Author: றியாஸ் முஹமட்

  • யூத்!

    -றியாஸ்முஹமட்

    இன்டர்நெட்டில்
    இடறி விழுந்தான்
    கைபேசியில்
    கைதியானான்

    விதைக்கும் காலத்தை
    விரயம் செய்கிறான்
    ’தல’ என்கிறான்
    ’தளபதி’ என்கிறான்

    பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறான்
    பார்க்காத போதும் சிரிக்கிறான்
    போதையில் மிதக்கிறான்
    போற இடம் மறக்கிறான்

    பேராண்மை என்கிறான்
    பேரின்பம் என்கிறான்
    தறிகெட்டு ஆடுகிறான்
    தகிட தாளம் போடுகிறான்

    சிகரெட்டில் தீ வைத்துச்
    சிந்தனைகளை எரிக்கிறான்
    எதைப் புரிந்து கொண்டான்?
    எதைத் தெரிந்து கொண்டான்?

    கேள்வி கேட்டால்
    கேள்விக்குப் பதில்
    யூத்
    யூத்தாமாம்!!

     

    Share
  • பள்ளி நினைவு!

    -றியாஸ் முஹமட்

    பாதி ராத்திரியில்
    பாதிக் கனவுகளோடு,
    எழுந்து விடுகிறேன்
    ஒரு
    பரதேசியாக….

    உடலில் ஒரு
    இறுக்கம்.
    மனதில் ஒரு
    ஏக்கம்…

    கண்டது
    கனவுதானே என்றதும்
    கண் கலங்கிப்
    போனேன்.

    கண்ட கனவு,
    பள்ளிக் கனவு.
    பனிக் கட்டியாக
    உறைந்து விடுகிறது
    என்னிதயம்.

    கலையாத கனவுடன்
    கனத்த இதயத்தோடு
    பள்ளி வளாகத்தில்
    நுழைந்து விடுகிறேன்.

    அதுதான்
    என் பள்ளி,
    ஓட்டமாவடி தேசியப்
    பள்ளி…

    புதிய கட்டிடங்களின்
    குறுகுறுப் பார்வை
    என்னை உரசி விளையாட,
    அடையாளம் கண்டு
    ஆரவாரத்தோடு,
    அணைத்துக் கொண்டது
    ஹிஜ்றா அரங்கும்,
    அஷ்ரப் மண்டபமும்.

    நுழைந்து விடுகிறேன்
    பள்ளி வளாகத்தில்.
    பள்ளி மண்ணை
    அள்ளித் தின்றேன்,
    பள்ளி அறையில்

    படுத்துப் புரண்டேன்,
    பள்ளித் தண்ணீரை
    வயிறு முட்டக்
    குடித்தேன்.

    தீர வில்லை
    அந்தத் தாகம்,
    தாங்க முடியவில்லை
    இந்தச் சோகம்.

    சிறிய மாணவர்கள்
    செய்யும் சிறு
    குறும்புகளை
    நான் செய்து
    பழைய மாணவன்
    என்பதை மறந்தே
    போனேன்…

    அன்றைய
    வகுப்பறைகள்தான்
    இன்றும்…
    கலர் மாறியதே
    தவிர
    உருவம் மாறவில்லை.

    நாங்கள் அடித்த
    பந்துகளின் தடமும்
    விட்ட ராக்கெட்டும்
    எழுதிய எழுத்தும்
    வரைந்த ஓவியங்களும்
    காதல் கதைகளும்
    அன்று போல்

    இன்றும்
    பேசிக் கொண்டுதான்
    இருக்கின்றன
    மெளனமாக
    அஜந்தா ஓவியங்களாக….

    கலங்கிப் போன
    என் கண்கள்.
    வகுப்பறையை
    மேய்ந்தது…
    என் மேசையைத்
    தேடுகின்றது…
    என் பெயர்
    அடையாளம்
    இடப்பட்ட மேசை
    இன்றும் இருக்கலாமோ
    என்று!

    அடங்காத
    ஆசையை
    அடக்க முடியாது
    தேட முற்படுகையில்
    அந்தப் பிஞ்சு
    மாணவ முகங்கள்
    சொல்லாமலே சொன்னது
    இது உங்கள்
    நேரமல்ல
    எங்கள் நேரம்
    என்று….

    கனத்த இதயத்தோடு
    வெளியே வர
    நாட்டிய மரங்கள்
    நடனமாட
    அதே வேப்பையும்
    பனையும்
    அங்கேயே இருக்க

    எங்கே
    போனார்கள் என்
    பள்ளி தோழர்கள்
    மட்டும்…?

    கலங்கிப் போன
    கண்கள் தேட
    நிஜத்தை நினைக்க
    இரத்த நாளங்கள்
    இறுக்கமாக
    அமர்ந்து விடுகின்றேன்
    புதிய வகுப்பறையில்
    பழைய மாணவனாக!

    சிணுங்கி நிற்கும்
    சின்ன  மாணவனுக்கு
    எங்கே போய் – நான்
    வாங்கிக் கொடுப்பேன்
    சீனி மாமாவின்
    சீனி முட்டாசியும்
    சீவல், வடையும்!

    தாங்க முடியவில்லை
    இந்த வேதனை
    ஏன் இந்தச்
    சோதனை?

    நான் பிறக்க
    வேண்டும்
    என் தாயின்
    வயிற்றுக் கூடத்தில்
    அவள் (மீண்டும்)

    சேர்க்க வேண்டும்
    இதே என்
    பள்ளிக்கூடத்தில்!

     

    Share
  • தந்தைக்கு ஒரு கவிதை!

    -றியாஸ் முஹமட்

    எழுத நினைக்கிறேன்
    ஒரு கவிதை,
    அடக்க முடியவில்லையே                son with sorrrow

    என் அழுகை!

    எழுது எழுது என்று
    நினைக்கிறது மனது
    அழுது அழுது

    என் பேனாவும் பழுது!

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    பேனாவை எடுத்தால்
    பேச்சு வரவில்லை வாப்பா
    ஏட்டை விரித்தால்

    எழுத்து வரவில்லை வாப்பா!

    காகிதமும் என் கண்ணீரால்
    கரைந்து போனதே வாப்பா
    தளை தட்டுது வாப்பா

    மூச்சு முட்டுது வாப்பா!

    எதுகை மோனை கூட
    அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
    நான் எழுதிய கவிதைகளும்

    கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

    கூடவே இருப்பீர்கள் என்றுதானே
    கொடி போலப் படர்ந்தேன்
    பாதியில விட்டுப் போகவா

    பனமரம்போல வளர்ந்தேன்?

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    நான் சந்தி வழியிறங்கி
    பள்ளி செல்ல,
    சவூதி வழியிருந்து

    வழி சொல்வீர்களே வாப்பா!

    நாவலடிதானே போனீர்கள் வாப்பா
    காலடி கூட மாறவில்லையே
    மரணப்பிடி பிடிக்கையிலே

    என்னென்ன நினைச்சிருப்பீங்க
    தன்னந்தனியா தவிச்சிருப்பீங்க!

    போங்கள் போங்கள்!
    என் வாப்பா மண் மறைந்தார்
    என்று சொல்பவர்கள்
    என் கண் மறைந்து போங்கள்!

     

    Share
  • போச்சு எல்லாமே போச்சு!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    படித்த படிப்பும்
    வீணாகப் போச்சு
    வேலைக்காக அரசியல்வாதி
    கால் பிடித்து
    மானம் போச்சு!

    கையில காசி காணாது
    மாமா மச்சினன் உறவுகள்
    அறுந்து போச்சு
    இதுதானடா உறவுகள்
    என்று வெறுத்துப் போச்சு!

    வாழ்ந்தும் வாழாமலும்
    முடியும் நரைத்துப் போச்சு
    காதல் என் காதல்
    அது கண்ணீரில் கரைந்து போச்சு!

    என் வாழ்க்கை ‘இன்டரஸ்டிங்’
    இல்லாமல் போச்சு
    இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு
    ஜாலியாப் போச்சு!

    கல்குடா வாழ்க்கை
    வளைகுடா வாழ்க்கையாக
    மாறிப் போச்சு
    தனியாகவே வாழ்ந்து
    வெறுத்துப் போச்சு!

    ‘கிளாமர்’ காலமெல்லாம்
    மலையேறிப் போச்சு
    உழைத்த பணம் எப்படியோ
    தீர்ந்து போச்சு!

    ஊர் நிலமைகளை நினைத்து
    என் தூக்கமும் போச்சு
    ஊர் படையெல்லாம்
    பெரும் படையாகவும் ஆச்சு!

    பணம் இருந்தால் மாத்திரமே
    அரச உத்தியோகம் என்பது
    சரியாகப் போச்சு
    நாடு ரொம்ப கெட்டு போச்சு!

    பட்டம் படித்தவன்
    பாலைவனம் மேய்வது
    பழகிப் போச்சு
    சமூகமும் தம் நிலைமறந்து
    போச்சு!

    படித்தவர்களுக்கு
    வேலை என்பது
    குழந்தைப் பேச்சு
    இதைக் கேட்டுக் கேட்டு
    காதும் புளித்துப் போச்சு!

    நம்ம தலைவர்களும்
    இப்படியா என புரிந்து போச்சு
    காலத்தின் கோலம்
    மாறிப் போச்சு!

    நாடு ஏன்டா இப்படி
    குட்டி சுவராப் போச்சு
    என் கதை கேட்டு ஏன்டா
    உன் முகம் தொங்கிப் போச்சு!

    லாப்டொப்பிலும்,போனிலும்
    என் வாழ்க்கை போயாச்சு
    ஏன்டா இப்படி வெளிநாட்டு
    வாழ்க்கை கருகிப் போச்சு!

     

    Share
  • பனமரக் காடு

    ass

     

    பனமரக் காடு
    பாரதி பிறந்த நாடு !

    முதிர் கன்னியவள் படும்பாடு
    ஆடவனே நீ கொண்டாடு
    கன்னியவள் வாழ்வை பந்தாடு !

    கவிஞா நீ பாடு பாடு
    பாரதப் பண்பாடு !

    #றியாஸ்முஹமட்
    கத்தார்

    Share
  • பாரதி கண்ட புதுமைப்பெண்!

    -றியாஸ் முஹமட்

    ஆணுக்கு பெண் இங்கே சரி நிகர்
    புரிந்தும்  கிடக்கலாமோ
    வீட்டுச் சுவர்,
    கொதித்தெழு உன்னை எதிர்ப்பவர்              puthumaipen
    இங்கு எவர்…?

    பேனாவைப் பிடித்து விட்டாய்
    பேராயுதம் ஏந்திவிட்டாய்
    பேரின்பம் அடைந்து விட்டாய் – இனிப்
    பேரரசை ஆளப்போகிறாய்…!

    காடு மலை தாண்டு
    கழுகுக்கண்கொண்டு பாரு
    பல்லக்கில் ஏறு
    பல்லாங் குழியாடு!

    அடிமைச் சங்கிலியை அவிழ்த்து
    மடமைகளைக் கொளுத்து
    சாத்திரங்களை வகுத்து
    மூத்த பொய்களை நசுக்கு!

    தளர் நடைபோக்கு
    நிமிர்ந்த நன்னடையாக்கு
    அந்தப் பாரதியின் எளிய நடைதானே
    உன் மொழிநடையாச்சு…!

    அச்சம் மடம் நாணம்
    உடைத்தெறி,
    நல்லவை கெட்டவை பகுத்தறி
    உன் பேனா வைக்கட்டும் வெடி
    அசத்தட்டும் வரி!

    திறந்து கிடக்கிறது வழி
    உன்னை அழைக்கிறது வெற்றிப்படி
    ஓயாமல் ஓடடி
    நீதான் வற்றா நதி…!

    நீ மரபுக் கவி
    புதுக்கவி
    ஹைக்கூக் கவி!

    உன் வாழ்க்கையில்
    இல்லவேயில்லை சதி
    விதி உடைத்து வெளியேற்றும்
    உன் மதி!

    பல்லவர் காலப் பக்தி
    சோழர்காலப் புத்தி
    மாந்தர்கள் வியக்கும் செம்பருத்தி
    உன்னைப்போல யாரு இன்னொருத்தி?

    பெண்ணியம் எதிர்ப்பவனுக்குக்
    கொடு வியாதி…!
    உன் பேனா குண்டுபட்டு அழியட்டும்
    அந்தக் கபோதி…!

    விழி பிதுங்கி நிற்கட்டும்
    இனவாதி…!
    உன் எழுத்தால் விழிக்கட்டும்
    பச்சோந்தி…!

    நல்லறங்களைக் கவிதைகளில் போதி!
    எச்சரிக்கையாகட்டும்
    நம்ஊர் அரசியல்வாதி!

    மாற்றங்களைக் கொண்டுவா
    பெண் பாரதி!
    நம் நலிந்த சமூகத்தில்
    நீயும் ஒரு பாதி!

    பேனா பிடித்த தாதி
    தந்திரவாதிகளுக்கு மந்திரவாதி,
    இதைத்தானே பாரதி சொன்னான்
    கவிதைகளில் ஓதி..!

    அற்புதம் உன் எழுத்து
    இனி மாறும் ஈழத் தமிழர்களின்
    தலையெழுத்து!

    பெண்ணடிமை அழியட்டும்!
    பெண்குரல் ஓங்கட்டும்!
    அற்பர்கள் ஒழியட்டும்!
    அநியாயம் அழியட்டும்!

    உன் பேனா கண்டு அவன்
    கை அரிவாள் நழுவட்டும்..!
    அந்தப் பாரதி கண்ட
    புதுமைப் பெண்ணும்
    நீயாகட்டும்!

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி!
    உன்னைப் போற்றி வணங்குது
    தாய் மண்ணடி!

     

    Share
  • உயிர் நண்பன்

    -றியாஸ் முஹமட்

    பள்ளியிலே சேர்ந்து படித்ததுமில்லை
    பனங்காட்டிலே சேர்ந்து மேய்ந்ததுமில்லை
    பாலைவனம் மேய்கையிலே
    பால் நிலவு ஒளியினிலே
    பார்வையில் பட்ட மின்னலடா
    பாரதிதாசனின் கவிதைப் புத்தகமடா
    பக்கத்தில் நீ இல்லையென்றால்
    படபடக்கும் என் இதயமடா
    பரதேசிபோல வாழ்ந்தேனடா
    பரிதாபப்பட்ட அந்த இறைவனோ
    பரிசாக உன்னைத் தந்தானடா!

    Share
  • தினங்கள்

    றியாஸ் முஹமட்

    awater

    உழைக்கும் தம்பியை
    போற்றுகிறது
    ‘மேதினம்’..!!

    படிக்கிற வயதிலேயே
    உழைப்பா..?  கேட்கிறது
    ‘சிறுவர்’ தினம்..!!

    எப்படியோ போங்கடா
    தண்ணீரை சேமியுங்கடா
    என்கிறது ‘தண்ணீர்’ தினம்..!!

    தினமும்
    தினங்கள்
    போடும் சண்டைகளைப்
    பார்த்து சிரிக்கிறது
    ‘முட்டாள்’ தினம்..!!

    இனி,
    இந்தத் தம்பிக்கு
    எப்பதான் வருமோ
    ஒரு ‘சுதந்திர’ தினம்..!!

    Share
  • கலைமகள் அழைக்கிறாள்!

    -றியாஸ் முஹமட்

    கலைமகள்
    அழைக்கிறாள்…                                          riyaz

    தரணியில்
    கவி பாட
    என்னை
    அழைக்கின்றாள்!

    முத்து முத்தாகக்
    கவி பாட
    நான் கவியரசு
    வைரமுத்துவுமில்லை!

    கட்டுக் கட்டாக
    அவிழ்த்த விட
    நான் கவிஞர்
    கண்ணதாசனுமில்லை!

    சுரந்து வரும்
    என் எண்ணங்களையும்
    வண்ணக் கனவுகளையும்
    வாளி கொண்டு
    அள்ளி இறைக்க
    நான் கவிஞர்
    வாலியுமில்லை!

    அதை நின்று கேட்டு
    ரசிக்க ருசிக்க
    இங்கே ஒரு
    பாரதியுமில்லை
    ஒரு
    நாதியுமில்லை!

    அமரர்
    கல்கியைப்
    போலக்
    காலங்கள்
    கடந்தாலும்…

    பாவலர்
    பா விஜயைப்
    போல
    என் பருவங்கள்
    தொடர்ந்தாலும்…

    விட மாட்டேன்
    என்  பேனாவை!

    இனி எனது
    எழுது கோலில்
    தீ மூட்டித்
    தீக்குச்சியாய்
    எரியப்
    போகிறேன்…

    நசிங்கிப் போன
    என் சமூகத்தின்
    நாளைய
    விடியலுக்காக..!


    Share
  • பணம்

    -றியாஸ் முஹமட்

    போனதும் விமானம்
    வந்ததும் விமானம்
    மறக்க முடியவில்லை
    ஏழையாகப் பிறந்ததால்
    நான்பட்ட அவமானம்…!

    வண்ண வண்ணக் காகிதம்
    வதங்கியது என் வாலிபம்
    எல்லாமே செய்தது
    இந்தப் பணம்
    இல்லாமல் ஆனேன்
    நடைபிணம்…!

    எல்லாம் கழன்ற பட்ட மரம்
    யாருமில்லாத் தனி மரம்
    போட்டார்கள் பல கோஷம்
    கண்டேனே பல வேஷம்
    ஆடினார்கள் நல்ல
    ஆட்டம்…!

    உயிரானவளும் மௌனம்
    உயிரெடுக்க வந்தான்
    எமனும்
    உறவுகள் என்னைப் பந்தாட
    ஏறியது விமானம்
    பறந்தது ஆகாயம்
    வளைகுடாப் பயணம்

    தொலைத்தேன் உறக்கம்
    சிந்தினேன் இரத்தம்
    ஆனாலும் விடவில்லை
    என் ஊக்கம்
    சேர்த்தேன்
    பணம்… பணம்….!

    இப்ப என் பையோ
    கனம் கனம்
    உறவுக் கடிதங்களோ
    தினம் தினம்
    உறவாடக் கூப்பிடுகிறார்கள்
    ஊர் சனம்…சனம்…!

    பணமில்லா வாழ்க்கை
    பூஜ்யம்
    இதையறிய எதற்குடா
    மியூசியம்?

    இதைப் புரிந்தால்
    நீதானடா
    வாலிபச் சிங்கம்

    வருத்தப்படாத
    வாலிபர் சங்கம்
    உங்களுக்கு இந்தக்
    கவிதை சமர்ப்பணம்!


    Share
  • முதிர் குமரன்!

    -றியாஸ் முஹமட், கத்தார்

    வயதுக்கு வந்து பல வருடமாச்சு
    மீசையோடு வெள்ளை முடியும்
    எட்டிப் பார்த்தாச்சு !

    வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
    தெரிந்து போச்சு நானும் ஒரு
    முதுமைக் குமரன்
    என்று…!

    கூடப் படித்தவர்கள்
    எல்லாம்
    குடித்தனம் போயாச்சு!

    குழந்தை, குட்டிகளோடு
    கூடி வருகையில்,
    மனசு துடிக்கிறது,
    எரி மலையாக வெடிக்கிறது…!

    என் பள்ளிப் பருவத்திலேயே
    தாய்க்கு வந்தது வாதம்,
    கை, கால்களை
    முடக்கி வாழ்க்கையைச்
    சிதைத்து விட்டது!

    மூத்த தங்கை வயதுக்கு வந்து,
    இருபது வருடங்களாச்சு !

    கல்யாணச் சந்தையில்
    காலூன்ற நிற்கும்,
    இளைய தங்கை வேறு…!

    தங்கைகளை நினைத்து,
    உறங்கும் அம்மாவின்
    அழுகையும் அதிகமாச்சு !

    அவளின் மூச்சும்
    வரவரக் குறைந்து போயாச்சு !

    எங்கள் ஏழ்மை வாழ்வு
    கண்டு குடும்பத்தாரும்,
    அயலவரும்
    எட்டிப் போயாச்சு !

    எங்க வீட்டு எச்சி தின்னு
    வளர்ந்த செல்லப்
    பூனையும் வீட்டுச்சுவர்
    ஏறிப் போயாச்சு !

    குடும்பச் சுமையைக் குறைக்க
    முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

    வாழ்ந்தும் வாழாமலேயே,
    உடம்பு தளர்ந்து,
    இளமையும் போயாச்சு !

    இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

    என் தங்கைகளைக்
    கரை சேர்க்கும் வரை….
    கனவுகளைக் கண்களில்
    சுமந்து கொண்டு
    வாழும்
    நானும் ஒரு
    முதிர் குமரன்தான்!

     

    Share
  • ஒரு மரத்தின் சாபம்!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    ஓட்டமாவடியின்
    வரலாற்றைத் தேட
    ஏடுகளைப்
    புரட்டாதீர்கள்
    என் முதுகுப்
    பட்டையைப் புரட்டுங்கள்!                    tree

    பல நூற்றாண்டுகளாகத்
    தீபவம்சம் போல்
    வாழ்ந்தேன்!

    தீ வைத்தீர்
    குழி பறித்தீர்
    வழி மறித்தீர்
    கோஷமிட்டீர்
    கதை முடித்தீர்!

    நீங்கள்
    பதுங்கு குழிகளிலும்
    பள்ளிகளிலும்
    படுத்திருக்கும் போது
    நான்தானே
    தன்னந்தனியாக
    முச்சந்தியில்
    தனித்திருந்து
    விழித்திருந்தவன்!

    உங்கள் பாதுகாப்புக்கு
    முதல் ‘ஊர்காவற்படை’
    வீரன்
    நானல்லவா….?!

    திறந்து பாருங்கள்
    என்
    இதயக் கிளைகளை
    அது பல
    துப்பாக்கி ரவைகளுக்கும்
    குண்டுகளுக்கும்
    பதில் சொல்லியிருக்கும்!

    இலங்கை முதல்
    இந்திய இராணுவம் வரை
    குண்டடித்துப்
    பந்தடித்தார்கள்.
    விட்டு கொடுத்தேனா..?

    இல்லை
    உங்கள் ஊரைக்
    காட்டிக் கொடுத்தேனா..?

    ஏன் கொடுத்தீர்கள்
    இத் தண்டனையை?
    தூக்குக் கிடைத்தாலும்
    ஒரே நாளில்
    போயிருக்கும்
    என் உயிர்!

    கூலிப் படை
    வைத்துக்
    கொலை வெறியோடு
    வெட்டி வீழ்த்தினாய்!

    என்
    எச்சிக் கொட்டையை
    விழுங்கித்தானே
    உங்கள் பிரதேசம்
    பசுமை பெற்றது
    எழில் கொஞ்சும்
    அழகைப் பெற்றது!

    அரசியல் என்கிறாய்
    அபிவிருத்தி என்கிறாய்
    நிறுத்து
    உன் பேச்சை!

    இல்லை
    நிறுத்தி விடுவேன்
    உன் மூச்சை!

    நன்றி
    உள்ளவன் நான்!
    நன்றி மறந்தவர்கள்
    நீங்கள்!

    சாபம்
    விடுகின்றேன்
    உங்கள்
    அரசியல்வாதிகளுக்கு!

    உங்கள்
    மரணத்திலும்
    எடுத்து விடாதீர்கள்
    என் மரக்
    கட்டையை!

     

    Share
  • மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!                lady.jpg

    நடுச் சாமம் நாய்க் குரைக்க
    நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
    நீயில்லா வீடு பார்த்து,
    தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
    என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

    ஆராரோ ஆரிரரோ..,
    பக்கத்து வீட்டுத் தாலாட்டு
    காது கேட்டு, வாட்டுது மச்சான்
    என்னை வாட்டுது மச்சான்!

    எண்ணைக் கிணத்துல நீங்க
    உங்க எண்ணத்தில நாங்க
    ராப்பகலா  தூங்காம நானிங்கு ஏங்க
    என்னத்த வாழ்ந்தோம் மச்சான்

    எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

    மாரியில குளிராகி
    கோடையில வெயிலாகி
    உருமாறித் தடுமாறி
    பனியாகிக் காற்றாகி
    சருகானேன் மச்சான்! 
    ஒரு நேந்துவிட்ட கோழிபோல
    ஆனேனே மச்சான்….

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

    நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
    நீங்க வைச்ச மரமும்  வளர்ந்து நிற்குது மச்சான்
    நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
    உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

    ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
    ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
    பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
    பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

    நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
    வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

    இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
    உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
    பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
    பிச்செறிந்து வாயேன் மச்சான்!

    ஏரோப்பிளேன் வாழ்க்கை
    வேணாம் மச்சான்
    ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

     

    Share
  • சிரிப்பழகி

    –றியாஸ் முஹமட்.

     

    “என்ன அப்படி பார்க்கிறீங்க, சும்மா?”

    “பார்த்தேன்.. ஏன் பார்க்கக் கூடாதோ..?”

    “இல்ல அப்படி என்னதான் இருக்கு எங்கிட்ட பார்க்க?” சிரிப்புடன் கேட்டேன்.

    “உங்கிட்ட என்னடா இல்ல?”

    அழகன்டா நீ, மனசிலே ‘மின்னல்’ அடித்தது ஒரு பெண் அழகு என்று சொன்னதும். யாரு இவள் முதல் பேச்சிலேயே ‘டா’ போடுகிறாள்? எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் கெட்டிக்காரியும் கூட. சிரிக்கவே பிறந்தவள் மாதிரி. வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தும் பிடிக்காதது போல காட்டிக் கொண்டேன். நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

    ஒரு நாள் கேட்டு விட்டேன் “இப்படி அடிக்கடி பார்க்காதீங்க வகுப்பில் மற்றவங்க தப்பாக நினைக்கப் போறாங்க”

    சொன்னதுதான் தாமதம் அவள் முகம் என்னவோ போல் ஆகி சிவந்த விட்டது…அட, சே’.. ஏன்டா இப்படிக் கேட்டேன் பாவம்…. எனக்கோ இருப்பு கொள்ள வில்லை. அன்றிலிருந்து அவள் அதிகம் பார்ப்பதில்லை எப்போதாவது ஒரு முறை பார்ப்பாள் அதுவும் முறைத்து. அவள் சும்மா பார்ப்பதை விட முறைத்து பார்ப்பது பிடித்திருந்தது பல மாதங்களாக அவள் முறைப்பு பார்வையிலேயே பல வகுப்புகள் கழிந்தது.

    rain-girlஅன்று ஒரு நாள் சரியான மழை, யாருமே இன்று பின்னேர வகுப்புக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவாறே என் சைக்கிளை ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் பக்கமாக மிதித்தேன். அங்கே மழைத்தூறலில் குடையுடன் அவசர அவசரமாக ஒரு உருவம் நடந்து செல்கிறது. யாராக இருக்கும் நெருங்கும் போதே தெரிந்து விட்டது அதே சிரிப்பழகி என்று…

    சவனாட்டு சந்தியின் ரயில்வே கடவையை கடக்கும் முன்பே அவளை விரட்டி மடக்கி பிடித்து விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக மாற பறந்தது என் சைக்கிள்….என்னைக் கண்டதும் அவள் முகத்தில் குட்டி சந்தோசம், ஆனாலும் காட்டிக் கொள்ளவே மாட்டாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று மட்டும் லேசாக புரிந்தது. ஹுதா பள்ளி ரோட்டில் வடிந்தோட வழியில்லாது சிதறிக்கிடக்கும் தண்ணீரை அவள் கடந்து செல்லும் அழகோ அழகு எத்தனைபேர் போனாலும் நம்ம பிகரை பார்ப்பது அது ஒரு தனி சுகம்தானே!

    அன்று வகுப்பில் யாருமேயில்லை எங்கள் இருவரையும் தவிர வெள்ளம் ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் உள்ளே வரட்டுமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. நாங்களும் மழையில் உள்ளே இருக்கவும் முடியாது வெளியே போகவும் முடியாது அவதிப்படுவதும் இருவருக்குமே நன்கு புரிந்தது. எப்படியாவது பேச மாட்டாளா என் மனம் ஏங்கித்தவித்தது.

    rain-girl2ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு பேசினேன், “என்ன.. உங்கள் நண்பிகள் வரவில்லையா? ”

    “மழையால கூட்டப் போக வில்லை அப்படியே வந்து விட்டேன்..”

    ஓஓ..மழையும் பாராது படிப்பில் இவ்வளவு அக்கறையோ? இல்ல என்னை பார்க்கத்தான்…..

    “உங்கள் நண்பர்கள் யாரும் வரல..?” அவள் கேள்வி என் எண்ணத்தை திருப்பியது.

    “இல்ல நானும் அப்படியே வந்து விட்டேன், யாரையும் கூட்ட போகல குடையைக் கூட எடுக்கல பாருங்களேன்” … ஒரு சிரிப்பு. ஆனாலும் ரொம்ப ஓவராக பேசிவிடக் கூடாதென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்…ஒருவேளை இவளும் நம்மைப்போல் நினைத்து விட்டாள் அவளைப் பார்க்க வந்தேன் என்று..சேசே.. அப்படி நினைக்கமாட்டாள் நினைத்தாலும் அதுதானே உண்மை கிளாஸ் கட் அடிக்காம வாரதே அவளுக்காக தானே என்னையே சமாதானப்படுத்தினேன்.

    விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள். தூரத்திலிருந்த என் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவள் எழுத்து. உடல் சிலிர்த்து, அந்த மழையிலும் வியர்த்ததே என் கழுத்து! மழை சற்று ஓய்ந்து விட காற்று வீசியது டியூட்டரி கதவை இரண்டு குடைகள் முட்டியது.

    வருவது என் நண்பர்களாகவோ இல்ல அவள் நண்பிகளாகவோ இருக்கக் கூடாது உள் மனதில் பிராத்தித்தவனாக யாரோ மழைக்கு ஒதுங்குகிறார்கள் என்று நினைத்தேன். இல்ல அவர்கள் எங்களை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரிந்தது. அங்கே, மழையில் நனைந்த தும்பிகளாக அவளின் நண்பிகள்குடையை மடக்கியவாறே உள்ளே நுழைந்தார்கள்…

    பெரும் ஏக்கத்தோடு படபடத்து ஓய்ந்தது எங்கள் இருவரின் விழிகள் …

    இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா…!!

     

     

     
    றியாஸ் முஹமட்
    கத்தார்
    Picture Source:
    http://www.merlinsilk.com/2011/04/23/men-crying-in-public/
    http://sarahflanigan.com/category/faith/

    Share