பழமொழி கூறும் பாடம்
— தேமொழி.
பழமொழி: நோவச்செய் நோயின்மை இல்
பூவுட்கும் கண்ணாய்! பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
நோவச்செய் நோயின்மை இல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும்
நோவ செய் நோயின்மை இல்
பொருள் விளக்கம்:
மலரும் தனக்கு இது போல ஒரு கண்ணில்லையே என வருந்தக்கூடிய விதத்தில் அழகிய கண்களை உடையவரே; எவ்வளவு துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்வர் என்ற எண்ணத்தில் எத்துணை எளியராக இருந்தாலும் யாரையும்துன்புறுத்த வேண்டாம். தேவர்களாலும் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு அன்பு காட்டுபவராக இருந்தாலும் கூட துன்புறுத்தினால் துன்புற்று பொறுமையை இழக்காமல் இருக்க மாட்டார்.
பழமொழி சொல்லும் பாடம்: எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது.
இதே கருத்தைக் கூறும் பிற பழமொழிகள்…
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு
சாது மிரண்டால் காடு கொள்ளாது