Author: தேமொழி

  • எதிர்க்கட்சிக் கூட்டணியின் திருப்தியும் திருப்பதி லட்டும்

    தேமொழி

    வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோமானால் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைகளில் ஒன்றாக இருப்பது சரியான ஒரு தேசிய எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமல் போவது.  இதுநாள் வரை ஆளும்கட்சியின் அபத்தங்களை தட்டிக் கேட்க தகுதி நிறைந்த எதிர்க் கட்சி ஒன்று இல்லை நமது இந்திய அரசியலில். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் இந்தியாவிற்குத் தேவை சிறந்த எதிரணி, இந்தியாவின் பற்பல கட்சிகள் மக்களாட்சிக்கு உதவவில்லை என்றுக் குறிப்பிட்டார்.  இவ்வாறு தேர்தல் காலங்களில் அடித்துப் பிடித்து கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தாலும், யார் பிரதமர் என்றக் குழப்படி கூட்டணியைச் சிதற அடிக்கிறது. பிறகு ஏதோ சாமாதானதில் விட்டுக் கொடுத்து கூட்டணி உதவியுடன் நடக்கும் ஆட்சியும் எத்தனை நாள்தான் நிலைக்க முடியும் என்ற நிலையில்லாமையில் வீழ்கிறது. இந்தியாவில் நாட்டின் நலனிற்காக என்னும் ஒரு பொதுக் கொள்கையைக் கட்டிக் காக்கும் ஒரு எதிரணி தேவை.  ஆளும் கட்சி அராஜகம் செய்யவே அச்சமுறும் வகையில் பலம் கொண்ட எதிரணி வேண்டும், செய்யும் தவறுகள் அடுத்த தேர்தலில் தங்களை பதவியிழக்கச் செய்யும் என்ற எண்ணம் ஆளும் கட்சிக்கு என்றும் அடிமனதில் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்ற பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தேவை.

    தேர்தல் காலங்களில் காங்கிரசிற்கு எதிராக அவசர அவசரமாக உருவாகும் எதிர் அணிகளும் இதுவரை கொண்டிருக்கும் “எதிரணிக் கட்சிக்கொள்கை” காங்கிரசை விரட்டிவிட்டு அங்கு தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே.  இன்றுவரை இதுதான் கொள்கை என்ற வகையிலேயே தங்களை முன்னிறுத்தி வந்திருக்கின்றன எதிரணிக்கட்சிகள்.  எதிரணிக்கட்சிகள் யாவும் பெரும்பாலும் சக்தி வாய்ந்த வட்டாரக் கட்சிகளின் கூட்டணி.  இக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே சக்தி வாய்ந்த தலைவர் பதிவியில் தங்கள் கட்சியை வழி நடத்திச் செல்லுபவர்கள். இவர்கள் கனவு பிரதமர் பதவி, தனக்கு இருக்கும் திறமைக்கு தான்தான் பிரத மந்திரியாக வேண்டும் என்ற எண்ணம்.  வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவிக்குப் போட்டி இவர்களிடையே தோன்றும். திருப்தி அடையாதவர்களால் எதிர்க்கட்சி கூட்டணி உடையும். வெற்றி பெற்றாலும் எதிரணியினருக்கு நாட்டிற்குப் பணி செய்வதை விட, தங்கள் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்றுவதில்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பது வரலாறு காட்டிய பாடம்.

    சுதந்தரம் அடைந்த இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே இந்த நிலைதான்.  சுதந்தரத்திற்குப் பிறகு 1977 இல் ஏர் உழவன் சின்னத்துடன் ஜனதா கட்சி எதிர் அணியாக உருவெடுத்த பொழுதே யாரைப் பிரதமாராக்குவது என்ற உட்கட்சிப் பூசலும் உடன் பிறந்தது. பிரதமர், துணைப்பிரதமருடன் கொஞ்ச காலம் இந்திய அரசு வண்டியும் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. மக்கள் அவர்கள் அடித்தக் கூத்தைக் கண்டு வெறுத்துப் போய், இந்த ஆட்களுக்கு நெருக்கடிநிலையை அமல்படுத்திய ‘மிசா’ இந்திராவே மேல் என்று எண்ணி, உடனடியாக தாயே வருக, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிடுக என்று அழைக்க வேண்டிய நிலையில் அடிதடி சண்டைகள் கேவலமாக இருந்தது.

    சுதந்தரத்திற்குப் பின்னர் 30 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்த தவறான “நெருக்கடி நிலை அமல்படுத்தலே” அக்கட்சியை வீழ்த்தியது. எதிரணி முயன்று  காங்கிரசை வீழ்த்தவில்லை. தொடர்ந்து வந்த ஜனதாவால் ஓராண்டு தாக்குப் பிடிப்பதே சிரமமாக இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்த நாற்பது ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை.  தலைவர் காணாது போனால் கட்சியும் காணாமல் போகும் என்ற நிலையே இந்தியாவில் பல கட்சிகளில் நிலவுகிறது.  இந்நிலைக் காட்டுவது நாட்டு நலத்திற்கான கொள்கையற்ற கட்சிகள் அவை என்பதையே. தலைவர் பதவிக்காக கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு, தங்கள் ஆதரவாளர்களின் சக்தியால் தலைவராக இருந்த தலைவர் மறைந்ததும் கட்சியும் தானே மறைவது, அல்லது அதற்குப் பிறகு மீண்டும் தலைவர் பதவிக்காகத் தோன்றும் உட்கட்சிப் பூசலில் கட்சி பிளவுபட்டுப் போவது, இதுவே கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும், அழிவும் என்ற நிலை. இந்த அவல நிலை நாடு முழுவது தொடர்ந்து நடப்பதால், அவரவர் தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தும் அடிதடி சண்டையில், நாட்டு நலன் காற்றோடு போவதும், இதை ஆதாயமாகக் கொண்டு காங்கிரஸ் தொடர்ந்து பிழைப்பதுமாகவே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சாதனை என்ற நோக்கில் பார்த்தால் காங்கிரசும் நாட்டிற்காக ஒன்றும்பெரிதாக இதுவரை சாதித்துவிடவில்லை.  நாட்டுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று அன்றைய நாளில் தேசிய நீரோட்டமாக அமைந்துவிட்டிருந்த உணர்சிக் கொள்கையை, இந்தியர் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு கொள்கையை வைத்து தோன்றிய ஒரு தேசிய கட்சியின் பெயரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் தங்கள் கட்சியின் ஒற்றுமைக்காகவும் ஒன்றும் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை.  சுதந்தரத்திற்காக உழைத்த தலைவரின் குடும்பத்தைத் தந்திரமாக தலைமைப் பொறுப்பில் வைத்து கட்சி ஒற்றுமையைக் காக்கிறது. சுதந்தரம் வேண்டி, சென்ற நூற்றாண்டில் நாட்டு மக்களை இணைத்த ஒரு பொதுக் கொள்கையை இன்றுவரை வைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறது பற்பல ஊழல்களின் வழியாக…. போபர்ஸ் ஊழல், ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற காங்கிரசின் புகழ் வாய்ந்த ஊழல்கள் என தினமும் ஒரு ஊழல் தினசரி செய்திகளில் ஒன்றாகிப் போனதால், இவற்றையெல்லாம் நினைவும் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

    இவையாவும் உறுதியான எதிரணி அமையாதததையே உறுதிப் படுத்துகிறது.  பற்பல பின்னணிகளின் இருப்பிடமான இந்தியாவில் அனைத்து மக்களையும் இணைக்கும் பொதுவான  கொள்கை  எது?
    சிங்கம் எதிர்த்தால் பிரிந்திருந்த மாடுகள் ஒன்றுகூடி எதிர்த்துத் துரத்தும் கதையில் படித்த ஒற்றுமையின் வலிமையை எப்படி வட்டாரக் கட்சிகளாகவே இருந்துவிடும் எதிரணிகளிடம் கொண்டு வருவது?
    நமது நாட்டுக்குத் தேவை நல்ல பலம் வாய்ந்த ஓர் எதிர்க்கட்சி; இந்தியர் அனைவரும் தன்னை அதனுடன் இணைத்துத் தங்களை அடையாளம் காண உதவும் ஓர்  எதிர்க்கட்சி.

    இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை தேசியக் கட்சி என்று வரையறுக்க வைத்திருக்கும் விதிமுறைகள் சில உள்ளன.     அவை:

    • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை (அல்லது லோக் சபா) தேர்தலில் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து 2% (அல்லது 11) இடங்களில் வென்றிருக்க வேண்டும்
    • மக்களவைக்கான பொதுத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் மக்களவையில் நான்கு இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்
    • நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் வட்டாரக் கட்சியாகவும் அறியப்பட வேண்டும்
    • மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் இந்தத் தகுதிகள் இருந்து வரவேண்டும்

    இத்தகுதிகள் பெற்றாலே ஒரு கட்சி இந்தியாவின் தேசியக் கட்சியாகக் கருதப்படும்.

    இதன் அடிப்படையில், காங்கிரசைத் தவிர்த்து  இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாரதீய ஜனதாக் கட்சி (தோற்றம்1980), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1925), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (1964), தேசியவாத காங்கிரஸ் கட்சி (1999), பகுஜன் சமாஜ் கட்சி (1984) போன்ற கட்சிகள் ஒரு சில காலக் கட்டத்திலாவது தேசியக் கட்சிகள் என அறியப்பட்டுள்ளன. அவ்வாறு அறியப்பட்டாலும் இவை யாவும் இதுவரை சக்தி வாய்ந்த எதிர் கட்சிகளாக இல்லாமலே இருந்து வந்திருக்கிறது.

    ethirani

    சுதந்தர இந்தியாவில்  67 ஆண்டுகளில் இன்றுவரை 81% காலம் நாடாளுமன்றத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான், ஐந்தில் ஒருபகுதி கூட இல்லாத 19% கால ஆட்சிகாலத்தில் ஆட்சியமைத்த கட்சிகளின் எண்ணிக்கை 5 (ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா கட்சி [கூட்டணி], ஜனதா தளம் [கூட்டணி], சமாஜ்வாதி ஜனதா கட்சி [கூட்டணி], பாரதிய ஜனதா கட்சி [கூட்டணி]). இவையாவும் கூட்டணி இன்றி ஆட்சியமைக்க முடியாத நிலையில் தடுமாறியவை.  தொங்கு நாடாளுமன்றம் என்றால் அது எப்படி இருக்கும் என உணர்த்தியவை.

    சுதந்தர இந்தியாவின் 67 ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவைகள் மொத்தம் 20.  இதில் எதிர்கட்சிகள் கூட்டணி கொண்டு ஆட்சி நடத்திய ஆட்சிகாலத்தில், 12 ஆண்டுகளில் 9 அமைச்சரவைகள் (7, 8, 11, 12, 14, 15, 16, 17, 18 அமைச்சரவைகள்) மாற்றம் நிகழ்ந்திருகிறது.  ஆட்சி அமைத்து தாக்குபிடித்த காலங்கள் இரண்டு வாரங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் என்பதே அதிக அளவு காலக்கட்டம் என்ற நிலைமையில் இருப்பது இந்தியாவின் எதிரணியின் நிலை. இதில் தாங்களும் ஊழலுக்கு சளைத்தவர்கள் அல்ல என மாட்டுத் தீவன ஊழல் என்று போட்டி போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலும்  ஊழல் அரசையும் நடத்திக் காண்பிக்கப்பட்டது இந்திய மக்கள் எதிர் கொண்ட மற்றொரு அநீதி.

    தேர்தல் காலங்களில் ஒரு கட்சியுடன் சேர்ந்து எதிரணியாக உருவாகும் வட்டாரக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் அக்கட்சி தங்களுக்கு எதிராகவே உருவாகிவிட இடம் அளிப்பதில்லை என்று கவனத்துடன் செயல்படுவதிலும் தவறில்லை.  அவ்வாறு அனுமதிப்பது  அவர்களது கட்சியின் நோக்கத்திற்கே எதிரானதுதான். இவ்வாறு பிரிந்து பிரிந்து சேரும் விதம் விதமான எதிரணிகளுடன் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் அடிப்படைத் தகுதி அந்த எதிரணி தோன்றிய முறையின் காரணத்தினாலேயே இல்லாமலும் போய்விடுகிறது.

    ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை நட்சத்திரமாக கொள்கை அளவில் இந்தியர் அனைவரையும் இணைக்குமோ என்று தோன்றியது.  ஆனால் அதன்  கட்சியின் பெயர் வேற்றுமொழியில் அந்நியமாகித் தெரிகிறது.  ஆங்கிலத்தில் பெயர்கொண்டு  Progressive Movement of India / Progressive  party என்று இருந்திருந்தால் அதனுடன் தேசிய அளவில் ஓர்  ஒட்டுறவு தோன்றியிருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது. அதுவும் ஒரு வட்டாரக் கட்சியாகவே நின்றுவிடும் போலிருக்கிறது.  எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் தேசிய ஆதரவு எதிர் பார்க்க முடியாதோ அது போலவேதான் ஆம் ஆத்மி என்பதும் இந்தியா முழுவதையும் இணைக்க வேண்டிய தேவையின் சாரம் இழந்து நிற்கிறது.

    இந்த 16 வது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஒன்பது கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடந்து, வாக்கு எண்ணிக்கை மே 16 இல் நடக்கவிருக்கிறது. பலம் வாய்ந்த தேசியக் கட்சியான காங்கிரஸ் வந்தால் நிலையான ஆட்சி அமையும். நாற்பது  இடங்களில் வெற்றி பெற்றாலே கூட்டணியில் இருப்பதால் பிரதமாரகலாம் என்ற கனவுகளும் மலர்கிறது வட்டாரக் கட்சித் தலைவர்களுக்கு. இந்த தேர்தலிலும் துண்டு துண்டுகளாக பூந்திகளாக இருக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்து லட்டாக உருமாறுகிறது. பார்க்கவும் கேட்கவும் இனிப்பாக இருக்கிறது. அளவிலும், உறுதியிலும் பௌலிங் பந்து போல பலமாக இருக்கும் காங்கிரஸ் மோதி உடைத்து மீண்டும் அனைத்துக் கட்சிகளும் பூந்திகளாக சிதறிப் போகாமல் இருக்க இக்கட்சிகளை இணைக்கும் நல்லதொரு பொதுக் கொள்கை தேவை.

    அந்த பொதுக் கொள்கை நாட்டின் நலன் என்பதாக இருக்க வேண்டுமே ஒழிய,   காங்கிரசை ஆட்சியில் இருந்து விரட்டுவது என்பதாக மட்டும் இருந்தால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். நாம் யாவரும் இந்தியர் என்ற பொதுக் கொள்கையும், நாம் செய்ய விரும்புவது நாட்டு மக்களுக்கு நல்லதொரு தொண்டு என்ற பொதுக் கொள்கையும் இல்லாமல், வென்றால் எனக்குப் பிரதமர் பதவி என்று ஒவ்வொரு குட்டிக் குட்டிக் கட்சியின் தலைவர்களும் கொண்டிருக்கும் பொதுக் கொள்கை சரியான எதிர்க் கட்சியை, காங்கிரசை எதிர்த்து நிலைத்து நிற்கும் கட்சியை உருவாக்காது. அவ்வாறு சிறுகட்சிகள் இணைந்து கொண்டுவரும் எதிரணி வெற்றிபெற்றால்,  வரலாறு மீண்டும் திரும்புகிறதோ மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலைதானோ என்ற அச்சமும் வந்துவிடுகிறது இந்தியர்களுக்கு.

    கார்கில் போர் நிகழ்ந்த காலத்தில் தேசப்பற்று இந்தியரை ஒருங்கிணைத்தது. ஆங்கிலயர்களை எதிர்த்து வெளியேறச் செய்ய காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைத்து போல, தேர்தல் சதுரங்க விளையாட்டின் செக்பாயிண்ட் செய்யும் வலிமை மிகுந்த எதிர்கட்சியை நாட்டின் முன்னேற்றதிற்காக உருவாக்க அதே ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கிரிக்கெட் விளையாட்டினால் ஒருகால் முடியலாம். ஏனெனில் நாமறிந்த வகையில் போரற்ற அமைதி காலத்தில் தற்கால இந்தியர் அனைவரையும் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே. மக்கள் விரும்பும் கிரிக்கெட் வீரர் எவராவது எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கினால் இளைஞர்களை தம் பக்கம் இழுத்து ஒருங்கிணைத்து ஒரு சக்தி வாய்ந்த தேசிய எதிர்கட்சியை உருவாக்க இயலக்கூடும்.

    Share
  • டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

    தேமொழி

    மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.

    ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.

    அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.

    இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.

    இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என  அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.

    தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.

    என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.

    பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.

    சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.

    இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்களும் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.

    Share
  • கைவிளக்கை உருவாக்கிய காரிகை

    தேமொழி

    கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

    இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.

    இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

    சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

    பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.

    இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை,கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பை சமர்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்கானப் பிரிவில் இவரது கண்டுபிடுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

    இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையானக்  கட்டமைப்பும், அத்துடன் இந்த கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

    Thermoelectric Flashlight

    Peltier Tilesஇவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுபுறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிர பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு வெப்பமின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்பமின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெட்லியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறைமின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்படிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்போழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.

    பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஒரு அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள பெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கி குறைமின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்பமின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்குக்ம் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

    பலருக்கு பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.

      தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php

    Share
  • மாக்கரீனா….. மாக்கரீனா…..

    தேமொழி

    மாக்கரீனா (Macarena) என்ற நடனம் 1990 களில் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிய நடனம். ஸ்பானிஷ் மொழியில் முதலில் வெளியான ‘ரும்பா’ (rumba) வகையில் அமைந்த இப்பாடல், 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த பிறகு ஒரு ஆண்டுக்கு எங்கு திரும்பினாலும் இதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இப்பாடல் யாரையும், எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வெளிநாட்டுப் பாடல் அமெரிக்கர்களை அந்த அளவிற்குக் கவர்ந்ததன் காரணம் அதன் எளிய இடை அசைவு கொண்ட நடன பாணியும், ஆடத் தூண்டும் இசையும்தான் (Macarena: a dance performed with exaggerated hip motion to a fast Latin rhythm). முழுப்பாடலையும் 16 நடன அசைவுகளில் ஆடிவிடலாம், அத்துடன் 10 நொடிகள் மட்டும் வரும் இந்த அங்க அசைவுகளை இரண்டு வினாடிகளுக்குள் கற்றும் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.

    சரியாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் இருந்த இந்த நடனம் விளையாட்டு போட்டிகள், அலுவலகக்  கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், பள்ளி விழாக்களை மட்டுமல்ல தேசிய அளவில் நடந்த தேர்தலையும் இந்தப் பாடல் விட்டு வைக்கவில்லை. பிறகு அமெரிக்கர்கள் கொடுத்த கவனிப்பால் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.

    ஸ்பெயினைச் சேர்ந்த ‘லாஸ் டெல் ரியோ’ (Los Del Río) என்ற ஸ்பானிஷ் பாப்பிசை இரட்டையர்களான ‘அந்தோணியோ ரோமிரோ மாங்கே’ என்பவரும் அவரது தோழர் ‘ராஃபியல் ரூயிஸ்’ (Antonio Romero Monge and Rafael Ruiz, Pop duo) என்பவரும் 1962 ஆம் ஆண்டிலிருந்து பாப்பிசையில் பற்பல பாடல்கள் பாடி வந்தவர்கள். ‘லாஸ் டெல் ரியோ’ என்றால் ‘ஆற்றின் மக்கள்’ (மண்ணின் மைந்தர்கள் என்பது போல) எனப் பொருள் கொள்ளலாம். அவர்களை ‘ஸ்பானிஷ் ஃப்லேமன்கோ’ (Spanish flamenco) பாப்பிசைக்குழு என்றும் சொல்வார்கள். இவர்கள் தாங்கள் பாடத்தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது நடுத்தர வயதை அடைந்த பிறகு தங்களுக்கு உலகளாவிய புகழ் வரும் என்று கனவும் கண்டிருக்க மாட்டார்கள்.

    அந்தோணியோவும் ராஃபியலும் வெனிசுலா (Venezuela) நாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சென்றார்கள். அந்த நாட்டின் மொழியும் ஸ்பானிஷ்தான். அங்கு ‘டயானா பாட்ரிஷியா குபில்லன்’ (Diana Patricia Cubillan) என்ற 25 வயது நடனமாடும் பெண்ணை ஒரு விழாவில் நடனமாடுகையில் பார்த்தார்கள். அவரது அழகும் ஆடும் திறமையும் இப்பாடகர்களைக் கவர உடனே அங்கேயே அவரைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடினார்கள். இப்பாடல் தோன்றக் காரணமானவரே டயானாதான். பிறகு ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் டயானாவை சந்திக்க நேர்ந்தபொழுது, அந்தோணியோவும் ராஃபியலும் தங்கள் பாடலுக்கு அன்று உணவு விடுதியில் நடனமாட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே அவரும் ஒப்புக் கொண்டார். உயர முடிந்த கொண்டையும், அதில் ஒரு பூவும் செருகி, குதிகால் செருப்பும், இறுகத் தழுவிய நடன ஆடையும் அணியும் டயானா அன்று சாதாரண கால்சராய் சட்டையுடன்தான் வந்திருந்தார். ஆனாலும் நடன ஒப்பனைகள் இல்லாததைப் பொருட்படுத்தாது மிகவும் ஆர்வத்துடன் ஆடி முடித்தார். இப்பாடல் தோன்றக் காரணமான இவரே பிறகு ‘மாக்கரீனா; என்றும் அழைக்கப் பாடலானார். இவருக்கும் பிறகு பல வாய்ப்புகள் குவிந்தன.

    இப்பாடலில் முதலில் ‘மேக்டலினா’ (Magdalena) என்று அன்னை மேக்டலினாவைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தி இருந்தனர். பிறகு ஏற்கனவே  மேக்டலினா என்ற ஒரு பாடலும் இருந்ததால், ‘லாஸ் டெல் ரியோ’ இசைக் குழுவினர் “மாக்கரீனா” (Macarena is a female name which means “Mother of God”)என்று தாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் வகையில் சொல்லை மாற்றினர். முதலில் “நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் உடலை நாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம், நம் உடலைப் போற்றுவோம்” என்ற பொருளில் இப்பாடல் எழுதப்பட்டது. பிறகு, தன்னைப் பிரிந்த காதலன் மேல் ஒரு பெண் ஊடல் கொண்ட பாணியிலும் பின்னர் பல பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலை ஸ்பானிஷ் இசைநிறுவனம் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.

    அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் அதிகம் உள்ள ஃப்ளோரிடா மாநில வானொலி நிலையமொன்றின் நிகழ்ச்சித்  தொகுப்பாளருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. இப்பாடலை தங்கள் வானொலி நிலையத்தின் வழி ஒலி பரப்ப  விரும்பினார். ஆனால் பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பும் கொள்கையை ஏனோ அந்த வானொலி நிலையம் கொண்டிருக்கவில்லை. எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தானே ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ‘பேசைட் பாய்ஸ்’ இசைக்குழுவுடன் இணைந்து ஆங்கில வரிகளில் (Bayside Boys, Macarena English-language remix or Bayside Boys Mix) இப்பாடலை உருவாக்கி அமெரிக்க ‘பி ஜி எம்’ (BGM) நிறுவனம் மூலம் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த இப்பாடலுக்கு ராயல்டி தொகையின் மூலமே நல்ல வருமானம் ‘லாஸ் டெல் ரியோ’ இசைக்குழுவிற்கு கிடைத்தது. இதுவல்லவோ கனகதாரா சோஸ்திரம். பத்தாண்டுகளில் இப்பாடல் கொணர்ந்த வருமானம் 250,000 அமெரிக்க டாலர்கள். இப்பாடல் தந்த புகழின் காரணமாக அந்த ஊரின் மாநகராட்சியின் நடன அரங்கிற்கும் அப்பெயர் சூட்டி கெளரவிக்கப்பட்டது.

    பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் பெரிய இசைகுழுவினர்கள், நடன நிகழ்சிகள் என எங்கும் இப்பாடல் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. ஒருமுறை புகழ் பெற்ற அமெரிக்க யான்கீ (Yankee) பேஸ்பால் விளையாட்டரங்கில் விளையாட்டிற்கு இடையில் 50,000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  பாடல் ஒலித்தவுடன் எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.

    காணொளி: Macarena dance record set at Yankee Stadium: http://youtu.be/0NpscLUEx0Y

    விடாது கருப்பு! என்பது போல நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், கொண்டாட்டமும் இப்பாடல் இன்றி நடக்காது என்ற நிலைக்குப் போனது.

    காணொளி: National Down Syndrome Congress: http://youtu.be/gpu–VdIF78

    1996 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்காகத் தயாரான டெமாக்ரட் கட்சியின் கருத்தரங்கில் இப்பாடல் பாடி ஆடப்பட்டது. பில் கிளிண்டனும், அல்கோரும் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வாக்காளர்களைக் கவர முயற்சி செய்த கருத்தரங்கம் அது. அப்பாடலுக்கு ஹில்லாரி கிளிண்டன் நடனமாடியும், எப்பொழுதும் கலகலப்பின்றி இருக்கும் அல்கோர் ‘நானும் கூட மாக்கரீனா ஆடுவேனே’ என்று கூறி அசையாது சிறிது நேரம் சிலை போன்று நின்றுவிட்டு ‘மீண்டும் ஒருமுறை என் நடத்தைப் பார்க்க விருப்பமா?’ எனக் கேட்டு நகைச்சுவையுடன் கலாய்த்து மக்களைக் கவர முற்பட்டனர்.
    காணொளி: Delegates were shown dancing the Macarena on the convention floor: http://www.c-span.org/video/?74656-1/delegates-macarena-dance

    இப்பாடலின் முதல் மூன்று வரிகள் மிகவும் புகழ் பெற்றது.

    ஒலி வடிவில்: http://upload.wikimedia.org/wikipedia/en/5/50/Macarena_%28Bayside_Boys_Mix%29_sample.ogg

    Dale a tu cuerpo alegría Macarena
    Que tu cuerpo es pa’ darle alegría y cosas buenas
    Dale a tu cuerpo alegría Macarena
    ¡Eh,… Macarena! Aaay!


    காணொளி: Macarena: http://youtu.be/i1im74-XgYA
    “Dale a tu cuerpo alegria, que tu cuerpo es para darle alegria y cosas buenas, Macarena! Aaay” — என்றால் ஆங்கிலத்தில்

    “Give your body joy, because your body is for giving happiness and good things, Hey, Macarena! என்று பொருள்.

    இப்பாடலின் ஆங்கில வரிகள் …

    Give happiness to your body Macarena
    ’cause your body is for giving happiness and nice things to
    Give happiness to your body Macarena
    Heeey,… Macarena! Aaay!

    இந்தியாவில் பாலிவுட் வழியாக நுழைந்த இப்பாடலின் வரிகள்….

    Are Baba Are Baba, Kare Kya Diwana
    Ladka Jab Bhi Ladki Dekhe Gaye Yahi Gana
    Dil Deke Dena, Dil Le Le Lena


    காணொளி: Dil Le Le Lena (Macarena Song): http://youtu.be/0cMfviJD24I

    குஷி (2000) திரைபடத்தில் விஜய்யும் ஷில்பா ஷெட்டியும் “மாக்கரீனா….. மாக்கரீனா…..” என்று பாடி ஆடிய ஆட்டத்தில் மாக்கரீனா என்ற பெயரைத் தவிர அசல் மாக்கரீனா பாடலின் மெட்டும், நடன அசைவுகளும் இல்லை.

    http://youtu.be/04L4itcCc4Y
    காணொளி: Kushi (2000) movie: http://youtu.be/04L4itcCc4Y

    எனவே என் சொந்த முயற்சியாக …

    நல்லது ஒன்றையே நினைவில்வை
    நன்மைகள் செய்வதையே கருத்தில்வை
    நல்லது ஒன்றையே நினைவில்வை
    ஹே…மக்களே …

    என்று புனைந்துள்ளேன்.
    பாடல் வரிகளும், எப்படி ஆடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. அடுத்த கட்ட முயற்சியாக நாமே எப்படி ஆடலாம் எனப் பார்ப்போம். படிப்படியாக ஒவ்வொரு அசைவுகளும் பற்றியக் குறிப்பு கீழே:

    Dancing the macarena requires you to move with the 16 beats of the music. Here’s what to do:

    Beat 1: Put your right arm straight in front of you with your palm down.
    Beat 2: Put your left arm straight in front of you with your palm down.
    Beat 3: Put your right arm straight in front of you with your palm up.
    Beat 4: Put your left arm straight in front of you with your palm up.
    Beat 5: Grab the inside of your left elbow.
    Beat 6: Grab the inside of your right elbow.
    Beat 7: Grab the back of your neck with your right hand.
    Beat 8: Grab the back of your neck with your left hand.
    Beat 9: Put you right hand on your left front pocket.
    Beat 10: Put your left hand on your right front pocket.
    Beat 11: Put your right hand on your right rear pocket.
    Beat 12: Put your left hand on your left rear pocket.
    Beat 13: Move your bottom to the left.
    Beat 14: Move your bottom to the right.
    Beat 15: Move your bottom to the left again.
    Beat 16: Clap and turn to the right.

    கணினியை கற்றுக் கொள்ள செயல்முறைப் புத்தகங்கள் எப்படி சுலபமான வழியில்லையோ, அது போன்றேதான் நடனமும், நேரே களத்தில் இறங்க வேண்டியதுதான் சரியான முறை.

    அதற்கு உதவியாக இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள நல்ல காணொளி ஒன்றும் உண்டு…
    (எச்சரிக்கை: சுட்டியைச் சொடுக்கி காணொளி மூலம் நடனம் கற்றுக் கொள்ளும் முன், முதல் படியாக அறைக்கதைத் தாழிடவும். கணினியை விட்டு எழுந்து திடீரென ஆடத் தொடங்கினால், அருகில் உள்ளவர்கள் அரண்டு போய் உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று அவசர உதவி செய்தால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பழி என் மேல் விழுந்து… சட்டம் என் மேல் பாயக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கைதான் இந்த வேண்டுகோளுக்குக் காரணம்)


    காணொளி: How To Dance Macarena – http://youtu.be/OzV63IRR8BQ

    சிறுவயதில் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் செய்தது போலவே இருக்கிறதே என்று தோன்றினால் தவறு கிடையாது. அதுவேதான்….அதே அசைவுகள்தான். கொஞ்சம் அப்படி, இப்படி இடையை ஒடித்து, ஒடித்து, அசைத்து நளினமாக செய்தால் அது மாக்கரீனா நடனம். சிறுவர்களுக்கும் நல்வழி என்று கருதி கற்றுக் கொடுக்கலாம். பெரும்பாலும் அவர்கள்தான் நமக்கு இந்த நடனத்தைச்  சரியாக ஆடக் கற்றுக் கொடுப்பார்கள்.

    காலையில் உடல் நலம் மேம்பட சுக்குக் காப்பி குடிப்பீர்களோ, இல்லை சூரிய நமஸ்காரம்தான் செய்வீர்களோ அது தனிப்பட்டவர் விருப்பம். ஆனால் “நல்லது ஒன்றையே நினைவில்வை, நன்மைகள் செய்வதையே கருத்தில்வை, நல்லது ஒன்றையே நினைவில்வை,ஹே…மக்களே … ” என்று பாடி ஆடினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லதோர் பயிற்சிதான். எனவே……

    அனைவரும் “மாக்கரீனா” நடனம் ஆடி மகிழவும்.

    அடியோஸ் அமிகோஸ், ஹஸ்டா லாவிஸ்டா!!!
    (Adios Amigos, hasta lavista)

    தகவல் மற்றும் படங்கள் சேகரித்த இடங்கள்:
    Macarena Dance: https://en.wikipedia.org/wiki/Macarena_%28dance%29#Dance, http://en.wikipedia.org/wiki/Macarena_(song)

    “The Macarena” begins its reign atop the U.S. pop charts: http://www.history.com/this-day-in-history/quotthe-macarenaquot-begins-its-reign-atop-the-us-pop-charts

    The woman who inspired ‘La Macarena’: http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/19960909/LIFE/309099959

    Song facts – Macarena: http://www.songfacts.com/detail.php?id=2402

    Macarena: http://macarena.com/

    How to do the macarena: http://www.cnn.com/SHOWBIZ/9608/22/macarena/lessons.html

    Share
  • வரலாற்றின் வரலாறு – புத்தக மதிப்புரை

    மதிப்பு​ரை – தேமொழி 

     

    rasamaanikkanaar

     

    நூல்குறிப்பு:
    நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
    ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
    புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
    பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
    சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
    தில்லைநகர் மேற்கு
    திருச்சிராப்ப்பள்ளி – 620 018
    பதிப்பு: முதற் பதிப்பு
    பதிப்பு ஆண்டு: 2006
    மொத்தப் பக்கங்கள்: 160
    விலை: 100 ரூபாய்

    __________________________________

     

    முன்னுரை:

    தன்னிகரில்லாத் தமிழினம் பெற்ற
    தகையவர் கோடி இந்நாட்டில்
    அன்னவருள்ளும் அறிஞருக்கறிஞர்
    ஆயிரத்தொருவரே ஏட்டில்
    என்னிவன் பெருமை எனப் புவி வியக்க
    எண்ணிடும் சிலரிடை வந்து
    மன்னிய புகழில் வாழ்ந்தவர் எங்கள்
    ‘மா. ரா.’ எனும் புகழ்க் கோவே!
    – – கவியரசர் கண்ணதாசன்

    எனக் கவியரசர் பாராட்டியது போன்றே, தமிழ்மொழி பெருமைப் படும் வகையில் தமிழ்த் தொண்டாற்றியப் பல்வேறு அறிஞர்களுள் தனித்தன்மை வாய்ந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இன்றியமையாத இவரது சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், கால ஆராய்ச்சி, மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழ்மொழி இலக்கிய வரலாறு போன்ற வரலாற்றாராய்ச்சி நூல்கள் வரலாற்றுக் கோணத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பங்களிப்பினைப் பறை சாற்றும்.

    ஆசிரியர் குறிப்பு:
    பொதுவாக சாதனையாளராகக் கருதும் எந்த ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அறிந்து அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனைக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்க விழைவது சராசரி மனித இயல்பு. தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் வரிசையில் சிறப்பான இடம் பிடித்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm) அவர்களைப் பற்றி சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றியத் தகவல்களோ, அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளின் முக்கியத்துவமோ அதிகம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை. அக்குறையை நீக்க இந்நூலை எழுதியவர் அவரது அன்பு மகனார், திருச்சியில் புகழ் பெற்ற கண் மருத்துவராய்ப் பணியாற்றும் முனைவர். மருத்துவர். இரா. கலைக்கோவன் அவர்கள்.

    முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர் ஒருவர் நேர்முகக் காணல்கள், நூலாராய்ச்சிகள் போன்ற பல வழிகளிலும் தகவல் சேகரித்து வாய்வழியாகக் கேட்டறிந்த செய்திகளை வாழ்கை வரலாறாக அறியத் தருவதைக் காட்டிலும், குடும்பத்தினர் தாங்களே நேரே கண்டுணர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்து தகவல்களைச் சரிபார்த்து வழங்கும் வாழ்க்கை வரலாறு முழுமையானதாகும். இரா. கலைக்கோவன் அவர்கள் நூலை எழுத்து வடிவத்தில் அளித்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை மற்ற சகோதர சகோதரிகள் அளித்து தங்கள் தந்தையின் தமிழ்த் தொண்டு அனைத்தையும் பிழையின்றி, எந்த ஒரு தகவலும் விட்டுப் போகாதவாறு ஆவணப்படுத்த உதவியதாக நூலாசிரியர் கூறுகிறார்.

    நூல் வழங்கும் செய்திகள்:
    நூலின் உள்ளுறையில்; வரலாற்றின் வரலாறு, இலக்கிய ஆய்வில் முத்திரைப் பதிவுகள், சைவ சமயப் பகலவன், வரலாற்றுத் தடங்களில், திருக்கோயில் ஆய்வுகளும் கல்வெட்டுப் புலமையும், இளையோரின் இனிய நண்பர், மனிதரில் தலையாய மனிதரே என்ற ஏழு அத்தியாயங்களின் மூலம் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமுற மிக எளிய நடையில் சுவையுற வழங்கியுள்ளார் ஆசிரியர். அத்துடன் சுவை சேர்க்கும் மேலதிகத் தகவல்களாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், குடும்பம், இராசமாணிக்கனாரின் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி இராசமாணிக்கனாரின் நூல்கள், துணை நூற்பட்டியல், ஒளிப்படங்கள் ஆகிய இணைப்புகளும் தமிழறிஞரின் மறுபக்கத்தையும், அவரது படைப்புகள் அனைத்தையம் கொடுப்பதன் மூலமும் சிறப்பாக நிறைவு பெற்று அமைகிறது.

    வரலாற்றின் வரலாறு / டாக்டர் மா. இராசமாணிக்கனார் வாழ்க்கை வரலாறு:
    நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மாணிக்கம் என்பாருக்கும், தாயாரம்மாளுக்கும் கடைசி மகனாக கர்நூலில், 1907 ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் பிறந்தவர் இராசமாணிக்கனார். தந்தையின் தொழில் காரணமாக ஆந்திரா பகுதியில் பற்பல ஊர்களில் வாழ நேரிட்டதால் பிற்காலத்தில் தமிழறிஞகராக மாறிய இவர் நான்காம் வகுப்புவரை படித்தது என்னவோ தெலுங்குதான். பிறகு அவரது தந்தையாருக்கு மதுரைக்கு மாற்றல் ஏற்பட்ட பொழுது தீவிரமாக முயன்று தமிழ் கற்றுக் கொண்டார். தனது பத்து வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து தஞ்சையில் வசித்த அண்ணன் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி தடைபட்டு தடைப்பட்டுத் தொடர, இடையில் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார். பள்ளி படிப்பு முடிந்து இருபதாவது வயதில் சென்னை தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியறாகப் பணியைத் துவக்கினார்.

    தொடர்ந்து வித்துவான் பட்டம், பி. ஓ.எல், பட்டம், எல். டி பட்டம், எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பெரியபுராண ஆராய்ச்சியை ஆய்வு செய்து எம். ஓ.எல் பட்டம் பெற்றார். தனது நாற்பதாவது வயதில் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார். “சைவ சமய வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1959 ஆண்டு முதல் சென்னைப் பல்கலை கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்று, தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில் (26.5.1967) இதயநோயால் மரணமடையும் வரை அங்கு பணியாற்றினார். தனது வாழ்நாளில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நூற்றினைத் தாண்டுகிறது. அத்துடன் பாட நூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என இவருடைய பற்பலப் படைப்புகளின் பட்டியலை நூலின் பின் இணைப்பில் காணலாம். அப்படைப்புகளின் தலைப்புகளைப் படிக்குங்கால் இந்த அறிஞரின் பரந்துபட்ட அறிவினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நூலாசிரியர் சிரத்தையுடன் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது நூலின் இந்த இணைப்புப் பகுதி.

    வரலாற்றுத் தடங்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார்:
    தமிழிலக்கியம் பயின்று, தமிழாசிரியராக வளர்ந்து, தமிழறிஞராக மலர்ந்த போதும் இராசமாணிக்கனாரின் படைப்புகள் பெரும்பான்மையும் வரலாற்று நோக்கில் அமைந்தவை. நூற்றுக்கும் அதிகமாக இவர் எழுதிய நூல்களில் நாற்பத்து மூன்று நூல்கள் வராலாற்றைப் பொருளாகவும், மற்றுமொரு பதொனொரு இலக்கிய நூல்கள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். இப்பணியே இவரை தமிழறிஞர்கள் வரிசையில் தனித்துக் காட்டுவது. சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாற்பெரும் வள்ளல்கள்’ என்ற தலைப்பில் 1930 இல் வெளிவந்த இவரது முதல் நூலே வரலாற்று நூல்தான்.

    டாக்டர் மா. இராசமாணிக்கனாரது ‘மொஹெஞ்சொதரோ – அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூல் ஏழுமுறை மறுபதிப்பு செய்யப்பட்ட நூலாகும். மற்றறொரு சிறப்புமிக்க நூல் ‘பல்லவர் வரலாறு’. இந்நூலிற்காகக் களஆய்வுகள் பல மேற்கொண்டார். அறுபத்தாறு நூல்கள், இருபத்திமூன்று கல்வெட்டுத் தொகுதிகள், ஆராய்ச்சி இதழ்கள், திங்கள் இதழ்கள் எனப் பலப் பின்புலத் தகவல்களின் தொகுப்பாக உருவான நூலாகும் இவருடைய பல்லவர் வரலாறு. பல்லவர் நகரங்களை நேரிடையாகப் பார்வையிட்டு, கல்வெட்டுகளை ஆராய இவர் சென்ற ஊர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், வல்லம், மண்டகப்பட்டு, பாகூர், திருச்சி, திருவதிகை போன்றவைகளாகும். இந்நூலிற்காக அறிஞர்களால் பெரிதும் போற்றபட்டார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இந்நூலை ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் காட்ட, அவர் அதனை படிக்க எடுத்துச் சென்றுவிட்டாராம் . பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் இந்நூல் என்னிடமே இருக்கட்டும், ‘சிவகாமியின் சபதம் ‘எழுதத் தேவைப்படுகிறது, நீங்கள் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாவும் நூலாசிரியர் தகவல் கூறுகிறார்.

    கடிகை என்று தமிழிலும், கடிகா என்றும் அழைக்கப்படும் கடிகாசலம் உண்மையில் காஞ்சி அல்ல. கடிகா என்பது கல்லூரியையும் அது இருந்த ஊரையும் குறிக்கும். இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள கடிகாசலம் என்னும் சோழசிங்கபுரமே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து கூறியத் தகவல். இதற்கு இவர் கல்வெட்டு மற்றும் இலகியச் சான்றுகளையும் ஒப்பிட்டு வரையறுத்தார். இலக்கியம், கல்வெட்டு இரண்டையும் உரியவாறு ஒப்பிட்டு நோக்கினால் அவை இரண்டும் ஒன்றுபடும் இடங்கள் மிகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியமுடியும். ஆனால், இதற்கு இவ்விரு துறைகளிலும் ஆழ்ந்த பயிற்சி தேவை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவ்வாறு இருதுறைகளிலும் சிறந்து இருந்தது தமிழக வரலாற்றைப் பற்றியப் பல அறிய செய்திகளை நாம் அறிய பெரும் உதவியாக இருந்தது.

    பல்லவர் வரலாற்றைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘சோழ வரலாறு’ நூலுக்கு கோயில்களின் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டார். தமிழ்நாடு வரலாற்றாசிரியர்கள் எவரும் கருதாத இப்புதிய சிந்தனைக் கோணத்தினால் மிகவும் பாராட்டப் பெற்றார். பிற்காலச் சோழ வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்தது, வரலாற்று மூலமாக அமைந்தது, தமிழக கோயில்களே எனவும் இராசமாணிக்கனார் கூறினார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு 1943 இல் களஆய்வுக்கு சென்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார், எங்கெங்கு தோண்டினும் கிடைப்பது பழைய செங்கற்கள், மட்பாண்ட சிதைவுகள் எனக் குறிப்பிட்டதுடன், அவற்றுள் சில அருகாமையில் உள்ள புதுவை அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்திருந்ததையும், பத்தடி ஆழத்தில் கிடைத்த செங்கல்லின் அளவினையும் (நீளம் 9 அங்குலம், அகலம் 6 அங்குலம், கனம் ஒன்றரை அங்குலம் எனவும்) குறிப்பெழுதி வைத்துள்ளார். அத்துடன் சோழர் வரலாற்றை முழுமையாகக் கொண்ட இந்நூலில் இவர் நாயன்மார்களில் ஒருவராக சமயப் போர்வையில் சிக்கியிருந்த கோச்செங்கட்ச்சோழரை சோழ மன்னராகவும், பல்லவ அரசரான புத்தவர்மனுடன் போரிட்டவரே இந்த கோச்செங்கணான் எனவும் தெளிவுபடுத்தினார்.

    சுதந்திர இந்தியாவில் தமிழகமும் ஆந்திரமும் பிரிவினையால் எல்லைத் தகராறு பற்றிய விவாதங்கள் நிகழ்ந்த காலத்தில், ஆராய்ச்சி அடிப்படையில் ‘தமிழ்நாட்டு வட எல்லை’ என்ற நூலை எழுதினர். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், சென்னை மேலவை மற்றும் கீழவை உறுபினர்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது. கால ஆராய்ச்சி, தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், தமிழக வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்பன போன்ற நூல்கள் பலவற்றையும் வரலாற்று நோக்கில் எழுதினர். தமிழகத்துக் கோயில்கள் (கோயில்களின் விமானம் என்பதைக் குறிக்க இறையிடம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்தினார்), தமிழ் நூல்களில் சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள், கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும், வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும், தமிழ் நூற்செய்திகளும் கல்வெட்டுகளும், பற்பல ஊர்ப்பெயராய்வுகள் எனக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.

    இவருடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி எனும் இரண்டு ஆய்வு நூல்களும் தமிழ்நாட்டு கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. இதன் மூலம் ஒரு சமயத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கல்வெட்டுகளின் பின்னணியில் உருவாக்கித் தந்த ஒரே தமிழறிஞர் என்ற பெருமையையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெறுகிறார். வெகுக் குறைவான அளவிலேயே கல்வெட்டாய்வு,கோயிற்கலை ஆய்வில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழறிஞர்கள் ஈடுபடிருந்தனர். அவர்களில் களஆய்வு மேற்கொண்டோரும் குறைவு. அவர்களிலும் தமிழிலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்து தமிழக, இலக்கிய வரலாற்றினை எழுதப் போந்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவிர வேறொருவர் இருந்திருக்கவில்லை என்பதனை உறுதிபட உரைக்கலாம். ஆயினும் இவ்வாறு கல்வெட்டு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களஆய்வுகள் பலவும் மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி எடுத்தார், எங்கனம் அக்கலையைக் கற்றார் என அறியக்கூடவில்லை என்று அவர் மகனாராம் இந்நூலாசிரியர் இரா. கலைக்கோவன் வியப்புறுகிறார்.

    வரலாற்றின் வரலாறு பற்றி நூலாசிரியர் கருத்து:
    தனது விரிவான முன்னுரையில் தனது அன்புத் தந்தையார் பற்றியும் அவரது அன்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார் இரா. கலைக்கோவன். அத்துடன் நூலாசிரியர் இரா. கலைக்கோவன் தனது புகுமுக வகுப்பில் அவருடைய வரலாற்று ஆசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தாவின் பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, மருத்துவம் பயில்வதைக் குறிக்கோளாகக் கொண்ட தான் வரலாற்றில்தான் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அறிவியலைவிட அதிக மதிப்பெண்கள் வரலாற்றிலா என வியந்து கேட்டோருக்கெல்லாம் இராசமாணிக்கனார் தனது மகன் அவருடைய வரலாற்று ஆசிரியரின் தாக்கத்தால் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் மா. இராசமாணிக்கனார் அப்பொழுது தனது மகனின் அறிவுத் தேடலில் தானே கொண்டிருந்த தாக்கத்தை அன்று சற்றும் அறிந்திருக்கவில்லை போலும்.

    மருத்துவராக மாறிய பின்னரும் தனது தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றியே தமிழில் முனைவர் பட்டமும், தனது தந்தையின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் விதமாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நூலாசிரியர். தந்தையைப் போலவே கல்வெட்டுகள் காணுமிடமெல்லாம் சென்று அவற்றைப் பற்றியத் தகவல்களையும் சேகரித்து வருகிறார், அதன் மூலம் தமிழுக்கும் தமிழக வரலாற்றிற்கும் தனது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றார். தாம் அறிந்துகொண்டவற்றை வரலாறு.காம் (http://www.varalaaru.com) என்ற தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு அவற்றைப் பற்றியக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் கொண்ட இதழ்கள் மூலம் அத்தளத்தில் நாம் பல தவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்.

    “ஒரு மகனாய் அவரைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு வரலாற்று மாணவனாய் மாறியபோதுதான் அந்த மனிதரின் பாடுகள் புரிந்தது. எவ்வளவு குழப்பமான காலப் படப்பிடிப்புகள். காழ்ப்புணர்ச்சியும் கயமையும், மொழி, இனம், நாடு எனக் கோடுகள் கிழித்துக் கொண்டு, குழுச் சேர்த்து குதூகலிக்கும் சிறுமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில் நேர்மையும் துணிவும் மட்டுமே கருவிகளாய்ப் பயணப்பட்ட அந்த மனிதர் எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்பார்! எவ்வளவு துன்பங்களை, ஏளனங்களைச் சுமந்திருப்பார்! இருந்தபோதும் ‘இதுதான் வாழ்க்கை’ என்ற முடிவுடன்தானே அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவரை மாணவர்கள் மறக்கலாம்! வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கலாம்! ஏன் தமிழ் கூட மறக்கலாம்! ஆனால் காலம் மறக்காது. உழைப்பாளிகளைக் காலம் என்றென்றும் மதித்தே வந்திருக்கிறது”, என்று வியந்து தனது தந்தையின் கடின உழைப்பைப் போற்றும்  முகமாக “வரலாற்றின் வரலாறு” என்னும் நூலாக இராசமாணிக்கனாரின் வாழ்வைப் பதிவு செய்ததாகவும் பகர்கின்றார் நூலாசிரியர். இது ஒரு ஆய்வறிஞரைப் பற்றி ஓர் ஆய்வாளர் எழுதிய நூல் என்பது படிப்போருக்கும் விளங்கும். அத்துடன் நூலுக்குக் என்ன ஒரு பொருத்தமான தலைப்பினையும் இரா. கலைக்கோவன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

    நூல் வழங்கும் பாடம்:
    தனது தந்தையின் வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது, இராசமாணிக்கனாரின் வழிகாட்டியாக விளங்கிய திண்டுக்கல் ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் இராசமாணிக்கனாரை திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டைக்கு அழைத்துச் சென்றதையும், “படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப் பற்றி அறிய வேண்டும். இந்த அறிவு வேண்டற்பாலது. பலர் இவவற்றைக் கவனிப்பதே இல்லை” என்று கூறிய அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

    கல்வெட்டுகள் வழி வரலாற்றை அறிவது போலவே, இந்த வரலாற்று நூலைப் படிக்கும் பொழுதும், இராசமாணிக்கனாரும், அவர் மகனாரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்களே முக்கியக் காரணம் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். இதனால் ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டிகளுக்குள்ள பொறுப்பை நூலாசிரியர் குறிப்பிடாமலே நாம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வழியே இச்சான்றோர்களின் பணியினால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் தமிழுக்கும், தமிழின் வரலாற்றிக்கும், தமிழகத்தின் வரலாற்றிற்கும் தங்கள் பணியைத் தொடர வழிவகுக்கும் வகையில் இந்த நூல் பங்காற்ற வேண்டும் என்பதே என் போன்ற வாசகர் பலரின் விருப்பமாகவும் இருக்கும்.

    “மாணவர் தென்னிந்திய வரலாற்றையும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுகளையும் படித்துத் தம் தாய்நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பட்டதன் நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார் இராசமாணிக்கனார் தனது ‘ஆற்றங்கறரை நாகரிகம்’ என்ற நூலின் முன்னுரையில். அவருடைய இக்கனவு அவரது மகனாரின் ‘வரலாற்றின் வரலாறு’ நூல் படிபவர்களால் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வோம்.

    வரலாற்றின் வரலாறு நூலின் முதல் அத்தியாயத்தை மட்டும் ஐந்து பகுதிகளாகக் கீழ் காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்…
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=319
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=337
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=353
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=382
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=407

     

     

     

    Share
  • பயணப்பிணி வரக் காரணம் என்ன?

    தேமொழி

    பயணப்பிணி எனப்படும் “மோஷன் சிக்னெஸ்” (motion sickness) பயணத்தினால் ஏற்படும் ஓர் உடல்நலக்குறைவு.

    மக்களில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். கொந்தளிப்பு, ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானமப் பயணங்களிலும் ஏற்படுவதால் இந்த பயணப்பிணி முறையே seasickness, car sickness, airsickness என்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப் படுவதும் உண்டு. இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு.

    ‘Motion sickness’ அல்லது ‘Travel sickness’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இந்நோய் ‘கின்னட்டோசிஸ்’ (kinetosis) என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பயணப்பிணி ஏன் ஏற்படுகிறது என்ற சரியான விடையை இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

    அறிகுறிகள்:
    குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியவற்றை பயணப்பிணியினால் பாதிக்கபட்டோர் உணரும் அறிகுறிகளாகக் குறிப்பிடுவர்.

    பயணப்பிணி தோன்றக் காரணம்:
    பொதுவாகக் கருதப்படும் காரணம்; தனக்குக் கிடைக்கும் முரணான சமிக்கைகளை மூளை கையாளும் விதமே பயணப்பிணி தோன்றக் காரணம். நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது. நமது பயணத்தின் போது திசை, இயக்கம், அசைவு பற்றிய தகவல்களை மைய நரம்பு மண்டலதிற்கும், மூளைக்கும் அனுப்பும் புலனுறுப்புகள் கண், காது மற்றும் தோலின் திசுக்கள் ஆகியன.

    கண் பார்வை மூலம் காணும் காட்சியின் வழி திசை மற்றும் இயக்கத்தையும், காதில் உள்ள உட்செவியின் உள்ள ‘செவி முன்றில்’ (vestibular system) உதவியால் சமநிலை, அசைவு ஆகியவற்றையும், தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் ஈர்ப்புவிசை, வேகம் போன்ற தகவல்களையும் உள்வாங்கி புலனுறுப்புகள் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. பயண ஊர்தியில் பயணிக்கும் பொழுது நமது கண்ணானது நாம் அறையில் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது, ஆனால் காதின் சமநிலைக்குக் காரணமான செவிமுன்றில் நாம் வேகமாகப் பயணிப்பதாகத் தகவல் அனுப்புகிறது. முரண்பட்ட இச்சமிக்கைகளால் மூளை குழப்பமடைந்து பயணப்பிணி தோன்றுகிறது. அது குமட்டலாக, வாந்தி வரும் உணர்வாக மாறுகிறது (Motion sickness caused by motion that is felt but not seen). திரைப்படத்தில் தோன்றும் பயணக் கட்சிகளும் இவ்வாறே குழப்பத்தைத் தரும். ஆனால் அது சற்று மாறுபட்ட வகையில் செயல்படுகிறது. கண் பார்வை திரையில் தோன்றும் வேகமாகப் பயணிக்கும் தகவலை மூளைக்கு அனுப்பும் பொழுது, காது அது போன்ற இயக்கம் ஏதும் நிகழவில்லை என்ற தகவலை மூளைக்கு அனுப்பும், இதன் விளைவாகவும் சிலர் எதிர் கொள்வது பயணப் பிணியைதான்  (i.e., Motion sickness caused by motion that is seen but not felt).

    பயணப்பிணி பக்க விளைவுகளுக்கு விளக்கம்:
    இவ்வாறு வயிற்றினைப் பாதிக்கும் குமட்டலுக்கும் வாந்திக்கும் காரணம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. விரைவுப் பயணங்கள் வரலாற்றில் நிகழ்வது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்தான். அதற்குமுன் மனிதர்களின் இயக்கம் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்தது. இயற்கையில் மனிதர்கள் நச்சினை உண்டுவிட்டால், உடல் மனித உயிரைக் காக்கும் பொருட்டு குமட்டல், வாந்தி எடுப்பதன் மூலம் உடலில் இருந்து அவற்றை வெளியேற்றி மனித உயிரைக் காக்கும். அது போலவே, முரணான தகவல்களையும் நரம்புமண்டலம் நச்சுப் பொருள் என்ற வகையிலேயேக் கையாண்டு, குமட்டல், வாந்தி மூலம் நச்சை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. குமட்டல், வாந்தி என்ற பயணப்பிணியின் முக்கியமானப் பக்க விளைவுகளைக் கொண்டே இந்த விளக்கம் பிறந்ததுள்ளது. ஆனாலும் இக்கூற்று பல விளக்கங்களைத் தருவதில் தவறிவிடுகிறது. எதனால் பார்வையற்ற பயணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? எதனால் ஆடவரைவிட மகளிர் அதிகம் பயணப்பிணியினால் பாதிக்கபடுகிறார்கள்? வண்டி ஓட்டுனரைக் காட்டிலும் பயணிகள் பெரும்பாலும் பாதிப்படைவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

    பழக்கமற்ற சூழ்நிலைகளிலும், இடங்களிலும் நம் உடல் சமநிலையில் இருக்கமுடியாததால் ஏற்படும் கோளாறு இவ்வாறு பயணப்பிணியாக வெளிப்படுகிறது என்றும் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பொழுதும் எவ்வாறு சளி பிடிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோமோ அது  போலவே பயணப்பிணியும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

    பயணப்பிணி மருந்தும் சிகிச்சையும்:
    மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இப்பிணியைத்தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி  அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப் படுகிறது.

    பயணங்களில் இஞ்சியை மெல்லுவதும் உதவுவதாக அனுபவபூர்வமான அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது, பேருந்து நிலையங்களில் நம்மூரில் ‘இஞ்சி மொரப்பா’ மிட்டாய்கள் விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

    சீனமருத்துவமான ‘அக்யூபங்க்ச்சர்’ (Acupuncture) முறையில் கண்டுணரப்பட்ட சிகிச்சைக்கான அதே உடற் பாகங்களிலேயே கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) உதவுவதாகவும் நம்பப்படுவதால் அந்த முறை சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு கைக்காப்பு போன்ற பட்டைகளும் சிலரால் கை மணிக்கட்டில் அணியப்படுகிறது.

     

    கட்டுரைக்கான சான்றுகள்:

    1. FYI: What Causes Motion Sickness, And How Do You Cure It? Brooke Workneh, Popular Science, December 2012

    2. Treisman, M. Motion sickness: an evolutionary hypothesis. Science 197: 493-495, 1977.

    3. The mystery of motion sickness, Rose Eveleth, TED Ed Lessons, January 2014.

     

     

    படம் உதவி:
    http://www.popsci.com/sites/popsci.com/files/styles/article_image_large/public/images/2012/12/motion_sick.jpeg?itok=UXY3YxRV

    Share
  • பள்ளிகளுக்கருகே மதுக்கடைகள் கூடாது, மாநகராட்சிகளின் நடவடிக்கை

    தேமொழி

    தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் சென்று கோரிக்கை மனு கொடுத்து முறையிடுவதாகவும், போராட்டங்கள் நடத்துவதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தினசரிகளில் வரும் செய்திகளைப் படித்து நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை எழுவது இயற்கை.

    ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாகக் கிடைத்த செய்தியினால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைவதாக ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ சென்ற மாதம் (டிசம்பர் 5, 2003) ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது போன்ற செய்திகளால் வருத்தமடைந்தவர்கள் இக்கட்டுரையின் தலைப்பினைப் படித்து இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று ஆனந்தப் பள்ளு பாடவேண்டாம். இங்கு குறிப்பிடப் போகும் செய்திகள் நம் தமிழக மாநகராட்சிகளின் நடவடிக்கைகளைக் குறித்தல்ல.

     

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்டா ஃபே மாநகராட்சி தங்கள் நகரில் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடையை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. முதலில் மாநகராட்சியின் அனுமதியையும் மீறி அங்கு மதுக்கடை அமைந்ததே சட்டக் குளறுபடிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல கடைகள் வைத்திருக்கும் பலசரக்கு விற்பனை நிறுவனம் ஒன்று, தனது ஒரு கடையின் மது விற்கும் உரிமத்தை மற்றொரு கடைக்கு மாற்றிக் கொடுத்தது. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. ஆனால் புது உரிமம் பெற்ற மதுக்கடைக்கருகே பள்ளி இருப்பதால் அந்த மாநகராட்சி சட்டப்படி தங்களிடம் அனுமதி இல்லாமல் பள்ளிக்கருகில் மது விற்பனை கூடாது என்று அதனை எதிர்த்தது. விற்பனையாளர் இது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். விற்பனை உரிமம் வழங்கும் மாநில அரசும் மது விற்பனைக்கு அனுமதி அளித்ததில் சட்டமீறல் இல்லை என்றது. எனினும் நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஆதரவாக மது விற்பனையை நிறுத்த ஆணையிட்டது.

    மதுவிற்பனையாளர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். மாநகராட்சியோ பள்ளிக்கு 300 அடிகளுக்குள் மதுக்கடை இருக்கிறது, சட்டப்படித் இது தவறு என்று வாதிட்டது. நீதிமன்றம் பள்ளிக்கும் கடைக்கும் இடையே உள்ள தொலைவை அளந்ததில்தான் தவறு. பள்ளியிலிருந்து 300 அடிகளுக்குள் கடையின் வண்டிகள் நிறுத்தும் இடம்தான் இருக்கிறது. விற்பனை செய்யும் கடை 300 அடிகளுக்குள் இல்லை. வழக்கமாக அளவிடும் முறையில் கட்டிடங்களுக்கிடையேயான தொலைவை அளந்தால் மாநகராட்சியின் வாதம் சரியல்ல என்று கூறி மது விற்பனைக்கு அனுமதி அளித்துவிட்டது.

    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் “எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்ற வசனம் போன்று “உனக்கு அளக்கத் தெரியவில்லை” என்று உயர்நீதி மன்றம் சொல்லி அவர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்த பின்னர், இப்பொழுது மாநகராட்சி உறுப்பினர்கள் உச்ச நீதி மன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்ல ஆயத்தமாகிறார்கள். இனியாவது மாநகராட்சியின் நல்லெண்ணத்திற்கு வெற்றி கிட்டட்டும்.

     

    மற்றொரு நிகழ்ச்சியில், நியூ யார்க் மாநிலத்தின் குயின்ஸ் மாநகராட்சி உறுப்பினரான டானவான் ரிச்சர்ட்ஸ் (Donovan Richards) என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையினால் பள்ளிக்கருகே மது விற்பனை நிகழாமல் போனது. பள்ளிகருகில் மது விற்பனை செய்ய வணிகர் ஒருவர் மாநகராட்சிக்கு விண்ணப்பம் அளித்தார். டானவான் ரிச்சர்ட்ஸ் அதற்கு உடன்பட்டு அனுமதி அளிக்கவில்லை. விண்ணப்பித்த வணிகரும் அவரது தோழர்களும் டானவான் ரிச்சர்ட்ஸ்க்கு கையூட்டு அளித்து அனுமதி பெற முயற்சித்தனர்.

    எச்சரிக்கை அடைந்த டானவான் ரிச்சர்ட்ஸ் உடனே அவர்களைப்பற்றி காவல்துறையின் துப்பறியும் பிரிவினரிடம் புகார் அளித்தார். அவர்களைக் கைது செய்ய டானவான் ரிச்சர்ட்ஸ் காவலருடன் ஒத்துழைக்க முன்வந்தார். துப்பறியும் பிரிவினர் டானவான் ரிச்சர்ட்ஸ்ஸின் பிரதிநிதி என்று ஒருவரை நியமித்து, வணிகருடன் உணவுவிடுதி ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அங்கு வந்த வணிகரும் அவரது நண்பர்களும் அந்த நபரிடம் கையூட்டு கொடுக்க முயன்றபொழுது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டனர்.

     

    பள்ளி அருகில் மதுக்கடை வைக்க விரும்பி கையூட்டு வழங்க முயன்ற வணிகர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்கள் டார்செம் சிங், தேவேந்தர் சிங் மற்றும் ராஜேந்தர் சிங். இவை நம்நாட்டு மக்களின் பெயராக இருப்பதால் பாரதத்தின் ஊழல் பண்பாட்டை மற்ற நாடுகளுக்கும் பரப்ப எத்தனிக்கிறார்கள் நம் இந்தியர்கள் என எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவில் பள்ளிக்கருகில் மது விற்பனை என்னும் முயற்சிகள், மதுவை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதும் மேலை நாட்டினரைவிடவும்  மோசமாக இருப்பது இந்த நிகழ்சிகளால் தெரிய வருகிறது.

     

     

     

    சான்றுகள்:
    மதுக்கடையில் மாணவிகள்: வைகோ கவலை..! டிசம்பர் 05,2013, தினமலர்

    மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். டிசம்பர் 06,2013, தினமணி‎

    Plea to relocate TASMAC shops away from schools. August 6, 2013, The Hindu
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-to-relocate-tasmac-shops-away-from-schools/article4994582.ece

    Waves of protests over location of Tasmac shops. November 17, 2013, The Hindu
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/waves-of-protests-over-location-of-tasmac-shops/article5359727.ece

    Court upholds decision to allow liquor sales near school, December 3, 2013, The Santa Fe New Mexican
    http://www.santafenewmexican.com/news/local_news/court-upholds-decision-to-allow-liquor-sales-near-school/article_d0248c07-da5e-5b89-ae22-14a1e3cbdb73.html

    Queens Councilman Refuses Bribes To Put Liquor Store Near School. Sep 14, 2013, Gothamist
    http://gothamist.com/2013/09/14/queens_councilman_refuses_bribes_to.php

    DOI FINDS THREE QUEENS BUSINESSMEN UNSUCCESSFULLY OFFERED CASH PAYOFFS TO CITY COUNCILMAN TO SUPPORT LIQUOR STORE LICENSE, ROSE GILL HEARN, COMMISSIONER , FRIDAY, SEPTEMBER 13, 2013
    http://www.nyc.gov/html/doi/downloads/pdf/2013/sept13/29bribe09-13-2013.pdf

     

     

     

    Share
  • தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை

    தேமொழி

     

    மொழியினைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்டக்  கருத்துண்டு.

    நமது தமிழ்மொழியைப் பொறுத்தவரை, தனது தாய்மொழி தமிழின் மீது பற்று கொண்டிருப்பவர்கள் உள்ளனர்.  இவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை  எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம்.  தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.

    அதுபோலவே நடைமுறை வாழ்க்கைக்காக, சூழ்நிலையின் கட்டாயத்தினால் பிறமொழிகளைக் கற்றுப் பேசுபவர்கள்  நம்மில் உள்ளனர். இது காலத்தின் கட்டாயம் என்பதால் இதனைக் குறை சொல்வதற்கில்லை.  பிறமொழிகளைக் கற்கும் ஆர்வத்தில் எந்தவிதக் கட்டாயமும் இல்லாமலே பிற மொழிகளைக் கற்று, அந்த மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவரைவிட மொழிக்குத் தனது பங்களிப்பை வழங்கிச் சென்றவர்களும், செல்பவர்களும் உண்டு. இத்தகையவர்கள் கிடைப்பது அந்த மொழி பெற்ற பேறு.  அத்துடன் இப்பிரிவினரைக் காண்பதும் அரிது.

    பல அந்நியமொழியினரால் நம் தமிழுக்கும் அந்த பேறு கிடைத்திருக்கிறது. அவ்வாறு அந்நிய மொழியினர்  தமிழ் கற்க நேர்ந்ததன் நோக்கம் சுயநலமாக (தனது மதத்தினைப் பரப்புதல் போன்ற காரணங்கள் என்பதாக) இருந்தாலும் தங்கள் பங்களிப்புகளின் மூலம் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு வெளிபடுத்திச் சென்றுள்ளார்கள். இவரிலும் வேறுபட்டு, அயல்நாட்டின் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சியாளர்களாக இருப்போர், எந்தவிதக் கட்டாயமும் இன்றியே தமிழறிந்து பேசவும் எழுதவும் விரும்பி தமிழுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள், செய்து வருகிறார்கள். சமீபத்தில் சீனப்பெண்மணி ஒருவர் தமிழ் நூலும் வெளியிட்டுள்ளார்.

    Zhao Jiang, the director of China’s only Tamil radio station, has written a book in Tamil, possibly the first of its kind by a Chinese author, to provide an introduction into China’s historical and cultural attractions. Photo: Ananth Krishnan. The Hindu.

    மேற்கூறிய எந்த ஒரு பிரிவினராலும் தமிழ் வளர்ச்சிக்கு எக்காலத்திலும்  தடை ஏற்படப் போவதில்லை.  வளர்ச்சிக்குத் தடங்கலை ஏற்படுத்தும்  பணியைச் செய்பவர்கள்  யாவர் என ஆராய்ந்தால், தமிழராகப் பிறந்த பின்னரும் உடனிருக்கும் தமிழரிடம் தான் வசிக்கும் தமிழகத்திலேயே தமிழில் பேசவிரும்பாமல் ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள்; தனது தாய் மொழியில் பிற மொழிக் கலப்பின்றிப் பேச விரும்பும் சக தமிழர்களை எள்ளி நகையாடுபவர்கள்; தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்க, தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட, தனது குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட என அரசு தலையிட்டு வேண்டுகோள் விடுக்கவும், ஊக்கப்படுதவும் வேண்டிய நிலையில் தமிழைப் புறக்கணிப்பவர்கள் என்பது தெரிய வரும். இவர்கள் போன்ற குலத்தைக் கெடுக்கும் கோடாலிக் காம்புகளே இடையூறாக இருப்பவர்கள்.

    சென்ற மாதம் (நவம்பர் 2013)  வெளியிடப்பட்ட “செம்மொழி தமிழ்க் குறும்படம்:  தமிழ்ப் பேசுவோம் தமிழர்களிடம் தமிழில் மட்டும் பேசுவோம்”(http://youtu.be/ebmajdLYtT8) என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களிடம்  உள்ள இந்த வருத்தத்திற்குரிய நிலைபாட்டினைப்  படம் பிடித்துக் காட்டியுள்ளது.  திரைக்கதையின் நாயகன் தமிழில் பேச விரும்புவதால் என்னென்ன இடர்களை எதிர் கொள்கிறார், எவ்வாறு கேலி செய்யப்படுகிறார் என்பதே படத்தின் மையக்கருத்து.  பிற மொழியினரிடம் இல்லாத இந்த மயக்கம் (தனது மொழியினருடன் தனது மொழியில் பேச விரும்பாதது)  மனிதர்களின் இயல்புக்கு எதிராகவேப் படுகிறது.  இவ்வாறு பாசாங்கு செய்வது தமிழர்களினால் இன்னமும் அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபட முடியாததின் எதிரொலியாகவேத் தோன்றுகிறது.

    இவ்வாறு தேவையற்று தமிழர்கள் அயல்மொழிகளில் பேசும் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல தமிழகத்திலேயே தமிழில் பெயர்பலகைகளை வைக்காது புறக்கணிப்பது.  இந்த சீரழிவைப் பிற மொழியினருடன் ஒப்பிட்டால் தமிழர்களின் குணக்கேடு அதிர்ச்சி தரும் அளவிற்குத் தெளிவாகப் புரியும்.

     

    வடநாட்டுப் பயணக் கட்டுரை ஒன்றில் தோன்றும் புகைப்படங்கள் அம்மாநில மக்களிடம் தமிழர்களுக்கு முற்றிலும் நேர்மாறான மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது. பிறமொழியினர், பிற நாட்டினார் வருகை தரும் சுற்றுலாப் பொதுவிடங்களில் மற்ற மொழியினர் பற்றிய பொதுநலக் கருத்தோ, அக்கறையோ அம்மாநில மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.  பல மொழி கொண்ட இந்தியர் அனைவரும் அங்கு சென்றால் அவ்விடத்தைப் பற்றியச்  செய்திகளைப்  புரிந்து கொள்ள வழியில்லாது தங்கள் மாநில மொழியில் மட்டுமே அறிவிப்பு/செய்திப் பலகைகள் வைத்துள்ளனர்.  ஆங்கிலம்  என்ற பொது மொழியைப் படித்து தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ள பிற மொழி பேசும் இந்தியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக அவர்கள் மதிப்பது இதன் மூலம் தெளிவு படுத்தப் படுகிறது.

    கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது. அங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அறிவிப்புப் பலகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மொழி புரியாதவர்களுக்காக அக்கட்டுரையின் ஆசிரியர் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியுள்ளார் (நன்றி: வல்லமையாளர் திருமதி. கீதா சாம்பசிவம்)

    DSC02757bittur (1)

    https://groups.google.com/group/mintamil/attach/a4ab36380ea0f609/DSC02757bittur.JPG?part=4&authuser=0

    மேல் காணும் அறிவிப்புப் பலகையின் வாசகங்கள்

    புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது.  அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார்.  சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர்.  அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள்.  இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.

    DSC02741ashramval (2)

    https://groups.google.com/group/mintamil/attach/a4ab36380ea0f609/DSC02741ashramval.JPG?part=7&authuser=0

    ஆசிரமத்தின் உள்ளே உள்ள மற்றொரு  அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.

    ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது.  இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர்.  இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர்.  உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

    புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.

    DSC02762வால்மீகிசந் (1)

    https://groups.google.com/group/mintamil/attach/c16e10f221c07152/DSC02762%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D.JPG?part=6&authuser=0

    மேலும் ஒரு மொழிபெயர்ப்பு:

    வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை.

     

    இந்த வடஇந்திய மாநிலத்தவராது தங்கள் நாட்டில், தங்கள் மாநிலத்தில் இவ்வாறு தங்கள் மொழியை மதித்து தங்கள் மொழிப்பற்றைக் காண்பிக்கிறார்கள்.  இவர்களையும் மொழிப்பற்றில் எங்கேயோ பின்தள்ளிவிட்டார்கள் அமெரிக்கா வாழ் சீனமொழி மக்கள்.  சீனர்கள் தங்களது தாய் மொழியில் மட்டுமே தங்களது வணிக நிறுவனங்ககளின், கடைகளின்  பெயர்ப்பலகைகளை வைப்பதைக் கண்டித்து, சீன மொழியுடன் ஆங்கிலத்திலும்  பெயர்ப்பலகை வைக்கச் சொல்லி சட்டம் இயற்ற விரும்பிய அமெரிக்க மாநகராட்சியை அந்த எண்ணத்தைக் கைவிட வைத்துவிட்டார்கள் இந்த சீனமொழி பேசும் மக்கள்.

    A bookstore in the Garfield Lincoln Plaza in Monterey Park has no English signage. The City Council recently tabled an ordinance seeking to require “Latin lettering” on all business signs. (Lawrence K. Ho / Los Angeles Times / July 31, 2013)

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகருக்கு அருகில் இருப்பது மாண்ட்டரே பார்க் என்ற ஒரு நகரம். அங்கு வசிப்போரில் 70 விழுக்காட்டினர் ஆசியாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் அல்லது அவ்வாறு வந்தவர்களின் வழித் தோன்றல்கள். பெரும்பான்மையோருக்கு சீனமொழியே  தாய்மொழி.  ஒருசிலர் இவர்களின் வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் தங்களது சீன மொழியில் மட்டுமே கடைப் பெயர்களை எழுதி வைத்துள்ளனர்.  துளியும் ஆங்கிலம் என்பது கிடையாது.  நகரின் ஆட்சியாளர்களுக்கு இச்செயல் பாதுகாப்பைப் பற்றியக் கவலையைத் தந்துள்ளது.  ஓர் அவசர காலத்தில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், அவசரகால விரைவு ஊர்திகள் போன்றவற்றின் சேவை தேவைப்படுமானால் நகர் ஊழியர்களால் அங்குள்ள பெயர்ப்பலகைகளைப் படிக்க முடியாது போகலாம்.  எனவே, உயிரிழப்புகள் ஏற்படும் சமயத்தில் உதவி செய்வதற்கு அமெரிக்கர்களுக்குப் புரியாத மொழி தாங்கிய பெயர்பலகைகள் இடையூறாக இருக்கக் கூடிய சூழ்நிலையை எண்ணினர் நகராட்சி மன்றத்தினர். பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்ற நியாயமான சட்டத்தை வரையறுத்தனர்.

    ஆனால் அப்பகுதி சீன மக்கள் கொதிப்படைந்து, இது சிறுபான்மையினர் மீது நிகழ்த்தும் அடக்குமுறை என எதிர்ப்புத் தெரிவித்தனர். சிறுபான்மையினரின் மேல் நிகழ்த்தும் உரிமைமீறல் செயல் என்ற எதிர்ப்பு தோன்றியவுடன் நகராட்சி மீண்டும் கூடித் தற்பொழுது ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற சட்டத்தை சிறிது காலத்திற்குத் தள்ளிவைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக  பல மொழிகளும்  புழங்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு வணிகர்கள் எவ்வாறு உதவுவது என்று விளக்கும் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது மாண்ட்டரே பார்க் நகராட்சி.

    பலமொழிகள்  புழங்கும் இடங்களில், அனைவருக்கும் உதவும் வகையில் அப்பகுதி மொழிகளிலும் பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என்ற பொது அறிவு மக்களுக்கிருப்பது அவசியம் என்ற கருத்தினை நகராட்சி உறுப்பினர் ஒருவர் தெரவித்துள்ளார். சட்டம் போட்டுப் பெயர்ப்பலகையின் இருமொழித் தேவையை  நிறைவற்றுவது சிறந்த முறையாக இருந்தாலும், அவ்வாறு செய்வது ஓரினத்தின் மீது நிகழ்த்தும் அடக்குமுறை எனத் திசை திருப்பப்பட்டு  நகரின் அமைதிக்கு ஊறு ஏற்படுவதைத்  தவிர்க்கும் நோக்கிலேயே சட்ட நடவடிக்கையை எடுக்காமல் நகராட்சி பின்வாங்கியுள்ளது.

     

    இவ்வாறு ஓர் அயல்நாட்டில் வாழும் சீனர்கள் அயல்நாட்டிலும் தங்கள் மொழியில் பெயர்ப் பலகைகள் வைப்பதும், பலமொழி மக்கள் வாழும் இந்தியாவின் வடமாநிலங்கள் பிறமொழிகளைப் புறக்கணித்து தங்கள் மொழியில் மட்டும் அறிவிப்புப் பலகைகள் வைப்பதும் அவர்களது மொழியின்மீது அவர்களுக்குள்ள அன்பினைக் காட்டுகிறது.  ஆனால் தமிழர்களுக்கு ஏனோ தமிழ்நாட்டிலேயே தமிழில் பெயர்ப் பலகைகளை வைப்பது அவமானத்திற்குரிய செயலாகப்படுகிறது.  நம்மில் பலருக்கு பிறமொழிக்குத் தேவை இருந்தும் இவ்வாறு இம்மக்கள்  தங்கள் மொழிகளில் மட்டுமே பெயர்ப் பலகைகள் வைப்பது மொழிவெறியின் பால் அடங்குவதாகத் தோன்றவேத் தோன்றாது. அது அவர்களின் மொழிப்பற்று என விட்டுத் தள்ளுவோம். ஆனால் பிறமொழிக் கலப்பின்றி தமிழ் பேச விரும்பும் தமிழர்களை  மொழி வெறியர்கள் என்றப் பட்டம் சூட்டி இகழ்வதை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே வாடிக்கையாகச் செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கவனத்திற்குக் கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    இதுவரைக் குறிப்பிட்ட தாய்மொழித் தமிழை வெறுக்கும் தமிழர்களோ, கான்பூர் மக்களோ, சீன மக்களோ முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றைத் தவறவிட்டிருக்கிறார்கள்.  மொழி என்பது ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள மனிதகுலத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி.  அதைத் தேவையறிந்து சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தினால்தான் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.  மொழி என்பது தன்மானப் பிரச்சனை அல்ல. மொழி என்பது கெளரவப் பிரச்சனை அல்ல.  மொழி என்பது உரிமைப் பிரச்னையும் அல்ல.

    இக்கருத்தை தெளிவுறுத்த மேலும் பல விளக்கங்களும் கொடுக்கலாம்.  அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி என்ற சமூகப்பாதுகாப்பிற்கான நலத்திட்டத்தின் அடையாள எண் அனைவருக்கும் இருப்பது அவசியம். பணிபுரிய, வண்டி ஓட்ட, வரிகட்ட எங்கும் எதிலும் இந்த எண்ணின் தேவை இன்றியமையாதது. இந்த எண்ணைப் பெற அது வழங்கப்படும் அலுவலத்திற்குச்  சென்று விண்ணப்பம் கேட்ட பொழுது, அங்கு பணிபுரியும் ஊழியர் எனது தோலின் பழுப்பு நிறத்தைக் கண்டு அவராகவே நான் ஒரு ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக் இனத்தவள் எனக் கருதி ஸ்பானிஷ் மொழியில் உள்ள விண்ணப்பம் கொடுத்தார்.  பிறகு ஆங்கில விண்ணப்பத்தைக் கோரி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருந்தது.  இதனால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் பிறமொழியினருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கையினைக் கொண்டிருப்பது வெளிப்படுகிறது.

     

    CA DMV

     

    கலிஃபோர்னியா மாநிலத்தின் ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் பலமொழியினருக்கும் உதவ விரும்பி அம்மாநில அரசு ஓட்டுனர் விதிகளைக்கற்கப் பலமொழிகளிலும்  விதிமுறைகளை விளக்கும்  பயிற்சிப்  பாடங்களை உருவாக்குகிறது.  இவ்வாறே வாக்காளர் விண்ணப்பத்திலும் பலமொழியினருக்கும் உதவ, அவர்கள் மொழியில் உரையாடி உதவிபெற அம்மொழியினருக்கான தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் என்றுமட்டுமல்ல, பிறமொழி பேசுவோருக்குத் தேவை என்றால் உதவப் பல பொதுச்சேவை செய்யும் நிறுவனங்களும் மொழிபெயர்ப்பாளர்களை தங்களது சொந்த செலவில் ஏற்பாடு செய்து உதவுவதற்கானத் தயார் நிலையிலேயே உள்ளன.

    2013-12-18 07.56.32

    மருத்துவ மனைகளும் இந்த உதவியைச் செய்யத் தவறுவதில்லை. மருத்துவமனைகளில் பலமொழிகளிலும் எழுதப்பட்ட ‘உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை எனில் உங்கள் மொழியினைச் சுட்டுங்கள், நாங்கள்  ஏற்பாடு செய்வோம்’ என்ற அறிவிப்புப் பலகைகளைக் காணலாம்.  படத்தில் காணப்படும் இந்த அறிவிப்பு ஒரு மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த அறிவிப்புதான்.

    2011-07-28 10.04.34

     

    மொழியின் தோற்றத்தின் காரணமும், பயன்படுத்துவதின் நிமித்தமும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதற்கென்ற அடிப்படை உண்மையைக் கருத்தில் கொண்டு தேவைக்கும் இடத்திற்கும் தக்கவாறு அதற்கான நடவடிக்கைகளை மட்டும் முன்னிறுத்துவோம்.  மொழிவெறியையும் இனப்பேதத்தையும் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவோம். தாய்மொழி தமிழில் பேசுவதில் அவமானமுமில்லை, நம்முடன் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் பிறமொழியினருக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை.  தமிழரைத் தவிர பிறர் தங்கள் மொழியினைப் புறக்கணிக்கத் தயாரில்லை என்பதைக் கண்டபிறகாவது தமிழர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்காது, பிறமொழி மயக்கத்தில் இருந்து விடுபடுவது தமிழுக்கு செய்யும்  உதவியாக இருக்கும்.

    வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

     

     

     

    ஆதாரம்:
    Monterey Park drops plan for English signs amid community outcry, By Frank Shyong Los Angeles Times, December 5, 2013
    http://www.latimes.com/local/lanow/la-me-ln-monterey-park-table-signs-20131205,0,6370878.story#ixzz2nipUy9WP

    எல்லாருக்கும் வணக்கம்! கீதா சாம்பசிவம்
    https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ

    China’s first Tamil author looks to build bridges, January 18, 2013, The Hindu
    http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece

     

    காணொளி:
    செம்மொழி – தமிழ்க் குறும்படம்

    படம் உதவி:
    http://www.trbimg.com/img-52a10a89/turbine/la-me-ln-monterey-park-table-signs-20131205-001/600

    http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece

    https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ

     

    Share
  • அழகான ராட்சஷியே!!!

    தேமொழி

     

    “அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
    முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
    அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”

    என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.

    காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

    நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.

    கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
    (பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)

    பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.

    ——————————————————————————————————————————————————————-
    பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
    ——————————————————————————————————————————————————————-

    ”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
    வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”

    என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.

    வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.

    மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.

    இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

    மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

    பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

    இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.

    அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.

    இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

    அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.

    நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.

    அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

    ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

     

     

     

     

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • சரியா? தவறா?

    தேமொழி

     

     

    காலிக் கோப்பையில் எறும்புகள்
    கண்டன இனிப்புச் சுவைதனை
    கழுவும் வேளையும் வந்ததுவே
    கண்டேன் நானும் எறும்புகளை
    கவனக் குறைவால் அலசிவிட்டால்
    கண்டிடும் மரணத்தை அவ்வுயிர்கள்

    அக்கறை கொண்டு செயல்பட்டால்
    அத்தனை உயிர்களையும் என்னால்
    அன்புடன்தான் காத்திட இயலும்
    அன்றுடன் முடியாது தொடர்வதற்கு
    அச்சிற்றெறும்புகளின் வாழ்க்கையிலோர்
    அல்லல் நீக்கும் தேவதையாவேன்

    சின்னஞ்சிறு தட்டல்களினால் தரையில்
    சிதறியோடின எறும்புகள் எங்கும்
    சிற்றெறும்பொன்றோ தன்கால் மாட்டிச்
    சிக்கித் தவித்தது கோப்பைப் பிசுக்கில்
    சிறுகுச்சியினால் விடுவித்தேன் அதனை
    சிறிது தள்ளாடியே விழுந்தது தரையில்

    நடக்க முடியாது தவித்த எறும்பின்
    நட்பும் சுற்றமும் விட்டு விரைந்தோடின
    நலிவுற்றுப் போகும்படி முடமாக்கினேனோ
    நாளும் அதற்கினி தனிமையில் உயிர்வதையோ
    நானும் துயருற்றேன் கொன்றிருந்தால் அதை
    நல்லதோர் முடிவாக இருந்திருக்குமோ ஐயகோ

     

     

     

    படம் உதவி:
    http://thumbs.dreamstime.com/x/cup-saucer-ants-16755972.jpg

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

    தேமொழி

    வாழ்வில் எதுவும் கடந்து போகும்

    depression

     

    மனித மனமே கேளு
    மயக்கம் என்ன கூறு
    கலங்கும் நெஞ்சே ஆறு
    இது வாழ்வில் காணும் பேறு

    எதுவும் கடந்து போகும்
    எண்ணம் கிடந்து வாட்டும்
    எதையும் தாங்கும் இதயம்
    எளிதில் மறந்து போகும்

     

     

    கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி
    (http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)

     

    Share
  • ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்

    தேமொழி

    புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரின் இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன். இவர் 1000 த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர்.

    இவர் கதைகளில் அமைதியில்லா என் மனமே, துள்ளுவதோ இளமை, சிகப்பு ரோஜா கதைகள், என் பெயர் கமலா, காதல் ஒரு கனவு, தாரா… தாரா… தாரா… திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் போன்ற பல நூல்கள் குறிப்பிடத் தக்கன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முதல் கதை இவரது 18 ஆவது வயதில் 1949 இல் தினமணிக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.

    இவரது கதைகள் அறிவியல், சமூகம், துப்பறியும் கதைகள் எனப் பலப் பரிமாணங்களில் வெளிவந்துள்ளன. கதைகளைத் தவிர்த்து தலபுராணங்கள், தொலைகாட்சித் தொடர்கள், நாடகங்கள், ஆன்மீக வரலாற்று நூல்கள் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது புதினங்கள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர் துப்பறியும் கதைகளைத் தனது புனை பெயரிலும், தலபுராணக் கட்டுரைகளைத் தனது இயற்பெயரிலும் வெளியிட்டுள்ளார்.

    ஸ்ரீ வேணுகோபாலனாக ஆன்மீக, வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சமுதாயக் கதைகளை எழுதியவரும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வணிக நோக்கில் புகழ்பெற்ற இளமைத் துள்ளல் கதைகளை எழுதியவரும் இவரே என்பது இவரது வேறுபட்ட எழுத்துத் திறமையைக் காண்பிக்கும். உண்மைக் கதைகளை எழுதப் புனைபெயரைத் தேர்ந்தெடுததாக இவர்  குறிப்பிட்டுள்ளார். பதினைத்து ஆண்டுகள் எழுத்தாளர் வாழ்க்கையில் அடையாதப் புகழை ஆறே வாரங்களில் இவருக்குப் புனைபெயர் பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை தபால் தலைமையகத்தில் வெளிநாட்டுத் தபால் பிரிவில் பணியாற்றிய இவரால் “ஊதாப்பூ” என்ற மாதாந்திர புதின பத்திரிக்கை ஒன்றும் சொந்தமாகத் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் 50,000 பிரதிகள் வரை விற்பனையை எட்டினாலும், நடைமுறையில் எதிர்கொள்ளப்பட்ட மேலாண்மை தொடர்பான குறைபாடுகள் எழவே நிறுத்தப்பட்டது. ஆன்மிகம் என்ற பத்திரிக்கையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளார்.

    இவரது எழுதாற்றலுக்காகப் பரிசுகள் பலவும் பெற்றவர். மதுரகவி நாடகத்திற்காக இந்திய அரசாங்க விருது, சிறந்த சிறுகதைக்காக கல்கி பத்திரிக்கை பரிசு, சிறந்த எழுத்தாளருக்கான சாவி பத்தாண்டு விழா விருது, ராணி வெள்ளிவிழா விருது மற்றும் பாலு ஜுவெல்லேர்ஸ் விருது, சிறந்த திரைக்கதைக்காக சென்னை திரைப்பட ரசிகர்கள் விருது, அமுதசுரபி நாவல் போட்டி பரிசு எனப் பலப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.

    இவரது “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,” “நந்தா என் நிலா,” மற்றும் “அந்த ஜூன் 16 ஆம் நாள்”ஆகிய கதைகள் திரைபடங்களாக வெளிவந்துள்ளன. அந்த ஜூன் 16 ஆம் நாள் திரைக்கதை வசனத்தையும் எழுதியுள்ளார். 2011 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகிய கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம் புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு உருவாக்கப் பட்டது. இவரது ‘பெண் ஒரு ஜீவநதி, ‘நான் குடும்பத்து ஸ்டார்,’ ‘ஊரார்’ கதைகள் தொலைகாட்சித் தொடர்களாக வெளிவந்தன.

    நூல்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள இவர் பல்லாயிரக் கணக்கான நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். உடல்நலமற்று ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரை அவர்கள் தனது 82 வது வயதில், நவம்பர் 10, 2013 அன்று உயிர் நீத்தார்.

    பின் குறிப்பு: எனது சிறுவயதில், இவர் கதைகள் சிறுவயதினர் படிக்கத் தகுதியற்றது என்று என் அம்மாவினால் தடை உத்தரவு போடப்பட்டது . இது இவரது எழுத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைக் காட்டும்.

     

    படங்கள் உதவி:
    https://plus.google.com/photos/107223873489690009994/albums/5643981174513298545?banner=pwa

    http://www.kittz.info/2013/04/blog-post.html

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

    தேமொழி

     

    tribal lady

     

    காத்திருப்பில் கலங்காதே …

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

     

    அன்பு நண்பர் கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    தனுசுவின் முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

    தேமொழி

    சகலகலா வாணி

     

    sagalakalaa vani

     

    சகலகலா வாணியே 
    ராகம்:  கேதாரம்
    தாளம் : ஆதி
    பாடல்: சுத்தானந்த பாரதி

    பல்லவி:
    சகல கலா வாணியே- சரணம் தாயே
    சங்கீத வீணா பாணியே
    (சகலகலா வாணியே)

    அனுபல்லவி:
    இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
    எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
    (சகலகலா வாணியே)

    சரணம்:
    அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
    ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
    திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
    தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
    (சகலகலா வாணியே)

    முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
    முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
    புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
    பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
    (சகலகலா வாணியே)

     

    சரசவாணியே! சகலகலாவல்லியே!

    வீணையேந்திய சகலகலா வாணியே
    வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
    வெண்டாமரையிலுறையும் அன்னையே
    வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

    நூல்வடிவாய் நின்ற நாயகியே
    பால்வடியும் கவிமாலையானவளே
    கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
    சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!
    – பவள சங்கரி

    கமலமே  உந்தன் வெண்ணிறமே
    அமரவே  என்  உள்ளமே
    உயருமே  உவகை கொள்ளுமே!

    வீணையே உன் வடிவு விந்தையே
    ஆணையாய்  உன் ஒலியிலே
    இருப்பவள் தன்னையே
    அருள்தரச்சொல்லுவையே!
    – ஷைலஜா

    வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்
    வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்
    வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே
    வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்

    வாணி நாமகளே பாரதியே பாமகளே
    வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே
    வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே
    வெற்றி முரசொலிக்க‌  விரைவாய் வந்தருள்வாய்
    – பார்வதி இராமச்சந்திரன்

    நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
    நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்
    நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி

    அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
    பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
    விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது
    – ஜெயஸ்ரீ

     

    பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.

    படத்தைப் பற்றியக் குறிப்பு:
    சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது.  மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

     

     

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

    தேமொழி

    கெளதம புத்தர்

    Gold Buddha

     

    மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.

    SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en

     

     

     

     

     

    Share