Author: நிர்மலா ராகவன்

  • நம்மோடு பிறரும் மகிழ

    நம்மோடு பிறரும் மகிழ

    -நிர்மலா ராகவன்

    நலம்…நலமறிய ஆவல் (159)

    நம்மோடு பிறரும் மகிழ

    இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்க முடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள்.

    `என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

    கதை (பார்த்தது)

    சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்குப் பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது.

    அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது.

    சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள்.

    உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள்.

    `என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!)

    அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள்.

    நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம்.

    ராதாவைப் போன்றவர்கள், `நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள்.

    இத்தகைய எண்ணப் போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது.

    நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்தத் தடையேது!

    மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கைத் தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு.

    வெற்றி என்பது கொள்ளைப் பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள்.

    பில் கேட்ஸ் Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்?

    பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது.

    அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

    இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி — குண்டர் கும்பல் தலைவரைப்போல் — தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது.

    நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன்.

    தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை.

    கதை

    பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள்.

    `இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், `இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’

    யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம்.

    ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: `ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’.

    எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு.

    ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும்.

    கதை

    `நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.

    அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே!

    ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. `இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு.

    `இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது!

    கதை

    சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.

    `இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்,” என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.

    “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள்.

    `ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, “உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன்.

    பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது.

    அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், `அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது.

    “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள்.

    கதை

    ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

    நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில்.

    “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது.

    உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை.

    பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா?

    ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்?

    Share
  • மகிழ்ச்சி என்பது மாயை இல்லை!

    மகிழ்ச்சி என்பது மாயை இல்லை!

    நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (158)

    `நாம் அவரைப் போலவா? அவர் மிக்க திறமை வாய்ந்தவர்!’ என்று யாரையாவது பார்த்துப் பெருமூச்சு விடுகிறவர்கள் அநேகர்.

    திறமை ஓரளவுக்குதான் ஒருவரை உயர்த்தும். அந்நிலை குலையாமலிருக்க நற்பண்பு அவசியம்.

    கதை

    பதின்ம வயதில் கலைத் துறையில் தனக்கு அசாத்திய ஆர்வத்துடன், திறமையும் இருப்பதைப் புரிந்துகொண்டார் விவேகன். சில விருதுகளைப் பெற்றதும், கர்வம் தலைக்கேறியது. அவர் மிகச் சிறந்தவர் – அவரைப் பொறுத்தவரை. ஓயாது, அதே துறையிலிருந்த பிறரைப் பழித்தார் – அவர்கள் முன்னிலையிலேயே!

    பிறரது உணர்ச்சிகள் பொருட்டல்ல என்று நினைப்பதுபோல் நடப்பவர்களுக்கு அன்பை யாரிடமிருந்து பெறமுடியும்? அன்பு கிட்டாததால் மகிழ்ச்சியும் குன்றியது.

    மகிழ்ச்சி மாயை இல்லை. அதை வெளியில் எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளேயேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது.

    “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு என்றால், தன்னைத் தானே புரிந்துகொள்வது விவேகம்” (ஒரு தத்துவ ஞானி).

    ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, கீழே நோக்கி, `அடேயப்பா! எத்தனைப் படிகளைக் கடந்துவிட்டேன்!’ என்று பெருமிதம் கொண்டுவிட்டால், தலைசுற்றிப் போகாதா! எத்தனை வெற்றி பெற்றாலும், தன்னையே வியந்துகொள்வதும் அதுபோல்தான். வாழ்வில் சறுக்காமலிருக்க எளிமை அவசியம்.

    `அவ்வளவு பெரிய மனிதர் பொது இடத்தில் என்னை அப்படித் தூக்கியெறிந்து பேசியிருப்பாரா? எனக்கு அவ்வளவாக திறமை இல்லை!’ என்று நொந்துபோயினர் விவேகனது அகந்தைக்குப் பலியான சிலர்.

    பிறரிடம் என்ன குறை என்பதை ஆராய்ந்தபடியே இருப்பவரை எதற்குப் பொருட்படுத்த வேண்டும்? `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுத் தள்ள வேண்டியதுதான்.

    பிறர் என்ன நினைப்பார்களோ, எப்படியெல்லாம் நம்மிடம் குறை காண்பார்களோ என்று யோசித்தே ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் நம்மை நாமே உணர முடியாது போய்விடும். மகிழ்ச்சி பறிபோய், மன உளைச்சல்தான் மிஞ்சும்.

    நம் நலனை நாடும் ஒருசிலர் பலர் முன்னிலையில் உரக்கப் புகழ்ந்து, குறைகளைத் தனிமையில், மெல்லக் கூறுவார்கள். புகழ்ச்சியினால் கர்வம் கொள்ளாது, அறிவுரையில் உபயோகமானதை மட்டும் ஆராய்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

    புதிதாக மணமாகி, கூட்டுக் குடும்பத்துடன் வாழ வந்தவள் கீதா. பலருடனும் ஒத்துப் போகத்தான் முடிவெடுத்து வந்தாள். ஆனால், மாமியாரும் நாத்தனார்களும் அவள் செய்த ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுபிடித்து, அதைப் பலரிடமும் கேலியாகக் கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை.

    அனுசரணையாக இருக்க முயன்ற கணவனும், `பெண்டாட்டிதாசன்’ என்று கேலிப் பொருளாக ஆனான். பிறரது அதிகாரமும், `தன்னை ஒரு பொருட்டாக எவரும் மதிக்கவில்லையே!’ என்ற அவமானமும் கீதாவின் உடல்நிலையைப் பாதித்தன.

    ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர், கீதாவின் நிலைமை மோசமாகியது. அவள் பெற்ற குழந்தையிடம் அவளுக்கு எந்த உரிமையும் இல்லாததுபோல், அவள் செய்வதில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்தார்கள்.

    அப்போது கீதா செய்திருக்க வேண்டியது என்ன?

    எந்தத் தவறும் தன்மீது இல்லை என்று தெளிந்து, தனியாகப் போயிருக்கலாம். அப்போது கிடைக்கும் சுதந்திரத்தால் நிம்மதியும் எழுந்திருக்கும். குழந்தையும் இரு மாறுபட்ட கட்சிகளால் ஆட்டுவிக்கப்படாது, தாயின் வார்த்தைக்கு மட்டும் கட்டுப்பட்டு வளரும்.

    `வயதானவர்களை விட்டு நாங்கள் தனிக்குடித்தனம் போனால், அவர்கள் பாவம், இல்லையா? பிறர் பழிப்பார்கள்!’ என்று அஞ்சிப் பொறுமை காக்கலாம். பொறுக்க முடியாவிட்டாலும், மாற்றத்திற்குப் பயந்து ஒரே நிலையில் இருப்பது பொறுமையா?

    அப்படி, எதையும் தாங்கிய மருமகள் கமலாட்சி என்னிடம் கூறியது: “என் கணவர், `I hate you, dee” (உன்னை வெறுக்கிறேன்டி) என்று சொல்லிவிட்டார்”. அதற்காகவே காத்திருந்ததுபோல் பெருமை தொனித்தது அவள் குரலில்.

    அக்குடும்பத்துக்கு மருமகளாக வந்திருந்த மற்ற இரு பெண்களும் தம் மகிழ்ச்சியைப் பிறருக்காக விட்டுக் கொடுக்க விரும்பாது தனியாகப் போய்விட்டிருந்தார்கள். தமக்கு விரும்பியதைச் செய்ய முடிந்தது. குழந்தைகளைத் தம் விருப்பப்படி பல உபயோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர். `இதெல்லாம் வீண் வேலை! பணம்தான் விரயமாகும்!’ என்று பழிக்க, யாரும் அருகில் இருக்கவில்லை.

    புக்ககத்தினர் கமலாட்சியின் நல்ல குணத்தைப் புரிந்து, அதிகக் குறுக்கீடு இல்லாமல் அவளுக்கு மரியாதை கொடுத்து நடத்தியிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.

    `தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போக வந்தவள்!’ என்று தாய்மார்கள் நினைத்து, மருமகளுடன் போட்டி போடும்போது எல்லாருடைய மகிழ்ச்சியும் பறிபோய்விடுகிறது.

    கதை

    அன்பான பெற்றோரை விட்டு வெகுதூரம் வந்திருந்த சுரேகா, அடிக்கடி நீண்ட கடிதம் எழுதினாள்.

    வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஓய்ந்த நேரத்தில் அவள் எழுதியதால், வேறு எப்படி குறை சொல்வது என்று மாமியாருக்குப் புரியவில்லை.

    “நீ இவ்வளவு நீண்ட கடிதம் எழுதித் தள்ளினால், அதை யாரும் படிக்கப் போவதில்லை!” என்றாள், கேலிச் சிரிப்புடன்.

    தான் என்ன செய்தாலும் மாமியார் ஏனோ அதில் குறை கண்டுபிடிக்கிறாள் என்று புரிந்தது, சுரேகாவிற்கு. அவள் அயரவில்லை. நிகழ்காலம் பொறுக்க முடியாது இருந்தபோது, கடந்த காலத்தில் பெற்றோரிடமிருந்து பெற்ற அன்பை எண்ணி ஆறுதல் பெறும் முயற்சியிலிருந்து மாறவில்லை.

    நமக்குப் பிடித்த ஆக்ககரமான செயல்களை முயன்று செய்கையிலேயே மகிழ்ச்சி கிட்டிவிடுகிறது. அடுத்தவருக்காக அதை விட்டுக் கொடுப்பானேன்!

    கூட்டுக் குடும்பத்தில், `உனக்குப் பிடித்ததைச் செய்!’ என்று, வயது வந்தவர்களுக்கு அனுமதி கொடுத்து, சற்றே விலகியிருந்தால், அவர்கள் ஏன் பிரிந்து போக நினைப்பார்கள்? பலருடன் இணைந்திருந்தால், பக்க பலமும் பாதுகாப்பும் இருக்கும். செலவும் கணிசமாகக் குறையுமே!

    `எல்லாரும் செய்கிறார்களே!’ என்று மந்தையாடுபோல் நடக்காது, தமக்கென ஒரு தனிப் பாதை வகுத்துக்கொள்ளும் துணிச்சல் வெகு சிலருக்கே இருக்கிறது.

    கதை (படித்தது)

    சீனாவில் ஒரு கோடீஸ்வரர் அண்மையில் இறந்தபோது, அவருடைய சொத்து பூராவும் அனாதரவான குழந்தைகளின் கல்விக்கும் இதர தர்ம ஸ்தாபனங்களுக்கும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும், அவருக்கு ஒரே மகன்!

    இருபது வருடங்களுக்கு முன்னரே, “நீ சுயமாக உழைத்துச் சம்பாதித்தால்தான் உனக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டும். நான் சேர்த்த பணம் உனக்கு வேண்டாம்,” என்று தந்தை கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தார் மகன். இப்போது தனது நாற்பதாவது வயதில், தந்தையின் செயலால் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

    தம் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, `அன்பு’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக வங்கியில் பணம் சேமிப்பவர்கள், தம் `தியாகம்’ குழந்தைகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சி அளிக்குமா என்று யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    கதை

    தந்தை விட்டுப் போன பெரும் சொத்தால், உத்தியோகத்திற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டவர் சிவகுரு.

    எளிதாகப் பணம் கிடைக்கும்போது அதன் அருமை புரியுமா? மனைவியுடன் உல்லாசப் பயணம், வெளியூர்களில் நடக்கும் இசைக் கச்சேரிகள் என்று பொழுதைப் போக்கியவருக்கு இருபது வருடங்களுக்குப் பின் அந்த வாழ்க்கை அலுத்துப் போயிற்று.

    மனம்போனபடி செலவிட்டு, எதிலும் மகிழ்ச்சி கிடைக்காது போக, பணமும் மிகக் குறைந்துவிட்ட நிலையில் வெறுமைதான் மிஞ்சியது.

    சிவகுருவோடு ஒப்பிட்டால், சீனாக்கார செல்வந்தர் அறிவாளி. மகன்மேல், அவனது நிரந்தரமான மகிழ்ச்சியில், அக்கறை கொண்டவர். முக்கியமாக, மகனும் தன்னைப்போல் சாமர்த்தியசாலிதான் என்ற நம்பிக்கையும், அலாதி துணிச்சலும் கொண்டவர்.

    இக்குணங்களால்தான் பெரும் பொருள் ஈட்ட முடிந்ததோ?

     

    Pic courtesy: http://getdrawings.com

    Share
  • அன்பின் பெயரால், அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிக்கலாமோ!

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (157)

    திருமணமான பின், ` நாம் இருவர் அல்லர், ஒருவரே!’ என்று பிரதிக்ஞை செய்துகொள்வதைக் காதல் நவீனங்களிலோ, திரைப்படங்களிலோ ரசிக்க முடியும். அவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டு சொக்குவர் இள வயதினர்.

    நிழலை நிஜமென எண்ணி, வாழ்க்கையிலும் இப்படி நடக்க ஒருவர் மற்றவரைத் தூண்டுவது கொடுமை. ஒருவரது சுதந்திரத்தைப் பறித்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் வழி இது.

    கதை

    மயக்கும் படலம்

    தன்னால் ஏன் முன்போல் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை என்று பிரமிளா குழம்பினாள். கணவனை நினைத்தால் கோபமும் பயமும் ஒருங்கே எழுந்தன. இத்தனைக்கும், காதலித்து மணந்த கணவன்!

    அவன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவள் அழகில் மயங்கியதாக அடிக்கடி சொல்வான் கேசவன். புகழுக்கு மயங்காத பெண்களும் உண்டோ! பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய், இப்படி என்னென்னவோ செய்து அவளைத் தன் வசப்படுத்தி இருந்தான்.

    விளையாட்டில்லை

    சில காலம் கழித்து, அவளை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான் கேசவன். அவள் வருந்தினாலோ, கோபித்தாலோ, `உனக்கு விளையாட்டாகப் பேசுவதுகூடப் புரியாதா?’ என்று சமாதானப்படுத்திவிடுவான். திரும்பவும், பரிசுப் பொருட்கள், உல்லாசப் பயணங்கள் தொடரும்.

    ‘இவ்வளவு அன்பாக இருப்பவரைத் தான்தான் தவறாக எண்ணிவிட்டோமோ!’ என்று ஒரு பெண்ணை யோசிக்கவைக்கும் உத்தி இது. தன்னையுமறியாமல், மேலும் கட்டுப்படுத்தப்படுவதற்கு உட்படுகிறாள். உணர்ச்சிபூர்வமான வதை இது.

    குற்றச்சாட்டுகள்

    அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையோ, உதவியையோ பாராட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவள் மாறுபட்டிருந்தாள். அவனைப்போல் யோசிக்கத் தெரியவில்லை. அவனோ, அவளும் தன்னை அப்படியெல்லாம் புகழவேண்டும் என்று எதிர்பார்த்தான். ஏமாற்றம் எரிச்சலாகியது.

    திருமணத்திற்கு முன், `உனக்குச் சூடிதார், குர்த்தாதான் அழகாக இருக்கிறது!’ என்று கேசவன் சிலாகித்தபோது, பெருமையாக உணர்ந்திருந்தாள் பிரமிளா. அவனுக்குப் பிடித்த வெளிர்நீல வண்ணத்திலேயே அவளுடைய பல ஆடைகள் அமைந்திருக்கும். தனக்கு என்ன உவப்பாக இருக்கும் என்பதையே மறந்து, காதலனின் பாராட்டுக்காகவே எதையும் செய்த காலம் அது.

    திருமணமாகி சில மாதங்கள் கழித்து, அவளுக்குப் பிடித்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் புடவை வாங்கிக்கொண்டபோது, கேசவன் முகத்தைச் சுளித்தான்.

    “என்னோட வரும்போது, இந்தக் கண்ராவியையெல்லாம் கட்டிட்டு வராதே!’ என்று உத்தரவிட்டான். “ஒன் கருப்புக் கலருக்கு இது நல்லாவா இருக்கு?”

    பிரமிளாவின் நீண்ட பின்னலை, `இதாலேதான் என்னைக் கட்டிப் போட்டுட்டே!’என்று புகழ்ந்தது ஒரு காலம். நாகரிகத் தோற்றம் என்று கருதி, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்ட அன்று பூகம்பமே வெடித்தது.

    “எனக்கு உன் நீண்ட முடி எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே! என்னை வருத்தப்பட வைக்க வேண்டுமென்றேதான் ஒவ்வொரு காரியமும் செய்கிறாய்!” என்று பொரிந்தவன், “யாரை மயக்க?” என்று தாக்கினான்.

    `உனக்கு நான் தொலைந்தால்தான் நிம்மதி!’

    இந்த பாணத்தில் எந்தப் பெண்ணும் மசிந்துவிடுவாள். குற்ற உணர்ச்சி எழ, அந்த உறவில் தங்கிவிடுவாள்.

    எதனால் கட்டுப்பாடு?

    இப்படி நடப்பவர், தீயவர் என்பதில்லை. முதலில் கூறியதுபோல், ஆண்-பெண் உறவைப் பற்றி புத்தகங்களிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ அறிந்து, அதுதான் இனிமையாக வாழும் முறை என்று நம்பியவர். அவரது குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம்.

    தனிமைப்படுத்து

    ஒரு முறை, பிரமிளா வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்கள் ஒன்றாகப் படம் பார்க்கப் போனபோது, “நீ எதுக்கும்மா அவர்களுடன் போக வேண்டும்? நான் அழைத்துப் போகிறேன்!” என்று அன்பு சொட்டச் சொட்ட கேசவன் கூறியபோது, அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

    அபூர்வமாக, யாராவது உறவினர் அவர்கள் வீட்டுக்கு வந்தால், என்றோ, ஏதோ செய்ததற்காக அவளுக்குத் திட்டு விழும். `இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இனி நம் வீட்டுக்கு வரக்கூடாது!’ என்று மிரட்டுவான்.

    `நான் சிநேகிதிகளுடன் தொலைபேசியில் பேசும்போது, தவறாது, கழிப்பறையில் அளவுக்கு மீறிய ஓசை எழுப்புவார் என் கணவர்!’ என்று ஒரு பெண்மணி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். ஆதரவுக் கரம் அளிக்க யாருமின்றி, கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் நிலையை உண்டாக்கச் செய்த தந்திரம் அது.

    இதேபோல், பிரமிளாவின் உறவினர் மற்றும் நண்பர் குழாம் சுருங்கியது. பக்கபலமாக யாருமின்றி, தனித்துப் போனாள்.

    எது செய்ய ஆரம்பிக்கும்போதும், `அவர் என்ன சொல்வாரோ!’ என்ற தடுமாற்றமும் பயமும் எழுந்தன பிரமிளாவுக்கு. தன்னம்பிக்கை வீழ்ச்சி கண்டது.

    பிறரிடம் தன் அவலத்தைச் சொல்லி அனுதாபம் பெற அவளுக்கு விருப்பமில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை. நம்பியவனே இப்படி மாறிவிட்டிருந்தபோது, யாரைத்தான் நம்புவது!

    அத்துடன், `வீட்டில் எது நடந்தாலும், நான்கு சுவருக்குள் இருக்கவேண்டும்!’ என்று சிறு வயதிலிருந்தே போதனை வேறு கிடைத்திருந்ததே!

    எங்கேயும் எப்போதும்

    தம்பதியர்களிடையே மட்டும்தான் இப்படிப்பட்ட கட்டுப்படுத்துதல் இருக்கும் என்றில்லை. எந்த வயதிலும், ஏழையோ, பணக்காரரோ, யாரோ ஒருவர் இன்னொருவரைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம், `நான் பலசாலிதான்!’ என்று தன்னையே நம்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோகூட இப்படி நடப்பது சகஜம். ஒரு வித்தியாசம்: சிரித்த முகத்துடன் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

    ஏன் சிரித்த முகம்?

    `இவர் நம்மைக் கட்டுப்படுத்த முயலவில்லை, நம்மேல் மிகுந்த அக்கறையால் அப்படிச் செய்கிறார்!’ என்று எண்ணிக்கொள்ள வேண்டுமாம்!

    வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம் போன்ற பலவற்றால் நாம் பிறரிடமிருந்து மாறுபடுகிறோம். இது புரியாது, `எல்லாரும் என்னைப்போல், நான் சொல்கிறபடிதான் இருக்கவேண்டும்!’ என்று வாதம் புரிந்தால் எப்படி!

    உதவி அவருக்குத்தான் தேவைப்படுகிறது. இது புரிந்தால், மற்றவர் தன் சுதந்திரத்தை இழக்காமல் தன்னையே காத்துக்கொள்ள முடியும்.

    எப்படித் தற்காத்துக்கொள்வது?

    `நீ என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. எதற்கு உன் சக்தியை விரயமாக்குகிறாய்?’ என்ற நேரடி தாக்குதல் எனக்குப் பலனளித்திருக்கிறது.

    ஆனால், உணர்ச்சிபூர்வமான வதையாக ஆரம்பித்தது வன்முறையாக மாறினால், அந்த உறவிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

    கதை

    ஒரு விருந்தில் சந்தித்தேன் அந்த இளம் தம்பதிகளை. காதலர்களாக இருந்தபோது, காதலி சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தவன் லீ.

    காதலியோ அழகி. அவளை வேறு யாராவது கொத்திப் போய்விட்டால்?

    `சண்டை போடத்தான் காலம் பூராவும் இருக்கிறதே! இப்போதே என்ன அவசரம்?’ என்றுகூட அவன் நினைத்திருக்கலாம்.

    திருமணமான பின், ஏதாவது பானத்தைக் குடிக்கும்போது, அவன் உறிஞ்சுவதைப் பார்த்து அழகான மனைவி முகம் சுளித்தாள்.

    `நாமென்ன ஜப்பானிலா இருக்கிறோம்! அங்குதான் மிகுந்த ஓசையுடன் உறிஞ்சினால்தான் பாராட்டு என்று நினைப்பார்கள்!’ என்று தோன்ற, `அசிங்கம்!’ என்று கணவனைக் கண்டித்தாள்.

    அடுத்தமுறை, உறிஞ்சும் ஓசை அதிகமாயிற்று.

    “நான் ஏதாவது `கூடாது’ என்று சொன்னால், லீ இன்னும் அதிகமாகச் செய்கிறார். அதனால், நான் அவரை எதுவும் சொல்வதில்லை,” என்று அவள் சொல்லக் கேட்டு, புன்னகைத்தேன். மௌனமான எதிர்ப்பு பலனளிக்கும் என்று புரிந்தவன்!

    உறவு என்பது மகிழ்ச்சிக்காக

    அச்சம் விளைவிப்பதாகவோ, அளவுக்கு அதிகமான அன்பால் திக்குமுக்காட வைப்பதாகவோ உறவு இருந்தால் மாறுதிசை மின்னோட்டத்தில் (alternating current) கையை வைத்ததுபோல்தான். மகிழ்ச்சி கிடைக்குமா?

    அட, மகிழ்ச்சியை விடுங்கள்! நிம்மதி தொலைந்து போய்விடுமே!

    Pic courtesy: http://getdrawings.com

    Share
  • மேல்படிப்பு வேண்டாம்

    -நிர்மலா ராகவன்

    (நலம்… நலமறிய ஆவல் – 156)

    வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள், சில பதின்ம வயதுப் பையன்கள்.

    ஏன்?

    `எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும் உசிரை வாங்குவாங்க!’

    அப்போது அடைந்த அலுப்பு எந்த வயதிலும் மறைவதில்லை.

    `நல்லவேளை! நான் நல்லா பாஸ் பண்ணலே. இல்லாட்டி, படி, படின்னு வீட்டில உசிரை எடுத்திருப்பாங்க!’ என்று நிம்மதியுடன் என்னிடம் கூறியவருக்கு வயது நாற்பது.

    அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆனால், வருத்தமும் அடையாது இருக்க முடியவில்லை. உயர்கல்வி இல்லாது, வாழ்க்கையில் ஓரளவுதான் அவரால் உயர முடிந்தது.

    பெற்றோருக்குப் பயந்தோ, பணிந்தோ, வேண்டா வெறுப்பாக புத்தகத்தைக் கையில் எடுத்தால், நல்ல தேர்ச்சியையா அடைய முடியும்?

    பெற்றோரின் தொணதொணப்பு அதிகரிக்க, அதிகரிக்க, பையன்களின் தன்னம்பிக்கை குறைவதுதான் பலன்.

    “ஏன் இப்படி அவன் உயிரை எடுக்கிறீர்கள்?” என்று நான் ஒரு தாயைக் கேட்டேன்.

    “இவ்வளவு சொல்லியும் அவனால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியவில்லையே! நாங்கள் சொல்லாவிட்டால், தானாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவா போகிறான்?” என்ற எதிர்க்கேள்வி பிறந்தது.

    படிக்கப் பிடிக்காது

    மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் சுதந்திரமாக நடக்கத் தலைப்படுவார்கள். அவர்கள் போக்கில் விட்டால், அவர்களது திறமை வெளிப்படும். அவ்வப்போது வழிகாட்டினாலே போதும்.

    எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அதற்குப் பிற்காலத்தில் படிக்கப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

    குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு புத்தகத்தில் ஏதாவது படத்தைக் காட்டினால், தலையை வேறு புறம் திருப்பிக்கொள்ளும். முகவாயைப் பிடித்து, புத்தகம் இருக்கும் திசையில் திருப்பினால், தலை இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ளும்! (என் அனுபவத்தில், பெண் குழந்தைகள் இப்படிச் செய்வதில்லை. பள்ளிப் பருவத்திற்குப் பின் படிக்கவே பிடிக்காமல் போவது ஏனென்றால், எப்போதும் படித்தால் அறிவு வளர்ந்துவிடும் என்று நச்சரித்த பெற்றோர்களால்தான். இவர்கள், அபூர்வமாக, காதல் நவீனங்களை மட்டும் படிப்பார்கள்).

    இம்மாதிரியான குழந்தைகள் அறிவில் குறைந்தவர்கள் என்பதில்லை. அவர்களுக்கு விளையாட்டிலோ, நுண்கலைகளிலோ அலாதி ஈடுபாடு இருக்கும். அவரவர் போக்கிலேயே விட்டால், புத்தகத்தை எடுத்துப் படிக்காவிட்டாலும், பரீட்சையில் தோற்கமாட்டார்கள். `இந்த வரைக்கும் பெற்றோர் தடை செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று, சற்றுப் படித்தும் வைத்திருப்பார்கள்.

    `நீ படித்தே நான் பார்த்ததில்லையே! எப்படி பாஸ் பண்ணினே?’ என்று இப்படிப்பட்ட ஒரு சிறுவனை நான் அதிசயப்பட்டுக் கேட்டதற்கு, `பள்ளியில் பெண்கள் ஓயாது பாடங்களை விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். மௌனமாக அதை கேட்டுக்கொண்டிருப்பேன்!’ என்று பதில் வந்தது.

    பலரும் எழுத்துகளை பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கிறார்கள். காதில் கேட்டாலே போதும். புத்தகங்கள் இல்லாத காலத்தில் செவிவழி அறிவைப் போதித்தது நீடித்த பலனை அளிக்கவில்லையா?

    செய்வதையே செய்யணுமா?

    வழக்கமாக, சில காரியங்களையே ஒன்றையடுத்து ஒன்று செய்ய நேரும்போது அலுப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவும் அவசியம். செய்வதற்கு எதுவும் இல்லாமல் போகிற போதுதான் மனம் வேண்டாத யோசனைகளிலோ, காரியங்களிலோ ஈடுபடும்.

    பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தால் காலணியைக் கழற்றுவதுபோல், வீட்டுப் பாடம் செய்வதும் பழக்கமாகிவிடும்.

    இது புரியாது, சில தாய்மார்கள், பிள்ளைகள் வீட்டுக்குள் நுழையும்போதே, `வீட்டுப்பாடம் இருக்கா? செஞ்சு முடி!’ என்று ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துவார்கள். இது கசப்பில்தான் கொண்டுவிடும்.

    `இவனுக்கு ஒவ்வொண்ணையும் நான் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கணும்!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமை பேசுவது வீண்.

    பதின்ம வயதுச் சிறுவர்கள், சலிக்காது வீட்டு வேலைகளில் உதவ

    ஒவ்வொன்றாகச் சொன்னால்தான் நச்சரிப்பு. ஒன்று, இரண்டு என்று காகிதத்தில் பலவற்றை எழுதி வைத்துவிடலாம். எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறோம், அல்லவா?

    என்னால் முடியும்!

    சிறுவர்களுக்கு மூன்று வயதிலேயே மின்சாரச் சாதனங்களில் அலாதி ஈடுபாடு வந்துவிடும். மூன்று வயதில் தானே அவற்றை இயக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துவிடும்.

    இது புரிந்து, என் மகனிடம், `ஸ்விட்சைப் போடு!’ என்று பழக்கினேன். (வயதுக்கேற்ற வேலையைத்தான் கொடுக்க வேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது).

    ஒரு முறை, துணி துவைக்கும் இயந்திரத்தைப் அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கதவைத் திறக்க, வெள்ளப்பெருக்கு!

    ப்ளெண்டரை மூடுமுன்னரே ஆர்வக் கோளாறுடன் ஸ்விட்சைத் தட்ட, அதற்குள்ளிருந்த அனைத்தும் வெளியே பீய்ச்சி அடித்தது.

    இரண்டு முறையும் பயந்து, அவன் அலறியபடி பின்னால் ஓட, `போனாப் போறது! இனிமே நான் சொல்றச்சே நிறுத்து!’ என்று சமாதானப்படுத்தியபடி, அவனை அணைத்தேன்.

    தவறு செய்தவர்களே, `இப்படிச் செய்துவிட்டோமே!’ என்று வருத்தப்படும்போது, எதற்காகத் தண்டிப்பது! பெரிது பண்ணாது விட்டுவிட்டால், அடுத்த முறை கவனமாக இருப்பார்கள்.

    மாறாக, தண்டித்து, அதைப் பற்றிக் கேலியாகவே பேசிக்கொண்டிருந்தால், `மீண்டும் தப்பு செய்துவிடுவோமோ?’ என்ற பயத்திலேயே காரியம் கெட்டுப்போகும்.

    கதை

    இரண்டு லிட்டர் எண்ணெய் கொண்ட தகரக் குவளையை என்னிடமிருந்து பிடுங்கினான் என் மூன்று வயதுப் பேரன்.

    அவன் அதைத் தூக்க முடியாது தூக்கி வருவதைப் பார்த்த சில ஆண்கள், என்னை வெறுப்புடன் பார்த்தார்கள் – நான் அவனை வேலை வாங்குவதாக எண்ணி.

    “எங்கிட்ட குடு,” என்று நான் கைநீட்ட, “நான் boy! என்னால் முடியும்!” என்று மறுத்தான்.

    ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்குப் புரிந்தது, நான் ஏன் குழந்தையை `கஷ்டப்படுத்துகிறேன்’ என்று.

    அடுத்த முறை, ஒரு கூடையில் சில சாமான்களைப் போட்டு, அவனைத் தள்ளிக்கொண்டு வரச்செய்தேன். அவனுக்கு மிகப் பெருமை. `நான் help பண்ணினேன்!’ என்று தாயிடம் பீற்றிக்கொண்டான்.

    கொஞ்சுவானேன்?

    `குழந்தை! அவனால் என்ன முடியும்!’ என்று அவனுக்கான வேலைகளையும் பிறர் செய்தால், சுயமாக நடக்கத் தெரியாது, பிறரைச் சார்ந்திருக்கவே தோன்றும்.

    ஓயாமல் கொஞ்சுவதைவிட அவர்களால் இயன்ற வேலைகளைக் கொடுத்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும்.

    இணைந்து செய்வது

    குழந்தைகள் விளையாடிவிட்டுத் தம் விளையாட்டுச் சாமான்களைத் தரை பூராவும் பரப்பிவிட்டுப் போவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

    `நீதான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்!’ இந்த அதிகாரத்தால் அவனுக்கு அழுகைதான் வரும். (தவறு)

    `வா! நாம்ப ரெண்டுபேரும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம். நடக்கிறபோது கால்லே குத்திடுமே!’ (சரி)

    எந்தக் காரியமானாலும், விளையாட்டுபோல் சேர்ந்து செய்பவருடன் உள்ள நெருக்கம் அதிகரிக்கும். (பண்டிகைகளில் குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும்போதும், இணைந்து சமைக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!)

    பாராட்டும் அவசியம்

    தவறு செய்யும்போது தண்டிப்பதில் குறியாக இருப்பவர்கள் குழந்தைகள் உருப்படியாக ஏதாவது செய்யும்போது அதைப் பாராட்டத் தவறிவிடுவார்கள்.

    பாராட்டினால்தானே தொடர்ந்து நல்வழியில் செல்லத் தோன்றும்?

    எல்லா இனங்களுக்கும், எந்த வயதிலும், பாராட்டு புரிகிறது.

    கதை

    எங்கள் வீட்டில் வளரும் பூனைக்குட்டி தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, பெரிய பூனைக்கு வைக்கும் ஆகாரத்திற்கும் போட்டி போடும்.

    பல முறை தடுத்தபின் அதற்குப் புரிந்தது. ஒரு முறை மெல்ல விலக, “குட்டி சமத்து!” என்று பாராட்டினேன்.

    கண்ணை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தது, அதை ஆமோதிக்கும் வகையில்!

    சொன்னபடி செய்

    பெற்றோர் தம் வாக்கைக் காப்பாற்றத் தவறும்போது பிள்ளைகளின் மதிப்பையும் இழக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

    “இன்று எனக்கு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கான பாட்டுப் பயிற்சி இருக்கிறது,” என்று பூரிப்புடன் சொன்னான், என்னிடம் படிக்க வந்த அமீர்.

    குறித்த நேரத்தில் தாய் வரவில்லை. பையனின் படபடப்பைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    வழக்கம்போல், இரண்டு மணி நேரம் கழித்து வந்தவளிடம், “நீங்கள் அரை மணியிலேயே வந்துவிடுவீர்கள் என்று அமீர் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தான், பாவம்!’ என்றேன்.

    அலட்சியமாகக் கையை வீசியபடி, சூள் கொட்டினாள். அவளுக்கு மகனுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியமில்லை.

    பெற்றோரின் கட்டாயத்தால் படிப்பில் நாட்டமிழந்த பலருள் அமீரும் ஒருவன்.

    Share
  • குடும்பம் என்றாலே குழப்பம்தான்!

    – நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 155)     

    ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது.

    கதை

    வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி!

    மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்!

    “நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.

    அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது!

    “உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள்.

    கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது.

    “நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?”

    வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான்.

    நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே!

    நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், `அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

    வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று.

    தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!”

    மகளுக்குப் பொறுப்பு வந்தது.

    விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன!

    “என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு.

    இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

    கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும்.

    எதற்காக வளர்ப்பது?

    குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும்.

    `நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும்.

    வயதுக்கேற்ற பொறுப்பு

    குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா?

    “எடுத்து, சரியா உள்ளே போடு!”

    இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது.

    வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான்.

    குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள்.

    என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன்.

    உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள்.

    சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

    அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன்.

    பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!”

    “ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில்.

    “தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன்.

    ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்!

    இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது!

    ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும்

    என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள்.

    உற்றவரைப் பார்த்து, `நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.

    குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது.

    இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்!

    சற்று நிதானம் பிறந்ததும், `நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள்.

    மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது.

    குழந்தைகளின் எதிர்ப்பு

    தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை.

    கதை

    தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான்.

    ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன.

    அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்!

    நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன்.

    அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது?

    “சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!“ என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான்.

    (ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: `அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’)

    வித்தியாசமான வளர்ப்புமுறை

    சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள்.

    சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: `உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’

    பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்?

    `எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள்.

    Share
  • அடித்தால்தான் ஆசிரியை!

    நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 154)

    ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிக்கூடத்தில் அவ்வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருந்தேன்.

    `ஐயோ! அந்தப் பள்ளிக்கூடமா?’ என்று என்னைப் பார்த்துப் பிறர் பரிதாபப்பட்டது ஏனென்று பிறகுதான் புரியத் தொடங்கியது.

    “டீச்சர் எங்களை அடிப்பதே கிடையாது. நாங்கள் எதற்கு நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்?” பதினான்கு வயதான அந்த மாணவர்கள் என்னிடம் சவால் விட்டார்கள்.

    வேறு வழியின்றி, மளிகைக் கடையில் ஒரு பிரம்பை வாங்கிக்கொண்டு போனேன்.

    “உங்களுக்கு அடிதானே வேண்டும்? இதோ பாருங்கள்!” என்று பிரம்பை மேலும் கீழும் ஆட்டியபடி, நிமிர்ந்த நடையுடன். (ஆங்கிலப் படம் ஒன்றில், குண்டர் கும்பல் தலைவன் செய்ததைப் பார்த்துத்தான்!)

    “வாவ்! டீச்சர் terror, lah! (பயங்கரமானவள்!)” என்ற பாராட்டும்(?) பெற்றேன்!

    எவராலும் அவர்களை அடக்கவே முடியாதிருந்தது. வகுப்பில் கண்டபடி ஓடுவார்கள், கூச்சலிடுவார்கள்.

    யாராவது ஒருவன் தப்பித் தவறி, “ஏய்! டீச்சர் பேசுவது காதில் விழவில்லை. வாயை மூடுங்கள்!” என்று கண்டிக்கப் பார்த்தாலும், “டீச்சர் உரக்கப் பேசட்டுமே! சம்பளம் வாங்கறாங்க, இல்லே?” என்று பதில் வரும்.

    இவர்களைப் பொறுக்க முடியாது, மற்ற ஆசிரியைகள் அந்த வகுப்பிற்குப் போகுமுன் என் பிரம்பை கடன் வாங்கிக்கொண்டு போவது வழக்கமாயிற்று.

    அவர்களைப் புரிந்துகொள்ள, “உங்களுக்கு எந்த ஆசிரியையிடமாவது பயமா?” என்று கேட்டேன். பெரிய குரலுடன் எப்போதும் கத்தும், குண்டாக இருந்த ஒருத்தியைக் குறிப்பிட்டார்கள்.

    அடித்தாலும், கண்டபடி வைதாலும்தான் சொன்னால் கேட்பார்களா? குண்டாக இருந்தால் என்ன, அவர்களை அப்படியே நசுக்கிவிடுவாளா?

    (இப்படிப்பட்ட மாணவர்கள் உணர்ச்சி ரீதியில் குறைபாடு உள்ளவர்கள். சில நாடுகளில் பள்ளிக்கூடத்திலேயே உளவியலாளர்கள், இவர்களுக்கு அனுதினமும் மாத்திரையோ, ஊசிமூலம் மருந்தோ கொடுத்தால்தான் இவர்களை அமைதியாக ஒரே இடத்தில் உட்கார வைக்க முடியும் என்று சில கால ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்தேன்).

    எங்கள் பள்ளியின் எதிரிலேயே இருந்த பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் – இவர்களின் சகோதரிகள் – அம்மாதிரி இருக்கவில்லை. பையன்கள் மட்டும் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடமே கேட்டேன்.

    கதை

    பேச்சோ, அன்போ எதுவுமில்லாது, வாரம் ஒருமுறை ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு வீடு முழுவதிலும் மகனைத் துரத்துவாராம் ஒரு தந்தை. சிரித்தபடி இதைப் பகிர்ந்துகொண்டான் ஒரு மாணவன்.

    “அப்பா என்ற ஸ்தானத்தால், அவருக்குத்தான் என்னைவிட அதிக அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறாராம்!” என்றவன் குரலில் ஏளனம்.

    “நீ என்னடா செய்வே?” என்று அதிர்ச்சியுடன் அவன் நண்பர்கள் கேட்க, “கழிப்பறையில் போய் ஒளிந்துகொள்வேன். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அப்பா என்னை மறந்திருப்பார்!” என்று மேலும் சிரித்தான்.

    இளவயதினர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களைப் போலவே நடந்தால் எப்படி! நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    (அடக்கவே முடியாத மாணவர்களுடன் பழக நேரிடும்போது, நம் குழந்தைகளும் எங்கே அப்படிக் கெட்டுவிடுவார்களோ என்று ஆசிரியப் பெருமக்கள், தம் செல்வங்களிடம் சற்று அளவுக்கு மீறியே கண்டிப்பைக் காட்டுவார்கள். உரிய காலம் வந்தபின், அதைத் தளர்த்திக்கொண்டால் உறவு பலப்படும்).

    முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கூட கையில் பிரம்பை எடுத்து வருவார். பெற்றோரும் மகிழ்வார்கள், மகன் உருப்பட்டுவிடுவான் என்ற தவறான நம்பிக்கையில்.

    கதை

    தாய்வழிப் பாட்டி வீட்டில் சிறு பிராயத்தைக் கழித்திருந்த மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள் என்று கருதி, அதற்கு நேர்மாறான வளர்ப்பு முறையைக் கையாண்டார் தந்தை. பலரும் கூடியிருக்கையில், இடுப்பு பெல்டைக் கழற்றி, அந்த பத்து வயதுப் பையன் கதறக் கதற அடிப்பார்.

    நன்கு படித்து, அயல்நாட்டுக்குப் போன மகன், தாய்நாட்டுக்குத் திரும்ப வரவேயில்லை. அப்பா அடித்தபோது அம்மா தடுக்காததால், அவள் மீதும் வெறுப்பு!

    வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், `பிறர் அன்பு செலுத்த தகுதி இல்லாதவன் நான்!’ என்ற எண்ணம் மனத்தில் படிந்துவிட, அவனுக்கு எவரையும் நம்பி உறவுகொள்ள முடியாது போயிற்று.

    “மரியாதையின்றி பழகவும், பொய்யுரைக்கவும், முறையாகக் கல்வி பயிலாதிருக்கவும் சிறு வயதிலிருந்தே தண்டிக்க வேண்டும்!” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

    அதிகார வர்க்கத்தினர் சொல்வதெல்லாம் சரியல்ல என்று தோன்றினால் என்ன செய்வது? தட்டிக் கேட்டால், `எதிர்த்துப் பேசாதே!’ என்று இன்னும் திட்டு விழுமே!

    சில சமயம் மரண தண்டனைகூட உண்டு.

    கதை

    இரண்டாம் உலகப் போரின்போது வார்ஸா சிறையில் (Warsaw ghetto) அடைக்கப்பட்டிருந்தாள் ஹெலன். அவளைப் போன்ற பெண்கள் நாள் முழுவதும் தையல் வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்பது சட்டம். ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் உடனே மரண தண்டனை!

    ஹெலனுக்கு Gone with the Wind என்ற புத்தகம் எப்படியோ கிடைத்தது. சரித்திரமும் காதலும் கலந்த அருமையான நவீனம். தூங்கும் நேரத்தில் மூன்று, நான்கு மணியைச் செலவழித்து அதைப் படித்தாள் ஹெலன்.

    மறுநாள், தையல் வேலையில் ஈடுபட்டபடி ஓரிரு மணிக்குள் அக்கதையை சிநேகிதிகளிடம் சொல்வாள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

    பிடிபட்டிருந்தால், அனைவருக்குமே மரண தண்டனை! அக்கதையை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அந்த அச்சத்தையும் மீறியிருந்தது.

    `ஏதாவது புத்தகம் படித்தீர்களா?’ என்று சிறையில் அடைபட்டிருந்த அப்பெண்களைக் கேட்டால், மறுத்திருப்பார்கள். எப்போது உண்மை பேசினாலும் நம்பாதபோது பொய் சொல்வதே மேல் என்று தோன்றிப் போகிறது.

    அடிப்பது அலுப்பைத் தரும்

    “புத்தகத்திலே போட்டிருக்கிற மாதிரியெல்லாம் வளக்கணும்னு பாத்தா முடியுமா?” என்று என்னைக் கேட்டாள், என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான் அமர்த்தியிருந்த பணிப்பெண். “எத்தனை சொன்னாலும் பிள்ளைங்களை அடிக்க மாட்டறீங்க!”

    இப்போது என் மகள் கேட்கிறாள்: “நீ ஏம்மா எங்களை அடிக்கவே மாட்டே?”

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் அடித்தார்கள், வீட்டில் பணிப்பெண்கள் அடித்தார்கள், அம்மா மட்டும் ஏன் அடிக்கவில்லை என்ற குழப்பம், வளர்ந்த பின்னரும்!

    “அடிக்கிறது சுலபம். ஆனா, அதுக்கப்புறம் அழற குழந்தையைச் சமாதானப்படுத்தறது கஷ்டம். அதைக் கட்டியணைத்துக்கொண்டு, `எனக்கு உன்னைப் பிடிக்கும். தெரியாம அடிச்சுட்டேன்!’ என்றெல்லாம் ஆயிரம் சமாதானம் சொல்ல வேண்டும். போர்! எனக்கு அலுப்பான விஷயம் அது!”

    அதிகாரத்தால் பெறும் மரியாதை

    அதிகாரம் செலுத்திப் பிறரைப் பணிய வைக்கலாம். ஆனால், அப்படிப் பெறும் மரியாதை நிலைக்காது.

    சிறு வயதினரைத் தண்டித்தாலும், `ஏன் அப்படிச் செய்யக் கூடாது?’ என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    `நான் படுத்தினேன். அதான் அம்மா திட்டறா!’ என்னும் மூன்று வயதுக் குழந்தைக்கு `படுத்தல்’ என்றால் என்னவென்று புரியுமா?

    `சும்மா படுத்தாதே!’ என்று எரிந்து விழுவதற்குப் பதில், `நான் வேலையாக இருக்கும்போது தொணதொணக்காதே! போய் விளையாடு! சமர்த்து!’ என்று நிதானம் தவறாது பேசினால் உடனே கேட்பான்.

    அதற்கான பொறுமை இல்லாமல் போகும்போது, எரிச்சலும் கோபமும் எழுகிறது. அதைக் குழந்தையிடம் திருப்புகிறார்கள்.

    பல வருடங்களுக்குமுன் கணவரிடம் அடியும் உதையும் வாங்கியிருந்த ஒரு முதியவள், தான் வளர்த்த பேரனிடம் அப்படியே நடந்துகொண்டாள். கண்டபடி அடிப்பதற்குக் காரணமே வேண்டியிருக்கவில்லை.

    “அவனை அடிச்சுட்டு, நானும் அழுவேன்!” என்பாள்.

    அநாவசியமாகத் திட்டியோ, அடித்தோ செய்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் மேலும் அவதிப்படுவானேன்!

    Share
  • வாடிக்கையாகப் பழிப்பது வேடிக்கையா?

    -நிர்மலா ராகவன்

    (நலம்… நலமறிய ஆவல் 153)

    “எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் அதிகமாகப் பேசிக்கொள்வது கிடையாது!”

    திருமணமாகிய முதல் சில ஆண்டுகளில் தம்பதிகள் நிறையப் பேசியிருப்பார்கள். அதன்பின், அந்த இணக்கம் ஏன் முறிந்துவிடுகிறது?

    மற்றவரைப்பற்றி அறியவேண்டும் என்று முதலில் இருந்த ஆர்வம் காணாமல் போய்விட்டதுதான் காரணம். அதன்பின், ஒருவர் கூறுவதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அப்படித் தவறாகப் புரிந்துகொள்வதால் வருத்தமோ, கோபமோ வருகிறது.

    இருவருமே, `நான் சொல்வதைக் கேளேன்! என்னைப் புரிந்துகொள்!’ என்று சண்டை பிடிக்கிறார்கள். அல்லது, மனதளவில் ஏங்குகிறார்கள். தான் எண்ணியபடி உற்றவர் இல்லையே என்று வருந்தி, விவாதித்துக்கொண்டும், பழித்துக்கொண்டும் இருந்தால் நல்ல விளைவு உண்டாகுமா?

    இது புரியாது, சிலர் `முட்டாள்!’ என்று மற்றவரைப் பழித்துக்கொண்டே இருப்பார்கள்.

    `உனக்கு நான் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. மூளை இருந்தால்தானே!’

    இந்த இரு வாக்கியங்களிலேயே பிழை இருக்கிறது. முதலாவதில், நான் என்ற சொல்லுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்பவர் புத்திசாலியோ, இல்லையோ, மற்றவரைவிடத் தனக்குத்தான் அறிவுகூர்மை அதிகம் என்று நம்பிப் பழித்தால், தாக்கப்பட்டவர் குறுகிவிடுவார். அல்லது ஆத்திரமடைவார்.

    `மூளை கிடையாது!’ என்று ஒருவர் கூறுவதைப் பலமுறை கேட்கும்போது, அதை நம்பிவிடும் அபாயமும் இருக்கிறது.

    கதை

    தமிழ் நாட்டுக் குடும்பம் ஒன்றில், தினசரியில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்தார்கள். மாப்பிள்ளை தலைநகரில் மிகப் பெரிய வேலையில் இருந்தான். அதனால், கல்யாணத்தைப்பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிகம் யோசியாது, பெண்வீட்டார் ஏற்றுக்கொண்டனர்.

    கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு மனநோய் என்று. (ஆனால், உத்தியோகம் பார்க்க முடிந்தது).

    சாதுவான மனைவியை, `நீ பைத்தியம்!’ என்று ஓயாமல் பழிக்க, சில வருடங்களிலேயே அவளும் நிலைகுலைந்துபோனாள். அத்துடன் திருப்தி அடையாது, ஒரே மகளையும் இப்படியே நடத்த ஆரம்பித்தார்.

    சுமார் இருபது வயதான அப்பெண்ணை நான் சந்தித்தபோது தானாகவே, “நான் நார்மல்தான். பைத்தியம் இல்லை,” என்றாள் என்னிடம்.

    என் அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு, தாய் விளக்கம் அளித்தாள்: “அவளுடைய அப்பா அவளை எப்போதும் `பைத்தியம்’ என்பார். அவளும் நம்பிக்கொண்டிருக்கிறாள்!”

    இம்மாதிரியான சிக்கலான மணவாழ்க்கை முறிந்தாலே நிம்மதி. தனக்குக் குறை இருக்கிறது என்று தெரிந்தும், அதை ஏற்க விரும்பாதவர்கள் தம்மைச் சார்ந்த பிறரிடம்தான் அக்குறை இருக்கிறது என்று நம்பவைப்பார்கள்.

    இன்னும் சிலர், தான் எதில் தோல்வி அடைந்தாலும் அதற்கு மனைவிதான் காரணம் என்று பழி சுமத்துவார்கள்.

    ஒரு மனைவி தன் கணவனிடம் கேட்டாள், சிரித்தபடி: `நான் உங்களை விட்டுப்போனால், நீங்கள் தவறான பாதையில் காரை ஓட்டிச் செல்லும்போதெல்லாம் யார்மீது குற்றம் சாட்டுவீர்கள்?’

    கதை

    சகாதேவன் வியாபாரத்தில் தோல்வியடைந்தவர். அதில் அவர் மனைவி எந்த விதத்திலும் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவள்தான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தோன்றிப்போக, `முட்டாள்!’ என்று அவளைப் பழித்துக்கொண்டே இருப்பார். அவர் நொந்த மனதைப் புரிந்துகொண்டு, அவளும் எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.

    `எல்லாப் பெண்களுமே முட்டாள்கள்தாம்!’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டது அந்த மனிதருக்கு.

    நானும் இருமுறை இவரிடம் மாட்டிக்கொண்டேன். நான் அஞ்சவில்லை. என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். பயம் அவரிடமே திரும்பியது, சுவற்றில் அடித்த பந்துபோல்.

    அச்சத்தை விளைவித்தால், உண்மையான மதிப்பும் மரியாதையும் வருமா?

    தன்னைப் பார்த்துப் பிறர் பயப்பட வேண்டும், இல்லையேல், தான் அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டும்! என்ன மனநிலை இது! இவரைப் போன்றவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமுடியுமா?

    சிறுவர்கள்கூட இப்படிப்பட்ட நடத்தையை மற்றவர்களிடமிருந்து கற்று, வீட்டில் பெரியவர்களை அப்படியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் பிறர் தம்மைக் கவனிப்பார்கள் என்று அவர்கள் எண்ணம் போகிறது.

    கதை

    ஐந்து வயதான சுதா தன் சிநேகிதியான பியாங்காவின் வீட்டிற்கு விளையாடப்போய், இரண்டு, மூன்று மணி நேரம் அங்கேயே கழித்தாள். வீடு திரும்பியதும், பெரியவர்களிடம் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தாள்.

    `எப்போதும் மரியாதையாக, அன்புடன் நடந்துவந்தவளுக்கு இப்போது என்ன வந்துவிட்டது?’ என்று யோசித்தார்கள்.

    அவளை அப்படியே விட்டுவிட்டால், அதே நடத்தை தொடரும். வன்மையாகக் கண்டித்தாலோ, அதிகமாக முரண்டுபிடிக்கக்கூடும். முதன் முறை ஆனதால், கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றிப்போயிற்று.

    “உன் சிநேகிதி பியாங்கா அவளைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறாள்?” என்று கேட்டாள் தாய்.

    “அந்த அக்காவை பியாங்கா எப்பவும் திட்டுகிறாள்,” என்று பதில் வந்தது.

    தவறு தோழியின் தாயின்மேல்தான். தாய் பணிப்பெண்ணை எப்படி நடத்துகிறாளோ, அப்படியே மகளும் நடத்தக் கற்றுவிட்டாள்.

    வயதில் மூத்தவர்களிடம் அப்படி நடப்பது தவறு என்ற அதிர்ச்சி சுதாவின் பதிலில் காணப்படவில்லை. ஏனெனில், நல்லது, கெட்டது என்று ஆராயும் திறமை குழந்தைகளுக்குக் கிடையாது. பிறரைப் பார்த்துத்தான் எதையும் கற்கிறார்கள். உடனே அப்படியே நடந்தும் காட்டுகிறார்கள்.

    “இனி நீ பியாங்கா வீட்டுக்குப் போகாதே! அவள் உன்னைமாதிரி நல்ல பெண் இல்லை!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினர்.

    நாம் சொல்வதையும் செய்வதையும் குழந்தைகள் அப்படியே காப்பி அடிக்கின்றனர் என்பதால் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

    ஒரு காரியத்தைச் செய்யும் முறையை மாணவப் பருவத்திலிருப்பவர்களுக்கு ஆரம்பிக்குமுன் சொல்லிக்கொடுக்கலாம். இருந்தாலும், கூடவே நின்று தொணதொணத்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் பொறுமை மீறிவிடாதா!

    `நான் இப்படிச் செய்வேன். நீ உனக்குத் தோன்றியபடி செய்!’ என்று விட்டுவிட்டால், அவர்களுக்கு நம்மேல் மரியாதை எழும். நாம் காட்டும் முறையை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.

    வேடிக்கைதானா?

    `வேடிக்கை’ என்று நினைத்து பெரியவர்கள் செய்யத் துணியாததை குழந்தைகளைச் செய்யத் தூண்டுகிறவர்களும் உண்டு.

    ஒரு பதின்மவயதுப் பெண்ணைக் காட்டி, “இவளைப் பாரேன்! குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!’ என்று ஐந்துவயதுச் சிறுமியான சியாமளாவிடம் காட்டினாள் அவளுடைய அத்தை. (அத்தைக்குக் குழந்தைகள் கிடையாது).

    அச்சிறுமியின் தாய்வழிப் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, “பாட்டி குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!” என்று சியாமளா கேலியாகக் கூறிச் சிரிக்க, எல்லாருக்கும் அவமானமாகப் போயிற்று.

    இதில் குழந்தையின் தவறு என்ன?

    சியாமளா ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், அவள் வயதை ஒத்த மாலாவுடன் அவளை ஒப்பிடுவாள் அந்த அத்தை: “மாலா அசடு! சாப்பிடப் படுத்தும். ஒன்னைமாதிரி சமத்தா சாப்பிடாது!”

    பெருமையுடன், ஒவ்வொரு முறையும் மூச்சுப்பிடிக்கச் சாப்பிட்டு, குண்டாகிப்போனதுதான் நடந்தது.

    மாலாவின் தாய் என்னிடம் வருத்தத்துடன் கூறினாள்: “`நீயும் சியாமளாமாதிரி சமத்து!’ என்று சொல்லிச் சொல்லி இவளை வளர்க்கிறோம். இங்கோ, இப்படிச் சொல்கிறார்கள்!”

    `நீதான் உலகிலேயே உயர்த்தி!’ என்பதுபோல் புகழ்ந்து, சம வயதுக் குழந்தைகளை மட்டமெனக் கருதும் பழக்கத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அன்பின் மிகுதியா? அது அறிவீனம்.

    தான் அப்படியெல்லாம் சிறந்தவள் இல்லை என்று எப்போதாவது உணரும்போது அவர்கள் செய்வது அறியாது திகைத்துப்போய்விடுகிறார்கள். தம்மை அப்படி வளர்த்தவர்கள்மேல் வெறுப்புதான் மண்டுகிறது.

    Share
  • மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 152


    மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    மூன்று வயதுக் குழந்தைகள் அடிக்கடி தாயை அழைத்துப்பார்க்கும். அவள் வீட்டிலேயேதான் இருப்பாள். இருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பயம் – தனியாக விட்டுவிடுவார்களோ என்று.

    `நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாதே!’ என்று சில முறை சொன்னால் ஆறுதலும், தாய்மீது நம்பிக்கையும் பிறக்கும். (தந்தை வேலை நிமித்தம் அல்லது நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போய்விடுவதால் இப்படியோர் அச்சம் பிறக்கிறதோ?)

    சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எந்த வயதிலும், எவர்மீதிலும் அவநம்பிக்கை எழலாம்.

    கதை

    காதலிக்கும்போது தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கைப்பிடித்த கணவன் திருமணத்திற்குப்பிறகு தான் ஒருத்தி இருப்பதையே மறந்தவன்போல் நடப்பது கண்டு ரேணுவுக்குத் துக்கம் பெருகியது. அழுகையுடன், பிற பெண்களிடம் முறையிடத்தான் அவளால் முடிந்தது.

    வீட்டிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சீட்டாட்டத்தில் தன்னையும் உறவுகளையும் மறந்துபோனான் வேணு. எப்போதாவது மனைவி அதைப்பற்றி முறையிட்டால், `உன் தொணதொணப்பு தாங்க முடியாதுதான் நண்பர்களை நாடுகிறேன்!’ என்ற ரீதியில் விவாதித்து பேச்சை முடிப்பான்.

    பெண் தன் கணவன் எப்போதும் தன்னருகில் இருந்தால்தான் அன்பு என்று நினைக்கிறாள். அவளுக்கு அந்த அருகாமை வேண்டியிருக்கிறது. ஆணுக்கோ, நீண்டகால நெருக்கம் மூச்சை அடைப்பதுபோல் இருக்குமாம்.

    நம்பிக்கை எழ

    வேலை, நண்பர்களுடன் உல்லாசம், தனக்கென ஒரு பொழுதுபோக்கு — இதெல்லாம் அவசியம் என்று ஆண்களுக்குத் தோன்றினாலும், குடும்பத்தினருக்கும் சிறிதளவாகிலும் நேரத்தை ஒதுக்கி, தன் வாழ்க்கையில் நடந்ததை அவ்வப்போது பகிர்ந்துகொண்டால்தான் உறவு பலக்கும்.

    ஒருவருக்கு நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ, அதைப் பகிர்ந்துகொண்டாலே போதும். இதனால் சில சமயம் சிறு சர்ச்சைகள் எழலாம். ஆனால், வெளிக்காட்டமுடியாத கோபத்துடன் மௌனம் சாதிப்பதைவிட சண்டையாவது போடலாமே! ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிய வேறு வழி ஏது!

    யாரைத்தான் நம்புவது!

    நம் நம்பிக்கையைப் பெற நல்லவர்கள்மாதிரி நடித்து, வலிய வந்து உதவி செய்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் யாரைத்தான் நம்புவது என்ற அவநம்பிக்கைதான் எவருக்கும் எழுகிறது.

    `நம்மிடமிருந்து ஏதோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளத்தான் இவர் நல்லவர்போல் நடிக்கிறார்!’ என்று முதலில் அவநம்பிக்கை ஏற்படும்.

    கதை

    சீனப்பெருநாளன்று, `அங் பௌ’ என்று, திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களும், பெற்றோரின் நண்பர்களும் பணம் கொடுப்பது வழக்கம்.

    அப்படிக் கிடைத்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று அந்த பத்து வயதுச் சிறுமிக்கு தெரியவில்லை.

    `நான் வைத்துக்கொள்கிறேன், கொடு!’ என்று வீட்டிலிருந்த பெரியவர் கைநீட்ட, கொடுத்தாள். ஆனால், அடுத்த சில நாட்கள், “என் காசை எடுத்தீர்களா?” என்று அடிக்கடி கேட்கத் தவறவில்லை!

    அவளுடைய அவநம்பிக்கை புரிந்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. `என்னிடமே நிறைய பணம் இருக்கிறது. நான் ஏன் உன்னுடையதை எடுக்கப்போகிறேன்!’ என்று அலட்சியமாகக் கூற, அவளுக்கு அவரிடம் நம்பிக்கை பிறந்தது.

    பிறர் நமக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள், மாறாக, அவர்கள்தாம் நம் நலனையே விழைபவர்கள் என்று தோன்றும்போதுதான் நம்பிக்கை எழ, அவர்களை ஏற்கிறோம்.

    நம்பிக்கை துரோகிகள்

    ராஜன் படித்து, பெரிய வேலையில் இருந்தார். எந்தவித தீயபழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அவருக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களைத் தன் வசம் இழுத்து, அவர்களையும் குடிபோதைக்கு அடிமையாக்க பெரும் பிரயத்தனம் செய்வார். மேலதிகாரியைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்களும் அவர் காட்டிய தீய வழிகளில் நடப்பார்கள். விலைமாதர்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் ராஜனைப்போல் ஒருவரை எந்தப் பெண்தான் ஏற்பாள்?

    அவரது குணத்தைப் புரிந்து, கணவன்மார்களை எச்சரித்த மனைவிகளிடம் மனக்குறையுடன், “என்னை நீங்கள் நம்பவில்லை என்று தெரியும்!” என்று பிரலாபிப்பார். தான் செய்துவருவது தவறு என்று அவர் கருதாததுதான் வியப்பு.

    நம்பிக்கையே ஆயுதமாக

    சந்தித்த உடனேயே அதிக நட்புடன், நைச்சியமாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

    `என்னை நம்பு!’

    `ஐயோ! என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையே!’

    இளம்பெண்களை வசப்படுத்த முயற்சி செய்பவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வசனங்கள் இவை.

    அப்படி ஒருவர் வெளிப்படுத்தும் போலியான தன்னிரக்கத்தைப் பார்த்து இரங்கி, `அன்புக்கு ஏங்குகிறார். அவரை என்னால் திருத்த முடியும்!’ என்று இரக்க குணம் படைத்த பெண்கள் ஏமாறலாம்.

    ஆனால், கீழே இருப்பவர்கள் பிறரையும் கீழே இழுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களைத் திருத்த முயல்வது துர்லபம். அப்படி ஒரு நிலையில் இருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால், விட்டுத்தொலைக்க வேண்டியதுதான். `சவால்’ என்று நம்மையே வாட்டிக்கொள்வானேன்! அவர்களைவிட்டு விலகினால் ஆரோக்கியமான உறவுகள் அமைய வாய்ப்புண்டு.

    துஷ்டர் என்று கண்டும் தூர விலக முடியாதவர்கள்

    அது ஏன், சிலர் தகாத நட்பு என்று தெரிந்தாலும், அதிலிருந்து விலக முடியாது தவிக்கிறார்கள்?

    சிறு பிராயத்தில் பெற்றோரை நம்பி, அவர்களால் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.

    கதை

    மனைவியை ஒதுக்கிவிட்டு, இளமையான இன்னொரு பெண்ணை மணந்தார் ஒரு சுயநலக்காரர். குழந்தைகளுடன் தம்பியின் வீட்டில் தஞ்சம் புக நேரிட்டது முதல் மனைவிக்கு. வேண்டாத இச்சுமையால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினார் அந்த உறவினர்.

    `இருக்கும் ஆதரவையும் பகைத்துக்கொண்டால், குடும்பத்துடன் எங்கு போவது!’ என்று தாய் கண்டும் காணாததுபோல் இருந்தாள். உடனுக்குடனே அவள் ஆதரவாக ஏதாவது குழந்தைகளிடம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அவ்வளவு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்காது.

    ஆண் குழந்தைகள் முடிவெடுத்தது: எல்லா ஆண்களுமே அப்பாவைப்போல்தான்! கைவிட்டுவிடுவார்கள். நம்பமுடியாது.

    பெண்களின் முடிவு: ஆண்கள் அனைவரும் பெண்பித்தர்கள்! எந்த விதத்திலாவது பெண்களைக் கஷ்டப்படுத்துகிறவர்கள்.

    வளர்ந்ததும், பெண்கள் தந்தையைப் போன்றவரையே கணவனாக வரித்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை அதுதான்.

    ஆண்பிள்ளைகளோ, `எனக்கு நல்ல நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்!’ என்று எண்ணியதுபோல், தம்மையும் அறியாது, தந்தையைப் போன்றவர்களையே உற்ற நண்பர்கள் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்களிடம் தந்தை தமக்கிழைத்த அநீதியைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள்.

    நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டியவரே துரோகம் செய்கிறார் என்று புரியும்போது, முதலில் அதிர்ச்சியும், பிறகு, `ஏமாந்துவிட்டோமே!’ என்ற ஆத்திரமும் எழுகின்றன.

    ஆத்திரம் தணியாமலே இருந்தால் நம் உடல்நிலைதான் கெடும். பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், பழையனவற்றை நம் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, அதிலிருந்து கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். அதே குணத்தைக்கொண்ட வேறொருவரைச் சந்திக்கும்போது, ஜாக்கிரதையாகப் பழக முடியுமே!

    Share
  • நுணலும் வியாபாரமும்

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 151

    பத்தாவது வயதில்தான் ABCD கற்க ஆரம்பித்தவள் நான் என்று அறிந்ததும், `நம்மைப்போன்று ஆங்கிலம் கற்பிக்கிறவர்களை இவள் மிஞ்சுவதாவது!’ என்ற ஆத்திரம் சில ஆசிரியைகளுக்கு ஏற்பட்டது.

    “உனக்கு முக்கியம் என்று தோன்றுவதை நீ எழுதலாம். ஆனால், அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது என்ன நிச்சயம்?”

    “நீ எழுதுவதால் ஏதாவது மாறிவிடப்போகிறதா?”

    ஒரு மயிரிழையைக் கூறு போடுவதுபோன்ற இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குப் புரியத்தானில்லை.

    எப்படியாவது நான் எழுதுவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அதன்படி நடந்தால், அவர்களை வெற்றிபெறச் செய்வதுபோல் ஆகிவிடுமே! வழக்கம்போல், மௌனமாகிவிட்டேன்.

    எல்லோரையும் எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்து நடப்பவர்களாக இருப்பவர்கள்தாம் பிறர் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்து, தம் முயற்சியைக் கைவிடுவார்கள்.

    தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களும், தோல்வி அடைய நேரிட்டால் பிறர் தன்னை மட்டமாக எடைபோட்டுவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களும் இருக்கிற நிலையே போதும், பாதுகாப்பாக இருக்கிறது என்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தம்மைப்போல் இல்லாது, முன்னேற்றப்பாதையில் நடக்கும் பிறரை பழிப்பதுடன் அற்பதிருப்தி அடைகிறார்கள்.

    `நானும் செய்யப்போகிறேன்!’ என்று இவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால், எப்போதுதான் காரியத்தில் இறங்குவது?

    ஸ்வீடனில், சுற்றுச்சூழல் மாசடைந்திருப்பதால் சீதோஷ்ண நிலையும் கெட்டுக்கொண்டிருப்பது கண்டு பொறுக்காது, பதின்ம வயதினர் ஒன்று சேர்ந்து, இந்நிலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

    `தோல்வியடைவோம்’ என்னும் அச்சத்தைவிட `வெற்றியடைவோம்’ என்கிற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இவர்களுக்கு அமைந்திருக்கிறது பாராட்டப்பட வேண்டிய சமாசாரம்.

    கெட்ட வார்த்தை

    மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் செக்ஸ், மதம் ஆகிய இரண்டு பொருட்களில் எழுதக்கூடாது என்ற நிபந்தனை எழுத்துவடிவிலேயே இருந்தது.

    நான் பெண்கள் பகுதி ஆசிரியையைச் சந்தித்து, “சிறுமிகள் பாலியல் வதைக்கு ஆளாகிறார்களே! இதைப்பற்றி எடுத்துச் சொல்லாவிட்டால், பிறருக்கு எப்படித் தெரியும்?” என்று முறையிட, “இது கொடுமையான விஷயம்தான்!” என்று ஒப்புக்கொண்டாள்.

    உற்சாகத்துடன், நான் அதைப்பற்றி எழுதி அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. முயற்சியைக் கைவிடாது, மீண்டும் எழுதினேன், சற்று மாற்றி. மூன்றாவது முறை, `அடிப்படையில், செக்ஸ் என்றால் என்ன?’ என்பதுபோல் எழுத, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானொலியிலும் பேச அழைத்தார்கள்.

    அச்சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கில் மாட்டிக்கொள்ள, இவ்வார்த்தை அதிகமாகப் புழங்கியது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (sexual harassment), பாலியல் வதை (sexual abuse) ஆகிய தலைப்புகளில் நிறைய எழுதினேன். `செக்ஸ்’ என்கிற அந்த `கெட்ட’ வார்த்தையை பயன்படுத்தி முதன்முதலில் வெளிப்படையாக எழுதியதில், எனக்கும் (அதிலும் ஒரு பெண்!) கெட்ட பெயர்.

    அதைத் தொடர்ந்து, தன் மாணவிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியரைப்பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் முறை செய்தேன். பலனில்லாமல் போக, தொலைகாட்சியில் அதுபற்றிக் கூறினேன். (கல்வி இலாகா என்மேல் குற்றம் கண்டுபிடித்து, `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ எனத் தாக்க, `தவறு செய்தவள் நானில்லை. செய்தவரைப்போய் கேட்பதுதானே?’ என்றேன், எரிச்சலுடன். சற்று அயர்ந்துவிட்டு, எப்படியோ சமாளித்தார்கள்).

    `தவற்றைத் தவறென்று சொல்லலாமா?’ என்று மக்கள் விழித்துக்கொண்டார்கள். பலர் அதைப்பற்றி எழுத ஆரம்பித்தார்கள். இத்தகைய தீங்குகளை எதிர்த்து சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

    எழுதுவதால் உலக நடப்பை மாற்றமுடியும் என்று என்னைக் கேலி செய்தவர்கள் உணர்வார்களா?. வாளைவிட பேனா மகத்தானது என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள்!

    வெற்றி நிலைப்பதில்லை. அதேபோல், தோல்வியால் எவரும் மாண்டுவிடுவதுமில்லை. வழியில் பல இடர்கள் வரலாம். நல்ல சந்தர்ப்பங்கள் தாமாக அமைவதில்லை என்று புரிந்து, நாம்தான் அவைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தோல்விமேல் தோல்வி வந்தாலும், எடுத்துக்கொண்ட காரியத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் குன்றாது இருந்தால் வெற்றி நமதே. எவர் சொல்வதைக் கேட்டும் நம் லட்சியத்தை அலட்சியம் செய்யாதிருத்தல் அவசியம்.

    (`சொல்றதையே கேக்கமாட்டே!’ என்று என்னைத் திட்டியவர்கள் என் அந்தப் பிறவிக் குணமும் நன்மைக்குத்தான் என்று உணரவில்லை!)

    இறுதியில் நாம் சாதித்தவை பிறருக்குப் பாடமாக அமைந்தால், அதுவே நம் வெற்றி.

    தோல்வி எவருக்கும் ஏற்படுவதுதான். ஆனால், அதைக் கண்டு, `இனி நமக்குத் தோல்விதான்!’ என்று மனம் தளர்ந்துவிடுகிறோமா, அல்லது அத்தோல்வியிலிருந்து கற்று, கூடுதலான முனைப்புடன் அதே காரியத்தில் ஈடுபடுகிறோமா என்பதில்தான் வெற்றி-தோல்வி அடங்கியிருக்கிறது.

    “ஏழு முறை விழு. எட்டாவது முறை எழு! (ஜப்பானிய பழமொழி)

    அன்ன ஆகாரமின்றி உழைத்தால் விரைவில் வெற்றி கிட்டுமோ?

    வெளிநாடுகளிலிருந்து மலேசியா வந்தடைந்து, சாப்பாட்டுக்கடைகளில் வேலை பார்க்கும் பலர் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரோக்கியம் கெட்டதுதான் அவர்கள் கண்ட பலன்.

    கதை

    ஒரு பெரிய கடையில் வேலை பார்த்த அனுமந்து என்னிடம் ஆச்சரியம் தெரிவித்தார்: “மலேசியாவில், விடுமுறை நாட்களில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியில் வந்து சாப்பிடுகிறார்களே!”

    இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, நாமே ஒரு சிறு கடையை ஆரம்பித்து நடத்தினால் என்ன என்று அனுமந்துவின் யோசனை போயிற்று. சில ஆண்டுகள் கழிந்ததும், சமையலில் நிபுணரான ஒருவருடன் சேர்ந்துகொண்டார்.

    `வெற்றி கிடைத்தால் இன்னும் சில கிளைகளைத் திறக்கலாம்! எங்களுக்கு வருகிறவர்களின் திருப்திதான் முக்கியம்!’ என்றார்.

    வெற்றியைப்பற்றிக் கனவு கண்டால் மட்டும் போதாது. `கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன், அதற்காக உழைக்க வேண்டும்.

    `வெற்றி கிடைக்கும்போது’ என்று உறுதியுடன் மாற்றிச் சொல்லி இருக்கவேண்டும்.

    போட்டியாளர்கள்

    வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் போட்டியாளர்களைச் சமாளிப்பது.

    ஏதாவது ஒன்றைத் தயாரிக்க தமது கடையில் என்னென்ன சாமான்களைச் சேர்க்கிறோம், அவைகளை யார், எப்படிக் கொண்டுவருகிறார்கள் என்று விவரித்தார்.

    “இவ்வளவு விவரம் வேண்டாமே! `மாதாமாதம் இறக்குமதி செய்கிறோம்,” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!” என்றேன்.

    ஒருவர் வீட்டுக்கு வாங்கிப்போக விரும்புவதாகக் கூறியபோது, `ஆறிப்போனால் தோசை முறுமுறுவென்று இருக்காது!’ என்று அனுமந்து தடுத்துவிட்டாராம்.

    “நன்றாக இல்லை என்று அடுத்த முறை வராது போய்விடுவாரே! வாடிக்கையாளர்கள் முக்கியமில்லையா?’ என்றார்.

    “வந்த வியாபாரத்தை விடலாமா? `ஆறிப்போனால், இப்படியே இருக்காது!’ என்று எச்சரிக்கை செய்தாலே போதுமே! நிச்சயிப்பது அவர் பாடு!” என்றேன் அந்த இளைஞரிடம்.

    நாணயம் அவசியம்தான். அதற்காக நாம் செய்வது, நமக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    நம் வழிகளைப் பின்பற்றி, வியாபாரத்தில் பிறர் நம்மை மிஞ்சிவிடும் அபாயம் இருக்கிறதே!

    `நுணலும் தன் வாயால் கெடும்’ என்று அதற்காகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்!

    Share
  • நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 150

    நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    சிலருக்குப் பிறரைப் புகழ்ந்துதான் பழக்கம். தம்மை யாராவது புகழ்ந்தால் அவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடும். என்ன சொல்வது என்று புரியாது விழிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கே தம்மிடம் ஏதாவது திறமை இருப்பது தெரியாது.

    எத்தனை சிறு சமாசாரமாக இருந்தாலும், பிறரிடம் இருக்கும் திறமையையோ, நல்ல குணத்தையோ பாராட்டுவது ஒருவரது நற்குணத்தை, இரக்கத்தை, காட்டுகிறது. ஒருவரது நற்பண்பு செவிப்புலன் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கேட்கும்; பார்வை இல்லாதவர்களுக்கும் தெரியும் எனப்படுகிறது.

    நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் பிறரையும் நல்லவிதமாகவே எடைபோடுவார்கள்.

    நம் மனம்போனபடி நடந்தால் என்ன? ஏன் பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்?

    இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

    அப்போதுதான், `என்னைப் பிறருக்குப் பிடிக்கிறது. நான் நல்லவன்தான்!’ என்ற நிறைவு உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் நம் உறவுகள் பலப்படுவது நம் பண்பால்தான்.

    தாம் பெற்ற அன்பை யாரும் சேமித்து வைத்துக்கொள்வது கிடையாது. தமக்குக் கிடைத்ததை மேலும் பரப்புகிறார்கள்.

    கதை

    கோலாலம்பூரிலுள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் வசதிகுறைந்த மாணவிகளுக்கு என்று ஆரம்பித்து, பயில வரும் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கப்படுகிறது. முறையாகப் பயின்றதால் கட்டொழுங்கும், தன்னம்பிக்கையும் பெருக, பத்து ஆண்டுகளுக்குமேல் அங்கு பயின்றவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள். நகரின் பல பாகங்களில் வசித்த ஏழை மாணவிகளுக்கு இவர்கள் போதிக்கிறார்கள்.

    எல்லாரும் இந்தியப்பெண்கள். `இந்தியர்கள் முட்டாள்கள்!’ என்று பள்ளிக்கூடங்களில் ஒயாத வசவு வாங்கியிருப்பார்கள். இது புரிந்து, தடுமாறி நிற்கும் சிறுமிகளைத் திட்டாது, ஆனால் மிகுந்த கண்டிப்புடன் நடத்த, வட்டம் பெருகிவருகிறது.

    அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாதிருக்கும் குடும்பத்திலிருந்து வருகிறவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. தமக்கு உதவ வருகிறார்கள் என்பது புரியாது, `எங்களைவிட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை!’ என்பதுபோல் திமிராக நடப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தினர், சகமாணவியர் ஆகியோரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களும் உண்டு. சிறிது காலம் இவர்களிடம் பராமுகமாக நடந்துகொண்டால், தானே மாறிவிடுவார்கள்.

    இதெல்லாம் புரிந்து நடந்த ஆசிரியரைப்போலவே, அவரது மூத்த மாணவிகளும் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமைக்குணத்தைப் பெற்றுவிட்டார்கள்.

    இவர்கள் சுயமாக நாட்டிய வகுப்பு என்று ஆரம்பித்தால், சேரப் போகும் ஒரு மாணவியிடமிருந்தே நாற்பது, ஐம்பது என்று ஒரு மாதத்தில் பல ரிங்கிட்டுகளைக் கறக்கலாம். சலங்கை பூஜை நடத்தினால் ஆயிரக்கணக்கில்! ஆனால், பணத்தைவிட தம்மைப்போல் இருக்கும் பிறரை மேலே தூக்கிவிடுவதே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது.. நிலைத்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்று இவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

    பிறருக்கு நன்மையே செய்பவர்களை ஏமாளிகள் என்று உலகம் நினைக்கலாம். இத்தகைய எண்ணப்போக்கால் சிறிதும் பாதிக்கப்படாத உறுதியும், சுதந்திரமான மனப்போக்கும் பலனை எதிர்பார்க்காது நன்மை செய்பவர்களுக்குக் கிட்டுகிறது. (`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று எப்போதும் அஞ்சுகிறவர்கள் சுதந்திரமாக நடக்கும் திறனை இழந்து, பிறரை நாடிக்கொண்டே இருக்கிறார்கள்).

    கதை

    `என் சிறுவயதில், பெற்றோர் என்னிடம் அன்பு காட்டவில்லை. ஒழுக்கம் போதிப்பதாக எண்ணி, வன்முறையைப் பிரயோகித்தார்கள். இப்போது அவர்களுக்கு வயதான நிலையில், என்னால் அவர்களிடம் இரக்கம் காட்ட முடியவில்லை. முதியோர் இல்லத்தில் விட்டதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டு ஒருவர் தினசரியில் எழுதியிருந்தார்.

    இவரைப்போல் கடந்த காலத்தின் கசப்புக்களிலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் நிம்மதிதான் கெடும். `பெற்றோரின் காலமே வேறு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று தோன்றிப்போனால், அவர்களிடம் பணிவாக நடக்க முடியும்.

    அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் வெல்லலாம் என்பதைப் பலரும் அறிவதில்லை.

    கதை

    பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட சுந்தர் காலையில் புறப்படும் முன் தினமும் கதறி அழுவான் — அப்படியாவது, பெற்றோர் மனமிளகி வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்க அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பிக்கையால்தான்! அவர்களே இப்படித்தானே செய்திருப்பார்கள்! அதனால் மசியவில்லை.

    வேண்டாவெறுப்பாக பள்ளிக்குப் போக நேரிட்டபிறகு, அங்கு அளிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்ய மறுத்தான். அது என்ன, அவனுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லிப் பிறர் வற்புறுத்துவது!

    ஏதாவது எழுத்துவேலை கொடுத்தால், (தான் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களைப்போல்) முகத்தில் இறுக்கத்தைக் காட்டிய பையனை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை அவன் வகுப்பாசிரியைக்கு.

    தன் இயலாமையை ஒத்துக்கொண்டு, தலைமை ஆசிரியை மாலாவிடம் கொண்டுவிட்டாள். அவள் கனிவுடன், `என் மடியில் உட்கார்ந்து எழுதுகிறாயா?’ என்று கேட்க சிறுவனும் சம்மதித்தான்.

    சில நாட்கள் மாலாவின் மடியில் உட்கார்ந்து எழுதியதில், எழுதுவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை என்று தோன்றிப்போயிற்று சுந்தருக்கு. அதன்பின், வகுப்பில் நடப்பவைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டான்.

    அன்பினால் எதையும் வெல்லலாம் என்று சிறுபிராயத்தில் கற்கும் பாடம் எப்போதும் மறக்காது.

    கதை

    திருமணமாகி வெளிநாடு வந்திருந்தாள் சுபத்ரா. புதிய சூழ்நிலை. புக்ககத்தினரும் அனுசரணையாக நடக்கவில்லை.

    அப்போது, பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு அம்மாள், `குழந்தைக்காகப் பண்ணினேன்!’ என்று மைசூர்பாகு செய்து கொண்டுவந்து கொடுத்தாள். அவள் `குழந்தை’ என்று குறிப்பிட்டது சூல்கொண்டிருந்த தாயை.

    எதிர்பார்ப்பின்றி வழங்கப்பட்ட அந்த அன்பினால் சுபத்ராவின் மனம் நெகிழ்ந்துபோயிற்று.

    கருவாக இருந்தபோது அம்மாவின் மனதைக் குளிரச்செய்த அந்த நிகழ்ச்சி பிறந்த குழந்தையின் உள்ளத்திலும் பதிந்துபோயிருக்கவேண்டும். இல்லாவிட்டால், பாலில் சர்க்கரை சேர்த்தால் துப்பிவிடும் குழந்தை வளர்ந்தபிறகு மைசூர்பாகை மட்டும் விரும்பிச் சாப்பிடுமா?

    ஈகை என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே உரிய குணமல்ல.

    கதை

    நங்கநல்லூர் கோயில் வாசலில் இருந்த பூக்கடையில் ஆசையுடன் ஒரு ரோஜாவைக் கையில் எடுத்தேன். என்னிடமிருந்த காசை பூக்காரியிடம் நீட்டியபோது, “சில்லறை இல்லே!” என்றாள்.

    நான் சிறிது வருத்தத்துடன் பூவை அது இருந்த கூடையிலேயே திரும்பப் போட்டேன்.

    “தலையில் வச்சுக்கத்தானே கேக்கறே? எடுத்துக்கோ!” அவள் என் கையில் திணிக்காத குறை.

    பிரமிப்புடன் நான் அதைப் பெற்றுக்கொண்டேன். என்னால் அவளுக்கு அன்று ஐந்து ரூபாய் நஷ்டம்.

    எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி பரீட்சை எழுதிவிட்டோ, வேலை பார்த்துவிட்டோ களைத்து வருகிறவர்களின் கால்விரல்களை நக்கிக்கொடுத்து, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும்!

    மனிதனோ, மிருகமோ, ஒருவரது செய்கைகளும் சொற்களும் பிறருக்கு ஆறுதலாக, ஊக்கம் அளிப்பதாக இருந்தால் மகிழ்வை அளிக்கிறது.

    Share
  • இப்படியும் ஆசிரியர்கள்!

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் (149)

    அள்ள அள்ளக் குறையாதது

    கல்வியும் அனுபவங்களும் நம் அறிவைப் பெருக்குகின்றன. அறிவு சக்தியை அளிக்கிறது.

    `செல்வம்’ என்று கல்வி குறிப்பிடப்பட்டாலும், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேற்றுமை: அள்ள அள்ளக் குறையாதது கல்வி.

    ஆசிரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!

    சிறு வயதில், `இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்! எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!’ என்று ஒருவரிடம் ஒருவர் கூறி, பிரமித்து இருப்போம்.

    (இத்தொழிலுக்கு வந்தபின்தான் தெரிந்தது, ஒவ்வொரு நாளும் கற்பிக்கும் பாடத்தை முதல்நாள் கண்விழித்து, நாமே கற்க வேண்டியிருக்கும் என்பது! பல வருடங்கள் தொடர்ந்து ஒரே பாடத்தை கற்பித்தால் மட்டும்தான் அது நினைவில் நிற்கும். ஒரு விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொண்டால்தானே அப்படிப் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்க முடியும்?)

    என்னதான் தம் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறர் உற்றுக் கவனிப்பது ஆசிரியர்களின் பெருமையைக் கூட்டுகிறது என்றாலும், அவர்கள் மேலானவர்கள் என்றாகாது. தாம் பெற்ற அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு மாணவனுக்கும் தெரிந்திருந்தால், அவன் ஏன் கற்க வருகிறான்?

    ஆசிரியர்கள் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பது எவர் நினைவிலும் வெகு காலம் தங்குவதில்லை. ஆனால், அவர்களது பண்பும் அணுகுமுறையும் மறக்கவே மறக்காது.

    கதை

    என் சக ஆசிரியர் ஒருவர் பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு மாணவர்களை அதிசயிக்க வைக்கவேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டார்.

    அவரது முயற்சியைப் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடி வந்தார்கள் சில மாணவர்கள். “டீச்சர்! ஸார் ஒரு ராக்கெட் பண்ணியிருக்கார். அது அவ்வளவு ஜோரா மேலே போச்சு, தெரியுமா?”

    அவர்களுடைய ஆர்வத்தை ரசித்து, “அவரிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாமே!” என்றேன்.

    அவர்கள் முகம் உடனே வாடியது. “நாங்கள் கேட்டோம். சொல்லிக்கொடுக்க மறுத்துவிட்டார்!”

    தான் மாணவர்களைவிட உயர்வு என்று காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்!

    அவருக்கு நேர் எதிரிடை என் இசை குரு, எஸ்.கல்யாணராமன்.

    ஒரு நாள் பாட்டு சொல்லிக்கொடுக்கையில், ஏதோ ஒரு ராகத்தில் மிக வேகமாக, அவருக்கே உரிய பிருகாக்களுடன் ஆலாபனை செய்து காட்டியபோது, அயர்ந்துபோனேன். உடல் பின்னோக்கிப் போயிற்று. `நம்மால் முடியுமா?’ என்ற பயம்தான் எழுந்தது.

    அவர் முகம் பெருமையுடன் விகசிக்கவில்லை. “உன்னை பிரமிக்க வைக்க நான் இப்படிப் பாடிக் காட்டவில்லை. நீயும் இப்படிப் பாடவேண்டும் என்பதற்காகத்தான்! கற்றுக்கொள்!” என்று சீறினார்.

    நல்ல ஆசிரியரானவர் மாணவர்கள் தம்மை மெச்ச வேண்டும் என்று எதையும் செய்யமாட்டார். மாணவர்களின் அறிவைப் பெருக்குவதுதான் அவரது லட்சியமாக அமையும்.

    இந்த நோக்குடன் அவரவருக்குத் தெரிந்த முறையைப் பயன்படுத்துவார்கள். (முன்பெல்லாம் பெண்களைத் திட்டியோ, ஆண்பிள்ளைகளானால் அடித்தாலோதான் விரைவாகக் கற்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே பயந்த சுபாவம் உடைய ஒரு பையனுக்கு வன்முறையால் படித்ததும் மறந்துவிடும் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை).

    பிறருக்குக் கற்பிப்பது என்றால் நம் நண்பர்களிடையே பகிர்வதாகவும் இருக்கலாம். இப்படி நினைத்துத்தான் நான் பலருக்கும் என்னாலான உதவி செய்வேன். இது பலருக்கும் புரிவதில்லை.

    கதை

    பூகோள ஆசிரியையான ரோஸ் சான் என்னிடம் அடிக்கடி இந்தியாவைப்பற்றிய சந்தேகம் கேட்பாள். எனக்குத் தெரிந்ததை விளக்குவேன். நான் சொல்லச் சொல்லத் துருவுவாள்.

    ஒரு முறை, ஏதோ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்பற்றி அவள் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    தெரியாத்தனமாக, “அந்த புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டுகிறாயா?” என்று நான் கேட்டுவிட்டேன்.

    சற்றும் யோசியாது, “அது மூன்றே வெள்ளிதான்!” என்றாள் ஏளனமாக. `நீயே வாங்கிக்கொள்ள என்ன கேடு!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது.

    நொந்துபோனேன்.

    சுமார் ஓராண்டு காலமாக நான் கூறிவந்ததை பல புத்தகங்களைத் தேடிப் படித்து அவள் தெரிந்து கொண்டிருக்கலாம். சுலபமான வழி என்று என்னை அணுகியிருக்கிறாள்!

    `இது என்னுடையது. உன்னுடையதையும் எனக்குக் கொடு!’ என்பதுபோல் சுயநலத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் வேகமாக உயரக்கூடும். இருப்பினும், எப்போதும் பிறரை மிஞ்சவேண்டும், அதனால் நம் அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் கிட்டாது.

    சில நாட்களுக்குப்பின், என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் ரோஸ் சான்.

    “எனக்குத் தெரியாது!” என்றேன், விறைப்பாக.

    வெவ்வேறு விதமாகக் கேட்டுப்பார்த்தாள். நான் பிடிகொடுக்கவில்லை.

    எல்லாருக்கும் உதவி செய்து நம் சக்தியைச் செலவழிப்பதைவிட தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள இயலாதவர்களுக்கு மட்டும் உதவி செய்தால் — அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களோ, இல்லையோ — பலனடைவார்களே என்று தோன்றிப்போயிற்று.

    எழுத்தாளருக்கும் ஆசிரியருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன:

    1 எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருந்தால், அவர் சுமாரானவர்தான். இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில், “Telling” என்பார்கள். மாணவரோ, வாசகரோ, சிலவற்றை அவர் தாமே புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும்.

    2 `இப்படிச் செய்யுங்கள்!’ என்று அதிகாரம் செய்பவர் மிகச் சுமார். (ஒரு கதையில், `நீங்களாவது இதிலிருந்து நீதி கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதுவது சிறுபிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகத்தில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். பொழுதுபோக்காக நாம் படிப்பவைகளில் இம்முறை அலுப்பைத்தான் தரும்).

    3 `இதைப்பற்றி மேலும் அறியவேண்டும்!’ என்ற உந்துதலை அளிப்பவர் சிறந்தவர். ஆசிரியர் அருகில் இல்லாவிட்டாலும். அவர் மாணவனுடனேயே போட்டியா!

    கற்றுக்கொடுத்ததை சிறப்பாகச் செய்யும் தன்னம்பிக்கையை அளிப்பவர் அவர்.

    தட்டிக்கொடுக்கலாமே!

    அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடப்பது அவனுக்கு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் பெற்றோர் காட்டிய அனுசரணையான போக்கால் அவனும் அப்படியே நடக்கிறான்.

    அவனுக்கு நேர் எதிரிடையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் திட்டினாலோ, அடித்தாலோ அவர்களை நல்வழிப்படுத்த முடியாது. ஏனெனில், அது அவர்களுக்குப் பழகிப்போன சமாசாரம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    அன்பும் கண்டிப்பும் காட்டினால், `இந்த ஆசிரியருக்குத்தான் நம்மேல்தான் எவ்வளவு அக்கறை!’ என்று நெகிழ்ந்து போவார்கள்.

    மட்டம் தட்டுவதைவிட தட்டிக்கொடுப்பது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டவல்லது.

    போட்டி மனப்பான்மை

    விழாக்காலங்களில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்டியப்பள்ளிகள் கலந்துகொள்ள நேரும்போது, `என் மாணவிகள்தாம் முதலில் ஆடவேண்டும்!’ என்று ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தி, சண்டையும் பிடிக்கும் ஆசிரியைகளை அடிக்கடி பார்க்கிறேன்.

    பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் இளவயதினர் தம் பண்பைக் கற்கிறார்கள். `நம்மை முன்னிருத்திக்கொள்ள வேண்டும்!’ என்பது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அளிக்கும் தவறான பாடம். மாணவிகளும் கர்வத்துடன் நடக்கத் தலைப்படுகிறார்கள்.

    “என் மாணவன் என்னைவிட நன்றாக வாசித்துவிட்டான். அவனை இன்னொருமுறை எல்லாவற்றையும் வாசிக்கவைத்தேன்!” ஓர் இசைப்பதிவுக்குப்பின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் அதிர்ச்சியுடன் கூறினார்.

    மாணவனுடனேயே போட்டியா!

    சீடன் குருவை மிஞ்சினால் பெருமை அடைந்து பாராட்ட வேண்டாமா?

    இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் இறைவனைத் துதிக்கும் வழிகள் என்பதை இப்போது பலரும் உணராமல் போனது காலத்தின் கோலமா?

    Share
  • பாட்டி பெயர்

    -நிர்மலா ராகவன்

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
    எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

    பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப் போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

    “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

    ”பாட்டி பேருதான்!”

    அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

    “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

    “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”
    மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

    மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகளின் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம்.

    “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

    சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “எனக்கு அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”
    `எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப் போச்சு!

    இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.
    ஸாம்’.

    படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

    “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

    “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

    அவனுக்குப் புரியவில்லை.

    “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

    “சம்பூர்ணம். தெரியாத மாதிரி கேக்கறீங்களே!”

    “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

    சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

    முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

    `நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

    `நான் சொல்ல வந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன் மேலேயே பழியைத் திருப்புவார்!

    “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

    Share
  • தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 148

     

    தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    `அவர் தானுண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பார்!’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு.

    `நான் செய்வதில் அநாவசியமாகக் குறுக்கிடாமல் இருக்கிறார்!’ என்று பிறரை மெச்சி, அதனால் எழும் நிம்மதி எல்லோருக்கும், எப்போதும் வந்தால் உலகின் கதி என்னவாகும்?

    கணவனோ, மனைவியோ, ஒருவரை ஒருவர் நிந்திக்கும்போது, `இது அவர்கள் குடும்ப விவகாரம்!’ என்று பிறர் ஒதுங்கிப்போவதால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. பிறர் குறுக்கிட்டால், தன்மானம் கருதியாவது ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்களே!

    கதை

    எங்கள் எதிர்வீட்டிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆண்ட்ரூ தன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். (நாற்பத்து ஐந்து வயதிருக்கும். ஆனாலும், அவனது நடத்தையால் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை). அடக்க ஒடுக்கமான மனைவியைத் தான் பழகும் விலைமாதர்களைப்போல் என்றெல்லாம் பழித்த அவச்சொல்லை என்னால் தாங்க முடியவில்லை.

    ஆக்னஸ் எனக்கு நெருங்கிய சிநேகிதி. `கணவனுக்கு அடங்கியிருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்’ என்று பொறுத்துப் போய்க்கொண்டிருந்தாள்.

    அந்த அர்த்த ராத்திரியில் நான் மட்டும் தனியாக அவர்கள் வீட்டுக்குப்போய் தட்டிக் கேட்டால் நன்றாக இராது என்று, என் கணவரையும் எழுப்பி அழைத்துப் போனேன்.

    அவர்கள் வீட்டுக் கதவை நான் தட்டித் தட்டி உடைக்காத குறை. ஒரு வழியாக வந்து கதவைத் திறந்த ஆண்ட்ரூ, “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன்!” என்றான், ஆத்திரத்துடன். `உன்னை யார் அழைத்தது?’ என்று சொல்லாமல் சொல்கிறானாம்!

    நான் அயராது, “என் கணவர் இப்படி என்னை வதைத்தால், அப்போது யாராவது உதவி செய்ய வந்தால், நான் நன்றியோடு இருப்பேன்,” என்றேன்.

    உள்ளேயிருந்து பெரிய விம்மல் கேட்டது.

    இருபது ஆண்டுகளாகத் தான் படும் பாட்டைப் பெற்றோர்களிடம்கூடக் கூறியதில்லை ஆக்னஸ். கணவனிடம் அப்படி ஒரு விசுவாசம். (வதை படுகிறவர்கள் வதைப்பவர்களைத்தான் முதலில் நாடுவார்களாம்). வெளிப்பார்வைக்கு கண்டிப்பும் கறாருமாக இருப்பதைப்போல் பாசாங்கு காட்டுவாள்.

    தவறு தன்மேல் இல்லை, தனக்கும் ஆதரவு காட்ட ஒரு சிலராவது இருக்கிறார்கள் என்று தெளிந்ததும், கணவனுக்கு எதிராக நடக்கும் துணிச்சல் வந்தது அவளுக்கு. விரைவிலேயே, மேற்படிப்பைச் சாக்காக வைத்து வெளிநாடு போனாள் – கணவனை (கயவனை?) தனியே தவிக்க விட்டுவிட்டு.

    பிறரது வாழ்க்கையில் எதற்காக குறுக்கிடுகிறோம்?

    நம் செய்கையால் ஒருவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடைத்தால், அதைப் பார்த்து நாமும் எதையோ சாதித்ததுபோல் மகிழ்வு உண்டாகிறதே! இப்படி நடந்தால் இரு தரப்பினருமே பயனடைகிறார்கள்.

    சில சமயம், நாம் நல்லதென்று எதையாவது செய்யப்போய், அது எதிர்பாராத விளைவுகளில் கொண்டுவிடுகிறது. அவர்களுக்கு எழும் அவமானத்தை நம் பக்கம் திருப்ப முனைவார்கள்.

    கதை

    “நாம்ப பெரிய புள்ளை ஆயாச்சு. வகுப்பிலே ஒக்காந்திருக்கையிலே தமிழ் படிச்சுக் குடுக்கற வாத்தியார் என் தோளிலே கை போடறாருங்க, டீச்சர்!” என்று புகார் செய்தாள் அம்மாணவி.

    வாரத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் மட்டும் தமிழ் கற்றுக் கொடுப்பது அந்த மனிதனின் வேலை. பள்ளி விடுமுறையாதலால், அப்போதுதான் அங்கு நிறைய பேர் இருக்க மாட்டார்கள்.

    அந்த நிகழ்வைப் பற்றி ஒரு தமிழ் பத்திரிகையில், என் தனிப்பட்ட பகுதியில், எழுதினேன். ஊர், பெயரெல்லாம் கிடையாது.

    சில நாட்கள் கழித்து, அந்த வாத்தியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, தொலைபேசிவழி.

    “இப்போது எல்லாருக்கும் அது நான்தான் என்று தெரிந்துவிட்டது. ஒரே ஷேம்!” என்று ஒரேயடியாகக் கத்தினான்.

    வகுப்பில் மாணவியைக் கட்டியணைத்து, அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டுபண்ணுவது அவனைப் பொறுத்தவரை தவறில்லை.

    நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவனோ நிறுத்துவதாகத் தெரியவில்லை.

    பொறுக்க முடியாது போக, “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!’ என்று சொல்லிவைத்தேன். (எதிராளியைச் சமாளிக்க, அவர்கள் பக்கம் சாய்ந்துவிட வேண்டும்).

    சட்டென்று அடங்கினான். “அது நானில்லை என்று எழுதிவிடுங்கள்,” என்று உத்தரவு பிறந்தது.

    எப்படி எழுதுவது?

    `தன் மாணவியிடம் வகுப்பில் முறைகேடாக நடந்துகொண்டது இன்னார் இல்லை,’ என்றா? `எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!’ என்ற கதைபோல் இருக்கிறதே!

    எதற்காக எழுதுவது?

    வயதில் தன்னைவிட மிகச் சிறியவளான ஒரு பெண்ணிடம் ஒருவர் முறைதவறி நடக்கிறார். அவரை எதிர்க்கும் சக்தியோ, பாதுகாப்போ அற்ற அப்பெண் பயந்து நடப்பதை ஏற்கிறாள். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், அறிந்தும் எதுவும் செய்யாமல் இருப்பது சுயநலமின்றி வேறென்ன! இந்த நிலை பரவலாக நடக்க வழிவகுப்பதுபோல் ஆகிவிடுமே!

    `நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது, என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போவார் என் உறவினர். வீடு திரும்பியதும் ஏதேதோ செய்வார். அப்போது அது பாலியல் வதை என்று எனக்குப் புரியவில்லை. எல்லாச் சிறுமிகளுக்கும் அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்!’ என்று சமீபத்தில் ஒரு பெண் தினசரியில் எழுதியிருந்தாள்.

    தனக்கு நடந்தது தகாத காரியம் என்று அவளுக்கு ஏன் தோன்றவில்லை?

    யாரும் இந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, முன்னெச்சரிக்கை செய்யவில்லை.

    `ஆண்களும், பெரியவர்களும் என்ன செய்தாலும் பெண்ணாய் பிறந்துவிட்டவர்கள் பொறுத்துப் போகவேண்டும்!’ என்று வலியுறுத்தி, நம்பவும் வைத்திருப்பார்கள்.

    இப்படி நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!

    இந்த நிலவரம் பொறுக்காது, தீய நடத்தை கொண்ட எவனையோ பற்றிப் பெண்கள் எழுதினால், பல ஆண்கள் ஒன்றுசேர்ந்து, பெண்களைத்தான் சாடுகிறார்கள்.

    `நீங்க ஆண்களைத் தாக்கி எழுதறீங்களே! நாங்க பெண்களைப்பத்தி எழுதினா?” என்று ஒருவர் என்னிடம் சவால் விட்டார்.

    சில ஆண்கள் செய்வது அடாத செயல் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளும் நேர்மையோ, தைரியமோ குறைவு.

    “எழுதுங்களேன்! நானா வேண்டாங்கறேன்?” என்றேன். நானே அப்படி எழுதியுமிருக்கிறேனே!

    தவறு என்று தெரிந்தே செய்வது என்ன, ஆண்களின் பிரத்தியேக உரிமையா, அல்லது சாமர்த்தியமா?

    Share
  • பஞ்சரத்னம்

    -நிர்மலா ராகவன்

    பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

    “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

    அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் முறையாக கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

    அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் பாட்டு கற்றுக்கொண்டவர்கள்.

    பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

    பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்குப்’ போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

    குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

    போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

    `இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

    தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

    புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

    ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

    பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

    `இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

    `காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

    சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

    “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

    `அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

    தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

    ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

    “ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

    நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

    சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

    நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

    அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக்கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

    பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

    அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

    “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

    ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

    `இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

    அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

    சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

    “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

    கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

    ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

    முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

    அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

    “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

    “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னால வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

    தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

    மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

    ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

    நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

    அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

    நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

    (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

    Share
  • நலம்… நலமறிய ஆவல்…. (147)

    -நிர்மலா ராகவன்

    மதிப்பீடுகள்

    `எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’

    `இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’

    ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்!

    அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி!

    பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம்.

    ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்?

    தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு.

    எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள்.

    நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை.

    `கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி?

    பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். `உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்ற நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்?

    பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது.

    `நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா?

    `ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா?

    கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார்.

    “ஒருத்தருக்குமே புரியவில்லை. `அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம்.

    ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும்.

    நம் முகபாவத்திலிருந்தே, `இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது.

    ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, `அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது!

    கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில்.

    இப்போது உலகம் அவரைப் பழித்தது: `இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’

    அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை.

    பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது.

    கதை

    தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்.

    சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    `இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது.

    என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது.

    இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன்.

    அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!”

    எவ்வளவு உண்மை!

    அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன்.

    கதை

    கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான்.

    முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன்.

    நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன்.

    நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன்.

    தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.

    மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன்.

    கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக `ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி!

    எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

    தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை!

    Share