-கவியோகி வேதம்

பாடச்  சுமைகள் அழுத்திய  போது
–பள்ளி வாழ்க்கை கசந்ததே!
தேடி அதனால்  வேலை வந்ததும்
–தேன்போல் சுகமாய் இனித்ததே!

முயல்க  முயல்க முன்னேறு என்கையில்
–மூச்சும்  சுமையாய்ப் போனதே!
முயற்சி வெற்றியும் பணமும் குவித்ததில்
–மொத்தமும் சுகமாய் ஆனதே!

வயிற்றில் பலரும்  ஏய்த்தே அடித்ததில்
–வாழ்வே  சுமையாய் மாறிற்றே!
மயிலாய் நல்லோர்  வந்தே  அணைக்க
–மனதும் சுகத்தில்  தேறிற்றே!

திருமணம்  வேண்டாம்  என்றே ஒதுங்கினேன்!
–தேவையும்  குறைந்தே இனித்ததே!
உறவுகள் நெருக்க  ஒருத்தியைத் தேடினேன்;
–உலகே   சுமைபோல்  கசந்ததே!

விதியின்  சுமையை  நினைத்தே  ஓடினேன்!
–விரக்தியும்  என்னை   அணைந்ததே!
மதிகொள்  குருஎன்னைப் பார்த்ததும்  ‘ தெய்வமே’
–மனத்துள் சுகமாய் இணைந்ததே!!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *