Month: February 2017

  • கற்றல் ஒரு ஆற்றல் 66

    க. பாலசுப்பிரமணியன்

    வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள்

    education-1

    பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன.

    இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், நீரோட்டங்கள், மற்றும் ஒளி காற்று ஆகியவற்றின் சரியான பங்கீட்டைக் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. பள்ளிக்கட்டிடங்களைக் காட்டும் பொழுதே இந்தக் கருத்தை நிலைப்படுத்தி அதற்கான வடிவமைப்புக்கள் செய்தல் மேன்மையானது.

    இதேபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் இயற்கையைச் சார்ந்ததாகவும் இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும் இருத்தல் அவசியம். தற்போதைய பாடத்திட்டங்களில் இந்தக் கருத்து வலுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை. இயற்கையை பற்றிய கருத்துக்களை கரும்பலகையிலோ அல்லது வெறும் ஒளி-ஒலி காட்சிகளாக மட்டும் காட்டாமல் அதற்கான நேரிடையான உண்மையான அனுபவங்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்தக்  கற்றல் மேன்மையானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் இருக்கும்.

    ஒரு மரத்தையோ அல்லது செடியையோ அல்லது இலை/பூ/ காய்களைப்பற்றியோ கரும்பலகையில் அல்லது படங்கள் மூலமாகக் காட்டப்படுவதைவிட அதன் உண்மையான நேரிடையான அனுபவம் கொடுக்கும் பொழுது கற்றல் உணர்வுபூர்வமாக நிலைப்படுகின்றது. பூக்களின் அசைவுகள், பழங்களின் மணம், காய்-கீரை வகைகளின் உண்மைநிலைகள் வாழ்க்கை கல்விக்கு அடிப்படையாக அமைகின்றன.

    சுவாமி அரவிந்தர் கற்றலின் நோக்கங்களை விளக்கும் பொழுது “கற்றல் எப்பொழுதும் அருகாமையிலிருந்து தொலை தூரத்தை நோக்கிச் செல்லவேண்டும்” என்கிறார். (Learning always happens from Near to Far) ஆகவே லண்டனில் இருக்கின்ற ஒரு மணிக்கூண்டின் பெருமையை அறிந்துகொள்வதைவிட வீட்டிற்கு அருகாமையில் உள்ள மணிக்கூண்டைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது. இந்தத் தேடுதல் கற்றலின் ஆக்கத்தையும் வேகத்தையும் அதிகரிப்பதுமட்டுமின்றி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு எளிதான வழியாக அறியப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இந்தமாதிரியான கற்றலின் போக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் இதர அலைசார் கற்றல் மரபுகள் கற்றலின் போக்கையும் சூழ்நிலைகளையும் வெகுவாக மாற்றியுள்ளன. இந்த மாற்றங்கள் நன்மை பயக்கக்கூசுடியனவா இல்லையா என்பது பற்றிய உலகளாவிய விவாதங்கள் ஆரய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை அடிப்படைகளை வெகுவாக பாதித்தும்  மாற்றியும் விட்டதால் இனி நாம் பின்னோக்கி செல்ல சிறிதளவும் வாய்ப்பில்லை. ஆகவே இந்த மாற்றங்களையும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகளையும் எவ்வாறு காலந்தொட்டு வருகின்ற கற்றல் முறைகளின் நல்லகோட்பாடுகளோடு இணைத்து செயல்பட முடியும் என்பதை பற்றிய சிந்தனைகள் வளம்பெற வேண்டும்.

    கணினி மற்றும் வலைத்தளங்களை சார்ந்த தேடுதல்கள் இப்பொழுது ஐந்து ஆறு வயதிலே ஆரம்பித்தது விட்டன. இந்தத் திறன்கள் குழந்தைகளிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை சிகரங்களை வீழ்த்திக்கொண்டிருக்கின்றது. உண்மையில் இது இந்த வயதிற்குத் தேவையா, அப்படியானால் எவ்வளவு தேவை என்பதை பற்றி சிந்திப்பதற்கு அஞ்சுகின்றோம். இந்த மரபுசாராக் கல்வி முறைகளும் தேடுதல்கள் மூலம் கிடைக்கும் சில அறிவுத்துணுக்குகளும் குழந்தைகளின் உணர்வு நிலைகளில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

    இந்த மாற்றங்கள் அறிவு மற்றும் உணர்வுகளின் திசைகளையும் போக்கையும் வேகத்தையும் தாக்குவதால் பல குழந்தைகளுக்கு இதனால் வயதுக்கு முந்திய முதிர்ச்சி நிலைகள் (Pre-maturation) வருவதை கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக வளரிளம் பருவம் (adolescence) கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளிலிருந்து இருப்பதாக கணிக்கப்பட்டது, தற்போது ஒன்பது வயதிலேயே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு முந்திய முதிர்ச்சிநிலைகள் இப்பொழுது இன்னும் சிறிய வயதிலேயே இருப்பதாக ஆரய்ச்சிகள் தெறிவிக்கின்றன.

    ஆனால் இந்த மாறிய கல்விமுறையால்தான் ஒருவர் சிறப்பான கல்விகற்க முடியுமென்றோ அல்லது அவர்கள் புத்தி கூர்மை சிறைப்படையுமென்றோ வாதிடுதல் சரியானதல்ல. இந்தக் கருவிகள் நிச்சயமாக தேடலின் வளத்தையும் நேரத்தையும் நுணுக்கங்களும் வளமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறோம் எவ்வாறு இவைகளுக்கு நாம் அடிமையாகாமல் இருக்கின்றோம் என்பதையும் கண்காணித்தல் அவசியம். இந்தக் கருவிகளின் பயன்பாட்டால் நம்முடைய மூளையின் சில அற்புதத் திறன்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை மூளைநரம்பியல் வல்லுநர்கள்  உணர்த்தி வருகின்றார்கள்

    (தொடரும் )

    Share
  • மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை

    மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை:

                                             மக்களாட்சியின் உச்சகட்ட கேலிக் கூத்தினை நம் அன்னைத் தமிழகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று இயலாமையில் பெருமூச்சு விடும் சாமானிய மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் கடமை, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது.

                                           சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு கடத்திச் செல்வதும், மிரட்டுவதும், விலை பேசுவதும் உச்சகட்ட கேலிக்கூத்து என்றால், இந்த கேலிக்கூத்தின் ஊற்றுக்கண் என்பது, மக்களின் அறியாமையும், இந்த அறியாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைபேசும் தற்போதைய தேர்தல் நடைமுறையுமே ஆகும். ஊற்றுக்கண்ணில் நஞ்சைப் பாய்ச்ச அனுமதித்துவிட்டு, உச்சாணிக் கொம்பில் நச்சுக்காய் காய்க்கிறதே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.

                                        ஒரு குறிப்பிட்ட தேர்தல் தேதியை அறிவித்து, அந்த நாளில் காலை 7.00 முதல் மாலை 6.00மணி வரை வரிசையில் நின்று ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னால், அரசியல்வாதிகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில், 100% வாக்குப் பதிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.

    மாற்று வழியில் புதிய தேர்தல் நடைமுறை:

                                          ATM ல் பணம் எடுப்பது போல, நியாய விலைக் கடைக்குச் சென்று அரிசி, சர்க்கரை வாங்குவது போல ஓட்டுப் போடுவதும் மிக இயல்பான எளிமையானதாக மாற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலையை மாற்றி, தான் நினைத்த நேரத்தில் தனக்கு வசதியான இடத்தில் ஓட்டுப் போடும் உரிமையை வாக்காளனுக்கு உருவாக்கிக் கொடுத்தால், சர்வ நிச்சயமாக 100% வாக்குகள் பதிவாகும்.

    BIOMETRIC MACHINES:

                                        இதனை சாத்தியமாக்குவதற்கு நம் முன்னர் இருக்கும் எளிய வழிமுறை, BIOMETRIC எனப்படும் கைரேகை பதிவின் மூலம் வாக்களிக்கும் நடைமுறையைக் கொண்டு வருவதாகும். தொடுதிரை(Touch sreen)(ATM machine போல) வசதியுடன் இவை இருக்க வேண்டும் இந்த கைரேகைப் பதிவு இயந்திரத்தை ஒரு MAIN SERVER உடன் இணைக்க வேண்டும். இந்த server தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலோ அல்லது குடியரசுத் தலைவரின் மாளிகையிலோ வைத்து உயர்ந்தபட்ச பாதுகாப்புடன் பராமரிக்கப் படலாம். கைரேகை இயந்திரத்தில் பதியப்படும் தகவல்கள் சர்வரில் உடனுக்குடன் சேமிக்கப்படும்.

                                 இந்த கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்களை அனைத்து ATM நிலையங்களிலும் நிறுவ வேண்டும். மேலும் பேருந்து நிலையங்கள் இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், அரசுப் பொது மருத்துவமனைகள், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவககங்கள், விதை வங்கிகள் மற்றும் முக்கியக் கடை வீதிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நிறுவ வேண்டும்.

                                  சுயமாக இந்த இயந்திரத்தை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் வாக்களிக்க வைக்கலாம்.

    செயல்படுத்தும் விதம்:

                               நடப்பு ஆட்சி, மூன்று ஆண்டு ஒன்பது மாதங்களை நிறைவு செய்ததும், அடுத்த தேர்தலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும், வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம்.

                               அதன் பிறகு பனிரெண்டு மாதங்களுக்கு மக்களுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தான் விருப்பப்படும் நேரத்தில் நாட்டின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும்.

    49 ‘O‘:

                            ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்னும் 49’O’ வாக்குகளை மட்டும் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாக இருந்தால், அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, புதிய வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாய்ப்பளிக்கலாம். இவ்வாறு ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று முறை புதிய புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

    சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்:

                             இந்த ஒரு ஆண்டில் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்பதால், அரசியல் கட்சிகளின் தற்போதைய தேர்தல் பிரசார முறைகள் தோல்வியைத் தழுவும். அவர்களில் உண்மையான செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் மக்களுக்குப் பண விநியோகம் செய்யும் சட்ட விரோத, சமூக விரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போடுவதும் இறந்தவர்களின் ஓட்டுக்களைப் பதிவதும் அடியோடு தடுக்கப்படும்.

    வேட்பாளரைப் பற்றிய தகவல்கள்:

                               வேட்பாளரின் BIO-DATA, தகவல்கள் தொடுதிரை வசதி கொண்ட கைரேகை பதிவு இயந்திரங்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் தேர்தல் வாக்குறுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்களிக்கும் முன் இவற்றை நிதானமாகப் படித்துப் பார்த்து, ஆராய்ந்து வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும்.

                               அனைத்து இந்திய மொழிகளிலும் வேட்பாளர் பற்றிய தகவல்கள் இருப்பதால்,, அண்டை மாநிலங்களின் அரசியல் நிலவரங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் அங்கு இருக்கும் நல்ல திட்டங்களை தங்கள் மாநிலத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப முடியும்.

    தொகுதிகளுக்கு சிறப்பு தகுதிகள்: (SPECIAL STATUS)

                               அதிக விழுக்காடுகள் வாக்குப் பதிவான தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 95% மேல் அதிகமான வாக்குகள் பதிவான தொகுத்களுக்கு சிறப்பு தகுதி (SPECIAL STATUS) வழங்கப்பட வேண்டும். அரசின் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் பூங்காக்கள் ஆகியவை இந்தத் தொகுதிகளில் தொடங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதனால் வாக்கு எண்ணிக்கை விழுக்காடு கணிசமாக உயரும்.

                               தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் விழுக்காட்டை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஆரோக்யமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம்.

    அரசை கலைப்பதற்கும் மக்களுக்கு உரிமை:

                               தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் பெருவாரியான மக்களுக்கு விரோதமாக இருக்கும் சமயத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து , ஆட்சியை திரும்பப் பெறும் வழிமுறைகள் இந்த கைரேகை பதிவு இயந்திரங்கள் மூலம் எளிமையாக்கப்படும்.

                               மாநிலத்தின் முதல்வர் மரணம் போன்ற அசாதாரண சூழல்களிலும், மறுதேர்தல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த முறை மூலம் மக்களே தீர்மானிக்க முடியும். தற்போது நடப்பது போன்ற ஒரு கேலிக்கூத்து எதிர்காலத்தில் நடக்காமல் நிச்சயம் தடுக்க முடியும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(156)

    செண்பக ஜெகதீசன்

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு. (திருக்குறள் -600: ஊக்கமுடைமை) 

    புதுக் கவிதையில்…

    ஊக்கமே ஒருவனுக்கு
    உறுதியான அறிவு,
    ஊக்கமற்றோர்
    வெறும் மரங்களே… 

    உருவிலவர்
    மனிதரைப் போலிருப்பது
    மட்டுமே வேறுபாடு…! 

    குறும்பாவில்…

    ஊக்கமுடைய மனிதர் மட்டுமே
    உறுதியான அறிவுடையோர்,
    ஊக்கமிலார் மனிதவுருவில் மரங்களே…! 

    மரபுக் கவிதையில்…

    ஊக்கம் ஒன்றே ஒருவன்தன்
         -உறுதி யான அறிவாகும்,
    ஊக்க மில்லா மனிதரெல்லாம்
         -ஒன்றும் பயனிலா மரமாவர்,
    நோக்கில் காணும் வேறுபாடு
         -நிற்கு மந்த மரமெல்லாம்
    நோக்க மனிதர் உருவிலேதான்
         -நிற்ப தன்றி வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    ஊக்கமிலாரை மரமெனவே கூறு,
    ஊக்கமே உறுதியான அறிவு, மரமவைதான்
    மனிதவுருவன்றி வேறுபாடில்லை வேறு…! 

    கிராமிய பாணியில்…

    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…
    ஊக்கம் ஒண்ணே மனுசனுக்கு
    உண்மயான அறிவாவும்… 

    ஊக்கமில்லா மனுசரெல்லாம்
    ஒண்ணும் ஓதவாத மரந்தானே,
    மனுசன்போல உருவத்தில மரந்தானே,
    வேறயில்ல வித்தியாசம்… 

    அதால,
    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…!

     

     

     

    Share
  • பள்ளமும் மேடும்!

     -கவியோகி வேதம்

    ஆசைஎன்னும்  பள்ளத்தில்  தெரிந்தே  வீழ்வோம்!
    –ஆத்மாவாம் மேட்டினிலோ  இருட்டைச் சேர்ப்போம்!
    பாசமென்னும்  பள்ளத்தில்  மகிழ்ந்தே பாய்வோம்;
    –பாசங்கள் எதிர்த்தாலோ  அழுதே மாய்வோம்!
    ஓசைமனப் பள்ளத்துள்   ‘த்யானம்’- சேர்ப்பாய்;
    –ஒளியிலங்கே இறைவன்வந்து சிரிப்பான் என்றால்
    வாசம்கொள் அவ்வார்த்தை  கசப்பாய் நிற்கும்;
    –வானவில்லில்  அழகெங்கே? என்றே  கேட்போம்!

    குயில்வந்தே சோம்பலுடன்  காக்கைக் கூட்டில்
    –குறுமுட்டை இட்டுவிட்டே  வாழ்வ தொப்ப
    ஒயிலான   சுகவாழ்வைத்  தேடு கின்றோம்!
    –உலையினில்நீர்  மட்டு(ம்) இட்டால்  பசியா போகும்?
    வெயிலினிலே  வேலைசெய்வோன்  உழைத்த பின்பு
    –வீடுவந்தே  உணவுண்ட  சிரிப்பே தெய்வம்!
    பயில்கின்ற மூதுரைகள்  வாழ்(வு) அச் சாணி!
    –பாதகரின்  பசப்புரைகள் வறுமைக் கேணி!.

    நாகரிகம், விஞ்ஞானம் — கருவி  எல்லாம்
    –நச்சுத்தூள் கலந்துவாழ்வில் பள்ளம்  ஆச்சு!
    நாகரிகக்  கருவிகளை  அளவாய்க் கொண்டால்
    –நல்லதொரு  ‘ சுக’-மேட்டை யாரும் காண்பர்!
    வாகனங்கள் நேரத்தை  மிச்சம் செய்யும்!
    –வக்கணையாய்க் கையாண்டால், வாழ்வே உய்யும்!
    தோகையில்லாப்  பெண்மயிலும் துவள்வ துண்டோ?
    –துள்ளல்கொண்ட  ஆணவம்தான் ஜெயிப்ப துண்டோ?

    பள்ளத்தில்  இறங்கிடினும்  அருவி  நன்மை!
    –பாவத்தில் இறங்கிவிட்ட உயிர்கள் தீமை!
    வெள்ளிமலைப்  பனிமேட்டால் பயனே  இல்லை!
    –வெள்ளமெனக் கருணைவந்தால்  உலகே போற்றும்!
    ’சுள்’எனவே  வரும்கோபம் குணத்தில் பள்ளம்!
    –தூய்மையெனும் மனமேடோ வாழ்வு யர்த்தும்!
    ‘வள்’ என்றே  விழும்செல்வர்  சுமைப்பள்  ளம்தான்!
    –வள்ளலெனும்  பணமேடோ   வைரப் பள்ளம்!

     

     

     

    Share
  • மாற்றம் – பகுதி 2

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    “திருப்புகழ்” எங்கள் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகழும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ்மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புதமாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

    அந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும்பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவான முறையில் வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது. யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது? அதுதான் இறைவனின் திருவருள்! அருணகிரியாரின் மாற்றம் அவருக்கு மட்டும் பயன்பட்டதா? இல்லவே இல்லை! யாவருக்கும் பயன்பட்டது. அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு – கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன. நாளும்பொழுதும் கோவில்கள்தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன். பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

    “நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே
    எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே” – என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன்வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையே மாற்றினார்.

    மாற்றம் பெற்றதன் விளைவால்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தழைத்து நிற்கவும் முடிகிறது எனலாம். தான் மாறியது மட்டுமன்றி – மற்றவர் மனங்களிலும் நல்ல சமயமாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.

    புராணங்களையும், இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படிப் பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார். பெரிய புராணத்தை யாவரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார். கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார். சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார். நாவலர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான்.

    சம்பந்தரும் அப்பரும் கோவில்கள்தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல – நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனத்தில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

    நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் – கந்தபுராணக் கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

    எம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும், சமயவளர்ச்சியிலும் செலுத்தினார். ஊரெல்லாம் சென்றார். இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதானம் பற்றியும் எடுத்துச் சொன்னார். சொன்னதோடு நின்றுவிடாமல் – நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.

    தேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார். அவரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான். கோவில்கள் காந்தசக்தி மிக்கன. யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார். இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.

    இன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி – உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்றனர். அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர். பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்.

    ”பொழுது” என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும். பொழுதைப் பொருத்தமான முறையில், பயன்தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் – எமது மனம், சிந்தனை, செயற்பாடு யாவுமே தடம் புரண்டே போய்விடும். இங்கெல்லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின்றோமேயன்றி பயனுடையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும். கேளிக்கைகளும், களிப்பாட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

    “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பதை யாவரும் அறிவோம். அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழலாம். விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது. நாகரிகம், பண்பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத்துக்கே உரியன. இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.

    இதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை.  ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.

    எதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது. நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது. அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுத்திவிடலாம்.

    பயப்படாதீர்கள்! இன்று – உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள்! என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா! சற்று நின்று நிதானியுங்கள்! சஞ்சலங்கள் மிகுந்து விட்டதா? நித்திரையும் வர மறுக்கின்றதா? எல்லாமே வெறுமையாகத் தோன்றுகிறதா?

    இவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா? நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா? யாவற்றுக்கும் – நல்ல மருந்தும், மாற்று வழியும் உங்கள் அருகிலேயே இருக்கிறது. அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா? நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப் பெருமையை அறியவில்லை. அதனை நாடவில்லை! தேடி ஓடவில்லை!

    கவலைப்படாதீர்கள்! அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்றுத் தூரத்திலோ அமைந்திருக்கும் ” கோவில்கள்” தான். கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் ” சாந்திநிலையம். ” அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவில்கள்தான்.

    கோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்; சஞ்சலங்கள் மறைந்துவிடும்; மூர்க்க குணங்கள் அடங்கிவிடும். மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும். தாய்மை உணர்வு உருவாகும். தாழ்மை உணர்வு ஏற்படும். சகோதரத்துவம் வந்துவிடும். உயர்வு தாழ்வு ஓடிவிடும். போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும். போலிக் கெளரவம் பொசுங்கிவிடும். மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும். அமைதி தானாய்வந்து நிற்கும். அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.

    இந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும். மாறிவிடுவதை உணருகின்ற வேளை – எம்முள் இன்பவெள்ளம் பாயும். அதுதான் இறைவனின் பெருங் கருணை. இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஶ்ண பரமஹம்சர் அடைந்தார் என அறிகிறோம்.

    “தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!” இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா? மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து – தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.

    இன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே – அனைவரும் வாருங்கள்! கோவிலுக்குச் செல்லுவோம்! மனம் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து கோவிலில் தானிருக்கிறது. ஆலயத்தைத் தொழுவோம்! ஆண்டவனை நினைப்போம்! சமயவழியில் செல்லுவோம்! மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும். மாற்றம் என்பது நடந்தே தீரும்! அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவையாகும். அதனைத் தந்தது சமயமும் கோவில்களும்தான். இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமேயாகும்.

    (முற்றும்)

    Share
  • சுமையும் சுகமும்!

    -கவியோகி வேதம்

    பாடச்  சுமைகள் அழுத்திய  போது
    –பள்ளி வாழ்க்கை கசந்ததே!
    தேடி அதனால்  வேலை வந்ததும்
    –தேன்போல் சுகமாய் இனித்ததே!

    முயல்க  முயல்க முன்னேறு என்கையில்
    –மூச்சும்  சுமையாய்ப் போனதே!
    முயற்சி வெற்றியும் பணமும் குவித்ததில்
    –மொத்தமும் சுகமாய் ஆனதே!

    வயிற்றில் பலரும்  ஏய்த்தே அடித்ததில்
    –வாழ்வே  சுமையாய் மாறிற்றே!
    மயிலாய் நல்லோர்  வந்தே  அணைக்க
    –மனதும் சுகத்தில்  தேறிற்றே!

    திருமணம்  வேண்டாம்  என்றே ஒதுங்கினேன்!
    –தேவையும்  குறைந்தே இனித்ததே!
    உறவுகள் நெருக்க  ஒருத்தியைத் தேடினேன்;
    –உலகே   சுமைபோல்  கசந்ததே!

    விதியின்  சுமையை  நினைத்தே  ஓடினேன்!
    –விரக்தியும்  என்னை   அணைந்ததே!
    மதிகொள்  குருஎன்னைப் பார்த்ததும்  ‘ தெய்வமே’
    –மனத்துள் சுகமாய் இணைந்ததே!!

     

     

     

    Share
  • காதலெனும்  சோலை 

     -ரா.பார்த்தசாரதி

    காதலெனும்  சோலையிலே  கண்டடெடுத்த  ரோஜாவே
    காதலனிடம்  காதலை  வெளிப்படுத்திய  ரோஜாவே
    காதலெனும்  போதையிலே  கண் மயங்கும் ராஜாவே
    என் மனதை கவர்ந்திடும்   இனிய  ராஜாவே!

    காதலெனும் சோலையில்  கானக்குயில் பாடுதே
    ஆதியும் அந்தமுமில்லாமல்  அமரகீதம் பாடிடுதே
    வண்ணமலர்கள் மனதை தென்றல் வாரி வீசிடுதே
    கடலாகிய  அலைதன்னில் கவிதை பாடி ஓடிடுதே!

    உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்  போதினிலே
    கொள்ளும் இன்பமே  சொர்க்கம் வாழ்வினிலே
    கொஞ்சும்  சோலைக்குருவி  சொந்தம் பேசுமே
    குறைவில்லாமலே  எல்லா இன்பமும் தருமே!

    இரு இதயங்கள்  இவ்வுலகில்  ஒன்றாகி
    என்றும் அழியாமல்   காதலாகிக்  கசிந்துருகி
    கண் மூடும் வேளையிலே கலை என்ன கலையோ
    கண்ணே உன் பேரழகிற்கு உலகம் தரும் விலையோ !

    உன்னை நினைத்தாலே என் மனம் காதல்கீதம் பாடிடுமே
    உன் மதிமுகம் இரவினிலே நன்கு தெரிந்திடுமே
    உன்னிடத்தில் என் இதயத்தை தந்துவிட்டேனே
    காதலியே
    என் இதயத்தைப் பாவை நீயும் எடுத்துச்
    சென்றுவிட்டாயே!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 99-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காளையைத் தொழுதுநிற்கும் காளையைத் தன் படப்பெட்டிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. ராஜ்குமார். இந்த அழகிய படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி!

    bull

    காளையொடு தமிழருக்குள்ள நெருங்கிய தொடர்பு பன்னூறாண்டுகள் கடந்த பழமையானது. மாடுகளே தமிழரின் தலையாயச் செல்வமாய்த் திகழ்ந்தகாலம் அது!

    இன்றோ (தமிழ்)நாட்டுமாடுகளை முற்றாய் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்நியநாட்டைச் சேர்ந்த அமைப்புகள் சில, தம்மை மிருகவதைத் தடுப்பாளர்கள்(!) என்று அழைத்துக்கொள்ளும் நகைமுரணைக் காணவேண்டிய சூழல் நமக்கு.

    அது கிடக்க.

    இரண்டு காளைகளை ஒருங்கே கொண்ட இந்தப் படத்தைக் கண்ட நம் கவிஞர்கள் தம் கற்பனைகளை எவ்வாறு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

    ***

    உழவர் பெருமையை உயரத்தில் ஏற்றிய உன்னதக் காளையைப் போற்றிப் பாடியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காளையே…!

    மானம் காக்கும் காளையிது
    மாணவர் சக்தியைக் காட்டியது,
    சேனையாய்க் காளையர் கூடிவந்தே
    செயித்துக் காட்டும் காளையிது,
    வானம் பொழியும் பூமியிலே
    வளத்தைப் பெருக்கும் காளையிது,
    கோனெ உழவர் தரத்தினையே
    கோபுரம் ஏற்றிடும் காளையிதே…!

    ***

    ”வீரமறவன் ஆரத்தழுவிட அன்பில் நெகிழ்ந்த காளையும் பசுவான மாயமென்ன! குடும்பம் தழைக்க உழைக்கும் காளையரும், உழவன் பிழைக்க உழைக்கும் காளைகளும் உலகில் தோன்றிய ஒப்பிலா உயிரினங்கள்!” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நேயம் மனிதன் நட்பைச் சொல்லும் நிழற்படம்!
    அன்பின் பெருமையை நமக்கு
    உணர்த்தும் அற்புதப் பாடம்! ஈசன் ஏறிய வாகனம்!
    இருந்தும் இல்லை தலைக்கனம்!
    காளை உழைப்பின் இலக்கணம் !
    உயிரினம் எல்லாம் ஒன்றெனச்
    சொல்லும் இனிய தருணம்!
    மனித நேயத்தின் அழகான காட்சி இது!
    தமிழரின் அன்பை உணர்த்தும்
    சாட்சி இது!
    காளையை தெய்வமாய்
    தொழுபவன் தமிழன்!
    தமிழனை, தோழனாய்
    நினைப்பது காளை!
    இவர்களை பிரிக்க நினைத்தது
    சில வீணர்களின் வேலை!
    அற வழி இணைந்தனர் இளைய தலை முறை!
    அரும்பாடு பட்டு மீட்டனர்!
    சல்லிக்கட்டெனும் ஏறு தழுவலை !

    ஏறு தழுவுதலை இப்படியும்
    கொள்ளலாமோ?
    வீர மறவனின் அரவணைப்பில்
    காளை மயங்கி நிற்கிறதே!
    முரட்டுக் காளை கூட பசுவாய்
    மாறியது எப்படி?
    அன்பிற்கு எத்தனை வலிமை!
    ஆண் மகனும் அப்படித்தான்!
    அன்பிற்கு ஆட்படுவான்!
    அடக்க நினைத்தால்!
    வீறு கொண்டெழுவான் !
    காளையின் மனமறிந்த
    காளை இவன்!
    குடும்பத்தை காத்திருக்க
    இறைவன் அனுப்பிய தூதன்!
    உடல், பொருள், ஆவி
    அத்தனையும் தந்திடுவான் !
    மனைவி, மக்கள் மகிழ்ந்திருக்க
    மாடாய் உழைத்திடுவான் !
    ஒளியை தருவதற்கு
    மெழுகாய் கரைந்திடுவான் !
    தனக்கென வாழா உயிரினம்
    இரண்டுக்கும் உண்டு புகழிடம்!

    ***

    ”உன் கொம்பைப் பிடிக்கவரும் இளைஞரிடம் உன் தெம்பைக் காட்டு! உன் வாலைப் பற்றினால் வால்பிடிக்கும் வாழ்க்கை வேண்டாமென்று உன் காலால் எட்டியுதைத்து உணர்த்து!” எனச் சல்லிக்கட்டில் கட்டிளங் காளையரோடு மல்லுக்கட்டவிருக்கும் காளைக்கு வீரவுரை பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:

    அடங்காத காளையேநீ!
    ***அடங்காதே யாருக்கும்!
    நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
    ***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!

    வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
    ***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
    கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
    ***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!

    அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
    ***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
    உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
    ***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!

    மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
    ***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
    ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
    ***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!

    களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
    ***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
    வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
    ***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!

    பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
    ***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
    சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
    ***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!

    விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
    ***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
    நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
    ***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!

    ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
    ***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
    அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
    ***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!

    பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
    ***விளையாட்டில் குற்றமென்று..
    கூறும் கயவர்களை யினியுன்
    ***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!

    சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
    ***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
    வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
    ***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!

    தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
    ***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
    தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
    ***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

    ***

    சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டுத் தடைக்கெதிரான  மக்கள் எழுச்சி, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக் கவிதைகளிலும் எதிரொலிக்கக் காண்கின்றேன்.

    அடுத்து வருவது, இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் சிறந்ததெனத் தேர்வாகியிருக்கும் கவிதை…

    ஊறு விளைவிக்கும் கயவர் செய்கையால்,
    ஆறு கைநழுவி உழவு பொய்த்தாலும்,
    ஏறு தழுவும் நம் இதய உரிமையை,
    வேறு பணிமறந்து வீதியில் திரண்டு,
    நூறு தடைதகர்த்த வீரரில் ஒருவன்,
    நீறு தவழும் திருமுகத்துடன் வரவே,
    சீறும் குணம் மறந்து காளையும் நன்றி
    கூறும் காட்சியை உலகுக்குக் காட்டும்,
    பேறு பெற்றதே இந்தப் புகைப்படம்!

    தமிழகத்துக்கு ஊறுசெய்வதையே தம் தொழிலாகக் கொண்ட கயவரின் செய்கையால் காவிரியால் புரக்கப்பட்ட தமிழ்நாடு இன்று கையற்று நிற்கின்ற சூழலிலும், ஏறுதழுவும் நம் மரபுரிமையை  அறப்போரிட்டு மீட்டிருக்கிறார்கள் வேறுபணி மறந்து வெள்ளமெனத் திரண்ட எழுச்சி வீரர்கள். அத்தகு வீரர்களில் ஒருவன் நீறுதவழும் முகத்தோடு எதிர்வரவே, சீறும் குணங்கொண்ட காளையும் அவனைத் தழுவி நன்றி நவில்கின்றது” எனும் அழகிய கற்பனையைக் கச்சிதமாய்க் கவிதையில் ஏற்றியிருக்கும் திரு. சச்சிதானந்தத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன்.

     

    Share
  • இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது

     

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://youtu.be/iz80BJVDlAM

    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    Image result for Aryabhata Satellite

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    isro-achievement-1

    [Click to Enlarge]

    புவிச்சுற்று இணையியக்க ஏவு வாகனப் பூத ராக்கெட்  [Geosynchronous Launch Vehicle , GSLV Mk III Rocket] பயன்பாடுகள், பெருத்த பளுவுள்ள துணைக் கோள் அன்னிய டாலர் நாணய மாற்று நிதிச் [Foreign Exchange] சேர்ப்பைப் பேரளவு தரும். இப்போது விண்வெளி ஆணையகம் 4 டன் எடை தூக்கும் கனமான ராக்கெட் [GSLV Mk III] 2017 ஜனவரியில் முதன்முதல் இயங்கப் போகிறது.

    ஏ. எஸ். கிரண் குமார் [Indian Space Research Organization Chairman]

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் முதன்மையான சாதனை

    2017 பிப்ரவரி 15 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் ஒரே ஏவுகணை மூலம் 104 துணைக்கோள்களைச் சுமந்து சென்று, சிக்கனச் செலவில் பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக விட்டு வந்துள்ளது. ஏவுகணை தென்னிந்திய கிழக்குக் கடற்கரை ஊர் ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.  இந்த வெற்றிக்குக் காரணமான ஏவுகணைச் சாதனம் துருவத் துணைக்கோள் ஏவுகணைச் சாதனம் [Polar Satellite Launch Vehicle (PSLV)] என்று அழைக்கப் படுகிறது.  அன்று காலை 9:28 மணிக்கு ஏவப்பட்டு வேகம் மணிக்கு 16,777 மைல் [27,000 கி.மீ.] பயணத்தில் 104 துணைக்கோள்களைச் சுமந்து 30 நிமிடங்களில் புவிச்சுற்றுப் பாதையில் திட்டப்படி இட்டதாக அறியப்படுகிறது.

    Image result for India puts record 104 satellites into orbit

    ஏவுகணையின் பிரதான தூக்குப் பளு [Payload] : 714 kg எடையுள்ள புவி நோக்குத் துணைக்கோள், மற்றும் 664 kg எடையுள்ள 103 சின்னஞ்சிறு [Nano] துணைக்கோள்களில் 96 எண்ணிக்கை இஸ்ரேல், காஜக்ஸ்தான், சுவிட்ஜர்லாந்து, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.  அவற்றில் 90 துணைக்கோள்கள் அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ நகரைச் சார்ந்த விண்கோள் கம்பேனிக்கு [Planet Inc] உரியவை. மூன்று துணைக்கோள்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

    2015 ஆண்டில் “பாரத விண்பணிக் குதிரை” [India’s Space Work Horse] எனப்படும் துருவத் துணைக் கோள் ஏவுகணை  [PSLV]  தனது 39 ஆவது பயண வெற்றியாக முதன்முதல் 23 துணைக் கோள்களைச் சுமந்து சென்றது.  இந்த 2017 ஆண்டு இந்திய வெற்றித் துணைக்கோள் முதன்மைப் பயணம், 2014 ஜூனில் ரஷ்ய ஏவுகணை தூக்கிச் சென்ற 39 துணைக்கோள் பயணத்தை விடப் பன்மடங்கு மிஞ்சியுள்ளது.

    isro-launch-site

    இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள் சிக்கனச் செலவில் சிறப்பாகச் செய்து முடிக்கப்படுகின்றன.  உதாரணமாக 2013 ஆண்டில் இந்தியா செந்நிறக் கோள் செவ்வாயிக்கு அனுப்பிய விண்ணுளவிக்கு நிதிச் செலவு வெறும் 73 மில்லியன் டாலர்.  அதே செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க நாசா மேவன் விண்ணுளவிக்குச் [NASA MAVEN Mars Mission] செய்த நிதிச் செலவு : 671 மில்லியன் டாலர் [சுமார் 9 மடங்கு மிகை]. இத்தகையச் சிக்கனச் செலவில் இப்போது இந்திய விண்வெளி ஆய்வகம் அடுத்து பூதக்கோள் வியாழன், சூட்டுக்கோள் சுக்கிரன் [வெள்ளி] [Venus] ஆகிய இரண்டையும் நோக்கி நெடும் பயணம் துவங்கப் போகிறது.

    isro-achievement

    ஐரோப்ப, அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் தம்தம் துணைக்கோள்களை அனுப்பும் வினைகளை இந்திய விண்வெளி ஆய்வகம் சிக்கனச் செலவில், நம்பத்தக்க நிலையில் திட்டப்படி முடித்துக் காட்டுகிறது. அதனால் அன்னிய நாணய மாற்று டாலர் நிதி இந்தியா தனது விண்வெளித் தேடல் பணிகளில் ஆண்டுதோறும் சம்பாதிக்கிறது.

    அபாய நிற்பு உந்து எஞ்சின் [Scramjet Engine] சூழ்வெளி ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு எரித்திரவத்தை எரித்து ஏவு ஆற்றல் உண்டாக்கும். அதனால் ராக்கெட்டின் சுயப்பளு குறைகிறது.  அதே சமயம் ராக்கெட் தூக்கிச் செல்லும் பளு மிகையாகக் கூடுகிறது.  அதனால்  ராக்கெட் தயாரிப்புச் செலவும் பேரளவு குறைகிறது.  அன்னிய நாடுகளின் துணைக் கோள்களைக் குறைந்த செலவில் ஏவிச் செல்ல இந்தியா விண்வெளி ஆணையகத்துக்கு ஏதுவாகிறது.

    கே. சிவன் [ஆளுநர்,  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]

     

    indian-rockets

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் துணிகர முயற்சி

    2016 ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்துக்கு [ISRO – Indian Space Research Organization] பேரதிர்ஷ்டப் பொறிநுணுக்கச் சாதனை வெற்றி பெற்ற வருடமாகக் கருதப்படும்.  ஒரே சமயத்தில் ஒரே இந்திய ஏவுகணையில் 20 துணைக்கோள்கள் ஒரே பாதையில் சுற்ற ஏவப்பட்டன ! அத்துடன் முதன்முதல் “மீள்பயன்பாடு ஏவுகணை வாகனம்” [Reusable Launch Vehicle (RLV)]  & “அபாய நிற்பு உந்து எஞ்சின்” [Scramjet Engine] பயன்படுத்தப் பட்டன.  ஆக மொத்தம் 33 துணைக்கோள்கள் இந்திய ஏவுகணைகளில் ஏவப்பட்டன.  அவற்றில் 22 துணைக்கோள்கள் அயல் நாடுகளைச் சேர்ந்தவை. 11 துணைக்கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை.  அவற்றால் இந்தியாவுக்கு வருமானம் : 500 கோடி ரூபாய் [73 மில்லியன் டாலர்]. அயல் நாடுகளின் அடுத்து ஓர் ஆணை [Order] மேலும் 500 கோடி ரூபாய் வரவுக்கு வந்திருக்கிறது.  அகில நாட்டுத் துணைக்கோள்கள் எதிர்கால ஏவு நிதி மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் ! அதில் பன்முறை எரிப்பு நுணுக்கம் [Multi-burn Technology] பயன்படுத்தும் இந்தியாவுக்குப் பங்கெடுத்துக் கொள்ள பெரு வாய்ப்பு உள்ளது.

    Image result for Astrosat

    2017 முதல் காலாண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம், முதன்முறையாக ஒரே ராக்கெட் ஏவுதலில் 104 துணைக்கோள்களைத் தூக்கிக் கொண்டு ஓரிரு சுற்றுப் பாதைகளில் ஒரே சமயத்தில் இறக்கி விடப் போகிறது !  இதுவரை எந்த மேனாடும் இத்துணிகர முயற்சியைச் செய்து காட்டியதில்லை.  இந்திய விண்வெளி வல்லுநருக்கு இவ்வாறு பற்பலத் துணைக்கோள்களை ஒரே ராக்கெட் ஏவுதலில் நல்ல அனுபவம் உள்ளது.  கடந்த ஓராண்டாகப் பன்முறைச் செய்து காட்டிய பயிற்சிதான் இந்தச் சாதனை முயற்சிக்கு அடிகோலியது.  2017 ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக கனமான புவிச்சுற்று இணையியக்கத் துணைக்கோள் [Geosynchronous Satellite]  அனுப்ப பூத ராக்கெட் [Geosatellite Launch Vehicle (GSLV Mk III)] சோதிக்கப்படப் போகிறது.  அது 4 டன் பளு தூக்கும் ஆற்றல் உள்ளது.  அந்த ராக்கெட்தான் 2017 ஆண்டில் முதன்முறை 83 துணைக் கோள்களைச் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு

    உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப் படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை.  நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை

    அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின.  இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது.  1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார்.  அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது.  பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல் வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர்.  மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

    Image result for India puts record 104 satellites into orbit

    பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!  இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.

    Image result for Astrosat Satellite

    Image result for Astrosat Satellite

    ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்

    அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.  முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

    இதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!

    செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

    1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

    குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவு கின்றன.  சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.

    Image result for India puts record 104 satellites into orbit

    அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்ற வற்றையும் கண்காணிக்க உதவுகிறது.  2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்!  மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

    Image result for Aryabhata Satellite

    +++++++++++++++++++

    (தொடரும்)

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program : Wikipedia WebSite
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
    12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]

    13. http://www.spacedaily.com/reports/ISROs_World_record_bid_Launching_83_satellites_on_single_rocket_999.html#ifrndnloc  [November 2, 2016]

    14. http://www.spacedaily.com/reports/India_achieves_advances_multiple_space_systems_in_2016_999.html  [December 23, 2016]

    15. http://www.spacedaily.com/reports/ISRO_Creates_World_Record_PSLV_Takes_Off_With_104_Satellites_999.html  [February 15, 2017]

    16. http://www.atimes.com/article/india-puts-record-104-satellites-orbit/  [February 15, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  February 18, 2017 [R-2]

    Attachments area
    Preview YouTube video India Puts Record 104 Satellites Into Orbit, Meizu M5s Launched, and More (Feb 15, 2017)

    India Puts Record 104 Satellites Into Orbit, Meizu M5s Launched, and More (Feb 15, 2017)
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஏகதெய்வம் கண்ணனவர், ஏரார்ந்தக் கண்ணியின்
    பாகவதத் தாம்பில் பிணைப்புற்ற, -ராகமொன்று,
    தாளங்கள் வேறாய், தவகோ பியர்களுடன்
    நீல யமுனா நதி”….கிரேசி மோகன்….!

    Share
  • அப்பாவி பொதுசனத்தின் புலம்பல்!

    பவள சங்கரி

    பிரகாசம் ரெட்டி, குமாரசாமி ராஜா, காமராசர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்றோர் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி தேவையா? எந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆட்சி? திராவிடர் நல்வாழ்விற்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியின் நிலை என்ன? காமராசர் ஆறாம் வகுப்பு படித்தவர்தான். கல்விக் கண்ணை திறந்துவைத்தார். ஆனால் பதினோறாம் வகுப்பு படித்துள்ள நமது கல்வியமைச்சர் நீட் தேர்வுகளிலும், தொழில்நுட்பத் துறை, சி.பிஎஸ்,சி யிலும் என்ன கொள்கை முடிவு எடுத்து செயல்படப் போகிறார்? கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதூதில் இரண்டு அணைகள் கட்டுவதற்காக 5000 கோடி பணம் ஒதுக்கி பணியைத் துவங்கிவிட்டனர். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். கொங்கு பிரதேசத்தின் முதுகெலும்பான பவானியில் கேரள அரசு அணை கட்டுகிறது. பொதுப்பணித் துறையையும் கவனித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார். தங்கள் பதவியைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கப்போகிறார்களா? தமிழகத்தின் நலனில் சிறுதுளியேனும் அக்கறை கொள்வார்களா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ’’நீர்கீரிப் பிள்ளை(OTTER) நிமிர்ந்துதன் பிள்ளைக்காய்,
    சார்கூறிக் கேட்டு சலாமிட(கும்பிட) , -தார்கரி
    வண்ணனை, கீரிக்கும் வாத்சல் யம்காட்டும்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 36

    மீனாட்சி பாலகணேஷ்

     

    அடியவரின் ஆவலான கேள்விகள்!

    குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ஆடுதல் எனப்பட்டது. இந்த ஒலியை எழுப்பும் பருவமே செங்கீரையாடும் பருவம் எனவும் கூறலாம்.

    amee
    ‘ங்க்கா’ ‘ங்க்கு’ என நீரொழுகும் வாயைத்திறந்தும், பேசுவதனைப்போல் தலையை ஆட்டியபடியும், உற்சாகத்தில் குழந்தை தவழ்ந்தாடும். இதனைக் கண்ட தாயும் மற்றவர்களும் அக்குழந்தை எதனையோ பேச முயல்வதாகக் கருதி மகிழ்வார்கள். தாய் தலையசைத்துப் பேசுவதனைப்போலத் தானும் செய்ய முனையும்; முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இதனைப் ‘போலச்செய்தல்,’ எனக் குறிப்பிடுவார்கள் என்கிறார்.

    தாய் குழந்தையிடம் உரையாடுவது போன்றுஅடியார்கள் குழந்தை வடிவாகத் தாம் காணும் அன்னை தெய்வத்திடம் வரம் கேட்கிறார்கள். இதனைத் தாய் உளவியல் அல்லது அடியார்களாகிய மானிடர்களின் உளவியல் எனலாம். எப்போதுமே சிறுகுழந்தையை தெய்வவடிவாகக் காண்பது இந்தியப் பாரம்பரிய எண்ணம். அதிலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் பாடும்போது, தமது எல்லையற்ற அன்பை அக்குழந்தைமீது சொரிந்தும், தமது துன்பங்களைத் துடைக்கும் பரம்பொருளாக அத்தெய்வக்குழந்தையைக் கண்டு வேண்டுவதாகவும் பாடுவார்கள். தெய்வம் ஒன்றே நமது பிறவித்துயரைத் துடைக்கவல்லது என்பது இந்துக்கள் தீவிரமாக நம்பும் ஒரு கருத்து. அத்தெய்வத்தைக் குழந்தையாக்கி வழிபடும்போதிலும் பிறவித்துயரைத் துடைக்கவேண்டுவார்கள். இந்த உளவியல் கோட்பாட்டினை ஒற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களில் சில பருவங்களில் பாடல்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது.

    கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் எழுதியுள்ள சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டினை நாம் இங்கு காணப்போகிறோம்.

    பெண்மகவு தனது வாயில் தேன்போலும் உமிழ்நீர் ஒழுக, தவழ்ந்தாடி வருகிறாள். “என்னிடம் ஓடிவா தாயே!” என அன்புமீதூர அழைக்கும் தாயினிடம் ஓடோடிச் செல்கின்றாள். நிமிர்ந்து தாயை நோக்கும் தலை; ஆசையும் அன்பும் பாசமும் பெருகத் தாய் (அடியார்) தனது குழந்தையை நோக்குகிறாள். அன்னை பராசக்தியே அங்கு அவள் கண்களுக்கு குழந்தையாகத் தென்படுகிறாள். பக்தியினால் புளகாங்கிதமுற்ற (அடியாரெனும்) அன்னை கேட்கிறாள்:

    “நான் உனது அடியவள்; நீயே எனக்கு எல்லாம் என இருப்பவள்; ஆகவே, என்னை இனிமேலும் அன்னையர் வயிறாகிய பிறவிச்சேற்றினில் (அளறு- சேறு) திரும்பத் திரும்பப் பிறக்குமாறு செய்வாயா? எண்ணுதற்கு அரிய துயரங்களை எமக்களித்து பிறப்பு எனும் தண்டனையை எமக்குக் கொடுப்பாயா? எம் உடலில் பொருந்தியிருந்து மாறிமாறி எம்மை மயக்கும் ஐம்பொறிகள் காட்டும் வழியில் உழலுமாறு எம்மைச் செய்து விடுவாயா? பெண், பொன், மண் எனும் மூவாசைகள் (வேடணைகள்) எம்மை விடாமல் தொடர்ந்து வந்து துயர்செய்ய விடுவாயோ? உன்னுடைய மலரடிகளைப் பணிகின்ற அன்பில்லாதவர்களின் குழுவில் நாங்களும் சேர்ந்துநின்று உன்னையே மறந்துவிடச் செய்குவையோ?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்(ள்). ‘இவ்வாறெல்லாம் எம்மைச் செய்துவிடாதே,’ எனும் ஆதங்கம் இவ்வடிகளில் தொனிப்பதனைக் காணலாம்.

    ஒரு ஆதங்கத்தில், பக்திப்பெருக்கில், இவ்வாறு வினவிய தாய், பின்னர் இது வாய்திறந்து மறுமொழி உரைக்க இயலாத சிறுகுழந்தை என (ஒரு தாயின் போக்கில்) உணர்ந்து குழந்தையின் தலையசைப்பையே தனக்கு அது கூறும் மறுமொழியாகக் கருதுகிறாள். அதற்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள்.

    “நான் கேட்கும் இந்த வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறையாக விடைதருவது போல (அதாவது ‘இல்லை இல்லை! இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்’ எனக்கூறுவது போல) உனது தலையை (சென்னியை) இருபுறமும் அசைத்து, எனதன்னையே! நீ செங்கீரையாடி வருவாயாக!” என வேண்டி உள்ளம் கசிந்து பாடுகிறார். கேட்கவே இனிமையாக இல்லையா? உள்ளம் உருகவில்லையா?
    குழந்தையும் தாய் தன்னிடம் ஏதோ கேட்பதைக் கண்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. தாயின் உடலும் உள்ளமும் மறுமொழி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறன.

    இன்னுமுன் அடியரெமை அன்னையர் வயிற்றளறில்
    இருமென்று புகவிடுவையோ?
    எண்ணுதற் கரியதுயர் பண்ணிவெளி வருபிறப்
    பென்றதண் டனையிடுவையோ!
    மன்னிநின் றெமைமாறி மாறிமயல் செய்பொறிகள்
    வழியிலே உழல்விப்பையோ?
    மாதர்பொன் மண்ணென்ற வேடணைகள் வீடாது
    வந்துதுயர் செயவிடுவையோ?
    நின்மலர்த் தாள்பரவு மன்னுமன் பிலர்குழுவில்
    நின்றுனை மறப்பிப்பையோ?
    நீதயை புரிந்துமொழி கெனும்வினா வுக்கெதிர்
    நிகழ்த்திமறை விடைவிடுதல்போற்
    சென்னியிரு புறமசைத் தென்னவென் னன்னையொரு
    செங்கீரை யாடியருளே!
    சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
    செங்கீரை யாடியருளே!

    (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

    ame2
    இதற்கு சைவசித்தாந்த அருளாளர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார்: அவருடைய சொற்களிலேயே அதனைக் காண்போமே! :: சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல், கருவி, உலகு, போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பு- இறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணைவேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான். சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக்குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்.

    ஆசையுடன் அருமையாகப் பெற்றெடுத்த தன் குழந்தையே தாய்க்குப் பெரும் செல்வம். அக்குழந்தையைத் தனது தவப்பயனாகவும், குலதெய்வமாகவும், தன்னை வாழவைக்க வந்த பரம்பொருளாகவும், தனது உயிர் என்றும், கண் என்றும், கண்ணின் ஒளி எனவும், தான் பெற்ற பெருஞ்செல்வம் என்றும், தன்னைப்பெற்ற தாயாகவும் போற்றிக் கொண்டாடுவாள் அன்னை.

    இந்த உளக்கருத்தில் இவ்வுத்தியை தாயின் நிலையில் நின்று கவிஞர் கையாண்டு அழகுறப்பாடுகிறார்:

    “முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் குழு தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருந்தது; அப்போது அங்குசென்று அவர்களிடையே ஒரு துரும்பை நட்டு அவர்களுடைய அகந்தையை அழித்தானே அந்தச் சிவபிரான்தான் உனது மேனியின் ஒரு பாகத்தைக் கொண்டவனோ தாயே? அவனுடைய அருள் என விளங்கும் குணமும் நீயேதானோ?*

    (* ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்,’ எனும் திருமந்திர வரிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஒன்றேயான பரம்பொரும் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டு இரண்டாகி, அவனது அருளாகி, சக்தி எனும் பெயரும் வடிவும் கொண்டு நிற்கின்றதாம்)

    “என்றென்றுமே, பிறப்பு, இறப்பு, இவை தொடர்பான மலங்கள் முதலியன இல்லாமலிருத்தல் என்பதுதான் உமது இயல்போ? எண்ணிறந்த சராசரங்களாகிய உலகங்களை ஈன்றெடுத்து அவற்றில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீ இனிய நற்கதியைத் தருவீர் அல்லவோ?

    ame
    “உனது திருக்கோவிலில் நின்று கண்ணில் காணும் காட்சியாக உன்னைத்தொழுது வணங்கும் எளிய அடியாருக்கும் நீ அருளுவது உன்னுடைய வழக்கம் அல்லவா? இங்ஙனம் எல்லாம் அருளி எம்மை நீ எப்போதும் வாழ்விப்பாயா என நாங்கள் விருப்பமுற்றுக் கேட்டு நிற்கிறோம். ‘ஆம்’ எனும் விடை வழங்கும் முகமாக நீ உனது திருமுகத்தினை அசைத்து எங்களுக்குக் குறிப்புணர்த்தியபடி செங்கீரையாடியருள்வாயாக! (சென்ற பாடலில் எதிர்மறை விடையினை வேண்டித் தலையசைப்பை எதிர்பார்த்த தாய் இப்பாடலில் ‘ஆம்’ எனும் குறிப்பைத் தலையசைப்பினால் உணர்த்த வேண்டி நிற்கிறாள்).

    “சீகாழியில் மேவும் திருநிலைநாயகியாகிய சுந்தரவல்லியே, செங்கீரையாடி அருளுவாயாக,” என வேண்டுகிறார் கவிஞர். இவ்வாறு குழந்தையின் தலையசைவுகளுக்கேற்ப மறுமொழிகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் தாயின் இயல்பு அடியவராகிய கவிஞருக்கு அந்தப் பரம்பொருளின் பெருமைகளைப்பாடி மகிழும் உத்தியாக அமைகிறது.

    இப்பாடல்கள் தாயினுடையவும், அவள் நிலையில் தம்மை இருத்திப் பரம்பொருளைக் குழந்தையாகக் கண்டு வணங்கும் பக்தனுடையவும் ஆகிய இருவருடைய மனநிலைகளையும் அவற்றில் எழும் சிந்தனைகளையும் மிக அழகாக விளக்குகின்றன. பாடப்படும் இப்பாட்டுடைத்தலைவி, குழந்தையா தெய்வமா எனும் சந்தேகத்திற்கே இடமில்லை. இருவரும் ஒன்றே- குழந்தையும் தெய்வமும் போற்றப்படவேண்டியவர்களே என்பது நன்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றமர் குழுவினிடை சென்றொரு துரும்புநட்
    டவரகந் தையையழித்த
    ஆற்றல்மிகு மாண்டகையு னொருபுறத் தான்கொலோ
    அவனருட் குணமுநீயோ!
    என்றுமுதி யாமைமரி யாமைமல மில்லாமை
    என்பனவும் மியல்கொலோ?
    எண்ணில சராசரந் தம்மையீன் றுயிர்களுக்
    கினியகதி தருவீர்கொல்லோ?
    மன்றினிடை நின்றுவெளி கண்டுதொழு வார்க்கருள்
    வழங்குவது முண்டுகொல்லோ?
    வாழ்விப்பி ரோவென வினாவினோம் விதிவிடை
    வழங்குதிரு முகமசைத்தே
    தென்றலி லிளம்பசிய கொடியென்ன அம்மையொரு
    செங்கீரை யாடியருளே!
    சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
    செங்கீரை யாடியருளே!!

    (வெளி- மேற்பார்வைக்குக் காணும் காட்சி)

    (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

    ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை கடவுள்கள் மீதானவையே! இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் ஒவ்வொரு பருவத்தினையும் புலவர்கள் பாடும்போது அப்பருவத்திற்கான பத்துப்பாடல்களில் சில, அழகான கதைகளையும் தொன்மங்களையும் இணைத்தும், வேறு சில, சந்தநயம் மிகுந்தும், இன்னும் சில பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் கடவுட்தன்மையைப் போற்றியும் பாடப்படும். இத்தகைய பாடல்களில், அவை அன்னையைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலாக இருப்பின், சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்து பொலிவனவாகப் பாடுவது பெரும்புலவோரின் தனிச்சிறப்பு. அவ்விதத்தில் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது சைவசித்தாந்தப் புலமையையும் பற்றையும் இலைமறைகாயாக இப்பாடல்களில் மிகவும் எளிமையாக ஆயினும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியவையாகக் காட்டியுள்ளது வியக்கத்தக்கதாம்.

    இவை போலும் சிறப்புகளை வெவ்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இனிவரும் அத்தியாயங்களில் தொடர்ந்து காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • தமிழக மக்களே உஷாராகுங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    தமிழ்நாடில் சில காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளும் காதலர் தினத்தன்று அதிரடியாக உச்சநீதிமனறம் அளித்த தீர்ப்பும் தமிழ்ப் படம் ஒன்றை இடைவேளைவரை பார்த்த ஒரு உணர்வை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.  இன்னும் மீதிப் படமும் க்ளைமேக்ஸும் பாக்கியிருக்கின்றன.

    இதற்கிடையில் தமிழக மக்களை அடுத்த தேர்தலுக்குத் தயார்படுத்துவது சமூகத்தில் இருக்கும் சில சிந்தனையாளர்களின் கடமை ஆகிறது.

    பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு நம் முன் சில உண்மைகளை வைத்திருக்கிறது.  தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்.  பதினாலாம் தேதிய தீர்ப்பு மிகத் தாமதமான தீர்ப்பு என்றாலும் முழுமையாக மறுக்கப்பட்ட நீதி என்று சொல்ல முடியாது.  வழக்கில் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர் இறந்துவிட்டாலும் மற்ற மூவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு நிம்மதியைத் தருகிறது.

    தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா சசிகலாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டது அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அல்ல என்றும் தான் சட்டத்திற்குப் புறம்பாக பல ஊழல்கள் புரிந்து சேர்த்த பணத்திலிருந்து தமிழக மக்களை அச்சுறுத்தி வாங்கிய சொத்துக்களை மறைப்பதற்குத் தேவையான பினாமிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் சில தவறுகளை மறைக்கவும் சசிகலாவைத் தன்னோடு வைத்துக்கொண்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.  (இதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது.  ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் இதைக் கூறியிருக்கிறார்கள்.)  ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதற்காக அவர் மீதுள்ள எந்தக் குற்றங்களையும் குறைத்து மதிப்பிடவில்லை நீதிபதிகள்.  ஊழல் புரிந்தவர் என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்கள்.  மற்ற குற்றவாளிகளையும் நடு நிலையில் நின்று அவர்கள் புரிந்த குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.  மேலும் நாட்டில் அரசியல் ஊழல்கள் மலிந்துவருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருந்து இனிமேலாவது ஊழல்செய்பவர்களை அவர்கள் அப்படி ஊழல் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றும் இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  இந்த அறிவுரையைத்தான் நான் தமிழக மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்

    ஊழல் புரிவதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்லப்போனால் ஜெயலலிதா முதல் சூத்திரதாரி என்றும் சசிகலா அவருக்குத் துணைபோன இரண்டாவது சூத்திரதாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இது இப்படி இருக்க ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல் மந்திரி பதவி வகிக்க நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வம் (பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியைப் பறித்துக்கொள்ள மாட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஜெயலலிதா அவரை முதல் மந்திரி பதவியில் அமர்த்தினாரேயொழிய அவர் மீது இருந்த அதி அன்பினாலோ அவருடைய திறமையினாலோ அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.) ஜெயலலிதாவை ஊழலே புரியாத அரசியல்வாதி போலவும் எல்லா ஊழல்களுக்கும் காரணகர்த்தா சசிகலா போலவும் பேசிவருகிறார்.  அன்றுவரை சசிகலாவுக்கு அடிபணிந்தவர் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று நாற்பத்து ஐந்து நிமிஷம் தியானத்தில் மூழ்கி ‘அம்மாவின்’ ஆசி பெற்று சசிகலாவை எதிர்க்கத் துணிந்தாராம்!  சசிகலா ஊழல் புரிந்தவர் என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல் புரிந்தவர் என்றுதானே நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.  பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை புடம் போட்ட தங்கமாக ஜெயலலிதா மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிவந்திருக்கிறார்.  இது எப்படி சாத்தியம்?  சசிகலா சிறைக்குச் செல்வது சரிதான் என்று கூறும் பன்னீர்செல்வம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்?  இது என்ன முரண்பாடு?  ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறாராம்!  அவரைவிட அதிக ஊழல்கள் புரிந்து தமிழ்நாட்டை ஊழல் சக்கரவர்த்திகளின் கூடாரமாக மாற்றப் போகிறாரோ என்னவோ.

    தமிழக மக்களே, தயவுசெய்து சிந்தியுங்கள்.   தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அம்மாவின் வழியில் வந்த யாருக்கும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்.  நீதிமன்றமே அம்மாவைப் பற்றிய இந்த மதிப்பீட்டை வழங்கிய பிறகு இனிமேலாவது ‘அம்மா தெய்வம், தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்காதீர்கள்.  (உங்களது இதய தெய்வமான அம்மாவை மனிதனால் தண்டிக்க முடியாது என்பதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறினாலும் கூறுவீர்கள்.)  தமிழ்நாட்டில் எதிலும் எங்கும் ஊழல் நீக்கமற நிறைவதற்கு வித்திட்டுத் தன்னை ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துபவர் என்று காட்டிக்கொண்ட அம்மாவின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.  ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கியதன் மூலம் தன்னைத்தானே எப்படி வளப்படுத்திக்கொண்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  சசிகலா ஊழல் பேர்வழி என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல்வாதி என்னும் உண்மையை மறைக்கும், இரட்டை வேடம் போடும் பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகளைப் பொதுவாழ்வில் இருந்தே நீக்குங்கள்.  அம்மாவின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியையும் நம்பாதீர்கள்; அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.  இதை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ்நாடு இதைவிடப் பெரிய ஊழல் நாடாக மாறும்.    அ.தி.மு.க. மட்டுமல்ல, மற்ற எந்த ஊழல் கட்சி வேட்பாளர் என்றாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.  இப்போது பண மதிப்பு நீக்கம் அமலில் இருந்தும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு யார் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பது என்ற போட்டியில் ‘குதிரை பேரம்’ நடக்கிறது, கோடிக்கணக்கில் பணப்புழக்கம்  இருக்கிறது.  இதுவரை இந்தக் கட்சிகள் நம்மை முட்டாளடித்தது போதும்  இனியாவது அப்படிச் செய்யாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.  எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.  நாம் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நம்மை ஆள அனுமதி கொடுத்தால்தானே இவர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.

    ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அமிதவா ராய் கூறியுள்ள அறிவுரையைக் கேளுங்கள்.  ஊழல் கொடிய நோய் போல் சமூகத்தில் பரவிவரும்போது ஊழல் புரிபவர்கள் மக்களிடம் ஒரு பயத்தையும் பக்தியையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அப்போது நேர் வழியில் போக நினைக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறுகிறது.  அவர்களின் நிலை என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.  ஊழல் புரிபவர்களை சமூகத்திலிருந்து நீக்குவதற்கு ஒட்டுமொத்தமாக எல்லோரும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள்.  சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில் தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபட வேண்டும்.  இது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்கிறார் நீதிபதி.

    தமிழக மக்களே, இனி மேலாவது விழித்தெழுங்கள்.  நம் உரிமைகளைக் காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

    Share
  • மாற்றம் – பகுதி 1

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா 

    மாற்றம் என்பது மனிதவாழ்வில் இன்றியமையாதது. மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் – தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும். சிலவேளை – ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத்தோன்றும். இதனால் – மாற்றம் என்பது வந்தால், யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும். அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம். அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன்பெறுமளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.

    அப்படியான மாற்றங்கள்பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா? அப்படியான மாற்றங்கள் எந்தவகையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? அது ஒரு “வாழும்நெறி.” வாழ்க்கை என்றால் என்ன? எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. எப்படியும் வாழலாம் என்றால் – அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. விலங்குகள் போல மனிதன் வாழமுடியாது.

    விலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல, புரியவும் மாட்டாது. ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும். தெரியாமலும், புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல. இது விலங்கு வாழ்வேயாகும். அந்த விலங்கு வாழ்வைவிட்டு – மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.

    சமயம் உண்மையா? பொய்யா? கடவுள் உண்டா? இல்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம். இதற்கான சரியான பதில்களும் அவ்வப்போது உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

    ஆனால் உரிய பதில் அளிக்கப்பட்டபோதும் – இம்மாதிரியான குதர்க்கத்தன
    மான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ, கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ – எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. பதற்றமும் இல்லை. யாவும் அதன் வழியில் செம்மையாக நடைபெறுவதைப் பார்க்கின்ற பொழுது – இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

    இன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம். மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு. விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான். இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிட்டது.

    விஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கையைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர். மேல்நாட்டவர் வழியையே போற்றிநின்ற கீழ்நாட்டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.

    எதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் – சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது. அதாவது – ”விஞ்ஞானம், விஞ்ஞானம்” எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் – விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் – விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிடச் சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமுடிகிறது.

    அவர்கள் யாவரும் மெய்ஞ்ஞானம் பற்றியறியவும் – அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் – அதனால்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெய்ஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி, ஓடி வந்துகொண்டிருப்பது – ஒரு பெரிய மாற்றம் அல்லவா?

    வாழ்க்கையில் இரண்டுவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன. முதலாவது உலகியல் சார்ந்தவாழ்கை. மற்றையது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம். அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.

    அதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம். அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம். உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்! இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞானத்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.

    விஞ்ஞானம் என்பது ஓர் அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது. அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெய்ஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும். மெய்ஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே!

    சமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா? இது ஒரு முக்கியமான கேள்விதான். அதேவேளை இவையிரண்டையும் விட – நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.

    விஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை. மெய்ஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை. இதனால்தான் “மெய்ஞ்ஞானம்” என்று சொல்லப்படுகிறது. மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணையாகி நின்றன. தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.

    மனிதவாழ்வின் அடிநாதமே இறையுணர்வுதான். அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான். இறையுணர்வுஅற்று வாழும் வாழ்வு ஒரு வாழ்வு அன்று; உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும். அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.

    உயிர்த்துடிப்புக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து – அந்த உருவங்களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து – வழிபாடு என்னும் மடைமாற்றத்தை ஏற்படுத்த வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள். இதனால்தான் –

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”

    “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” – என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.

    சமூகத்தின் மையமாகக் கோவில்கள் திகழ்கின்றன. இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது. எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.

    கோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன. நகரங்களும் வளர்ந்தன. நாடும் வளர்ந்தது. ஆலயத்தை அரணெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.

    எதைச் செய்தாலும் – அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் பண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது – சிலர் தேவையற்ற ஒன்று என்றும், மூடத்தனமானது என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது. கோவில் என்றும், ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.

    “கோ’ என்றால் தலைவன். “இல்” என்றால் இருக்குமிடம். எனவே               “கோவில்” என்றால் உலகத்துக்கும், உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இருக்குமிடம் என்ற பொருளாகின்றது.” ஆலயம் ” என்பதன் பொருள் – ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும். எங்களது பாரம்பரியத்தில் – வாழையடி வாழையாகக் கோவில்கள் – நல்ல திருப்பத்துக்கும், மனமாற்றத்துக்கும் உறுதுணையாகவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

    வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல. வாழ்க்கையை – வாழ்க் கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் – மனத்தை உடையவன். அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.

    “எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய்” என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற்றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன. அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி – புறச் செயற்பாடுகளும் அமைந்து விடுகின்றன. இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும். அகம் நல்ல மாற்றம் பெறவும் – அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.

    புராணங்களும், இதிகாசங்களும் எமது சமயத்தின் கருவூலங்கள். இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள். விசித்திரமானவை. விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் – அவை யாவும் – மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை. அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.

    ஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும் – முக்கியக் கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டிருந்த வான்மீகி – புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்றபாங்கு – வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும். அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது – நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா?

    ராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இருந்தவனை – மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு “ராம ராம” என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும். இது கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதன்மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும். இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் – அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி – உலகிலே பரந்துபட்டளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா?

    வான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழிமாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவிடங்களிலும் பரவிவிட்டது. அக்காவியம்-  தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும் ஏற்றிப் போற்றப்படுகிறது. இராமாயணத்தில் வரும் இராமன் – தெய்வமாகிவிட்டான்; குடும்பங்கள் அனைத்தும் – இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். சீதை கற்புக்கு எடுத்துக்காட்டாகி விடுகிறாள். எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல்லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு – முடிவில் அழிவையே தந்துவிடும் என்பது – இராவணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா!

    வான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது. இராமாயணத்தால் மாற்றங்க ளுக்கு வழியுமேற்பட்டது. இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக்கும் சென்றுவிட்டது. இதனால்தான் கோவில்கள்தோறும் இராமாயணம் கதையாகவும், கதாப்பிரசங்கமாகவும், வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    இராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ – அதே போன்றுதான் மகாபாரதமும் அமைகிறது. அரச வம்சங்களின் போட்டா போட்டி, சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதில் இடம்பெறும் “பகவத்கீதை” இந்துக்களின் வேதமாகவும், இருதயமாகவும் விளங்குகின்றது.

    வாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது. மனத்தில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் நல்லதாக அமையின் செயல் நல்லபடி அமையும்.  அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்படும். எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை. மனத்தை நல்வழிப்படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.

    கீதையின் போக்கே தனித்துவமானது. அதனால்தான் யாவரும் பொன்னேபோல் அதனைப் போற்றுகின்றனர். உலகியல் நடைமுறையில் சென்று – உள்ளத்தைத் திருத்தி  உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி – உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் “பகவத்கீதை” ஆற்றிக் கொண்டிருக்கிறது. பாரதத்தில் இடம்பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றுவரான துரியோதனன் ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றனர். நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் – அதன் செயற்பாடு மிகப் பெரியது. இத்தத்துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது. அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மையல்லவா?

    ‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ ” – என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்தபோதும் அவர் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.

    கவித்துவம் மிக்க சேக்கிழார் – தனது சிந்தனையைச் சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவிட்டார். அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் “பெரியபுராணம்” ஆக அமைகிறது. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப – சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் – சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம் நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்!

    பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான்.

    நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில். நாவுக்கரசரை மாற்றியதும் கோவில். சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரர் மனம்மாறி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவில்தான். முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத்ததும் கோவில்தான்.

    அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு – சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணைத்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில்கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.

    சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ்சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான் எமது சைவத் திருமுறைகள். கோவில்தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச்சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும் – இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.

    இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பலரை மாற்றமுறச் செய்தது. இதனால் நன்னெறி வளர்ந்தது. கோவில் வழிபாடும் சிறப்படைந்தது. நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் – இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் – அறவழியில் செல்லவும் – உதவியதை மறக்கமுடியாது. இவை நல்ல மாற்றங்கள்தானே!

    (தொடரும்)

    Share