நவராத்திரி நாயகியர் (6) சிருங்கேரி சாரதாம்பிகை
க. பாலசுப்பிரமணியன்
பாம்புகூடத் தவளைக்குக் குடை பிடிக்கும் !
பாரினிலே அன்புக்குக் குரல் கொடுக்கும் !
பாரதியின் ஆட்சியிலே அமைதி கிடைக்கும்
பார்த்தவுடன் மனம் வியந்து நிற்க்கும் !!
கங்கையிலே பொங்கிவரும் வெள்ளமென
துங்கையிலே பொங்குகின்ற அருளமுதே !
துவண்டுவிடும் மானிடருக்கென்றும்
தோள்கொடுக்கும் தெய்வத்திருவே !
அங்கமெல்லாம் தங்கமென ஒளிரும்
அறியாமை அகமிருந்து விலகும் !
அன்னையுன் பார்வை அருமருந்தே!
ஆனந்தம் தந்துவிடும் அடிக்கரும்பே!!
வேதத்தின் பொருளாக வந்தவளே
பேதமின்றி அருளுகின்ற சாரதையே !
ஆணவத்தை அழிக்கின்ற பார்வை
ஆன்மிகத்தை அருளுமவள் பாதை !!
ஆய கலைகள் அறுபத்தி நான்கும்
அசைகின்ற விழிதன்னில் உருவாகும் !
அறிவும், கல்வியும் அவளாட்சி
ஆனந்த பைரவியாய் அவள் காட்சி!
யாழிசையும் இன்னிசையும் இணைசேர
யாகத்துடன் வேதஒலி மேலோங்க
பாரனைத்தும் இசைத்திடுவாள் பாரதியே !
பாதங்கள் போற்றிடவே நாளெல்லாம் நற்கதியே !!
கதிரவனின் திசைமாற வரும் ராத்திரி
கண்கள் சோர்வடைந்தால் பகலும் ராத்திரி !
கண்ணோடு கண்ணோக்கி அவளைக் கண்டால்
காலங்கள் மாறாமல் கண்களுக்கு நவராத்திரி !