Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 8, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள்

    உதயகீர்த்திகா

     

    வல்லமையின் இந்த வார வல்லமையாளர், உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’ (Kharkov Air Force University, Ukraine) இல் ‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ (Aerospace engineering) படிக்கும் மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர், வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    தேனியின் அல்லிநகரம் என்ற ஊரினைச் சேர்ந்த, ஓர் எளிமையான சராசரி இந்தியக் குடும்பத்தில், தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதிய வேலையிலிருப்பவரும், சிறுகதை எழுத்தாளரும் ஓவியருமான திரு. தாமோதரனுக்கும், தட்டச்சுப் பணிபுரியும் திருமதி. அமுதாவிற்கும் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் உதயகீர்த்திகா. குழந்தைப் பருவத்தில் இருந்தே வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் என விண்வெளி தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்துத் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலும், விண்வெளி தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளைக் குவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தந்தையும் ஆய்வுக்குத் தேவையென மகள் கேட்கும் விலை அதிகமான நூல்களையும் வாங்கிக் கொடுப்பதற்காக ஒரு வேளை உணவைத் தியாகம் செய்யத் தயங்காதவர்.

    2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தனது ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ விருதும், 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசும் பெற்றுள்ளார். மேலும் இவர் பெற்ற பல பரிசுகளின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

    உதயகீர்த்திகா1பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவி, அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு, ப்ளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் (1030 ) பெற்றவரான உதயகீர்த்திகா தமிழ்வழிக் கல்வி பெற்றவர். விண்வெளி ஆய்வு பற்றி படிக்க விரும்பி தனது ஆய்வுகள், கட்டுரைகள், பெற்ற பரிசுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பொழுது அங்குப் படிக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். மேற்கொண்டு, நான்காண்டு படிப்பிற்குத் தேவையான சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிற்காக, வங்கியில் கொஞ்சம் கல்விக் கடன், பிற இடங்களில் கடன் என ஒரு 7 லட்சம், உதவும் உள்ளங்கள் நீட்டிய உதவிக்கரங்கள் வழங்கிய தொகை எனச் சேகரித்தது போக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்திலும் விண்ணப்பித்தார். மீதம் உள்ள தொகைக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்துள்ளார்.

    தனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கும் தனது அப்பாவிற்காக விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் தான் செய்யும் கைமாறு எனக் கூறும் உதயகீர்த்திகா, “அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது … விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்,” என்று பத்திரிக்கைகளுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

    உயர்ந்த குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டுள்ள உதயகீர்த்திகாவின் முயற்சிகள் வெற்றியடைந்து விண்வெளி ஆய்வுகள் பலசெய்து நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்து வழி நடத்தவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________
    தகவல் பெற்ற இடங்கள்:
    தேனி பெண்ணின் விண்வெளி கனவு..
    http://siragu.com/?p=19568

    உதயகீர்த்திகா… நிறைவேறும் விண்வெளிக் கனவு!
    http://www.vikatan.com/news/article.php?aid=55240

    காணொளி:
    https://youtu.be/cFv90F0TeEo

    _______________________________________________________
    உதயகீர்த்திகா பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
    * 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் நேருகலைமன்றம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதற்பரிசு.
    * 2007-ஆம் ஆண்டு மதுரை உயர்மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக நடத்தப்பட்ட உரையாடல் போட்டியில் மூன்றாம் பரிசு.
    * 2007-ஆம் ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டு நிமிடங்களில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து 2-ஆம் பரிசு.
    * 2009-ஆம் ஆண்டு என்னுடைய கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கல்வித்திறன்களைப் பாராட்டி, பாரதியுவகேந்திரா என்ற தன்னார்வ நிறுவனம் சார்பாக, “யுவஸ்ரீகலாபாரதி’ என்ற விருது.
    * 2010-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு பற்றிய கட்டுரைப் போட்டியில், முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றேன்.
    * 2010-ஆம் ஆண்டு தேனி ஜூனியர் சேம்பர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் முதற்பரிசு.
    * 2011-ஆம் ஆண்டு மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், அறிவியல் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்ததற்காக, அறிவியல் விருது.
    * 2011-ஆண்டு என் கவிதை, ஓவியம், கட்டுரை மற்றும் கல்வி ஆற்றலைப் பாராட்டி, மதுரையில் உள்ள ரோஜா கலைமன்றத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் விருது. 2012-ஆம் ஆண்டில் தேனி மாட்டஅளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட தனித்திறன் மற்றும் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதற்பரிசு.
    * 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதற்காக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.
    * 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சர்வதேச நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் உள்ள பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
    * 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பில் “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலஅளவில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், பெங்களுரு இஸ்ரோ மைய விஞ்ஞானி இராம கிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றேன்.
    * 2014-ஆம் ஆண்டும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் மாநிலஅளவில் பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் “வழிநடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு. இதன் மூலமாக பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: இருள் நீக்கும் பல்மீனும் காய்கலாவாகும் நிலா

     

    ஆயிரவ ரானு மறிவில்லார் தொக்கக்கான்
    மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
    பாயிரு ணீக்கு மதியம்போற் பன்மீனுங்
    காய்கலா வாகு நிலா.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால்,
    மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;-
    பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
    காய்கலாவாகும் நிலா.

    பொருள் விளக்கம்:
    ஆயிரக்கணக்கான அறிவற்றவர் ஒன்று திரண்டாலும், பரந்து விரிந்திருக்கும் இப்பெரிய உலகில் மாட்சிமை பொருந்திய அறிவிற்சிறந்த ஒருவரைப் போல விளங்க மாட்டார். (அது போலவே) பரவியுள்ள இருளைப் போக்கும் வெண்மதி போல, பல விண்மீன்கள் ஒருங்கிணைந்தாலும் நிலவைப்போலக் காய்ந்து ஒளிதர அவற்றால் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறியாமை கொண்டோர் ஆயிரமாயிரம் பேர் ஒன்று திரண்டாலும், அறிவில் சிறந்துள்ள ஒருவருக்கு ஒப்பாக மாட்டார். அறிவிற் சிறந்தவரின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பிய வள்ளுவர்,

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

    அறிவுடையவர் எல்லாச் செல்வமும் உடையவராக உலகத்தாரால் மதிக்கப்படுவார், அறியாமை சூழ்ந்தவர் ஒருவர் எத்தனைச் செல்வம் பெற்றிருப்பினும் அவர் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவார் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்

     

    ஒருவ ருரைப்ப உரைத்தால், அதுகொண்
    டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா.
    பெருவரை நாட! சிறிதேனும் இன்னா
    திருவர் உடனாடல் நாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
    இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;-
    பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது,
    இருவர் உடன் ஆடல் நாய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவர் ஒரு கருத்தினை உரைக்க, அவருக்கு மாற்றுக் கருத்துள்ளவர் அதனை மறுத்து மறுமொழி சொன்னால், அதைப் பற்றி மேற்கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருப்பது சரியாகுமா? (அது சரியான முறையல்ல). பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவரே, சிறிது காலப்பொழுதிற்குத்தான் என்றாலும் அது நன்மை பயக்காது. (அச்செயல்) இருவர் ஒரே ஒரு நாயின் உதவி கொண்டு தங்கள் இருவரது வேட்டையாடுதலையும் செய்வது போல (மிகுந்த துன்பத்தைக் கொடுப்பதாக) அமையும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தங்கள் வாதக் கருத்தை எடுத்துக் கூறுபவர்கள் ஒரே நேரத்தில் எதிர்த்து உரையாடிக் கூச்சலிடுவது பயன் தராது. வேட்டையாடச் செல்லும் இருவர், அவரவருக்கென்று ஆளுக்கொரு ஒரு நாயைப் பயன்படுத்தினால் மட்டுமே வேட்டையாடுவது எளிதாக இருப்பது போல; வாதிடுவோர் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்தை முன் வைத்தாலே அவ்வாதத்தால் பயன் விளையும். இருவரும் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வாதத்திற்கு உதவாது. நேரத்தையும் நிலைமையையும் அறிந்து கருத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர். (குறள்: 712)

    சொற்களின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள், கேட்பவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 1, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  மாணவர் திரு. ஆண்டனி எடிசன் அவர்கள்

     

    ஆண்டனி எடிசன்

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், “குறைந்த விலையில்” ரோபோட்டிக் செயற்கை கை (prosthetic robotic hand) ஒன்றை வடிவமைத்துச் சாதனை புரிந்துள்ள பொறியியல் கல்லூரி மாணவர் திரு. ஆண்டனி எடிசன் (Antony Edison, https://www.facebook.com/akon.antoni) அவர்கள். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ஆண்டனி எடிசன் அவர்கள் கோவையின் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் (Hindusthan College of Engineering and Technology) மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெறும் மாணவர்.

    இளம் வயதிலேயே ரோபோட்டிக்ஸ் பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டதால் மெக்கட்ரானிக்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர் ஆண்டனி எடிசன். கோவாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி ஒன்றில் ஜெர்மனி அறிவியலாளர் ஒருவர் காட்சிப்படுத்தியிருந்த செயற்கை கை ஒன்றில் இவரது ஆர்வம் திரும்பியது. அதனைப் பற்றி விசாரித்து அறிந்த பொழுது, அது இந்திய விலைவாசிக்குக் கட்டுப்படியாகாத ரூபாய் 50,000 வரை அதிக விலையில் அமைந்திருக்கக் கண்டார். எனவே நம் நாட்டினருக்குக் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய ரோபோட்டிக் செயற்கை கையை வடிவமைக்கத் திட்டமிட்டார்.

    மேலைநாடுகளில் ரோபோட்டிக் செயற்கை கைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் அவற்றினை இந்தியாவில் உள்ளவர் பயன்படுத்த விரும்பினால் லட்சக் கணக்கில் செலவிட நேரும். அத்துடன் அதற்கான உதிரிப் பாகங்களைத் தருவித்து இந்தியாவில் தயாரிப்பதும் ரோபோட்டிக் செயற்கை கையின் அடக்கவிலையைக் குறைக்கும்வகையில் அமைந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ஆண்டனி எடிசன், இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய ஃபோம் ஷீட், மோட்டார், சென்சார்கள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

    ஒரு பொருளைப் பிடித்து, அதனை எடுத்து மற்றொரு இடத்தில் வைப்பதுதான் பெரும்பான்மையாக உதவக்கூடிய அடிப்படை செயல் என்பதால் அதன் அடிப்படையில் செயற்கை கை இயக்கத்தை வடிவமைக்க விரும்பினார் ஆண்டனி எடிசன். செயல்முறையை நிகழ்த்தும் கட்டளைகளை குரல்வழியாக செயல்படுத்தும் முறை உள்ளது. செயற்கை கை இயக்கத்திற்காகப் பெரும்பான்மையாக இம்முறையே கையாளப்பட்டாலும், கண்ணசைவு வழியே கட்டளைகளை அளிக்கும் முறையைத் தேர்வு செய்து அதற்கான கண்ணாடி ஒன்றையும் வடிவமைத்தார். மொத்த எடை 700 கிராம்களே கொண்ட செயற்கை கை, இடது கண்ணின் அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

    ஆண்டனி எடிசன்-x

    கண்ணாடியில் உள்ள சென்சார் கண்ணசைவுகளை செயற்கைக் கைக்குத் தெரிவிக்கும். ஒரு பொருளைப் பற்றுவதற்கு மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை அதனைப் பற்றிக் கொள்ளும், அதனை வேறு இடத்தில் வைத்து மீண்டும் மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை பொருளைப் பற்றுவதை நிறுத்தி விலகிவிடும். எலக்ட்ரானிக் சர்க்கியூட்கள், பாகங்கள் ஆகியவற்றைக் கைகளாலேயே இணைத்து அமைக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் செயற்கை கையைத் தயாரிக்க பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவானது என்றும், இதனைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது மேலும் திறனை மேம்படுத்தியும், அழகாகவும், எளிமையாகவும் ஏழாயிரம் ரூபாய் அடக்க விலையில் அமையுமாறும் உருவாக்கலாம் என்பது இவரது கணிப்பு.

    இவரது விலைகுறைந்த ரோபோட்டிக் செயற்கை கையை மும்பையில் நடந்த கல்லூரி கண்காட்சியில் காட்சிப்படுத்திய பொழுது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சில தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. கண்காட்சியில் ஆண்டனி எடிசனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவர் மேலும் சில அறிவியல் போட்டிகளில் பங்கு பெற்றுத் தனது திறமையைக் காண்பித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற NIYANTRA 2015 இயந்திரங்கள் வடிவமைப்பு போட்டியில் (NIY-37) இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றவர் இவர். சூரியமின்சக்தியில் இயங்கும் ஊர்தியை (electric solar vehicle) இவரும் இவரது குழுவினரும் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.

    தற்போது ரோபோட்டிக் செயற்கை கையின் காப்புரிமையினைப் பெற விண்ணப்பிப்பதற்குத் தேவையான பணத்தினை சேர்த்துக் கொண்டுள்ளார் ஆண்டனி எடிசன். ரோபோட்டிக் செயற்கை கையை மேம்படுத்தி பலரும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பது இவரது நோக்கம். அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும், புதிய பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை சாதாரண மக்கள் அடைந்து பலன் பெரும் வகையில் அவை அமையாது போனால் அதனால் கிடைக்கும் பயன் குறைவே. செயற்கை உறுப்புகளை நம்பியிருக்கும் விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு, அழகிற்காகப் பொருத்தப்படும் செயலற்ற உடல் உறுப்புகளைவிட, இயங்கும் கை கால்கள் கிடைத்தால் நடைமுறை வாழ்க்கையில் பிறர் தயவை அவர்கள் நாடி இருப்பதைக் குறைக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

    இந்த வகையில் குறைந்தவிலையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஆண்டனி எடிசனால் வடிவமைக்கப்பட்ட ரோபோட்டிக் செயற்கை கை புதிய பாதையை வகுத்து மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கைத்யைத் தருகிறது. மெக்கட்ரானிக்ஸில் மேற்படிப்பிற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடர விரும்பும் ஆண்டனி எடிசனின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள். அவரது ரோபோட்டிக் செயற்கை கை சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    _______________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
    Mr. Antony Edison
    B.E. (Mechatronics), Undergraduate 2013 – 2016
    Department of Mechatronics Engineering
    Hindusthan college of Engineering and Technology
    Coimbatore – 32, Tamil Nadu, India
    Phone: +917502576366
    e-mailto:00edy00@gmail.com

    சமூக வலைத்தளங்களில்:
    https://www.facebook.com/akon.antoni
    https://in.linkedin.com/in/antony-edison-92ba00a0
    https://plus.google.com/103307734384379919513/
    http://hindusthan.academia.edu/AntonyEdison
    https://www.youtube.com/channel/UCo8U_KYSTvj2iTp2VPaH1Uw

    தகவல் மற்றும் படங்கள் பெற்ற தளங்கள்:
    குறைந்த விலையில் ரோபோட்டிக் செயற்கை கை: தமிழனின் அசத்தல் சாதனை!
    http://www.vikatan.com/news/miscellaneous/58304-robotic-artificial-hand-tamil-student-invention.art?

    Electronics for You, June 2015
    https://books.google.com/books?isbn=1329172744

    NIYANTRA 2015 Finalists!
    http://india.ni.com/niyantra/shortlist
    http://www.ni.com/en-us.html
    மற்றும் ஆண்டனி எடிசனின்
    வல்லமையாளரின் சமூக வலைத்தளங்கள்

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: வினா முந்துறாத உரை இல்லை

    பழமொழி: கனா முந்துறாத வினை இல்லை

    கல்லா தான் கண்ட கழி நுட்பங் கற்றார்முற்
    சொல்லுங்காற் சோர்வு படுதலா – னல்லாய்
    வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக்
    கனாமுந் துறாத வினை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
    சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லாய்
    வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
    கனா முந்துறாத வினை.

    பொருள் விளக்கம்:
    முறையாகக் கல்வியைக் கற்றிராத கல்லாதவர் ஒருவர் மிக நுட்பமான மெய்ப்பொருளினை அறிந்து கொண்டாலும், அதனைக் கற்றார் முன் விளக்கிக் கூறுவதற்கு தக்க கல்வியறிவினைப் பெறாததால் அவர் கூற்று முக்கியத்துவம் பெறாமல் போகும். நற்பண்புகள் அமைந்த பெண்ணே, கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை (அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என அறிவாயாக)

    பழமொழி சொல்லும் பாடம்: சிறந்தவகையில் பொருள் புரிந்து கொள்ள அதற்கேற்ற முறையான அடிப்படைக் கல்வியைக் கற்றிருத்தல் அவசியம், கல்வியின்றி நுண்ணறிவு பெறுதல் இயலாது. டாக்டர் அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்” என்பதன் அடிப்படையைக் காட்டுகிறது “கனா முந்துறாத வினை இல்லை” என இப்பாடல் கூறும் பழமொழி. குறிக்கோளினை எண்ணியபிறகுதான் அதை அடையும் செயல் துவங்குகிறது. பதில் வருவதற்குக் காரணம் அதற்கேற்ற கேள்வி எழும்புவது. தக்க அடிப்படைக் கல்வி இல்லாத பொழுது ஆராயும் மனப்பான்மை பெறாத காரணத்தினால் கண்டுகொண்ட நுட்பத்தின் அடிப்படையும் விளங்காது. பல அறிவியல் நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் அது ஏன் நிகழ்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைக் கொண்டு இக்கூற்றைப் புரிந்து கொள்ளலாம். அதனால் இயற்கையறிவு பெற்றிருப்பினும் நுண்பொருளை அறிவதற்குத் தக்க அடிப்படைக் கல்வி தேவை என்பதை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். தேவையான கல்விப் பயிற்சியின்றி கற்றோரை எதிர்கொள்வதை வள்ளுவர்,

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: 401)

    தேவையான நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார். அத்தகையவர் நிலையை,

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும். (குறள்: 405)

    கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.

    Share
  • விழித்தெழட்டும் என் நாடு!

    – தேமொழி.

     

     

    விழித்தெழட்டும் என் நாடு!

    கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    எங்கே அச்சமற்ற மனம்
    தலைநிமிர்ந்து நிற்கிறதோ
    எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள்
    அடங்காமல் இருக்கிறதோ
    எங்கே உலகம் குறுகிய
    மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ
    எங்கே சொற்கள் உண்மையின்
    ஆழத்தில் இருந்து உருவாகிறதோ
    எங்கே சோர்வற்ற கரங்கள்
    முழுமைப்படுத்துவதில் முனைகிறதோ
    எங்கே தெளிந்த நீரோட்டமான சிந்தனை பாழான
    பழக்கம் என்ற பாலை மணலில் மறையவில்லையோ
    எங்கே உன்மனம் என்றும் பரந்த மனப்பான்மை
    கொண்ட செயல்களை முன்னெடுக்கிறதோ
    அந்த விடுதலை என்னும் சொர்க்கத்தில்
    என் தந்தையே, என் நாடு விழித்தெழட்டும்.

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

     

    இரவீந்திரநாத் தாகூர்

    Where The Mind Is Without Fear

    – Rabindranath Tagore

    “Where the mind is without fear
    and the head is held high,
    where knowledge is free.
    Where the world has not been broken up
    into fragments by narrow domestic walls.
    Where words come out from the depth of truth,
    where tireless striving stretches its arms toward perfection.
    Where the clear stream of reason has not lost it’s way
    into the dreary desert sand of dead habit.
    Where the mind is led forward by thee
    into ever widening thought and action.
    In to that heaven of freedom, my father,
    LET MY COUNTRY AWAKE!

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 25, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்கள்

    Cottalango Leon

    வல்லமையின் இவ்வார வல்லமையாளர்; ஹாலிவுட் திரைத்துறை சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார்விருதுகளில், இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதைப் பெறுபவர்களில் ஒருவரான கோவைத் தமிழர் திரு. கோட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) அவர்கள். இவரும், இவர்தம் வழிநடத்தலில் இவரது குழுவினரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் (Sony Pictures Imageworks) நிறுவனத்திற்காக உருவாக்கிய “ஐடிவியூ” (itview) என்ற மென்பொருள்*, உருவாகி வரும் திரைப்படத்தின் பகுதிகளை திரைக் கலைஞர்கள் மீண்டும் பார்த்து ஆய்வுசெய்து செப்பனிடும் முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப் பட்டது. உருவாகி வரும் படத்தின் பல நிலைகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் திரைப்படம் தயாரிப்பதில் பெரிதும் உதவுகிறது.

    The-Academy-of-Motion-Picture-Arts-and-Sciences-150தொழில்நுட்பத்திற்காக “வடிவமைப்பு, பொறியியல் பங்களிப்பு, தொடர் மேம்பாடு” ( ‘Scientific and Technical Achievements’ category for the design, engineering and continuous development) என்ற பிரிவில் விருதினைப் பெரும் திரு. கோட்டலாங்கோ லியோன் விருது கிடைத்ததைப் பற்றிய தனது செய்தியை அவரது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சாதாரணமான நாளொன்றைத் துவக்கிய எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய செய்தி இன்ப அதிர்ச்சியைத் தந்தது.திரைப்படங்களை உருவாக்குவதில், இன்றியமையாத வகையில் பின்புலத்தில், திரைப்பட தொழில்நுட்பத்தில் உதவிகள்செய்யும் 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்குபவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கும் போட்டிகள் அதிகம், இதற்காகப் பலநேர்காணல்களில் கலந்து கொள்ளவும், தொழில்நுட்பம் பற்றியவிளக்கங்களும் தரவேண்டியிருக்கும். இருபதாண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் பணியில் என்முதல் நிரலி வரியை எழுதிய பொழுது நான் பின்னாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை.

    எங்கள் தொழில் நுட்பப் பணியில் உடன் பணியாற்றிய ராபர்ட் ரே, சாம் ரிச்சர்ட்ஸ், மற்றும் ராப் ப்ரேடோ (Robert Ray, Sam Richards and Rob Bredow) ஆகிய குழுவினருக்கும், எனது முன்னேற்றத்திற்கு உதவிய என் நண்பர்களுக்கும், நான்பணிபுரியும் ‘சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ்‘ நிறுவனம் என்னிடம் இதுநாள் வரை காட்டிய அன்பிற்கும், கடினஉழைப்பின் மதிப்பை அறிவுறுத்தி எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற உறுதுணையாக இருந்த எனதுபெற்றோர்களுக்கும், பொறுமையுடன் எனக்கு ஆதரவளித்த எனது மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதி ஆகியோருக்கும்நன்றி,” எனத் தனது ஃபேஸ்புக் செய்தியில் (https://www.facebook.com/cottalango)  குறிப்பிட்டுள்ளார்.

    திரு. கோட்டலாங்கோ லியோன் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து கோவையில் வளர்ந்தவர்.  பணி ஓய்வு பெற்ற இவரது தாய் திருமதி எல். இராஜம் அம்மையாரும், மறைந்துவிட்ட இவரது தந்தையும் ஆசிரியப்பணி புரிந்தவர்கள். கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள கல்வர் சிட்டி என்ற இடத்தில் வசிக்கும், 44 வயதாகும் திரு. கோட்டலாங்கோ லியோன், கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரி (PSG College of Technology) பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) மேற்படிப்பைத் தொடர்ந்தவர். தற்பொழுது 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தில் மேல்நிலை கணினி மென்பொருள் பொறியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘ட்ரீம் வொர்க்ஸ் இன்டெர்ஆக்டிவ்‘ (Dreamworks Interactive) நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். இந்த ஆண்டின் ஆஸ்கார் தொழில்நுட்ப விருதினைப்பெறும் மற்றொரு இந்தியர் திரு. ராகுல் தாக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ஆஸ்கார் விருதுகளுக்காக வழங்கப்பெறும் ஆஸ்கார் பரிசளிப்பு விழா வரும் பிப்ரவரி 13 அன்றும், பிற விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 28, 2016 அன்றும் நடைபெறவிருக்கிறது.

    திரைப்படத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ள திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    * The Academy Awards for scientific and technical achievements –
    TECHNICAL ACHIEVEMENT AWARDS (ACADEMY CERTIFICATES)

    To J Robert Ray, Cottalango Leon and Sam Richards for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks Itview.

    With an extensive plugin API and comprehensive facility integration including editorial functions, Itview provides an intuitive and flexible creative review environment that can be deployed globally for highly efficient collaboration.

    _______________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:
    https://www.linkedin.com/in/loorthu
    https://www.facebook.com/cottalango
    https://www.youtube.com/user/loorthu1

    தகவல் பெற்ற தளங்கள்:
    ஆஸ்கார் தொழில்நுட்ப விருது பெறும் கோவை பொறியாளர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1439250
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1439546

    Academy to Honor 11 Sci-Tech Achievements
    http://www.animationmagazine.net/vfx/academy-to-honor-11-sci-tech-achievements/

    Oscars: Sci-Tech Winners Unveiled by Academy
    http://www.hollywoodreporter.com/behind-screen/oscars-sci-tech-winners-unveiled-853503

    Indian-Origin Technician Cottalango Leon Wins Oscar
    http://www.ndtv.com/indians-abroad/indian-origin-technician-cottalango-leon-wins-oscar-1269117

    Cottalango Leon, another Indian-origin technician, wins Oscar
    http://timesofindia.indiatimes.com/entertainment/english/hollywood/news/Cottalango-Leon-another-Indian-origin-technician-wins-Oscar/articleshow/50681522.cms

     

    படம் உதவி:
    http://www.ndtv.com/

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கற்றொறும் தான் கல்லாதவாறு

     

    சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
    கற்றொறும் கல்லாதே னென்று வழியிரங்கி
    உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
    கற்றொறுந்தான் கல்லாத வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
    கல்தொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
    உற்று ஒன்று சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல்,
    கல்தொறும் தான் கல்லாதவாறு.

    பொருள் விளக்கம்:
    (கற்றறிந்தோருடன் உரையாடுகையில்) செய்துவிடும் சொற்குற்றம் காரணமாகத் தடுமாறினால், அதனால் மனத் தளர்வு கொள்ளாமல், நன்கு கற்றறியும் வரை நான் கல்லாதவரே என்று உணர்ந்து, தனது கல்லாமை நிலைக்காக வருந்தி, மனதை ஒருமைப்படுத்தி கற்பேன் என்ற உறுதிகொண்டு, முயன்று ஒன்றைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றறியும் வரை தான் ஒரு கல்லாதவரே என்பதையும் உணர வேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்:  கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தான் அதனைக் கற்றறியும் வரை கல்லாதவரே என்பதை உணர்ந்து கற்கவேண்டும். கற்றறிந்தோருடன் அச்சமின்றி உரையாடத் தனது கல்வியறிவை ஒருவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வள்ளுவர்,

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (குறள்: 725)

    கற்றறிந்தோர் அவையில் அச்சமின்றி விவாதிக்க உதவும் வகையில் இலக்கண, இலக்கிய வாதக்கலை ஆகியவற்றைக் கற்றறிந்து திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார்

     

    அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத்
    துடங்கிய மூன்றினான் மாண்டீண் – டுடம்பொழியச்
    செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேற் கொட்டுவைத் தார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
    தொடங்கிய மூன்றினான் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
    செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

    பொருள் விளக்கம்:
    அடக்கம் என்னும் பண்பினைக் கடைப்பிடித்து, தனது கட்டுக்குள் அகப்படுமாறு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்துடன் வாழத் துவங்கி மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலக வாழ்வில் கொண்டுள்ள உடல் அழிந்து மறுமைக்குச் செல்லும் வழிக்குப் பயன் தரும் நன்னெறியைத் தக்க காலத்தில் செய்து வாழாதவர், உயிர் எடுக்கும் நச்சு உணவை நாடுவதற்கு ஒப்பாகும் செயலைச் செய்யும் அறிவிலியாவார்.

    பழமொழி சொல்லும் பாடம்: நன்னெறியைக் கடைப்பிடித்து, தக்க அறச்செயல்களைச் செய்யாமல் வாழ்வது அறிவற்ற செயலாகும். மண்ணுலகில் வாழும் முறைப்படி வாழ்க்கையை நடத்துபவர் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார் என இதனைச் சுருக்கமாக,

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

    என்று கூறும் வள்ளுவர்,

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள்: 36)

    பின்னர் செய்வோம் என்று காலம் தாழ்த்தாது அறவழியைக் கடைப்பிடித்து ஒருவர் வாழ்ந்தால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் நிலைத்த புகழுடன் வாழ அது உதவியாக அமையும் என்று மேலும் விளக்குகிறார்.

    குறிப்பு:
    ஒப்பிட்ட நான்கு* பழமொழி நானூறு உரையாசிரியர்களும் வெவ்வேறு வழியில் பொருள் சொல்லும் பாடலாகவும், பாடபேதங்கள் உள்ள பாடலாகவும் விளங்குவது இந்தப் பழமொழி நானூறு பாடல். ‘செய்யாரே’ என்பது செய்தாரே எனவும். ‘கொல்லி’ என்பது ‘கொள்ளி’ எனவும், ‘கொட்டு வைத்தார்’ என்பது ‘கோட்டு வைத்தார்’ எனவும் பேதங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கொல்லி என்று (உயிரை) அழிக்கும் செயலாகவும், கொல்லி என்பது கொல்லி மலையாகவும், கொள்ளி என்று நெருப்பாகவும் உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. கொட்டு என்று களைக்கொட்டு போல நிலத்தை அகழப் பயன்படும் கருவியாகவும், கோட்டு என்பது நெற்கூடையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. கொண்ட பொருளிற்கேற்ப கொல்லி மலையின் மேல் நெல்லை குமித்து பிற்காலத் தேவைக்கு சேர்த்து வைக்காதவர் எனவும், நெருப்பின் மீது விதை நெல்லைச் சமைத்து உண்ணும் செயலைச் செய்பவர் எனவும், உயிர் கொல்லும் கிழங்கை கொட்டுக் கருவியால் அகழ்ந்து உண்ண முற்படுபவர் எனவும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்வாறே துறவற நெறியைக் கடைப்பிடித்தல், சனாதன நெறிப்படி வாழ்தல், மூன்று தீய குணங்களான செருக்கு, சினம், வஞ்சம் என்றவற்றைக் கட்டுப்படுத்துதல் என்று பாடலுக்குப் பலவகையில் உரையாசிரியர்கள் தங்கள் கருத்தினை ஏற்றிப் பொருள் உரைத்துச் செல்கிறார்கள்.

    எனவே, பொதுவாக, பிற்கால நலனைக் கருத்தில் கொண்டு தக்க காலத்தில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழாத ஒருவரது செயலை, விதை நெல்லைச் சமைத்து உண்டுவிடுபவர் செயல் போன்றோ, அல்லது நச்சுத் தன்மை கொண்ட உணவை உண்ண முயல்பவர் செயல் போன்றோ ஒரு அறிவற்ற, தொலைநோக்கற்ற செயலாக இப்பாடல் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இக்குழப்பங்களுக்குக் காரணம் இப்பழமொழி வழக்கொழிந்து போனதால் காலமாற்றத்தில் பொருள் புரியாத நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

    *1. செல்வக்கேசவராய முதலியார் (1917); 2. நாராயண ஐயங்கார் (1918); 3. ம. இராசமாணிக்கனார் (1948); 4. புலியூர்க் கேசிகன் (2010)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 18, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. இ. மயூரநாதன் அவர்கள்

    e mayuranathan

     

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” (http://www.tamilliterarygarden.com/) என்ற தமிழை வளர்க்கும் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவது இயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறவிருக்கும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார்.

    e mayuranathan1

    இந்த வாரம் (ஜனவரி 15, 2016) தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு  தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத்  துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன்.

    e mayuranathan2தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும்.

    தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிபீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம்,  த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிபீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த வல்லமையாளரைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    __________________________________________________________
    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
    மின்னஞ்சல்: rmayooranathan@gmail.com
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/mayooranathan.ratnavelupillai?ref=br_rs
    விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/wiki/பயனர்:Mayooranathan

    தகவல் தந்துதவிய இணையதளங்கள்:
    http://www.tamilliterarygarden.com/
    http://annakannan-interviews.blogspot.in/2009/12/blog-post_4780.html
    http://www.thehindu.com/news/cities/chennai/tamil-wikipedia-brings-together-generations/article5183023.ece
    http://www.muthukamalam.com/interview/p7.html
    https://ta.wikipedia.org/s/4ka9

    __________________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: சுரத்திடைப் பெய்த பெயல்

     

    கரப்புடையார் வைத்தகடையும் உதவா
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
    நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
    சுரத்திடைப் பெய்த பெயல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கரப்பு உடையார் வைத்த, கடையும் உதவா,
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
    நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
    சுரத்திடைத் பெய்த பெயல்.

    பொருள் விளக்கம்:
    (வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்து உதவாது) ஒளித்து வைப்பவரின் செல்வம் இறுதியில் அவர் சந்ததிக்கும் உதவாது போகும். (பின்னர் புதையலாக அது கண்டெடுக்கப்பட்டு) பகைவரைத் துரத்தி விரட்டும் தொழிலைச் செய்யும் அரசுக்கு உரிமை உடையதாக உலக வழக்குப்படி சென்று சேரும். அவ்வாறின்றி, வறுமையில் துன்பம் மிகக் கொண்டவருக்கு உதவுமாறு அப்பொருள் மூலம்  ஒரு உதவி செய்வது வறண்டப் பாலை நிலத்திற்குப் புத்துயிர் ஊட்டும் மழைக்கு ஒப்பாகப் பயன் அளிக்கும்.

    பழமொழி சொல்லும் பாடம்: செல்வத்தை மறைத்து வைக்காமல், வாடும் வறியவர்க்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கொடுத்து உதவுவதே சிறந்த ஈகையாகும். தேடிச் சேர்த்த பொருளைத் தக்கவருக்கு உதவப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருக்குறள்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்: 212)

    ஒருவர் முயன்று சேர்க்கும் செல்வத்தைத் தக்கவருக்கு பயன்படுமாறு கொடுத்துதவ வேண்டும் என்று விளக்குகிறது.

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 2

    — தேமொழி.

    Echo Chamber Online

    உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏன் இணையத்தின் சமூகவலைத்தளங்கள் மூலம் வெகு வேகமாகப் பரவுகிறது? சுலபமாக ஒரு இணையத் தேடல் செய்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வழியிருக்கும் பொழுதும், மக்கள் எதனால் அதைச் செய்யாமல் பொய்யான வதந்திகளை நம்புகிறார்கள்? எதனால் அவற்றைத் தம்முள் பகிர்ந்து மேலும் மேலும் பரப்புகிறார்கள்? ஏன் பிழைகளைச் சரி செய்ய முயலுவதில்லை? ஏன்? ஏன்? ஏன்? என்று நம்மைக் குழப்பும் இந்த ஏன் கேள்விகளுக்கு உளவியல் அடிப்படையில் விளக்கம் கொடுக்க முற்படுகிறது சமீபத்தில் (ஜனவரி 4, 2016) வெளியான ஆய்வறிக்கை ஒன்று.

    ஃபேஸ்புக் பயனர்களிடம் நடத்திய இந்த ஆய்வு கூறும் முடிவு; மக்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் சார்பு நிலை காரணமாக, தங்கள் நம்பிக்கைகளை உறுதி செய்யும் தகவல் கிடைத்தால், உடனே தங்களுக்கு கிடைக்கும் அந்தச் செய்தியையே நம்ப விரும்புகிறார்கள். அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்து அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. மேலும் அதற்கு மாறான தகவல் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுவார்கள் என்கிறது. இவ்வாறு தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில் கொண்டிருக்கும் சார்புநிலையானது ஆங்கிலத்தில் confirmation bias எனக் குறிப்பிடப்படுகிறது.

    மக்களிடையே காணப்படும் தனது நம்பிக்கையினைப் பரப்பும் இந்த மனநிலையின் காரணமாக இணையத்தில் தங்கள் எண்ணங்களை எதிரொலிக்கும் குழுக்கள் உருவாகிறது. இக்குழுக்கள் echo chambers என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குழுக்களாகப் பிரியும் மனப்பான்மை எந்தச் சமூக வலைத்தளமாக இருந்தாலும், டிவிட்டர், கூகிள் குழுமம், யாஹூ குழுமம் என எந்தச் சமூக வலைத்தளத்திலும் “அவர்கள், நாங்கள்” என்ற குழுக்களாக மக்களை அணிபிரியச் செய்யும். இந்த எதிரொலிக்கும் குழுக்கள் உருவாவது குறிப்பிட்ட கருத்துகளுக்குத்தான் என்ற வரையறையும் கிடையாது. தாங்கள் நம்பும் நம்பிக்கைக்கு மாறான கருத்து தோன்றினால், அதனைச் சகிக்க இயலாது மக்கள் குழுக்களாகப் பிரிவர். நம் இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிகள், மதங்கள், சாதிகள், தனிநாடு கோரிக்கை, கடவுள் நம்பிக்கை, ஆட்சி மொழிகள் என விவாதக் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.

    ‘மிசெல்லா டெல் விகாரியோ’ என்ற இத்தாலிய கணினி சமூக அறிவியலாளர் (Michela Del Vicario of Italy’s Laboratory of Computational Social Science) ஃபேஸ்புக் பயனர்களிடம் 2010 முதல் 2014 வரை நடத்திய ஒரு ஆய்வின் நோக்கம், மக்கள் தாங்கள் விரும்பாத கருத்தை எதிர்கொள்ள முன் வருகிறார்களா? அல்லது தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து கொள்கிறார்களா? என்று அறிவதாகும்.

    ஐந்தாண்டுகளாகத் தரவுகளை சேகரிக்க 32 பொதுவான வலைத்தளங்கள், 35 அறிவியல் செய்திகள் தரும் வலைத்தளங்கள், ஆய்விற்காக வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்ப உருவாக்கப்பட்ட 2 சோதனை போலி வலைத்தளங்கள் என மொத்தம் 69 வலைத்தளங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இருவகைக் குழுக்கள் இருப்பது தெரிய வந்தது. ஒரு பிரிவினர் conspiracy theories என்று கூறப்படும் ‘சதிச்செயல் கோட்பாடு’களை நம்புபவர்கள். இவர்கள் ஒசாமா மீது தாக்குதல் நடத்தி கொன்றதாகக் கூறுவது பொய், வேற்றுக்கிரக மனிதர்கள் இருப்பதை அரசாங்கங்கள் மறைக்கின்றன, செப்டெம்பர் 11 நிகழ்வு அமெரிக்க இராணுவமே நடத்திய தாக்குதல் போன்ற சதிச்செயல் கோட்பாடுகளை நம்பும் வகையினரைப் போன்றவர்கள். மற்ற பிரிவு ஆராய்ந்து, அறிவியல் சான்றுகளை எடுத்துக் கூறி, உண்மை என்னவென்று விளக்க முற்படுபவர்கள் (Debunking campaigns). இந்த இருவகையினரும் ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து பற்பல குழுக்களாக இணையத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தகவல்களை பரப்புவதிலும் வேறுபாடுகள் இல்லை.

    பொதுவாக, இந்த ஆய்வில், பயனர்கள் தாங்கள் ஒப்புக்கொள்ளும் செய்திகளை பரப்புவதும், தங்களால் ஒப்புக் கொள்ள முடியாத செய்திகளைப் புறக்கணிப்பதும் தெரிந்தது. தான் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்யும் செய்திகளை விரும்பி அதனை மட்டும் பரப்புவதில் முனைகிறார்கள். ஃபேஸ்புக் பயனர்களில் எதிரெதிர் சிந்தனை கொண்டவர்கள், தங்களுக்குள் ஒத்த கருத்துடைய குழுக்களாக (homogeneous, polarized cluster) அமைந்துள்ளதால் தங்களுக்குள் தங்களுக்குப் பிடித்த செய்திகளை விரைவில் பரப்ப முடிகிறது. ஆதாரமற்று இருந்தாலும் வதந்திகள் ஒரு சில மணி நேரங்களுக்குள் இவர்கள் மூலம் அதிவிரைவில் பரவுகின்றன.

    குழுக்களின் மனநிலை, ஒருவர் குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது தனது நம்பிக்கையில் மிகவும் தீவிரமடைவார். அந்த நம்பிக்கையை வளர்க்கத் தன்னை அர்ப்பணிக்கும் மனப்பான்மையும் அவரிடம் உருவாகும். குழுவில் பிறரும் தனது நம்பிக்கையைப் போலவே நம்பிக்கை கொண்டவர்கள், தனது நம்பிக்கையை ஒப்புக் கொள்கிறார்கள் என்றவுடன் அவருக்குத் தான் கொண்ட கருத்தின் மீது அதிக நம்பிக்கை உருவாகும், அதில் தீவிரமடைவார்கள். இது குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது ஒருவர் கொள்ளும் மனநிலை.

    நாட்டின் பொருளாதாரக் கொள்கை, அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் தான் கொண்டிருக்கும் தனது கருத்து நையாண்டிக்குள்ளாகுமோ என முதலில் அமைதி காக்கும் ஒருவர், தன்னையொத்த கருத்துடையவர் தனது நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் பேசியவுடன் தனது கருத்து வலிமையடைந்ததாகத் தன்னம்பிக்கை கொண்டு விவாதக் களத்தில் குதித்துவிடுவார். மற்றவரும் அவரை ஆதரித்தால் அவருக்குத் தான் கொண்ட நம்பிக்கையில் சார்புநிலை அதிகமாகும்.

    இந்தக் குழு மனநிலை அடிப்படையில்தான், சமூகத்தளங்களில் தாம் விரும்பும் கருத்துகளை இக்குழுக்கள் விரைவாக தங்களுக்குள் பரவவிடுகின்றன. தங்கள் நம்பிக்கைக்கு மாறாக உண்மை வெளிப்பட்டாலும் அதைப் புறக்கணித்து தங்கள் நம்பிக்கைக்கு வலு சேர்க்க முயல்கிறார்கள். இவ்வாறாக உண்மையைப் புறக்கணிக்கும், அதை எதிர்கொள்ளாது தவிர்க்கும்  மனநிலையே  வதந்திகள் பரவுவதன்  அடிப்படை.

    தளங்களில் கிடைக்கும் செய்திகளின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் செய்திகளை வகைப்படுத்தி உண்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட செய்திகளை முன்னிறுத்தச் சமூக வலைத்தளங்களும் தங்களால் இயன்ற வகையில் முயன்றுவருகின்றன. பொய்யான தகவல் என்றால் அதைத் தளங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது வதந்திகளைக் குறைக்கும் என்பது ஒரு அவர்களின் எதிர்பார்ப்பு.

    ___________________________________________
    கட்டுரைக்கு உதவிய ஆய்வறிக்கைகள்:
    The spreading of misinformation online
    PNAS 2016 : 1517441113v1-201517441.
    Del Vicario et al., PNAS January 4, 2016
    http://www.pnas.org/content/early/2016/01/02/1517441113

    Debunking in a World of Tribes
    arXiv:1510.04267v1 [cs.CY]
    Fabiana Zollo et al.,Submitted on 14 Oct 2015
    http://arxiv.org/pdf/1510.04267v1.pdf

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 11, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு ரிஃபாத் ஷாருக் அவர்கள்

    Rifath Shaarook 0

     

    வல்லமையின் இந்தவார வல்லமையாளர், இந்தியாவின் இளம் அறிவியலாளராகப் பாராட்டப் பட்டுள்ள, தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மாணவரான திருவளர் செல்வன் ரிஃபாத் ஷாருக் (Mohamed ‘Rifath Shaarook’ Raaj M D / https://www.facebook.com/rifath.stechlabs) அவர்கள். இந்தச் சாதனையாளரை வல்லமைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் குவைத் நகர் வாழ் தமிழன்பர் திரு. பி.எம். இப்ராஹீம் (BM Ibrahim / https://www.facebook.com/ibrahimadvt) அவர்கள். சென்ற வாரம் ஜனவரி 3 – 7, 2016, மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 103வது இந்திய அறிவியல் மாநாட்டில் (The 103rd edition of Indian Science Congress – ISC / http://www.isc103.in/) கரூரை அடுத்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக் தனது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஃபாத் ஷாருக் கரூர் ‘கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (Crescent Matric Higher Secondary School) பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்

    இந்திய அறிவியல் மாநாட்டின் சிறுவர்களுக்கான 23ஆம் “ராஷ்ட்ரீய கிஷோர் வைகையானிக் சம்மேளனம்” (23d Rashriya Kishore Vaigyanik Sammelan / Children’s Science Congress) அமைப்பு முன்னெடுத்த மாணவர்களுக்கான போட்டியில், “இயற்கை அடிப்படையில் பருவநிலையைக் கண்டறிதல்“(Understanding Climate with Nature) என்ற கருத்தில் ஆய்வுகள் பள்ளி மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டன. “சாட்டிலாஸ்கோப்“(Sateloscope) என்ற கருவியை தனது ஆசிரியர் பச்சமுத்து (Pachamuth A) அவர்களின் மேற்பார்வையில் வடிவமைத்தார் ரிஃபாத் ஷாருக்.

    Rifath Shaarook1

    சாட்டிலாஸ்கோப் என்பது உருவில் சிறிய ஒரு செயற்கைக்கோள் மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட கருவி (a nano satellite which is a combination of satellite and telescope). பொதுவாக நாம் அறிந்துள்ள செயற்கைக் கோளைவிட உருவில் சிறியதாகவும் எடையில் குறைவாகவும் உள்ளது இந்தக் கருவி. அதனால் குறைந்த எரிபொருளுடன், சிறிய விண்கலம் மூலம் விண்வெளிச் சுற்றுப்பாதையில் இதனை நிறுவிவிட முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள வரிச்சுருள் பாகமானது கருவியைச் சுற்றி ஒரு செயற்கைக் காந்தப்புலத்தை உருவாக்கி, கருவி சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிடுவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரியக்கதிர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தில் இக்கருவியின் பங்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்படும் நிலையில் உள்ள ஒரு கருவி. இத்துடன் செவ்வாய் கிரகத்தின் கனிம வளங்களை ஆராய உதவும் மேலும் இரு கருவிகளையும் (‘Nano Mars Lander and the other is ‘Nano Mars Rover’) செயல்படும் நிலையிலேயே ரிஃபாத் ஷாருக் போட்டிக்காகச் சமர்ப்பித்திருந்தார்.

    Rifath Shaarook2

    சமர்ப்பிக்கப்பட்ட 89 கண்டுபிடிப்புகளில் இறுதிச் சுற்றில் மூன்று மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பிறகு அவற்றிலும் ரிஃபாத் ஷாருக் வடிவமைத்த கருவியே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய அறிவியல் மாநாட்டு வழங்கிய மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பரிசைத் தட்டிச் சென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இவர். இப்பரிசு வியாழனன்று வழங்கப்பட்டு ரிஃபாத் ஷாருக் பாராட்டப் பட்டார்.

    ***

    சுட்டி விகடனின் ‘சீனியர் சுட்டி ஸ்டார்’ பாராட்டைப் பெற்றவரான மாணவர் ரிஃபாத் ஷாருக் இதற்கும் முன்னரே அறிவியல் சாதனைகளுக்காக அறியப்பட்டவர். ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு’ நடத்தும் “இந்திய இளம் அறிவியலாளர் ” போட்டியில் ( ‘Young Scientist India-2015’ organised by Space Kids India) பங்கேற்று நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளிக்கு அருகில் வானிலை ஆய்வுக் கருவியைச் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்குப் பின் சில நாட்களிலேயே நிகழ்த்தப்பட்ட இவரது இச்சாதனை அப்துல் கலாமின் மறைவுக்குச் சிறந்த அஞ்சலியாகக் கருதப்பட்டது.

    Rifath Shaarook

    ‘இங்கிலாந்தின் அதிஉயர குழுவின்’ (U.K. high altitude society) உறுப்பினரான ரிஃபாத் ஷாருக் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (The National Aeronautics and Space Administration – NASA) இணைய தளத்தின் மூலம் தனது விண்வெளி தகவல் அறியும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்பவர். ஒருமுறை அறிவிக்கப்பட்ட செயற்கைக் கோள் போட்டியில் வெளிநாட்டு மாணவர்கள் பங்கு பெற அனுமதியில்லை என்ற குறிப்பிற்குப் பிறகு, பின்னொருநாள் அதனை முயல வேண்டும் என்று திட்டமிட்டார். ஹீலியம் வாயு பலூனுடன் வானிலை தரவுகள் சேகரிக்கும் கருவிகளைப் பொருத்தி, விண்ணில் உள்ள வாயுக்கள் பற்றி பருவநிலை ஆய்வுக்கு உதவும் வகையில் அதனை அதிக உயரத்தில் விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி சாதனை நிகழ்த்தினார்.

    Rifath Shaarook௪

    அதில் இணைக்கப்பட்டிருந்த 10 வகை ஆய்வுக் கருவிகளுடன் 70,000 அடி உயரம் திட்டமிட்டபடி பலூன் உயர்ந்து, 242 கிமீ கடந்து, பலூன் வெடித்து பாராசூட்டின் உதவியுடன் கூத்தானூரில் தரையிறங்கியது. புவியிடத்தைக் குறிக்கும் ஜி பி எஸ் கருவி மூலம் அதனைத் தொடர்ந்து சென்று பருவநிலையைப் பற்றி கருவிகள் பதிவு செய்த தகவல்களை ரிஃபாத் ஷாருக் சேகரித்து வெளியிட்டார். இது போன்ற உயரங்களில் பலூன் பறக்கவிட்டு ஆய்வுகள் செய்யப்படுவதை அன்று வரை வானிலை உயர் ஆய்வு மையங்கள் மட்டுமே மேற்கொண்டுவந்தன. பள்ளிமாணவர் ஒருவர் அத்தகைய செயலை நிகழ்த்திக் காட்டியதே அதன் சிறப்பு. இதற்காகச் சென்ற ஆகஸ்ட் மாதம் பாராட்டப்பட்டவர் ரிஃபாத் ஷாருக்.

    சிறுவயதில் காகித ராக்கெட் செய்து பறக்கவிட்டு விளையாடிய தன்னை உண்மையான ராக்கெட் விடவேண்டும் உற்சாகப்படுத்தியவர் அந்நாட்களில் இஸ்ரோவில் பணிபுரிந்த தனது தந்தை என்று செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரிஃபாத் ஷாருக். இவரை ஊக்கப்படுத்தி அறிவியல் ஆர்வத்தை வளர்க்க உறுதுணையாக இருந்த ரிஃபாத் ஷாருக்கின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இவரது திட்டத்திற்கு உதவி செய்த பிற ஆர்வலர்களும் கூட இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.

    மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின், இந்தியா ஒரு வல்லரசாக உருவாகவேண்டும் என்ற கனவினை நனவாக்க, வலிமையான இந்தியாவை உருவாக்க விரும்பும் இளையபாரதத்தினருக்கு ரிஃபாத் ஷாருக் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதற்காகப் பாராட்டுகள். விண்வெளி ஆராய்வுத் துறை பயன்பெற அவர் பற்பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மேலும் மேலும் உயர்ந்து நாளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்களை வழிநடத்த வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    __________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:
    Facebook : https://www.facebook.com/rifath.stechlabs
    LinkedIn member : https://in.linkedin.com/in/rifath-shaarook-945a6698
    Google.Plus.Com : https://plus.google.com/106488140532656756020/
    youtube.com : https://www.youtube.com/channel/UCFuX8hbTIN60XKd8lI6hH_Q
    Blogger : http://stlppt.blogspot.com/

    __________________________________________________

    செய்திகள் பெற்ற தளங்கள்:
    Tamil Nadu‘s Mohamed Rifath wins 23rd Children Science Congress
    Current Affairs Recap of the Day: 8 January 2016
    https://www.fresherslive.com/news/current-affairs-recap-of-the-week-3-january-to-9-january-2016/

    TN lad’s nano sat project is winner – ICAST
    http://www.icast.org.in/news/2016/jan16/jan07TOI.pdf

    Dharwad boy’s model among best 3 exhibits in children’s congress
    http://www.deccanherald.com/content/521644/dharwad-boys-model-among-3.html

    Chennai teenager launches helium weather balloon
    http://www.deccanchronicle.com/150824/nation-current-affairs/article/chennai-teenager-launches-helium-weather-balloon

    Space Kidz India Sends Payload Concieved By A Teen Into Near Space
    http://technews.co/2015/09/08/space-kidz-india-sends-payload-concieved-by-a-teen-into-near-space/
    __________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எய்ப்பினில் வைப்பென்பது

     

    வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
    துய்த்து வழங்கி யிருபாலு மத்தகத்
    தக்குழி நோக்கி யறஞ்செய்க வஃதன்றோ
    வெய்ப்பினில் வைப்பென் பது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
    துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
    தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
    எய்ப்பினில் வைப்பு என்பது?

    பொருள் விளக்கம்:
    தாம் தேடி வைத்துள்ள செல்வம் எல்லாம் தளர்வுற்ற பிற்கால பயனுக்காக என்று எண்ண வேண்டாம், தாமும் அப்பொருளைப் பயன்படுத்தி, பிறருக்கும் கொடுத்து உதவி செய்து, இம்மை மறுமை என்ற இரு வகை வாழ்வும் சிறப்படையுமாறு, உதவத்தக்கவர்களுக்கு நிதி வழங்கி நல்லறம் செய்வீர் எனில், அதுவன்றோ கேடு சூழும் காலத்தில் உதவும் சேமநிதி போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் அறம் செய்வதே இம்மை மறுமை என்ற இருவகை வாழ்வையும் சிறப்படையச் செய்யும். அந்த அறச்செயலே இடருற்ற காலத்தில் உதவும் செல்வம் போன்றது. ஈட்டும் பொருளின் பெருமை அதனைத் தக்கவாறு பயன்படுத்தி அறம் செய்து எவ்வாழ்விலும் சிறப்புற வாழ்வதில்தான் உள்ளது. இம்மைக்கும் மறுமைக்கும் என இரு வாழ்வையும் செய்யும் அறம் சிறப்புறச் செய்யும் என உணர்த்த விரும்பிய வள்ளுவர்,

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. (குறள்: 23)

    இம்மை மறுமை என இரு வாழ்வின் தன்மை உணர்ந்து, அறத்தைச் செய்பவரின் பெருமையே உலகில் சிறப்படைகிறது என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எல்லாம் பொய் அட்டூணே வாய்

     

    சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
    செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
    எல்லாம்பொய் அட்டூணே வாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
    செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
    எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.

    பொருள் விளக்கம்:
    தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.

    பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)

    வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.

    Share