நவராத்திரி நாயகியர் (7) சங்கரன் கோயில் – கோமதி அம்மன்
க. பாலசுப்பிரமணியன்
ஆலகாலமுண்ட ஆதிசிவன் அன்பு நாடியே
ஆடித்தவமிருந்து அருள் செய்யும் அம்பிகையே!
ஊசி முனையில் ஒரு காலில் நீ நின்றாலும்
பாசமுடன் பாரெல்லாம் வாழ வைத்தாயே !!
புன்னைவனத்துப் புன்சிரிப்பே !
புவியீர்த்த விண்வெளியே!
அனைத்துயிர்க்கும் நீ ஆவுடையாள் !
அறமென்னும் அமுதூட்டும் தேன்மொழியாள் !
சங்கடங்கள் தீர்த்திடிடுமே சங்கரன்கோயில்
சர்ப்பங்கள் காத்திருக்கும் புற்றுவாயில் !
ஊழ்வினையாய் ஓடிவந்த விடமெல்லாம்
ஓங்காரி கண்பட்டா லே நல்லமுதாகும் !
போகமுடை வாழ்வழித்துக் காலமெல்லாம்
நாகத்துடன் வாழ்ந்திருந்த யோகினியே!
பற்றுடனே வேண்டியவர் ரோகமெல்லாம்
புற்றுமண்ணால் போக்கிவிடும் கோமதியே !
சங்கரனும் நாரணனும் ஒன்றிடவே
சமத்துவத்தைக் கற்பித்த சாம்பவியே!
பதுமனுக்கும் சங்கனுக்கும் வழிகாட்டி
பாம்பாட்டி சித்தருக்கு அருள் தந்தாயே !
பாம்புடனே தேளையும் பரிசாக அளித்தாலும்
பாங்குடனே அவர் குறைகள் தீர்த்திடுவாய் !
மனம்கலங்கி வந்தோர் மாவிளக்கு ஏற்றிடவே
மாதேவி! ஒளிவிளக்காய் நின்றிடுவாய் !
கண்களிலே நீயிருந்தால் கவலைகள் நீங்கிவிடும்
எண்ணத்திலே நீயிருந்தால் ஏற்றங்கள் வந்துவிடும் !
ஒருராத்திரி போற்றிடவே ஓலங்கள் அடங்கிவிடும்!
நவராத்திரி போற்றிகிறேன்! நாயகியே வந்துவிடு!