Year: 2015

  • கானப்பேர் தந்த மானவீரர்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டிய நாடு வீரத்துக்கும் விளைநிலமாய்த் திகழ்ந்தது. அந்நாட்டில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்கள் பலர் பெருவீரமும், அதற்கிணையான ஈரமும் மிக்கவர்களாய் வாழ்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

    அவ்வீர மண்ணில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த ஊர்கள் பலவுண்டு. அத்தகைய வளமிகு ஊர்களில் ஒன்றுதான் ‘கானப்பேர்.’ எழிலால் மட்டுமின்றி எயிலாலும் (மதில்) சிறப்புப்பெற்றது அவ்வூர். அப்பகுதியை ஆண்டுவந்தான் குறுநில மன்னன் ஒருவன். அவன் பெயர் ’வேங்கைமார்பன்’ என்பதாகும். தோள்வலியும் வாள்வலியும் கொண்ட பெருவீரனான அவன், வான்தொடும் உயரத்தோடு கூடிய எயிலையும், காவற்காடுகளையும் அரணாய்க் கொண்ட வளமனையில் வாழ்ந்துவந்தான். வன்மையும் வனப்பும் மிக்க அந்த எயிலானது ‘கானப்பேரெயில்’ என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது.

    அந்நாளைய அரசர்கள், தம்மோடு முரணியோரிடமிருந்து (பகைவர்) தம்மையும், தம் நாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு அரண்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் சில இயற்கையாய் அமைந்தவை; சில செயற்கையாய் அரசர்களால் அமைக்கப்பட்டவை.

    ”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்”
    என்று அரண்களை அழகாய் வகைப்படுத்துவார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வகையில், நாட்டைச் சுற்றியிருக்கும் கடல், மலை, காடு போன்றவை இயற்கையாய் ஒரு நாட்டிற்கு அமைந்திருக்கும் அரண்கள். அவையேயன்றி, பெரிய மதில்கள், அகழிகள் (எனும் செயற்கை நீர்நிலைகள்) முதலியவற்றை ஏற்படுத்தியும் தங்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவர் அரசர்கள்.

    பேரெயிலைப் பாதுகாப்பாய்க் கொண்டு ஆட்சி புரிந்ததாலேயே தருக்கும் செருக்கும் மிக்கவனான் வேங்கைமார்பன். அப்போது மதுரையில் ஆட்சிபுரிந்துவந்தான் பாண்டிய மன்னன் ’உக்கிரப்பெருவழுதி’ என்பான். உக்கிரமான கோபத்தோடு பகைவர்களைப் பந்தாடும் மாவீரம் பொருந்தியவன் அவன். இப்பாண்டிய மன்னன் காலத்தில்தான் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழகத்தின் மூவேந்தரும் ஒற்றுமையாய் இருந்திருக்கின்றனர்(!). இதனைக் கண்ணுற்று மகிழ்ந்த அவ்வையார் எனும் பெண்பாற்புலவர் இதுபோன்ற ஒற்றுமையோடு இவர்கள் என்றும் வாழவேண்டும் என்று வாழ்த்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் (புறம்: 367) இடம்பெற்றுள்ளது.

    வீரமும், பெருவேந்தர்களின் நட்பும் கொண்ட வழுதியோடு யாது காரணத்தாலோ வேங்கைமார்பனுக்குக் கடும்பகை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு பெரும்போராய் வெடித்தது!

    கானப்பேரில் நிகழ்ந்த அப்போரில் உக்கிரப்பெருவழுதி வலிமைமிகு கானப்பேரெயிலை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிவிட, வேங்கைபோல் வீரப்போர் புரிந்தும் தன் வீரம் வென்றியை விளைவிக்காததை உணர்ந்த வேங்கைமார்பன், மாறுகோலம் பூண்டு கானப்பேரைக் கடந்து ஓடிமறைந்தான்!
    வெற்றிவாகை சூடிய பாண்டியனின் மீனக்கொடி கானப்பேரில் உயரப் marudu brosபறந்தது!

    ”உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட கானப்பேர், கொல்லனுடைய காய்ச்சிய இரும்பில்பட்ட நீர்த்துளி போன்றது; வெம்மையான இரும்பால் உண்ணப்பட்ட நீர் எவ்வாறு மீளாதோ அதுபோல் கானப்பேரும் இனி வேங்கைமார்பனிடம் மீளாது!” என்று வழுதியின் வெற்றிச் சிறப்பை வியந்து பாடியுள்ளார் ஐயூர் மூலங்கிழார் எனும் நல்லிசைப் புலவர்.

    புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்
    நிலவரை இறந்த குண்டுகண் கழி
    வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
    கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
    அருங்குறும்பு உடுத்த
    கானப் பேரெயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
    இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
    வேங்கை மார்பன் இரங்க வைகலும்
    ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
    பாடுதுறை
    முற்றிய கொற்ற வேந்தே
    இகழுநர் இசையொடு மாயப்
    புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)

    அதுமுதல், உக்கிரப்பெருவழுதி ’கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்று போற்றப்பட்டான். போரில் வெற்றித் திருமகளைத் பற்றிடத் தவறினாலும், கானப்பேர் தந்த வேங்கையாம் வேங்கைமார்பனின் வீரம் வழுதியின் வீரத்துக்குக் குறைந்ததன்று!

    எயிலால் பெயர்பெற்ற கானப்பேர், ’திருக்கானப்பேர்’ எனும் பெயரோடு பாண்டிநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் பெருமைக்குரியது.

    காலம் மாறியது; கூடவே கானப்பேரின் பெயரும் மாற்றம் கண்டது. ஆம், சங்க காலத்தில் கானப்பேராக இருந்த அவ்வூர், பின்னாளில் ’காளையார்கோயில்’ என்று வழங்கப்படுவதாயிற்று. பெயர் மாறியபோதினும் அப்பகுதி மக்களின் வீரம் மாறவில்லை!

    காளையார்கோயிலின் வீர வரலாற்றிற்குச் சிறப்புச் சேர்த்தனர் சகோதரர்கள் இருவர்! 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சிசெய்துப் பரங்கியரை எதிர்த்த முன்னோடிகளாய்த் தமிழத்தில் திகழ்ந்தவர்கள் இவர்களே. அஞ்சாமையைத் தம் உடைமையாய்க் கொண்டிருந்த இவ்வீரர்கள், தம் நெஞ்சுரத்தாலும் நாட்டுப்பற்றாலும் வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தனர்.

    அவர்கள் வேறுயாருமல்லர்! சிவகங்கைச் சீமையின் சிங்கங்களாய் இன்றளவும் போற்றப்படும் ’மருது சகோதரர்களே’ அவர்கள்! இவ்விருவரில் மூத்தவர் ’பெரிய மருது’ (இவருக்கு வெள்ளை மருது என்ற பெயருமுண்டு) என்றும், இளையவர் ’சின்ன மருது’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (In his book ‘A History of Tinnevelly’, Bishop R. Caldwell says, Marudu was their family title, not a personal name). காட்டுவேட்டையில் ஆர்வம் மிக்கவராயிருந்த பெரிய மருது, நாட்டு நிர்வாகத்தில் சிறிதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஆட்சிப்பொறுப்பை மாட்சியோடு செய்துவந்தவர் சின்ன மருதுவே!

    காளையார்கோயில் வட்டத்திலுள்ள ’சிறுவயல்’ எனும் ஊரில் அரண்மனை அமைத்து ஆட்சிசெய்துவந்த சின்ன மருது, குடிகள் போற்றும் கோனாய்த் திகழ்ந்திருக்கின்றார். மருதுவை நாடித் தமிழ்ப்பாவலர்கள் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மருது சகோதரர்கள் ஆட்சியில் காவல் சிறப்பாய் இருந்தமையால் மக்கள் கவலையேதுமின்றிக் களிப்போடு வாழ்ந்திருந்தனர். ”வெள்ளிநிலா வானில் விளையாடும் நள்ளிரவு வேளையில் காட்டுவழியில் சென்றால்கூடக் கள்ளர்பயம் ஏதுமில்லை எம் தலைவனின் ஆட்சியில்” என்று குடிகள் சின்ன மருதுவைக் கொண்டாடினர். சகோதரர்களை ’மருதுபாண்டியர்’ என்றே மக்கள் அன்போடு அழைத்துவரலாயினர்.

    மருதுபாண்டியர், காளையார்கோயிலில் ஆட்சிபுரிந்துவந்த அதேசமயத்தில், நம் இந்தியாவோ அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. மருதுவின் ஆட்சியின்போது, அவர் மாளிகையில் விருந்தினனாய்த் தங்கியிருந்த ஜெனரல் வெல்ஷ் (General Welsh) எனும் ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நூலில் சின்ன மருதுவைப் பற்றிப் பின்வருமாறு செப்புகின்றான்:

    ”சின்ன மருது காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் அற்றவர்; கருணை மிக்கவர். இவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் மக்கள். இவருடைய அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம்; வெளியே வரலாம். அத்துணைச் சுதந்திரம் அங்கே நிலவியது!”

    அடையா நெடுங்கதவமாய் அனைவருக்கும் திறந்தே இருந்திருக்கின்றது மருதுவின் அரண்மனைவாயில் என்பதை மேற்காணும் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

    நாற்பது மைல் சுற்றளவுள்ள மருது சகோதரர்களின் நாட்டின் நடுவே அமைந்திருந்தது காளையார் கோட்டை. அதனைச்சுற்றி ஆடு, மாடுகளைத் தம் செல்வமாய்க் கொண்ட முல்லைநிலத்து மக்கள் பல்லாயிரவர் வாழ்ந்திருந்தனர். வீரத்தில் தம் தலைவனுக்குச் சற்றும் சளைக்காத அம் மறக்குடியினர், மாற்றார் படையெடுத்துவந்தால் வேலையும், வாளையும், குத்துக்கோலையும், துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு புறப்படுவர் போர்முனை நோக்கி; அழிப்பர் பகைவர் படையைக் கடுமையாய்த் தாக்கி!

    மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான ஊமைத்துரையோடு (இவர் கட்டபொம்மனின் சகோதரர்) நட்பு பூண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே அன்னை பூமியை அந்நியனுக்கு அடகுவைக்க விரும்பாத மானவீரர்கள் ஆவர். ஆதலால் அந்நியரின் சீற்றத்துக்கு ஆளாயினர்; தமக்கு அடிபணிய மறுத்த காளையார்கோயிலைக் கைப்பற்ற விழைந்தனர் வெள்ளையர். ஆனால் அரணமைந்த அவ்வூரைப் பிடிப்பது அத்துணைச் சுலபமான காரியமாய் இருக்கவில்லை அவர்களுக்கு!

    வழிமறித்துநின்ற காடுகளைக் கொன்றாலொழியக் கோட்டையை நெருங்கமுடியாது என்ற நிலை. பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்த அந்தக் காட்டையழிப்பது வெள்ளையருக்குச் சாத்தியப்படாத நிலையில், அக்காட்டில் மறைந்திருந்த மருது சகோதரர்களும், அவர்தம் மக்களும் ஆங்கிலப்படையைக் கடுமையாய்த் தாக்கினர். இதனால் மனச்சோர்வுற்ற ஆங்கிலேயர், நேரிய வழியில் மருது சகோதரர்களை வீழ்த்தமுடியாது என்றுணர்ந்து, தமக்கே உரித்தான நரித்தனத்தால் அவர்களை வெல்லக் கருதினர். அப்பகுதியைச் சேர்ந்த மறக்குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங்கட்டி அவன் மூலமாக மருது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர் என்று சொல்லப்படுகின்றது. (மருதுசகோதரர்கள் பிடிபட்டது குறித்து வேறுவிதமான செய்திகளும் சொல்லப்படுகின்றன.)

    பிடிபட்டதற்கு யார் அல்லது எது காரணமாயிருந்தபோதிலும், தம் இன்னுயிரைத் தந்து, தமிழனின் மானத்தைத் தலைநிமிரச் செய்தவர்கள் இச் சோதரர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது, அன்னை பூமியின் விடுதலைக்காகத் தாம் உயிரழிக்கவிருப்பது குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியுமே அடைந்தனர் மருது சகோதரர்கள். அதேநேரத்தில், எக்காரணமுமின்றித் தம் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பிள்ளைகளைக் கும்பினியார் கொல்லமுயன்றதை ஏற்கமுடியாதவர்களாய், “ஐயா! வயதில் இளையவர்களான இப்பிள்ளைகள் உமக்குச் செய்த தீங்குதான் என்ன? இவர்களை எதற்காகக் கொல்ல முற்படுகின்றீர்?” என்று வெள்ளையரை வினவியிருக்கின்றனர்.

    மலையமானின் சின்னஞ்சிறு பிள்ளைகளை (மலையமான்மீது கொண்ட பகையால்) யானையின் காலால் இடறமுற்பட்ட கிள்ளிவளவனிடம் இதே போன்றதொரு கேள்வியை எழுப்பினார் கோவூர்கிழார் எனும் புலவர் பெருந்தகை. வளவன் சிந்தித்தான்; தகப்பனோடு ஏற்பட்ட பகைக்குப் பாவமேதும் அறியாத பச்சிளம் பிள்ளைகளைப் பலியிடுவது முறையன்று என்று தன்னுடைய கொலை முயற்சியைக் கைவிட்டான் என்கின்றது சங்க இலக்கியம். ஆனால் அத்தகைய கருணையுள்ளத்தை இரக்கமேயற்ற அரக்கர்களான வெள்ளையரிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? மருது சகோதரர்களின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப்போனது.

    1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது வெள்ளை அரசு. இவர்களோடு, ஊமைத்துரை, மருது சகோதரர்களின் உறவினர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 500-க்கும் மேற்பட்டோரை ஆங்கில அரசாங்கம் ஈவு இரக்கமின்றிக் காவு கொடுத்திருக்கின்றது. நாட்டு விடுதலைக்காக எத்துணை வீரர்களைக் களபலியாக்கியிருக்கின்றோம் என்பதை அறிய நெஞ்சு பதைக்கின்றது.

    நண்பர்களே! கானப்பேரின் ’பெயரை’ இலக்கியத்தில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவன் வேங்கைமார்பன் என்றால், காளையார்கோயிலாக மாறிய அவ்வூரை இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெறச்செய்த பெருமைக்குரியவர்கள் மருது சகோதரர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki/மருதுபாண்டியர்
    2. http://www.kalachuvadu.com/issue-128/page52.asp
    3. A History of Tinnevelly – Bishop R. Caldwell
    Share
  • படக்கவிதைப் போட்டி … (43)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12380561_928432517210948_352344013_n
    24942309@N07_rயெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 190

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    நுண்ணிய புள்ளிகளையுடைய
    இந்த ஏற்றின் வலிமை அடக்கியவனுக்கே
    இக்கொடி போன்ற பெண்ணின்
    காதல் தோள்கள் உரியனவாகும்.

    அழகிய இந்த ஏற்றினை அடக்கியவனுக்கே
    இந்த அழகிய கொடி போன்ற பெண்ணின்
    மென்மார்புகள் உரியனவாகும்.

    வெற்றி பெறும் திறமையுடைய
    அழகிய இந்த ஏற்றினை
    அடக்கி நின்றவனுக்கே
    கொன்றைப்பழம் போல் மின்னும்
    கூந்தலையுடைய இவள் உரியவள். 

    தூய வெள்ளை நிறமுடைய
    இந்த ஏற்றின் சீற்றத்தை அழித்தவனுக்குக்
    காயாம்பூ நிறத்தவள் இவள் உரியவள். 

    எடுத்துக்காட்டு 

    தொழுவில் உள்ள ஏழு வகை ஏறுகளை
    ஏழு கன்னிப்பெண்கள்
    திருமணத்துக்கென்று வளர்த்தனர்.
    இவ்வாறு தன் மகள் ஐயையிடம்
    கூறினாள் மாதரி. 

    இம்மகளிரை
    பழைய நரம்புகள் நிற்கும்
    முறைமைகளிலே நிறுத்தி
    இடையர்குலப் பிறப்பாகிய மாதரி
    இம்மகளிருக்கு
    எடுத்துக்காட்டாய்க் கூறிப்பெயரிட்டாள். 

    குடதிசையில் குரல் நரம்பு முதல்
    இடமுறையாக
    குரல் துத்தம் கைக்கிளை உழை
    இளி விளரி தாரம் என்ற பெயர்களே
    அந்தப் பூங்குழல் பெண்களுக்கு
    மாதரி விரும்பிய பெயர்களாம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(99)

    செண்பக ஜெகதீசன்

    வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்.   (திருக்குறள் -239: புகழ்)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவர்க்கு உதவி
    அரும்புகழ் சேர்க்காதவனைத்
    தாங்கிடும் நிலம்,
    விளைச்சல் ஏதுமின்றிப்
    பலனற்றுப் போய்விடும்
    பாழ்நிலமாய்…!

    குறும்பாவில்…

    கொடுத்துதவிப் புகழ்பெறாதவனைக்
    கொண்ட நிலமும் பாழாகும்,
    வளம் குன்றியே…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனிதர் வாழ்வினிலே
      –மற்றவர் வாழ உதவியேதான்
    புண்ணியத் தோடு புகழ்சேரார்
       -பார மாவார் புவியினுக்கே,
    திண்ணமாய் இவரைத் தாங்குவதால்
      –தரணியும் வளமது குன்றியேதான்
    மண்ணும் வறண்டு விளையாதே
      –மாறிடும் நிலைதான் வந்திடுமே!

    லிமரைக்கூ…

    பிறர்க்குதவி வாழ்வில் புகழினைச் சேரு,
    புகழிலாரைத் தாங்கும் நிலமதுவும்
    வளங்குன்றி மாறிடும் பாழ்நிலமாய்ப் பாரு…!

    கிராமிய பாணியில்…

    சேருசேரு புகழச்சேரு
    சொத்தாநெனச்சி புகழச்சேரு,
    சொந்தபந்தம் பாராம
    சேத்துநல்லா ஒதவிதான்
    சேருசேரு புகழச்சேரு..

    புகழச்சேக்க மறந்தவன
    தாங்கிநிக்கும் நெலங்கூடத்
    தங்கியெதுவும் வெளயாத
    தரிசிநெலமாப் போயிடுமே…

    அதால,
    சேருசேரு புகழச்சேரு
    சொத்தாநெனச்சிப் புகழச்சேரு!

     

     

    Share
  • தேடும் அன்பு! 

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    அடிமனதில் உள்ளூர ஊறும்
    அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
    அலுக்காது காயம் செய்தலாய்                            hearts-of-flame
    இல்லா நெருக்கமுடை உறவுகள்
    இருந்தென்ன? விலகியென்ன? சமனே!

    விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
    கரும்பெனும் ஆழ்மன அன்பை
    விருப்பித் தேடுதலாய் நிதமும்.

    திறந்து வெளியான அன்பைப்
    பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
    கறந்த பாலினிளம் சூட்டில்
    சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.

    புதிர்கள் வழியும் உறவுகளிடம்
    எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
    கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
    உதிர்ந்துதான் போகிறது!

     

     

     

    Share
  • காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

     அண்மையில் தமிழகத்தில் பெய்த அடைமழை ஏற்படுத்திய சேதங்களுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் தெலுங்குப் பாடகர்கள் இணைந்து பாடி வெளியிட்டுள்ள அருமையான வரிகளைக் கொண்ட உதவி கோரும் பாடல் இது.

    தமிழில் – ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்

    பகிர்வு: – எம்.ரிஷான் ஷெரீப்

    ***

    இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர்த் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?

    நீர் மேலிருந்து கீழ்வரை விழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?

    உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?

    இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?

    ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

    இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்குக் கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
    அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
    அவர்களுக்குச் சுவாசம் தாருங்கள்.
    கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.

    கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?

    நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா?

    குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.

    இருளே கவிந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.

    மனிதன் மனிதனுக்கு உதவி.
    மனிதன் மனிதனுக்குத் தைரியம்.
    மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?

    நான் அன்று! நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றிணைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்லன், அவன் தெய்வம்!

    சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

    சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்குச் சேர்ந்து நிற்கின்றனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா?

    காணொளி இங்கே
    https://www.youtube.com/watch?v=VJc1cuq-lfY

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 42-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வெங்கட்சிவாவின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

    goats

    புகைப்படத்துள் ஓர் ஓவியமாய்ச் சுவரை அலங்கரித்திருக்கும் இந்த ஆட்டுக்குட்டியின் உருவம் அனைவர் கவனத்தையும் கவர்வதாய் உள்ளது. அந்தக் கோட்டோவியத்தால் ஈர்க்கப்பட்டுதான் இந்த ஆடுகளும் தம் பார்வையை அங்கே பதித்திருக்கின்றன போலும்!

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நம் பார்வையைச் செலுத்துவோம்!

    ***

    ’உன்னைப் பேணிய பெற்றோரைப் புறக்கணிக்கும் மானுடனே! உயிரற்ற ஓவிய ஆட்டிக்குட்டியின் மீதும் தாய்ப்பாசத்தைக் தயங்காமல் காட்டிடும் இந்த ஆட்டிடமிருந்து கற்றிடு பாசத்தின் பெருமையை! என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

     

    படத்தில் குட்டியைப் பார்த்தாலும்
    பொம்மை உருவில் கண்டாலும்,
    தடங்க லின்றி ஆடதுவும்
    தாய்மைப் பாசம் காட்டிடுதே,
    இடைஞ்ச லென்று பெற்றோரை
    எங்கோ அனுப்பிடும் மானிடனே,
    கிடைக்குமுன் உனக்கும் இதுபோல
    கற்றிடு ஆட்டிடம் பாசத்தையே…!

    *** 

    ’அன்பு ஆடே! சுவரை முகர்ந்து பார்க்கும் உன் உள்ளக்கிடக்கைதான் என்ன? உன் இனம் ஒன்று சுவரில் தென்படுகின்றதே என்ற வாஞ்சையா? இல்லை…கண்ணில் தென்படுவதை உண்டுதான் பார்ப்போமே… என்ற கொலைச் சிந்தனையா?’ என்று ஐயத்தோடு வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

     

    …ஈன்ற குட்டிகளில்
    தொலைந்து விட்ட
    ஒன்றைக் காண்கிறாயோ

    உன் குலச் சாயல்
    மிளிர்கின்றதோ இதில்
    வாசம் தேடுகிறதா மனம்

    பின் நிற்கும்
    குட்டியை முன்னிருந்து
    முகர்கின்றாயோ!

    இல்லை எதுவாகினும்,

    உண்டு பார்த்தால் என்னவென்று
    சில கொழுத்த ஓநாய்களின்
    தீச் சிந்தையை மட்டும் உன்னில் ஓடவிட்டு
    கறையாக்கிக் கொள்(ல்லா)ளாதே !

    *** 

    சித்திரத்தில் தன் புத்திரனைத் தேடும் தாயாட்டின் துயரைக் கவிதையாய் வடித்திருக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    சித்திரத்தில் ஏதேனும் பத்திரமாய் நிற்குமென்று
    புத்திரத்தைத் தேடுகின்ற தாயாடுகத்திகத்தி
    சுத்துமது கத்திக் கிரையா னதறியா
    பித்திதேடல் தாய்மைப் பிணி.

    *** 

    விலங்குகளை இரக்கமின்றிக் கொன்று புசிக்கும் மனிதனின் அரக்க குணத்தை, பிரியாணிக்காகத் தன் பிரியமான குட்டியைப் பறிகொடுத்த ஆடொன்று, உயிரோடிருக்கும் தன்னுடைய மற்றொரு குட்டிக்கு விளக்கிச்சொல்வதைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    நேற்றைய பிரியாணியில்
    தொலைந்து போன குட்டியை
    சித்திரமாய் வரைந்து
    தொலைத்தவன் எவன்…..

    தாய்மையின் வாசம்
    நுகருமுன்னமே
    தலைகொடுத்து பலியான
    பலிபீடத்தைப் போட்டுடைப்போம்.

    சித்திரத்தைப் பாரடி என்
    செல்லக் குட்டி ஆடே….
    பத்திரமாய் இருக்க உனக்கு
    பாடங் கற்பித்துள்ளான்….

    விதிவசமாய் இங்கே
    விலையில்லாப் பொருளானோம்….
    பெருமழையில் தப்பித்தோம்….
    பிழைக்க வழியில்லா
    சம்சாரியின் துயர்தீர்ப்போம்..
    சந்தையிலே விலைபோய்
    சமயத்தில் அவர்க்குதவும்
    சிந்தைமிகக் கொள்வோம்….

    நாளை
    எந்தப் பாத்திரத்தில் வெந்து
    எவர்க்கு இரையாவோம்
    யாரறிவார் பராபரமே

    *** 

    ஓவியமாய்ச் சுவரில் நிற்கும் ஆட்டுக்குட்டிக்குக் கவிதையிலேனும் உயிர்கொடுக்க விழைகின்றார் திரு. கவிஜி. 

    போன ஞாயிறு
    பிரித்து தூக்கிப்
    போன
    இன்னொரு குட்டி
    இது இல்லை என்று தெரிந்த
    பின்னும்
    இருக்கும் குட்டிக்கு
    நம்பிக்கை தர
    முயலுகிறது
    அம்மா ஆடு

    தனக்கும் தெரியும் என்று
    காட்டிக் கொள்ளாமல்
    சரி என்பது போல
    ஒப்புக் கொள்ளும்
    குட்டி
    முகம் மறைத்துக் கொள்கிறது

    இவர்கள் கதை அறிந்த
    நான்
    சற்று முன் வரைந்த
    ஆட்டுக்குட்டியின் புகைப்படத்திற்கு
    உயிர் கொடுக்க
    வேண்டுகிறேன்….
    கவிதைக்குள்ளாகவாவது

    *** 

    ’தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  

    பிரிய மகனே !
    நானோ உன்னை காணாத
    துயர வெள்ளத்தில்
    முதலாளியோ வெள்ள
    நிவாரணமாய் ஆட்டுக்கு
    மூவாயிரம் கிடைக்கும் என்ற
    மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
    தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
    தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
    செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
    பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
    நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
    வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
    என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே

    *** 

    சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

    குட்டிப் படம் கடதாசியில்
    ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
    பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
    கிட்டச் சென்று ஆராய்ச்சியா!

    சிறிதே பொறு பிள்ளாய்!
    கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
    தெரிவதிங்கு நம் சொந்தமா!
    உரிமையாய் அறிந்திட முகர்தலா!

    *** 

    ஆடுகளின் எண்ணவோட்டத்தைச் சிறந்த பாட்டுக்களாய் மாற்றியிருக்கும் கவிஞர்குழாத்துக்கு என் பாராட்டுக்கள்! 

    அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

    தன் ஊனைப் பெருக்குதற்குப் பிறிதோர் உயிரின் ஊனை உண்ணும் புலைத்தொழிலை, அக் கொலைத்தொழிலை மாந்தகுலம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் வள்ளுவர். தன்னலமும் புலால்மீது தணியாத வேட்கையுங்கொண்ட மாந்தகுலம் புலைத்தொழிலைக் கைவிடவில்லை; மாறாக, வள்ளுவர் வலியுறுத்திய உயிரிரக்கக் கொள்கையைத்தான் கைவிட்டது!

    இவ்வாறு, புலாலுணவிற்காகத் தன் இன்னுயிரை நீத்த குட்டியை எண்ணிக் கவலைகொள்ளும் – கண்ணீர்சிந்தும் ஒரு தாயாட்டின் நேயத்தை, “கறியாய்ப் போன கண்மணியின் கரியுருவை முகர்ந்து கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு” எனும் வரிகளில் நேர்த்தியாய்ச் சொல்லியிருக்கும் ஒரு கவிதை உள்ளத்தின் ஆழம் தொட்டது!

     

    ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
    முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
    மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
    அண்ணன் எங்கே எங்கே என்று
    அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
    முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

    மண்சட்டியில் துண்டுகளாகி..
    வெந்த குழம்பின் வாசத்திலும்
    உப்புத்தூவிய கண்டங்களாகி..
    வெய்யிலில் காயும் மீதத்திலும்
    வீசும் உன் பிணவாடையை
    தாங்குமா இத்தாயாடு?

    கறியாய்ப்போன கண்மணியின்
    கரியுருவை முகர்ந்து முகர்ந்து
    கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு

    இந்த உயிரோட்டமுள்ள கவிதையைப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ஆடும், அதன் குட்டியும் சுவரிலிருக்கும் ஆட்டுக்குட்டியொன்றின் ஓவியத்தைப் பார்த்து ”இங்கே இது வரையப்பட்டிருப்பதன் காரணமென்ன?” என்பது குறித்து நிகழ்த்தும் உரையாடலைக் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் கவிதை இரசிக்கும்படியாய் உள்ளது.

    பாரம்மா இங்கு வந்து
    பாசத்துடன் யாரோ ஒருவர்
    நம் படத்தை வரைந்து
    வாசகங்கள் எழுதுமுன்
    வந்த மழை காரணமாய்
    ஓடிவிட்டார்போலும்!

    பாசமென்றா நினைத்தாய்
    பைத்தியக்காரி
    ஆடுகள்தான் இங்கு
    சிறுநீர் கழிக்கும் எனும்
    எரிச்சல் எச்சரிக்கை

    செய்ய நினைத்திருப்பார்கள்

    அல்லது
    படம் வரைந்து
    பிச்சை எடுக்கும்
    அந்தக் கிழவரின்
    கைவண்ணமாய்
    இருக்கக்கூடும்

    நாளைய தேர்தலில்
    நம் சின்னத்தில்
    போட்டியிடும் வேட்பாளர்
    சுவரில் முன்பதிவு பெற
    தீட்டிய சித்திரமாய்
    இருக்கலாம்

    இல்லையெனில்
    விரைவில் திறக்க இருக்கும்
    கறிக்கடையின்
    விளம்பரமாயும் இருக்கலாம்
    இங்கிருப்பது நல்லதல்ல
    வா வா
    விரைந்து செல்லலாம்! 

    ஒரு படம் சுவரில் வரையப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் அலசும் திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன்.

    கவிஞர்களில் சிலர் தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் பங்கெடுத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. இதே உற்சாகம் தொடரட்டும்! ஏனையோரும் இதுபோன்ற போட்டிகளில் தயங்காது முயலலாம். இம்முயற்சிகள் உங்கள் சிந்தனையையும், படைப்பாற்றலையும் வளப்படுத்த உதவும்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4cd8ab6c-4f6a-4d85-b9c1-259a742e0941

    ”மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
    உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -பையன்நின்,
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத,
    சீரான வாழ்வில் செலுத்து”….கிரேசி மோகன்….

    ”துவமேவ மாதா, துவமேவ பிதா,
    துவமேவ பந்து, தவமும் -துவமேவ,
    என்றிருப்பாய் என்றும் யதுகுலக் கன்றேபோல்
    அன்றவன் கொள்வான் அணைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (7)

    க. பாலசுப்பிரமணியன்

    அனுபவப்பூர்வமாக அறிதலின் முதல் சில படிகள்

    education4

    ஒரு குழந்தை ஏதேனும் ஒரு பொருளை ஆழ்ந்து பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்துகொள்ள மனதில் ஒரு உந்துதல் ஏற்படுகின்றது. உடனே அதைத் தொடவும் அதைப் பற்றிகொள்ளவும் முயற்சி செய்கின்றது. இது குழந்தை மேற்கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான செயல். இதை பற்றி கிளைர் லெர்னெர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் : ” ஒரு பொருளைப் பார்த்து எடுத்துக்கொள்ளவும் அதை பற்றிக்கொள்ளவும் ஏற்படும் உந்துதல்  குழந்தையின் நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல் (intentionality ). அது குழந்தையின் வளர்ச்சியில் கவனம், ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்ற கற்றலுக்குத் தேவையான உள்ளுணர்வுகளுக்கு ஒரு முன்னுரை.”

    ஆகவே குழந்தையின் நோக்கங்களை உருவாக்குவதிலும் சீர்படுத்துவதிலும் தாயின் கவனம் தேவைப்படுகிறது. இதனால் தான் ஒரு தாயை குழந்தையின் முதல் ஆசானாகக் கருதுகின்றனர்.

    ஆகவே எந்தப் பொருளை குழந்தை நாடுகிறதோ அதை சிறுது தூரத்தில் வைத்து அதை குழந்தை எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை காட்டும் ஆர்வம், விருப்பம் மற்றும் உள்நோக்கத்தைப் பாராட்ட வேண்டும். அந்தப் பொருள் பாதுக்காப்பாக இருக்கும் பட்சத்தில் அதை உணருதல் முகர்தல் மற்றும் உருட்டியோ அல்லது திருப்பியோ பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை ப்   போற்றவேண்டும்.

    குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆர்வமும் உந்துதலும் ஏற்படும் பொழுது அதற்குத் தான் தேடும் அல்லது உணரும் பொருளைப் பற்றிய முன்னறிவும் அனுபவமும் இல்லை. ஆகவே அந்தப் பொருள் பாதுகாப்பானதுதானா இல்லையா என்ற அறிவும் இருப்பது இல்லை. இந்தநேரத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான பாதுக்காப்புத் தேவை. ஆகவே தம் குழந்தைகளின் மேல் தாயாரின் அல்லது வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களின் கவனம்  தேவை. சூடான பொருள்களின் மேல் அறியாமல் கை வைத்தல், சாப்பிடக்கூடாத அல்லது பாதுகாப்பில்லாத பொருள்களின் மேல் கைவைத்தால் போன்ற செயல்கள் அதிகமாக  நடக்க வாய்ப்புண்டு.

    பொதுவாக இவ்வாறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நேரத்தில் பெற்றோர்களின் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பார்த்து “இதைச் செய்யாதே, இப்படிச் செய்யாதே ” என்று செயல்களைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வர். இது ஒரு சரியான நோக்கு அல்ல. “இப்படிச் செய்யாதே” என்று குழந்தைகளைத் தடுப்பதைவிட இப்படிச்செய்ய வேண்டும் என்ற ஆக்க பூர்வமான நோக்கை கையாளுதல் மிக்க அவசியம். என்பது மனஇயல்  வல்லுனர்கள் வாதம்.

    சில வீடுகளில் மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைகளை தொலைக்காட்சி முன் பல மணி நேரங்கள் அமர்த்திவிடுகின்றனர். அதைப் பார்க்கும் வரையில் குழந்தைகளால் தங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்ற நல்லெண்ணத்தில்! (???). இதைப் பற்றிய ஆராய்சிகள் இதனால் ஏற்படும் தீமைகளை வெகு அழகாக விளக்குகின்றன.

    இளம் வயதில் குழந்தைகளைத் தனியாக தொலைக்காட்சி அனுபவங்களோடு விடுதல் அதனுடைய மன நிலையை மிகவும் பாதிப்பதாக பலதகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வகையான பதிப்புகள் சில நேரங்களில் குழந்தைகளின் உள்ளாழ்ந்த மன நிலையையும் உணர்வுகளையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் விரிவான பாதிப்புகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்..

    Share
  • செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://youtu.be/4EJjF-M01Dw

    https://youtu.be/4acxA0J8pVU

    https://youtu.be/3W0ENEGvTts

    +++++++++++++++

    செந்நிறக் கோள் செவ்வாயிக்கு
    வக்கிரச் சந்திரன் இரண்டு !
    சுக்கிரன் போல்
    பொரி உருண்டை அல்ல !
    உருளைக் கிழங்கு போல்
    ஒழுங்கீன வடிவமுள்ள
    துணைக் கோள்கள்,
    ஃபோபாஸ், டைமாஸ் !
    பெரியது ஃபோபாஸ்
    சிறியது டைமாஸ்;
    செந்நிறக் கோள்
    தன்னச்சில் சுற்றும் வேகத்தை
    மிஞ்சிடும் ஃபோபாஸ் !
    ஈசா ஏவிய
    செவ்வாய் வேக விண்ணுளவி
    ஃபோபாஸைச் சுற்றி
    விரைவாக்கம் பெற்றிடும்
    ஈர்ப்புச் சுழல் வீச்சில் !
    சுற்றுப் பாதை ஆரம் மெதுவாய்ச்
    சுருங்கிச் சுருங்கி
    நெருங்கி வரும் ஃபோபாஸ்
    முறிந்தொரு நாள்
    செவ்வாய்க் கோளைச் சுற்றும்
    வளைய மாய் மாறித்
    தளத்தில் விழும் !

    +++++++++++++

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    Mars Future Ring

    நமது பூமியைச் சந்திரன் பேராற்றலுடன் பல்வேறு திசைகளில் இழுத்து கடல் அலை நீட்சி ஆக்குவது போல், செவ்வாய்க் கோளும் தன் சந்திரன் ஃபோபாஸ் மீது அழுத்தி, முறிவை உண்டாக்குகிறது.  காரணம் திணிவு குன்றிய [Low Density] ஃபோபாஸ் சந்திரன் உட்துளைகள் [Porous Moon] கொண்டு பேரளவில் சிதைவு பெற்றுள்ளது. அது முற்றிலும் முறிந்தால், தூள், துணுக்காகி வளையமாய்ச் செவ்வாய்க் கோளைச் சுற்றத் துவங்கும்.

    பெஞ்சமின் பிளாக் & துஷார் மிட்டல் [காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலி]

    பூமியை விட்டு ஆண்டு தோறும் 3.8 செ.மீ. [1.5 அங்குலம்] வீதம் சந்திரன் விலகிச் செல்லும் போது, ஃபோபாஸ் சந்திரன் செவ்வாய்க் கோளை நோக்கி, ஆண்டு தோறும் 1.8 செ.மீ. [0.75 அங்குலம்] வீதம் நெருங்கிச் செல்கிறது.  அதன் விளைவு ஒன்று ஃப்போபாஸ் முறிந்து சிதறலாம்; அல்லது செவ்வாய்க் கோளில் விழுந்து நொறுங்கலாம்.

    பெஞ்சமின் பிளாக் [காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலி]

    Phobos and Deimos

    ஃபோபாஸ் போன்ற சந்திரன்கள் முறிவைப் பற்றி ஆய்வுகள் செய்வது, ஆரம்ப கால சூரிய மண்டலக் கோள்கள் உருவாக்கத்தை அறிய உதவும். தூசியும், துணுக்கும் கலந்த எதிர்காலச் செவ்வாய்க் கோள் வளையத்தைப் பூமியிலிருந்து காண முடியுமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது.  காரணம் தூசிகள் பரிதியின் ஒளியைப் பிரதிபலிப்பதில்லை.  சனிக்கோளின் பனி படர்ந்த வளையங்கள் பரிதி ஒளியைப் பிரதிபலித்துத் தெரிவது போல் ஃபோபாஸ் வளையம் தெரியாது. ஆனால் பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தால், வளையம் உள்ள செவ்வாய்க் கோள் மிக்க ஒளியுடன் காணப்படும்.  பத்து மில்லியன் ஆண்டுகட்குப் பிறகு செவ்வாய் தளத்தில் ஒருவர் நின்று பார்த்தால், ஃபோபாஸ் வளையம் கண்கொளாக் காட்சி அளிக்கும்.

    துஷார் மிட்டல் [காலிபோர்னியா பல்கலைக் கழகம்]

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Mars & its Moons Sizes

    செவ்வாய்க் கோள் சந்திரன் ஃபோபாஸ் முறிந்து வளையமாய் மாறலாம்.

    இன்னும் 20 அல்லது 40 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க் கோளின் பெரிய சந்திரன் ஃபோபாஸ் மெதுவாய்க் கீழிறங்கி முறிந்து வீழ்ந்துவிடும் அல்லது ஒரு வளையமாகும் என்று 2015 நவம்பர் 25 தேதிப் புவியியல் விஞ்ஞான இயற்கை  [Nature Geoscience] இதழில் வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் இருவர் :  காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலியின் பெஞ்சமின் பிளாக், அடுத்தவர் துஷார் மிட்டல்,[Benjamin Black & Tushar Mittal] பட்டப் படிப்பு மாணவர்.  காரணம், திணிவு குன்றிய [Low Density] ஃபோபாஸ் ஆண்டு தோறும் 1.8 செ.மீ. வீதம் [0.75 அங்குலம்] செவ்வாய்க் கோளை நெருங்கி வருகிறது.  பொதுவாக வளையங்கள் புறக்கோளான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய வாயுக் கோளுக்கு மட்டுமே சூரிய மண்டலத்தில் உருவாகியுள்ளன. பாறைக் கோளான செவ்வாய்க் கோளுக்கு ஒரு வளையம் எதிர்காலத்தில் உருவானால், அதுவே சூரிய மண்டலத்தின் முதன்மை விண்வெளி நிகழ்ச்சியாய் இருக்கும்.

    ஈர்ப்பு விசை இழுப்பில் முறியும் போது ஃபோபாஸின் பெரிய துணுக்குகள் செவ்வாய்க் கோளில் விழும்.  பெரும்பான்மையான தூசி, தூள்கள் யாவும் பல மில்லியன் ஆண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றிப் பிறகு அவையும் தளத்தில் விழும்.  முடிவில் அடுத்த முரண்கோள் டைமாஸ் மட்டும் தனியே செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும்.  ஃபோபாஸ் சந்திரன் போல் நெப்டியூன் புறக்கோளை நெருங்கி வருவது, அதன் சந்திரன் டிரிடான் [Triton] எனப் படுவது.  ஃபோபாஸ் சந்திரன் 680 கி.மீ. [410 மைல்] தூரத்தில் கீழிறங்கி [1.2 Mars Radius] முறிந்தால், உருவாகும் வளையம் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றி வரும் என்று கணிக்கப் படுகிறது.  அவ்விதம் உருவாகும் வளையமும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் சுற்றிவந்து செவ்வாய்த் தளத்தில் தூசிமய மழையாய்ப் பெய்திடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    Roche Limit

    “மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக் கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவமுள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

    அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)

    “1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

    வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    Relative Size

    செந்நிறக் கோளின் சீர்வடிவற்ற இரண்டு துணைக் கோள்கள்

    1877 இல் செவ்வாய்க் கோளின் இரு துணைக்கோள்களை கண்டுபிடித்து ஃபோபாஸ், டைமாஸ் என்று பெயரிட்டவர் அமெரிக்க வானியல் விஞ்ஞானி அஸாநஃப் ஹால் (Asaph Hall) என்பவர் ஆயினும், அவருக்கும் முன்பே ஜெர்மன் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்பளர் (Johannes Kepler) (1571–1630) செவ்வாயின் துணைக் கோள்கள் இரண்டு என்று சரியாக முன்னறிவித்தார். அவர் தவறான தர்க்கத்தில் பூதக்கோள் வியாழனுக்கு 4 (?) சந்திரன்கள், பூமிக்கு ஒன்றும் இருப்பதால், செவ்வாயிக்கு இரண்டு சந்திரன்கள் இருப்பது இயற்கை என்று உரைத்தார். ஆயினும் துணைக் கோள் செவ்வாயிக்கு இரண்டு என்று தீர்மானிக்கும் அவரது தர்க்க வாத முறை தவறானது ! துணைக் கோள்கள் ஃபோபாஸ், டைமாஸ் சுற்றி வரும் சுற்று வீதி முறையே 3 & 5 மடங்களவு செவ்வாய்க் கோளின் விட்ட தூரங்கள். சுற்றும் காலங்கள் முறையே 10 & 21.5 மணி நேரங்கள் என்று முதலில் கணிக்கப் பட்டன. பிறகு துல்லியமாகக் கணக்கிட்டதில் சுற்றும் காலம் 7.6 & 30.3 மணி நேரங்கள் என்றும், சுற்றுப் பாதைகள் முறையே 1.4 & 3.5 மடங்களவு செவ்வாய் விட்டங்கள் என்றும் அறிய வந்தது. 1978 அக்டோபர் 19 இல் முதன்முதல் நாசாவின் வைக்கிங் -1 (Viking -1 Space Probe) விண்கப்பல் செவ்வாய்க் கோளைக் கடந்த போது ஃபோபாஸ் துணைக் கோளைப் படமெடுத்தது.

    Mars Reconnaissance Orbiter

    2008 மார்ச் 23 இல் நாசாவின் செவ்வாய்க் கண்காணிப்பு விண்ணுளவி (Mars Reconnaissance Orbiter -MRO) முதன்முதல் செந்நிறக் கோளின் பெரிய சந்திரன் ஃபோபாஸை (Phobos) வண்ணப் படமெடுத்து அனுப்பியது. அடுத்து 2009 பிப்ரவரி 21 இல் சிறிய சந்திரன் டைமாஸின் (Deimos) நிறப்படத்தை எடுத்தது. செவ்வாயின் ஈர்ப்பாற்றலில் சிக்கிக் கொண்ட துணைக் கோள்கள் இரண்டும் கோணலான அல்லது வக்கிரமான விண்கோள்கள் (Irregular Astroids). 1877 ஆம் ஆண்டில் அவை இரண்டும் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ‘அஸாஃப் ஹால்’ (Asaph Hall) என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு பெயரிடப்பட்டன. கிரேக்க மொழியில் ·போபாஸ் என்றால் ‘பீதி’ (Panic /Fear) என்றும், டைமாஸ் என்றால் ‘மூர்க்கம்’ (Terror /Dread) என்றும் பொருள். ஒழுங்கற்ற ஃபோபாஸின் அளவு சுமார் : (27 X 22 X 19) கி.மீ. டைமாஸின் அளவு சுமார் ; 15 X12 X10 கி.மீ. அவை இரண்டும் சி-வகைக் கரி இனத்து ஒழுங்கீனக் கோள் (Carbonaceous C type Astroids) வரிசையில் அமைக்கப் படுகின்றன.

    Mars Express Spaceship

    செவ்வாய்த் துணைக் கோள்களின் தனித்துவப் பண்பாடுகள்

    செவ்வாய்க் கோள் தளத்தின் நடுமட்டக் கோட்டிலிருந்து (Equator) அதன் சந்திரன்களைப் பார்த்தால் ஃபோஸ்மாஸ் மூன்றில் ஒருமடங்கு பூமியின் முழுநிலவு போல் தெரிகிறது. நடு மட்ட கோட்டுக்கு வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ·போபாஸ் சிறியதாய்த் தெரிகிறது. செவ்வாய்க் கோளின் பனித் துருவ முனைகளிலிருந்து பார்த்தால் தொடுவானுக்கு அப்பால் ஃபோபாஸ் தெரிவதில்லை. அதே சமயம் டைமாஸ் ஓர் ஒளிவீசும் விண்மீன் போல் தெரிகிறது. பூராவும் மறைந்து பூமியில் தெரியும் முழுச் சந்திர கிரணம் போல் செந்நிறக் கோளில் கிரகணம் தெரிவதில்லை. செவ்வாய்க் கோள் ஒரு முறைத் தன்னைச் சுற்ற வர 24 மணிநேரம் ஆகிறது. ஃபோபாஸ் மேற்கில் உதித்து கிழக்கில் அத்தமித்து மீண்டும் உதயமாகப் 11 மணி நேரம் ஆகும். ·போபாஸ் ஒருமுறைச் செவ்வாயைச் சுற்றிவர சுமார் ஏழரை மணிநேரம் ஆகிறது. அதன் சுற்று வீதி வேகம் (Orbital Speed) : விநாடிக்கு 2.14 கி.மீ (விநாடிக்கு 1.33 மைல்) ஆனால் புறவீதியில் சுற்றும் டைமாஸ் ஒருமுறைச் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர சுமார் 30 மணிநேரம் ஆகிறது. இரண்டு துணைக்கோள்களும் பூமியின் நிலவு போல் தனது ஒரே முகத்தைக் காட்டிச் செவ்வாய்க் கோளைச் சுற்றுகின்றன.

    Mars Express Probe

    ஃபோபாஸ் செவ்வாய்க் கோளைவிட அதிவேகத்தில் சுற்றுவதால் அலை விசைகள் (Tidal Forces) மெதுவாகக் குறைந்து சுற்றும் ஆரம் (Orbital Radius) சிறிதாகிக் கொண்டு வருகிறது. ஃபோபாஸின் சுற்றுப் பாதை ஆரம் 100 ஆண்டு களுக்கு 20 மீடர் (66 அடி) குறைகிறது. ஆரம் அந்த வீதத்தில் குறைந்தால் ஃபோபாஸ் 11 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க் கோள்: தளத்தில் வீழ்ந்து நொறுங்கி விடலாம் என்று யூகிக்கப் படுகிறது. அல்லது தூள்தூளாகப் பொடி யாகிச் செவ்வாய்க் கோளின் ஒன்று அல்லது பல வளைய மாகலாம். அதாவது அதன் சுற்று வீதி ஆரம் (Orbital Radius) இப்போது 9380 கி.மீடர் (5830 மைல்.) அது குறைந்து 2000 கி.மீடர் (1200 மைல்) ஆகும் போது, ·போபாஸ் “ரோச் எல்லையைத்” (Roche Limit) தாண்டி விடுகிறது ! புதிய கணக்கீடு செய்ததில் அந்த அழிவுக் காலம் 7.6 மில்லியன் ஆண்டுகளில் எதிர்ப் படலாம் என்று கூறப்படுகிறது.

    எதிர்காலத்தின் ஒரு பொழுதில் அலை விசைகள் படிப்படியாகக் குறைந்து சுற்றும் ஆரம் குன்றி ‘ரோச் எல்லை’ (Roche Limit) கடந்து செவ்வாய்க் கோளில் விழுந்து ஃபோபாஸ் நொறுங்கி விடும் என்று கருதப்படுகிறது. டைமாஸ் துணைக்கோள் ஃபோபாஸை விட மெதுவாக செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது. ஆதலால் அதன் விதி ஃபோபாஸ் துணைக்கோள் போல் அழிவுப் பாதையில் இல்லை ! ஃபோபாஸ் டைமாஸைப் போல் 4 மடங்கு வேகத்தில் செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது. ஃபோபாஸ் தளத்தி லிருந்து பார்த்தால் செவ்வாய் 6400 மடங்கு பெரிதாகவும், 2500 மடங்கு முழுமதியை விட ஒளிவீசியும் காட்சி தருகிறது.

    Mars Eclipse

    ஈசாவின் செவ்வாய்க் கோள் வேக விண்ணுளவி செய்த பயணம்

    ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-·பிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோ டிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

    2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

    Mars & Moons Location

    பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன் படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2 ! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப் பட்டது!  செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

    முன்பு ஏவிய செவ்வாய்க் கோள் தேடல் பயணங்கள்.

    1971 இல் நாசாவின் மாரினர் -9 (Mariner -9), அடுத்து 1977 இல் நாசாவின் வைக்கிங் -1 (Viking -1), பிறகு 1998 & 2003 ஆம் ஆண்டுகளில் செவ்வாய்க் கோளத் தளப்புளவி (Mars Global Surveyor), அடுத்து 2004, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் ஈசாவின் செவ்வாய் வேக விண்ணுளவி (Mars Express), பின்னர் 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் செவ்வாய் கண்கணிப்புச் சுற்றுளவி (Mars Reconnaissance Orbiter) போன்றவை செவ்வாய்க் கோளையும் அதன் இரண்டு துணைக் கோள்களையும் சுமார் 40 ஆண்டு களாய் ஆராய்ந்து வந்துள்ளன. 2005 வேனிற்காலத்தில் செவ்வாய்த் தளவாகனம் (Spitit Rover) சோதனைகள் செய்தது.

    Colour Image

    1988 இல் ரஷ்யா ஃபோபாஸ் -1 & ஃபோபாஸ் -2 ஆகிய இரண்டு விண்ணுளவிகள் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டன. ரஷ்யன் விண்வெளி ஆணையகம் ஃபோபாஸ் மண்ணிலிருந்து மாதிரியை எடுத்துப் பூமிக்கு மீளும் விண்கப்பல் திட்டம் ஒன்றைத் தயாரித்து வந்தது. அது 2011 ஆம் ஆண்டில் நிறைவேறத் திட்டமிடப் பட்டது. பூமிக்குச் செந்நிறக் கோளின் மாதிரியைக் கொண்டு வரும் முற்போக்குத் திட்டம் அது.  ஆனால் அது நிறைவேறாது ராக்கெட் கடலில் வீழ்ந்தது.  செவ்வாய்க் கோளில் மனிதர் இயக்கும் விண்கப்பல் இறங்கி ஏறுவது மிக மிகச் சிரமான பொறித்துறை நுணுக்கம். அதற்குப் பதிலாக விண்வெளி விமானிகள் ஃபோபாஸில் இறங்கித் தங்குதளம் அமைத்து, அங்கிருந்து செவ்வாயிக்குப் போக முனைவது எளிதாகும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Deimos & Pobos

    2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்

    நாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் (2012 வரை) வலம் வரும் ! அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனைந்தது

    Mars Icy water deposit

    2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் முதல் செவ்வாய்ப் பயணம்

    இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன! அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது! ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்! மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் !

    பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் ! அநேகம் ! பாதுகாப்பாக அந்தப் பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும். நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.

    Solar System Moons

    +++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA,

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)

    11. http://www.usatoday.com/story/news/2015/11/23/mars-moon-ring/76257614/[November 23, 2015]

    12.  http://www.csmonitor.com/Science/2015/1124/Could-Mars-someday-get-its-own-set-of-rings [November 24, 2015]

    13. http://www.theweathernetwork.com/news/articles/future-mars-will-grind-its-largest-moon-into-a-dusty-ring/60295/

    14. http://earthsky.org/space/mars-to-lose-its-largest-moon-gain-a-ring [November 26, 2015]

    15. http://to-isis.beforeitsnews.com/space/2015/11/mars-moon-phobos-will-break-into-rings-like-saturn-2494732.html [November 25, 2015]

    16. http://www.marsdaily.com/reports/Mars_to_lose_its_largest_moon_Phobos_but_gain_a_ring_999.html [November 25, 2015]

    17.  http://www.space.com/24281-mars-moons-phobos-deimos-photos.html  [November 26, 2015]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (December 12, 2015)

    Attachments area
    Preview YouTube video Will there be a ring in Mars’s future?

    Will there be a ring in Mars’s future?

    Preview YouTube video Mars is Tearing Phobos Apart With Gravity

    Mars is Tearing Phobos Apart With Gravity

    Preview YouTube video In 40 million years, Mars may have a ring (and one fewer moon) moon phobos

    In 40 million years, Mars may have a ring (and one fewer moon) moon phobos
    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 27

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    உலகில் ”வாழும்” உயிர்களாகிய மக்கள் தம் வாழ்நாளுக்குள் அனைவர்க்கும் உதவி, அனைவருடனும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ‘இல்வாழ்க்கை’ என்றனர். மனித மனம் புலன்கள் விரும்புவதை அடைந்து மகிழ்வது! ஐம்புலன்களும் விரும்பும் பொருள்களை அடைந்து அனுபவிப்பதே இல்வாழ்க்கையின் இயல்பாகும். இந்தப் புலனாசைகளில் இருந்து விடுபட்டு, வீட்டு நெறியாகிய திருவடிப்பேற்றை விரும்புதலே உயிர் வாழ்க்கையின் நோக்கம் என்பது சான்றோர் கருத்து! உலகநடைமுறை ஒழுங்காக அமைவதற்கு ஏற்ற உதவிகளை இல்லறத்தான் மாத்திரமே செய்வான். புலன்களை அடக்கி, விருப்பங்களைத் துறந்து, மூச்சடக்கி தியானம், யோகம் ஆகியவற்றைப் பயிலும் துறவு நிலை எல்லார்க்கும் எளியதன்று. ஆனால், புலன் இன்பங்களை நன்றாக அனுபவித்து, எல்லை கடவாத அடக்கத்துடன் இல்லறம் நடத்துதலே துறவு நிலையை விடச் சிறந்தது என்கிறார் வள்ளுவர்! இதனை …

    “அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
    போஒய்ப் பெறுவ தெவன்?” (46)

    என்று திருக்குறள் கூறுகிறது! அறத்து ஆற்றின் என்பதற்கு எல்லைகடவாத புலனின்பம் பெற்று வாழும் நெறி என்பது பொருள்! ஆகவே முறைப்பட்ட இல்லற வாழ்வில், முறையான இன்பத்தைத் துய்த்து வாழ்பவன், அதற்குப் புறம்பான ஆசைவயப்பட்டு, அறிவிழந்து காமாந்தகாரனாய் வாழ்வதால் ”உயிர்க்கொல்லி நோயையே” பெறுவான் என்று நாம் புதிய பொருள் கண்டோம்! இதைத் தவிர முன்னரே பரிமேலழகர், புறத்தாற்றின் என்பதற்கு குடும்பத்தை விட்டுக் காட்டிற்குப் போய் வாழும் துறவு நிலை என்று குறித்தார். அத்துறவறத்தில் காட்டுக்குப் போய் ஒருவன் பெறத்தக்கது யாதுமில்லை என்றார். ”இல்லறமல்லது நல்லறமன்று” என்றார் ஔவையார்.

    இல்லறத்தில் வாழ்பவனின் இன்றியமையாத கடமை பிறருக்கு உரிய உதவி புரிவதே என்கிறார் திருவள்ளுவர். அவர் இயல்புடைய மூவர்’ க்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும், வறியோருக்கும் தன்பால் வந்துசேர்ந்து மரணமடைந்தார்க்கும் உதவிபுரிவதே இல்லறத்தாரின் சிறந்த கடமை என்கிறார்! அதனை அவர் ,

    ”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை!”(41) என்ற குறளிலும்,

    ”துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை!”(42) என்ற குறளிலும்

    கூறுகிறார். இவற்றில் ”இயல்புடைய மூவர்” என்று திருவள்ளுவர் குறிப்பதைக் குறித்துச் சில வேறுபட்ட பொருள்கள் கூறப்படுகின்றன! பொதுவாக வாழ்க்கை நிலைகள் என்று நமக்கு முன்னரே வகுத்து வைக்கப் பெற்றவை நான்கு! அவை:
    1) இல்லறம்
    2) பிரம்மச்சரியம்
    3) வானப்பிரத்தம்
    4) சந்நியாசம்
    இவற்றுள் இல்லறத்தில் வாழ்பவன் துணையுடன் மட்டுமே மற்றைய நிலைகளில் இருப்போர் வாழ்வர். ஆகவே, பிரம்மச்சாரி கல்விபயிலத் துணை புரிவதும், வானப்பிரஸ்தர் வீட்டை விட்டு நீங்கி, அல்லது தம் இல்லறக்கடமைகளில் இருந்து விலகி வாழ உதவி புரிவதும், முற்றும் துறந்த துறவிகள் உயிர் வாழத்தக்க உதவிகள் புரிவதும் இல்லறத்தான் செய்யத்தக்க கடமையாகும்!

    இம்மூவரே இயல்புடைய மூவர் என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார்! மேலும் மற்றையோர் இயல்பாக நம்முடன் இணைந்து வாழ்பவராகிய தாய், தந்தை, மக்கள் என்ற மூவகையினர் என்றும் பொருள் கூறுகின்றனர்.

    சிலர், தாய் வழியினர் – அதாவது மாமன், சித்தி போன்றோர்; தந்தை வழியினர் – அதாவது பெரியப்பா, சித்தப்பா முதலியோர்; தம் மக்கள் – அதாவது மகன், மகள் ஆகியோர் என்கின்றனர். இப்படியே பார்த்தால் மனைவி மூலம் உறவானவர் என்று மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்றும் கூறலாமே! ஆகவே இயல்புடைய மூவர் என்பதை வரையறை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எவ்வாறெனில் இவர்கள் அனைவரும் உறவினர், சுற்றத்தார் என்ற வகையில் அடங்குவர்! இவர்களை வள்ளுவர் ”தான்” என்ற சொல்லில், வேறொரு திருக்குறளில் அடக்குகிறார். அதாவது ,

    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (43)

    என்ற குறளில் தான் என்றாங்கு என்பதில் தன் உறவினர், சுற்றத்தாரை அடக்குகிறார்! ஆகவே இயல்புடைய மூவர் யாவர்? என்ற வினா வுக்கு விடை காண வேண்டியுள்ளது! சிலர் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைப் பிரிவினருள், வேளாளராகிய இல்லறத்தார் மற்ற வணிகர், அந்தணர், அரசர் ஆகிய ‘இயல்புடைய மூவ’ருக்குத் துணை புரியலாம் என்று பொருள் கூறுகின்றனர். வேளாளர் மட்டுமே ‘இல்வாழ்வார்’ என்று கூறுதல் இயலாதே? மற்றவர்களிலும் இல்லறத்தார் உள்ளனரே? ஆகவே இக்காலத்தின் இல்வாழ்க்கை நிலை அக்காலத்தை விட வேறுபட்டது!

    அப்படியானால் ”இயல்புடைய மூவர் யாவர்? சிந்திப்போம்! பிரம்மச்சாரிகள் என்ற தம் குழந்தைகளின் படிப்புக் காலம் நிறையும் வரை, பெற்றோர்களே அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர்! இல்லறத்தானின் சேமிப்பு என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்! அதனால் இயல்புடைய மூவருள் படிக்கும் குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம்! இந்த நாளில் மூத்தோரை இல்லறத்தார் பேணுவதில்லை. அவர்கள் பணிபுரிந்த இடமே ஓய்வூதியப் பயனை அளிக்கிறது! அரசும் முதியோர் உதவித் தொகை வழங்குகிறது. ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் அவர்களின் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன! இல்லறத்தானின் சேமிப்பு, என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்!

    அந்நாளில் இல்லறத்தான் இடும் உணவை உண்டு வாழும் நிலை பிரம்மச்சாரிக்கும், வானப் பிரஸ்தருக்கும், துறவிக்கும் இருந்தது! இப்போது அப்படியில்லை! இந்நாளில் வானப்பிரஸ்தர் என்ற வகையினர் உதவித்தொகை பெறும் மூத்த குடிமக்களே ஆவர்! அவர்கள் நோய்வாய்ப்பட்டும், முதுமையாலும் தளர்ந்த காலத்தில் இல்லறத்தாரின் பேணுதலை எதிர்பார்க்கின்றனர். ஆகவே அவர்களை, ஓரளவுக்கே இம்மூவருள் இரண்டாமவராக இணைக்கலாம்.

    முற்றும் துறந்த துறவிகள் இல்லறத் தாரின் உதவியை நம்பினால் அவர்களின் துறவுக்குப் பொருளே இல்லை! அத்தகைய சிலர் சமுதாயத்தாரால் வணங்கிப் போற்றப் பெறுகின்றனர். அவர்கள் மடங்களை நிறுவி, மிகுந்த செல்வங்களை, சொத்துக்களாகப் பெற்றுள்ளனர் அத்தகையோர் இல்லறத்தாரை நாடி வந்தால், அல்லது அவர்கள் வாழும் ஊருக்குள் வந்தால், இல்லறத்தார் வணங்கிப் போற்றலாம்! இவர்கள் இல்லறத்தாரையே நம்பி வாழ்கின்றவர்கள் என்று கருதலாகாது!

    இனி, இயல்புடைய மூவர் முழுவதுமாக இல்லறத்தாரையே நம்பி இருக்கும் நிலையில் இருக்க வேண்டும். ஆகவே, பெற்ற குழந்தைகள், நலிந்த முதியோர்கள், ஓரளவுக்கு வாழ வழியற்ற இரவலர் ஆகியோரை இக்காலத்திற்கு ஏற்றவாறு வள்ளுவர் கூறும் இயல்புடைய மூவராக ஏற்றுக் கொள்ளலாம்! இனி அக்குறட்பாவைக் காண்போம்!

    “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை!” (41)

    இந்தப் புதிய பொருளும் பரிமேலழகரின் உரையை ஒட்டியே அமைந்துள்ளது! இது பரிமேலழகரின் உரைத்திறம் காலங்கடந்து விளங்குவதைக் காட்டுகிறது!

     

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    463a9649-e848-426b-bbad-c54e755a1555

    GO GO கோ கண்ணன் மாட்டை வேண்டுகிறான்
    பாரதி பல்லக்கு ஊர்வலத்தில் தோள் கொடுக்க….

    ”’கண்ணிமைக்கும் நேரம் கவிகொட்டும் பாரதியார்க்(கு),
    இன்னிக்குப் பல்லக்கு இல்லத்தில், -மன்னிப்பாய்,
    இன்றுபோய் நாளைவா, இல்லை எழுதிடுவார்,
    ”கண்ணனோர் கள்ளன்” கவி”….கிரேசி மோகன்….
    ”கண்ணனென் கள்ளன்”

    Share
  • போய்விடாதே…!

    செண்பக ஜெகதீசன்

    உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
    மீண்டும்
    சிலுவையில் அறையத்துடிக்கும்
    அரசியலார்…!

    மனிதநேயமே,
    பேய்மழை வெள்ளத்தில்
    பெருகி வந்ததுபோல்,
    பணவெள்ளத்தில்
    பொலிவிழந்து போய்விடாதே…!

    Share
  • மகாகவி பிறந்த நாள்!

    – சுரேஜமீ

    கம்பனும்
    வள்ளுவனும்                                                   barathiyar
    இளங்கோவும்
    கலந்து பேசி
    தமிழ்த் தாயின்
    முன்தோன்றி
    ஒரு வரம் 
    வேண்டினர்!

    தூங்கும் 
    தமிழினத்தை 
    துயிலெழுப்ப,
    தூரிகையைத்
    தட்டி எடு என்று!

    தானே கருவாகி
    தரணியில்
    அவதரித்தாள்;
    பாரதி எனும்
    உருவெடுத்தாள்;
    தமிழென்னும்
    அமுது படைத்தாள்;
    குயில்கூடத் தமிழ்
    பாடியது,
    அவன் குரல் கேட்டு!
    மரம், செடி, கொடிகளெல்லாம்
    இசை பாடியது
    அவன் தமிழ் “பா” க்கு!
    தமிழன் தலை 
    நிமிர்ந்தான்!
    தரணியில் இனி 
    எவர்க்கும் யாம் 
    அடிமை இல்லையென்று!

    அந்நாள் இந்நாள்!
    அவதாரத் திருநாள்!

    வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!    

     

    Share