Tag: இசைக்கவி ரமணன்

  • கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (6)

     

    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    (பாடல்)

    images (1)
    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    நெஞ்சைத் தொட்டுக் கிள்ளாதே
    கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன் சற்றும் விலகிச் செல்லாதே! இந்த
    பிஞ்சு நெஞ்சை இன்னமும் நீ கலங்க விடாதே!

    அஞ்சுப் பத்துவிரல்கள் எந்தன் கன்னத்தைத் தாங்க
    அருகில், மிக அருகில் என்னுயிர் ஏங்க
    நெஞ்சில் உந்தன் சுவாசம் படும் நெற்றிப் பொட்டின் வாசம் வரும்
    தஞ்சமென்று வெள்ளம்வந்து நாணலைக் கெஞ்சும், இந்தத்
    தருணத்தில் தமிழும் நிலவும் தள்ளாடி மயங்கும் (கொஞ்சி)

    சந்திக்கும் போது காலம் மணலாய்க் கரையும்
    சந்திக்க ஏங்கும்போது மலையாய் கனக்கும்
    சந்திப்பும் தேவையில்லை பிரிவுக்கும் வாய்ப்புமில்லை
    இந்த உயிர் அந்த உயிர் என்பதில்லையே, இந்த
    சொந்தம் எந்த ஜென்மபந்தம் தெரியவில்லையே
    தத்தைக்கிளி கொத்திச் சிவந்து கனிந்த பழங்கள்போல், உன்
    பட்டு இதழ் தொட்டுவரும் பவழ வார்த்தைகள்!
    கள்ளெடுத்த மொழியோ அன்பின் வழியோ உந்தன்
    காதல் மொழி?
    முள்ளெடுத்த முனையில்நின்று தவம்புரிவது எந்தன் விதி (கொஞ்சி)

    நாணத்துக்கும் வெட்கத்துக்கும் விடுதலை நாளா?
    வண்ணத்துக்கும் ராகத்துக்கும் திருமண நாளா?
    வானத்துக்கு என்னவந்தது தேனில் விழுந்ததா? என்
    வார்த்தையில் அமிழ்தம்நுழைந்து மயங்கித் துவண்டதா?
    காலத்துக்கும் இருக்கும் இந்த நெருக்கம் என்று
    கவிதை சொல்ல
    கண்விளிம்பில் மட்டும் ஒரு
    கண்ணீர்த்துளி தயங்கித் ததும்ப (கொஞ்சி)

     

     

    Share
  • காதலே நான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (5)

     

    காதலே நான்

                                                                                                                    {கேட்டு மகிழ}

    spells-for-love

    ஒய்யாரியே! உட்கார்!

    ஓரக்கிளையின் லாகவம் போலே.

     

    உன்னிடம் கொஞ்சம்

    சொல்லித்தான் ஆகவேண்டும்

    கொஞ்சமேனும்…

     

    நெஞ்சு முழுக்கக் காதலோடுதான், இந்தப்

    பஞ்ச பூதங்கள்

    கும்மி அடித்தபடி, இந்தக்

    குருட்டு உலகில், என்னை

    இறக்கி விட்டன.

     

    நாலு வயதிலேயே

    வாலிபனாய்த்தான் உணர்ந்தேன்

    எல்லாப் பெண்களுமே இளையவர்களாய்

    எனக்காகவே பிறந்தவர்களாகத்தான்

    தெரிந்தார்கள்.

     

    தொடவே முடியாமல்

    விடவே முடியாமல்

    தொடரும் பயணம்.

     

    இன்றைக்கு என்னத்தை

    இப்படி வியந்து பார்க்கிறாய்?

     

    இந்த நானூறு வயதிலும்

    இம்மியும் மாறவில்லை நான்.

     

    எனக்குப்

    பெண்கள் வேண்டும்

    அதைவிடவும் அவர்களுடைய

    கண்கள் வேண்டும்

    கண்களையே நினைவுபடுத்தும்

    மலர்கள் வேண்டும்

    மலர்களையே பரிகசிக்கும்

    மழலை வேண்டும்

    மழலையின் துவக்கமான

    மர்மம் வேண்டும்

    மர்மத்தைப் புகுந்து பார்க்கக்

    கவிதை வேண்டும்

    கவிதையைச் சிரஞ்சீவியாக்க

    கானம் வேண்டும்

    கானத்தில் தற்செயல் சந்திப்பாய்க்

    கடவுள் வேண்டும்

    கடவுளைக் கட்டித் தழுவக்

    காதல் வேண்டும்!!

     

    வேண்டுமளவு காதலுடன்தான்

    விளைந்திருக்கிறேனே!

    வேண்டுமளவு காதலென்ன

    காதலே வேண்டுமளவு

    காதலுடன்தானே, இங்கே

    காலெடுத்து வைத்திருக்கிறேன்!

     

    இன்னொன்றும் உனக்கு

    இப்போதே சொல்லிவிட வேண்டும்

     

    என்

    எல்லா உறவுகளுக்கும்

    பிரிவுகளுக்கும் பரிவுகளுக்கும்

    பதைப்புகளுக்கும் மதர்ப்புகளுக்கும்

    தெளிவுக்கும் குழப்பத்திற்கும்

    துளியாய் வரும் கண்ணீருக்கும்

     

    இந்தப்

    பொல்லாத காதல்தான் காரணம் என்றால்

    புரிந்துகொள்ள முடிகிறதா?

     

    காதல் உயிரென்றால்

    காமம்தான் உடம்பென்று

    வாதிட்டு என்னை

    வசக்க நினைத்தார்கள்

     

    நானும் இந்தப்

    பஞ்ச பூதங்களின் மேல், வழக்கு

    பதிவு செய்யலாமென்று

    பத்திரங்களைத் தயார் செய்தேன்..

     

    என்ன தவறு செய்ய இருந்தேன்

    பறத்தலைக் கால்கொடுத்துக் கெடுத்த

    பாழும் உலகம் எப்படி வாழ்க்கையைப்

    பந்தாடுகிறது பார்!

     

    இதோ கேள்!

    எனக்கு..

    காதலே வாகனம்

    காதலே வாசகம்

    காதலே வாழ்க்கை

     

    காதல்தான்,

    என்

    கண்ணெதிரே நானே இறந்து

    கனலில் எரிந்து,

    என்மேல்

    காதலுற்ற தேவதையின்

    கண்ணீர்த் துளிபட்டுச்

    சின்ன மலரயாய்ச்

    சிரிக்கும் மயானம்.

     

    சந்தனக் கரங்களுடன்

    சண்பகக் கண்களுடன்

    வந்தென் மார்பில் சுவாசித்தபடி

     

    இந்த தரிசனத்தைத்

    தந்ததே

    நீதான் என்பதை

    நினைத்துப் பார்ப்பாயா?

     

    இல்லை,

    எப்போதும்போல் காத்திருப்பாயா

    இன்னொரு கவிதைக்காக?

    இன்னமும் பெறாத முத்தத்திற்காக?

     

    Share
  • இங்கே எப்படி நீ?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக – (4)

     இங்கே எப்படி நீ

                                                                                                                      ( கேட்டு மகிழ)

     

     

     

    இடிந்து கிடக்கிறது கோயில்download

    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

     

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே

    காரை பெயர்ந்து, ஒரு

    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்

    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து

    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி

    பொருத்தமற்ற இடத்தில்

    பூவும் அருவருப்பு

     

    இது மெளனமல்ல

    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்

    வாழ்வில்லாத நிசப்தம்

     

    அது சந்நிதியல்ல

    அது கடவுள் காலி செய்துவிட்ட,

    ஒரு

    மாறுதலையாவது தரும்

    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்

    ஆம்

    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்

    சித்திரிக்கப்படுகின்றன..

     

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்

    வெளவால்களின்

    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன

    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.

    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்

    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

     

    இங்கே..இங்கே!!

    எப்படி நீ? எதற்கு?

    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்

    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்

    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்

    எழுந்தருளியிருக்கிறாய்?.

     

    சொச்சமாய் இன்னும்

    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்

    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

     

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்

    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்

    ஒற்றைத் துளியின் உணர்வு

    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

     

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்

    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக

    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

     

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!

    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

     

    இல்லை, ஒருவேளை

    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்

    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்

    காதல் என்னும் பேதைமையைப்

    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?

    யாருக்கு?!

     

    முடிவில்லாத ஒரு முறிவு

    முயற்சியின்றிக் கிடக்கிறது

    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது

    எதையோ தூண்டுவதற்கு

    முதலொன்று வந்து

    முன்னே நிற்கிறது

     

    வெற்றிகாண முடியாத வெறுமையும்

    தோல்வியறியாத முழுமையும்

    எதிரெதிரே நிற்கின்றன

    என்ன நடக்கும் என்பது

    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்

    ஏறிவந்தாலாவது தெரியுமா?

    Share
  • என் இனிய கண்ணதாசன்

    இசைக்கவி ரமணன்

     
    குடித்துச் சிவந்த கண்கள்download

    குப்புறக் கிடக்கும் உயிரை

    எடுத்துப் புரட்டித் தெம்பை

    ஏற்றும் கவிதையும் பாட்டும்

    கொடுத்துச் சிவந்த நெஞ்சம்

    கோலமயில் ஒருத்தியோடு

    கூடியே கிடந்து கொஞ்சி

    பாலமாய்ப் பஞ்சு மார்பில்

    படுத்துச் சிவந்த மேனி

    பட்டே அறிந்த ஞானி

    பரவசம் பருகும் தேனி

    பாதியில் பறந்த பாவி!

     

    கால்கடுக்க நான் நடந்து கண்ணிருண்ட போதிலெலாம்

    கன்னங்களை வருடவரும் தென்றல்! இவன்

    காற்றினிலே தலையசைக்கும் செந்நெல்! வந்து

    தோலுடுத்த என்மனதைத் தொல்லைவந்து சூழும்போது

    தோள்கொடுக்க ஓடிவந்த தோழன்! சும்மா

    சொல்லிச் சொல்லி வானைத்தொட்ட தேவன்!

     

    யாரெடுத்த தேகமோ! யாரிடத்தில் மோகமோ!

    யார்வசத்தில் தீருமோ! தெரியுமா? இந்த

    யாத்திரையின் இறுதியென்ன புரியுமா? இதில்

    தேரெங்கோ காத்திருக்க தெய்வமெங்கோ பார்த்திருக்க

    ஓரிடத்தும் நின்றிடாத கிள்ளை! அவள்

    ஒற்றையிதழ் பற்றிவாழ்ந்த பிள்ளை!

     

    காதலினால் போதையினால் கண்ணனையே வீழ்த்தியவன்

    ராதையினைக் கதிகலங்க வைத்தவன்! நெஞ்சில்

    ராத்திரியின் ரகசியமாய்த் தைத்தவன்! இவன்

    போதையிலே சொன்னதிலே போதிமரம் சிலிர்த்ததடி!

    பெளர்ணமியே வீதியுலா வந்ததே! அவன்

    புன்னகையில் புயலும் அடங்கி நின்றதே!

    தத்தைமகள் மெத்தையிதழ் முத்தமிட்டு முத்தமிட்டுத்

    தத்துவங்கள் சொன்னவனைக் கண்டேன்! அந்தச்

    சாயலிலே சற்று வெறி கொண்டேன்! இனி

    சத்தமில்லை சட்டமில்லை மொத்தமாகக் காதலிலே

    முப்பொழுதும் குப்புறநான் வீழ்ந்தேன்! அந்த

    மோகத்திலே முத்தெடுத்து வாழ்ந்தேன்!

     

    சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடும்போது

    சொர்க்கம்விட்டுச் சொல்லாமல் வந்தான்! எல்லாம்

    சொல்லிவிட்டுத் தான் திரும்பிச் சென்றான்! இவன்

    காதலுக்கு தேவன்! இன்பக் கன்னியர்க்கு ராஜன், நமது

    கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்

    கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்!

     

     

    Share
  • ஒரு பயணத்தின் முடிவில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (3)

     

    ஒரு பயணத்தின் முடிவில்

    (கேட்டு மகிழ)

     Melbourne-Daily-Photo-Blog-Beach-Dune-Harbour-Mornington-Peninsula-Pier-Sunset-MorningtonPeninsula_20120708_109_10_11-2

     

    இன்னும் சில நொடிகள்..

    இறங்கித்தான் ஆகவேண்டும்

    நீ நான் என்பார், அந்த

    நிலை மாறத்தான் வேண்டும்

     

    கன்னற் பேச்சுக்கள்

    காதினிலே குறுகுறுப்பு

    சின்ன விளையாட்டு

    சிலநேரக் கண்பனிப்பு

     

    என்று பலவாறாய்

    இன்புற் றிருந்ததெல்லாம்

    இன்னும் சிலநொடிக்குள்

    எங்கோ பறந்துவிடும்!

     

    உறவாகி விடுமென்றா

    உதடோரம் புன்னகைத்தோம்?

    மனமாரக் கண்ணிமைத்தோம்?

    மறைவாக ஸ்வப்பனித்தோம்?

     

    எந்தக் கூட்டத்தில்

    எங்கெங்கே பிறந்தோமோ

    அந்தக் கூட்டந்தான்

    அங்கங்கே சேரவந்தோம்!

     

    சேர்வது வேறு, இணைந்து

    செல்வது வேறு, என்றிந்தப்

    பார்வைக்குத் தெரிந்திருந்தால்

    படாதபாடு படுவோமா?

     

    நிலைய மிருப்பது

    நீ நான் இறங்கத்தான்

    நினைவொன் றிருப்பது

    நீ நான் துடிக்கத்தான்

     

    இருப்புப் பாதை

    இணைந்திடத்தான் போகிறது

    விருப்பேது வெறுப்பேது

    விவரமற்ற சூனியத்தில்…

     

    படத்திற்கு நன்றி:

    http://mel365.com/melbourne-daily-photo-a-never-ending-pier-into-port-phillips-bay/

     

    Share
  • தெய்விகக் களிப்பு

    இசைக்கவி ரமணன்

    ”எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!”

    —- கண்ணதாசன்

    கலை என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டும் போதாது. மனித வாழ்வை மேம்படுத்தும்போதுதான், கலை, ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. “எல்லாக் கலைகளும் இசையை நோக்கி ஒசிந்தே இருக்கின்றன, “ என்பார்கள். (All arts tend to music) ஏனெனில், இசை என்பது, படைப்பின் ஆதாரமான நாதத்திலிருந்து வருவது. உலகம் நாதமயம் என்று கண்டவர்களின் உள்ளம் இசைமயமாகவே இருக்கும். உள்ளம் இசைமயமாக இருந்தால், உலகம் நாதமயம் என்பதும் புலனாகும்! அதனால்தான், ”ஆசை தரும் கோடி அதிசயங்கள் உண்டதிலும் ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!” என்றும் ”பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா,” என்றும், ”நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நின்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,” என்று வியந்தும், உருகியும், பிரபஞ்ச உண்மையை அனுபவித்தும் பாடுகிறார் பாரதியார்.

    “Music is the direct route to God, though not the exclusive one,” என்பார்கள் பெரியோர். இறைவனிலிருந்து தோன்றி, மனித உலகில் இறங்கி, மானிட வாழ்வை மேம்படுத்தி, மனிதனை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதால் இசையே இறைவன் என்றும் கொண்டாடப் படுகிறது.

    இப்படிப்பட்ட மேன்மையுள்ளது இசை. இந்த மேன்மை நமக்கு எப்போது விளங்கும்? இசைக் கலைஞர்கள், அதை மனிதர்களின் மேம்பாட்டுக்காக வெளிப்படுத்தும்போது! “They live who live for others. All the rest are more dead than alive,” என்பார் சுவாமி விவேகானந்தர். படைப்பு என்பது எப்போதும் பரிபூரணமாக இருப்பது. எனவே, இங்கே யாரும் எதையும் சிருஷ்டிக்க முடியாது. இசையை நாம் உருவாக்கவில்லை இசைதான், நமது உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி, உயர்ந்த பண்புகளில் நம்மை ஈடுபடுத்தி, நம்மை ஆளாக்குகிறது.

    இசையைப் பொருத்தமட்டில், எல்லா நலங்களும் பொருந்திய மனிதர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஒரே வரிசையில்தான் இருக்கிறார்கள். ஊனமற்ற உடம்பு என்பது அதனளவிலே ஒரு சிறப்பாகிவிடாது. குறைபாடுகள் உள்ள உடம்பு என்பதும் அதனளவிலே ஒரு குறையாகிவிடாது. ஒரு மனிதன், தன்னை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான், அவனுடைய மனிதத் தரம் என்ன, அவன் மற்றவர்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கிறான் போன்ற பல அம்சங்களை வைத்தே ஒரு மனிதன் ஞானமுள்ளவனா, ஊனமுள்ளவனா என்பதைக் காலம், சந்ததியினருக்கு அடையாளம் காட்டுகிறது.

    இந்தக் கருத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது, காசி விஸ்வநாதன் அறக்கட்டளை ஆண்டுகள் பலவாக ஆற்றிவரும் பணியின் மகத்துவம் நமக்குப் புரிகிறது. ”உன்னை உன்னால் உயர்த்திக்கொள்!,” என்றான் கண்ணன் கீதையிலே. “நாம் உடலால் குறைகளோடு பிறந்தோமேயன்றி, மற்ற மனிதர்களைவிட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. நாமே நமது நலத்தை நிர்வகிக்க வேண்டும்,” என்னும் உறுதியுடன் திரு. வள்ளியப்பன் தனது சக மனிதர்களுக்காகச் செய்துவரும் சேவை, ஒரு வீரனின் முயற்சிக்குச் சற்றும் குறைவற்றது.

    இந்த முயற்சியின் சிறப்பம்சமாக அண்மையில் சென்னை மியூசிக் அகாடெமி அரங்கத்தில் அவர் தெய்விகக் களிப்பு (Divine Delight) என்ற ஒரு மாபெரும் விழாவை நடத்திக் காட்டினார். இதை நடத்துவதில், அவருக்கு உறுதுணையாக இருந்த தாளாளர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகிறது.

    இந்த விழாவில், நாம் ஒரே சமயத்தில் காணக்கூட முடியாத பெரும் கலைஞர்கள் ஒரு சேர இசை மழை பொழிந்தது, அரங்கத்தில் உள்ள பெரியோர்களையும், இளைஞர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது.

    தங்களுடைய கலை, சக மனிதர்களின் வாழ்வு நலம்பெறுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட கொடை என்பதை அந்த மேடையில் இருந்த ஒவ்வோர் இசைக் கலைஞரும் உணர்ந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கினார்கள். விழாவின் இறுதியில், அனைவரும் சேர்ந்து நமது வள்ளியப்பனை ஆரத் தழுவிப் புகழ்ந்ததில் ஒவ்வொரு நெஞ்சமும் அங்கே நெகிழ்ந்தது.

    இசையின் அருளால், நாம் ஒவ்வொருவரும் நமது குறைகள் எவையாயினும் அவை தீர்ந்து, இறைவனை அடைவோமாக!

    Share
  • வரவேற்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (2)

    வரவேற்பு 

    (கேட்டு மகிழ)

    வருக வருக திருமகளே1625554_556625784436420_4864087313791331849_n

    வாசல் திறந்துவைத்தேன்! உன்

    அருகில் இருக்கும் பேற்றை எண்ணி

    அழுக்கைத் துடைத்துவைத்தேன்!

    உருகும் என்றன் உயிரில் சிறிய

    தீபம் ஏற்றி வைத்தேன்! நீ

    உதிர்க்கும் சிரிப்பை ஏந்திக்கொள்ள

    உள்ளம் திறந்துவைத்தேன்!

     

    எதுவுனக்குப் பிடிக்குமென்று

    எனக்குத் தெரியவில்லை! உனக்கு

    எதையும் கொடுக்கும் தகுதி இந்த

    ஏழை எனக்கு இல்லை!

    இதயம் ஒன்றைப் பறிகொடுத்து

    எதிரில் நிற்கும்போது

    இன்னும் என்ன தருவதென்று

    இதுவும் புரியவில்லை!

     

    வசந்தகாலம் நூறு உன்றன்

    வாசலாகட்டும்!

    வழிமுழுவதும் தேவகானம்

    வளைந்து பொழியட்டும்!

    இசைந்து இசைந்து இறைவன் உனக்கு

    இன்பம் வழங்கட்டும்! அதை

    இங்கிருந்தோ எங்கிருந்தோ இந்த

    ஏழை பார்க்கட்டும்! அதிலென்

    வாழ்வு நிறையட்டும்!

     

    நான்

    வந்தகதை விதியினாலே

    வாழ்க்கை முடிந்தது! நீ

    வரும்வரைநான் வாழவேண்டும்

    வாழ்தல் புரிந்தது

    இந்த வாழ்வில் இருக்கும் கணங்கள்

    இனி உனக்காக! என்

    இன்பம் யாவும் வைத்து நின்றேன்

    இருவிழிக்காக!

     

    நானிருக்கும் வரையுனக்கு

    நலங்கள் பாடுவேன்!

    நாளும் இரவும் காவலாகக்

    கடவுளைத் தொழுவேன்!

    தேன்மயங்கும் உன் நினைவே

    நெஞ்சில் சூடுவேன்! அந்தத்

    தெருமுனையில் நிலவொளியில்

    தேய்ந்து கரைவேன்!


     

    Share
  • ஒரு நாள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக! – (1)

     

    காலத்தால் அழியாதது காதல் மட்டுமே. கவிஞர்களுக்கு இந்த காதல் மட்டுமே தங்களின் இருப்பை உணர்த்துகிறதோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு, ஆண்டவனிடம் தொடங்கி, ஆயர்பாடி ஆடு மற்றும் மாடுகளிடம்கூட அற்புதமாக காதல்மொழி பேசும் வல்லமையை இவர்கள் எங்கிருந்துதான் பெறுகிறார்களோ! அந்த வகையில் நம் இசைக்கவி ரமணன் அவர்களின் ‘உனக்கே உனக்காக’ என்ற காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியாக இப்பாடலை அவர்தம் இனிய குரலிலேயே கேட்டு மகிழலாம்.

    ஒருநாள்..

    (பாடல்)

     

    ஒரு நாள்images

    மலராகப் பிறக்க வேண்டும்

    உன் கூந்தலில்

    சிலநேரம் இருக்க வேண்டும்

    ஒருநாள்

    தென்றலாய்ப் பிறக்க வேண்டும்

    உன் மடியினில்

    குழந்தைபோல் தவழ வேண்டும்  (ஒருநாள்)

     

    இருந்ததுவும் ஓரிதயம், அதைக்

    கவர்ந்து கொண்டாய்

    இமைவிளிம்பில் ஒரு பார்வையில், உன்

    நெஞ்சைத் தந்தாய்

    உன் மடியில், கண் மூடி

    என் பாடல் காற்றில் மிதந்திடவே  (ஒரு நாள்)

     

    உன்னிடமே என்னென்னமோ நான்

    சொல்லிட வந்தேன்

    கண்ணெதிரில் உன்னைக் கண்டதும் நான்

    என்னை மறந்தேன்

    என்னுயிரே! என் துணையே!

    என் தெய்வம் என்றும் நீதானே!  (ஒரு நாள்)

     

     

    Share
  • இசைக்கவியின் காணொலிகள்

     

     

    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:

     

    _13425035721
    https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் – கேபி)
    https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் – கேபி 2)
    https://www.youtube.com/watch?v=MwA4kTp-lkg (கண்ணதாசன் – கேபி 3)
    https://www.youtube.com/watch?v=HIWCumXT1Bs (ATN Interview – 2 Canada)
    https://www.youtube.com/watch?v=EGv0cdZu9HQ (சொற்களே வருக வருக)
    https://www.youtube.com/watch?v=oWjDKLBWWzE (மனச வாட்டுறது)
    https://www.youtube.com/watch?v=cymfj8DQO2I (ஓடம் கரையேறி)
    https://www.youtube.com/watch?v=j_iN-j1Fhtk (ஓலைக் குடிசையிலே)
    https://www.youtube.com/watch?v=mJHrd4Dv4fQ (கங்கா ஆரத்தி என் வீடியோ)
    katharnath 133
    https://www.youtube.com/watch?v=8HwX2RxM0Gc (Rishikesh-Jageshwar-VruddhaJageshwar)
    https://www.youtube.com/watch?v=paJlioG05nk (Amritsar Wagah Border my video)

     

     

    Share
  • மனங்கவர்ந்த கவிஞனுடன் மறக்கமுடியாத கணங்கள்

    கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்இசைக்கவி ரமணன்

    தெருவிளக் மைமுட்டும் விட்டிலாய்ச் சொல்லெலாம்
    தினமுமவன் கதவுதட் டும்
    தேனே எனைக்கொஞ்சம் தேற்றிவி டெனக்கெஞ்சிச்
    சிறுவிரல் பற்றிநிற் கும்
    கருவங்க ளில்லாத கட்டிவெண் ணெய்நெஞ்சம்
    கண்ணன் ஒசிந்த மஞ்சம்
    சரிபாதி பெண்மையில் பறிபோன நெஞ்சிலே
    சங்கீத ஜதிகள் புரளும்
    உருவாக வந்தவொரு மருமத்தைக் கொண்டாட
    ஒருவாழ்க்கை போதவிலையே
    ஒளியாக அவன்பாடல் நுழையாத நெஞ்சங்கள்
    ஒன்றுமே மீதமிலையே!

    சென்னை மீனம்பாக்கம் அ.ம. ஜெயின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நுண்கலைத் துறைச் செயலராக இருந்தேன். அப்போது நானும் என் நண்பன் திரு கே. பாலசுவாமிநாதனும் எங்கள் கழகத்தைத் திறந்து வைக்கக் கண்ணதாசனை அழைக்கச் சென்றோம். சென்னை ஹென்ஸ்மென் சாலையில் எளிய வீடு. வெளியே உட்கார்ந்திருந்தோம். யாரோ உள்ளே போய்ச் சொன்னார்கள்.

    தும்பைப்பூ வேட்டி, பனியன், கையில் நாளேடு, கண்களில் குடிச்சிவப்புடன் கவிஞர் வெளியே வந்தார். தடாலென்று காலில் விழுந்தேன். (வேறு வழியின்றித் தானும் விழுந்து பிற்பாடு கோபித்துக்கொண்டான் பாலா!) முழங்கையைச் சொறிந்தபடி, ‘எனக்கு ஊசியெல்லாம் போட்டுக்கணும். என்னால வரமுடியாது,’ என்றார் கவிஞர். ‘நீங்க குளிச்சிட்டு வாங்கையா, அப்புறமாப் பேசிக்கலாம்,’ என்றேன். குழந்தையாட்டம் சரியென்று ஒத்துக்கொண்டு சென்றார். பிறகு உள்ளே அழைத்தார்கள். பளிச்சென்று உட்கார்ந்திருந்தார் படுக்கையில். ரொம்ப இனிமையாகப் பேசினார். ‘தம்பி, மாலைநேரம் வேண்டாம், மத்தியானமாக வரேனே.’ என்று சொல்லிக் காலண்டரில் தேதியைக் குறித்துக் கொண்டார்.

    மகிழ்ச்சியும் பெருமையுமாக நாங்கள் கல்லூரி திரும்பினோம்! நாங்கள் கூப்பிட்டுக் கண்ணதாசன் வருகிறார் என்றால் சும்மாவா? ‘என்னடாது சினிமாக்காரளையெல்லாம் கூட்டிண்டு வராய்நீ?’ என்று மலையாளமும், தமிழுமாக அதட்டினார் கல்லூரி முதல்வர் திரு வி வி ராமன். ஒருவழியாய் அவரைச் சமாளித்துவிட்டு, எல்லா வகுப்புக்களிலும் நுழைந்து சொல்லிவிட்டு, அப்படியே கல்லூரி விடுதிக்குப் போய், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, விழா அரங்கத்தில் காத்திருந்தோம்.

    கண்ணதாசன் வரவில்லை! ஆளைப் பிடிக்கவும் முடியவில்லை! என் நிலைமையை எப்படிச் சொல்வது? கவிஞர் கல்லூரிக்கு வரக்கூடாது என்று நினைத்த ஆசிரியர்களுக்குத்தான் எத்தனை குரூரமான மகிழ்ச்சி!

    அப்புறம் என்னவாயிற்று?

    என் நண்பர்களின் கோபமான பார்வைகள், ஆசிரியர்களின் கிண்டலான சிரிப்புக்கள் இவற்றையெல்லாம் ஒருவாறு சகித்துக் கொண்டு, வெட்கத்தில் மேலும் வகுப்பறையைப் புறக்கணித்து, வழக்கம்போல் மரத்தடியில் தஞ்சம் புகுந்தால், பாம்பு வந்து சிதறினோம்! சமணர் கல்லூரியில், பாம்பை அடிக்கக் கூடாது! அது கடிப்பதைப் பற்றிய தடையுத்தரவு எதுவுமிருந்ததாகத் தெரியவில்லை!

    ஒருநாள் மதியம் திடீரெனக் கல்லூரிக்கு ஒரு தொலைபேசி வருகிறது. ‘தம்பி! இன்று ஓய்வாக இருக்கிறேன். இதோ மாலை 4.30 மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ங்க தம்பி,’ என்றது கவிஞரின் குரல். (இந்த இடத்தில் நீங்கள் என்னை வடிவேலுவாகப் பார்த்தல் அவசியம்! ஆஹா!..) கல்லூரி முதல்வரிடம் ஓடினேன்; காலில் விழாத குறைதான். பிறகு எங்கள் அரங்கத்தில் ஏற்பாடுகளைச் செய்தேன். கூடமாட ஓரிருவர் ஒத்தாசை செய்தார்கள். வகுப்பறைகளில் சென்று அறிவிக்க வேண்டும்; அங்கோ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்! ஆசிரியர்கள் கறாராக மறுத்துவிட்டார்கள். நொந்துபோன நான் என்ன செய்தேன்? நமக்குத்தான் மரத்தடி இருக்கிறதே, அங்கே அமர்ந்து சில நிமிடங்கள் நிழல் பருகினேன்.

    பிறகு, மாணவர் விடுதி வாசலில் ஒரு கரும்பலகையில் கவிஞர் வருகிறார் என்று எழுதிவைத்துவிட்டு இனி என்ன நடக்கிறது பார்ப்போம் என்றிருந்துவிட்டேன்.

    ஐந்து மணிக்கு நிகழ்ச்சி. 4.45 க்குக் கவிஞர் வந்திறங்கினார். தும்பைப்பூ வேட்டி. சந்தன நிறத்தில் சட்டை. ‘என்ன தம்பி, எம்மேல கோபம் ஒண்ணுமில்லயே?, என்றார். அந்தக் காதற்சோலையின் கீதக்குயிலிடம் கோபிப்பதெப்படி? வகுப்பறைகளில் தேர்வு தொடர்கிறது. யாரும் வெளியே வரக்காணோம். பதறிப்போன நான், நிலைமையைச் சமாளிக்க, கவிஞரைக் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ‘வாங்கோ வாங்கோ,’ என்று அன்புடன் அழைத்த முதல்வர் அடுத்த கணமே என்னைப் பார்த்து, ‘என்னடா நீ க்ளாசுக்கே வரமாட்டேங்கறாய்?’ என்று அதட்ட, அப்போது கண்ணதாசன் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ‘சார் அதெல்லாம் அப்புறமா வச்சுக்கலாம் சார்,’ என்றேனா, உடனே அடுத்த எல்லைக்குத் தாவிவிட்டார் முதல்வர். ‘இவன் என்னமாக் கவிதை எழுதுவான் தெரியுமோ?’ என்று கண்ணதாசனைக் கேட்டார். அவர், ‘அப்படியா?’ என்று என்னைப் பார்த்தார். நானோ, கூசிப்போய், முதல்வரைப் பார்த்து, ‘சார், சார் சும்மா இருங்களேன்,’ என்றேன். அவரா விடுவார்? ‘ரேடியோ ஸ்டேஷனுக்குப் போனோம். இவன் பத்து நிமிஷத்தில பாட்டே எழுதிட்டானாக்கும்,’ என்று பிடிவாதமாய்ச் சொன்னார்.

    கவிஞர் என்னைப் பார்த்த பார்வையில் நான் மறுபடி என்னை நிறுவ முயன்று தொலைந்து போனேன்..

    ‘நன்னாத்தான் படிச்சிண்டிருந்தான். திடீர்னு பாருங்கோ கவிதை எழுதறேன்னு கெளம்பி க்ளாசைக் கோட்டை விட்டுட்டான்,’ என்று சொல்லி, விடாப்பிடியாய் குருவாயூரப்பனைப் பற்றி மலையாளத்தில் நாலுவரி பாட்டு என்ற பெயரில் பாடாய்ப் படுத்தினார். இன்றென்ன, மாறிமாறி விபரீதங்களாய் நடக்கிறதே என்று வேறு வழியின்றிக் கூட்டமில்லாத கொட்டகைக்குக் குற்ற உணர்வுடன் அவரைக் கூட்டிச் சென்றேன்.

    முதல்வர் அறையிலிருந்து அரங்கத்தின் மேடைக்கு நேரடியாகச் செல்லக் குறுக்கு வழியொன்றுண்டு. செல்லும்போது, ‘என்ன தம்பி, மாணவர்களெல்லாம் வந்துட்டாங்களில்லெ?’ என்று கவிஞர் கேட்டதை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

    மேடையில் கால்வைத்தால், ஊசிவிழ இடமில்லாமல், சன்னலிலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்! என்னால் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. தட்டிக் கொடுத்த கவிஞரோ மிக உற்சாகமா கிவிட்டார்!

    மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன்:

    கையிலொரு கிண்ணம் கண்ணெதிரில் பெண்மை
    கட்டுடல் காட்டி நிற்க

    கட்டான மெத்தையின் கடிமலர்ப் பாயிலே
    கவிமகன் காத்திருக்க

    வெய்யிலொடு நிழலும் வீணையொடு விரலும்
    விளையாடச் சேர்ந்திருக்க

    தையலரின் கொல்லிடையில் தாளங்கள் போட்டிவன்
    தட்டாத கவிபாடுவான்!

    என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி மகிழ்ந்தேன். மாணவர்களின் கரவொலி அரங்கைப் பிளந்தது. கவிஞர், தன்னுரையில், மிகச் சிறப்பாக என்னைப் புகழவும், என் நண்பர்களெல்லாம் போட்ட சத்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

    எந்த ஊர் என்றவரே, பார்த்தேன் சிரித்தேன் இரண்டு பாடல்களையும் இனிமையாகப் பாடினார். வருவேன் என்றவர் வரவில்லை. எதிர்பார்க்காத போது வந்து நின்றார் பிடிவாதமாக! 15 நிமிடங்கள்தான் இருப்பேன் என்றுசொல்லிவிட்டு ஒருமணி நேரம் பேசினார்.

    என் ஆருயிர்க் கவிஞனை நான் சந்தித்த இரண்டாவது இனிய தருணம் என்றும் மறப்பதற்கில்லை!

    வெள்ளைமனம் பிள்ளைமனம் வீதியினில் வெந்தமனம்
    தினம்வீழ்ந் தெழுந்த மனமே
    வேதங் களும்தமிழின் வேகங்க ளும்வந்து
    விளையாடும் விந்தைமனமே
    முள்ளைமல ராய்க்கொண்டு மொத்தம்கீ றக்கண்டு
    முடியா தழுதமனமே
    மூண்டவொரு துன்பமே முக்திதரும் பாடலாய்
    மூண்டெழுந் தாடுமனமே
    வெள்ளத்தை விரல்தொட்டுத் திரியாக்கிச் சந்நிதியில்
    சிறுதீபம் ஏற்றுமனமே
    விட்டாலும் விலகாத விந்தைமிகு கவிஞன்புகழ்
    வீதியினில் பாடுதினமே!
    எந்த ஹோட்டல் என்று நினைவில்லை. கவிஞர் சோர்வுடன் படுத்திருக்கிறார். அருகே நான் மட்டும் அமர்ந்திருக்கிறேன்.

    “என்ன தம்பி, எல்லாரும் “கவிஞரே! முதல் வரியிலேயே அப்படியே செக்சைப் பிழிஞ்சு குடுங்க பாட்டிலே,” என்கிறார்கள். நானும் 30 வருசமாப் பிழிஞ்சிட்டுதானே இருக்கேன். கோபத்திலெ, “ஆண்டவன் படச்ச ஒடம்புதானடி ஆடை எதுக்கு அவசியமா” ன்னு ஒரு பல்லவியைத் தூக்கிப் போட்டேன். உடனே, “வேணாமுங்கோ! சென்சார்லெ வெட்டிப்புடுவாங்கோ,” அப்படீங்கறான்.

    அவர் பலத்த சோர்வுடன் காணப்பட்டார். காதலால் கண்ணனைத் தொட்டு, தனது கவிதையால் நமக்கும் அவனைக் காட்ட வல்ல அந்தக் கவிஞரை எப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள் என்று எனக்கு வருத்தம். எனக்கு 17 அல்லது 18 வயதிருக்கும். அவருடைய பாடல்களும் கவிதைகளும்தான் எங்களுக்குப் பெரிய ஊக்கம். அவரைபோல் இன்னொருவன் பாட்டெழுத முடியாது என்னும் அபிப்பிராயம், இன்று தீர்மானமாகக் கனிந்திருக்கிறது.

    என் உள்ளங் கவர்ந்த கவிஞன், இப்படிச் சோர்வதா? நான் அவருடைய வரிகளையே அவருக்குச் சொல்லில் காட்டினேன்:

    பெண்களை விட்டென்ன பேரின்பம்? உயிர்காக்கும்
    கண்களை விட்டென்ன கடவுள்நெறி? ஒன்பதுவாய்ப்
    புண்களை விட்டென்ன புதுப்பார்வை? அனுபவிக்கும்
    எண்களை விட்டென்ன இசைத்தருமம்? போடா போ!

    காமுகனும் மாண்டான் கடவுள் நெறி பேசும்
    மாமுனியும் மாண்டான்! மற்றதிலே யார்பெரியர்?
    நாமுடலைப் பார்ப்போம் நமதுடலைப் பெண்பார்ப்பாள்
    சாமி நமதுசுகச் சரித்திரத்தைப் பார்க்கட்டும்!

    ஏது மறந்து விட்டீர்களா?

    எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா! நான்
    இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா!

    பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா!
    இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா!

    நீங்கள்தானே எழுதினீர்கள்?

    வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம் என்
    வாழ்க்கையைக் காக்கவிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே!

    மீனாட்சி உங்கள் பக்கத்தில்தானே இருக்கிறாள்?

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி!
    பேசமறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னிதி!
    அதுதான் காதல் சன்னிதி!

    வேறு யாரும் இப்படி எழுத முடியுமா?

    என்று கிட்டத்தட்ட அரைமணி நேரம் நான் கவிஞரின் கவிதைகளையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லியும், பாடியும் காட்டினேன். சொல்லச் சொல்ல அந்தச் சந்தனமுகம் அப்படியே மலர்ந்துகொண்டே வந்தது. கவிஞர் பதிலாகச் சொன்ன வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:

    “தம்பி! இனி பார்! பேனாவெ நிமித்திப்
    பிடிக்கிறேன்,” என்றது அந்தக் குழந்தையுள்ளம்.

    சரி, எதற்காக அந்த ஹோட்டல் அறையில் அவரைச் சந்தித்தேன்?

    நங்கைநல்லூரில் குருவாயூரப்பனுக்காக ஆலயமெழுப்புகிறார்கள், கேரள பாணியில். என் தந்தை தற்காலிகப் பிரதான பூஜகராக இருக்கச் சம்மதிக்கிறார். சின்னக் கூரையடியில் படத்தை வைத்துப் பலநாட்கள் பக்திப் பாடல்கள் பாடினோம். நான் தபலாவுடன் வந்துவிடுவேன்

    பஜனை சம்பிரதாயமெல்லாம் வடமொழியிலேயே இருக்கிறது. அந்த மரபில் நாமே பாடலெழுதினால் என்னவென்று தோன்றியது. மணிசார் மெட்டுப் போடச் சம்மதித்தார். மளமளவென்று பாடல்களை எழுதினேன். அற்புதமாக இசையமைத்தார் அவர். எங்களோடு பல குழந்தைகள் சேர்ந்துகொண்டு பாடுவார்கள். அந்த அனுபவத்தைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணன் பாடல்கள் இன்றும் இனிக்கின்றன.

    கோவில் கட்டி முடிந்தவுடன் ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப் பேச்சுவந்தது. யாரை அழைக்கலாம் என்ற விவாதத்திற்கு ராதாகிருஷ்ண சாஸ்திரியார்தான் முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது அவருக்கு வயது 66. நாங்கள் நண்பர்கள்! தலைமுறை இடைவெளி எல்லாம் பொய்த்துப்போன நட்பு எங்களுடையது. அவர் பெரிய ஞானி என்பதை அன்று அறிந்தேன்; இன்று அதன் விவரத்தை அசைபோடுகிறேன்! எளியர்க்கெல்லாம் எளியவரான அரிய ஞானி.

    அவர்சொல்லி விட்டார், ‘கண்ணதாசனைக் கூப்பிடுங்கள்.’ யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! அந்தப் பணி எனக்கு வழங்கப்பட்டது. இல்லையானால் நான் பறித்துக்கொண்டிருப்பேன்! அதற்காகத்தான் அந்த ஹோட்டல் அறையில் அவர் முன் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

    ‘வர்ரேன் தம்பி! நீ கூப்பிட்டு நான் வாராம இருப்பேனா?’ என்றார்.

    அந்தத் திருநாளும் வந்தது. அவரை அழைத்துவரவேண்டும். அதற்காய்ச் சென்றேன். அவர் தயாராகிறார். டிரைவர் அவருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துவிடுகிறார். அப்போது பார்த்து வந்தாரையா நெடுமாறன்! அந்தக் கணமே கவிஞரை ராஜ்பவனுக்கு அழைத்தார். கவிஞர் நங்கைநல்லூர்க் கூட்டத்தைப் பர்றிச் சொன்னால் அவரோ ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’ என்றார். நான் நெடுமாறனை எவ்வளவு நேசித்திருப்பேன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்! நான் கவிஞரைக் கெஞ்சாத குறையாகப் பார்த்தேன்.

    ‘தம்பி! கவலைப்பட வேண்டாம். நாம ராஜ்பவனில தலயக்காட்டிவிட்டுப் போவோம்,’ என்று அவரிருந்த வண்டியிலேயே ஏற்றிக்கொண்டார். பளபளவென்று இருந்தார். பேசிக்கொண்டே வந்தார்:

    “பெண்ணென்றாலே பதமானது, இதமானது, சுகமானது, குளிர்ச்சியானது,” என்று அடுக்கிக் கொண்டே ஒரு கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்த மாணவிகளைச் சற்றே காதலுடனும், கவிதா கர்வத்துடனும் பார்த்துப் புன்னகைத்தபடியே வந்தார்.

    “நான் திமுகவில் இருந்தபோது, அண்ணாத்துரை போலக் கம்பனைத் தாக்கிப்பேசவேண்டும் என்பதற்காகக் கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்தேன். கம்பனைப் படிக்கப் படிக்க நான் அவனிடம் ‘சரண்டர்’ ஆகிவிட்டேன். 800 கம்பராமாயணச் செய்யுள்கள் எனக்கு மனப்பாடமாயின. தம்பி! அவைதான் இன்றுவரை எனக்குச் சோறுபோடுகின்றன,” என்றார்.

    ராஜ்பவனில் யாருக்கோ காத்திருந்தும் அவர் வராததால், ‘சரி நாம கெளம்புவோம்,’ என்றார். நெடுமாறன் இன்னும் வேறெங்கோ போகலாம் என்க, நான் குருவாயூரப்பனை வேண்ட, கவிஞர், ‘அதெல்லாம் முடியாது. அந்தத் தம்பிக்கு நான் வாக்குக் குடுத்துட்டேன், வாப்பா,’ என்றதும்தான் எனக்கு உயிர் வந்தது.

    வழிநெடுகப் பேச்சுத்தான். ‘தம்பி! வாழ்த்துக் கவிதை சொல்வீங்கள்லே?’ என்றார்!

    நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலை நெருங்க நெருங்க, மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ‘ஐயோ! கிராமத்து ஜனங்கள்ளெல்லாம் பாவம், பொறுமை இழந்துபோய்ப் போறாங்களே!’ என்று வருத்தப்பட்டார். ஆனாலும் என்ன? தரிசனம் செய்துவைத்தார் என் தந்தை. மேடையேறினார் கவிஞர். கூட்டம் அலைமோதியது!
    வாழ்த்துக் கவிதை சொன்னேன். வானளாவப் புகழ்ந்தார் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பற்றி மேம்போக்காகப் பேசினார்.

    திடீரென்று, ‘தம்பி, வாங்க ஒங்க வீட்டுக்குப் போவோம்,’ என்றாரையா! அவரும் சில நண்பர்களுமாக வந்தார்கள். ‘சக்கரெ போடாம ஒரு டீ!’ என்று என் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அவரை, ரெயில்வேகேட் வரை சென்று அங்கே இறங்கிக் கொண்டேன்.

    ‘நான் மறுபடி இங்கே வந்து பேசுவேன் தம்பி,’ என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாம் நாம் நம்புகிறபடி, அல்லது நம்பாதபடி நடக்கிறதா என்ன?!

    கவிஞர் வந்துசென்றபின்பு, நங்கைநல்லூரில் ஐயாவுக்குக் கொஞ்சம் மதிப்பு கூடித்தான் போயிற்று. அவர் புகழ்ந்தவிதம் அப்படி. சாலையிலே நான்நடந்தால் சாளரத்துத் திரைவிலகும்! பஸ் ஸ்டாண்டில், கல்லூரி மாணவிகள் கொத்துக்கொத்தாய்த் தென்படுவார்கள். அவர்களது பார்வைகளில் திடீரென்று கிளம்பிவிட்ட மின்னல், நெஞ்சத் தொடுவானத்திலிருந்து ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகளை ஒரே கணத்தில் உயிர்ப்பித்தன! ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் அடிவானத்தில் பறந்தன! அழகுக் கார்த்திகைத் தீபங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தன! நானும் நண்பர்களும்
    ஏற்படுத்திய நல்லூர் இலக்கிய வட்டக் கவியரங்கங்களுக்குக் கவிதை கேட்க ஜனங்கள் வரத்துவங்கினார்கள்!

    “நான் நல்லபாட்டு எழுதி நாளாயிற்று. ரொம்பநாள் கழித்து நான் ஒருநல்ல பாடல் எழுதிய திருப்தி எனக்கு வந்தது,” என்று தனது ‘இரண்டு மனம் வேண்டும்’ பாடலைக் குறிப்பிட்டார். அதில் ஒரு கண்ணி, படத்தில் வருகிறது; பதிவில் இல்லை.

    சிறிய காயம் பெரிய துன்பம்
    ஆறுமுன்னே அடுத்த காயம்
    உடலிலென்றால் மருந்துபோதும்
    உள்ளம் பாவம் என்ன செய்யும்?

    காயம் என்பது தேகமென்று நமக்குத் தெரியும் (காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா) கரைவது காயம். தகனமாகி அல்லது சீரழிந்து போவது தேகம். என்ன பொருத்தமாய்ப் பெயர்வைத்திருக்கிறார்கள்! பிறப்பின் தொடர்ச்சி பின்னும் துன்பத்தையே அதிகரிக்கிறது என்கிற மகத்தான தத்துவத்தை இத்தனை எளிய வார்த்தைகளில் எப்படித்தான் சொன்னாரோ? உடலாய்ப் பிறப்பெடுத்து பட்ட துன்பங்களும், நம்மைப் பற்றிக்கொண்ட துயரங்களும், உள்ளத்தில் தங்கி விடுவதால்தான் துன்பம் தொடர்கிறது!

    ‘கடவுளைத் தண்டிக்க என்னவழி?’ என்றது சினமன்று; ஆற்றாமை. அதன்பின்னும், நேசம்தான் இருக்கிறது. ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்ற பாடலிலும் இதைக் காண்கிறோம். குணமற்ற பரம்பொருளுக்கு நாம் குணங்களைக் கற்பித்துவிட்ட பிறகுக் குறைசொல்லத் தாமதமோ தயக்கமோ ஏது??!!

    கவிஞர் மறுபடியும் நங்கைநல்லூர் வந்தார். இந்தமுறை ஏற்பாட்டில் நானில்லை. நான் அவரைச் சந்திப்பதே கடினம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள் கோவில் ஊழியர்கள். பாவம் அவர்கள்! கவிஞர் என்னை வலுக்கட்டாயமாக மேடையிலேற்றி, மைக்கைக் கொடுத்து “ம்” என்றபோது என்ன செய்வார்கள்! அன்று அவர் பகவத் கீதையைப் பற்றிப் பேசவந்தார். எனவே, அமரர் திரு கி.வா.ஜ. அவர்கள் தலைமையில் நான் அரங்கேற்றிய என் ‘அர்ச்சுனன் பார்வையில் கண்ணன்’ என்ற கவிதையிலிருந்து சிலபகுதிகளைச் சொன்னேன். சூழ்நிலையில் கசப்பு தலைதூக்கியிருந்ததால், கவிதையைச் சொல்லி முடித்தவுடனேயே கிளம்பிவிட்டேன்.

    மறுநாள் நண்பர்கள் என்னைப் பரபரப்புடன் தேடினார்கள். சிலர், நான் கிளம்பிவிட்டதற்காகக் கடிந்துகொள்ளவும் செய்தார்கள். ஏனென்றால், பேசிக்கொண்டிருக்கும்போது கவிஞருக்குத் திடீரென்று நானும் என் கவிதையும் நினைவுக்கு வந்து சில நிமிடங்கள் அவர் எனக்குச் சூட்டிய புகழ்மாலையில் கூட்டத்தினர் திக்குமுக்காடிப் போனார்களாம். என் நண்பர்களெல்லாம் கண்ணீர் விடுமளவுக்குக் கவிஞர் பேசிவிட்டாராம். (விவரம் ரொம்ப ஓவராக இருந்ததால் அதைத்
    தவிர்த்துவிட்டேன்)

    நாங்கள் நங்கைநல்லூரை விட்டு பெசெண்ட் நகருக்கு மாறிவிட்டோம். என் தந்தை, “நம்மால் வீடு வாங்க முடியாது. மாறுவோமே!,” என்றும் “முட்டாள்கள் வீடு கட்டுவார்கள்; அறிவாளிகள் குடியிருப்பார்கள்,’ என்றும் சொல்லி அம்மாவைச் சமாளிப்பார். நான் மறுபடிக் கவிஞரைச் சந்திக்கவில்லை. அது என்னியல்பு. கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கி.வா.ஜ., பத்மா சுப்ரமணியம், இளையராஜா, சிவாஜி கணேசன், ம.பொ.சி., எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி, ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், விக்கிரமன் போன்ற பலரைச் சந்திக்கவும், பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.

    அதென்னமோ, பொதுவாக நான் கவிதை எழுதுகிறவன் என்பதை அவர்களிடம் சொல்வதுமில்லை.
    மறுபடிச் சந்திக்க முயற்சி செய்வதுமில்லை. இது என் நண்பர்களுக்குக் கோபத்தை வரவழைக்கும். என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சூழலை அறவே விட்டுவிட்டுத்தான் அடுத்த சூழலில் நுழைவதென்பது என்னியல்பு…

    இவ்வாறிருக்க, ரத்னகிரீச்வரர் கோவிலில் கவிஞர் கண்ணதாசன் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டுச் சென்றேன். கவிஞர் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருந்தார். கூட்டம் நெருக்குகிறது. கோவில் நிர்வாகிகள் ஏகக் கெடுபிடி செய்தார்கள். “கவிஞரே!” என்றேன் மெதுவாக. சட்டென்று திரும்பிப்பார்த்து, “தம்பி! அங்க நின்னுகிட்டு என்ன செய்றீய! வாங்க இப்படி!,” என்றார். தோளில் கைபோட்டுக்கொண்டு வலம்வரும் போதுதான் எத்தனை பெருமை! இன்பம்!

    அவருக்கு நாற்காலி போட்டு மைக் வைத்தார்கள். எல்லோரும் கீழே உட்கார்ந்துகொண்டிருந்தோம். “என்ன? வாழ்த்து ஒண்ணும் கெடையாதா?” என்றார் கண்ணைச் சிமிட்டி! பிரமுகர்கள் என்னை விடமாட்டார்கள் என்றேன். காதில் விழாததுபோலிருந்த அவர், என்னைத் தனக்கு மிகவருகே வைத்துக்கொண்டார். சம்பிரதாயமாக வரவேற்புச் சொல்ல வந்த கோவில்காரரைத் தடுத்து, மைக்கைப் பிடித்து, “தம்பி ரமணன் என்னைப் பற்றி வாழ்த்துக்கவிதை சொல்லும்,” என்றாரே பார்க்கலாம். அடுத்த சிலநிமிடங்கள் எனக்கும் அவருக்கும் உள்ள நேசத்தைத் தரிசித்தன….

    “இரக்கமுள்ள நெஞ்சிலிருந்துதான் கவிதை பிறக்கும்,” என்று துவங்கி, நெஞ்சாரப் பாராட்டினார். கிளம்பும்போது, கைபற்றி வாழ்த்துச் சொல்லி, “அமோகமா வருவீஹ” என்றார்.

    அதன்பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. அவரும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இரண்டுபேர் என்னுயிரோடு கலந்தவர்கள். ஒன்று, பாரதி. என் ஆவேசத்திற்கும், அறச் சீற்றத்திற்கும் அவன் காரணம். இரண்டு, கண்ணதாசன். எனது இசைப்பாடல்களுக்கும், அவற்றின் எளிமைக்கும், அவற்றில் அடிநாதமாகத் ததும்பும் காதலுக்கும் அவனே ஆதர்சம்.

    எனக்குக் கண்ணதாசனின் கவிதைகள், பாடல்கள், அவற்றின் குறைநிறைகள் தெரியும். அதைவிட, அவரது கவியுள்ளம் எனக்குக் கண்கூடு. அதெபோல், பாரதியோடு நான் வாழ்ந்ததுபோலவும், அல்லது பாரதி என்னில் வாழ்வது போலவும் நான் உணர்வேன்.

    இந்த இரண்டு கவிஞர்களுக்குப் பிறகு எத்தனையோ சிறந்த கவிஞர்கள், பாடலாசிரியர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

    ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் யாரும் அமரவில்லை; அது முடியாது: அதுவே அவர்களது சிறப்பு.

    எந்தவீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தபோதும்
    எந்தமனதில் எந்த உணர்ச்சி எழுந்தபோதும்
    அந்தக் குயிலின் அழகுப்பாடல் அங்கே கேட்கும்
    ஆறுதலாய் மாறுதலாய் அலைகள் மோதும்!
    சொந்தமான நண்பன்போல் தோளைத்தட்டும்
    சுட்டுவிரல் தொட்டுவிழி நீர்துடைக்கும்
    இந்தவுயிர்ச் சித்திரத்தின் வண்ணமாக
    இதயத்தில் கலந்துவிட்டான் கண்ணதாசன்!

    வானிலிருந் தவனிறங்கி வரவு மில்லை
    வந்தவனுக் கொன்றும்நாம் தரவுமில்லை
    தேனிலிருந் தெழுந்துவந்தான்; தெரியு மந்தத்
    தெருமுனையின் ஒளியினிலே நடந்து வந்தான்
    ஊனணிந்து வந்தவன்தான்; உயிருக்குள்ளே
    பூந்தமிழின் மென்சிறகால் புளகம் தந்தான்
    மானிடத்தின் உணர்ச்சியெல்லாம் யாழா யாக்கி
    மடியிலிட்டு வாசித்தான் கண்ண தாசன்!

    காதலுக்கு நாயகனோ? கன்னிப் பெண்கள்
    கடைவிழிக்குச் சேவகனோ? கள்ளை மிஞ்சும்
    போதைக்குப் பூஜகனோ? புனைவிலாத
    புதுமைக்குக் காவலனோ? பெண்மனத்தின்
    வாதையெல்லாம் கற்றவனோ? மனித நெஞ்சுள்
    வந்துநின்று பார்த்தவனோ? தமிழின் நீண்ட
    காதையிலே வீதியிலே வீட்டுக் குள்ளே
    காதுக்குள் கேட்கின்றான் கண்ணதாசன்!

    கங்கைநதி பொங்கிவரும் சரளம்; வட்டக்
    களரிநிலா முங்கிவரும் லலிதம்; சுட்ட
    பங்கியெழும் புகையைப்போல் லஹரி; அந்தப்
    போதையிலே பரிகசிக்கும் தெளிவு; வெள்ளைச்
    சங்கினிலே பாலெடுத்துப் பாரிஜாதப்
    பனியிதழால் தொட்டெடுத்த பாஷை; நான்காம்
    சங்கத்தின் முற்றநிலா கண்ண தாசன்
    சாவென்ப தறியாத காதல் நேசன்!

    சாலையிலே என்கவிஞன் நடக்கும் போது
    சாளரத்துத் திரைவிலகும் கண்கள் மொய்க்கும்
    வேலையிலே நான்வியர்வை சிந்தும்போது
    தென்றலென அவன்பாடல் நெஞ்சைக் கொஞ்சும்
    மூலையெல்லாம் துரத்திவந்து பாலாய்க் கொட்டி
    முட்டவரும் கண்றினையும் முந்தும் அன்னை
    ஞாலத்தில் ஒருமனிதன் மிஞ்சும் மட்டும்
    நம்மோடு குடியிருப்பான் கண்ணதாசன்!

    (நன்றி : நமது நம்பிக்கை, கோவை)

    Share
  • பெரிய ஆசைகள்

    இசைக்கவி ரமணன்

     

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    மண்ணில் விழுந்த
    மழைத்துளி என்னும் ஆச்சரியக்குறியை
    உள்ளங்கையில் பம்பரம்போல் ஏந்தி
    உற்றுப் பார்க்கவேண்டும்

    ஒய்யாரி ஆடும் மழையின் இழைகளில்
    ஒருதுளியும் நனையாமல்
    கண்ணா மூச்சு ஆடவேண்டும்
    காற்றோடு

    நிலவில் வெண்ணெய் எடுத்து
    உலவும் முகிலில் ஒன்றைத் திரியாக்கி, என்
    கவிதையைச் சுடராக்கி, அவள்
    கண்ணில் படும்படி வைத்துவிட்டு, அவள்
    கண்ணில் படாமல், அவள்
    கண்களைப் பார்க்கவேண்டும்

    கால்பட்ட இடமெல்லாம்
    கார்மழை பொழியவேண்டும்
    கைபட்ட இடமெல்லாம்
    கலயம் பொங்கவேண்டும்

    காதலே கவிதையாய்
    கவிதையே கண்களாய்
    கண்களே நெஞ்சமாய்
    நெஞ்சோடு எல்லோரையும்
    நேசத்தால் அணைக்கவேண்டும்

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    கர்பத்திலிருந்தே மரணம்
    கழுத்தைக் கவ்விப் பிடித்தபடிதான் இருக்கிறது
    கால்வைத்த இடமெல்லாம் பொய்மை
    கப்பித்தான் கிடக்கிறது

    எனினும்
    அழகான இந்த ஆசைகள்தான்
    அற்ப உலகில்
    அடுத்த அடியை எடுத்துவைக்க
    ஆணையிடுகின்றன

    வாழத்தானா பிறந்தோம்? மற்றவரை
    வாழ்த்துவதே வாழ்க்கைக்கு
    வலுவான காரணம். என்
    வாசலெங்கும் சூறையிலும்
    வரவேற்கும் தோரணம்

    நிறைவேறிவிடுகின்ற ஆசைகளில்
    நெஞ்சுக்கு லயிப்பில்லை
    மின்னல்களை வகைபிரித்து
    மீட்டும் வரை, என்பாடலை
    இசைக்கப் போவதேயில்லை
    எதற்கும் பொறுத்திருங்களேன்!
    மீண்டும் நான் வருவேன்
    மிரளாத வானத்தில்
    மின்னலுக்குப் பஞ்சமேது

    16.06.2014 / திங்கள் / 19,53

    Share
  • காலம் என்பது!

    இசைக்கவி ரமணன்

     

    காலம் என்பது காளி நடத்தும்http://www.dreamstime.com/royalty-free-stock-image-antique-clock-rococo-image22441246
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையதுclock
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

     

     

     

     

    Share
  • ஆனந்தமே கண்ணன்! கண்ணனே ஆனந்தம்!

    இசைக்கவி ரமணன்

    images (1)கண்ணான கண்ணனிவன் பொல்லாதவன்
    கணநேரம் கண்முன்பு நில்லாதவன்!

    கண்ணனை ஏன் ஆனந்த ஸ்வரூபன் என்று கொண்டாடுகிறோம்? வல்லபாச்சாரியார், தனது மதுராஷ்டகத்தில், கண்ணனின் வடிவின் அங்கங்கள் ஒவ்வொன்றுமே இனிமையானவை என்றும், கண்ணன் இனிமையின் தலைவன் என்றும் ஏன் ஆனந்தமாகப் பாடுகிறார்? ‘கண்ணனை நான் ஆட்கொள்ளக் காரணங்கள் உள்ளனவே!” என்கிறான் பாரதி. ஏனாம்?

    ஆன்மாவுக்கு குணங்கள் கிடையாது. ஆனால் அதற்கு ஒரு தன்மை உண்டு என்று வைத்துக்கொண்டால் அது சாந்தி அல்லது அமைதி என்றே கூறவேண்டும். மனம் என்பது ஆன்மாவை விட்டு அயலாய் இல்லை என்று கொண்டாலும், அது அமைதியை அறியாதது. சஞ்சலம் அல்லது சலனம் என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனது அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. ‘Peace emanating from the soul, reflecting itself on the canvas of consciousness is understood by the mind only as happiness.’ மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்பது வேறு. ஆனந்தம் வேறு. மகிழ்ச்சி என்பது வருவது, செல்வது. மேலும் பல சமயங்களில் துக்கத்தில் முடிவது. ஆனந்தம் என்பதோ தொடர்ந்து துலங்குவது. எப்படி ஆன்மாவும் சித்தமும் ஒன்றோ ஆனால் விளக்கும் வெளிச்சமும் போல இரண்டுபோல் தோன்றுமோ, அதேபோல்தான் அமைதியும் ஆனந்தமும்!

    எல்லா ஆன்மாக்களின் தலைவனாகவும் விளங்கும் கண்ணனே பரமாத்மா. இதை, கண்ணனே எல்லாimages (2) ஆன்மாக்களுமாகவும் இருக்கிறான் என்று நம்பி, தன்னிலும் தானாய் இருப்பவன் அவனே என்று உறுதியாய் இருப்பவர்களிடம் அமைதி விழிப்புறுகிறது; ஆனந்தம் வெள்ளப் பெருக்காக விரைந்து வருகிறது.

    அமைதியே நம் இயற்கை. ஆனந்தமே நம் இயல்பு. இதற்கு முரணான எதுவும் நாமில்லை, நமதில்லை. இதை நமக்கு மறுவுறுதி செய்யவே இறைவன் கண்ணனாக இறங்கிவந்தான். அர்ச்சுனனைச் சாக்காக வைத்துக்கொண்டு நமக்கு கீதை மொழிந்தான். அவன் வாய்மொழிந்த கீதையின் சாரமான கருத்து என்ன?

    ‘ஆனந்தத்தை நோக்கிய பாதையும் ஆனந்தமாகவே இருக்கட்டும்!” என்பதே!

    உடனே ஒரு கேள்வி எழக்கூடும். ‘அழுதால் உன்னைப் பெறலாமே!’ என்றதே மணிவாசகம் அது தவறா? சிவனன்றி வேறேதும் சிந்தையில் நில்லாதவரின் வாசகம் எப்படித் தவறாகும்? நம்முடைய அழுகையும் நாயன்மாரின் அழுகையும் அறவே வெவ்வேறானவை. எப்போதும் ஏதேனும் ஒன்றை வேண்டியோ, அது கிடைத்தாலும் அது நிலைக்குமோ நிலைக்காதோ என்று அஞ்சியோ, அதை இழந்தால் மீண்டும் அதற்காக ஏங்கியோ அழுவதே நமது அழுகை. ஆண்டவனைத் தவிர வேறு எண்ணம் தோன்றிடின் நாணியும், அவனுடைய கருணையை எண்ணி உருகியும், அதற்குத் தகுதியாக நம்மால் இருக்க முடியவில்லையே என்று மறுகியும் அழுவதே அடியார்களின் அழுகை. அகத்தெ உள்ள நிஜத்தைக் காணமுடியாமல் அங்கும் இங்கும் அலைந்து புலம்புவதே நமது அழுகை. அகமே புறம், புறமே அகம், இரண்டிலும் தெரிவது இறைவனின் முகம் என்று மெய்சிலிர்த்து, உயிர் புளகமெய்திப் பொங்கி எழுவதே கண்ணனின் பக்தர்களின் கண்ணீர்.

    ஆணவத்தின் வெளிப்பாடு நமது கண்ணீர். அதுகரைந்த புறப்பாடு அடியார்களின் கண்ணீர்.

    ஆனந்தத்தை வேண்டி அழுபவர்கள் நாம். ஆனந்தம் தாங்க முடியாமல் அழுபவர்கள் அடியார்கள். முன்னது துன்பத்தின் வெம்மை நீர். பின்னது, தூய கங்கையின் தண்மை நீர்.

    ‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள், உலகு இன்பக் கேணி,’ என்றானே பாரதி. வாழ்ந்த காலம் முழுதும் வறுமை மற்றும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவன் வாயிலாக இப்படி ஓர் ஆனந்த வாசகம் எப்படி வந்தது? ‘எல்லாம் புரக்கும் இறை, நமையும் காக்கும் என்ற சொல்லால் அழியும் துயர்!’ என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது? பற்றற்றான் பற்றினைப் பற்றச் சொன்னாரல்லவா வள்ளுவர்? அவன் கண்ணனிடம் பற்றுவைத்தான் நட்பு நாடி, ஆலோசனை வேண்டி, பண்புகளின் உச்சத்தைக் காணவேண்டி, பார்வைக்கு எளியவனாய் ஆண்டவனை தரிசிக்கவேண்டி! அதனால்தான், ‘பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன், கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!’ என்றான்.

    இறைவன் மேல் பற்று என்பதை இதயத்தில் பதியம் போட வேண்டும். உள்ளே இருப்பது அதுவேதானே? எனவே அந்த ஆனந்தப் பதியம் விரைவில் வளரத் துவங்குகிறது. விரிகிறது! சித்தம், புத்தி, மனது இவற்றைத் தாண்டி தேகத்தையும் சிலிர்க்கவைத்துப் புலன்களை அதிர வைக்கிறது! அப்போது, ‘நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய், கண்ணன், எங்கிருந்தோ வந்தவனாக எதிரே தெரிகிறான்!

    உள்ளே இருந்த அமைதி உணரப்படும்போது ஊதப்பட்ட நெருப்பாக ஆனந்தம் ஊற்றாக எழுந்து வெள்ளமாக விரைந்து பரவுகிறது! ரகசியம் என்னவென்றால், கண்ணனை நாடியவர்களைப் பெண்ணாசை நீங்கிவிடுகிறது. பேதபுத்தி போய்விடுகிறது. நான் தேகம் என்ற உணர்வு நீங்கிவிடுகிறது. எங்கும் எதிலும் இருப்பது ஒன்றே, அது இறையே, அதன்பெயர் கண்ணனே என்ற தெளிவு வருகிறது. அப்போது, புற வாழ்க்கையின் சூழல்கள் எப்படி இருந்தாலும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!’ என்று ஆனந்தமாக ஆண்டவனைப் பாட முடிகிறது.

    images (3)கண்ணனிடம் எதையும் கேட்கலாம். எச்சரிக்கை என்னவென்றால் அவன் அதனைக் கொடுத்து விடுவான், கொடுத்த கணமே அங்கிருந்து நீங்கியும் விடுவான்! ஆனால், அவனிடம் ரவீந்திரநாத் தாகூர் போல ‘நீ வேண்டும், எனக்கு நீதான் வேண்டும்,’ என்று உறுதியாக நின்றால் அவனால் எங்கும் போகமுடியாது. ஒரு கணம் கூட நம்மை விலக முடியாது. இடம், காலம், சூழ்நிலைகள் இவை எவற்றாலும் பாதிக்கப்படாத ஓர் அதீத உறவில் நாம் லயித்திருக்கலாம். நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மாறலாம் அல்லது மாறாமற் போகலாம். ஆனால் இந்த ஆனந்தம் மட்டும் மாறவே மாறாது.

    எப்படி உண்மையே பேசும் ஒருவன் பேசுவதெல்லாம் உண்மையாகி விடுகிறதோ, அதுபோல, கண்ணனே ஆனந்தம் என்று நம்பியவர்கள் ஆனந்தக் கண்ணனை அகம்குளிர தரிசிக்கிறார்கள். நீண்ட மலைத் தொடரையும் சின்னப் புல்லின் நுனியையும் மழை எவ்விதம் பேதமின்றி நனைக்கிறதோ அதேபோல் இந்தக் கண்ணன் என்னும் ஆனந்தம் நம்முடைய புற வாழ்வின் எதையும் ஆனந்தமாகவே காணும். ஆனந்தமாகவே ஆக்கும்.

    இதுவே ஆனந்தத்தின் சுபாவம். அமைதியின் ப்ரபாவம். கண்ணனின் ஸ்வரூபம்.

    அழுதாலும் தொழுதாலும் தீராதது
    ஆனந்தமே கண்ணன் பேரானது!

    Share
  • குருவாக வந்த சிவனே!

     

    இசைக்கவி ரமணன்

    25-1385353941-bangalore-shiva

     

    வினையின்றிப் புதியதோர் வெளியிலே நிற்கிறேன்
    விரல்களால் விண்தொடுகிறேன் 10312399_510682082371830_6844174118360453666_n
    வேதங்கள் கொண்டாடும் பாதங்க ளில்சின்ன
    வெள்ளிமல ராய்க்குழைகி றேன்
    மனையொன்றின் கூடத்தில் மத்யான நேரத்தில்
    மவுனம்சி லிர்த்தநொடி யில்
    மாகேச்வ ரன்முன்பு ஞானக்க னல்பட்டு
    மண்டியிட் டேன்மடிந் தேன்
    நினைவோடு நான்வீழ்ந்த நிஜமான தருணத்தில்
    நிகரற்ற நீயெழுந்தாய்
    நிசியோடு பகலும்விழ நினைவோடு கனவும்கெட
    நெஞ்செலாம் நீநுழைந்தாய்
    முனையின்றி எங்கெங்கும் முழுதான வானமே!
    முன்பின் னிலாஞான மே!
    மோனக் குகைவிட்டு ஞானக் கதைபேச
    முன்வந்த மூலவுயிரே!
    எனையின்று காக்கவே என்றிருந் தோபுவியில்
    என்றைக்கும் வாழும் திருவே!
    எங்கோ கிடந்தவனை ஏழையை மடிமீதில்
    ஏற்றியருள் பொழியுமழை யே!
    நினையன்றி வேறேதும் நினையாமல் நின்னடியின்
    நீழலில் நான்வாழ வே!
    நேரத்தில் வந்தெந்தன் பாரத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே! (1)

    ஒருதுளியும் மிஞ்சாமல் ஊட்டினாய்; சலியாமல் nataraja.gif_480_480_0_64000_0_1_0 (1)
    உறுதிமேல் உறுதிதந் தாய்
    உயரங்கள் காட்டினாய் உதிரத்தில் உன்னன்பை
    ஊற்றியென் னுயிர்மீட்டி னாய்
    மறுபடியும் நான்துன்ப மடுதேடி விரைகையில்
    மறவாமல் படியேற்றினாய்
    மாலைபக லிரவென்றும் மாறாமல் எப்போதும்
    மலராகத் தேனூற்றினாய்
    கருவங்கள் தலைதூக்கும் கணமெலாம் கண்ணோரம்
    கனலாகக் கணைவீசினாய்
    காலங்க ளிநன்துன்ப நீளங்க ளைவெட்டிக்
    கணத்தில் யுகம்தேக்கினாய்
    தெருவெங்கி லோவீழ்ந்து தேம்பிக் கிடந்தவனைத்
    தேரேற்றி ஊர்காட்டினாய்
    திரையெங்கும் நீயாகி திசையெங்கும் முகமாகித்
    திரிபற்றச் சுடராகினாய்
    திருவாகி இடையின்றித் தித்திக்கும் இன்பமே!
    தீண்டமுடி யாத்தூய்மை யே!
    திவலைமன தைப்பருகிக் கவலையவலந் திருகிச்
    சீறிடும் கங்கையாறே!
    சிறுவனெனைத் துருவமெனச் சிகரத்தில் வைத்தன்பு
    சீராட்டும் ஆச்சர்யமே!
    செப்பரிய உன்பெருமை செகமெங்கும் ந்ஆன்செப்பக்
    குருவாக வந்த சிவனே! (2)

    உனைமட்டும் வேண்டியே உனைமட்டும் நாடியே 8-1
    உன்முன்பு நிற்கவேண்டும்
    உன்முன்பு நிற்கின்ற ஒப்பற்ற உண்மையை
    உள்ளம்மற வாமைவேண்டும்!
    வினை, சுட்ட விதையாகி விதி, பட்ட மரமாகி
    வீழ்ந்தகதை நம்பவேண்டும்
    வீரத்தி லேஞான தீரத்தி லேநித்தம்
    வெற்றிநடை போடவேண் டும்
    பனைதொட்ட மின்னலில் மழைதொட்ட மட்டைபோல்
    பற்றெலாம் பற்றியெரி யப்
    பாதிநில வேந்திவரும் பரமசிவ னேயின்று
    பாலகன் நான்பிறந்தேன்!
    அனைவர்க்கும் உயிரான ஆண்டவா இன்றுன்னை
    அனைத்துமாய் நான்பருகி னேன்!
    ஆராத னையென்னும் போராட்ட மில்லாமல்
    அத்தனுன் னுள்கலந் தேன்
    வினையெச்சம் தீர்ந்தாலும் நினைவெச்சம் அறியாமல்
    வீணாக நானஞ்சினேன்
    வெற்றுநிழ லைப்பற்றி வீண்சண்டை போட்டதால்
    வெட்கியுன் முன்னிற் கிறேன்
    எனைச்சற்றும் நோக்காமல் உனைமுற்றும் பார்க்கின்ற
    ஏகாந்தம் அருளவேண் டும்
    எருவளரும் புன்னெஞ்சில் திருமலர வைக்கவே
    குருவாக வந்தசிவ னே! (3)

     

    4

    அறியாமை பூண்டபல அபிமான வேடங்கள் 73671_473465409355865_356357631_n
    அறிவென்று போய்நம்பி னேன்
    அரைநொடியும் நில்லாத ஆகாயக் குமிழிகளை
    அமரவாழ் வெனநம்பி னேன்
    தறிகெட்டுக் கவலையெனும் தறிபட்டு நெறிசிதறித்
    தாறுமா றாயலைந் தேன்
    தாகத்தி லும்வீழ்ந்த சோகத்தி லும்கங்கைத்
    தண்ணீரை நான்மறந் தேன்
    அறிவோடு நான்செய்த அரியபல பிழைகளால்
    ஆற்றுமணல் பிறவிகண் டேன்
    அல்லல்க ளால்வந்த அரைஞான அவலத்தில்
    அபலைபோல் கதறியழு தேன்
    முறியாத கவலையெனும் முளையிலே கட்டுண்டு
    முன்பின்னி லாதலைந் தேன்
    மூளாத முன்வினைகள் வாளா யறுக்கநான்
    மூச்சயர்ந் தேனைய னே
    சரிவொன்றின் ஓரத்தில் சரியான நேரத்தில்
    சற்றுநீ கைப்பற்றினாய்
    சரணங்க ளைத்தந்து மரணங்க ளைக்கொன்று
    சரியாக்கி அழகுபார்த்தாய்
    குறிவைத்த துன்கருணை கொலையுண்ட தென்துயரம்
    கொல்லையினில் தில்லைநட னம்
    குப்பையில் மேய்ந்தவனைக் கோவில்விளக்காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    5

    வெட்கத்தை விட்டுநடு வீதிக்கு வந்துபல 148514_454117937957279_1723256555_n
    வேடங்க ளிட்டபதரை
    வேதநெறி யைவிட்டுப் பாதம்மிக வும்சுட்டு
    வீணாகிப் போனபுலையைப்
    பக்கத்தில் வைத்தமுது பரிந்தூட்டும் காட்சியைப்
    பாரென்றும் கண்டதுண்டோ?
    பாழான பிள்ளைக்குத் தோழனாய்த் துணைநிற்கும்
    பாசத்தைப் பார்த்ததுண்டோ?
    சொர்க்கங்க ளற்பமாய்த் தோன்றுபல லோகங்கள்
    சுலபமாய்த் தருவதுண்டோ?
    சொல்தந்து பொருள்தந்து சுவைதந்து சுடர்தந்து
    சொந்தமாய் ஏற்பதுண்டோ?
    தர்க்கங்க ளில்லாமல் தாழ்நீக்கி யுள்வந்து
    தன்னையாட் கொள்வதுண்டோ?
    தானுவந் தெதிர்நின்று தடையின்றி மொத்தமாய்த்
    தன்னையே தருவதுண்டோ?
    கற்பனைக் கெட்டாத கருணைக்குக் கால்களும்
    கண்களும் கையுமுண்டோ?
    ககனத்து மணியெலாம் கவியான போதுமுன்
    கால்நிழல் சொல்லில்வருமோ?
    கர்ச்சிக்கும் மெளனமெனும் கனலிலே எனைநாட்டிக்
    கண்சிமிட் டும்விந்தையே!
    கயிலாய மலைவிட்டுக் கடையனைக் காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    6

    சிந்தனையில் கவிதைபோல் செஞ்சடையில் துளிநிலவு 3840_468056386563434_338569680_n
    சித்தம் சிலிர்க்க மின்ன
    செப்பரிய மெளனமெனும் செம்மையொரு வடிவாகிச்
    சிலைபோ லமர்ந்துதிக ழ
    வந்தனைகள் செய்யவரும் வானவரும் ஞானியரும்
    வடிவழகில் வாய்புதைக்க
    வாசலெது வானத்தில் பேசலெது ஞானத்தில்
    வார்த்தைகள் தீர்ந்துபோக
    சந்ததமும் சாட்சியாய் வந்தருளும் திரிசூலம்
    சன்னிதியில் மின்னல்வீச
    சார்ந்தமலை வெண்மையில் சங்கரனின் முழுநீலம்
    சங்கீத வண்ணமாக
    அந்தவிதம் அக்காட்சி அவ்வண்ணம் யாவையும்
    அங்ஙனே அங்கிருக்க
    ஆளரவம் மட்டுமே நாளிரவும் எழுமுலகில்
    அய்யனே எங்குவந்தாய்?
    விந்துவிழ விம்மிவிழும் விடிவற்ற தேகத்தில்
    விந்தைநீ யேன்நுழைந்தாய்?
    விதிசெய்யும் கோலங்கள் பதியாத மனதோடு
    வீதியெல் லாம்நடந் தாய்?
    பொந்துக்குள் அல்லாடும் பூச்சிக்கு முக்திதர
    பூமிக்கு வந்த சிவனே!
    கொல்லாமல் எனைக்கொன்று கொள்ளாமல் எனைக்கொள்ள
    குருவாக வந்த சிவனே!

     

    7

    ‘உள்’ளென்றனை யெந்தன் உடலவிழ மனமவிழarthanareeswarar
    உள்ளெலாம் வெளியானதே!
    ஊரறிய முடியாத ஒப்பற்ற வோர்நீலம்
    உள்ளத்தின் மடுவானதே!
    கள்மயக் கம்தரும் கட்டைவிரற் கனலொன்று
    ககனத்தின் நடுவானதே!
    காலத்தின் கட்டவிழக் கண்கள் திறந்தபடிக்
    கணமுறைந் தேபோன தே!
    முள்ளொன்றின் முனைபோல மூச்சொடுங் கிப்போக
    முன்பின்னி லாதான தே!
    மூடாத வானத்தின் முறுவலாய்த் தீவட்டம்
    மோதிரம் போல்சுற்று தே!
    வெள்ளியினைக் காய்ச்சியதில் புள்ளிவைத் ததுபோல
    விரலொளியின் இதயமின்ன
    வெற்றுடலின் மையத்தில் வெட்டவெளி யைக்காட்டி
    விந்தையொளி நடம்புரிந்தாய்
    கள்ளியினை அமுதாக்கிக் காலத்தை மலராக்கிக்
    கார்த்திகைச் சுடராக்கினாய்
    காணமுடி யாதமெய்ஞ் ஞானானு பூதியினைக்
    கண்ணுக்குள் கொண்டுவந்தாய்!
    வெள்ளிமலை தனைவிட்டு வீதியி லெனைத்தொட்டு
    விளையாட வந்தகுரு வே!
    விடையாக வந்தென்னை முடிவாகத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    8

    எண்ணமே தாயினும் எந்தையே உன்னெண்ணம்!download
    ஏந்திவரும் சொல்லுந்தன் சொல்!
    எச்செயலும் உன்செய்கை! எவ்விளைவும் உன்சித்தம்!
    எந்நிலையும் உந்தன்நிலைதான்!
    வண்ணங்க ளாய்விரியும் மனமாற்றம் யாவையும்
    வானமே உந்தன் கோலம்!
    தாக்கமும் பாதிப்பும் தர்க்கமும் முடிவுகளும்
    தலைவனே உந்தன் லீலை
    கண்காணும் காட்சியும் கண்மூட வரும்கனவும்
    கருணையே உந்தனுருவம்!
    காலத்தின் மாற்றமும் காயத்தின் தேய்வுமுன்
    கானத்தின் சுருதிலயமே!
    நண்ணும்பல உயர்வுகளும் நாட்டமும் ஏக்கமும்
    நாயகா! உந்தன் மாயம்!
    நன்மைகளும் தீமைகளும் நம்பியே! உன்நடனம்!
    நான்பொறுப் பாவதிலையே!
    புண்ணியமும் பாவமும் பூசனையும் விண்டுபோய்ப்
    புல்லில்பனி யாய்நிற்கி றேன்
    புவனங்க ளத்தனையும் பூரிக்கும் ஒளியுன்னைத்
    துளிபருகித் தீர்ந்துபோ வேன்
    அண்ணலே! நீயன்றி அணுவளவும் நானில்லை
    அன்றில்லை நாளையிலையே!
    ஆனந்த மையத்தின் அமைதியில் எனைநாட்ட
    குருவாக வந்தசிவ னே!

    9

    கனல்வீசும் உன்முன்பு கண்ணீர் ததும்புமென்11-1
    கண்முன்பு நானிறந்தேன்..
    கருணைத் தடாகமே! காலங்கள் தீண்டாத
    கமலமாய் நானெழுந்தேன்
    அனல்வீசும் சன்னிதியில் ஆள்தீர்ந்து போயிந்த
    ஆசாமி சாமியானேன்
    அத்தனே! நானென்ப தத்தனையும் தீர்ந்துபோய்
    ஆச்சர்ய மாய்மிஞ்சி னேன்
    அனுமானம் காணாத ஆதிசிவ வெள்ளத்தில்
    அற்புதத் திவலையானேன்
    அவனாகி இவனாகி அதுவாகி உவனாகி
    அறுதியில் சிவனாகினேன்
    வனமான வினைஞானக் கனலாக வானுயர
    வாழ்வின்றி நான்வாழ்கிறேன்
    வண்ணங்க ளேற்கின்ற வானமாய்க் குழந்தைபோல்
    வடிவத்தில் குணமேற்கிறேன்
    இனமான சிவஞானம்! இதமான குருபாதம்!
    இடையற்ற பரபோதமே!
    இற்றுவீழ்ந் தாலும்துளி இன்னும்வீ ழாதநான்
    இவைபருகி உயிர்வாழுமே!
    மனமான மாயைக்கும் மதமான புத்திக்கும்
    மாண்பொன்று தந்தபதியே!
    மருமத்தைக் காட்டியென் கருவத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    10
    உன்சொற்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கிள்ளவும்ebbaf6cd-84df-466e-a66f-34819146668c_S_secvpf
    உயிருயிர்க் குயிரூட்டவும்
    உச்சியினில் கள்ளவிழ உடலெங்கும் ஒளிபதற
    உன்மத்தம் நிலையாகவும்
    உன்சொற்கள் என்மெளனம்! என்மெளனம் உன்சொற்கள்!
    உண்மையிது நிஜமாகவும்
    ஊரெங்கும் நான்சென்று உன்பெருமை தான்பேச
    உயிரெங்கும் கனல்வீசவும்
    உன்முன்பு நிற்பதும் உன்னில்நான் வாழ்வதும்
    என்னில்நான் நீயானதும்
    உடலெங்கும் உன்வடிவம் உயிரெங்கும் உன்னருவம்
    ஒன்றிலொன் றாய்நிறைவ தும்
    தன்முன்பு தான்நிற்கும் தன்மைக்குப் பெயரின்றித்
    தடுமாற்றம் கொள்வதாரோ?
    தாளாத ஞானத்தை மாளாத யோகத்தில்
    தான்தேக்கி நிற்பதாரோ?
    என்கதையும் தீர்ந்ததே! எதுவும்சிவ னானதே!
    எமனுக்குப் பணிபோனதே!
    ஏறாதி றங்காத மாறாத மெளனத்தில்
    எதுவுமொன் றாய்ப்போனதே!
    உன்வடிவம் மொத்தவொளி! உன்னாமம் ஓங்காரம்!
    உன்வீடு வெட்டவெளியே!
    உருவத்தை அருவத்தை ஒன்றாக்கித் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    (‘குருவாக வந்த சிவனே’ பதிகம் நிறைவு பெற்றது)

    Share
  • எளிமையே ஏற்றம்

    இசைக்கவி ரமணன்

    இலக்கியவாதி சிட்டியைப் பற்றி…

    chittiஅவரை நான் சந்தித்தபோது அவர் படுத்த படுக்கையாய்த்தான் இருந்தார். ஆம். அந்த ஆர்ப்பாட்டமில்லாத கட்டில், அதில் கூச்சத்துடன் இளைத்திருந்த சிறுமெத்தை, இவற்றின்மேல், ஜடாயுவின் இறகுபோல் தெரிந்தார் அவர்.

    அனுபவம், அதன்மூலம் வாய்க்கப்பெற்ற ஞானம், இவற்றைக் காணும்போது, வயது என்னும் பேச்சே கேலிக்குரியதாக இருக்கிறது. அவருக்கு வயது ஐந்திலிருந்து சில நூற்றாண்டுகள் வரை இருக்கலாம் என்றுதான் தென்பட்டார்!

    அவசரமாய் உடம்பைப் புரட்டக்கூட முடியாத களைப்பில்தான் அவரிருந்தார். அப்போதும், கட்டளையிடாமல் கனிவாய்ப் பேசியே மற்றவர்களிடம் வேலை வாங்கும் ஒரு ரிஷியின் லாகவம் அவருக்கு இருந்தது.

    கறுத்த முகத்திலிருந்து புறப்பட்ட சிரிப்பு, தலைகோதிக் கொண்டுவரும் இளநிலவைப்போல் இருந்தது.

    பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜன் என்றால் அவரேகூட யாரென்று நம்மைக் கேட்கக்கூடும். அந்த அளவுக்கு அவர் ‘சிட்டி’ என்னும் தனது புனைப்பெயராலேயே பெரிதும் அறியப்பட்டார், நேசிக்கப்பட்டார். மிகச் சுருக்கமான அந்தப் பெயரில் நேசத்தின் அம்சம் நிறைந்திருந்ததைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

    ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் அவர் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்! காலார நடக்கும்போது கன்னத்தை வருடும் தென்றலாக, தெருமுனையில் விழிக்கும்போது இனிய முகத்துடன் திசைகாட்டிவிட்டு நீங்கிவிடும் வழிப்போக்கனாக, ஒரு கடமைபோல் வாழ்வின் நடப்புகளைக் கவனித்துவைத்துக்கொள்ளும் சமுதாயத்தின் மனசாட்சியாக.

    ”மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார்,” என்று அவருடைய பங்களிப்பை நயம்பட விளக்குவார் நண்பர் சுப்பு.
    தன்னைக் ’கோமாளி’ என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அவருக்கு சந்தோஷம் இருந்தது. ஏனெனில், தன்னை ஒரு பெரும் அறிஞனாகவோ, தான் ஏதோ பெரிதாய்ச் சாதித்துவிட்டதாகவோ அவர் கருதிக்கொள்ளவில்லை. எழுத்து என்பது அவருடைய ஆன்ம இயல்பாக இருந்தது. அவருடைய நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

    இறுதிவரை, சிறுதீனி, மதுரை மணி ஐயர், சிரிப்பு, நகைச்சுவை போன்ற அவருடைய பரிவாரங்கள் புடைசூழத்தான் அவர் வாழ்ந்தார். வாழ்ந்ததைப்போலவே, ஆர்ப்பாட்டமின்றி, அவசரமின்றி மறைந்தார்.

    இடுப்பு எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் பிதாமகனைப்போல் படுத்திருந்தார். படுத்திருந்த அவருடைய காலைத் தொட்டு வணங்கும்போது மனசு நெகிழ்ந்துபோனது.

    கையை உயர்த்திக் கனிவுடன் வாழ்த்தியதும், ஒரு ஜோக் அடித்ததும், அருகில் இருந்த அவருடைய மரியாதைக்குரிய மகன்களை ஏதோ ஒரு தேதியைச் சொல்லி ஒரு நாளிதழில் குறிப்புப் பார்க்கச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

    அதென்னமோ பெரியவர்கள் முதலிலிருந்தே பெரியவர்களாக வாழ்கிறார்கள்! எந்தவிதமான எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லாமல் கடமை புரியும்போதே கழன்றுகொள்கிறது அவர்களுடைய கடைசி மூச்சு.

    He stood effortlessly tall among his peers, by his humility.

    Share