Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • அமெரிக்காவின் மத்தியஸ்தம்!

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை என்பது நூறு ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே நடந்து வந்திருக்கிறது.

     pon2

    பைபிள் காலத்தில் இப்போதைய சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன நாடாக உருவாகப் போவதாக பாலஸ்தீனர்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா இடங்களையும் சேர்த்து பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள்.  இப்போது மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஜோர்டான் நதியின் மேற்குக்கரைப் பகுதிக்கும் இடையேயான இடம் பாலஸ்தீனம் என்றும் அது தங்கள் மூதாதையர் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவந்த இடம் என்றும் அதனால் தங்களுக்கு அதில் முழுப் பாத்தியதையும் இருக்கிறது என்று கூறிக்கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து வெளியிலிருந்து வந்த யூதர்கள் அங்கு ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைத் தங்கள் வசதிக்காக மறந்துவிட்டுக் குடியேறிக்கொண்டே இருந்தார்கள்.  அப்போது வளம் மிகுந்த நாடான அமெரிக்காவில் ஏற்கனவே குடியேறி பல யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக விளங்கினார்கள்.  இவர்களின் பண உதவியாலும் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் தங்களோடு கொண்டுவந்த தொழிநுட்ப அறிவாலும் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப்போட்டு அந்த நிலங்களில் அமோக விளைச்சலை உண்டுபண்ணினர்.  இந்த நிலங்களில் யூதர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக்கொண்டனர்.  இதனால் அரேபியர்கள் தங்கள் நிலங்களை இழந்ததோடல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.  இதனால் பலர் அரேபியர்கள் கொதித்தெழுந்தனர்.  இதனால் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் நடந்தன.

    1922-லிருந்து பாலஸ்தீனம் பிரிட்டிஷ் நியமனத்தின் (British Mandate) கீழ் இருந்து வந்தது.  பிரிட்டனும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் பல முயற்சிகளுக்குப் பிறகு பாலஸ்தீன நிர்வாகத்தை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நாடுகளிடையே ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது.  ஐ.நா.வும் வெளியிலிருந்து வந்த யூதர்கள், தங்கள் மூதாதையர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்த சம்பந்தத்தைக் காட்டி பாலஸ்தீனத்தில் பங்கு கேட்பது சரியல்ல என்று யூதர்களுக்கு அறிவுறுத்தவில்லை.  சமரசம் செய்வதாக நினைத்து பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் கொடுத்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த தங்களுடைய புண்ணிய தலத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு அமைக்கும் உரிமை கிடைத்தது என்று மகிழ்ந்துபோய் அந்தப் பிரிவினையை ஒத்துக்கொண்டனர்.  அரேபியர்களோ தங்கள் நாட்டை வெளியிலிருந்து வந்த, வரும் யூதர்களோடு எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கோபமடைந்து தங்கள் ஆயுத பலத்தால் எப்படியும் தங்கள் நாட்டை யூதர்களிமிருந்து திரும்பப் பெற்றுவிடுவது என்று தீர்மானித்து காரியத்தில் இறங்கினர்.  அவர்களுடைய படைபலத்தை விட அமெரிக்க யூதர்கள் கொடுத்த பண உதவியால் இப்போது யூதர்களின் படைபலம் அதிக அளவு உயர்ந்துள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை.  பல முறை யூதர்களோடு மோதியும் பலன் இல்லை.  முழு நாடும் தங்களுக்கு வேண்டும் என்று அரேபியர்கள் வீம்பிக்கொண்டிருக்க, யூதர்கள் மிகவும் தந்திரமாக இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டதோடு ஐ.நா. அரேபியர்களுக்குக் கொடுத்த இடங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.  இஸ்ரேலைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையாதலால் இஸ்ரேல் தன்னிச்சையாகப் பாலஸ்தீனத்தில் இடங்களைப் பிடித்துக்கொள்ளும் தன் பேராசையைத் தொடர்ந்து வருகிறது.

    தன் சொந்த நன்மைக்காகவும் அமெரிக்கா வாழ் யூதர்கள் கொடுத்த நிர்ப்பந்தித்தினாலும் அமெரிக்கா 1967-க்குப் பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டு வருகிறது.  இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் நிறைய அதிகாரம் வகிக்கும் அமெரிக்க யூதர்கள்.  அமெரிக்க யூதர்களிடம்தான் அமெரிக்காவின் பெரிய வங்கிகள் இருக்கின்றன.  ஹாலிவுட் முழுவதும் இவர்களின் கைகளில்தான்.  எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் இவர்களின் அதிகாரத்திற்குள்தான்.  அமெரிக்க மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அமெரிக்கா வாழ் யூதர்களால் திசை திருப்ப முடிகிறது.

    இதற்கும் மேலாக இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இவர்களின் பாக்கெட்டிற்குள்.  வித்தியாசமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளையுடைய இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இஸ்ரேலைப் பொறுத்த வரை ஒரே மாதிரியான கொள்கைகளைத்தான் கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால் இவர்களுடைய தேர்தல் நிதி பெருமளவு யூதர்களிடமிருந்து வருகிறது.  யூதர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராகவோ வர முடியாது.  இதனால்தான் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.  இஸ்ரேலை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னாலும் அமெரிக்க அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பது ஒபாமா உட்பட எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலஸ்தீனர்களின் மீது தனக்கிருந்த பச்சாதாபத்தைப் பற்றிக் கூறிய ஒபாமா, ஜனாதிபதி ஆன பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.  அமெரிக்க அரசு கூறும் எந்த அறிவுரையையும் இஸ்ரேல் செவிமடுப்பதாக இல்லை.  அதனால் ஒபாமாவும் அறிவுரை கொடுப்பதை விட்டுவிட்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடுவே நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அவருடைய வெளியுறவு அமைச்சர் கெரிக்கு கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

    பல தசாப்தங்களாக நடந்துவரும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  கார்ட்டர் தவிர மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிக் கவலையில்லை.  மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விட  எப்படியாவது பேச்சுவார்த்தைகள் முடிந்து – இன்னும் கொஞ்சம் அநீதி பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டாலும் – அவற்றை முடித்த அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயர் சரித்திரத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.

    இஸ்ரேலுக்குச் சாதகமாகவே பேசிக்கொண்டிருக்கும் எல்லா அமெரிக்க மத்தியஸ்தர்களையும் போல் இப்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வரும் கெரியும் எப்படியாவது பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைவர் அப்பாஸை வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்.  எப்படியாவது அவரை ஏதாவது ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  பாலஸ்தீனத் தலைவர்கள் முன்னால் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை இப்போது அப்பாஸ் மறுக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வேறு.  பாவம் அப்பாஸ் அமெரிக்கா கொடுக்கும் நிர்ப்பந்த பிடியில் சிக்கித் தவிக்கிறார்.  அப்பாஸுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கும் போலும்.  ஏப்ரல் நான்காம் தேதி அல்ஜீரியாவுக்கும் மொரோக்கோவுக்கும் விஜயம் செய்த கெர்ரி நேற்று அல்ஜீரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவரைப் பார்க்க வந்திருந்த தூதரக ஊழியர்களிடமும் அவர்களுடைய குடும்பத்தாரிடமும் தான் தாமதமாக வந்ததற்கும் அவர்களைக் காக்க வைத்ததற்கும் வருத்தம் தெரிவித்துவிட்டு ‘நான் இங்கு வருவதற்கு முன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.  என்னோடு பேசிக்கொண்டிருந்தவருக்கு நான் பேச்சை முடித்துவிட்டேன் என்பதை புரிய வைப்பதற்கு மிகவு கஷ்டமாகப் போய்விட்டது’ என்று கூறியிருக்கிறார்.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவைத்தான் பேச்சை நீட்டித்தார் என்று மறைமுகமாகக் குறை கூறியிருக்கிறார்.  நேத்தன்யாஹுவிடம் இதை நேரிடையாகச் சொல்லத் தைரியம் இல்லை.  பாவம் அமெரிக்கா, அமெரிக்காவின் உதவியாலும் அமெரிக்கா வாழ் யூதர்கள் செய்யும் உதவியாலும் இன்று மத்திய கிழக்கில் இராணுவ பலத்தில் பூதாகாரமாக வளர்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு (மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டும்தான் அணு ஆயுதங்கள் இருக்கின்றன) அமெரிக்கா பயப்பட வேண்டியிருக்கிறது.  இது காலத்தின் கோலமா அல்லது அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்கும் /கொடுக்கும் அதிக சலுகையா?

    படத்திற்கு நன்றி:

    http://samuthayaarangam.blogspot.in/2013/12/blog-post_25.html

    Share
  • இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    27-lok-sabha-elections-2014-600-jpg

    தினம் தினம் பத்திரிக்கைகளில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் பற்றியும் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.  வழக்கமாக தேர்தலில் கலந்துகொள்ளும் கட்சிகள் அது வரை ஆட்சியில் இருந்த கட்சிகள் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்யப்போவதாக மக்களுக்கு வாக்களிப்பார்கள்.  ஆனால் செய்ய முடியாமல் திணறுவார்கள்.  மறுபடி எதிர்க் கட்சியாக இருந்த கட்சி பதவிக்கு வந்தவுடன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள்.  இப்படி பதவியில் இருந்தவர்கள் எதிர்க் கட்சியாக மாறுவதும் எதிர்க் கட்சியாக இருந்தவர்கள் பதவி வகிப்பதும் நடந்துகொண்டிருக்க அந்தக் கட்சிகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதும் எப்போதும் நடந்துகொண்டிருக்கும்.

    இந்த அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாருங்கள்.  என்னென்னவோ நல்ல திட்டங்கள் வைத்திருந்தார்.  அதை நிறைவேற்றவும் உண்மையாகவே விரும்பினார்.  ஆனால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பது அரசியல் அனுபவம் இல்லாத அவருக்குத் தெரியவில்லை.  என்னென்னவோ செய்வேன் என்று கூறிவிட்டு ஒன்றும் முடியாமல் பின் வாங்கிவிட்டார்.  அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று கருவிக்கொண்டிருந்த வழக்கமான அரசியல் கட்சிகளும் அவருக்கு எந்த வித உத்துழைப்பும் அளிக்கவில்லை.  ஊழலிலே பிறந்து ஊழலிலே வளர்ந்து ஊழல் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பதாகக் கூறிய ஒரு கட்சியை எப்படி வெற்றி பெறவிடும்?

    இந்தியாவில் ஒரு வகையாக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லையென்றால், அமெரிக்காவில் ஜனாதிபதி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் அவருடைய கொள்கைகளுக்குப் புறம்பான கொள்கையுடையவர்கள் – அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே கூட – முட்டுக்கட்டை போடுகிறார்கள்.  ஆனால் இது ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று இந்தியாவில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பின் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதை விட மிகவும் வித்தியாசமானது.  ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று சொல்லும் இந்திய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று விளக்கிக் கூறத் தேவையில்லை.  அவர்கள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போவார்கள்.  அதை நிறைவேற்றாமல் போனால் வாக்காளர்கள் யாரும் கேட்க முடியாது.  அமெரிக்காவில் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது ஏதாவது திட்டம் பற்றிக் குறிப்பிட்டால் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று சொல்ல வேண்டும்.

    ஒபாமாவையே எடுத்துக்கொள்ளுங்கள்.  2007-இல் அவர் தேர்தலில் நின்றபோது அமெரிக்காவை எப்படி எப்படியெல்லாமோ திருத்த வேண்டும் என்று நினைத்தார்.  ஆனால் அவருடைய கட்சியிலும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இருந்த பழமைவாதக் கொள்கையுடையவர்கள் அவர் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.  (இந்தியாவில் போல் கட்சித் தலைமையை மீற முடியாது என்பது அமெரிக்காவில் கிடையாது.  இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் குடியரசுக் கட்சியிலும் இருக்கலாம்; வலதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் ஜனநாயகக் கட்சியிலும் இருக்கலாம்.  கட்சித் தலைவர் சொல்லுவதையோ அல்லது தங்கள் கட்சியைச் சேர்ந்த  ஜனாதிபதி சொல்லுவதையோ அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை.  பாராளுமன்ற உறுப்பினர் எல்லோருக்கும் அவரவர்க்கென்று கொள்கைகள் உண்டு; அவர்கள் தங்கள் இஷ்டம்போல் எந்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தாலும் தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.  (நம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாங்களாகச் சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பது இன்னொரு விஷயம்.)

    தேர்தல் வாக்குறுதிகளில் ஒபாமா இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அமெரிக்காவின் கடமை பற்றியும் கூறினார்.  பதவிக்கு வந்தவுடனேயே எகிப்திற்குச் சென்று அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரியல்ல என்று கூறி மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றார்.  ஆனால் அமெரிக்காவில் இருக்கும் யூதர்களின் அரசியல் சங்கம் கொடுத்த நெருக்கடியால் இஸ்ரேலைக் கண்டிப்பதற்க்குப் பதில் ‘அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் உள்ள பந்தம் நெருக்கமானது.  இது எப்போதும் தொடரும்’ என்று சொல்லும் அளவிற்குப் போனார்.  ஐ.நா.வால் பாலஸ்தீன நாடாக உருவாகப் போகும் நாட்டிற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைக்க வேண்டாம் என்று சொன்னதை இஸ்ரேல் மதிக்கவில்லை; அதை நிறுத்த முடியாத சூழ்நிலையில் ஒபாமா இருக்கிறார்.  இப்போது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது அமெரிக்க யூதர் சங்கம்.

    உள்நாட்டு விஷயங்களிலும் ஓபாமா சாதிக்க நினைத்ததைப் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வெகுவாகக் குறைத்துவிட்டார்கள்.  2014-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று உறுதி அளித்தார்.  அமெரிக்க அரசே நடத்தும் இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பணக்காரர்களுக்குக் கொடுத்த வரிச் சலுகையை நீக்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துச் சரிக்கட்டலாம் என்றார்.  ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அதற்குப் பதில் மருத்துவக் காப்பீடு வழங்கும் தனிப்பட்ட கம்பெனிகள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு எடுப்பதற்கு முன் ஏதாவது வியாதி இருந்தால் அவர்களுக்கு மருத்துவ காப்பிடு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது என்ற நிபந்தனையை மட்டும் கம்பெனிகளிடமிருந்து பெற்றார்.  மேலும் 2014 முடிவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று அவர் வாக்களித்ததற்கு மாறாக இரண்டு கோடி மக்கள் 2014 முடிவிலும் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவெண்டநாமோவில் இருக்கும் சிறையை மூடிவிட்டு அங்கிருக்கும் கைதிகளை உரிமையியல் நீதிமன்றத்தில் (civil court) விசாரிக்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் பாராளுமன்றத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது; வழக்கை நடத்தப் பணம் கொடுக்க மறுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.

    ‘அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு, சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உரிமை என் பதவிக் காலத்தில் மறுக்கப்படுமேயானால் நானும் அவர்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறைகூவினார்.  இப்போது பல மாநிலங்கள் தொழிலாளர்கள் சங்கங்கள் அமைக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியிருந்த போதிலும் ஒபாமா எந்த விதப் போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

    இந்தியாவில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அது நிரூபிக்கப்பட்டால் (அநேகமாக நிரூபிக்கப்பட்டுவிடும்) சிறைக்குச் செல்வார்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினாலும்.

    படத்திற்கு நன்றி :

    http://tamil.oneindia.in/news/tamilnadu/nomination-filing-begins-on-march-29-lse-196591.html

    Share
  • இந்திய அரசியல் கூத்து!…

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் தேர்தல் செய்திகளைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கொள்கை அளவில் கொஞ்சமும் ஒற்றுமை இல்லாத கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டாக போட்டி போடப் போகின்றனவாம். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் எல்லாக் கட்சித் தலைவர்களும் ஊழல் புரிகிறார்கள் என்பதுதான். இந்த லட்சணத்தில் யார் யாரோடு சேர்வது என்று கூட்டங்கள், விவாதங்கள்.

    அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர் ஒரு கட்சியைத் தொடங்கி யாரோடு கூட்டுச் சேருவார் என்று பல கட்சித் தலைவர்கள் தலைமயிரைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். பல முறை தமிழகத்தை ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றிருக்கும் ஒரு கட்சித் தலைவர் ஒரு மகனைக் கட்சியிலிருந்து விலக்கித் தேர்தலுக்குத் தயாராகிறார். இது இவர் போடும் நாடகமா அல்லது உண்மையிலேயே மகனைக் கட்சியிலிருந்து விலக்கிவிட்டாரா என்று கணிக்க முடியவில்லை.

    தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் இன்னொரு கட்சித் தலைவர் இலவசப் பொருள்களாக (விலையில்லாப் பொருள்களுக்கும் இலவசப் பொருள்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை விலையில்லா ஓட்டுகளை வாங்குவதால் விலையில்லாப் பொருள்களா?) ஏழை மக்களுக்கு வழங்கி அவர்கள் ஓட்டுக்களைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஈடுபட்டவர்களை விடுவித்து அதிலும் ஆதாயம் தேட நினைக்கிறார். இவர்களை விடுவிக்கும்பொறுப்பு மத்திய அரசின் அதிகாரத்தில் இருக்கிறது என்று நான் நினைத்திருந்தேன். இந்தச் செய்தி வந்த பிறகு இது எப்படி சாத்தியம் என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் மணலையும் கயிறாகத் திரிக்கத் தெரிந்தவர்கள் எதையும் சாதிப்பார்களோ என்ற எண்ணமும் உண்டாகிறது. இப்போது உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டிருப்பது நாட்டில் சட்டம் இன்னும் ஊசலாடுகிறது என்று கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.

    தேசிய அளவில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் முழு மெஜாரிட்டி வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இல்லை. யார் யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். ஊழல் புரிந்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரியை பா.ஜ.கா.விலிருந்து வெளியேற்றிய பிறகு அவர் கர்நாடகா பா.ஜ.க. என்று புதுக் கட்சி ஆரம்பித்ததெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரோடு சேர்ந்து நின்றுகொண்டு ‘ஜெயிப்போம்’ என்று கைகளைத் தூக்கிக்கொண்டு காட்சியளிக்கிறார். யாரைப் பிரதமராக மக்களுக்குக் காட்டுவது என்பதிலாவது பா.ஜ.கா. உறுதியாக இருக்கிறது. அந்தக் கட்சி காட்டும் தலைவர் கைகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது என்பதைப் பற்றி அந்தக் கட்சி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவே இவர் இந்தியப் பிரதமராக வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக எண்ணி, மனித உரிமைகளை மீறியவர் என்பதால் இவருக்கு விசா வழங்க மறுத்ததை இப்போது எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்து வருகிறது.

    பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருக்கு வீசும் அலையைப் பார்த்துப் பயந்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போதைக்குத் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறிச் சமாளிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஜெயித்தால், இவரால் அல்லவா காங்கிரஸ் ஜெயித்தது என்று பறைசாற்றிக்கொண்டு இந்தியா போன்ற பல முகங்கள் கொண்ட ஒரு நாட்டை நிர்வகிக்க எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒருவரைப் பிரதமர் பதவியில் உட்காரவைக்கப் பார்க்கிறது. ஒரு வேளை தோற்றுவிட்டாலும் காங்கிரஸ் தோற்றதிற்கான பழியைச் சுமக்கத் தேவையில்லை என்றும் கணக்குப் போடுகிறது.

    இப்படித் தினம் தினம் கூத்துக்கள் போடும் அரசியல் கட்சிகளோடு – இந்தியாவில்தான் ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கிறதென்று நினைக்கிறேன். அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் நாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று நினைக்கிறேன் – சமீபத்தில் பிரபலமான தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடேயும் தேர்தல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டிபோட எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் போட்டி போடுபவரின் அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை என்னவென்று தெரிய வேண்டுமல்லவா? அவருடைய பலம் எது என்று மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? உத்தம் கோப்ரகடே எந்த பலத்தில் மக்களிடம் ஓட்டுக் கேட்கப் போகிறார்? எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லையாம். (பல கட்சிகள் தங்கள் வேட்பாளராகப் போட்டி போடும்படி தன்னைக் கேட்டதாகப் பீற்றிக்கொள்ள வேறு செய்கிறார்.) அப்படியென்றால் அவருடைய கொள்கைகள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. எந்த முகத்தைக் காட்டி ஓட்டுக் கேட்கப் போகிறார்? அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டு அந்தச் சட்டம் தன்னை சிறையில் தள்ளிவிடும் என்று பயந்து ‘ஆளை விட்டால் போதும்’ என்று அமெரிக்காவுக்குப் புறமுதுகு காட்டிவிட்டு – இந்தச் சலுகையும் இவர் இந்தியத் தூதரகத்தில் துணை அதிகாரியாக இருந்தார் என்ற காரணத்தால் கிடைத்ததுதான் – இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்ட தன் மகள் பெரிய வீராங்கனை, அப்படிப்பட்ட வீராங்கனையின் தந்தை தான் என்ற பலத்தில் போட்டியிடப் போகிறாரா? அல்லது அமெரிக்காவையே அடிபணிய வைத்தவர் தன் மகள் என்று பறைசாற்றப் போகிறாரா? அப்படிச் செய்தாலும் அவர் கூறுவதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் அவருக்கு இருக்கிறது போலும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் என் தாய்த் திருநாடே, இதுவா உன் ஜனநாயகம்?

    Share
  • எது வெற்றி?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கடந்த ஒரு மாதமாக நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானி கோர்பகாடே சம்பந்தப்பட்ட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  இதில் யாருக்கு வெற்றி?  அமெரிக்கா தனக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளவில்லை.  ஆனால் இந்தியாவில்தான் பல தரப்பு அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியா கொடுமைக்கார அமெரிக்காவை வென்றுவிட்டதாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.

    அமெரிக்க நாட்டுச் சட்டப்படி அமெரிக்கா நடந்துகொண்டிருக்கிறது.  கோர்பகாடே தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கு விசா வாங்கும் வகையில் பல பொய்கள் சொல்லியிருக்கிறார்.  விசா விண்ணப்பத்தில் வாரம் ஒரு முறை விடுமுறை கொடுப்பதாகவும் உடல்நலமில்லாமல் இருக்கும்போதும் விடுமுறையில் பிரயாணம் செய்யும்போதும் எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாட்களிலும் சம்பளம் கொடுப்பதாகவும் அதுவும் மணிக்கு 9.5 டாலர் கொடுப்பதாகவும் வாரத்திற்கு நாற்பது மணி நேரமே வேலை வாங்குவதாகவும் அதற்கு மேல் அந்தப் பெண் வேலைசெய்ய நேரிட்டால் ஓவர்டைம் சம்பளம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த விதிகள் எல்லாம் அமெரிக்கச் சட்டப்படி வீட்டில் வேலைசெய்பவர்களுக்கு அவர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.  இப்படி ஒப்பந்தம் போட்டால்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தன்னுடன் வீட்டுவேலைக்குக் கூட்டிப் போகும் பெண்ணுக்கு விசா வாங்கலாம் என்பதால், முதல் ஒப்பந்தத்தில் தானும் கையெழுத்திட்டு அந்தப் பெண்ணையும் அவருடைய கணவரையும் கையெழுத்திட வைத்திருக்கிறார்.

    விசா வாங்கி முடித்த பிறகு அந்தப் பெண்ணோடு இன்னொரு ஒப்பந்தம் தயார்செய்திருக்கிறார்.  அதில் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை எல்லாம் மீறி செயல்பட்டிருக்கிறார்.  இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மணிக்கு 3.3 டாலர் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.  ஆனால் எத்தனை மணி நேரம் வேலைசெய்ய வேண்டும், ஓவர்டைம் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை.  ஒரு வேளை வேலைக்குக் கூட்டிவந்த பெண் பின்னால் தன் மேல் வழக்குப் போட்டால் இருக்கட்டும் என்று இரண்டாவது ஒப்பந்தத்தைத் தயாரித்திருக்கிறார்.  அதிலும் அந்தப் பெண்ணின் கையெழுத்தையும் அவர் கணவரின் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார்.  அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டாவது ஒப்பந்தத்தில் கூறியவை சட்டப்படி தவறானவை.  அதனால் அது மிகப் பெரிய குற்றம்.   அமெரிக்காவில் சட்டம் எல்லோருக்கும் பொது.  அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்று சட்டத்தை வேண்டும்போல் வளைக்க முடியாது.

    இந்தியாவில் சட்டம் செயல்படும் முறை இதற்கு மாறானது.  பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்.  அதற்கு மேல் இருக்கவே இருக்கிறது லஞ்சம்.  யாரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம்.  இது இந்தியாவின் தலைவிதி.  அதுவும் ஏழைகளை எப்படியும் நடத்தலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது.  மணிக்கணக்கில் சம்பளமா? வாரத்திற்கு ஒரு முறை விடுமுறையா?  உடல்நலக்குறைவு என்றால் அதற்கும் வேலைக்காரர்களுக்குச் செலவழிக்கவேண்டுமா?  இதெல்லாம் இந்தியாவில் கேள்விப்படாத விஷயங்கள்.  அதனால்தான் வேலைசெய்ய அழைத்துச்சென்ற பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஒன்றும் பேசாமல், இந்திய தூதரகத்தில் வேலைபார்த்த ஒரு பெண் தன் சொந்த விஷயத்தில் செய்த சட்ட மீறலைக் கண்டிக்கத் துணிந்த அமெரிக்க அரசின் சட்டத்துறையின் செயலை ‘அமெரிக்கா இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது’ என்று எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் குறை கூறுகிறார்கள்.  பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழியினர் ஒருவர் கோப்ரகடேவை அமெரிக்கா நடத்தியது சரியில்லை என்று கூறியிருக்கிறார்.  எத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மனப்பாங்கு அவரிடம் இன்னும் இருப்பது வேதனை தருகிறது.

    இந்தியாவுடனான தன் உறவு இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இதை இப்படியே இழுத்துக்கொண்டு போக வேண்டாம் என்பதற்காகவும் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்தது.  தங்கள் சட்டப்படி குற்றம் செய்த கோப்ரகடேயை குற்றம் புரியவில்லை என்று சொல்லவும் விரும்பவில்லை; அதே நேரத்தில் கோப்ரகடேயின் மீது வழக்கைத் தொடர்ந்து இந்திய அரசுக்கு மேலும் வெறுப்பேற்றவும் விரும்பவில்லை.  இதனால்தான் கோப்ரகடேயை நாட்டை விட்டே வெளியேற்றுவது என்று முடிவுசெய்தது.  கோப்ரகடேயை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு அதிகாரி, ‘இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம்’ என்று சொன்னதற்கு கோப்ரகடே, ‘நீங்கள் ஒரு நண்பரை இழந்துவிட்டீர்கள்.  பதிலாக ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அவளுடைய கணவனான ஒரு குடிகார டிரைவரையும் பெற்றிருக்கிறீர்கள்’ என்றாராம்.  குற்றம் புரிந்த கோப்ரகடேக்கு, தன்னுடைய குற்றத்தை வெளிக்குக் கொண்டுவந்த பெண்ணை விட தான் அந்தஸ்தில் மேலானவள் என்ற அகங்காரம் இருக்கிறது.  அதனால்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.  கோப்ரகடே வீட்டில் வேலைசெய்ய வந்த பெண் தலைமறைவாகி இவர் மேல் புகார்கொடுத்ததும் இந்தியாவில் இருந்த அந்தப் பெண்ணின் கணவரை மனைவியின் இருப்பிடம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார்கள் கோப்ரகடேயின் உறவினர்கள்.  இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    கோப்ரகடே தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.  அப்படித் தவறே செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி அதை நிரூபித்திருக்கலாமே.  ஏன் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்க வேண்டும்?

    இப்படி வந்தவருக்கு விமானநிலையத்தில் அப்படி ஒரு வரவேற்பாம்.  அவரை வரவேற்க வந்த அவர் தந்தை பத்திரிக்கையாளர்களை நோக்கி ‘எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்.  120 கோடி மக்கள் ஒன்று சேர்ந்தால் நியாயம் கிடைத்தே தீரும்’ என்று பேசியிருக்கிறார்.  கோப்ரகடே அமெரிக்கச் சட்டத்திற்குப் பயந்து இந்தியாவுக்கு ஓடி வந்ததா இந்தியாவின் வெற்றி?  மேலும் தன்னையும் தன்னுடைய மகளையும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டனவாம்.  அவர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருக்கிறதாம்.  குற்றம் புரிந்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட ஒருவரையும் அவரது தந்தையையும் ஆளும் வர்க்கத்தில் சேர்க்க இந்திய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.  என்னே இந்தியப் பண்பாடு?

    Share
  • எது அவமானம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நியுயார்க் நகரில் துணைத் தூதுவராக இருந்த தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் எல்லாக் கட்சி அரசியல் தலைவர்களும் பூமிக்கும் வானத்துக்குமாகக் குதிக்கிறார்கள். அவர் கைதுசெய்யப்பட்டது இந்தியத் தூதரக ஊழியர் என்ற முறையில் செய்த தவறுக்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தன் வீட்டில் வேலைபார்த்த பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்தின்படி சரியான சம்பளம் கொடுக்கவில்லை என்பதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு விசா வாங்குவதற்குரிய விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் கொடுத்தார் என்பதற்காகவும்தான். அமெரிக்காவின் சட்டங்களைப் பொறுத்தவரை இவை இரண்டும் மிகப் பெரிய தவறுகள். அவற்றை யார் செய்திருந்தாலும் அமெரிக்காவில் தண்டனை கிடைத்திருக்கும். வேலைக்காரப் பெண்ணுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பது இந்தியாவில் வேண்டுமானால் தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அமெரிக்காவில் இது மிகப்பெரிய தவறு. விசா விண்ணப்பத்தில் பொய்த் தகவல்கள் கொடுப்பதும் பெரிய தவறு. இவை இரண்டையும் யார் செய்தாலும் இதே மாதிரிதான் நடத்தப்பட்டிருப்பார்கள். லஞ்சம் வாங்க முயன்றார் என்ற குற்றத்திற்காக இல்லினாய் மாநில முன்னாள் முதல்வர் பதினாலு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மலைமுழுங்கிகளாக இருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியையும் அமெரிக்கா விட்டுவைப்பதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? பதிலுக்குப் பதில் என்று என்னென்னவோ சின்னத்தனமான காரியங்களை எல்லாம் செய்துவருகிறார்கள். இம்மாதிரிச் செயல்கள் இந்தியாவின் நன்மைகளுக்குத்தான் இடையூறாக விளையும் என்று ஏன் இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை?

    இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் புரிந்த பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து ஒரு வழியாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களைச் சிறையில் கழித்த இவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். தன் சொந்த வீட்டிற்குப் போகுமுன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள கோவில் ஒன்றுக்குச் செல்கிறார். (மாட்டுத் தீவன ஊழலில் 950 கோடி ரூபாயை முழுங்கிவிட்டு எப்படி இறைவனைச் சந்திக்கச் செல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை.) இவரோடு உடன் செல்ல இவருடைய ஆதரவாளர்கள். இவருடைய பாதுகாப்புக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள். கோவிலுக்குள் நுழையும் முன்பு லாலு தன் காலணிகளைக் கழற்றுகிறார். அதைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வாங்கி தன் கக்கத்தில் இடுக்கிக்கொள்கிறார். டி.எஸ்.பி லெவலில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி லாலுவின் காலகளைக் கழுவிவிடுகிறார். கோவிலுக்குள் சென்று லாலு சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார். அவருடைய காலணிகளைக் கக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தவர் அவற்றை லாலுவின் கால்களில் மாட்டிவிடுகிறார்.

    மிகப் பெரிய ஊழல் புரிந்து அரசுக்குச் சேர வேண்டிய மிகப் பெரிய தொகையைக் கையாண்டிருக்கிறார் லாலு. இவருக்கு மரியாதை செலுத்த இன்னும் ஆட்கள் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிய வேண்டும். இதை இந்தியாவின் பெரிய அவமானமாகக் கருத வேண்டும். சட்டம், ஒழுங்கைப் பாரபட்சமில்லாமல் கடைப்பிடிக்கும் அமெரிக்காவைப் பார்த்து இந்தியாவும் சட்டம், ஒழுங்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டுப் பாராளுமன்றத்தில் கால்வைக்க மாட்டேன், அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கமாட்டேன், என்று கூறுவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்ப்பவர்களுக்குரிய சலுகைகளை நீக்குவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்க்கும் ஓரினத் தம்பதிகளைச் சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தப் பாடுபட வேண்டுமேயொழிய சின்னத்தனமான காரியங்களில் இறங்கி இந்தியாவின் மதிப்பை இன்னும் குறைத்துக்கொள்ளக் கூடாது.

    எது இந்தியாவுக்கு அவமானம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவரைக் கைது செய்வதா? குற்றம் செய்தவரின் காலைக் கழுவுவதா?

    Share
  • உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எல்லாப் பொருள்களையும் வீணாக்குவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.  அதிலும் உணவுப் பதார்த்தங்களை வீணாக்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.  அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் விளைவதில்லை.  அந்தந்த இடங்களில் விளையும் பொருள்களை வாங்குங்கள் என்று அவ்வப்போது விளம்பரங்கள் வந்தாலும் ஒரு இடத்தில் விளையும் பொருள்களை நாடு முழுவதும் அனுப்புவது அமெரிக்காவில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று.  இந்தியாவில் அப்படியில்லை.  தென் தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள் கூட கர்நாடகாவில் உள்ள மைசூரில் கிடைப்பதில்லை.  காய்கறிகளையும் பழங்களையும் தூர இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பண விரயமும் பொருள் விரயமும் நிறைய ஏற்படும்.  அதனால் இந்தியாவில் அப்படிச் செய்வதற்கு நமக்குக் கட்டுப்படியாகாது.  ஆனால் அமெரிக்காவில் அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? வருஷம் முழுவதும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் கிடைத்துக்கொண்டிருக்கும்.  சீசனுக்குத் தகுந்தபடி விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.  அவ்வளவே.  இப்படிக் கொண்டு செல்வதில் நிறைய வீணாகின்றன என்கிறார்கள்.  இதில் ஆரம்பித்து அவற்றைச் சேமிப்பது, பின் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கித் தங்கள் குளிர்பெட்டியில் சேமிப்பது, பின் அவற்றைச் சமைப்பது என்று பல நிலைகளில் அவை வீணாவது தொடர்கிறது.  அது போதாது என்று சமைத்த உணவை வீணாக்குவதிலும் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.

    டிசம்பர் மாதம் பிறந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள்.  ஏன் அதற்கு முன்பே நவம்பரிலேயே நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் வழக்கத்தை விட அதிகமாக உண்ணும் பழக்கம் ஆரம்பித்துவிடுகிறது.  டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள் நடக்கும்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் என்று எங்கும் பார்ட்டிகள்.  எல்லா நிறுவனங்களும் தங்களிடம் வேலைபார்ப்பவர்களுக்கு இப்படிக் கிறிஸ்துமஸையொட்டிபார்ட்டி கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.  இதற்கு மேல் அந்தந்த டிப்பார்ட்மெண்ட மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய வளம் இருக்கிறது.  உலகின் பல மூலைகளிலுமிருந்து மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள்.  அதனால் பல வகை உணவுகள் கிடைக்கின்றன.  அவற்றை அமெரிக்கர்கள் உண்டுமகிழ்வதில் தவறேதுமில்லை.  ஆனால் அம்மாதிரி பார்ட்டிகளில் வீணாக்கப்படும் உணவின் அளவைப் பார்க்கும்போதுதான் நெஞ்சம் பதறுகிறது.

    டிசம்பர் மாதம் ஒவ்வொரு வெள்ளியன்றும் அவரவர்கள் வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு வெள்ளியில் மாலை ஆறு மணிக்கு இந்த வகைப் பார்ட்டிகளை நடத்துவார்கள்.  நாங்கள் வசிக்கும் எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் ஒவ்வொரு வருடமும் பார்ட்டி நடத்துவார்கள்.  கிறிஸ்துமஸை ஒட்டி பல வாடகைதாரர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் டிசம்பர் மாத முதல் வெள்ளியன்றே பார்ட்டி கொடுக்கும் வழக்கம் இங்கு இருக்கிறது.  பல வகை சாண்ட்விச்சுகள்,பாலாடைக்கட்டிகள்,(cheese),சாலட்கள், கார பிஸ்கட்டுகள், இனிப்பு பிஸ்கட்டுகள், கேக்குகள் என்று பல வகையான அயிட்டங்கள் இருக்கும்.  அசைவர்களுக்கென்று தனியாகச் சில அயிட்டங்கள் இருக்கும்.

    பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவுடனேயே என் கண்களில் படும் எனக்குப் பிடிக்காத விஷயம் உணவுகளைப் பரிமாறிக்கொள்ள வசதியாக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள், முள்கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்கள்.  ஒருவர் இவற்றில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு மேல் காகித நாப்கின்கள்.  ஒரு பிளேட்டை எடுத்து உபயோகித்துவிட்டு இன்னும் கொஞ்சம் உணவு வேண்டுமானால் இன்னொரு பிளேட்டை எடுத்துக்கொள்வார்கள்.  அதே பிளேட்டை மறுபடி எடுத்துச் சென்றால் உணவைப் பரிமாறிக்கொள்ளும்போது எப்படியாவது இவர்கள் பிளேட்டில் உள்ள எச்சில் உணவு – அதாவது அதில் கிருமிகள் இருக்கலாம் என்பதால் – பொதுவாக உள்ள உணவில்சேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடாம்!  அதன் பிறகு இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ள சிறிய பிளாஸ்டிக் தட்டுகள். எல்லோரும் வயிறார உண்டு முடித்த பிறகு குப்பைக் கூடை பிளாஸ்டிக்தட்டுகள் வகையறாக்களோடு  நிறைந்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களும் குப்பைகளைப் போடும் புதைகுழிகளில் போய்ச் சேரும்.   இவை மக்காத குப்பைகள் என்பதால் ஆண்டுக் கணக்காக அங்கேயே இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உண்டு.

    தட்டுகளில் பரிமாறிக்கொண்ட உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைப்பதில்லை.  (இந்தியாவிலேயே பலர் அப்படி நினைப்பதில்லை.  அப்புறம் வளம் கொழிக்கும் அமெரிக்காவைப் பற்றி என்ன சொல்வது?)  முடிக்க விரும்பியதை மட்டும் முடித்துவிட்டு மீதியை அப்படியே கீழே போடுவார்கள்.

    இம்மாதிரி பார்ட்டிகளில் சில அயிட்டங்களாவது மிஞ்சிவிடும்.  அவற்றைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துப் போக பல அமெரிக்கர்கள் விரும்புவதில்லை.  இந்தியாவில் என்றால் அங்கு வேலைபார்க்கும் ஏழைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.  ஏனெனில் அவர்களால் உணவுகளை எளிதில் வாங்க முடியாது.  அமெரிக்காவில் பார்ட்டிகளில் பரிமாறப்படும் உணவுகளை வாங்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.  தங்களுக்குப் பிடித்த அயிட்டம் என்று ஏதாவது இருந்தாலொழிய மற்றவற்றை எடுத்துச் செல்ல மாட்டார்கள்.  உணவு தயாரித்து இம்மாதிரி பார்ட்டிகளுக்குக் கொடுப்பதற்கென்று சில கம்பெனிகள் இருக்கின்றன.  அந்தக் கம்பெனி ஆட்கள் உணவுகளைக் கொண்டுவந்து மேஜைகளில் பரப்பிவிட்டுப் பின் கடைசியாக பரிமாறிய பாத்திரங்களை எடுத்துச் செல்வார்கள்.  என்ன மிஞ்சியிருந்தாலும் அவற்றை அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்கள்.  விருந்திற்கு வந்தவர்களும் ஒரு முறை சாப்பிட்டதை மறு முறை வீட்டிற்கு எடுத்துப் போய்ச் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.  இவ்வளவு வீணாகிறதே, அதில் கொஞ்சமாவது வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா என்று ஒருவரும் நினைப்பதில்லை.  என்னால் முடிந்த அளவு நான் வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு.  அதை குளிர்பெட்டியில் வைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் என்ன குறைந்துவிடும்?

    இத்தனை உணவுப் பொருள்கள் வீணாகின்றனவே, இதை என்னால் சகிக்க முடியவில்லையே, நான் பார்ட்டிக்கே வந்திருக்கக் கூடாதோ?  அப்படி வந்திருக்காவிட்டால் இதையெல்லாம் பார்த்திருக்கத் தேவையில்லையே என்று என் கணவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அமெரிக்காவில் இப்படி உணவுகள் வீணாக்கப்படுவதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோதே இந்தியாவில் இம்மாதிரி பார்ட்டிகளில் மிஞ்சியதை சாப்பிடுவதற்காக எத்தனை ஏழைகள் காத்திருப்பார்கள் என்ற வேதனை தரும் நினைவும் கூடவே வந்தது.  இப்படி மிஞ்சிய உணவைச் சாப்பிடுவதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது உணவை வீணாக்குவதை விட மேல் அல்லவா என்ற நினைப்பும் எனக்கு ஏற்பட்டது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதற்குச் சாத்தியமே இல்லையா?.

    Share
  • அமெரிக்காவில் என்று தணியும் சாமான் வாங்கும் மோகம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் நான் அமெரிக்க நன்றி தெரிவிக்கும் பண்டிகை (Thanksgiving) பற்றி எழுதியிருக்கிறேன்.  இந்த வருஷம் அதில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் பற்றி இப்போது எழுதுகிறேன்.

    இந்தியாவில் பல காரணங்களுக்காக விடிய விடிய விழித்திருந்திருக்கிறோம்.  முதலாவதாக இறைவனைப் பற்றிச் சதாகாலமும் சிந்தித்து அவனைத் தொழுவதற்காக சிவராத்திரி அன்று விழித்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அடுத்ததாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பெண்கள் இரவெல்லாம் விழித்திருந்து பலகாரங்கள் செய்வார்கள்.  பலகாரங்கள் செய்யும் வேலையை இரவில் முடித்துவிட்டுத் தீபாவளி அன்று பகல் கொஞ்சம் ஓய்வு எடுப்பதோடு சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளிலும் காலம் கழிப்பார்கள்.  அடுத்து பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் இரவெல்லாம் விழித்திருந்து விழுந்து விழுந்து படிப்பார்கள்.  அந்தக் காலத்தில் கிராமங்களில் நாடகங்கள் நடத்தும்போது இரவு முழுவதும் ஊர் ஜனங்கள் விழித்திருந்து அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள்.

    ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு சாமான்கள் வாங்குவதற்குப் பலர் இரவு விழித்திருந்திருக்கிறார்கள்.  ஐரோப்பியக் குடியேறிகள் முதன் முதலில் அமெரிக்காவிற்கு வந்தபோது அப்போது அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் அவர்களை வரவேற்று நிறைய உதவிகள் புரிந்தார்கள்.  ஒரு ஆண்டு கழிந்த பிறகு குடியேறிகள் தாங்கள் புது இடத்தில் உயிர்பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.  இப்படி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் பண்டிகையாக வளர்ந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்தப் பண்டிகையை நவம்பர் மாதக் கடைசி வியாழனன்று கொண்டாடும் பண்டிகையாக சட்டபூர்வமாக்கினார்.  இருபதாம் நூற்றாண்டில் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் நவம்பர் மாத நாலாவது வியாழக் கிழமையன்று அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாளிலிருந்து கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் வாங்கும் வழக்கம் இருந்ததால் பரிசுகள் வாங்குவதற்கு நிறைய நாட்கள் இருந்திருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!.   அப்போதே சாமான்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் அமெரிக்கர்களிடம் இருந்திருக்கும்போலும்.

    நாளடைவில் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்குவது  எல்லோரும் பின்பற்றும் செயலாக மாறியது.  இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட வணிக நிறுவனங்கள் அன்று பெரிய அளவில் பொருள்களின் விலையில் தள்ளுபடி கொடுத்து அவற்றை விற்க முற்பட்டார்கள்.  அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட சாமான்கள் ஒரு சிலவே கடைகளில் இருக்கும்.  ஆனால் அவற்றை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் உள்ள பொருள்கள் தீர்ந்து போய்விட்டாலும் மற்றப் பொருள்களை வாங்குவார்கள்.  இதற்காகவே கடைகளையும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் அதிகாலையிலேயே திறந்துவிடுவார்கள்.  அந்த வெள்ளிக்கிழமையை  கறுப்பு வெள்ளி (Black Friday) – ‘அதாவது வரவு வரும் நாள்’ – என்று அழைப்பார்கள்.  வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகத்தில் நஷ்டம் வந்தால் சிவப்பு மையில் கோடிடுவார்களாம்.  இந்த வெள்ளியன்று லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் இதைக் கறுப்பு வெள்ளி என்கிறார்கள்.

    முதலில் கறுப்பு வெள்ளியன்று காலையில் எட்டு மணிக்குக் கடை திறக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள்.  இதுவே காலை ஐந்து மணிக்கே திறக்க ஆரம்பிக்கும் பழக்கமாக உருவெடுத்தது.  ஒரு கடை எட்டு மணிக்குத் திறந்தால் அதற்குப் போட்டியான கடை ஏழு மணிக்கே திறக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு இன்னொரு கடை ஆறு மணிக்கே திறக்க ஆரம்பித்து, பின் எல்லாக் கடைகளும் காலை ஐந்து மணிக்கே திறக்கும் பழக்கத்தை ஆரம்பித்தன.

    வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்கக் கடைக்கு வரவழைப்பதில் கடைகளுக்குள் பலத்த போட்டி இருப்பதால் நன்றி தெரிவிக்கும் பண்டிகை அன்றே கடைகளைத் திறக்கும் பழக்கத்தை சில கடைகள் மேற்கொள்ளத் தொடங்கின.  அன்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மூன்று மணியிலிருந்து நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்து ஆறு மணிக்கு வான்கோழியோடு கூடிய பெரிய விருந்தை உண்ண ஆரம்பிப்பார்கள்.  மதுபானங்களைத் தாராளமாக அருந்தும் இந்த விருந்து முடிய இரவு வெகு நேரம் ஆகும்.  அதனால் அன்று அத்தியாவசிய சேவைகள் புரியும் மருத்துவமனைகள், போக்குவரத்து போன்றவை தவிர எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை.  இதில் டிபார்ட்மெண்ட் கடைகளும் அடக்கம்.  ஆனால் கடைகளுக்கிடையே போட்டிகள் வலுத்து வருவதால் போன வருடம் வியாழக் கிழமை அன்றே விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கடைகளைத் திறந்துவிடும் பழக்கத்தை ஓரிரண்டு கடைகள் ஆரம்பித்தன.

    இந்த வருடம் இது வரை செய்திருந்த சாதனைகளை எல்லாம் முறியடிப்பது போல் எல்லா கடைகளும் வியாழக் கிழமை இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் செய்துகொண்டிருந்தன.  (ஓரிரண்டு டிபார்ட்மெண்ட் கடைகள் மற்ற நாட்களைப்போல் வியாழன் காலையிலேயே திறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.  அடுத்த வருடம் எல்லாக் கடைகளும் இதைப் பின்பற்றலாம்.)  வாடிக்கையாளர்களும் இரவு முழுவதும் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  கடை ஊழியர்களும் அவசர அவசரமாக விருந்தை முடித்துக்கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட மறுநாள் வெள்ளியன்று கடைகளை காலையில் சீக்கிரமே திறந்தாலும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான வியாழனன்று எல்லா நிறுவனங்களும் மூடியிருக்குமாதலால் எப்போதும் கார்கள் நிறைந்து காணப்படும் அமெரிக்கச் சாலைகள் அன்று ஒரு சில கார்கள் தவிர – இந்தக் கார்களில் செல்லுபவர்களும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையைக் கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் – வெறிச்சோடிப் போயிருக்கும்.  அன்று வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த சாலைகளைப் பார்ப்பதற்காகவென்றே நான் கொஞ்ச தூரம் வெளியே செல்வதுண்டு.  ‘இன்று ஒரு நாள் எல்லோரும் வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள்’ என்ற ஒரு நினைப்பே எனக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும்.  இனி அதெல்லாம் கிடையாது போலும்.

    இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்வதால் அவர்களுடைய பண்டிகைகளுக்கெல்லாம் விடுமுறை உண்டு.  வருடத்தில் இருபது நாட்களாவது விடுமுறை நாட்களாக இருக்கும்.  அமெரிக்காவில் மிகக் குறைந்த நாட்களே விடுமுறை நாட்கள்.  ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை நாள், கிருஸ்துமஸ் பண்டிகை நாள் ஆகியவையே.  டிபார்ட்மெண்ட் கடைகள் ஈஸ்டர், நன்றி தெரிவிக்கும் பண்டிகை,கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களுக்கு மட்டும் மூடியிருக்கும்.  மற்ற விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு விடுமுறையாதலால் அன்று சாமான்கள் வாங்க வருவார்கள் என்று டிபார்ட்மெண்ட் கடைகள் திறந்திருக்கும்.  ஈஸ்டருக்கு மூடுவதைப் பல கடைகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மூடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.  இப்போது நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மூடுவதையும் மெதுவாகவிட்டுவிடுவார்கள் போலும்.  எதற்காக?  சாமான்களை வாங்கிக் குவிப்பதற்காக.

    சிகாகோவில் பிரபல சாக்கலேட் விற்கும் கடை ஒன்று அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து மறு நாள் வெள்ளி காலை ஒன்பது மணி வரை தள்ளுபடி விற்பனை செய்தது.  இந்த நேரத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டின் விலை இருபத்தைந்து காசுகள்.  அந்த நேரத்திற்குப் பிறகு போனால் ஒன்றின் விலை நாற்பது காசுகள்.நூற்றுக் கணக்கில் சாக்கலேட் வாங்கும்போது தள்ளுபடி விற்பனைக்கும் தள்ளுபடி அல்லாத விற்பனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.  டி.வி. போன்ற விலையுயர்ந்த சாமான்கள் வாங்கினால் நிறையப் பணம் மிச்சம் செய்யலாம்.  இருப்பினும் ஆற அமர விருந்துண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய சமயத்தில் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு மால்களுக்குஓடி வர வேண்டுமா?

    கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் தங்கள் சாமான்களை வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்குப் பல வகையாக விளம்பரம் செய்தனர்.  பிறருக்குக் கொடுப்பதற்குப் பரிசுகள் வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த வருஷம் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள்,தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டியசாமான்கள் ஆகியவற்றைக் கூட தள்ளுபடி விற்பனையில் இடம் பெறச் செய்தார்கள்.  ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து ஒன்றைப் பரிசுக்காக வாங்கினால் இன்னொன்றைத் தங்களுக்காக வாங்கிக்கொள்ளும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பொருள்கள் வாங்கும் வெறியை வளர்த்துவிட்டார்கள்.

    ஒரு இருபத்தைந்து வயது வடிக்கையாளர் முதலில் நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து கடை கடையாகச் சென்று அறுபது அங்குல டி.வி., ஐபாட்(iPod), குக்கர் என்று சாமான்களாக வாங்கித் தள்ளியிருக்கிறார்.  இதெல்லாம் அவருக்காகவும் அவருடைய மனைவிக்காகவும் மட்டுமே.

    இதெல்லாம் போக ஆன்லைனில் பொருள்கள் வாங்கியவர்கள் பட்டியல் வேறு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போகிறது.  இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகமாம். இதில் கால் பங்கு செல்போன் மூலம் வாங்கப்பட்டதாம்.

    அமெரிக்காவில் தயாராகும் பொருள்களை வாங்குங்கள் என்று ஒரு சாரார் விளம்பரம் செய்கிறார்கள்.  ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாம் இவர்கள் ‘designer goods’ என்று அழைக்கும் விலையுயர்ந்த அணிகலன்கள், உடைகள், காலணிகள்.  இவற்றிற்கு அமெரிக்கர்கள் நிறையப் பணம் கொடுக்க வேண்டும்.  மேலும் அமெரிக்காவில் தயாராகும் எந்தப் பொருளுக்கும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  ஏனெனில் வெளிநாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் சம்பளம் அமெரிக்கத் தொழிலாளிகளுக் கொடுக்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு.  வளர்ந்துவரும் நாடுகளில் தொழிலாளர்கள் பாதுக்காப்பிற்கு இந்தக் கம்பெனிகள் செய்ய வேண்டியவற்றை அந்தந்த நாட்டு அரசுகள் சரியாகக் கண்காணிப்பதில்லை.  பங்களா தேஷில் போன வருடம் நடந்த ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை பகிஷ்கரிக்கும் எண்ணம் அமெரிக்கர்களுக்கு வந்தபாடில்லை.

    அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாம்.  டிபார்ட்மெண்ட் கடைகளில் நடக்கும் விற்பனை ஒவ்வொரு வருடத்திற்கும் கூடிக்கொண்டே போக வேண்டுமாம்.  அப்போதுதான் அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்குமாம்.  என்ன பொருளாதாரமோ.  நுகர்வோர்களை உருவாக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாலும் முடியவில்லை.  இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

    Share
  • அமெரிக்க இந்தியர்கள் செய்யும் முறையற்ற செயல்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு போகின்றன.  நடுத்தர வர்க்க மக்களால் கூட இதைச் சமாளிக்க முடியவில்லை.  உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்லை எடுப்பதற்கு – அதில் கொஞ்சம் சிரமம் இருந்தால் – $800 – அதாவது இன்றைய டாலர்-ரூபாய் விகிதத்தில் 48,800 ரூபாய் – வசூலிக்கிறார்கள்.  இந்தியாவில் ஒரு கைதேர்ந்த பல் மருத்துவர் ஒரு பல்லை எடுப்பதற்கு 500 ரூபாய் பில் போடுகிறார்.  இப்படி எக்கச்சக்கமாக மருத்துவச் செலவுகள் ஆவதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகள் தோன்றியிருக்கின்றன.  அவை வசூலிக்கும் கட்டணங்களும் போடும் நிபந்தனைகளும் அமெரிக்க மக்களைத் திணறடிக்கின்றன.  இதைச் சரிசெய்ய எத்தனையோ ஜனாதிபதிகள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    அமெரிக்காவில் இப்போது நிறையப் பேர் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள்.  இதில் சிலருக்கு வேலை இல்லாததால் மருத்துவக் காப்பீட்டிற்குரிய பிரீமியத்தைப் பகிர்ந்துகொள்ள கம்பெனியோ வேலை கொடுத்தவரோ இல்லை.  வேலை இருந்தாலும் தங்கள் பங்குக்குரிய பிரீமியத்தைக் கட்ட சிலரிடம் தேவையான பணம் இல்லை.  இப்போது ஒபாமா எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு ஒரு புதிய மருத்துவச் சட்டத்தை (Affordable Care Act) குடியரசுக் கட்சியினரின் மிகுந்த எதிர்ப்போடு 2010-இல் நிறைவேற்றினார்.  இதைக் குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் சட்டம் (Obama Care) என்கிறார்கள்.   அதன் சில பகுதிகள் 2014-இல் அமலுக்கு வருகின்றன.  இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அதற்குரிய ஆயத்தங்கள் ஆரம்பிக்கின்றன.

    எப்படியாவது அந்தச் சட்டத்தை வராமல் தடுத்துவிட வேண்டும் என்று குடியரசுக் கட்சியில் ஒரு சிலர் மும்மரமாக முயன்று வருகிறார்கள்.  ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் 2012-இல் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவிக்கு வந்த அன்றே அந்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிடுவேன் என்று சூளுரைத்தார்.  நல்லவேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவில்லை.  ஆனால் அதே ஆண்டு அமெரிக்கப் பார்லிமெண்டிற்கு  நடந்த தேர்தலில் கீழ் அவையான காங்கிரஸில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது.  இப்போது அதன் தலைவராக இருக்கும் ஜான் பேனர் இந்தக் கட்டத்தில் எப்படியாவது ஒபாமா கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை ஒழித்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டு அதைச் செயலாக்கத் துடிக்கிறார்.  அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு பணம் ஒதுக்க நடந்து வரும் விவாதங்களில் ஒபாமாவின் மருத்துவச் சட்டத்திற்குப் பணம் ஒதுக்கப் போவதில்லை என்றார்.  ஆனால் ஒபாமா மசியவில்லை.  இப்போது இன்னும் ஒரு வருடம் அந்தச் சட்டம் காத்திருக்கலாம் என்று பேனர் கூறுகிறார்.  2014-ஆம் ஆண்டு நடைபெறப் போகும் காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கான தேர்தலில் மேலவையான செனட்டிலும் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அப்போது எளிதாக ஒபாமாவின் சட்டத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்.  ஒபாமாவின் புதிய மருத்துவச் சட்டத்தினால் ஏற்படும் செலவுகளோடு அரசின் மற்ற செலவுகளுக்கு ஆகும் பணத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.  அதனால் இப்போது அத்தியாவசிய அலுவலங்கள் தவிர மத்திய அரசின் மற்ற அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன.  இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  ஆனாலும் ஜான் பேனர் தன் பிடிவாதத்திலிருந்து மாறப் போவதாகத் தெரியவில்லை.  ஒபாமாவும் எப்படியும் தான் மிகவும் பாடுபட்டுக் கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை குடியரசுத் தலைவர்கள் ஒழிக்க உடன்படப் போவதில்லை.  இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.  வரும் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் ‘அமெரிக்கா எவ்வளவு கடன் வாங்கலாம்’ என்ற விவாதத்தில் ஒரு வேளை குடியரசுக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சமரசம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.  அப்போதாவது ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் நாட்டின் நிலை மிகவும் மோசமாகும் என்று அஞ்சுகிறார்கள்.  மக்கள் மத்தியில் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதற்கு எந்தக் கட்சி தான்தான் காரணம் என்று நினைக்கிறதோ அந்தக் கட்சி தன் பிடிவாதத்திலிருந்து கடைசியாகப் பின்வாங்கும்.

    மேலே சொன்னபடி ஜனாதிபதி ட்ரூமன் காலத்திலிருந்தே வசதியற்றவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கப் பல முயற்சிகள் நடந்து வந்தன.  ஆனாலும் ஜான்ஸன் காலம் வரை எதுவும் உருப்படியாக நடக்கவில்லை.  1935-இல் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கொண்டுவந்த சமூக பாதுகாப்புச் சட்டத்தை (Social Security Act)  ஜான்ஸன் 1965-இல் விரிவாக்கி மெடிகேர் (Medicare), மெடிகெய்ட் (Medicaid) என்ற இரண்டு சட்டங்களை அதனோடு இணைத்தார்.  வறுமையையும் இனத்தின் அடிப்படையில் பொருளாதார வேறுபாட்டையும் ஒழிக்க ஜான்ஸன் செய்த செயல்கள் இவை.  இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் முதல் மெடிக்கேர் கார்டை ஓய்வு பெற்ற ஜனாதிபதி ட்ரூமனுக்கும் இரண்டாவது கார்டை அவருடைய மனைவிக்கும் ஜான்ஸன் அளித்தாராம்!

    மெடிக்கேர் சட்டத்தின்படி எல்லோருடைய சம்பளத்தில் இருந்தும் 1.45%-ஐ மெடிக்கேர் செலவுகளுக்காக அரசு வசூலிக்கும்.  இன்னொரு 1.45%-ஐ பணிசெய்பவர் வேலைபார்க்கும் கம்பெனி கொடுக்கும்.  தங்களின் கீழ் 25 பேர் வேலைபார்த்தால் அந்தக் கம்பெனி இதைச் செலுத்த வேண்டும்.  தாங்களாகத் தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் 2.9%-ஐ இதற்காக அரசுக்குச் செலுத்த வேண்டும்.  ஒருவருடைய வருமானம் இரண்டு லட்சம் டாலருக்கு மேல் இருந்தால் அவர்கள் 3.8% கட்ட வேண்டும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  ஒருவர் பத்து ஆண்டுகளாவது வேலைபார்த்திருக்க வேண்டும்.  கணவன் பார்த்திருந்தால் மனைவிக்கும் மனைவி பார்த்திருந்தால் கணவனுக்கும் இதில் பயன் பெற உரிமை  உண்டு.  அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ (Green card holder)  இருக்க வேண்டும்.  அவருக்கு வயது 65-க்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  மாற்றுத் திறனாளியாக இருந்தால் 65 வயதுக்குக் கீழேயும் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.  இதில் சேர உரிமை பெறுபவர்கள் வருடம் தோறும் பிரீமியம் கட்ட வேண்டும்.  சமூகப் பாதுகாப்புத் தொகையிலிருந்து (Social Security Benefits)  (பத்து ஆண்டுகள் வேலைபார்த்த அமெரிக்கர்கள் எல்லோருக்கும் 65 வயதிற்குப் பிறகு அரசு ஓய்வூதியம் போன்ற ஒரு தொகையைக் கொடுக்கிறது.  இதற்கும் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை (6.2%) அரசு பிடித்துக்கொள்ளும். கம்பெனியும் 6.2% கட்ட வேண்டும்.) இந்தப் பிரீமியத்தைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத்தான் கொடுப்பார்கள்.  மெடிக்கேரில்  நான்கு பகுதிகள் உண்டு.  முதல் பகுதி மருத்துவமனையில் சேர்ந்தால் அதற்காகும் செலவுகளுக்காக.  இரண்டாவது பகுதி மருத்துவரிடம் செல்லும்போது ஆகும் செலவுகளுக்காக.  இவை இரண்டும் எல்லோருக்கும் கிடைக்கும்.  மூன்றாவது பகுதி மருத்துவத்தில் ஆகும் விசேஷ செலவுகளுக்காக.  இதற்கு தனியாக பிரீமியம் கட்ட வேண்டும்.  நான்காவது பகுதி மருந்துகளுக்கான செலவுகளுக்காக.  இதில் சேரவும் தனி பிரீமியம் கட்ட வேண்டும்.  மெடிக்கேரில் சேர்ந்துவிட்டாலும் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவுகளிலும் மருத்துவர்களைப் பார்க்கும் செலவுகளிலும் ஒரு பங்கைப் பயனாளிகள் கட்ட வேண்டும்.  அமெரிக்க மெடிக்கேர் பயனாளிகள் மெடிக்கேரில் சேர்ந்தாலும் நிறையச் செலவுகள் இருக்கின்றன.  மெடிக்கேர் திட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

    இரண்டாவது சட்டமான மெடிக்கெய்டில் சேருவதற்கு அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ இருக்க வேண்டும்.  இதற்கு வயது வரம்பு இல்லை.  ஆனால் அவரது வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே – அதாவது வருஷ வருமானம் $15,000-க்குக் கீழே – இருக்க வேண்டும்.  இப்படிச் சில அடிப்படை விதிகள் இருந்தாலும் யாரை மெடிக்கெய்டில் பயனாளியாகச் சேர்க்கலாம் என்பதை ஒவ்வொரு மாநிலமும் தானாக வரையறுக்கிறது.  மெடிக்கெய்ட் திட்டத்தில் சேர வேண்டும் என்ற கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லையென்றாலும் இப்போது எல்லா மாநிலங்களும் அதில் பங்கு பெறுகின்றன.  ஒவ்வொரு மாநிலமும் அங்கு வசிக்கும் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்கிறது.  மீதிப் பாதியை மத்திய அரசு ஏற்கிறது.  மெடிக்கெய்ட் பயனாளிகள் பெறும் சலுகைகள், வசதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.  மெடிகெய்ட் பயனாளிகளுக்கு மெடிக்கேர் பயனாளிகள் போல் எந்த விதச் செலவும் இல்லை.

    அமெரிக்காவில் நல்ல சம்பளம் பெறும் பல இந்தியர்கள் தங்கள் பெற்றோர்களைத் தங்களோடு வைத்துக்கொள்கிறார்கள்.  அமெரிக்கப் பிரஜைகளாக இருப்பவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பித்த உடனேயே பச்சைக் கார்டு கிடைத்துவிடுகிறது.  ஐந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்துவிடுகிறது.  பச்சைக் கார்டு வைத்திருப்பவர்களின் பெற்றோர்களுக்கும் பச்சைக் கார்டு கிடைத்துவிடும்.  ஆனால் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எல்லா உதவிகளும் பெற்றுக்கொள்கிறர்கள், உணவு, உடை, இருப்பிடம் உட்பட.  பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கு ஆயாவாக இருந்து அவர்களை வீட்டில் கவனித்துக்கொள்வது போன்ற தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்கிறார்கள்.  அமெரிக்காவில் ஆயாக்கள் வைத்துக்கொண்டால் எக்கச்சக்க செலவு ஆகும்.  இப்படிக் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நிறைய உதவிகள் செய்துகொண்டாலும்  மருத்துவச் செலவுகளுக்கு மாத்திரம் தனிக் குடும்பமாக ஆகிவிடுகிறார்கள்.  இவர்களே இந்தியாவில் ரேஷன் கார்டில் பெற்றோர் அவர்களோடு வசித்தாலும் வருமானம் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களுக்குத் தனி கார்டுகள் வாங்குவார்களா?  பெற்றோர்களின் வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தால் அதற்குரிய சலுகைகளை அவர்கள் பெறும்படி செய்வார்களா?  இருபதாயிரம் டாலர் வருமானம் உள்ள ஒரு அமெரிக்கரால் மெடிக்கெய்டில் சேர முடியாது.  ஆனால் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் ஒரு இந்தியரின் பெற்றோர்கள் மெடிக்கெய்டில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

    அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் பெற்றோர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவை மாநிலத்தின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.  எல்லா மாநிலங்களிலும் இந்தியர்கள் இம்மாதிரிப் பெற்றோர்களை  மெடிக்கெய்டில் சேர்ப்பது நடக்கிறது.  ஒருவருக்கு 500 டாலர் செலவழித்தால் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனியில் மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.  ஆனால் அமெரிக்காவில் வாழும் வசதி படைத்த இந்தியர்கள் அப்படிச் செய்வதில்லை.  அந்த மாநிலத்துக்குரிய மெடிக்கெய்டில் சேர்த்துவிடுகிறார்கள்.  கலிஃபோர்னியா மாநிலத்தில் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கு மற்ற மாநிலங்களை விட நல்ல மருத்துவ வசதிகள்  கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  அங்குதான் கணினி வல்லுநர்கள் சிலிகான் வேலியில் (Silicon Valley) வேலைபார்க்கிறார்கள்.  நல்ல வசதி படைத்த இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள்.  ஆரக்கிள் (Oracle), கூகுள் போன்ற  கம்பெனிகளின் தலைமையகங்கள் கலிஃபோர்னியாவில் இருக்கின்றன.  இந்தக் கம்பெனிகளின் கிளைகளில் வேறு மாநிலங்களில் வேலைபார்ப்பவர்கள் கூட கலிஃபோர்னியாவில் நல்ல மெடிக்கெய்ட் வசதி இருப்பதால் அங்கு தங்கள் வேலை இடத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.  பெற்றோர்களை மெடிக்கெய்ட் பயனாளிகளாகச் சேர்த்துவிடுகிறார்கள்.  பிள்ளைகள் நல்ல வசதி படைத்தவர்கள் என்றாலும் பெற்றோர்களுக்கு எந்த வித வருமானமும் இல்லாததால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வருகிறார்கள்.  அமெரிக்கக் கலாச்சாரப்படியும் சட்டப்படியும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களுடைய மைனர் குழந்தைகள் மட்டுமே அங்கத்தினர்கள்.  பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்கள் இல்லை.  ஆனால் இந்தியாவில் பெற்றோர்களும் குடும்ப அங்கத்தினர்களாகக் கருதப்படுகிறார்கள்.  அதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்கக் கம்பெனிகளும் இந்தியாவில் தங்கள் பணியாளர்கள் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டில் பெற்றோர்களைச் சேர்ப்பதை அனுமதிக்கிறார்கள்.  அங்கு மருத்துவச் செலவுகள் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது மிக, மிகக் குறைவு என்பதும் அதற்கு ஒரு காரணம்.

    அமெரிக்காவில் மெடிக்கெய்ட் பயனாளிகளில் சிலராவது தாங்கள் வேலைபார்த்தபோது கொஞ்சமாவது மருத்துவச் செலவு நிதிக்கு வரி கட்டியிருப்பார்கள்.  ஆனால் இந்தியர்களின் பெற்றோர்கள் எந்த விதத்திலும் மருத்துவச் செலவிற்கான நிதிக்கு எதுவும் கட்டியதில்லை. அமெரிக்காவில் ஏழைகளுக்காக அரசு இத்தனை வருடங்கள் பாடுபட்டுக் கொண்டுவந்திருக்கும் திட்டத்தை – இப்போது காப்பாற்றுவதற்கு ஒபாமா மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் திட்டத்தை – பணக்கார இந்தியர்களின் பெற்றோர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாமா?  பல தலைமுறைகளாக அமெரிக்க மண்ணில் உழைத்து அமெரிக்காவின் முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கும் அமெரிக்க ஏழைகளைப் போல் புதிதாகக் குடியேறியிருக்கும் வசதியான இந்தியர்களின் பெற்றோர்களும் ஏழைகளுக்கான அரசு நலத் திட்டங்களில் பயன் பெறுவது சரிதானா?  இவர்கள் செயல் சட்டத்திற்குப் புறம்பானது (illegal) இல்லையென்றாலும் அறநெறியற்ற செயல் (unethical)  அல்லவா?

    Share
  • கென்யா பயணம் – 8

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கிட்டத்தட்ட கென்யர்கள் எல்லோரும் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை.  தங்க நகை அணிந்து நாங்கள் பார்த்த ஒரே பெண் நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் வரவேற்பாளர் மட்டுமே.  இவரும் ஒரு மெல்லிய செயினைக் கழுத்திலும் சிறு வளையம் போன்ற காதணிகளைக் காதுகளிலும் அணிந்திருந்தார்.  எங்களைப் பார்க்க வந்திருந்த மாணவ நண்பனின் மனைவி காதில் சிறிய காதணி அணிந்திருந்தார்.  இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் தங்க நகைகள் அணிந்திருக்கவில்லை.

    பாரம்பரிய உடைகளை நைரோபியில் யாரும் அணிந்திருக்கவில்லை.  எல்லோரும் மேற்கத்திய உடைகளுக்கு மாறியிருக்கிறர்கள்.  தினம் தினம் நைரோபியின் பல இடங்களில் கூடும் சந்தை போன்ற இடங்களில் மட்டும் சிலர் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தார்கள்.

    இன்னும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து மாறாமல் வாழும் பழங்குடி மக்களைத் தவிர மையநீரோட்டத்தில் சேர்ந்துவிட்ட கென்யர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.  இது ஆங்கிலேயர்கள் இவர்களை ஆண்டதின் காரணமாக இருக்கலாம்.  பலர் தீவிர கிறிஸ்துவர்கள்.  எல்லோருக்கும் பெற்றோர் கொடுத்த பெயர்கள் பால், ஜேக்கப், பாலின், கேத்தி, மெர்சி, டிக்கன்ஸ், கெல்வின், பிலிப் போன்ற கிறிஸ்தவப் பெயர்களே.  எங்கள் வீட்டு யூனிட்டில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீட்டின் வாசலில் இயேசு இந்த வீட்டின் அதிபதி (Jesus is the Lord of this house)  என்று ஒரு அட்டையில் எழுதித் தொங்கவிட்டிருப்பார்கள்.  அடிக்கடி கென்யாவிலிருந்து இங்கு வந்திருக்கும் மாணவர்களைக் கூட்டி கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவார்கள்.  பிரார்த்தனை பண்ணுவார்கள்.  சில சமயங்களில் சில இந்தியர்கள் கூட இக்கூட்டங்களில் கலந்துகொள்வதுண்டு.

    இவர்களுடைய திருமண பழக்க வழக்கங்களும் மேற்கத்திய நாகரீகத்தைத் தழுவியே இருக்கின்றன.  ஒரு முறை எங்கள் யூனிட்டில் இருந்த மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘இந்தியாவில் 90 சதவிகிதத் திருமணங்கள் பெற்றோர்களால்தான் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று நான் சொல்லப் போக அந்த மாணவர் ‘நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறோம்’ என்றார்.  கென்யாவில் விவாகரத்துக்கள் எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை.  நாங்கள் முஸ்லீம்கள் யாரையும் சந்திக்கவில்லையாதலால் அவர்களிடம் இன்னும் ஒருவன் நான்கு பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம்இருக்கிறதா என்று தெரியவில்லை.  இன்னும் அந்தப் பழக்கம் இருப்பதாக கென்ய மாணவி ஒருத்தி கூறினாள்.  அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் தந்தை  முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்.  அந்த வழக்கம் இருந்ததால்தான் அவர் கென்யாவில் மனைவி இருந்தும் பாரக் ஒபாமாவின் தாயை மணந்துகொண்டார்.

    இன்னொரு முக்கிய விஷயம்.  எல்லோரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காலணிகள் அணிந்திருந்தார்கள்.  மசாய் இன குடும்பத்தின் குழந்தைகள் கூட தோலில் செய்த ஒரு வகையான காலணிகளை அணிந்திருந்தார்கள்.  காலில் காலணிகள் இல்லாமல் – குழந்தைகள் உட்பட – நாங்கள் யாரையும் பார்க்கவில்லை.

    இதை விட முக்கியமான இன்னொரு விஷயம் பள்ளிக்குச் சென்ற கென்யர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவது.  மசாய் இன குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது வகுப்புப் படிக்கும் ஜேக்ஸனின் அண்ணன் மகள் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு  ஆங்கிலத்தில் தயங்காமல் பதில் கூறினாள்.  எங்கள் ஓட்டலில் அறையைச் சுத்தம் செய்யும் பெண்ணும் அப்படியே.  பிரயாண வழிகாட்டிகள் (இவர்களையாவது அது அவர்கள் தொழில் என்று விட்டுவிடலாம்), டாக்சி ஓட்டுநர்கள், கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் என்று இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.  ஒரு மொழியை ஒருவர் நன்றாகக் கற்க வேண்டுமென்றால் ஓரளவு அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் இருக்க வேண்டும், அந்த மொழியில் நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்ததெல்லாம் கென்யவில் சரி வரவில்லை.  பள்ளிக்குச் செல்லும் எல்லோருக்கும் ஆங்கிலம் பேச வருகிறது என்ற விஷயத்தைக் கென்யாவில் தெரிந்துகொண்டேன்.

    நம் நாட்டில் பி.ஏ. படித்தவர்களால் கூட சரியாக ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.  ஒரு விஷயத்தை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட ஆங்கிலத்தில் உரையாடத் திணறுகிறார்கள்.  இது ஏன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.  தாய் மொழிப் பற்று என்று ஆங்கிலத்தை ஒதுக்கிவிட்டோமெயொழிய தாய் மொழியிலும் பாண்டித்யம் பெறவில்லை.  என் கணவர் ஒரு மொழியியல் வல்லுநர்.  நான் அவரிடம், ‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.  இந்தியாவிலும் கென்யர்கள் போல் எல்லோரும் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும்.  கென்யாவில் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறியிருக்கிறேன்.  கென்யா ஆங்கிலேயரின் கீழ் இருந்தது காரணம் என்றால் நம்மையும் அவர்கள்தானே முன்னூறு வருடங்கள் ஆண்டார்கள். பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படும் முறையில்தான் நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்.  இதை நாமும் எளிதாகச் செய்யலாமே.

    ஆங்கிலம் அகில உலக மொழியாக வளர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  அதனால் இந்தியர்களாகிய நாமும் தாய் மொழியோடு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற வேண்டும்.  இதில் கென்யா நமக்கு முன்னால் இருக்கிறது.

    நைரோபியின் தெருக்களில் மட்டுமல்ல, நாங்கள் பார்த்த சிறிய ஊர்களின் தெருக்களிலும் ஆடு, மாடுகளோ, நாய்களோ காணப்படவில்லை.  தெரு நாய்களை ந்கராட்சி கொன்றுவிடும் என்று கூறினார்கள்.  வீட்டில் நாய் வளர்க்கலாம்.  நாங்கள் பார்க்கச் சென்ற மசாய் இன மக்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன.  நம் நாட்டில் போல் மாடுகளைத் தெருவில் அலையவிடுவதில்லை.  அதற்கு இரண்டு காரணங்கள். அது சட்டப்படி குற்றம்.  இரண்டாவது, அவை திருட்டுப் போகும் அபாயம் இருக்கிறது.

    சிறு கிராமங்களில் வசிப்பவர்கள் மாடுகளை வளர்த்தால் அந்த மாடுகளின் பாலைப் பக்கத்தில் உள்ள பால் பண்ணைகளுக்கு விற்பார்களாம்.  அங்கு அதிகமாக பால் சேர்ந்துவிட்டால் நைரோபியில் இருக்கும் தேசிய பால பண்ணைக்கு அனுப்பிவிடுவார்களாம்.  அங்கு பாக்கெட்டுகளாகத் தயாரிக்கப்பட்டுப் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்.  பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் இந்த பால் பாக்கெட்டுகள் கிடைக்கின்றன.  சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் இருந்தால் அவர்களிடம் தங்களுக்குத் தேவையான பாலை வாங்கிக்கொள்வார்களாம்.

    டாக்சி ஓட்டுநர்களைப் பற்றிக் கூறாவிட்டால் கென்யா பற்றிய வர்ணனை முடிவு பெறாது.  நாம் ஓட்டலுக்கு வரச் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் பேரம் பேசிய பிறகு கடைசியில் அதிகம் கொடுங்கள் என்று கேட்பதில்லை.  ஒரு ஓட்டுநர் செய்த காரியம் இன்னும் நினைவில் நிற்கிறது.  எங்களை ஹாண்டி உணவகத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கேயே காத்திருந்து பின் ஓட்டலுக்கு அழைத்து வருவதற்கு ஒரு தொகையைப் பேசிக்கொண்டோம்.  உணவகத்திற்குப் பக்கத்தில் டாக்சியை நிறுத்தினால் அதற்கு ஒரு கட்டணம் உண்டு.  அதையும் நாங்களே கொடுப்பதாக ஏற்பாடு.  இருப்பினும் இந்த ஓட்டுநர் என்ன செய்தார் தெரியுமா?  எங்களை உணவகத்தின் வாசலில் இறக்கிவிட்டுவிட்டு டாக்சியை நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத தெருவிற்குச் சென்று காத்திருந்திருக்கிறார். எங்கள் பணத்தை மிச்சப்படுத்த அவர் செய்த காரியம் இது.

    எல்லா நாடுகளிலும் போல் கென்யாவிலும் சமூகத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல் தெரிகிறது.  ஒரு புறம் பரந்த இடங்களில் பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் பெரிய கோட்டை மாதிரி மதில் சுவரைக் கட்டிக்கொண்டு காவலர்களை வைத்துக்கொண்டு வாழும் கென்யர்கள்.  இன்னொரு புறம் கால் கடுக்கப் பன்னிரெண்டு மணி நேரம் ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு ஓட்டலுக்கு வருபவர்களை வரவேற்று அவர்கள் கொண்டுவரும் சூட்கேசுகளை அவர்களுடைய அறைகளுக்கு சுமந்துசெல்லும் பணியாளர்கள்.  இவர்கள் சம்பளம் மாதத்திற்கு 8,000 ஷில்லிங்குகள்தானாம்.  இந்தச் சம்பளம்  ஒருவருக்கே போதாது.  அமெரிக்க மாடல் மால்களில் பொருள்களை வாங்கிக் குவிக்கும் கூட்டம் ஒரு புறம்; தெருக்களில் கடை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டம் இன்னொரு புறம்.  தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் பல மைல்கள் நடந்தே வேலைக்குச் செல்வதைக் கென்யாவில் பார்க்கலாம்.  எல்லோருக்கும் கட்டாயம் கொடுத்தாக வேண்டிய குறைந்த சம்பளமாக 7500 ஷில்லிங்கை அரசு நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லையாம்.

    மருத்துவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ஷில்லிங் சம்பளமாம். இதற்குமேல் தனியாக கிளினிக் நடத்தலாம். பேர்பெற்ற வழக்கறிஞர்களுக்கு மாதம் ஐந்து லட்சம் ஷில்லிங் வரை வருமானம் இருக்குமாம்..  அதனால்தான் இங்கு வரும் கென்ய மாணவர்களில் முக்கால்வாசிப் பேர் சட்டம் படிக்கிறார்கள் போலும்!  இந்தியாவும் கென்யாவும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு நாட்டு அரசியல் சட்டங்களுக்கும் ஒற்றுமை இருந்தபோதிலும், இந்தியாவில் சட்டம் படித்துவிட்டுப் போகும் மாணவர்கள் கென்யாவில் இன்னொரு தேர்வு எழுத வேண்டுமாம்.  கென்யாவில் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் பழக்கம் இல்லையாம்.  ஒரு முறை ஒரு மாணவனிடம் ‘இந்தியக் கல்வித் திட்டத்தில் மனப்பாடம் செய்வதுதானே முதன்மையாக இருக்கிறது.  அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது  ‘விரிவுரையாளர்கள் பாடக் குறிப்புகளை ‘டிக்டேட்’ செய்யும்போது அதை எழுதிக்கொள்வோம்;.  அதன் துணையைக் கொண்டு பின் பாடப் புத்தகங்களைப் படித்துக்கொள்வோம்’ என்றான்.  தேர்வுகளில் விரிவுரையாளர் ‘டிக்டேட்’ பண்ணியதை அப்படியே எழுதுவதில்லை.  அப்படி எழுதாவிட்டால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காது என்று இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  இருப்பினும் டிக்டேட் பண்ணியதை இவர்களால் எழுத முடியவில்லை.  மேலும் இவர்கள் தேர்வுகளில் தொண்ணூறு, நூறு சதவிகிதம் மதிப்பெண்கள் எதிர்பார்ப்பதில்லை.  ஏனெனில் இவர்கள் இந்தியாவில் உள்ள நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதில்லை.  ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி பட்டம் பெற்றுவிட்டால் போதும்.  அவர்கள் நாட்டிற்குப் போய் அங்குள்ள தேர்வுகளை எழுதிக்கொள்வார்கள்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கலவியின்மூலம் பெறும் பட்டத்திற்கும் கென்யாவில் மதிப்பு உண்டாம்!

    கென்யாவில் சுதந்திரத்திற்குமுன் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் இருந்ததாம்.  இப்போது பத்துக்குமேல் இருக்கின்றனவாம். இவற்றொடு இணைந்த் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கு கல்லூரியில் சேருவதற்கே பெரிய போட்டி இருக்கும்.  ம்திப்பெண் குறைவாக இருந்தால கல்லூரிக் கட்டணமும் மிகவும் அதிகம்.  இக்காரணங்களால் கென்ய மாணவர்கள் இந்தியாவிற்குப் படிக்க வருகிறார்கள். இங்கு ஆங்கிலம் வழி கல்வி பயில முடிவதும் ஒரு காரணம்.  சில கென்ய மாணவர்கள் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடு உதவித்தொகை தருவதால் செல்கிறார்களாம்.  அங்கு முதல் ஆண்டு கொரிய மொழியைக் கற்க வேண்டும்.  அந்த நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்காக ஆங்கில மீடியம் உள்ள பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பணவசதி உள்ள கென்யர்கள் அங்கு சேர்ந்து படிப்பார்கள்.

    நான் இது வரை பார்த்த நாடுகள் பலவும் வளர்ந்துவிட்ட நாடுகள்.  இந்தியாவைப் போல் வளர்ந்துகொண்டிருக்கும் கென்யாவைப் பார்த்தது ஒரு புதிய அனுபவம்.  இந்தியாவில் உள்ளதைப் போல் வறுமை, லஞ்சம், அரசியல் அடிதடிகள் போன்ற சில கூறுகள் இருந்தாலும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற அநாகரீகப் பழக்கங்கள் கென்யாவில் இல்லை.  இது கென்ய கலாச்சரத்தின் வெளிப்பாடு.

    நைரோபியின் படங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

     

    படங்கள். மெல்லியல்

    (முற்றும்)

    Share
  • ஆட்டோக்காரர்கள் பலவிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்காவில் வருஷத்தில் ஒன்பதரை மாதங்கள் இருந்துவிட்டு வரும் எங்களுக்கு இந்தியா வந்தவுடன் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.  அமெரிக்கர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள், இந்தியர்கள் எல்லாம் கெட்ட மனிதர்கள் என்று நான் சொல்ல வரவில்லை.  அமெரிக்காவில் உள்ள சட்டம், ஒழுங்கு இந்தியாவில் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா உலகின் பாதுகாவலன் என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்வதும் தன் நலன்களுக்காக எல்லா நாடுகளையும் ஆட்டிப்படைப்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.  ஆயினும் தினசரி நடவடிக்கைகளில் ஊழல், லஞ்சம், உருட்டு, புரட்டு என்று எதுவும் இல்லாமல் இருப்பது அந்நாட்டின் மிகப் பெரிய சிறப்பு அம்சம்.  அமெரிக்காவை வெறுப்பவர்கள் கூட இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    இந்தியாவில் எங்களுக்குப் பல இடங்களுக்கும் சென்று வர வாகனங்கள் எதுவும் இல்லை.  மைசூர் போன்ற ஊர்களில் ஓரளவு பேருந்துகள் வசதி இருக்கிறது உண்மைதான் என்றாலும் அவற்றில் சென்று வர நிறைய நேரம் எடுக்கிறது.  அதிலும் சில இடங்களுக்குக் கொஞ்ச தூரமாவது நடக்க வேண்டியிருக்கிறது.  இதை விட முக்கியமான விஷயம் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஏறி இறங்கும் பயணிகளுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதில்லை.  பயணிகள் இறங்குமுன்பும் ஏறுமுன்பும் அவர்கள் பாட்டுக்குப் பேருந்துகளை இயக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.  அமெரிக்காவில் பயணிகள் எல்லோரும் ஏறி இறங்கிப் பேருந்தின் கதவுகளை மூடிய பிறகுதான் ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியும். அப்படிப்பட்ட பேருந்துகள் எப்போது இந்தியாவில் புழக்கத்திற்கு வருமோ? பேருந்தில் செல்வதால் இப்படிச் சில அசௌகரியங்கள் இருப்பதால் நாங்கள் எங்கு சென்றாலும்  ஆட்டோக்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

    ஒவ்வொரு முறை ஆட்டோவில் ஏறும்போதும் ‘இந்த ஆட்டோ ஓட்டுநர் என்ன தில்லுமுல்லு செய்வாரோ?’ என்ற பயத்துடன்தான் பயணிக்கிறோம்.  எங்கள் ஊரான இராமநாதபுரம் மாவட்டத் தலைநகரம் என்றாலும் ஊர் சிறியதுதான்.  ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்குப் போக ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டியதில்லை.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக இரண்டு கி.மீ. தூரம் என்றாலும் ஐம்பது ரூபாய் கேட்கிறார்கள்.  மூன்று கி.மீ. என்றால் குறைந்தது அறுபது ரூபாயாவது கேட்கிறார்கள்.  அதிலும் கொஞ்சம் லக்கேஜ் வைத்திருந்தாலும் இன்னும் அதிகமாகக் கேட்கிறார்கள்.  நகரப் பேருந்துகள் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது.  அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.  ஆட்டோக்களில் கட்டணத்தைக் குறிக்கும் மீட்டர் உபயோகத்தைக் கட்டாயமாக்கப் போகிறோம் என்று அரசு கூறி வந்தாலும் – அப்படியே அவர்கள் அதைச் செய்தாலும் – பெரிய ஊர்களில்தான் இதைச் செயல்படுத்துவார்கள்.  இராமநாதபுரம் போன்ற சிறிய ஊர்களில் அது எப்போதும் வரப் போவதில்லை.

    auto-rickshaws-everywhere-you-look-mysore-india+13249552565-tpfil02aw-30079மைசூரில் நாங்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதி ஊரின் மையப் பகுதியிலிருந்து ஆறு மைல் தூரம் இருக்கும்.  ஊருக்குள் சென்றுவிட்டு வீடு திரும்ப எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஆட்டோ கிடைப்பது கடினம்.  சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவ்வளவு தூரம் வர விரும்ப மாட்டார்கள்.  சிலர் ஒன்றரைக் கட்டணம் கேட்பார்கள், ஒன்றரைக் கட்டணம் பத்து மணிக்கு மேல்தான் என்றாலும்.  ஆட்டோவில் ஏறும்போது அப்படிக் கேட்கவில்லையென்றாலும் வீடு வந்து சேர்ந்த பிறகு சிலர் அதிகம் கேட்பார்கள்.  மைசூரில் மீட்டர் போடும் முறை இருந்தாலும் நிறையப் பேர் போடுவதில்லை.  போடாமல் நம்மிடம் ஒரு தொகையைக் கேட்பார்கள்.  ஒரு முறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் இப்படித்தான் 30 ரூபாயைப் பேசிக்கொண்டு ஆட்டோவை ஓட்டத் தொடங்கினார்.  கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காவலரைப் பார்த்ததும் வேகமாகப் பின்னால் திரும்பி மீட்டரைப் போட்டுக்கொண்டார்.  மீட்டர் போட்டாலும் கிடுகிடுவென்று வேகமாகப் போகும் மீட்டர்கள்தான் அதிகம்.

    ஒரு முறை ஒரு இளம் ஆட்டோ ஓட்டுநரை மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல அணுகினோம்.  அவர் ஆட்டோவும் புதிது.  அதில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு ஸ்டாண்ட் இருந்தது.  அப்படி ஒன்றை அன்றுதான் நான் ஆட்டோவில் பார்த்ததால் ‘அது என்ன?’ என்று கேட்டேன்.  ஓட்டுநருக்கு அது பிடித்ததாகத் தெரியவில்லை.  ‘என்னடா இது, இந்த அம்மாள் இதைப் பற்றியெல்லாம் கேட்கிறார்கள்?’ என்று நினைத்த மாதிரித் தெரிந்தது.  ஆனால் உடனேயே நான் கேட்டதின் காரணத்தைப் புரிந்துகொண்டு ‘ஆமாம்.  புது ஆட்டோக்களில் இம்மாதிரி இருக்கிறது’ என்று பிரியமாகப் பதில் கூறினார்.  அவருடைய மீட்டரும் ஒழுங்காக ஓடியது! அன்று முதன் முதலாக சரியான கட்டணம் கொடுத்துப் பிரயாணம் செய்தோம்.

    இன்னொரு முறையும் அதே இடத்திற்கு ஆட்டோவில் சென்று வந்தோம்.  இந்த முறையும் அதே கட்டணம்தான் வந்தது.  திடீரென்று மைசூர் ஆட்டோக்காரர்கள் எல்லோரும் நியாயமாக நடந்துகொள்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது.  ஆனால் நாங்கள் அப்படி நினைத்தது சரியில்லை என்பது போல் இன்னொரு ஆட்டோக்காரர் நடந்துகொண்டார்.  அதே இடத்திற்கு மறுபடி சென்றபோது முதல் இரண்டு ஆட்டோக்காரர்களையும் விட இவர் ஒன்பது ரூபாய் அதிகமாகக் கேட்டார்.  ‘இதே இடத்திற்கு நாங்கள் இரண்டு முறை வந்தபோது 22 ரூபாய்தானே ஆகியது.  இப்போது எப்படி 31 ரூபாய் ஆகிறது?’ என்று கேட்டோம்.   இத்தனைக்கும் மீட்டர் புது மீட்டர்.  ஆட்டோ ஓட்டுநர் சரியான பதில் எதுவும் கூறவில்லை.  ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.  நான் இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும்’என்று எங்களை அவசரப்படுத்தினார்.  இதற்கு மேல் அவரிடம் வாதாட முடியாது என்று அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.  மீட்டர் புதிதாக இருந்தால் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

    ஒரு முறை எங்கள் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்றோம்.  போகும்போது கட்டணம் 35 ரூபாய் ஆனது.  ஆனால் சென்ற அதே வழியில் இன்னொரு ஆட்டோவில் வீடு திரும்பியபோது மீட்டர் கட்டணம் ரூபாய் 51 என்று காட்டியது.  எனக்குக் கோபமான கோபம்.  ‘போகும்போது இதே வழியில்தான் சென்றோம்.  35 தானே ஆயிற்று.  இப்போது மட்டும் ஏன் 51 ரூபாய்?’ என்று கேட்டேன்.  கூடவே ‘நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன்’ என்று கூறிக்கொண்டே ஆட்டோ எண்ணை மனப்பாடம் செய்யத் துவங்கினேன்.  மைசூரில் ஒவ்வொரு ஆட்டோவுக்கும் லைசென்ஸ் பிளேட் நம்பரைத் தவிர ஓட்டுநரை அடையாளம் காட்டும்வகையில் ஒரு தனி எண் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்துப் புகார் செய்யலாம். ஏன் 51 ரூபாய் ஆயிற்று என்று கேட்ட போது ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறிய ஓட்டுநர் நான் புகார் கொடுக்கப் போகிறேன் என்றதும் என் கணவரிடம் 40 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டார்.

    அவர் நாற்பது ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சென்ற பிறகு ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையையும் நான் எண்ணிப் பார்த்தேன்.  அவர் கேட்ட அதிகப்படியான பதினொருரூபாயையும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.  அவர்களும் ஒரு நாளைக்கு என்ன சம்பாதித்துவிடப்போகிறார்கள்?  நாள் பூராவும் இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கிறார்கள்.  இடையிடையே காத்திருக்கும்போது எவ்வளவு ‘போர்’ அடிக்கும்? என்று எண்ணினேன்.  ‘ஆனாலும்அவர்கள் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் அல்லவா?’ என்ற எண்ணமும் ஏற்பட்டது.  இருபது வருடங்களுக்கு முன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் ஞாபகம் வந்தது.  காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை.  இவர்தான் நான் அறிந்த காந்திஜி.  அவர் 1994-இல் இறக்கும்போது தன்னுடைய வீட்டையும் பதினாறு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் தன் ஒரே மகனுக்குக் கூட கொடுக்காமல் பொதுப் பணிக்காக விட்டுச் சென்றவர்.  1994-இல் பதினாறு லட்சம் என்பது இப்போது நாற்பது லட்சத்திற்கு மேல்.  ஒரு முறை நானும் அவரும் ஆட்டோவில் சென்று வந்தபோது இருட்டிவிட்டது.  ஓட்டுநர் கேட்ட தொகையை அவர் கொடுக்கவில்லை.  தானாகக் கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்து மீட்டரைப் பார்த்துவிட்டுப் பின் தொகையைக் கொடுத்தார்.  தன்னுடைய எல்லா உடமைகளையும் பிறருக்காகக் கொடுத்தாலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்.  அதே போல்தான் நானும் இப்போது நடந்துகொண்டேன் என்று சமாதானம் செய்துகொண்டேன்.

    ஆட்டோ ஓட்டுநர்களோடு இப்படிக் கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் சில இனிமையான அனுபவங்களும் உண்டு.

    ஒரு முறை பெங்களூரிலிருந்து மைசூர் திரும்ப இரவு ஒன்பதரை மணியாகிவிட்டது.  அன்று ஆட்டோ கட்டணம் ரூபாய் நூறாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தோம்.  ஆனால் மைசூர் பேருந்து நிலையத்தில் காவலர்கள் நாம் செல்லும் இடத்திற்கான கட்டணத்தை நிர்ணயித்து நம்மை ஆட்டோவில் ஏற்றிவிடஒரு கவுன்டர் இருக்கிறது. அதில் ஒரு ரூபாய் கொடுத்து ரசீது வாங்கிவிட்டால், சேரும் இடத்தில் அவர்கள் விதித்துள்ள கட்டணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிடலாம்.   அன்று நாங்கள் ஆட்டோவிற்குக் கொடுத்த கட்டணம் 64 ரூபாய்தான்.  எந்த வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் அதைப் பெற்றுக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் சென்றுவிட்டார். முன்கூட்டிக் கட்டணத்தை நிர்ணயித்துப் பயணிப்பவர்களை ஏற்றிச்செல்லவும் பல ஆட்டோக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

    இன்னொரு முறை ஊரின் மையப் பகுதியிலிருந்து வீட்டிற்கு வருவதற்காக நாங்கள் ஆட்டோவில் ஏறினோம்.  அரை மைல் தூரம் சென்றவுடன் திடீரென்று என் கணவருக்கு அந்த இடத்தில் ஏதோ சாமான் வாங்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது.  ஆட்டோ ஓட்டுநரைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லி அந்தச் சாமானை வாங்கச் சென்றுவிட்டார்.  அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கடையில் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  ஆட்டோ கட்டணத்தோடு கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்.  வீட்டிற்கு வந்ததும் கட்டணம் 52 ரூபாய் ஆகியிருந்தது.  என் கணவர் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து ‘நாற்பது ரூபாய் மீதி கொடுங்கள்’ என்றார்.  அதற்கு அந்த ஓட்டுநர் ‘மீட்டர் கட்டணம் 52 தானே ஆகிறது?’ என்றார்.  ‘உங்களைக் காக்க வைத்ததற்கு வெயிட்டிங் சார்ஜ் எட்டு ரூபாயை அதிகமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றதும் பிரியமாக வாங்கிக்கொண்டார்.  இப்படியும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்!

    img_5372-1ஒரு முறை மதுரையிலிருந்து மைசூர் திரும்புவதற்காக ஆட்டோவில் மதுரை பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தோம்.  திடீரென்று அந்த முறை மதுரையிலிருந்து காய்கறிகள் வாங்கவில்லை என்று எனக்கு ஞாபகம் வந்தது.  சிறு வயதிலிருந்தே தென் தமிழ்நாட்டில் கிடைக்கும் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பழகிய எனக்கு அடிக்கடி அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.  அதனால் தமிழ்நாடு செல்லும் போதெல்லாம் முடிந்த வரை அங்கிருந்து காய்கறிகளை வாங்கி வருவோம்.  அந்த முறை மற்ற பல வேலைகள் இருந்ததால் காய்கறிகள் வாங்கி வர வேண்டும் என்பது முழுவதுமாக மறந்துவிட்டது.  நாங்கள் ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த போது இரவு மணி எட்டு.  இதற்குப் பிறகு எங்கு போய் காய்கறிகள் வாங்குவது, அதுவும் பேருந்துநிலையத்திற்குச் செல்லும் வழியில்?  இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தோம். அவர் எங்கள் ஆசையைப் புரிந்துகொண்டு,‘இவ்வளவு நேரத்திற்குப் பிறகு நாம் போகும் பாதையில் எந்த மார்க்கெட்டும் இருக்காது.  சென்ட்ரல் மார்க்கெட் திறந்திருக்கிறதா என்று வேண்டுமானால் பார்ப்போம்’ என்று எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.  நல்ல வேளையாக அங்கு பல கடைகள் மூடப்பட்டுக்கொண்டிருந்தாலும் சில கடைகள் திறந்திருந்தன.  அவற்றில் எங்களுக்கு வேண்டிய காய்கறிகள் கிடைத்தன.  எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.  பேருந்து நிலையம் வந்து சேர்ந்ததும் ஆட்டோ மீட்டர் காட்டிய தொகைக்கு மேல் மிகவும் அதிகமாகவே அவருக்குக் கொடுத்தோம்.  அவருக்கும் சந்தோஷம்.  நாங்கள் அதிகமாகக் கொடுப்போம் என்று தெரியாமலேயே அவர் எங்களைக் கூட்டிச் சென்றது அவரது பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையைக் காட்டுகிறது.

    ஒரு முறை மைசூரில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி நடைபாதைக் கடையில் இட்லி வாங்கினோம்.  அங்கு விற்கும் இட்லியும் சட்னியும் மிகவும் பிரசித்தம்.  அது அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரியாது போலும்.  என் கணவர் ஆட்டோவிலிருந்து இறங்கி இட்லி வாங்கச் சென்றதும் என்னிடம் ‘இங்கு இட்லி நன்றாக இருக்குமா?’ என்று கேட்டார்.  அவருக்கும் இரண்டு இட்லிகள் வாங்கிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.  ஆட்டோவிலிருந்து இறங்கி என் கணவரிடம் சென்று ஆட்டோ ஓட்டுநருக்கு இரண்டு இட்லிகள் வாங்கி வருமாறு கூறினேன்.  ஓட்டுநர் மனம் நெகிழ இட்லிகளைப் பெற்றுக்கொண்டார்.

    படங்களுக்கு நன்றி: http://tripwow.tripadvisor.com/slideshow-photo/indian-traffic-jam-aurangabad-india.html?sid=63718504&fid=upload_13249530337-tpfil02aw-17672

    http://duncanwright.wordpress.com/2013/01/14/india-mysore/img_5372-1/

    Share
  • கென்யா பயணம் – 7

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கென்யாவில் நாற்பத்தி இரண்டு பழங்குடி இனங்கள் உள்ளன.  போர்ச்சுகீசியரின் வருகையின் விளைவாகவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும் இவற்றில் பல கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவை.  கடற்கரையை ஒட்டி வாழும் இனங்கள் அரேபியர்களின் வணிகத்தின் விளைவாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவை.  இவற்றில் ஒன்று விக்டோரியா ஏரியை ஒட்டியுள்ள லியு (Luo)  என்னும் இனம்.  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தந்தை இந்த இனத்தைச் சேர்ந்தவர்.  இன்னொன்று கிக்கியு (Kikiyu).  இந்த இரண்டு இனங்களும் மக்கள் தொகையில் பெரியவை.  அதனால் அரசியல் செல்வாக்கும் அதிகம்.  இந்த இரண்டு இனங்களிலிருந்துதான் நாட்டுத் தலைவர்கள் தோன்றுகிறார்கள்.  மக்கள் தொகையில் சிறிய மற்ற இனங்கள் இந்த இரண்டு இனங்களில் ஒன்றோடு சேர்ந்துகொண்டு அரசியலில் பங்கு பெறுகின்றன.  தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா கிக்கியு இனத்தைச் சேர்ந்தவர்.  ஆடு மாடுகளுக்குப் புல் தேடி இடம் விட்டு இடம் போகும் மசாய் இனத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம்.

    ஒவ்வொரு இனத்திற்கும் தனிக் கலாச்சார மரபுகள் உண்டு.  ஒவ்வொரு இனமும் தங்கள் குடியிருப்பை அமைக்கும் முறையும் அதில் ஒரு குடும்பத்தின் குடிசைகளை அமைக்கும் முறையும் அந்தக் குடிசைகளைப் பயன்படுத்தும் விதமும் வேறுபடும்.  நைரோபியில் இந்தக் குடியிருப்புகளின் மாதிரிகளை ஒரு இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.  இங்கே கணவன் குடிசை, முதல் மனைவியின் குடிசை, இரண்டாவது மனைவியின் குடிசை, ஆண் பிள்ளைகள் குடிசை என்றெல்லாம் வேறுபாடு இருந்தது.  இதற்குப் பக்கத்தில் பல இனங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிக் காட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போமாஸ் (Bomas) என்று பெயர்.  போமா என்றால் ஸ்வாஹிலியில் குடியிருப்பு என்று அர்த்தம்.  இந்த நடன நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளுடன் வித்தியாசமான நடனங்களை பல பழங்குடி இன மக்கள் ஆடுவதைப் பார்க்க முடிந்தது.  கடைசியில் சர்க்கஸில் காட்டுவது போல் தீ வளையத்திற்குள் பாய்வது போன்ற தீரச் செயல்களையும் செய்து காட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு பிரமாண்டமான அரங்கம் குடிசையைப் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.  நிகழ்ச்சியைப் பார்க்க உல்லாசப் பயணிகள்  மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.  நவீன கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள இது வகை செய்கிறது.

    இப்போது கென்யர்களின் பொதுவான சில பண்புகளைப் பார்ப்போம்.  நைரோபியில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு நடுத்தர ஓட்டல்.  ஒரு கென்யரால் துவங்கப்பட்டது. அங்கிருந்த எல்லா ஊழியர்களும் – வரவேற்பாளரிலிருந்து அறையைச் சுத்தம் செய்பவர் வரை – எங்களிடம் மிகவும் பிரியமாக நடந்துகொண்டனர்.  காலைச் சாப்பாடு அறை வாடகையோடு சேர்ந்தது.  காலை ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை காலை உணவு நேரம்.  நான்கு வகைப் பழங்கள், மைதா ப்ரெட், கோதுமை ப்ரெட் என்று இரண்டு வகை ரொட்டிகள், பல வகையான கிழங்கு வறுவல்கள், பல வகை சீரியல்கள், அவற்றோடு சாப்பிட பால், ஆரஞ்சுச்சாறு, மாம்பழச் சாறு, அன்னாசிப்பழச்சாறு என்று மூன்று வகை பழச்சாறுகள், ஏதாவதொரு அசைவ அயிட்டம் என்று பல அயிட்டங்கள் இருந்தன.  இதற்கு மேல் விரும்புபவர்களுக்கு முட்டையை நாம் கேட்கும் விதத்தில் சமைத்துக் கொடுக்கிறார்கள்.   இப்படிப் பல வகை உணவுகளோடு அங்கு வேலைபார்ப்பவர்களும் அன்போடு நமக்குப் பரிமாறுகிறார்கள்.  நாம் முட்டை சாப்பிடவில்லையென்றாலும் தினமும் முட்டை வேண்டுமா என்று கேட்பார்கள்.  பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் இப்படிப் பிரியமாக நடந்துகொண்டாலும் இவர்களுடைய நடத்தையில் உள்ளன்பு இருப்பதாகத் தெரிந்தது.

    மதிய உணவையும் இரவு உணவையும் இரவு ஒன்பது மணி வரை நாம் கேட்கும் நேரத்தில் அங்கேயே சமைத்துக் கொடுக்கிறார்கள்.  அதற்குரிய கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.  நாம் விரும்பினால் நம் அறைக்கே உண்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.  இவர்களுடைய இந்த சேவைக்காக எதுவும் ‘டிப்ஸ்’ கொடுக்க வேண்டியதில்லை என்று வரவேற்பாளர் கூறினார்.  கொடுத்தால் பிரியமாக வாங்கிக்கொள்கிறார்கள்.

    நாங்கள் எங்கள் துணிகளைத் துவைத்துக்கொள்ள விரும்பினோம்.  அதை அறிந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்தார்கள்.  துணிகளைக் காயப் போடுவதற்கு ஒரு இடம் இருக்கிறது.  நாங்கள் காலையில் வெளியே போய்ச் சாயங்காலம்தான் திரும்ப ஓட்டலுக்கு வந்ததால் இடையில் மழை பெய்தால் என்ன செய்வது என்று யோசித்தபோது ‘நாங்கள் உங்கள் துணிகளை உள்ளே எடுத்துவைக்கிறோம்’ என்றார்கள்.

    கென்யாவில் நிறைய வடஇந்தியர்கள் இருப்பதால் அவர்களின் இந்திய உணவு வகைகளும் கென்யர்களின் உணவில் கலந்துவிட்டிருக்கின்றன.  அவற்றில் சப்பாத்தி, அதற்குரிய சப்ஜி, புலவு, சமோஸா ஆகியவை முக்கியமானவை.  ஒட்டலிலும் இவை எல்லாம் சமைத்துக் கொடுத்தார்கள்.  எங்கள் மைசூர் வீட்டின் அறையில் தங்கியிருந்த பல மாணவர்கள் எங்களை ஓட்டலில் வந்து சந்தித்தனர்.  அவர்களில் ஒருவரின் கண்வர், ‘சிறு வயதிலிருந்தே இந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததால் இவை கென்ய உணவுகள் என்று நான் நினைத்திருந்தேன்.  விபரம் தெரிந்த பிறகுதான் இவை இந்திய உணவுகள் என்று தெரிந்துகொண்டேன்’ என்றார்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய உணவுகள் கென்ய உணவுகளோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.  இந்தியர்கள் நடத்தும் ஹாண்டி (Haandi) என்னும் இந்திய உணவகம் பிரசித்தமானது.  அங்கு விலையும் கொஞசம் அதிகம்.  இங்கே நிறைய வடஇந்திய சப்ஜிகள், பல வகையான புலவு வகைகள் கிடைக்கும்.  இங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் கென்யர்கள்.  ஒரு இந்தியர் கூட இல்லை.  அதே சமயத்தில் அங்கு உணவருந்த வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இந்தியர்கள்.

    அங்கு வாழும் இந்தியர்கள் எல்லோரும் வசதியாக இருப்பவர்கள் போல் தெரிகிறது.  கச்சாப் பொருள்களை வாங்கிவந்து அவற்றைப் பொருள்களாகத் தயாரித்து விற்கும் தொழிற்சாலைகளில் 70 சதவிகிதம் இந்தியர்களின் கையில் இருப்பதாக மாணவ நண்பன் ஒருவன் கூறினான்.  நக்குமார்ட் (Nakumart)  என்னும் பெரிய டிபார்ட்மெண்ட் கடை இந்தியர் ஒருவருக்குச் சொந்தம்.  இந்தியர்களின் பிள்ளைகள் கென்யப் பள்ளிகளில் படித்துவிட்டு மேல் படிப்பிற்காக இந்தியாவிற்கோ பிரிட்டனுக்கோ செல்கிறார்கள்.  இதனால் கல்லூரிகளில் இந்திய வம்சாவளி இளைஞர்களும் கென்ய இளைஞர்களும் நட்புக்கொள்வது அரிது.

    நான் முன்பே எழுதியது போல் இந்தியர்கள் கென்யர்களோடு கலப்பதில்லை போல் தெரிகிறது.  அண்மையில் இந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது.  கென்யாவில் சுமார் 1000 கன்னடியர்கள் வசிக்கிறார்களாம்.  ஹிருதய வாஹினி என்று மங்களூரிலிருந்து வரும் பத்திரிக்கையும் கன்னட கலாச்சாரக் அமைப்பும் சேர்ந்து 100 பேர் கொண்ட பரதநாட்டிய, யக்ஷகானா கலைஞர்கள் அடங்கிய ஒரு குழுவைக் கென்யாவிற்கு நவம்பர் மாதம் அனுப்பப் போகிறது.  இவர்கள் அங்கு கன்னட கலாச்சாரத்தைப் பரப்பப் போகிறார்களாம்!  ஆயிரம் பேருக்குக் கலாச்சாரத்தைப் பற்றிக் கூற நூறு பேர் போகிறார்கள்.  எத்தனை கென்யர்கள் இவர்களுடைய நிகழ்ச்சிகளைக் காண வருவார்கள் என்று தெரியவில்லை.

    இந்தியர்கள் யாரும் கென்யர்களோடு பழகாவிட்டாலும் கென்யர்களுக்கு இவர்கள் மேல் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கென்யாவிற்கு வந்து அதன் பொருளாதாரத்தில் பங்கு பெற்றிருப்பதால் தாங்கள் பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறார்களே- யொழிய அவர்கள் மேல் வன்மம் பாராட்டுவதாகத் தெரியவில்லை.  இந்த இந்தியர்கள்தான் அம்மண்ணுக்குரிய கென்யர்களோடு சுமுகமாகப் பழகாமல் தனித்து வாழ்கிறார்கள்.  இந்தியர்கள் குடியிருப்பு தனியாக இருக்கிறது.  கலப்புத் திருமணங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.  இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.  இவர்கள் அமெரிக்கக் கருப்பர்கள் தங்களை விட தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  வெள்ளை இனத்தவர்களைத் தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  இதை எங்கேயிருந்து கற்றார்கள் என்று தெரியவில்லை.  அமெரிக்க இந்தியர்களுக்கு இருக்கும் கருப்பு இன நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இவர்களைப் போன்றவர்கள்தான் கென்ய இந்தியர்களும்.

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் 6!…

    நாகேஸ்வரி அண்ணாமலை

    masai masai2 masai3

     

    கென்யா பயணம் 6

    கென்யாவில் மசாய் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் இன்றும் இயற்கைச் சூழலிலேயே வாழ்ந்து வருவதாக அறிந்து அவர்களைச் சந்திப்பது எப்படி என்று இன்டர்நெட்டில் தேடினோம்.  அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய வழிகாட்டி கேட்ட தொகை மிகவும் அதிகமாக இருந்தது.  இருப்பினும் அதை விட்டால் வேறு வழியில்லை என்பதை அறிந்து அவரோடு தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம்.

    முதல் முதலாக நைரோபியிலிருந்து வெகுதூரத்திற்குப் பயணம் செய்தோம்.  நைரோபியை விட்டு செல்லச் செல்ல கிராமப்புறக் காட்சிகள் தோன்றத்  தொடங்கின.  சிறிய ஊர்கள், சிறிய இடங்கள், சிறிய வாகனங்கள் என்று எல்லாம் நைரோபியில் பார்த்ததற்கு எதிர்மாறாக இருந்தன.  நம் நாட்டு ஆட்டோக்கள் போல் வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டிருந்தன.  இதில் ஒன்றைக்கூட நைரோபியில் நாங்கள் பார்க்கவில்லை.

    கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் ஓட்டுநர் வண்டியை ஒரு குக்கிராமத்தில் நிறுத்தினார்.  அங்கு சில பழங்குடி மக்களின் இருப்பிடங்கள் இருந்தன.  அங்கு ஜேக்ஸன் (இவருடைய இயற்பெயரை அவர்கள் மொழியில் சொன்னார்.  அது எங்களுக்கு வாயில் நுழையவில்லை.) என்பவரை எங்களோடு வேனில் ஏற்றிக்கொண்டு நாங்கள் அதுவரை வந்துகொண்டிருந்த, பக்கத்து நாடான டான்ஸானியா செல்லும் நெடுஞ்சாலையை விட்டுப் பிரிந்து காடு போல் இருந்த இடத்தின் கச்சா ரோடுகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.  ஆங்காங்கே பழங்குடி மக்களின் ஊர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்தோம்.  வழியில் பழங்குடிமக்கள் சிலரையும் காட்டுப்பாதையில் பார்த்தோம்.

    ஜேக்ஸன் மஸாய் இனத்தைச் சேர்ந்தவர்.  இந்த இனம் ஒரு இடத்தில் வசிக்காமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்குமாம்.  இவர்களைப் பொறுத்த வரை மண்ணை உழுது நிலத்தில் பயிரிட்டால் அது நிலத்தைப் புண்படுத்துவதாகுமாம்.  ஆதலால் இவர்கள் ஒன்றும் விளைவிப்பதில்லை.  ஆடு, மாடுகள்தான் இவர்களுடைய சொத்து.  அவற்றை நம்பித்தான் இவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.  ஒரு இடத்தில் ஆடு, மாடுகளுக்கான புல் தீர்ந்ததும் வேறு இடத்திற்கு இடம்பெயர்கிறார்கள்.

    நாங்கள் ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்ததும் முதலில் எங்களை வரவேற்றது அவருடைய எட்டு வயது மகள்.  பயண வழிகாட்டி அந்தப் பெண்ணிடம் ஸ்வாஹிலியில் ‘உங்கள் பாட்டி எங்கே?’ என்று கேட்டார்.  அதற்குப் பதிலாக அந்தப் பெண் எங்களை காம்பவுண்டிற்குள் அழைத்துச் சென்றார்.  காம்பவுண்ட் என்பது 15’-க்கு 15’ அடியில் அமைக்கப்பட்ட இரண்டு சிறிய குடிசைகள், ஆடு, மாடுகளை இரவில் அடைக்கும் பெரிய கொட்டில் ஆகியவையே.  கொட்டிலில் ஒரு கன்றுக் குட்டியைத் தவிர வேறு எதுவும் இல்லை.  கன்றின் தாய் மற்றப் பிராணிகளோடு மேய்ச்சலுக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.  அந்த இடம் முழுவதும் மிருகங்களின் சாணம்.  அதனால் நிறைய ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.  பாவம், கன்றுக்குட்டி சதா காதுகளையும் வாலையும் சுழற்றி ஈக்களை விரட்ட முயன்றுகொண்டிருந்தது.  முதலில் எங்களைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டது.  ஆனால் பின்னால் சமாளித்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டது.

    அந்த குடிசைகளின் கூரை புல்லால் வேயப்பட்டது.  சுவர்கள் மண்ணாலும் மரக்குச்சிகளாலும் எழுப்பப்பட்டவை.  குடிசைகளுக்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  ஒரு பெண் – இவர் ஜேக்ஸனின் அக்காள் மகளாம்.  புருஷன் இறந்த பிறகு இவர்களுடனே வசித்து வருகிறாள் – ஒரு விறகுக் கட்டை சுமந்துகொண்டு வந்து போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்.  அவர் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.  ஆனால் இன்னும் மூன்று பெண்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.  அவர்களில் ஒருவர் ஜேக்ஸனின் மனைவி.  கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தார்.  காம்பவுண்டிற்குள் நுழைந்ததும் ஜேக்ஸன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.  குழந்தையையும் பார்க்கவில்லை.  ஒரு குடிசையின் உள்ளே சென்று தன் தாயை வெளியே அழைத்து வந்தார்.  அவருக்கும் எனக்கும் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு எங்களை உட்காரவைத்தனர்.

    அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  அவர்தான் குடும்பத்தின் தலைவி (matriarch).   இவருக்குப் பத்துக் குழந்தைகள்.  ஜேக்ஸன் இவருக்குப் பத்தாவது குழந்தை.  இவருடைய அண்ணன் மகள் ஒருத்தி இவர்கள் குடும்பத்தோடு இருக்கிறாள்.  அவள் பக்கத்துப் பள்ளியில் ஆறாவது வகுப்புப் படிக்கிறாள்.  இவளோடு எங்களால் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. (கென்யர்கள் எல்லோரும் நல்ல ஆங்கிலத்தில் பேசுவது பற்றிப் பின்னால் கூறுகிறேன்.)

    ஜேக்ஸன் காது வளர்த்துக்கொண்டிருந்தார்.  நம் நாட்டில் அந்தக் காலத்தில் பெண்கள் வளர்த்துக்கொண்டிருப்பார்களே அதை விடப் பெரியதாக இருந்தது. நாம் காதணிகள் அணிகிறோமே அந்த இடம் பூராவும் பெரிய ஓட்டையாக இருந்தது.  ஆனால் காதில் அணிகலன் எதுவும் அணியவில்லை.  பெண்கள் யாரும் இப்படிக் காதை ஓட்டையாக வளர்த்துக்கொள்ளவில்லை.  ஆனால் காதிலும் கழுத்திலும் கைகளிலும் நிறையப் பாசிகளினால் ஆன அணிகலன்களை அணிந்திருந்தார்கள்.  சிறு பிள்ளைகளைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் அவர்களுடைய பாரம்பரிய உடையில் இருந்தனர்.

    அந்தக் குடும்பத் தலைவி என்னிடம் அவருடைய மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அவர் செய்த சைகைகளிலிருந்து ஏதோ கொஞ்சம் புரிந்தது.  தேவைப்பட்டால் பயண வழிகாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  நாங்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளை பயண வழிகாட்டி ஸ்வாஹிலியில் ஜேக்ஸனிடம் கேட்க, அவர் தன் உறவினர்களிடம் மசாய் மொழியில் கேட்டார்.  அவர்களுடைய பதிலும் மசாய்மொழியில் தொடங்கி ஸ்வாஹிலி வழியாக ஆங்கிலத்தில் எங்களுக்கு வந்து சேர்ந்தது.  ஜேக்ஸனின் தாய் இரண்டு குடிசைகளில் ஒன்றைக் காட்டி அது தன் வீடு என்று பெருமையாகக் கூறிக்கொண்டார்.  என்னை அங்கு அழைத்துச் சென்றார்.  உள்ளே நுழைந்தால் ஒரே இருட்டாக இருந்தது.  கண்கள் ப்ழகிய பிறகு ஒரு பக்கம் இருந்த கட்டில் தென்பட்டது.  இவர் ஒருவருக்கு மட்டும் இந்த குடிசை என்றால் மற்ற அத்தனை பேருக்கும் இன்னொரு குடிசையா?  கென்யாவைப் பற்றிய செய்திக் குறிப்புகளில் கணவனுக்கு ஒரு வீடு, முதல் மனைவிக்கு வலது பக்கத்தில் வீடு, இரண்டாவது மனைவிக்கு இடது பக்க வீடு என்றெல்லாம் போட்டிருந்தது.  ஜேக்ஸன் குடும்பத்தைப் பொறுத்த வரை அப்படி எதுவும் இல்லை.  மேலும்இவருக்கு ஒரே மனைவிதான்.

    வீட்டில் மளிகைச் சாமான்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இவர்களுடைய எல்லா வேளைகளிலும் அவர்களுடைய உணவு மாட்டுப்பாலும் இறைச்சியும்.  தேவையானபோது ஆடுகளை வெட்டி இறைச்சி உணவைத் தயாரித்துக்கொள்வார்களாம்.  எல்லோருக்கும் அடுத்த வேளைக்கான இறைச்சியை எங்கு சேமித்துவைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.  பக்கத்தில் கடை, கண்ணி என்று எதுவும் கிடையாது.  என்ன வேண்டுமென்றாலும் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

    ஜேக்ஸன் குடும்பம் இருக்கும் இடத்திற்கு ஜீப்பில் சென்றபோது வழியில் சில இளம் பழங்குடிப் பெண்களைப் பார்த்தோம்.  இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி நிறையப் படித்திருந்த எனக்கு அந்தப் பெண்களின் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது.  ஜேக்ஸனிடம் (பயண வழிகாட்டி மூலம்தான்) அது பற்றிக் கேட்டேன்.  அதற்கு ஜேக்ஸன் அளித்த பதில் சுவாரஸ்யமாக இருந்தது.  பையன்களும் பெண்களும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தனித் தனியாக வசிக்கிறார்கள்.  பையன்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களுக்கு அவர்களுடைய இனத்தின் மதிப்பீடுகளை (values) கற்றுத் தருவார்களாம்.  சமூகத்தில் எல்லா அங்கத்தினர்களும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.   பெண்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்பது இன்னொன்று.  இப்படி வாழ்க்கை விதிகளைக் கற்றுக்கொண்ட பிறகுதான் இளைஞர்களை மசாய் இனத்தின் அங்கத்தினர்களாகச் சேர்த்துக்-கொள்வார்களாம்.  இதை ஒரு வகையான வயதுக்கு வரும் சடங்கு (initiation ceremony)  என்று சொல்லலாம்.  இப்படி அங்கத்தினர்களாகச் சேர்ந்த பிறகு அவர்கள் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளிலிருந்து மாறுவதில்லையாம்.

    இப்போது ஜேக்ஸன் கொஞ்சம் கொஞ்சமாக கென்யாவின் மைய நீரோட்டத்தில் சேர்வதுபோல் தெரிகிறது.  அவருடைய அண்ணன் மகள் பள்ளியில் படிக்கிறாள்.  ஜேக்ஸன் பக்கத்திலுள்ள இடத்தில் அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைக்கு மாறாகத் தக்காளி பயிரிடுகிறார்.  பக்கத்துச் சுனையிலிருந்து குழாய் மூலம் அந்தத் தக்காளித் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்த நிலத்தை வாங்கினாராம்.  ஐரோப்பியர்கள் கென்யாவில் வாழ்ந்துவந்தபோது அங்கு சில நிலங்களை வாங்கியிருக்கிறார்கள்.  நாட்டை விட்டுப் போகும்போது மறுபடி கென்யர்களுக்கு விற்கிறார்கள்.  மற்ற நிலமெல்லாம் மசாய் இனத்திற்கு உரியது; தனிப்பட்டவர் சொத்தாக இருக்க முடியாது. ஐரோப்பியர்களிடமிருந்து வாங்கி நிலம் வைத்திருப்பவர்களின் நிலத்தைவிற்பனை செய்யும் நிலத்தரகராக ஜேக்ஸன் நைரோபியில் வேலைபார்க்கிறார்.  அவர் பாரம்பரிய உடையில் இல்லை.  பேண்ட் அணிந்திருந்தார்.  மேலே தோலினால் ஆன கோட்டு அணிந்திருந்தார். மசாய் மக்களும் மாறி வருகிறார்கள்.

    பயண வழிகாட்டி எங்களிடம் வாங்கிய பணத்தில் நானூறில் ஒரு பங்கைத்தான் ஜேக்ஸனுக்குக் கொடுத்தார்.  நைரோபியிலிருந்து இரண்டு மாம்பழச் சாறு பாட்டில்களும் (நைரோபி மாலில் மாம்பழங்கள் கிடைத்தன) இரண்டு பாட்டில் குடிநீரும் வாங்கிவந்திருந்தார்.  அவற்றை ஜேக்ஸன் மகளிடம் கொடுத்தபோது அந்தப் பெண் அவற்றை ஆசையோடு வாங்கிக்கொண்டாள்.  கென்யாவில் இப்படிதான் விபரம் தெரிந்தவர்கள் மற்றவர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

    உலக மக்கள் அனைவரும் பாரம்பரிய மசாய் மக்களைப் போல எளிய வாழ்க்கை வாழ்ந்தால், உலகம் மாசுபடாமல், இயற்கை வளத்தை இழக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் அப்படியே இருக்கும்.

    மசாய் மக்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/MasaiMara?authkey=Gv1sRgCJDwzOCbvsuWLw

    தொடரும்

    Share
  • கென்யா பயணம் – 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நேஷனல் ஜியாகிரபிக் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆப்பிரிக்க சவானாவைப் (African Savannah) பார்த்திருக்கிறேன்.  இப்போது அதை நைரோபி நேஷனல் பார்க்கில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.  கென்யாவில் நிறைய நேஷனல் பார்க்குகள் இருக்கின்றன.  ஒரு பெரிய நகருக்கு அருகில் ஒரு வனவிலங்குகள் வாழும் காடு இருக்கிறது என்பது இந்தப் பார்க்கின் விஷேசம்.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்துவிரிந்திருக்கும், நீண்டு வளர்ந்த கோரைப் புல் மட்டுமே வளர்ந்திருக்கும் சவானாவின் ஊடே ஒரு வேனில் கச்சா ரோடுகளின் இடையே சென்றபோது பல வனவிலங்குகளைப் பார்க்க முடிந்தது.  ஆங்காங்கே சவானாவுக்கே உரிய குடை போல் வளர்ந்திருக்கும் அகேசியா (Acacia) என்னும் மரங்களையும் பார்க்க முடிந்தது.

    இந்த பார்க் நைரோபியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  இதன் ஆரம்பத்தில் அனாதை விலங்குகளின் புகலிடமாக ஒரு மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது.  பார்க்கிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் உள்ள ஒரு மிகப் பெரிய ஒற்றுமை தெளிவானது!  நாங்கள் வேனில் உள்ளே நுழைவதற்குரிய நுழைவுக் கட்டணம் வாங்கச் சென்றபோது ஏற்கனவே சிலர் அங்கு டிக்கெட் வாங்க முயன்றுகொண்டிருந்தனர்.  எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கு இருந்த இன்னொரு பார்ட்டியிடம் ஏதோ பேரம் பேசத் தொடங்கினார் டிக்கெட் கொடுப்பவர்.  உள்ளே செல்வதற்கு பெரிய வேன்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய கார்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கிறார்கள்.  மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு வாகனத்தில் செல்பவர்கள் இருந்தால் கட்டணம் அதிகம்.  கென்யாவில் எல்லா இடங்களிலுமே கென்யா நாட்டுப் பிரஜைகளுக்குக் குறைந்த ரேட்.  குழந்தைகளுக்கு இன்னும் குறைந்த ரேட்.  வெளிநாட்டுப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம்.  இன்னொரு பார்ட்டி ஆப்பிரிக்காவிலுள்ள  இன்னொரு நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள்.  இவர்களும் வெளிநாட்டுப் பயணிகள் போல்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கென்று தனிச் சலுகை எதுவும் கிடையாது.  ஆனால் வெளியிலிருந்து வந்த அந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகள் ரேட்டில் டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் வினியோகிப்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாகப் பின்னால் எங்கள் ஓட்டுநர் எங்களிடம் கூறினார்.  மேலும் பெரிய காரில் வந்துவிட்டு சிறிய காருக்குரிய ரேட்டையும் கொடுத்ததாகச் சொன்னார்.

    வனவிலங்குகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த பார்க்கிற்குள் கட்டனம் செலுத்திச் செல்ல முடியும்.  ஆனால் தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது பார்க்கைச் சுற்றிக்கொண்டு செல்வதர்குப் பதில் இதன் வழியாகச் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுவாகக் குறையும் என்பதால் பார்க் காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து இதனூடே செல்கிறார்களாம்.  வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத சாபக்கேடு இருக்கிறது.

    சவானாவின் நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் சென்றதுமே ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.  ஒரு முறை யானகளைத் திருட்டுத்தனமாகக் கொன்று பல கோடி ரூபாய் பெறுமான தந்தங்களைக் கடத்திச் சென்ற ஒரு திருட்டுக் கும்பலைப் பிடித்து அவர்கள் திருடிச் சென்ற தந்தங்களை இந்த இடத்தில் வைத்து எரித்தார்களாம். அப்படி எரித்தால் தந்தத்திற்குப் பணம் கிடைக்காது என்று யானைகளைக் கொல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதன் நினைவாக மேடை போன்ற ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.  ஆயினும் தந்தங்கள் திருட்டுப் போவது குறையவில்லையாம்.  அதிலும் வளமடைந்து வரும் சீனாவில் தந்தத்தின் தேவை பெருகி வருவதால் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடுவதும் கூடிக்கொண்டுதான் போகிறதாம்.

    சவான்னாவின் நடுவே சில இடங்களில் தண்ணீர்க் குட்டைகள் இருக்கின்றன.  அவற்றில் தண்ணீர் குடிக்க மிருகங்கள் வருமாம்.  ஒரு குட்டையருகே ஏழெட்டு ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தோம்.  Gazelle என்னும் ஒரு வகை மான் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்தது.  கினி கோழிகள், காட்டெருமை, காண்டாமிருகம், தீக்கோழிகள்,  வரிக்குதிரை ஆகியவையும் காணக் கிடைத்தன.  சிறுத்தை, புலி போன்றவை இருட்டிய பிறகுதான் வெளியே வருமாம்.  கென்யாவின் சில பார்க்குகளில் இடம்பெயரும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலைச் சரிவிலிருந்து இறங்கியதும் ஓடும் நதிக்குள் புகுந்து கடப்பதையும் நதியில் வாழும் முதலைகளுக்கு ஒரு சில காட்டெருமைகள் இரையாவதையும் பர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்களாம்.  அங்கெல்லாம் போவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.

    ஒட்டகச் சிவிங்கிக்கென்று பார்க்கின் ஒரு மூலையில் ஒரு சரணாலாயம் இருக்கிறது. இதற்கு சிவிங்கி பார்க் (Giraffe Park) என்று பெயர். ஒட்டகச் சிவிங்கியில் இரண்டு இனங்கள் உண்டு.  ஒரு இனம் மறைந்துவருகிறது. இந்த இனத்தைக் காப்பாறுவதற்காக இந்தச் சரணாலயம் ஆரம்பிக்க்ப்பட்டது. இதை ஆரம்பித்தவரும் ஒரு ஐரோப்பியரே.  இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் வருகிறது. உள்ளே போகக் க்ட்டணம் உண்டு.  ஒரு சிறிய இடத்திற்குள்தான் நாம் போக முடியும். அதில் உயரமான ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் ஒட்டகச் சிவிங்கியின் தலை உயரத்தில் நிற்கலாம். நின்றுகொண்டு பக்கத்தில் வரும் ஒட்ட்கசிவிங்கிக்கு தீனி கொடுக்கலாம். கொடுப்பதற்கென்றே ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட உணவு உருண்டைகள் கிடைக்கின்றன.  ஒட்டகச்சிவிங்கியின் வாயைத் தொடும் அளவில் பக்கத்தில் நின்றுகொண்டு அதன் நாக்கில் உருண்டையை வைக்கலாம். அது நம் கையை நக்கும்.  ஒட்டகசிவிங்கியைப் பக்கத்தில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் யானைக் குட்டிகளின் காப்பகமும் ஒன்று (Elephant Orphange).  தந்தத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானையின் இளம் குட்டிகளை ரோந்துபோகும் வனஅதிகாரிகள் காப்பாற்றிக் இந்தக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். வியாதியால் இறந்துபோன தாயின் இளம் குட்டிகளையும் இப்படிக் காப்பாற்றுகிறார்கள்.  யானைக் கூட்டத்ததிலிருந்து பிரிந்த யானைக் குட்டி வழி தவறி, நீர் குடிக்கச் சென்று கிணற்றில் விழுந்துவிடுவதும் உண்டு. இந்தக் குட்டிகளையும் காப்பாற்றிக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் காப்பகத்தின் நோக்கம் ஐந்தாறு ஆண்டுகள் குட்டிகளைக் கண்ணும்கருத்துமாக வள்ர்த்துப் பின் காட்டில் விட்டுவிடுவது.  அங்கே அவை ஒரு யானைக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிழைத்துக்கொள்ளுமாம்.

    ஒரு ஐரோப்பிய தம்பதிக்ள் முதலில் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தார்களாம். யானை குட்டி நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் குடிக்குமாம்.  அனாதைக் குட்டிகளுக்க்கு மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதாம்.  அதனால் மனிதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் புட்டிப்பாலை பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கிறார்கள்.  இது தினமும் பதினொரு மணிக்கு நடக்கும்.  இதற்குக் குட்டிகளைக காட்டுக்குள்ளேயிருந்து கூட்டிவந்து ஒரு வளைவுக்குள் விடுவார்கள்.  இந்தக் காட்சியைப் பொதுமக்கள் சுற்றி நின்று பார்கக்லாம். இதற்குக் கட்டணம் உண்டு.  பல உல்லாசப் பயணிகள் இதைப் பார்க்கக் கூடுகிறார்கள்.  கென்யாவின் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.

    குட்டி யானைகள் வரிசையாக நடந்துவந்து பால் பாட்டில்களுக்கு முன்னால் வந்து நிற்கும் அழகு ரசிக்கத் தகுந்தது.  பாலைக் குடித்துவிட்டு ஒர் மணி நேரம் மண்ணை வாரி இறைத்தும் தண்ணீரில் இறங்கியும் விளையாடுகின்றன.  ஒவ்வொரு குட்டிக்கும் தனிப் பெயர் உண்டு; தனிக் காவலரும் உண்டு.  ஒரு யானைக் குட்டிக்கு வயது நான்கு மாதமே.  தாயை ஒரு நாளிலேயே பிரிந்துவிட்டது.  அன்றிலிருந்து அது காப்பகத்தில் வள்ர்கிறது.  தாயைப் பிரிந்த சோகம் அதன் முகத்தில் இன்னும் காணப்பட்டது.  இது பிழைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    நாங்கள் காப்பகத்திற்குப் போன அன்று பல நாட்டுப் பயணிகள் வந்திருந்தனர். கென்யாவைச் சேர்ந்த வசதியான ஒரு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளும் பள்ளிச் சீருடை அணிந்து வந்திருந்தார்கள்.  ஒரு காவலர் ஒவ்வொரு குட்டியின் கதையையும் சொனன்னார்.  இந்தக் குட்டிகளின் பராமரிப்புச் செலவுக்கு உதவும் வகையில் யாரும் ஆண்டுக்கு ஐம்பது டாலர் செலுத்தித் தத்துஎடுத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குட்டிக்கும் தத்துஎடுப்பவர்கள் பலர் இருப்பார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் தத்தெடுத்த குட்டியின் வளர்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.  குட்டியின் படத்தையும் அவ்வப்போது அனுப்புவார்கள்,  பார்க்க வந்த பலர் பணம் கொடுத்தார்கள்.

    இங்கு பல நினவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன.  யானைப் படம் போட்ட பைகள், T ஷர்ட்டுகள், யானை உருவங்கள் முதலியனவற்றைப் பலரும் வாங்கினார்கள்.  இந்தப் பணமும் காப்பகத்துக்குப் போகும்.

    மிருகங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.  அவற்றை மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பதை  விட அவற்றின் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது ஒரு தனி இன்பம்.  அந்த இன்பம் எனக்குக் கென்யாவில் நிறையவே கிடைத்தது.

    சரணாலயத்தின் படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/KenyaWildlife?authkey=Gv1sRgCJ67k97mpOaxQQ

    https://picasaweb.google.com/108173580006522327175/SheldrickElephantOrphanage?authkey=Gv1sRgCJn25YaJsOL3Cw

    படங்கள்: மெல்லியல்

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share
  • கென்யா பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவற்றில் ‘நைரோபி நேஷனல் மியுசியமும்’ ஒன்று.  கிழக்கு ஆப்பிரிக்கா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்கை ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த அரும்பொருள்களை சேகரித்துவைக்க ஒரு இடத்தைத் தேடியபோது மியுசியம் ஒன்று அமைக்க அரசு முடிவு செய்தது.  முதலில் ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட மியுசியம் பின்னால் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களையும் சேமித்துவைக்கப் பெரிய இடத்திற்கு மியுசியத்தை மாற்றியது.  அதுவும் போதாமல் பின் இப்போது மியுசியம் இருக்கும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டி பல பிரிவுகளாக அதை அமைத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கென்யாவின் கவர்னராக இருந்த ராபர்ட் கோரிண்டன் என்பவரின் பெயரில் (Robert Coryndon)  கோரிண்டன் மியுசியம் என்று அழைக்கப்பட்ட இது 1963-இல் கென்யா சுதந்திரம் அடைந்தபிறகு நைரோபி நேஷனல் மியுசியம் என்ற பெயர் பெற்றது.

    இது நாங்கள் தங்கியிருந்த் ஓட்டலுக்கு மிக அருகாமையில் இருந்ததால் காலை எட்டரை மணிக்கு மியுசியம் திறப்பதற்கு கொஞ்சம் முன்னாலேயே அங்கு இருந்தோம்.  காலை அதைத் திறப்பதற்கு முன் தினமும் அதைச் சுத்தம் செய்வார்கள் போலும்.  சுத்தம் செய்யும் பெண்கள் கற்களினால் ஆன தரையை வாளியையும் துடைக்கும் துணியையும் கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்கள்.  வளர்ந்துவிட்ட நாடுகளில் இப்படி கைகளினால் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருக்கும்.

    மியுசியத்தின் முகப்பில் தாயும் சேயுமான பெரிய கற்களால் ஆன சிலை நம்மை வரவேற்கிறது.  ஒரு பக்கமாக பெரிய டைனஸோர் ஒன்றின் மாதிரி இருக்கிறது.  மியுசியத்தைச் சுற்றி பல வகைத் தாவரங்கள் அடங்கிய தோட்டம் இருக்கிறது.  அதில் பல அரிய மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    மியுசியத்திற்குள் முதல் முதலாக டிக்கெட் வாங்கி நுழைந்தது நாங்கள்தான்.  மியுசியத்திற்க்குரிய நுழைவுக் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு கென்யா நாட்டவர்களை விட மிகவும் அதிகம்.  எல்லா உல்லாசப் பயண இடங்களிலும் இப்படித்தான்.  அதிக தூரம் நடந்தால் எனக்குக் களைப்பாகிவிடும் என்பதால் இம்மாதிரி அதிகம் நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஒன்றை மியுசியம் அதிகாரிகளிடமிருந்து இலவசமாகவோ வாடகைக்கோ எடுத்துக்கொள்வதுண்டு. இங்கும் அம்மாதிரி கேட்டோம்.  அங்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன.  இரண்டின் சக்கரங்களிலும் போதிய காற்றழுத்தம் இல்லையென்றும் காற்றை அடைத்துத் தருவதாகவும் கூறினார்கள்.  நம் நாட்டில் சைக்கிளுக்கு காற்றடிப்பது போலவே அந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்குக் காற்றடித்தார்கள்.  இதுவும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  மேலைநாடுகளில் இப்படிக் கைகளால் காற்றடிப்பதைப் பார்க்க முடியாது.

    இந்த மியுசியம் கென்யாவின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துச் சொல்ல அமைக்கப்பட்டது.  கென்யாவின் காடுகளில் அதிகமாகக் காணப்படும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் நகரின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.  நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் மாதிரி ஓட்டலின் முன் முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.  கென்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மிருகங்களின் படங்களைப் பார்க்கலாம். கென்யர்கள் தங்கள் காடுகளில் இருக்கும் இந்த விலங்கினங்களால் மிகவும் பெருமை கொண்டுள்ளார்கள்.  அதன் அடையாளமாக எல்லா இடங்களிலும் இதன் மாதிரிகளைப் பார்க்கலாம்.

    மியுசியத்திற்குள் நுழைந்தவுடனேயே பெரிய யானையின் மாதிரி ஒன்று இருக்கிறது.  மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட, பிரபலமான இந்த யானை இறந்த பிறகு அதன் உடலைப் பதப்படுத்தி மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த மியுசியத்தின் ஒரு பகுதியில் இம்மாதிரி பல primates-களின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள்.  இன்னொரு பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் பறவைகளின் மாதிரிகள் இருக்கின்றன.  கென்யாவின் சரித்திரத்தை விளக்கும் காட்சிப் பொருள்கள், படங்கள் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  பிரிட்டிஷ் அரசு போட்ட கென்யா-உகாண்டா ரயில்பாதை பற்றிய விபரங்களும் ரயிலின் மாதிரிகளும் அவை சம்பந்தப்பட்ட படங்களும் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  இக்காலத்திய கலைப் படைப்புகளும் ஒரு பகுதியை அலங்கரிக்கின்றன.  முதல் மனிதன் கென்யாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ஆதாரமாக அகழ்வாராச்சியில் கிடைத்த பல அரிய பொருள்கள் ஒரு பகுதியில் இருக்கின்றன.  தனியாக ஒரு பகுதியில் பாம்பு, ஆமை போன்ற ஊரும் மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன.

    பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கென்யாவை விடுவித்து கென்யா சுதந்திரம் கிடைக்கக் காரணமாகயிருந்த் முதல் ஜனாதிபதி ஜேமோ கென்யாட்டாவின் வாழ்க்கை வரலாறு, அவர் பிரிட்டிஷை எதிர்த்துச் செய்த சாகசச் செயல்கள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சியை இன்னும் சில மாதங்களில் இந்த மியுசியத்தில் திறக்கப் போகிறார்களாம்.  அது சில மாதங்கள் இங்கு இயங்கிவிட்டுப் பின் மற்ற மியுசியங்களுக்கு கொண்டுபோகப்படும்.  (இந்த கென்யாட்டாவின் மகன்தான் இப்போது ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவருகிறார்.  இவர் மேல் இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள அகில உலக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  நாட்டின் நலனுக்காகப் பல தியாகங்கள் புரிந்த ஜேமோ கென்யாட்டாவின் மகன் ஊழல் வழக்கில் ஈடுபட்டிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஊழல் புரிந்தவர்களையும் எல்லா நாடுகளிலும் தங்களை ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் போலும்.)

    கென்யாவில் பல இடங்களில் இருக்கும் மியுசியங்கள் எல்லாம் National Museums of Kenya  என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.  எல்லா மியுசியங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் நைரோபி நேஷனல் மியுசியம் 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

    மியுசியத்தில் உள்ள கழிப்பறைகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் காணப்படும் கழிப்பறைகளுக்கு ஒப்பாக மிகவும் சுத்தமாக இருக்கின்றன.  கென்யாவில் எல்லாப் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன.  அநேகமாக எல்லா இடங்களிலும் ஐரோப்பிய மாடல் டாய்லெட்டுகளும் சில இடங்களில் அவற்றோடு இந்திய மாடல் டாய்லெட்டுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளை உப்யோகிப்பதை நினைத்தாலே தலை சுற்றும்.  ஏன் நம்மால் அப்படிக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை?

    நைரோபியில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் உகுரு (Uhuru) பார்க் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பார்க்.  உகுரு என்றால் சுவாஹிலி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தமாம்.  கென்யா சுதந்திரம்அடைந்த பிறகு இப்பார்க்கிற்கு இந்தப் பெயர் வந்ததாம்.  இதில் 80,000 பேர் வரை கூடலாம்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற பின் இந்தப் பார்க்கிலிருந்து மக்களுக்குத் தன் கொள்கைகளை அறிவிப்பாராம்.

    இந்தப் பார்க்கிற்குள்ளேயே ஒரு சிறிய ஏரி இருக்கிறது.  அதில் பார்க்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் படகு விட்டு மகிழலாம்.  சிறு குழந்தைகளை சிறுவருக்கான சிறிய கார்களில் உட்காரவைத்து இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பூங்காவிற்குள் உளள வீதியில் தள்ளிக்கொண்டே ஓடுகிறார்கள்.  இதற்குக் கட்டணம் உண்டு.  இப்படித் தள்ளிக்கொண்டே போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  சிறு குழந்தைகளுடைய முகங்களில் பலவகையான வர்ணம் கொண்டு சித்திரம் தீட்டுகிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.  சிறு குழந்தைகள் பலர் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.  குழந்தைகளை மட்டக் குதிரையில் உட்காரவைத்து குதிரைகளை நடத்திக்கொண்டு போகும் பொழுதுபோக்கும் உண்டு.  குழந்தைகள் அதை வெகுவாக ரசிக்கிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.

    இந்தப் பார்க்குக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  இது ஏழைகள் பலருக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.  நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  அன்று பார்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கு வந்திருந்தவர்களில் பலர் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.  அங்கு விற்கும் தின்பண்டங்களும் நம் நாட்டு எள்ளுருண்டை, குச்சி ஐஸ் போன்றவை.  சிறு குழதைகளுக்கான பலூனும் விற்கப்பட்டன.  கொக்கோ கோலா மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  எங்கும் வியாபித்திருக்கும் இறைவன்போல் இந்த கொக்கோ கோலா மாத்திரம் உலகின் எல்லா இடங்களுக்குள்ளும் எப்படியோ புகுந்துவிடுகிறது.

    கென்யாவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம்.  இம்மாதிரி எளியவர்கள் வரும் இடங்களில் கென்ய நாட்டு இந்தியர்களைப் பார்க்கவில்லை.  இந்தியர்கள் பலர் ரயில்பாதை போடும்போது அதில் வேலைபார்க்க இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொழிலாளர்களாக முதல்ல் கொண்டுவரப்பட்டார்கள்.  வேலை முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு கென்யாவிலேயே தங்க விரும்பியவர்களை தங்க அனுமதித்ததாம்.  அவர்களில் பலர் வாணிபம் செய்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பின்னர் வணிகம் செய்வதற்கென்றே இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் கென்ய நாட்டு மக்களோடு ஒன்றிப் பழகுவதில்லை.  கல்யாண சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.  அவர்களுடைய குடியிருப்புகள் தனியாக இருக்கின்றன.  கென்யாவின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்கு முக்கியமாதலால் கென்ய மக்களும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவது மாதிரித் தெரியவில்லை.  ‘கென்யமக்கள் நவீனத்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பாகவே அவர்கள் தொழில் நடத்தி வசதியான நிலைக்கு வந்துவிட்டார்கள்’ என்று ஒரு டாக்சி ஓட்டுனர் கூறினார்.

    (தொடரும்).

    நைரோபி பற்றியும் மியுசியம் பற்றியும் சில படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    Nairobi

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    Museum

    https://picasaweb.google.com/108173580006522327175/NairobiNationalMuseum?authkey=Gv1sRgCMbKkI7C59_n9wE

     

    படங்கள்: மெல்லியல்

    Share