நான் அறிந்த சிலம்பு – 190
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
நுண்ணிய புள்ளிகளையுடைய
இந்த ஏற்றின் வலிமை அடக்கியவனுக்கே
இக்கொடி போன்ற பெண்ணின்
காதல் தோள்கள் உரியனவாகும்.
அழகிய இந்த ஏற்றினை அடக்கியவனுக்கே
இந்த அழகிய கொடி போன்ற பெண்ணின்
மென்மார்புகள் உரியனவாகும்.
வெற்றி பெறும் திறமையுடைய
அழகிய இந்த ஏற்றினை
அடக்கி நின்றவனுக்கே
கொன்றைப்பழம் போல் மின்னும்
கூந்தலையுடைய இவள் உரியவள்.
தூய வெள்ளை நிறமுடைய
இந்த ஏற்றின் சீற்றத்தை அழித்தவனுக்குக்
காயாம்பூ நிறத்தவள் இவள் உரியவள்.
எடுத்துக்காட்டு
தொழுவில் உள்ள ஏழு வகை ஏறுகளை
ஏழு கன்னிப்பெண்கள்
திருமணத்துக்கென்று வளர்த்தனர்.
இவ்வாறு தன் மகள் ஐயையிடம்
கூறினாள் மாதரி.
இம்மகளிரை
பழைய நரம்புகள் நிற்கும்
முறைமைகளிலே நிறுத்தி
இடையர்குலப் பிறப்பாகிய மாதரி
இம்மகளிருக்கு
எடுத்துக்காட்டாய்க் கூறிப்பெயரிட்டாள்.
குடதிசையில் குரல் நரம்பு முதல்
இடமுறையாக
குரல் துத்தம் கைக்கிளை உழை
இளி விளரி தாரம் என்ற பெயர்களே
அந்தப் பூங்குழல் பெண்களுக்கு
மாதரி விரும்பிய பெயர்களாம்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html