான்
    எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

    மாரியில குளிராகி
    கோடையில வெயிலாகி
    உருமாறித் தடுமாறி
    பனியாகிக் காற்றாகி
    சருகானேன் மச்சான்!
    ஒரு நேந்துவிட்ட கோழிபோல
    ஆனேனே மச்சான்….

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

    நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
    நீங்க வைச்ச மரமும் வளர்ந்து நிற்குது மச்சான்
    நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
    உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

    ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
    ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
    பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
    பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

    நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
    வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

    இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
    உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
    பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
    பிச்செறிந்து வாயேன் மச்சான்!

    ஏரோப்பிளேன் வாழ்க்கை
    வேணாம் மச்சான்
    ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

    சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணியைப் பாராட்டி, விருதுகள் பல பெற்று, அவர் தமது எதிர்காலக் கனவுகளை அடைவதிலும், குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தகவல் பெற்ற தளம்:  கல்குடா நேசன் (kalkudahnation.com): இளங்கவிஞர் அறிமுகம்-றியாஸ் முஹமட் , ‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டி 

    Facebook 

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: நோவச்செய் நோயின்மை இல்

     

    பூவுட்கும் கண்ணாய்! பொறுப்பர் எனக்கருதி
    யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
    தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
    நோவச்செய் நோயின்மை இல்.

     (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி
    யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
    தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும்
    நோவ செய் நோயின்மை இல்

    பொருள் விளக்கம்:
    மலரும் தனக்கு இது போல ஒரு கண்ணில்லையே என வருந்தக்கூடிய விதத்தில் அழகிய கண்களை உடையவரே; எவ்வளவு துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்வர் என்ற எண்ணத்தில் எத்துணை எளியராக இருந்தாலும் யாரையும்துன்புறுத்த வேண்டாம். தேவர்களாலும் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு அன்பு காட்டுபவராக இருந்தாலும் கூட துன்புறுத்தினால் துன்புற்று பொறுமையை இழக்காமல் இருக்க மாட்டார்.

    பழமொழி சொல்லும் பாடம்: எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது.

    இதே கருத்தைக் கூறும் பிற பழமொழிகள்…
    பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு
    சாது மிரண்டால் காடு கொள்ளாது

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 13, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர்  வைகைச்செல்வி அவர்கள்

    வைகைச்செல்வி

     

    “சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்!” என்று முழங்கும் கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர்  மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தொகுத்த “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் வரியிது. “ஜி. ஆனி ஜோஸ்பின்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வைகைச்செல்வி வல்லமை இதழிலும் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றிய வைகைச்செல்வி ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் (M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றதுடன், மேலும் தனது தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) பலவற்றையும் படித்தவர். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்சமயம் கல்வியாளராக பொறியியல் கல்லுாரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    மதுரையை பூர்வீகமாகவும், சென்னையை வாழுமிடமாகவும் கொண்ட வைகைச்செல்வி 1980 முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல வழங்கி எழுத்துலகில் தடம் பதித்தவர். பெண்ணியம் மற்றும் பெண்மை போற்றுதலும், அவர்தம் பணியின் பின்புலமான இயற்கை சுற்றச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்புத் துறையின் பணியின் கொள்கைகளுமே இவரது படைப்புகளின் களங்களாக விளங்கி வருகின்றன. கவிஞர் வைகைச்செல்வியின் “இன்னொரு உலகில்… இன்னொரு மாலையில்…”, “அம்மி”, “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” போன்ற கவிதைத் தொகுதிகள் அவர்தம் கவித் திறனையும், கருத்துச் செறிவினையும் பறை சாற்றுவன. கவிதைகள் தவிர்த்து “கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுப்பு, “பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு” போன்ற படைப்புகள் இவரது பெண்ணியம், சுற்றச்சூழல் பாதுகாப்பு கருத்துகளின் வெளிப்பாடுகள்.

    “கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?” என்ற முத்துரை பதிக்கும் கவிதை வரி பெண்களுக்காகவும் இயற்கை பாதுகாப்பிற்கும் இவர் ஒருங்கே கொடுக்கும் குரல்.

    இவரது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மி” பாராட்டுகள் பலவற்றை இவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களின் 70 கவிதைகளைத் தொகுத்து 2003 டிசம்பரில் இவர் வெளியிட்ட “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்னும் தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.

    “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்” என்ற இவரது கவிதை, தொழில்மயமான தற்கால உலகம் சுற்றுச்சூழலை சீர்குலைப்பதைச்  சுட்டிக்காட்டி இந்நிலையை மாற்ற வலியுறுத்துகிறது.

    நான்கு திசைகளிலும்
    புகை போக்கிகள்!
    நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
    மனித நாற்றுகளை
    மௌனமாய்த் தலைசாய்க்க
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!
    காடும் மலையும் இல்லை யென்றால்
    வீடும் நாடும் இனி யேது?
    சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
    அற்றுப் போகும் மனித இனம்!

    பணியிடங்களில் பெண்களின் திறமைகள் மதிக்கப்படாது அவர்கள் உயர்பதவிகள் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்படும் “கண்ணாடிக் கூரை” (glass ceiling) சூழ்நிலை இவரது பெண்ணியக் குரல் வழியே கீழ்கண்டவாறு ஒலிக்கிறது.

    ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
    இறுதியில்
    (பதவி உயர்வென்னும்)
    அந்த ஏணியை அடைந்தேன்!
    கூரிய கற்களும்… கொடிய முட்களும்
    குத்திக் கிழித்தும்
    (உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
    ஓடிய கால்கள் …..!
    ஏணியின் உயரம்
    அயர்ச்சியை அளிக்க ….
    புத்துயிர் பெற்றுக்
    கண்களைத் திறந்தேன்!

    காலை எடுத்து
    முதற்படி வைப்பதற்குள் ….
    என்னைத் தாண்டிச்
    (சென்றன) சில காகங்கள் ….
    கழுத்தில் சலங்கையுடன்,
    காலில் எலியுடன்,
    ஏணியைத் தள்ளி
    (என்னையும் மிதித்துக் கொண்டு)
    இடத்தை நிரப்பின!

    இக்கவிதையினைப் படிக்கும்பொழுது “தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்” என மாலன் கூறியதை நாம் இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகவும் இருக்கும்.

    “பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வைகைச்செல்வியின் கட்டுரையும் பலவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்புகிறது.

    “வானகமே, வையகமே”, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் “இது நம்ம பூமி” என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராக சிறப்பாகச் செயலாற்றி வரும் வைகைச்செல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை என இருதுறைகளிலும் மேலும் மற்றொரு எல்லைக்கோட்டை முனைவர் பட்டம் மூலம் சமீபத்தில் எட்டினார்.   இவரது  தொடர் முயற்சியை பாராட்டும் நோக்கில் வல்லமைக் குழவினருக்கு வைகைச்செல்வியைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    வைகைச்செல்வி1வைகைச்செல்வி2

    சுற்றச்சூழல் கவிஞர், பெண் சாதனையாளர் போன்ற பட்டங்களையும் பெற்றவர் வைகைச்செல்வி. இவரது படைப்புகளில் பல்கலைக்கழக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நிறுவன புத்தகக் கண்காட்சியின் 2002 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கம் வழங்கிய “சக்தி 2002” பெண் எழுத்தாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் வைகைச்செல்வி, இப்பொழுது தான் பெற்ற வெற்றிகளின் வரிசையில் முனைவர் பட்டத்தையும்  [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] பெற்றுள்ளார். “பணிபுரியும் பெண்களின் (ஜவுளியாலைகள் மற்றும் தீப்பெட்டித் தொழில்) பிரச்சனைகளும் அதற்கான ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் மேலாண்மையும்” (Thesis: Occupational Health Problems of Women employees in Textile and Match industries and Integrated Management of Environment) என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு பெற்ற முனைவர் பட்டம் இது. இவரது ஆராய்ச்சிக் கோணமும் பெண்களையும் இயற்கையையும் இணைத்த ஒரு கோணத்திலேயே அமைந்தது பாராட்டிற்குரியது.

    பெண்கள் நலனும், சுற்றுச்சூழலின் நலனும் தொடர்ந்து உலகில் கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதை உணரும்பொழுது இவரது ஆய்வு இவரது கருத்துகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டி கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பேருவுவகை கொள்கிறோம். வைகைச்செல்வி தனது சமுதாய மற்றும் இலக்கியப்பணியில் வெற்றிகள் பலபெற வாழ்த்துகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

     

    தகவல் பெற்ற தளங்கள்:
    http://www.geotamil.com/pathivukal/jayabarathan_vaikaschelvi_3.html
    http://annakannan-katturaigal.blogspot.in/2004/04/blog-post_01.html
    https://jayabarathan.wordpress.com/vaigaiselvi/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 6, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள்

     

    Jyothirllata Girija2

     

     

    பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக  வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.

    பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.

    jyothi-300x224

    இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.

    முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.

    இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    thirukural

    மேலும் அண்மையில் இவரது …

    1 படி தாண்டிய பத்தினிகள்
    2 இதயம் பலவிதம்
    3 வசந்தம் வருமா?
    4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
    5 வாழத்தான் பிறந்தோம்
    6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
    7 நாங்களும் வாழ்கிறோம்
    8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
    9 இல்லாதவர்கள்
    10 அவசரக்கோலங்கள்

     பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

    எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலதிகத் தகவல்கள்:
    http://jyothirlathagirija.blogspot.com/
    https://plus.google.com/112576644547569337452/posts

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 30, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள்

     

    kalyan2

    தொல்காப்பியம்நச்சினார்கினியர் உரையின், பொருளதிகாரம்: அகத்திணையியல் (பாகம் 1) யும், பொருளதிகாரம்: புறத்திணையியல் (பாகம் 2) யும் மார்ச் 27, 2015 அன்று 500 வது தமிழிலக்கிய மின்னூலாக வெளியிட்டு மிகவும் பாராட்டத்தக்க எல்லையை எட்டியுள்ளது இணையத்தின் “மதுரைத்திட்டம்” (Project Madurai). இந்த மின்னாக்கப் பணியைத் துவக்கி, வழிநடத்தி, இந்த சாதனை எல்லையைத் தொட்டவர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள். அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக்குழுவினர் பெருமை அடைகிறோம்.

    projectmadurai

    முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், “மதுரைத் திட்டம்” என்னும் பெயரில் இணையத்தில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்னிமப்படுத்தி , அவற்றை மின்நூல்களாக மாற்றி உலகத்தமிழினம் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் விலையின்றி வழங்கும் நோக்கில் மின்னாக்கப்பணியைத் துவக்கி, கடந்த 17 ஆண்டுகளாக தன்னையொத்த பலநூறு தமிழார்வலர்களையும் இப்பணியில் பங்கு பெறச் செய்து வழிநடத்தியும் வருகிறார். மதுரைத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998-ம் ஆண்டு பொங்கல் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சற்றேறக்குறைய 400 தமிழார்வலர்கள் இந்நாட்களில் பங்கு பெறுகிறார்கள். காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சுவது ஒரு சிலர், மெய்ப்புப் பார்ப்பவர் மற்றும் சிலர், இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுபவர் வேறு சிலர் என பலர் வெவ்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, தங்கள் கணினி மூலம் இணையவழித் தொடர்பு கொண்டு, படநகல்களாக கிடைத்துள்ள தமிழிலக்கியங்களை தட்டச்சி உள்ளிட்டும், பிழைதிருத்தியும் கூட்டு முயற்சியில் 500 மின்னூல்கள் என்ற எல்லையைத் தொட்டது பாராட்டத் தக்க ஒரு பணியாகும். இத்தகையப் பணிக்காக தன்னார்வத் தொண்டு செய்த தமிழார்வலர்கள் அனைவருக்கும், திட்டத்தின் தலைவரான கல்யாணுக்கும் தமிழர்கள் யாவரும் கடமைப்பட்டுள்ளோம். வெள்ளுரை (eText) வகையில் அமைந்துள்ள நூல்களே இணையத் தேடல்களின் வழி கிடைப்பதற்கும், ஆய்விற்கும் உதவும் என்பதால் இப்பணியின் இன்றியமையாமையும் தெளிவாகும்.

    சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், 20-ம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள், மற்ற பிற நூல்கள் என சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி வெளியிடப்படுகிறது. படிமக்கோப்புகளாகவும் (PDF), ஒருங்குகுறி (Unicode)எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் (web pages)தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாகக் கிடைக்கின்றன. தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன், கவிப்பேரரசு வரைமுத்து ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் இடம் பிடித்துள்ளன.

    thiruvalluvar-thirukkural

    1990 களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்யாண் முதல் முயற்சியாக திருக்குறளை தட்டச்சி இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். இவரையொத்த ஆர்வம் கொண்டவர் பலரும் இணைந்ததில் உருவான மதுரைத் திட்டத்திற்காக இவரே தனது செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார். தற்பொழுது ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்துள்ளார்.

    kalyan3தன்னை தமிழறிஞர் என்றோ தமிழ்க்கல்விப் பணியைச் சார்ந்தவர் என்றோ இனம் காண முடியாது, தான் ஒரு தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று கூறும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள “சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்” (Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரி மாணவரான கல்யாண், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முனைவர் பட்டத்தையும், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

    பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980 களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவிய முன்னோடி எனவும், இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்நூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கியவர் எனவும், “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவராகவும், ‘தமிழ் மரபு அறக்கட்டளை’(Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனவும் பல வகைகளில் தன்னை பல தமிழ்ப்பணிகளில் இணைத்துக் கொண்டவர் கல்யாண். இவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு கனடா தமிழிலக்கிய கழகத்தின் மதிப்புமிக்க “சுரா” (Canadian Tamil’s initiative TAMIL LITERARY GARDEN’s Sundara Ramasamy Award for Tamil Information Technology – Sura) விருது வழங்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகமும் இவரது இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெயரைச் சூட்டி, மதுரைத் திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி, தன்னார்வத் தொண்டர்களான சில நூறு தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்துள்ள முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், தனது பணியை மேலும் தொடர்ந்து நடத்தி தமிழ் நூல்கள் பலவற்றை இணையத் தேடலில் கிடைக்கும் வகையில் வெள்ளுரைகளாக மாற்றி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து, வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராக பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலும் தகவலுக்காக:
    Dr. K. Kalyanasundaram
    kalyan.geo@yahoo.com
    www.projectmadurai.org
    https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 23, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்

    Narayanan1

    “தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்”

    என்ற செய்தி நாளிதழில் வெளியானால் திரைப்படம், அரசியல், வன்முறை போன்ற கருத்தைக் கவரும் அல்லது சர்ச்சைக்குரிய செய்தியாக இல்லாத காரணத்தால் படிப்போர் பலரது கவனத்தையே இச்செய்தி கவராது. சிலர் தலைப்பை மட்டும் படித்துவிட்டு மறு வினாடி மறந்துவிடுவார்கள், மேற்கொண்டு அவர்கள் நினைவில் அது தங்காது. மற்றும் சிலர் படிப்பார்கள் செய்திக்காக கொஞ்சம் அக்கறையுடன் கவலைப்படுவார்கள், பிறகு அதைப்பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒருவருக்குக் கூட யார் இந்த சமூக ஆர்வலர்கள், இப்படி தனது நேரத்தையும் உழைப்பையும் அக்கறையுடன் பயன்படுத்தி சமூகத்தில் யாரும் அக்கறை கொள்ளவே விரும்பாத ஒரு சிலருக்காக இப்படிப் போராடுகிறார்களே என்று சிந்திக்காமல் போவதே இன்றைய நடைமுறை வாழ்க்கையின் நிலை. ஆங்கிலத்தில் “Unsung Hero” என்று நாம் குறிப்பிடும் அது போன்று “புகழப்படாத நாயகர்”தான் இந்தவாரத்தின் வல்லமையாளர் சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்.

    சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள், மனித நேயம் நிறைந்த உள்ளத்துடன் சமூக அவலங்களில் மாட்டித்தவிக்கும், தன்னைக் காத்துக் கொள்ள குரலெழுப்ப இயலாத உயிர்களுக்காக அக்கறையுடன் பொதுநல வழக்குகளாகத் தொடுத்து பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவருபவர். அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற வாரம் “சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன” என்று இவர் தொடுத்த பொதுநல வழக்கில் அக்குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதுமட்டுமின்றி, மேலும் இவரது இரு குறிப்பிடத்தக்க பொதுநல வழக்குகளில், யாருமே ஆதரவு தராத நிலையில் சமுதாயத்தில் அல்லலுறும் மேலும் இரு குழுவினருக்கும் நியாயம் கிடைக்க இந்த மாதம் வழி பிறந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கின் விளைவாக தமிழகத்தில் சென்ற வாரம், மார்ச் 15 முதல் இதற்கான தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.

    ‘பாடம்’ நாராயணன் அவர்கள் மாற்றம் இந்தியா(Change India) என்ற அமைப்பின் இயக்குநரும், ஒரு கல்வியாளரும், முன்னர் வெளிவந்த பாடம் என்ற சமூக அக்கறை கொண்ட மாத இதழின் ஆசிரியரும் ஆவார். இவரது சமூகப்பணிகளை, பொதுநல வழக்குகள் பற்றிய நாளிதழ் செய்திகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், திருமிகு சுபாஷிணி ட்ரம்மல் மற்றும் திரு. ராம் காமேஸ்வரன் ஆகியோர்.

     

    “பாடம்” நாராயணனின் முக்கியமான பொதுநல வழக்குகள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு  அவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

    சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் தற்கொலை அல்லது வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்பமான மனநிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன. குழந்தை இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வையாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர். இது போன்ற சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன என்பது சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களைப் பற்றி இவர் தொடுத்த பொதுநல வழக்கு.

    கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செய்யக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் “பாடம்” நாராயணன் ஒரு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” எனவும் எச்சரித்தது. பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை போடப்பட்டுள்ளது, இத்தடை தமிழகத்தில் மார்ச் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் சில வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    பாடம் நாராயணன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (1,567 காவல் நிலையங்களிலும்), கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். விசாரணைக் கைதிகளை காவல்துறையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல வழக்கிற்கு பதில் அளிக்க தாமதமான காரணத்தால் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் அளித்தது. அத்துடன், பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.

    இவரது பொதுநல வழக்கின் காரணமாக, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுபதுவதற்குத்  தடை கூறப்பட்ட பொழுது, வாகன சோதனை மேற்கொள்ள குறுக்கே நின்ற அத்தடையை அகற்றி  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்து தடை நீக்கத்தைக் கைவிடக் கேட்டுக் கொண்டனர்.

    தமிழக அரசு ஏற்படுத்திய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் கால தாமதம் ஏற்பட்டு இயங்காமல் இருந்தது. கமிஷன் முழு அளவில் இயங்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி “பாடம்’ நாராயணன் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன், வருடத்திற்கு 20 சதவீதம் மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமாக  இருக்க வேண்டும் என்று அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வருகிறார்.

    கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடுகோரி மனுதாக்கல் செய்தார்.

    இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் கருத்து சுதந்தரத்தை ஆதரித்தும், எழுத்தாளருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்

    மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து அரசின் முடிவுகளை கண்டிக்கும் விதமாக கல்வியாளர் என்ற முறையில் தனது எதிர்ப்பைத்  தொலைக்காட்சி ஊடகம் வழியே வெளிப்படுத்தினார்.

     Narayanan newsNarayanan0

    கீழு ள்ள செய்திகள் நாளிதழ் தளங்களில் இருந்து திரட்டப்பட்டு, சமீபத்திய நிகழ்வுகளில் தொடங்கி ‘இன்று முதல் அன்று வரை’ என காலவரிசைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது:

     

    குழந்தைகளை சீரழிக்கின்றனவா சிறார் சீர்திருத்த இல்லங்கள்?- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
    March 20, 2015
    தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article7014450.ece

    மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்
    March 12, 2015
    தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article6985539.ece

    காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
    March 10, 2015
    தினமணி
    http://www.dinamani.com/latest_news/2015/03/10/காவல்-நிலையக்-கண்காணிப்பு-க/article2707005.ece

    பெருமாள் முருகனை ஆதரிப்போம்
    January 14, 2015
    வலைப்பதிவு: Amudhan RP, vaediyappan
    http://supportperumalmurugan.blogspot.com/2015/01/blog-post_84.html

    கழிவறை இல்லாததால் பெண் வன்கொடுமை அதிகரிக்கிறதா?
    June 7, 2014
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=993303

    ஆறாக ஓடத் தயாராகிறது சரக்கு
    April 28,2014
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=964118

    மனித கழிவுகளை சுத்தம் செய்வதில் 30 பேர் பலி: தமிழகத்தில் நிரந்தர தீர்வு தேவை
    September 23, 2013
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=810064

    குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன்: முழு அளவில் செயல்படுவது எப்போது?
    June 30, 2013
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=746519

    Plastic ban: constraints and challenges
    April 30, 2013
    The Hindu
    http://www.thehindu.com/news/cities/chennai/plastic-ban-constraints-and-challenges/article1475244.ece

    வாகன சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
    ஏப்ரல் , 02 , 2011
    மின் செய்தி மாலை

    “பாடம்” நாராயணன் தனது சமூக அக்கறையை பொதுநல வழக்கு தொடர்வதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளிதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். அவரது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள அக்கட்டுரைகள், கட்டுரைகளின் மையக் கருத்துகளுடன் இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சமூக ஆர்வலரான இவரது சமூக அக்கறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். நலிந்தோருக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து பொதுநல வழக்குகள் தொடரும் “பாடம்” நாராயணனை வல்லமையாளராகப் பாராட்டி அவர் தம னது சமூக நலப் பணிகளில் தொடர்ந்து வெற்றியடைய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலும் தகவலுக்காக:
    Blog:
    http://paadam-pm.blogspot.com/
    http://www.paadamnarayanan.blogspot.com/
    Facebook: https://www.facebook.com/paadam.narayanan/

    பாடம் (மாத இதழ்) ஆசிரியர் : அ.நாராயணன்
    http://www.paadam.in/

    காணொளி: Thanthi TVhttps://youtu.be/HEGlajEViXg

     

     

    செய்தித்தாள் கட்டுரைகள்:
    Dinamani (25-05-2009): கட்டுரைகள் – அழுவதா? சிரிப்பதா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-25-05-2009.html
    …கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

    Dinamani (23-03-2010): கட்டுரைகள் – குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-23-03-2010.html
    …கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு, கழிப்பிடப்புரட்சி, இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

    Dinamani (02-07-2010): கட்டுரைகள் – மீண்டும் லாட்டரி ஓநாய்களா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-02-07-2010.html
    …தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும் கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில் நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.

    Dinamani (21-5-2010): கட்டுரைகள் – நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-21-5-2010.html
    …டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால், 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம், பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.””நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.”

    Dinamani (29-04-2010): கட்டுரைகள் – அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-29-04-2010.html
    …தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
    அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

    Dinamani (15-11-2010): கட்டுரைகள் – சாலைகள் நரபலி பீடங்களா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-15-11-2010.html
    …குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர்.

    Dinamani (10-08-2010): கட்டுரைகள் – முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-10-08-2010.html
    … 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை.
    கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன?
    வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.

    Dinamani (14-10-2010): கட்டுரைகள் – பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-14-10-2010.html
    …சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.

    Dinamani (20-9-2010): கட்டுரைகள் –தமிழக அரசின் “ஜிம் க்ரோ’ சட்டங்கள் – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-20-9-2010.html
    …அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது – விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத் துரோகம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 16, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் ந. சுந்தரம் அவர்கள்

     

    Dr. N. Sundaram. retired Professor of Hindi 1

    மேனாள் மாநிலக் கல்லூரி இந்திப் பேராசிரியர் முனைவர் ந. சுந்தரம் அவர்கள் தன் 80ஆவது வயதில் 1ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளதைப் பாராட்டி அவரது பணியைப் போற்ற விரும்பி, அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் மகிழ்கிறோம். அவரது தொடர் மொழிபெயர்ப்புப் பணியில் இப்புதிய சாதனையை குழுவினரின் பார்வைக்குக் கொண்டுவந்த வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ந. சுந்தரம் அவர்கள், பெரியகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவரின் மகனாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில், 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். நூற்பாலை ஒன்றில் பணிபுரிய இவரது தாய் கோவைக்குச் சென்றுவிட, பள்ளிப்படிப்பை முடிக்கும் பொருட்டு பெரியகுளத்திலேயே இவர் தங்க நேர்ந்தது. பெரியகுளத்தின் இந்திப் பிரச்சார சபாவில் தங்குவதற்கு இடமும், நூலகப் பணியும், அங்கே இந்தி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

    நடமாடும் நூலக ஊழியராக வாசகர்களின் வீடுகளுக்கு தமிழ் வார இதழ்களான கல்கி, ஆனந்த விகடன் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக மாதம் பத்து ரூபாய் ஊதியம் பெற்றார். அத்தொகை இவரது பள்ளிக் கட்டணத்திற்குப் பெரிதும் உதவியது. கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை பிற வாசகர்களுக்கும் முன்னரே தனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்சிகரமான அனுபவமாகக் கூறும் இவர் தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரத்தின் ரசிகர். இவரது பள்ளித் தோழர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன். அவருடன் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நூர்ஜகானாகவும், மேஜர் ஷாஜகானாகவும் ஒரு இந்தி நாடத்தில் நடித்துள்ளார்.

    ந. சுந்தரம் அவர்கள் இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார். அங்கு இவர்தம் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் இவரை இந்தியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பணித்தார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழி இலக்கியங்களிலும் ஆண்டாள், மீரா ஆகியோரைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வு செய்ய வழிகாட்டியதுடன், திவ்யப்பிரபந்தத்தை படிக்கச் சொல்லி பக்தி இலக்கியத்தின் சுவையையும் அறிய வழிவகுத்தார்.

    கோதை ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இந்தியில் மொழி பெயர்ப்பது ஒரு சவாலாக அமைந்தது இவருக்கு. தமிழ் சொல்லிற்கு ஈடான சமஸ்கிருத சொற்கள் எளிதில் கிடைப்பது போல இந்தியில் அமையாத பொழுது, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் இந்தி மொழிபெயர்ப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக ஆய்வை முடித்தார். ஃ போர்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த மொழியியல் கோடைப்பள்ளிகளில் பத்தாண்டுகள் மொழியியல் பயின்றார். அக்காலங்களில் திருக்குறளையும், பாரதியார் பாடலையும் இந்தியில் மொழி பெயர்த்தார்.

    இவரது வழிகாட்டியான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்தை இந்தியில் மொழி பெயர்த்திருந்தாலும், தமிழ்ச் சைவஇலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. சாந்திநிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பிற்காக இவரை அணுகியபொழுது, மகிழ்ச்சியுடன் அவ்வாய்ப்பை ஏற்று திருவாசம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களை இந்தியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.

    மொழிபெயர்ப்பை ஒரு தார்மீகக் கடமையாகச் செய்யும் இவர், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் “ஒரே ரத்தம்” நூலையும், அதிலுள்ள இந்திக்கு எதிரான கருத்துகளையும் சற்றும் பிசகாமல் அப்படியே இந்தியில் மொழிபெயர்த்த விதம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மொழிபெயர்ப்பின் நெறிகளை வெளிப்படுத்தி புகழ் சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

    ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை, பாகவதத்தில் “அநாயா ராதிதோ”என்ற அன்பைக் குறிக்கும் குறிப்பு மட்டுமே உள்ளது, ராதா என்ற பெயர் காணப்படவில்லை என்று கூறும் ந. சுந்தரம் அவர்கள், ஆழ்வாரின் நப்பிண்ணையுடன், பிற்கால இந்தி இலக்கியங்களில் காணப்படும் ராதாவை ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வும் செய்துள்ளார்.

    Dr. N. Sundaram. retired Professor of Hindi

    இவர் எழுதியுள்ள 40 நூல்களில் 25 நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் அழகு குறையாமல் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருப்பினும், அதை இவர் மிகவும் விரும்புகிறார்.

    இதுவரை இவர் இந்திக்கு மொழி பெயர்த்துள்ள திருமுறைகள் விவரம்:

    1 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளார்.

    2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்ப்பது தொடர்கிறது.

    4, 5, 6 திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளது

    7 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அறநிலையம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

    8 ஆம் திருமுறை திருவாசகத்தை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, கொல்கத்தா சாந்திநிகேதன், விசுவ பாரதிப் பல்கலைக்கழகம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

    10ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, அதனை தில்லிப் பதிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

     

    எண்பது வயதிலும் தளரா ஆர்வத்துடன் தமிழ் நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்து தமிழ்ப்பணியாற்றும் பேராசிரியர் சுந்தரம் அவர்களைப் போற்றுவதுடன், அவரது 2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இந்திக்கு மொழி பெயர்க்கும் முயற்சியை வல்லமைக் குழுவினர் பாராட்டி வாழ்த்துகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    தகவல்களும், படங்களும் தந்துதவிய இந்து நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கும் நன்றி.
    The language bond, SUGANTHY KRISHNAMACHARI, November 4, 2010, The Hindu
    http://www.thehindu.com/books/the-language-bond/article868614.ece

     

    முனைவர் ந. சுந்தரம் (Dr. N. Sundaram)அவர்களை தொடர்பு கொள்ள:
    தொலைபேசி: 0091 9444896916
    மின்னஞ்சல்: drnsundaram@gmail.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 9, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமிகு அனிதா சத்யம் அவர்கள்

     

    Anita Sathiam

     

     

    வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் புகைப்படக் கலைஞரான திருமிகு அனிதா சத்யம் அவர்கள். உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் இவர் வெளியிட்ட, பெண்களை…குறிப்பாக வளரும் சிறுமியரை ஊக்கப்படுத்தும் கருத்துமிக்க அழகிய படமொன்றிற்காக இவ்வார வல்லமையாளராக அனிதா பாராட்டப்படுகிறார்.

    பூனே, மகாராஷ்ட்ராவில் வசிக்கும் அனிதா சத்யம் வல்லமை மின்னிதழுக்கும், “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்திற்கும், வல்லமையின் ஃபேஸ்புக் குழுமத்திற்கும் புதியவரல்ல.

    வல்லமை இதழ் படக்கவிதைப் போட்டியைத் துவக்கியபொழுது, முதல் படமாக “மங்கையர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்” கருத்தைக் கவரும்காட்சி கொண்ட இவரது படம்தான் “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்படம் தந்த தாக்கத்தில் 25 கவிதைகள் வல்லமை வாசகர்களால் போட்டிக்கு அனுப்பப்பட்டதில் புனிதா கணேசனின் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது.

    Anita Sathiam 4

    அனிதா ஃபோட்டோகிராஃபி (Anita’s Photography) என்ற புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளரான, தொழில்முறை புகைப்படக் கலைஞரான அனிதா வழங்கிய உலக மகளிர் தின சிறப்புப் படத்தின் கருத்து நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வெளிவர வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் கொண்ட பெண்களின் கனவைச் சித்தரிக்கிறது. பள்ளிச் சிறுமி ஒருத்தி விண்வெளி வீராங்கனையான “சுனிதா வில்லியம்ஸ்” பற்றிய நூல் ஒன்றைப் பார்த்து கற்பனையில் திளைப்பதையும், முக மலர்ச்சியுடன் இருப்பதையும் காட்சிப்படுத்தியதுடன் அருமையான வாசகம் ஒன்றையும் படக்குறிப்பாக இணைத்துள்ளார்.

    Anita Sathiam 0

    “அனைவரும் பாராட்டும் வண்ணம் புகழ் பெற்ற நிலையை அடைய வேண்டும் என்பதும், பத்திரிக்கைகளில் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வரவேண்டும் என்பதும் பெண்கள் எல்லோரின் கனவாகும். ஆகவே, (பெண்ணே) முன்னேறுவதை நிறுத்திவிடாதே. தடைகளைக் களையும் போராட்டத்தைக் கைவிடாதே, வெற்றிக் கனவு காணுவதை நிறுத்திவிடாதே. ஒருநாள் உனது கனவு நினைவாகும் … உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் … “

    என்ற உற்சாகமூட்டும் வாக்கியமும், ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை ஒரு படம் விளக்கிவிடும் என்ற சொல்வழக்கை நிரூபிக்கும் வண்ணம், புகைப்படத்தில் பெண்ணின் முகம் காட்டும் உணர்வை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் அனிதா. “கனவு காணுங்கள்” என்று இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்துவதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இதில் கைகோர்த்துள்ளார். அந்தப் பெண் கையில் வைத்திருக்கும் அறிவியல் சார்ந்த நூலை எழுதியவர், சமீபத்தில் வல்லமைக்குழுவினரால் வல்லமையாளராகப் பாராட்டப்பட்ட அறிவியல் எழுத்தாளர் “ஏற்காடு இளங்கோ”   என்பது ஒரு மேலதிகத் தகவல்.

    உற்சாகமூட்டும் மனப்பான்மை இவர் வாழ்விலேயே இவருக்கு எவ்வாறு உதவியது என்பதையும், தனது துயர நிலையில் தாம் ஆர்வம் காட்டிய புகைப்படக்கலையே எவ்வாறு தம்மை துயரத்தில் இருந்து மீட்டது என்பதையும் இவர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வல்லமையின் மற்றொரு வல்லமையாளரான வைதேகி புற்று நோயுடன் போராடி மீண்டதைப் போலவே இவரும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நோயுடனும் உடல்நலக் குறைவுடனும் போராடி மீண்டதைக் குறிப்பிட்டிருந்தார். நோய்க்கான காரணமும் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவமனையில் மாதக்கணக்காக இருந்த நாட்களில் மகனையும் மகளையும் பார்க்க இயலாது பிரிந்திருந்ததையும், உடலில் நிணநீர் மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறினால் காய்ச்சல், பிறகு சிக்கிசையின் பொழுது எலும்பு வலி, பார்வைக் குறைவு போன்று மருந்து தந்த பக்க விளைவுகள் பலவும் இவரைத் தொடர்ந்து  வாட்டியிருக்கிறது. பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என சற்றொப்ப மூன்றாண்டுகள் பட்ட அல்லலின் போது, இவருக்கு ஆர்வமளித்த புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கை தொடர்ந்து கைவிடாது செய்து தம் மனதை வேறுவழியில் திசை திருப்பி இருக்கிறார். உதவி இன்றி எழுந்து நடமாடவும் முடியாத உடல்நிலை இருந்த பொழுதுகூட, கையில் காமெரா இருந்துவிட்டால் படமெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக எழுந்து நடமாட முயன்றதைக் குறிப்பிட்டு, தமது ஆர்வமே தம் நோயைத் தாங்கி எதிர்க்கும் சக்தியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    வலிமிகுந்த துன்பமான நேரங்களில் ஒருவர் தனக்கு ஆர்வமான பணிகளில் மனதை செலுத்துவது வலியை மறக்கச் செய்யும், வாழ்வதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்பது இவர் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடம். தனது வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டாரோ அது போலவே; சோர்ந்துவிட வேண்டாம், போராடும் குணத்தையும், நம்பிக்கையையும் கைவிட வேண்டாம், வெற்றி நிச்சயம் என்ற அறிவுரை கூறி, உற்சாகமூட்டி நம்பிக்கைத்தரும் வாசகத்தையும் தனது படத்துடன் வழங்கியுள்ளார். ஒரு பெண் தனது குறிக்கோளை கல்வியின் மூலம் அடையும் வழியை சிறந்த படத்தின் வழி கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வளரும் பெண்களுக்கு ஊக்கமூட்டும் தமது நோக்கத்தை தமது  புகைப்படக்கருவியின் உதவியுடன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

    மனிதர்களின் உணர்வுகளை மிகவும் திறம்பட படமாக்குவது அனிதாவின் தனிச்சிறப்பு. இவரது தொடர்ந்த கலைப்பயணத்தில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஃபேஸ்புக்கில் , ~ 20,000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு  இயங்கி வரும் ‘புகைப்படப்பிரியன்’ குழுமம்  தனது மூன்றாம் ஆண்டு கூட்டத்தை “எக்ஸ்போஷர் 15” எனும் புகைப்படக் கண்காட்சியாக சென்ற சனி-ஞாயிறு (மார்ச் 7, 8ஆம் தேதிகளில்) நடத்தியது.  நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள், பற்பல பிரிவுகளில் தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றோடு “ஃபோட்டோ ஆஃப் தி டே” எனக் கடந்த 45 நாட்களில் தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் அனிதாவின் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவரது படங்கள் பலவும் காட்சியிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

    Anita Sathiam 1

     

    Anita Sathiam 2

    கீழே அனிதாவின் புகைப்படங்கள் சில பார்வைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

    Anita Sathiam 5

     

    தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மறு உருவமான அனிதா புகைப்படக் கலையில் மேலும் பல சிகரங்களைத் தொடக்கூடிய திறமை கொண்டவர் என்பதை இவர் பெற்று வரும் பாராட்டுகள் காட்டுகின்றன. இவர் தனது வாழ்வில் மேலும் பல சாதனைகள்  செய்ய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    படங்களும் செய்திகளும் பெறப்பட்ட தளங்கள்: 
    Celebrating Woman’s Day
    https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/11004632_797455013680132_2660827701843388004_o.jpg

    Exposure 2015 – Photography Exhibition’s Photo of the Day
    https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/10530653_786743984712561_8778096198208339583_o.jpg

    Padak Kavithai Potti
    https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10830794_1024126740936314_3854470771912612369_o.jpg

    Anita’s Photography (Anita’s Click)
    https://www.facebook.com/pages/Anitas-Photography/744799132202411?pnref=lhc

    Anita Sathiam
    https://www.facebook.com/anitasathiam

     

    நாகர்கோவிலில் 7,8 தேதிகளில் புகைப்படக் கண்காட்சி – தி இந்து   –   http://tamil.thehindu.com/tamilnadu/article6962689.ece

    புகைப்படப்பிரியன் – https://www.facebook.com/profile.php?id=100008964732801

    Nellai Weekend Clickers Nwc- https://www.facebook.com/profile.php?id=100008368991065&fref=photo

    Share
  • பெரியாரின் பேட்டி

    — தேமொழி.

    அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:

    _________________

    சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.

    இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.

    pages finalபஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.

    சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.

    எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?

    உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.

    அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.

    காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.

    காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.

    நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.

    ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

    உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.

    இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.

    அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

    உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.

    _________________

    * இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.

    _________________

    பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
    நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
    ‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்

    மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
    “தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்

    Share