Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் – 120

    நிர்மலா ராகவன்

     

    வாழ்க்கை எனும் மிதிவண்டி

    “சௌக்கியமா?” ஒருவரைச் சந்திக்கும்போது கேட்கப்படுகிற உபசார வார்த்தை.

    சிலர் புன்சிரிப்புடன் தலையாட்டுவார்கள். வேறு சிலர், “என்னமோ இருக்கேன்!” என்று வேண்டாவெறுப்புடன் பதிலளிக்க, ”ஏனடா இவரைக் கேட்டோம்!’ என்று ஆகிவிடும்.

    இவர்கள் அனைவரும் உடலைத்தான் குறிப்பிடுகிறார்கள். உண்மையில், பிறருடன் சுமுகமாகப் பழகுவதும், திருப்தியும்கூட ஆரோக்கியத்தில் அடங்கும். மனநிறைவு இருந்தால் ஆரோக்கியமும் தொடர்ந்து வருமே!

    “உனக்கு ரொம்பத்தான் சுயநலம். உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறாய்!” என்று பழிப்பவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. நம்மை நாமே சரிவர கவனித்துக் கொள்ளாவிட்டால், பின் யாரை நோவது? அத்துடன், நாம் நன்றாக இருந்தால்தானே பிறரது நலனில் அக்கறை செலுத்தமுடியும்? தெளிவான, உறுதியான மனத்திற்கு தன்னைத்தானே கவனித்துக்கொள்வது முக்கியமில்லையா!

    ஒருவரது சிந்தனை, கூறும் வார்த்தைகள், நடத்தை எல்லாமே செம்மையாக இருக்கவேண்டும். நாம் சொல்வதால் பிறரும் மகிழ்ந்து சிரிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

    ஆக்ககரமான சிந்தனை, அடுத்த நாள் செய்யவேண்டியதைப்பற்றிய திட்டங்கள் ஆகியவை உடல், மனம் இரண்டையும் உற்சாகப்படுத்த வல்லவை.

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் சிந்திக்கிறார்கள், `நாளைக்கு ரவி என் சிநேகிதனாக இருப்பானோ?’ என்று. இருவரும் இன்று நட்புடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இரவு தூங்கப்போகுமுன், நாளையைப்பற்றிய கவலையும் எழாமல் இராது.

    நமக்கும் இதுபோல்தான் வேண்டாத கவலைகள் எழுகின்றன. நமக்கு நடப்பது 20% என்றால், அவை நல்லபடியாக நடக்குமோ என்றெல்லாம் நாம் அநாவசியமாக யோசிப்பது 80%!

    கதை

    “நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன், ஆன்ட்டி” என்று குறைப்பட்டாள் சுகந்தா. அவளுக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

    “அதில் என்ன தவறு? உனக்கு மகிழ்ச்சியுடன் பெரிதாகச் சிரிக்கவும் தெரிந்திருக்கிறது, பிறருக்காக வருந்தவும் முடிகிறது. இரண்டும் இல்லாமல், ஜடம் மாதிரி இருக்கப்போகிறாயா?”

    அவள் முகம் மலர்ந்தது. “அதானே!” என்றாள், நிம்மதியுடன்.

    சிறு வயதில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கும் சுகந்தா அவைகளால் தளர்ந்துவிடாது, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்திருக்கிறாள். குடித்துவிட்டு முகத்தில் கத்தியால் கீறிய தந்தை, அருமையாகப் பேசிப் பேசி, வேலைக்காரிபோல் நடத்திய உறவினள், சிறு வயதிலேயே பாலியல் வதை! அவள் அனுபவிக்காத துயரமே கிடையாது எனலாம்.

    கடந்துபோனதையே எண்ணி வருந்தி, அல்லது `மீண்டும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ!’ என்று பயப்படாது, உறுதியுடன் எல்லாவற்றையும் ஒதுக்கி நடந்திருக்கிறாள் சுகந்தா.

    “வாழ்க்கை என்பது மிதிவண்டி போன்றது. கீழே விழாமலிருக்க நகர்ந்தபடி இருத்தல் அவசியம்,” என்று சரியாகத்தான் சொல்லிப்போனார் ஐன்ஸ்டீன்.

    ஆரோக்கியம் கெட்டபின்தான் அதன் அருமை புரிகிறது.

    “மனுசனாப் பிறந்தா, என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு!” என்று ஒரு மாது சலித்துக்கொண்டதைக் கேட்டேன், அண்மையில். அறுபது வயதில் உடல் நலம் குன்றிப்போக, நாள் தவறாது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததில் எழுந்த சலிப்பு அது.

    கவலையை அகற்ற ஏதேதோ வழிகள். `எனக்கு ஏதாவது கவலை வந்தால், சாப்பிட்டால் அது குறைந்துவிடும்!’ என்பார்கள் சிலர்.

    வருத்தத்திற்கு மாற்றுமருந்து உணவா! எடை கூடிக்கொண்டே போகிறதே என்ற கவலையில் இன்னும் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாதா? உடற்பயிற்சி அதைவிட நல்ல பலனளிக்குமே!

    ஆனால், எல்லாருமே சாப்பிடுவதில் நிறைவு கண்டுவிடுவதில்லை.

    கதை

    வேலை நிமித்தம் மலேசியாவிற்கு வந்திருந்தவள் அனிதா. “என் ஒருத்திக்காக என்ன சமைப்பது! தினமும் கடையில்தான். இல்லாவிட்டால், நூடுல்ஸ்! எனக்குக் கறிகாய்கள் பிடிக்காது!” என்றாள்.

    அவள் கொள்ளை அழகு. இப்போது உடல் இளைத்து, சக்தி குன்றி இருந்தவளைப் பார்த்து, “தினமும் என்ன சாப்பிடுகிறாய்?” என்று முகத்தைச் சுளித்தபடி நான் கேட்ட கேள்விக்குப் பதில் அது.

    “உன் கணவர் வீட்டில் சாப்பிட மாட்டாரா?” என்று மேலும் துளைத்தேன்.

    “நல்லவேளை, அவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துவிட்டது! இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்!”

    திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள்ளேயே இல்வாழ்க்கை அலுத்துவிட்டதா!

    “அவர் கூட இருந்தவரை, நான் வெளியில் எங்கும் போகக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. அவருக்கு நண்பர்களே கிடையாது. நானும் அப்படி இருக்க முடியுமா?” என்று பொரிந்தாள். “வேலை முடியும் சமயம் வந்துவிடுவார், என்னை அழைத்துப்போக. எப்பவும் வீட்டிலேயேதான்! வீட்டிலேயேதான்!” அனிதா அழாதகுறை.

    மெல்லச் சிரித்தேன். “நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான்! இப்போது என்ன செய்கிறாய்?”

    “சிநேகிதிகளுடன் ஊர் சுற்றுகிறேன். பேசிக்கொண்டே வெளியில் சாப்பிடுவோம்! தினமும் கூப்பிட்டுக் கேட்கிறார், இன்று என்ன செய்தாய் என்று!”

    கசப்பான மருந்துகள் பலனளிப்பதைப்போல, நம்மை வெகுவாகச் சோதிக்கும் அனுபவங்கள்தாம் நம்மைப் புடம் போடும். அவைகளிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதில்தான் நம் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.

    “வாழ்க்கை எளிதாக இருக்கவேண்டும் என்று கடவுளைத் துதிக்காதே. கடினமானதைத் தாங்கும் சக்தி வேண்டும் என்று வேண்டிக்கொள்!” (ப்ரூஸ் லீ)

    திருமணத்திற்குப்பின் சில பெண்களின் உடல்நிலை கெட்டுவிடும். பிறந்தகத்தில் கிடைத்த சலுகையை புக்ககத்தில் எதிர்பார்க்க முடியுமா!

    புதிதாக ஓர் உத்தியோகத்தில் அமர்ந்த பின்னரும் வித்தியாசமான நபர்களுடன் பழக முதலில் கஷ்டமாக இருக்கும். அவர்களால் உண்டான பாதிப்பையே நினைத்துக்கொண்டிராது, நமக்குப் பிடித்ததை, நம்மால் இயன்றதை, சரிவர செய்துவந்தால் நாளடைவில் புதிய சூழல் பழகிப்போகும்.

    இரு பெண்கள், ஒரே கதை

    சுவேதா வசதி குறைந்த பெற்றோருக்கு மூன்றாவது மகள். நாளேட்டில் வந்த `மணமகள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கணவர் அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருந்தார். வரதட்சணையும் கேட்கவில்லை.

    வேறு என்ன தடை! அதிகம் விசாரிக்காமல் அக்கல்யாணத்தை முடித்தனர்.

    சுவேதாவுக்கு வாய்த்தவரோ மனநிலை சரியில்லாதவர். உத்தியோகம் பார்க்கமுடியுமே தவிர, பிறருடன் பழகத் தெரியாது. எப்போதும் தனிமைதான். `நீ பைத்தியம்!’ என்று வார்த்தையாலேயே மனைவியை வதைத்தார்.

    கணவரை விட்டுப்போவது பெற்றோருக்கு வருத்தத்தைத் தரும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் சுவேதா.

    அவருக்குச் சரியாக எதிர்த்து வாதாடினால் தானும் அவரைப்போலவே ஆகிவிடும் அபாயம் என்று புரிந்து, அவருக்கு நேர் எதிராக இருக்க ஆரம்பித்தாள். அதாவது, அமைதியைத் தன் ஆயுதமாக ஆக்கிக்கொண்டாள். அவர் என்ன ஏசினாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். `நான் அவருடைய ஓர் அங்கமல்ல. எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது!’ என்று துணிந்தாள். சிரிப்புடன் வளையவந்தாள். ஆரோக்கியம் குன்றவில்லை.

    கிட்டத்தட்ட அதேபோன்ற ஒருவரை மணந்த கமலா படித்தவள். பரம சாது. தனக்கென எதைக் கேட்கவும் அவளுக்கு உரிமை இல்லை. உத்தியோகம் பார்க்கக்கூடாது, பிறருடன் பழகவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். `கணவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!’ என்று நம்பியவள் தானும் அவரைப்போலவே பித்துப்பிடித்தவளாக ஆனாள்.

    இயற்கை மருத்துவம்

    நமக்கு ஏதாவது உடற்கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரைத் தேடிப்போகிறோம். அவசியமே இல்லை. “ஆறு சிறந்த மருத்துவர்கள்: நீர், காற்று, சூரிய ஒளி, சத்தான உணவு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி,” என்கிறார் திரு.அனுபவசாலி.

    ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை செய்யும்போதும், அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து குருட்டு யோசனை செய்யும்போதும் மனம் தளர்ந்து, வேண்டாத கவலைகள் சூழ்ந்துகொள்கின்றன.

    “ஆச்சு! ரிடையர் ஆக இன்னும் பதினைஞ்சே வருஷம்தான் இருக்கு!” என்ற அற்ப திருப்தி அடைந்துவிடுவார்கள் சிலர். வாழ்க்கையில் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுபோல் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

    எந்த வயதானாலும், ஒத்த மனதினருடன் பழகுவது, இசை, நடனம், படிப்பது என்று பிடித்தது எதிலாவது மனத்தைச் செலுத்தினால் புத்துணர்ச்சி பிறக்குமே!

    நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிறரது கட்டாயம் நம்மைப் பாதிக்க விடலாமா?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 119

    உலகைக் காக்கும் பொறுப்பு

    அம்மாணவன் பிறருடன் தோழமையுடன் பழகினான். கவர்ச்சிகரமாக இருந்தான்.

    எங்கள் பள்ளிக்கூடத்தில் நான் பொறுப்பேற்றிருந்த சங்கத்திற்குப் பிறர் ஏகமனதாக அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். (அதற்காகத்தானே அவ்வளவு சிநேகிதமாக இருந்தான்!) பல சங்கங்களிலும் அவனே தலைவனாக இருந்தான்.

    வருட இறுதியில், மாணவத் தலைவர்களுக்கெல்லாம் சான்றிதழ் அளிக்கும் வைபவம் நடந்தது. நான் கையெழுத்திட்ட சான்றிதழ் அவனுக்குக் கிடைக்கவில்லை.

    குழப்பத்துடன் என்னிடம் வந்தான். “டீச்சர்! நம் சங்கத்தின் சான்றிதழ்..?”

    நான், “நீ எதுவுமே பண்ணவில்லையே?” என்றபோது, அவன் அதிர்ந்தான்.

    பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதவி, அது அளிக்கும் அதிகாரம், பெருமை எல்லாம் வேண்டும். ஆனால், பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

    செய்யவேண்டுவதைத் தாமே கவனித்துச் செய்பவர்கள்தாம் தலைவர்களாகும் தகுதி பெறுகிறார்கள். வீடு, சங்கம், நாடு – இவற்றில் எதன் தலைவராக இருந்தாலும் சரி, அவர் தன் கடமையைச் சரிவர ஆற்றாவிட்டால் அது ஆட்டங்கண்டுவிடும்.

    கதை

    “எங்கப்பா எப்பவும் குடிச்சுட்டு, கத்திக்கிட்டே இருப்பார். படிச்சதெல்லாம் மறந்து போயிடுது!” என்றாள் என் மாணவி மீனா.

    “ஏதாவது வாசகசாலைக்குப் போய் படி. பள்ளிக்கூடத்திலேயே ஓய்ந்த நேரத்தில் சில தோழிகளுடன் கலந்து படி. அதிகம் பேசாதே!” என்று ஆலோசனை கூறினேன். “அப்பாவை விடு! இது உன் வாழ்க்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வருகிற வழியைப் பார்! இல்லாவிட்டால், உன் அப்பாவைப்போலவே ஒருவனை மணந்து, அவனிடம் அடிபட்டுச் சாகவேண்டும்!” நான் கூறியது கடுமையாக இருந்தபோதிலும், மீனா அதில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றாள். தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டாள்.

    `இந்தமாதிரி ஒரு குடும்பத்திலே பிறந்துட்டு, நீயெல்லாம் உருப்பட்டுவிட முடியுமா?’ என்று அக்கம்பக்கத்தினர் பழிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். பிறர் தன் மனத்தைத் தளர வைப்பது பொறாமையால் என்று புரிந்தபின், அவர்களின் கேலியை அலட்சியம் செய்தாள்.

    சிறு வயதிலேயே நிறைய துன்பம் அனுவித்திருந்ததால், தன் வாழ்க்கை நல்லவிதமாக மாறவேண்டும் என்ற துடிப்பு மீனாவிடம் இருந்தது. பொறுப்புடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தாள் அப்பெண்.

    எப்போதும் பிறர் சொன்னபடியே நடந்து, அவர்களை மகிழ்விப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தமக்குரிய பொறுப்பை ஏற்க மறுப்பவர்கள். பின், எப்படித்தான் தம் செயலால் விளைந்த வீழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்காது, பிறரைக் குற்றம் சாட்டுவது!

    வித்தியாசமாக இருந்தால் தனித்துத் தெரிவோம் என்ற பயத்தில், `நான் பயந்தாங்கொள்ளி, சோம்பேறி!’ என்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்ப்பதுண்டு. எல்லாருமாகச் சேர்ந்து, தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலிசெய்து சமாதானம் அடைவார்கள்.

    கதை

    என் சக ஆசிரியை மேரி, “எனக்கு ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும். அதிகம் படித்தால் தலைவலி வரும்,” என்று தெரிவித்தாள்.

    `நீ அதிகம் படிப்பதில்லையா?’ என்று நான் அவளைக் கேட்டிருக்கமாட்டேன். அவளுக்கே ஏதோ தாழ்மை உணர்ச்சி — ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு தான் இவளைப்போல் படிப்பதே இல்லையே, பத்திரிகைகளில் எழுதுவதும் கிடையாதே என்று.

    “ஒரு வரி எழுதி முடித்தவுடன், இதை இப்படி எழுதியிருக்கலாமோ என்று பல முறை திருத்துவேன். அதுதான் எழுதுவதில்லை,” என்று மேலும் கூறினாள்.

    எடுத்த எடுப்பில் நமக்குப் பிடித்தமாதிரி எழுதுவது, (ஏன், எதையும் செய்வது) இயலாத காரியம். தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்துவிட்டு, அதன்பின் பல முறை திருத்த வேண்டியதுதான்.

    கனவு பலிக்க

    பல ஆண்கள், `நாற்பது வயதுக்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்,’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொறுப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

    கனவு கண்டால் மட்டும் போதுமா? முதலில், அதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்க வேண்டும். பல இடைஞ்சல்கள், எதிர்ப்பு, வரத்தான் செய்யும். எதற்கும் தளராது, முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.

    பிற நல்ல பழக்கங்களைப்போல, பொறுப்புணர்ச்சியையும் சிறு வயதிலேயே பழக்கமுடியும்.

    குட்டிக்கதை

    சுமார் பத்து சிறு குழந்தைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொண்ட இல்லத்தரசி ஸிதி (SITI) தான் ஓயாமல் குனிந்து, நிமிர்ந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளாமல் இருக்க ஓர் உபாயத்தைப் பின்பற்றினாள். கையை ஒரு முறை ஓங்கி தட்டி, “ஒழுங்குபடுத்து” என்று கூவுவாள்.

    அவள் கண்காணிப்பிலிருந்த என் மகன் எங்கள் வீட்டுக்கு வந்தபின்னரும், தன் விளையாட்டுச் சாதனங்களை எடுத்து வைக்க ஸிதி செய்ததுபோலவே கையைத் தட்டி, “KEMAS!” என்று மலாய் மொழியில் ஆணையிட்டுக்கொள்வான்!

    `குப்பையைக் கண்ட இடத்தில் வீசாதே!’ என்று பள்ளிக்கூடங்களில் விதி இருந்தாலும், சிலர் வீடுகளிலும் அதைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். `நம் வீடுதானே!’ என்ற தம் பொறுப்பை அலட்சியம் செய்வார்கள். அத்தருணங்களில், மூத்தவர்கள் பரிவு காட்டாது, ஆனால் குரலை உயர்த்தாது கண்டித்தால் பொறுப்பு வரும்.

    வீட்டை மட்டுமல்ல, இப்பரந்த உலகையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிக்க ஒருவரைச் சந்திப்போமா?

    62 வயதான ராபர்ட் ஸ்வான் (ROBERT SWAN) என்ற ஆங்கிலேயரை உலகம் `பைத்தியக்காரன்’ என்று கேலி செய்தது. யாராவது வடதுருவம், தென்துருவம் இரண்டு இடங்களிலும் நடந்து போவார்களா?

    தென்துருவமான அன்டார்ட்டிகாவில் நாம் அறிந்தபடி நிலம் கிடையாது. பனிப்பாறைதாம். அங்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் கிடையாது.

    அதன்மேல் கால்நடையாக தனது இருபதாவது வயதில், மற்றும் இருவரின் துணையுடன் போனார் ராபர்ட். அதற்கான செலவை (அமெரிக்க டாலர் 50 லட்சம்) சேகரிக்க ஏழாண்டுகள் பிடித்தன.

    900 மைல் நடந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்பது மணி என்று 70 நாட்கள்! ஒவ்வொருவரின் முதுகிலும் 180 கிலோகிராம் எடைகொண்ட சாமான்கள்! _77 டிகிரி செல்ஷியஸ் குளிரில் வியர்வை உறைந்துவிடுமாம். (குளிரில் வியர்க்குமா என்ற யோசனை வருகிறதா? உடலை இந்தப் பாடுபடுத்தினால்?) ஒருவருக்குக் குதிகால், இன்னொருவருக்கு கால் பெருவிரல் இரண்டும் சிதைந்துவிட்டன. ராபர்ட்டின் எடையில் 33 கிலோ குறைந்தது. கண்களின் நீல நிறம் வெளிறியது. முகத்தின் சதை பிய்ந்தது.

    கடந்த பதினைந்து வருடங்களில், 3,500 பேரை (இந்தியா. சீனா போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்) 22 முறை இத்துருவங்களுக்கு அழைத்துப்போயிருக்கிறார். பல பெண்களும் இதில் அடங்குவர். பல்வேறு தாவர, விலங்கினங்களைத் தன்னிடத்தே அடக்கியிருக்கும் அழகான அன்டார்ட்டிகாவை ரசிப்பதுடன், அதைக் காக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

    சரி, இதில் பொறுப்பு எங்கே வந்தது, என்கிறீர்களா?

    உலகின் 90% சுத்தமான நீர் அன்டார்ட்டிகாவில்தான் உள்ளது, பனி வடிவில். 4,500 மீட்டர் நீளத்திலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தால்..?

    இவ்வாறு உலகம் அழியாது காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராபர்ட் ஸ்வான். எட்டு ஆண்டுகள் பிரயத்தனப்பட்டு, 1,500 டன் (TON) எஃகு குப்பையை அகற்றி, அதை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். (இந்த `குப்பை’ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் விட்டுப்போனது).

    நம்மால் பிறரது நலனுக்கென இப்படியெல்லாம் உழைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், பிளாஸ்டிக் சாமான்களையும், தகர டப்பாக்களையும் அதற்கென வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்பலாமே!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 118

    நிர்மலா ராகவன்

     

    பதவி போதுமே, பண்பு எதற்கு?

    “ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான்.

    அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, `ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை.

    சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

    ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

    பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள்.

    “ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள்.

    என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,`உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா?

    நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்?

    கதை: யாரிடம் பணிவு?

    எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன.

    கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?)

    அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. `யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற `நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள்.

    அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை).

    எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், `இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா?

    கதை

    மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள்.

    பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்.

    `ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான்.

    முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை.

    அவனுடைய பொறுப்பாசிரியரிடம், `ரஃபியை அடக்கிவைங்கள். `எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!” என்றேன்.

    மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். `இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள்.

    அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்!

    எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது.

    வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள்.

    கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!”

    மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?”

    குணமும் குழந்தைத்தனமும்

    மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது.

    வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும்.

    குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது.

    கதை: கர்வம் குணக்கேடு

    கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

    அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, `அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார்.

    அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (`இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்).

    “குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

    கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது.

    பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்.

    தொடருவோம்

    Share
  • முதுகில் ஒரு குத்து

    நிர்மலா ராகவன்

     

    ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்த போதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான்.

    “அப்பா! எத்தனையோ பேருக்கு வெளியூருக்குப் போய் சுத்திப்பாக்க  ஆசை. ஆனா வசதி கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரெண்டு மூணு  இடத்திலே பந்தயம் வெச்சு   இழுத்தடிக்கலாம்!”

    மலை ஏறி, பிறகு ஒரு கம்பியில் படுத்த நிலையில் ஆற்றைக் கடந்து,  மற்றும்  பிடிப்பிடியாக நெல்லை அள்ளி, (வழியில் இரு `பூதங்கள்’ அவர்களை மறித்து, பிடித்துத் தள்ள)  சேற்றில் ஓடி, அதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் நெல்லை நிரப்பி – இப்படி மனிதர்களின் உடல்பலம் மனோபலம் இரண்டையும் ஒருங்கே பரிசோதிக்கும் போட்டி அது. அமெரிக்காவில் பார்த்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி.

    பந்தயத்தில் ஜெயித்தால் பத்து லட்சம்!

    பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்கள் எதிர்கால லட்சாதிபதிகள்.

    “பத்து வருடங்களாகியும் எங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதற்கான சிகிச்சைக்குப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்போட்டியில் சேர்ந்திருக்கிறோம்!” என்றாள் பூரணி. பருமனாக இருந்தாள். கணவர் புஜபராக்கிரமத்துடன் இருந்தார். வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் என்றாலும்,   அவர்களால் ஒன்றாக ஓடமுடியுமா? இல்லை, விரைவாக நடக்கத்தான் முடியுமா?

    `பாக்கிறவங்களுக்கு எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தா அலுப்பு தட்டும்!’ என்ற செந்திலின் யோசனை அவர்களுக்குத் தெரியாது. “நம்பளை போட்டியிலே சேர்த்துக்கிட்டாங்க!” அப்போதே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டது போல் பூரணி குதித்தாள்.

    அழகுப்போட்டியில் வென்ற இரு பெண்கள், விளையாட்டு வீரர்களான இரு இளைஞர்கள், குண்டும் ஒல்லியுமாக இரு ஆப்த நண்பர்கள்  என்று பத்து ஜோடிகளும் வெவ்வேறு விதமாக இருந்தார்கள்.

    “இரண்டு வயதான என் மகனுடைய இருதயச் சிகிச்சைக்கு வேண்டிய வசதி என்னிடம் இல்லை. அதற்காகத்தான் பெயர் கொடுத்தேன்.  என் உயிர்த்தோழி வந்தனாவும் என்னுடன்   பங்குபெற வந்திருக்கிறாள்!” என்ற கல்பனா வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தாள். கணினித்துறையில் பட்டம் பெற்றிருந்தாள். பூரணியைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள். போட்டி துவங்கியது. பல கேமராக்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஓடியபடி இருந்தன. வார இறுதியில் ஒரு மாநிலத்திலிருந்து வேறொன்றிற்குப் போகவேண்டும்.

    `கல்பனாவையும், வந்தனாவையும்பற்றி நாம் தவறாக முடிவெடுத்துவிட்டோம்!’ என்று பிற போட்டியாளர்கள் பொறாமையுடன் முணுமுணுக்கும் வகையில் ஆறில் நான்கு இடங்களில் அக்குழு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.

    பூரணிக்கோ, அவள் எண்ணியதுபோல, இலவச சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை அந்த அனுபவம். மூச்சு வாங்கியது. காலை விந்தித்தான் நடக்க முடிந்தது.

    “அவங்களுக்கெல்லாம் வயசாகலே! குரங்குமாதிரி ஏறிக் குதிக்க முடியுது!” என்று பொருமினாள். “திரும்பப் போயிடலாமா?” என்று மனைவியைக் கேட்டார் பரசுராமன், அனுதாபத்துடன்.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.  ஏழாவது மாநிலத்தில், `இந்த இரண்டு விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்!’ என்ற அறிவிப்பு இருந்தது.  அது மட்டுமா!

    அதில் ஒன்றை முடித்ததும், அடுத்ததற்குப் போகமுடியாது, ஆங்கில எழுத்தான `U’ ஒரு கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. முதலில் போகும் குழு வேறு ஒரு குழு உறுப்பினரின் பெயர்களை மேலே எழுதி, தம் பெயரையும் பகிரங்கப்படுத்தி விட வேண்டும்.  அப்படிச் செய்தால், மேலே இருப்பவர்கள் இரண்டையும் முடித்தாகவேண்டும்.

    (`இதெல்லாம் அவசியமாடா? துரோகமில்ல?’ என்று ஆராவமுது தயங்கியபோது, ` இந்தமாதிரி ஏதாவது ஸ்டண்ட் செஞ்சாத்தான் எல்லாரும் இதைப்பத்தியே பேசுவாங்கப்பா. நம்ப ரேடிங்க் மேலே போகும்,’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருந்தான் மகன்).

    `இது அசிங்கம்!’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, ஒருவரும் கரும்பலகையில் மற்றவர் பெயரை எழுதவில்லை.

    இறுதிச்சுற்று நான்கே குழுக்களுடன் ஆரம்பித்தது. உடலில் அடி, மிகவும் தாமதமாக வந்தார்கள் என்று மற்றவர்கள் விலக்கப்பட்டு இருந்தார்கள்.

    “கால் விரல்லே உணர்ச்சியே இல்லை!” என்று முனகியபடி பூரணி மலைமேல் ஏறமுடியாது உட்கார்ந்தாள்.  இவ்வளவு தூரம் கடந்ததே அதிசயம் என்று தோன்றியது பரசுராமனுக்கு. “எதுக்கும்மா  இந்த விபரீத விளையாட்டு? போதும்னு போயிடலாமே!” என்றார். அலைச்சலில் பூரணியின் இடுப்பில் சதை அவ்வளவாகத் தொங்கவில்லை என்பது மட்டும்தான் திருப்திகரமாக இருந்தது.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் மீண்டும் தீர்மானமாக ஒலித்தது. “அது ரெண்டும் எங்கே காணோம்?” “யாரைக் கேக்கறே?”

    “கல்பனா, வந்தானாவைத்தான்!”

    “பாவம்!  நாம்ப வந்த பஸ்ஸிலே அவங்களுக்கு இடம் கிடைக்கலே.  வந்து சேர இன்னும் அரைமணியாவது ஆகும்”.

    “அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்புங்க. ஓய்வா இருக்கவா இங்கே வந்திருக்கோம்?” என்று அவரை விரட்டியபடி,  புதிய உற்சாகத்துடன் எழுந்தாள் பூரணி. கால்வலி போன இடம் தெரியவில்லை.  வழியில் ஒரு U!

    வழக்கம்போல் அதைக் கடந்துபோன கணவரை, “கொஞ்சம் இருங்க,” என்று தடுத்தாள் பூரணி. அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு பூரணி?” என்று தடுக்கப்பார்த்தவரிடம்,   “இது பந்தயம். இங்கே  உணர்ச்சிங்களுக்கு இடம் குடுக்கக் கூடாது!” என்று மிரட்டலாகக் கூறியபடி, கல்பனா, வந்தனா என்று எழுதினாள்.

    பஸ் நிறுத்தத்தில் கியூவில் தங்களுக்கு இருபது இடங்களுக்கு முன்னால் நின்றிருந்த கல்பனாவிடம், `என் மனைவிக்கு நிக்கவே முடியவில்லை. ஒங்க இடத்தைக் கொடுத்தா நல்லாயிருக்கும்,’  என்று அவர் கெஞ்சியபோது, சற்றும் யோசியாது, `அதுக்கென்ன!’ என்று பெருந்தன்மையுடன் பின்னால் போன இளம்பெண் பரசுராமனின் நினைவில் எழுந்தாள். 

    வழக்கம்போல், அசுரவேகத்தில் பல தடைகளைக் கடந்துவந்த கல்பனா தன் குழுவின் பெயர் அங்கே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அலறினாள்.

    “ஐயோ! இப்படி எங்கள் முதுகில் குத்த அவர்களுக்கு எப்படி மனம் வந்தது!” என்று கதற ஆரம்பித்தாள்.

    “திரு, திருமதி பரசுராமன்! வாழ்த்துகள்! நீங்கள் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறீர்கள்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமெல்லாம் சிரிப்பாகக் கூறினார்.

    `இந்த மனிதர் சொன்னதைக் கேட்டு அவங்க பேரை எழுதாம இருந்திருந்தா?’ என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கினாள் பூரணி. பொது இடம் என்றுகூடப் பாராது, கணவரைக்  கட்டி அணைத்துக்கொண்டு, முத்தமாரி பொழிந்தாள்.

    அவரால் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி மிகுந்தது.  அதற்கடுத்த வாரம் பரிசளிப்பு விழா. பத்து குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். வந்தனாவின் வற்புறுத்தலால்  கல்பனாவும் வேண்டா வெறுப்பாக வந்திருந்தாள். பூரணியைப் பார்க்கவே பிடிக்காது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள்.

    “பரிசுத்தொகையான பத்து லட்சம்..,” அறிவிப்பாளர் சற்று நிறுத்தி, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு பார்வை பார்த்தார்.  வாய் கொள்ளாத சிரிப்புடன், பூரணி எழுந்திருந்தாள்.

    “அத்தொகை கல்பனா-வந்தனா குழுவிற்கு அளிக்கப்படுகிறது!”  மேடையில் அமர்ந்திருந்த ஆராவமுது தலையை ஆட்டினார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

    “இதென்ன அநியாயம்! நாம்பதானே ஃபர்ஸ்ட் வந்தோம்!” என்று கணவரிடம் உரக்க முறையிட்டவளை “ஷ்!” என்று அடக்கினார் அவர்.

    (`அநீதிக்கும் ஏமாற்றத்துக்கும்  துணைபோகும் உங்கள் சேனலுக்கு இனி சந்தா கட்டமாட்டோம்’ என்று போட்டி முடிவை ஒருங்கே எதிர்த்த தொலைகாட்சி நேயர்களின் சீற்றத்துக்குப் பயந்து முடிவை மாற்றியதற்காக சேனலின் சொந்தக்காரரான ஆராவமுது தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.

    `நம்ப நாட்டு ஜனங்க இன்னும் தர்மம், நியாயம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா. நான் அதை யோசிக்காம போயிட்டேன்!’ – செந்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தான்).

    “இப்போட்டியின் நோக்கம்  உடல் வலிமை, மனவலிமை இரண்டை மட்டும் பரீட்சை செய்வதில்லை. மனிதத்தன்மை என்றும் ஒன்றிருக்கிறது! பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், அவர்கள் காலை வாருவது என்ன தர்மம்?” யாரோ எழுதிக்கொடுத்ததை உணர்ச்சியுடன் பேசினார் ஆராவமுது . “சராசரி என்று எடுத்துக்கொண்டால், பத்து இடங்களில் ஏழு இடங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கல்பனாவின் குழு.  திட்டமிடும் திறனாலும், எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத குணத்தாலும் இறுதிச்சுற்றிலும் அவர்கள் வென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்..,” வெளிப்படையாகக் குற்றம் சாட்ட விரும்பாது, குறிப்பாக பூரணியைப் பார்த்தார்.  அவளுக்கு அவமானமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு, கடைக்கண்ணால் கணவரை நோக்கினாள்.

    ஒரு  பெருமூச்சு எழுந்தது அவரிடமிருந்து. அது நிம்மதியை வெளிப்படுத்திய பெருமூச்சு! குறுக்கு வழியில், நல்லவர் மனதை நோகடித்து… அப்படியாவது ஒரு குழந்தை பெற வேண்டுமா? பிறக்கும் குழந்தை ஏதாவது குறையுடன் பிறக்காது என்பது என்ன நிச்சயம்? “போகட்டும், விடுங்க! இந்த ஒலகத்திலே எல்லாருமே ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, ” என்று அவரைச் சமாதானப்படுத்துவதில் இறங்கினாள் பூரணி. 

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 117

    நிர்மலா ராகவன்

    மதிப்பெண்கள் மட்டும் போதுமா?

    லாவண்யா வகுப்பில் எப்போதும் முதலாவதாக வருவாள். பேச்சுப்போட்டியில் அவளை யாராலும் வெல்ல முடியாது. `பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறாள்,’ என்று ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அவளைக் கொண்டாடுவார்கள். பெற்றோரும் அப்படித்தான்.

    விளைவு: அவள் செய்வதை யாராவது கண்டித்தால், கோபம் தலைக்கேறும். எவராக இருந்தாலும் – அது ஆசிரியையாகவே இருந்தாலும், மரியாதை இல்லாது பேசுவாள். அவர்களும் அடங்கிப்போவார்கள்.

    எங்கு தவறு நேர்ந்தது?

    ஓயாது புத்தகங்களைப் படித்து, அதன்வழி பல விஷயங்களையும் தெரிந்துகொண்டால் புத்திசாலித்தனம் வளரலாம். ஆனால், தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு வளரவில்லை லாவண்யாவுக்கு.

    பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தபின், பாடங்களில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உலகைச் சமாளிக்க முடியுமா? பிறருடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டாமா?

    எப்போதும் சிறுபிள்ளைத்தனமாக, தன் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நடந்தால், சிறு விஷயங்களுக்குக்கூட ஆத்திரம் எழும்.

    தலைவனாக வேண்டுமா? உணர்ச்சியைக் கட்டுப்படுத்து!

    தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தத் தன்மை இல்லாவிட்டால் மதிப்பை இழக்க நேரிடும்.

    கதை

    `இவனுக்குத் தெரியாததே இல்லை!’ என்று பிறர் மெச்சும்படி இருந்தான் அக்கல்லூரி மாணவன். விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, ரங்கனுடன் பேசுவதே தமக்குப் பெருமை என்பதுபோல் சகமாணவிகளும் நடந்துகொண்டதில், அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவனுக்குப் பயந்தோ, இல்லை மதித்தோ, எல்லாரும் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், தான் நினைத்தது நடக்காவிட்டால் எளிதில் கோபம் எழ ஆரம்பித்தது.

    கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது எதிர்ப்பட்டவர்களின்மீது தன் இயலாமையைக் காட்டுவான். ஆத்திரமே அவனது தலையாய குணமாகியது.

    நல்ல படிப்பு, பெரிய உத்தியோகம் என்றான பின்னரும், `நானே ராஜா,’ என்பதுபோல் நடக்க, விரைவில் எல்லாரும் விலகிப்போனார்கள்.

    கல்லூரி நாட்களில் அவனுடைய சிறப்புகளைக் கண்டு மணந்த காதல் மனைவியும், `இது நான் பார்த்து மயங்கியவர் இல்லை!’ என்று கண்டவர்களிடம் எல்லாம் புலம்பினாள். மனைவி மட்டுமின்றி, அவனுடைய குழந்தைகளுக்கும் அவனைப் பிடிக்காமல் போயிற்று.

    ரங்கனுக்குத் தன் உணர்வுகள் புரியவில்லை. அதனாலேயே பிறரையும் புரிந்துகொள்ள இயலவில்லை. பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டால்தானே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதும் விளங்கும்?

    ரங்கனுக்கு இதெல்லாம் புரியாததால், நாளடைவில், உத்தியோகத்தில் அவனுக்குக் கீழே வேலை பார்த்தவர்களுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்க, தன்மேலேயே பரிதாபம் எழுந்தது.

    வீட்டிலோ, வெளியிலோ, தனது உரிமை என்று அவன் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் ஆத்திரம் அதிகரித்தது. தீய பழக்கங்களுக்கு அடிமையானான்.

    நம் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

    கதை

    கடைக்குட்டியான அந்த மூன்று வயதுச் சிறுவனை அவனுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டுத் தாய் சிலாகிக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி தாங்காது. அதை வெளிக்காட்டாது மறைக்க, தலையைக் குனிந்து, வாயை உப்பிக்கொள்வான்.

    “யாருக்கோ ரொம்ப பெருமை!” என்று தாய் அறிவிக்க, எல்லாரும் அவன் பக்கம் திரும்பி, பாசத்துடன் புன்னகைப்பார்கள்.

    அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கேட்டு, அடுத்த முறை எதற்காவது மகிழ்ச்சி ஏற்படும்போது, “அம்மா! நான் பெருமை!” என்று தெரிவிப்பான். யாராவது புகழ்ந்தால், மகிழ்ச்சி பெருகுகிறது. சிறுவனுக்குத் தன் மனம் புரிந்தது.

    (புகழ்ச்சி மனதுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பலரும் அதை உபயோகப்படுத்தி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள். முக்கியமாக, சிறுமிகளையும் இளம்பெண்களையும் கவர முயற்சிக்கும் கயவர்கள்.

    யார் எதையும் நாடாது புகழ்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவு இருந்தால், வெற்றுப்புகழ்ச்சியில் மயங்கமாட்டோம்).

    மாறாக, நம்மிடம் யாராவது குறை கண்டுபிடித்துவிட்டாலோ ஆத்திரம் எழுகிறது.

    `மற்றவர் அவர் வழியில் யோசிக்கிறார். நமக்கு உகந்த வழியில் நாம் போவோமே!’ இந்த சிந்தனை எழுந்தால், கோபம் எழுந்த வேகத்தில் அடங்கிவிடும்.

    என் சிநேகிதி ஜூலியான், “நான் எப்போது கடைக்குப் போய் தலைமுடி வெட்டிக்கொண்டாலும், என் கணவர் கத்துவார்,” என்றாள், பேச்சுவாக்கில்.

    அவளுடைய கணவர் பலமுறை கோபித்தபோது, உடனே ஆத்திரப்பட்டவளுக்கு, சற்று நிதானமாக யோசித்தபோது அவரது போக்கின் காரணம் பிடிபட்டது.

    அலுப்புடன், “உங்களுக்கு முடியெல்லாம் கொட்டிப்போய் வழுக்கையாகி விட்டதால் என்னிடம் குறை காண்கிறீர்களோ?” என்று ஒரு முறை இவள் கேட்க, அவரது குறுக்கீடு நின்றுபோயிற்று.

    தன்னம்பிக்கை உள்ளவர்கள் தம்மை உணர்ந்தவர்கள். இவர்களே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சிபாரிசில் வருபவர்கள்…

    கதை

    அரச வம்சத்தில் வந்தவள் என்பதால் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவள் ஆஸ்மா. தன் சாதனைகளால், புத்திகூர்மையால், அப்பெரிய பதவிக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்தால் விளைந்த கர்வத்தில், தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாள்.

    கட்டுக்கடங்காத சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்மாவுக்குப் புரியவில்லை. திரும்பவும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்று பயந்தவளாக, தன்கீழ் வேலை பார்த்தவர்களை ஓயாது விரட்டினாள். அவளுக்குப் பின்னால் அவர்கள், `ரொம்பத்தான் காட்டாதே!’ என்று பரிகசித்தது அவளுக்குத் தெரியாது!

    “சிலபேர் ஏன் இப்படி ஆடுகிறார்கள்?” என்று என்னைக் கேட்டார்கள்.

    “தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு மீறிய பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான்!” என்றேன், சிறிதும் யோசியாது. ஆதாயத்தை எதிர்பார்த்து அவள் பக்கம் சார்ந்திருந்தவர்களுக்கு முகம் சுண்டிப்போயிற்று.

    மற்றவர்களுக்கோ, ஆஸ்மா ஏதாவது தவறு செய்தால், அதைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க முடியவில்லை. ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவளிடம் ஏற்பட்ட அவநம்பிக்கையால், தம் வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடத் தோன்றவில்லை.

    தன் குறை நிறைகளைப் புரிந்திருந்தால், ஆஸ்மாவுக்குப் பிறரது உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்திருக்கும். அவர்களது மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பாள்.

    அமைதிப்படுத்த ஒரு பயிற்சி

    `உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர..’ என்று பாலர் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவார்கள்.

    குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலும், பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டாலும், நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்திருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

    கதை (படித்தது)

    வன்முறைக்குப் பெயர்போன பகுதி அது. அருகிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவருமே கொலையைக் கண்ணால் பார்த்தவர்கள். முதலில் அச்சமோ, வருத்தமோ எழுந்திருந்தாலும், அவ்வுணர்ச்சிகளிலேயே மூழ்கிவிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த சிறுவர்கள் பாடத்தில் கவனம் சிதறாது இருந்ததைக் கண்டு வியந்த சிலர் ஆராய்ச்சி செய்தபோது, ஓர் உண்மை தெரியவந்தது: தினமும் காலையில், தங்களுடைய அபிமான பொம்மையை வயிற்றின்மேல் வைத்து, படுத்த நிலையில் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியே விடும்போதும் மூன்றுவரை எண்ண வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் உன்னிப்பாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நாள் அந்தப் பயிற்சி செய்யாவிட்டாலும், அமைதி குலைய, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடுமாம்.

    சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லாவிடினும், திறமையை வெளிக்காட்ட நம் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    ஒத்துப்போவது வெற்றிக்கு அறிகுறி

    தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவி என்னிடம் கூறினார், “எங்களிடம் தற்காலிகமாக வேலைக்கு வருகிறவர்களின் மதிப்பெண்கள் இரண்டாம்பட்சம்தான். (உலகளாவிய எல்லா கம்பெனிகளிலும் இப்படித்தான்). அவர்களுடைய ஆடை, மரியாதையாகப் பேசும் தொனி முக்கியம். பல விஷயங்களையும் புரிந்து வைத்திருப்பதோடு, பிறருடன் எப்படி இணைந்து பழகுவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நிரந்தரமாக ஆக்குவோம். வேலையில் சிறந்து, ஆனால் பிறருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருந்தால், யார் அவர்களுடன் ஒத்துப்போவார்கள்?”

    எந்த துறையானாலும், பிறருடன் ஒத்துப்போகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். கிடைக்கும் வெற்றியும் நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 116

    நிர்மலா ராகவன்

    நொண்டிச்சாக்கு ஏன்?

    “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை?”

    “என்னை யாருக்குமே பிடிக்கலே!”

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!”

    இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களிலும் நான், என்னை, எனக்கு என்ற வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம். சுய பரிதாபம் மிகுந்தவர்கள் இவர்கள்.

    ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு பார்த்தால் இப்படித்தான் ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பிரச்னைகள்தாம் புரியும். தம் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்களால் பாதிக்கப்படும் பிறருடைய மனப்போக்கைப்பற்றிய கவலை கிடையாது.

    ஒருவர் தம் கண்ணோட்டத்திலிருந்துதான் எதையும் அலசுவதால்தான் இந்தக் கோளாறு எழுகிறது.

    கதை

    ராவ் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். இருந்தாலும், போட்டி மனப்பான்மை அதிகம். பிறரைத் தாழ்த்திப் பேசினால், தான் உயர்ந்துவிட்டதாக எண்ணி அற்ப சந்தோஷம் அடையும் அறிவிலி. யாரைப் பார்த்தாலும், அவர்களுடைய குறை என்று அவர் நினைப்பதைப் பெரிதுபண்ணி, கேலி செய்வார். இதனாலேயே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவரும் இருக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு சற்று நெருங்குபவர்கள் அவரது ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையால் விரைவிலேயே விலகிவிடுவார்கள்.

    தவறு தன்மேல்தான் என்று உணராது, `ஏனோ என்னை யாருக்குமே பிடிப்பதில்லை!’ என்று மறுகுவார்.

    புத்திசாலியோ, முட்டாளோ, மனிதராகப் பிறந்த எவரையும் கவலைகள், துன்பங்கள், விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றோ பட்ட துன்பத்தையும், துயரத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அறிவீனம்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மாது, பார்ப்பவர்களிடமெல்லாம்,“எனக்கு ஒடம்பே முடியலே!” என்று முகமன் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாள். எந்தவித உடற்குறையும் தென்படவில்லை. எல்லாருக்கும் அவளுடைய அந்த வசனம் கேலியாகப் போயிற்று.

    அவள் இறந்தாள் – நாற்பது வருடங்களுக்குப்பின்! அத்தனை காலமும், தனக்காகப் பரிதாபப்பட்டே வாழ்ந்து, மகிழ்ச்சி இல்லாது காலத்தைப் போக்கி இருக்கிறாள்!

    நாம் அனுபவித்த துன்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்கள் முதலில் அனுதாபம் காட்டலாம். அதன்பின், சலிப்படைந்து விலகி விடுவார்கள்.

    நம்மைப் பாதித்தவைகளைப்பற்றியே பேசினாற்போல், வேண்டாத அனுபவங்கள் நீங்கி விடுமா, என்ன?

    கதை

    மூன்று வயதுக் குழந்தை கலா கீழே விழுந்து காலில் சிறு காயம் பட்டுக்கொண்டாள். அம்மா உடனே பிளாஸ்திரி போட்டபோது, அந்த கவனிப்பை `அன்பு’ என்று எண்ணிய வயது அது.

    அன்றையிலிருந்து, அனுதினமும், “இங்கே வலிக்கிறது. பிளாஸ்டர் போடு,” என்று கையையோ, காலையோ காட்டி, நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குத் தேவையே இருக்காது. அது புரிந்து, அவளுடைய தாய், “அதைவிட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு,” என்று முகத்திற்குப் பூசும் பௌடரை அந்த இடத்தில் தூவ, சிறுமி சமாதானமானாள்.

    உறவினர் இல்லங்களுக்குப் போகையில், “இங்கே வலி. அம்மா பிளாஸ்டர் போட மாட்டேங்கறா!” என்று தன்னிரக்கத்துடன் குற்றம் சாட்ட, அம்மா சிரித்தபடி, “ஒங்க வீட்டில சகல ரோக நிவாரணி இருக்கோ?” என்று கேட்பாள். உறவினர் விழிக்க, “பௌடர்!” என்று சிரிப்பாள் மெல்ல.

    சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோர் அளவுக்கு மீறி காட்டும் கரிசனம் பெரியவர்களான பின்னர், பிறரும் தம்மிடம் அப்படியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

    பிறர் நம்மீது காட்டும் பரிதாபம் அன்பல்ல. நோயாலோ, வேறு ஏதாவது இழப்பாலோ பிறர் துயரப்பட்டால்தான் சிலருக்கு அவர்களிடம் அருமையாக நடந்துகொள்ள முடியும்.

    கதை

    சிறு வயதில் அன்பைப் பெறாது, வன்முறை பிரயோகித்த கணவரையும் அடைந்த துர்பாக்கியசாலி நாகலட்சுமி. தான் பெறாததைப் பிறருக்கு கொடுப்பது நடக்கும் காரியமா? அவள் தான் பெற்ற குழந்தைகளிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?

    தான் ஏதாவது சொல்லி, அதன்படி குழந்தைகள் நடக்காவிட்டால், `நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன். ஆனால், யார் நான் சொன்னபடி கேட்கிறீர்கள்?’ என்று பெருமூச்சுடன், தன்மேல் பரிதாபம் எழச் செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்வாள். அக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மட்டும் ஆதரவாக இருப்பாள். அதனால், தாயிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் துன்பப்படுவதுபோல் நடிப்பது வழக்கமாகப் போயிற்று. தம்மையுமறியாது, தாயிடமிருந்தே சுய பரிதாபத்தைக் கற்றார்கள்.

    எனக்குத் தெரிந்த பல முதுமையான பெண்களுக்கு Depression என்கிறார்கள். பிறருடைய மனப்போக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதாலா, இல்லை, தாம் சொல்வதை இளையவர்கள் கேட்க மறுக்கிறார்களே என்ற ஆதங்கமா?

    கதை

    லட்சுமி அம்மாள் தனது எழுபதாவது வயதில் கீழே விழுந்து, சில மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க நேரிட்டது. அதன்பின் கால் குணமாகி, மருத்துவரும், `நீங்கள் பழையபடி நடமாடலாம்,’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

    ஆனாலும், பத்து வருடங்களுக்கு மேலாக `படுக்கையைவிட்டு எழுந்தால் மீண்டும் கீழே விழுந்துவிடுவேன்,’ என்று பிடிவாதமாக இருக்கிறாள் அந்த அம்மாள், எவ்வளவோ சௌகரியங்கள் செய்துகொடுத்த பின்னரும்.

    இப்படி, தான் மட்டுமே முக்கியம் என்றிருப்பவரால் உடன் இருப்பவர்களுக்கு மிகத்தொல்லைதான். ஆனால், பிறரது உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாது, வேண்டாத பயத்துடன் தன்மேலேயே பரிதாபப்பட்டுக்கொண்டு, தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் நெருங்கிய உறவினர்களை மட்டுமா, நிம்மதியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

    சிறு வயதில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தம்மைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயற்கை. இவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ளப் பயந்தவர்களாக இருக்கலாம்.

    வேறு சிலர், முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் குறுக்கு வழியை நாடுவார்கள். இச்சகத்தால் மேலதிகாரியை கைக்குள் போட்டுக்கொள்வார்கள். பிறருக்கு அடிமைபோல் நடந்து, எதிர்பார்த்த அளவு முன்னேற இயலாதுபோக, அதனாலேயே தம்மீது இரக்கம் கொள்வதும் உண்டு.

    பரிதாபத்திற்கு எதிர்மறையான குணம் சுய கௌரவம். இது திமிரோ, கர்வமோ அல்ல. நம்மைப் பிறர் தாழ்த்தும்போது அந்த அவமானத்தைப் பொறுத்துப் போகாத இயல்பு. முன்னேறுவதற்கு இன்றியமையாதது.

    நம் மகிழ்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ பிறரை எதிர்பார்ப்பது வீண். நம் நலனில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? அத்துடன், பிறர் அளிக்கும் அறிவுரையும் வழிகாட்டலும் நம் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

    தன் தோல்விகளுக்கு ஏதாவது நொண்டிச்சாக்கு கூறுவது அற்ப திருப்தியை உண்டாக்குவதால், இவ்வழியை அடிக்கடி கடைப்பிடிக்க வைக்கிறது. ஒரு விதத்தில், இதுவும் போதைதான்.

    `எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், செல்வச் செழிப்பு இதெல்லாம் அமையவில்லை. அதுதான் முன்னுக்கு வரமுடியவில்லை,’ என்று என்றோ நடந்ததையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், எதிர்காலம் செழிப்பாகிவிட முடியுமா? இது கோழைத்தனமன்றி வேறென்ன?

    நாம் அனைவருமே ஏதாவது தருணத்தில், `எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துவிட்டது?’ என்று நம்மீதே இரக்கம் பாராட்டுவோம். அப்போது, `வேண்டாம் இந்த சுய பரிதாபம்!’ என்று ஒதுக்கினால், உடனே அடுத்து வரும் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுகிறோம். (துணிவு இல்லாவிட்டால், கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தையாவது வளர்த்துக்கொள்ளலாம்).

    தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில், நாற்பத்திரண்டு வயதான ஒருவர் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குமுன்னர், ஸ்ட்ரோக் வந்து, மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. பிழைத்ததும், `இனி உடற்பயிற்சி செய்யலாம்,’ என்று மருத்துவர்கள் கூற, இடைவிடாத முயற்சி செய்ய ஆரம்பித்தார். அன்றைய நிஞ்சா (NINJA) நிகழ்ச்சியில், நாலடி தாவி, முப்பதடி சறுக்கு மரத்தில் ஏறிக் குதித்து, என்று பார்ப்பவர்களை அதிரவைக்கும் சாதனைகளைச் சில நிமிடங்களிலேயே செய்து முடித்தார். ஆரோக்கியமாக இருந்த எல்லாரையும் வெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடிந்தது.

    துணிவுடன் எதையும் எதிர்கொண்டால், `வாழ்க்கை என்பது இவ்வளவுதானா!’ என்ற சிரிப்பு எழும். நம்மைப் பார்த்து நாமே சிரிக்கும் முதிர்ச்சியும் ஏற்படும். மேற்கண்டவர்போல், பிறருக்கு நல்ல உதாரணமாக அமையலாம்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 115

    நிர்மலா ராகவன்

    மென்மை பலகீனமா?

    அந்த வகுப்பில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

    “இவன் கவனிக்காது, தப்பு தப்பாகப் பண்ணுகிறான். அடிக்கலாமா?” என்று அவர் வகுப்பை விளையாட்டாகக் கேட்க, “அடியுங்கள், மாஸ்டர்!” என்று எல்லாக் குரல்களும் ஒருங்கே ஒலித்தன. தன் கையால் மாணவனது பிட்டத்தில் பயிற்சியாளர் ஓங்கித் தட்டுவதுதான் தண்டனை.

    டேக் வான் டோ என்ற கொரியா நாட்டுத் தற்காப்புக்கலை போதிக்கும் அந்த இடத்தில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தார்கள்.

    நாளை அவர்களுக்கும் அடி விழலாம். இருந்தாலும், சகமாணவன் ஒருவன் தண்டனை பெறுவதைப் பார்க்கும்போது ஒருவித உற்சாகம்! `நாம் தப்ப வேண்டும்,’ என்ற முனைப்பும் எழும். இந்த மனப்போக்கைதானே பயிற்சியாளரும் எதிர்பார்த்தார்!

    இப்படிப் பல வருடங்கள் பயின்ற மாணவ மாணவிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் பிற உயிர்களிடம் மிக அன்பாக இருப்பதையும், சக மனிதர்களிடம் மரியாதையாகப் பழகுவதையும் கவனித்தேன். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்கள்.

    “உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு அமைதியாக, மென்மையாக இருக்க முடிகிறது?” என்று அப்படிப்பட்ட ஓர் இளைஞனிடம் கேட்டேன்.

    “தற்காப்புக்கலை பயின்றால் ஒருவித அமைதி ஏற்பட்டுவிடுகிறது. தியானம் செய்ததுபோல் இருக்கும்,” என்ற பதில் வந்தது.

    இன்னொருவர் கூறினார்: “குருவைப் பொறுத்துத்தான் எங்கள் குணமும் அமைகிறது. எங்களைப் பயில்வித்தவர் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியை இழக்காதவர். ஆனால், கண்டிப்பானவர். எங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று போதித்திருந்தார்”.

    இவர்கள் அதிர்ந்து பேசுவதும் கிடையாது. அளந்துதான் பேசுவார்கள். மொத்தத்தில், அடி, உதை, குத்து என்று வன்முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மென்மையானவர்களாக இருந்தார்கள். மென்மையில்தான் வலிமையும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்.

    பொதுவாகவே, ஆண்கள் வீரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதென்றால், உரக்கப் பேசுவது, எதற்கும் ஆத்திரப்படுவது என்று என்ற எண்ணம்தான் எவருக்கும். அதை நம்பி, இவர்களிடம் மோதும் ஆண்கள் விரைவில் பயந்து விலகிவிடுவார்கள்.

    உன்னிடமே மென்மை காட்டு

    மனிதர்களிடமோ, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமோ கருணையும் மென்மையும் காட்டுமுன் நம்மிடமே அப்படி நடந்துகொள்ளவேண்டாமா?

    ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும், நம்மேலேயே ஆத்திரமோ, எரிச்சலோ வந்தால், மென்மை எங்கிருந்து வரும்? `நம்மால் இயன்றது இவ்வளவுதான்!’ என்று குறைகளுடன் நம்மை ஏற்றால் அமைதி கிடைக்க, முன்னேறுவது எளிது.

    வன்முறை கண்டிப்பின் அடையாளமா?

    நம் அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒருவர் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய கண்டிப்பு அவசியம்தான். அத்துடன், மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவசியம்.

    பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் `கண்டிப்பு’ என்று எண்ணி, சுடுசொற்களாலும், வன்முறையைப் பிரயோகித்தும் சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயல்வார்கள். ஏனெனில், வன்முறை எளிது. ஆனால், சிறிய தவற்றுக்கும் பொருத்தமில்லாது, மிகக் கடுமையாகத் தண்டிப்பது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும்.

    மைக்கல் ஜாக்சனின் தந்தை அப்படி நடந்துகொண்டதில், சிறு வயதில் அவரைப் பார்த்தவுடனேயே அப்பிரபல பாடகருக்கு வாந்தி வந்துவிடுமாம். தந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போயிற்று. பெரும் செல்வந்தராக இருந்தும், தன் உயிலில் அப்பாவின் பெயரைச் சேர்க்கவில்லை! அவ்வளவு வெறுப்பு!

    மென்மை பெண்களுக்குத்தானா?

    மென்மையாக இருப்பது `மெல்லியலாள்’ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் குணமென்று ஆகிவிட்டது. உண்மையில், ஆணோ, பெண்ணோ, குரலை உயர்த்தாது, அமைதியை இழக்காது பேசுவதே வெற்றியை அளிக்கும். அப்போதுதான் பிறர் தவறு செய்தாலும், ஏன் அப்படி நடக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும்.

    நான் ஒரு மேற்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அது முடியும் தறுவாயில், ஆசிரியை ஒருத்தி என்னிடம், “நீங்கள் soft and gentle,” என்றாள், சற்று பரிதாபப்பட்டவளாய்.

    மென்மையானவர் என்றால் ஏமாந்தவர், பலகீனமானவர் என்றெல்லாம் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புரியாதவர்களிடம் இதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நம் சொற்களும் செயல்களும் மென்மையாக இருந்தால், அவை நம் மன உறுதியை, பிரதிபலிக்கின்றன.

    இது புரியாது, என்னிடம் மோதினார்கள் என் மாணவ மாணவிகள்.

    கதை

    அந்த வகுப்பில் இருந்தவர்களுக்குப் பதினாறு வயதுதான். ஆனால் தம்மைவிட மூத்தவர்களிடம் எதிர்த்துப் பேசுவது, எகத்தாளமாகப் பேசுவது என்ற குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். (இப்படிப்பட்டவர்களை, `பணிப்பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்’ என்போம். பெற்றோரின் சரியான பராமரிப்போ, அன்போ கிடைக்காது, தம்மைப்போன்ற பிறருடன் சேர்ந்துகொண்டு, தமக்கு மேலிருந்தவர்களிடம் மோதுவார்கள்).

    நான் அவர்கள் போக்கைக் கண்டுகொள்ளவில்லை. பாடத்தை மட்டும் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் செய்ததுபோல் கதைகள், நகைச்சுவை எதுவும் கிடையாது.

    ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் போனதும், எல்லாரும் பரமசாதுவாக இருந்தார்கள். சற்று அதிர்ந்தாற்போலவும் இருந்தது.

    “என்ன அதிசயம்! இன்று நீங்கள்கூட ஒழுங்காக இருக்கிறீர்களே!” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை என்னால்.

    எல்லோருடைய தலையும் குனிந்தது. சற்று விழித்தேன் பிறகு அவர்கள் கொட்டம் அடங்கியதன் காரணம் பிடிபட்டது.

    அதற்கு முதலாண்டு நடந்த பள்ளி இறுதிப்பரீட்சையின் முடிவை காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். பௌதிகம், நான் ஒருத்தியே நடத்திய பாடம், அதில் தலைசிறந்ததாக இருந்தது.

    “ஓ! ரிசல்டைப் பார்த்தீர்களா!” என்றேன் கேலியாக.

    தலைகள் இன்னும் குனிந்தன.

    நான் கண்டிப்பாக இருக்கிறேன், நிறைய வேலை வாங்குகிறேன் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு இப்போது புரிந்தது – அது அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்று.

    பெண்ணியம் பேசும் பெண்கள் சண்டை பிடித்தால், ஆண்களுக்குச் சமமான உயர்நிலை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

    மனிதர்கள் மட்டுமென்ன, ஒரு நாட்டின் சட்டங்கள் மென்மையாக இருந்தால்கூட பலரும் அவைகளை மதிப்பதில்லை.

    “இவ்வுலகை மாற்ற மூன்று முக்கியமான குணங்கள் உண்மை, பயமின்மை மற்றும் மென்மை”. (மகாத்மா காந்தி)

    அதாவது, உண்மையை உரைக்க தைரியம் வேண்டும். (அப்போது பிறர் நம்மைப் பார்த்து அஞ்சுவார்கள்!) அந்த உண்மையை உரக்கச் சொல்லவேண்டுவது இல்லை.

    பலரும் இப்படி நடக்க அஞ்சுவது ஏன், தெரியுமா?

    அவர்களுடைய பெற்றோர், `உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்ளாதே!’ என்று சிறு பிராயத்திலேயே எச்சரித்திருப்பார்கள். ஒரு வேளை, தமது கசப்பான அனுபவங்களால், மாறியிருக்கக்கூடும்.

    பெற்றோர் உண்மையே பேசி நடந்தால் குழந்தைகளும், தம்மையும் அறியாமல், அவர்கள் வழி செல்வார்கள்.

    ஆசிரியர்களும் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்தால், மாணவர்கள் பயனடைவார்கள். `அந்த ஆசிரியர் இல்லாவிட்டால், நான் உருப்பட்டிருக்கவே மாட்டேன்!’ என்று எக்காலத்திலும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 114

    நிர்மலா ராகவன்

     

    ஒரு வட்டத்துக்குள்

    சின்னஞ்சிறு குழந்தைகள் சிரித்த முகத்துடன் தென்படுவார்கள். அவர்களைப் பார்த்தாலே நமக்கும் மகிழ்ச்சி பெருகும். அந்த வயதில் மகிழ்ச்சியடைய உணவு, உறக்கம், அன்பு எல்லாமே போதுமானதாக இருக்கிறது. அவர்களுடைய உலகமே அந்தச் சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது.

    பெரியவர்களானதும் அந்தச் சிரிப்பு மறைந்துவிடுகிறது. நீண்ட காலம் ஒரே நிலையில் இருப்பது ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கலாம். ஆனாலும், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்தால், என்னென்ன சவால்களைச் சந்திக்க நேரிடுமோ என்று பயந்து, பலரும் மாற்றமில்லாத வாழ்க்கையில் காலத்தைக் கழிக்கிறார்கள்.

    `செக்குமாடு!’ என்று தம்மையே குறைகூறிக்கொண்டாலும், அதை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. அதைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியும், அது அப்படி ஒன்றும் நிம்மதியைத் தரவில்லை என்று.

    இவர்களுக்குத் தம்மால் பிறரைப்போல் இருக்க முடியவில்லையே என்ற தாபம் ஏற்படக்கூடும். அதை மறைத்துக்கொண்டு, `எனக்கென்ன! சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்!’ என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் ஏதாவது குறை தென்பட்டால், அதைப்பற்றிப் பேசிப் பேசியே தாம் அவர்களைவிட சிறந்துவிட்டதாக நினைப்பதும் உண்டு.

    பொருட்களினால் மகிழ்ச்சியா?

    மகிழ்ச்சி என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

    எப்போதோ ஒரு கதையில் படித்தேன், `அவளுக்குத் திருமணமானதும் சோபா, பாங்கில் பணம், வீட்டில் பளிங்கினால் ஆன தரை எல்லாம் இருந்தன. ஆனால் மகிழ்ச்சி இருக்கவில்லை,’ என்று. இவை மட்டும் போதுமா மனமகிழ?

    வெகு சிலர்தான் உயிரற்ற பொருட்களால் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எத்தனை கிடைத்தாலும், நிறைவடைவதில்லை. இதுவும் ஒருவித மனநோய்தான். (மலேசியாவின் முன்னாள் பிரதமரின் இல்லங்களில் 12,000 வகையான விலையுயர்ந்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன!).

    நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னொரு தடை போட்டி மனப்பான்மை. பிறருடன் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பவர் உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ உணர்வார்.

    கதை

    என் உறவினர் ஒருவர் சில காலம் துபாயில் உத்தியோகம் பார்த்தார். நான் நிரந்தரமாக மலேசியாவில் இருப்பது அவர் கண்களை உறுத்தியது.

    “ஐயே! நீ மலேசியாவில் இருக்கிறாய். அங்கு இந்தியர்கள் வசதி குறைந்தவர்கள். நாங்கள் தினமும் சாயந்திர வேளைகளில் கிளப்பில் கழிப்போம்!” என்றார்.

    “அதனால் என்ன? அங்குள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதற்காகத்தான் நான் இருக்கிறேன்,” என்று அலட்சியமாகப் பதிலளித்தபோது எனக்கு அவர் உள்நோக்கு புரியவில்லை.

    பிறருடன் கலந்து பேசியபோது, ஒரு வார்த்தை அடிபட்டது: `போட்டி!’

    அவர் என்னைவிட செல்வந்தராக இருக்கலாம். ஆனால், தான் தான் சந்திக்கும் பலரையும்விட ஏதோ வகையில் உயர்ந்தவன் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவை அவருக்கிருக்கிறது.

    இம்மாதிரி எப்போதும் பலருடனும் போட்டி போட்டுக்கொண்டு, தாம் அமைத்துக்கொண்ட வட்டத்திலேயே சுழலுபவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்களைப் பார்த்துப் பிறர் பொறாமைப்பட்டால்தான்!

    `உயர் பதவியில் இருக்கிறேன். எல்லாரும் என்னை மதிக்கிறார்கள்!’ என்று பெருமிதம் கொள்பவர்கள் பதவி போனதும், அத்துடன் தம் பெருமையையும் மகிழ்ச்சியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

    புதிதாக ஆரம்பி

    `இது என்ன வாழ்க்கை! தினமும் காலையில் எழுந்து, சமைத்து, சாப்பிட்டு, தூங்கி என்று ஒரேமாதிரியாக இருக்கிறது!’ என்று சிலர் சலிப்புடன் பேசுவார்கள்.

    செய்த காரியத்தையே செய்துகொண்டு, அதில் வெற்றி கண்டாலும்கூட, புதிதாக எதையாவது புதிதாகக் கற்பது மனத்திற்கு உற்சாகமூட்டும்.

    இலக்கு எதுவுமில்லாது, ஒரு குறுகிய வட்டத்துள் சுழலும் வாழ்க்கையால் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதை மாற்றி, மறைந்த உற்சாகத்தை மீண்டும் பெற புதிதாக ஏதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.

    `புதிதாக ஆரம்பிப்பதா! அதில் வெற்றி கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?’ என்ற அயர்ச்சியை முதலில் வெல்ல வேண்டுவது அவசியம்.

    `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால், நம் திறமையை நாமே சந்தேகிப்பது போல் ஆகிவிடும். பலவற்றிலும் துணிந்து ஈடுபட்டால், நமக்கேற்ற ஏதாவது ஒன்று தட்டுப்படாதா! பயந்துகொண்டே இருந்தால், `சமயம் கிடைத்தபோது, அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!’ என்ற குறை எதற்கு?

    சவாலே, சமாளி

    சவால்கள்தாம் நம்மை நல்லவிதமாக மாற்றக்கூடியவை. ஆனால் யார் சவால் விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    (இளவயதினர் மகிழ்ச்சியைத் தேடி, மது, போதை என்று நாடுவது அவர்களுக்குத் தக்க இலக்கு இல்லாத காரணத்தால்தான். கூடாத சேர்க்கையால், `உனக்குத் தைரியம் இல்லையே!’ என்று அவர்கள் செய்யும் கேலியைச் சவாலாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம். அது அழிவுப் பாதைக்குத்தான் வழி).

    உடற்பயிற்சி, நீச்சல், கடுமையான விளையாட்டு என்று எதை எடுத்துக்கொண்டாலும், உடல்வலியைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தாலும், அதையே சவாலாக ஏற்றால், சிறிது நாட்களுக்குப்பின் நல்ல பலன் கிடைக்கும். `நானா சாதித்தேன்!’ என்று பெருமகிழ்வு உண்டாகும்.

    கதை

    பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருந்த நாட்டியப் பட்டறை, அதைத் தொடர்ந்து நாட்டிய வகுப்பு, இரவில் ஒரு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி என்று ஓய்வில்லாமல் ஒரு நாள் முழுவதும் அலைந்திருந்தாள் அப்பெண். இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்ப முடிந்தது. `உடலெல்லாம் ஒரே வலி!‘ என்று மறுநாள் காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியாது முனகினாள்

    `நேற்று ஆடியவர்களுக்குப் பயிற்சி காலத்தில் உடல் வலி இல்லாமல் இருந்திருக்குமா?’ என்று தாய் கேட்டபோது, மேலே எதுவும் பேசாது, நமட்டுச்சிரிப்புடன் எழுந்தாள்.

    கற்பனையும் சிறு வட்டமும்

    கற்பனைத்திறனுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பாதுகாப்பு உணர்வு.

    ஒரு வரி எழுதுவதற்குள், `இப்படி எழுதினால், அம்மா கோபிப்பார்களோ, படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்றெல்லாம் எழுத்தாளர்களுக்கு யோசனை எழுந்தால், எழுத்தில் என்ன சுவை இருக்கும்?

    நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்மைப்பற்றி அவதூறாகப் பேச நான்குபேர் இருக்கத்தான் போகிறார்கள். அவர்கள் வாயை மெல்லவும் ஏதாவது வேண்டாமா, பாவம்! பாதுகாப்பான வட்டத்திலிருந்து வெளியே வந்து, சும்மா எழுதிப்பாருங்கள்!

    ஒரு நாள் காலை கண்விழித்ததும், `இன்று என்ன செய்ய வேண்டும்?’ என்று நிர்ணயித்துக்கொண்டு, இரவு தூங்குமுன் நினைத்ததை ஓரளவாவது நிறைவேற்றிவிட்ட திருப்தி எழுந்தால், மகிழ்ச்சி அடையலாம். சிறுகச் சிறுக நம் வட்டம் பெரிதாக, வெற்றியும் உறுதி.

    வெற்றி என்பது இறுதிக்கட்டம் இல்லை. நம் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும் முயற்சிதான். அது தொடர்ந்துகொண்டே இருக்க, வட்டமும் பெரிதாகும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 113

    நிர்மலா ராகவன்

     

    போலிப்பணிவும் அகந்தையே

    “மத்தவங்களுக்குக் கெட்டது செய்யறவங்களைத் தட்டிக்கேட்டா, நம்மை ரௌடிம்பாங்க!”

    அண்மையில் வெளியான காலா படத்தில் ரஜினி இப்பொருள்பட ஒரு வசனத்தைப் பேசியிருப்பார்.

    `பணிவு’ என்றால், எந்த அநியாயத்திற்கும் அடங்கிப்போவதென்பதில்லை. தலைவனுக்கு அவசியமாக இருக்கவேண்டிய குணம் இது. இப்படிப்பட்ட தலைவனுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம். தன் கீழிருப்பவர்களுக்கு எது நல்லது என்பதையே சொல்பவன். சொன்னபடி செய்யவும் செய்வான்.

    இவ்வுலகில் அகந்தை கொண்டவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். தமக்குத் தொண்டு செய்வதற்குத்தான் பிறர் இருக்கிறார்கள், `அவர்கள் எப்படிப் போனால் என்ன!’ என்பதுபோல் எண்ணம் கொண்டு நடப்பார்கள்.

    இவர்கள் தம் புகழைப் பாடுவதைக் கேட்டு மயங்குபவர்கள் இவரைப் பின்பற்றினால், தாமும் முன்னேறலாம் என்று கணக்குப்போட்டு நடக்கும் சுயநலவாதிகள்.

    இத்தகைய தலைவர் ஒருவரின் ஆணைப்படி நடக்கையில் எங்காவது தவறு நேர்ந்தால், பழியை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிடுவார். இவருடைய ஆயுதம் ஆத்திரம். சிறிய தவறு நேர்ந்தாலும், எல்லாரும் தன்னை வதைப்பதுபோல் நாடகமாடுவார். இது வீரமல்ல. கோழைத்தனம்.

    ஒரு தலைவருக்கு அதிகாரம் செய்ய மட்டும் தெரிந்தால் போதுமா? பொறுப்பை ஏற்கவேண்டாம்?

    கதை

    எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்தாள் தலைமை ஆசிரியை ஜரீனா. அவளுக்கு அப்பதவி கிடைத்தது கணவர் கல்வி இலாகாவில் அதிகாரியாக இருந்ததால்.

    தன் கீழிருந்த ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் ஓயாது விரட்டுவாள் ஜரீனா. தினமும் காலை பள்ளியில் நுழையும்போதே யாருக்காவது அர்ச்சனை நடக்கும். அவள் சிரித்தோ, சமாதானமாகப் பேசியோ யாரும் கேட்டதில்லை.

    பள்ளியில் ஆண்டுவிழா நடந்தபோது, “ஒலிபெருக்கியில் கேட்பது யாருடைய குரல்?” என்று பக்கத்திலிருந்த என் சக ஆசிரியரிடம் கேட்டேன்.

    அவர் நம்பமுடியாது என்னைப் பார்த்தார்.

    நான் திரும்பக் கேட்டதும், “ஜரீனாதான் பேசுகிறாள்,” என்றார், `இதென்ன கேள்வி!’ என்ற முகபாவத்துடன்.

    “அவள் ஆத்திரத்துடன் இரைந்தே கேட்டிருப்பதால், இயல்பான குரலைப் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று நான் உண்மையைக் கூற, அவர் சிரித்தார்.

    அவளுடைய அதிகாரப்போக்கை ஒருவராலும் சமாளிக்க முடிந்ததில்லை. குரல் மாற, அலறுவாள். ஆண்கள் கூனிக்குறுகிப் போவார்கள். (ஆத்திரத்துடன் பேசும்போது ஒருவரது குரல் மாறினால், அவருக்கு மனநிலை சரியாக இல்லை என்று அர்த்தமாம்).

    அந்நிகழ்ச்சி முழுவதும் அவள் சிரித்த முகமாக இருந்தது மற்றுமொரு அதிசயமான காட்சி. அவளைவிடப் பெரிய பதவியிலிருந்தவர்கள் விருந்தினர்களாக வந்திருந்தனரே! தான் எவ்வளவு இனிமையானவள் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா!

    ஜரீனா காட்டியது போலிப்பணிவு. அகந்தை இல்லாமலா எவரும் பொறுக்க முடியாதபடி அப்படி விரட்டினாள்!

    இக்குணத்தை அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்களிடம் ஒரு சிறிய அளவில் காணலாம்.

    கதை

    மூன்று அண்ணன்களுக்குப்பின் பிறந்த கடைக்குட்டி என்பதால் மங்களம் செல்லமாக வளர்ந்தாள். அவளுடைய மூத்த அண்ணனின் கல்யாணத்தை விசாரிக்கப் போயிருந்தோம்.

    “என் புடவை ரொம்ப சிம்பிள்!” என்றபடி உள்ளே போய் அதை எடுத்துவந்து காட்டினாள்.

    ஒரு முழ சரிகை!

    “இது சிம்பிளாம், பாரேன்!” என்று என் தாய் அப்பாவித்தனமாக வியக்க, எனக்கு எரிச்சலாக இருந்தது. எதுவும் சொல்லாமல் அப்புடவையைக் காட்டியிருந்தால், நான் வியந்திருப்பேன். இப்போது பிரமிக்கத் தோன்றவில்லை.

    அடக்கமாவது! தன் தற்பெருமையை வெளிக்காட்டிக்கொண்டாள் அந்த நடத்தையால். பணிவைக் காட்டுவதுபோல் நடப்பதும் ஒருவித கர்வம்தான்.

    அரசியலும் சமூக சேவையும்

    அரசியலில் அப்போதுதான் நுழைந்திருந்த ஒரு பெண்மணி சமூக சேவை ஆற்றிக்கொண்டிருந்தவள். இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியுமே என்று அரசியலுக்கு வந்திருந்ததாகக் கூறினாள். விரைவிலேயே அவளுக்கு இரண்டு துறைகளுக்குமிடையே இருந்த வித்தியாசம் புலப்படாமல் போகவில்லை.

    “சமூக சேவையில் பிறருக்காக உழைப்போம். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்போது திருப்தி கிடைக்கும். உயர்வு தாழ்வின்றி எல்லாரையும் மதிப்போம். அரசியலிலோ தலைகீழாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள்.

    “அரசியலில் எங்களுக்கு ஒரே எண்ணம்தான் எப்போதும். வோட்டு, வோட்டு!” இதை என்னிடம் பகிர்ந்துகொண்டவள் ஆளுங்கட்சியில் ஒரு பகுதியின் தலைவியாக இருந்தவள்.

    இப்படிப்பட்டவர்கள் எத்தனை காலம்தான் பெரிய பதவியில் நிலைக்க முடியும்? பதவி பறிபோனதும், இப்படிப்பட்டவர்களின் உலகமே இருண்டுபோகிறது. முகத்தில் சிரிப்பு மறைந்துவிடுகிறது.

    மீண்டும் என் தலைமை ஆசிரியை ஜரீனாவின் கதைக்கு வருவோம்.

    நான் மேற்பயிற்சிக்காக ஓராண்டு வேறிடத்திற்குச் சென்றபோது, தலைமை ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப்பற்றிக் கற்றேன். அப்போதுதான் ஜரீனாவின் நடத்தை எவ்வளவு தவறானது என்று புரிந்தது.

    `அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பலருக்கு மன நிலை சரியாக இல்லை!’ என்று ஒரு தகவல் அச்சமயத்தில் வெளியாகியது. ஜரீனா செய்ததையெல்லாம் நான் நீண்ட ஒரு கடிதத்தில் எழுதியது ஆங்கில தினசரியில் வெளியாகி, பரபரப்பை உண்டாக்கியது.

    மேலிடத்தில் அவளை வறுத்தெடுத்திருக்க வேண்டும். மீண்டும் நான் பள்ளிக்கு வந்தபோது, என்னைப் பார்த்து நடுங்கினாள். எனக்கு அவள்மேல் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் எழுந்தது.

    இறுதியில் அவள் சிறியதொரு பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் தன் அறையைவிட்டே வெளிவருவதில்லை என்று கேள்வி. தகுதி இல்லாதவர்களுக்கு உயர்பதவி கிடைத்தால் இந்த கதிதான்.

    பணிவது இழிவில்லையா?

    `பணிவு’ என்றால் நம்மை நாமே இழிவாக நினைப்பதில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நம்மை மட்டமாக நடத்த முனைபவர்கள் முட்டாள்கள்.

    நம்மைப்பற்றிய சிந்தனையோடு நின்றுவிடாது, அத்துடன், பிறரைப்பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும், அவர்களுக்கு எந்தவிதமாகவாவது உதவ முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.

    எந்த வேலை செய்தாலும், பிறரும் மனிதர்கள்தாம் என்ற எண்ணம் பலரையும் ஈர்க்கும் சக்தி உடையது.

    இக்குணத்தைச் சிறுபிராயத்திலிருந்தே பழக்கலாம். ஒரு குழந்தை கடைக்காரரிடமிருந்து மிட்டாய் பெற்றுக்கொண்டால், `நன்றி சொல்லும்மா!’ என்று கனிவுடன் பழக்குவது அம்மாவின் கடமை. அதைவிட்டு, `அம்மாதான் காசு கொடுக்கிறாளே! இதற்கு எதற்காக நன்றி சொல்ல வேண்டும்?’ என்ற குழந்தையின் இயல்பான அலட்சியப்போக்கு மமதையில் கொண்டுவிடும்.

    பெரியவளானபின்பும், `ஏய்! அதைக் காட்டு!’ என்று ஒரு பொருளைச் சுட்டி, மிரட்டுவதுபோல் அதிகாரம் செய்தால், சொல்பவர் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். கடைக்காரர் அக்குரலைக் காதில் வாங்காததுபோல் இருப்பார், இல்லையேல், விலையை உயர்த்துவார். `குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்படி ஆகிவிட்டதே!’ என்று அவர்களே நொந்திருப்பார்கள். அவர்கள் மனம் நோகும்படி வாடிக்கையாளர்களும் அவமரியாதையாகப் பேசினால்?

    “பணிவு நல்லொழுக்கத்தின் அடித்தளம்!” (சீன தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ், CONFUCIUS).

    கதை

    நாட்டிய நிகழ்ச்சிக்குப் பாட ஒரு பாடகரை ஏற்பாடு செய்து, பயிற்சி நடந்துகொண்டிருந்தது.

    ஆசிரியையின் மகள், அரைகுறையாக இசை பயின்றிருந்தாள். தாளம்கூட சரியாக நிற்காது. தன்னைவிட்டு, வேறொருவரைப் பாட தாய் ஏற்பாடு செய்துவிட்டார்களே என்ற ஆத்திரம் அவளுக்கு.

    பாடகரைக் கண்டபடி ஏசுவாள். அவருக்கோ இசைதான் ஜீவனம். எல்லா அவமரியாதையையும் பொறுத்துப்போனார்.

    “அவர் வயசிலே பெரியவர். இப்படியெல்லாம் நீ திட்டக்கூடாது,” என்று அம்மா அதிருப்தி தெரிவித்தாள்.

    “நாம்தான் காசு கொடுக்கிறோமே!” என்று திமிராகப் பதில் வந்ததாம். (அந்தத் தாயே என்னிடம் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்ட சமாசாரம்.

    நம் கை உயர்ந்திருக்கும்போது அகம்பாவம். பிறரிடமிருந்து எதையாவது பெறுகையில் கை தாழ்ந்திருக்கும். இதுவா பணிவு?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 112

    நிர்மலா ராகவன்

     

    பொறுப்பே கிடையாது

    இரண்டே வயதான குழந்தை வாசலிலிருந்த மண்ணைத் தன் தலையில் வாரிப் போட்டுக்கொண்டாள்.

    “அம்மா திட்டமாட்டா?” என்று தன்னைவிடச் சற்றே பெரியவளாக இருந்த அக்காளிடம் முன்னெச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டாள்.

    “திட்டினா, திட்டட்டுமே!” என்று தைரியம் வழங்கப்பட்டது.

    உள்ளே ஏதோ வேலையாக இருந்த தாய் ஓடோடி வந்தாள். அதற்குள் காரியம் கெட்டுவிட்டது.

    “இவதான் சொல்லிக் குடுத்தா!” என்று அக்காளின் பக்கம் கையை நீட்டினாள் குழந்தை. தான் செய்யப்போகும் காரியம் தப்பு என்று தெரிந்தே செய்துவிட்டு, பழியை இன்னொருவர்மேல் சுமத்தினால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று சிறுபிராயத்திலிருந்தே தெரிந்துவிடுகிறது.

    விவரமறியாத அந்தச் சிறு குழந்தையை அடிக்கவோ, திட்டவோ பெற்றவளுக்கு மனம் வரவில்லை. பெரியவளைக் கண்டித்தாள்.

    “நான் ஒண்ணுமே பண்ணலே!” என்று அவளும் வாதாடினாள், இடுப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டு, மனோரமா ஸ்டைலில். “என்னைப்போய் திட்டறியே!”

    சகோதரிகள் ஒற்றுமையாக இருந்து, எனக்கு எதிராகச் செயல்பட்டதை இப்போது நினைவுகூர்ந்தால் சிரிக்கிறார்கள்.

    இன்னொரு முறையும் அப்படி ஏதோ `செய்யக்கூடாத’ விஷமம் செய்த சிறியவளைக் கண்டித்தபோது, அதே சாக்குதான். அக்காளின் பக்கம் கையை நீட்டினாள்.

    “அவ சொல்லிக்குடுத்தா, நீ ஏன் கத்துக்கறே?” என்று, சிரிப்பை அடக்கியபடி நான் கேட்டதற்குப் பதில் இல்லை. விழித்தாள்.

    நான்கு வயதில் அச்சிறுமியிடம் கொஞ்சம் காசைக் கொடுத்து, “எதிர்க்கடையில் பிஸ்கோத்து வாங்குக்கோ. சாக்லேட் கூடாது. பல் கெட்டுப்போயிடும்,” என்று சொல்லி அனுப்பினேன்.

    சிறிது நேரத்தில் கையில் சாக்லேட்டுடன் வந்தாள், முகத்தைக் கோணிக்கொண்டு. “நான் பிஸ்கேட்தான் .கேட்டேன். அவன் என்னமோ சாக்லேட் குடுத்துட்டான்,” என்ற சாக்கு வேறு!

    (பொய் சொல்வது தவறு என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் முகம் மாறியிருந்தது).

    “பொய் சொல்லாதேடி, கழுதை!” என்று திட்டினேன்.

    அந்த வயதில் கண்டிக்காது விட்டுவிட்டால், அதே நடத்தை பிற்காலத்திலும் தொடரும்.

    ஆசிரியரிடம், `என் வீட்டுப்பாடத்தை எங்கள் வீட்டு நாய் கடித்துவிட்டது!’ `அலாரம் அடிக்கவில்லை. அதனால் நெடுநேரம் தூங்கிவிட்டேன்,’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்வது இதனால்தான்.

    அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சாதித்தால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது என்று பலரும் நம்புகிறார்கள். நண்பர்களுடன் கும்மாளமடித்துவிட்டு, `நேத்திக்கு ஆபீசில ஒரே வேலை! அந்த மானேஜர் மீட்டிங் வேற வெச்சுட்டான்!’ என்று மனைவியை (அடிக்கடி) நம்பவைக்கும் கணவன்மார்களும் இதில் சேர்த்தி.

    தம்பதிகளும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஒருவரையொருவரைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு.

    “அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். ஒனக்கு இருக்கு!” என்று குழந்தையை மிரட்டுவாள் தாய்.

    மகனின் நடத்தையில் திருப்தி இல்லாத தந்தையோ, “நீ ஒன் மகனை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்!” என்றுவிடுவார், தனக்கு அவன் விஷயத்தில் சம்பந்தமே இல்லாததுபோல்!

    அரசியல்வாதிகளும் பொறுப்பும்

    பதவிக்கு, அதனால் கிடைக்கும் அதிகாரத்திற்கு, பலரும் ஆசைப்படுகிறார்கள். என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

    தேர்தலில் தங்கள் கட்சி தோற்றபின், அதற்குமுன் எதிர்க்கட்சியாக இருந்த ஆளுங்கட்சி இவர்கள் செய்த அட்டூழியத்தைத் தட்டிக்கேட்கும்போது, `எனக்கு மேலே இருந்தவர்களின் ஆணைப்படிதான் நடந்துகொண்டேன்!’ என்று அரசியல்வாதிகள் சாதிப்பார்கள்.

    நடப்பது சட்ட விரோதம் என்று புரிந்தும், அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்களும் இதையே சொல்லி, தம்மேல் எந்தக் குற்றமும் கிடையாது என்பார்கள்.

    `நான் செய்தது தவறு,’ என்று ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது? தாம் செய்த செயலுக்குப் பிறர்மேல் பழியைச் சுமத்துகிறவர்கள் இவர்கள். `பொறுப்பு’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியாதவர்கள்.

    அண்மையில் மலேசியாவில் தேர்தல் நடந்து முடிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1957-ல் சுதந்திரம் அடைந்திருந்திருந்த நாடு இது.

    `அரசியல்வாதிகள் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்குத்தான் வசதிகள் தாராளமாக இருக்கிறதே!’ என்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலும் விட்டேற்றியாக இருந்தனர் குடிமக்கள். விலைவாசி கண்டபடி எகிறியபோதுதான் விழித்துக்கொண்டார்கள். தம் பொறுப்பு என்னவென்று அவர்களுக்குப் பிடிபட்டது.

    ஆளுங்கட்சியில் லஞ்சம், இன்னும் என்னென்னவோ ஊழல் என்று இணையத்தில் விரிவாக வந்தது. ஆளுங்கட்சியினரின் அளப்பரிய சொத்து (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்), பங்களா எல்லாம் நம் பணம் என்று எல்லாரும் கொதித்தெழ, அக்கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அது மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூவினத்தோரையும் இணைத்த கட்சி. இப்போது அனேகமாக அனைவரும் இணைந்து அதை எதிர்த்தார்கள்.

    பிரதம மந்திரியின் மனைவி ஐந்நூறு கைப்பைகள் வைத்திருந்தாள்; ஒவ்வொன்றின் விலையும் பல லட்சம் (தங்கம், வைரம் பதித்தது), அவைகளுக்குள் பல கோடி உள்நாட்டு, அயல்நாட்டு நாணயம் இருந்தன என்றெல்லாம் தினசரிகள் அம்பலப்படுத்தியபோது, `நல்லவேளை, நாம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே!’ என்ற நிறைவு மக்களுக்கு எழுந்தது.

    `புதிய மலேசியா’ என்று இப்போது வர்ணிக்கப்படும் நாடு ஒரு தேர்தலால் மாறியது விந்தையல்ல. இதுவரை ஓட்டிச்சாவடி பக்கமே போகாதவர்கள்கூட தம் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டதன் நல்விளைவு இது.

    நாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, வீட்டுத் தலைவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அவசியம் தேவை.

    `பெரியவர்கள் சொல்வதை அப்படியே இம்மிபிசகாமல் கடைப்பிடிக்கவேண்டும்!’ என்பதுபோல் நடக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் சுய சிந்தனையைப் பறிக்கிறார்கள்.

    `நாம்தான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்துவிட்டோம். நம் குழந்தைகளும் அப்படி நடக்காது பாதுகாக்கிறோம்!’ என்று அவர்கள் எண்ணமிடலாம். ஆனால், இம்மாதிரி வளர்க்கப்பட்டவர்கள் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் தம் மனம்போனபடி நடப்பார்கள். தம் செயல்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.

    கதை

    பல தீய பழக்கங்கள் கொண்ட ஒரு பெரியவர் என்னிடம் சிரித்தபடி கூறினார், “எங்கம்மா செல்லம் குடுத்து என்னைக் கெடுத்துட்டா! எட்டு வயசுவரைக்கும் என்னை இடுப்பிலே தூக்கி வெச்சுப்போ! அப்பா என்னைத் திட்டவே விடலே!’

    பிற்காலத்தில் அவரது குடும்பம் நிர்க்கதியாகப் போயிற்று. அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. குற்ற உணர்ச்சியும் கிடையாது. ஏனெனில் தன் சுகமே பெரிது என்று நினைக்கும்படி வளர்க்கப்பட்டிருந்தார். அவர் பெற்ற தண்டனை: அவர் மரணத்தைத் தழுவியபோது, உண்மையாகத் துக்கப்பட்டவர்கள் எவருமில்லை.

    தான் செய்தது தவறாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்க ஒரு தலைவன் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் நினைத்ததைச் சாதிக்க இயலும். பிறரும் அவனை நம்புவர்.

    உன் வெற்றி-தோல்விக்கு நீயே பொறுப்பு

    `தோல்வி என்றால் அவமானம்!’ என்று பயந்து, எதுவுமே செய்யாதிருப்பதைவிட தவறு செய்து அதிலிருந்து கற்பது மேல்.

    வெற்றியை நோக்கி நடக்கும்பொது, அவர்களை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்த பிறரை எதிர்பாராது, தம் செயலுக்குத் தாமே பொறுப்பேற்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படியே தவறு நேர்ந்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும்.

    கடுமையாக உழைத்தாலும், தான்தோன்றித்தனமாக நடப்பது சராசரி மனிதனின் குணம். ஆடம்பரமாக நடந்து, பார்ப்பவரை பிரமிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு மகிழ்ச்சி நிலைக்காது.

    கதை

    ஒரு தனியார் நிறுவனத்தின் மேலதிகாரியாக இருந்த நடராஜன், `இதுவரை ஏழ்மையில் உழன்றது போதும்,’ என்று நினைத்தவர்போல், ஆடம்பரச் செலவுகள் செய்தார். மனைவியுடன் அடிக்கடி சொந்தக் காரில் சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. `மாதம் பிறந்தால், சம்பளம் வந்துவிட்டுப்போகிறது!’ என்று மெத்தனமாக இருந்ததில், சேமிப்பு அறவே கிடையாது.

    நாற்பது வயதுக்குள் அவர் மரணம் எய்த, குடும்பம் நிர்க்கதியாக ஆனது. மனைவிக்கோ அதிகக் கல்வி கிடையாது. மூன்று குழந்தைகளும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. எதிர்பாராத தாக்கத்தால் எல்லாருக்குமே மன உளைச்சல் ஏற்பட்டது. உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.

    `குடும்பத் தலைவர்’ என்ற பொறுப்புடன் நடராஜன் நடந்துகொண்டிருந்து, `நாளை நடப்பதை யாரறிவார்!’ என்று சிறிதாவது சேமித்திருந்தால், அவருக்குப்பின் அவரது குடும்பம் திண்டாடி இருக்குமா?

    “வாழ்க்கைக்கு அன்பும் உழைப்பும் மட்டும் போதாது. பொறுப்பும் அவசியம் இருக்கவேண்டும்”. (உளவியல் நிபுணர் ஃபிராய்ட் (FREUD))

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 111

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது?

    மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது.

    கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது.

    எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்: நான் எதிர்பார்த்ததிற்கு மேலேயே என் படைப்பு வெற்றி பெற்றால்.

    இவர்கள் எல்லோருடைய பதில்களிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அனைவருமே கடுமையாக உழைத்துப் பெற்ற வெற்றியால்தான் மகிழ்வடைகிறார்கள்.

    மாணவரை எடுத்துக்கொண்டால், குருட்டாம்போக்கில் எவரும் பரீட்சைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியாது. எத்தனை நேரம் படித்திருக்க வேண்டும்!

    இரண்டு அல்லது மூன்று மணிநேர கலைநிகழ்ச்சிக்காக ஒருவர் வருடக்கணக்கில் பயிற்சி பெறவேண்டுமே!

    வாசகர் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கும் கதையை எழுத ஒரு எழுத்தாளர் ஆராய்ச்சி செய்திருப்பார், நிறைய சிந்தித்திருப்பார். அத்துடன், அதை எழுத நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருப்பார்!

    ஆனால், வெற்றி பெறுகையில், பட்ட கஷ்டங்களும் செலவிட்ட நேரமும் பெரிதாகப்படுவதில்லை. பொறுக்க முடியாதவைகளையும் அனுசரித்துப்போனால்தான் நன்மையோ, வெற்றியோ கிடைக்கும்போது திருப்தியுடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    வாழ்வில் பிரச்னைகளே இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே தொடர்ந்து வரவேண்டும் என்றால் நடக்கிற காரியமா? பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் முதிர்ச்சி இருக்கிறது.

    சிந்திப்பதும் பேசுவதும்

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள், ஆண்கள் தமக்குத் தெரிந்ததைப்பற்றிப் பேசவே பிரியப்படுகிறார்கள் என்று கூறுவதுண்டு.

    `பிடித்தது’ என்றால் அதில் வேண்டாத விஷயமும் இருக்கும். ஓயாமல் தொல்லை கொடுக்கும் மாமியார், எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிக்கும் மேலதிகாரி அல்லது கணவன் – இப்படி யார் தலையையாவது உருட்டிக்கொண்டிருப்பார்கள்.

    நமக்குப் பிடிக்காத உத்தியோகமோ, வாழ்க்கைத்துணையோ அமைந்துவிட்டால், அதையே எண்ணிக் குமைவதால் என்ன பலன்? `அப்படிச்செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதால் நடந்ததை மாற்ற முடியுமா, என்ன!

    நான் விளையாட்டுப் பொம்மையா?

    யாரோ நம்மை இழிவாகப் பேசினால்கூட ஆத்திரம் எழுகிறது. ஒரு நிமிடம் ஆத்திரப்பட்டால், அறுபது வினாடிகள் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். இதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்! பொம்மைக்குச் சாவி கொடுப்பதுபோல் பிறர் நம்மை ஆட்டுவிக்க நாமே ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்? ஒருவரது மகிழ்ச்சியைப் பறிக்க நினைப்பவர் தம்மால் அப்படி மகிழ முடியவில்லையே என்று ஏங்குபவராக இருக்கலாம் என்று புரிந்து, அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

    நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைப்பற்றிச் சிந்திக்கும்போதும், பேசும்போதும் நம் முகம் எப்படி இருக்கும்? அவர்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிடுசிடுக்கிறோம். முகத்தில் மலர்ச்சி எப்படி வரும்?

    கதை

    இரண்டு வயதுக் குழந்தை கௌதம் கீழே விழ, நெற்றியில் காயம் பட்டு, வீங்கிவிட்டது. நான் பரிவுடன் அவன் கன்னத்தைத் தடவினேன். அப்போதுதான் வலி அவனுக்கு உறைக்க, “இந்தப் பாட்டிதான் அடிச்சா!” என்று என்மேல் குற்றம் சாட்டிவிட்டு அழுதான். சிறிது பொறுத்து, “பாட்டி அடி, அடின்னு அடிச்சா! வலி!” என்றான். பிறகு அதுவே மூன்று முறை நான் அடித்ததாக ஆக, அழுகை பலத்தது.

    ஒரு பிரச்னையைப்பற்றி இடைவிடாமல் பேசினால், இப்படித்தான் பூதாகாரமாக உருவெடுத்துவிடும். `எனக்குச் சந்தோஷமே இல்லை!’ என்பது இதனால்தான். மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பி, வேண்டாத எண்ணங்களையும் நடைமுறையையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது வீண்.

    நல்லது செய்தால் மகிழ்ச்சி

    ஒரு முறை, நான் இரண்டு வெள்ளி டிக்கட்டுக்கு பத்து வெள்ளியை அளிக்க, பேருந்து ஓட்டுநர் பாக்கிப் பணத்தைக் கூடுதலாக கொடுத்துவிட்டு, முன்னால் போய்விட்டார். சிறிது பொறுத்துத்தான் கவனித்தேன். நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். நின்றுகொண்டிருந்த என் மகளிடம், அவரிடமிருந்து தவறாகப் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கூறினேன். பலரையும் தள்ளிக்கொண்டு போக அவள் தயங்கினாள். “அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லு,” என்று அனுப்பினேன். நான் கடைசியாக இறங்கும்போது, அந்த மனிதர் என்னைப் பார்த்து நன்றியுடன், மகிழ்ந்து சிரித்தார். நான் கொடுத்திருக்காவிட்டால், அவர் கைப்பணத்தைப்போட்டு ஈடுகட்டி இருக்க நேரிட்டிருக்கும்.

    சிறு சமாசாரம்தான். ஆனாலும், ஒருவரை மகிழ்வித்த மகிழ்ச்சி என் மனதில் நிலைத்திருக்கிறது.

    மனமுவந்து பாராட்டுங்கள்!

    ஒரு மருத்துவசாலையில் வேலைபார்த்த இளம்பெண், `குறைந்த சம்பளத்தில் ஓயாத வேலை!’ என்று சிடுசிடுப்பாக இருப்பாள்.

    `சரியான சிடுமூஞ்சி!’ என்று எவர்மீதாவது குற்றம் கண்டுபிடிப்பதால் நாம் உயர்ந்துவிடுவதில்லை. தகுதியான பாராட்டுக்குத்தான் ஒருவரை மகிழ்விக்கும் சக்தி உண்டு.

    ஒரு முறை, தான் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை எண்ணும்போது, அவள் கை இயந்திரகதியில் வேலை செய்ததைப் பார்த்து நான், “ஐ..யோ! என்ன வேகம்!” என்று வியந்தேன்.

    சட்டென தலை நிமிர்ந்து, “பழகிப்போச்சு!” என்றாள். முகம் புன்னகையில் மலர்ந்தது. (`ஏன் இந்த சிடுசிடுப்பு? கொஞ்சம் சிரியேன்!’ என்றால் அவள் முகம் மலர்ந்திருக்குமா?)

    முக மலர்ச்சியும் அழகும்

    ஒருவரது கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றனவோ, இல்லையோ, முகத்தில் மலர்ச்சி இருந்தால், முகம் அழகாகத் தென்படும். எவ்வளவுதான் அலங்காரம் செய்துகொண்டாலும், சுயநலம் கொண்டவர்களாக இருப்பவர்கள், அல்லது தெரிந்தே பிறருக்கு இன்னல் விளைவிப்பவர்கள் போன்றவர்கள் பிறர் கண்களுக்கு அழகாகத் தென்படமாட்டார்கள்.

    நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

    வெளிநாட்டுப் பூங்கா ஒன்றில் மரத்தின்கீழ் ஒரே குப்பையாக இருந்தது. உடன் வந்திருந்த என் மகள் முகத்தைச் சுளிக்க, “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்றேன்.

    மரக்கிளைகளில் கண்கவரும் மலர்கள்!

    குப்பையா, மலர்களா? எதைக் கவனித்தால் மனம் மகிழும்?

    மரம் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படித்தான். நம்மை வாட்டும் ஒருவரது குறையையே எண்ணி மனம் நோகாமல், அவரிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைக் கவனிக்கலாமே!

    அப்படி எதுவும் தென்படவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்! பிறரைப்பற்றிய வேண்டாத யோசனையில் நம் அமைதியை, மகிழ்ச்சியை, பறிகொடுப்பானேன்!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (109)

    நிர்மலா ராகவன்

    உலகில் பிறரும் உண்டு

    ஒரு தாய் தன் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இன்னொரு பெண், “ஐயே! இவ என்ன குழந்தையா? ஊட்டி விடறியே!” என்றாள் கேலியாக.

    “என் குழந்தைக்கு ரொம்ப ஜூரம்!” என்று பரிந்தாள் தாய். `குழந்தை என்று அவள் குறிப்பிட்டது எட்டு வயதான பெண்ணை. அக்காட்சியைப் பார்த்து அதிசயித்தவளுக்கோ நான்கு வயதுதான். அவள் பெருமையாக, “எனக்கு ஜூரம் வந்தாலும், நானேதான் சாப்பிடுவேன்!” என்றாள்.

    ஊட்டுவது எப்போதுவரை?

    ஒரு வயதோ, இரண்டு வயதோ ஆன குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த வயதுக் குழந்தைகள் வாயைத் திறக்கவே படுத்தும். அப்போது, பூனையோ, நாயோ அருகில் இருந்தால், அந்தப் பிராணிகளுக்கு ஒரு வாய் போட்டு, குழந்தை வாயிலும் போடலாம்.

    மூன்று வயதானதும், ஒரு ஸ்பூனில் உணவை வைத்து, நாம் கண்ணை மூடிக்கொண்டால், குழந்தை சுயமாகச் சாப்பிடும். பக்கத்தில் மிருகங்கள் படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு, “ஐயோ! கரடி சாப்பிட்டுப் போயிடுத்து,” என்று அதிர்வதுபோல் பாவனை செய்தால், குழந்தை பெருமையாகத் தன் வாயைச் சுட்டிக்காட்டும். அடுத்த கவளத்திற்கு, குரங்கின்மேல் பழி போடலாம்.

    நான்கு வயதிற்குமேல், ஒரு சிறுமியின் வாயில் போவதைவிட அதிகமாகவே தரையில் விழும். கூடவே அமர்ந்து கதை சொன்னால், சாப்பிடும் பிரக்ஞையே இல்லாமல் சாப்பிட்டு முடித்துவிடுவாள்.

    உதவியா, உபத்திரவமா?

    குழந்தை செய்யக்கூடிய எந்த வேலையும் அரைகுறையாகத்தான் இருக்கும். அதற்காகப் பரிதாபப்பட்டோ, அவனுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டோ, அல்லது தன் அன்பை வெளிக்காட்டும் விதமாகவோ ஒருவர் அந்த வேலையைத் தானே முனைந்து செய்தால், என்றாவது, `எங்கு தவறு செய்தேன்?’ என்று வருந்த நேரிடும்.

    `நான் ஊட்டினால், விரைவாகச் சாப்பிடுவான். அதோடு, சுத்தப்படுத்தும் வேலையும் மிச்சம்!’ என்னும் தாய் தன் சௌகரியத்திற்காகப் பார்க்கிறாள். குழந்தையோ, தன்னைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வான்.

    தன் விருப்பப்படிதான் எல்லாமே நடக்கவேண்டும் என்ற பிடிவாதம் எழுகிறது. அவன் எதிர்பார்த்தபடி ஏதாவது நடக்காவிட்டால், வீட்டில் அதிகாரம் தூள்பறக்கும். பதின்ம வயதில் இப்போக்கு அதிகரிக்கையில், `வயதுக்கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிடுகிறோம்.

    எல்லா பதின்ம வயதினருமே இப்படி நடப்பதில்லையே என்று பார்த்தால், அவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ற வேலையும், சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது புலனாகும்.

    நான்தான் முக்கியம்

    ஒரு கல்யாணத்தை முன்னிட்டு, இருபது பேருக்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் கூடியிருந்தார்கள் அந்த வீட்டில். பதினான்கு வயதான ஆனந்த் வீட்டுக்கு ஒரே மகன். தன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கு. பிறர் வீட்டில் அப்படி நடக்கக்கூடாது என்று அவனுக்குப் பெற்றோர் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால், நாள் முழுவதும் தொலைகாட்சியை அலற விட்டான். பிறர் எவ்வளவு சொல்லியும் ஒலியைக் குறைக்கவில்லை. பொறுக்க முடியாமல் போக, எண்பது வயதான தாத்தா எழுந்துபோய், தொலைகாட்சியை நிறுத்தினார்.

    அவ்வளவுதான். ஆத்திரம் பீறிட்டது ஆனந்துக்கு. “நீ டி.வி. பாக்கறச்சே, நான் நிறுத்தறேன் பாரு!” என்று உறுமினான்.

    நான் திகைப்புடன் அவனுடைய தாயை நோக்கினேன். `பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசு!’ என்று சொல்லிக்கொடுக்க மாட்டாளோ, ஒரு தாய்?

    அவளோ, “அவன் நீதிமான் (righteous) என்றாள், பெருமையாக. அதாவது, அவனுக்கு ஒரு நியாயம், அளவுகடந்த ஓசையைச் சகிக்க முடியாத தாத்தாவிற்கு ஒரு நியாயம் என்பதை எதிர்ப்பானாம்!

    லல்லி ஒரே குழந்தை இல்லை. ஆனாலும், உடற்குறையுடன் பிறந்தவள் என்பதால், பாட்டி வீட்டில் வளர்ந்தவளுக்கு விசேட கவனிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

    வேறு இடத்தில் இருந்த தாய்வீட்டுக்கு வந்தபோது, `எல்லாரும் என் தேவைகளைத்தான் கவனிக்க வேண்டும்,’ என்பதுபோல் நடந்துகொண்டாள் லல்லி. அவள் (மிக உரக்க) பேசுவதைத்தான் எல்லாரும் கவனிக்க வேண்டும். பிறருக்குப் பேச வாய்ப்பு கிடையாது. தன் விருப்பப்படி எல்லாம் நடக்காவிட்டால், ஆத்திரத்துடன் கத்துவாள். உடன்பிறந்தவளுடன் எதையும் பங்கு போட்டுக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை. விளைவு: லல்லிக்கும் பெற்ற தாய்க்கும் அவள் அதிகாரப் போக்கைக் குறித்து ஓயாத சண்டை.

    பகிரப் பழக்குவது

    பிறருடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை இரண்டு வயதிலேயே ஏற்படுத்த முடியும். ஒரு தட்டில் சில பிஸ்கோத்துகளைப் போட்டு, `எல்லாருக்கும் குடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ,’ என்று அதை ஒரு சிறுவன் கையில் கொடுத்துப் பாருங்கள். தான் ஏதோ பெரிய வேலை செய்யும் பெருமிதத்துடன் அப்படியே செய்வான். யாராவது எடுத்துக்கொள்ள மறுத்தால், தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று அழுகை வரும்.

    பிறவி நடிகன்

    என் மாணவனான அப்துல் குடும்பத்தில் கடைசிக்குழந்தை. அம்மாக்கோண்டு என்ற ரகம். பள்ளிக்கூட நாடகங்களில் திறம்பட நடிப்பான். `அதனால் பெண்களுக்கு என்னைப் பிடிக்கிறது,’ என்று என்னிடம் வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறான்.

    பிரச்னை என்னவென்றால், தாயைப்போலவும், உடன் பயிலும் பதின்ம வயதுப்பெண்களையும்போல் எல்லாருமே தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்ததுதான். யாராவது ஆசிரியர் திட்டிவிட்டால், `மூச்சு விட முடியவில்லை!’ என்று ஒரேயடியாகத் திணறுவதுபோல் நடிப்பான். ஒரு முறை நானே அவனை அவன் வீட்டில் உடனடியாகக் கொண்டுவிட நேர்ந்தது.

    அவனுடைய அண்ணன் உத்தியோகம் பார்ப்பவர். முகத்தில் வெறுப்புடன், `எல்லாம் அம்மா கொடுக்கும் இடம்!’ என்று முணுமுணுத்தார். பதறியவளாக, அருமைப்பிள்ளையின் முதுகைத் தடவிக்கொடுத்தாள் தாய்.

    இம்மாதிரி பல முறை அவன் நடந்திருக்கிறான் என்று பிறகு தெரியவந்தது. பிறருக்குத் தன்மேல் இரக்கம் சுரந்தால், அதை அன்பு என்று நினைப்பவர்கள் இந்தப் பையன் அப்துலைப் போன்றவர்கள்.

    ஒரு குடும்பத்திலோ, பள்ளியிலோ மிக புத்திசாலி என்று கருதி, ஒரு குழந்தைக்கு மட்டும் விசேட சலுகைகள் கொடுத்தால் இப்படித்தான் அதிகாரம் செய்வான். இத்தகையவர்களுக்கு அவர்களுடைய சுகம், சௌகரியம் – இதெல்லாம்தான் முக்கியம். பிறரைப்பற்றிய அக்கறை அறவே கிடையாது.

    அளவு கடந்த சலுகைகளை அளிக்கும் பெற்றோர், அடிப்படை சலுகைகளை மூர்க்கத்தனமாக மறுக்கும் பெற்றோர் – இருவகையினருமே குழந்தைகளுக்குத் தீங்கு இழைக்கிறார்கள், தம்மையும் அறியாது.

    கதை

    மன் லீ என்ற சீனப்பெண்ணின் பெற்றோர் தனியார் பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்திருந்தார்கள். அவர்களுக்கு அதிகப் படிப்பில்லை. ஆனால் செல்வம் குவிந்திருந்தது. தங்களைப்போல் இல்லாது, மகளாவது கல்வியில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அதற்காக, எந்நேரமும் `படி, படி!’ என்றால், என்ன ஆகும்?

    தாம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத மகளை மூன்று தினங்கள் ஓர் அறையில் பூட்டிவைத்த தாய், மகள் தலையில் இரும்புத்தடியால் அடிக்க முயன்ற தாய் ஆகியோரை நான் அறிவேன். இப்பெண்கள் ஒரு முறை நல்லவிதமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டால், தாய்க்கு கர்வம் எழும். ஆனால், அடுத்த முறை எல்லாவற்றிலும் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தாம் வாங்குவாள் மகள். அவ்வளவு மன இறுக்கம்.

    மன் லீக்குத் தன்னைப்போல் அடியோ, திட்டோ வாங்காத பிற மாணவிகளைக் கண்டால் பொறுக்காது. அவர்களுக்கு நேரிலும். இயலாவிட்டால் தொலைபேசிமூலமும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பாள்.

    பாதிக்கப்பட்ட ஒரு பெண் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய, `உனக்கு எதனால் பாதிப்பு?’ என்று அன்புடன் விசாரித்தாள் அவள். அப்பெண் அழுதபடி, தன் அவலக்கதையைக் கூறினாள். (மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களிடம் பேசினாலே போதும். தாமும் ஒரு பொருட்டு என்று பிறர் கருதவேண்டும் என்ற ஏக்கம்தான் அவர்களை ஆட்டுவிக்கிறது).

    பொறுப்பாகச் செயல்படுவது

    சில இல்லங்களில், `பெரியவன் ஆனதும், தானே தெரிந்துவிட்டுப்போகிறது!’ என்று எதையும் பழக்கமாட்டார்கள். எந்தப் பழக்கமும் தானே வருவதில்லை.

    தொலைகாட்சியில் நல்ல படம், அல்லது வீடியோ விளையாட்டுகளில் ஆழ்ந்துபோனதில் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டது என்று காலங்கடந்து உணர்ந்து, ஆசிரியர் திட்டுவாரே என்று பயப்படும் சிறுவனுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? அவன் தண்டனை பெறட்டும். அப்போதுதான் இன்னொரு முறை மறக்கமாட்டான்.

    `கணினி, நண்பர்களுடன் உரையாடுவது – எதுவாக இருந்தாலும், வீட்டுப்பாடம் செய்த பிறகுதான்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்கலாமே!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (108)

    நிர்மலா ராகவன்

    வசப்படுத்தும் இசை

    இசையே சிம்ரன் (அதாவது, தியானம்!)

    இசையை ரசிப்பவர்கள் ஒருவித தியான நிலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். இவர்களால் பாடகர்களுக்கும் உற்சாகம் வரும்.

    கதை

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் ராமநவமி உற்சவத்தை ஒட்டி, இலவச இசைக்கச்சேரிகள் நடக்கும் — நாற்பது நாட்களுக்குமேல். பிரபல வித்வான்கள் கலந்துகொள்வார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பித்து, சிலர் அடுத்த நாள் காலைவரைகூடப் பாடியிருக்கிறார்கள்.

    `கடைசி பஸ் போயிடும்,’ என்று அம்மா கவலைப்பட, `பரவாயில்லே. நடந்தே போகலாம்,’ என்று நான் சமாதானப்படுத்துவேன். சுமார் மூன்று மைல் வீட்டுக்கு நடப்போம். எங்களைப்போல் பலரும் கூட நடப்பார்கள்.

    `இங்கிருக்கும் ரசிகர்களைப்போல் வேறு எங்கும் கண்டதில்லை! அவர்களுக்காகப் பாடுவதே சுகம்!’ என்று மகிழ்ந்து பாராட்டுவார்கள் சங்கீத வித்வான்கள். அவர்களுக்குச் சன்மானம் கிடையாது. இருந்தாலும், வருடந்தவறாது வந்து, உற்சாகமாகப் பாடுவார்கள்.

    சங்கீதம் என்பது ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும், காசுக்காக மட்டுமே அல்ல என்பதற்கு இன்னொரு கதை.

    அடுத்த நாள் கல்யாணம். வீடே பரபரப்பாக இருந்தது. முதல்நாள் மாப்பிள்ளை வீட்டார், “இன்றிரவு பாட்டுக்கச்சேரி இருக்கவேண்டும். இல்லாவிட்டால், கல்யாணம் நடக்காது!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்கள். பெண்ணின் தந்தை மிரண்டுபோய்விட்டார். கடைசி நிமிஷத்தில் சங்கீத வித்வான் ஒருவரை எங்குபோய் தேடுவது?

    அப்போது யாரோ, “அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி செய்ய நம் ஊருக்கு வந்திருக்கிறார்,” என்று தெரிவித்தார்கள்.

    தந்தை பாடகரிடம் போய் நடந்ததைச் சொல்லி, கலங்கியிருக்கிறார். அபயகரம் அளித்த ஐயங்கார் அன்று மாலை கல்யாண வீட்டில் நீண்ட கச்சேரி செய்தாராம்.

    ஆனந்தமும் நன்றியும் பெருக, “ஏதோ, என்னால் முடிந்தது!” என்று பெண்ணின் தந்தை நூறு ரூபாயைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க, பிரபல சங்கீத வித்வான் ஒரு ரூபாயைத் தன் சன்மானமாக எடுத்துக்கொண்டு, “உங்கள் பெண்ணுக்கு ஏதாவது நகை வாங்கிப்போடுங்கள்!” என்றுவிட்டார்.

    கர்னாடக இசையில், ஸ்ருதி மாதா, லயம் பிதா என்பார்கள்.

    ஸ்ருதியா, என்ன அது?

    பொதுவாக குழந்தைகளுக்கும், சிறு பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுவரை ஆண்பிள்ளைகளுக்கும் குரல் கீச்சுமூச்சென்று இருக்கிறதல்லவா? அவர்களுக்கு `மேல் ஸ்ருதி’ என்கிறோம். வயதாக ஆக, பெண்களின் குரல் கட்டையாகிவிடுகிறது. (ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்களுக்கான ஹார்மோன் குறைவால்). அதனால் ஸ்ருதி இறங்கிவிடக்கூடும்.

    ஸ்ருதியைக் குறிக்க எண்களைப் பயன்படுத்துகிறோம். ஐந்து கட்டை என்பது பெண்களுக்கு சாதாரணமாக அமைவது. மூன்று கட்டை ஸ்ருதி என்றால் கீழ் ஸ்ருதி. ஆண்களுக்கு ஒரு கட்டைகூட உண்டு.

    லயம்

    லயம் என்பது தொடையில் கையால் அடித்துப்போடும் தாளத்தைக் குறிக்கிறது. இது கணக்கைச் சேர்ந்தது. ஆகையால், இசை கற்கும் இளவயதினர் கணக்கில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். பொதுவாகவே, இசை வல்லுனர்கள் கணக்கிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற தாளவாத்தியங்கள் வாசிப்பவர்கள் கணக்கில் புலியாக இருக்கவேண்டும். எந்த வாத்தியமாக இருந்தாலும், வாசிப்பவர்களின் கண்ணும், கையும் ஒருங்கே வேலைசெய்யும்.

    வெறும் பொழுதுபோக்கல்ல

    ரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது கர்னாடக இசை. பாடும்போது, முதலில் மூச்சை நன்கு உள்ளே இழுத்துக்கொண்டு, வெளியே விடும்போது குரல் ஒலிக்கவேண்டும். இதனால் மன இறுக்கம் குறைந்து, அமைதியாகும்.

    ஆசிரியர் ஒரு பாட்டைக் கற்பிக்கையில், மாணவி கூர்ந்து கவனிக்கவேண்டும் அல்லவா? இத்தகைய கவனிப்பு பிற துறைகளிலும் பரவு, அறிவுத்திறன் விருத்தியடைகிறது. வேண்டாத யோசனைகள் வராது.

    பாடுபவர்களுக்கு மட்டுமல்லாது, ரசிப்பவர்களுக்கும் இசை நல்ல பயனைத் தருகிறது. `என்ன ராகம்?’ என்று தெரிந்த பாடல்களுடன் ஒப்பிட்டு, சரியாகக் கண்டுபிடிப்பது ஞாபகசக்தியை வளர்க்கிறது. பாட்டை ரசித்துக் கேட்பவர்களை முதுமை அண்டாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    பொழுதுக்கேற்ற ராகங்கள்

    கர்னாடக இசையில், ஒரு தினத்தின் வெவ்வேறு வேளைகளுக்கேற்ற ராகங்கள் உள்ளன. (உதாரணம்: அதிகாலையில், கோயிலில் திருப்பள்ளியெழுச்சிக்கு இசைக்கப்படும் ராகம் பூபாளம். உறங்கவைக்க நீலாம்பரி). சில ராகங்கள் எப்போதும் பாடக்கூடியவை.

    நவரசங்களைக் குறிக்கும் ராகங்களும் உள்ளன. (`ப்ரோசேவாரெவருரா’ என்று சங்கராபரணம் படத்தில் வரும் பாடல் கமாஸ் ராகத்தில் அமைந்தது. சிருங்காரத்திற்கு இந்த ராகம் ஏற்றது).

    கற்பனைத்திறன்

    குருவிடம் சில பாடல்களைக் கற்று, அப்படியே திரும்பப் பாடுவதோடு நின்றுவிடுவதில்லை கர்னாடக இசை.

    ஒரு பாடலுக்குமுன், `ததரின்ன..’ என ராக ஆலாபனை செய்கிறார்களே! குறிப்பிட்ட ராகத்தை இசைப்பவர் தன் மனோதர்மத்துக்கு ஏற்ப அதைப் பாடவேண்டும். (சில பாக்கியசாலிகள் எந்த குருவிடமும் கற்காது, கேள்வி ஞானத்தைக்கொண்டே இதைச் செய்வார்கள்). பாடலின் நடுவே ஓரிரு வரிகளை குறிப்பிட்ட காலப்பிரமாணத்திற்குள் வித விதமாக மாற்றிப் பாடுவது `நிரவல்’. அதன்பின், கற்பனை ஸ்வரம். இது ஒருவரின் ராக, தாள ஞானத்தை வெளிப்படுத்துவது.

    `ஞானம்’ என்பது இயற்கையிலேயேயே அமைந்திருப்பது. இதை வலுக்கட்டாயமாக ஒருவருள் புகுத்த முடியாது.

    ஸ்ருதி சுத்தமாக ரசித்துப் பாடுவதும், இன்ன ராகம் என்று கண்டுபிடிப்பதும் ஞானத்தைப் பொறுத்தது. வயது, குரல் வளம், ஆர்வம் ஆகியவற்றிற்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஞானம் ஒரு வரம். எல்லாருக்கும் அமைவதில்லை.

    மிருகங்களுக்கு இயற்கையிலேயே இசை ஞானம் அமைந்திருக்கிறது. எல்லாப் பூனைகளும் நாம் பாடும்போது அசையாது செவிமடுக்கும். வேறு சில, ஸ்ருதி தவறாமல், நாம் பாடும் ஸ்வரத்தை, நம்மையே பிரமிக்கவைக்கும் வகையில், திரும்பப் பாடும். வாலால் தாளம் போடும் பூனைகளும் உண்டு! அத்தருணங்களில் அவைகளுடன் விளையாட இன்னொரு பூனை வந்தால்கூட கவனம் கலையாது, இசையை ரசிக்கும். இது எங்கள் வீட்டில் வளர்ந்த, வளரும், பூனைகள் எனக்குக் கற்பித்த பாடம்.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர் அல்லாதவர்களும் கர்னாடக இசையை ரசித்துக் கேட்கிறார்கள். இந்தியர்களுக்கோ, நம் கலாசாரத்தை விடாமல் இருக்கவேண்டும் என்ற முனைப்பு. “We are more Indian in America than in India!” என்றாள் ஒரு மங்கை, மகிழ்ச்சியுடன். அங்கு பல குழந்தைகள், வீட்டில் ஆங்கிலத்தில் பேசினாலும், தேவாரம் பயில்கிறார்கள், கர்னாடக இசை கற்கிறார்கள்.

    இசைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாடல்கள்மூலம் இதிகாச புராணக்கதைகளைக் கற்க முடிகிறது. இதனால் மொழிவளம் கூடும். (முறையான உச்சரிப்புக்குச் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்).

    செய்யக்கூடாதது

    சிறு குழந்தைகள் இயல்பாக, நிமிர்ந்து உட்கார்ந்து, தலை அசங்காது பாடுவார்கள். இதுதான் சரியான முறை. அதைவிட்டு, பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்குமே என்று தலையையும், கையையும் மிகையாக ஆட்டியபடி பாடுவதால் சக்திதான் விரயமாகிறது.

    பாடும்போது தொண்டையைக் கனைத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் குரல் வள நிபுணர்கள். அதற்குப் பதிலாக, அவ்வப்போது ஒரு தேக்கரண்டி நீர் குடித்தால் குரல் வறளாது. மூச்சுப்பயிற்சி நன்மை பயக்கும்.

    பக்தியுடன், வார்த்தைகளின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு பாடினால்தான் பாட்டில் பாவம் இருக்கும். கேட்பவருக்கு ராகமோ, பாட்டின் அர்த்தமோ புரியாவிட்டால்கூட, அப்படி ஒருவர் பாடுவதுதான் மனதைத் தொடும். பாடகரின் குரல்வளம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது.

    சமீபத்தில், ஒரு பத்து வயதுச்சிறுமி மிக நன்றாகப் பாடியதைப் பாராட்டினேன். “என் ஆசிரியை எப்போதும் என்னைத் திருத்துவார்!” என்றாள்.

    தான் அதிபுத்திசாலி என்று கர்வம் கொள்ளாது, அல்லது, `ஓயாமல் தப்பு கண்டுபிடிக்கிறாரே!’ என்று ஆசிரியைமேல் கோபம் கொள்ளாது பேசிய அச்சிறுமியின் அடக்கம் எனக்கு வியப்பை அளித்தது. அகங்காரம் இருந்தால், எந்தக் கலையும் நம்மை விட்டுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (107)

    நிர்மலா ராகவன்

    தாம்பத்தியத்தில் தோழமை

    கல்யாணம் எதற்கு?

    நான் இக்கேள்வியைக் கேட்டபோது, ஆண் ஒருவர்,   `முறையான உடலுறவுக்கு,’ என்ற பதிலை அளித்தார், தர்மசங்கடத்துடன். (“Let us face it. I can’t think of having sex any other way!”) பெண்களோ, “பாதுகாப்பு’ என்றார்கள்.

    நிற்பது,  நின்றிருந்தால் உட்கார்வது, நடப்பது எல்லாமே முதுமையில் பெருமுயற்சியாகிவிடுமே! அப்போது, `காமத்துக்குத் துணைபோகாத வாழ்க்கைத்துணையால் என்ன பயன்?’ என்று யோசனை போகுமா?

    திருமணம் செய்துகொள்வது எதற்கு என்பதில் மட்டுமல்ல, மணமுடித்தபின், ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஒரு பெண் கணவன் தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆணுக்கோ, அந்நிலை மூச்சுமுட்டுவதுபோல் இருக்கும்.

    இயன்றவரை பிற ஆண்களுடன் பொழுதைக் கழிப்பதுதான் ஆணுடைய சுபாவம். இதைப் பெண்கள் புரிந்துகொண்டாலே போதும். பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

    தம்பதிகள் என்றால், கணவன் சொற்படி மனைவி நடக்கவேண்டும், தனக்கென ஆசைகள் இருந்தால் அவற்றை அவள் மறந்துவிட வேண்டும் என்பது போல்தான் கடந்த சில தலைமுறைகளில் நடந்துவந்தது. அதைப் பார்த்து இக்காலப் பெண்கள் மிரள்கிறார்கள். அதனாலேயே ஏதேதோ நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

    “எனக்கு வரப்போறவரோடு Companionship (தோழமை)  இருக்கணும் என்கிறாள் அபி. அப்படின்னா என்ன?” என்று என்னைக் கேட்டாள் நடுத்தர வயதான ஒரு மாது. முப்பது வயதாகியும் மணம் செய்துகொள்ளத் தயங்கிய மகளின் நிபந்தனை அவளுக்குப் புரியத்தானில்லை. “நாங்களெல்லாம் அப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் செய்துகொண்டோம்?” என்று பொருமினாள். ஒரே பார்வையில் எவருடனும் நட்பு பெருகிவிடாது என்பது சில இளம்பெண்களுக்குப் புரிவதில்லை.

    புதிதாக மணமான தம்பதிகள் ஒன்றாக வாழ நேரிடும்போது மற்றவரின் வேற்றுமைதான் பூதாகாரமாகத் தெரிகிறது. அதைப் பழிப்பதால் இடைவெளி விரிவடையும் என்பதைப் புரிந்துகொள்ளாது, கேலி செய்பவர்களும் உண்டு.

    நண்பர்கள் கேலி செய்தால் பொறுத்துப்போகலாம். ஆனால் கணவனோ, மனைவியோ பழிப்பதை ஏற்க முடிவதில்லை. மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கூறினால், பாதிக்கப்பட்டவர் சிறுமைப்படுத்தப்படுகிறார். ஆத்திரம் பெருகுமே!

    `தாம்பத்தியத்தில் ஒரு நாளைக்கு ஆறு முறையாவது சொல்ல வந்ததைச் சொல்லாமலிருக்க வேண்டும்,’ என்கிறார் திரு.அனுபவசாலி. `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!’ என்று திரைப்படத்தில் காதலர் பாடலாம். நடைமுறையில், `soulmate” என்ற ஒருவருடன்தான் இது சாத்தியம். உரிய காலத்தில் அப்படி ஒருவரைச் சந்திப்பதே துர்பலம். வாழ்க்கைத்துணையாக அடைவதோ..!

    ஒருவர் தன் மனைவியிடம், “உன்னை என்னைப்போலவே மாற்றிவிட இந்த இருபத்து ஐந்து வருடங்களாக முயன்று பார்த்துவிட்டேன். அது நடக்காத காரியம் என்று இப்போதுதான் புரிகிறது!” என்று கூறினார், அனுபவம் அளித்த விவேகத்துடன். “எல்லாம் இந்த தமிழ்சினிமாவால் வந்த வினை!” என்று காலங்கடந்து நொந்து கொண்டார்!

     அப்பாமாதிரி இல்லையே!

    இளம்பெண்கள் தம் தந்தையுடன் கணவரை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.

    `அப்பா எப்படி அம்மா சொல்வதைக் கேட்பார்! இவர் என்ன, பிடிவாதமாக இருக்கிறாரே!’ என்று ஆத்திரப்படுவது வீண். திருமணமான புதிதில் அப்பா இப்படியேவா இருந்திருப்பார்? அம்மாவை மாற்ற முயன்றிருப்பார். பிறரை மாற்றுவதைவிட தன்னையே மாற்றிக்கொள்வது எளிது என்று முடிவெடுத்திருக்கலாம்.

    `இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! மனைவி என்பவள் ஒரு பிரச்னை இல்லை, அவள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையில் அமைதி நிலவும்,’ என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கும். கணவரை மாற்ற முயலும் பெண்களும்  தம் முயற்சியில் வெற்றி பெறமுடியாது.  ஆத்திரப்பட்டால், அவர்கள் உடல்நிலைதான் கெடும். நிலைமை என்னவோ மாறப்போவதில்லை.

    உத்தியோகம் முதல் மனைவியா?

    விவாகரத்து கோருவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

    கணவர் தங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவதில்லை, எப்போதும் உத்தியோகமேதான் நினைப்பு என்பது அவர்கள் வாதம். வேலை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்நாளில் கடிகாரத்தைப் பார்த்தபடி வேலை செய்பவன் எப்படி முன்னேற முடியும்? இரவு நெடுநேரம் உழைக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டிய உத்தியோகமும் அமையலாம்.

    செலவச்செழிப்பான வாழ்க்கை அமைய வேண்டும், ஆனால் கணவனுடைய அருகாமையும் எப்போதும் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? (ஒரேமாதிரியான உத்தியோகத்தில் இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் இக்கட்டான நிலையை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடும்).

    எங்கும் பிரச்னைதான்

    வீட்டிலோ, வெளியிலோ, பிரச்னை இல்லாத இடமே கிடையாது. வீட்டில் நாள்பூராவும் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பெண்ணானவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும்போதே குற்றப்பத்திரிகை படித்தால், அவனுக்கு எப்படி இருக்கும்?

    அவன் அலுத்துச் சலித்து வீடு திரும்பும்போது, இன்முகமாக வரவேற்க வேண்டாமா? அப்படி இல்லாவிடில், தன் பங்குக்கு அவனும் கத்துவான், இல்லை, உடனே வெளியில் போய்விடுவான். 

    பாராட்டுங்கள்!

    பொதுவாக, பெண்கள்தாம் உணர்ச்சிபூர்வமானவர்கள். தம் இயலாமையை வெளிப்படுத்த சண்டை பிடிப்பார்கள், இல்லையேல் அழுவார்கள். அவ்வப்போது, `மௌன விரதமும்’ உண்டு! (ஒரு சிறு பெண்ணிடம்கூட இந்தக் குணத்தைக் காணலாம்).

    இது புரிந்து, ஆண்கள் மனைவிக்கும் சிறிது நேரத்தை ஒதுக்கி, பாராட்டுதலால் தம் அன்பை வெளிக்காட்டினால் பிரச்னையே கிடையாது. நண்பர்களிடம் கூற நினைப்பதை மனைவியிடமும் கூறலாமே!

    அதைவிட்டு, `நான் நம் குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறேன், என்னை நீ பாராட்டுவதே இல்லையே!’ என்று குற்றம் சாட்டுவது அவர்களிடையே உள்ள இடைவெளியை இன்னும் பெரிதாக்கும்.

    வாயை மூடு, செவியைத் திற!

    தம்பதிகளின் உரையாடல் நடக்கையில்: “கணவன் காதில் வாங்கிக்கொள்வது பாதி, புரிந்துகொள்வது கால் பங்கு, சிந்திப்பது பூஜ்யம், பதிலளிப்பதோ இரு மடங்கு!” (திரு. அனுபவசாலி).

    மனைவி அன்றைய தினம் தன்னைப் பாதித்த சமாசாரங்களைப்பற்றிக் கூறிவருகையில், `நான் நீயாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லி இருப்பேன், தெரியுமா?’ என்று கணவன் ஆரம்பித்தால், எந்த மனைவிக்குத்தான் எரிச்சல் வராது?

    `நான் நீங்களில்லையே!’ என்று சொல்லத்தான் தோன்றும், தன் பிரச்னைகளைத் தனக்குத் தோன்றிய விதத்தில், தானேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாளவள்.

    அம்மாதிரி சந்தர்ப்பங்களில், எதுவும் பேசாது கேட்பது உத்தமம். தீர்வை எதிர்பார்த்து அவள் சொல்லவில்லை. சும்மா பகிர்ந்துகொள்கிறாள். அவ்வளவுதான். அத்துடன், பெண்களும் ஆண்களைப்போலவே யோசிக்கமாட்டார்களே!

    பிரச்னையா, துணையா?

    திருமணமான புதிதில், ஒருவரது வாழ்க்கை முறையை மற்றவர் புரிந்துகொண்டு, அதன்படி நடப்பது எளிதல்ல. ஆனால், வாழ்க்கைத்துணையைவிட பிரச்னை முக்கியமானதல்ல என்று புரிந்துகொண்டு, அதைப் பற்றிப் பேசினாலே போதும். தீர்த்துவிட முடியும்.

    ஐம்பது வயதுக்குமேலாகிய, மெத்தப் படித்த  ஒரு மாது என்னிடம் கூறினார், “நானும் என் கணவரும் தினமுமே சண்டை போடுவோம்!” அவர் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. அதில் வருத்தமோ, கோபமோ இருக்கவில்லை.

    அவள் `சண்டை’ என்று குறிப்பிட்டது கைகலப்பில்லை. அபிப்ராயபேதம். இருவரும் ஒரேமாதிரி யோசிக்க முடியுமா? ஒரு பொருளைப்பற்றி விவாதித்து, யார் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று ஆராய்கிறார்கள்.  

    கல்யாணமாகி சுமார் முப்பது வருடங்களாகியும் வாய்ச்சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறதென்றால், அவர்கள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

    `நாங்க ரெண்டுபேரும் அதிகமா பேசிக்கறதே கிடையாது!’ என்று அலட்சியமாகச் சொல்வது  வெறுப்பைக் காட்டுவதைவிட மோசமானது. `நீ எப்படியோ தொலை!’ என்பதற்குச் சமானம். கசப்பை ஏன் அவ்வளவு தூரம் வளரவிட வேண்டும்?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (106)

    நிர்மலா ராகவன்

     

    எல்லைகள்

    இரண்டு வயதானதும் ஒரு  குழந்தை `எனக்கு நடக்கத் தெரியவில்லையா, பாட்டிலில் பால் குடிக்கிறேனா?’ என்றெல்லாம் தான் பெரியவனாக வளர்ந்துவிட்டதைப்பற்றிப் பெருமை கொண்டிருக்கும். சுயமாகச் சாப்பிடக்கூட முடியும், கீழே வாரி இறைத்தாலும்!

    தன்னை ஏன் அம்மா இன்னும் குழந்தைமாதிரி நடத்துகிறாள்? வெளியில் அழைத்துப்போனால், சில சிறு குழந்தைகள்  டயாபரை அவிழ்த்துப்போடுவார்கள். ஆத்திரத்தை எப்படித்தான் காட்டுவது!

     

    இரண்டு வயதில் முரண்டு

    என் மகளுக்கு இரண்டு வயதானபோது, “அம்மா குளிக்கச் சொல்றா!” என்று சுயபரிதாபத்துடன் தன் பாட்டியிடம் முறையிடுவாள், என்னமோ நான் அவளைக் கொலை செய்ய ஆயத்தமாவதுபோல்.

    அனேகமாக எல்லாக் குழந்தைகளும், `குளி’, `சாப்பிட வா!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும், `மாத்தேன், போ!’ என்று முரண்டு பிடிக்கும்.

    `இவன் என்னை இப்படி எதிர்க்கிறானே!’ என்று தாய் அயர்ந்து, `ஏன் இப்படிப் படுத்தறே!’ என்று திட்டுவாள். இம்முறை பயனில்லாவிட்டால், கெஞ்சலிலும் இறங்குவாள். ஆனால், தனக்கு யார் மிக நெருக்கம் என்று குழந்தை கருதுகிறானோ, அவர்களிடம்தானே தன் `கைவரிசை’யைக் காட்ட முடியும்?

    தாயின் அதிகாரத்தை எதிர்ப்பதில்லை குழந்தையின் நோக்கம். தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் முயற்சி அது. தான் இன்னும் அம்மாவின் இன்னொரு அங்கம் இல்லை என்று உணர்த்தும் செய்கை.

    இது புரிந்து, தாய் சில விஷயங்களில் குழந்தையே தனக்கு எது வேண்டுமென்று நிச்சயிக்கும் வாய்ப்பை அளிக்கிறாள். `உனக்கு இன்னிக்கு சிவப்பு சட்டை வேணுமா, இல்லை, சூபர்மேன் சட்டை போட்டுக்கறியா?’ என்று கேட்டால் போதும், அவனுக்குப் பெருமையாகிவிடும், தன்னையும் மதிக்கிறார்களே என்று.

    வெளியில் அழைத்துப் போனாலோ, சிறு குழந்தையாகிவிடுவான். அம்மாவின் இடுப்பிலிருந்து இறங்க மறுத்துவிடுவான். இந்த சமயங்களில், `நான் இறக்கிவிடறபோது, நீ நடக்கப்போறியா, ஓடப்போறியா?’ என்று முடிவை அவனுக்கே விட்டால், அந்த தாய்க்கு வெற்றி கிடைக்கும். இரண்டில் ஒன்றைத் தானே தேர்ந்தெடுப்பான்.  

     “இது என் சட்டை! நானேதான் ம(டி)ச்சு வெப்பேன்!” என்னும் மூன்று வயதுக் குழந்தையை அதன் போக்கில் விடுங்கள். கையில் துணியைச் சுற்றிச் சுற்றி, சும்மாடுபோல் ஆக்கிவிட்டு, பெருமையாகச் சிரிக்கும். அப்போது புகழ வேண்டியதுதான்.

    `ஐயோ! கசக்கறியே!’ என்று பதறுவது அவன் பெருமுயற்சியெடுத்து செய்த காரியத்தைச் சிறுமைப்படுத்துவதுபோல் ஆகிவிடாதா!

     

    கோபத்தின் வெளிப்பாடு

    நம்மைப்போல்தான் குழந்தைகளுக்கும் அவ்வப்போது கோபம் எழும். அதை எதன்மேலாவது காட்டுவார்கள்.

    `இந்த துப்பாக்கி அசடு. தூக்கிப் போடு!’ என்று தன் விளையாட்டுச் சாமானை குப்பையில் போடும் குழந்தை அறியாது அதை ஒளித்துவைத்தால், `அம்மா! என் துப்பாக்கி இங்க ஒளிஞ்சுண்டு இருக்கு!’ என்று சில நாட்கள் கழித்து பெருமகிழ்ச்சியுடன் கொண்டுவந்து காட்டுவான்!

    சுதந்திரத்தை நாடும் குழந்தை, `அம்மா! மழையிலே விளையாடப் போகட்டா?’ என்று கேட்பான். அனுமதி கிடைக்காது என்று தெரியும். இருந்தாலும், அம்முயற்சி எந்தவரை வெற்றி அளிக்கும் என்று ஆராயும் ஆவலால் எழும் கேள்வி அது.

    `போ. ஜூரம் வரும். டாக்டர்கிட்ட அழைச்சுண்டு போய், பெரிய ஊசியா குத்தச் சொல்றேன்!’ என்று தாய் சிரித்தால், அதன்பின் அந்த முயற்சி கைவிடப்படும்.

    இதெல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது என்பதற்கான அறிகுறிகள். தன்னால் எவ்வளவு தூரம் போகமுடியும் என்று தன் எல்லையைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகள். நமக்கு அயர்ச்சியாக இருந்தாலும், மகிழ வேண்டியதுதான். எப்போதுமே கைக்குழந்தைபோல் இருந்தால் எப்படி இருக்கும்?

    சிறு குழந்தைகள் நாம் சொல்வதற்கு எதிரான பொருளைப் புரிந்துகொள்வார்கள். உதாரணத்திற்கு, “மெத்தைமேல் ஏறிக் குதிக்காதே!” என்று எச்சரித்தால், முதலில் அந்த எண்ணமே எழாவிட்டாலும், ஏறிக் குதிப்பார்கள்.

    “சொல்லிக்கொண்டே இருக்கிறேனே!” என்று வைதால், அவர்களுக்கு குழப்பம்தான் விளையும்.

    இதைத் தவிர்க்க, அவ்வப்போது அணைத்து, குழந்தையால் செய்ய முடிந்த (அல்லது முடியாத) சிறு வேலைகளைக் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குழந்தையால் கீரை நறுக்க முடியும். பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் வேகாதா, என்ன!

     

    எல்லையைக் கற்பிக்க

    மெல்ல மெல்ல எல்லையைக் கடக்க கற்றுக்கொடுத்தால், அதை மீறமாட்டான். நாம் செய்யும் சில வேலைகளில் குழந்தையையும் `உதவி’ செய்ய அழைத்தால், அவனுடைய சுயமதிப்பு பெருகும்.

    நான் தெரியாத்தனமாக, என் மூன்று வயதுப்பிள்ளையிடம் “பூரி இட்டுக் கொடுக்கிறாயா?” என்று சொல்லப்போக, அவன் பெருமையுடன் அப்பளக்குழவியைப் பலகையில்  அழுத்தித் தேய்த்தபடி இருந்தான். `போதும், போதும்,’ என்று கெஞ்சியபோதும், `இன்னும் கொஞ்சம் பண்ணணும்!’ என்று உற்சாகமாக, நிறுத்தாது வேலை செய்தான். அவற்றை சுத்தப்படுத்துவது பெரும்பாடாகிவிட, அடுத்த முறை ரகசியமாகச் செய்தேன்!

    வயதுக்கேற்ற காரியம் கொடுத்தால் இத்தகைய தொல்லையெல்லாம் வராது.

    அதைவிட்டு, `இதைச் செய்யாதே! இதை இப்படிப் பண்ணு,’ என்று ஓயாமல் தொணதொணத்தால், அடுத்த முறை எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இல்லையேல், வேண்டுமென்றே ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள். இது பொதுவான மனித குணம்.

    புக்ககம் செல்லும் சில பெண்கள் அவர்களுக்குப் பழக்கமான விதத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, மாமியாரோ, நாத்தனாரோ பழிக்கும்போது எரிச்சல்தான் உண்டாகும்.

    நன்றாக வேலை செய்யும் மருமகளைப்பார்த்து, `உனக்கு ஒரு வேலையும் தெரியவில்லையே!’ என்று பழிப்பார்கள், தம் மேலான நிலையை நாட்டிக்கொள்ள. இவளோ, அதன்பின் எதுவும் முனைந்து செய்யமாட்டாள், எப்படியும் கண்டனம்தானே கிடைக்கப்போகிறது என்ற எரிச்சலில்!

     

    எல்லை ஏன்?

    `இது என் எல்லை!’ என்று புரிந்துகொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். ஆறு வயதுக்குமேல் எல்லா வயதினருக்கும் இது பொருந்தும். பிறர் ஒருவரது எல்லையை தம் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலும்போதுதான் தகராறு வருகிறது. 

     

    கதை

    மலேசியாவில் மிகப் பிரபலமான கார்ட்டூன் வரைபவர் ஒருவரை `சிடுமூஞ்சி’ என்று பலரும் பழித்தார்கள். (இவரது சித்திரங்கள் விமானங்களைக்கூட அலங்கரிக்கின்றன).

    அவருடைய வாதம்: “சிரிக்க வைக்கும் படங்களை வரைவதால்,  என்னைச் சந்திக்க வருகிறவர்களையெல்லாம்    நான் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க முடியுமா?” பலரது எதிர்பார்ப்பும் இப்படியே இருக்க, அவருக்குக் கோபம் எழுந்திருக்கிறது.

    தன் எல்லையைக் கடக்காது, அல்லது கடக்கவைக்கும் பிறரது முயற்சிகளுக்கு இடங்கொடுக்காது அவர் இருந்திருக்கிறார். இது அவருடைய துணிச்சலைக் காட்டுகிறது. இம்மாதிரி நிலையில், கோபத்தை வெளிக்காட்டாது, அல்லது பிறர்மேல் பழி சுமத்தாது மெல்ல விலகிவிடலாம்.

    பிறர் நம்மை மதிக்க வேண்டுமேயென்று நம் எல்லைகளிலிருந்து விலகினால், நம்மையே நாம் மதித்துக்கொள்ளத் தவறுகிறோம்.

    ஒரு குடும்ப நிகழ்ச்சியில், நான் கலகலப்பாக எல்லாரிடமும் பேசினேன். (எப்போதாவதுதான் இந்த `மூட்’ வரும்). `நன்னாப் பேசுவா!’ `நன்னாப் பழகறா!’ என்று முணுமுணுத்தபடி, எல்லாரும் ரசித்தபடி இருந்தார்கள்.

    அதன்பின் ஒவ்வொரு முறையும் அதேபோல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். எனக்கு ஓய்ந்துவிட்டது. நான் வாயே திறக்கவில்லை.  “மாறிட்டா!” என்ற விமர்சனம் வந்தது, ஏமாற்றத்துடன்.

    என் சக்தியின் எல்லையை, என்னால் எது முடியும், முடியாது என்பதை  நான் உணர்ந்திருக்கிறேன். பிறரை மகிழவைக்க அதை மீறுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

    (பாடகிகள் கச்சேரிக்குமுன் அதிகம் பேசாது இருந்தால்தான் குரல் ஒத்துழைக்கும். இனிமையாக இருக்கும். இது புரியாது, அவர்களுடன் பேச்சுக்கொடுத்து, அவர்கள் மௌனம் சாதித்தாலோ, இல்லை, ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தாலோ, `கர்வி’ என்று நிச்சயிக்க முடியாது. இது அவர்களின் எல்லை).

     

    குட்டிக்கதை

    ஒரு சாயந்திர வேளையில், “பாட்டு கத்துக்க வா,” என்று எங்கள் வீட்டிலிருந்த என் பேத்தியை அழைத்தேன்.

    இருமணி நேரம் தாமதமாக வந்தாள்.

    “உன் நேரம் முடிந்துவிட்டது. நான் காத்திருந்தேன். அவ்வளவுதான்!” என்றதும், அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தாள் சிறுமி.

    பெரியவள் தலையை அசைத்தாள், என்னை ஆமோதிப்பதுபோல்.

    இளம் வயதிலேயே பிறருடைய எல்லையை மதிக்கக் கற்றுக்கொடுத்தால், தானே தன் எல்லையையும் புரிந்து, நிர்ணயிக்கும் குணம் வரும். தன்னம்பிக்கையும் வளரும்.

    `பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமோ?’ என்று பயந்து, விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்களுக்குத் தம் எல்லை எது என்பதே தெரிய வாய்ப்பில்லை.

    நமக்குப் பிடிக்காததை, நம்மால் முடியாததை,  செய்தாவது பிறரது பாராட்டைப் பெறவேண்டுமா?

    எது முக்கியம்? தன்னம்பிக்கையா, பிறரது ஆமோதிப்பா?

    Share