Author: க. பாலசுப்பிரமணியன்

  • நவராத்திரி நாயகியர் (7) சங்கரன் கோயில் – கோமதி அம்மன்

    க. பாலசுப்பிரமணியன் 

     

    ஆலகாலமுண்ட ஆதிசிவன் அன்பு நாடியேGod-1

    ஆடித்தவமிருந்து அருள் செய்யும் அம்பிகையே!

    ஊசி முனையில் ஒரு காலில் நீ நின்றாலும்

    பாசமுடன் பாரெல்லாம் வாழ வைத்தாயே !!

     

    புன்னைவனத்துப் புன்சிரிப்பே !

    புவியீர்த்த விண்வெளியே!

    அனைத்துயிர்க்கும் நீ ஆவுடையாள் !

    அறமென்னும் அமுதூட்டும் தேன்மொழியாள் !

     

    சங்கடங்கள் தீர்த்திடிடுமே சங்கரன்கோயில்

    சர்ப்பங்கள் காத்திருக்கும்  புற்றுவாயில் !

    ஊழ்வினையாய் ஓடிவந்த விடமெல்லாம்

    ஓங்காரி கண்பட்டா லே நல்லமுதாகும் !

     

    போகமுடை வாழ்வழித்துக்  காலமெல்லாம்gomathi

    நாகத்துடன் வாழ்ந்திருந்த யோகினியே!

    பற்றுடனே வேண்டியவர்  ரோகமெல்லாம்

    புற்றுமண்ணால் போக்கிவிடும் கோமதியே !

     

    சங்கரனும் நாரணனும் ஒன்றிடவே

    சமத்துவத்தைக்  கற்பித்த  சாம்பவியே!

    பதுமனுக்கும் சங்கனுக்கும் வழிகாட்டி

    பாம்பாட்டி சித்தருக்கு அருள் தந்தாயே !

      

    பாம்புடனே தேளையும் பரிசாக அளித்தாலும்

    பாங்குடனே அவர் குறைகள் தீர்த்திடுவாய் !

    மனம்கலங்கி வந்தோர் மாவிளக்கு ஏற்றிடவே

    மாதேவி! ஒளிவிளக்காய் நின்றிடுவாய் !

     

    கண்களிலே நீயிருந்தால் கவலைகள் நீங்கிவிடும்

    எண்ணத்திலே நீயிருந்தால் ஏற்றங்கள் வந்துவிடும் !

    ஒருராத்திரி போற்றிடவே  ஓலங்கள் அடங்கிவிடும்!

    நவராத்திரி போற்றிகிறேன்! நாயகியே வந்துவிடு!

    Share
  • நவராத்திரி நாயகியர் (6) சிருங்கேரி சாரதாம்பிகை  

    க. பாலசுப்பிரமணியன்

    Sri-Sharadamba-Sringeri 

     

    பாம்புகூடத் தவளைக்குக் குடை பிடிக்கும் !

    பாரினிலே அன்புக்குக் குரல் கொடுக்கும் !

    பாரதியின் ஆட்சியிலே அமைதி கிடைக்கும்

    பார்த்தவுடன் மனம் வியந்து நிற்க்கும் !!

     

    கங்கையிலே பொங்கிவரும் வெள்ளமென

    துங்கையிலே பொங்குகின்ற அருளமுதே !

    துவண்டுவிடும் மானிடருக்கென்றும்

    தோள்கொடுக்கும் தெய்வத்திருவே !

     

    அங்கமெல்லாம் தங்கமென ஒளிரும்

    அறியாமை அகமிருந்து விலகும் !

    அன்னையுன் பார்வை அருமருந்தே!

    ஆனந்தம் தந்துவிடும் அடிக்கரும்பே!!

     

    வேதத்தின் பொருளாக வந்தவளே

    பேதமின்றி அருளுகின்ற சாரதையே !

    ஆணவத்தை அழிக்கின்ற பார்வை

    ஆன்மிகத்தை அருளுமவள் பாதை !!

     

    ஆய கலைகள் அறுபத்தி நான்கும்

    அசைகின்ற விழிதன்னில் உருவாகும்  !

    அறிவும், கல்வியும் அவளாட்சி

    ஆனந்த பைரவியாய் அவள் காட்சி!

     

    யாழிசையும் இன்னிசையும் இணைசேர

    யாகத்துடன் வேதஒலி மேலோங்க

    பாரனைத்தும் இசைத்திடுவாள்  பாரதியே !

    பாதங்கள் போற்றிடவே  நாளெல்லாம் நற்கதியே  !!

     

    கதிரவனின் திசைமாற வரும் ராத்திரி

    கண்கள் சோர்வடைந்தால் பகலும் ராத்திரி !

    கண்ணோடு கண்ணோக்கி அவளைக் கண்டால்

    காலங்கள் மாறாமல் கண்களுக்கு நவராத்திரி !

    Share
  • நவராத்திரி நாயகியர்  (5) காஞ்சி காமாட்சி

    க. பாலசுப்பிரமணியன்

    kamakshi

    கண்ணுக்கு இனியவளே

    கருத்துக்குக்  கனிந்தவளே

    கலையனைத்தும் சிலையாகக்

    காஞ்சியில் அமர்ந்தவளே !

     

    காஞ்சிப் பட்டழகு ,

    கண்ணிரண்டும் உனக்கழகு !

    கையருகில் கரும்பழகு ,

    காமாட்சி உன் அருளழகு !

     

    பிறையுண்டு தலைதன்னில்

    பரிவுண்டு கண்ணிரண்டில்

    பயம் நீக்கும் அபயம் முன்னில்

    பார்த்தாலே விலகும் பாவம் மண்ணில் !

     

    வேதத்தை வித்தாக்கி

    வேட்கையை முடிவாக்கி

    முக்தியை  முதலாக்கி

    பக்தியைத் தந்தவளே! !

     

    பத்மாசனத்தில் உனைக்கண்டால்

    பாழ்வினைகள் ஓடிவிடும் !

    பார்வதியே, பகவதியே

    பாசாங்குசம் தரித்தவளே !

     

    சொத்தெல்லாம் எனக்கெதற்கு?

    சொந்தமாய் நீயிருக்க !

    சுமையில்லா  வாழ்விற்குச்

    சுவையான அருட்சுனையே !

     

    சக்திபீடம்  உனதன்றோ !

    சாந்தத்தின் உருவமே நீயன்றோ !

    நவரசத்தில் கருணையின் வடிவன்றோ !

    நவராத்திரி நாயகி நீயன்றோ !!

    Share
  • நவராத்திரி நாயகியர்   (4) -சமயபுரம் – மாரியம்மன்

     க.பாலசுப்பிரமணியன்

    images (6)

     

    திரிபுரத்தைக் காப்பவளுக்குத்

    தேரிழுக்க ஓர் புரம் சமயபுரம் !

    தீராத நோய்களையும் தீர்த்திடுமே

    தேவியவள் தெய்வவரம்!

     

    தீச்சட்டி ஏந்தி வந்தாலும்

    தீந்தமிழில் பாடி வந்தாலும்

    திருவுள்ளம் அவளுக்கு ,

    தீமைகள் போக்கிடுவாள் !

     

    மாவிளக்கு மனதில் ஏற்றி

    மாரியவள் பெயர் போற்றி

    மனமுருகி நின்றாலோ

    மனமிரங்கி வந்திடுவாள் !

     

    ஆத்தாவென அழைப்போருக்கு

    அடைக்கலமே தந்திடுவாள் !

    அங்கங்கள் சந்நிதியில்  தரைபுரள

    அருள்புரிய எங்கெங்கும் வந்திடுவாள் !

     

    கூழெடுத்துக் கொடுத்திடுங்கள்

    கூடவந்து  அவள் நிற்ப்பாள் !

    கூடிவந்த ஊழ்வினையைக்

    கூறாமல் விலக்கிடுவாள் !!

     

    கல்லாக இருந்தாலும் கருணைக்கடலே

    சொல்லுக்குள் அடங்காத சொற்சுவையே

    கண் கொடுத்த  தெய்வமன்றோ !

    காலமெல்லாம் அவளை மறப்பதுண்டோ  ?

     

    பகலென்ன, இரவென்ன,

    பார்ப்பதற்கு நேரமென்ன?

    திருமுகத்தை கண்டவர்க்கு

    தினந்தோறும் நவராத்திரி !

    Share
  • நவராத்திரி நாயகியர்   (3)

    திருவானைக்கோவில் – அகிலாண்டேஸ்வரி

     

    நீரினில் சிலையெடுத்து

    நீலகண்டன் அருள்பெற்று

    சிவஞானம் கேட்டறிந்த

    சிவகாம சுந்தரியே !

     

    தாடங்கம் காதணிந்து

    தந்தமுகனை முன்கண்டு

    தாயன்பைத் தரணிக்குத்

    தந்தருளும் தயாநிதியே !

     

    தாம்பூலம் வாயில் தந்து

    தமிழினிலே சொல் தந்து

    காளமேகம் கவி சொல்லக்

    காவியம் படைத்தவளே !

     

    திருநீறுச் சித்தனவன்

    திண்ணமுடன் மதில்கட்ட

    திருக்கோயில் கொண்டவளே

    திருவரங்கன் சகோதரியே !

     

    பாலுண்ணும் குழந்தைகூடப்

    பாட்டெடுக்கும்  உனைக்கண்டால் !

    பள்ளியறை செல்லாத உன் காதல்

    பாடிடவே நாள்முழுதும் நவராத்திரி!

     

    காவிரி நதியினில் நீராடிக்

    கரையினில் வாழ்ந்திடுமுனைப் பாடிக்

    கலங்கிடும் நெஞ்சங்கள் பல கோடி,

    காத்தருள்,  தாயே!  நீ வாழி !

    Share
  • மதுரை மீனாட்சி – நவராத்திரி நாயகியர்   (2)

    க. பாலசுப்பிரமணியன்

    images (1)

    விண்வெளியைக் கண்விழியில்

    வளைத்திட்ட மீன்விழியே !

    அங்கயர்க் கண்ணியுன் ஆட்சியிலே

    ஆதிரையான் அடைக்கலமே !

     

    மல்லிகை மணமுடையாள்

    மதுரையிலே காட்சி தந்தாள் !

    மலையத்துவசன் மகளங்கே

    மகாதேவன் கைப்பிடித்தாள் !

     

    சித்திரைப் பெண்ணழகி

    சிங்காரத் தமிழழகி ,

    ஆலவாய்ப்  பேரழகி

    அடியார்க்கு அருளழகி !

     

    கூடலிலே கொடி பறக்கும்

    கோயிலிலே அருள் சுரக்கும்

    குறைவில்லா மனம் கேட்டால்

    கோமகளே! உன் விழி படைக்கும் !

     

    நற்றமிழில்  போற்றுகையில்

    நாளெல்லாம் நவராத்திரி !

    நாட்டியத் தலைவனுக்கோ

    நீ என்றும் சிவராத்திரி!

     

    அருளுக்கு உன்னையன்றி

    ஆலவாயில் யாரைத்தேட?

    நாயகியே! அருள் புரிவாய்

    நானிலமும் வாழ்ந்திடவே!

     

     

     

     

     

     

    Share
  • மயிலை கற்பகாம்பிகை – நவராத்திரி நாயகியர் (1)

     

    க. பாலசுப்பிரமணியன்

     

    கற்பகாம்பிகை – மயிலை

    kabali

    கற்பகமே ! அற்புதமே !!

    கருணையின் தத்துவமே !!

    கயிலையின் கனியமுதே !

    மயிலையின் முத்தமிழே !!

     

    கற்சிலையும் காந்த நிலை

    கண்களிலோ அன்பின் விதை

    கைகளிலே கருணை மழை

    காலமெல்லாம் உந்தன் கதை !

     

    மயிலாக நீ வந்தாய்

    ஒயிலாக நீ நின்றாய்

    மலராலே நீ துதித்தாய்

    மகேசனை நீ அணைத்தாய் !

     

    மாதவம் செய்தோரும்

    மாமுனி குலத்தோரும்

    மனங்கனிந்து அழைத்தோரும்

    மாதங்கி! உன்னைப் பணிவார்!

     

    நாதங்கள் வடிவாகி

    நமச்சிவாயம்  ஒன்றாகி

    நானிலம் ஆட்சிசெய்யும்

    நவராத்திரி நாயகியே!

     

    நல்லோர்கள் காத்திடவே

    வல்லோர்கள் வாழ்ந்திடவே

    இல்லாமை நீங்கிடவே

    இசையாக இன்றே வருவாய்!

     

    படத்திற்கு நன்றி: http://nellaichokkar.blogspot.in/2012/06/blog-post.html

    Share
  • ஆச்சிக்கு ஒரு அஞ்சலி

    க. பாலசுப்பிரமணியன்

    manorama_2580318f

    நெருப்புக்கும் கொஞ்சம் சிரிப்பூட்ட

    நீ இன்று சென்றாயோ?

    நிலையாத வாழ்க்கையைக் கண்டு சிரிக்க

    இன்னொரு வேடம் கொண்டாயோ ?

     

    ஜில்லென்ற ரமாமணியை  இன்று

    நெருப்பும் சுட்டிடுமோ ?

    ஜாம்பஜாரோடு இணைந்த ஜக்குவின்

    காதலியை நாடு மறந்திடுமோ ?

     

    முத்துக்குளிக்க நீ அழைத்த

    தூத்துக்குடியின் நல்  முத்தே !

    சிரிப்பின் இமயமே! உனக்குச்

    சிலை ஒன்று போதாது!

    Share
  • நடுத்தெரு நாராயணன்

    க. பாலசுப்ரமணியன்.

    “என்னங்க, ஆபீசுக்குக் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    “இதோ கிளம்பிண்டே இருக்கேன் அபிராமி” என்று பதிலளித்தவாறே “வண்டியைத் துடைச்சுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப அழுக்கா இருக்கு” தனது துடைக்கிற வேலையில் மும்முரமானார்.

    “கொஞ்சம் இருங்கோ. நான் வந்துண்டே இருக்கேன். அந்த நாராயணன் எங்கே இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்கிறேன். சரியாய் நம்ம வெளியிலே கிளம்பும் போது எதிரிலே வருவான். அவனுக்கு விவஸ்தையே கிடையாது. மற்றவங்களை நோகடிச்சுப் பார்க்கிறதிலே தான் அவனுக்குச் சந்தோஷம்.” முணுமுணுத்துக்கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    அபிராமி எந்த நாராயணனைப் பற்றி சொல்லுகிறார்னு நினைக்கின்றீர்கள்? நடுத்தெரு நாராயணனைப் பற்றித் தான் ! அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது? அவரைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகின்றார்கள்?

    “நாராயணன் ரொம்ப நல்ல மனிதன். ஊர்ல எல்லாரும் அவரை ஒரு அப்பாவி என்று தான் சொல்வார்கள். வேலை ஒண்ணும் பார்த்ததாகத் தெரியவில்லை. அப்படியே திண்ணையில் உட்கார்ந்திருப்பார். ஏதாவது நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் அவர் உண்டு. அவர் வேலையுண்டு . ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டார்.” இது அநேகருடைய கருத்து..

    நாராயணன் கிட்டத்தட்ட ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம். அநேகமாக ஒரு ஐம்பது வயது இருக்கும் புண்ணாக்கு போன்ற ஒரு நிறம். எப்போதும் பளபளவென இருக்கும் உடலைப் பார்த்தால் அதிலிருந்து ஒரு கால் கிலோ நல்லெண்ணெய்யை வழித்து எடுக்கலாம் போல இருக்கும்.

    நாராயணன் ஒரு பக்திமான். கட்டை பிரம்மச்சாரி. காலையிலே குளித்ததும் திருநாமம் அணிந்து வேங்கடேச சுப்ரபாதமும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லிவிட்டு பிரபந்தத்திலிருந்து சில பாடல்களைப் படித்துவிட்டு அதற்குப் பின் நியூஸ் பேப்பரை அலசுவார்.

    பொழுது போக வில்லையென்றால் தெருவிலே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பார்.. அதனால் தான் தெருவிலே உள்ள எல்லோருமாகச் சேர்ந்து நடுத்தெரு நாராயணன் என்ற காரணப் பெயரை அவருக்கு வைத்தனர்

    “என்ன நாராயணா, இன்றைய நடைப் பயணம் இன்னும் ஆரம்பமாக வில்லையா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு சாமிநாதப் பிள்ளை திண்ணையில் அவர் அருகில் வந்து உட்கார்ந்தார். இருவரும் திண்ணை நண்பர்கள்.

    “இல்லை இனிமேல்தான்… முதல்லே சொர்ண பவனில் ஒரு காப்பி சாப்பிட்டு அதுக்கப்பறம்தான் எல்லாம். வாங்க பிள்ளை காப்பி சாப்பிடப் போகலாம்.”

    நாராயணன் அவர் தம்பி வீட்டில்தான் தங்கியிருந்தார். அவர் தம்பிக்கு அரசாங்கத்தில் வேலை. தம்பி மனைவியும் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்கிறார். அதனால் இவர் வீட்டிலேயே தங்கி வீட்டையும் தன்னுடைய தாயாரையும் கவனித்துக் கொள்கிறார். மாசத்துக்கு ஒரு முறை தன்னுடைய கிராமத்திற்குச் சென்று நிலபுலன்களையும் கவனித்து வருகின்றார்.

    பிள்ளையும் நாராயணனும் சொர்ண விலாசை நோக்கிச் செல்கின்றனர். எதிரே தன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய காவேரி அம்மாள் நாராயணனைப் பார்த்ததும் மீண்டும் வீட்டுக்குள் செல்கிறார்.

    “கோவிலுக்குப் போகும் நேரத்தில் இவன் எதிரே வந்தால் சாமி கூடச் சரியா தரிசனம் தர மாட்டார்.” சொல்லிக்கொண்டே அவர் உள்ளே செல்கிறார்.

    இதைக் கண்ட சாமிநாத பிள்ளை மனத்துக்குள் வருத்தப் படுகின்றார். “என்ன உலகமடா நாராயணா ! ரொம்ப மோசம்டா இந்த உலகம். என்னவோ எதிரே ஒரு ஆள் வந்தால் சகுனம் சரியில்லே என்று நினைத்து உலகமே இருண்டு போன மாதிரி மனசை வைத்துக்கொண்டு .. குடும்பமே முழுகிப்போறமதிரி மனதைக் கருப்பாக்கிக்கொண்டு.. ..ச்சீ, ஒரே அருவருப்பா இருக்கு நினைக்கிறதுக்கே ..ரொம்ப வருத்தமாக இருக்கு நாராயணா.” ‘.

    ஒரு வருத்தம் தோய்ந்த முகத்தோடு நாராயணன் பதிலளித்தார். “சாமிநாதப் பிள்ளை..மனசு இருக்கே அது ஒரு குரங்கு மாதிரி.. தன்னோட இயலாமையையும், தன்னோட கையாலாகதனத்தையும் மற்றவா மேல போட்டு தன்னைச் சுற்றி ஒரு தற்காப்பு கவசம் போட்டுகொள்றது அது. .தன்னோட மனசையே நம்ப வைக்கறது தன்னோட தோல்விக்கு மற்றவாதான் காரணம்னு. ஒரு வகையில பார்க்கப்போனா உளவியலிலே இது ஒரு விதமான மனநோய் ….எஸ்கேபிஸ்ட் முறைன்னு கூட சில பேர் சொல்லுவா.”

    “நாராயணா, இதெல்லாம் உனக்கு இப்படித் தெரியும்?”

    சிரித்துக்கொண்டே நாராயணன் “பிள்ளை, ஒண்ணு தெரிஞ்சுக்குங்கோ அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்ட அவாளுக்கெல்லாம் நிறைய அறிவு இருக்கும் என்பது கிடையாது. எனக்கு நிறைய படிக்கற ஆசை. அதனால்தான் படிக்கிறேன். ஒரு வகையிலே பார்க்கப்போன நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு மனசில ஒரு விதமான நோய் இருக்கிறதாகச் சொல்லுவா. அதனால இதல்லாம் பெரிசு பண்ணாம நம்ம வேலைய மட்டும் பார்த்துண்டு போயிண்டு இருக்கணும். “

    “ ரொம்ப தைரியசாலி நீ நாராயணா. விவேகமானவன்.”

    ” சாமிநாதா, சுவத்திலே போய் முட்டிக்கொண்டு வலிக்கிறதே வலிக்கிறதேன்னு அழுதா யார் மேல தப்பு? சிலர் சுவர் மாதிரி. அவா மேல போய் நம்ம முட்டிக்கொண்டு நாம ஏன் அழணும் ? நான் சொல்லறது புரியறதா உங்களுக்கு? “

    ஒரு நிமிடம் சாமிநாத பிள்ளை அப்படியே நின்றுவிட்டார். நாராயணின் மனப்பக்குவத்தைக் கண்டு வியந்து.

    இருவரும் சொர்ணவிலாசை நோக்கிச் செல்கின்றனர். பின்னாலிருந்து ஸ்கூட்டரின் ஹார்ன் சப்தம் விட்டுவிட்டுக் கேட்கிறது.

    சற்றே திரும்பிப் பார்த்த நாராயணன் ” குழந்தை, நில்லும்மா, நில்லும்மா, கிராஸ் பண்ணாதே.. ஸ்கூட்டர் வருது பாரு…” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூட்டரில் மோதவிருந்த குழந்தையை தள்ளிவிடுகிறார். ஸ்கூட்டர் திசை மாறி நாராயணனின் கால் மேல் ஏறுகின்றது.

    ஒரு கையால் குழந்தையைப் பிடித்துக்கொண்டே கீழே விழுந்த நாராயணனைச் சுற்றி ஒரே கூட்டம். பதைபதைத்து செய்வதறியாமல் சாமிநாத பிள்ளை நிற்கிறார்.

    கூட்டத்தைக்கண்டு ஓடி வந்த அபிராமி ” என்ன ஆச்சுன்னா உங்களுக்கு?.. அப்பவே சொன்னேன் சகுனம் பாத்துப் போங்கோ.. அவன் எதிரிலே வரப்போ போகாதேங்கோன்னு ….கேட்டேளா ” என்று அலறுகின்றார்.

    ஸ்கூ ட்டெரிலிருந்து கீழே விழுந்த பார்த்திபன் தப்பித்து விட்டார். தலையில ஹெல்மெட் போட்டிருந்ததால் ! உடம்பில். ஒரு அடிகூடப் படவில்லை .

    ஒரு ரிக்க்ஷாகாரர் ஓடிவந்து நாராயணனின் கையைப் பிடித்து ” நம்ம சாமிடா . இவரை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கடா.. ஒரு வண்டியை இந்தப் பக்கம் இழுங்கடா.” எனக் கத்துகிறான்.

    வண்டியில் உட்கார்ந்து கொண்டே நாராயணன் அபிராமியப் பார்த்து சத்தமாகச் சொல்கின்றார் “அபிராமி.. நான் ஒண்ணும் அவர் எதிரே வரவில்லை. அவர் தான் என் பின்னாலேதான் வந்தார். விஷயம் தெரியாம தப்பாப் பேசாதேங்கோ “

    குழந்தையின் தாயாரோ கைகூப்பி “ரொம்ப நன்றி நாராயணன் சார் . ஏதோ அந்த வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனே கீழே வந்து என் குழந்தையைக் காப்பாற்றின மாதிரி இருக்கு. நிஜம்மா நீங்கப் பகவான் வடிவத்திலே வந்திருக்கேள்.” .

    அந்த ஒரு நிமிடம் நாராயணனுக்கு நடுத்தெருவிலிருந்து வைகுண்டத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.

    சாமிநாத பிள்ளையின் கண்கள் பனித்தன. அவர் கண்களில் வழிந்த நீர் இந்த வார்த்தைகளைக் கேட்டதற்கா, இல்லை, நாராயணனின் கால் ஓடிந்ததற்கா, இல்லை இந்த மனிதர்களின் ஒடிந்த இதயங்களைக் கண்டா – யாருக்குத் தெரியும்?

    Share
  • வலி

      -க. பாலசுப்ரமணியன்  

    காதலைக் கருவில் சுமந்த வலி
    காலத்தில் மழலை கரையும் வலி
    சிரிப்பைச் சுமக்க முடியாத வலி
    சோகத்தில் சிரிப்பை இணைக்கும் வலி
    ஏழ்மையை இருட்டில் கழிக்கும் வலி
    பணத்தை இருளில் பதுக்கும் வலி
    பசியைப் பாதுகாக்கும் வலி
    புசித்த சுமையில் வாடும் வலி,

    உழைப்பிற்கு ஊதியம் கிடைக்காத வலி
    உண்மை உதவாதபோது வலி
    பொய்மைக்கும் புகழ்பாடும் வலி
    பல்லக்கில் பாவிகளைத் தூக்கும் வலி
    முதுமையைக் குழந்தைகள் ஏலம்போடும் வலி
    முக்காடு போட்டுக்கொண்டு முகம் காட்டமுடியாத வலி
    மூவுலகும் ஆள நினைக்கையில்
    முழங்காலைக் கூடத் தூக்கமுடியாத வலி

     மலர்கின்ற பொழுதும் வலி
    மணத்தைக் காக்கும் பொழுதும் வலி
    வாசமில்லா  வாழ்வும் வலி
    வாழ்வில் வாசம் விலகுவதும் வலி
    வலிப்பவனுக்குத் தான் தெரியும்…
    அது என்னவென்று!

    உள்ளத்தை உரசல்கள் புண்ணாக்கும் பொழுது
    வாழ்வே…
    கசப்பாய், துவர்ப்பாய், புளிப்பாய்…
    அறுசுவையும் வலியாய்…

    வலி…
    வலிக்கட்டும் வலிக்கட்டும்…
    வலியில்லாத வாழ்வும் ஒரு வாழ்வோ?

    வலியை உணராத மானுடனும் ஓர் மானுடனோ?
    வலிக்கு மருந்து தேடும் மனிதனுக்கு
    இறைவன் கொடுக்கும் ஒரு வரப்ரசாதம்
    இன்னும் கொஞ்சம் வலி!

     

     

     

    Share
  • ஏழரை எப்படி வரும்?

    பாலசுப்ரமணியன்

    காலைக்கதிரவனின் முதல் மரியாதை இன்னும் மண்ணுக்குக் கிட்டவில்லை. மெல்லிய இளவேனில் காற்று உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. நரசிம்மன் வழக்கம் போல் தன் வீட்டு மொட்டை மாடியில் தன்னுடைய தினசரி காலை நடையை துவக்கியிருந்தார் பொதுவாக அந்த நேரத்தில் அவர் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் இன்று அவர் மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர் முன்தினம் தன் வீட்டுப் பரம்பரை ஜோசியரிடம் தன்னுடைய ஜாதகத்தைக் காண்பித்ததுதான்.

    “உங்களுக்கு மூல நட்சத்திரம். வரப்போவது ஏழரை நாட்டுச் சனி. ரொம்பப் படுத்தும். ஜாக்கிரதையாக இருக்கணும். உடம்பை கொஞ்சம் படுத்தும். வேண்டாத வம்பு தும்புல மாட்டிப்பேள். கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்கணும். என்ன சொன்னாலும் தப்பாகும்.”

    இது போதாதா நரசிம்மனின் மனசை ஒரு கலக்குக் கலக்க!  பாவம், மனுஷன்!  காலையிலே மாலனைப்பற்றிக்கூட நினைக்கவில்லை. எல்லாம் சனி பகவான் நினைப்புத்தான்!!

    இன்று மொட்டை மாடியில் அவர் நடையில் அவ்வளவு வேகமில்லை. “ஹலோ, நரசிம்மன், குட் மார்னிங்” பக்கத்து வீட்டுக்காரரின்   குரல்கூட அவர் காதுகளில் விழவில்லை.

    “”காலையிலே ரொம்ப சிந்தனை போலிருக்கு” இது மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர். நரசிம்மன் தன்னை அமுக்கியிருக்கும் சிந்தனையிலிருந்து  வெளியே வந்த பாடில்லை. மரத்திலிருந்து விழுந்த முள் அவர் கால்களில் குத்தி வலி தந்தது. காலை ஒருமுறை தூக்கி முள்ளைப் பிடுங்கி எறிந்தார்.

    “வனமாலி கதி சாரங்கி .. ” வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே மேலே நடந்தார். “சனி பகவான் எப்படி வருவார்? சனி வரும்போதே ஒரு உலுக்கு உலுக்கும் என்பார்களே.!! நாராயணா. நீ தான் காப்பாத்தணும்.”

    மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது

    “அம்மா” என்று ஒரே அலறல். ஒரு நிமிடம் தன தலையை இரு கைகளால் தாங்கிக்கொண்டு “நாராயணா, நாராயணா” என்று அந்த முதலை வாயில் பிடிபட்ட யானை “ஆதிமூலமே” என்று அழைத்ததுபோல் ஒரு கத்தல். என்ன ஆச்சு என்று அவருக்கே புரியவில்லை. “என்ன சார்? ” மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர்.

    “மண்டையிலே யாரோ பளார்னு அறைந்தமாதிரி இருந்தது” சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தார். “ஓ, அந்த காக்கான்னா சிறகாலே மண்டையிலே அடிச்சிட்டு ப் போறது.”

    ஒரு கணம். “ஆஹா, ஜோசியர் சொன்னது சரியாப்போச்சு. அந்த சனி பகவான் தன்னோட காக்கை வாகனத்திலேதான் வந்து மண்டையிலே தட்டி விட்டு ப் போயிருக்கார்.” அவர் மனம் ஒத்துக்கொண்டது.

    “ஆரம்பிச்சாச்சு. சனியின் பலன் இன்னிலேந்து போலிருக்கு. சனிப்பெயர்ச்சிக்கு மூன்று மாதம் முன்னாலேயே பலன் தெரியும் என்று சொல்லுவா.”

    அவர் நடையின் வேகம் தளர்ந்தது. சரி. இன்னிக்கு நடையை இதோடு முடித்துக்கொள்ளவேண்டியதுதான்.

    “பத்து நிமிஷம் தானே ஆச்சு. இன்னொரு அஞ்சு நிமிஷம் பார்க்கலாமா. “மனம் யோசித்தது. திரும்பிப்பார்த்தார் “நல்லவேளை. காக்கை. போயிடுத்து” அவர் நடை தொடர்ந்தது.

    சிறிது நேரத்தில் மீண்டும் “அம்மா” என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழாத குறையாய் நரசிம்மன். “அப்பவே நினைத்தேன். சனீஸ்வரனுக்கு எதிராய் நாம். போகப்படாதுன்னு.  தப்புத்தான். தப்பு” சொல்லிக்கொண்டே அந்த மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

    “ஏன்னா. என்ன ஆச்சு., மாடில ஒரே சத்தமா இருந்தது.” அலமேலுவை ஒரு முறை பார்த்துக்கொண்டே “சனி வரானில்லையோ  . அதுக்கு முகவுரை எழுதிட்டுபோனான்” மனைவிக்கு ஒன்றும் புரிய வில்லை.

    அடுத்த நாள் காலை அவருக்கு மொட்டைமாடிக்குப்   போவதா வேண்டாமா என்ற பிரச்சனை. “ஏன்னா, ஒரு நாள்  நடந்தா நித்தியம் நடக்குமாயென்ன? ” மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. “தைரியம் புருஷலக்ஷணம்” என்றோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

    மாடியிலே பதினைந்து நிமிடங்கள் நடந்தவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சனி பகவானின் வாகனத்தை எங்கும் காணோம். நடையில் வேகம் கட்டியது. சில நிமிடங்களில் “அம்மா”என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவர் பந்தயத்தில் ஓடுவது போல கீழிறங்கி வந்தார்.

    இரண்டு மாதங்களுக்கு நரசிம்மன் மாடிப்பக்கம்   செல்லவே இல்லை. ஒரு நாள் மாலை அவரை மாடியிலே பார்த்த பக்கத்து வீட்டு கோவிந்தராஜன் “என்ன நரசிம்மன், ரொம்ப நாளா மார்னிங் வாக்ல உங்களைக் காணோம்.” என்றார்.

    “என்ன சார் பண்றது, என் நட்சரத்துக்கு ஏழரைச் சனி பிடிச்சிருக்கு. தினசரி  காலையிலே காக்கை ரூபத்திலே சனி பகவான் மண்டையில ஓங்கி அடிச்சுட்டு போறார். ஒரு நாளுன்னா பரவாயில்ல,. தினசரியா? அதான். “

    ” என்ன சார் சொல்றேள், ஏழரை எட்டரையின்னு. கொஞ்சம் மேல நிமிந்து பாருங்கோ. உங்காத்து மரத்திலே காக்கா கூடுகட்டிக் குஞ்சு பொரிச்சிருக்கு. யார் அந்தப்பக்கம் போனாலும் தற்காப்புக்காக மண்டையிலே தட்டி விரட்டறது. ஒரு நாள் என்னைக்கூட எங்காத்து மாடியிலே…””

    கோவிந்தராஜன் பேசுவதைக் கேட்க நரசிம்மன் அங்கே நிற்கவில்லை. அவர் மனதில் ஒரே குழப்பம். “அப்போ, சனி பகவான் இப்படி வரவில்லை என்றால் வேறே எப்படி வருவார்?”

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • அரசமரத்தடியில் ஆண்டவன் தந்த பாடம்

     

    க. பாலசுப்ரமணியன்

    images

    அரச மரத்தடியில் ஆடாமல்
    அசையாமல் ஓர் உருவம் !
    போவோர் வருவோரைப்
    பார்த்தபடி இருக்கும்! (அரச..)

    குட்டிக் குட்டி மண்டையை
    குறைகள் பலவும் சொன்னாலும்
    கோணங்கி போல் குனிந்து நிமிர்ந்து
    கைகூப்பிக் கூட வரச் சொன்னாலும் .. (அரச..)

    கேள்விக்குப் பதில் கேட்டால்
    ஆனைபோல் இருக்கு மெந்தன்
    மேனியைப் பார்த்துச் செல்லேனென
    மேனியசைக்காமல் பதில் சொல்லும் … ( அரச..)

    பெரிய தலை சொன்னது
    பாரில் கற்க நிறைய உள்ளது :
    பாட்டி அவ்வை காலம் தொட்டு
    படிக்க நிறைய உள்ளது … !! ( அரச)

    நீண்ட காது சொன்னது
    கேள்வி ஞானம் நல்லது ,
    நீண்ட காது வழியாய்
    ஞானப் பேழையை யிறக்கு !! (அரச,,)

    வளைந்து கட்டும் தும்பிக்கை
    வாழ்க்கை தரும் நம்பிக்கை
    மரங்கள் பல அசைத்தாலும்
    குழந்தை போல வாழும் ! (அரச…)

    பெரிய தொந்தி பார்த்தாயோ?
    நல்லது கெட்டது உள்ளேதள்ளி
    நாளும் ஜீரணம் பண்ணும்
    இனிப்பும் கசப்பும் ஓரிடம் செல்லும் (அரச..)

    சின்ன வாகனம் போதும்
    சிறுகக் கட்டி பெருக வாழ,
    சிந்தையை நிறுத்தி பார்த்தாலே
    சிறிதுகூடப் பெரிதாய்த் தோன்றும்! (அரச..)

    கையினுள்ளே ஒரு கொழுக்கட்டை
    கையளவாய் சாப்பிடச் சொல்லும்
    காசினியில் பசியால் வாடும்
    கைகளில் ஒன்றை வைக்கச் சொல்லும் ! (அரச..)

    நீரும் காற்றும் நீல வானும்
    இயற்கை தரும் இன்பம் !
    நித்தம் இதனுடன் வாழ்ந்தால்
    அரசமரத்தடியும் ஆலயமாகும் ! (அரச..)

    Share