Month: January 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண மத்து’’….

    கன்று மடியிடைக் கண்ணம்மா….
    ————————————————————–

    c45631c4-0a1d-4e3b-aa8b-91dad8ce9453

    ’’மடிப்பிச்சை ஏற்றுகோ மாதாவின் பாலை,
    உடுப்பி கிருஷ்ணன், உலகப், -பிடிப்பகல,
    கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
    மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….

     

    ”நீலம்பா ரித்த நவநீதன் கைகளில்,
    பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம்
    கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை
    விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….

     
    “மத்திலோர் கையும்ச மத்தாய் மறுகையும்
    உத்தமன் வைத்தூர் உடுப்பியில், -கத்துங்,
    கடற்பால் நவநீதம் கக்கக், கடைய
    அடப்பார் ரெடியாய் அவன்”….கிரேசி மோகன்….

    “இடுப்பில் வலம்வைத்(து) இடக்கை உயர்த்தி
    உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
    “இன்றை யMENU, இடிமின்னல் தாங்கியாய்,
    என்றும்நீ உச்சிக்கே ஏங்கு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடும் சிவனின் “பிரதோஷ ஆட்டம் ” போல் ஆட மைத்துனன் நம்பிக்கு ஆசை போலும் ….

    aff09be3-a47f-454a-aebf-c12d390ed191

    “கொம்புக்கு மத்தியில் கூத்தாடும் ,நாளைய
    நம்பிக்கை நர்த்தனன் நந்தலாலா : – சம்புக்குப் ,
    போட்டியாய் கண்ணன் பிரதோஷ கோலத்தைக்,
    காட்டியது கேசவ் கலை”….கிரேசி மோகன்….

    Share
  • பன்முக நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

    — முனைவர் மீ.இராசேசுவரன்.

    nattupurap paadalgal
    முன்னுரை:
    ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் அந்நாட்டில் வழங்கும் நாட்டுப்பாடல்கள். அவை, லட்சக் கணக்கான கிராமிய மக்களின் இசையாக அமைகின்றன. வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் இழப்புகளை, சோகங்களை, காயங்களை, கண்ணீர் சிந்தும் ஓலங்களை, ஒப்பாரிகளை, குருதிச் சிந்தல்களை, அடிமை மக்களின் உரிமைக் குரலாய், உக்கிர முரசாய், உணர்ச்சிக் குவியலாய் அமைவது நாட்டுப் புறப்பாடல்கள் ஆகும். இதன் பரிமாணங்களை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பாடலின் வகைகள்:
    மனித சமுதாயத்தின் தொடக்க காலந்தொட்டு பாமர மக்களின் உணர்ச்சிப் பெருக்காகக் கொந்தளித்தோடும் நதிப்பிரவாகமே நாட்டுப்புறப்பாடல்கள். இதனை பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,
    1.தாலாட்டுப்பாடல்கள்
    2.குழந்தைப் பாடல்கள்
    3.காதல் பாடல்கள்
    4.தொழில் பாடல்கள்
    5.பக்திப் பாடல்கள்
    6.ஒப்பாரிப் பாடல்கள்

    தாலாட்டு:
    தாலாட்டு எனும் சொல்லைத் தால்+ஆட்டு என்று பிரித்து பொருள் கொண்டால் அச்சொல் இருவிதமான பொருள்களைத் தருகிறது. ‘தால்’ என்றால் ‘நாக்கு’ என்றும் ‘தொட்டில்’ என்றும் பொருள்படும். நாக்கு என்று பொருள் கொண்டால் நாக்கினை அசைத்துத் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம். தொட்டில் என்று எடுத்துக் கொண்டால், தொட்டிலை ஆட்டித் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம்.

    குழந்தைக்குத் தாய், தந்தை என்ற இரு உறவுகளுமே இன்றியமையாத உறவுகள்தான் என்றாலும், குழந்தைக்காகத் தாய் மட்டுமே தாலாட்டுப்பாடும் மரபைக் காணமுடிகிறது. தந்தை குழந்தைக்காகத் தாலாட்டுப்பாடும் மரபைக் காண்பது அரிது. குழந்தையின் சிறுவயதில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் அப்படியே மனத்தில் பதியும் என்பதால் குழந்தையின் மன நிலையைச் சமூகத்திற்கேற்ப தன் தாலாட்டுப்பாடலின் மூலம் உருவாக்குகிறாள் தாய். தாய் தாலாட்டும் போது தன் வறுமை நிலையை மறந்து தன் மகனின் எதிர்காலம் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என எண்ணும் நிலையைக் கீழ்க்கண்டவாறு,

    “குறிஞ்சி மலைத்தேனே! கொண்டாடும் சந்தனமே!
    சரிஞ்சிப்படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு!
    கண்ணுறங்கு ராசாவே! கால் மொளச்ச பின்னாலே!
    ஒண்ணு ரெண்டு கத்துக்கொள்ள ஓடவேணும் கண்ணுறங்கு”[1 ]

    என்று பாடுகிறாள். தாய் வறுமையில் வாழ்ந்தாலும் தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,

    “மாடு மேய்க்க எங்கண்ணே ஒன்னே!
    நானனுப்ப மாட்டெண்டா!
    பாடுபட்டு நானுழைச்சு! பள்ளிக்கூடம் சேர்ப்பேண்டா!
    ………………
    சந்தனத்தில் தொட்டில் செய்து தாலாட்ட முடியாது
    வெள்ளியிலே சங்கு செய்து பாலூட்ட முடியாது
    ஓலக்குடிசை தாண்டா ஒரு மொழ பாயிதாண்டா
    கூழுகஞ்சியடா நீ குடிச்சு வளர்ந்துக்கடா!” [2 ]

    என்று பாடுகிறாள். இப்பாடலில் தாய் தன் வறுமையுடன் கூடிய ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.

    தொழிற்பாடல்:
    வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. செய்யும் தொழில்கள் வேறுபட்டாலும் கூட அவற்றின் நோக்கம் ஒன்றே. தொழிலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தொழிலின் கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டும் தொழிலுக்குத் துணை புரிய வேண்டியும் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் எனலாம்.

    உழைக்கும் மக்கள், வயலில் வேலை செய்கின்றவர்கள், நாற்று நடுகின்றவர்கள், களை எடுப்பவர்கள், ஏர் உழுகின்றவர்கள், அறுவடை செய்கின்றவர்கள், இப்படிப் பல்வேறு தொழில் செய்கின்றவர்கள், தங்களுடைய களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களைப் பாடுவது இயல்பு. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவது வரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்ற உழைக்கும் மக்களின் அவல நிலையை உணர்த்தும் பாடல் ஒன்று,

    “ஏழாறு வருஷமாக என்னாத்த கண்டோம்
    ஏறுபுடிச்சி உழுத நாம எதத்தான் கண்டோம்
    தோட்டம் துறப்பு வயல்களெல்லாம்
    காலம் பூரா உழைச்சாலும்
    நம்ம வீடு இடிஞ்சிபோயி கிடக்குது
    அத எண்ணி தாங்க எம்மனசு தவிக்குது” [3]

    என்ற பாடலும்,

    “வேர்வைகளைத் தூவினோமோ முத்து முத்தாக- அது
    வெளஞ்சிருக்கு நெல்வயலில் கொத்து கொத்தாக
    களஞ்சியத்தில் போய் பதுங்கும் கட்டு கட்டாக நம்
    கண்ணிரெண்டும் நீர் வடிக்கும் சொட்டு சொட்டாக” [4]

    என்ற பாடலும் நம்மைச் சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளன.

    காதல் பாடல்கள்:
    மனித இனம் தோன்றிய காலத்தே காதல் உணர்வும் தோன்றியிருக்க வேண்டும். இன்ப உணர்ச்சிக்குக் காதலையும், அன்பு உணர்ச்சிக்குத் தாலாட்டுக்களையும், துன்ப ஊணர்ச்சிக்கு ஒப்பாரிப் பாடல்களையும் எடுத்துக் கூறுவர்.

    காதல் என்பது மனிதனது பருவ காலங்களின் வசந்தப் பாடல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும், வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். ஆதாம் ஏவாள் தொடங்கி இன்று வரை காதலை உயிராகக் கருதுகின்றனர். உலகில் உயிர்கள் தோன்றிய போதே காதலும் உடன் தோன்றியிருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்களில் பெண்ணின் வருணனைகள் அதிகம் இடம்பெறுவதுண்டு.

    “தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்த என்னை
    முருக்கு மரமாட்டம் முறிச்சிப்போட்டுப் போனவளே
    பாக்கு மரமாட்டம் ஒசந்துதான் நின்ன என்னை
    கோரப்புல்லாட்டம் நறுக்கிப் போட்டு போனவளே
    என் உசுர பாட்டாக்கி உனக்காகப் பாடுறேன்
    உன் பூஞ்சிரிப்ப பாக்க தாண்டி உசுரோடு….
    உசுரோடு… உசுரோடு… வாழுறேன்” [5]

    என்று காதலிக்கு காதலன் பாடும் பாட்டு வழியாக அறியமுடிகிறது.

    திருமணம் செய்துகொள்ள ஆசை கொண்டு ஒருபெண் ஆணைப் பார்த்தோ, ஓர் ஆண் பெண்ணைப் பார்த்தோ பாடுவதாக வருவது ஆசைப் பாடல். இது காதலுக்குப் பிறகு வெளிப்படும். இரண்டு உள்ளங்கள் காதல் கொள்ளும் போது அதனைப் பிறர் பார்த்துக் கேலி செய்து பேசுவதை,

    “மண் குடத்தை தூக்கிக்கிட்டு
    மலையோரம் போனவளே
    உன் மண் குடத்தை வச்சிப்புட்டு
    இந்த மாமனையோ பாரடியோ
    அடி நீ சிவப்பு நான் கருப்பு ஏலேலோ
    இந்த ஊரு பய மக்களுக்கு நம்
    நினைப்புதான் ஏலேலோ அதனாலே
    ஊரக்கூட்டி பேசிடுவோம்” [6 ]

    என்று காதலன் கூறுவதும் தெரிகிறது.

    ஒப்பாரி:
    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏற்படுகின்ற இன்ப துன்ப உணர்வுகளை வெளிப்படுத்த மனிதனுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தத் தம் மொழியைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றான். அம்மொழியின் வெளிப்பாடே பாடல் வடிவம். ஆண்கள், பெண்கள், கணவனை இழந்த பெண்கள், தாயை இழந்த மகள், மகனை இழந்த தாய், விதவை பாடும் ஒப்பாரிப் பாடல்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.

    ஒப்பாரிப்பாடலின் கருப்பொருளாக இறந்தவரின் பெருமை, குணம், ஒப்பாரிப் பாடுகின்றவர்கள் இறந்தவர்களை நேசித்த முறை, விதவையின் வேதனை, இறந்தவரால் ஏற்பட்ட இழப்பு போன்றவை அமையும். துன்பத்தை வாய்விட்டுச் சொன்னால் மனத்தளவு, மன அழுத்தம் நீங்கும். அந்த அடிப்படையில் பிறந்ததுதான் ஒப்பாரிப் பாடல்கள். வாழ்க்கை இன்பங்களைக் கணவனோடு பகிர்ந்து வாழாத பெண்கள் கணவன் இறந்தவுடன் வைக்கும் ஒப்பாரி ஏனைய அழுகை ஒலிகளை விட அவலச்சுவை மிகுந்ததாகும்.

    “பூ முடிச்சி பொட்டு வச்சி
    பொன் நகையும் போட்டு வச்சி
    கல்யாணம் முடிச்சி வைச்சே யம்மா
    நான் கண்கலங்கி நிக்கிறேனே யம்மா
    ……….
    தன்ன னன்னெ னான னன்னே
    ………” [7]

    சமுதாயப்பாடல்:
    மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை அனைத்தும் மாறும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப உழைப்பவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    “மனிதா… மனிதா…
    இதை மாற்ற வேண்டாமா? உனை
    வாட்டி வதைக்கும் கொடுமைகளைத்
    தீர்க்க வேண்டாமா?
    உப்புத்தண்ணி இனிக்கும் என்றால்
    உனக்கெங்கே மதிப்போச்சி
    செத்தபின்பு சொர்க்கம் என்றால்
    இப்பிறவி என்னாச்சி?”

    என்று கூறுவதும்,

    “ஆத்தா உன்சேல – அந்த
    ஆகாயத்த போல
    தொட்டில் கட்டி தூங்க
    தூளி கட்டி ஆட
    ஆத்துல மீன்பிடிக்க
    அப்பனுக்கு தலதொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நான் செத்தாலும் என்ன போத்த வேணும்
    இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
    ஓஞ்சேலதானே வண்ண பூஞ்சோலதானே
    ஈரசேல காயும்போது வானவில்லா தெரியும்
    இத்துபோன சேலையில் உன் சோகக்கத புரியும்”

    என்று தாயின் சேலையின் மதிப்பைக் கூறுவதும்,

    “காலேஜ் படிக்க வைக்க கண்ணுல உசுர
    வைச்சிக்கிட்டு கறவை மாடு
    மேக்கிறண்டா வாய்க்க வரப்புல
    கருத்தா படிக்கணும் நிறைய
    மார்க் வாங்கணும் கண்டபடி சுத்தாதப்பா
    கலெக்டர் ஆக்கி பார்க்கணும்”

    என்ற பாடல்கள் சமூகத்தின் விழிப்புணர்வுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது..

    முடிவுரை:
    நாட்டுப் புறப் பாடல்கள் பல ஆண்டு காலமாகத் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகின்றன, நாட்டுப்புறப்பாடல்கள் வளர்ச்சி அடைந்து உலகளவில் புகழ் அடைய வேண்டும். நாட்டுப்புறப்பாடல்களை அனைவரும் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் கடமையாகும்.

    குறிப்புகள்: 
    1.விழிப்புணர்வு
    2.மேலது.ப.12
    3.மேலது.ப.10
    4.மேலது.ப.5
    5.மேலது.ப.16
    6.மேலது.ப.19
    7.மேலது.ப.21

    முனைவர் மீ.இராசேசுவரன்,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
    நன்னிலம்.
    அலை:9942004767
    மின்:23575rajeswaran@gmail.com

    படம் உதவி: http://www.tamilvu.org/

    Share
  • சமய நோக்கில் ஐம்பெருங்காப்பியங்கள்

    –முனைவர் பெ.செல்லதுரை.

    ஐம்பெருங்காப்பியங்கள்

    முன்னுரை:
    தனக்கு உவமை இல்லாதவன் இறைவன் ஆவான். உலகப் படைப்பில் இறைவனை முன் வைத்தே ஒவ்வொரு ஆக்கங்களும் உருபெறுகின்றன என்பதும் உண்மை என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் காணலாகும் சமயப் பதிவுகளைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றன.

    சமயம்-வரைவிலக்கணம்:

    “பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
    புகுந்து கலந்திட நிறைவாய்ப்
    பொங்கி போங்கும் கங்குகரைக்
    காணாத கடலே” (இராமலிங்கம்)

    மேற்கண்ட தத்துவங்களில் பொங்கிப் பெருக்கெடுத்து வருகின்ற நதிகள்(சமயங்கள்) நிறைவில் கங்கு கரை காணாத கடலை(கடவுள்) சென்றடைகின்றன. இத்தகையக் கருத்துக்களில்தான் காப்பியங்களும் இவற்றில் காணப்படும் சமயப் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

    சிலப்பதிகாரமும் சமய நெறிகளும்:
    கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்டங்கள் மூன்றும், முப்பது காதைகளும் இடம்பெறுகின்றன. கோவலன் கண்ணகி முதன்மைப் பாத்திரங்கள், எதிர்முனைப்பாத்திரம் பொற்கொல்லன், துணைப்பாத்திரங்கள் மாதவி, கவுந்தியடிகள், மாதரி, பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன்,மாடலன் போன்றோர்கள் இடம்பெறுகிறார்கள் அகவற்பாக்களைக் கொண்ட பாடல் வகையும் பதிகம் உட்பட 4899 மொத்த அடிகள் உள்ளன.

    இளங்கோவடிகள் சமணர் அவரால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் சமணசமயக் கோட்பாடுகள் நிறைந்த காப்பியமாக உள்ளது.

    “கண்டேதும் செவ்வேள்”
    செம்பொருளாம் சிவனை இவர்”
    “பிறவா யாக்கை பெரியோன்”
    “உமையவள் ஒரு திறனாக ஓங்கிய இமையவள்”[கடவுள் வாழ்த்து]

    “பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
    குரியவளைக் காணாத”[ஆய்ச்சியர் குரவை]
    “சீர்கெழு செந்திலும் சென்கோரும்
    வெண்குன்றும்”[குன்றக்குரவை]

    மேற்கண்ட சமணக் கொள்கை கவுந்தியடிகள் மூலம் பேசப்படுகின்றது.

    இளங்கோவடிகள் சமரச நோக்கத்தோடு சிவன், திருமால், அருகதேவன், கொற்றவை, முருகன் போன்ற தெய்வங்களைப் பாடியுள்ளதால் பொதுவுடைமைச் சமயப்பதிவுகளை ஒருங்கிணைத்துக் காண முடிகிறது.

    மணிமேகலையில் சமயக்கூறுகள்:
    கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம் மணிமேகலை மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எழுதியது. கதா நாயகி மணிமேகலை எதிர்முகம் சித்ராபதி(பாட்டி) துணைப்பாத்திரங்களாக அறவணடிகள், மாதவி, சுதமதி, தீவதிலகை, உதயகுமரன், காஞ்சனன், காயசண்டிகை, மணிமேகலை தெய்வம், ஆபுத்திரன், ஆதிரை போன்றோர்களாவர். அகவற்பாக்களைக் கொண்டு 4856 அடிகளைக் கொண்டுள்ளன.

    “நுதல்விழி காட்டத்திறையோன்”[மணி:1-54]
    “கிந்தா தேவி நந்தாவிளக்கு நாமிசைப்பாவாய்
    வண்ணோர் தலைவி மண்ணோர் தலைவி மண்ணோர் முதல்வி”
    [14:17-19]

    எனக் கலைமகள் பக்தியும் மணிமேகலையின் வேண்டுகோளுக்கிணங்கி மாவண் கிள்ளி சிறைச் சாலையைத் தகர்த்து அவ்விடத்து பெளத்த கோயில் எழுப்பியதும் காணலாம்.

    புத்தர் பெருமானை மகாயான பௌத்தர்கள் பரம் பொருளாகவே துதித்துப் பரவினர். பெளத்த கோயில்களில் புத்தரின் திருவுருவ வழிபாடும், பாதபீடிகை வழிபாடும், மணிபல்லவத் தீவின் அமைப்பு, கோமுகிப் பொய்கை ஆதி முதல்வன் ஆதிசால் முனிவன், ஆதி சினேந்திரன், பகவான், முதல்வன், தொல்லோன் நாதன், எங்கோன் அண்ணல் அறவோன் போன்ற திருப்பெயர்கள் புத்தரையே குறிக்கின்றன. பெளத்த சமயம் அறவண அடிகள் மூலம் பேசப்படுகிறது.

    சீவக சிந்தாமணியில் சமய நெறிகள்:
    திருத்தக்க தேவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணியை இயற்றினார். நாயகன் சீவகன், நாயகி எண்மர் ஆவர். துணைப்பாத்திரங்கள் சச்சந்தன், விசயை, நந்தட்டன், கந்துக்கடன் நண்பர்கள் போன்றோர்கள். இந்நூல் 3145 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளன பதிமூன்று இலம்பகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    சீவக சிந்தாமணி சமண சமயத்தின் பதிவுகளைக் கொண்டுள்ளது. சிந்தாமணியில் கடவுள் வாழ்த்துப் பாடலே அருகப் பெருமானை வணங்கினால் வீடு பேறு கிட்டும் என நம்பிக்கைக் கொண்ட மக்கள் இறைவழிபாட்டிற்குச் சாந்து, மலர்மாலை, சுண்ணப்பொடி, அகிற்புகை முதலிய பொருள்களைக் கொண்டு சென்றனர்(சிந்தா. 1604). அருகப் பெருமானுக்கு முக்குடை மூர்த்தி, முக்குடைச் செல்வன், முக்குடையான், முக்குடைதாதை, அறவழி அண்ணல், பிண்டி வேந்தன், பிண்டி நாதன், பிண்டி பகவான், பண்ணை, பரமன், வாமன், நேமி நாதன், தேவாதிதேவன் என்று சமண சமயப்பதிவுகளை சீவக சிந்தாமணி பிரதிபலிக்கிறது.

    வளையாபதியில் சமய கோட்பாடுகள்:
    வளையாபதி நூல் முழுவதும் கிடைக்கவில்லை 66 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. சமண சமய நூல் ஆகும். நாயகன் நவகோடி நாராயணன் ஆவான்.சமண மத கடவுளின் பெருமைகளையும் பதிவுகளையும் கொண்டுள்ளது.

    “உலக மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
    திலக மாயதிறல் அறிவான் அடி
    வழுவில் நெஞ்சோடு வாலிதின் ஆற்றவும்”(வளையாபதி:கடவுள் வாழ்த்து)

    வளையாபதி முற்றிலும் பற்றொழித்து பிற உயிர்களுக்கு அருள் செய்தலே பெரிய தவ ஒழுக்கம் எனக் குறிப்பிடுகின்றது (வளை:43)

    பொருளின் பால் உள்ள மயக்கம் நீங்கல் மனம் மொழி மெய்களையடக்கி நன்றின்பால் உய்த்தல், விருப்பு வெறுப்பு. பற்றியிருத்தல் பொய்ப்பொருளைப் பற்றி கிடவாமை போன்றன தவசிகளுக்கு வேண்டிய பண்பெனப் பகரும், முதுமைப் பருவத்துத் துறவொழுக்கம் ஆற்றியே ஆக வேண்டும். (வளை:25:2444) போன்ற சமண மதப்பதிவுகளைப் பெற்று இக்காப்பியம் விளங்குகிறது.

    குண்டலகேசியில் சமய சிந்தனைகள்:
    குண்டலகேசி கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாகும் இதுவும் பெளத்த சமயம் பற்றியதாகும். நூல் ஆசிரியர் நாதகுத்தனார் கதா நாயகி குண்டலகேசி எதிர்ப்பாத்திரம் கத்துவான்(கணவன்) விருத்தப்பாக்களால் ஆனது. நூல் முழுவதும் கிடைக்கவில்லை. 19 பாடல்களே கிடைத்துள்ளன. கதா நாயகியின் பெயரே நூலுக்கும் பெயராயிற்று அவள் துறவியாக மாறினாள்.

    “தனக்கென்று
    ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
    உறுதிக்கு உழந்தான்” (குண்டல:1)

    கடவுள் வாழ்த்தில் புத்தரைப் பற்றிய பதிவுகளுடன் காப்பியம் தொடங்குகிறது. பெளத்த காப்பியமாகிய குண்டலகேசி துறவினைப் பெரிதாக வலியுறுத்துகின்றது. காவி ஆடையினால் உடம்பைப் போர்த்து கொள்ளல், கோடையின் கண் தீயில் நிற்றல், மனம் பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுக்கமே உண்மைத் தவவொழுக்கம் (குண்ட:4) போன்ற சமயப் பதிவுகளை வலியுறுத்துகிறது.

    தொகுப்புரை:
    பொதுவாக தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சமயப் பதிவுகள் பரவலாகவே இடம் பெற்றுள்ளன. சமண சமயம் ஆசிரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் வேரூன்றியிருந்து, வேதங்களில் காணப்படும் தீர்த்தங்கரர் பற்றிய குறிப்புகள் சமணத்தின் தொன்மைக்குச் சான்றாகும். சமணரின் உயிர்ப்பகுப்பு முறையே தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. பொறியுணர்வுகளுக்கு ஏற்ப உயிரினங்களைப் பிரித்துக் காட்டும் உயிரியல் பகுப்பு தனித்தன்மைகள் காப்பியங்களில் காணப்படுகிறது.

    தமிழ்க் காப்பியங்களில் கூறும் பௌத்தம் சமணம் மனிதனை மனிதனாக மதித்து முக்கியத்துவங்களைக் கொடுத்து மேலோங்கி நிற்கின்றன.

    பிற்கூறுகள் மூட நம்பிக்கை, தீண்டாமை, தனிமனித உயர்வுக்குத் தடை, மனிதனை மலத்தை விடக் கீழாக மதித்தல் போன்றவற்றைக் கடவுள் சமயக் கொள்கைகளாகப் புகுத்தியதால் தற்காலத்தில் சமயக் கொள்கைகள் வற்றிப்போயின.

    சமயக் கொள்கைகளை வளர்க்க, அறிவியல் கொள்கைகளை முடக்கி வைக்கும் நோக்கம் கொண்டதாக பிற்கூறு சமயப்பதிவுகள் உள்ளன”

    மனிதனை மனிதனாக மதிக்கும் சமண பெளத்த மதக் கொள்கைகள் தமிழ்க் காப்பியங்களில் பெரும் பதிவுகளைக் கொண்டு மகத்துவம் வாய்ந்ததாகக் காண முடிகிறது.

    முனைவர் பெ.செல்லதுரை,
    உதவிப்பேராசிரியர்,
    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
    நன்னிலம்.
    அலை:9976378412
    மின்:5674selladurai@gmail.com

    படம் உதவி: http://www.edubilla.com/onbooks/tamil/ilakkiyam/

    Share
  • எமைப்பார்த்து நகைத்துவிடும்!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
    தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
    இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
    இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும்!

    பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
    துட்டகுணம் மிக்கோராய்த் தூய்மையற்று நிற்குமவர்
    பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
    காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது!

    பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
    கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நிற்கின்றார்
    கேடுகெட்ட செயலாற்றிக் கிராதகராய் மாறுமவர்
    பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே!

    படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
    பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
    மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
    நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார்!

    கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
    போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
    காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
    மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார்!

    கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
    கண்திறந்து பார்த்தவர்க்குக் கருத்துரைக்க வந்தாலும்
    கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டுக்
    காசையே அணைத்தபடிக் கண்ணியத்தைப் பாரார்கள்!

     

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒட்டிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.”
    கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    இசை ஆத்மாவின் நாதம்
    ___________________

    என்னிதயம் கவர்ந்த
    வனிதை அருகே அமர்ந்து அவள்
    வாய்மொழி கேட்டேன்.
    அலையத் தொடங்கும் என் ஆத்மா
    யாதும் கனவாய்த் தோன்றும்
    வரம்பற்ற
    பிரபஞ்ச வெளியில் !
    உடலொரு
    முடங்கிய சிறை போல் தெரியும் !
    என்னரும் காதலி
    வழிபடும் மந்திர மொழிகள்
    நுழைந்திடும்
    என் இதயத்தின் ஊடே !
    ___________________

    இதுதான் இசை நாதம்
    என்னரும் நண்பரே !
    கேட்டேன் அதைக் காதலியின்
    பெரு மூச்சில் !
    வாய் மொழியில் அது
    வந்தது !
    சொல்லியும் சொல்லாத இதழ்களின்
    மெல்லோசையில்
    எழுந்தது !
    என் செவி வாயிலில்
    தடம் வைத்த
    இசை நாதத்தில் கண்டேன்
    என் காதலி இதயம் !
    ___________________

    இசை என்பது
    இனிய ஆத்மாக் களின் நாதம் !
    அதன் மெல்லிசை
    விளையாடும் தென்றல் !
    காதல் நாண்களை
    மீட்பது இசை நாதம் !
    மென்மை யாய் இசை விரல்கள்
    நமது உணர்வுக் கதவைத்
    தட்டும் போது
    விழித்தெழும் முன்னால்
    கழிந்து போன
    நீண்ட காலப் புதை
    நினைவுகள் !
    ___________________

    சோக முறிவு இசை நாதம்
    துக்க நினைவுகளை
    முன்னிறுத்தும் !
    இசையின் மௌன ராகங்கள்
    இனிய நினைவையும்
    எதிர் நிறுத்தும் !
    நாண்களின் சோக நாதம்
    நம்மை அழ வைக்கும்
    நமக்கினியோர் மரண இழப்பில் !
    அல்லது
    கடவுள் அளித்த அமைதியில்
    களிப்புண் டாக்கும்
    நமக்கு !
    ___________________

    Share
  • பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

    eiffeltower-1

     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம்,

    பிரென்ச் புரட்சி வெற்றி நினை வூட்டும்!

    தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம்,

    பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்!

     

    முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபுரம்! முடிசூடிய மன்னர் ஆட்சியைக் கவிழ்த்தி, 1789 ஆம் ஆண்டு குடியரசை முதன்முதல் நிலைநாட்டிய பிரென்ச் புரட்சி வெற்றியைக் கொண்டாடும் நூறாண்டு விழாவைச் சிறப்பிக்கச் சமர்ப்பணமான 700 நினைவுச் சின்னங்களில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, ஐஃபெல் கோபுரம்! ஓங்கி உயர்ந்த உன்னத கோபுரத்தைச் டிசைன் செய்து கட்டி முடித்த பொறியியல் மேதை, அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)]. பிரான்ஸில் பல பாலங்களைக் கட்டி எஞ்சினியரிங் திறமை மிக்க கஸ்டாவ், ஐஃபெல் கோபுரம் மட்டும் அல்லாது, அமெரிக்க நாட்டுக்குச் ‘சுதந்திரச் சிலை ‘ [Statue of Liberty in New York Harbour] அடுத்து சூயஸ், பனாமா கால்வாய்கள் [Suez & Panama Canals] ஆகியவற்றின் கட்டமைப்புக்கு அடிப்படை டிசைன் பணிகள் ஆற்றிய நிபுணர். கடற் தீவில் ஒய்யாரமாக நிற்கும் மாபெரும் சுதந்திரச் சிலையின் இரும்பலான எலும்புச் சட்டங்களை அமைத்தவர், கஸ்டாவ் ஐஃபெல். சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் கட்டுவதற்குப் பிரான்ஸில் புகழ்பெற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] கால்வாய் அமைப்பு அதிபருடன் உழைத்தவர், கஸ்டாவ்.

     

     

    ஆயிரம் அடி உயரத்தில் [300 மீடர்] அமைக்கப்பட்ட ஐஃபெல் கோபுரம், 1930 ஆண்டுவரை உலகத்திலே மிக உயரமான சின்னமாகக் கருதப்பட்டது. அதன் உச்சியில் நீண்ட ரேடியோ, டெலிவிஷன் கம்பத்தின் அளவையும் சேர்த்தால், சுமார் 1070 அடி [320.75 மீடர்] உயரம் ஆகிறது! ஐஃபெல் கோபுரத்தில் மேலும் காலநிலை உளவி நிலையம் [Meteorological Station], இராணுவ தந்திக் கூடம் [Military Telegraph], காற்றுப் போக்கியல் ஆய்வகம் [Aerodynamics Laboratory] ஆகிய மூன்றையும் கஸ்டாவ் பின்னால் அமைத்தார். தலைநகர் பாரிஸில் கட்டப்பட்ட ஐஃபெல் கோபுரம் புரட்சியின் நினைவாகவும், பிரான்ஸின் சின்னமாகவும் நிமிர்ந்தோங்கி நிற்கிறது! ‘அதைக் கட்டுவதால் பயனில்லை! அந்த பூதக் கம்பத்தைக் கட்டிப் பாரிஸின் எழிலைச் சிதைக்க வேண்டாம்! ‘ என்று புகழ் பெற்ற எழுத்தாள மேதைகள், மாப்போஸாங் [Maupassant], எமிலி ஸோலா [Emily Zola], சார்லஸ் கார்னியர் [Charles Garnier], இளைய டூமாஸ் [Dumas Junior] ஆகியோர் உள்பட் 300 பிரென்ச் அதிபர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்!

     

     

    ஐஃபெல் கோபுரத்தின் பொறிநுணுக்க அம்சங்கள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்புரட்சி பொறியியல் சாதனையான ஐஃபெல் கோபுரம் 1070 அடி உயரத்தில் வானளாவி, இரும்புச் சட்டங்களால் பின்னப்பட்டு 9000 டன் எடை கொண்டது! கோபுரம் புலப்படும் மூன்று பாகங்களைப் பெற்றது. முதலாவது நான்கு திறந்த வாயில்கள் கொண்ட சாய்வு சட்டத் தூண்களில் [Pylons] நிற்கும் பரந்த ஓர் அடித்தளச் சதுர அரங்கம். அதன் மீது அதைவிடச் சிறிய இரண்டாவது அல்லது நடுநிலை அரங்கம் எனப்படும் இடைச்சட்டம். மூன்றாவது ஜிராஃப் விலங்கின் நீண்ட கழுத்துபோல் தோன்றும் செங்குத்தான மெலிந்த சட்டம். முதல் இரண்டு சட்ட இணைப்புகளின் நாற்புற மூலை நெளிவுகள் பொருந்திச் சீர்வளைவாக உச்சிப் புறத்தில் எழுகின்றன. 1887 ஆம் ஆண்டு பிரென்ச் நாணய மதிப்பின்படி 7.8 மில்லியன் பிராங்க் [1.5 மில்லியன் டாலர்] செலவில் ஐஃபெல் கோபுரம் கட்டி முடிக்கப் பட்டது! 1889 ஆண்டு ஆரம்ப விழாவின் போதே 1.14 மில்லியன் டாலர் வருமானம் வந்ததாக அறியப்படுகிறது.

     

     

    முதற்கட்டக் கோபுரக் கீழரங்கு [Tower Base] 190 அடி உயரமுள்ளது. கோபுரச் சிகரத்தின் நகர்ச்சியை அளக்கும் நோக்ககம் [Observatory] அங்குதான் இருக்கிறது. கியாஸ்க் [Kiosk] படைத்த ஐஃபெல் ஓவியம் ஒன்று அங்கு தொங்குகிறது. அஞ்சல் துறையகம் ஒன்றும், சின்னங்கள் விற்கும் அங்காடி ஒன்றும் உள்ளன. பாரிஸ் நாகரீகச் சின்னங்களின் படங்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. புகழ் பெற்ற 72 பிரென்ச் விஞ்ஞானிகள், மற்ற பிரென்ச் மேதைகள் ஆகியோரின் பெயர்கள் முதலரங்கில் எழுதப்பட்டுள்ளன!

    இரண்டாம் கட்ட இடையரங்கு 380 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. சின்னக் கடைகள், பாரிஸின் எழிலைக் காணும் தொலைநோக்கிகள் உள்ளன அங்கே. விலைமிக்க உணவு, தின்பண்டங்களை விற்கும் ஜூல்ஸ் வெர்ன் சிற்றுண்டி உணவகம் [Extremely Expensive Jules Verne Restaurant] அங்குதான் இருக்கிறது. மூன்றாவது கட்ட மேலரங்கு 905 அடி உயரத்தில் உள்ளது. பாரிஸின் கண்கொள்ளாக் காட்சியைக் காணும் தளமிது!

     

    அங்கே கஸ்டாவ் ஐஃபெல் அமெரிக்காவின் படைப்பு மேதையான தாமஸ் ஆல்வா எடிஸனை வரவேற்கும் ஓர் அறை புதுப்பிக்கப் பட்டுள்ளது! ஐஃபெல் கோபுர உச்சியிலிருந்து பாரிஸ் நகரின் இரவு ஒளியழகை நாற்புறமும் காண்பது ஒரு தனி மகிழ்ச்சி! தங்க விளக்குகளைத் தாங்கி மயக்கும் கோபுரச் சட்டங்கள், அடிமுதல் நுனிவரைப் பொன்முலாம் பூசியுள்ள தூண்கள் போன்று காட்சி அளிக்கும்!

    ஐஃபெல் கோபுரத்தின் கட்டமைப்பு வரலாறு

    பாரிஸில் 1889 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐஃபெல் கோபுரம் இரும்புச் சட்டங்களால் தொடுக்கப்பட்ட பூதகரமான ஓர் உன்னதச் சின்னம்! பிரான்ஸ் தேசத்தில் எழுந்த 1789 கொந்தளிப்புப் புரட்சியில் குடியாட்சி வெற்றி பெற்றதை நினைவூட்டக் கட்டப்பட்டது, ஐஃபெல் கோபுரம்! பாரிஸ் நிபுணரும், கலைஞரும் சமர்ப்பித்த 700 படைப்புகளில், அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் வரைந்த கோபுரம் ஒன்றுதான் ஏகோபித்த முடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது! வேல்ஸ் இளவரசர், பின்னால் பிரிட்டிஷ் மன்னரான ஏழாம் எட்வெர்டு [King Edward VII (1841-1910)] வருகை தந்து ஐஃபெல் கோபுரத் திறப்பு விழாவைச் சிறப்பித்தார்.

     

    ‘ஓவியர், சிற்பிகள், கட்டக் கலைஞர், எழுத்தாளராகிய நாங்கள் பாரிஸ் நகரத்தின் எழிலைச் சிதைக்கும் ஐஃபெல் கோபுர அமைப்பை, ஆவேசமுடன் முழு உறுதியாக எதிர்க்கிறோம்! இரும்புச் சட்டத்தில் ஒரு பயனுமற்ற இராட்சத உருவான ஐஃபெல் கோபுரம், பிரான்ஸின் கலைத்துவ, வரலாற்று மகத்துவத்துக்குப் பங்கம் விளைவிக்கும் ‘ என்று பலரது வெறுப்பு விண்ணப்பங்கள் ஆரம்ப காலத்தில் வெளியிடப் பட்டன! 300 பிரென்ச் அறிஞர்கள் கையொப்பமிட்ட அந்த எதிர்ப்புக் குழுவில் மாப்போசாங், எமிலி ஸோலா, சார்லஸ் கார்னியர் போன்ற மேதைகள் இருந்தனர்! இயற்கைப் பொழிவைச் சுவைக்கும் நபர்கள் பாரிஸில் பறவை இனங்கள் பறந்து செல்வதைக் கோபுரம் தடை செய்யும் எனக் கவலைப் பட்டார்கள்! ஆயினும் ஹென்றி ரூஸ்ஸோ [Henri Rousseau (1844-1910)], உட்டிரில்லோ [Utrillo], சாகல் [Chagall], திலனே [Delaunay] ஆகியோர், பாரிஸில் ஐஃபெல் கோபுரம் அமைக்கப் போவதை முற்றிலும் ஆதரித்தனர்!

     

    1909 இல் ஐஃபெல் கோபுரம் 20 ஆண்டு ஒத்தி உடன்பாடு முடிந்த போது, முழுவதும் பிரிக்கப்படத் திட்டமிடப் பட்டது! நல்ல வேளையாக அக்காலத்தில் அதன் உயரம் தந்திக் கம்பமாகப் [Telegraphy] பயன்பட்டதால் கோபுரம் பிழைத்துக் கொண்டது! ஐஃபெல் கோபுரம் 1910 முதல் அகில நாட்டுக் காலப்பணி [International Time Service] அறிவிக்கும் நிலையமாகவும், 1918 முதல் பிரென்ச் ரேடியோ அலைவீச்சு நிலையமாகவும், 1957 முதல் டெலிவிஷன் வெளியீட்டு நிலையமாகவும் கருதப்பட்டது. சின்னங்களை ஆராயும் ரோலண்டு பார்தேஸ் [Semiologist Roland Barthes] போன்றவரால், ஐஃபெல் கோபுரச் சின்னமே 1960 ஆண்டுகளில் ஓர் ஆய்வுக் கட்டட மாதிரியாகக் கற்கப் பட்டு வந்தது!

    ஐஃபெல் கோபுரச் சட்டத்தின் பரிமாணம்

    1070 அடி உயரத்தைத் தொடும் ஐஃபெல் கோபுரம், சுமார் 108 மாடிகளைக் கொண்ட ஒரு மாளிகையின் உயரத்துக்கு ஒப்பானது! 300 இரும்புப் பணியாளர் [Iron Workers] இரண்டு ஆண்டுகளாக 15,000 இரும்புச் சாதனங்களைக் கொண்டு கட்டிய நூதனச் சின்னம் அது! பின்னால் கட்டப் பட்ட நியூ யார்க் எம்பெயர் ஸ்டேட் மாளிகையும், கனடாவின் டொரான்டோ சி.என் கோபுரமும் ஐஃபெல் கோபுரத்தை விட உயர்ந்தவை! அதன் அடித்தளப் பரப்பு 100 மீடர் பக்க அளவு கொண்டு [333 அடிச் சதுரம்], கால் பந்தாட்டத் திடல் ஒன்றைப் போல் பரந்த காட்சியைத் தருகிறது! பூத வடிவம் போல் தோன்றினாலும், 7300 மெட்ரிக் டன் எடையுள்ள குன்றிய பளுவைக் கொண்ட இரும்பாலான கோபுரம் அது! வேனிற் காலத்தில் உஷ்ண நீட்சியால், கோபுரத்தின் உயரம் 6 அங்குலம் [15 செ.மீ] மிகையாகிறது. தூக்கி ஏற்பாட்டின் [Elevator System] எடை: 1042 டன். மொத்த இரும்புப் பாகங்களின் பளு: 9441 டன்.

     

    EiffelTower -2

     

    உறுதியான நபர் ஐஃபெல் கோபுரத்தின் சிகரத்தை 1710 படிகளில் ஏறிப்போய் அடையலாம்! அல்லது மின்சாரத்தில் இயங்கும் தூக்கிகள் [Elevators] மூலம்தான் செல்ல வேண்டும். மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று தாக்கும் போது, கோபுரத்தின் அதிகப்பட்ச சாய்வு 4.75 அங்குலம். இரும்பு உத்திரங்கள் வெப்பநீட்சியால் அகலும் போது, உச்ச சாய்வு 7 அங்குல மாகலாம்! 350 எண்ணிக்கை யுள்ள சோடியம் ஆவி மின்சார விளக்குகள் [Sodium Vapour Lamps] அமைக்கப் பட்ட கோபுரம், இரவில் பொன் முலாம் பூசப்பட்டது போல் காட்சி தருகிறது.

    முன்னூறு பணியாளிகள் இரண்டாண்டுகள் தொடர்ந்து வேலை செய்ததில் ஒரே ஒரு நபர்தான் உயிரிழந்தார் என்று தெரிவது குறிப்பிடத் தக்கது! ஆனால் கோபுரம் கட்டி முடித்த பின்பு, தற்கொலை முயற்சியில் சிகரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டவர் எண்ணிக்கை சுமார் 400 பேர்கள் என்று அறிவது மிகவும் வருந்தத் தக்கது!

     

     

    உச்சியிலிருந்து குதிக்கும் உடம்புகள் யாவும் தரையைத் தொடுவதற்கு முன்பே, அடி பரந்த இரும்புச் சட்டங்களில் மாட்டிச் சிக்கிக் கொள்வதால், தீயணைப்புப் படையினர் ஏறி அவற்றை நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது! கவனமாகப் பாதுக்காப்புத் தடைகள் அமைக்கப் பட்டிருந்தாலும், உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்த நபர்கள் எப்படியாவது உயிரை மாய்த்திடக் கோபுரத்தில் வழி செய்து கொள்கிறார்!

    ஐஃபெல் கோபுரத்தின் வடிவ அமைப்பு நுணுக்கம்

    ஈரோப்பில் ‘காற்றுப் போக்குத்துறை ‘ [Aerodynamics] பொறியியல் விஞ்ஞானத்தை விருத்தி செய்து கஸ்டாவ் ஐஃபெல் புகழடைந்தவர். 1913 இல் ‘காற்றுப் போக்கின் தடை ‘ [The Resistance of the Air] என்னும் நூலொன்று எழுதினார். கோபுர டிசைன் அமைப்பு சமயத்தில், கஸ்டாவ் அடியரங்கு தூண் சட்டங்களின் நெளிவைத் துல்லியமாகக் கணித்தார். அதன்மூலம் கோபுர உச்சியைக் காற்றின் வேகம் தாக்கும் போது உண்டாகும் பளு உந்து இழுப்பும், அறுப்பு விசையும் [Bending & Shearing Forces of the Wind] இரும்புச் சட்ட உத்திரங்களில் தொடர்ந்து அழுத்த விசையாக மாறும்படிச் [Progressively Transformed into Forces of Compression] சாமர்த்தியாகச் செய்தார்! அதனால் உத்திரத்தில் செய்யப்பட்ட ‘உள் நெளிவுகள் ‘ மிகையான ஆற்றலைக் கோபுரத்துக்கு அளித்தன! மிக வேகமாகத் தாக்கும் காற்று, கஸ்டாவின் நுணுக்கமான நூதன டிசைனால், நூறடி உயர்ந்த கோபுரத்தை 4.5 அங்குலமே அங்குமிங்கும் ஆட வைத்தது!

     

    அமெரிக்காவில் 1960 ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட ‘உலக வணிக மாளிகை ‘ [World Trade Center (Destroyed in September 2001)] போன்றவை, கஸ்டாவ் ஐஃபெல் கோபுர நியதிகளைக் கையாண்டது குறிப்பிடத் தக்கது! பலரது எதிர்ப்புகளுக்கு இடையே முதலில் தோன்றினாலும், பின்னால் ஐஃபெல் கோபுரம் பிரென்ச் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுத், தற்போது பிரான்ஸின் ஒப்பற்ற உன்னதச் சின்னமாகப் போற்றப்படுகிறது!

    கஸ்டாவ் ஐஃபெல் கட்டிய கோபுரத்தின் மர்மப் பொறியியல் நுணுக்கம் என்ன ? வானளாவிய இரும்பு கோபுரத்தில் எழும் விசைகளை உண்டாக்கும் முதல் காரணி, அதன் கனத்த எடை [சுமார் 9000 டன்]; இரண்டாவது காரணி வெளிப்புறக் காற்றடிப்பு வேகம்! கம்பத்தின் உயரத்தில் எந்த இடத்தையும் தாக்கி, காற்றின் உந்து விசைக் கோபுரத்தைக் குப்புறத் தள்ளாதபடி, அதன் பளு உந்து விசை எதிர்ப்பு ஆற்றல் அளிக்கிறது [Maximum Torque generated by the Wind is balanced by the Torque provided by the weight of the Tower at any point]! அந்த நூதனப் பொறியியல் நியதியைக் கடைப்பிடித்து, ஏற்றதொரு உத்திரத் தூண் நெளிவைக் [Curvature of the Leg Beam] கணித்தார், கஸ்டாவ் ஐஃபெல்!

     

     

    சம மட்டத்தில் உள்ள தூண் நெளிவுப் புள்ளிகளில் வரையப்படும் தொடுகேடுகள் யாவும் ஒரு புள்ளியில் சந்திக்கும்படி, உத்திரங்கள் நெளிக்கப் பட்டன. அப்புள்ளியின் ஊடேதான் முடிவான காற்றடிப்பு அழுத்த விசை புகுந்து செல்கிறது! [The Tangents drawn on the Curve from points of the same height will always meet at the point, through which passes the resultant of the Wind stresses].

    காற்றுப் போக்குப் பொறியியலைத் துவக்கிய கஸ்டாவ் ஐஃபெல்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடர்ந்த ஐரோப்பியத் தொழிற் புரட்சியின் காலத்தில் பிறந்த பிரென்ச் எஞ்சினியர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் சரித்திரப் புகழ் பெற்ற பாலங்களையும், கடற் கால்வாய்களையும் கட்டிப் பொறியியல் வரலாற்றில் உன்னத இடத்தைப் பிடித்தவர். உலகிலே நீளமான சூயஸ் கால்வாய் (1854-1869), அமெரிக்காவின் விடுதலை நூறாண்டு விழாவுக்காக 1876 இல் ‘சுதந்திரச் சிலை ‘ [Statue of Liberty], பிரென்ச் புரட்சி வெற்றி நூறாண்டு விழாவுக்கு ஐஃபெல் கோபுரம் [1887-1889], அடுத்து உலகத்திலே நூதனமான பனாமா கால்வாய் (1870-1914) ஆகிய நான்கு பொறியியல் படைப்புகளின் டிசைன் துறையில் அவரது பங்கெடுப்பு மிகையானது.

    Tower Elevator

     

    ஐஃபெல் கோபுரம், அடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கில் தோன்றிய எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் வருவரை உலகிலே உயர்ந்ததாகக் கருதப்பட்டது! கோபுரம் அமைப்பதற்கு முன்பு கஸ்டாவ் ஐஃபெல் போர்ச்சுகல் நாட்டின் டெளரோ நதியின் மீது [Douro River] புகழ் பெற்ற இரயில் வளை பாலத்தையும் [Railway Viaducts], அமெரிக்காவுக்கு 1876 இல் நூற்றாண்டு விடுதலை விழாவுக்கு ஒரு வட்ட வடிவு இரும்புச் சட்டக் கோபுரத்தையும் டிசைன் செய்ததாக அறியப்படுகிறது!

    152 அடி உயரச் சுதந்திரச் சிலையின் வெளிப்புறத் தோற்றத்தைப் படைத்தவர் ஃபெரடிரிக் பார்த்தோல்டி [Frederic Bartholdi]. ஆனால் கையில் தீபந்தத்தை ஏந்திக் கடற்காற்றைத் தாங்கி நிற்கும் அந்த பூதகரமான விடுதலை மாதின் எலும்புக் கூடான இரும்புச் சட்டத்தைச் டிசைன் செய்தவர், அலெக்ஸாண்டர் ஐஃபெல்! அடுத்து சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் இரண்டுக்கும் முக்கிய டிசைன் எஞ்சினியரிங் பணி செய்தவர் ஐஃபெல். ஆனால் கால்வாய் அமைப்பு வேலைகளை மேற்பார்வை செய்தவர், ஃபெர்டினண்டு தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps (1805-1894)]. பிறகு லெஸ்ஸெப்ஸ் பனாமா கால்வாய்த் திட்டத்திலிருந்து நீங்கிய பின், 1881 ஆண்டு முதல் அலெக்ஸாண்டர் ஐஃபெல் பிரென்ச் கம்பெனியின் அதிபதியாகப் பணி ஆற்றினார்.

     

    1889 இல் ஐஃபெல் கோபுரத்தை நிலைநாட்டிய கஸ்டாவ், அதன்மூலம் பொறியியல் விஞ்ஞானத்தை வளர்க்க முற்பட்டார். வேட்கை மிகையாகி அவந்-கார்டே விஞ்ஞானம் [Avant-Garde Science] எனப்படும் காலநிலையியல் [Meteorology], ரேடியோ தந்தி [Radio Telegraphy], காற்றுப் போக்கியல் [Aerodynamics] ஆகிய மூன்று துறை விஞ்ஞான விருத்திக்கும் கோபுரத்தின் உயரத்தைப் பயன்படுத்தினார். கோபுரத்தின் உச்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் ஒரு நோக்கு நிலையத்தை [Observation Station] அமைத்தார். அங்கே பூத ஊசலி, பாதரச அழுத்தமானி ஆகியவற்றை வைத்துச் சில சோதனைகளைச் செய்தார். கோபுரத்திலிருந்து முதன்முதல் ரேடியோக் கதிரனுப்பைச் [Radio Transmission] செலுத்திக் காட்டினார்.

     

     

    1898 இல் கஸ்டாவ் ஐஃபெல் அனுப்பிய ரேடியோ அலைகளை, பாதியானில் இருந்த யூஜீன் டியூகிரிடே [Eugene Ducretet at Patheon] கருவி மூலம் பிடித்துக் காட்டினார். யூஜீன் அடுத்து ஐஃபெல் சேமித்த காலநிலை அளவுகளைக் [காற்றின் வேகம், திசை, அழுத்தம்] கொண்டு காற்றின் போக்கால் ஏற்படும் காற்றுத் தடுப்பு [Air Resistance due to Wind Flows] விபரங்கள் அறியப்பட்டன. அந்தப் பொறியியல் விஞ்ஞானமே பின்னால் ‘காற்றுப் போக்கியல் ‘ [Aerodynamics] எனப் பெயர் பெற்றது. விமானப் பறப்பியல் விஞ்ஞானத்தில் இறக்கைச் சோதனைகளுக்குக் காற்றுக் குகைகள் அமைக்கப்பட்டுக் காற்றுப் போக்கியல் ஆய்வு [Aerodynamics Study in Wind Tunnels] விருத்தி அடைய அவரே ஆரம்ப கர்த்தாவானார்.

     

    கஸ்டாவ் ஐஃபெல் அடுத்து காற்றுக் குகை ஒன்றை சாம்ப் தி மார்ஸில் [Champ de Mars] அமைத்தது, 1909-1911 ஆண்டுகளில் பயன்பட்டது. அவர் மேம்படுத்தி அமைத்த (1912-1914) காற்றுக் குகையில் 5000 சோதனைகள் நடத்தி 1917 ஆம் ஆண்டில் ஐஃபெல் ஆய்வுக்கூடம், ஒற்றைச் சுழலி விமானத்தை விரட்டும், மேன்மையான போர் விமானம் [Monoplane Chaser] ஒன்றைத் தயாரித்தது.

    இரண்டாம் நூற்றாண்டைக் கொண்டாடிய பிரான்ஸ் தேசம்!

    நூற்றாண்டைத் தாண்டி இன்னும் இளமையில் கவரும் ஐஃபெல் கோபுரத்தில் வியப்பான திருவிளையாடல்களைச் சிலர் தீவிரமாகச் செய்துள்ளார்கள்! 1923 ஆம் ஆண்டில் தகவல் தயாரிப்பாளி, பியர் லாபிரிக் [Pierre Labric] என்பவர் முதற்கட்ட அரங்கின் படிகளில் சைக்கிள் ஓட்டி இறங்கினார் என்று அறியப்படுகிறது! ஒருசிலர் பியர் லாபிரிக் வெளிப்புற நெளிவுச் சட்டத்தில் சைக்கிள் ஓட்டி இறங்கியதாகச் சொல்கிறார்கள்!

     

     

    1954 இல் மலைஏறி நிபுணர் ஒருவர், கோபுரத்தின் ஆயிர அடி உயரத்தையும் கால்களால் மிதித்து வெற்றிகரமாக ஏறி இறங்கினார்! இரண்டு பிரிட்டிஷ் வீரர்கள் கோபுரச் சிகரத்திலிருந்து பாராசூட் குடை விரித்துப் பாதுகாப்பாக 1984 இல் குதித்துக் காட்டினார்கள்! 2002 ஆம் ஆண்டில் மட்டும் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் ஐஃபெல் கோபுரத்தைக் கண்டு களித்ததாக அறியப்படுகிறது!

    ஐஃபெல் கோபுரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட போது வெளியான அமெரிக்க விஞ்ஞான இதழ் [Scientic American (June 15, 1889)] ‘பழுது எதுவு மின்றி, விபத்து எதுவு மின்றி, தாமத மில்லாமல் கோபுரம் படைக்கப் பட்டது ‘ என்று பாராட்டியது! ஐஃபெல் ஆக்கிய கோபுரமும், சுதந்திரச் சிலையும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தேசத்தில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரம்மாண்டச் சின்னங்களான பிரமிடுகளின் வரிசையில் வருபவை!

     

     

    நியூ யார்க்கில் ‘சுதந்திரச் சிலை ‘, பாரிஸில் ஐஃபெல் கோபுரம் போன்ற ஒப்பற்ற பொறியியல் சின்னங்களைப் படைத்த, கஸ்டாவ் ஐஃபெல், தனது 91 ஆவது வயதில் [1923] காலமானார். ஒவ்வொரு ஆண்டிலும் மில்லியன் கணக்கான மாந்தர் அவரது மகத்தானப் படைப்புகளைக் கண்டு களிப்படைகிறார்கள். 1989 ஆம் ஆண்டில் பிரான்ஸ் புரட்சி வெற்றியின் இரண்டாம் நூறாண்டுப் பூர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது! முதல் நூற்றாண்டைத் தாண்டிய அவ்விரண்டு அரிய சின்னங்கள், இன்னும் பல நூற்றாண்டு காலம் நீடித்து அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் பெயரை உலக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!

     

     

    தகவல்:

    1. National Geographic: France Celebrates Its Bicentennial [July 1989]

    2. National Geographic Society, The Builders, Marvels of Engineering [1992]

    3. Encyclopaedia Britannica Vol:7 [1978]

    4. History of Eiffel Tower, Facts & Figures [Mar 24 2004]

    5. Eiffel & Aviation By: Prof Larraine Lavorata [1994]

    6. Alexandre Gustav Eiffel -His Engineering Career.

    7. The Shape of the Physics of Eiffel Tower By: Joseph Gallant

    8. http://www.toureiffel.paris/en.html

    9. http://www.history.com/topics/eiffel-tower

    10. http://www.newworldencyclopedia.org/entry/Eiffel_Tower [September 15, 2013]

    11. http://www.history.com/topics/eiffel-tower/videos/seven-wonders-the-eiffel-tower

    12. https://en.wikipedia.org/wiki/Eiffel_Tower [January 13, 2016]

    **********************

    Share
  • குடியரசு தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    12548991_499602483576517_5793127922693701004_n

    கொடியேற்றம், அணிவகுப்பு, தேசிய அளவில் வெளிநாட்டு பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாநில அளவில் ஆளுநர் கொடியேற்றம், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர்கள் கொடியேற்றம், பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் வீர சக்கரா விருதுகள், மாநில அளவில் காவல்துறை விருதுகள் அளித்தல் போன்றவை வருடங்கள் தோறும் பெயரில் மட்டும் மாற்றங்களுடன் தவறாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆம் இவையனைத்தும் வெறும் சடங்குகளாக மட்டுமே நடைபெறுகின்றன. நாட்டின் இன்றைய வளர்ச்சியின் நிலையே சுதந்திர நாட்டின் வெற்றி விழாக் கொண்டாட்டமாக அமையும்!

    பாரதப் பிரதமராகப் பதவியேற்றபின் மேதகு மோடி அவர்கள் எடுத்த பல முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தன. அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதிலும், மேக் இன் இந்தியா செயல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருதலில் அவர் காட்டிய முனைப்பு போன்றவைகள் பாராட்டுதலுக்குரியன. அது போல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் போன்றோர்கள் எடுத்துவரும் முயற்சிகளும் பாராட்டிற்குரியவைகளாகவே உள்ளன. தங்களுடைய மாநிலங்களை தொழில்வளம் மிக்க நாடுகளாக மாற்றுவதற்கு அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் போற்றத்தக்கது. ஆந்திராவில் ஏர்பஸ் கம்பெனியுடன் இணைந்து விமானம் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதும் பாராட்டிற்குரியது. வெறும் அறிவிப்புகளுடன் மட்டுமே நின்றுவிடாமல் , செயலிலும் வேகம் காட்டுவது வரவேற்பிற்குரியது. மிகவும் பின் தங்கிய பீகார் மாநில முதல்வர் நிதீஸ் குமார் அவர்கள் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளதும் மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய செயல். இப்படி குறிப்பிடும் வகையில் ஒரு சில முதல்வர்களே மக்கள் நல்வாழ்விலும், தொழில் வளத்திலும் அக்கறை காட்டி நம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆளும் கட்சியோ, பிரதான எதிர் கட்சிகளோ முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் தங்களுடைய மாநிலங்களை, தொழில் தலைநகராக மாற்றுவோம் என்பது போன்ற கோசங்களைக்கூட முன்வைப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம். தேர்தலுக்கு முந்தைய சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் தனது ஆளுநர் உரையில் முழு மதுவிலக்கு என்பது இயலாத காரியம் என்று கூறியிருப்பது வருந்தக்கூடிய விசயமாகும். சில புள்ளிவிவரங்களின்படி விஸ்கி, பிராந்தி போன்ற மது அருந்துவோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதும். அதே நேரத்தில் மதுவின் பாதிப்பு குறைவாக உள்ள பீர் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றன. மற்றொரு புள்ளி விவரத்தின்படி புகை பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருவதாகவும் தெரிய வருகின்றன. இதைப் பற்றியெல்லாம், ஆளும் கட்சியோ அல்லது ஆள ஆசைப்படும் கட்சிகளுக்கோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பொருளாதாரம், தொழில் துறைகளில் வளர்ச்சியடைந்து வரும் தமிழகத்தைப் பாரதப் பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தையொற்றி மேக் இன் தமிழ்நாடு என்ற கோசத்தை முன்வைத்துப் போட்டியிட எந்தக் கட்சியும் தயாராக இல்லை. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இலவசங்களைப் பற்றி மட்டுமே அறிவித்து மன மயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 1% பேர் மட்டுமே இந்த இலவசத் திட்டங்களுக்கு எதிர்ப்பும், 24% பேர் வரவேற்றும், 24% இலவசங்களில் மாற்றங்களும் தேவை என்று கூறியிருக்கின்றனர். விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பல சதவிகிதத்தினர் வரவேற்றுள்ளனர். இது அதிர்ச்சிக்குரிய தகவலாகவும், மக்களின் எதிர்மறை சிந்தைகளை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. பசிப்பவனுக்கு இரண்டு மீன்களைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்போம் என்ற பெரியோரின் கருத்துகளை எள்ளி நகையாடும் விதமாக அரசு கருவூலங்கள் காலியானாலும் கவலையில்லை என்ற நோக்கில் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் விதமாக இல்லை என்பதே வேதனையான விசயம்.

    வாழ்க சுதந்திரம்!
    குடியரசு தின வாழ்த்துகள்!

    Share
  • விழித்தெழட்டும் என் நாடு!

    – தேமொழி.

     

     

    விழித்தெழட்டும் என் நாடு!

    கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    எங்கே அச்சமற்ற மனம்
    தலைநிமிர்ந்து நிற்கிறதோ
    எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள்
    அடங்காமல் இருக்கிறதோ
    எங்கே உலகம் குறுகிய
    மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ
    எங்கே சொற்கள் உண்மையின்
    ஆழத்தில் இருந்து உருவாகிறதோ
    எங்கே சோர்வற்ற கரங்கள்
    முழுமைப்படுத்துவதில் முனைகிறதோ
    எங்கே தெளிந்த நீரோட்டமான சிந்தனை பாழான
    பழக்கம் என்ற பாலை மணலில் மறையவில்லையோ
    எங்கே உன்மனம் என்றும் பரந்த மனப்பான்மை
    கொண்ட செயல்களை முன்னெடுக்கிறதோ
    அந்த விடுதலை என்னும் சொர்க்கத்தில்
    என் தந்தையே, என் நாடு விழித்தெழட்டும்.

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

     

    இரவீந்திரநாத் தாகூர்

    Where The Mind Is Without Fear

    – Rabindranath Tagore

    “Where the mind is without fear
    and the head is held high,
    where knowledge is free.
    Where the world has not been broken up
    into fragments by narrow domestic walls.
    Where words come out from the depth of truth,
    where tireless striving stretches its arms toward perfection.
    Where the clear stream of reason has not lost it’s way
    into the dreary desert sand of dead habit.
    Where the mind is led forward by thee
    into ever widening thought and action.
    In to that heaven of freedom, my father,
    LET MY COUNTRY AWAKE!

     

     

    Share
  • ஆனந்தம் பெற்றிடுவோம் !

     

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    1935500_928017080628561_6456010672372628722_n

    குடியரசு நாளதனில் குடியொழிக்க நினைந்திடுவோம்
    அடிமைமனம் எமைவிட்டு அகன்றுவிட எண்ணிடுவோம்
    திடமுடனே இந்தியாவை நிலைநிறுத்த முனைந்திடுவோம்
    தீமைசெய்வார் மனந்திருந்த திட்டங்கள் வகுத்திடுவோம் !

    அரசியலார் மனங்களிலே அறமோங்கச் செய்திடுவோம்
    அசிங்கமுடை அரசியலார் அவைவிட்டு ஓட்டிடுவோம்
    உரிமையொடு கடமைதனை உணர்த்தியே நின்றிடுவோம்
    உள்ளமெலாம் சுதந்திரத்தின் உயர்கருத்தை விதைத்திடுவோம் !

    காந்தியொடு காமராசர் வாழ்ந்தவிந்த நாட்டினிலே
    காட்டாச்சி செய்வாரை கழுவேற்றி வதைத்திடுவோம்
    நீதிசொன்ன திருக்குறளை நித்தமுமே படித்துநின்று
    போதிப்போம் பொறுப்புடனே புனிதமெமை சேர்ந்தணைய !

    சாதிபற்றிப் பேசாமல் சாதிப்போம் இமயமென
    வாதிட்டுவாதிட்டு வைகத்தில் என்ன கண்டோம்
    ஆதிக்கம் ஆணவத்தை அறவேநாம் துறந்துவிட்டு
    அன்புகொண்டு அரவணைத்து ஆனந்தம் பெற்றிடுவோம் !

    Share
  • இந்தியக் குடியரசு!

    -ராபார்த்தசாரதி

    அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தைக்  கொண்டாடுதே,
    இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
    உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே
    வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதைக்  காண்கிறோமே! 

    இயற்கைச்  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே Republic-Day
    நாட்டுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
    இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே
    நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே! 

    குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
    நாட்டின் முன்னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
    ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே,
    மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே ! 

    நாடு  உனக்கு என்ன செய்தது எனக்  கேட்காதிர்கள்
    நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள்,
    நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
    பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா ய் என்றும் விளங்குவோமே! 

    ஜனநாயகத்தின்  குடைக்கீழ்   வளரும்  நாடு,
    கலாசாரத்திலும்ஆன்மிகத்திலும்  சிறந்த நாடு,
    பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
    ணையற்ற  ந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!

     

     

    Share
  • விடியாத குடியாட்சி!

    -சி. ஜெயபாரதன், கனடா

    நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்
    கண்
    விழிக்க இன்னும்
    விடி
    வெள்ளி எழ வில்லை!
    முடிய வில்லை  இருளாட்சி !
    பொருளாட்சி ஆக்கும்
    பூதப் பண முதலைகள்
    மடிக்குள் வெடி மறைத்து                            tricolor
    நடக்குது மதப்போர்!

    ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
    வாள்
    முனைகள் ஆயின!
    கார்மேகம் இப்போ தெல்லாம்
    கரியமிலம்
    பொழிகிறது!

    பாரதப் பண்பாடுகள் யாவும்
    நாராய்க்
    கிழிந்து,
    வேர்கள்
    கீழ்நோக்கிப்
    போகாது
    மேல்
    நோக்கித் துளைக்கும்!

    எழுத்தாணிகள் ஆடை நீக்கி
    ஒழுக்கம் தவறிக்
    குத்தூசி
    களாய்க் கோலமிடும்!
    பத்திர காளியின் கைச் சூலாயுதம்
    பக்தரின்
    கைவசம் மாறும்!

    பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்ப்
    பண
    வேட்டை ஆடும்.
    வேலை கிடைக்குது
    கப்பம்
     ஒரு லட்சம் கட்டினால்! 

    கீழ் ஜாதியார் உயர் நிலைக்கு ஏறி
    மேல்
    ஜாதி ஆகவில்லை!
    மேல் ஜாதியார் கீழ் நிலைக்குப் போய்
    தாழ்வு
    பெற்றார்!

    கணினிப் பொறி வர்த்தகப் பணிகள்
    ஆயிரக் கணக்கில் பெருகி
    ஏழையர்
    , செல்வந்தர்
    வேற்று
    மைகள் பன்மடங்கு
    ஏறிப்
    போச்சு !

    நடிப்புக்கு மதிப்பளிக்கும்
    நாட்டில்
    படிப்புக்கு
    மதிப்பில்லை!
    மருத்துவம் பணப் பட்டம் ஆனது!
    உயிர்களுக் கில்லை மதிப்பு!

    உன்னைப் பெற்ற அன்னையோ
    உடன் பிறந்த தங்கையோ
    நாட்டில்
    தனியாக
    நடந்து
    செல்ல முடியாது !

    கருவிலே உருவாகும்
    பெண்
    சிசுவுக்கு
    மரண
    தண்டனை பிறப்ப தற்கு முன்பே!

    பாரத மணிக்கொடி
    நாராய்க்
    கிழிந்து போய்ப் பறக்குது!
    விடியாத சுதந்திரச் சூரியன்
    அத்தமிக்குது
    !
    குடியாட்சியைத் தைப்பதா?
    முடிப்பதா?

     +++++++++++++

    1. Jayabarathan [jayabarathans@gmail.com] (January 26, 2016)

      

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 25, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்கள்

    Cottalango Leon

    வல்லமையின் இவ்வார வல்லமையாளர்; ஹாலிவுட் திரைத்துறை சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார்விருதுகளில், இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதைப் பெறுபவர்களில் ஒருவரான கோவைத் தமிழர் திரு. கோட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) அவர்கள். இவரும், இவர்தம் வழிநடத்தலில் இவரது குழுவினரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் (Sony Pictures Imageworks) நிறுவனத்திற்காக உருவாக்கிய “ஐடிவியூ” (itview) என்ற மென்பொருள்*, உருவாகி வரும் திரைப்படத்தின் பகுதிகளை திரைக் கலைஞர்கள் மீண்டும் பார்த்து ஆய்வுசெய்து செப்பனிடும் முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப் பட்டது. உருவாகி வரும் படத்தின் பல நிலைகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் திரைப்படம் தயாரிப்பதில் பெரிதும் உதவுகிறது.

    The-Academy-of-Motion-Picture-Arts-and-Sciences-150தொழில்நுட்பத்திற்காக “வடிவமைப்பு, பொறியியல் பங்களிப்பு, தொடர் மேம்பாடு” ( ‘Scientific and Technical Achievements’ category for the design, engineering and continuous development) என்ற பிரிவில் விருதினைப் பெரும் திரு. கோட்டலாங்கோ லியோன் விருது கிடைத்ததைப் பற்றிய தனது செய்தியை அவரது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சாதாரணமான நாளொன்றைத் துவக்கிய எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய செய்தி இன்ப அதிர்ச்சியைத் தந்தது.திரைப்படங்களை உருவாக்குவதில், இன்றியமையாத வகையில் பின்புலத்தில், திரைப்பட தொழில்நுட்பத்தில் உதவிகள்செய்யும் 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்குபவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கும் போட்டிகள் அதிகம், இதற்காகப் பலநேர்காணல்களில் கலந்து கொள்ளவும், தொழில்நுட்பம் பற்றியவிளக்கங்களும் தரவேண்டியிருக்கும். இருபதாண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் பணியில் என்முதல் நிரலி வரியை எழுதிய பொழுது நான் பின்னாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை.

    எங்கள் தொழில் நுட்பப் பணியில் உடன் பணியாற்றிய ராபர்ட் ரே, சாம் ரிச்சர்ட்ஸ், மற்றும் ராப் ப்ரேடோ (Robert Ray, Sam Richards and Rob Bredow) ஆகிய குழுவினருக்கும், எனது முன்னேற்றத்திற்கு உதவிய என் நண்பர்களுக்கும், நான்பணிபுரியும் ‘சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ்‘ நிறுவனம் என்னிடம் இதுநாள் வரை காட்டிய அன்பிற்கும், கடினஉழைப்பின் மதிப்பை அறிவுறுத்தி எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற உறுதுணையாக இருந்த எனதுபெற்றோர்களுக்கும், பொறுமையுடன் எனக்கு ஆதரவளித்த எனது மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதி ஆகியோருக்கும்நன்றி,” எனத் தனது ஃபேஸ்புக் செய்தியில் (https://www.facebook.com/cottalango)  குறிப்பிட்டுள்ளார்.

    திரு. கோட்டலாங்கோ லியோன் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து கோவையில் வளர்ந்தவர்.  பணி ஓய்வு பெற்ற இவரது தாய் திருமதி எல். இராஜம் அம்மையாரும், மறைந்துவிட்ட இவரது தந்தையும் ஆசிரியப்பணி புரிந்தவர்கள். கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள கல்வர் சிட்டி என்ற இடத்தில் வசிக்கும், 44 வயதாகும் திரு. கோட்டலாங்கோ லியோன், கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரி (PSG College of Technology) பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) மேற்படிப்பைத் தொடர்ந்தவர். தற்பொழுது 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தில் மேல்நிலை கணினி மென்பொருள் பொறியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘ட்ரீம் வொர்க்ஸ் இன்டெர்ஆக்டிவ்‘ (Dreamworks Interactive) நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். இந்த ஆண்டின் ஆஸ்கார் தொழில்நுட்ப விருதினைப்பெறும் மற்றொரு இந்தியர் திரு. ராகுல் தாக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ஆஸ்கார் விருதுகளுக்காக வழங்கப்பெறும் ஆஸ்கார் பரிசளிப்பு விழா வரும் பிப்ரவரி 13 அன்றும், பிற விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 28, 2016 அன்றும் நடைபெறவிருக்கிறது.

    திரைப்படத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ள திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    * The Academy Awards for scientific and technical achievements –
    TECHNICAL ACHIEVEMENT AWARDS (ACADEMY CERTIFICATES)

    To J Robert Ray, Cottalango Leon and Sam Richards for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks Itview.

    With an extensive plugin API and comprehensive facility integration including editorial functions, Itview provides an intuitive and flexible creative review environment that can be deployed globally for highly efficient collaboration.

    _______________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:
    https://www.linkedin.com/in/loorthu
    https://www.facebook.com/cottalango
    https://www.youtube.com/user/loorthu1

    தகவல் பெற்ற தளங்கள்:
    ஆஸ்கார் தொழில்நுட்ப விருது பெறும் கோவை பொறியாளர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1439250
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1439546

    Academy to Honor 11 Sci-Tech Achievements
    http://www.animationmagazine.net/vfx/academy-to-honor-11-sci-tech-achievements/

    Oscars: Sci-Tech Winners Unveiled by Academy
    http://www.hollywoodreporter.com/behind-screen/oscars-sci-tech-winners-unveiled-853503

    Indian-Origin Technician Cottalango Leon Wins Oscar
    http://www.ndtv.com/indians-abroad/indian-origin-technician-cottalango-leon-wins-oscar-1269117

    Cottalango Leon, another Indian-origin technician, wins Oscar
    http://timesofindia.indiatimes.com/entertainment/english/hollywood/news/Cottalango-Leon-another-Indian-origin-technician-wins-Oscar/articleshow/50681522.cms

     

    படம் உதவி:
    http://www.ndtv.com/

    _______________________________________________________

    Share
  • பென்டிரைவ்களுக்கான Recycle Bin – iBin

    – எஸ். நித்யலக்ஷ்மி

     

    Create-USB-Flash-Drive-Recycle-Bin-iBin_BIGRecycle Bin பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். நாம் டெலிட் செய்யும் ஃபைல்கள் தற்காலிகமாக இங்கே இருக்கும். நாம் தவறுதலாக டெலிட் செய்யும் ஃபைல்களை இங்கிருந்து எடுத்து விடலாம். ஆனால் பென்டிரைவ் உபயோகிப்பவர்கள் பென்டிரைவ்வில் இருந்து டெலிட் செய்த ஃபைல்களை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென்டிரைவ்களுக்கு Recycle Bin போலச் செயல்படுகிறது.

    முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற ஃபைலை உங்கள் பென்டிரைவ்வில் copy செய்து கொள்ள வேண்டும். இது வெறும் 218kb அளவு கொண்டதுதான். முதன்முதலில் ஒரு ஃபைலை டெலிட் செய்யும் போது iBin உங்கள் பென்டிரைவ்வில் உள்ள கோப்பை டெலிட் செய்து விடவா? அல்லது iBin ஃபோல்டரில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளவா? எனக் கேட்கும். Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென்டிரைவ்வில் iBin என்ற folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென்டிரைவ்களுக்கான Recycle Bin folder. இது உங்கள் பென்டிரைவ்வின் அளவிலிருந்து 10% எடுத்துக் கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் system tray ல் உள்ள iBin icon ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் custom options என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் சென்று உங்களுக்குத் தேவைக்கு ஏற்ப அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன.

    எளிதாக நாம் டெலிட் செய்த ஃபைல்களை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping mgmt என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ஃபைல்களை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும்.

    படம் உதவி: http://blog.premiumusb.com/2011/04/create-recycle-bin-on-usb-flash-drive/

    Share