Author: தேமொழி

  • பிக்கோலிம் புளுகு – 5

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

    _____________________________________________

    Related Articles:

    _____________________________________________

     

    வதாடியோ போர்:

     

    alorna fort
    வதாடியோவிற்காக நிகழ்ந்த போர் விரைவில் முடிந்துவிட்ட ஒன்று என்றாலும் கோவாவில் போர்சுக்கீசியர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அது. வதாடியோ அமைந்திருந்த இடத்தின் முக்கியதத்துவத்தினால் மராட்டியர்கள் வதாடியோவைக் கைப்பற்றுவது பிக்கோலிம் நகரை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர உதவும் எனக் கருதினார்கள். போர்சுக்கீசியர்கள்  தேவையான பாதுகாப்பை அந்நகரைச் சுற்றி அமைத்திருந்தபோதிலும், அந்நகருக்கென நிரந்திர படை பாதுகாப்பிற்காக இல்லாமல் இருந்தது [9]. வதாடியோவைக் காக்க ‘ஆல்பர்ட் பின்ட்டோ’ பேர்நெமில் இருந்து பிக்கோலிமிற்கு வரவழைக்கப் பட்டார் [9]. எதிர்பார்த்தவாறே மராட்டியர்கள் வடக்கிலிருந்து வதாடியோவைத் தாக்கினர். போர்சுக்கீசியர்கள்  உடனடியாக பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தனர் [9]. இத்தாக்குதலால் மராட்டியக் குதிரைப்படை சிதறுண்டது.  தொடர்ந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைக்கும் சிறிது இழப்பு நேர்ந்தது [9]. போர்சுக்கீசியர்களின் பீரங்கித் தாக்குதலின் குறி திறம்பட அமையாததால் மராட்டியக் குதிரைப்படையை அழிக்க முடியாது போனது [9].

    போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோவின் வடக்குப்புற எல்லையைக் காக்கும் வகையில் படைகளை நிறுத்தினர். குதிரைப்படைகள் போர்ச்சுக்கீசியர்களை நெருங்கித்  தாக்கி இழப்புகளை ஏற்படுத்த உதவும் வகையில் மராட்டியக் காலாட்படை அவர்களை எதிர்கொண்டது [9]. ஆனால் மோதல் துவங்கியவுடன் போர்ச்சுக்கீசியர்கள்  மராட்டியர்களின் பாதுகாப்பு வளையத்தை விரைவில் உடைத்து மராட்டியர்களை தாக்கி அவர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினர். இதன் விளைவாக மராட்டியர்களின் போர்த்திட்டம் சிதைந்ததுடன்  அவர்களது காலாட்படைக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. படைத்தளபதிகள் கொடுத்த திறனற்றக் கட்டளைகளினால் மராட்டியக் குதிரைப்படை போர்சுக்கீசியர்களின் எதிர்த்தாக்குதலை தடை செய்யக் கால தாமதம் ஆனது [9].

    வதாடியோவின் வட முனையில் நிகழ்ந்த இப்போர்தான் பிக்கோலிம்  போரில் தீவிரமான ஒன்று. தொடர் தீவிரத் தாக்குதல்களும், இரு பக்கங்களுக்கும் ஏற்பட்ட சம அளவு இழப்புகளும் தாக்குதல் நிகழ்ந்த நாளில் பெரும்பான்மையாக இருந்தது [9]. இறுதியில் இருள் கவிழத் தொடங்கியதும் ஆல்பர்ட் பின்டோ தனது போர்ச்சுக்கீசிய வீரர்களை முன்னேறுவதை நிறுத்துமாறும், வதாடியவிற்குத் திரும்புமாறும் கட்டளை இட்டார் [9]. இப்போரின் இழப்பினைப்  பற்றியத் தகவல்களை வரலாற்றில் மராட்டியர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ குறிப்பிடாவிட்டாலும் இழப்புகள் அதிகம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது [9]. இப்போரில் நிகழ்ந்த இழப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானித்துவிடக் கூடும் என்பதினால் இரு தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த அதிக இழப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்கலாம் என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

    போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு மறுநாள் மராட்டியர்கள் மீண்டும் விடிவதற்கும் முன்னரே வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர்[9]. அதிகாலையில் தாக்குதல் வெற்றிகரமாகத் துவங்கினாலும் மீண்டும் மராட்டியர்களின் திட்டம் தோல்வியுற்றது. ஆல்பர்ட் பின்ட்டோவின் ராணுவத் திறமை மராட்டியர்களின் சாதக நிலையை முறியடித்து அவர்களை வடக்கு நோக்கித் துரத்தியது. ஆல்பர்ட் பின்ட்டோவின் அணுகுமுறையின் காரணமான திறமையான வழிநடத்துதலால் போர்ச்சுக்கீசியப்  படைகளுக்கு குறைவான சேதம் விளைந்தது [9]. ஆனால் மராட்டியக் குதிரைப்படையினர் திறமையாக தெற்கு நோக்கி முன்னேறி நகரில் இருந்த போர்ச்சுக்கீசியப் படையினரையும் தாக்கத் துவங்கினர் [9].  மராட்டியக் குதிரைப்படையினரின் தீவிரத் தாக்குதலால், போர்ச்சுக்கீசியர்களின் பெரும்பான்மையான படை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி வதாடியோவில் சரணடையும் நிலை ஏற்பட்டது [9].

    போரின் நிலையை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோவிற்கு கோபம் ஏற்பட்டாலும், வெள்ளை நிற சமாதானக் கொடியை உயர்த்தி வதாடியோவிற்குள் பின்வாங்க நேர்ந்தது [9]. ஆனால் படைகள் பின்வாங்குதல் ஆல்பர்ட் பின்ட்டோவின் திறமையின் காரணமாக ஒழுங்குமுறையான கட்டுபாட்டுடன், படைகளின் இழப்பை குறைக்கும் வகையில் இருந்தது.  இக்காரணத்தினால் பின்வாங்கி நகருக்குள் நுழைய இரவாகிவிட்டது [9]. மராட்டியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமையாக திட்டமிடப்பட்டு ஆல்பர்ட் பின்ட்டோவின்படைகளைத் தாக்கத் தயாரான நிலையில் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர் [9]. இவ்வாறு படைகள் நகர்த்தப்பட்டதால் மராட்டியர்களின் குதிரைப் படை வதாடியோவின் வடக்குப் பகுதிக்கு தள்ளப்பட்டது.  இரு தரப்பினரும் வெற்றி உறுதி என நம்பியதால் போர் நள்ளிரவு வரைத் தொடர்ந்தது [9]. ஆனால் இறுதியில் சோர்வடைந்த  போர்ச்சுக்கீசியப் படையினர் நகரின் தென் பகுதிக்குப் பின்வாங்கிய பின்பு அப்பகுதியைப் பலப்படுத்திக் கொண்டு, நகரின் வட பகுதியை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றடையுமாறு விட்டு விட்டனர் [9].

    இவ்வாறு ஊர் இரண்டுபட்ட பிறகு மராட்டியர்கள் குடிமக்களை  நகரின் இருபகுதிகளுக்கும் தடையின்றி போய் வர அனுமதித்தனர். மராட்டியர்களின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோ ஊரடங்கு சட்டம் போன்ற முறையினை அமல்படுத்தி, தனது படையின் ஒரு பகுதி வீரர்களை நகரமக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினார்.  குறிப்பாக உயர் ஜாதி இந்துக்கள் எனப் பின்புலம் கொண்ட பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர் [9]. இக்குடிமக்கள் நகரின் வடபகுதிக்குச் சென்று மராட்டியப் படையைச் சந்தித்து, மராட்டியர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டது [9].  இந்த சந்தேகத்தில் சிறிது உண்மையும் இருந்தது. மறுநாள் மதியம் இருதரப்பினர் படையும் இக்கட்டான செயலிழந்த நிலையில் இருக்கும் பொழுது, வடபகுதியில் இருந்து வந்த குடிமக்களின் கூட்டமொன்று போர்ச்சுக்கீசியர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்கத் துணிந்தது. இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதும், கடினமான முறையில் தண்டிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அவர்களின் துரோகச் செயலுக்காக ‘வாஸ் கோடா காமா’ நகருக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் [9]. எனினும், போர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கை வதந்தியாக விரைவில் மக்களிடையே பரவி, குடிமக்களிடையே அமைதி குறைந்த காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் குடிமக்கள் தென்பகுதிக்கு வருவதையே தடை செய்துவிட்டனர்[9] [11]. இந்நிலை ஏற்படக் காரணம் மராட்டியர்கள் வதந்திகளை மிகைப் படித்தியதால் ஏற்பட்டதன் விளைவு என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

    நிலைமை எதுவாயினும் நகரின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கு இடையே இருந்த இருவேறுபட்ட இறுக்கமான சூழ்நிலை மக்களிடையே அமைதியின்மையை அதிகப்படுத்தியது [9]. மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரின் வடபகுதியில் இயல்பு நிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  ஆனால் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தென்பகுதியில், வசதிபடைத்த, சலுகை அளிக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான குடிமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது [9]. மறுநாள் மராட்டியர்கள் தங்கள் காலாட்படையை நகர்த்தி போர்ச்க்கீசிய்ர்களைத் தாக்கியவாறு முன்னேறத் துவங்கினர். போர்ச்சுகீசியர்களும் தங்கள் படைகளை ஒருங்கிணைத்து பதிலுக்குத் தாக்கி, மராட்டியர்களின் காலாட்படையை பின் வாங்கச் செய்தனர் [9]. மராட்டியர்கள் மேலும் வேகமாக முன்னேறி இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து குடிமக்களிடம் அவர்கள் விடுதலை அடைந்துவிட்டனர் எனக் கூறுவதில் நேரத்தைச் செலவழித்தனர் [9]. போர்சுக்கீசியர்கள் தங்கள்  பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்த பின்பு குடிமக்களை அவர்கள் வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளை இட்டனர்[9]. வீட்டிற்குள் செல்வதற்குப் பதிலாக குடிமக்கள் போர்ச்சுக்கீசியப் படையை எதிர்த்து கலவரம் செய்யத் தொடங்கியதால் வதாடியோ நகரின் தென்பகுதியின் கட்டுப்பாடு நிலைகுலையத் துவங்கியது [9]. இவ்வாறு போர்ச்சுக்கீசியப் படை கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தை செலுத்திக்  கொண்டிருந்த பொழுது, இரவில் மீண்டும் மராட்டியர்கள் எதிர்பாராவிதமாகத் தாக்கத் தொடங்கினர். விரைவாகவும் தீவிரமாகவும் நிகழ்த்திய தாக்குதலின் முடிவில் மராட்டியர்கள் நகரின் தென்மேற்கில் உள்ள மிகச் சிறிய பகுதிக்குள் போர்ச்சுக்கீசியர்களை ஓரங்கட்டினார்கள் [9].

    ஆல்பர்ட் பின்ட்டோ தனது படையினரை வதாடியோ நகரின் தென்பகுதியில் உள்ள சாலைக்குப் பின்வாங்கச் செய்தார். இதன் மூலம் மறுநாள் காலையில் நகரை முற்றுகை இடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது [9]. போர்ச்சுக்கீசியப் படையினருக்கு வதாடியோ நகரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ‘வாஸ் கோடா காமா’ நகரில் இருந்து புதிய கட்டளைகள் வந்தன [9]. இரு நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் நகருக்குள் செல்லும் விநியோக வழிகளைத் துண்டித்தனர் [9]. அவர்கள் மக்களை நகரெல்லையில் இருந்த வயல்களுக்கும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் எதிர்பாராத முற்றுகை போன்ற சூழ்நிலைக்கு தயாராகாத மக்கள் உணவின்றித் துன்புற்றனர் [9]. நவம்பர் மாத தொடக்கத்தில் மக்கள் வதாடியோ நகரில் இருந்து வெளியேறி போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிபணிந்தனர். அவர்களில் சிலர் துரோகியர்கள் எனக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர்த்து நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப் பட்டவர்களில் பெரும்பாமையோர் கத்தோலிக்கப் போர்சுக்கீசியப் பிரிவினராவார்கள் [9] [11] [16].

    (தொடரும்)

     

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

     

    _____________________________________________

     

     

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

    தேமொழி

    மணிப்புரி நடனம்

    manipuri

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 >>

     

     

     

     

    Share
  • வம்சம்

    தேமொழி

    அரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர்.  ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும் நினைவிற்கு வருபவர்.  அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain – 6 February 1665 – 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.

    – இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி

    – இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்

    – இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி.  இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும் அதிகாரம் இழந்துவிட்டனர்

    – இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul’s Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது

    – அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது; உலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது

    – கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்பும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் “குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் ” (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது

    – வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும்  “குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் ” (Queen Anne style furniture) என்று பெயர் பெற்றன

    – ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது.  அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர்.  அப்போரை அமெரிக்க வரலாறு “குயீன் ஆன்னின் போர்” என்றுதான் குறிப்பிடுகிறது.  அரசியின் நினைவாக “மேரிலாண்ட்” மாநிலத்தில் “குயீன் ஆன் கவுண்டி” (Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர் பெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன

    – இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது.  சிறு வயது முதல் “ஸாரா”  என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார்.  அரச பரம்பரையில் பிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை.  அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார்.  அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார்.  தளபதியும் மிகத் திறமையானவர். பலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார்.  அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர் கணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார்.  பட்டங்களாக அள்ளி வழங்கினார்.  தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால் பயனடைந்தார்கள்.  பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்.  அரசிக்கு கிடைத்த மற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார்.  பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார்.  அரசியை அவமதித்துப் பேசினார்.  அரசிக்கு வந்தது கோபம்.  ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார்.  சாராவின் கணவர் நாட்டிற்காகவும் தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார்.  அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)

    – Cricket is not illegal, for it is a manly game – என்ற பொன்மொழியை உதிர்த்தவர்

    – பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன் கப்பலுக்கு “குயீன் ஆன்னின் சபதம்”  (Queen Anne’s Revenge) என்று பெயர் சூட்டினான்.

    – ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne’s lace) கூட அரசியின் பெயர் உண்டு

    எது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்” வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே.  14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.

    அரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம்.  ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

    அரசி ஆன், ஸ்டூவர்ட் “Stuarts” of England and “Stewarts” of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார்.  பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த சம்பந்தப் பட்ட நோய் (porphyria)  என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார்.  பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த ஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும் இறந்து விட்டிருந்தார்.  இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.

    அரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம், மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார்.  இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.  நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.

    அரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர்.  ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர்.  ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார்.   பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.

    இதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார்.  அவரது பட்டதரசிக்கு குழந்தையில்லை.  ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம் முறைதவறிய வழியில் பிறந்த (illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா ஜேம்ஸ் அரசரானார்.  இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.

    புதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான்.  இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.

    நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும் படையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர் (Glorious Revolution of 1688).  அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன் நிராதரவான தந்தைக்கும் உதவவில்லை.  மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர்.  மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது.  வாரிசற்ற அக்காவிற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும்.  எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார்.   அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார்.  அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார்.  அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.

    220px-Queen_Anne_and_William,_Duke_of_Gloucester_by_studio_of_Sir_Godfrey_Knellerஅரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார்.  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள் இறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின. அதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின் கணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.

    மிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான். அவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது.  1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி கொண்டாடினான்.  உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான்.  சவப்பரிசோதனையில் அவன் மூளையில் நீர்கோர்த்திருந்தது (hydrocephalus)  தெரிய வந்தது.

    தன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும் இழந்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.

    ஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள்.  இதனால் வாரிசற்ற அரசி ஆனுக்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை.  அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.   அவர்களின் தந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட “ஹேநோவர்”  வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி கிடைத்தது.  அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.

    முப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார்.  பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார்.  இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு “கவுட்” (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார்.  சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார்.  அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.

    இங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு.  ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு  ஒரு காரணம்.  அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார்.  தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.

    அறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் (Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ் வகை (Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும்.   இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது.  இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் இந்தக் காரணம் சரியல்ல என்பவரும் உண்டு.  இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது.  ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான்.  அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம். மற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் “லூப்பஸ்” என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus) அதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease).  இதன் விளைவாக அரசியின் கருக்கள் உடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் “பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்” (British Medical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.

    அரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா?  இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை.  தான் தந்தைக்கு இழைத்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என நம்பிய அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டக் கூடும், ஆனால் வாரிசு இன்றி அவர் அல்லலுட்று மனம்  நொந்து உயிர் விட்டது மட்டும் உண்மை.

     

    வேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்
    வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்
    ஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே
    யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
    யார் அறிவார் கண்ணே …….
    — கண்ணதாசன்

     

     

    படம் உதவி:  விக்கிபீடியா

    நன்றி: வகுப்பறை

    Share
  • வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் …

    தேமொழி

     

    “சாந்தி…சாந்தி…இதப்பாரு கதவத் திற… சாந்தீ …”

    என்ன இந்தப்பொண்ணு இப்படி செய்யறா? என்று எண்ணிய ராஜத்திற்குச் சட்டென்று முகம் முழுவதும் சூடாகியது. தலைக்குள் வேகமாக ரத்தம் பாய்வது போன்ற உணர்ச்சி வந்தது. இன்னமும் தனது மருமகள் சாந்தி செய்த செய்கையின் தீவிரம் புரிய ஆரம்பிக்கவில்லை ராஜத்திற்கு. ஒரு உப்புப் பெறாத விவகாரத்திற்கு அந்த விவாதம் தொடங்கியது. உண்மையிலேயே அது உப்புப் பெறாத விவகாரம்தான்.

    சென்ற ஆண்டு அந்த சிறிய ஊரின் கடைத்தெருவில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்த கணவர் வடிவேலு இறந்த பொழுது ராஜத்திற்கு அறுபத்தியிரண்டு வயது. அவர் ராஜத்தைவிட ஐந்து வயது மூத்தவர். சொந்தத் தாய்மாமன்தான். தாயற்ற பிள்ளையாக வளர்ந்த தனது அக்காவின் மகளான ராஜத்தைக் கைபிடித்தார்.

    ராஜத்தின் பள்ளிப் படிப்பு 11ஆம் வகுப்பு வரைதான். பதினாறு வயது ஆனதும் ஊரில் நல்ல சொத்து பத்தோடு இருந்த ராஜத்தின் தந்தை அவளை தனது மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்பொழுதும் வடிவேலுவிடம் இருந்தது அந்த ஒரு மருந்துக்கடைதான். அவருக்குப் பரம்பரையாக வந்த சொத்து அது. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று இறந்த மனைவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வடிவேலுவுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், அருமையாக செல்வச் செழிப்புடன் வளர்த்த தனது மகள் ராஜத்தை தன்னைப்போலவே வடிவேலுவாலும் அருமையாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ராஜத்தின் அப்பாவிற்கு சிறிதும் இல்லை.

    கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தனது மகளுக்கு முதல் குழந்தையாக அவரது பேரன் சந்திரன் பிறந்ததும் ஒரு நல்ல வீடாக வாங்கிக் கொடுத்தார். அதை தனது மருமகன் பேரிலும் எழுதி வைக்கவில்லை, தனது மகள் பேரிலும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு வடிவேலுவின் திறமையிலும் நம்பிக்கை இல்லை, சூட்டிகையாக இல்லை என்று அவர் கணித்திருந்த ராஜத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கணவன் ஏதாவது சிரமம் என்று கேட்டால் யோசிக்காமல் வீட்டை விற்க அனுமதித்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்பது அவர் எண்ணம். எனவே பேரன் பிறந்த கையோடு அவனது பெயரில் ஒரு வீடு வாங்கி எழுதி வைத்தார். பேரன் பெரியவனாகும் வரை யாரும் வீட்டை ஒன்றும் செய்ய முடியாது, பிறகு வளர்ந்து அவன் அம்மாவைக் காப்பாற்றுவான் என்பது அவர் தனது மகளுக்காகச் செய்த எதிர் காலத் திட்டம்.

    ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டுதான் ராஜம் தன் மருமகள் சாந்தியைக் கதவைத் திற என்று கெஞ்சிக் கொண்டிருதார். காலையில் குளித்து முடித்து, முடியைக் கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டு, முருகா என்று கை கூப்பி முருகனுக்கும், அருகிருந்த மறைந்த கணவரின் படத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திருநீரை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சமையலறைக்கு சாப்பிட வந்தார். நீரிழிவு நோய் வேறு படுத்துகிறது. வேளாவேளைக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்கு தலை சுற்றல் வந்துவிடுகிறது.

    ஒரு தட்டில் அடுப்பு மேடையில் இருந்த பாத்திரத்தில் இருந்து மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சட்னியையும் வைத்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். மருமகள் சாந்தி செய்த சமையல் அது. அவள் வாசலில் கீரையோ,காய்கறியோ வாங்கிக் கொண்டு பேரம் பேசும் சப்தம் கேட்டது. இரண்டு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன், சட்னியில் உப்பு இல்லை என்று தெரிந்து முகம் சுழித்தார்.

    பேசாமல் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கீரையுடன் உள்ளே வந்த சாந்தியிடம், “என்ன சாந்தி இது, நீ சட்னிக்கு உப்பு போடலையே”, என்றார். ஏதோ எரிச்சலில் இருந்த சாந்தி, “ஏன் உப்பில்லாவிட்டால் உங்களால் சாப்பிடமுடியாதா?” என்று எகத்தாளமாகக் கேட்டு விட்டுத் தட்டைப் பிடுங்கி பாத்திரம் விளக்கும் இடத்தில் தூக்கிப் போட்டாள்.

    இந்த அவமரியாதையில் அதிர்ச்சி அடைந்த ராஜம் திடுக்கிட்டு, “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு… ” என்று ஆரம்பிக்கவும், இடை மறித்தாள் சாந்தி.

    “எழுந்திரிங்க சொல்றேன்,” என்று அதட்டவும் மெதுவாக, ஒன்றும் புரியாமல் எழுந்தார். “இங்க வாங்க சொல்றேன்” என்று கையைப் பிடித்துத் தர தரவென்று வாசலுக்கு இழுத்துப் போய், “போங்க வெளியே” என்றாள்.

    “யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியே போகச் சொல்றே, இது என் வீடு, எங்க அப்பா எனக்கு கொடுத்த வீடு.”

    “இல்ல, இது என் வீடு, என் வீட்டுக்காரர் பேரில் இருக்கிற வீடு, அனுசரிச்சுப் போகத் தெரியலேன்னா போங்க வெளியே,” என்று சொல்லி ராஜத்தின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினாள். ராஜம் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்து, சாந்தி தள்ளியதில் நிலைத்தடுமாறி விழாமல் கம்பிக் கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாளித்தார்.

    அவர் கையைக் கம்பிக் கதவில் இருந்து விடுவித்து வெளியே தள்ளி, கம்பிக் கதவை மூடித் தாழ்ப்பாளில் ஒரு நவ்தால் பூட்டையும் போட்டு பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு சாந்தி உள்ளே சென்று விட்டாள்.

    கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ராஜம் அழைப்பு மணியை அழுத்தினார். மின்சாரம் இல்லாததால் அது வேலை செய்யவில்லை. அவமான உணர்வுடன் கண்ணில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருடன், “சாந்தி கொஞ்சம் கதவைத் திற” என்று குரலை உயர்த்தாமல் அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். அண்டை அயலில் யார் காதிலும் விழாமல் சாந்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் எப்படி அவளை அழைப்பது.

    கணவர் வடிவேலு உயிருடன் இருந்தவரை நன்றாகத்தான் ஓடியது. பெரியவன் சந்துருவிற்குப் பின், மீண்டும் ஒரு மகன் சங்கர், பிறகு ஆசை ஆசையாய் எதிர் பார்த்தது மாதிரி மகள் தேவி பிறந்தார்கள். அனைவரும் நன்கு படித்தனர். சந்துருவுக்கு  பக்கத்தில் ஐந்து ஊர் தள்ளி இருக்கும் பல்கலையில் பேராசிரியராக வேலை. திங்களன்று தொடர் வண்டி ஏறினால், அங்கேயே தங்கிவிட்டு வார இறுதிக்குத்தான் வீடு வருவான். சின்னவன் சங்கர் கணினி படித்துவிட்டு ஹைத்திராபாத்தில் வேலை, மகள் தேவிக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை அமைந்தது.

    சந்ருவிற்கு சொந்தத்தில் வடிவேலுவின் பலநாள் நண்பர் மகள் சாந்தியையே மணம் முடித்தார்கள். சாந்தியும் தன்னைப் போன்ற தாயில்லாப் பெண் என்பதால் ராஜத்திற்கு அவள் மீது என்றும் பரிவு உண்டு. சாந்தியின் திருமணத்தில் அவளுக்குப் போடுகிறேன் என்று வாக்கு கொடுத்த நகையைப் போட முடியாமல் போனது சாந்தியின் அப்பாவிற்கு. இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகியதில் திருமணத்திற்காக கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக, அடுத்த ஆண்டிற்குள் செய்து விடுகிறேன் என்று கூறித் தனது நெடுநாள் நண்பரிடம் கூனிக் குறுகினார்.

    அதைப் பற்றி இவர்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அடிக்கு மேல் அடியாக அவருக்கு மாரடைப்பு, மருத்துவமனைச் செலவு என்று தொடங்கி சம்பந்தி ஓராண்டிற்குள் உயிரையும் விட்டு விட்டார். சாந்தி குடும்பத்தின் சொத்தினைப் பங்கு போட்டுக் கொண்ட சகோதரர்களிடம் தந்தை தனக்குத் தருவதாகச் சொன்ன நகைகளைக் கொடுத்துவிட்டு பங்கு போட்டுக் கொள்ள சொல்லப் போவதாகச் சொன்னாள் சாந்தி.

    ஆனால் வடிவேலு தடுத்துவிட்டார். உனக்கு இருக்கும் சொந்தமே உன் அண்ணன்கள்தான். அவர்களுக்கேத் தெரிந்திருக்க வேண்டும் அவர்களது கடமையைப் பற்றி. அதை அவர்கள் மதிக்காத பொழுது சொத்து கேட்டு உறவை முறிக்காதே. அவர்கள் வரப் போக உனக்கும் உறவு என ஒருவர் இருக்க வேண்டும். உறவு முக்கியம். யாரும் இனி நகையைப் பற்றியோ சொத்தைப் பற்றியோ சாந்தியிடம் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்.

    அவரது பெருந்தன்மை நினைவுக்கு வந்து கண் கலங்கியது ராஜத்திற்கு. மருமகள் மாதிரியா வைத்திருந்தோம் அவளை என்று எண்ணியவாறு மீண்டும் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். ஆள் அரவமே இல்லை. எவ்வளவு நேரம்தான் வெளிப்படியில் நிற்பது. கால் வலித்தது. வாசல் படியில் அமர்ந்தார். அந்தக் காலத்து வீட்டின் வாசலில் இரு புறமும் இருந்த பெருந்திண்ணைகளை பாதுகாப்பிற்காகவும், இடத்தை உபயோகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் இரும்புக் கிராதி போட்டு அடைத்துக் கம்பிக் கதவுகள் போட்டதில் உட்காரும் இடம் பறிபோய் வாசல் படி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது அவருக்கு இப்பொழுது.

    வெயில் ஏறியது, மணி ஒரு பத்தரை இருக்குமோ என்று எண்ணினார். காலையில் இருந்து ஒரு வாய் காப்பி கூடக் குடிக்காமல் பசி காதை அடைத்தது. கணவர் வடிவேலு இறந்தவுடன் மருந்துக் கடையை சங்கருக்கு என்று குறித்து வைத்து, அதைக் குத்தகைக்கு விட்டு அதன் வருமானம் சின்னவன் சங்கருக்கு அனுப்புவது போல் சொத்து பிரித்தார்கள். பெரியவன் சந்துருவிற்குத் தாத்தா எழுதி வைத்த வீடே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்கள்.

    போன மாதம் கோடை விடுமுறைக்கு மகள் தேவி ஊருக்கு வந்த பொழுது ராஜம், தனக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த நகைகள் அனைத்தையும் அவளுக்குரிய சொத்தின் பங்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டார். அவள் தடுத்துப் பார்த்தாள். தனக்கு இருப்பது இரண்டும் பையன்கள்தான், வெளிநாட்டில் தனக்கும் நகைகள் போட வாய்ப்பில்லை எனவே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்துவிட்டார். தனது கடமை முடிந்தது போன்ற மகிழ்ச்சி அவருக்கு.

    அனால் இதற்குப் பிறகுதான் சாந்தியின் குணம் மாறியது. சாந்தியின் ஒரு பெண்ணும் ஒரு மகனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். சாந்தி தனது மாமியாரின் நகையை தனது மகளுக்குரியதாக நினைத்திருப்பாள் போலும். நேராகவே சண்டைக்கு வந்தாள். “பசங்கள மட்டியும் வச்சிருகிறவங்க, வேணாம், வேணாம்னு சொல்றாங்க, அப்படியும் அள்ளிக் கொடுக்காட்டி என்ன? இங்க கல்யாண வயசில ஒரு பேத்தி இருக்கிறது நினைப்பு இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள்.

    “நீ ஏம்மா அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறே? உனக்கு வேணும்னா உன் வீட்டுக்காரன செஞ்சி கொடுக்கச் சொல்லு. என் பரம்பரை சொத்தை என் பொண்ணுக்குக் கொடுத்தேன், அதில் உனக்கேன் கோபம்?” என்று ராஜமும் பதிலுக்குச் சண்டைக்குப் போனார். இந்தப் பிரச்சனையை வைத்து தினமும் இருவருக்குள் சண்டை வர ஆரம்பித்தது. வார இறுதியில் வீட்டிற்கு வரும் சந்துருவிற்கு இவர்களின் சண்டையைத் தீர்ப்பதற்கே சலிப்பாக இருந்தது. ஏன் வீட்டிற்கு வருகிறோம் என்று வெறுத்துப் போய் “மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று அவனும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான்.

    பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெருந்தேவி, வெய்யிலில் படியில் உட்கார்ந்திருக்கும் ராஜத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு, “தபாலுக்காக காத்திருக்கீங்களா பெரீம்மா, தபால்காரர் மத்தியானம்தான் வருவாரு” என்று அவளாகவே ஒரு காரணமும் கற்பித்து பதிலும் வழங்கிவிட்டுப் போனாள். இதற்கு மேல் மொட்டை வெய்யிலில் வாசல் படியில் உட்கார்ந்திருந்தால் அடுத்தவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று தோன்றியது ராஜத்திற்கு.

    தெருமுனையில் இருக்கும் ராமுத்தம்பி கடைக்கு சென்று மகனை அவன் கைபேசியில் அழைக்கலாம் என்றால் தொலைபேசி எண்ணும் தெரியவில்லை. தொலைபேசியில் ப்ரோக்ராம் செய்த பட்டனை அழுத்தி அழுத்திப் பேசியதில் எண் மனப்பாடம் ஆகாமலே போய் விட்டது. நல்ல வேளை இன்று வெள்ளிக் கிழமை, மகன் வீடு வந்துவிடுவான். மாலையில் அவன் வந்ததும் அவனுடன் வீட்டிற்குள் போய் விடலாம். இனிமேல் சாந்தியுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கொள்ளைப்புற தாழ்வாரத்தில் முடங்கிக் கொள்ளலாம். கயிற்றுக் கட்டில், கிணற்றடி, கழிவறை எல்லாம் வசதியாக இருக்கும். சொந்த வீட்டிலேயே அப்படி பின்னால் அனாதையாகக் கிடந்தால் ஊருக்கு நிலைமை தெரியும் அவமானம் இல்லை. சாந்தி ஒரு வேளை சோறு கொடுத்தாலும் குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்து விட்டு, அரை வயிற்றோடு படுத்துக் கொள்ளலாம்.

    வரட்டும், சாயுங்காலம் சந்துரு வரட்டும். இவ்வளவு நாள் இந்த வீட்டில் சாந்தி என்னை விட்டு வைத்திருந்ததே அந்த நகைக்காகத்தானா? பேரன் பெயரில் வீடு எழுதி வைத்த அப்பாவும் இப்படி நான் நடுத்தெருவில் நிற்பேன் என நினைத்திருக்க மாட்டாரே என்று எண்ணிய ராஜத்திற்குத் தன்னிரக்கத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மகன் வரட்டும், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது அவன் வர. இப்பொழுது மணி என்ன ஒரு பன்னிரண்டு இருக்குமா?

    ராஜத்திற்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அந்தக் காலத்தில் வீட்டின் பின்புறமாக வந்து தோட்டி சுத்தம் செய்யும் ட்ரை லட்ரீன் வைத்த பழைய வீடு. கொல்லைபுறம் நாராசாலையின் கதவு வழியாக அவர்கள் வந்து போக வழி இருக்கும். அதனால் வீட்டின் பின்புறம் போக இக்கால வீடுகள் போல பக்கத்து சந்து இல்லை. ஒவ்வொரு வீட்டுச் சுவரும் அடுத்த வீட்டின் சுவராக பங்கு போட்டு அமைந்த பழங்காலத்து வீடு. காலம் மாறி நவீன கழிவறையாக மாற்றியாகிவிட்டது, அனால் பின்புறம் உள்ள அதை அணுக வீட்டின் உள் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவளுக்கு இது போன்ற தேவைகள் இருக்கும் என்று சாந்திக்குத் தோணாதா? வரட்டும், சந்துரு வரட்டும் என்று மனம் கருவினார்.

    மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். உச்சி வெய்யிலில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிருந்தது . மெதுவாகத் தெருமுனைக்குச் சென்று அங்கிருந்த குட்டிச் சுவருக்குப் பின்புறம், மீண்டும் யாரும் பார்கிறார்களா என்று ஒருமுறைப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டு வந்தார். “ஐயோ என் நிலை இப்படி ஆயிடுச்சே, யார் யாரையோ பழிச்சேனே, என்ன இது ஆடு மாடு மாதிரி தெருவில் ஒதுங்கறாங்களேன்னு கேலி செய்வேனே, நானே அந்த நிலைமைக்கு வந்துட்டேனே, கடவுளே,” என்று மனதிற்குள் புலம்பினார்.

    அங்கிருந்தே வீட்டின் வாசல் படியைப் பார்த்த பொழுது அது உச்சி வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. சாயுங்காலம் சந்துரு வரும் வரை எங்காவது நிழலாகப் போய் உட்காரவேண்டியதுதான் என்று எண்ணியபொழுது, இரண்டு தெரு தள்ளி இருக்கும் வரசித்தி விநாயகர் கோயில் மணியின் ஒலி காற்றில் வந்தது. அங்கு போய் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளலாம், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வரலாம் என எண்ணிக் கோயிலை நோக்கி மெல்லத் தள்ளாடி தள்ளாடி நடந்தார். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

    கோயில் வாசலில் பிச்சை கேட்டவர்களைப் பார்த்த பொழுது விரக்தி சிரிப்பு வந்தது. நானும் இப்பொழுது உங்களைப் போலத்தான் என நினத்துக் கொண்டு உள்ளே சென்றார். யாரோ தங்கள் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ந்து சாமிக்கு சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதாமும் படைத்துவிட்டு அனைவருக்கும் தொன்னையில் அன்னதானம் கொடுத்தார்கள். யாராயிருந்ததாலும் நல்லா இருங்கப்பு, என்று மனதில் வாழ்த்திக்கொண்டு வரிசையில் நின்று சர்க்கரைப் பொங்கலும் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

    நீரிழிவு நோய்க்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆவது என்ற கவலை மின்னலெனத் தோன்றி, அதே வேகத்தில் வயிற்றுப் பசிக்கு முன் இப்படி யோசிப்பது தேவையில்லை என்றும் தோன்றியது. மனதில் இப்படி பிச்சைக்காரி போல தானம் வாங்கிச் சாப்பிடும் நிலைக்கு வந்தது ராஜத்தின் மனதை அறுத்தது. இதே கோயிலில் தனது பேரக் குழந்தைகளின் காதுகுத்திற்கு, கணவரின் நினைவு நாள் என்று தானும் அன்ன தானம் கொடுத்ததது நினைவு வரத் துக்கம் தொண்டையை அடைத்தது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. “நெஞ்சை அடைக்குதா ராஜம்,” என்ற கணவரின் பரிவான குரல் அவர் காதில் கேட்டது. கண்கள் இருண்டது. “ஆமாங்க, நெஞ்சை அடைக்குதுங்க, பாருங்க மாமா, உங்களுக்கப்புறம் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே, பிச்சைக்காரியா, அனாதையா ஆயிட்டேனே” என்று வாய் விட்டுப் புலம்பினார்.

    அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூஜை சாமான் விற்கும் கடைக்காரம்மா, “என்ன தாயீ சொல்ற, நெஞ்சடைக்குதா?” என்ற கேட்டு விட்டு அருகில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பாட்டிலில் நீர் இருப்பதைப் பார்த்து, “ஐயா, இந்தப் பெரியம்மாவுக்கு தொண்டையடைக்குதாம் கொஞ்சம் தண்ணி கொடுங்க,” என்றாள். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிறுவனிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, “கண்ணா, ஓடு. பாட்டிக்கு கொஞ்சம் தண்ணி கொடுப்பா” என்று அனுப்பினார்கள். அவன் “பாட்டி இந்தாங்க” என்று ராஜத்திடம் நீட்டிய பொழுது அவருக்கு மார்பில் சுரீரென்ற வலி ஏற்பட்டு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். நீருக்காக நீட்டிய கை துவண்டு விழுந்தது, பளீரென்று ஒரு ஒளி அவர் கண் முன் தோன்றி மறைந்தது போலிருந்தது ராஜத்திற்கு.

    “ஐயோ, பெரீம்மா இங்கன பாருங்க” என்று சுற்றி இருந்தவர்கள் அவரை உலுக்கி, பிறகு அவரை அடையாளம் கண்டு, அவரை அவரது வீட்டில் சேர்த்த பின்பு; அவர் மறைந்த செய்தி தெரிந்து அரக்கப் பரக்க ஓடி வந்த சந்துருவிடமும், அண்டை, அயலார், உறவினர்களிடம், சாந்தி சொல்லிக் கொண்டிருந்தாள்; “அத்தை மனசு சரியில்லேன்னு கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னாங்க, புண்ணியவதி, கோயில்லேயே சாமி கூட போய் சேர்ந்துட்டாங்க.”

    படம் உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

    Share
  • அவளா? இவளா?

    தேமொழி

     

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு
    பார்த்தாலே தெரியும் உன் மேன்மை
    பரவசமூட்டுவதோ உனது புதுமை
    உனையடைய விழைவதும் உண்மை
    அடைந்தாலோ கிடைத்திடும் பெருமை

    உன் இளமை, உன் வேகம்
    உன் ஆற்றல், உன் விவேகம்
    யாவும் அனைவரும் அறிவர்
    அனைவரின் விருப்பமும் நீயே
    அருகில் நின்று மயக்கும்
    உனை ஒப்பிடுகிறேன்
    தொலைவில் எனக்காகவே
    காத்திருக்கும் எனதன்புடன்

    இளமை இழந்து
    தளர்ந்த உடல்தான்
    புதுமையும் வேகமும்
    உன்போல் இல்லைதான்
    அன்று என் கல்லூரி காலத்தில்
    தொடங்கிய சொந்தம் அது
    இன்றும் என் குழந்களைச் சுமந்து
    பள்ளியில் சேர்க்கும் பந்தம் அது

    விட்டுப் பிரிவேனோ என்று
    எந்நேரத்திலும் தடங்கலின்றி
    நம்பிக்கையுடன் வேலைக்குச்
    செல்லத் தயாராக உதவிடும் பாங்கு
    கடும்பனி, காற்று, வெயில், மழை
    அனைத்திலிருந்தும் கொடுத்த
    அக்கறை நிறைந்த பாதுகாப்பை
    நன்றியுடன் நினைக்கிறது மனம்

    என்றும் எனதன்பை உன்னுடன்
    ஒப்பிடவே முடியாது என்னால்
    பிரிந்துவர நினைக்கவும் இயலாது
    அன்பை நோக்கி விரைகிறது
    எனது கால்கள் வெளியில்
    அழகு காத்திருக்கிறது அங்கே
    சிற்றுந்து விற்பனையாளரின்
    குளிரூட்டிய காட்சி அறையில்

     

     

     

    படம் உதவி:  http://www.graceorlando.com/wp-content/uploads/2013/05/OldCar-NewCarBulletinCover.jpg

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10

    தேமொழி

     

    மாலைகொடு வீரைய்யா!

     

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

     

    கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11                                                   வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 >>

    Share
  • பிக்கோலிம் புளுகு – 4

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

    மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்:


    சப்போரா ஆற்றின் வடகரையில் போர்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, இந்தத் தகராறின் இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வர போர் ஒன்றே உதவும் என்று இருதரப்பினரும் கருதினர் [12].  மராட்டியர்கள் இன்னமும் போர்ச்சுக்கீசியர்கள்  இப்ரம்பூர் நோக்கித் தங்களது படைகளை நகர்த்தி மராட்டிய எல்லையை ஊடுருவ முயற்சிப்பதாக எண்ணினார்கள். போர்ச்சுக்கீசியர்களோ கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒரு பாதுகாப்பான அரணாக உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இதற்கு அவர்கள் கோலாப்பூரையும், கோலாப்பூருக்கு வடக்கில் உள்ள பகுதியையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது  தேவையாயிருக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் போர்ச்சுக்கீசியர்களின் ஒரு திட்டமா அல்லது வெறும் வதந்தியா என்பது சரிவர உறுதியாகத் தெரியவில்லை [12]. பேர்நேம் பகுதியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மராட்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் பேர்நேம் (Pernem) பகுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை இருதரப்பினரும் அறிந்திருந்தார்கள் [11] [13]. மராட்டியர்கள் பேர்நேமை பாதுகாக்கக்  கருதியிருந்த தங்களது ஆரம்பக் காலத் திட்டத்தைக் கைவிட்டு, பிக்கோலிமின் தென்பகுதிக்குத்  தங்கள் படையை நகர்த்தினர் [9].

    பிக்கோலிம் படைகளால் நன்கு பலப்படுத்தப்படா விட்டாலும், மையமாகவும், பான்ஞ்சிம் (Panjim) இல் இருந்து எளிதில் அடையக்கூடிய வழித்தடத்திலும் இருந்தது. மராட்டியர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், வடக்குப் பகுதில் இருந்த நிலவழியாக, பரந்த வயல் வெளிகள் வழியாக, சப்போரா ஆற்றின் தென்பகுதியிலிருந்து பிக்கோலிம்மிற்குள் நுழைந்தனர் [9]. இவ்வாறு மராட்டியர்கள் பிக்கோலிமில் நுழைந்ததை அப்பகுதி வாழ் மக்கள் அறிந்திருக்கவில்லை, இத்தகவல் தெரியவராமல் அவர்கள் ஏமாற்றப்பட்டோ அல்லது மராட்டியப் படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அத்தகவல் மறைத்தோ வைக்கப் பட்டிருந்தது [9].

    ஆகஸ்ட் மாத முடிவில் மராட்டியக் காலாட்படை கன்சர்பால் (Kansarpal) மற்றும் லட்டம்பர்செம் (Latambarcem) நகர்களையும், மற்றொரு சிறிய படை  அருகிருக்கும் ஸல் (Sal) பகுதியையும் தாக்கியது. இந்த இரு ஊர்களும் முக்கியமான இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மையங்களாகும் [9] [15]. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அப்பகுதி அதிக எதிர்ப்பினைக் காட்டவில்லை. அதனால் போரில் மிகக் குறைவான இழப்புகளுடன் அப்பகுதியைக்  கைப்பற்றிய மராட்டியப் படைகள், அதனை மேலும் பலப்படுத்தி தங்கள் படைத்தளமாக மாற்றிக் கொண்டது [9]. சந்தடியின்றி நிகழ்ந்த இந்த மராட்டியப்படையின் ஆக்கிரமிப்பு பிக்கோலிம் நகரில் இருந்த நிகொலு டி  மெல்லோ (Nicolau de Mello) வின் கவனத்திற்கு வர ஒரு வார காலம் ஆனது.  ஆனால் வாஸ்கோடகாமா நகருக்கும், இப்ரம்பூர் மற்றும் அலோர்னா கோட்டைப் பகுதிகளில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகளுக்கும் இத்தகவல் கிடைக்க மேலும் அதிக காலம் ஆனது [9].

    மராட்டியப்படை, தோடமார்க் (Dodamarg) பகுதியில் இருந்து பார்டஸ் (Bardez) ன் எல்லைப் பகுதி  வரை  சென்ற நெடுஞ்சாலையையும், அச்சாலைக்கும் சப்போரா ஆற்றிற்க்கும் இடையே உள்ள அனைத்து இடைப்பட்டப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது [9].  செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், அலோர்னாவின் மேற்குப் பகுதியில் இருந்த பாலம் வழியாக போர்சுக்கீசியப் படையினர் சப்போரா ஆற்றைக் கடந்தனர் [9]. அவர்கள் உளவு பார்த்த பொழுது மராட்டியக் காலாட்படைகள் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரோந்து செய்வது தெரிய வந்தது, இதனால் நள்ளிரவில் போர்ச்சுக்கீசியப் படை ஆற்றைக் கடந்தது. இரவில் நடக்கும் ஆயுதத் தாக்குதல் திறனற்றதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது [9]. ஓசையின்றி முன்னேறிய போர்ச்சுக்கீசியப் படையினர்  கன்சர்பாலுக்கு வடக்கில் இருந்த மராட்டியர்களின் படைத்தளத்தை அதிகாலையில் தாக்கினர். எனினும் இறுதியில் மராட்டியப் படை போர்ச்சுக்கீசியர்களை புடை சூழ்ந்த பொழுது  வேறு வழியின்றி அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர் [9].

    போர்ச்சுக்கீசியர்களின் இந்தத் தோல்வி, போராட்டத்தில் ஒரு மிக முக்கியத் திருப்பமாக மாறியது.  அவர்களுக்கு சாதகமாக இருந்த நிலை பறிபோனதுடன், ஆயுதங்களையும் இழந்தனர். மராட்டியர்களை முன்னர் கோவாவில் இருந்து விரட்டிய படைகளும் அலோர்னா கோட்டையில் இருந்த தங்கள் ஆயுதக் கிடங்கை கைவிட நேர்ந்தது. மராட்டியர்கள் மீண்டும் எல்லைப்பகுதியில் இருந்து மற்றொரு தாக்குதலை மாலிங்கும்  (Maulinguem) மீது நிகழ்த்தினார்கள். அப்பகுதியில் இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அவர்கள் மராட்டியர்களை ஏற்றுக் கொண்டதாலும் மீண்டும் தாக்குதல் சுலபமாக மராட்டியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது [9].

    போர்ச்சுக்கீசியர்கள் பிக்கோலிம், லம்கவோ (Lamgao), முல்கவான் (Mulgaon), வதாடியோ (Vathadeo) மற்றும் மராட்டியப் பேரரசிற்கும் சட்டாரி (Satari) க்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் அவர்களது படைகளை நிலை நிறுத்தினர் [9].  மராட்டியர்களுக்கு பிக்கோலிம் மக்களிடம் இருந்த ஆதரவை நன்கறிந்திருந்த அவர்கள் பிக்கோலிம்மில் இருந்த மராட்டியர்களை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்தனர். போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி, பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்த  ஊர்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் அவை மராட்டியர்கள் வசம் இழக்கப்படும் வாய்ப்பும் குறைவாக இருந்தது [9]. அக்டோபரில் வதாடியோ தக்கப்பட்டபொழுது மீண்டும் போர் துவங்கியது [9].

    (தொடரும்)

    (பின் குறிப்பு: அடுத்து வர இருப்பது வதாடியோ போர் பற்றிய பகுதி, அத்துடன் அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளுக்குப் பின் இக்கட்டுரை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை-  http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

     

    Share
  • ஜினா என்றொரு க்ருயெல்லா

    தேமொழி

    அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை விட்டு அமைதியான வாழ்க்கையை வேண்டி புறநகர்ப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த குடியிருப்புகளில் ஒன்று அது. அப்பகுதியின் மரங்கள் தரும் நிழலும் காற்றும் அந்த வெயில் கொளுத்தும் கோடையின் கசகசப்பில் மிகவும் இதமாக இருந்தது. ஜினா போக வேண்டிய வீட்டினை அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமமாக இல்லை. அவளுக்கு முன்பே அவளது காவல் துறையின் பரிவாரங்கள் அங்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கி விட்டிருந்தனர். வீட்டின் முன் “நுழையத் தடை” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நாடா சுற்றி கட்டப் பட்டிருந்தது. அக்கம் பக்கம் வீடுகளின் வாசலில் ஒரு சிலர் வந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர்.ஜினாவின் கண்கள் மார்ட்டினைத் தேடித் துழாவியது, அவனைக் காணவில்லை.

    ஸ்டியரிங் வீலில் இருந்து எக்கி ரேடியோவை தட்டி, “மார்ட்டின், எங்கே போனாய், போக்குவரத்து அதிகமா? வழியில் மாட்டிக்கொண்டாயா?” என்றாள்.

    “ஆமாம், மாட்டிக்கொண்டேன் சீஃப், ஆனால் போக்குவரத்தில் அல்ல, எஃப்.பி.ஐயிடம் இருந்து ஒரு அவசர வேண்டுகோளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை. எனக்குப் பதில் உங்களுக்கு உதவ வேறு ஆளை அனுப்பியிருக்கிறேன்.”

    “ஏன் அதனை உடனே எனக்குச் சொல்ல என்னக் கேடு? உனக்குப் பதில் யாரை அனுப்பினாய்?” என சிடு சிடுத்தாள் ஜினா. ஜினாவின் சள்ளென்று விழும் முன்கோபம் நகரக் காவல் துறை பணியாளர்களிடம் பிரசித்தி பெற்றது.

    “இது போல உங்களுக்கு கோபம் வரும் என்றுதான் சொல்லவில்லை சீஃப். அதைவிட பதிலுக்கு வந்திருக்கும் ஆளின் பெயர் உங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும், அதனால் தவிர்த்தேன், தேவையானத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ரெக்ஸ் ஏற்கனவே அங்கிருக்கிறான் .”

    “யார்? அந்த டி-ரெக்ஸ் கோமாளியா? அர்த்தமில்லாமல் நகைச்சுவை சொல்லிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அபத்தமாகச் சிரித்துக் கொண்டு…ச்சே…ச்சே… உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லை,உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். அதோ வருகிறான் அறுவைத் திலகம், அப்புறம் பேசுகிறேன் உன்னுடன்,” என்று ஜினா ஒலிவாங்கியை நிறுத்தும் முன் ரேடியோவின் கர..கர..ஒலியின் பின்னணியில் மார்ட்டின் சிரித்துக் கொண்டே “கூல் டவுன், சீஃப்” என்று சொல்வது கேட்டது.

    வண்டியிலிருந்து இறங்கித் தொப்பியை மாட்டிக்கொண்ட ஜினா, தன்னை நோக்கி விரைந்து வந்து “ஹை சீஃப், மார்ட்டினுக்குப் பதில் நான் வந்திருக்கிறேன்,” என்ற ரெக்ஸை தன்னையும் அறியாமல் முறைப்பதைத் தவிர்த்தாள்.

    “சரி ரெக்ஸ், சுருக்கமாகச் சொல்லு”.

     

     

    “அதோ அந்த கிறிஸ்துவ மதம் பரப்பும் போதகர்கள்தான் முதலில் பார்த்து 911ஐ கைபேசியில் அழைத்திருக்கிறார்கள். கூப்பிட்டுப் பார்த்துவிட்டு யாரும் வராததால் முன்கதவில் பிரசுரங்களை செருக முயன்றவுடன் கதவு திறந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாயிருந்திருக்கிறது. அதன் முன் மிஸ்டரும் மிஸ்ஸஸ் ஸ்மித்தும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்குவது போல இருப்பதைப் பார்த்து திரும்ப எண்ணினார்களாம். ஆனால் துர்நாற்றம் வரவும் சந்தேகம் வந்து, உள்ளே சென்று அவர்கள் தோளைத் தொட்டு உலுக்கவும் உடல்கள் சரிந்து விட்டிருக்கிறது. உடனே ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்,” என்று சொல்லிய ரெக்ஸ் நடைபாதையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த, கருப்பு கோட் சூட் அணிந்து, பிரசாரப் பத்திரிக்கைகள் தாங்கிய தோள் பையுடன் நிற்கும் இளைஞர்களைக் காட்டினான்.

    “சரி, நீ அவர்களின் முகவரி போன்றத் தகவல்களை வாங்கிக் கொண்டு, மேலும் விசாரணையை முடித்துக் கொண்டு, அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வா”

    கதவைத் தள்ளிக் கொண்டு ஜினா உள்ளே நுழைந்த பொழுது வீடு அளவுக்கு மீறி குளிரூட்டப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேல் வுயதுள்ள, தளர்ந்த, வெளிறிய, வயோதிக ஸ்மித் தம்பதியினர் இன்னமும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் போல சரிந்து அமர்ந்திருக்க, தொலைக்கட்சியில் ஒரு சோப் ஒப்பரா நிகழ்ச்சியில் இரு பெண்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

    காவல் துறை பணியாளர்கள் வீட்டையும், ஸ்மித் தம்பதியினரையும் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். கைரேகைத் தடயங்களுக்காக பொடி தூவி, தூரிகையால் பல இடங்களை வருடிக்கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சிறு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், கையுறை பெட்டியிலிருந்து உறைகளை உருவி ஜினாவிடம் கொடுத்துக் கொண்டே, “எதையும் மாற்றவில்லை, அசைக்கவில்லை சீஃப் என்றார்.”

    கையுறையை மாட்டிக் கொண்டே, “ஏதும் செக்யூரிட்டி கேமரா, சிஸ்டம் வைத்திருகிறார்களா?” என்றாள் ஜினா.

    “ஊஹூம், இல்லை. இன்னமும் பழைய லாண்ட் லைன் தொலை பேசியை மட்டுமே விரும்பும் வயோதிகர்கள். ஒரு கை பேசியோ, கணினியோ கூட வீட்டில் இல்லை. அவசர அழைப்பிற்கு என்று குளிர்பதனப் பெட்டி மேலே ஒட்டியிருந்த தாளில் கண்டு, அதில் சில தொலை பேசி எண்களைத் துரத்திப் பிடித்தத்தில் இவர்களுக்கு ஒரே மகள், கணவனை இழந்த அவள் பதின்ம வயது மகளுடன் சாக்ரமெண்ட்டோவில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. தகவல் சொல்லியிருக்கிறோம். இனிமேல் கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்கள்.”

    ஸ்மித் தம்பதியினருக்கு எதிரே ஆளுக்கொரு கோக் டின் இருந்தது, துப்பாக்கிக் காயம் போல எதுவும் இல்லை, இரத்தம் சிந்தியிருக்கவில்லை. சோடாவில் நஞ்சு கலந்து குடித்து உயிரை விட்டார்களோ என எண்ணியவாறு வீட்டை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட்டாள் ஜினா. கோக் அருகே கவிழ்த்த ஒரு டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகமும், தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்கள் மற்றொரு பக்கம் இருந்தது. அவை அனைத்தும் தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், பத்திரிக்கை சந்தா, கேசோலின் எனக் கட்ட வேண்டிய தொகைகளுக்காக அனுப்பவேண்டியவை.

    கணப்புக்கு மேலிருந்த திட்டில் இருந்த புகைப் படங்களில் சில குடும்பப் படங்கள், வாழ்த்து அட்டைகள் இருந்தது. மிஸ்டர் ஸ்மித் இராணுவத்தில் பணி புரிந்ததைச் சொல்லும் படங்கள், அவர் பிடித்த பெரிய மீனுடன் ஒரு படம், அக்கால ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்துடன் இளவயதில் மிஸஸ் ஸ்மித், பல் விழுந்த சிரிப்பைக் காட்டும் சிறு வயது மகளைக் கட்டிக் கொண்டு கடற் கரையில், பட்டம் வாங்கிய மகளுடன், பேத்தியுடன் போன்ற வழக்கமான படங்கள். சற்றுத் தள்ளி தொலைகாட்சி பார்த்துக் கொண்டே உடற் பயிற்சி செய்ய ஒரு அசையா மிதிவண்டி இயந்திரம்.

    சமையலறைக் குளிர்ப் பதனப் பெட்டியில் பழங்கள், காய்கள், கோழி என நிறைந்திருந்தது. அதன் கதவில் பேத்தியின் கிறுக்கலான ஓவியம் “ஐ லவ் யு கிரான்மா” என்றது. அத்துடன் அதன் கதவின் மேல் வாங்க வேண்டிய மளிகைப் பட்டியல் ஒன்று. அதில் சோயாப் பால், சர்கரையற்ற, கொழுப்பு குறைந்த பண்டங்களின் பெயர்கள். அதனருகில் தொலைபேசி எண்கள் பட்டியல். டிஷ் வாஷரில் பாத்திரங்கள் காய்ந்து எடுத்து அடுக்கத் தயாராக காத்திருக்க, மிகவும் சுத்தமான சமையலறையாக இருந்தது.

    அருகில் இருந்த சிறிய லாண்டரி அறையில் வாஷிங் மெஷின் காலியாக இருக்க, உலர்த்தும் பெட்டியில் துணிகள் உலர்ந்து மடிக்கக் காத்திருந்தது. சிறிதும் கலையாத படுக்கை அறை. எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் முன் அறைக்கு ஜினா வந்த பொழுது ரெக்ஸ் மற்றவர்களிடம் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.

    “மரணத்திற்கு என்ன காரணம் என்று உனக்கு தோன்றுகிறது ரெக்ஸ்?” என்றால் ஜினா.

    “தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், சீஃப். அவர்களை அந்த அளவுக்கு அவர்கள் பார்த்த நிகழ்ச்சி பாதித்துள்ளது. என்ன நிகழ்ச்சி என்று தெரிந்தால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தை ஷியூ பண்ணலாம். துர்நாற்றம் வருவதால் இறந்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கலாம், சரியான நேரம் தெரிந்தால் என்ன நிகழ்ச்சி என்று கண்டு பிடித்து விடலாம். யாராவது இந்த உயிரிழப்புக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்றான் மோவாயைத் தடவிக் கொண்டு.

    “இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது, ரெக்ஸ். அநேகமாக சென்ற வியாழன் இதே நேரம் இறந்திருக்கிறார்கள்.”

    ரெக்ஸ் ஆச்சரியத்துடன், “அது எப்படி உங்களுக்குத் தெரியும் சீஃப்?” என்றான்.

    “நான் நினைப்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உறுதிப் படுத்த வேண்டும். டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகம் அந்தப் பக்கத்தில் கவிழ்த்து வைக்கப் பட்டிருகிறது, வீட்டில் அனைத்தும் அடுத்த வேலைக்கு… அடுத்த நாளைக்கு எனப் பல வேலைகள் காத்து இருக்கிறது. உடல் நலம் பேணும் உணவாகப் பார்த்துப் பார்த்து வாங்குவதாகவும் தெரிகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள்.”

    “பிறகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், சீஃப்?”

    “அவர்களுக்கும் அந்த நிமிடம் வரை உயிர் விட எண்ணம் இருந்ததாக இந்த வீட்டின் சூழல் காட்டவில்லை.”

    “ஆமாம், திடீரென உயிரை விட எடுத்த முடிவாகத்தான் இருக்கும் சீஃப். மிஸ்டர் ஸ்மித் வெளியில் காரைக் கழுவிக் கொண்டிருந்தவரும் பாதியில் வந்ததாகத்தான் தெரிகிறது. வெளியில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறார். அப்படியானால் வேலை செய்த களைப்புடன் சிறிது ஓய்வெடுக்க, குளிர் பானம் குடிக்க உள்ளே வந்திருக்கிறார். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சி நிரல் பார்த்து விட்டு வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாற்றச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் வாக்கு வாதம் ஆரம்பித்து, சண்டை முற்றிப் போய், இதென்ன வாழ்க்கை என வெறுப்பேறி, விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் இருவரும்.”

    “ஆமாம் நாற்பது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்கள்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் செய்து உயிரை விட முடிவெடுத்தர்களா?” என்ற ஜினாவின் குரலில் எரிச்சல் கலந்த சலிப்பு தெரிந்தது.

    “நாற்பது ஆண்டுகளா, அது உங்களுக்கு எப்படித் தெரியும், சீஃப்?”

    ஜினா கணப்பின் திட்டின் மேலிருந்த வாழ்த்து அட்டையைக் காட்டினாள்.

    “ஸ்மித் காரைக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது யாரோ தெரிந்தவர்கள் வந்திருக்க வேண்டும். வரவேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கெட்ட எண்ணம் உள்ள விருந்தாளி அவர்களைத் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது பானத்தில் நஞ்சு கலந்துவிட்டிருக்கலாம். பிறகு சந்தடி இன்றி தனது பானத்துடன் வெளியேறி இருக்க வேண்டும். கதவினைப் பூட்டாத காரணமும் அதுதான். வீடு அதிகக் குளிராக இருப்பதன் காரணமும் மரணம் நடந்ததது உடனே அனைவருக்கும் தெரியவராமல், உடல் அழிவதை தாமதப் படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே திட்டமிட்ட கொலை, பர்ஸ்ட் டிகிரி மர்டர் என்றால் கொலை செய்த நபர் கைரேகைத் தடயம் எதையும் விட்டுச் செல்ல வழியில்லை.”

    “வாவ், என்ன ஒரு சிறந்த போலீஸ் மூளை”

    “எனக்கு வாவ் சொல்வது இருக்கட்டும் ரெக்ஸ், நான் சொன்ன கோணத்தில் ஏதேனும் லாஜிக் இடிக்கிறதா என்று பார்? மரண அறிக்கை இறந்த நேரம் என்ன வென்று சொல்கிறது என்று பார்ப்போம், பானத்தில் நஞ்சுதான் கலந்திருந்தது என உறுதியாகத் தெரிந்தால், அண்டை வீட்டுக் கார்களிடம் அவர்கள் யாரையாவது பார்த்தார்களா? அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி கேமெரா ஏதும் உண்டா? அதில் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடரலாம். ஸ்மித் மகள் வந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவளையும் விசாரிக்க வேண்டும். சொத்து அவளுக்குப் போகும் என்றால் அவள் கொலை செய்யத் தேவை இராது. உயிலையும் படிக்க வேண்டும். சரி, நீ மற்ற வேலைகளை முடித்து விட்டு வா. இது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்க சரியான காரணம் வேண்டும்,” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஜினா.

    ***

    தொடர்ந்து வந்த அடுத்த வாரம் உள்ளூர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுப்பது, ஒன்றிரண்டு நீதிமன்ற விசாரணைக்கு சாட்சி சொல்ல வேண்டியக் கடமை என ஜினாவிற்கு காலம் ஓடி விட்டது.

    ஸ்மித் கேஸ்ஸின் மரண அறிக்கை பானத்திலும், இறந்தவர்கள் குடலிலும் ஒரே நஞ்சு என்றும், மரண நேரம் குத்துமதிப்பாக ஜினா ஊகித்த நேரம்தான் என்றும் ஆதாரம் கொடுத்தது. இறந்த தம்பதியினர் மகளுக்குப் பெரும்பான்மையான சொத்தையும், அவர்கள் படித்த பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகவும் எழுதி வைத்திருந்தனர். ஸ்மித் தம்பதிகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் இருந்திருக்கக் கூடும் எனவும் மரணஆய்வு அறிக்கை கூறவில்லை.

    கடன் சுமை போன்ற எந்த ஒரு பிச்சுப் பிடுங்கலுமின்றி, நல்ல உடல் நலமுடன் ஓய்வு காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு காரணமும் இல்லாமல் உயிரை விட முடிவெடுப்பர்களா? இந்த மரணத்தை ஓர் ஓப்பன் அண்ட் ஷட் கேஸாக முடிவு செய்ய ஜினாவின் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. ரெக்ஸின் விசாரணையின் மூலம் அக்கம் பக்கம் வசித்த குடும்பங்கள் எந்த வித விபரீத நடவடிக்கையையோ, வேற்று மனிதர்களையோ பார்த்ததாகத் தகவல் கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கிறுக்கன் ரெக்ஸ் சொன்னது போல திடீர் வாக்குவாதம் தற்கொலையில் முடிந்ததா?

    நினைக்கவே அபத்தமாக இருந்தது ஜினாவிற்கு. தொலை பேசியில் பேசிய பொழுது ஸ்மித் தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவர்கள் மகள் அந்த வீட்டில் சிலகாலம் இருக்கப் போவதாகத் தெரிந்தது. எதற்கும் ஒரு நடை போய் அவளுடன் பேசினால் ஏதேனும் தெரியும் என்று ஜினா முடிவெடுத்தாள்.

    ***

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் வண்டியை ஸ்மித் இல்லத்தின் முன் நிறுத்திய பொழுது, நடைபாதையில் ஸ்கேட் போர்ட்டில் பயணித்த பதின்ம வயது சிறுவனொருவன் அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, லாவகமாக எம்பி, ஸ்கேட் பலகை காலிலிருந்து நழுவாமல் சாலையில் குதித்து, சாலையின் குறுக்கே கடந்தான். மீண்டும் எதிர்சாரி நடைபாதையில் எம்பிக் குதித்து இரு வீடுகளுக்கு இடையே மின்சார, எரிவாயு, தண்ணீர் சேவைகளின் பயன்பாடுகளுக்காக இருந்த வெற்றிட சந்தில் ஸ்கேட் செய்து குறுக்கு வழியில் பக்கத்து தெருவிற்குள் சென்று மறைந்தான்.

    ஜினா அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்த வாட்ட சாட்டமான வழுக்கைத் தலை ஆள் வாருங்கள் என வரவேற்று, “என் பெயர் ஜோ, நான் ஸ்மித் மகள் டெய்ஸியின் வருங்காலக் கணவன்,” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கை குலுக்கினான்.

    “அப்படியா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. டெய்ஸியைப் பார்த்து வருத்தம் தெரிவித்துவிட்டு சிறிது தகவலும் சேகரிக்கலாம் என்று வந்தோம். என் பெயர் ஜினா, இந்த ஆஃபிசரின் பெயர் ரெக்ஸ். நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இந்தக் கேஸின் விசாரணையை செய்து வருகிறோம்.”

    “டெய்ஸியும் மகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எந்நேரமும் வந்து விடலாம். நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா?”

    “நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு காலமாக டெய்ஸியுடன் பழக்கம்? உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். சாதாரணமாக அனைவரும் கேட்பது போன்ற கேள்விகள் இவை. போலீஸ் விசாரணை அல்ல.”

    “புரிகிறது”, என சிரித்தான். நானும் சாக்ரமெண்ட்டோவில்தான் இருக்கிறேன். அங்கு டெய்ஸி வீட்டிற்கு சிறிது அருகில் எனது வீடு. நாங்கள், அதாவது நான், டெய்ஸி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த டெய்ஸியின் கணவன்… நாங்கள் யாவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள். என் மனைவியும் இறந்து விட்டாள். எனவே நானும் டெய்ஸியும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று சென்ற மாதம்தான் முடிவு செய்தோம்.”

    “நல்லது, வாழ்த்துக்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே”.

    “ஒ, மன்னிக்கவும், நான் ப்ளம்பிங் பிசினஸ் செய்கிறேன், தேசிய அளவில் பிரான்ச்சைஸ் உள்ள நிறுவனத்தின் சாக்ரமெண்ட்டோ கிளை என்னுடையது. என் நிறுவனத்தில் என்னையும் சேர்த்து பதினோரு பேர் இருக்கிறோம்.”

    ரெக்ஸ் இடை மறித்து, “ஓஹோ, நீங்கள்தான் அந்த “ஜோ தி ப்ளம்பரா”? ஏன் சென்ற தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று கேட்டு தனது நகைச்சுவைக்குத் தானே ஹெஹ்..ஹெஹ்..ஹே..என்று சிரித்தான்.

    ஜோவிற்கு இந்த நகைச்சுவை பிடிக்கவில்லை என்பதை அவன் முக பாவம் காட்டியது. ஜினா இடைமறித்து, “ரெக்ஸ், விளையாடாதே, பீ சீரியஸ். மன்னிக்கவும் மிஸ்டர் ஜோ, ரெக்ஸிற்கு சிறிது விளையாட்டுப் புத்தி. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கூறி ரெக்ஸ்ஸை முறைத்தாள்.

    அவன் அதைக் கவனிக்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டான். அப்பொழுது வாசல் கதவு திறந்து ஷாப்பிங் செய்த பைகளுடன் டெய்ஸி தனது மகளுடன் வந்தாள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

    டெய்ஸி மகளை வாங்கிய சாமான்களை உள்ளே அடுக்கி வைக்க சொன்னாள். ஜோ, சிறுமியிடம் “கொஞ்சம் பொறும்மா நானும் வந்து உதவுகிறேன், முதலில் ஒரு தம்மடித்துவிட்டு வருகிறேன்” என்று அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.

    “மற்றவர்களுக்கு செஹண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங்கினால் விளையும் தீமையைச் செய்ய ஜோவால் முடியாது. எப்பொழுதும் புகைப்பது வெளியே சென்றுதான்,” என்று சொன்ன டெய்ஸியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.

    மேற்கொண்டு நடந்த உரையாடலில் பெரிதாக ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. டெய்ஸி ஜோவை திருமணம் செய்து கொள்வதில் அவளது பெற்றோருக்குச் சிறிதும் விருப்பம் இல்லாததது தெரிந்தது. ஜோவின் சிறு வயது முதலே ஜோவை ஸ்மித் தம்பதியினர் விரும்பியதில்லையாம். அவர்களை சமாதனப் படுத்த டெய்ஸி முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இறந்தும் விட்டார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன வருத்தம் என்பது டெய்ஸிக்கு சிறிதும் புரியவில்லை என்றாள்.

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் ஸ்மித்தின் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, ஸ்கேட் போர்டு சிறுவன் ஒரு கைபேசியில் அவர்களது போலீஸ் வண்டியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

    “ஏய், என்ன செய்கிறாய் நீ? யூட்யூபில் படம் போடுவதற்காக போலீஸ் வண்டியையே படம் எடுக்கிறாயா?” என்று ஜினா அதட்டினாள்.

    “கோபிக்காதீர்கள் சீஃப். பொடியன்தானே, இவன் போலத்தான் நானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் சிறு வயதில் பார்க்கும் போலீஸ்காரர்களுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்வேன்.”

    அதற்குள் ஜினாவிற்கு அழைப்பு வர, அவள் அவர்களை விட்டு விலகிச் சென்று கைபேசியில் பேச ஆரம்பித்தாள். சிறுவன் போலீஸ் வண்டியில் சாய்ந்து கொண்டு, ரெக்ஸின் தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க, ரெக்ஸ் அவனைப் படம் பிடித்தான். பிறகு இருவரும் சேர்ந்து காமெராவை உயரே தூக்கி வைத்து சேர்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரது கைபேசிகளையும் உற்று உற்றுப் பார்த்து விவாதித்துக் கொண்டார்கள்.

    இவற்றை கவனித்துக் கொண்டே ஜினா பேசி முடித்துவிட்டு வண்டியில் ஏறியதும், கார் ஹாரனை எரிச்சலுடன் அழுத்தினாள். ரெக்ஸ் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான்.

    வண்டியை ஓட்டிக் கொண்டே “அது என்ன பைண்ட் சைஸ் பசங்களோடத் தோழமை, என்ன செய்கிறீர்கள் இருவரும்?” என்றாள்.

    “இருவரும் படம் எடுத்துக் கொண்டோம்,சீஃப். அவனுடைய யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய விருப்பம் தெரிவித்து என் கைபேசிக்கு செய்தி வழியே ஒரு சுட்டி அனுப்பச் சொன்னேன்.”

    “ஆமாம், ரொம்ப முக்கியம்,” என்ற ஜினாவின் குரலில் கிண்டல் தொனித்தது.

    அதைப் பொருட்படுத்தாது, “இந்த கேஸில் இப்பொழுது உங்கள் முடிவு என்ன, சீஃப்?” என்றான் ரெக்ஸ்.

    “அந்த ஆள் சரியில்லை.”

    “யார்?”

    “அதுதான் அந்த ஜோ. என்னவோ ஒரு போலித்தன்மை அவனிடம் இருக்கிறது. அவன் அந்தச் சிறுமியிடம் பழகுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவன் பார்வையோ, தொடுதலோ ஏதோ ஒன்று சரியில்லை.”

    “இது அந்த மகளின் அம்மாவிற்குத் தெரியாதா? டெய்ஸிக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு?”

    “அவளுக்குக் காதல் கண்ணை மறைக்கிறது, அவனைப் பற்றி மேலும் தகவல் சேகரி, ரெக்ஸ். ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா? சிறார்களுடன் பழகுவதில் தவறு செய்தவனா? அவன் மனைவி எப்படி இறந்தாள்? நிறையப் பணம் இன்ஷூர் செய்திருந்தானா அவள் மீது? அவனிடம் ஏதோ தப்பு. காரணம் இல்லாமல் ஸ்மித் பெற்றோர் இந்தத் திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஜோவிற்கு இந்தச் சிறுமி மேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும். அது அந்த தாத்தா பாட்டிக்கும் புரிந்திருக்க வேண்டும். பேத்தியைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஜோவை எதிர்த்திருக்கலாம்.”

    “வாவ், இது போலீஸ் மூளையா? இல்லை விமன்ஸ் இன்டியூஷனா?”

    “பெரும்பாலும் நீ இரண்டாவதாகச் சொல்வது.”

    ***

    அடுத்த நாள் ஜினா கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அலவலகத்தில் நுழைந்த பொழுது மார்ட்டின் எதிர்பட்டான்.

    “என்ன சீஃப், சிட்டி ஹாலில் சந்திப்பு எப்படி? நகராட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?”

    “தி பெஸ்ட் லுக்கிங் அட்டர்னி ஜெனெரல் இன் தி கன்ட்ரி, கமலா ஹாரிஸ் நகரக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு வேண்டி நகர மேயர்களிடம் பேசலாம் என எதிர்பார்கிறார். அதற்காக நம் துறை பற்றி சிறிது தகவல் சேகரித்தார்”, என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

    மார்ட்டின் கவலையுடன், “சொன்னால் கோவிக்காதீங்க சீஃப், கொஞ்ச நாள் பழக்கத்திலேயே ரெக்ஸின் தாக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது. அட்டர்னி ஜெனெரல் ஹாரிஸ் பற்றி நீங்களும் இது போல பேசி வெள்ளை மாளிகை போல வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் போலிருக்கிறது.”

    “ஆமாம், உண்மைதான், ரெக்ஸின் தாக்கம் பற்றி நீ சொல்வது கவலையைத் தருகிறது. உன் அக்கறைக்கு நன்றி. நம் துறையின் சென்ற மீட்டிங் மினிட்ஸ் கோப்பை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு என் அறைக்கு வா. நகரத் தலைவருக்கு நம் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு ‘டாக்கிங் பாய்ண்ட்ஸ் மெமோ’ கொடுத்தனுப்பினால் அவருக்கு உதவியாக இருக்கும்.”

    “அதை அவர் எடிட் செய்தால் என்ன செய்வது?” என்று மார்ட்டின் சிரித்தான்.

    “ஏதேது, நீயும் பேசியே வம்பை விலைக்கு வாங்குவாய் போல இருக்கிறது. முதலில் இந்த ரெக்ஸை இங்கிருந்து துரத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் எல்லோருமே அவனைப் போல மாறிவிடுவோம்.”

    ஜினா தனது அறையை அடையும் முன் ரெக்ஸின் மேஜையில் எட்டிப் பார்த்தாள். அவன் யூடியூப் காணொளியில் மூழ்கி இருந்தான். அவனது அரை டிக்கட் நண்பன் ஸ்கேட் வித்தை காண்பிக்கும் படத்தினில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தான்.

    “ஹேய், ரெக்ஸ் வேலை நேரத்தில் காணொளியா பார்க்கிறாய்? இரு உன் பெர்ஃபார்மன்ஸ் ரீவ்வியூவில் தீட்டி விடுகிறேன் உன்னை.”

    “வாங்க சீஃப், அது நடக்கப் போவதில்லை, பதவி உயர்வுக்குத்தான் பரிந்துரை செய்வீர்கள் நான் கண்டுபிடித்ததைச் சொன்னால். இங்கே வந்து பாருங்கள், என்ன தெரிகிறது? படத்தில் பையனைப் பார்க்காதீர்கள் அவன் பின்னால் என்ன நடக்கிறது பாருங்கள்.”

    காணொளியை ரெக்ஸ் ஓடவிட்டான். அதில் அவனது பைண்ட் சைஸ் நண்பன், மரணமடைந்த ஸ்மித் வீட்டருகே வசிப்பவன், ஸ்கேட் போர்டில் வித்தைக் காண்பித்தான், அவனுடன் மேலும் சில சிறுவர்கள் இருந்தார்கள். பின்புறம் உள்ள வீடுகளுக்கிடையே இருந்த ஒரு சந்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். கையில் இருந்த சோடாக் கேனில் இருந்து கொஞ்சம் குடித்தான். பிறகு கால்சராயின் பையைத் துழாவி சாவியை எடுத்து ஒரு வேனின் கதவை திறந்து அதனை ஓட்ட ஆரம்பித்தான். அந்த வண்டி ஸ்கேட் செய்யும் சிறுவர்களை நோக்கி அவர்கள் இருக்கும் திசையில் வந்தது. விளையாடும் சிறுவர்களுக்காக மிக மெதுவாக ஓட்டியதில் வேனின் பதிவு எண்ணும், அது சாக்ரமெண்ட்டோவைச் சேர்ந்த ஒரு ப்ளம்பிங் நிறுவனத்தின் வேன் என்பது அதன் ஒரு பக்கத்தில் எழுதியிருந்த விளம்பர வாக்கியங்களில் இருந்தும், ஓட்டுவது ஜோ எனவும் தெளிவாகத் தெரிந்தது.

    ஜினாவின் கண்களில் ஓடிய மின்னல் போன்ற மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்த ரெக்ஸ், “ஆமாம் சீஃப், நீங்கள் நினைப்பது சரி, என் பைண்ட் சைஸ் பார்ட்னரின் நண்பன் எடுத்த காணொளி இது. அவர்களுடன் பேசி தேதியைச் சரி பார்த்து உறுதி செய்துவிட்டேன். ஸ்மித் மரணநாளில் எடுத்திருகிறார்கள். அந்தப் பாவி ஸ்மித் தெருவில் வண்டியை நிறுத்தி யார் கவனத்தையும் கவருவதைத் தவிர்த்திருக்கிறான். இந்தப் பையனின் தெருவில் நிறுத்திவிட்டு இடைப்பட்ட சந்தில் நுழைந்து காரைக் கழுவிக் கொண்டிருந்த ஸ்மித்துடன் அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவன் மனைவி இருவருக்கும் சந்தேகம் வராமல் அவர்களை வேலை தீர்திருக்கிறான். பிறகு வீட்டை அதிக குளிரூட்டிவிட்டு, கதவை சார்த்திவிட்டு மீண்டும் சந்து வழியாகவே வந்து தனது நிறுவன வேனில் ஏறி சாக்ரமெண்ட்டோவிற்குப் பறந்துவிட்டிருக்கிறான். காணொளி எடுத்த நேரம் துல்லியமாக அதில் பதிவாகிவிட்டது. அவனது கைபேசி நிறுவனத்திடம் பேசி அவனது ஃபோனின் ஜிபிஎஸ் ரெகார்ட் வாங்கி ஒத்துப் பார்த்துவிட்டேன். இரண்டும் கச்சிதமாகப் பொருந்துகிறது. மச்சி வசமாக மாட்டிக்கொண்டான்.”

    “குட் பாய், சூப்பர் வர்க். என் அறைக்கு வா, நீதிபதியிடம் பேசி அரெஸ்ட் வாரண்ட் வாங்குவதைப் பற்றிய அடுத்த நடவடிக்கையினை விவாதிப்போம். கைது செய்து, தனி அறையில் போட்டு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்தால் கக்கிவிடுவான் உண்மையை. லை டிடெக்டர் வழியாகவும் உறுதி செய்து விடலாம்.”

    தனது அறையில் நுழைந்த ஜினாவிற்கு பசித்தது. உணவு நேரம் கடந்துவிட்டது நினைவு வந்தது. வயிற்றைத் தடவிக் கொண்டே தனது உணவுப் பையைக் கவிழ்த்து மேஜை மேல் கொட்டி அதிலிருந்த ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டாள். தனது நீல கால்சராயை முட்டிக்கு மேல் சிறிது இழுத்துவிட்டு மேஜை நுனியில் தொத்தியவாறு உட்கார்ந்தாள். அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரெக்ஸ், தகவல்கள் சேகரித்து அந்தத் தாள்களை ஒரு கோப்பில் அடுக்கி அவளது பார்வைக்குக் காண்பித்தான்.

    அவைகளைப் புரட்டிப் பார்த்தவாறே, “இது போதும் என நினைக்கிறேன் ரெக்ஸ். உன் திறமையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு நீயே இந்தக் கேஸை முன்நடத்திச் செல், உனக்கு பதவி உயர்வு நிச்சயம்” என்றாள் ஜினா புன்னகையுடன்.

    “நன்றி சீஃப்,” என்று கதவை நோக்கி நடந்த ரெக்ஸ், “பார்ட்னர் மார்ட்டின் உங்களைப் பற்றி சொல்வது சரிதான்” என்றான்.

    அப்பொழுது கதவைத் திறந்து ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த மார்ட்டின், “நான் என்ன சொன்னேன் சீஃப்பைப் பற்றி?” என்றான்.

    வாழைப் பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஜினாவும், “வாஷ் ஷி ஷஷ் அபௌஷ் மீ?” என்றாள்.

    “பழகுவதற்குதான் நீங்கள் வெளித்தோற்றத்தில் க்ருயெல்லா போல இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் அத்தனையும் தங்கமானது என்றான்.”

    இதை எதிர்பார்க்காத மார்ட்டினின் முகத்திலும் ஜினாவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஜினா மெள்ளுவதை மறந்தாள். ஆனால் மார்ட்டின் உடனே சுதாரித்துக் கொண்டு “சீஃப், இதோ நீங்கள் கேட்ட கோப்பு” என்று ஜினாவின் மேஜையில் கோப்பை போட்டுவிட்டு, “அடேய் பாவி, நாசமாப் போறவனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று திட்டியவாறு வெளியேறும் ரெக்ஸை நோக்கி ஓடினான்.

    கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ஜினா கைக்கு வாகாக எதுவும் கிடைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப் பழத்தையே அவர்களை நோக்கி விட்டெறிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் வெளியேறி விட, பழம் கதவில் பட்டுத் தரையில் விழுந்தது.

     

    படம் உதவி: http://a57.foxnews.com/global.fncstatic.com/static/managed/img/fn2/feeds/Associated%20Press/
    2013/01/07/660/371/ffdbdd65d9b7e600250f6a706700ac16.jpg?ve=1

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

    தேமொழி

    திமிர் கொண்ட அழகு

    உன் கண்ணில் தெரிவதென்ன
    நெருப்பா?
    என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும்
    குறும்பா?

    உன்
    உதட்டில் இருப்பதென்ன
    சிரிப்பா?
    என்னை அதட்டி அழைக்கும்
    அழைப்பா?

    உன் பேச்சில் சொல்வதென்ன
    இனிப்பா?
    என்னை உனதாக்கச் செய்யும்
    துடிப்பா?

    திமிர் கொண்ட தென்றல் காற்றே….
    உன்னைத் தேடி வந்தால்
    உன்
    புருவத்தில் ஏளனம் ஏற்றி
    என்
    பருவத்தில் தீ வைப்பதேனடி?

    பள்ளி அறை பாடம் நடத்த
    வெள்ளி நிலா தூண்டுதடி!
    ஊதக்காற்றும் ஒத்துழைத்து
    ஒதுங்கசொல்லி கூவுதடி!

    உன் சுட்டு விரல் அசைவு
    என்
    கட்டுப்பாட்டை நொறுக்கும்!
    உன் பட்டுப் பளிங்கு மேனி
    என்னை உள் மூச்சில் வதைக்கும்!

    பஞ்சமின்றி செழித்திருக்கும்
    அஞ்சுகமே!
    பட்டு நிலா வியப்புறும்
    பெட்டகமே!

    பொன்வண்டு அறியாது
    அதனுடைய அழகை…
    உன் கண் கொண்டு
    உற்றுப்பாரடி
    உன்னுடைய பேரழகை!

    வஞ்சனையின்றி வளர்ந்த
    உன் வதனம்!
    அதை
    இந்த மாமனிடம் தாரைவார்க்க
    ஏனடி மெத்தனம்!

    பொத்தி வைத்து ஆவதென்ன
    அந்த
    கன்னிமலை அதிசயம்!
    இனி
    ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
    இது சத்தியம்!

    காமன் கோயில் சாமிக்கு
    நான் யாசிப்பது கேட்கலியா
    தீர்த்து வைக்க தேவிக்கு
    மாமன் மையல் புரியலியா!

    -தனுசு-

     
    ஓவியம்: தேமொழி
    கவிதை: கவிஞர் தனுசு

     

     
    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8>>

    Share
  • பிக்கோலிம் புளுகு – 3

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    இப்ரம்பூர் மோதல்:

    தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

    மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

    மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

    ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

    ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

    தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

    ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

    மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

    மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

    சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

    (தொடரும்)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    Share
  • மை லிட்டில் ரெட் வேகன்

     

    தேமொழி

    மாற்றுடைகளைத் தோளில் போட்டுக்கொண்டு துவாலையும் கையுமாகக் குளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார் பானுமதி. அவரது கணவன் சுந்தர் ஜெயா பிளஸ் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

    செய்திகள் வாசிப்பவர், கட்சியின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாகவும், முதலமைச்சர் அவர் குடும்பத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கியதாகவும், கட்சி அன்பர்கள் பயணம் செய்யும்பொழுது இனிமேல் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார்.

    பேரன் ரவி ஹைசேரில் உட்கார்ந்து அதன் ட்ரேயில் பரப்பியிருந்த ஹனி நட் சீரியோஸ்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மருமகள் கீதா மாடிப்படிக்கு அடியில் உள்ள க்லோசெட்டில் இருந்து சில அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுத்து அவற்றில் உள்ளவற்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

    “இப்போ எதுக்கு இதக் கடை வைக்கிற கீதா?” என்று அவற்றை அருகில் வந்து பார்வையிட்ட வண்ணம் கேட்டார் பானுமதி.

    “ரெண்டு நாள் முன்னால கேன்சர் ரிசெர்ச் செய்யிற நிறுவன ஆளுங்க வந்து பழசை நன்கொடையாக் கேட்டு வாசல்கதவில ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வச்சாங்க அத்தை, இன்னைக்கு அவங்க வண்டில வந்து கொடுக்கிறத சேகரிச்சிட்டுப் போவாங்க. நமக்குத் தேவையில்லாத பொருளையெல்லாம் நடைபாதையில் மூட்டை கட்டிப் போட்டால் எடுத்திட்டுப் போவாங்க.”

    “நல்ல காரியம்தான், நமக்கு உபயோகப்படாதது யாருக்காவது உபயோகமா இருந்தா சரி, இவ்ளோ பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே பணம் கொடுக்காதா? இப்படி பழசு பண்டத்த சேகரிச்சு வித்து, காசாக்கி ஆராய்ச்சி செய்யிற அளவுக்கு மோசமான நிலைமையா?” என்று சொல்லிக் குளியலறை கதவைச் சார்த்திக் கொண்டார் பானுமதி.

    “பிளேன தூக்கிட்டுப் போய் அடுத்த நாட்டோட சண்டைக்குப் போகச் சொல்லு, உடனே செய்வாங்க, அதுக்கு மட்டியும் பணம் எங்கிருந்துதான் வருதோ?” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில் சுந்தர்.

    அதைக் கேட்டுச் சிரித்தவண்ணம், அளவில் சிறியதாகிப் போன மகன், மகளில் உடைகளையும், காலணிகளையும், பொம்மைகளையும் எடுத்து, அவற்றில் சேதம் ஆகாமலும் மிகவும் பழையதாகத் தோற்றமளிக்கதவற்றையும் தேர்ந்தெடுத்து அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கீதா.

    கார் காரேஜின் கதவைத் திறந்து, அதன் வழியாக அப்பெட்டிகளைக் கொண்டு சென்று வீட்டின் முன் உள்ள நடைபாதையில் வைத்தாள். நன்கொடை கேட்ட நிறுவனம் விட்டுச் சென்ற பிங்க் கலர் பையையும் அதன் மேல் அடையாளத்திற்காகக் கட்டி வைத்தாள். குளித்த பின்பு ஈரத் தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்த பானுமதி, “பொம்மையெல்லாம் கூடவா எடுத்துப்பாங்க?” என்றார்.

    “ஓ, எடுத்துப்பாங்களே”

    “அப்ப இதையும் அதோட போட்டுடு,” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல், கார் காரேஜில் கிடந்த அவளது பேத்தி ராதிகாவின் ரெட்வேகனைத் தரதரவென இழுத்துச் சென்று நடை பாதையில் மற்ற பெட்டிகளுக்கருகில் விட்டு விட்டு வந்தார்.

    குழந்தை ரவியை தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த சுந்தர், கீதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பானு என்ன இது? ராதிகா அழாதா? திருப்பி எடுத்திட்டு வா” என்றார்.

    இதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட கீதா, “பரவாயில்லை மாமா, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்திட்டால்ல, காணாமப் போனாக் கொஞ்சம் தேடுவா, அழுவா, அப்புறம் மறந்திடுவா. அப்படியே அழுது அடம் பிடிச்சாலும், அது பழசாயிடுச்சி கிறிஸ்துமஸ் கிஃப்ட்டா வேற வாங்கிக்கலான்னு சொல்லிடலாம்” என்றாள்.

    *

    பானுமதியும் சுந்தரும் கோடையில் அமெரிக்காவின் தட்பவெட்பம் நன்றாக இருக்கும் காலமாகப் பார்த்து மகன் பரணியுடன் அமெரிக்காவில் தங்க வந்திருந்தார்கள். இதோ இன்று நவம்பர் முதல் தேதி, செப்டெம்பரில் துவங்கிய குளிர் வர வர அதிகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் கிளம்பி விடுவார்கள். தீபாவளிக்கு இந்தியாவில் இருப்பார்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

    பானுமதிக்கு உலக மகா எரிச்சல் தருவது பேத்தியின் அந்த ரெட்வேகன் பொம்மைதான். இதெல்லாம் என்ன பொம்மைன்னு நீ வாங்கிக் கொடுத்தே என்று மகனிடம் முடைவார். ராதிகாவிற்கு மிகவும் விருப்பமான பொம்மை அவளது அந்தச் சிவப்பு நிற, சக்கரங்கள் கொண்ட , நீண்ட கைப்பிடியுடன் இருக்கும் ரெட் வேகன்தான். வீட்டிற்குள் அவளது பொம்மைகளை வேகனில் நிரப்பி வைத்திருப்பாள். வெளியில் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அதில் அவளது ‘டெட்டி’ கரடிப் பொம்மையையும், ‘டாமி’ பூனைப் பொம்மையையும், ‘மிக்கி’ மவுஸ் பொம்மையையும், ‘ஸ்னூப்பி’ நாய் பொம்மையையும் வைத்து சவாரி அழைத்துப் போவாள். கடற்கரைக்கு விளையாடப் போனாலும் மணல் வீடு கட்டும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அதில் வைத்துதான் இழுக்கப் பட்டு வரும். தபால் பெட்டியில் இருந்து தபால்களை சேகரித்து வேகனில் வைத்துதான் இழுத்து வருவாள். கடைக்குப் போய் வந்தால், கார் ட்ரங்க்கில் இருந்து சாமான்கள் நிரம்பியப் பைகளை அதில் வைத்து இழுத்து வந்து அப்பாவிற்கு உதவி செய்வாள். ஒரு நாள் தம்பி ரவியை வேகனில் வைத்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் இழுத்து அவள் விளையாடிய பொழுதுதான் எரிச்சல் தாளாமல், கோபம் தலைக்கேறி பானு அவளை அடிக்கவே போய்விட்டார். பிறகு இந்த நாட்டில் இதெல்லாம் செய்தால் கம்பியை எண்ண வேண்டும், வந்த இடத்தில் ஏன் பொல்லாப்பு என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

    “நம்ம ஊர்ல முடமானவங்களத்தான் இந்த மாதிரிதான் வச்சு இழுத்துக்கிட்டுப் போய் பிச்சை கேக்கிறதப் பார்த்திருக்கேன். பார்க்கவே சகிக்கல, முதல்ல புள்ளைய வண்டில இருந்து தூக்கு,” என்று கீதாவிடம் சீறி விழுந்தார்.

    நேற்று அக்டோபர் 31 என்று ‘ஹாலோவின்’ (Halloween) கொண்டாடினார்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள். இருட்டிய பிறகு ராதிகாவும் கோமாளி போல உடை உடுத்திக் கொண்டு, கையில் ஆரஞ்சு வண்ண பிளாஸ்டிக்கில் கோர முக வடிவம் வரைந்த பூசணிக்காய் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் யாராவது சிறுவர்களுடன் துணைக்குப் போகவேண்டும் என்பதால் பரணியும் கிளம்பினான்.

    ஏற்கனவே பேத்தியின் கோமாளி உடையைப் பார்த்து பொருமிக் கொண்டிருந்தார் பானு. நம்மூரில் நவராத்திரிக்கு என்ன அழகாக குழந்தைகளை அலங்கரிப்பார்கள், இங்கே பார்த்தால், கோமாளியாம், பேயாம், பிசாசாம், சூனியக்கரியாம், என்ன ஒரு அலங்காரம்? என்ன ஒரு கேவலமான ரசனை? ச்சே,” என்று திட்டிக் கொண்டிருந்தார். போதாகுறைக்கு மகனும் உடன் கிளம்ப “நீ எங்கே கிளம்புற?” என்று விரட்டினார்.

    “இல்லம்மா, வந்து… நான் துணைக்குப் போகணும்மா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினான் பரணி.

    “அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து வீடு வீடாய்ப் போய் மிட்டாய் பிச்சை வாங்கப் போறீங்களா? நாடு விட்டு நாடு வந்து, அமெரிக்கா வந்து மிட்டாய் பிச்சை எடுக்கணும்ணு தலையெழுத்தா? சரி, சரி என்னவோ செய், நீயாச்சு, உன் பொண்ணாச்சு. ஆனா, இதையெல்லாம் பெருமைன்னு மட்டும் நினைச்சி படம் எடுத்து ஃபேஸ்புக்கில போட்டு என் மானத்த வாங்காத? என்றுத் திட்டி அனுப்பினார். ராதிகா பூசணிக்காய் பாத்திரத்தை வேகனில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றாள். இருக்கட்டும் இந்த பொம்மையை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் மறுவேலை என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். இப்பொழுது அதனை செயலிலும் காட்டி விட்டார்.

    *

    பானுமதியும் சுந்தரும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கம் போல வாக்கிங் சென்றுவரக் கிளம்பி விட்டார்கள். நேரம் பத்து மணிபோல இருக்கும், அப்பொழுது தொலைபேசி வந்தது. கீதா எடுத்துப் பேசினாள், அழைப்பு ராதிகாவின் பள்ளியிலிருந்து. ராதிகா பள்ளியில் வாந்தி எடுத்ததால், பள்ளி நர்ஸ் அவளை உடனே வந்து அழைத்துப் போகச் சொன்னார். கீதா பதட்டத்துடன் பரணியின் கைபேசி எண்ணை அழைத்தாள், வழக்கம் போல பதில் இல்லை. உடனே கூப்பிடுங்கள் என்று செய்தி வைத்தாள்.

    ரவிக்கு அவசர அவசரமாக டயாப்பர் மாற்றி, காரின் பின்னிருக்கையில் குழந்தையின் கார் சீட்டில் பெல்ட் போட்டுக் கட்டி வைத்தாள். அவன் அழ ஆரம்பிக்கவும் அவனது பாசிஃபயரை மறந்து விட்டது நினைவு வந்தது மீண்டும் உள்ளே ஓடினாள். ராதிகாவிற்கு ஏன் இப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்ற குழப்பத்தில் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள முடியாத பரணியின் மீதும் எரிச்சல் வந்தது. அவள் காரை ரிவர்ஸ் கியரில் போட்டு கேரேஜுக்கு வெளியில் கொண்டு வரும்பொழுது பானுவும் சுந்தரும் வீடு திரும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. கீதாவும் குழந்தையும் வெளியில் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து அவர்கள் நடையை எட்டிப் போட்டுக் காரை அடைந்தார்கள்.

    காரணம் தெரிந்தும், ஐயையோ, என்னாச்சு? நாங்களும் வருகிறோம் என்று காரில் ஏறிக் கொண்டார்கள். அந்நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர்களின் கூட்டம் குறைந்து சாலை சிறிது அமைதியாக இருந்தது.

    “காலையில ராதிகா நல்லாத்தானே இருந்தது, பரணி ஸ்கூல்ல விடறப்போ எப்படி இருந்துச்சாம்?”

    “தெரியல அத்தை, அவரோட பேச முடியல,உடனே கூப்பிடச் சொல்லி மெசேஜ் வச்சிருக்கேன்.”

    “எல்லாம், ஹாலோவீன், ஹாலோவீன் அப்படின்னு ஆட்டம் போட்டு, கண்ட கண்ட மிட்டாய படுக்க போறதுக்கு முன்னால கணக்கு வழக்கில்லாம திண்ண வேண்டியது, அப்புறம் உடம்பக் கெடுத்துக்க வேண்டியது, சொன்னா யார் கேக்கிறாங்க, இன்னைக்கு பரணி வீட்டுக்கு வரட்டும், அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.”

    பானு சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்பதால் சுந்தரும் கீதாவும் அமைதியாக இருந்தார்கள்.

    அவர்கள் பள்ளிக்குச் சென்றபொழுது மணி பதினொன்றுதான் என்றாலும், காலை நேர, பகுதி நேர அரைநாள் கிண்டர்கார்ட்டன் வகுப்புகள் முடியும் நேரம் என்பதால் பார்க்கிங் பகுதியில் கார்களுடன் பெற்றோர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் தேடி காரை நிறுத்திவிட்டு, ரவியைக் காரில் பானுவுடனும், சுந்தருடனும் விட்டு விட்டு பிரின்ஸ்பால் அறையை நோக்கி விரைந்தாள் கீதா. சில வகுப்புகளுக்கு மட்டும் மதிய உணவு நேரம் ஆரம்பித்து அந்த மாணவர்கள் கேஃப்டீரியாவிற்கு சென்று கொண்டிடுந்தார்கள்.

    பள்ளி அலுவலகத்தில் ஸ்கூல் நர்ஸ்ஸின் அறைக்கு வழி சொன்னார்கள். கீதா அங்கு சென்றபொழுது ஒரு ஒரமான நாற்காலியில் ராதிகா உட்கார்ந்திருந்தாள். சோர்ந்திருந்தாலும் அவள் சரியான நிலையில் இருப்பதைப் பார்த்து கீதாவின் மனதிற்கு நிம்மதி ஏற்பட்டது.

    அவளை வரவேற்ற நர்ஸ், “ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், எனக்கு அவள் உணவில் சந்தேகம், வேறு வகையான உணவு எதுவும் கொடுத்தீர்களா? அடுத்தவர்கள் கொடுத்த ஹாலோவீன் மிட்டாய்களை நன்குப் பரிசோதித்துவிட்டுத்தானே உண்ண அனுமதித்தீர்கள்? உங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஏதாவது குழந்ததைகளுக்கும் இப்படி ஏதாவது நடந்ததாகத் தெரிந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுங்கள். மிட்டாய்களில் நச்சு கலக்கும் ஏதாவது கிறுக்கர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும். வீட்டிற்கு அழைத்துப் போய் ஓய்வு கொடுங்கள். மீண்டும் வாந்தி எடுத்தால் டாக்டரிடம் அழைத்துப் போங்கள்,” என்று ஆலோசனைக் கூறினார்.

    காரின் பின்னிருக்கையில் ராதிகா பாட்டியின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் கவலை நிறைந்த முகத்துடன் அவளது கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத் தொட்டு காய்ச்சல் ஏதும் அடிக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டிற்குக் காரைக் கிளப்பும் நேரத்தில் பரணியிடம் இருந்து அழைப்பு வந்தது. கீதா அவனுக்கு நிலைமையைச் சொல்லி அவன் வரத் தேவையில்லை, தேவை ஏற்பட்டால் டாக்டரிடமும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாள்.

    காரில் வீடு திரும்பும் பொழுது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வீடு இருக்கும் சாலைக்குக் காரைத் திருப்பிய பொழுது கீதாவிற்குப் பகீரென்றது. நன்கொடை கேட்டவர்கள் இன்னமும் வந்து நடைபாதையில் வைத்திருந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்ளவில்லை. கிளம்பிய அவசரத்தில் அதைப் பற்றிய நினைவே இருந்திருக்கவில்லை. கீதா பின்னால் திரும்பி பானுவிடம் கண்ணால் ரெட் வேகனைக் காட்டி ஜாடை செய்தாள். பானு மடியில் படுத்திருந்த ராதிகா தனது தலையைத் தூக்கிவிடாதவாறு அழுத்திக் கொண்டாள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, எதிரில் வந்த கார் ஒன்று ஒருவீட்டின் காரேஜில் இருந்து சரியாகக் கவனிக்காமல் பின்னோக்கி வந்த காருடன் மோதலைத் தவிர்க்கப் போட்ட சடன் ப்ரேக்கின் ஒலியும், டயர் கிறீச்சிடும் ஒலியும், விபத்தைத் தவிர்த்த கார்காரர் எழுப்பிய எரிச்சல் நிறைந்த கார் ஹாரன் ஒலியும் அவர்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது. ராதிகா தலையைத் தூக்கிப் பார்த்து விட்டாள். அவளது ரெட் வேகன் மற்ற நடைபாதைப் பொருட்களுடன் இருப்பதையும் பார்த்து விட்டாள்.

    “மாம்! ஹவ் குட் யு டூ திஸ்?” என்றவள் கேள்வியை முடிக்கும் முன் அழத் தொடங்கினாள்.

    காரை சாலையில் இருந்து திருப்பி கேரஜில் கொண்டு நிறுத்தும் வரை நிலைகொள்ளாமல் இருந்தவள், கார் நின்றவுடன் கதவைத் திறந்து, குதித்து உடனே நடைபாதையை நோக்கி வேகமாக ஓடினாள். குற்ற உணர்ச்சியுடன் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் அவளைத் தொடர்ந்தார்கள். ஆனால் விரைந்து ஓடிய ராதிகா சடாரென நின்றுவிட்டாள்.

    அழுக்காடை அணிந்து “ஹோம்லெஸ், வில் வொர்க் ஃபார் ஃ புட்” என்று எழுதிய அட்டையைக் கையில் வைத்திருந்த ஒரு வயதான ஆள் ராதிகாவின் ரெட் வேகன் அருகில் நின்றிருந்தார். தோளில் சுமந்திருந்த அவரது உடமைகள் நிறைந்த மூட்டையை ரெட் வேகனில் இறக்கி வைத்து இழுக்க ஆரம்பித்தவர் வேகமாக ஓடி வந்திருந்த ராதிகாவின் காலடி ஓசையால் திரும்பினார். அது அவளது வேகன் என்பது அவருக்குச் சட்டெனப் புரிந்துவிட்டது.

    “சாரி யங் லேடி, ஐ தாட் யு லெஃப்ட் திஸ் வேகன் அஸ் எ டோனஷன், ஃபார்கிவ் மீ. பை தி வே, ஐ ஆம் ஜோயி”

    “நைஸ் டு மீட் யு மிஸ்டர் ஜோயி, நெவெர் மைண்ட். ஐ ஜஸ்ட் காட் ஃபெட் அப் வித் தட் டாய் ஆல்ரெடி. ஐ தின்க் தட்ஸ் வொய் மை மாம் லெப்ஃட் தட் அஸ் எ டொனேஷன் ஃபார் தி குட் வில் பீப்பிள். பட், இஃப் யூ லைக், யூ கேன் ஹேவ் இட்”

    தனது உடமை நிறைந்த மூட்டையை வைத்திருந்த வேகனை இழுத்துக் கொண்டு நகர்ந்த ஜோயி திரும்பிப் பார்த்து, “பை தி வே, சைல்ட், டூ யூ நோ தி மீனிங் ஆஃப் தி சேயிங் …”இட்ஸ் யுவர் லிட்டில் ரெட் வேகன், அண்ட் யூ ஹாவ் டு புல் இட்?”

    “அஃப் கோர்ஸ், ஜோயி, ஐ நோ இட். இட் மீன்ஸ் எவெரி ஒன் மஸ்ட் பி அக்கவுண்ட்டபிள் ஃபார் தேர் ஓன் ஆக்க்ஷன்ஸ்”

    “யூ ஆர் எ ஸ்மார்ட் கிட், தேங்க் யூ, மே காட் ப்ளஸ் யூ மை ஸ்வீட்டி, பை …பை”

    “பை …பை…ஜோயி”

     

     

    படங்கள் உதவி:
    http://www.alabamarealestateinstitute.com/wp-content/uploads/2013/01/Red-Wagon-300×200.jpg
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRs6evCUQbUooOJZKLlQPVzpX_l_10tHjC_W5PYtee6gdkdiIba

    Share
  • பிக்கோலிம் புளுகு – 2

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    Goa at its height under Portuguese occupation: Novas Conquistas (highlighted in yellow), Velhas Conquistas (highlighted in red)

    வரலாற்றுப் பின்னணி:
    வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542 ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].

    இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603 க்கும் 1639 க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்கரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுகீசியர்களால், தங்கள் போர்சுகல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்சுகீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர்  **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].

    டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்றப் பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்க்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].

    மோதலின் பாதையில்:
    மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்சுக்கீசிய தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].

    இந்த தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாக கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்த தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].

    1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடை காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திராததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மாராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
    (தொடரும்)

    படம் உதவி:
    Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG

    Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    **என் குறிப்பு:
    சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.

     

    Share
  • உண்மைக்காதல்

    தேமொழி

    “வேணாம், வேணாம் …சிலிண்டரத் தூக்காத ஆனந்தி. நான் ஸ்டவ எடுத்துக்கிட்டு முன்னால போறேன், நீ பின்னாடியே  உருட்டிகிட்டே வா..என்ன? நேத்துதான் புது கேஸ் சிலிண்டர் போட்டேன் கனமா இருக்கும், பார்த்து உருட்டு”, என்றால் அகிலா.

    “சரிங்கம்மா” என்று எரிவாயு சிலிண்டரை உருட்டியவாறு அடுப்பை எடுத்து முன் செல்லும் அகிலாவைத் தொடர்ந்தாள் ஆனந்தி. வயது ஐம்பதைத் தாண்டிய அவளால் முடியவில்லை என்பது அவள் படும் சிரமத்தில் இருந்து புரிந்தது அகிலாவிற்கு. வேலையை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து அடுப்பைக் கீழே வைக்கப் போனவளுக்கு மகனை உதவிக்குக் கூப்பிடலாமே எனத் தோன்றியது.

    “கொஞ்சம் பொறு ஆனந்தி”, என்று சொல்லிவிட்டு, “அசோக், இங்க கொஞ்சம் வாயேன்” என்று கூவினாள்.

    “என்னம்மா, இதோ இந்த வீட்டுப்பாடம் முடிசிட்டேன்னா நான் விளையாடப் போகலாமில்ல”, என்று அவன் சலித்துக் கொள்ளும் குரல் கேட்டது.

    “கொஞ்சம் வாடா ராஜா, உடனே போய்டுவியாம், வந்து ஆனந்திக்கு உதவி பண்ணு”, என்றாள்.

    தொம் தொம் என்று சத்தமாக அடி எடுத்து வைத்து, முணுமுணுத்தவாறு வந்ததில் அசோக்கின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது.

    “அசோக், நீ சிலண்டர் அடியப் புடி, ஆனந்தி நீ மேல் வலயத்தப் புடிச்சிக்கோ, பார்த்து கால்ல போட்டுக்காத”, என்று அடுக்கடுக்காக ஆனந்தி போட்ட கட்டளைகளுக்கேற்றவாறு செயல்பட்டு அகிலா, ஆனந்தி, அசோக் மூவரும் கேஸ் அடுப்பை ஊர்வலமாக சாப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து தரையில் வைத்தார்கள்.

    அசோக் மீண்டும் ஓடிப் போய் வீட்டுப் பாடத்தைத் தொடர்ந்தான். சாப்பாட்டு அறை மேஜை மேல் புத்தகங்களையும், நோட்டுகளையும் கடை பரப்பியிருந்தான் அவன். அவனது தங்கை, அவனுக்கும் இளையவளான பப்பி என அழைக்கப் படும் பத்மினி மேஜை மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அவளும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள்.

    அடுத்த சில நாட்களில் வரும் தீபாவளிக்காக முறுக்கு சுடும் படலம் தொங்கியிருந்தது. ஆனந்தி உதவிக்கு வந்திருந்தாள். அவள்தான் முதலில் அகிலாவின் வீட்டில் வேலை செய்தாள். பிறகு தனது மகள் சுகந்தி பள்ளிப் படிப்பை முடிந்ததும் அவளைத் துணைக்கு அழைத்து வந்து, பழக்கி விட்ட பின்னர் அவள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். ஆனந்தி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் அவள் கணவருக்கும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி என மூன்று பெண்கள்தான். அம்மாவும் பெண்களும் அவர்களது பெயர்கள், பூ, பொட்டு, உடை உடுத்துவது என எதிலும் வேறுபாடு காட்டாததால் முதலில் பார்ப்போருக்கு அவர்களை கிறிஸ்துவர்கள் எனப் புரிந்து கொள்ள முடியாது.

    அந்த ஊருக்கு மாற்றலாகி வந்தவுடன் அகிலா வேலைக்கு ஆள் தேடிய பொழுது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ரிக்க்ஷாக்காரர் அழைத்து வந்தவள் ஆனந்தி. வேலை, சம்பளம் எல்லாம் பேசி முடிக்கும் பொழுது, ஞாயிறு காலை மட்டும் சர்ச்சுக்குப் போவதால் பத்து மணி போலத்தான் வேலைக்கு தாமதமாக வரமுடியும் என்று ஆனந்தி சொன்ன பொழுதுதான் அவள் கிறிஸ்டியன் என அகிலாவிற்குத் தெரிந்தது. அவளும் ஞாயிறு அன்று தாமதமாக எழுபவள் என்பதால் அதைப் பொருட்படுத்தியதில்லை.

    ஆனந்தியின் பெண்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரிகள். பெரியவள் வசந்தி பட்டம் வாங்கிய பின்பு ஆசிரியை வேலைக்குப் பயிற்சிக்குச் சென்றாள். அங்கு உடன் பயிற்சிக்கு வந்த ஒருவனுடன் காதல் ஏற்பட்டு அவனைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாள். ஆனந்திக்கு ஏனோ அந்தப் பையனின் மூஞ்சும், முழியும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று சொன்னாள். ஆனால், வசந்தி அவனது குழந்தைக்குத் தான் தாயாகப் போவதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்றவுடன் அரண்டு போனவளாகக் கன்னா பின்னா என்று மகளைத் திட்டிவிட்டு “எப்படியோ நாசமாப் போ, ஒழி” என்று ஆசீர்வாதம் செய்து ஒத்துக் கொண்டாள். திருமணமாகி சில நாட்கள் ஆனதும்தான் தெரிந்தது தனது பெற்றோர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற்கு வசந்தி அவ்வாறு பொய் சொல்லி தன் காரியத்தை சாதித்துக் கொண்டது.

    அடுத்தவள் சுகந்தி, இவள் ஒரு செவிட்டூமை. ஆனந்தியின் சோகமே இவள்தான். சிறு வயதில் துறு துறுவென்று ஓடி விளையாடியவளுக்கு ஏதோ காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுக்கையில் கிடந்தது எழுந்த பின்னர், காது கேட்பதும், வாய் பேசமுடிவதும் இயலாது போய் விட்டதாக ஆனந்தி புலம்புவாள். ஆனாலும் அவளும் பள்ளி இறுதி வரை படித்து வந்து விட்டாள். சுகந்தி அந்த ஊனங்களையும் கடந்த மிக மிகப் புத்திசாலி என்பது அவளுடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் தனக்குப் பதிலாக ஆனந்தி தனது மகள் சுகந்தியை வேலைக்கு விட்ட பொழுது அகிலா ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை.

    தனது வீட்டைப் போன்ற ஒரு பாதுகாப்பான வீடு அந்த செவிட்டூமைப் பெண்ணுக்குக் கிடைக்காது என்பதால் ஏற்படும் இடையூறுகளை சமாளித்துக் கொள்ள முடிவு செய்திருந்தாள். சுகந்தியும் எந்த வேலையையும் நறுவிசாகச் செய்து விடுபவள். அதனால் அவளை வேலைக்கு வைத்திருப்பதில் பிரச்சனை வந்தது இல்லை. ஆனந்தியின் கடைசி மகள் ஜெயந்தி இப்பொழுதான் பிளஸ் டூ சேர்ந்திருக்கிறாள், அவளும் படிப்பில் சூட்டிகை.

    அகிலாவின் வீட்டில் சுகந்தியுடன் அதிகம் உரையாடுவது பப்பிதான். சிறுவயது பிள்ளைகளுக்கே உரிய பிறர் குறைகளைப் பொருட்படுத்தாதது, சலிக்காமல் பேசுவது போன்ற குணங்களினால் பப்பி சுகந்தியின் தோழியாகி விட்டாள். சுகந்தி ஏதாவது திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தக் கதையைக் கூட அபிநயத்துடன், விசித்திரமான ஒலியுள்ள ஊமை மொழியில் பப்பிக்குச் சொல்லுவாள். பப்பியும் மேலும் சொல்லு, சொல்லு என்று சைகை செய்து உற்சாகப்படுத்துவாள். அவள் சொல்லும் கதையைக் கேட்டு விழுந்து விழுந்தும் சிரிப்பாள், ஆனால் சுற்றி உள்ளவர்களுத்தான் அவர்களது உரையாடல் ஒன்றுமே புரியாது. அகிலா ஓரளவிற்கு மேலே அவளால் சைகையால் விளக்க முடியாமல் போனால், பேசாமல் சுகந்தியிடம் எழுதிக் காண்பித்துவிடுவாள். நேற்று பப்பியின் துணை கொண்டு சுகந்தியிடம் பேசி, முறுக்கு சுற்ற உதவியாக ஆனந்தியை இன்று வரவழைத்திருக்கிறாள்.

    சமையலறையில் இடம் போதாமல், இது போல சாப்பாட்டு அறைக்கு அனைத்தையும் எடுத்து வந்து பலகாரம் செய்வது அகிலாவின் வழக்கம். அடுப்புக்கு எதிர் எதிராக இரண்டு பலவாக்கட்டைகள் போடப்பட்டு, இருப்புச்சட்டி, ஜல்லிக்கரண்டி, முறுக்குக்கம்பி, முறுக்கு அச்சு, எண்ணையை உறிஞ்ச பழைய செய்தித்தாள் பரப்பிய பெரிய தாம்பாளம், பெரிய பித்தளை செம்படங்கள், எண்ணெய்த் தூக்கு,பிசைந்த மாவு உள்ள பாத்திரம் இவைகளும் கொண்டு வந்து வைக்கப் பட்டது. அகிலாவும் ஆனந்தியும் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டார்கள். இருப்புச்சட்டிக்குப் பின் அமர்ந்து, ஜல்லிக் கரண்டியின் மேல் அச்சால் பிழிந்து முறுக்கு சுற்றி எண்ணெயில் போட வேண்டியது ஆனந்தியின் வேலை, அடுப்பின் முன் இருந்துசுட்ட முறுக்கை கம்பியால் எண்ணெயில் இருந்து எடுத்து, தாம்பாளத்தில் எண்ணெய்யை வடியவிட்ட பின்பு, செம்படத்தில் அடுக்க வேண்டியது அகிலாவின் பொறுப்பு.

    இருவரும் ஊர்க்கதைகளைப் பேசியபடி முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். அசோக் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டு தெருவில் மற்ற பசங்களுடன் கிரிக்கெட் விளையாட ஓடிவிட்டான். பப்பி இன்னமும் வீட்டுப்பாடத்தை முடித்தபாடில்லை. சுகந்தி வீடு கூட்ட விளக்குமாறுடன் வந்து, முன்னறையில் இருந்து கூட்டத் துவங்கினாள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருந்த அகிலாவை இடைமறித்துக் கணக்குப் பாடத்தில் உதவச் சொன்னாள் பப்பி.

    “அம்மா வேலையா இருக்கேன் பப்பிம்மா, அசோக் வந்ததும் கேளு, சொல்லிக் கொடுப்பான்”.

    “நீங்க எங்க வேலையா இருக்கீங்க, பேசிக்கிட்டுத்தானே இருக்கீங்க, சுகந்தி அம்மாவ பார்த்துக்கச் சொல்லிட்டு இங்க வந்து எனக்குச் சொல்லிக் கொடுங்க”

    “பப்பிம்மா, சொல்றதக் கேளுடா …” என்று அகிலா சொல்லிக்கொண்டிருந்த பொழுது அசோக் தட தட வென உள்ளே ஓடிவந்தான். “அசோக், பப்பிக்குக் கொஞ்சம் கணக்கு சொல்லிக் கொடுப்பா,” என்றாள் அகிலா.

    வேகமாக தனது அறைக்கு ஓடி ஒரு பந்தை எடுத்து வந்த அசோக், “போங்கம்மா, இப்ப முடியாது, பந்து காணாப் போச்சுன்னு வேற பந்து எடுக்க வந்தேன், விளையாடி முடிச்சிட்டு வந்து சொல்லித்தரேன்,” என்று சொல்லியவாறே பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டான். பப்பிக்கு கோபம் வந்து தனது அருகில் இருத்த பென்சில் டப்பாவை எடுத்து அவன் போன திசையைப் பார்த்து விட்டெறிந்தாள்.

    “வர வர இந்தப் பொண்ணு அதோட அப்பாகொடுக்கிற செல்லத்தில ஆட்டமா ஆடுது, அடி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு, என்ன பழக்கம் இது பத்மினி”, என்று சீறினாள் அகிலா.

    பப்பி உர் என்று முகத்தை வைத்துக் கொண்டாள். இதுவரை நடந்தது எதுவும் காதில் விழாததால் விச்சிராந்தியாகத் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி, பென்சில் டப்பா அவள் முன் வந்து விழவும், துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு, டப்பாவில் இருந்து சிதறியவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்து பப்பியிடம் கொடுத்தாள். பப்பியின் கோபத்திற்குச் சைகையால் காரணம் கேட்டாள். பப்பி வீட்டுப் பாடத்தைக் காட்டி விளக்கினாள். சுகந்தி பப்பியிடம் ஒரு தாளும் பென்சிலும் சைகையால் கேட்டாள். பப்பி கிழித்தது தெரியாது இருக்குமாறு, நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்தை ஒரு குயர் நோட்டில் இருந்து கிழித்துக் கொடுக்க, சுகந்தி அதில் எழுதி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

    “எதுவானாலும் சுகந்திய நீ படிக்க வச்சிட்ட ஆனந்தி, இல்லாட்டி …” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவாறே திரும்பிய அகிலா, ஆனந்தி கண்களில் வழிந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வதைப் பார்த்ததும் நிறுத்தினாள்.

    “என்னாம்மா செய்யிறது, ரொம்ப புத்திசாலிப் பொண்ணும்மா. மேலே படிக்க வச்சாலும் நல்லாப் படிக்கும். இந்தக் குறை இல்லாட்டி டியூஷன் வேலயப் பாத்தே பொழச்சிக்கும். படிச்சிருந்தும் இப்ப படிக்காத என்ன மாதிரி வீட்டு வேலைய செய்யுது. எங்களுக்கு அப்புறம் இதுக்கு யார் துணை. நினச்சாலே அடிவயிறு கலங்குது. இந்தக் குறையோட இதுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நெனச்சி கூடப் பாக்க முடியுமா? இது சபிக்கப்பட்ட பொண்ணும்மா” என்ற ஆனந்தியின் குரல் தழு தழுத்திருந்தது.

    *

    ஆனால் யாரும் எதிர் பாராததும் நடந்தது, அது காலத்தின் கோலம். ஒரு நாள் பப்பியும் சுகந்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பப்பி உற்சாகத்தில் கூச்சலிட்டாள்.

    “அம்மா, அம்மா சுகந்திக்கு கல்யாணமாம்”.

    “நல்லா கேளு, அவளுக்குக் கல்யாணமா? இல்லை ஏதாவது கல்யாணத்திற்குப் போக லீவு வேணும்கிறாளா?”

    “இல்லம்மா, சுகந்திக்குத்தான் கல்யாணமாம்”.

    “என்னது? உண்மையாவா!!!!” என்று கேட்டவாறு வந்த அகிலா “உன் மாப்பிள்ளையின் பேர் என்ன?” என்று கழுத்தில் தாலி கட்டுவது போல சைகை செய்து கேட்டாள்.

    சுகந்தி ஒரு தாளில் எழுதினாள். சண்முக சுந்தரம்.

    “இது என்ன இந்துப் பெயரா இருக்கு? பப்பிம்மா இந்த சுகந்தி ஏதோ உளறுதுன்னு நினைக்கிறேன், அவங்க அம்மாவ சாயங்காலம் அழச்சிட்டு வரச் சொல்லு நான் பேசிக்கிறேன்”.

    *

    சாயங்காலம் வந்த ஆனந்தியின் வாயெல்லாம் பல். “கடவுளுக்கு சோஸ்திரம் அம்மா, இந்தப் பொண்ணு அதிர்ஷ்டக்காரிதான் போல. இவளையும் கட்டிக்கிடணும்னு ஒருத்தன் துடியாத் துடிக்கிறான், என்னால நம்பவே முடியல்ல”

    “விவரமா சொல்லு, மாப்பிள்ளை பேரு சண்முக சுந்தரம்னு சொல்லிச்சு, என்ன நடக்குது, ஏதாவது கிழவனா? ரெண்டாம் தாரமா கட்டிக் குடுக்கிறியா?”

    “இல்லம்மா, பையன் சின்ன வயசுதான். ஹைஸ்கூல் முடிச்சிருக்காப்ல, ஏதொ ஏஜென்சில வேலையாம். அநாதைப் பையன். சொந்த பந்தம் இல்லையாம். தனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்மின்னு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கவும் விருப்பமாம்.”

    “எங்க புடிச்ச இந்த மாப்பிள்ளைய?”

    “அட, நீங்க வேறம்மா, நான் எங்கன புடிச்சேன்? காதல் கல்யாணம் அம்மா”.

    “இரு, இரு, என்ன சொல்ற நீ? சுகந்தி காதலிச்சுதா? என்னென்னு பேசி அந்த ஆளுக்கு இது மனசப் புரிய வச்சிது? பதினைஞ்சு வருஷமாவுது கல்யாணமாகி, இன்னமும் பப்பி அப்பாவுக்கு நான் சொல்றது எதுவும் புரியற மாதிரி தெரியல்லியே? நம்பவே முடியல்ல ஆனந்தி.”

    “ஆமாம்மா, எங்களாலேயும் நம்ப முடியல்ல, ஒரு நாள் தெருவில அந்தப் பையன் சைக்கிள ஒரு கையில் புடிச்சிகிட்டு சுகந்தி கூட பேசினதைப் பார்த்தேன். இதுவும் கையைக் கையை ஆட்டி ஏதோ சொல்லிச்சு. யாரோ ஏதோ அட்ரெஸ் கேக்கிறாங்களோ? பேச முடியாத இவளப் போய் கேக்கிறாங்களே? கேலி செய்யறாங்களான்னு நெனச்சி எனக்குக் கோவம் கூட வந்திச்சு. அப்புறம் அந்தப் பையனே வீட்டுக்கு வந்து விவரமா பேசி கல்யாணம் செய்து தரச் சொல்லிச்சு அம்மா”.

    “ஆமா, எப்ப கல்யாணம்? எதுக்கும் கவனமா பையனப் பத்தி நிறைய விசாரிச்சிடு ஆனந்தி, நாளைத் தள்ளிப் போடாத, பொறாமையில அடுத்தவங்க அந்தப் பையன் மனச மாத்துறதுக்கு முன்னால கல்யாணத்த சுருக்க முடிச்சிடு.”

    “சரிங்கம்மா.”

    அடுத்த சில நாட்களில் பப்பியின் விருப்பப்படி, வெள்ளைப் பட்டில் சிவப்பு சரிகைக்கரை போட்ட கல்யாணப் புடவையை பரிசாக சுகந்திக்கு வாங்கிக் கொடுத்து, சர்ச்சில் கல்யாணத்திற்கும் சென்று வந்தார்கள். சண்முக சுந்தரம் மதம் மாறி, அருள் பிரகாசம் என்ற புதுப் பெயருடன் சுகந்தியை மணந்து கொண்டான். பார்க்க வாட்ட சாட்டமாக, களையாக இருந்தான். நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும், நல்லக் களையுடன் இருக்கும் ஒருவன், சல்லிக்காசு வாங்காமல், அவளுக்காக மதம் மாறி, செவிட்டூமையான சுகந்தியைக் கைபிடித்ததுடன், காதல் மனைவியின் வீட்டிலேயே மகன் இல்லாதக் குறை நீங்க வீட்டோடு மருமகனாக இருக்க சம்மதித்தான் என்ற செய்தியே அனைவருக்கும் வியப்பாக இருந்தது. சிலர் உண்மைக்காதல் இதுவல்லவா என்றார்கள். சிலர் இவன் சரியான கிறுக்கன் போலிருக்கிறது என்றார்கள். ஆனால் அனைவரும் வியந்தது பாராட்டியது இப்படி ஒரு மாப்பிள்ளையைப் பிடித்த சுகந்தியையும், அவளது அதிர்ஷ்டத்தையும்தான். போதாக் குறைக்கு அவள் கர்ப்பமானவுடன், நீ வேலை செய்தது போதும் எனச் சொல்லி அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, ஒரு தையல் கடையும் ஆரம்பித்துக் கொடுத்தான். ஆனந்தி புது ஆளை அகிலாவின் வீட்டுவேலைக்குப் பேசிச் சேர்த்து விட்டாள்.

    *
    ஒரு நாள் அகிலா வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள். “சவுக்கியமா இருக்கீங்களா அம்மா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள்.

    “அடடே!!! ஆனந்தியா? வா… வா..வா…பூக்காரரே இன்னும் ரெண்டு முழம் மல்லிப்பூ கொடுங்க” என்று வாங்கி அதை ஆனந்தியின் கையில் கொடுத்து, “சுகந்திட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு, உன் மாப்பிளை எப்படி இருக்கார்? சுகந்திக்கு எப்போ பிரசவம்? நீ எப்படி இருக்க? நீ வீட்டு வேலைய நிறுத்திட்டு ஸ்கூல் புள்ளைங்களுக்கு சாப்பாடு கொண்டு போற பிசினஸ் பண்றதா இப்போ இங்க வீட்டில வேலை பாக்கிற அம்மா சொன்னிச்சு. எப்படி இருக்கு பிசினெஸ்?”

    “ஆமாம் அம்மா, அதுக்குதான் நானும் வந்தேன், நம்ம பப்பிம்மாவுக்கும், அசோக்குக்கும் நானு சாப்பாடு கொண்டு போய் குடுக்கட்டுங்களா?”

    “நல்ல யோசனைதான், நாளைக்கு வாயேன், புள்ளைங்களையும் அவரையும் கேட்டுட்டு சொல்றேன். உன் கடைசிப் பொண்ணு ஜெயந்தி எப்படி இருக்கு? எப்படிப் படிக்குது? அதுக்கும் நீதான் சாப்பாடு கொண்டு போறியா?”

    “இல்லம்மா, ஜெயந்தி ஊரில இல்ல, நாகர்கோயில்ல என் அக்கா வீட்டில தங்கிப் படிக்குது?”

    “ஏன்? என்னாச்சு? எதுக்கு அங்க விட்டு வச்சிருக்க?”

    “மாப்பிள்ளை, அந்த நாசமாப் போற சுகந்தி புருஷன், ஜெயந்தியையும் எனக்கே கட்டி வைங்க, உங்க செவிட்டூமை பொண்ணுக்கு வாழ்வு கொடுதிருக்கேன்ல? உங்க சின்ன பொண்ணையும் எனக்குக் கட்டி வச்சா என்னக் கேடு? அப்படின்னு தெனம் தெனமும் ஒரே ரப்ச்சரும்மா. வயசு வந்தப் பொண்ண அந்தப் படுபாவிக் கண்ணில இருந்து காப்பாத்துரத்துக்கோசரம் ஊர்ல அவ பெரியம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, போய் ஒத்தாசை செய்யப் போறான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டேன்.”

     

    படம் உதவி: http://1.bp.blogspot.com/-xmI9RPSXGWk/UCJ4ximJnII/AAAAAAAAC_o/Br4-Dxu7mqw/s1600/Love-wallpaper-love-4187609-1920-1200.jpg

     

    Share
  • பிக்கோலிம் புளுகு – 1

     

    தேமொழி

     

    முன்னுரை:

    வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (http://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).

    விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

    பிக்கோலிம் புளுகு:

    பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

    (தொடரும்)

    ______________________________________
    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051

    Share
  • மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு

    தேமொழி

    உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி வாழும் பிற உயிரினங்கள் போல அல்லாது, சூழ்நிலையை ஒரளவுக்கு தங்கள் வாழ்விற்கு ஏற்றவாறு மாற்றும் திறன் கொண்டது மனித இனம்.

    இந்த மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பும் பொழுதோ பெரிதும் உதவுவது பெண்கள்தான். பெண்களின் மரபணுவின் அடிப்படையிலான பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக் கால வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் அறிய விரும்பும் பொழுது உபயோகப் படுத்தப் படுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியைவிட, ‘ஆணித்தரமான அறுதியிட்டுக் கூற உதவுவது’ பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே. இதற்கு உதவுவது பெண்களின் உடல் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ (mtDNA) ஆகும். மைட்டோகாண்ட்ரியாவினை ஆண் பெண் இருபாலரும் கொண்டிருகிறார்கள். இருந்தாலும் ஏன் பெண்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ மட்டுமே பரம்பரை வழி ஆராய்சிகளில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது என்பதனையும், செல்லில் உள்ள நியூகிலியஸின் டி.என்.ஏ வைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ எந்த அடிப்படையில் பரம்பரை வழி ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
    [மைட்டோகாண்ட்ரியா (mitochondria) தமிழில் “இழைமணி” அல்லது “இழைத்தணுக்கு” என குறிப்பிடப்பட்டாலும், பரவலாக மைட்டோகாண்ட்ரியா என்றே அறியப்பட்டுள்ளதால் இக்கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா என்றே குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே தமிழில் ‘ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்’ என வழங்கப்படும் (Deoxyribonucleic acid – DNA) டி.என்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காரணத்தின் அடிப்படையில் மற்றும் சில அறிவியல் பதங்களும் தமிழ்ப் பதங்களாகக்  கொடுக்கப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளது, எனவே வாசகர்கள் மன்னிக்கவும்.]

    மனித குல வரலாறு:
    பரிணாம வளர்ச்சி (evolution) ஆராய்ச்சிகளும், படிம (fossil) ஆராய்ச்சிகளும் உலகின் முதல் நாகரீக வளர்ச்சி அடைந்த ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்னும் மனித இனம் தோன்றியது ஆஃப்ரிக்காவின் ‘எதியோப்பியா’ (Ethiopia) பகுதியில் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு எனத் தெரிவிக்கிறது. பிறகு, அங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம், சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரவ எத்தனித்தது. இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் சுற்றுப் புறச் சூழலில் ஏற்பட்ட வாழ முடியாத சில மாறுதல்களாக இருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அக்காலத்தில் மக்கட் தொகை 10,000 ஆகவும் குறைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. உலகில் ஏற்பட்டக் கடுங் குளிர் காலமும், உறைபனி காலமும் (ice age) மனித குலத்தின் இந்தப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்டு, இந்தப் பரவல் ‘ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியற்றம்’ (‘Out-of-Africa’ theory) என்ற கோட்பாடாக விளக்கப் படுகிறது. இது நிகழ்ந்தது ‘ப்ளிஸ்டோஸின்’ காலத்தின் இறுதியில் (Late Pleistocene Era). இந்த மனிதகுலப் பரவலை மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA)வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்பட்டுள்ளது.

    மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA) என்பது என்ன?
    செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்காருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. இது ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mtDNA) என அழைக்கப் படுகிறது.

    ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. நகல்கள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில்அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

    ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து பெறப்பட்டது. அத்தாய்க்கு கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து வந்தது. இவ்வாறு தாய் வழியாகாவேப் பெறப்படுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.

    இனப்பெருக்கத்தின் பொழுது, ஆண்விந்துவும் (sperm), பெண் முட்டையும் (egg), இணைந்து கருமுட்டை (zygote) உருவாகிறது. தலைப்பிரட்டை (tadpole) வடிவில் உள்ள ஆண் விந்து முட்டையை நோக்கி நீந்துவதற்கு அதன் வால் உதவுகிறது. விந்துவின் இந்த வால் பகுதி, நீந்த சக்தியைக் கொடுக்கும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. முட்டையை அடைந்து விந்துவின் நியூகிலியசைக் கொண்ட தலைப்பாகம் உள் நுழைகிறது. காரியம் முடிந்தவுடன் தேவையட்ற விந்துவின் வால் பகுதி கழற்றி விடப் படுகிறது. அத்துடன் வால் பகுதியில் இருந்த (தந்தை வழியாகப் பெறப் பட வேண்டிய) மைட்டோகாண்ட்ரியாவும், அதிலுள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வும் கரு முட்டையில் இடம் பெறாமல் போய் விடுகிறது. இதனால் ஆணின் சைடோப்லாஸத்தில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது சந்ததியின் செல்களில் இடம் பெறுவதில்லை. சந்ததிகளில் செல்களில் தாயின் வழி வந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மட்டுமே இருக்கும்.



    நியூகிலியஸின் டி.என்.ஏ. போல அல்லாது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாய்வழி மரபு மட்டும் என மாறுபட்டிருப்பதன் காரணம் இதுதான். மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாயிடம் இருந்து சந்ததிகளுக்குச் செல்கிறது, ஆண் பெறுவது தாயின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ., ஆனால் இதனை ஆணால் தனது சந்ததிகளுக்குத் தர இயலாது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பெண்களின் வழியாகவே ஒவ்வொரு சந்ததியையும் சென்றடைகிறது.

    தாய்வழிப் பாரம்பரியத்தை அறிதலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.” வின் பங்கு:
    பொதுவாக இனப்பெருக்கத்தின் பொழுது தாயின் பாதி மரபணுக்களும், தந்தையின் பாதி மரபணுக்களும் ஒன்றாகக் கலப்படையும். ‘ஜான் கிரிகர் மெண்டல்’ (Johann Gregor Mendel) இதனை விளக்கியதால் இந்தக் கலப்பு முறை ‘மெண்டலியன் கலப்பு’ என விளக்கப் படுகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இது போன்ற எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப் படுத்தப் படுகிறது.

    காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப் படுகிறது. இவ்வாறு மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஃ ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.

    மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட முதுதாய் ‘மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்’ (Mitochondrial Eve) எனப் பெயரிடப்பட்டுள்ளாள். இந்த ஏவாள் இப்பொழுது வாழும் மனிதர்களுக்கான தாயாகக் கண்டறியப்பட்டவள் (most recent common ancestor – MRCA). இது போலவே ஆணின் Y- குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுபிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட முது தந்தை ‘ஒய் குரோமொசோமல் ஆதாம்’ ( Y-chromosomal Adam) எனவும் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் முன்னொரு காலத்தில் ஃஆப்ரிக்காவில் வாழ்ந்த நமது பொது மூதாதையர்கள் (common ancestor) ஆவார்கள்.

    இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப் பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப் பட்டுள்ளது. நமது முது பெற்றோர்களின் ஹாப்லோக்ரூப் L. இந்த ஆதிகால மனிதர்களில் இருந்து மாறுபாடுகள் ஏற்பட்டு L0, L1, L2, L3, M, N, R எனப் பல குலங்கள் தோன்றி உலகம் முழுவதும் மனித இனத்தினர் பரவினர். இந்தக் குலப் பிரிவுகளையும் அவர்கள் பரவிய விதத்தையும் கொடுக்கப் பட்டுள்ள படங்களின் மூலம் அறியலாம். பெரிய ஹாப்லோக்ரூப் (macro-haplogroup) என இப்பிரிவுகள் அழைக்கப் பகுகின்ற. இப்ரிவுகளில் ஏற்படும் உப பிரிவுகள் ‘உப ஹாப்லோக்ரூப்’ (sub haplogroup) என அழைக்கப் படுகின்றன.

    இந்தியாவின் மனித குலப்பிரிவுகள்:

    இந்தியாவில் அல்லது தெற்காசியப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும், அதாவது 60% த்தினர் M ஹாப்லோக்ரூப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “ஏவாள்” > L1/L0 > L2 > L3 > M என்ற முறையில் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள். L3 ஹாப்லோக்ரூப் பிரிவிலிருந்து தோன்றியவர்கள் ஹாப்லோக்ரூப் M மற்றும் N குழுக்கள். M ஹாப்லோக்ரூப் பிரிவினத்தவரைத் தவிர N ஹாப்லோக்ரூப், மற்றும் அந்த N ஹாப்லோக்ரூப் வழித் தோன்றல்களாகிய R ஹாப்லோக்ரூப் பிரிவினரும் இந்தியப் பகுதியில் உள்ளனர். M ஹாப்லோக்ரூப் குலத்தினர் முதன் முதலில் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி யவர்கள். கடலோரப் பகுதி வழியாக பயணம் செய்து இன்றைய இந்தியாவை அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆங்கிலேய மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் (English king Richard III) உடலின் எலும்புகளை மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டு தகுந்த முறையில் அடக்கம் செய்யவும், மறைந்த ரஷ்ய அரசப் பரம்பரையினரை  (Russian royal family) அவர்களது எலும்புகளின் மூலம் அவர்கள்தான் என உறுதிப் படுத்தவும் தாய்வழி மரபு மரபணுச் சோதனையே பயன்படுத்தப் பட்டது.

    இந்த அறிவியல் தகவல்கள் உறுதிப் படுத்துவது யாதெனில், வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மனித குலத்தின் வரலாற்றையே உணர பெண்ணகளின் பங்குதான் பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதும், வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.


    உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
    உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
    உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
    ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.
    -பெண்மை, பாரதியார்

    பெண்ணின் பெருமையை உணர்ந்து கொள்வோம்….
    மகளிர் தின வாழ்த்துக்கள்……

    தங்களது தாய்வழி மரபினை அறிய விரும்புவோருக்கானத் திட்டம்:
    TO PARTICIPATE IN A GENOGRAPHIC PROJECT:
    Geno 2.0 – Genographic Project
    https://genographic.nationalgeographic.com/
    Geno 2.0 – Genographic Project Participation and DNA Ancestry Kit
    http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp?productId=2001246&gsk&code=MR20944

    ______________________________________________

    தகவல் ஆதாரங்கள்:
    CONTENT SOURCES:
    Human mitochondrial genetics –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_genetics

    Human mitochondrial DNA haplogroup –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_DNA_haplogroups

    mtDNA and its role in ancestry –
    http://www.genebase.com/learning/article/17

    Haplogroup M –
    http://www.openthemagazine.com/article/living/haplogroup-m

    More than a hunch: identifying Richard III with DNA –
    http://theconversation.edu.au/more-than-a-hunch-identifying-richard-iii-with-dna-11999

    மேலதிகத் தகவலுக்காக பரிந்துரை செய்யப்படும் ஆய்வு அறிக்கைகள்:
    RESEARCH ARTICLES:
    Deep Rooting In-Situ Expansion of mtDNA Haplogroup R8 in South Asia.
    Thangaraj et al; PLoS ONE;2009, Vol. 4 Issue 8, p1
    http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0006545

    Phylogeography of mtDNA haplogroup R7 in the Indian peninsula.
    Chaubey et al; BMC Evolutionary Biology 2008
    http://www.biomedcentral.com/1471-2148/8/227

    Phylogeny of Mitochondrial DNA Macrohaplogroup N in India, Based on Complete Sequencing: Implications for the Peopling of South Asia
    Palanichamy et al; Am J Hum Genet. 2004 December; 75(6): 966–978.
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1182158/

    Mother’s curse: the effect of mtDNA on individual fitness and population viability.
    Gemmell NJ, Metcalf VJ, Allendorf FW. Trends Ecol Evol. 2004 May;19(5):238-44
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16701262

    பட உதவி:
    http://3.bp.blogspot.com/-kQRXiQhc_J0/ToN6yifvb_I/AAAAAAAABWI/UFJYPXs-P70/s1600/mDNA+migration+map+-+small.jpg
    https://genographic.nationalgeographic.com/wp-content/uploads/2012/09/human-journey_940.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MDI=.jpg?download=1
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MTA=.jpg?download=1
    http://leavingbio.net/HUMAN%20REPRODUCTION-WEB_files/image004.gif
    http://katiephd.com/wp-content/uploads/2011/02/humanlifecyc.jpg
    http://www.starchildproject.com/images/dna2011mtdnadiagram1.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1Mzc=.jpg?download=1
    http://jonciwolff.com/wp-content/uploads/2012/12/mitochondrialdna22.gif
    http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Peopling_of_eurasia.jpg
    http://www.openthemagazine.com/sites/default/files/imagecache/435by290/article_images/8308.haima.jpg

     

    Share